November 26, 2020

Lanka Premier League ! #LPLT20

 நேற்று (புதன்கிழமை - நவம்பர் 25) எனது Facebookஇல் எழுதிய பதிவு சில சேர்க்கைகள், திருத்தங்களுடன்.



போட்டிகள் அத்தனையும் ஹம்பாந்தோட்டையில்..
ஒவ்வொரு நாளும் போட்டிகள்..
கொரோனா, நிதி சிக்கல்கள், வெளிநாட்டு வீரர்களை ஒப்பந்தம் செய்யும் தடங்கல்கள், ​IPLஐத் தொடர்ந்து ஆரம்பமாகியுள்ள சர்வதேசப் போட்டிகள் (நாளை - வெள்ளிக்கிழமை ஒரே நாளில் மூன்று தொடர்கள் ஆரம்பமாகின்றன - அவுஸ்திரேலியாவில் அவுஸ்திரேலியா - இந்தியா ஒருநாள் சர்வதேசப் போட்டி, நியூசீலாந்தில் நியூசீலாந்து - மேற்கிந்தியத் தீவுகள் T20 & தென் ஆபிரிக்காவில் தென் ஆபிரிக்கா - இங்கிலாந்து T20) என்று ஏராளமான தடைகளைக் கடந்து பல தடவைகள் தள்ளி தள்ளி தள்ளிப் போடப்பட்டு.. எப்படியாவது நடத்தியே ஆகவேண்டும் என்று இப்போது சகல ஏற்பாடுகளும் பூர்த்தி..
ஆனால்​ நம் நாட்டின் கிரிக்கெட்டுக்கும் மழைக்கும் உள்ள ராசி, ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் Franchise Cricket T20 ராசி என்று நாளை வரை எதுவும் நடக்கலாம் என்ற அச்சம் எனக்கு மட்டும் இருப்பதாக நான் நினைக்கவில்லை.
நிவர் புயல், பொதுவாகவே ​இந்த மாதங்களில் தென், தென் மேற்கு மாகாணங்களில் பெய்யும் மழை, கொரோனா என்று வில்லன்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் வரலாம்..
​ஆயினும் இந்த 23​ போட்டிகளும் எப்படியாவது, எந்தவொரு சிக்கலும் இல்லாமல் நடைபெற்று முடியவேண்டும் என்று ஒரு கிரிக்கெட் ரசிகனாக, இலங்கை கிரிக்கெட்டை மீண்டும் எழுச்சிப் பாதையில் பார்க்கவேண்டும் என்று ஆசைப்படும் ஒரு இலங்கை கிரிக்கெட் அபிமானியாக விரும்புகிறேன்.
சொற்ப சர்வதேச வீரர்கள் (பெரிய பிரபலங்கள் இல்லை - போதாக்குறைக்கு முனாப் பட்டேல், இர்பான் பதான், கோனி வகையறாக்கள்) , ஐந்தே ஐந்து அணிகள், அவசர ஏற்பாடுகள், எதிர்பார்த்த பரபரப்பை விடக் குறைவு, அணிகளின் பெயர்களிலும் லோகோக்களிலும் அவசரம், சர்வதேசத் தரத்தில் ஒப்பிடுவதற்கு நாம் தயங்கும் சில குறைகள் என்று என்னதான் சொதப்பல்கள் கண்ணை உறுத்தினாலும் இப்படியான ஒரு கொரோனா காலகட்டத்தில் எப்படியாவது நடத்தி முடிப்பது முக்கியம்.
அடுத்தாண்டுகளுக்கு தொடர்வதற்கும் இளைய கிரிக்கெட் வீரர்களுக்கு சர்வதேச அங்கீகாரத்துக்கும் இது ஒரு ஆரம்பமாக இருக்கும்.
(கொரோனா உக்கிரமாகத் தாண்டவமாடும் இந்தக் காலகட்டத்தில் இப்படியொன்று தேவையா என்று கேட்டால், எப்போதோ செய்திருக்கவேண்டியது இப்படியாவது நடக்கட்டும் என்று கடக்கவேண்டியது தான்)



அடுத்த விஷயம் இன்னொரு முக்கியமானது.
உங்களில் பலர் என்னிடம் கேட்டது..
எந்த அணிக்கு ஆதரவு ?
Jaffna Stallions
என்று ஒரு அணி உருவாக்கப்பட்டதும் எம்மவர் பலர் தானாகவே அந்த அணிக்கு பாசமழை பொழிந்ததை நாம் IPLஇல் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கான பலரின் ஆதரவோடு பார்க்கலாம். (சென்னையை நானும் நாமும் கலாய்க்க பிற்காலத்தில் இன்னும் ஏராளமான காரணங்கள் இருக்கு என்பது வேறு கதை)
ஒரு தமிழ் பேசும் பிரதான நிலத்திலிருந்து ஒரு அணி என்னும்போது இயல்பான பாசம் வருவதும், நமக்கான அணி என்ற ஒட்டுதல் ஏற்படுவதும் ஏற்றுக்கொள்ளக்கூடியதே.
இந்த அணியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூன்று வீரர்கள் உள்வாங்கப்பட்டவுடனேயே என்னைப் போன்ற இன்னும் பலரின் ஆதரவு கூடியது, இலங்கைத் தேசிய அணியில் ஒரு தமிழ் பேசும் வீரரைக் காண மாட்டோமா என்ற ஒரு ஆதங்கத்தின் வெளிப்பாடு.
ஆனால், கிரிக்கெட்டில் உணர்ச்சிவசப்படுதலையும் வெறும் 'தமிழன்டா' கோஷத்தையும் மட்டுமே வைத்து அணி ஆதரவை முடிவு செய்யாத என்னுடைய Jaffna Stallions மீதான இம்முறை ஆதரவுக்கு நேற்று சங்கக்காரவும் அவரைத் தொடர்ந்து அவருடைய நண்பர் மஹேல ஜயவர்த்தனவும் சொன்ன காரணங்களும் சேர்ந்தே இருக்கின்றன.
(படங்கள் கீழே)





1.குறித்த பிரதேசத்தின் அடையாளத்தை வெளிப்படுத்தும் வீரர்களின் தெரிவு, இத்தனை காலம் அரசியலிலும் இலங்கை என்ற அடையாளத்திலும் விலகியிருக்கும் எம்மவருக்கு கொஞ்சமாவது நம்பிக்கையைக் கொடுக்கும் ஒரு முதலடி.
2. இந்த ஐந்து அணிகளில் சர்வதேச மைதான வசதி இல்லாமல் இருக்கும் ஒரே அணி.
3.முதலீட்டாளர்களாக புலம்பெயர் நம்மவர்களும் வருவதால் எதிர்காலத்தில் கிரிக்கெட்டைத் தாண்டி எமது மக்களின் அபிவிருத்தியை நோக்கிய வேறு பல முக்கிய துறைகளுக்கான முதலீடுகளும் வரும் சாத்தியத்தை உருவாக்கலாம்.
Stallions என்பது பற்றி எனக்கு கொஞ்சம் அதிருப்தி இருந்தது (2012 SLPLஇல் வைக்கப்பட்ட Uthura Rudras ஐ விட லட்சம் மடங்கு பரவாயில்லை என்பது வேறு).
ஆனால் அணியின் பங்குதாரர்களில் சிலருடன் பேசிய பின் பரிசீலனையில் இருந்து வேறு பலவற்றுடன் பார்க்கையில் நெடுந்தீவு குதிரைகளின் அடையாளமாக, கம்பீரத்தை வெளிப்படுத்தும் பொலிக்குதிரை வெற்றிபெறும் அணிக்கு பொருத்தமாக இருக்கட்டுமே..
அணியில் எனக்குப் பிடித்த சில வீரர்கள் இருக்கிறார்கள்..
தனஞ்சய டீ சில்வா, வனிது ஹசரங்க, அவிஷ்க பெர்னாண்டோ, மினோத் பானுக இவர்கள் எதிர்காலத்துக்கான நட்சத்திரங்கள்.
முக்கியமாக மினோத் தன்னை ஒரு சிறப்பான T20 வீரராக நிரூபிப்பார் என்று நம்புகிறேன்.
இரும்பு மனிதன் திசர நாமெல்லாம் திட்டித் திட்டியும் ரசிக்கிற ஒரு Love hate fandom.
ஆனால் இதை விட அதிகமான பிடித்த வீரர்களைக் கொண்ட அணிகள் இருக்கின்றன என்பது தான் உண்மையும் இந்த T20 franchise type League போட்டிகளில் இருக்கிற தர்மசங்கடமும்.
நான் பொதுவாக இவ்வகையான போட்டிகளில் தனியே ஒரு அணிக்கு ஆதரவு தெரிவித்து பார்ப்பதில்லை. பிடித்த வீரர்கள் எல்லா அணிகளிலும் சிதறியிருக்கும்போது எப்படி தனியே ஒரு அணி ?
Big Bash Leagueஇல் கூட சங்கா விளையாடியபோது Hobart Hurricanes பிடித்த அணியாக இருந்தாலும் Shane Warne, Steve Smith, Cameron White என்று பலரும் வேறு அணிகளுக்கு ஆடும்போது மனம் நிலையாக நிற்காது.
IPL, CPL வகையிலும் இவ்வாறு தான்.
ஆனால் அதில் ஒரு வசதி..
போட்டியை ரசிக்கலாம்.
#LPL2020LPL இலும் மத்தியூஸ், குசல் ஜனித், டசுன் ஷானக, இசுறு உதான, கமிந்து மென்டிஸ், அசேல குணரத்ன, பானுக ராஜபக்ச, வெளிநாட்டு வீரர்களில் பிரெண்டன் டெய்லர், Hazratulla Zazai என்று பலரும் பல்வேறு அணிகளில்.
ஆனால், ஆச்சரியம் என்னவென்றால்,
Colombo Kings
என்ற பெயர் நான்கு ஆண்டுகளுக்கு முதலே என் மனதில் இருந்திருக்கிறது.
செல்பேசியில் நான் விளையாடும் Real Cricket gameஇல் எனது அணியின் பெயர் அது.


அறிவிப்பு வந்தவுடன் ஒரு ஆனந்த அதிர்ச்சி.
அதுவும் தலைவன் அஞ்சலோ மத்தியூஸ்.
கேட்கவும் வேண்டுமா?
அணியும் ஒரு கட்டமைப்பு நேர்த்தியுடன் இருக்கிறது.
ரசலும் முழுமையான உடற்தகுதியோடு விளையாடினால் மற்ற அணிகளுக்கு சிரமம் தான்.
பாகிஸ்தானிய பின்புலத்தோடும் பலத்தோடும் இருக்கும்
Galle Gladiators
அணியும் மிகப் பலமானதாகத் தெரிகிறது.
மாலிங்கவும் விளையாடி, அமீரும் மாலிங்கவும் சேர்ந்து பந்துவீசி இருந்தால்...
கண்டியில் குசல் ஜனித்தினதும் தம்புள்ளையில் ஷானகவினதும் தலைமைத்துவ அணுகுமுறைகளை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன்.
சிங்கள இணையத்தளங்கள் மற்றும் கிரிக்கெட் ரசிகர் பக்கங்கள் ஒரு கொழும்பு - கண்டி மோதலை சுவாரஸ்யமாக்கியிருக்கின்றன.
Colombo - Kandy Rivalry
வழமையாக துவேஷம் தலையெடுக்கக்கூடிய வாய்ப்புடைய இரு அணிகளுக்கும் ஆச்சரியகரமாக ரசிகர்களின் ஆதரவு இருக்கிறது.
அதுவும் தென்னிலங்கை அணிக்கு பாகிஸ்தானிய உரிமையாளர் வந்தும் (ஷிராஸ் மட்டுமே ஒரு இலங்கை முஸ்லிம் வீரராக அந்த அணியில் இடம்பெற்றும்), யாழ்ப்பாண அணியில் மட்டும் தமிழ் வீரர்கள் இடம்பெற்றும் கூட இப்படி நடந்திருப்பது மகிழ்ச்சியான மனமாற்றம்.
திறமையினால் தான் அணிக்குள்ளே வந்தார்கள் என்பதை சர்வதேச மட்டத்தில் காட்டக்கூடிய வாய்ப்பை வியாஸ்காந்த் கிடைக்கும் வாய்ப்புக்களில் ஏற்படுத்தவேண்டும்.
எனக்குப் பிடித்த இன்னொரு Leg spinnerஆக இந்தத் தம்பி வரட்டும்.
இப்படியான போட்டிகளில் கவனிக்கப்படும் அணியின் சீருடைகளில் அணியின் பெயர்கள், சின்னங்களில் காட்டப்பட்ட அதே அவசரம்.
இவற்றுள் Jaffna Stallionsஇன் நீல நிற சேர்வைகள் கண்ணுக்கு கவர்வதாக இருக்கிறது.
இருக்கிற அணியின் லோகோக்களில் நேர்த்தியும் Jaffnaவிடம் தான் காண்கிறேன். புதிய லோகோவில் அப்படியொரு கம்பீரம்.


கொழும்பின் நீலம் + சிவப்பு இன்னும் கொஞ்சம் நேர்த்தியுடன் ஒரு trend ஆக வரும்.
காலியின் ஊதா அவர்களது பாகிஸ்தானிய அணியின் (Quetta Gladiators)அதே நிறம். Richness இருக்கிறது. எனினும் எனக்கு ஒட்டவில்லை.
தம்புள்ளை Viikings (பெயரில் அந்நியம் இருந்தாலும்) ஒரு ஈர்ப்பான, இதுவரை பயன்படுத்தப்படாத ஒரு கலவை. எங்கள் கல்லூரி ஒரு காலத்தில் பயன்படுத்திய கால்பந்து ஜெர்சி நினைவு வருகிறது.
கண்டியினுடையது தான் புறக்கோட்டையில் பேமண்டில் பேரம்பேசி ஐந்நூறு ரூபாய்க்கு எடுக்கும் அளவுக்கு கவலைக்கிட நிலையில்.
போட்டி நடைபெறும் இந்தக் காலகட்டம் பற்றிக் கொஞ்சம் மனதில் சலனம் இருந்தாலும் கொரோனாவினால் தான் இத்தனை பிற்போடப்பட்டது என்று நம்புவோம்.
அடுத்த முறை வேறு காலகட்டத்தில் இன்னும் சிறப்பாக நடப்பதற்கான வெற்றி இம்முறை கிட்டட்டும்.
இந்த தொடர் பற்றிய சில முக்கிய காணொளிகள்
1. Lanka Premier League #LPLT20 Teams & Players in Tamil | அணிகள், வீரர்கள் & வரலாறு - முழு விவரங்கள்
2.Lankan Premier League | வீரர்கள் & விபரங்கள் - ஒரு முழுமையான பார்வை | ARV Loshan #LPL2020
3. Lanka Premier League - Jaffna Stallions இன் கூக்ளி | Vijayakanth Viyaskanth
4. LPL Jaffna Stallions | Lanka Premier League| Tamil Cricket
5.Lanka Premier League 2020 | Official Theme Song

August 31, 2020

ஒரே நாளில் 78,761 பேர் !! அச்சுறுத்தும் இந்தியா !! #Covid19

 ஒரே நாளில் 78,761 பேர் !!

அச்சுறுத்தும் இந்தியா !! இலங்கையில் நிலைமை ? #Covid19

இன்றைய சூரிய ராகங்கள்

April 27, 2020

பிரபாகரன் - ஒரு மலையாளப் பிரச்சினை !

பிரபாகரன் - ஒரு மலையாளப் பிரச்சினை !

(எனது Facebookஇல் எழுதியிருந்த நிலைத்தகவல் இது )
CIA - Comrade in America என்ற மலையாளப் படத்தைப் பார்த்தது பற்றி நேற்று இடைவேளை update போட்டிருந்தேன்.
அதற்குப் பிறகு படத்தில் வரும் ஈழத் தமிழர் பற்றியும் ஒரு காட்சி பற்றியும் எழுதுமாறு நண்பர்கள் கேட்டிருந்தார்கள்.
அதன் கீழேயே சில நண்பர்கள் துல்கர் சல்மான் நடித்த புதிய படமான வாரானே அவஷ்யமுண்ட் - Varane Avashyamund பற்றி சிலாகித்திருந்தார்கள்.
நேரமிருந்த காரணத்தால் இன்று பார்த்துவிட்டேன்.
சமூக வலைத்தளங்களில் ஏதோ சர்ச்சைகள் போய்க்கொண்டிருப்பதை அவதானித்தாலும் இது பற்றித்தான் என்று அப்போது அறிந்திருந்திருக்கவில்லை.
படத்தில் வரும் ஒரு நாய்க்கு பிரபாகரன் என்று பெயர் வைத்திருக்கிறார் இயக்குனர் அனூப் சத்யன்.
அதுபற்றித் தான் இப்போது கொதித்துப் போயிருக்கிறார்கள் பலரும்.

பெயரோடு விட்டால் பரவாயில்லை. அதைப் பற்றி தயாரிப்பாளர் துல்கரும், இயக்குனரும் போட்ட பதிவுகள் தான் அதிகமாக கோபத்தைப் பலருக்கும் ஏற்படுத்தியிருக்கிறது.



துல்கர், அனூப் சத்யன் இருவரது சமூக வலைத்தளங்களும் தமிழர்களின் வசவுகளாலும் மலையாளிகள் பலரது பதில் கலாய்த்தல்களாலும் (சிலர் தமிழரையும் தலைவர் பிரபாகரனையும் உச்சபட்சமாகக் கேவலப்படுத்துகின்றனர்)
நிறைந்துபோய்க் கிடக்கிறது.
துல்கர் சல்மான் தயாரிப்பாளர் என்ற நிலையில் சமாதான விளக்கம் கொடுத்து, இப்போது மன்னிப்பும் கோரிவிட்டார்.
கேரளாவில் மிகப் பரவலாக அறியப்பட்ட பெயர் இது என்றும், 80களின் படத்தின் பிரபலமான வசனம் ஒன்றையும் காட்டி விளக்கம் கொடுத்துள்ளார்.
எனினும் நான் வாசித்தவரை மலையாளப் படங்களில் வழக்கமாகவே தமிழரைக் கேவலமாகச் சித்தரிப்பது போலவே இப்போதும் நடந்துள்ளது என்று பலர் கோபப்பட்டுள்ளனர்.
ஈழப் போர், தமிழீழம் தொடர்பாக மலையாளிகளின் நிலைப்பாடும், அவர்கள் இந்தியாவின் தலையீடுகளில் காட்டிய செல்வாக்கும் நாம் அறியாதது அல்ல.
அவ்வளவு ஆழமாகச் சென்று இந்தத் திரைப்படத்துக்கு விளம்பரம் கொடுக்காமல் (படமாக நல்லா இருக்கு - ஷோபனாவும் இருக்கிறார் - அது வேறு கதை) திரைப்பக்கமாகப் பார்ப்போம் என்றால்,
தமிழ்ப் படங்களில் நாயர் என்றும் மலையாளி என்றும் செய்யாத நக்கலா?
ஆனால் கடந்த 20,25 வருடங்களாக மலையாளப் படங்கள் பார்ப்பவன் என்ற வகையில் - மலையாளப் படங்களில் தமிழுக்குக் கொடுக்கப்படும் சிறப்பும் தனித்துவமும் தமிழில் வேறெந்த மொழிக்கும் இருப்பதில்லை.
சில படங்களில் தமிழில் பாத்திரங்கள் பேசுவது மட்டுமில்லை, பாடல்களும் முழுமையாகத் தமிழிலேயே இருக்கும்.
இந்த Varane Avashyamund கூட முழுக்க நடப்பது சென்னையில்.
நேற்றைய CIA யில் கதாநாயகன் துல்கருக்கு உதவுவது ஒரு ஈழத் தமிழர்.
அவரது நிக்கரகுவா வீட்டில் தலைவர் பிரபாகரனின் படத்துக்கு பொட்டு வைத்து விளக்கேற்றியிருப்பார்கள்.

பின்னர் அவர் இலங்கை என்று அறிந்தபிறகு போராளியா எனக் கேட்பார்.
அருள் என்ற அந்தப் பாத்திரம் தியாகம் செய்வதாக முடியும்.

Comrade in America - மலையாளப் படத்தில் வந்த குறித்த காட்சி :

CIA (Malayalam) Movie - Prabhakaran Scene | Dulquer Salman


ஆனால் இதையெல்லாம் பார்த்தோ, இல்லாவிட்டால் தலைவரின் படம், பெயர்களைப் படங்களிலும் படைப்புக்களிலும் பெருமைப் படுத்துவதைப் பார்த்தோ புளகாங்கிதம் அடையும் நிலையை நான் கடக்கும் முதிர்ச்சியைக் கண்டுவிட்டேன் என நினைக்கிறேன்.
ஆமைக்கறியும் அரசியலும் எம்மை அந்த நிலையில் தெளிவுபடுத்தியுள்ளன.
அதேபோல இந்த நாய் பெயர் விவகாரம் போன்றவை எம்மைச் சிறுமைப்படுத்தும், இதன் மூலம் எம் வரலாறு கீழ்மையடையும் என்று நினைப்பதில் இருந்தும் நான் தெளிவாக விலகி நிற்கிறேன்.
நம்மவரில் பலரே தினசரி வேலையாக இதைச் செய்யும்போது, இன்னும் சிலர் சில குறித்த நாட்களில் விஷமேற்றும் வேலை செய்யும்போது, எங்கேயோ ஒரு வேற்றுமொழிப் படத்தின் சில காட்சிகள் என்ன செய்துவிடப் போகின்றன ??
(அதுசரி, பெப்ரவரி ஆரம்பத்தில் வந்த படம் திடீரென இப்போது Netflixஇல் Trending ஆகியிருப்பதும் இப்போது பேசப்படுவதற்கும் பின்னணி ??)

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner