Showing posts with label விஜய். Show all posts
Showing posts with label விஜய். Show all posts

November 24, 2017

ஷங்கர் vs ஷர்மாஸ்- வாய்ப்புக்காகக் காத்திருக்கும் தமிழக வீரர் - யார் இந்த விஜய் ஷங்கர்?

இன்றைய நாக்பூர் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தெரிவு தமிழக சகலதுறை வீரர் விஜய் ஷங்கரா? இல்லை இரு ஷர்மாக்களில் ஒருவரா என்ற கேள்வி எல்லோர் மத்தியிலும் இருந்த நேரம் இந்தியா மூன்று மாற்றங்களை செய்தும் விஜய் ஷங்கருக்கு இடம் கிடைக்கவில்லை.

புவனேஷ் குமாரின் இடத்தில் இன்னொரு வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் ஷர்மா - ஆடுகளமும் வேகப்பந்து வீச்சாளருக்கு சாதகம் என்பதால் நேரடித் தெரிவாக இருந்தார்.

இந்தியா மேலதிகத் துடுப்பாட்ட வீரரை விரும்பி, ஒருநாள் அணியில் நிரந்தர இடத்தைப் பிடித்துள்ள, டெஸ்டில் தனக்கான நிரந்தர இடம் தேடும் ரோஹித் ஷர்மாவையும் உள்ளீர்த்துக்கொண்டது. 
லேசான தசைப்பிடிப்பினால் அவதியுற்ற மொஹமட் ஷமியின் இடத்தை ரோஹித் ஷர்மா தனதாக்கிக்கொண்டார்.

வேகப்பந்துவீச்சுக்கு சாதகம் என்று கருதப்பட்ட ஆடுகளத்தில் இந்தியா வெறுமனே இரண்டு வேகப்பந்துவீச்சாளரோடு களமிறங்குவதா என்று எல்லோரும் சிந்தித்துக்கொண்டிருக்க, அதிலும் இவ்விருவருமே இப்போதைய நிலையில் இந்தியாவின் முதற் தெரிவுகள் இல்லை, ஆனால் நாணய சுழற்சியில் வென்றும் இலங்கை அணி எந்தவொரு ஆதிக்கத்தையும் செலுத்தாமல் 205 ஓட்டங்களுக்குள் சுருட்டப்பட்டுள்ளது.


மீள்வருகை தந்துள்ள இஷாந்துக்கு 3 விக்கெட்டுக்கள். மிகச் சிறப்பாகப் பந்துவீசி தேர்வாளர்கள் தமது தெரிவில் பெருமிதம் கொள்ளச் செய்துள்ளார்.

சுழல் இரட்டையர்கள் அஷ்வினும் ஜடேஜாவும் சேர்த்து 7 விக்கெட்டுக்கள்.
அஷ்வின் இப்போது 296 விக்கெட்டுக்கள். இன்னும் 4 விக்கெட்டுக்களை அவர் எப்போது எடுப்பார் என்பதை அனைவரும் எதிர்பார்த்துள்ளார்கள், உலகில் மிகக் குறைவான போட்டிகளில் 300 டெஸ்ட் விக்கெட்டுக்களைப் பெற்ற சாதனையை நிகழ்த்துவதற்கு.

எனினும் நீண்ட கால நோக்கில் இன்னொரு மிதவேக சகலதுறை வீரரை அடையாளப்படுத்த இப்படியொரு வாய்ப்புக் கிடைக்காது என்பதால் உள்ளூர்ப் போட்டிகள், இந்திய A அணியில் சகலதுறையாளராக சிறப்பாக மிளிர்ந்து நல்ல form யிலுள்ள ஷங்கரை இன்று இந்தியா அறிமுகப்படுத்தவேண்டும் என்று அனைவரும் எண்ணியிருந்தது இன்று நிறைவேறவில்லை.

நேற்றைய எனது பதிவில் இவரைப் பற்றி கொஞ்சம் ஆராய்ந்திருந்தேன்..




இவ்வாறு விஜய் ஷங்கர் இன்று அறிமுகமாகியிருந்தால் 61 ஆண்டுகளில் முதல் தடவையாக இந்திய அணியில் 3 தமிழக வீரர்கள் ஒரே நேரத்தில் விளையாடும் அபூர்வ சந்தர்ப்பம் அமைந்திருக்கும்.
(அஷ்வின், முரளி விஜய் & விஜய் ஷங்கர்)

இறுதியாக 1956இல் - தமிழக வீரர்கள் மூவர் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடியிருந்தனர்.
Brabourne Stadium v England Nov 1961 
AG Kripal Singh, AG Milka Singh and VV Kumar.

சிங் சகோதரர்களில் ஒருவரான மில்கா சிங் இரண்டு வாரங்களுக்கு முன்னர் சென்னையில் காலமானார்.

யார் இந்த விஜய் ஷங்கர்?
இவரது பெறுபேறுகளும் சகலதுறைத் திறமைகளும் என்ன?


 
தமிழ்நாட்டை சேர்ந்த​ 26 வயது நிரம்பிய​ விஜய் ஷங்கர் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்காக இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் விளையாடி உள்ளார். 

கடந்த IPL இல் டேவிட் வோர்னரோடு  போட்டியில் சத இணைப்பாட்டம் புரிந்ததை யாரும் மறந்திருக்க மாட்டீர்கள்.


ஆனால், உள்ளூர் போட்டிகள், ஜூனியர் இந்திய அணி ​, இந்திய A அணி​
என படிப்படியாக தான் இந்திய அணியில் இடம் பிடித்தார்.



2016-2017 பருவகாலத்தில் தமிழ்நாட்டு அணிக்கு விஜய் ஹசாரே கிண்ணப் போட்டிகளில் தலைமை தாங்கி கிண்ணம் வென்று கொடுத்திருந்தார்.


இதன் மூலம் தன்னுடைய தலைமைத்துவ ஆளுமையையும் காட்டி நிற்கும் ஷங்கர், அண்மையில் நியூ சீலாந்து A அணிக்கு எதிராக சிறப்பாக ஆடியிருந்தார்.





இறுதி ஒருநாள் போட்டியில் 5 சிக்ஸர்களுடன் 33 பந்துகளில் 61.


தென் ஆபிரிக்காவில் நடந்த முக்கோணத் தொடரின் இறுதிப் போட்டியிலும் இந்தியாவின் வெற்றிக்கு மிகப்பெரிய பங்களிப்பு இவரது 72 ஓட்டங்கள் மூலமாகக் கிடைத்தது.


காணொளிகள் சிலவற்றில் பார்த்தவரை மிக ஆற்றல் கொண்ட ஒரு சிறப்பான வீரராகத் தெரிகிறார்.



இணையத்தில் தேடியெடுத்த இவரது பெறுபேறுகள்..​




1671 runs (ave 49.14, 5 centuries) and 27 wickets (medium pace) from 32 first class matches





Since 2012-13, Vijay is one of six cricketers who has scored over 1500 runs and taken more than 25 wickets. His first-class batting average is an impressive 49.14 after 32 matches, while his bowling average is 42.81.

​இம்முறை ரஞ்சி கிண்ணத் தொடரிலும் இதுவரை 3 போட்டிகளில் ஒரு சதம் ​பெற்றுள்ளதோடு ஆறு விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.

​வாழ்த்துக்களோடு இந்த தமிழ் வீரரை வரவேற்போம்..
'ஆளப்போறான் தமிழன் கிரிக்கெட் ​உலகை'


​விரைவில் இவருக்கான சரியான வாய்ப்புக் கிடைக்கும் என்று நம்பியிருப்போம்.
நம் அணிக்கு இப்படியானதொரு முறையான வீரர் கிடைக்கவில்லையே என்று ஏங்கவேண்டியும் உள்ளது. இப்படிப்பட்ட ஒரு சகலதுறை வீரராக உருவாகி வந்த அஞ்செலோ மத்தியூஸ் இப்போது உபாதையினால் பந்து வீசுவதில்லை.
தசுன் ஷானக கொல்கத்தாவில் சிறப்பாக பந்துவீசினாலும் இன்னும் துடுப்பாட்டத்தில் சறுக்கி வருகிறார்.
திஸர பெரேரா டெஸ்ட் பக்கத்தை மறந்து வருடங்களாகின்றன.
ஹ்ம்ம்ம்...

இன்னிங்ஸ் தோல்வியை தவிர்ப்பது பற்றி இப்போதே யோசிக்க ஆரம்பித்துவிட்டோமென்றிருக்கிறது நாக்பூர் நிலைமை.


இன்றைய நாளில் இரண்டு ஆறுதல்கள்..

டிமுத் கருணாரத்ன இந்த வருடத்தில் 1000 டெஸ்ட் ஓட்டங்களைப் பூர்த்தி செய்த இரண்டாவது வீரரானார்.
முதலாமவர் தென் ஆபிரிக்க ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் டீன் எல்கர்.


இலங்கையின் அணித்தலைவர் தினேஷ் சந்திமால் தனது 3000 டெஸ்ட் ஓட்டங்களைப் பூர்த்தி செய்திருந்தார். 
தன்னுடைய அரைச்சதத்துடன் 3000 ஓட்டங்களைப் பூர்த்தி செய்த 13வது இலங்கைத் துடுப்பாட்ட வீரர் ஆகியுள்ளார்.




October 26, 2014

கத்தி


ஒரு திரைப்பட இயக்குனரை மதிப்பிடுவதற்கு அவரது இரண்டாவது படத்தையும் பார்க்கவேண்டும். ஆனால் ஒரு இயக்குனரைப் பிடித்துப் போவது முதல் படத்திலேயே நடக்கக்கூடியது இயல்பானதே.

தீனாவில் பிடித்துப்போன A.R.முருகதாஸ் என்ற இயக்குனர் மேல் ரமணா திரைப்படத்தின் பின்னர் மதிப்பும் எதிர்பார்ப்பும் ஏறியது.

எங்கள் எதிர்பார்ப்புக்கள் தாண்டிய ஒரு படைப்பை, நாங்கள் எதிர்பார்க்கும் ஒரு வடிவத்தில் ஒரு பிரசாரமாக இல்லாமல், சுவாரஸ்யமாகத் தரமுடியும் என்றால் பிடித்த இயக்குனராக அவர் மாறிவிடுவது இயல்பு தானே?

ரமணாவின் பின்னர் முருகதாஸின் கஜினியும் அவரது படமாக்கலில், கதை சொல்லும் விதத்தில் பிடித்துப்போனது.
எனினும் ரமணாவின் முருகதாஸ் காணாமல் போயிருந்தார்.

கஜினிக்குப் பின்னர் முருகதாஸ் மற்றைய 'வெற்றிகர' வர்த்தக வெற்றிக்கான படங்களைத் தரும் இயக்குனர்களில் ஒருவராக உருமாறிப்போனார் .
படத்தின் வேகத்தைக் குறைக்கும் பாடல்களும், தேவையற்ற நீளமான சண்டைக்காட்சிகளும் முருகதாசினதும் அடையாளங்கள் ஆகிப்போயின.

ஏழாம் அறிவின் பிரசாரப்பாணியும் ஓவரான அலட்டலும் எரிச்சலூட்டியது.

துப்பாக்கி ரசித்த படம்.. ஆனாலும் படத்தின் சில காட்சிகளின் சாமர்த்தியத்திலும் சில காட்சிகளின் ரசிப்பிலும் தான் முருகதாஸ் தெரிந்தார்.
மற்றும்படி அது முற்றுமுழுதான விஜய் படம் தான்.

கத்தி பற்றிய அறிவித்தல்கள், விளம்பரங்கள் வந்தபோதும் இதுவும் வழக்கமான  விஜய் படமாகத் தான் இருக்கப் போகிறது என்று நினைத்தவர்களில் நானும் ஒருவன்.

பெட்ரோமக்ஸ் லைட்டுடன் குழாய்க்குள் விஜய் அமர்ந்திருக்கும் டீசர் போஸ், கண் மண் தெரியாமல், தொடர்பேதும் இல்லாதது போல வந்த கத்தி ட்ரெய்லர் என்பன இந்தப் படமும் தலைவா, சுறா, வில்லு மாதிரி ஆகிடுமோ என்ற எண்ணத்தை இன்னும் கொஞ்சம் உறுதிப்படுத்தி இருந்தன.
போதாக்குறைக்கு விஜய் இரட்டை வேடம் வேறு.

ட்விட்டர், Facebook எங்கும் கலாய்ப்புக்கள், காமெடிகளுக்கும் குறைவில்லாமல் களைகட்டியிருந்தது.

ஆனால் இந்த டீசர், ட்ரெய்லர் இரண்டிலுமே கலாய்க்கப்பட்ட முக்கிய விடயங்களையே படத்தின் பரபரப்பான இடமாக்கி நியாயம் செய்து இருக்கிறார் இயக்குனர்.
படமும் அவ்வாறு தான்.

விஜய்க்கேற்ற மாஸும் இருக்கிறது, A.R.முருகதாஸின் கிளாசும் இருக்கிறது.



இந்தப் படக்கதை கோபி என்பவர் எழுதிய 'மூத்த குடி' என்றும் A.R.முருகதாஸ் சுட்டுக்கொண்டார் என்றும் கதைகள் உலாவுகின்றன. காட்சிக்கு காட்சி விவரித்ததை எல்லாம் வெட்கமின்றி முருகதாஸ் உருவிக்கொண்டார் என்று தாக்கல் செய்த வழக்கில் கோபி தோற்றுவிட்டாராம். ஆனால் மீண்டும் வழக்குத் தாக்கல் செய்யப் போகிறாராம்.

நாலு இட்லி+ஒரு டீ= ‘கத்தி’ சுட்ட கதை

உண்மை வெல்லட்டும்.



அப்படி முருகதாஸ் என்ற படைப்பாளி நேர்மையின்றி திருடியிருப்பாரே ஆயின் நிச்சயம் அது கேவலமானதே.
ஆயினும் எடுத்த படத்தை செம்மையாகத் தந்துள்ள முருகதாஸ் இயக்குனராகவும், பல இடங்களில் கூர்மையாக இருக்கும் வசனங்களை எழுதிய எழுத்தாளராகவும் பாராட்டுக்களைப் பெறுகிறார் ARM.

சொல்ல வந்த விடயம் ரசிகர் மனதில் பதியவேண்டும் என்ற நோக்கம் கனகச்சிதம்.

விஜய்யின் வழமையான ஹீரோயிசம் படத்தில் அடக்கி வாசிக்கப்பட்டமைக்கு இதுவும், படம் வெளியாவதில் இருந்த சிக்கல்களும் சமபங்கு வகித்துள்ளன எனக் கருத இடமுண்டு.

ஆனாலும் படத்தின் நாயகனாக கதை நிற்கையில் விஜய் உணர்ச்சிமயமாகப் பேசும் வசனங்கள் வழமையான அரசியல் பஞ்ச் வசனங்கள் கொடுக்காத கெத்தைக் கொடுக்கின்றன.

இதைத் தான் விஜய் புரிந்துகொள்ளவேண்டி இருக்கிறது.
தேவையற்ற காட்சிகள் மூலம் திணிக்கப்படும் பில்ட் அப் ஆக இல்லாமல் கருமேகம் விலக்கி வெளிவரும் சூரியன் பின்னணியில் விஜய்யின் பெயர் எழுத்தோட்டத்தில்.
குறியீடு?
(அம்மா பார்த்தா பரவாயில்லையா?)


ஒரு காத்திரமான கதை..

பலபேர் விமர்சனம் என்று கதையை முழுதுமாக சொல்லியிருந்தாலும் நான் இன்னும் பார்க்காத பலருக்காக மேலோட்டமாகவே சொல்லிவைக்கிறேன்.

படித்த பட்டதாரி விஜய் ரொம்ப நல்லவர்.
கிராம மக்களுக்காக உயிரையே தியாகம் செய்யக் கூடிய உத்தமர்..
கிராமத்தின் தண்ணீர் வளத்துக்காக பெரு வர்த்தக நிறுவனங்களால் சூறையாடப்படும் கிராம  வளங்களுக்காக போராடுபவர்.

சிறையிலிருந்து தப்பும் சில்லறைக் கிரிமினல் மற்ற விஜய்.
(ஆனால் சிறையிலிருந்து கைதி தப்பும் காட்சி படு காமெடி.. தப்பிக்கும் கைதியைப் பிடிக்க இன்னொரு கைதியிடம் உதவியா? என்னா இயக்குனரே என்னாச்சு?)

வில்லன் பெரும் கோலா நிறுவன உரிமையாளரான பெரு வர்த்தகர்.

வளச் சுரண்டலுக்கு எதிரான  ஜீவானந்தத்தின் (ஜீவானந்தம்பெயரையும் இந்த விஜய் பாத்திரம் பேசும் கம்யூனிசக் கருத்துக்களையும் கவனியுங்கள்) போராட்டம் பெண்களாலும், வயது முதிர்ந்தவர்களாலும் முன்னெடுக்கப்படுகிறது.

கத்தி எனப்படும் கதிரேசனின் (படப் பெயர் வைக்கப்பட்டமைக்கான காரணத்தை வில்லன் மூலம் ஒரே வசனத்தால் கடைசி நேரம் இயக்குனர் சொல்கிறார்) அடிதடி, அதிரடியால் சுபம்.

சுவாரஸ்யமாகக் கதையை விஜய் மசாலாவும் தடவிச் சொல்லியிருக்கிறார் முருகதாஸ்.
(இரட்டை வேடம் கூடக் கதைக்கு அவசியமற்றது.. அதையே யாரும் ஏன் என்று கேட்காத அளவுக்கு விஜய் கொண்டு சுவாரஸ்யப்படுத்தியுள்ளார் ARM)



ஆனால் முதல் முக்கால் மணி நேர இழுவைக் கதை..

அந்த சிறைத் தப்பியோட்டம் முதல் சமந்தாவைக் காதலிப்பது வரை தேவையற்ற கவனச் சிதறல்.
அதுசரி சமந்தா இந்தப் படத்துக்கு எதுக்கு?

சமந்தாவை விஜய் பார்த்தவுடனேயே லவ்வுவதும், பின் எதற்கென்றே தெரியாமல் சமந்தா இவரை லவ்வுவதும் அந்தக்கால MGR - சிவாஜி படங்களில் வரும் காதல் தோற்றது போங்கள்.
(ரொம்ப பழைய இட்லி இது)

அதேபோல தான் பாடல்களும் வேகமாக செல்லும் படத்துக்கு இடையில் செக்கிங் பொயிண்டுகள் போல. பொறுமையை மிகவும் சோதிக்கின்றன.

கேட்கும்போது நல்லாவே இருக்கும் பாடல்களில் பக்கம் வந்து மட்டும் பக்காவாக பொருந்தி வந்திருக்கிறது. மற்றவை எல்லாமே 'ஏன்பா இந்தப் பாடல் இந்த நேரத்தில்?' என்று கேட்க வைப்பவை தான்.  அதுவும் செல்பிபுள்ள படு ஏமாற்றம். அப்படியே துப்பாக்கி - கூகிள் பாடலை ஞாபகப்படுத்துகிறது.

இந்த இழுவையைக் கொஞ்சம் வெட்டி, செதுக்கியிருந்தால் 2 மணி 40 நிமிடம் நீண்ட படம் இன்னும் கச்சிதமாக விறுவிறுப்பாக இருந்திருக்கும்.

எனக்கு வழங்கிய பேட்டியில் 'கதையின் முக்கிய இடத்தில் இந்தப் பாடல் வருவதால் மிகக் கவனமாக வார்த்திகளைக் கோர்த்து செதுக்கிய பாடல்' என்று பாடலாசிரியர் மதன் கார்க்கி சொன்ன 'பாலம்' பாடல் படத்திலேயே இல்லை.

பின்னணி இசையில் அனிருத் கலக்கியிருக்கிறார்.

அனிருத்தின் இசையும் George C. Williamsஇன் ஒளிப்பதிவும் வழமையான முருகதாஸ் படங்களின் சாயலை மாற்றியுள்ளன என்பது உண்மை.

கத்தி - Kaththi Theme the Sword of Destiny விஜய் ரசிகர்களுக்கு ஒரு கலக்கல் தீம்.
அஜித் ரசிகர்கள் இன்னமும் பில்லா, மங்காத்தா இசைகளைக் கொண்டாடுவதைப் போல விஜய் ரசிகர்களுக்கும் ஒரு விருந்து கிடைத்துள்ளது.

ஆனால் நன்றாக அவதானித்தால் தேவா ரஜினிக்கு போட்ட பாட்ஷா தீம் புதிய டெக்னோ மிக்ஸில் வந்திருப்பதை உணரலாம். (சரி சரி அடுத்த சூப்பர் ஸ்டாருக்கு இதைக் கூட செய்யலேன்னா எப்பிடி? ;) )

எனினும் வில்லன்னுக்கான பின்னை இசை - Bad Eyes Villain Theme காமெடி.
வில்லனை கோமாளியாகக் காட்டும் இயக்குனருக்கு மேலாக அனிருத் வேற.
வில்லன் இன்னும் கொஞ்சம் வலிமையானவனாக இருந்திருக்கலாமோ?



ஆனால், விஜய் இரு பாத்திரங்களுக்கு இடையில் வேறுபடுத்திக் காட்டுவதில் வெற்றி கண்டிருக்கிறார்.

கெட் அப்பில் உடை, சிறிய தாடி தவிர வித்தியாசம் இல்லை,
ஆனால் உடலசைவுகள், முகபாவங்களில் ஜீவானந்தமும் கதிரேசனும் வேறு வேறு என்பது தெளிவு.

கிராமத்துக் காட்சிகளில் ஜீவா விஜய்யின் துடிப்பும் உருக்கமும், நீருக்கான விழிப்புணர்வுப் போராட்டத்தில் கதிரின் அதிரடியும் புரட்சி முழக்கமும் பாராட்டக்கூடியவை.e
விருது வாங்கச் செல்லும் முன் காசோட விருதா, அப்பிடின்னா வர்றேன் என்று கலகலப்போடு செல்லும் விஜய், ஜீவானந்தம் யார் என்ற பின்னணி திரையில் விரிந்த பின் மனம் மாறும் இடம் அருமை.
(ஆனால் Flashback காட்சிகளில் தொனிக்கும் விவரணப் பாணி கொஞ்சம் சோர்வு தான்)

விஜய் வாயிலாக வரும் இட்லி - கம்யூனிச விளக்கம் புதுசும், இலகுவானதும்..
(இதை வைத்து மொக்கைகள் கிளம்பினாலும் கூட) சிந்திக்கக் வைக்கக்கூடிய ஒன்று தான்.
உன் பசி தீர்ந்த பிறகு நீ சாப்பிடும் அடுத்த இட்லி மற்றவனுடையது...
(இனி இட்லி சாப்பிட்டால் கம்யூனிசம் ஞாபகம் வந்து டயட்டிங் நடக்கும்)



Corporate என்பது ஒரு சிலந்தி வலை என்பதையும் வளங்களை உறிஞ்சும் நிறுவனங்களையும் போட்டுத் தாக்கியிருக்கும் இயக்குனர் தப்பித்துக்கொள்ள முன்னாள் கொக்கா கோலா விளம்பரத் தூதுவர் விஜய் வம்பில் மாட்டியுள்ளார்.
பாவம்.

இங்கே யார் பாவம் செய்யவில்லையோ அவர் முதல் கல்லை வீசலாம் என்று விஜய் துணிச்சலாக சமூகம் முன் வரலாம்.

அவர் பாட்டுக்கு விளம்பரம், சினிமா, பணம், லைட்டா அரசியல் ஆசை என்று வாழ்ந்துகொண்டிருக்க இவனுகள் ஒரு பக்கம், உணர்ச்சிவசப்பட்டு காமெடி பண்ணி.. சே.
(இது சே குவேரா சே அல்ல)

முருகதாஸ் வசனங்களின் கூர்மையில் அதிகமானோரை யோசிக்க வைத்திருக்கிறார். (கதை உண்மையில் அவருடையதாக இல்லாவிடினும் வசனங்கள் அவருடையவை என்ற நம்பிக்கையில்)

உணவுப் பொருட்களில் அழகு சாதனங்கள், வாசனைத் திரவியங்கள் செய்வோர் பற்றிப் போட்டுத் தாக்கியவை பற்றி நுகர்வோர் சிந்திப்பது ஒரு பக்கம் இருக்க, சும்மா கொக்கா கோலா - விஜய், லைக்கா தயாரிப்பு பற்றி முட்டையில் ரோமம் பிடுங்கும் 'போராளிகள்' இந்த வளச் சுரண்டல் 

Corporate தயாரிப்பு நிறுவனங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தலாமே.

5000 கோடி கடன் பெற்று கை விரித்த விஜய் மல்லையா, "வெறும் காத்தைhi மட்டுமே வித்து கோடிகோடியா ஊழல் பண்ணுற ஊருய்யா இது " என்று 2G ஊழல் பற்றிக் கலைஞர் கருணாநிதி குடும்பம் என்று நேரடியாகவே அடித்துள்ள வசனகர்த்தா முருகதாஸ், இந்தப் படத்தில் காட்டப்பட்ட நில அபகரிப்பு போலவே அப்பாவிகளின் நிலங்களை அபகரித்து சொத்துக் குவிப்பு செய்தோர் பற்றியும் பொங்கியிருந்தால் இவரை நானும் நேர்மையான படைப்பாளி என்பேன்.

ஆனால் சட்ட விரோத சொத்துக் குவிப்பால் தண்டனை பெற்ற 'அம்மாவுக்கு' ஆதரவு தெரிவித்த உண்ணாவிரத்தில் கலந்துகொண்ட சமூகப் போராளி இவர் அது பற்றி மூச்.

ரமணாவுக்குப் பிறகு புள்ளிவிபரம் என்றவுடன் நாங்கள் அனைவருமே விஜயகாந்த்தை கலாய்ப்பது வழக்கம்.
ஆனால் எழுதிக்கொடுத்த குருஜி நம்ம முருகதாஸ் தான் என்பதை கத்தியில் அழுத்தமாக நினைவுபடுத்தியுள்ளார்.

தளபதி பத்திரிகையாளர்கள் முன்னால் அடுக்கடுக்காக புள்ளிவிவரங்களை அடுக்குமிடம் சீரியஸாக யோசிப்பதை விட சிரிக்க வைக்கிறது.

உருக்கமான புள்ளிவிபரங்கள் தான்.
ஆனால் கையில் நோட்டு எதுவும் இல்லாமல் ஒற்றை இலக்கங்களைக் கூட கதிரேசன் புட்டு புட்டு வைப்பது, நம் அரசாங்க ஊடகவியல் சந்திப்பு வேடிக்கைகளை நினைவுக்குக் கொண்டுவருகிறது.


Dont hate the media, Be the media என்று மக்கள் ஊடகங்கள் பற்றி சொல்லப்படும் விடயத்தை ஒரு வெகுஜனப் போராட்டம் எவ்வாறு ஊடகங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது என்று உதாரண ரீதியாகக் காட்டியுள்ள சென்னைக்கான நீர் வெட்டுக் காட்சிகள் கனகச்சிதம்.


இயக்குனரும் தண்ணீர் வாளியுடன் வந்து ஆங்கிலத்தில் பஞ்ச்சும் பேசிச் செல்கிறார்.

ஆனால் முருக்ஸ் & விஜய்க்கு பத்திரிகைகள், ஊடகங்களோடு என்ன கடுப்போ சரமாரியாகத் தாக்கியிருக்கிறார்கள்.
அவர்கள் சொன்னதில் உண்மை இல்லாமல் இல்லை; ஆனாலும் முற்று முழுதான மட்டந்தட்டலும் தாக்குதலும் இனி பின் விளைவுகளைத் தருமா பார்க்கலாம்.

பாட்ஷா படம் ரசிகர்களுக்கு மட்டுமில்லை எல்லா ஹீரோக்களுக்கும் கூட இன்னும் மனதிலே ஒரு inspiration தான் போலும்.
ரஜினி சொல்லும் 'உள்ளே போ' இங்கே விஜய் சொல்லும் 'உள்ளே வை' ஆக வருகிறது.

பாட்ஷாவின் "உள்ளே போ" கத்தியில் "உள்ளே வை" ஹா ஹா ஹா... இனி ஐ ஆம் ஆல்சோ வெயிட்டிங் ;)
(மீண்டும் அடுத்த சூப்பர் ஸ்டார்? ;))

நகைச்சுவைக்கு சதீஷ் ok ரகம் தான். ஆனால் இதுபோன்ற கதைக்கு சும்மா தொட்டுக்கொள்ள ஒரு துக்கடா நகைச்சுவை பாத்திரம் போதும் என்னும் அளவுக்கு - துப்பாக்கியில் சத்யன் போல, அவரது பாத்திரம் ஓகே.

ஆனால் அந்த வயது முதிர்ந்தவர்களின் துடிப்பான நடிப்பும் காட்டும் முகபாவமும் மனதில் நிற்கக் கூடியவை,
அத்துடன் படத்துக்கு உருக்கத்தையும் கொடுக்கின்ற யுக்தி.

தூக்கச் சொன்ன 'லைக்கா' தெரிந்தது எப்படி? ;)


படத்தை யதார்த்தமாக மனதில் பதியும் அளவுக்குக் கதை சொன்ன முருகதாஸ் விட்ட சறுக்கல்களில் 
அந்த சில்லறை சண்டையும் (ஆனால் விஜய் ரசிகர்களுக்கு இது கோலாகலம் தான்), கடைசிக் காட்சிச் சண்டையும் லொஜிக் தாண்டிய ரோதனை.

கஜினியில் சூர்யா, வில்லன் இரட்டையருடன் சண்டையிடும் அந்த நீளமான காட்சிகள் தந்த அதே ஆயாசம்.
அதிலும் தனக்காகப் போராடிய கதிரேசனை தாக்கிக் கொல்லக்கூடிய நிலையிலும் மற்ற 'அமைதி' விஜய் அகிம்சாமூர்த்தியாக ஒரு சலனமும் காட்டாமல் நிற்பது கொடுமை.
'யோவ் அடியா' என்று தியேட்டரில் யாரோ கூவுகிறார்கள்.

ஐ ஆம் வெயிட்டிங் என்று துப்பாக்கி போலவே இடைவேளைக்கு முன்னர் ஒரு பஞ்ச், விஜய் ரசிகர்களுக்கு குஷி கொடுக்க.
அதே போல பாத்திரத்துக்கு வெயிட் கொடுப்பதாக பின்னப்பட்ட காட்சிகளின் மூலம் 'இளைய தளபதி'யை ஏற்றி வைப்பதிலும் இயக்குனர் விஜய் ரசிகர்களிடம் ஜெயித்திருக்கிறார்.

இதனால் கதை  மூலமாக எல்லாத் தரப்பிடமும் , விஜயை மையப்படுத்தி விஜய் ரசிகரிடமும் சரியாகப் பாய்ந்துள்ளது 'கத்தி'.

கத்தி - தீட்டிய அளவுக்கு கூர்மை தான் 


January 22, 2014

ஜில்லா

யாழ்ப்பாண ஆர்ப்பாட்டத்துக்குப் பிறகும், ஜில்லா வந்து இருவாரம் ஆகும் நேரத்திலும் சளைக்காமல் ஜில்லா பற்றி தில்லா எழுதுகிறேன் என்றால் ஒரு பின்னணி இருக்கவேண்டுமே...

ஒன்றல்ல, இரண்டு..

வீரம் பற்றி எழுதிய பின் ஜில்லா பற்றி எப்போ எழுதுவீங்க என்று கேட்டு வந்த அன்புக் கோரிக்கைகள்.
மொக்கைக்கும் சராசரிக்கும் இடையில் என்று போட்ட என் ட்வீட்டின் காரணம் அறிய விரும்பிய சில ரசிக விருப்பங்கள்.

படம் பார்த்து முடிந்தவுடன் போட்ட ட்வீட்...

ஜில்லா - இழுவை.விஜய்க்கு போலீஸ் கெட் அப் தவிர எல்லாமே செட் ஆகும் கதை.ஆனால் மொக்கைக்கும் சராசரிக்கும் இடையில் ஆடுது. #ஜில்லா - என்னத்த சொல்ல



ஜில்லா ஓரளவாவது ஓட ஒரே காரணம், விஜய் என்னும் மாஸ்.
மற்றும்படி படத்தின் ஏனைய விஷயங்கள் எல்லாம் படு லூஸ்.

ஆனால் மாஸ் விஜய் எப்படித்தான் இவ்வளவு நீண்ட கால அனுபவத்துக்குப் பிறகும் இப்படியான கதைகளை ஏற்று நம்பி நடிக்கிறாரோ என்று அசதியை விட எரிச்சல் வருகிறது.

ஒருவேளை அந்த ஜனா, ஆஞ்சநேயா, ஆழ்வார் காலத்தில் அஜித் புதிய இயக்குனர்களை நம்பி ஏமாந்தது போல விஜயும் இப்போது அதே மாதிரியான ஒரு காலகட்டத்திலோ?

ஆனால் நிறையப்பேர் நினைப்பது போல இயக்குனர் நேசனுக்கு இது முதல் படம் அல்ல. முன்பு  முருகா என்று ஒரு படம் எடுத்திருக்கிறார். அத்துடன் வேலாயுதம் படத்தில் இயக்குனர் ராஜாவின் உதவியாளராம்.

சரி கதை பழசு என்றாலும், விஜய் மாதிரியான ஒரு ஹீரோவுக்கு ஒரு தீர்மானிக்கப்பட்ட கட்டமைப்புக்குள்ளேயே பாத்திர வடிவமைப்பு இருந்தாலும் படமாக்கலாவது சுவாரஸ்யமாக (வித்தியாசமாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை) இருக்கவேண்டுமென்று இயக்குனருக்கோ, விஜய்க்கோ கூட இருக்கும் அல்லக்கைகளுக்கோ கூடத் தெரியவில்லை?

ஜில்லா படம் ஓடுகிறது என்று விஜய் ரசிகர்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள், அல்லது நம்ப வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
சொல்லவேண்டிய நிர்ப்பந்தமும் இருக்கிறது.(பிறகு மனசுக்குள்ளே துள்ளாத மனமும் துள்ளும் விஜய் போல குமுறிக் குமுறி அழுது கொண்டிருக்கிறார்கள்)

இது ஒரு விதத்தில் வீரத்தினால் என்றும் சொல்லவேண்டியுள்ளது.
வீரம் ஓடிக்கொண்டிருப்பதால் ஜில்லா ஓடுகிறது, ஜில்லா மோசமில்லை, சுமார் என்று சும்மாவாவது சொல்லவேண்டிய ஒரு காலத்தின் கட்டாயம்.

ஜில்லா, வீரம் இரண்டுமே ஊகிக்கக் கூடிய, ஏற்கெனவே பார்த்த முன்னைய படங்களின் சாயல்கள் கொண்டவை; இரு பெரும் ஹீரோக்களின் படங்கள் என்று இருந்தாலும் பெரிய, முக்கிய வித்தியாசங்கள் திரைக்கதை + பாத்திரப் பொருத்தம் + படத்தை இயக்கிய விதம்.


விஜய்க்கு போலீஸ் கெட் அப் செட் ஆவதில்லை என்று தெரிந்தும் போலீசாக வரும் இந்தப் பாத்திரத்தை எப்படித்தான் ஏற்கத் துணிந்தார் என்பது தான் கேள்வி.
எத்தனை தடவை போலீஸ் வேடம் ஏற்று விஜய் சிரிப்பு போலீஸ் ஆகியிருக்கிறார் எண்ணிப் பாருங்கள்.

"அதென்ன எல்லா ஹீரோவுக்குமே போலீஸ் வேடம் பொருந்துதே, ஏன் விஜய்க்கு மட்டும் பொருந்துதில்லை ?" அண்மையில் விஜய் ரசிகர் ஒருவர் அழாக்குறையாக என்னிடம் கேட்டிருந்தார்.

இதற்கு விளக்கம் சொல்லப் போய், என் வீட்டுக்கு முன்னாலும்  ஆர்ப்பாட்டம் நடந்தாலும் பரவாயில்லை.

ஒரு போலீஸ் வேடம் தாங்கும்  நடிகர்களைப் பாருங்கள்.
சூர்யா, விக்ரம், கமல் இந்த அவதாரங்களை விடுங்கள். இவர்கள் எந்தச் சிறு பாத்திரமாக இருந்தாலும் தங்களை உருக்கி வார்த்து நடிப்பவர்கள்.
ஆனால் அஜித், கார்த்தி போன்றோர் அண்மையில் நடித்தபோது கூட பொருந்தியிருந்ததே..

வேறொன்றுமில்லை, பாருங்கள் ஜில்லாவில் விஜய் போலீஸ் ஆகிறாராம். ஆனால் போலீஸ் பயிற்சிக்கு வேடிக்கையாகப் போனால் என்ன, சீரியஸ் போலிஸ் ஆக, சின்சியர் ஆக அவர் ஒரு சாமி போல, துரைசிங்கம் போல மாறி நெஞ்சை நிமிர்த்தி லெக்சர் குடுக்கும்போது கூட அந்தக் குறுந்தாடி கெட் அப்பை மாற்றி நம்பும் மாதிரி இருக்கவேண்டாம்?
அதே படத்தில் பரோட்டா சூரி கூட போலீஸ் என்றால் பொருத்திய மாதிரித் தெரிகிறாரே.

அடுத்து இயக்குனர் விட்ட பெரிய பிழை, அல்லது அது இயக்குனர் நேசன் குழம்பிய விஷயமாகவும் இருக்கலாம்.

விஜயை எப்படிக் காட்டுவது?
போலீசாக மாறிய பிறகும் அதே ஜாலி விஜயாகக் காட்டுவதா, அல்லது கொஞ்சமாவது விறைப்பாக மாற்றுவதா என்று.
இதனால் நிமிடத்துக்கு நிமிடம் சந்திரமுகியாகவும் கங்காவாகவும் கங்காரு போல விஜய் தாவுவதாக ஒரு உணர்வு.

இதனால் அடிக்கடி போக்கிரி விஜய் ஞாபகம் வருவதையும் தவிர்க்க முடியவில்லை.

ஆனால் துள்ளல், எள்ளல் விஜய் கலக்குகிறார்.
அவரது துடிப்பும், இளமையும், குறும்பும் நடனமும் வேறு யாராலும் நிகர்க்க முடியாதது.

அதையே அவரது plus pointsஆக வைத்தே அழகாய் இந்தக் கதையைப் பின்னியிருக்கலாம் நேசன். பிளந்து கட்டியிருக்கலாம்.

அடுத்து மோகன்லால்....

சிவன்..இல்லை இல்லை அவர் சொல்வதைப் போல் ஷிவன்...

காலாகாலமாக தமிழ் சினிமாவில் ராஜ்கிரண், ரகுவரன், பிரகாஷ் ராஜ் ஏன்அண்மையில் இதே விஜயின் தலைவாவில் சத்யராஜ் ஏற்ற அரதப் பழசான தாதா பாத்திரம்.

இதற்காக மினக்கெட்டு ஏன் இந்த மலையாள சிங்கம் தமிழுக்கு வந்து மொக்கை சுண்டெலியாக மாற வேண்டும்?

சரி மோகன்லால் கிடைத்தாலும் கிடைத்தார் அவருக்கேற்ற கெத்தை பாத்திரத்திலாவது வைக்கவேண்டாம்?

இதே போன்றதொரு பாத்திரத்தில் அஜித்தின் தீனாவில் சுரேஷ் கோபிக்கு இருந்த இமேஜின் கால்வாசி கூட இல்லை.
கிட்டத்தட்ட இன்னொரு வில்லன் ஆக்கியுள்ளார்கள்.
பாதி வசனங்களில் மலையாள வாசனை.

இப்படியான இரண்டு தாதா படங்களில் இலகுவாக ஊகிக்கக்கூடிய விடயங்கள் படம் முழுக்க.

சில எதிரிகள், சில துரோகிகள், படத்தின் எப்போது எப்படி பெரிய தாதாவும் சின்ன தாதாவும் ஏன்மோதிக்கொள்வார்கள்? எப்படி சேர்வார்கள் என்ற formulaவில் அட்சரம் பிசகாமல் எடுத்து எங்களையெல்லாம் தேர்ந்த சினிமா பார்வையாளர்களாக மாற்றி வெற்றி கண்டிருக்கிறார் நேசன்.
சின்னப் புள்ளத் தனமா இல்லை?

விஜயின் அறிமுகக் காட்சியிலேயே தீனா படத்தின் அறிமுகக் காட்சியை ஞாபகப்படுத்திவிடும் இயக்குனர், விஜய்க்கு போலீசையும் காக்கி சீருடையையும் பிடிக்காமல் போவதற்கான  (முன்னைய தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களின் புஸ் நெடி வருகிறது) காரணத்தை நீட்டி முழக்கி சொதப்புகிறார்.

அதிலும் ஜில்லா என்ற பெயருக்கு சொல்லும் விளக்கம் இருக்கே... (அந்த விளக்கம் வில்லன்களுக்கு இல்லீங்கோ, எங்களுக்கு) தெய்வமே....

வீரம் படத்தில் தம்பி ராமையாவை எப்படி இயக்குனர் சிவா பயன்படுத்தி ஸ்கோர் செய்கிறார்?
இங்கே அந்த அற்புத நடிகரை சும்மா வீணடித்திருக்கிறார்.

சம்பத் வழக்கம் போலவே அழுத்தமாகக் கலக்கி இருக்கிறார்.


காஜல் அகர்வாலுக்கு வழமையான விஜய் பட கதாநாயகியின் வேலை. கொஞ்சமாக நடித்து நிறைய கண்ணால் பேசி, பாடலுக்கு எல்லாம் அழகாக ஆடி...

ஆனால் விஜய் தான் படம் முழுக்க..

இதுவே தான் புதியவர் நேசனைத் தடுமாற வைத்திருக்கிறது போலும்.
விஜய் ரசிகரை (மட்டும்) குறிவைத்து அவர்களைத் திருப்திப்படுத்தினால் போதும் என்று படக்கதையைத் திருத்தியிருப்பார் போலும்.

மோகன்லாலின் பாத்திரத்துக்கு இன்னும் கொஞ்சம் வெயிட் கொடுத்து, விஜய் போலீசாக வந்த பிறகு ஒரு சரேல் மாற்றத்தையும் கொடுத்திருந்தால் துப்பாக்கி போல விஜய்யை ஜில்லாவும் ஒரு தூக்கு தூக்கியிருக்கும்.

அதுசரி, கண்டாங்கி சேலைக்கும் - ஜப்பானிய கிமோனோ உடைக்கும் என்னா சம்பந்தம்?
வைரமுத்து இழைத்து இழைத்து எழுதி, இமானின் நயந்து ரசிக்கக் கூடிய இசையில் விஜயும் ஷ்ரேயா கோஷலும் பாடி உருகவைத்த அந்தப் பாடலை எவ்வளவு அழகாக எடுப்பார்கள் என்று கற்பனை பண்ணி வைத்திருந்தேன். சொதப்பியிருக்கிறார்.

எனது எதிர்வுகூறல்கள் jinx ஆவது கிரிக்கெட்டில் மட்டும் தான் என்று நினைத்தேன்... ஜில்லா பாடலுக்கும் jinxஆஆ???

கண்டாங்கி பாடல் பற்றி பாடல் வெளிவந்த இரவு போட்ட status

விஜயினதும் காஜலினதும் அழகான அசைவுகளும் கண்களின் பாஷையும் தான் எஞ்சியிருக்கு.

ஆனால் விசிலோடு ஆரம்பித்து விசிலோடு முடிகிற விரசாப் போகையிலே போக்கிரி வசந்த முல்லையை ஞாபகப்படுத்தினாலும் ரசனையுடன் படமாகியிருக்கிறது.
விஜய்யின் ரசிக்கக் கூடிய குறும்புகளுடன் தமிழரின் பண்டைய நடன, கலையம்சங்கள் பாடல் முழுக்க வந்துபோகின்றன.

விஜய் எங்களை மறந்து ரசிக்கச் செய்கிற இடங்கள் தான் படத்தின் பெரிய ஓட்டைகளை ஓரளவுக்கு அடைத்து மொக்கை லெவலில் இருந்து சராசரிக்கு எடுத்துச் செல்கிறது.
அந்த அலட்சியமான கெத்து, அனாயசமான சண்டைக் காட்சிகள், காஜலுடனான குறும்பு காட்சிகள் (ஆனால் டிக்கி லோனா பிடிகள் எல்லாம் கொஞ்சம் அதிகமானவை தான்.. மாறி மாறி அமுக்குகிறார்களாம். சிரிக்கணுமோ?) - அதிலும் அந்த தாத்தா கதை கலக்கல், என்று விஜய் முத்திரைகள் பாராட்டுக்குரியவை.

இப்படியே ரசித்து விஜய்யிடம் ரசிகர்கள் (விஜய் ரசிகர்கள் மட்டுமல்ல) எதிர்பார்க்கும் விடயங்களையும் விஜய் சிறப்பாக செய்யக் கூடிய விடயங்களையும் இணைத்து இழைத்து ஜில்லாவை நேசன் இயக்கியிருந்தால்....
அதுசரி நினைப்பதெல்லாம் நடப்பதில்லையே.

விஜய்யும் ஜெயலலிதா குழப்பங்கள், தடை வருமோ வராதோ, பஞ்ச் வசனப் பயம் என்று குழம்பி குழம்பியே இருந்திருப்பதால் முழு ஈடுபாட்டோடு இருந்திருக்க மாட்டார் போலும். பாவம்.

ஜில்லா - இதுக்கு மேல என்ன சொல்ல நல்லா.


August 15, 2013

தலைவா - ஆ ஆ ஆ

ஒரு கலைஞனின் கருத்துவெளிப்பாட்டு உரிமை என்றவகையில் தலைவா வெளிவருவதில் யார் யார் தடையாக இருக்கிறார்களோ அத்தனை பேருக்கும் கண்டனங்களைப் பதிவு செய்துகொண்டே படம் பார்த்து நான்கு நாட்களின் பின்னர் எனது சமூகக் கடமையை நிறைவேற்றுகிறேன்.



மும்பாய் தாதா படங்கள் என்றவுடன் பாட்ஷா, நாயகன் படங்களை கொப்பி  அடிச்சிட்டான் என்பதும், அப்பா, மகன், ஆட்சி, அரசியல் என்றவுடன் தேவர் மகன், நாட்டாமை படத்திலிருந்து உருவிட்டாங்க என்பதும் எங்கள் எல்லாருக்குமே ஒரு வியாதியாகப் பரவி வருகுதா?

ஏற்கெனவே லகான்,Titanic, I am Sam என்று பெரிய பெரிய இடங்களிலெல்லாம் உருவியெடுத்து எங்களையெல்லாம் பிரமிப்பில் ஆழ்த்திய இயக்குனர் இப்படி ஒன்றிரண்டு படங்களை மட்டும் சுட்டு ஒரு வருங்கால மாநில முதலமைச்சரின் திரைப்படத்தை 'சாதாரணமாக' எடுத்திருப்பார் என்று எப்படி அவ்வளவு இலேசாக நினைத்திருக்கலாம்?

இயக்குனர் விஜய்க்கு நல்ல பெயர் எடுத்துக் கொடுத்த அஜித்தின் 'கிரீடம்' கூட, 1989ஆம் ஆண்டு அதே பெயரில் மோகன்லால் நடித்து பேரு வெற்றியும் புகழும் பெற்ற படம் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
அதுசரி, 'திறமையான' இயக்குனர் A.L.விஜய்யின் முதலாவது படம் 'பொய் சொல்லப் போறோம்' கூட ஹிந்தியின் மசாலாத் திரைப்படம் ' Khosla Ka Ghosla' இன் உல்டாவாம்.
(எப்போ சார் சொந்த மூளையை சரியா யூஸ் பண்ணப் போறீங்க?)

''தலைவா' வெறும் மூன்று நான்கு படங்களின் தழுவல், கொப்பி, inspiration, recreation அப்பிடி இப்பிடி என்போர் மீது இயக்குனர் விஜயே வழக்குத் தாக்கல் செய்தாலும் ஆச்சரியமில்லை.

மகேஷ்பாபு (இவரைப் பற்றி நான் ஏதும் விசேடமாக சொல்லத் தேவையில்லை - விஜய் ரசிகர்களுக்கு. இந்த ட்வீட் மட்டுமே போதும்)  நடித்த பிசினெஸ்மான் படம் உங்களில் எத்தனை பேர் பார்த்தீர்கள்?

முடிந்தால் உடனே பாருங்கள்.
வந்தான் வென்றான் படத்தின் பல காட்சிகளை இயக்குனர் விஜய் அப்போவே தயார் செய்த கதையிலிருந்து சுட்டு எடுத்திருக்கிறார் வ.வெ இயக்குனர்.
அதேபோல 1977 என்ற சரத் குமாரின் திரைக்காவியத்தில் வந்த இந்தப் பாடலை எத்தனை பேர் பார்த்து ரசித்திருக்கிறீர்கள்?



இதற்கிடையில் இணையத்தில் பரவிய இன்னொரு ஒப்பீடு தான் ஜோதா அக்பர் படத்தில் வந்த இந்தப் பாடல்...



மாமாவிடம் மருமகன் குடும்ப உரிமையால் ஒற்றி எடுத்திருப்பார். 

ஆகா மெட்டு மட்டுமல்ல, நடனம், காட்சியமைப்பும் கூடவா?
அடப்பாவிகளா கூட்டணியா உட்கார்ந்து ரூம் போட்டு பில்ட் அப் பாடலை பொறுக்கி உருவாக்கினீர்களா?

எப்பிடித் தான் பாட்டை உருவி உருவாக்கினாலும் ஒவ்வொரு பிரிவா வந்து பறை தட்டியும் பாடியும் தளபதி, தலைவா என்று பில்ட் அப்பை ஏத்தும்போது இந்தக் காலத்திலேயும் ஒரு MGR எங்கள் மத்தியில் வாழ்கிறார் என்று உடம்பெல்லாம் சிலிர்த்துப்போகிறது. வாவ்.


உண்மையில் இயக்குனர் விஜய் (இதை அடிக்கடி அழுத்திச் சொல்ல ஒரு காரணம் இருக்கிறது. நேற்று திரையரங்கில் எனக்கு முன்னால் இருந்த நண்பர்கள் இளைய தளபதி விஜயைக்  குறை சொல்லிக்கொண்டிருந்தார்கள். "உந்தாள் முதலில் செய்துகொண்டிருந்தமாதிரி கழுத்தையும் காலையும் மட்டும் ஆட்டிக்கொண்டு இருந்திருக்கலாமே.. தேவையில்லாம அரசியல் ஆசை. அது போதாம இப்ப படம் இயக்குறேன் எண்டும் வெளிக்கிட்டு.. சே) ஒரு உலக மகா இயக்குனர் வரிசையில் சேரக்கூடிய ஒருவர்.
இல்லாவிட்டால் ஒவ்வொரு காட்சிக்கு காட்சி முன்பு வந்த நூற்றுக்கணக்கான திரைப்படங்களை ஞாபகப்படுத்தக்கூடிய திறமை எத்தனை இயக்குனருக்குக் கைவரும்?

ஆனாலும் பாட்ஷா பாயும், வேலு நாயக்கரும் 'தலைவா' பார்த்தால் கதறியழுதிருப்பார்கள்.

தாண்டவம் படத்தில் எடுக்க முடியாமல் மிஞ்சிப் போன வெளிநாட்டு காட்சிகளை அவுஸ்திரேலியாவுக்கு மாற்றி எடுத்துத் தன தாகத்தைத் தீர்த்திருக்கும் இயக்குனர், அங்கே மிஞ்சிய காதல் காட்சிகளையும் இளைய தளபதிக்குக் கொடுத்து 'தலைவா' ஆகக் காத்திருக்கும் அவரையும் அந்த அற்புதக் காட்சிகளைப் பார்த்திருக்கும் எங்களையும் ஒரு மணிநேரமாகக் காக்கவைத்து, வேக வைத்து அதுக்குள்ளே "நீங்க யாரு? என்ன செய்றீங்க?" என்ற தமிழ் சினிமாவில் அதிகம் பாவித்துத் தேய்ந்துபோன வசனத்தோடு இரண்டு ஹீரோக்ககளையும் சந்திக்க வைக்கும் காட்சியும் தமிழ் சினிமாவிலேயே முதல் முறையாக...

இதே போல 3 மணிநேரப் படம் முழுக்க எத்தனையோ 'தமிழ் சினிமாவிலேயே முதல் முறையாக' காட்சிகள்...

கதை, திரைக்கதை என்று பலபேரின் பெயரைப்போட்டு சிரமப்படவேண்டும் என்றோ என்னவோ தனது பெயரைத் தன்னடக்கத்தோடு போட்ட துணிச்சல் அபாரம்.

நடிகர் விஜய்க்கு கதையைச் சொல்லாமல் தனியே பில்ட் அப் காட்சிகளை மட்டுமே சொல்லி ஒப்பேற்றிவிட்டார் போலத் தான் தெரிகிறது.

போதாக்குறைக்கு இரண்டொரு பஞ்ச் வசனங்கள். அதை சத்யராஜ் ஆரம்பித்து விஜய், பின்னர் இறுதியாக சந்தானமும் சொல்கிறார்கள்.
"இது ஒரு வழிப்பாதை"
வில்லனையும் அதே வசனத்தை சொல்ல வைத்து இன்னொரு புதுமை படைத்திருக்கலாம். 

கத்தி பற்றிய வசனம் வைத்த சூப்பர் ஸ்டாரின் பாபாவே பப்படம் ஆனபிறகு இதில் வேறு கத்தி வசனம்.
அதைக் கத்திக் கத்தியே காதுகளில் குத்தி ரத்தம் வரப்பண்ணுகிறார்கள்.


ஆரம்பத்தில் தமிழ்ப்பசங்க நடனக்குழு, அமலா பால் (அதுசரி அழகியாமே யாருப்பா அது?)காதல் காட்சிகள் என்று ஜவ்வாக இழுத்த கதையை ஸ்பீட் ஆக்குறேன் என்று மும்பாய் காட்சிகளில் ப்ரேக் இல்லாமல் ஓட ஆரம்பிக்கிறது கதை.

ஆஸ்திரேலிய காட்சிகளில் காதல் சும்மா அப்படி பொங்கி வழிகிறது.
என்னா கவிதைத் தனமான காட்சிகள்... வாவ்.
காருக்கு முன்னால் பாய்ந்து பட்டாம் பூச்சி பிடிக்கும் காட்சியும், கண்டவுடன் காதல் மலர்வதும், கல்யாணம் கட்டிட்டேன் என்று நாயகி சொல்ல, கதாநாயகன் அதைப் பொய்யென்று கண்டுபிடிப்பதும் அட அட அட எப்படியான புதுமை... வாவ் கையைக் குடுங்க இயக்குனர்.

விஜய் + விஜய் (இயக்குனர் + நடிகர்)  என்பதால் முன்னைய விஜயின் double acting படங்கள் மாதிரியே ஒரு கன்னைக்கட்டுற பீலிங்கு பீலிங்குன்னா

இதையெல்லாம் எவ்வளவு பொறுமையா உள் வாங்கி, அதிலும் மிகக் கொடுமையாக அமலா பாலின் முகத்தை க்ளோஸ் அப்பில் பார்த்தும் உணர்ச்சி பொங்க நடித்துக் கொடுத்திருக்கும் விஜய்க்கு இதுக்காகவே ஒஸ்கார் விருது கொடுக்கவேண்டும்.

தனது முன்னைய படங்களில் (சுட்டாலும் கூட) அழகான காதல் காட்சிகளை வைத்த இயக்குனர் மினக்கெட்டு ஆஸ்திரேலியா போய் - வறட்சியான காதல் காட்சிகளையும், வழுக்கலான பாடல் காட்சிகளையும் எடுத்திருக்கிறாரே.

யார் இந்த சாலையோரம் பாடல் காட்சி(யும்) மனதில் நிற்கவில்லை.


விஜயின் நடிப்பு பற்றி சொல்வதற்கு எமக்கு இன்னும் தகைமை வந்து சேரவில்லை - (இருக்கிற எதிரிகளின் எண்ணிக்கையைக் கூட்டிக்கொள்ள யார் தான் விரும்புவார்?) அப்படியிருந்தும் ஒன்றை மட்டும் சொல்லியே ஆகவேண்டும்...
வாங்கண்ணா பாடல் முடிந்து வரும் காட்சியில் தோழர்கள் செத்துக்கிடக்க விஜய் காட்டுவார் பாருங்கள் சோக நடிப்பு... வாவ். நாயகனில் மகன் நிழல்கள் ரவி இறந்த செய்தி அறிந்து கமல் அழுத காட்சிக்குப் பிறகு இப்படியான performance எங்கணும் கண்டதில்லை.
ஆனால் துடிப்பான நடனத்தில் விஜயை அடிக்க யாருமில்லை.
வாங்கண்ணா, தமிழ்ப்பசங்க பாடல்களில் செம கலக்கல்.
(ஆனால் நடனப்போட்டி மானாட மயிலாட தோற்றுப்போகும்)

விஜய் அரசியலுக்குள் இறங்குவதற்கான முழுத் தகுதியையும் கொண்டிருக்கிறார் என்று சந்தானம் சொல்லும்போது திரையரங்கமே அதிர்கிறது. (அது என்ன அவ்வளவு பெரிய காமெடியா?)
ஆனால் தலைவா மூலம் தன சகிப்புத்தன்மையை அனைவருக்கும் எடுத்துக்காட்டி தான் பொறுப்பான பதவிக்கு லாயக்கானவர் என்று நிரூபிக்கிறார்.

சாம் ஆண்டர்சனை perform பண்ணவிட்டு தலைவா என்று அழைத்துப் பணிவு காட்டும்போதே விஜய் எங்கேயோ போய்விடுகிறார்.
அப்படியே அடுத்தபடத்தில் பவர் ஸ்டாரையும் நடிக்க விடுங்க.. உண்மையா entertainmentஆ இருக்கும்.

இன்னொன்று, துப்பாக்கி படத்தில் ஹிட் அடித்த பஞ்ச் வசனம் "I am waiting"ஐ சந்தானம் இவருக்கே சொல்வது சரி, ஆனால் விஜயின் இந்தப் படத்தின் பஞ்ச் வசனமான ""இது ஒரு வழிப்பாதை" ஐயே சந்தானம் சொல்வது விஸ்வா பாயை சிரிப்பு தாதா ஆக்கிவிடுகிறது.

சத்யராஜ் இன்னும் கொஞ்சம் நேர்த்தியான மேக் அப் போட்டால் அவரும் சூப்பர் ஸ்டார் நாற்காலிக்கு சண்டை போடலாம் போல.
ஆனால் மனிதரின் வயது முதிர்ந்த அந்த கெட் அப் கெத்து. நிமிர்ந்து நிற்கிறார்.
மனோ பாலாவை அவர் பாணியிலேயே விட்டிருந்தா அவரது காமெடியையாவது ரசித்திருக்கலாம்.

அதுக்கு பதிலாக பெரிய காமெடியாக அமலா பாலின் பாத்திரத்தில் 'போக்கிரி' விஜய் ட்விஸ்ட் வைத்து இயக்குனர் பெரிய காமெடி செய்திருக்கிறார்.
அதுக்குள்ளே அவரும் சுரேஷும் பேசும் system, நீதி, நியாயம் வசனம் மெகா காமெடி.


இந்தப் படத்துக்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தடைவிதித்தார் என்று சொல்வதையெல்லாம் கொஞ்சமும் நம்ப முடியவில்லை.
கலைஞர் அளவுக்கு சாணக்கியம் இல்லாவிட்டாலும் கொஞ்சமாவது விஷயம் தெரிந்தவர் தானே ஜெ ?
இதுக்குப் போய் தடைவிதித்து தேவையில்லாமல் விளம்பரம் எடுத்துக் கொடுக்க விரும்பியிருப்பாரா?

உண்மையிலேயே தடையை அவர் தான விதித்திருந்தார் என்பது உண்மையாக இருந்தால் படத்தைப் பார்த்தால் நொந்திருப்பார்.

பின்னே, மும்பையை ஒரு கலவர பூமியாகக் காட்டும் இன்னொரு திரைப்படம் என்று மகாராஷ்டிர மாநிலம் தடை விதித்தாலும் பரவாயில்லை.
Why தமிழ்நாடு?

அதுசரி, குதிக்கிறது என்று முடிவெடுத்தபிறகு ஏன் மும்பாய்க் கதைக்களம்?
தமிழ்நாட்டிலேயே கலக்கியிருக்கலாமே.
மும்பாய் தாதா தமிழ் பேசும் அரசியல்வாதிகள், வில்லன்கள் என்றவுடன் பாட்ஷா, நாயகன் மட்டுமில்லாமல், அரசு, ஆதிபகவன், வந்தான் வென்றான் கூட ஞாபகம் வருமே.

குதிக்கிறதென்று முடிவெடுத்தது சரியா தவறா என்பதை நீயா நானா கோபிநாத்தும், குதிக்க முடிவெடுத்த டைமிங் சரியா என்று சொல்வதெல்லாம் உண்மையும் தீர்மானிக்கட்டும்.
ஆனால் அதுக்காக இந்தப் படக் கதையைத் தெரிவு செய்து, இந்த இயக்குனரிடம் கொடுத்த தெரிவை யார் செய்திருந்தாலும் (ரஜினி ரசிகர்கள் பாபாவை நம்பியது போல)தமிழக மக்களின் தலைவிதியை மாற்றிய பெருமையை அவரிடம் கொடுத்துவிடலாம்.

அதுசரி அந்த  பெண்ணை விஜய்க்கு ஜோடியாகப் போடாத சாபத்தையும் சேர்த்தே வாங்கிய இயக்குனர் அவரையாவது சாகடிக்காமல் விட்டிருக்கலாமே.
படம் பார்த்த பலரோடு, படம் வராத சோகத்தில் தன்னை மாய்த்த (உயிரின் பெறுமதி அறியாத அந்த முட்டாள் எல்லாம் இறந்தது நல்லதும் கூட)ஒருவனுடனும் சேர்த்து, படத்திலும் எத்தனை பலிகள்? கொத்துக் கொத்தா செத்துப் போகிற அப்பாவிகள்.

அதுசரி தலைவா என்றவுடன் பாய்ந்து விழுந்து கலாய்த்து, கடித்துக் குதறியவர்கள் அந்த 'துண்டு' விஷயத்தை விட்டுவிட்டார்களே?
அண்ணா சத்யராஜும்,பின்னர் 'தலைவா' விஜயும் போர்த்திக்கொள்கின்ற சால்வை வேறு ஒருவரையும் ஞாபகப்படுத்தவில்லையா?
(அப்பாடா கொளுத்திப் போட்டாச்சு)

இன்னொரு MGR ஆகவேண்டுமாக இருந்தால் இளைய தளபதி படத்துக்கு வெளியேயும் உள்ளேயும் இன்னும் பல கிம்மிக்குகளை செய்யவேண்டி இருக்கும்.
முதலில் இப்படியான உப்புமா இயக்குனர்களையும், முக்கியமாக தந்தையாரையும் தள்ளியே வைக்கவேண்டும்.

தலைவா - ஆ ஆ ஆ 
Time to leave - விட்டிருங்கண்ணா 

November 17, 2012

துப்பாக்கி



ஊடக, இணையப் பேட்டிகளில் அடிக்கடி இயக்குனர் A.R.முருகதாசும், இளைய தளபதி விஜயும் "இது வழக்கத்திலிருந்து வித்தியாசம்; ஒரு முற்றிலும் வித்தியாசமான விஜயைப் பார்க்கலாம்" என்று சொல்லிக் கொண்டிருந்தாலும்... 'என்னத்த வித்தியாசமா' என்று ஆயாசப் பட்டவர்கள் ஆயிரக் கணக்கானவர்களில் நானும் ஒருவன்.

ஆனால் சொன்னது போலவே செய்து காட்டியிருக்கும் இருவருக்கும் வாழ்த்துக்கள் & நன்றிகள்.

வழமையான தமிழ்க் கதாநாயகர்களின் தீவிரவாத ஒழிப்பு, குண்டுவெடிப்பு தடுப்பு - One man army show - விஜயகாந்த், அர்ஜுன் செய்வதையே இளைய தளபதியும் A.R.முருகதாஸ் சொன்னபடி செய்கிறார்.

ஆனால் களம் வேறு - மும்பாய். & இயக்குனர் காட்சிப் படுத்தியிருப்பதில் விறுவிறுப்பு & வித்தியாசம். துப்பாக்கி இதனால் துடிப்பாகவே சுட்டிருக்கிறது.

இராணுவ வீரராக விஜய்; விடுமுறைக்காகத் தனது குடும்பத்தினர் இருக்கும் மும்பாய்க்கு வரும் அவர், தற்செயலாக ஒரு குண்டுவெடிப்புடன் சம்பந்தப்பட்ட ஒருவனைப் பிடித்துவிட, தொடர் குண்டுவெடிப்புக்கான தகவல்களைப் பெற்றுக்கொள்கிறார். தொடர் குண்டுவெடிப்புக்களை மறைந்திருந்து இயக்கும் பிரதான தீவிரவாதியை அழிக்கும் முயற்சியில் இறங்கும் விஜயை, சந்தித்து அழிக்க நினைக்கும் வில்லனுடனான மோதலில் இறுதியாக என்ன நடக்கிறது என்பதைத் துப்பாக்கி சொல்கிறது.

இப்படியான கதைகளில் தொய்வில்லாத திரைக்கதையும், கண்டபடி கதைகளில் செருகல்கள் இல்லாமையும் முக்கியம். A.R.முருகதாஸ் அதையும் சரியாகச் செய்திருக்கிறார்.

ஆனால் நீண்ட தூர மோப்பத்துக்கு விஜயின் நாய் உதவுவதும், வில்லன் கோஷ்டியினால் கைது செய்யப்படும் விஜய் கை விலங்கை அகற்றிவிடுமாறு கேட்டுக் கழற்றுவதும், முறிந்த கையை உலுக்கி, குலுக்கி சரி செய்யும் மஜிக் காட்சிகளையும் தவிர்த்திருக்கலாம்.

அதேபோல இவ்வளவு புத்திசாலி Sleeper Cell Head வில்லன், விஜய் ஒரு chip ஐத் தன் உடலுக்குள் மறைத்து வந்திருப்பதையும், பின்னாலேயே ஒருவன் வருவதையும் கண்டறியமாட்டானா என்பதையும் யோசித்திருக்கலாமே...
அத்தோடு படம் வந்த பிறகு பரபரப்பைக் கிளப்பி, இப்போது விஜய் மன்னிப்புக் கேட்டு அவரது தந்தையார் விஜய் முஸ்லிமாக நடிப்பார் என்று வாக்குக் கொடுத்திருக்கும் 'ஜிஹாத்' விஷயம்.

காலாகாலமாக தமிழ்த் திரைப்படங்களில் - தீவிரவாதம்- பாகிஸ்தான் - முஸ்லிம்கள் என்று வந்து கொண்டே இருப்பதால் பலரும் இதை இவ்வளவு பெரிதாக எடுப்பார்கள் என்று படம் பார்த்தபோது நான் யோசிக்கவில்லை; ஆனால் 'ஜிஹாத்' (புனித யுத்தம்) அந்தப் பெயர் தான் இதைப் பெரிதாக்கி இருக்கிறது என்று நண்பர்கள் மூலம் அறிந்துகொண்டேன்.

ஆனால் இந்தப் பாணியில் 'இஸ்லாமிய தீவிரவாத ஒழிப்பு' விஷயத்தைக் கையில் எடுக்கும் இயக்குனர்கள் செய்கின்ற அதே மாதிரியான சில காட்சிகளை இயக்குனரும் செய்திருக்கிறார்.
இறுதிப் பாடல் காட்சியிலும், முதலாவது இராணுவ வீரர்கள் விடுமுறைக்கு ஊர் திரும்பும் காட்சியிலும் தவறாமல் முஸ்லிம்களும் இந்திய இராணுவத்தில் இருப்பதைக் காட்டி இருக்கிறார்.

அதுசரி இந்திய இராணுவம் என்றவுடன் மனதில் நிழலாடும் இலங்கையில் இடம்பெற்ற அவர்கள் செய்த கொடுமைகள் பற்றிப் பொங்கும் நம்மவர்கள் பலரும் இந்தப்படத்தை இந்திய இராணுவத்துக்கு இயக்குனரும் தயாரிப்பாளரும் (நிழல் தயாரிப்பாளராக விஜய் அவர்களும் ஏராளம் பணம் கொட்டியதாகத் தகவல்கள் வந்திருந்தன) அர்ப்பணித்தும் அமைதியாக இருப்பதேனோ?? (அப்பாடா .. ஆரம்பிச்சு விட்டாச்சு.. )


விஜய் - துறுதுறு என்று இருக்கிறார். கம்பீரமாக, துடிப்பாக, அழகாக, கட்டுக்கோப்பாக... பில்ட் அப் இல்லாத, குத்துப்பாட்டுக்கு ஆடாத, பஞ்ச் வசனம் பேசாத விஜயை நண்பனைத் தொடர்ந்து மீண்டும் பார்ப்பதில் ஆனந்தம்.
இயக்குனரின் நடிகராக நல்லாவே செய்கிறாரே.. மற்ற இயக்குனர்களும் விஜயின் இந்த நல்ல மாற்றத்தைப் பயன்படுத்தலாமே.
சண்டைக் காட்சிகள், காஜல் அகர்வாலுடன் காதல் - குறும்பு காட்சிகளில் ரசனையாகக்  கலக்குகிறார்.

காஜல் அழகாகவே இருக்கிறார்.
கிடைக்கும் வாய்ப்புக்களில் ரசிக்க வைக்கிறார். நடனம் ஆடுகிறார். கொஞ்சம் கிறுக்குத் தனமும் சேர்ந்தே இருக்கிறது. (மும்பாய் தமிழ்ப் பெண் என்பதால் இவர் தம் அடிப்பது & குடிப்பது பற்றி கலாசாரக் காவலர்கள் ஏதும் சொல்ல மாட்டார்கள்)
அவ்வளவு தான். பெரிய நடிகர் ஒருவரின் படத்தில் கதாநாயகிக்கு வேறு என்ன வேலை?

சத்யன் விஜயின் நண்பன்.. கொஞ்சமாக சிரிக்கவைக்க.
'பத்மஸ்ரீ' ஜெயராம் பாவம்.. அவரையும் சேர்த்து சிரிக்க வைக்க முயன்றிருக்கிறார்கள். சரி..

வில்லன் வித்யுத் ஜம்வால்..
முருகதாசின்  படங்களில் வரும் வில்லன்கள் சிலநேரம் ஹீரோக்களை விட அதிகம் கவர்ந்து நிற்பார்கள்.
அந்த வரிசையில் ஏழாம் அறிவு டொங் லீக்கு அடுத்ததாக இந்தக் கட்டுமஸ்தான வில்லன்.
குறைவான பேச்சும், கூரிய கண்களும், கம்பீர நடையுமாகக் கலக்குகிறார்.
கடைசி முட்டாள் தனம் தவிர இவரது நுணுக்கமான திட்டமிடல்களும் ஈவு இரக்கமற்ற அசைவுகளும் இயக்குனருக்கான பாராட்டுக்கள்.

சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில் பிரம்மாண்டம் எல்லாம் காட்டவில்லை. ஆனால் புதிய ஒளிப்பதிவு நுட்பம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளாராம். இப்படியான விறு விறு படம் ஒன்றுக்குத் தேவையானதைக் குறைவில்லாமல் கொடுத்திருக்கிறார்.

இவரும் இயக்குனர் A.R.முருகதாசும் கூகிள் பாடல் காட்சியிலும் தலை காட்டியுள்ளார்கள்.



பாடல்கள் ரசிகர்களால் ரசிக்கப்பட்ட அளவுக்குக் குறைவில்லாமல் ரசனையாகவே படத்திலும் வந்திருக்கின்றன. அதிலும் மதன் கார்க்கியின்  'அண்டார்ட்டிக்கா' படமாக்கப்பட்ட விதத்தில் மனதை அள்ளி எடுக்கிறது.
வரிகளுக்காக நேசித்த 'போய் வரவா' இறுதியாக சென்டிமென்ட்டாக டச்சுகிறது.

கூகிள் & அலேய்க்கா நடனத்துக்காக ரசிக்கலாம். ஆனால் விஜய் நடனத்திலும் கொஞ்சம் அடக்கியே வாசித்திருக்கிறார் போலத் தெரிகிறதே... (எனக்கு மட்டுமா?)
பாடல்களில் ரசிக்க வைத்த ஹரிஸ் ஜெயராஜ் பின்னணி இசையில் அப்படியொரு சொதப்பல். பின்னணி இசை ஒட்டியிருந்தால் முக்கிய காட்சிகளும்  முடிவுக் காட்சிகளும் இன்னும் பரபரவாக இருந்திருக்கும்.

ஆனால் இப்படியொரு விறுவிறுப்பான படத்தில் பாடல்கள் இரண்டொன்றைக் குறைத்திருந்தாலும் நாம் ரசித்திருப்போம். சில இடங்களில் பாடல்கள் படத்தின் வேகத்தைக் குறைப்பதாகவும் இருக்கின்றன.

முருகதாஸ் கைவண்ணம் தீனா, ரமணாவில் இருந்து நான் ரசிப்பது சிறு சிறு காட்சிகளின் மெருகில். அது 'ஏழாம் அறிவில்' இல்லாமல் போயிருந்தது.
ஆனால் துப்பாக்கியில் தன்னை மீள நிரூபித்திருக்கிறார் எனலாம்.

Sleeper Cells என்ற ஒரு சிறு பொறியை சரியாகப் பயன்படுத்தி பெரிய கதையை தொய்வின்றி உருவாக்கியவிதம், 12 பேரை ஒரே நேரம் பிசகில்லாமல் போட்டுத் தள்ளும் திட்டம், வில்லன் விஜயைக் கண்டுபிடித்து  நெருங்கும் விதம், துரோக இராணுவ அதிகாரிகளின் தற்கொலைகள் என்று சில ஞாபகம் வந்தவை.

விஜய் தன் மாற்றத்தை சரியாக உணர்ந்துவிட்டார். இனியும் இது தொடர்ந்தால் சிறப்பு.
ஆனால் இயக்குனர் முருகதாஸ் ஒரு formula வுக்குள் விழுந்திருக்கிராரோ என்ற கேள்வியும் கூடவே. அடுத்த படம் பதில் சொல்லும் என்று நினைக்கிறேன்.

துப்பாக்கி - குறி தப்பவில்லை 

January 16, 2012

நண்பன்



முதல் நாளே சில படங்களைப் பார்த்துவிடவேண்டும் என்று ஆசைப்படுவேன். அப்படி முதல் நாள் பார்க்க வாய்ப்பில்லாமல், மூன்றாம் நாளில் கூட முக்கியமான பல வேலைகளின் இடையே அவசர,அவசரமாக ஓடிச் சென்று அதிலும் திரையரங்கு நிறைந்த ரசிகர்களோடு பார்ப்பதென்றால்.. அண்மையில் இலங்கையில் ஒரு சில திரைப்படங்கள் மாத்திரமே இவ்வாறு முதல்மூன்று நாட்கள் Houseful ஆக எல்லாத் திரையரங்கிலும் நிறைந்ததாக ஞாபகம்..
எந்திரன், மங்காத்தா இன்னும் வெகு சில மட்டும் தான்..

நண்பன் பார்க்கப் போவதாக இருந்தால் நான் சொல்லும் இந்த விஷயங்களைக் கொஞ்சம் கவனியுங்கள்..
ஹிந்தி 3 Idiots பார்த்திருந்தால் அதை மனதில் வைத்துக்கொண்டு நண்பனைப் பார்க்காதீர்கள். இதை ஒரு புதிய படமாக எண்ணிக்கொண்டே பாருங்கள்.
(நானும் ஆரம்பக் காட்சிகளில் படத்தில் ஒன்றிக்க ரொம்பக் கஷ்டப்பட்டேன்)

விஜயின் படம், ஷங்கரின் படம் என்று எந்த ஒரு எதிர்பார்ப்பும் வேண்டாம்.

கதை என்ன எங்கே இருந்து வந்தது, எப்படியாக நகர்கிறது - இப்படியெல்லாம் பழைய புராணம் சொல்லப் போவதில்லை நான்..
கதை + இத்யாதிகள் அறிய விரும்பினால் எனது முன்னைய 3 Idiots பதிவை வாசியுங்கள்...


3 Idiots - 3 இடியட்ஸ் - All is well.





ஹிந்தியின் 3 Idiots மூலப் பிரதியிலிருந்து எள்ளளவும் மாற்றாமல் காட்சிகள், கமெராக் கோணங்கள் பாத்திரங்கள், சில பாத்திரப் பெயர்கள் என்று அப்படியே போட்டோ பிரதி பண்ணியிருக்கிறார் ஷங்கர். (ஒரு காதல் பாடல் மட்டும் மேலதிகமாக சேர்த்துள்ளார்)
இதனாலேயே ஆரம்பத்திலே இயக்கம் மட்டும் என்று தன் பெயரைக் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் இதற்காகவே ஷங்கருக்கு நன்றி சொல்ல வேண்டும்.. இந்தியாவின் மிகப் பெரிய இயக்குனராக உருவெடுத்த பிறகும் ஹிந்தியில் வெளியாகி மாபெரும் வெற்றியையும் ஏகோபித்த பாராட்டுக்களையும் பெற்ற ஒரு படத்துக்கும், திரைக்கதை + இயக்குனருக்கும் ஷங்கர் கொடுத்துள்ள மரியாதையாகவே மாற்றங்கள் ஏதும் இல்லாமல் நண்பனைக் கொடுத்திருப்பதை நான் கருதுகிறேன்.

ஷங்கரை மனம் திறந்து உயர்வாகப் பாராட்ட இன்னும் சில காரணங்கள் -
விஜய் என்ற மாஸ் ஹீரோவை பாரி என்ற ஒரு பாத்திரமாகவே கருதி ஹிந்தியில் அமீர்கான் செய்துள்ள அத்தனை விடயங்களையும், சந்தித்துள்ள அத்தனை விடயங்களையும் செய்ய விட்டுள்ள துணிச்சலும், அப்படி இருந்தும் விஜய் ரசிகர்களையும் திருப்திப்படுத்தியிருப்பதும் எல்லா இயக்குனர்களாலும் முடிந்திராது.


அடுத்தது பொருத்தமான பாத்திரத் தெரிவுகள்..

முதலில் விஜய்.. அமீர்கான் வேறு விஜய் வேறு தான். ஆனால் அவர் ஹிந்திக்குப் பொருத்தமாக செய்து இளைஞர் முதல் அத்தனை தரப்பினரது மனதை அள்ளியது போல, விஜயால் தமிழுக்குக் கொடுக்க முடிந்திருக்கிறது.

அடுத்து ஜீவா & ஸ்ரீக்காந்த் - ஷர்மான் ஜோஷி & மாதவன் செய்த பாத்திரங்களை அதே பொருத்தமாகத் தமிழில் இவர்கள் தந்திருப்பதைப் பார்க்கையில் வேறு யாரையும் இவர்களுக்குப் பதிலாக யோசித்துப் பார்க்க முடியாததே ஷங்கரின் வெற்றி தானே?

சத்யராஜ் - வைரஸ் பாத்திரத்தில் போமன் இரானியைப் பார்த்த எமக்கு அச்சொட்டாக சத்யராஜ் தமிழில்.. நடை, உடை, பாவனை என்று சத்யராஜ் கலக்குகிறார்.

இலியானா - ஏனோ கரீனாவை விட எனக்கு இந்த ரியா பாத்திரத்தில் இவர் அதிகமாகப் பொருந்தியதாகத் தெரிகிறார். முன்பே தமிழில் வேறு படங்களில் நடித்த கதாநாயகி யாராவது நடித்திருந்தால் இந்த fresh இருந்திராது என்று நினைக்கிறேன். அடுத்து அந்த முத்தமிட்டால் முட்டிக்கொள்ளும் நீள மூக்குக்காகப் பிரத்தியேகமாக இலியானாவைத் தேர்வு செய்தாரோ?

சத்யன் - விஜய், சத்யராஜையும் தாண்டி இந்தப் படத்தில் ஒருவர் பிரகாசிக்கிறார் என்றால் அது சத்யன் தான். ஷங்கர் இவரைத் தெரிவு செய்தார் என்றால் எம்மில் பலரையும் அது முதலில் ஆச்சரியப்படுத்தியிருக்கலாம். ஆனால் ஹிந்தியில் ஓமி வித்யா செய்ததை விட சத்யன் பலமடங்கு சிறப்பாக செய்திருக்கிறார். ஷங்கர் இவர் மீது வைத்த நம்பிக்கைக்கு ஒரு மிகப் பெரிய சல்யூட்.


எனக்கு இது மிக ஆச்சரியமாகவும், ஒரு வித்தியாசமான அனுபவமாகவும் இருந்தது. வேறு மொழியில் வந்த படம் அப்படியே ஒரு translation படமாகப் பார்த்தது இதுவே முதல் தடவை.
வழமையாக ராஜா, தரணியின் படங்களில் 'தமிழுக்கு ஏற்ற மாதிரி' மாறுதல்கள் செய்யப்பட படத்திலிருந்து மாறுபட்டுத் தெரிவது நண்பனின் ஸ்பெஷல்.

அதே கதை, அதே திரைக்கதை, அதே காட்சியமைப்பு, அப்படிஎயான இயக்கம் என்பவற்றால் அவை பற்றிப் பேசாமல், ஏனைய விஷயங்களைப் பார்த்தால்....

மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு - வாவ்.. ஊட்டியின் குளிர்மையும், கல்லூரியை மேலிருந்து காட்டுகின்ற காட்சியும் சிகரம் என்றால்.. ஏனைய ஒவ்வொரு சின்ன சின்ன காட்சிகளிலும் சிலிர்க்க வைக்கிறார்.

ஹரிஸ் ஜெயராஜ் - பாடல்களில் கலக்கியவர், பின்னணி இசையில் பெரிதாக சோபிக்கவில்லை. உருக்கமான காட்சிகளில் ஹரிஸும் உருகிவிட்டாரோ?

(மதன்) கார்க்கி + ஷங்கர் - வசனங்கள்.. மதன் இல்லாமல் கார்க்கி மட்டுமே பாடல்கள், வசனம் - கார்க்கி என்று வருகிறது. மதன் கார்க்கி என்பதில் இருக்கும் அழகு, வெறும் கார்க்கியில் இல்லையே :)
பாடல்களில் எங்களை சொக்க வைத்த கார்க்கி, வசனங்களில் லயித்து ரசிக்க வைக்கிறார். மொழிபெயர்ப்பாகத் தெரிந்துவிடும் அபாயத்தை தனது மொழிப் புலமையாலும், ரசிக்கக் கூடிய சில சொற்களாலும் இல்லாமல் செய்து சுவைக்கவைக்கிறார்.

அதிலும் சத்யனின் சொற்பொழிவுக் காட்சி திரையரங்கில் non stop சிரிப்பலை.
கற்பித்தல் - கற்பழித்தல் ஆவதும், கொள்கை - கொங்கை, கல்வி - கலவி என்று ஓயாமல் சிரிக்க வைக்கிற வசனங்கள்..
கொஞ்சம் விளிம்பு தாண்டினாலும் விரசமாகிவிடக் கூடிய இடங்களில் கத்தி நடை- கலக்கல் கார்க்கி.


விஜய் அதிகமாக மினக்கெடவில்லை. கொடுத்த பாத்திரத்தைக் கனகச்சிதமாக, அழகாக செய்திருக்கிறார். அமீர்கான் படம் முழுதும் அணிந்த அதே விதமான round neck t shirts , ஒரு துள்ளல் நடை, சிநேகமான புன்னகை என்று அழகாக இருக்கிறார் விஜய். சச்சின் படத்தில் நான் ரசித்த அதே விதமான இளமை + துடிப்பான விஜய்.
அதிலும் இருக்கான்னா பாடலில் ஒரு stylish தாடியுடன் வருகிறார். அசத்தல்.
பல காட்சிகளில் சிறப்பாக நடிக்கவும் செய்கிறார்.
விஜயின் மிகச் சிறந்த படங்களில் ஒன்றாக நண்பன் இருக்கும் என்பது உறுதி.

சத்யராஜ் - சொல்லவே தேவையில்லை. ஆனால் அவரது வழமையான நக்கல், நையாண்டிகள், குத்தல், குசும்புகளை நாம் மிஸ் பண்ணுகிறோம்.  சத்யராஜாக பார்க்காமல் அந்தக் கால்லூரி முதல்வர் விருமாண்டி சந்தானமாகவே பார்க்க முடிகிறது. இதுவும் அவருக்குக் கிடைத்த வெற்றியே.


ஸ்ரீகாந்த், ஜீவா இருவருக்குமே விஜய்க்கு இணையாகக் காட்சிகள். அதிலும் ஜீவாவுக்கு நகைச்சுவை, கோபம், சோகம் என்று பலதையும் காட்டக் கூடிய வாய்ப்பு.
சத்யன் கிடைக்கும் வாய்ப்புக்களிலெல்லாம் எல்லாரையும் தூக்கி சாப்பிட்டு விட்டு செல்கிறார். இவர் ஒரு வித்தியாசமான நடிகர். வடிவேல், சந்தானம், விவேக் வகையறாக்களில் சேர்க்க முடியாது. நல்ல வாய்ப்புக்கள் தொடர்ந்து கிடைத்தால் மேலும் கலக்குவார்.

இலியானா - அந்த துறு துறு கண்களும், முயல் முன் பற்களும், நீண்டு நிற்கும் மூக்கும் ஒரு ரசனையான கலவர அழகு. அபார அழகு என்று சொல்ல முடியாது எனினும், இருக்காண்ணா பாடல் பார்த்தால் கிறங்கிப் போவீர்கள். இடுப்பு அழகும் அனாயச அசைவுகளும் சேர்ந்து கிக் ஏற்றுகின்றன.
காதல் காட்சிகளில் கொஞ்சியே கொள்கிறார்.


S.J.சூர்யாவும் ஒரு சிறு பாத்திரத்தில் வருகிறார்; கொஞ்ச நேரமே வந்தாலும் கலக்கிவிட்டு செல்கிறார்.

ஷங்கரின் இயக்கத்தைப் பாராட்ட ஒன்றுமே கிடையாது.. எல்லாவற்றையும் ராஜ்குமார் ஹிரானியே (ஹிந்தி இயக்குனர்) செய்து வைத்துவிட்டுப் போய்விட்டாரே.

ஆனால் இறுதிக் காட்சி நான் உண்மையிலேயே எதிர்பாராதது .. அட நம்ம விஜயைக் கூட இப்படி நடிக்க வைக்கலாமா?
ஆனால் விஜயின் இறுதிக்காட்சி கெட் அப் வாய்க்கவில்லை.

அத்துடன் ஹிந்தியில் வைத்தது போலவே வித்தியாசமான பெயர்களாக வைக்கப் போய், தமிழில் இதுவரை இல்லாத பெயர்களாக "பஞ்சவன் பாரிவேந்தன்" , கொசாக்சி பாசப்புகழ் இப்படிப் பெயரெல்லாம் கொஞ்சம் ஓவராக இல்லை?
Virus என்று வரவேண்டும் என்பதற்காக விருமாண்டி சந்தானம் என்று ஒரு பெயர் வேறு.

பாடல் காட்சிகள் ரசிக்க வைத்தன.. அதிலும் அஸ்கு லஸ்காவில் தனது முன்னைய பாடல் காட்சிகளையே ரசனையோடு கிண்டல் பண்ணி இருப்பதும், இருக்காண்ணாவின் இடுப்பு ஆட்டங்களும், ஹார்ட்டிலே பாடலின் குறும்புகளும் சூப்பர்.


ஹிந்திப் படத்தை ஆங்கில உபதலைப்புக்களுடன் பார்த்து ரசித்ததை விட, நண்பனை இயற்கையாகவே ரசித்தேன்.
ஆனால் ஷங்கரின் படம் என்ற எண்ணமே வராதது படத்தின் வெற்றியா அல்லது ஷங்கருக்குக் குறைவா என்று புரியவில்லை.

நண்பன் -  3 Idiots போலவே என்னை உருக வைத்தான், கிறங்க வைத்தான், தவிக்க வைத்தான், சிரிக்க வைத்தான், காதல் நினைவுகளை மீண்டும் மீட்ட வைத்தான், அழவும் வைத்தான், இறுதியாக ஆனந்தப்படவும் வைத்தான்.

காட்சிகள் பற்றிப் பேசப்போனால் எக்கச் சக்கமாக சொல்ல வேண்டி இருக்கும்.. நீங்கள் ஒவ்வொருவருமே பார்த்து ரசித்தால் உங்கள், உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு துளிகளும், இனி உங்கள் வாழ்க்கைக்குத் தேவையான பலவும் கிடைக்கும்.

மீண்டும் ஒரு தடவை இவ்வாரம் நண்பர்களோடு பார்க்கும் எண்ணம் உண்டு..

நண்பன் - இந்த நண்பன் போல யாரு மச்சான் ;)
ALL IS WELL !!!





December 27, 2011

நண்பன் பாடல்கள் - நல்லா இருக்கே :)



ஷங்கர் - விஜய் இந்த இணைப்பே போதும் 'நண்பனுக்கான' எதிர்பார்ப்பை எகிறச் செய்ய.. ஆனால் அதை விடப் பெரியதொரு இருக்கிறது இந்த நண்பன் மீது மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்த..

அது அமீர்கான் நடித்து அபார வெற்றி பெற்ற 3 Idiotsஇன் தமிழ் வடிவம் என்பது தான்.
ஆனால் பாடல்களைப் பொறுத்தவரை அண்மைக்காலத்தில் ஜனரஞ்சகப் பாடல்களைக் கொடுத்துவரும் ஹரிஸ் ஜெயராஜின் இசையில் வருவதால் இசைப் பிரியர்களின் தனியான எதிர்பார்ப்பும் இருந்தது.

காரணம் 1 ஹரிஸ் ஜெயராஜ் முதன்முதலாக இளையதளபதிக்கு இசையமைக்கிறார். 
காரணம் 2 ஹரிசின் அண்மைக்காலப் பாடல்கள் எல்லாமே எங்கேயோ முன்னர் கேட்ட மெட்டுக்கள் என்ற கடும் விமர்சனம். (ஆனால் என்ன மாயமோ ஹிட் ஆகிவிடுகின்றன)

ஹரிஸ் ஜெயராஜுக்கு மட்டுமல்ல பாடலாசிரியர்களுக்குமே இந்தப் பாடல்கள் பெரும் சவாலாக இருந்திருக்கும். காரணம் 3 Idiotsஇல் எல்லாப் பாடல்களும் இசையினாலும் ஹிட்; வரிகளாலும் ரசனையுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
ஆங்கில உபதலைப்புக்களுடன் பார்த்த என் போன்றவர்களுக்கும் திரைப்படத்தின் ஓட்டத்தில் பாடல்கள் தந்த உணர்வுரீதியிலான தாக்கம் அற்புதம்.

அதேபோல விஜய் ரசிகர்களுக்கு என்று ஒரு வித்தியாசமான பாணியை இசையமைப்பாளர்கள் விஜய் படங்களில் பின்பற்றி வந்திருக்கிறார்கள் என்பதும் அனைவரும் அறிந்தது.
விஜயைப் பற்றி ஒரு அறிமுகப் பாடல் இல்லாத விஜய் படமா?

இப்படியான ஒரு பாடல் எப்படி படத்தில் வருகிறது என்பதற்கும், 
3 Idiotsஇல் என்னைக் கவர்ந்த All is well பாடல் தமிழில் எப்படி வருகிறது என்பதற்காகவும் மிகுந்த ஆவலுடன் நண்பனுக்காக காத்திருந்தேன்.

Promo songs எனப்பட்ட குறுகிய நேர அளவைக்கொண்ட பாடல்கள் வெளிவந்து, பின் முழுமையான பாடல்கள் வெளிவந்து, மீண்டும் மீண்டும் பல தடவை கேட்டு ரசித்து, உள்வாங்கிய பிறகு இப்போது நண்பன் பாடல்கள் பற்றி....

ஹரிஸ் ஜெயராஜின் ரசிகர்கள் கோபித்துக் கொள்ளக் கூடாது...
இந்தப் படத்திலும் சில பாடல்களில் பழைய மெட்டுக்களும், பழைய பாடல்களின் பகுதியளவான இசை உருவல்களும் தெரிகின்றன.
ஆனால் வரிகளின் செழுமையால் அவை மறைக்கப்படுகின்றன/மறைந்து போகின்றன.

(ஒருவேளை இயக்குனர்கள் தான் அப்படியே கேட்டு வாங்கிக்கொள்கிறார்களோ?)

உடனடியாக மனதில் மூன்று பாடல்கள் பச்சக் :)
எனக்குப் பிடித்த பாடல்களின் வரிசையிலேயே பாடல்கள் பற்றி...

1.என் பிரெண்டைப் போல யாரு மச்சான் 
எழுதியவர் :- விவேகா
பாடியவர்கள் :- க்ரிஷ், சுசித் சுரேசன்

விஜய்க்கேன்றே எழுதப்பட்ட வரிகளா, படத்தில் வருகின்ற அனைத்தையும் மாற்றும் நாயகனுக்கான வரிகளா என்று யோசிக்க வைக்கும் விவேகாவின் வரிகள்..
ரசனையான, கூலான இசை..

என் ஃப்ரண்ட போல யாரு மச்சான்
அவன் ட்ரெண்டை எல்லாம் மாத்தி வைச்சான்

காணாமல் போன நண்பனைத் தேடிச் செல்லும் பயணத்தில் வரும் பாடல் என நினைக்கிறேன்...

நட்பால நம்ம நெஞ்ச தைச்சான்
நம் கண்ணில் நீரை பொங்க வைச்சான்

இந்தப் பாடலில் எனக்கு மிகவும் பிடித்த வரிகள்..

தோழனின் தோள்களும் அன்னை மடி
அவன் தூரத்தில் பூத்திட்ட தொப்புள் கொடி

விவேகா ஒரு ரசனையான பாடலாசிரியர்.. 
சந்தமும் ஓசையும் சரேலென்று நெஞ்சைத் தாக்கும் அனாயசமான உவமைகளும் என்று கலந்து கட்டித் தருபவர்...

இந்தப் பாடலையும் ஜொலிக்க வைத்துள்ளார்.
ஒரு தாயை தேடும் பிள்ளையானோம்
நீ இல்லை என்றால் எங்கே போவோம்..

நட்பு என்பது கற்பைப் போன்றது என்ற உவமையையும் விஞ்சி விட்டார்.

நான் எப்போதும் கிரிஷின் குரலையும் அதில் தொனிக்கும் உணர்ச்சிகளையும் ரசிப்பவன். 
ஹரிஸ் ஜெயராஜின் இசையில் க்ரிஷ்ஷுக்கு பல நல்ல வாய்ப்புக்கள் கிடைத்துள்ளன. இது மேலும் ஒரு பெயர் சொல்லும் பாடல்.

Airtel இன் அண்மைக்கால ஹிட் சுலோகமான 'ஒவ்வொரு ப்ரெண்டும் தேவை மச்சான்' ஐ ஞாபகப் படுத்தினாலும் மனது முழுக்க நிறைகிறது பாடல்.
தொடர்ந்து beatsஐக் கேட்ட போது சென்னை சூப்பர் கிங்க்சின் விளம்பரப் பாடல் "இது சென்னை சென்னை சூப்பர் கிங்க்ஸ்" பாடல் ஞாபகம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை.


2.அஸ்க் லஸ்கா ஏமோ ஏமோ
எழுதியவர் :- மதன் கார்க்கி
பாடியவர்கள் :- விஜய் பிரகாஷ், சின்மயி, சுவி(Rap பகுதிகள்)

ஹரிஸ் ஜெயராஜ் வித்தியாசமான இசை வடிவங்கள் சிலவற்றை இந்தப் பாடலில் இணைத்துத் தந்திருக்கிறார்.
அதனாலோ என்னவோ, முன்னர் வெளிவந்த பல பாடல்களைக் கேட்ட ஞாபகமும் வந்து இந்தப் பாடலை ஆழ்ந்து அனுபவிக்காமல் செய்கிறது. 

கனவு காணலாம் வரியா - ஜெய் 
கண்டேனே - மாசி 
சில்லென்று வரும் காற்று - ஏழுமலை (மெல்லிடையோடு வளைகோடு பாடல் வரி வருமிடம்)

ஆனால் விஜய் பிரகாஷ், சின்மயியின் ரசிக்க வைக்கும் குரலும் அழகியலான வார்த்தைகளும் காதல் இறக்கைகளைக் காதுக்குள் பொருத்துகின்றன எமக்கு. 

16 மொழிகளில் காதலைச் சொல்லி ஆரம்பித்து இதமான வரிகளுடன் செதுக்கி இருக்கிறார் மதன் கார்க்கி.
இவரது முதல் பாடலில் இருந்து ஒவ்வொரு பாடலிலும் என்னை ரசிக்கவும், ஆச்சரியப்படவும் வைக்கிறார்.
தந்தையைப் போலவே காதலுக்குள் அறிவியலையும், பாடலுக்குள் வார்த்தைகளுடன் வளமான மொழிச் செழுமையையும் தொடர்ந்து ஊட்டிக் கொண்டிருக்கிறார்.
இவரது பல்கலை ஆராய்ச்சியின் தேடலோ என்னவோ, புதுப் புது சொற்கள் மொழிக்கு சினிமாப் பாடல்கள் மூலமாக வந்து கிடைக்கின்றன.

ஒன்றா இரண்டா.. எத்தனை வரிகளை இங்கே எடுத்துக் காட்ட முடியும்?

மதன் கார்க்கியின் வலைத்தளத்திலிருந்து அவரது ஒட்டுமொத்த வரிகளையுமே தந்துவிடுகிறேனே...


அஸ்க் லஸ்கா



ஏனோ தன்னாலே உன் மேலே காதல் கொண்டேனே
ஏதோ உன்னாலே என் வாழ்வில் அர்த்தம் கண்டேனே

பெண் குரலின் மெல்லிய சுகமான தழுவலோடு ஆரம்பிப்பதே ஒரு ஸ்பரிச உணர்வு.....


முக்கோணங்கள் படிப்பேன் உன் மூக்கின் மேலே
விட்டம் மட்டம் படிப்பேன் உன் நெஞ்சின் மேலே
மெல்லிடையோடு வளைகோடு நான் ஆய்கிறேன்.

மதன் கார்க்கியின் வர்ணிப்பில் இலியானாவுக்கு மட்டும் தமிழ் தெரிந்திருந்தால் தேடி வந்து ஒரு இச் கொடுத்திருப்பார்.

பாழும் நோயில் விழுந்தாய், உன் கண்ணில் கண்டேன்..
நாளும் உண்ணும் மருந்தாய், என் முத்தம் தந்தேன்

இலக்கியத்தைத் திரட்டி இக்காலத்துக்குத் தரும் முயற்சியினாலான இந்த வரிகளைத் தொடர்ந்து 
அழகான புது நயத்தைத் தருகிறார்...

உன் நெஞ்சில் நாடிமானி வைக்க

முன்னர் நடந்தது மறுபடி நடப்பதாக எமக்குத் தோன்றுவதை என்போம்..
இந்த வார்த்தை முதல் தடவையாக ஒரு தமிழ்ப் பாடலில்... அதுவும் பொருத்தமாக..
தே ஜா வூ கனவில் தீ மூட்டினாய்

ஒரு அழகுக்கான வர்ணனை.. ஒரு அழகிய காதலிக்கான, குறும்பான குழந்தை போன்ற ஒரு அழகிக்கான வர்ணனை வர்த்திகள்..


எங்கள் காதலியர்க்கு நாங்கள் இவரிடம் இரவல் வாங்கக்கூடிய வரிகள் தொடர்கின்றன...

கண்ணாடி நிலவாய் கண் கூசினாய்
வெண்வண்ண நிழலை மண் வீசினாய்

புல்லில் பூத்த பனி நீ.. ஒரு கள்ளம் இல்லை..
Virus இல்லா கணினி.. உன் உள்ளம் வெள்ளை..
நீ கொல்லை மல்லி முல்லை போலே
பிள்ளை மெல்லும் சொல்லை போலே

அழகான தமிழைக் கொல்லாமல், மென்று துப்பாமல் உணர்ந்து பாடி, உயிர் கசியச் செய்த பாடகர்களைத் தேர்வு செய்த ஹரிஸ் ஜெயராஜுக்கு வாழ்த்துக்கள் பல கோடி.


3.இருக்காண்ணா 

எழுதியவர் :- பா.விஜய்
பாடியவர்கள் :- விஜய் பிரகாஷ், ஜாவிட் அலி, சுனிதி சௌஹான்

ஹரிசின் இசையில் வரும் துள்ளல் காதல் பாடல்களின் வகையறா இது.. 
பா.விஜய் வார்த்தை சந்த , சிந்து விளையாட்டில் புகுந்து விளையாடி இருக்கிறார்.
முதல் வரியிலிருந்து சிலேடை, உவமை,, உருவகம் என்று இருக்கும் தமிழ் அணிகளைப் போட்டு, கலக்கி எடுத்திருக்கிறார்.

கதாநாயகி இலியானாவின் புகழ்பெற்ற இடையை வைத்தே ஆரம்பிக்கிறது பா.விஜயின் வார்த்தை விளையாட்டு....

இருக்காண்ணா
இடுப்பிருக்காண்ணா
இல்லையாண்ணா இலியானா 

ஒல்லி பெல்லி ஜெல்லி பெல்லி
மல்லி வாச மல்லி
உன் மேனி வெண்கல வெள்ளி

சொல்லி சொல்லி உன்ன அள்ளி
கிள்ளி கன்னம் கிள்ளி
விளையாட வந்தவன் கில்லி

கற்பனை சும்மா சிறகடிக்கிறது.. வழு வழு இடையை ஜெல்லி பெல்லி என்பதும், வாச மல்லியையும், மேனியின் வெண்கல வெள்ளி நிறத்தைக் கொண்டு வந்து சேர்ப்பதுமாகக் கவிஞர் ஜொலிக்கிறார்.

விஜய்க்காக கிள்ளிக்குப் பின்னதாக 'கில்லி' :)
இருக்காண்ணா , இலியானா என்று ஆரம்பித்து அதே ஓசை நயத்தோடு கலக்கலாக முடிவது அருமையான finishing touch.

இழைச்சானா குழைச்சானா- ரொம்ப
செதுக்கி செதுக்கி உழைச்சானா

நீ ஜெங்கிஸ்கானா
நீ உன் கிஸ் தானா
நான் மங்குஸ் தானா
உன் கையில் கஸகஸ்தானா..?? (இல்லை அது கசக்கத்தானாவா? ;))

விஜய் பிரகாஷ், ஜாவேத் அலியின் உற்சாகக் குரல்களுடன் சுனிதா சௌஹானின் கிரக்கும் குரலும் சேர்ந்து உற்சாக டோனிக் தருகிறது இந்தப் பாடல்.


4.ஹார்ட்டிலே பட்டறி 

எழுதியவர் :- நா.முத்துக்குமார்
பாடியவர்கள் :- ஹேமசந்திரன், முகேஷ்

வாரணம் ஆயிரம் - ஏத்தி ஏத்தி மெட்டும் ஹிந்தி 3 Idiots - All is well பாடலின் பாணியும் கலந்து கட்டி ஹரிஸ் தந்துள்ள mix இந்தப் பாடல்.

நா.முத்துக்குமாரின் உற்சாகம் தரும் இளமை வரிகள் ரசனை..
இளைஞர்களுக்கு உற்சாகம்.
வாழ்க்கையில் என்ன நடந்தாலும் கவலைப்படாதே ... எல்லாவற்றிலும் வாழ்க்கை உள்ளது என்று 'யூத்' தத்துவம் சொல்கிறது முத்துவின் முத்து வரிகள்.

தோல்வியா tension ஆ சொல்லிடு
All is well..
tight ஆகா lifey ஆனாலும்
லூசாக நீ மாறு

நான் எப்போதும் மனதுக்குள் வைத்துக்கொள்ளும் விதியை நா. முத்துக்குமார் பாடலிலே கொட்டித் தள்ளி இருபது மகிழ்ச்சி....

மூளையதான் மூட்டை கட்டு
follow your heart-u beat-u root-u
மனது சொல்வதை செய் :)

கொஞ்சம் யோசித்துக் குபீர் என்று சிரிக்க வைக்கும் வரிகளும் பாடலிலே உள்ளன..
பாத்ரூமுக்குள் பாம்பு வந்தால்
All is well
தேர்வில் வாங்கிய முட்டை நீட்டு
All is well

joker என்பதால் zero இல்லை
All is well
சீட்டு கட்டிலே நீ தான் hero

                                                                            Nanban
                                                                      

5.எந்தன் கண் முன்னே..

எழுதியவர் :- மதன் கார்க்கி
பாடியவர் :- ஆலாப் ராஜ்

காதலின் தவிப்பு + பிரிவு உணர்த்தும் ஒரு சிறு பாடல்....
ஆலாப் ராஜுவின் குரலில் தவிப்புடன் உணர்ச்சியும் சேர்ந்து மதன் கார்க்கியின் வரிகளின் வலிமை தொனிக்கிறது.

காதல் முன் காணாமல் போவதும், காதலி இல்லாமல் வீணாக ஆவதும் சின்ன வரிகளால் ஆனால் சுருக் என்று உணர்த்தப்படுவது ரசனை.

எந்தன் கண் முன்னே
கண் முன்னே
காணாமல் போனேனே!

யாரும் பார்க்காத
ஒரு விண்மீனாய்
வீணாய் நான் ஆனேனே!

இரு வரிகளில் தந்தையார் வைரமுத்துவின் 'காதல் ஓவியம்' பாடல் "சங்கீத ஜாதி முல்லை" யில் வரும் வரிகளையும் ஞாபகப்படுத்துகிறார்...
தந்தை வைரமுத்து - 
விழி இல்லை எனும்போது வழி கொடுத்தாய்.. 
விழி வந்த பின்னால் ஏன் சிறகொடித்தாய்..

மகன் மதன் கார்க்கி -
ஒளி கேட்கிறேன்
விழிகளை பறிக்கிறாய்

சந்தர்ப்பங்களும் கற்பனையும் வித்தியாசம்.. ஆனால் நிகர்க்கிறார் இளவல்.

பலரின் இரவுகளின் ஏகாந்தங்களுக்கு துணை வரப்போகும் பாடல்.


6.நல்ல நண்பன்...

எழுதியவர் :- நா.முத்துக்குமார்
பாடியவர் :- ராமகிருஷ்ணன் மூர்த்தி

மரணப்படுக்கையில் கிடக்கும் நண்பனை மீட்டுக்கொள்ளப் பாடும் பிராத்தனைப் பாடல்?
இரக்கம், இறைஞ்சல், சோகம் என்று கலவையுணர்வு கொட்டிக் கோர்த்த முத்துக்குமாரின் வரிகள்..

இசை எங்கேயோ கேட்ட ஹிந்தி பாடலின் இசை என்று நினைக்காதீர்கள். ஹிந்தியின் 3 Idiotsஇல் வரும் பாடல் ஒன்றே தான்.
புதிய பாடகர்(?) ராமகிருஷ்ணனின் குரலில் இழையோடும் சோகம் எம்மையும் அழுத்துகிறது.

 நல்ல நண்பன் வேண்டும் என்று
அந்த மரணமும் நினைகின்றதா..?

சோகத்தை அள்ளி இறைக்கும் வரிகள்.... ஆனாலும் இந்த சோகப் பாடலில் எதோ ஒன்று மிஸ் ஆவதாக மனம் சொல்கிறது. என்ன அது?

-----------------------

எங்கேயோ கேட்ட மெட்டுக்கள் என்ற ஹரிஸ் ஜெயராஜின் வழமையான ஒரே சிறு குறையைத் தாண்டி, ஒரு முழு நிறைவான இசைத் தொகுப்பைக் கேட்ட சுகம்...
முதல் மூன்று பாடல் வரிகள் எப்போதுமே மனசுக்குள் + உதடுகளில் மாறி மாறி.. 

ஷங்கரின் மீது முழுமையான நம்பிக்கை இருப்பதால் காட்சிகளாகவும் 'நண்பன்' பாடல்களை ரசிக்கலாம் என்று காத்திருக்கிறேன்.

நன்றி - பாடல் வரிகளை தேடி எடுக்க உதவிய தம்பி ஜனகனின் வலைப்பதிவுக்கு 
#Nanban

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner