February 23, 2013

அமீரின் ஆதி - பகவன்



மௌனம் பேசியதே, ராம், பருத்திவீரன் எடுத்த அதே அமீரா இந்த அமீரின் ஆதி - பகவனை மூன்று வருஷமா முக்கி முக்கி எடுத்தார்?
இவரது முன்னைய படங்களிலேயே பல காட்சிகளும் கதாபாத்திரங்களும் ஆங்கிலப் படங்களில் பார்த்த மாதிரியே இருக்கு என்று அடித்து சொல்லிவந்தேன்.

ஆதி - பகவனிலோ அப்படியே அப்பட்டமான ஆங்கிலப் பாணிக் கதை உருவாக்கம் மட்டுமல்ல, பல ஆங்கில, ஹிந்திப் படங்களில் பார்க்கிற காட்சி மாற்றங்களும் கூட.

இயக்குனர் அமீரின் பாதை மாற்றம் யோகியில் நடிகராக ஆரம்பித்தது. இன்னும் அவர் பழைய தன் பாதைக்குப் போய்ச் சேரவில்லைப் போலும். இந்தப் படம் ஆரம்பிக்கும்போது முதல் தடவையாக கதாநாயகன் ஒருவரை முடிவு செய்துவிட்டுக் கதை தயார் செய்வதாக சொல்லியிருந்தார் அமீர்.
கதை, களம், பாத்திரங்கள் (கதாநாயகி உட்பட) என்று சகல விஷயங்களையும் ஒன்றுக்கு இரண்டு தடவை இயக்குனர் சரி பார்த்திருக்கலாம்.



ஆதி - பகவன் ---> பாங்காக் தாதா - மும்பை தாதா.
தமிழ் சினிமா ஆண்டாண்டு காலம் பார்த்து சலித்த ஆள்மாறாட்ட இரட்டை வேட, தாதா கதை.

களமும் அண்மைக்காலமாக பில்லா முதல் எல்லாப் படங்களிலும் விஷாலின் சமர் வரை பார்த்த தாய்லாந்தின் பாங்காக், மும்பை, ஆந்திரா என்று கொஞ்சம் பார்த்த பழைய நெடி.

அதனாலோ என்னவோ சமர் படத்தின் சில பாதிப்பையும் அமீரின் ஆதி - பகவனில் காணலாம். களம், காட்சிகள் & கதாநாயகி வரை.
இதனால் இரு படங்களுமே எங்கேயோ ஒரே இடத்திலிருந்து சுட்டவை என்பதையும் அமீர் காட்டிக் கொடுத்துவிடுகிறார்.

பஞ்சம் பிழைக்க பாங்காக் போகிற ஜெயம் ரவி தாதா ஆகிப் பணக்காரர் ஆகிறார். ஆனால் தாயார் (சுதா சந்திரன்) இவர் தீய வழியில் போவதால் கோபத்தோடு பிரிந்திருக்கிறார். காதல் வசப்படும் ரவி அதனாலேயே சதி வலையில் சிக்கி மும்பைக்குப் போய், மரண வலையில் மாட்டிக் கொள்கிறார். அப்புறம் தப்பித்துக் கொள்கிறாரா அல்லது கொல்லப்படுகிறாரா என்பதே கதை....

முதல் காட்சியில் ஆந்திராவில் நடத்தும் CBI Raid பரபரப்பு எம்மை நிமிர்ந்து உட்கார வைத்தாலும், அதன் பின் அம்மா செண்டிமெண்ட், அஜித் பாணி ரவியின் கோட்சூட் நடை, பளபள கார் பவனிகள், பணக்காரர், கடத்தல் காரர்  என்று காட்டுவதற்காக வைக்கப்பட்ட காட்சிகள் 'சப்ப்பா' என்ற நிலைக்குக் கொண்டு போய் விடுகின்றன.

நீது சந்திராவின் பின்னணியும் இடைவேளைக்கு முன்னதான திருப்பமும் கொஞ்சம் சுவாரசியம் தந்தாலும், பகவானின் அறிமுகம் அட இது தான் அந்த டுவிஸ்ட்டா என்று மீண்டும் கொட்டாவி...
அமீர் அய்யா, இப்படி நிறைய பார்த்திட்டோம் அய்யா...

தாதா வேடமும், மீசையும் கோட்டும் ஒட்டாமல் ஒரு ரவி, பல ஆண்டுகளுக்கு முன்னர் வந்த ஆங்கிலப்படமான The Silence of the Lambs இல் வரும் ஒரு சைக்கோ வில்லன் போன்ற பெண்மைத் தனம் கலந்த வில்லன் பாத்திரத்தில் ஓரளவு சிறப்பாக செய்திருக்கும் ஒரு ரவி.

தமிழுக்கு இந்தப் பாத்திரம் புதுசு.. அரவாணி போல ஒரு பாத்திரம்; ஆனால் பெண்கள் மீது மையல் பட்டு, பக்கத்திலேயே ஒருத்தி இருந்தாலும் பார்க்கும் பலரையும் படுக்கைக்கு அழைக்கிற தாதா.
சில காட்சிகளில் ஓவர் அக்டிங் ஆக இருந்தாலும், பல இடங்களில் ஜொலிக்கிறார்.

ஆனால் கதாநாயகி நீது சந்திரா. யாவரும் நலத்திலும், இன்னும் பல 'படங்களிலும்' பார்த்தவர். இவர் கதாநாயகியாக ஏனோ என்ற கேள்விக்கு சில காட்சிகள் - முக்கியமாக அந்த திமிர் நடையும், சண்டைக் காட்சிகளும் பதில் சொல்கின்றன.


முதல் பாதியில் ஏற்பட்ட தொய்வை இரண்டாம் பாதியில் சில பரபர காட்சிகள் மூலமாக ஈடுகட்டுகிறார் அமீர்.
ரவியின் நடிப்பும் நீது சந்திராவும் இதற்கு உதவியுள்ளார்கள்.
பெண்தன்மை மிக்க மும்பை தாதா பாத்திரம் பற்றிய செய்திகளையோ புகைப்படத்தையோ வெளியே விடாமல் வைத்திருந்த சஸ்பென்ஸ் இயக்குனர் அமீரின் ஒரு நல்ல யுக்தி தான்.

பகவானை பயங்கரமானவர் என்று காட்ட சில காட்சிகளை இயக்குனர் வைத்தது எல்லாம் சரி. ஆனால் சாவுக்கான காரணம் தெரிந்து தான் சாகவேண்டும் என்பதற்காக பல மணிநேரம் படுக்கைக்குக் கிட்ட இருந்தே கொல்வது எல்லாம் கொஞ்சம் ஓவர் தான்.

பகவான் பலருக்கும் பகையாளாக மாறிப்போக வரும் காட்சிகளும் அதற்கு யுவன் ஷங்கர் ராஜாவின் 'பகவான்' இசை + Rap பாடலும் கலக்கல்.

அமீரின் படமாக்கல் உத்திகள் தாய்லாந்தில் கொட்டாவி தந்தாலும் மும்பாய் காட்சிகளில் கலக்கல். கோவா பில்லா 2 ஐ ஞாபகப்படுத்துவதைத் தவிர்க்க முடியவில்லை.
ஆனால் ஒரு தமிழ்ப் படத்தில் இத்தனை வேறு மொழிகள் வந்ததும் Sub titles வந்ததும் கமலின் படங்களில் (விஸ்வரூபம் கூட ) கூடப் பார்த்ததில்லை.  சில இடங்களில் ஹிந்திக்காரனும் ஆந்திர தாதாவும் தமிழ் பேசுவான்; திடீரென தங்கள் மொழியில். கீழே Sub titles. இது தான் படத்தின் பெரிய குழப்பமாக படத்தோடு ஒட்டாமல் வைக்கிறது.

ஆர்.பி.குருதேவ்/ தேவராஜின் ஒளிப்பதிவு. படத்தொகுப்பு சில இடங்களில் சூப்பர் பல இடங்களில் சப்.

யுவன் ஷங்கர் ராஜா இதே மாதிரியான 'பில்லா' படங்களுக்கு பின்னணி இசையில் கலக்குவார் என்பது தெரிந்ததே. பாங்காக் தாதா நடக்கும்போது Gangster பாணி இசையும், பகவான் நடக்கும்போது ஹிந்துஸ்தானி இசையுடன் பகவான் நாமமும் சேர்ந்து ரசிக்கும்படி செய்திருக்கிறார்.

ஆனால் பாடல்கள் எவையுமே மனதில் நிற்கவில்லை. அதிலும் அறிவுமதியின் பாடல் ஒன்றை உதித் நாராயணனை வைத்து சிதைத்துள்ள விதம் மன்னிக்க முடியாதது. ஆதி-பகவனில் அறிவுமதியின் அருமையான வரிகளைக் கொலை செய்த உதித் நாராயணனை விட நம்ம நாட்டு ஜனாதிபதி நல்லா தமிழ் பேசியிருப்பாரே என்று ட்விட்டரில் புலம்பியிருந்தேன்.

தந்தை இளையராஜா தமிழ் உச்சரிப்பில் காட்டிய அக்கறையில் பத்து சதவீதம் கூட மகன் யுவன் தான் பாடும்போதும் காட்டுவதில்லை என்பது முக்கியமானது.


செண்டிமெண்ட் காட்சிகளில் உருக்கத்தையோ, அல்லது அப்பாவி தாதா அநியாயமாக அகப்பட்ட காட்சிகளில் அவர் மீது அனுதாபத்தையோ ஏற்படுத்துவதில் இயக்குனர் தவறிவிடுகிறார்.
தாய்ப்பாச நியாயம், தங்கைக்கான நியாயம் என்று பல இடங்களிலும் நிறைய ஓட்டைகள்.

அதைவிட இந்தப்படத்தைத் தடை செய்யச் சொல்லி & பெயர் மாற்றச் சொல்லி ஆர்ப்பாட்டங்கள் எல்லாம் என்னத்துக்காக? அந்த 'பகவான்' பெயருக்காகவா? சிரிப்புத் தான் வருகிறது.
A சான்றிதழ் சரி தான்.. குபீர் என்று பாயும் ரத்தமும், ஒவ்வொரு காட்சிகளிலும் கொலை விழும்போதும் பாய்கிற ரத்தமும் சரி தான் என்கின்றன.

கடைசிக் கட்ட சண்டைகளும் கொலைகளும் சில சைக்கோ ஸ்பானிய, ஆங்கில படங்களை ஞாபகப்படுத்தி நல்ல தாதா வாழ்வான் என்று முடிக்கிறார் அமீர்.

விட்டால் காணும் என்று மூச்சு விடுகிறோம் நாம்.

இன்னும் கொஞ்சம் நல்லா எடுத்திருக்கலாமே என்றும் தோன்றாவிட்டால் சராசரிக்கும் கீழே தானே. பாவம் ஜெயம் ரவி.
அவரும் நீது சந்திராவும் மட்டும் சிறப்பாக செய்தும் திரைக்கதை என்ற படகில் ஓட்டை விழுந்த பிறகு என்ன பயணம் எப்படிப் போக?

அமீரின் ஆதி - பகவன் - பாதி பகவன் 

February 22, 2013

கிளார்க்கின் புதிய ஆஸ்திரேலியாவால் முடியுமா?


கிரிக்கெட் பற்றி எழுதிக் கொஞ்சக் காலமாகிறது என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே சென்னையில் இன்று இந்திய - ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் ஆரம்பித்துவிட்டது.



கடந்த வருடத்தில் தான் தலைமை தாங்கிய 11 போட்டிகளில் 7 டெஸ்ட் போட்டிகளை வென்றுள்ள உற்சாகத்தோடு மைக்கேல் கிளார்க் அனுபவம் குறைவான, ஆனால் ஆற்றலுள்ள இளைய அணியோடு இந்தியா வந்துள்ளார்.
மறுபக்கம் இன்னுமொரு டெஸ்ட் தொடர் தோல்வி என்ன, ஒரு டெஸ்ட் தோல்வியே தலைமைப் பதவியைப் பறித்துவிடும் அபாயத்தோடும், அணியிலிருந்து தூக்கப்படும் அச்சத்தோடும் உள்ள சில வீரர்களோடு, ஆனால் சொந்த மண்ணின் அதிக அனுகூலங்களோடு இந்திய அணித்தலைவர் தோனி.
தோனி தான் கடந்த வருடத்தில் தலைமை தாங்கிய 8 போட்டிகளில் மூன்றில் மாத்திரமே வென்றிருந்தார். இங்கிலாந்துக்கு எதிரான தொடர் தோல்வியின் அழுத்தம் இத்தொடரில் பிரதிபலிக்கலாம்.

ஆனால் ஆஸ்திரேலிய அணியை விட இந்தியாவுக்கு சாதகத்தன்மை அதிகமாகவே இருக்கிறது என்பது உண்மை.
டெண்டுல்கர், நூறாவது போட்டியில் விளையாடும் ஹர்பஜன் சிங், சேவாக் ஆகிய மூவரும், ஆஸ்திரேலிய வீரர்கள் பலரை விட அதிக போட்டிகளில் விளையாடியுள்ள தோனி, இஷாந்த் ஷர்மா ஆகியோரையும், கிளார்க், வொட்சன் ஆகியோரை மட்டுமே அனுபவம் வாய்ந்த டெஸ்ட் வீரர்களாகக் கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணியோடு ஒப்பிட்டுப் பார்க்க முடியுமா?
அதிலும் 90 டெஸ்ட் போட்டிகளை விளையாடியுள்ள அணித்தலைவர் கிளார்க்குக்குப் பிறகு 39 டெஸ்ட்களில் விளையாடியுள்ள ஷேன் வொட்சன் தான் அதிக அனுபவம் வாய்ந்தவர்.

ஆஸ்திரேலிய வீரர்களில் எட்டுப் பேர் இதுவரை இந்திய மண்ணில் ஒரு டெஸ்ட்டில் தானும் விளையாடாதவர்கள்.

இது எல்லாவற்றையும் தாண்டி இந்திய - ஆஸ்திரேலிய டெஸ்ட் மோதல்கள் என்றால் இயல்பாகவே ஞாபகம் வரும் ஹெய்டன், ஹசி, பொன்டிங், கில்கிரிஸ்ட், மக்க்ரா, வோர்ன், லக்ஸ்மன், டிராவிட், கும்ப்ளே, கங்குலி என்று நட்சத்திரங்கள் பலரும் இல்லாமல் புதியவர்களுக்கான களமாக இந்தத் தொடர் இம்முறை அமைகிறது.

(சச்சின் டெண்டுல்கரும் சேவாகும் இருந்தும் கூட... சிலவேளைகளில் இருவருக்குமே இது இந்திய மண்ணில் இறுதித் தொடராகவோ, அவர்களது கிரிக்கெட் வாழ்க்கையின் இறுதித் தொடராகவோ அமையக் கூடிய வாய்ப்புக்களும் இருக்கிறது.. கூடவே ஹர்பஜனையும் சேர்த்துக்கொள்வோம்)
உள்ளூர் போட்டிகளில் சராசரிக்கும் குறைவாகவே பந்துவீசிய ஹர்பஜன் சிங், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அவரது முன்னைய சாதனைகளுக்காகவே (நூறாவது டெஸ்ட் போட்டி என்ற மைல் கல்லுக்காகவும்) அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

பதினைந்து வருடங்களுக்கு முன்பு ஹர்பஜனின் அறிமுகமும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராகவே இடம்பெற்றது.

நூறு டெஸ்ட் போட்டிகளைக் கடந்த பத்தாவது இந்திய வீரர் என்ற பெருமையை ஹர்பஜன் இன்று பெற்றுக்கொண்டார்.

நானூறு விக்கெட்டுக்களை எடுத்த பந்துவீச்சாளர்களில் மோசமானவர் என்று வர்ணிக்கப்படும் ஹர்பஜன் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடும்போது மட்டும் எப்போதுமே உக்கிர ரூபம் எடுப்பார். ஆனால் அண்மைய காலங்களில் ஹர்பஜனின் முன்னைய மாயாஜால வித்தைகள் தணிந்துவிட்டதாகவே தெரிகிறது.

அஷ்வின் இப்போது இந்தியாவின் முன்னணி சுழல் பந்துவீச்சாளர் என்ற ஸ்தானத்தைப் பெற்றிருந்தாலும், இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் பிரகாசித்த பிரக்யான் ஒஜாவுக்கு இன்று அணியில் இடம் வழங்கப்படாதது ஆச்சரியம் தான்.

ஹர்பஜனுக்கு நூறாவது டெஸ்ட் போட்டிக்கு இடம் கொடுத்தேயாகவேண்டும் என்ற நிலையில், சென்னையின் ஆடுகளத்தின் சுழற்சி பற்றி எல்லோருக்குமே தெரியும் என்ற அடிப்படையில் புவனேஷ் குமாருக்கு அறிமுகத்தை வழங்காமல் ஒஜாவையும் விளையாடவிட்டு ஆஸ்திரேலியாவை சுழலில் உருட்டி இருக்கலாம்.
அதுசரி, தொடர்ந்து ஓட்டங்களை கிடைக்கிற வாய்ப்புக்களில் எல்லாம் குவித்து வரும் அஜியன்கே ரஹானேவுக்கே இன்னும் வாய்ப்பில்லையாம்..

இன்னொரு சுவாரஸ்யம் போர்த்துக்கல் நாட்டில் பிறந்த மொய்செஸ் ஹென்றிகேஸ் இன்று அறிமுகமாகியிருக்கிறார்.
போர்த்துக்கல் நாட்டில் பிறந்து டெஸ்ட் வீரர் ஆகியிருக்கும் இரண்டாவது வீரர் இவராம்.

இலங்கையில் இடம்பெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணப் போட்டியின்போது ஆஸ்திரேலிய அணிக்கு இவர் தலைமை தாங்கியபோது நினைத்தேன் நிச்சயம் ஒருநாள் ஆஸ்திரேலிய அணிக்கு இவர் விளையாடுவார் என்று.
படிப்படியாக முன்னேறி டெஸ்ட் வரை வந்திருக்கிறார்; வாழ்த்துக்கள்.
இன்று பெற்ற அரைச்சதம் நல்ல ஆரம்பம்...

முன்பெல்லாம் இந்தியாவில் ஹர்பஜன் குழுவினரை எதிர்த்து சமராட ஹெய்டன் போராடும் அழகு ஒரு தனி ரசனை. அதன் பின்னர் தான் கிளார்க் & ஹசி.
இப்போது ஹெய்டன் மாதிரியே டேவிட் வோர்னர். அவரையே ஞாபகப்படுத்துகிறார். ஆனால் பெறுபேறுகளும் அப்படியே வருமா என்பது தான் முக்கிய கேள்வி.

ஆஸ்திரேலியா இத்தொடரை வெற்றி கொள்வதற்கு துடுப்பாட்ட ஆதிக்கம் தான் அதிகம் தேவைப்படும். அதற்கு இன்று ஆஸ்திரேலிய ஆரம்பத்தில் முயற்சித்தது போல கொஞ்சம் ஆக்ரோஷமாக ஆடவேண்டி இருக்கும்.

சுழல் பந்துவீச்சை எதிர்கொண்டு ஆடக் கூடிய கிளார்க், வொட்சன், வோர்னர் போன்ற சிலர் இன்னும் நின்று ஆடி பெரிய ஓட்ட எண்ணிக்கைகளை எடுத்தால் மட்டுமே ஆஸ்திரேலியா இந்தியாவுக்கு பெரிய அழுத்தங்களை வழங்க முடியும்.

சுழல் பந்துவீச்சுப் பக்கம் இந்திய அளவுக்கு ஈடுகொடுக்கக் கூடியதாக நேதன் லயோனும், பின்னர் விளையாடலாம் என எதிர்பார்க்கப்படும் டோஹெர்ட்டியும் இல்லாவிட்டாலும், சிடில், ஸ்டார்க், பட்டின்சன் ஆகியோர் இந்தியத் துடுப்பாட்ட வீரர்களுக்கு சவால் கொடுப்பார்கள் என்பது என் நம்பிக்கை.

காரணம் இங்கிலாந்தும் ஸ்வான், பனேசர் மூலமாக இந்தியாவைத் தடுமாற வைத்தாலும் அவர்களது வேகப் பந்துவீச்சாளர்கள் இந்தியாவின் துடுப்பாட்ட வீரர்களுக்குக் கொடுத்த அழுத்தங்களை விட ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர்கள் அதிக சிரமங்களை ஏற்படுத்தக் கூடியவர்கள்.

இந்தியாவின் துடுப்பாட்ட வீரர்களில் புஜாரா, கொஹ்லி ஆகியோர் தவிர ஏனைய அனைவருமே தங்களை நிரூபித்து ஆகவேண்டிய நிர்ப்பந்த நிலையில் இருக்கிறார்கள். இது ஆஸ்திரேலியாவுக்கு வாய்ப்பான ஒரு விடயம்.

இன்று சென்னையில் ஆரம்பித்துள்ள இத்தொடரில் முதல் நாளிலேயே மைக்கேல் கிளார்க் நாணய சுழற்சியில் வென்று ஆஸ்திரேலியாவுக்காக முதலாவது காயை சரியாக நகர்த்தி, ஆரம்பத் துடுப்பாட்டம் சிறப்பாக அமைந்தாலும், சென்னைப் பையன் அஷ்வின் இதுவரை வீழ்த்திய 6 விக்கெட்டுக்களால் இந்தியாவுக்கு நிமிர்வைக் கொடுத்திருக்கிறார்.

இன்னொரு தமிழக வீரரான முரளி விஜய்க்கும் நீண்ட காலத்தின் பின் கிடைத்துள்ள வாய்ப்பை சரியாக அவர் பயன்படுத்திக்கொள்வார் என்றும் நம்புகிறேன்.

சேவாக் ஏற்கெனவே தவறவிட்ட ஒரு பிடி போலவே துடுப்பாட்டமும் சொதப்பினால் ஷீக்கார் தவானின் அறிமுகத்தை அடுத்த டெஸ்ட்டில் எதிர்பார்க்கலாம்.

கடந்த 28 வருடங்களில் இந்தியா சென்னையில் பாகிஸ்தானிடம் தோற்ற ஒரேயொரு போட்டியைத் தவிர, இதுவரை தோல்வியே காணாத வரலாற்றை மைக்கேல் கிளார்க்கின் 'புதிய' & 'இளைய' அணி மாற்றியமைக்குமா என்ற எதிர்பார்ப்போடு காத்திருக்கிறேன்.

இதை எழுதி முடிக்கிற நேரம் கிளார்க் ஏழாயிரம் டெஸ்ட் ஓட்டங்களைப் பூர்த்தி செய்துள்ளதோடு, அருமையான தலைமைத்துவ சதத்துடன் தொடரை நம்பிக்கையோடு ஆரம்பித்துள்ளார்;
ஆனால் இன்றைய நாளின் நாயகன் அஷ்வின் தான்.. ஆறு விக்கெட்டுக்கள்.

முதல்நாள் ஆட்டமும் முடிவுக்கு வருகிறது


February 13, 2013

விஸ்வரூபம்



இதோ இதோ என்று காத்திருந்து, திருட்டு DVD வந்தும் அதில் பார்க்க விரும்பாமல் நேற்று வந்தவுடன் திரையரங்கில் சென்று விஸ்வரூபம் பார்த்துவிட்டேன்.

இதில் கமல் ரசிகன் என்பதோ, இல்லாவிட்டால் First day First Show பைத்தியம் என்பதோ இல்லாமல் அடக்கி வைக்கப்பட்ட ஒரு படைப்பில் அப்படியென்ன ரகசியம் இருக்கப் போகிறது என்பதே எனது மிகப்பெரும் கேள்வியாக மனதுள் இருந்தது.

படம் பார்த்த கொட்டாஞ்சேனை சினி வேர்ல்டில் படம் காண்பிக்கப்படுகிறது என்று தெரியாததாலோ, அல்லது வழமையான 'புலி வருது' என்ற வதந்தி என்று நினைத்தோ படம் ஆரம்பித்த 6.30 வரை பெரிதாகக் கூட்டமில்லை.
ஏதாவது அசம்பாவிதங்கள் நேர்ந்தாலும் என்ற முன்ஜாக்கிரதைக்கு ஒரு போலீஸ் ஜீப்பில் சில போலீசார் வெளியே (படம் முடிந்ததும் அவர்களிடம் பேச்சுக் கொடுத்துப் பார்த்தேன்); முக்கால்வாசி நிறைந்த இரண்டாம் காட்சி; சில முஸ்லிம் குடும்பத்தாரும் எங்கள் கூட (சொல்வதற்கான காரணம் பிரித்துப்பார்க்க இல்லை என்பதை நண்பர்கள் புரிக).

தணிக்கை சான்றிதழுக்கும் கூட ரசிகர்கள் கை தட்டி வரவேற்கும் அளவுக்கு விஸ்வரூபம் காத்திருக்க வைத்துள்ளது.
முதலில் சில விஷயங்கள்....

இந்தப் படத்திற்குத் தடை கோரும் அளவுக்கு கமல் முஸ்லிம்களை அவ்வளவு கேவலமாகக் காட்டிவிட்டார் என்றோ, அமெரிக்கர்களை 'மனிதாபிமானிகளாக' காட்டிவிட்டார் என்றோ, ஒஸ்கார் கனவுகளுக்காக அப்பாவிகளின் உணர்வுகளைப் புண்படுத்திவிட்டார் என்றோ, வேண்டுமென்றே கமல் விஷ விதைகளைத் தூவி இருக்கிறார் என்றோ இதுவரை படம் பார்க்காதவர்களும், அரைகுறையாய் பார்த்தவர்களும், மற்றவர்கள் பார்த்து சொன்னதையும், எழுதியதையும் வைத்து ஊகித்துப் புரளி கிளப்பியவர்களும், அவசரமாகப் பார்த்து அவதியாக விமர்சனம் என்று ஏதாவது சொல்லவேண்டுமே என்றோ, வித்தியாசமாகத் தெரியவேண்டும் என்றோ விஸ்வரூபம் DVD என நினைத்து வேறு படம் பார்த்தவர்களும் இதுவரை சொன்னதை நம்பிய நீங்கள்/ உங்களில் பலர் தயவு செய்து திரையரங்கில் இதைப் பாருங்கள்.

இலங்கைத் தணிக்கைக் குழு இரண்டு காட்சிகளையே நீக்கியதாக அறிந்தேன்; இனி நானும் துண்டாடப்படாத 'முழுமையான' விஸ்வரூபத்தை எங்காவது தரவிறக்கிப் பார்க்கவேண்டும்.

தலிபான்களின் போராட்டம் - ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அமெரிக்கப் படைகளை எதிர்த்துப் போராடும் அவர்களது வாழ்க்கையில் அப்பாவி மக்கள் மற்றும் சிறுவரின் அன்றாட வாழ்க்கைப் போராட்டங்கள், தலிபான்களின் அமேரிக்கா மீதான வன்மைக்கான பின்னணி மற்றும் ஜிஹாதிகள் என்று சொல்லப்படும் தற்கொலைப்போராளிகள் தங்களை மாய்த்துக்கொண்டு அமெரிக்கர்களை எதிர்க்க என்ன காரணம் என்பது சொல்லப்படுகிறது.

இந்தியப் பக்கமோ, இந்திய முஸ்லிம்கள் பக்கமோ கதை எட்டிக் கூடப் பார்க்கவில்லை என்பது நிஜம்.

தலிபான்கள் நிச்சயமாக இஸ்லாம் மார்க்க வயப்பட்டவர்கள் என்ற அடிப்படையில் அவர்களின் தண்டனைகள், அவர்களின் யுத்தம், செயல்கள், யுத்தம் எல்லாவற்றுக்கு முன்னதான இறை வழிபாடு காட்டப்படுகிறது. இது வழக்கமானது தான் என்று நண்பர்கள் ஏற்றும் கொண்டார்கள்.
தணிக்கை செய்யப்பட்ட காட்சிகளில் இதைவிட புண்படுத்துகிற விடயங்கள் அப்படி என்ன இருந்திருக்கக் கூடும் என்று பின்னர் ஆராயலாம்.

அமெரிக்கப் பக்கம் இருந்து தன்னிச்சையாக கமல் தலிபான்களை மோசமாகக் காட்டிவிட்டார் என்று சொன்னவர்கள் படம் பார்த்த பிறகு என்ன சொல்லப் போகிறார்கள்?
நுனிப்புல் மேய்ந்தவர்கள் பாடு இனி அந்தரம் தான்.

உதாரணமாக,
'அமெரிக்காவின் இராணுவம் பெண்களையும், குழந்தைகளையும் கொல்லாது' என்று கமல் வசனம் எழுதிவிட்டதாக சொல்லப்பட்டு அது கமல் அமெரிக்காவுக்கே வாளி வைத்துவிட்டதாக படு வேகமாகப் பரப்பப்பட்டது.
ஆனால் அந்த வசனத்தைக் கவனித்தவர்கள் அந்தக் காட்சியையும் பின்னணியையும் உள்ளார்ந்த அர்த்தத்தையும் சரியாக உணர்ந்து கவனிக்கவில்லை என்பதில் எனக்கு மிகப்பெரிய சிரிப்பு.

முல்லா ஓமர் சொல்வதாகத் தான் அந்த வசனம் வரும். அடுத்த நொடியே அவரின் குடும்பம் நின்றிருந்த வீட்டின் மீது அமெரிக்க ஹெலி குண்டு வீசி நிர்மூலமாக்கும். முல்லா 'Ba-----' என்ற தூசணத்தை உதிர்ப்பார்.
இந்தக் குறியீடு (இது குறியீடே இல்லையா?) புரியவில்லை போலும் அவர்களுக்கு.

இதை வைத்துத் தான் 'மனிதாபிமானியான' கமல் அமெரிக்கர்களை மனிதாபிமானிகளாகக் காட்ட முயன்றுள்ளார் என்று பலர் சொல்கிறார்களா?

அதே போல அமெரிக்க - இந்திய ராஜதந்திர உறவுகளுக்கான (தீவிரவாத எதிர்ப்பு + அழிப்பு) பாதை , இடையிலுள்ள  சிக்கல்கள் பற்றி FBI விசாரணைக் காட்சிகளில் காட்டுகிறார்.

இயக்குனராக கமல் தன்னை அளந்து பயன்படுத்தியிருக்கும் மற்றொரு விடயம் - ஹேராம் படத்தில் கதை சொல்லலில் இருந்த குழப்பம், விருமாண்டியில் கதை முன், பின் என்று பயணிப்பதில் வந்த மயக்கம் ஆகியவற்றை இங்கே விடவில்லை. அத்துடன் தீவிரவாதப் பாதையை எடுத்தவருக்கும் அழுத்தமான பின்னணியை ஆப்கானிஸ்தான் காட்சிகளில் கொடுத்திருப்பது.

இந்தப் படத்தைத் தடை செய்யவேண்டும் என்று (பார்க்காமலே & பார்த்தும்) எதிர்த்தவர்கள் ஆப்கானிஸ்தான் காட்சிகளில் ஒவ்வொரு காட்சியிலும் குறியீடாகவும், அழுத்தமான தெளிவாகவும் அவர் அந்த மக்கள் சார்பாக, தலிபான் போராளிகள் சார்பாகவும் முன் வைக்கின்ற நியாயங்களும், பின்னணிகளும் புரிந்துகொள்ள முடியாத அளவுக்கா இருக்கின்றன?
எனக்கு அந்தப் 'புத்திஜீவிகளை' புரிந்துகொள்ள முடியவில்லை.

ஆனால் ஒரேயடியாக கமல் ஒரு தூய கலைப்படைப்பாளி; எந்த ஒரு அரசியலையும் விஸ்வரூபத்தில் அவர் வைக்கவில்லை என்று ஒரு கமல் வக்காலத்தாக நான் நிற்கமாட்டேன்.

மேலேயுள்ள விஷயங்கள், பூதாகாரப்படுத்தப்பட்ட விஷயங்களில் தான் அரசியல், விஷ விஷமங்கள் இல்லை என்கிறேன்.

கமல் வைத்துள்ள குறியீட்டு, உள்ளார்ந்த, தத்துவார்த்த அரசியலைப் புரிந்துகொள்ள நாங்கள் ஒன்றும் உலகத் தரத் திரைப்படங்களைப் பார்த்திருக்கவேண்டிய தேவையோ, உலக இலக்கியங்களை வாசித்திருக்கவேண்டிய தேவையோ அடையவேண்டியதில்லை.

கமலின் திரைப்படங்களைத் தொடர்ந்து பார்த்தவராகவும், சமகால நடப்புக்களை அறிந்து வைத்திருப்பராகவும், இந்தப் படத்தின் வசங்களைக் கூர்ந்து அவதானிப்பராகவும், காட்சிகளின் சிறுசிறு நகர்வையும் அறிந்துகொள்பவராகவும் இருந்தாலே போதும்.

படத்தின் பெயர் முதலில் காட்சியில் எழுதப்படும் விதத்தையும், முடிவில் எழுதப்படும் விதத்தில் ஆரம்பிக்கிறது இந்த மறைமுக விளையாட்டு.
அதே போல ஆங்கிலத்தில் விஸ்வரூபம் என்பதில் 'War' என்ற எழுத்துக்களுக்கு இருக்கும் அழுத்தத்தையும் அவதானியுங்கள்.
இன்னும் சில என் அறிவுக்கு எட்டிய அவதானிப்புக்களைக் கீழே தருகிறேன்.
இதை விட அதிகம் கூர்ந்து, பகுத்து அறிபவர்களுக்கு என் தலை தாழ்ந்த வணக்கங்கள். (எனக்கும் அறியத் தாருங்கள்)

ஒரு சினிமா ரசிகனாக, அதற்குப் பின் கமல் ரசிகனாக எனக்கு மிகப் பிடித்த படம் என்ற வரிசையில் முதல் பத்தில் இந்தப் படம் வராது.
ஆனால் என்னை வியக்க வைத்த, ரசிக்க வைத்த, வசனம் மற்றும் குறியீட்டுக் காட்சிகளால் அசரவைத்த வெகு சில திரைப்படங்களில் ஒன்று என்பேன்.

நடிகன் கமலை விட வசனகர்த்தா + இயக்குனர் கமல் தான் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறார்.

நடிகர் தேர்வு முதல், களத் தேர்வு, காட்சிகளின் கோர்வை ஆகியவற்றை எந்த ஒரு பிசகும் இல்லாமல் செதுக்கியிருப்பது உலகத் தரம் தான்.
ஆனால் திரைக்கதைத் தொய்வு சில இடங்களில் இருப்பதை ஏற்கத் தான் வேண்டும்.
அதை இல்லாமல் செய்கிறது ஒளிப்பதிவின் அசைத்தலும், இசையின் பிரம்மாண்டமும், கலை இயக்குனரின் நேர்த்தியும்.
இயக்குனர் கமல்ஹாசன்  இருத்தி, எழுப்பி வேலை வாங்கியிருக்கிறார். (இதற்காகத் தானோ அவர் தேடித் தேடி தன் சொல்லுக்கு ஆடும் இளைய பொம்மைகளைத் தேடி எடுக்கிறார்?)

இயக்குனரின் டச் தெரியும் இடங்களில் முதலாவது நடனப் பாடலே அசத்தி விடுகிறது.
அத்தனை பாடல்களையும் கதை சொல்லியாகவே பயன்படுத்தியுள்ள கமல், தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ள அதிரடியான பாடலைக் கொண்டு வராமல், பெண் தன்மையின் நளினத்துடனான பாடலைத் தந்து, அதிலே தனது உலகத் தர நடிப்பையும், உடலசைவையும், வேறெவரும் ஈடாக முடியாத பாவங்களையும் தந்து கலக்கி விடுகிறார்.
வார்த்தைகளுக்குப் பஞ்சம் மேலதிகமாக சொல்ல.
Hats Off Legend.

ஆனால் பில்ட் அப் பாடலை தனக்கான கதாநாயகத் தன்மைப் பாடல் (நிஜத்தில் சந்தித்த சவால்களுக்குப் பதிலடியாகக் கூட) என்று பட்டும் படாமலும் 'யாரென்று தெரிகிறதா' பாடலைக் கொண்டு வந்து பொருத்தும் இடம் எவரையும் மெச்ச வைக்கும்.

கமல் இயக்கிய அல்லது நடித்த படங்களில் நான் ரசித்த அந்த குறுகிய வசனங்களிநூடு பாத்திரங்களின் தன்மையை வெளிப்படுத்தும் நுட்பமும் சமயோசிதமும், முதலாவது காட்சியிலிருந்தே மனதை அள்ளுகிறது.
எனது அதிர்ஷ்டம் என்னுடன் கூட இருந்து பார்த்த அத்தனை ரசிகரும் அதிகளவு ஆர்ப்பாட்டம் பண்ணாமல் வசனங்களை ரசித்தனர்.

வெண்புறா ஒன்றோடு கதை சொல்ல ஆரம்பித்து, பூஜா குமாரை இணைத்து அறிமுகப்படுத்தும் இடமே போதும் இந்தப்படத்தின் கதை சொல்லல் குறியீட்டுக்கு பிரதானமும், சம்பவக் கோர்வைகளுக்கும் பாத்திரங்களுக்கும் சரியான இடமும் வரப்போகிறது என்பதைக் காட்ட.

(சாதாரண ரசிகனுக்கு இது ஒரு Action, Thriller, தீவிரவாத ஒழிப்பு மசாலா படம் ஆனால் கொஞ்சம் புத்திசாலித்தனமாக எடுக்கப்பட்டுள்ளது)

மனோவியல் வைத்தியருடன் பேசும் பெண், "படுத்துண்டே படிக்கிறது பிடிக்காதுன்னு அவா கிட்ட சொல்லிட்டேன்" என்னும் வசனம் பின்னர் தன் கணவர் யார் என்ற பின்னணி தெரியாமலே வாழ்ந்தவள் என்ற மர்மத்தை உடைக்க எங்களுக்கு உதவுகிறது.
ஆரம்ப பிராமண பாஷையில் அந்த 'பாப்பாத்தி' என்ற சொல்லுக்கும், மாமிசம் உண்ணச் செய்வதற்கும், தன் பிராமண மனைவி இன்னொருவனுடன் தொடர்பு என்று கதை வைத்ததற்கும் இந்தியாவின் பிராமண குலம் அல்லவா தடை கோரி பொங்கியிருக்கவேண்டும்?

கட்டிவைத்து வில்லன்கள் கொடுமைப்படுத்தும் காட்சியிலும் வசனங்கள், தன்னை வெளிப்படுத்தும் இடங்கள், "பாத்திரத்தோடு ஒன்றிட்டேனோ இல்லையோ" என்று கமல் சொல்லும் இடங்களில் கமெராக் கோணங்களும் ஒவ்வொரு நடிகரதும் அசைவுகளும் கலக்கல்.

விஸ்வநாதன் யார் என்று மாறும் காட்சி தான் எங்களை ஆசன நுனிக்குக் கொண்டுவந்து 'விஸ்வரூபத்தின்' அர்த்தத்தை வெளிப்படுத்துகிறது.
விஸ்வநாதன், விஸ், விசாம் என்று மிக நுணுக்கமாக விளையாடியிருக்கும் கமல், கஷ்மீரி என்று பெயரின் பின்பாதியில் சொல்ல வந்த விடயம் இனி எத்தனை பேரால் விவாதிக்கப்படும் எனப் பார்க்கலாம்.

Name meaning of Wisam - Badge of honour, Badge, Logo, like coat of Arms



'அல் கைதாவுக்கே பயிற்சியளித்தவன்' என்ற வசனத்தோடு கதை ஆப்கானிஸ்தானுக்குப் பறக்க, அங்கே கலை இயக்குனர் லால்குடி இளையராஜா கலக்குகிறார்.

மலையடிவாரம், குகைகளாக வீடுகள், பதுங்கு குழிகள், தொங்கிக் கொண்டிருக்கும் பிணங்கள், கட்டட சிதிலங்கள் என்று பார்த்து பார்த்து செய்திருக்கிறார்.
அல் ஜசீராவிலும், CNN, BBCஇலும் பார்ப்பதை நேரில் கொண்டுவந்திருப்பது நேர்த்தியான ஒரு பணி.
 பாராட்டுக்கள்.

அதேபோல Green Screen technology யும் இந்தக் காட்சிகளில் மிக நுணுக்கமாகவும், தெரியாத வகையிலும் பயன்படுத்தப்பட்டிருப்பது கலக்கல்.

விசாம் காஷ்மீரியாக அறிமுகமாகும் காட்சியிலிருந்து ஒவ்வொரு வசனமும், வந்து சேரும் ஒவ்வொரு பாத்திரமும், ஆப்கன் - தலிபான் - அமெரிக்க யுத்த கள சூழலையும், அந்த மக்களின் வாழ்க்கையின் வேதனையையும் நேரடியாகவும், குறியீடுகளாகவும் சொல்கின்றன.

துப்பாக்கி எங்கள் தோள்களில், அணு விதைத்த பூமியில் பாடல்கள் அழுத்தமாகக் காட்சிகளோடு பயணிக்கின்றன.

இளம் ஜிஹாதி என்று அறிமுகப்படுத்தப்படும் சிறுவன் தன்னை ஊஞ்சல் ஆட்டுமாறு கேட்டு பரவசமடையும் காட்சி எங்களுக்கும் அப்படியொன்று புதுசல்ல.
குண்டுகள் எந்த நேரமும் விழலாம்; எங்கள் வாழ்வு இதுக்கு இடையில் தான் என்ற அந்த சூழலும் எங்களுக்குப் பழகியதே.
இதைக் கமல் காட்சிப்படுத்துகையில் களமும் அந்த மண்ணின் நிறமும் வித்தியாசம் என்றாலும் மனித மனங்களை வாசிக்க முடிகிறது.
இது தானே அந்த சூழல்? சிறுவர் போராளிகள் இருகிறார்களே? இதில் என்ன எதிர்ப்பு வேண்டி இருக்கிறது?

ஓமரின் மனைவி மகன் சம்பந்தப்பட்ட காட்சிகளும், பெண் வைத்தியரை ஓமர் துரத்தும் காட்சியும் அங்கே நடக்கின்ற விடயங்கள் தான்.

சவூதி ஷேக்கின் வீட்டுக் காட்சி இன்னொரு அரசியல் சாணக்கியத்துவம். ஆப்கானிஸ்தானுக்குள் யார் யார் எப்படி, என்ன என்ன என்று மிக நுணுக்கமாக இயக்குனர் கமல் காட்டுகிறார்.
"இவர் ஜிஹாதி அல்ல ஆனாலும் இவர் எங்களுக்குத் தேவை" என்று சவூதி அரேபியரைக் காட்டும் இடம் ஒரு சான்று.
அரேபியர் அபின் கொடுத்துவிட்டார் என்று பொங்கி எழுந்த சிலருக்கு நாசர் சொல்லும் வசனம் ஜிஹாதிகளின் புனிதம் பற்றி சொல்கிறது.
"என் போராளிகளுக்கு அபினை பழக்காதே"

ஒசாமா பின் லேடன் காட்டப்படும் காட்சியிலும் கூட மிக நாசூக்காக கமல் சில விஷயங்கள் சொல்கிறார்.
விசாம் - இவர் ISIக்கு வேலை செய்கிறாரா?
போராளி - இல்லை காசுக்கு. யார் குடுத்தாலும் அவருக்கு.

அமெரிக்க விமானங்கள் குண்டு போடும் காட்சிகளின் பிரம்மாண்டமும், தத்ரூபமும், அந்த அக்ஷன் காட்சிகளில் காட்டியுள்ள சிரத்தையும் தமிழ் சினிமாவுக்கு புதுசு. அப்படியொரு விஸ்வரூபம்.

தலிபான்கள் தண்டனை கொடுக்கும் காட்சியில் ஒவ்வொரு தரப்பாக கமெரா காட்டிவருவது இன்னொரு புது யுக்தி.

ஆனால் இயக்குநராகக் கமல் கோட்டை விடும் இடங்கள் என்று நான் நினைப்பது சில காட்சிகளையே தான்...
வழமையான படங்களில் (தமிழில் மட்டுமல்ல) வருவது போலவே விசாம் ஜிஹாதிகளுக்குள் நுழைந்த ஒரு உளவாளி/ கையாள் என்பதை இலகுவாக ஊகித்துக்கொள்ளக் கூடியதாக இருக்கையில் ஓமர் மற்றும்  குழுவினர் நம்பிவிடுவது.

அடுத்து படுமோசமாகக் காயப்படும் ஓமர் அமெரிக்காவுக்குள் அவ்வளவு இலகுவாக நுழைகிறார் என்பதும் இன்னொரு கேள்விக்குரிய விடயமாகி விடுகிறது.


ஆனால் இரண்டாம்பாதியின் வேகம் சற்றுக் குறைய, அதை ஈடுகட்ட வசனங்களின் நறுக்கிலும், வழமையான கமல் பாணி நக்கல்களிலும் கதை நகர்கிறது.
FBI விசாரணைக் களம், பூஜா குமாருக்கு தம்மைப் பற்றி கமல், அன்ட்றியா கூறும் இடங்களில் வசனங்களை ரசிக்கலாம்.
நறுக்குத் தெறித்த வசனங்கள் கதையோட்டத்தை இலகுபடுத்தவும், ஒரு வசனத்தையும் தவறவிடக் கூடாது என்பதயும் உறுதி செய்கின்றன.

சானு வர்கீசின் ஒளிப்பதிவும், மகேஷ் நாராயணனின் படத் தொகுப்பும் ஆற்றியிருக்கும் பங்களிப்பு கலக்கல்.
ஆப்கன் சண்டை முதல் அமெரிக்க கார் துரத்தல் வரை பின்னி எடுத்துள்ளார்கள்.
ஷங்கர்-எஹ்சான்-லொஆய் கூட்டணி கமலுக்குத் தேவையானதைக் கொடுத்துள்ளார்கள்.
இலங்கையில் துல்லிய ஒலித்தேளிவுடன் விஸ்வரூபத்தை இன்னும் விஸ்வரூபமாகப் பார்க்க விரும்பினால் என் சிபாரிசு சினி வேர்ல்ட் தான். அற்புத ஒலியமைப்பு.

சீசியம், கதிரியக்கம், புறா என்று கதை பரவினாலும், Butterfly theory என்பதையும் முன்னைய காட்சிகளின் விளக்கத்தையும் தொடர்ச்சியையும் காட்டி அசத்துகிறார் இயக்குனர்.

இது தான் கமலுக்கும் மற்ற இயக்குனர்களுக்கும் இடையில் இருக்கும் வித்தியாசமாக நான் உணர்வது.
ஹேராமில் எங்களைக் குழப்பியபோது நாம் குழம்பி இப்போது தெளிவு பெற்று கமலை மெச்சுகிறோம் என்றால் ஒன்றில் கமல் எங்களைத் தெளிவுபடுத்தியுள்ளார்; அல்லது நாம் கமல் படங்களைப் பார்க்கப் பழகிவிட்டோம்.

கமலே மைக்ரோவேவ் அடுப்பு முதல் ஏவுகணை, அணு குண்டு வரை வியாபித்து இருப்பதால் மற்ற நடிகர்கள் அந்த விஸ்வரூபத்துக்குள் அகப்பட்டுப் போனாலும், அவர்களும் தனித்துத் தெரிய இயக்குனர் கமல் காட்சிகள் கொடுக்கிறார்.

ராகுல் போஸ் - ஒரு தேர்ந்த நடிகராக ஹிந்தியில் பார்த்துள்ளேன். இதிலே முதலில் அதிகம் பேசியும் பின்னர் பேசாமலேயும் கலக்குகிறார். உடல் அசைவுகள் பிரமாதம்.
சேகர் கபூர் - இந்த இயக்குனரின் நடிப்பு பற்றி சொல்லவும் வேண்டுமா? அலட்டல் இல்லாத நடிப்பு.

பூஜா குமார், அண்ட்ரியா இருவரும் இருந்தாலும் ஊறுகாயாகத் தொட்டுக் கொள்ளாமல், நடிக்கவும் கலக்கவும், காட்சிகளினை நகர்த்தவும் சமயோசிதமாகக் கையாண்டுள்ளார்.

பூஜாவை கதாநாயகி ஆக்கியது எதற்காக என்பது சில காட்சிகளிலேயே புரிகிறது. தேவையான அசைவுகள், தேவையான ஆடைகள் என்று கமலின் எண்ணத்தைப் பொய்யாக்கவில்லை. இவரது அமெரிக்கத் தாக்கம் உடைய பிராமணத் தமிழ் (தமிழும்) அழகு.
ஆங்கில நடிகர்களையும், பெயர் அறியாத ஆப்கானிய (எந்த நாடோ அறியேன்) நடிகர்களையும் நடிக்க வைத்திருப்பது ஒரு இலகுவான விடயம் அல்ல.

கமல் இயக்குனராக மீண்டும் - ஆனால் இம்முறை மிக பிரம்மாண்டமாக ஜெயித்துள்ளார்.

சில விஷயங்களுக்காகக் காத்திருப்பதில் பூரண திருப்தியும் அர்த்தமும் இருக்குமே... அதை விஸ்வரூபத்தில் உணர்ந்தேன்.

தன முன்னைய படங்களில் கமல் கடவுளையும் சமயத்தையும் நக்கல் பண்ணும் இடங்கள் இதில் ஏனோ மிக அரிது. போதாக்குறைக்கு இறுதி யுத்தத்தின் முன் மிக உருக்கமாகத் தொழவேறு செய்கிறார்.
ஆனால் சிற்சில இடங்களில் நக்கல் தொனிக்கிறது. - மிக நாசூக்காக.
வசனங்கள் செம சூடு.

கமல் – ஒருத்தவர் சாவ இப்பிடியா கொண்டாடுறது, தீபாவளி மாதிரி?
அன்ட்ரியா – அசுரர்களா இருந்தா அப்டித்தான் கொண்டாடுவாங்க
சேகர் கபூர் – இதப் போய் அந்த அசுரனின் உற்றார், உறவினர்கிட்ட சொல்லுவீங்களா?

அதேபோல முதலில் ரஷ்யன், அப்புறம் அமெரிக்கன், அப்புறம் ஆப்கன், அப்புறம் தலிபான் என்று ஒரு கிழவி தாங்கொணாத வேதனையுடன் "ஆண்கள் எல்லாரும் முன்னுக்கு வால் முளைத்த குரங்குகள்" என்று இயலாமையில் சபிப்பது ஆப்கனின் பெண்கள் + அப்பாவி மக்களின் நிலையைக் காட்டும் ஒரு தத்ரூப இடம்.

வன்முறைகளும், உடல்கள் சிதறும் கோரமும் கொஞ்சம் டூ மச் என்று நினைத்தாலும், இந்தப் படத்துக்கு இது தேவை என்பதை நாம் உணரவேண்டும்.

தமிழ் ஜிஹாதி, ஓமர் கோவையில் தங்கியவர் என்று சர்சைப்படுத்தப்பட்ட இடங்கள், உண்மையில் இந்தப் படம் தமிழில் வந்ததால் மேற்கொள்ளப்பட்டவை என்பதை உணராதார் உணராதாரே.

குறியீடுகளால் பலவும், நேரடியாக சிலவும் சொல்லி, நேர்த்தியாகத் தான் நினைத்ததைக் கொடுத்ததில் பரிபூரணமாகக் கலைஞானி விஸ்வரூபித்திருக்கிறார்.

அமெரிக்காவுக்கு வால் பிடித்துள்ளார் என்று சொன்னவர்களுக்கு, FBI கைது செய்யும் இடமும் விசாரணை செய்யும் இடமும் போதும்.

ஏன் இவ்வளவு எதிர்த்தார்கள் (குர் ஆன்  வசன ஒலிகளை கமல் நிசப்தமாக்கியது போக) என்பது ஒரு பக்க இருக்க, பிரம்மாண்ட வெற்றி பெற்றிருக்க வேண்டிய ஒரு படத்தை இன்னும் அதிகம் விளம்பரம் செய்து மிகப் பிரம்மாண்டம் ஆக்கி இப்போதே அமோக இலாபத்தை தயாரிப்பாளர் கமலுக்குக் கொடுத்துவிட்டார்கள் என்பதைக் கமல் நன்றியோடு பார்க்கட்டும்.

நான் இன்னொரு தடவையாவது திரையரங்கிலும் (இன்னும் சில நுண்ணரசியலை நுகர) துண்டாடப்படாத விஸ்வரூபத்தை DVD யிலும் பார்க்கப் போகிறேன்.

விஸ்வரூபம் - கமலின் வியாபித்த விஸ்வரூபம் 

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner