இந்தியாவின் தோல்வியும் - சச்சினின் சாதனைச்சதமும் - எதிர்பார்த்ததே

ARV Loshan
21
நேற்று செஞ்சூரியன் Super Sport Parkஇல் தென்னாபிரிக்கா இந்தியாவை இன்னிங்சினால் தோற்கடித்தது எதிர்பார்த்ததே – எனினும் துவைத்தெடுக்கும் என்று எதிர்பார்த்தது இந்தியாவின் இரண்டாவது இன்னிங்ஸ் போராட்டத்தினால் இன்னிங்சினாலும் 25 ஓட்டங்களினாலுமே வென்றது தென்னாபிரிக்கா.

மழை முதல் நாளில் வெறும் 38 ஓவர்கள் மட்டுமே பந்துவீச அனுமதித்தும் கூட, இறுதிநாளின் 98 வீதமான நேரம் மீதியாக இருக்க தென் ஆபிரிக்கா இந்தியாவைத் தோற்கடித்துள்ளது.

விக்கிரமாதித்தன் இம்முறை விளையாட்டுக்காட்டவில்லை. முன்னைய எதிர்வுகூறலில் சொன்னது போலவே அத்தனையும் நடந்துள்ளன.
3வது நாளின் பின் ஆடுகளம் தனது வேகத்தையும் உயிர்ப்பையும் கொஞ்சம் இழந்ததனால் மட்டுமல்லாமல் இந்திய வீரர்கள் - குறிப்பாக சேவாக் + கம்பீர் – பின் தோனி ஆகியோரின் வேகமான அதிரடிகளாலும் தென்னாபிரிக்காவின் வெற்றி தாமதப்படுத்தப்பட்டது.

சேவாக் -  கம்பீரின் 2ம் இன்னிங்ஸில் காட்டிய பதிலடி வேகத்தை முதலாம் இன்னிங்ஸில் காட்டியிருந்தால் தென்னாபிரிக்கா கொஞ்சமாவது நிலை குலைந்திருக்கும். அடுத்த டெஸ்ட்டில் இந்த உபாயத்தைக் கையாண்டு பார்க்கலாம்.

லக்ஸ்மன், ரெய்னாவின் தடுமாற்றம் - தென்னாபிரிக்க வேகப்பந்துவீச்சாளர்கள் தங்கள் வேக, அதிவேக + பவுன்ஸ் பந்துகளால் முதலாம் இன்னிங்சில் இந்தியாவை முழுதும் உருட்டி எடுத்தார்கள். இரண்டாம் இன்னிங்சில் நான்கு பேரைத் தவிர ஏனைய அனைவருமே மாட்டிக்கொண்டார்கள்.

ஆனால் சதம் பெற்ற சச்சின் + அரைச்சதங்கள் அடித்த மூவரும் கூட, வேகம் + எகிறி எழும் பந்துகளால் தான் வீழ்த்தப்பட்டார்கள்.

இது தென்னாபிரிக்காவுக்கு அடுத்த டெஸ்ட்டுக்கு சொத்சொபேயை விட வேகமான ஒருவரை (பார்னெல்/மக்லாரென்/வேறுயாராவது) அழைக்கும் எண்ணத்தை ஏற்படுத்தலாம்.

மறுபக்கம் இந்தியாவின் பந்துவீச்சு – சஹீர்கானும் இல்லாமல் நொண்டியடித்தது. தென்னாபிரிக்க வீரர்கள் ஒவ்வொருவருமே தாம் விரும்பியபடி ஓட்டங்களைக் குவித்துவிட்டு பின்னர் ஆட்டமிழந்தனர். கலிசின் இரட்டைச்சதம், இரு சதங்கள், இரண்டு அரைச்சதங்கள் என்று துடுப்பெடுத்தாடிய அனைவருமே இந்தியப்பந்துவீச்சாளர்களை இலகுவாகக் கையாண்டார்கள்.

இவற்றில் கலிசின் இரட்டைச்சதம் - சச்சின் டெண்டுல்கரின் 50வது டெஸ்ட் சதம் போலலே முக்கியமானது – மைல்கல்லானது.

15 வருடங்களாக விளையாடிவரும் உலகின் மிகச் சிறந்த சகலதுறை வீரரின் முதலாவது இரட்டைச்சதம் இது. 36 வயதிலே தனது முதலாவது இரட்டைச்சதத்தை ஐக்ஸ் கலிஸ் பெற்றுள்ளார்.
அப்பாடா ஒருவாறாக ஒரு இரட்டை சதம்.. 

கலிஸின் பொறுமையான நிதானமான துடுப்பாட்டத்தின் பலாபலன்கள் தான் தென் ஆபிரிக்காவின் உறுதியான துடுப்பாட்ட வரிசை பல அணிகளுக்கும் சிம்ம சொப்பனமாக விளங்குவது. கலிசை மையப் படுத்தியே உலகின் மிக அச்சுறுத்தலான துடுப்பாட்ட வரிசைகளில் ஒன்று தென் ஆபிரிக்காவினால் கட்டிஎழுப்பபட்டுள்ளது.

ஆனாலும் இருநூறு ஓட்டங்கள் என்ற மெயில் கல்லைத் தாண்ட முடியாமல் கலிஸ் அடிக்கடி தடுக்கி வீழ்ந்துகொண்டே இருந்தார். இவருக்குப் பின் வந்த அம்லா,வில்லியர்ஸ் கூட இரட்டை சதம் பெற்றுள்ள நேரம், கலிஸின் இமாலய சாதனைகளுக்கு இப்போது இந்த இரட்டை சதம் மகுடம் சூட்டுவதாக அமைந்துள்ளது.

அவர் இந்த மைல் கல்லை எட்டும்வரை தாம் மிகுந்த பதற்றத்தோடு இருந்தததாக ஸ்மித் கூறுகிறார்.
ஒரு கட்டத்தில் சச்சின் டெண்டுல்கர் விளையாடும் நேரத்திலேயே அவரது சத சாதனையை ரிக்கி பொன்டிங் முறியடிப்பார் என நாம் நம்பியிருந்தோம். ஒரே சதம் இருவருக்கிடையில் வித்தியாசமாக இருந்தது. இப்போது சச்சின் 50 சதங்கள்,பொன்டிங் 39,கலிஸ் 38....

அதிலும் கலிஸின் இருநூறு ஓட்டங்கள் பெறப்பட்டதும் வேகமாகவே.. இது தென் ஆப்ரிக்கா இந்தியா மீது மேலும் அழுத்ங்களைப் பிரயோகிக்க ஏதுவாக அமைந்தது. பந்துவீச்சாளருக்குத் தாராளமாக நேரம் இருந்தது.

அம்லா இன்னொரு கலிஸ்.. கடந்த வருடத்திலிருந்து ஓட்டங்களைக் குவிக்கும் இயந்திரமாக தென் ஆபிரிக்காவுக்கு மாறியுள்ளார்.. ஒரு நாள்,டெஸ்ட் இரண்டிலும் ஓட்ட மழை பொழிகிறார்.

அடுத்த தென் ஆபிரிக்கத் தலைவர் என்றும் ஸ்மித்தின் செல்ல நண்பன் என்றும் வர்ணிக்கப்படும் டீ வில்லியர்ஸ வந்து நிகழ்த்தியது கொலை வெறித் தாண்டவம்.ஐந்து சிக்சர்களுடன்,அவ்வளவு நேரம் கொஞ்சம் ஆறுதலாக ஆடிவந்த கலிசையும் வேகமாக ஆட ஊக்கப் படுத்தி(கலிசும் ஐந்து சிக்சர்கள் அடித்தார்) இந்தியப் பந்துவீச்சாளர்களைப் பந்தாடினார்.

அம்லா - கலிஸ் இணைப்பாட்டம் 230 ஓட்டங்கள் - 52 ஓவர்களில்.
கலிஸ் - டீ வில்லியர்ஸ் இணைப்பாட்டம் 224 ஓட்டங்கள் - 38 ஓவர்களில்

டீ விலியர்சின் சதம் டெஸ்ட் போட்டியொன்றில் தென் ஆபிரிக்க வீரர் ஒருவர் பெற்ற வேகமான சதமாகும்.

 இந்தியாவின் இரண்டாம் இன்னிங்க்ஸின் முக்கிய இணைப்பாட்டமான சச்சின் - தோனி இணைப்பாட்டம் இவற்றுக்குக் கொஞ்சம் ஈடு கொடுப்பதாக அமைந்தது.ஆனாலும் இன்னும் அதிக ஓட்டங்கள் தேவைப்பட்டன..
41 ஓவர்களில் 177 ஓட்டங்கள்.

இந்தியாவின் அறிமுகப் பந்துவீச்சாளர் ஜெய்தேவ் உனட்கட் ஒரு சில பந்துகள் சிறப்பாக வீசினாலும் இன்னும் வளரவேண்டி இருக்கிறது. சாகீர் கான் காயத்திலிருந்து முற்றாகக் குணமடைந்துள்ளார் என்று சொல்லப்படுவதால் அவரது இரண்டாம் டெஸ்ட் போட்டிக்கான வருகை இந்தியாவை நிச்சயம் உற்சாகப்படுத்தும்.

இந்திய அணியின் இரண்டாம் இன்னிங்க்சில் தென் ஆபிரிக்கப் பந்துவீச்சாளர்கள் மிக சிரமப்பட்டுத் தான் விக்கெட்டுக்களை எடுக்கவேண்டி இருந்தது. ஆனாலும் இந்தியா அதிரடியாக ஆடியபோதும் 128 ஓவர்கள் சளைக்காமல் வியூகங்களை மாற்றி மாற்றி தென் ஆபிரிக்கா விக்கெட்டுக்களைக் குறிவைத்தது மெச்சத் தக்க ஒரு விடயம்.

முதலாம் இனிங்க்சில் 484 ஓட்டங்கள் பின்னிலையில் இருப்பதென்பது தரும் தாக்கம் வெற்றியைப் பற்றியோ, ஏன் சமநிலை பெறுவதைப் பற்றியோ கூட ச்நிதிக்க விடாது. இது ஓரளவு மனதை இலகுவாக்கின்ற விடயமும் கூட..
தலைக்கு மேலே பொய் விட்டது.. இனி சாண் என்ன முழம் என்ன என்ற நிலை தான்..

இதனால் தான் சேவாக்,கம்பீர் ஆகியோர் அதிரடியை ஆரம்பித்தார்கள். லக்ஸ்மன், சுரேஷ் ரெய்னா ஆகியோர் இன்னும் கொஞ்சம் நின்று பிடித்திருந்தால் இந்தியா குறைந்தபட்சம் இன்னிங்க்ஸ் தோல்வியையாவது தவிர்த்திருக்கலாம்.
 ரெய்னாவின் இடம் அடுத்த போட்டியுடனே மாற்றப்படுமா? அப்படியாக இருந்தால் யார்?
அடுத்த போட்டி வாய்ப்பு ரெய்னாவுக்கு வழங்கப்படாவிட்டால் என்னைப் பொறுத்தவரை முரளி விஜயை அணிக்குள் அழைப்பது பொருத்தமாக இருக்கும். புஜாராவை விட அனுபவமும், எழுகின்ற வேகப் பந்துகளையும் சந்திக்கும் ஆற்றல் விஜயிடம் இருக்கிறது.
லக்ஸ்மன் அனுவபத்தினால் அடுத்த போட்டியில் திருந்துவாரா பார்க்கலாம்.

சச்சின் - இன்னும் என்ன சொல்லவேண்டும் இவர் பற்றி?
என்ன சாதனை இவரிடம் இல்லை? இவரோடு போட்டிபோட்டு வந்த பொன்டிங்கின் இடம் ஆடிக் கொண்டிருக்கிறது. ஆனால் 21 ஆண்டுகள் விடாமல் ஆடிய களைப்பேதும் இல்லாமல் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பிலும் சதம் அடித்து அசரவைக்கிறார்.
சச்சின்+சதம் = அடிக்கடி பார்க்கும் காட்சி 

இவர் இந்த சூழ்நிலையில் சதம் அடித்து தனது மைல் கல்லை நிலைநாட்டியது ஆச்சரியமே இல்லாத விஷயம். சச்சினும் இதை ஒரு பெரிய சாதனையாக (பெருந்தன்மையுடன்) கருதவில்லை என்கிறார்.
ஆனால் 37 வயததைத் தாண்டிய ஒருவர் ஐம்பது டெஸ்ட் சதங்களைப் பெற்றும் 14500 ஓட்டங்களை டெஸ்ட் போட்டிகளில் பெற்றும் இன்னும் இளையவர்களை விடத் துடிப்போடு ஆடிக் கொண்டிருப்பதானது இமாலய சாதனை தானே?

சாதனைகள் மட்டுமே சச்சினின் இலக்கு என்ற விமர்சனங்களுக்கும் சச்சின் பதில் சொல்லி இருக்கிறார்
"சாதனைகள் படைப்பது மட்டுமே எனது இலக்காக இருந்திருந்தால் ஒருநாள் போட்டிகள் விளையாடுவதிலிருந்து எப்போதோ நின்றிருப்பேன்"

2009 இன் ஆரம்பத்திலிருந்து சச்சின் இருப்பது அசுர formஇல்.. 19 போட்டிகள், 30 இன்னிங்க்சில் 80.15 என்ற சராசரியில்
2084 ஓட்டங்கள். 9 சதங்கள்,8 அரைச் சதங்கள்.. கிரிக்கெட்டின் கடவுள் என்று சொல்வதில் தப்பே இல்லையே..

ஓய்வு பெற முதல்(ஓய்வு எப்போது என்று யாராவது கேட்பீங்களா?) இன்னும் எத்தனை சாதனைகள்+சதங்களோ?

ஆனால் தென் ஆபிரிக்காவில் வைத்து தொடரை விடுங்கள்,ஒரு டெஸ்டையாவது வெல்வதற்கு சச்சின் டெண்டுல்கரின் சிறப்பான தனியாட்டம் மட்டும் போதாது.
அணியில் மற்றத் துடுப்பாட்ட வீரர்களும் தாக்குப் பிடிக்கவேண்டும்.
தோனியின் 90 ஓட்டங்கள் முக்கியமானவை.ஆனாலும் ஒரு நாள் வேகத்தில் ஆடிய அவர் இன்னும் கொஞ்சம் நிதானம் காட்டி இருக்கவேண்டும். சச்சின் மேலும் குற்றம் இருக்கிறது.
தோனியுடன் ஆடும்போது அவர் பந்தை எதிர்கொள்வதற்கு வாய்ப்புக் கொடுத்தது பரவாயில்லை. ஆனால் தோனியின் விக்கெட் போனபிறகு ஏனைய மூன்று விக்கெட்டுக்களையும் இந்தியா துரிதமாக இழந்த நேரம் சச்சின் டெண்டுல்கர் strikeஐத் தான் எடுத்து பொறுப்புணர்வுடன் ஆடியிருக்க வேண்டும். இறுதி மூன்று வீரர்களுடன் சச்சின் புரிந்த இணைப்பாட்டம் வெறும் 59 பந்துகள்..
இதில் சச்சின் எதிர்கொண்டது 29 பந்துகளே.. இந்தியா இன்னும் 25 ஓட்டங்கள் எடுத்திருந்தால் இன்னிங்க்ஸ் தோல்வியைத் தவிர்த்திருக்கலாம்.

 இந்தியா நீண்ட காலமாகவே ஒரு டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில் தடுமாறியே வந்திருக்கிறது.. (உள்நாட்டிலும் கூட) அதே போல, போகப் போக இதுவும் சரியாகிவிடும் என்று இருந்துவிட முடியாது..
தென் ஆபிரிக்கர்கள் அசுரவெறியுடனும் வேகத்துடனும் இருக்கிறார்கள்.
ஸ்டேய்நும் மோர்க்கேலும் உருட்டி எடுத்து விடுவார்கள் போலத் தான் தெரிகிறது..

இன்னொரு முக்கிய விஷயம் - இந்தியா டெஸ்ட் தரப்படுத்தலில் தொடர்ந்தும் முதல் இடத்தில் இருக்கவேண்டுமாக இருந்தால் இந்தத் தொடரில் எஞ்சிய இரு போட்டிகளில் ஒன்றையாவது சமப்படுத்த வேண்டும்.
இப்போதிருக்கும் நிலையில் சாகீர்+சச்சின்+சேவாக் சேர்ந்து ஏதாவது அதிசயம் நிகழ்த்தினால் மட்டுமே இது சாத்தியம் எனத் தோன்றுகிறது.


Post a Comment

21Comments

Please Select Embedded Mode To show the Comment System.*