April 13, 2013

13ம் 14ம் - ஒரு IPL அலசல்

2013 ஆம் ஆண்டின் IPL போட்டிகளின் 13 போட்டிகள் முடிவடைந்த பிறகு, நேற்றைய போட்டி - Delhi Dare Devils vs Sun Risers Hyderabad - 14வது போட்டியாக நடைபெற முதல் வழமையாக நான் எழுதும் 'தமிழ் மிரரின்' விளையாட்டுப் பகுதிக்காக எழுதிய கட்டுரை இது....

எனினும் சில பல தொடர்பு, தொழிநுட்ப சிக்கல்களால் பிரசுரிக்க முடியாமல் போக, 14வது போட்டியும் முடிந்த பிறகு, 13ஆம் திகதியாகிய இன்று கொஞ்சம் தாமதமாக இங்கே இடுகிறேன்.

-----------
13ம் 14ம் - ஒரு IPL அலசல் 




IPL 2013 இன் 13 போட்டிகள் நிறைவுக்கு வந்திருக்கின்றன. மே மாதம் 26 ஆம் திகதி வரை நீண்டு செல்லப் போகிற தொடர் என்ற காரணத்தால் இப்போதே எந்த அணிகள் இறுதிச் சுற்றுக்குள் (அரை இறுதிப் போட்டிகள் இல்லாத காரணத்தால்) நுழையத் தகுதி பெறும் என்று ஊகிப்பது எல்லாம் வேலைக்கு ஆகாது.

அதிகமாக ஒரு அணி நான்கு போட்டிகளையே விளையாடியிருக்கும் நிலையில் (பெங்களூர் றோயல் சலேஞ்சர்ஸ்) புள்ளிகளின் அடிப்படையில் பெங்களூர் றோயல் சலேஞ்சர்ஸ் அணியே முதலாம் இடத்தில் இருக்கிறது.
பல நட்சத்திரங்களைக் கொண்டுள்ள மும்பாய் இந்தியன்ஸ் அணி, டெக்கான் சார்ஜர்ஸ் என்ற பெயரில் கடந்த காலங்களில் தடுமாறி வந்த அணி உரிமையாளர் மற்றும் பெயரை மாற்றியவுடன் வெற்றிப் பாதையில் பயணிக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் றோயல்ஸ் ஆகிய அணிகள் தலா இரண்டு வெற்றிகளைத் தாம் விளையாடியுள்ள 3 போட்டிகளில் பெற்றுள்ளன.

நடப்பு சாம்பியன் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணியானது முதலாவது போட்டியில் வெற்றியோடு ஆரம்பித்தாலும் அடுத்த இரண்டு போட்டிகளில் தோல்விகள்.
அதே போல ஒவ்வொரு முறையும் பலமான அணியாக வலம் வரும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் முதல் போட்டியில் தோற்றாலும் அடுத்த போட்டியில் தன்னை அபாரமாக வெளிப்படுத்தியுள்ளது.

இதுவரை நடந்த போட்டிகள் அணிகள் தங்களை திடப்படுத்திக்கொள்ளவும், அணிகளின் கட்டமைப்பை அறிந்துகொள்ளவும் உதவியிருக்கலாம்.

ஆனால் முன்னைய கட்டுரையில் நான் எழுதியிருந்ததைப் போல, களம், காலநிலை போட்டிக்குப் போட்டி வேறுபடுவதாலும், இருபது ஓவர்களே கொண்ட போட்டிகள் என்பதாலும் மட்டுமல்லாது, நான்கு வெளிநாட்டு வீரர்களே ஒரு போட்டியில் விளையாடலாம் என்பதும் அணிகளை ஒவ்வொரு போட்டியிலும் தாம் செய்யும் வீரர்களை மாற்றவைக்கும் என்பது உறுதி.

ஆறாவது IPL இல் இதுவரை படைக்கப்பட்ட சாதனைகளை விட, சர்ச்சைகள் அதிகம் எனலாம்...

ஆரம்பத்திலேயே இலங்கை மீதான போர்க்குற்றம் பற்றி எழுந்த எதிர்ப்பும், மாணவர் போராட்டமும், ஜெயலலிதாவின் தடையும் ஒருபக்கம் மிகப் பெரிய அளவில் இருந்தன.
லலித் மோடி பற்றிய ஊழல் சர்ச்சைகளுக்கு அடுத்தபடியாக இதுவே IPL போட்டிகளை நிறுத்தும் அல்லது தடுக்கும் அளவுக்கு இருந்தன. 
ஆனால் தமிழ்நாட்டில் (சென்னையில்) நடக்கும் போட்டிகளில் இலங்கை வீரர்களைத் தடை செய்வதோடு அது முடிந்தது.

இலங்கை வீரர்களை IPL ஐப் புறக்கணிக்கச் செய்யும் பிசுபிசுத்த முயற்சிகள் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டாலும்,  இலங்கை வீரர்களில் தற்போதைய T20 சர்வதேசத் தலைவர் சந்திமாலைத் தவிர ஏனைய அத்தனை வீரர்களுமே இப்போது IPL இல் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

ஹர்பஜன் ஸ்ரீசாந்தைக் கன்னத்தில் அறைந்ததைப் போலவோ, ஷாருக் கானின் குடிவெறிக் கூத்தைப் போலவோ அல்லது கடந்த வருடத்தின் போதை வஸ்துக் கைதுகள் போலவோ எந்தவொரு பாரிய சர்ச்சை சம்பவங்கள் இம்முறை இதுவரை IPL இல் இடம்பெறாவிட்டாலும், ஆங்காங்கே சின்ன சின்ன சம்பங்கள் இடம்பெற்றே இருந்தன.
அப்படி இல்லாவிட்டால் அது IPL இல்லையே...

நேற்றிரவு கம்பீர் - கொஹ்லி மோதல் தான் இப்போதைக்கு பெரியது & சுவாரஸ்யமானது.
இந்திய அணியின் சிரேஷ்ட வீரர்களில் ஒருவரும் சில போட்டிகளில் தலைமை தாங்கியவருமான கம்பீருடன் - இவர் இளம் வீரர் விராட் கொஹ்ளியின் டெல்லி அணியில் சிரேஷ்ட வீரரும் கூட- விராட் கோஹ்லி வார்த்தைகளால் மோதியது இந்திய கிரிக்கெட் வட்டாரங்களில் கொஞ்சம் கசப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இன்னொரு ஸ்ரீசாந்த் - ஹர்பஜன் விவகாரம் போல இது பெரியதாக இல்லாவிட்டாலும், எதிர்கால இந்திய அணியின் தலைவர் என்று கருதப்படும் கொஹ்லி இப்படியான அடிப்படை ஒழுங்குப் பிரச்சினைகளில் பல முறை சிக்கி வருவதும், இந்திய அணியின் சிரேஷ்ட வீரர்களில் ஒருவரை மதிக்காமல் நடந்திருப்பதானதும் நல்லதில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது. 

(இதுக்குத் தான் இவரைப் பற்றி அப்போவே இப்படி சொல்லியிருந்தேன்.. 
எப்பூடி?

இருவருமே போட்டித் தீர்ப்பாலரால் எச்சரிக்கப்பட்டுள்ளார்கள்.

இம்முறை சில புதிய முகங்கள் அறிமுகப்போட்டிகளில் பிரகாசித்திருப்பது ஒருபக்கம், வயது முதிர்ந்த மூத்த நட்சத்திரங்கள் தங்கள் அனுபவத் திறமைகளை வெளிப்படுத்திக்கொண்டிருப்பது மறுபக்கம் என இளமையும் அனுபவமும் கலந்த ஒரு அற்புதக் கலக்கலாக இந்த IPL 6 விளங்குகிறது.

பஞ்சாப்பின் மானான் வோஹ்ரா, ஹைதராபாதின் ஹனுமா விகாரி, மும்பையின் பும்ரா ஆகியோர் இம்முறை தங்கள் கைகளை உயர்த்திக் காட்டியுள்ள புதியவர்கள்.

இந்தாவின் பெருஞ்சுவர் ராகுல் திராவிட் சர்வதேசக் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும் தனது கிரிக்கெட் திறமைகளுக்கு ஓய்வே கிடையாது என்பதை வெளுத்து விளாசுகிறார்.
இதற்குள் அபாரமான பிடிஎடுப்பு வேறு.

அதே போட்டியில் ஆஸ்திரேலியாவின் நாற்பது வயதை அண்மிக்கும் பிரட் ஹோட்ஜின் சிறப்பான களத்தடுப்பு. இவர் ஓட்டங்களையும் குவித்து வருகிறார்.
மறுபக்கம் ரிக்கி பொண்டிங்கின் டெல்லிக்கு எதிரான போட்டியில் எடுத்த பிடியும் மிகச் சிறந்த ஒன்று.
இன்னொரு மூத்தவர் அண்மையில் ஓய்வு பெற்ற மைக்கேல் ஹசி. சென்னைக்காக இவர் குவித்த வேகமான ஓட்டங்களும் களத்தடுப்பும் இளையவர்களைப் பொறாமைப் பட வைக்கக் கூடியது.

இன்னும் முரளிதரன், சச்சின் டெண்டுல்கர் , அடம் கில்கிரிஸ்ட் போன்றவர்களின் பிரகாசிப்புக்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

இதற்குள் இன்றைய போட்டி இலங்கையின் இரு பெரும் நட்சத்திரங்களின் நேரடி மோதலாக அமையவிருக்கிறது.
மஹேல ஜெயவர்த்தன தலைமை தாங்கும் டெல்லி டெயார்டெவில்ஸ் இன்று குமார் சங்கக்கார தலைமை தாங்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை சந்திக்கிறது.

இவர்கள் தவிர, ஒவ்வொரு IPL தொடர்களையும் போலவே க்றிஸ் கெய்ல், விராத் கொஹ்லி, டேவிட் வோர்னர் ஆகியோர் துடுப்பாட்டத்தில் இதுவரை ஜொலித்திருக்கிறார்கள். 
ஆனால் அபாரமான அரைச் சத்தங்கள் குவிக்கப்பட்ட இந்த 13 போட்டிகளில் இதுவரை எந்த சதமும் பெறப்படவில்லை.
கொஹ்லி பெற்ற ஆட்டமிழக்காத 93, க்றிஸ் கெயில் பெற்ற ஆட்டமிழக்காத 92 ஆகிய இரண்டு ஆட்டங்களும் சதங்களை நெருங்கிய இரு சந்தர்ப்பங்கள். 

பந்துவீச்சில் கடந்த வருடம் போலவே சுனில் நரேனும், வினய் குமாரும் முன்னணியில் உள்ள அதே வேளை, IPL வரலாற்றில் கூடுதல் விக்கெட்டுக்களை சரித்தவர்களில் ஒருவரான R.P.சிங் கும் விக்கெட்டுக்களை எடுத்து வருகிறார்.

நேற்றைய போட்டியை சேர்க்காமல்..

அதிக ஓட்டங்கள் குவித்தவர்கள்...


அதிக விக்கெட்டுக்களை எடுத்தவர்கள்...



2013 இன் இதுவரையான 13 போட்டிகளில் இலங்கை வீரர்களில் சகலதுறை வீரரான திசர பெரேரா கூடுதலாக தனித்துத் தெரிகிறார்.
எதிர்பார்க்கப்பட்ட மாலிங்க, முரளிதரன், மஹேல, சங்கக்கார , குசல் பெரேரா ஆகியோர் இனித் தான் சாதிப்பார்கள் போலும்.

இதேவேளை பூனே வோரியர்சின் தலைவர் மத்தியூஸ், கடந்த வருடத்தையும் சேர்த்து 11 போட்டிகளின் தோல்விக்குப் பிறகு அந்த அணிக்கு நேற்று வெற்றி ஒன்றைப் பெற்றுக் கொடுத்திருந்தார்.

இன்றைய இரவுப் போட்டி இலங்கையின் சிங்கங்கள் தங்களுக்கான வெற்றிகளை குறிவைக்கின்ற போட்டி என்பதிலும், மூன்று போட்டிகளிலுமே தோற்று தங்கள் முதலாவது வெற்றிக்குத் தவமிருக்கும் டெல்லியை மஹேல மீட்பாரா என்று கேட்கின்ற போட்டியாகவும், உபாதையினால் இதுவரை விளையாடாமல் இருக்கும் சேவாக் மீண்டும் திரும்புகிற போட்டியாக இது அமைவதும் ஆர்வத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

--------

இந்தியத் தலைநகரில் நேற்று மோதிய இரு அணிகளின் தலைவர்களும் இலங்கையர்கள். மஹேல, சங்கா மோதலில் சங்காவின் சன்ரைசர்ஸ் ஜெயித்திருக்கிறது.
டெல்லிக்கு தொடர்ச்சியான நான்காவது தோல்வி, நிச்சயம் அணியின் வீரர்களின் இடங்களைப் பற்றிக் கேள்விகளை எழுப்பியிருக்கும்.

இதேவேளை எத்தனை நட்சத்திரங்களைக் கொண்டிருந்தாலும் கடந்த காலங்களில் பலவீனமான அணி என்று முத்திரை குத்தப்பட்டிருந்த தற்போதைய சன்ரைசர்ஸ் அணி இம்முறை வீறு கொண்டெழுந்துள்ளது.

பெயர் மாற்ற ராசியோ?

தொடர்ந்து வரும் போட்டிகளில் பார்க்கலாம் .....




ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner