January 30, 2014

புதிய உலகம் தேடி இமான் & புதிய முயற்சியில் புரட்சி படைக்கும் எம்மவர்

இமானின் இசையில் வைக்கம் விஜயலக்ஷ்மி பாடிய " புதிய உலகை புதிய உலகைத் தேடிப் போகிறேன் என்னை விடு " பாடல் பற்றி சிலாகிக்காதோர் கிடையாது.

 கடந்த வார இறுதிகளில் தான் இந்தப் பாடலோடு முழுமையாக மூழ்கும் வாய்ப்புக் கிடைத்தது.

கானா.பிரபா அண்ணன் முழுமையாக  இந்தப் பாடல் பற்றி முத்துக்குளித்த பிறகு, அந்த ரசனை அப்படியே நான் பெற்ற உணர்வை மொழிபெயர்த்து இருக்கையில் புதுசா என்ன சொல்ல இருக்கு?

கேட்டதில் இனித்தது : புதிய உலகை புதிய உலகைத் தேடிப் போகிறேன் என்னை விடு

ஆனாலும் இந்தப் பாடலை நேற்று  சூரிய ராகங்களில் ஒலிபரப்பியபோதும் இன்று நட்சத்திரப்  பாடலாக இது வரை இரு தடவைகள் முழுமையாகக் கேட்டபோதும் ஒரு வித கட்டிப்போட்ட உணர்வு....

அந்த வித்தியாசமான குரல், பின்னணி இசை, இடையே மீட்டும் வீணையும் (மூன்றாம் பிறையின் கண்ணே கலைமானே வயலின் பிழிந்து தரும் சோகம் போலவே ) மட்டுமல்ல, இவை தாண்டி கார்க்கியின் வரிகள் தருகிற உணர்வுகள் இளகச் செய்கின்றன மனதை.

பாடகியின் நிஜ வாழ்க்கையின் சில பக்கங்களையும் உருவினால் போல, வரிகளும் இசையும் விஜயலக்ஷ்மியின் நெகிழ்ச்சியான குரலில் இழையோடுவதும் பாடலில் நாம் உருகிப்போக ஒரு காரணமாக இருக்கலாம்.

ஆனால் மாற்றுத் திறனாளிகள் மேல் பரிதாபம் கொள்ளாமல் அவர்களது அதீத திறமைகளை மதித்து கௌரவிப்பதும் பாவம் பார்த்து ரசிக்காமல் அனுபவித்து ரசிப்பதுமே தலையாயது என எண்ணுபவன் நான்.
அந்த வகையில் இவர் குரலில் இன்னும் பல பாடல்களை காத்து எதிர்பார்க்கிறது.



ஏதோ எங்கள் வாழ்க்கையில் நாம் சில பாகங்களின் உணர்வுகளையும் கடந்து வந்த சில வந்த சில ரணங்களையும் இன்பமாகக் கிளறி ஞாபகப்படுத்துகிறது.


"ரணங்களை வரங்களாக்கினாய்

தோளில் ஏறினாய்

எனை இன்னும் உயரமாக்கினாய் ​"

"யாரும் தீண்டிடா இடங்களில்

மனதைத் தீண்டினாய்

யாரும் பார்த்திடா சிரிப்பை

என் இதழில் தீட்டினாய்

உன் மனம் போல விண்ணில் எங்கும் அமைதி இல்லை என்றேன்

உன் மனம் இங்கு வேண்டாம் என்று பறந்து எங்கே சென்றேன்

வேறோர் வானம் வேறோர் வாழ்க்கை என்னை ஏற்குமா ​"

கார்க்கி யாரும் சேர்க்கா இடங்களில் எங்களைத் தன் கவித்துவப் பாடல் வரிகளில்  கொண்டு சேர்க்கிறார்.
புதிய வார்த்தைகள் மட்டுமல்ல, இதுவரை பிரதிபலிக்காத புதிய உணர்வுகள் கூட.


கார்க்கி ​ ​எழுதும் பாடல்களை நான் எந்திரன் முதல் ரசித்து வருகிறேன்.
மற்றக் கவிஞர்களை விட இவரது பாடல்களுடன் கொஞ்சம் அதிகமாக மனசு நெருக்கமாகி லயிப்பதற்கு ஒரு முக்கிய காரணமாக நான் உணர்வது, ஏனைய பாடல்கள் எமக்குள்ளே நுழைந்து எம்மை உணரச் செய்து உருக்கும்.
ஆனால் கார்க்கியின் பாடல்கள் எமது உணர்வுகளைப் பிரதிபலிப்பது, ஏதோ நாமே அந்தப் பாடலை எழுதியது போல, நாமாக மாறி கார்க்கி அந்தப் பாடல்களை எழுதியிருப்பார்.

முன்பும் சில கார்க்கியின் பாடல்கள் பற்றி நான் எனது பதிவுகளில் சிலாகித்திருக்கிறேன்.

சில காலமாக நான் விவரித்து சிலாகிக்காத கார்க்கியின் பாடல்களில்
முட்டாளாய் - என்னமோ ஏதோ
பிறந்தநாள் பாடல் (ஏன் என்றால் உன் பிறந்தநாள்) - இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா
நெகிழி - நிமிர்ந்து நில்
வானெங்கும் - என்றென்றும் புன்னகை
அகலாதே அகலாதே - சேட்டை
அடியே... அடியே என்ன எங்க நீ கூட்டிப் போற - கடல்
ஆகிய பாடல்களின் சில வரிகளாவது முணுமுணுக்க வைத்து, சிலிர்க்க வைத்தவை.

இந்த வைக்கம் விஜயலக்ஷ்மி பாடிய "புதிய உலகை புதிய உலகைத் தேடிப் போகிறேன் " பாடல் பற்றி தனது தளத்தில் கார்க்கி
மகனைப் பிரியும் தாயின் குரல், காதலனைப் பிரியும் காதலியின் குரல்! என்கிறார்.


அண்மையில் பத்ம பூஷன்  பெற்ற தந்தை போல் அதிகம் வர்ணனை இல்லாமல், வாழ்க்கையோடு வார்த்தைகளை இயல்பாக, ஆனால் உருக்கமாகக் கோர்க்கிறார் கார்க்கி.

அடுத்து இமான், சுருங்கச் சொல்வதாயின் தமிழில் அண்மைக்காலமாகத் தொடர்ந்து ஜனரஞ்சகப் பாடல்களைத் தந்துவரும் இரண்டு இசையமைப்பாளர்கள் ஹரிஸ் ஜெயராஜ் & D.இமான்.

இதில் ஹரிஸ் கேட்ட தன் மெட்டுக்களையேமீண்டும் அரைத்துத் தருபவர்.

ஆனால் இந்த அமைதியான இமான் நான் முன்பொரு இடுகையிலே சொன்னது போல மனதுக்கு நெருக்கமான மெட்டுக்களால் மைனா, கும்கி, மனம் கொத்திப் பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்று வரிசையாக வித விதமாக விருந்து படைத்துக் கொண்டேயிருக்கிறார்.

விஜய்யின் ஜில்லாவிலும் கூட கண்டாங்கி மனதை சுண்டி இழுக்கிறது.
கும்கியில் அய்யய்யோ வயலினும், விரசாப் போகையிலே விசிலும் எப்போது கேட்டாலும் காற்றில் மிதக்கச் செய்பவை.

ரம்மியின் கூடை மேலே, வருத்தப் படாத வாலிபர் சங்கத்தின் பார்க்காதே பார்க்காதே , தேசிங்கு ராஜாவின் ஒரு ஓர ஓரப் பார்வை, 3 வருடங்களுக்கு முன்னர் வெளிவந்தாலும் இன்னும் மனதில் நிற்கும் தம்பிக்கோட்டையின் உனக்காக உயிரை வைத்தேன் ஆகிய பாடல்களும்  எப்போது கேட்டாலும் உயிர் அள்ளக் கூடியவை.

என்னைக் கேட்டால் அண்மைய நாட்களில் வித்யாசாகர் இல்லாத தமிழ்த் திரைப்படப் பாடல்களின் இடைவெளியை இமான் தான் நிரப்புகிறார் என்பேன்.
வித்யாசாகர் போலவே வித்யாசாகர் விட்ட பின் அர்ஜுனோடு ஆஸ்தான இசையமைப்பாளராக இணைந்துகொண்ட இமான் கேட்பவர் அத்தனை பேருக்குமே வஞ்சகம் இல்லாமல் நல்ல, வெற்றிகர இசையை வழங்கி வந்திருக்கிறார்.

தன் முத்திரை பதிக்கும் மெலடி பாடல்களில் ஒன்றையாவது ஒரு படத்தில் அழுத்தமாகப் பதிப்பதிலும் D.இமான் ஒரு புதிய வித்யாசாகர் தான்.
ரஹ்மான், ஹரிஸ் ஜெயராஜ், யுவன் , G.V.பிரகாஷ் குமார் ஏன் தேவி ஸ்ரீ பிரசாத், இப்போது எப்படியெல்லாம் விளம்பரம் பண்ணி தனக்கான வெளிச்சம் காட்ட முடியுமோ அப்படியெல்லாம் தனக்கு முகவரி தேடும் அனிருத் போல கூட இல்லாமல் தானுண்டு தன்  இசையுண்டு என்று அமைதியாக அசத்தி வரும் இமானின் இசைப்பயணம் இன்னும் இனிமையாகவும் ஏற்றமாகவும் அமையட்டும்.

'பெரிய' ஹீரோக்கள் இவரையும் இன்னும் கொஞ்சம் பார்க்கட்டும். வித்யாசாகர் மாதிரியே இவரும் காணாமல் போய்விடக் கூடாது.

--------------------------------------
இந்தப் பாடல் போலவே, நான் நண்பர் வட்டாரத்தில் சிலாகித்த, ஏன் நண்பர்கள் அண்மைக்காலத்தில் சிலாகித்த இரு நம்மவர் முயற்சிகள் பற்றி நீண்ட நாள் எழுதவேண்டும், பதியவேண்டும், பலரோடு பகிரவேண்டும் என யோசித்திருந்தேன்.
ஆனால் வழமையான பஞ்சியும், ஏதாவது கவனக் கலைப்பானும் நேரத்தைத் தின்று விடும்.
இமானின் பாடலை ரசித்துகொண்டே இருந்த சனி, ஞாயிறுகளில் இவ்விரு விடயங்களின் பகிர்வு + பரம்பலின் அவசியம் மனதில் நின்றது.

1. கதை ஒளி

ஈழத்தில் மட்டுமல்ல உலகெங்கும் தமிழர் வாழும் இடங்களில் இப்போது அருகி வரும் கதை சொல்லும் கலையை தம்மால் முடிந்தளவு அழகாகவும், இளைய தலைமுறையை ஈர்க்கும் விதமாகவும் கொண்டு செல்லும் ஒரு ஹைடெக் முயற்சி.

ஒரு Facebook குழுமமாக ஆரம்பித்த முயற்சி.
கதை சொல்லடா தமிழா

ஞானதாஸ் காசிநாதர் என்ற நண்பர் என்னையும் ஒரு மூன்று வருடத்துக்கு இந்த Facebook குழுமத்துக்குக் கதையொன்றை அனுப்புமாறு கேட்டார்.
ஹீ ஹீ.. இன்னும் அனுப்புகிறேன்.

ஆனால் அவர்கள் இப்போது Youtubeஇல் காணொளியில் கதை சொல்லும் நவீன முயற்சியில் இறங்கி பெரிய வெற்றியையும் வரவேற்பையும் பெற்றுள்ளார்கள்.
கதை ஒளி

இது எதிர்கால, தமிழ் பேச, கேட்க மட்டுமே தெரிந்த ஒரு புலம்பெயர் தமிழ்ச் சிறுவர் சமுதாயத்துக்கு தமிழை அறிய பெரும் உதவியாக இருக்கப் போகிற விடயம்.
தமிழ் சூழலில் இந்த முதன் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

இந்தக் கதைகளில் தரம், தராதரம் என்பதையும் தாண்டி நான் ரசிப்பது சொல்லப்படும் கதைகளின் பல்வகைமை, சொல்லப்படும் மொழி வழக்குகளின் பல்வகைமை, அது போல அவர்கள் பல தரப்பட்டவர்களையும் அழைத்துக் கதை சொல்லச் சொல்வது அனைவருக்கும் தன்னம்பிக்கை தரக் கூடிய ஒன்று.

கதை ஒளி குழுவினருக்கு வாழ்த்துக்கள்.

இன்னும் பெரிதாக இம்முயற்சி எதிர்காலத்தில் விரிவடையும் என்று மனம் சொல்கிறது.

2. இலங்கைக் கலைஞன்

எங்கள் கலைஞர்களை, கலைப் படைப்புக்களை யாரும் கவனிக்கிறார்கள் இல்லை; கைதூக்கி விடுகிறார்கள் இல்லை என்று புலம்பல் (ஓரளவு நியாயமானதே) பல பக்கங்களிலும் சதா ஒலித்துக்கொண்டேயிருக்கும்.
சும்மா புலம்பி விட்டு, ஊடகங்களனைத்தையும் திட்டித் தீர்த்து விட்டு, தாமுண்டு தம் வேலையுண்டு என்று முடங்கி விடாமல், நாமே நம்மை உருவாக்குவோம், உயர்த்துவோம், தரமுயர்த்துவோம் என்று ஒரு இளைய தலைமுறை புறப்பட்டிருகிறது.

இலங்கைக் கலைஞன் என்ற இணையத் தள அறிமுகம் தற்செயலாக Facebook மூலம் கிடைத்தது.
3 மாதங்களில் எத்தனையோ இலங்கைக் கலைஞர்களையும் படைப்புக்களையும் இவர்கள் வெளியே கொண்டுவந்திருக்கிறார்கள்.

பேட்டிகள்,அறிமுகங்கள், விமர்சனங்கள் என்று சாதிக்கத் துடிக்கும் இளையவர்களுக்கு நம்பிக்கை ஒளியைக் காட்டுகிறது இலங்கைக் கலைஞன்.

இன்னும் இன்னும் இலை மறை காயாக இருக்கும் இலங்கை, புலம்பெயர் கலைஞர்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் முயற்சி தொடரட்டும்.

இந்தத் தளம் மூலம் உங்களுள் இருக்கும் கலைஞர்களும் படைப்பாளிகளும் வெளிவரட்டும்.



January 22, 2014

ஜில்லா

யாழ்ப்பாண ஆர்ப்பாட்டத்துக்குப் பிறகும், ஜில்லா வந்து இருவாரம் ஆகும் நேரத்திலும் சளைக்காமல் ஜில்லா பற்றி தில்லா எழுதுகிறேன் என்றால் ஒரு பின்னணி இருக்கவேண்டுமே...

ஒன்றல்ல, இரண்டு..

வீரம் பற்றி எழுதிய பின் ஜில்லா பற்றி எப்போ எழுதுவீங்க என்று கேட்டு வந்த அன்புக் கோரிக்கைகள்.
மொக்கைக்கும் சராசரிக்கும் இடையில் என்று போட்ட என் ட்வீட்டின் காரணம் அறிய விரும்பிய சில ரசிக விருப்பங்கள்.

படம் பார்த்து முடிந்தவுடன் போட்ட ட்வீட்...

ஜில்லா - இழுவை.விஜய்க்கு போலீஸ் கெட் அப் தவிர எல்லாமே செட் ஆகும் கதை.ஆனால் மொக்கைக்கும் சராசரிக்கும் இடையில் ஆடுது. #ஜில்லா - என்னத்த சொல்ல



ஜில்லா ஓரளவாவது ஓட ஒரே காரணம், விஜய் என்னும் மாஸ்.
மற்றும்படி படத்தின் ஏனைய விஷயங்கள் எல்லாம் படு லூஸ்.

ஆனால் மாஸ் விஜய் எப்படித்தான் இவ்வளவு நீண்ட கால அனுபவத்துக்குப் பிறகும் இப்படியான கதைகளை ஏற்று நம்பி நடிக்கிறாரோ என்று அசதியை விட எரிச்சல் வருகிறது.

ஒருவேளை அந்த ஜனா, ஆஞ்சநேயா, ஆழ்வார் காலத்தில் அஜித் புதிய இயக்குனர்களை நம்பி ஏமாந்தது போல விஜயும் இப்போது அதே மாதிரியான ஒரு காலகட்டத்திலோ?

ஆனால் நிறையப்பேர் நினைப்பது போல இயக்குனர் நேசனுக்கு இது முதல் படம் அல்ல. முன்பு  முருகா என்று ஒரு படம் எடுத்திருக்கிறார். அத்துடன் வேலாயுதம் படத்தில் இயக்குனர் ராஜாவின் உதவியாளராம்.

சரி கதை பழசு என்றாலும், விஜய் மாதிரியான ஒரு ஹீரோவுக்கு ஒரு தீர்மானிக்கப்பட்ட கட்டமைப்புக்குள்ளேயே பாத்திர வடிவமைப்பு இருந்தாலும் படமாக்கலாவது சுவாரஸ்யமாக (வித்தியாசமாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை) இருக்கவேண்டுமென்று இயக்குனருக்கோ, விஜய்க்கோ கூட இருக்கும் அல்லக்கைகளுக்கோ கூடத் தெரியவில்லை?

ஜில்லா படம் ஓடுகிறது என்று விஜய் ரசிகர்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள், அல்லது நம்ப வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
சொல்லவேண்டிய நிர்ப்பந்தமும் இருக்கிறது.(பிறகு மனசுக்குள்ளே துள்ளாத மனமும் துள்ளும் விஜய் போல குமுறிக் குமுறி அழுது கொண்டிருக்கிறார்கள்)

இது ஒரு விதத்தில் வீரத்தினால் என்றும் சொல்லவேண்டியுள்ளது.
வீரம் ஓடிக்கொண்டிருப்பதால் ஜில்லா ஓடுகிறது, ஜில்லா மோசமில்லை, சுமார் என்று சும்மாவாவது சொல்லவேண்டிய ஒரு காலத்தின் கட்டாயம்.

ஜில்லா, வீரம் இரண்டுமே ஊகிக்கக் கூடிய, ஏற்கெனவே பார்த்த முன்னைய படங்களின் சாயல்கள் கொண்டவை; இரு பெரும் ஹீரோக்களின் படங்கள் என்று இருந்தாலும் பெரிய, முக்கிய வித்தியாசங்கள் திரைக்கதை + பாத்திரப் பொருத்தம் + படத்தை இயக்கிய விதம்.


விஜய்க்கு போலீஸ் கெட் அப் செட் ஆவதில்லை என்று தெரிந்தும் போலீசாக வரும் இந்தப் பாத்திரத்தை எப்படித்தான் ஏற்கத் துணிந்தார் என்பது தான் கேள்வி.
எத்தனை தடவை போலீஸ் வேடம் ஏற்று விஜய் சிரிப்பு போலீஸ் ஆகியிருக்கிறார் எண்ணிப் பாருங்கள்.

"அதென்ன எல்லா ஹீரோவுக்குமே போலீஸ் வேடம் பொருந்துதே, ஏன் விஜய்க்கு மட்டும் பொருந்துதில்லை ?" அண்மையில் விஜய் ரசிகர் ஒருவர் அழாக்குறையாக என்னிடம் கேட்டிருந்தார்.

இதற்கு விளக்கம் சொல்லப் போய், என் வீட்டுக்கு முன்னாலும்  ஆர்ப்பாட்டம் நடந்தாலும் பரவாயில்லை.

ஒரு போலீஸ் வேடம் தாங்கும்  நடிகர்களைப் பாருங்கள்.
சூர்யா, விக்ரம், கமல் இந்த அவதாரங்களை விடுங்கள். இவர்கள் எந்தச் சிறு பாத்திரமாக இருந்தாலும் தங்களை உருக்கி வார்த்து நடிப்பவர்கள்.
ஆனால் அஜித், கார்த்தி போன்றோர் அண்மையில் நடித்தபோது கூட பொருந்தியிருந்ததே..

வேறொன்றுமில்லை, பாருங்கள் ஜில்லாவில் விஜய் போலீஸ் ஆகிறாராம். ஆனால் போலீஸ் பயிற்சிக்கு வேடிக்கையாகப் போனால் என்ன, சீரியஸ் போலிஸ் ஆக, சின்சியர் ஆக அவர் ஒரு சாமி போல, துரைசிங்கம் போல மாறி நெஞ்சை நிமிர்த்தி லெக்சர் குடுக்கும்போது கூட அந்தக் குறுந்தாடி கெட் அப்பை மாற்றி நம்பும் மாதிரி இருக்கவேண்டாம்?
அதே படத்தில் பரோட்டா சூரி கூட போலீஸ் என்றால் பொருத்திய மாதிரித் தெரிகிறாரே.

அடுத்து இயக்குனர் விட்ட பெரிய பிழை, அல்லது அது இயக்குனர் நேசன் குழம்பிய விஷயமாகவும் இருக்கலாம்.

விஜயை எப்படிக் காட்டுவது?
போலீசாக மாறிய பிறகும் அதே ஜாலி விஜயாகக் காட்டுவதா, அல்லது கொஞ்சமாவது விறைப்பாக மாற்றுவதா என்று.
இதனால் நிமிடத்துக்கு நிமிடம் சந்திரமுகியாகவும் கங்காவாகவும் கங்காரு போல விஜய் தாவுவதாக ஒரு உணர்வு.

இதனால் அடிக்கடி போக்கிரி விஜய் ஞாபகம் வருவதையும் தவிர்க்க முடியவில்லை.

ஆனால் துள்ளல், எள்ளல் விஜய் கலக்குகிறார்.
அவரது துடிப்பும், இளமையும், குறும்பும் நடனமும் வேறு யாராலும் நிகர்க்க முடியாதது.

அதையே அவரது plus pointsஆக வைத்தே அழகாய் இந்தக் கதையைப் பின்னியிருக்கலாம் நேசன். பிளந்து கட்டியிருக்கலாம்.

அடுத்து மோகன்லால்....

சிவன்..இல்லை இல்லை அவர் சொல்வதைப் போல் ஷிவன்...

காலாகாலமாக தமிழ் சினிமாவில் ராஜ்கிரண், ரகுவரன், பிரகாஷ் ராஜ் ஏன்அண்மையில் இதே விஜயின் தலைவாவில் சத்யராஜ் ஏற்ற அரதப் பழசான தாதா பாத்திரம்.

இதற்காக மினக்கெட்டு ஏன் இந்த மலையாள சிங்கம் தமிழுக்கு வந்து மொக்கை சுண்டெலியாக மாற வேண்டும்?

சரி மோகன்லால் கிடைத்தாலும் கிடைத்தார் அவருக்கேற்ற கெத்தை பாத்திரத்திலாவது வைக்கவேண்டாம்?

இதே போன்றதொரு பாத்திரத்தில் அஜித்தின் தீனாவில் சுரேஷ் கோபிக்கு இருந்த இமேஜின் கால்வாசி கூட இல்லை.
கிட்டத்தட்ட இன்னொரு வில்லன் ஆக்கியுள்ளார்கள்.
பாதி வசனங்களில் மலையாள வாசனை.

இப்படியான இரண்டு தாதா படங்களில் இலகுவாக ஊகிக்கக்கூடிய விடயங்கள் படம் முழுக்க.

சில எதிரிகள், சில துரோகிகள், படத்தின் எப்போது எப்படி பெரிய தாதாவும் சின்ன தாதாவும் ஏன்மோதிக்கொள்வார்கள்? எப்படி சேர்வார்கள் என்ற formulaவில் அட்சரம் பிசகாமல் எடுத்து எங்களையெல்லாம் தேர்ந்த சினிமா பார்வையாளர்களாக மாற்றி வெற்றி கண்டிருக்கிறார் நேசன்.
சின்னப் புள்ளத் தனமா இல்லை?

விஜயின் அறிமுகக் காட்சியிலேயே தீனா படத்தின் அறிமுகக் காட்சியை ஞாபகப்படுத்திவிடும் இயக்குனர், விஜய்க்கு போலீசையும் காக்கி சீருடையையும் பிடிக்காமல் போவதற்கான  (முன்னைய தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களின் புஸ் நெடி வருகிறது) காரணத்தை நீட்டி முழக்கி சொதப்புகிறார்.

அதிலும் ஜில்லா என்ற பெயருக்கு சொல்லும் விளக்கம் இருக்கே... (அந்த விளக்கம் வில்லன்களுக்கு இல்லீங்கோ, எங்களுக்கு) தெய்வமே....

வீரம் படத்தில் தம்பி ராமையாவை எப்படி இயக்குனர் சிவா பயன்படுத்தி ஸ்கோர் செய்கிறார்?
இங்கே அந்த அற்புத நடிகரை சும்மா வீணடித்திருக்கிறார்.

சம்பத் வழக்கம் போலவே அழுத்தமாகக் கலக்கி இருக்கிறார்.


காஜல் அகர்வாலுக்கு வழமையான விஜய் பட கதாநாயகியின் வேலை. கொஞ்சமாக நடித்து நிறைய கண்ணால் பேசி, பாடலுக்கு எல்லாம் அழகாக ஆடி...

ஆனால் விஜய் தான் படம் முழுக்க..

இதுவே தான் புதியவர் நேசனைத் தடுமாற வைத்திருக்கிறது போலும்.
விஜய் ரசிகரை (மட்டும்) குறிவைத்து அவர்களைத் திருப்திப்படுத்தினால் போதும் என்று படக்கதையைத் திருத்தியிருப்பார் போலும்.

மோகன்லாலின் பாத்திரத்துக்கு இன்னும் கொஞ்சம் வெயிட் கொடுத்து, விஜய் போலீசாக வந்த பிறகு ஒரு சரேல் மாற்றத்தையும் கொடுத்திருந்தால் துப்பாக்கி போல விஜய்யை ஜில்லாவும் ஒரு தூக்கு தூக்கியிருக்கும்.

அதுசரி, கண்டாங்கி சேலைக்கும் - ஜப்பானிய கிமோனோ உடைக்கும் என்னா சம்பந்தம்?
வைரமுத்து இழைத்து இழைத்து எழுதி, இமானின் நயந்து ரசிக்கக் கூடிய இசையில் விஜயும் ஷ்ரேயா கோஷலும் பாடி உருகவைத்த அந்தப் பாடலை எவ்வளவு அழகாக எடுப்பார்கள் என்று கற்பனை பண்ணி வைத்திருந்தேன். சொதப்பியிருக்கிறார்.

எனது எதிர்வுகூறல்கள் jinx ஆவது கிரிக்கெட்டில் மட்டும் தான் என்று நினைத்தேன்... ஜில்லா பாடலுக்கும் jinxஆஆ???

கண்டாங்கி பாடல் பற்றி பாடல் வெளிவந்த இரவு போட்ட status

விஜயினதும் காஜலினதும் அழகான அசைவுகளும் கண்களின் பாஷையும் தான் எஞ்சியிருக்கு.

ஆனால் விசிலோடு ஆரம்பித்து விசிலோடு முடிகிற விரசாப் போகையிலே போக்கிரி வசந்த முல்லையை ஞாபகப்படுத்தினாலும் ரசனையுடன் படமாகியிருக்கிறது.
விஜய்யின் ரசிக்கக் கூடிய குறும்புகளுடன் தமிழரின் பண்டைய நடன, கலையம்சங்கள் பாடல் முழுக்க வந்துபோகின்றன.

விஜய் எங்களை மறந்து ரசிக்கச் செய்கிற இடங்கள் தான் படத்தின் பெரிய ஓட்டைகளை ஓரளவுக்கு அடைத்து மொக்கை லெவலில் இருந்து சராசரிக்கு எடுத்துச் செல்கிறது.
அந்த அலட்சியமான கெத்து, அனாயசமான சண்டைக் காட்சிகள், காஜலுடனான குறும்பு காட்சிகள் (ஆனால் டிக்கி லோனா பிடிகள் எல்லாம் கொஞ்சம் அதிகமானவை தான்.. மாறி மாறி அமுக்குகிறார்களாம். சிரிக்கணுமோ?) - அதிலும் அந்த தாத்தா கதை கலக்கல், என்று விஜய் முத்திரைகள் பாராட்டுக்குரியவை.

இப்படியே ரசித்து விஜய்யிடம் ரசிகர்கள் (விஜய் ரசிகர்கள் மட்டுமல்ல) எதிர்பார்க்கும் விடயங்களையும் விஜய் சிறப்பாக செய்யக் கூடிய விடயங்களையும் இணைத்து இழைத்து ஜில்லாவை நேசன் இயக்கியிருந்தால்....
அதுசரி நினைப்பதெல்லாம் நடப்பதில்லையே.

விஜய்யும் ஜெயலலிதா குழப்பங்கள், தடை வருமோ வராதோ, பஞ்ச் வசனப் பயம் என்று குழம்பி குழம்பியே இருந்திருப்பதால் முழு ஈடுபாட்டோடு இருந்திருக்க மாட்டார் போலும். பாவம்.

ஜில்லா - இதுக்கு மேல என்ன சொல்ல நல்லா.


January 20, 2014

வீரம்

அண்மைக்கால ஆணி பிடுங்கல்கள் அமோகமாக இருப்பதால் இதுவும் லேட்டாப் பார்த்த படம்.
எனவே விமர்சன வகையில் சேர்க்காமல் கருத்துப்பகிர்வாக எடுத்துக்கொள்வீர்கள் என்று தெரியும்.

அஜித் ரசிகன் என்று முத்திரை குத்தாமல் (குத்தினாலும் பரவாயில்லை) ரசித்த விஷயங்களில் உடன்பாடுள்ளவற்றை எடுத்துக்கொள்ளுங்கள்.



வீரம் - சிறுத்தையில் தன் திரைக்கதை வேகம், கதையோடு  நகைச்சுவை, ஒவ்வொரு பாத்திரத்துக்கும் கொடுக்க வேண்டிய முக்கியத்துவம் + அழுத்தம் போன்றவற்றை நேர்த்தியாகப் பயன்படுத்தினால் பழகிய கதை + களமாக இருந்தாலும் படம் பெறும் வரவேற்பு என்பதை நிரூபித்தவர் இயக்குனர் சிவா.

தமிழ் சினிமாவில் காலாகாலமாகத் தெரிந்த அதே சென்டிமென்ட்கள், அதே மாதிரியான ஹீரோக்கள், வில்லன்கள், அதே மாதிரி காதல், இப்படி ஏகப்பட்ட 'அதே மாதிரி'கள் இருந்தாலும் சில படங்கள் மட்டும் ஜெயிக்கும் மந்திர formula பல இயக்குனர்கள், முன்னணி நடிகர்களுக்குப் புரிவதில்லை.

இதைக் கை வரப் பெற்ற வெகு சில இயக்குனர்கள் தங்கள் mixingஐ பக்குவமாகச் செய்து ரசிகர்களை ஈர்த்து ஜெயித்துக்கொண்டே இருக்கிறார்கள்.
கொஞ்சம் miss  ஆகினால் கூட மொக்கை ஆகிவிடும் அபாயம் இருப்பதால் உண்மையில் K.S.ரவிக்குமார், ஷங்கர், முன்னைய சுரேஷ் கிருஷ்ணா, P.வாசு, A.R.முருகதாஸ் இன்னும் பலர் உண்மையில் அந்தந்தக் காலகட்டங்களில் பாராட்டக் கூடியவர்களாக இருந்திருக்கிறார்கள்.

சிறுத்தை சிவாவும் தனது இரண்டாவது ஆனால் முக்கிய பரீட்சையில் சித்தி பெற்றுவிட்டார்.

வழமையாக கோட் சூட்டில் யுவனின் பின்னணி இசையுடன் கம்பீர நடை நடக்கும் தலயை வேட்டி சட்டையில் DSPயின் கதறும் இசையில் கெத்தான நடை நடக்க வைத்திருக்கிறார்.

அதுவும் கலக்கலாகத் தான் இருக்கிறது.



எனக்குப் பொதுவாகவே stylish making, நட்சத்திர அந்தஸ்துள்ள, பஞ்ச் வசனங்கள் சொல்வதற்குப் பொருத்தமானவர்கள் சொன்னால் பொருந்துகிற இப்படியான ஹீரோயிசத் திரைப்படங்கள் நேர்த்தியாகப் படம் எடுத்தால் மட்டுமே ஒட்டிக்கொள்ளும்.
இதனால் வீரம் ஆரம்பம் முதல் அச்சுப் பிசகாமல் ஒட்டிவிட்டது.

படம் முழுக்க நட்சத்திரக் கூட்டம் அலையடித்தாலும் அஜித், தமன்னா, சந்தானம், நாசர், அதுல் குல்கர்னி, தம்பி ராமய்யா ஆகியோருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு ஏனையோருக்கான பாத்திரப் பங்களிப்பு அளவோடு பகிரப்பட்டிருப்பது தெளிவான திரைக்கதையோட்டத்துக்கு உதவியிருக்கிறது.

ஏனைய முக்கியமான பெயர் அறிந்த நட்சத்திரங்கள் படத்தின் வெயிட்டுக்கு உதவியிருக்கிறார்கள் போலும்.


ஊகிக்கக் கூடிய திருப்பங்கள் இருந்தாலும் கூட அதை எடுத்திருக்கும் விதமும் அஜித்தின் அலட்டிக்கொள்ளாத ஆனால் ரசிக்கக் கூடிய actionஉம் வீரத்துக்கு வெற்றி தான்.

DSPயின் இசையை இரைச்சல் என்று பலர் சொன்னாலும் இப்படியான படங்களுக்கு படத்துடன் பொருந்துவது இவர் இசை தான் என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
பாடல்கள் ஒரு பக்கம், 'ரத கஜ துராதிபதி'  theme பொருத்தமான இடங்களில் பொங்கி வருகிறது.
ஒளிப்பதிவு புதியவர் வெற்றி. கலக்கி இருக்கிறார். இனி அமோகமாக வாய்ப்புக்கள் குவியலாம்.
ஒவ்வொரு காட்சியின் தன்மையறிந்து நிறங்களையும் கமெராக் கோணங்களையும் மாற்றியிருப்பதில் அசத்தியிருக்கிரார்.

'இவள் தானா' பாடலில் சுவிட்சர்லாந்து அழகை அப்படியே உள்வாங்கி அள்ளித் தெளித்திருப்பது ரசனை.
அதில் ஒரு சில நிமிடங்கள் பின்னால் பனி மலைகளின் வெண்மையுடன் அஜித், தமன்னா இருவரும் வெள்ளை ஆடையில் வரும் காட்சி கொள்ளை அழகு.
(ஆனால் இதே பாடல்களைப் படத்தின் தன்மையுடன் கிராமிய இயற்கை அழகுடன் எடுத்திருந்தால் இன்னும் நல்லா இருந்திருக்காதா சிவா?)



இன்னொரு பலம் பரதனின் சுட்டு சாணை தீட்டிய கத்தி போன்ற வசனங்கள்.
நறுக் + சுருக்.
 நீட்டி முழக்காமல் நெஞ்சில் நிற்பது போல் அளவாக அளந்து எழுதியிருக்கிறார்.
அதிலும் அஜித் முன்னைய பஞ்ச் படங்கள் போல அடுக்கடுக்காமல் பேசாமல் அளவோடு அழுத்தமாகப் பேசியதை ரசிக்கலாம்.
"பெரிய மீசையோட வேற வந்திருக்கிறாய். பஞ்ச் வசனம் பேசாமப் போனா நல்லா இருக்காது"
இப்படி சில நக்கல் இடங்களும் நல்லாவே இருக்கு.

"சோறு போட்டவ எல்லாம் அம்மா; சொல்லிக் குடுத்தவர் எல்லாம் அப்பா" ரக டச்சிங்கும் உண்டு.

முரட்டுக் காளையை தழுவி இருக்கிறார்கள் என்று ஆரம்பத்தில் சொல்லப்பட்டாலும், வானத்தைப்போல, ஆனந்தம் போன்ற 'குடும்ப'திரைச் சித்திரங்களையும் அல்லவா அளவாகக் குழைத்திருக்கிறார்கள்.

puzzle விளையாட்டில் வந்து விழும் set pieceகள் போல அஜித் - தமன்னா,  வில்லன்கள், சந்தானம் & தம்பி ராமையா ஆகியோரும் மட்டுமல்லாமல் சண்டை இயக்குனர், ஒளிப்பதிவாளர்,கலை இயக்குனர், எடிட்டர் ஆகியோரையும் நாம் இயக்குனர் சிவாவுடன் சேர்த்தே பாராட்ட வேண்டும்.

சண்டைக் காட்சிகள் அனல் பறக்கிறது. புதுமையாகவும் வேகமாகவும் இருப்பது முக்கியமானது.
படம் முழுக்க ஏதோஒவ்வொரு கட்டத்தில் சண்டைகள் வந்துகொண்டே இருந்தாலும் சண்டை பயிற்சியாளர் சில்வாவும், ரிஸ்க் எடுக்கும் அஜித்தும் ரசிக்க வைக்கிறார்கள்.

சந்தானம் இருந்தும், மிக நீண்ட காலத்தின் பின் சந்தானத்தினால் படம் ஓடாமல் அந்த பெரும் பாரம் இல்லாமல் சந்தானம் relaxed ஆக ரசித்து நகைச்சுவை செய்ததாக ஒரு எண்ணம் மனதில்.
கொஞ்சக் காலம் அலட்டியாகத் தெரிந்த சந்தானம் மீண்டும் வீரம் முதல் refresh ஆகியுள்ளார் போலத் தெரிகிறது.
அஜித்தும் இவ்வாறு ஜாலியாக காமெடி செய்து நீண்ட காலம்.
அஜித் இல்லாத காட்சிகளை சந்தானம் நிரப்புகிறார்.


இடைவேளைக்குப் பிறகு தம்பி ராமையாவும் சேர்ந்து கொள்வது கலகலப்புக்கு மேல் சிரிப்போ சிரிப்பு.
தம்பி ராமையா தமிழில் இன்னொரு முக்கியமான பல்சுவை ஆற்றலுள்ள நடிகராக வேகமாக வளர்ந்து வருகிறார்.

வில்லன்களில் அதுல் குல்கர்னி அருமையான ஒரு தெரிவு.
ஹீரோ - வில்லன்கள் மோதலில் பறக்கும் பொறி அசத்தல்.

சிவாவின் சிறுத்தையிலும் வீரத்திலும் இருந்து மசாலா இயக்குனர்கள் கற்றுக்கொள்ளவேண்டிய விஷயங்கள் நிறையவே இருக்கின்றன.

அஜித் போன்ற ஒரு மாஸ் ஹீரோவை மாறுபட்ட பாத்திரத்தில் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய விதமாக எவ்வாறு காட்டலாம் என்பதும், இவ்வளவு வேகமான, விறுவிறு காட்சிகளுக்கிடையிலும் சந்தானம் போல தனியாக நின்று சிக்சர் போடக் கூடிய சந்தானத்தை நகைச்சுவை படத்தை மொக்கை போடாமல் எவ்வாறு சுவைக்காக மட்டும் பயன்படுத்தலாம் என்பதையும் முக்கியமாக கவனிக்கவேண்டும்.



ரசித்த இன்னும் சில விஷயங்கள்...

அஜித்தின் வேட்டி - சட்டை கெட் அப்.
படம் முழுவதும் (பாடல்கள் தவிர) வெள்ளையிலேயே வருவது ஒரு கம்பீரம்.
படம் முழுக்க நிறைந்து கிடக்கும் ஒருவித குடும்ப குதூகலம்.
அந்த சுட்டிக் குழந்தை
உறுத்தாமல்,திணிக்காமல் படம் முழுக்க நிறைந்து கிடக்கும் கமெராக் கவிதைகள்.
சந்தானம் அடிக்கும் சிம்பிளான ஆனால் வயிறு வலிக்கும் கமென்டுகள்
தம்பி ராமையாவின் நசுவல் வில்லத்தனம்.
ரமேஷ் கண்ணா - தேவதர்ஷினியின் 'ஓ '
அஜித் - தமன்னா காதலில் விழ வைக்க சந்தானம், தம்பிமார், ரமேஷ் கண்ணா எடுக்கும் முயற்சிகள்..குறிப்பாக அந்த பறவை பேசும் காட்சி + 'தியானம்'
ஒவ்வொரு பாடல் காட்சிக்குமான ஆடைத்தெரிவுகள்.
நான் பார்த்த தமிழின் அசத்தல் சண்டைக் காட்சிகள் நிறைந்த படங்களில் இந்த வீரமும் ஒன்றென நினைக்கிறேன்.


பிடிக்காமல் போன சில விஷயங்கள் 

அஜித்தின் தலை நரைத்திருக்கவும் அவரும் தம்பிமாரும் திருமணம் முடிக்காமலே இருக்க சொல்லப்பட்டும் சப்பைக் காரணம் ஒட்டவில்லை.
(ஆனால் அமரர் பெரியார்தாசன் வரும் அந்த டீக்கடை காட்சி வசனம் டச்சிங்.
"அவன் டீ குடிச்சிட்டே இருக்கிறான்; நான் குடுத்திட்டே இருப்பேனடா")
சில காட்சிகளில் தமன்னா காட்டும் முகபாவங்கள் - படு செயற்கை
இரண்டாம் பாதியில் தாடியில்லாமல் தனியே மீசையுடன் வரும் அஜித் கெட்அப்.
என்ன தான் விறுவிறுப்பு, ரசனையாக இருந்தாலும் மொத்தமாக யோசித்துப் பார்க்கையில் இன்னும் இந்தக் குண்டுச் சட்டியை விட்டு வெளியே வரமாட்டார்களா என ஆயாசப்படவைக்கும் கதை.

சிவா போன்றவர்கள் ரிஸ்க் எடுக்கத் தயாராகும் அஜித் போன்றவர்களை வைத்து இன்னும் கொஞ்சம் வித்தியாசமாக வெளியே வரலாமே?

அஜித்தை சொதப்பிவிடவில்லை; அதை விட என் நேரம் கொட்டாவி இல்லாமல் கொடுத்த காசுக்கு ரசிக்கக் கிடைத்து என்பது வரை திருப்தி.

இதனால் தான் படம் பார்த்தவுடன் போட்ட ட்வீட்.

வீரம் - கதை, களம் இதெல்லாம் பழகியவை என்றாலும் அஜித் மிடுக்கு, படமாக்கிய விதம், சண்டைகளில் புதுமை, சந்தானம் கலக்கலில் #வீரம் வென்றது.
#Veeram

வீரம் - வென்றது.

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner