சில மீள் பதிவுகள், சில அறிவிப்புகள் (இங்கே அறிவிப்பது நிறையப் பேரை சென்றடைவதால்) என்று மொத்தமாக ஐந்நூறு.
2 ஆண்டுகள் இரண்டு மாதங்களில் இந்த ஐந்நூறு மைல்கல்.
நானூறு பதிவுகள் எழுதி கடைசி நூறு பதிவுகள் எழுத எட்டு மாதங்களாகியுள்ளது.
ஒவ்வொரு காலகட்டத்திலும் நிச்சயம் எமது பதிவுகளில் நாம் மாற்றத்தை உணர்கிறோம்.முன்பு எழுதியவற்றை நாமே மீள் வாசிப்புக்கு உட்படுத்துகையில் நிறைய மாறி இருப்பதை உணர்கிறோம்.கொள்கைகள் சில மாறுபட்டுள்ளன.அல்லது சரியானவிதமாக சொல்லப் போனால் கொள்கைகளில் நாம் கூர்ப்படைந்திருக்கிறோம் எனலாம்.
நீண்ட காலம் மனதில் எழுத வேண்டும் என்று நினைத்த சில விஷயங்கள்..இதெல்லாம் அறிவுரை என்று யாரும் நினைக்கவேண்டாம்.
சில அனுபவப் பகிர்வுகள்.. உங்கள் நண்பர்களில் ஒருவனாக..
பதிவுலகம் என்பது ஒரு மாயை.ஈர்த்து இழுத்துக் கொள்ளும்.மீள முடியாது.
வெட்டி வேலை.பயனற்ற ஒன்று.
குறுகிய கால சுகம் என்ற விமர்சனங்களைப் பார்த்திருக்கிறோம்;கேட்டுக் கொண்டே இருக்கிறோம்.
புகழ் தரும் போதையில் சில காலம் ஊறி நிற்பதும் அதைத் தக்க வைக்கத் தொடர்ச்சியாகப் பதிவு போடுவதும் சில காலம் கிளர்வைத் தரும் இந்த உணர்வு பதிவுலகத்தில் எல்லோருக்குமே ஆரம்பகாலத்தில் நிச்சயம் இருந்திருக்கும்.
இதைக் கடந்து மனதின் ஆசைகளைக் கடந்து லட்சியம்+வாழ்க்கை என்பதை முன்னணியில் இருத்தியும் செல்வோரே நின்று பிடிக்கின்றார்கள் இங்கே.
பதிவுகள் இடுவதை கொஞ்ச நாள் பொழுதுபோக்காக மாற்றிக் கொண்டவர்கள் அதில் தெளிவாக இருக்கவேண்டும்.அதிலேயே ஊறி உங்கள் கல்வி,வேலை,காதல்,வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு பதிவுலகம் பாழாக்கிவிட்டது என்று சொல்வதில் பயனில்லை நண்பர்களே.
முமுரமாக மூச்சுமுட்டப் பதிவுகளை ஒவ்வொரு நாளுமே எழுதிக்கொண்டிருந்த பலர் கொஞ்ச நாளிலேயே காணாமல் போன கதையும் கண்டிருக்கிறோம்.
முழுநேரத் தொழிலாக எழுத்துலகில்/பதிவுலகில் பயணிக்கும் பலர் இருக்கலாம். அவர்கள் முழுநேரம் இதில் மூழ்கி இருப்பதில் தவறில்லை. அவர்கள் உழைக்கும் இடம் இது.
மாணவர்கள்,வேறு தொழில் செய்வோருக்கான பொழுதுபோக்கு இதுவாக இருக்கலாம். அல்லது கருத்துவெளிப்பாட்டுக்கான இடமாக இது இருந்தால் அந்தந்த நேரங்களை மட்டுமே இங்கே செலவளியுங்கள்.
என் தொழில் இதுவல்ல என்பதை நான் நன்கு உணர்ந்துள்ளேன்.
நான் ஒரு முழு நேர ஒலிபரப்பாளன்.என் தொழில் தான் எனக்கு சோறுபோடுவது.
அதில் நான் மிகத் தெளிவாக உள்ளேன்.
ஆனால் என் வலைப்பதிவும் வலையுலகமும் எனக்கு என் தொழிலுக்கு முக்கியமான பங்களிப்பைத் தருகிறது.
தேடல்,நட்பு+ரசிகர் வட்டம், புதிய தகவல்கள்,விளையாட்டு,சினிமா,செய்திகள் என்ற சகல விஷயங்களையும் நான் இணையத்தில் தேடும்போது வலைப்பதிவு உலகம் அதை மேலும் விரித்துத் தருகிறது.
கூடவே ஒரு எழுத்தாளனாக(முக்கியமாக விளையாட்டு எழுத்தாளனாக) இன்னொரு பரிமாணத்தையும் தந்தது இந்தப் பதிவுகளே.
ஆனால் வேறு வேறு தொழில் துறையில் உள்ளோர், வலைப்பதிவு உலகில் வரும் மகிழ்ச்சியும் கிளர்ச்சியும் பற்றிக் கவனமாக இருத்தல் நல்லதே.
நான் இன்னும் பதிவுக்கான வாக்குகள், Alexa RATINGS, பின்னூட்டங்களை கவனித்துக் கொண்டிருந்தாலும் கூட, அதில் எனக்கு முன்பிருந்தே இருக்கும் புள்ளிவிபர ஆர்வம் இருந்தாலும் இது அல்ல என் வாழ்க்கை,இதுவல்ல எனக்கான இலட்சியத்தின் அடைவு எனத் தெரியும்.
ஆனால் பலரை நான் எழுதுவது சென்றடைய இவையும் கொஞ்சம் வேண்டும் என்பதால் அவற்றில் அக்கறையாகவே இருக்கிறேன்.
பல மாணவர்களுக்கு,வாழ்க்கையில் முன்னேற இன்னும் முயற்சி செய்யவேண்டிய சிலருக்கு,பதிவு எழுதுவதை விட இந்தத் திறமைகளை வாழ்க்கையின் இன்னும் சில விடயங்களுக்குப் பயன்படுத்தினால் முன்னேறக் கூடியவர்களுக்கு தனிப்பட அறிவுரை கூறி மயக்கம் போக்கி இருக்கிறேன்.
எதற்கும் வாழ்க்கையில் அளவும்,எல்லையும் இருக்கிறது. அது எது என்பதை ஒவ்வொருவரும் அறிவதே தலையாயது.
எனக்கு தமிழ்ப் பதிவுகளில் இருக்கும் ஈடுபாடு என் தொழிலிலும் உதவுவதைப் பற்றி அடிக்கடி சொல்லி இருக்கிறேன்.
எங்கேயாவது படித்து/பார்த்து சுவைத்த விஷயங்களைப் பகிரும் என் ஆங்கில தளமூடாகக் கொஞ்சம் உழைத்துக் கொண்டும் இருக்கிறேன் என்பது எனக்கான பகுதி நேர சிறு வருமானமாகவாவது ஆகிறது.(கட்டணம் கட்டவாவது)
எனவே புதிய நண்பர்கள் உங்கள் நோக்கத்தைத் திட்டமிடுவது மிகச் சிறந்தது.
வலைப்பதிவுகளுடன் கழிக்கும் பொழுதுகள் பற்றி என்னிடம் கேட்கப்பட்ட சில பொதுவான கேள்விகளுக்கு எனது அலைக் கலைஞனாக இருந்து வலைஞனாக வந்த கதை.. பதிவில் விளக்கங்களைக் கொடுத்திருந்தேன்.
கொஞ்சம் வாசித்துப் பார்த்தால் புதிதாகப் பதிவுலகில் கால் வைத்திருக்கும் (தட்டச்சுவது என்பதால் கை வைத்து என்பது பொருத்தமாக இருக்குமோ?) பலருக்குப் பயன் தரும் என நம்புகிறேன்.
அலைக் கலைஞனாக இருந்து வலைஞனாக வந்த கதை..
இன்னுமொன்று இந்த பதிவுலகம் தந்த பல வகை அனுபவங்கள்.
இது எனக்கு மட்டுமல்ல எல்லாருக்கும் அநேகமாகக் கிடைக்கக் கூடியது.
பல்வேறு உணர்வுகளும் பலரால் கொட்டப்படும் இடம் என்பதால் உணர்ச்சிகள் கிளறப்படுவதும் காயப்படுவதும் சகஜமானதே.
எங்கள் உணர்வுகளை நாம் வைத்துக் கொள்வது எவ்வளவு முக்கியமானதோ அதே போல மற்றவர் உணர்வுகளையும் நாம் கொச்சைப்படுத்தாமல்,கேவலப்படுத்தாமல் இருப்பதை முறையாக கற்றோம் என்றால் எந்த சிக்கலுமில்லை. நீங்களும் எல்லோருடைய நண்பரே.
அதேபோல் ஒருவருடைய கருத்துப் பிடிக்கவில்லை என்றால் கருத்தைக் கருத்தால் எதிர்கொள்வது சிறந்ததே. அதையும் அவர் புண்படா வண்ணம் தெரிவிப்பது சிறந்தது.நான் முடியுமானவரை அவ்வாறு முயல்கிறேன்.
ஆனாலும் எனது பட்டதைப் பட்டபடி சொல்லிவிடும் இயல்பும்,ஆறப்போடாமல் ஆற அமர யோசிக்காமல் உடனே சில சமயம் கருத்தை சொல்லிவிடுவிடும் குணத்தாலும் பல இடங்களில் விரோதியாகப் பார்க்கப்படுகிறேன்/பட்டிருக்கிறேன்.
ஆனால் இதில் நான் என்னை மாற்றிக் கொள்ளப் போவதில்லை. எல்லோருக்கும் எல்லா நேரங்களிலும் நான் நல்லவனாக இருக்க முடியாதல்லவா?
அநியாயங்களுக்கேதிராக குரல் கொடுக்க எல்லா இடங்களிலும் முடியவில்லை. வலையுலகம் மூலமாகவாவது கொஞ்சம் இருந்துவிட்டுப் போகிறேனே.
இதில் பல இடங்களில் நான் வலையுலகுக்கு வந்து கவலைப்பட்டது வலையுலக அரசியல்களாலும் போலித் தனமான மோசடிகளாலும் நல்லவர்கள்,அப்பாவிகள் சிலர் மனம் நொந்துபோனதும், மிக மனம் மெல்லியவர்கள் வலையுலகை விட்டு நீங்கியதும்.
அது போலவே பொது வாழ்க்கையில் மிக சகஜமாகிப் போன குழுமனப்பாங்கு,குழிபறிப்பு,துவேஷம்,வெட்டுக் குத்து,எரிச்சல்,ஏளனம் என்று சகலமும் இங்கே உள்ளன.
மனதை நல்லதாக நேர்மையானதாக வைத்துக் கொண்டால் இவற்றையும் கடக்கலாம்.
தெளிவான பாதையை இங்கே நாம் எடுத்துக் கொள்வதும் கிடைக்கும் நல்லவற்றை மட்டும் மனதில் மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டு சலனங்கள் கடந்து சதிகளைக் கண்டு பயப்படாமல் பயணிப்பவராக நீங்கள் இருக்கும் வரை உங்கள் வலைப்பதிவுப் பயணம் வருடக் கணக்கில் தொடர்வதில் தடையேதும் இருக்காது.
போலியாக உங்களை நீங்களே உயர்த்தி/சில விடயங்களை மறைத்துக் காட்டிக் கொண்டால் அது என்றோ உங்கள் முகத்திரையைக் கிழித்துவிடும் என்பதை நானும் வலையுலகில் பலர் மூலம் கண்டுகொண்டேன்.
வலையுலகம் தந்த பெரிய நல்ல விஷயங்களை இந்தக் காலத்துக்குள் பெற்றிருப்பது மிகுந்த மன நிறைவு..
இடையிடையே சில கசப்பான உணர்வுகள் வந்திருந்தாலும் நிறைவே அதிகமாக இருப்பதால் இன்னும் தொடர்வேன்.
இலங்கையில் மூன்றாவது பதிவர் சந்திப்புக்கு இன்னும் சரியாக எட்டு நாட்களே இருக்கும் நிலையில் ஒரு வருடத்தில் மேலும் விரிந்துள்ள இலங்கைப் பதிவர் சமூகம் மேலும் புதிதான சிந்தனை ஆற்றல் கொண்ட பதிவர்களை இம்முறை சந்திப்பின் மூலம் அறிமுகம் காட்டும் என நம்பிக்கை கொள்கிறேன்.
பதிவுலகத்தில் கூடவே பயணிக்கும் நண்பர்கள்,ரசிகர்கள்,சக பதிவர்கள் அனைவருக்கும் நன்றிகள்.. இனிமையான பொழுதுகளைப் பகிர்ந்துகொள்வதற்கு :)
அடிக்கடி தனித்தனியாக நன்றிகளை சொல்வது உங்களையும் சலிப்புக்குள்ளாக்குமே..
இதனால் என்னுடைய 300௦௦ வது பதிவில் சொல்லப்பட்ட நன்றிகளை மீண்டும் அதே அன்புடனும் நன்றியுணர்வுடனும் இங்கே சமர்ப்பிக்கிறேன்,
பதிவரான பின் நண்பர்களின் சந்திப்பின் சில மகிழ்வான தருணங்களுக்கு..
மேலும் சில பதிவர் சந்திப்புப் படங்கள்.. (இரண்டாவது பதிவர் சந்திப்பில் எடுத்தவை)
தம்பி கங்கோனின் கமெரா சுட்டவை
http://picasaweb.google.com/kanagagopi/BloggersMeeting#
நிமலின் கமெராக் கலை
http://www.flickr.com/photos/nimal/sets/72157623023971738/
உங்கள் அன்பை மேலும் சொரிய ஆசைப்படும் என் மில்லியன் கணக்கான வாசகர்களே/ரசிகர்களே/நேயர்களே ,ஆயிரக்கணக்கான நண்பர்களே, ஐநூற்றுக்கணக்கான Blog Followersஏ தமிழ்மண சிறந்த பதிவுப் போட்டியில் நம் இடுகைகளைக் கவனித்து வாக்களித்து உங்கள் மேலான அன்பைக் காட்டுங்கள்.
(எப்பூடி?)
முக்கியமான குறிப்பு -
இன்று இரவு வெற்றி FMஇல் இடம்பெறும் 'வெற்றி பெற்றவர்கள்' நிகழ்ச்சியில் இலங்கையின் சிரேஷ்ட அறிவிப்பாளர்,பல விருதுகள்,சாதனைகளைத் தன்னகத்தே கொண்ட,மூத்த ஒலிபரப்பாளர் 'வானொலிக் குயில்' ராஜேஸ்வரி சண்முகம் அவர்களை நான் செவ்வி காண்கிறேன்.
இரவு 9.25க்கு
www.vettri.lk
57 comments:
வாழ்த்துக்கள் நண்பா
வலைப்பதிவுலகிலும் உங்களின் இடம் தனித்துவமானது லோஷன், வெற்றி எப் எம் கேட்டுக்கொண்டே எழுதுகிறேன் பூட்டிய விலங்கினை உடைப்போம் பாட்டு போகுது ;-)
500 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள்...
பின்னூட்டமிட வார்த்தைகள் தேடுகிறேன்....!
பொறுங்கள்...
Touche...
ஒரு சிரேஷ்ர பதிவராக மிக அவசியமான பதிவு, மிக மிக அவசியமானது.
// சரியானவிதமாக சொல்லப் போனால் கொள்கைகளில் நாம் கூர்ப்படைந்திருக்கிறோம் எனலாம். //
மிகச்சரி.
நிறையத் தருணங்களில் உணர்ந்திருக்கிறேன்.
//
எதற்கும் வாழ்க்கையில் அளவும்,எல்லையும் இருக்கிறது. அது எது என்பதை ஒவ்வொருவரும் அறிவதே தலையாயது. //
வார்த்தைகள்!
// மனதை நல்லதாக நேர்மையானதாக வைத்துக் கொண்டால் இவற்றையும் கடக்கலாம். //
உண்மை.
// உங்கள் அன்பை மேலும் சொரிய ஆசைப்படும் என் மில்லியன் கணக்கான வாசகர்களே/ரசிகர்களே/நேயர்களே ,ஆயிரக்கணக்கான நண்பர்களே, ஐநூற்றுக்கணக்கான Blog Followersஏ தமிழ்மண சிறந்த பதிவுப் போட்டியில் நம் இடுகைகளைக் கவனித்து வாக்களித்து உங்கள் மேலான அன்பைக் காட்டுங்கள். //
:D
மிக அருமையான பதிவு.
500ஆவது பதிவு என்ற மைல்கல் பதிவில் மென்மையான பதிவாக இருக்குமென்று எதிர்பார்த்தேன், ஆனால் மிகக் காத்திரமான பதிவு.
பதிவிற்கு நன்றிகள், 500 இற்கு வாழ்த்துக்கள் அண்ணா.
வாழ்த்துக்கள் தோழா .
நன்றாக சொன்னிங்க அண்ணா. நானும் நிறையபேருடைய வலை பதிவுகளை வாசித்திருக்கின்றேன். பெரும்பாலும் இந்த குமுறல்கள் இருக்கின்றன.. நீங்கள் கூறியது போல இதை முழு நேர தொழிலாக கருதாமல் ஒரு பகுதி நேர பொழுதுபோக்கு, தேடலாக கருதினால் நல்லது தான்.. உங்களுடைய 500 வது பதிவுக்கு எனது வாழ்த்துக்கள்..
வாழ்த்துக்கள் அண்ணா. உங்கள் பதிவுகள் தான் என்னை பதிவுலகுக்கு (பதிவுகளை வாசிக்க மட்டும்) அறிமுகம் செய்து வைத்து சில நல்ல பதிவர்களையும் நல்ல நண்பர்களையும் தந்திருக்கின்றன. பல விடங்களை அறியத் தந்திருக்கின்றன. ஆங்காங்கே சில மொக்கை பதிவுகளோ, பொன்டிங் புராண பதிவுகளோ எதிர் பின்னோட்டம் போட மனம் சம்மதிப்பதில்லை.
மீண்டும் வாழ்த்துக்கள்.
நல்லதொரு பதிவு புதியவர்களுக்கு மிகவும் பயன்படும், காய்க்கின்ற மரம் தான் கல்லடி படும் என்பதால் கல்லால் எறியும் ரோஷம் கெட்டவர்களை கண்டுகொள்ளாமல் விடுவதே சிறந்தது.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சில நிகழ்வுகளையும் படங்களையும் தவிர்த்தமைக்கு நன்றிகள்.
வாவ், பதிவுலக சச்சின் லோஷன் அண்ணா வாழ்க..:p
500 குவித்தமைக்கு வாழ்த்துக்கள் அண்ணா..:D
விரைவில் பார்ட்டியை எதிர்பார்கிறோம்..:P
உண்மைகள், நிதர்சனங்கள் மிக்க பதிவு. முதலில் 500ற்கு வாழ்த்துக்கள்.
அப்புறம் ம்ம்ம்...பதிவுகள் என்ற போதையில் முக்கியமாக மாணவர்கள் தங்கள் கல்விக்கே முதன்மை கொடுக்கவேண்டும், பதிவு எழுதும்போதையில் அதை தொலைத்துவிடக்கூடாது என்பது எனது அவா. அதை நீங்களும்கூறியுள்ளது சந்தோசமே. அதேபோல எமக்கு கிடைக்கும் சில மணித்தியாலங்களை ஆரோக்கியமாக அமைக்க பதிவுகள் உதவலாம்.
சில விடயங்களை சிந்தனைகளை பெற பதிவுகள் உதவுகின்றன.
என் தொழிலக்கும் பதிவுக்கும் சம்பந்தமே இல்லை. தாங்கள் சொன்னதுபோல முதலில் தொழில் (எமக்கு சோறுபோடுகின்றது) அடுத்த எங்கள் குடும்பவேலைகள், அடுத்து குழந்தையுடன் செலவிடும் நீண்ட நேரம். இத்தனைக்கும்பிறகுதான் இணையம், பதிவுகள் எல்லாமே. எமக்கு என்றொரு நேரத்தை வைத்திருந்தால் சாத்தியமே. இத்தனைக்கும் மத்தியில் இரவு பதிவுகளை எழுதிவிட்டு, அதை சேகரித்து, அடுத்தநாள் என்னால், நாள்தவறாமல் பதிவிட முடிவது எனக்கே ஆச்சரியம்தான்.
இதை நான் சுயபுராணத்திற்காக சொல்லவில்லை. தாங்கள் சுட்டிக்காட்யதுபோல், கல்வி, தொழில், குடும்பத்துக்கான நேரம் என்பவற்றை இழக்காமல், பதிவு இடவேண்டும் இளையவர்கள் என்பாதற்காகவே சொல்கின்றேன்.
அருமை லோஷன் இதற்காக உங்களுக்கு ஒரு ரோயல் சலூட்.
வாழ்த்துக்கள் அண்ணா... எனக்கு கிட்டத்தட்ட தங்களின் கடைசி 50 பதிவுகளையே சுடச்சுட படிக்க முடிந்தாலும் அதன் அருமையான மொழி நடை எனக்கு கவர்ந்தது.
இந்த 500 வரும் 2 வருடத்தில் 5000 ஆக வேண்டும்.. கேள்வி நெற் தரவில் மீண்டும் சிலரை நீங்கள் பின்னக்கு தள்ள வேண்டும் என்பதே என் ஆசை...
வாழ்த்துக்கள் லோஷன். வலைபதிவை பற்றி ரொம்பவும் தெரிந்து வைத்து இருக்கின்றீர்கள். இன்னும் நிறைய எழுத நேரம் உங்களுக்கு கை கொடுக்க எல்லாம் வல்ல பரம்பொருளை வேண்டுகின்றேன்.
இந்த அரை ஆயிரம் விரைவில் முழு ஆயிரமாக வாழ்த்துகின்றேன்.
வாழ்த்துக்கள் அண்ணா
முதலில் 500க்கு வாழ்த்துகள் அண்ணா
பதிவுலகம் பற்றிய உங்கள் பார்வையுடன் முழுவதுமாக ஒத்துப்போகிறேன்.
//நான் இன்னும் பதிவுக்கான வாக்குகள், Alexa RATINGS, பின்னூட்டங்களை கவனித்துக் கொண்டிருந்தாலும் கூட, அதில் எனக்கு முன்பிருந்தே இருக்கும் புள்ளிவிபர ஆர்வம் இருந்தாலும் இது அல்ல என் வாழ்க்கை,இதுவல்ல எனக்கான இலட்சியத்தின் அடைவு எனத் தெரியும்.//
//கேள்வி நெற் தரவில் மீண்டும் சிலரை நீங்கள் பின்னக்கு தள்ள வேண்டும் என்பதே என் ஆசை..//
அடடா மதிசுதா அண்ணே, உங்களுக்கு சொல்லும் தகுதி எனக்கு இருக்கிறதா தெரியவில்லை. ஆனாலும் மனதில் பட்டது, இந்த இலக்கங்களின் மாயைக்குள் அகப்பட்டுவிடாதீர்கள்.
வாழ்த்துக்கள் லோஷன் அண்ணா..
யதார்த்தமான கருத்துக்கள்..
500 ஆயிரம் ஆகட்டும் வாழ்த்துக்கள் நண்பா.
முதலில் 500ற்கு வாழ்த்துக்கள் அண்ணா.
உங்கள் பதிவுகளை எனக்கு படிக்க ஆசை ஆகையால் 500 50000 ஆக வேண்டும். தரவில் நீங்கள் முதலிடம் பெற வேண்டும் என்பதே ஆசை ஆவா
மனம் நிறைந்த வாழ்த்துகள் லோஷன்!
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
500 ஐத் தொட்ட உங்களுக்கு வாழ்த்துக்கள் அண்ணா!!
இன்னும் எழுதலாமே!!!அண்ணா அடிக்கடி உங்கள் வலைப் பதிவுப் பக்கம் வ்ந்து போவர்களில் நானும் ஒருவன்.நட்சத்திர பதிவரான நீங்கள் கிழமைக்கு 3-4 பதிவுகள் வரை எழுதி எங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுங்கள் அண்ணா!!!.. உங்கள் ரசிகன் என்ற ரீதியில் வேண்டுகிறேன்.
ஒரு நாளைக்கு 3-4 தடவை உங்கள் வலைப்பூவுக்கு வந்து போவேன்.ஏமாற்றம் தான்!!!(பதிவு போடுவீங்க என்ட நப்பாசைதான்!!!)
உண்மையாக சொன்னால் என் வலைப் பூ அறிமுகத்திற்கும் நீங்கள் தான் காரணம்."நீங்க எனக்கு ஒரு இன்பயரேஷன்"..உண்மைதான் அதிகமாக என் நேரம் வலைப் பூக்களிலேயே கழிகிறது!!!.எப்படி குறைக்கலாம் அண்ணா..
வலைப்பதிவுப் பக்கம் வந்த பிறகு என் வாசிப்பு மீதான ஆர்வம் அதிகமாகியிருக்கிறது.(முன்பெல்லாம் வாசிக்கவும் சோம்பேறியாகக் கிடந்தவன் நான்!!!)நிறைய விஷயங்கள் புதிய விஷயங்கள் வலைப் பதிவில் தொங்கிக் கிடப்பாதால் அறிகிறேன் அண்ணா!!வாசிப்பின் மீதான காதலும் தேடல் மீதான காதலும் இன்னும் அதிகமாயிருக்கிறது!!!..!!
என்னையும் உங்களோடு வலைப்பதிவில் சேர்க்க முன்னோடியாக இருந்துள்ளீர்கள் நன்றி அண்ணா...
அறிமுக பதிவர்களான எங்களுக்கு உங்கள் அறிவுரைகள் முக்கியம் அண்ணா!!
/////அடடா மதிசுதா அண்ணே, உங்களுக்கு சொல்லும் தகுதி எனக்கு இருக்கிறதா தெரியவில்லை. ஆனாலும் மனதில் பட்டது, இந்த இலக்கங்களின் மாயைக்குள் அகப்பட்டுவிடாதீர்கள்./////
நல்லதை யார் சொன்னாலும் ஏற்கும் மனிதனே நல்ல இடத்திற்கு வரமுடியும்.. சுபா உங்களுக்கு இது தெரியாதா...
மிக்க நன்றி சுபா..
என்னை பதிவுலகுக்கு கையை பிடித்து அழைத்து வந்து நடக்க வைத்தவர் நீங்கள். இப்போது 500 வாழ்த்த மாட்டேன். வாசித்துக்கொண்டே இருப்பேன்.
வணக்கம் லோஷன், 500 பதிவுகளை நீங்கள் தொட்டிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. நான் உங்களை வாழ்த்த விரும்புகிறேன். இப்போதல்ல.
வேறொரு இடத்தில், வேறொரு நேரத்தில்! அன்று உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்! காத்திருங்கள்!
வாழ்த்துக்கள்
வாழ்த்துகள் தோழா! என் போன்ற புதிய பதிவர்களுக்கு முக்கியமான பாடம் இது!
500 வது பதிவுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.
நீங்கள் சொல்லியிருக்கின்ற அனைத்து உண்மையான விடையங்களே.
இருந்தாலும் என்ன செய்றது எங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த ஒரு ஊடகமாக இந்த பதிவுலகத்தை பயன்படுத்துகின்றோம்.அந்த வகையில் ஒரு சின்ன சந்தோசம்.
இருந்தாலும் எங்களையெல்லாம் பதிவெழுத ஊக்கபடுத்திய உங்கள் பணி மென்மேலும் தொடர வேண்டும்.
உண்மையை சொல்ல போனால் அதற்கு ஒரு முழு பதிவிட வேண்டும். அது விரைவில் வரும். நன்றி அண்ணா.
வாழ்த்துக்கள் அண்ணே
500 வது பதிவுக்கு வாழ்த்துகள்
மிக அருமையாக எழுதி இருக்கீங்க
வாழ்த்துக்கள் பாஸ்...
Happy 500,happy 2nd innings?,
வாழ்த்துக்கள் அண்ணா...
உங்கள் அனைத்துப்பதிவுகளோடும் வந்த மனத்திருப்தி எனக்கு.
இப்பதிவுலகம் எனக்குத் தந்தவைகளில் உங்கள் நட்பு - அந்த நட்பையும் தாண்டி சகோதரனாக வழிகாட்டிய உங்கள் உறவு மேன்மையானது.
நன்றிகள்.
தரமான் பதிவுகளோடு 5000ஐ எட்டிப்பிடிக்க வாழ்த்துக்கள் அண்ணா..!!!
வாழ்த்துக்கள் அண்ணா.......
வாழ்த்துக்கள் அண்ணே... உங்கள் பதிவுகள் வட்டி குட்டி போட்டு கூட்டு வட்டி போட எல்லாம் வல்ல மதுரை மீனாட்சியை வேண்டுகிறேன்.. :P
500க்கு வாழ்த்துக்கள் லோஷன், தொடர்ந்து அடித்து ஆடுங்கள்
///உங்கள் அன்பை மேலும் சொரிய ஆசைப்படும் என் மில்லியன் கணக்கான வாசகர்களே/ரசிகர்களே/நேயர்களே ,ஆயிரக்கணக்கான நண்பர்களே, ஐநூற்றுக்கணக்கான Blog Followersஏ தமிழ்மண சிறந்த பதிவுப் போட்டியில் நம் இடுகைகளைக் கவனித்து வாக்களித்து உங்கள் மேலான அன்பைக் காட்டுங்கள்.
(எப்பூடி?)////
காட்டுறம், காட்டுறம்
500 ஆவது பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே!...
என் இந்த பிளாக் பெய்ரை http://allinalljaleela.blogspot.com
http://samaiyalattakaasam.blogspot.com இப்படி மாற்றியுள்ளேன் அதிலும் வந்து முன்பு போல் உங்கள் மேலான கருத்துகக்ளை தெரிவிக்கவும்.
இதில் பாலோவரா ஆட் ஆகிக்கொள்ளவும்.
இப்படிக்கு ஜலீலா
நன்றிகள்.....
@வந்தியத்தேவன்
@கானா பிரபா
@KANA VARO
@நண்டு @நொரண்டு -ஈரோடு
@ கன்கொன் || Kangon
Touche...//
நன்றி :)
@ T.Nishan
நன்றாக சொன்னிங்க அண்ணா.//
நன்றி தம்பி
KUMS said...
வாழ்த்துக்கள் அண்ணா. //
நன்றிகள்..
உங்கள் பதிவுகள் தான் என்னை பதிவுலகுக்கு (பதிவுகளை வாசிக்க மட்டும்) அறிமுகம் செய்து வைத்து சில நல்ல பதிவர்களையும் நல்ல நண்பர்களையும் தந்திருக்கின்றன. பல விடங்களை அறியத் தந்திருக்கின்றன. ஆங்காங்கே சில மொக்கை பதிவுகளோ, பொன்டிங் புராண பதிவுகளோ எதிர் பின்னோட்டம் போட மனம் சம்மதிப்பதில்லை.//
ஆகா :)
==================
வந்தியத்தேவன் said...
நல்லதொரு பதிவு புதியவர்களுக்கு மிகவும் பயன்படும், காய்க்கின்ற மரம் தான் கல்லடி படும் என்பதால் கல்லால் எறியும் ரோஷம் கெட்டவர்களை கண்டுகொள்ளாமல் விடுவதே சிறந்தது.//
பழகிவிட்டது. கல்லாக இருந்தால் தானே வலிக்கும்.:)
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சில நிகழ்வுகளையும் படங்களையும் தவிர்த்தமைக்கு நன்றிகள்.//
அதெல்லாம் தவிர்க்கப்பட்டன என்று எப்படி நினைக்க முடியும். வரும் மாமா.. ;)
Bavan said...
வாவ், பதிவுலக சச்சின் லோஷன் அண்ணா வாழ்க..:p //
ஐயோ அம்மா..
500 குவித்தமைக்கு வாழ்த்துக்கள் அண்ணா..:D //
நன்றி
விரைவில் பார்ட்டியை எதிர்பார்கிறோம்..:P //
ஆஷசில் வென்ற பிறகு பார்க்கலாம் ;)
=========================
Jana said...
உண்மைகள், நிதர்சனங்கள் மிக்க பதிவு. முதலில் 500ற்கு வாழ்த்துக்கள்.//
நன்றிகள் ஜனா
அப்புறம் ம்ம்ம்...பதிவுகள் என்ற போதையில் முக்கியமாக மாணவர்கள் தங்கள் கல்விக்கே முதன்மை கொடுக்கவேண்டும், பதிவு எழுதும்போதையில் அதை தொலைத்துவிடக்கூடாது என்பது எனது அவா. அதை நீங்களும்கூறியுள்ளது சந்தோசமே. அதேபோல எமக்கு கிடைக்கும் சில மணித்தியாலங்களை ஆரோக்கியமாக அமைக்க பதிவுகள் உதவலாம்.//
நிதர்சனம்
என் தொழிலக்கும் பதிவுக்கும் சம்பந்தமே இல்லை. தாங்கள் சொன்னதுபோல முதலில் தொழில் (எமக்கு சோறுபோடுகின்றது) அடுத்த எங்கள் குடும்பவேலைகள், அடுத்து குழந்தையுடன் செலவிடும் நீண்ட நேரம். இத்தனைக்கும்பிறகுதான் இணையம், பதிவுகள் எல்லாமே. //
உண்மை. நான் குடும்பத்தோடு செலவிடும் மகிழ்ச்சியான நேரங்களில் பதிவுகள் போட்டு இரண்டையும் குழப்புவதில்லை.
எமக்கு என்றொரு நேரத்தை வைத்திருந்தால் சாத்தியமே. இத்தனைக்கும் மத்தியில் இரவு பதிவுகளை எழுதிவிட்டு, அதை சேகரித்து, அடுத்தநாள் என்னால், நாள்தவறாமல் பதிவிட முடிவது எனக்கே ஆச்சரியம்தான்.//
உண்மை. அடிக்கடி உங்களால் பதிவிட முடிவது எனக்கும் ஆச்சரியம் தான்.
இதை நான் சுயபுராணத்திற்காக சொல்லவில்லை. தாங்கள் சுட்டிக்காட்யதுபோல், கல்வி, தொழில், குடும்பத்துக்கான நேரம் என்பவற்றை இழக்காமல், பதிவு இடவேண்டும் இளையவர்கள் என்பாதற்காகவே சொல்கின்றேன்.//
ம்ம்.. சுய புரனாமாக இருந்தாலும் பிரச்சினையில்லை. காரணம் அதுவே உண்மை :)
அருமை லோஷன் இதற்காக உங்களுக்கு ஒரு ரோயல் சலூட்.//
நன்றி பாஸ்
ம.தி.சுதா said...
வாழ்த்துக்கள் அண்ணா... எனக்கு கிட்டத்தட்ட தங்களின் கடைசி 50 பதிவுகளையே சுடச்சுட படிக்க முடிந்தாலும் அதன் அருமையான மொழி நடை எனக்கு கவர்ந்தது.//
அப்பிடியே முன்னைய நானூற்று ஐம்பதையும் வாசித்து விடுங்களே :)
இந்த 500 வரும் 2 வருடத்தில் 5000 ஆக வேண்டும்..//
ஆகா.. நன்றி. ஆனால் கஷ்டம். நான் என்ன மதிசுதாவா?
கேள்வி நெற் தரவில் மீண்டும் சிலரை நீங்கள் பின்னக்கு தள்ள வேண்டும் என்பதே என் ஆசை...//
அவ்வ :-O
=================
ஜாக்கி சேகர் said...
வாழ்த்துக்கள் லோஷன். வலைபதிவை பற்றி ரொம்பவும் தெரிந்து வைத்து இருக்கின்றீர்கள். //
நன்றி அண்ணாச்சி. நீங்க சொன்னா பெரிய விஷயம் :)
இன்னும் நிறைய எழுத நேரம் உங்களுக்கு கை கொடுக்க எல்லாம் வல்ல பரம்பொருளை வேண்டுகின்றேன்.//
பரம்பொருளா? கிடைச்ச மாதிரி தான்,.
துளசி கோபால் said...
இந்த அரை ஆயிரம் விரைவில் முழு ஆயிரமாக வாழ்த்துகின்றேன்.//
நன்றி துளசி.. இன்னும் மூன்று வருடங்களில் ;)
===============
viththy said...
வாழ்த்துக்கள் அண்ணா//
நன்றிகள்
======================
Subankan said...
முதலில் 500க்கு வாழ்த்துகள் அண்ணா//
நன்றி
பதிவுலகம் பற்றிய உங்கள் பார்வையுடன் முழுவதுமாக ஒத்துப்போகிறேன்.//
மீண்டும் நன்றி
=============================
sinmajan said...
வாழ்த்துக்கள் லோஷன் அண்ணா..
யதார்த்தமான கருத்துக்கள்..//
நன்றி :)
கிளியனூர் இஸ்மத் said...
500 ஆயிரம் ஆகட்டும் வாழ்த்துக்கள் நண்பா.//
ஆகா நன்றிகள் நண்பா
sivatharisan said...
முதலில் 500ற்கு வாழ்த்துக்கள் அண்ணா.//
நன்றி
உங்கள் பதிவுகளை எனக்கு படிக்க ஆசை ஆகையால் 500 50000 ஆக வேண்டும்.//
கொஞ்சம் காலமாகும் பரவாயில்லையா? ;)
தரவில் நீங்கள் முதலிடம் பெற வேண்டும் என்பதே ஆசை ஆவா//
உலகிலேயா? அதுக்கு கூகிள்,. பஸ் புக் எல்லாம் விட்டுக் குடுக்கணுமே. கொஞ்சம் சிபாரிசு செய்றீங்களா? ;)
==================
ஈரோடு கதிர் said...
மனம் நிறைந்த வாழ்த்துகள் லோஷன்!//
நன்றி கதிர்
==================
Naliny said...
வாழ்த்துக்கள்//
நன்றி
மாயனின் எண்ணங்கள் said...
500 ஐத் தொட்ட உங்களுக்கு வாழ்த்துக்கள் அண்ணா!!//
நன்றிகள்.
இன்னும் எழுதலாமே!!!//
எழுதுகிறேனே - நேரம் கிடைக்கையில் விஷயம் இருக்கையில்.
கிழமைக்கு 3-4 பதிவுகள் வரை எழுதி எங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுங்கள் அண்ணா!!!.. உங்கள் ரசிகன் என்ற ரீதியில் வேண்டுகிறேன்.//
ஆகா.. ம்ம். முடியமென்றால். முடியுமான நாட்களில்.
உண்மையாக சொன்னால் என் வலைப் பூ அறிமுகத்திற்கும் நீங்கள் தான் காரணம்."நீங்க எனக்கு ஒரு இன்பயரேஷன்"..//
நன்றி.
உண்மைதான் அதிகமாக என் நேரம் வலைப் பூக்களிலேயே கழிகிறது!!!.எப்படி குறைக்கலாம் அண்ணா..//
வெட்டியாக இருக்கிறீர்கள். வேலை ஒன்றுக்கு முயற்சி செய்யவும் ;)
======================
SShathiesh-சதீஷ். said...
என்னை பதிவுலகுக்கு கையை பிடித்து அழைத்து வந்து நடக்க வைத்தவர் நீங்கள்.//
அப்படியா? :)
Rajeevan said...
வணக்கம் லோஷன், 500 பதிவுகளை நீங்கள் தொட்டிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. நான் உங்களை வாழ்த்த விரும்புகிறேன். இப்போதல்ல.
வேறொரு இடத்தில், வேறொரு நேரத்தில்! அன்று உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்! காத்திருங்கள்!//
இதென்ன? கொஞ்சம் பயமாகவும் இருக்கிறது.(ஒ.. அந்தத் தோடர் பதிவா?)
நீங்கள் இருக்கும் இடத்துக்கு அழைத்து வாழ்த்தினால் மகிழ்வேன் ;)
================
கலாநேசன் said...
வாழ்த்துக்கள்//
நன்றி
==================
சிவகுமார் said...
வாழ்த்துகள் தோழா! //
நன்றி நண்பா..
என் போன்ற புதிய பதிவர்களுக்கு முக்கியமான பாடம் இது!//
அப்படியெல்லாம் இல்லை. என மனதில் பட்டவை/நான் பட்டவை பற்றி சொன்னேன்.
பிரபா said...
500 வது பதிவுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.//
நன்றிகள்.
எங்களையெல்லாம் பதிவெழுத ஊக்கபடுத்திய உங்கள் பணி மென்மேலும் தொடர வேண்டும்.
உண்மையை சொல்ல போனால் அதற்கு ஒரு முழு பதிவிட வேண்டும். அது விரைவில் வரும். //
நன்றி :)
=====================
வதீஸ்-Vathees said...
வாழ்த்துக்கள் அண்ணே//
நன்றி :)
=============================
Jaleela Kamal said...
500 வது பதிவுக்கு வாழ்த்துகள்
மிக அருமையாக எழுதி இருக்கீங்க//
நன்றி
=====================
எட்வின் said...
வாழ்த்துக்கள் பாஸ்...//
நன்றி பாசு
Shafna said...
Happy 500,happy 2nd innings?,//
Tx . NO 2ND Innings. same innings :)
==============
ஆதிரை said...
வாழ்த்துக்கள் அண்ணா...//
நன்றி
உங்கள் அனைத்துப்பதிவுகளோடும் வந்த மனத்திருப்தி எனக்கு.//
:)
இப்பதிவுலகம் எனக்குத் தந்தவைகளில் உங்கள் நட்பு - அந்த நட்பையும் தாண்டி சகோதரனாக வழிகாட்டிய உங்கள் உறவு மேன்மையானது.//
பெரிய வார்த்தைகள். :)அன்புக்கு நன்றி
================
Cool Boy கிருத்திகன். said...
தரமான் பதிவுகளோடு 5000ஐ எட்டிப்பிடிக்க வாழ்த்துக்கள் அண்ணா..!!!//
நன்றி கூல்
=====================
Loganathan said...
வாழ்த்துக்கள் அண்ணா.......//
நன்றி
Ashwin-WIN said...
வாழ்த்துக்கள் அண்ணே...//
நன்றி
உங்கள் பதிவுகள் வட்டி குட்டி போட்டு கூட்டு வட்டி போட எல்லாம் வல்ல மதுரை மீனாட்சியை வேண்டுகிறேன்.. //
ஏன்யா? ஏன் இப்படி ஒரு வன்முறை?
=======================
யோ வொய்ஸ் (யோகா) said...
500க்கு வாழ்த்துக்கள் லோஷன், தொடர்ந்து அடித்து ஆடுங்கள்//
நன்றி. யாரை? ;)
காட்டுறம், காட்டுறம்//
ஏன் இப்பிடி மிரட்டுறீங்க?
==========
சூர்யா ௧ண்ணன் said...
500 ஆவது பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே!...//
நன்றி நண்பரே
///Bavan said...
வாவ், பதிவுலக சச்சின் லோஷன் அண்ணா வாழ்க..:p //
ஐயோ அம்மா..
500 குவித்தமைக்கு வாழ்த்துக்கள் அண்ணா..:D //
நன்றி
விரைவில் பார்ட்டியை எதிர்பார்கிறோம்..:P //
ஆஷசில் வென்ற பிறகு பார்க்கலாம் ;)
////
யார் வென்ற பிறகு? ஆஸியா இங்கிலாந்தா?
யோ வொய்ஸ் (யோகா) said...
///Bavan said...
ஆஷசில் வென்ற பிறகு பார்க்கலாம் ;)
////
யார் வென்ற பிறகு? ஆஸியா இங்கிலாந்தா?//
அதான் பொதுவா சொல்லி இருக்கிறமில்ல.. விடுங்களேன் ;)
விக்கிரமாதித்தன் அமைதியாக இருந்தாலும் பொறுக்காதே ;)
அப்ப யார் வென்றாலும் பார்ட்டி இருக்கு இல்லையா லோஷன்?
நீங்கள் இருக்கும் இடத்துக்கு அழைத்து வாழ்த்தினால் மகிழ்வேன் ;)
உண்மைதான். இங்கு யார் யாரெல்லாமோ வந்து போகிறார்கள். உங்களை அழைத்துப் பாராட்ட ஒரு நல்ல சந்தர்ப்பம் வராமலா போகும்?
பதிவு வெளிவந்து ஒரு வாரத்துக்கு பின் வந்து வாழ்த்து தெரிவிப்பதற்கு முதலில் மன்னிப்பு கேட்கின்றேன்...
இந்த ஓரு வாரம் ஓயாத பயணம்(நீண்ட துாரம்) வாட்டி எடுத்து விட்ட காய்ச்சல்.....இவற்றால் பதிவுகளை பார்க்க முடியவில்லை...sorry
அண்மையில் கும்மிகளின் சாதனை படைத்த தங்கள் பதிவு இன்று மொத்த பதிவுகளில் 500 ஐ தொட்டமை கண்டு ஒரு சகோதரனாய் எனக்கு பெரு மகிழ்ச்சி...
தங்களின் அறிவுரைகளை பதிவுலகில் புதியவனான நான் ஏற்று அவற்றை கவனத்தில் கொள்கின்றேன்..
உங்களின் நேர முகாமைத்துவம் பாராட்ட வைக்கின்றது...கற்க வைக்கின்றது....
உண்மையில் பதிவுலகம் இந்த குறுகிய காலத்தில் என் தேடல் ஆர்வத்தினை மேலும் துாண்டி இருக்கின்றது...வீணாகும் நேரத்தை பிரயோசனமாக்குகின்றது...மிக்க மகிழ்ச்சி...
தொடரும் உங்கள் பதிவுப்பணியில் நாமும் இணைந்திருப்போம்...இணைபிரியாமல்.......
Post a Comment