February 28, 2009

பழைய laptopகளை என்ன செய்யலாம்?

எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க.. 
கூடிப்போச்சு..  
வசதிகளும்,கொழுப்பும். 
;)



















February 27, 2009

கராச்சியில் கொட்டாவி,க்ரைஸ்ட்சேர்ச்சில் குளிர்


நேற்று இந்தப் பதிவை இடுவதற்கு நான் தயாராக இருந்தபோதும், நேற்றைய நாளின் காலைப் பொழுதில் நிகழ்ந்த துயர சம்பவம் காரணமாக இதைப் போ வேண்டாம் என்று விட்டு விட்டேன்.. இன்னமும் மன அமைதி இல்லாத போதும், ஒரு சின்ன நம்பிக்கை இப்போது எழுந்திருப்பதால், இந்திய - நியூ சீலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது போட்டி ஆரம்பிக்க ஒரு மணி நேரம் இருக்கும் நேரத்தில் இந்த கிரிக்கெட் பதிவு...


6 மணித்தியால நேர வித்தியாசத்தில் இருவேறு இடங்களில் இரு வேறு வடிவக் கிரிக்கெட்டுக்கள் பலவேறு சுவாரஸ்யங்களை நேற்றுமுன்தினம் வழங்கியிருந்தன.

பாகிஸ்தானின் சூடுகிளப்பும் கராச்சியில் கொட்டாவியும் குறட்டையும் தந்த ஒரு மகா போர் டெஸ்ட் போட்டியின் இறுதிநாள்.!

மறுபக்கம் எலும்பு நடுங்கும் குளிர் சூழ்ந்த நியூசிலாந்தின் க்ரைஸ்ட்சேர்ச்சில் இந்திய அணியின் இருமாத கால கிரிக்கெட் சுற்றுலாவின் முதலாவது போட்டி நாள்! ஒவ்வொரு நிமிடமும் பரபரப்பும் விறுவிறுப்பும் தந்த Twenty 20 போட்டி!

எனினும் இரண்டு போட்டிகளுக்கும் இருக்கும் ஒரு மிகப் பெரிய ஒற்றுமை சாதனைகள்! குறிப்பாக ஓட்ட சாதனைகள்.

கராச்சியில் இலங்கை அணியின் முதலிருநாள் சாதனைகளுக்கு மேலாக பாகிஸ்தானிய அணி பட்டைகிளப்ப புதிய King Khan என்று ரசிகர்களால் ஒரு சில நாட்களிலேயே அழைக்கப்படுமளவுக்கு எழுச்சி பெற்றுள்ள பாகிஸ்தானின் புதிய தலைவர் யூனிஸ்கான் தனக்கான புதிய மைல் கற்களைப் பதிந்துள்ளார்.

இருநாட்களுக்கு முன்னர் கராச்சி மைதானத்தில் இலங்கை பெற்ற அதிகூடிய மொத்த ஓட்ட சாதனைகளையை பாகிஸ்தான் தன் வசப்படுத்தியது.



யூனிஸ்கான் பெற்ற முச்சதம்.
அவரது முதலாவது
பாகிஸ்தானில் வீரரொருவர் பெற்ற மூன்றாவது -
சர்வதேசத்தில் 23வது
டெஸ்ட் அணித்தலைவராக வீரர் ஒருவர் பெற்ற 6வது
யூனிஸ்கான் தனது 5000 டெஸ்ட் ஓட்டங்களையும் பூர்த்திசெய்தார். (6வது பாகிஸ்தானிய வீரர்)

மறுபக்கம்
பாகிஸ்தானில் 6 விக்கட் இழப்புக்கு 765
பாகிஸ்தானின் அதிகூடிய டெஸ்ட் ஓட்ட எண்ணிக்கை.
பாகிஸ்தான் மண்ணில் பெறப்பட்ட மிகப்பெரிய ஓட்ட எண்ணிக்கை.
இலங்கை அணிக்கெதிராகப் பெறப்பட்ட அதிகூடிய ஓட்ட எணணிக்கை - இதுவரை இலங்கை அணிக்கெதிராக எந்தவொரு அணியுமே 700 ஓட்டங்களை பெற்றதில்லை.

18 விக்கெட்டுக்கள் மாத்திரமே வீழ்ந்த இந்தப்போட்டியின் மைதானத்தில் பராமரிப்பாளர் கடுமையான விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளார்.(இரு அணி வீரர்களாலுமே)

இன்னும் சிறிது நேரம் அக்மலைத் துடுப்பெடுத்தாட யூனி;ஸ்கான் அனுமதித்திருந்தால் அந்தப்போட்டியின் 4வது 200க்கு மேற்பட்ட ஓட்ட எண்ணிக்கை பெறப்பட்டிருக்கும்.

நான்கு துடுப்பாட்ட வீரர்கள் 150க்கு மேல் ஓட்டங்கள் பெற்ற முதல் தடவை இது!

இரு அணிகளுக்கும் துடுப்பாட்ட பயிற்சி வழங்கி துடுப்பாட்ட சராசரிகள் சாதனைகளை உயர்த்திவிட்டு முடிவை மட்டும் அனாதையாக்கிவிட்டு கராச்சி டெஸ்ட் போட்டி நிறைவு பெற்றுவிட இரு அணியினரும் ரசிகர்களும் அடுத்த லாகூர் டெஸ்ட் போட்டிக்காகக் காத்திருக்கின்றார்கள்!

இலங்கையின் மகேல ஜெயவர்த்தனாவின் தலைமையிலான இறுதி டெஸ்ட் போட்டியில் அவர் வெற்றியுடன் விடைபெற வேண்டுமென இலங்கை ரசிகர்கள்
சரிவிலிருந்தும் மிகப் பெரிய வீழ்ச்சியொன்றிலிருந்தும் மெள்ள மெள்ள எழுந்துவரும் பாகிஸ்தானிய அணி உத்வேகம் பெற வெற்றியொன்றை எதிர்பார்த்து பாகிஸ்தானிய ரசிகர்கள்.

அனால் ஆடுகளம் என்ன விதமான பலனை எடுத்து வைத்திருக்கிறதோ?

மற்றுமொரு கராச்சி ஆடுகளம் தான் லாகூரிலும் என்றால் பிரயன் லாரா ஆண்டவரிடம் தனது உலக சாதனையைக் காப்பாற்றுமாறு மன்றாட ஆரம்பிப்பது நிச்சயம்!

மறுபக்கம் கிரைஸ்ட் சேர்ச்சில் இரு அணி வீரர்களும் சேர்ந்து 24 சிக்ஸர்களை விளாசித் தள்ளியிருந்தனர்.

இது Twenty 20 போட்டியொன்றுக்கான சாதனை! இந்திய வீரர்களில் சேவாக் 6ஆண்டுகளின் பின் நியூசிலாந்து மண்ணில் தான் எதிர்கொண்ட முதல் மூன்று பந்துகளையுமே ஆறு ஓட்டங்களாக விரட்டியடித்தார். ஆனால் அவர் நிலைத்தது பத்து பந்துக்கள் மாத்திரமே!

இந்திய அணியின் அதிரடிவீரர்கள் மொத்தம் 13 சிக்கஸர்கள் அடித்தபோதும் (உலக சாதனையை விட ஒன்று குறைவு) நின்று நிலைக்காமல் ஆட்டமிழந்ததால் நியூசிலாந்திடம் தோற்றுப் போயினர்.

ஆறு – பின் ஆட்டமிழத்தல் இது தான் இந்திய வீரர்கள் எல்லோரதும் வாக நேற்று முன்தினம் இருந்தது.

தலைவர் தோனி சொன்னார் "அதிகமாக ஆசைப்பட்டோம்;அவசரப்பட்டடோம்;ஆட்டத்தில் கோட்டை விட்டோம்"


புதிய கடும் நீல சீருடை ராசியில்லையோ?

ஆறு ஓட்டங்கள் மழையாய்க் குவிந்த போட்டியில் ஏழேயேழு 2 ஓட்டங்கள்.
நியூசிலாந்தின் சிறிய மைதானங்களின் கைங்கரியங்கள் இவை!

உலக T-20 சம்பியன்களான இந்தியா நியூசிலாந்திடம் மட்டும் இரு தடவைகள் இலகுவாக சுருண்டு விட்டார்கள். உலகக் கிண்ணத்திலும் இந்தியா கிண்ணத்தை வெல்லமுதல்,இந்தியாவை வென்ற ஓரே அணி நியூசிலாந்து மட்டும்தான்!

இன்று பார்க்கலாம் - இந்தியா தனது வலிமையைக் காட்டுகிறதா என்று!

ஆனால் முக்கியமான விடயம்
இந்தியாவுக்கு சவாலான விடயங்கள்
நியூசிலாந்தின் அளம் அதிரடி துடுப்பாட்ட வீரர்கள்
பல நுணுக்கங்கள் வைத்துள்ள ஸ்விங் பந்துவீச்சாளர்கள்
யுவராஜ் தோனியைக் குறிவைத்தள்ள வெட்டோரி

இவற்றில்
இப்போது – 20 சர்வதேசப் போட்டிகளில் அதிக ஓட்டங்கள்
பெற்றவர்கள் நியூசிலாந்தின் பிரெண்டன் மக்கலம்
அதிக விக்கட்டுக்களை வீழ்த்தியவர்கள் இருவரில் ஒருவர்
நியூசிலாந்து அணித்தலைவர் வெட்டோரி
இந்த நெருக்கடிகளோடு
எலும்பு நடுக்கும் குளிரும்
பந்தை நினைத்தபடி ஊகிக்க முடியாத கபடத்தனமான காற்றும் இந்தியாவுக்கு இத்தொடர் முழுவிலும் சவாலே!


February 26, 2009

தமிழ் ஊடகவியலாளர் வித்தியாதரன் கடத்தப்பட்டார் அல்ல கைது செய்யப்பட்டுள்ளார்

இன்று காலையில் கிடைத்த அதிர்ச்சியான,அச்சம் தரும் தகவல் ...  

இலங்கையின் சிரேஷ்ட தமிழ் ஊடகவியலாளரும்,'சுடரொளி'பத்திரிகையின் பொது முகாமையாளராகவும்,ஆசிரியராகவும் இருந்து துணிச்சலாக செய்திகள்,கட்டுரைகள் தந்து கொண்டிருந்தவருமான வித்தியாதரன் கடத்தப் பட்டுள்ளார் என்ற செய்தி தான் அது. கொழும்பு,கல்கிஸ்ஸையில் மரணவீடொன்றுக்கு சென்று திரும்பும் வேளையில் இவரை வெள்ளை வானில் வந்த இனந்தெரியாதோர் பலவந்தமாக,பலர் பார்க்கும் வேளையில் கடத்தி சென்றுள்ளதாக நேரில் கண்டோர் தெரிவித்துள்ளனர்.  

அண்மைக்காலத்திலும் துணிச்சலாகவும்,உண்மையாகவும் பல சம்பவங்களையும்,நாட்டு நடப்புக்களையும் ஆசிரியத் தலையங்கமாகவும்,கட்டுரைகளாகவும் எழுதி வந்தவர் 'வித்தி' எனப்படும் வித்தியாதரன் என்பது குறிப்பிடத் தக்கது.  

தமிழ் ஊடகத் துறைக்கு மற்றுமொரு பகிரங்க மிரட்டல்..  

வித்தி பத்திரமாக திரும்ப பிரார்த்திப்பதைத் தவிர வேறொன்றும் எங்களால் செய்ய முடியாத நிலை.

பின்னர் கிடைத்த செய்தியின் படி காவல்துறைப் பேச்சாளர் அவர் கடத்தப்படவில்லை எனவும்,கைது செய்யப்பட்டார் எனவும், தாங்கள் வித்தியாதரனைக் கைது செய்தது விசாரணைக்காகத் தான் என்று குறிப்பிட்டுள்ளார்கள். இதே கருத்தை ஊடகத்துறை அமைச்சரும் உறுதிப்படுத்தியுள்ளார்.

தற்போதும் அவர் விடுதலை செய்யப்படவில்லை என்றும் விசாரணைகள் நடைபெற்றுவருவதாகவும் பல்வேறு செய்தி ஊடகங்களும் தெரிவிக்கின்றன.


February 24, 2009

எல்லாப் புகழும் ஒஸ்கார் ரஹ்மானுக்கே..


நேற்றைய நாள் உலகத் தமிழர் எல்லாருமே தமிழராய்ப் பிறந்ததற்கு ஒரு தடவையாவது பரவசமும் பெருமையும் பெற்றிருக்கக் கூடிய ஒருநாள்!

'ரோஜா' திரைப்படத்தின் பாடல்கள் மூலமாக கீ போர்டும் கையுமாக புதியதொரு இளம் மந்திரவாதியாக ஆரம்பித்த ஏ.ஆர்.ரஹ்மான் என்ற இளைஞன் உலக மகா  இசைக்கலைஞனாக 'ஒஸ்கார்'என்ற இசைமகுடம் சூடிக்கொண்டநாள்!

கேட் வின்ஸ்லட் என்ற பிலபலமான ஹொலிவூட் / பிரித்தானிய நடிகை ஒரு தடவை இறுதிச் சுற்று வரை நியமனம் பெற்று இம்முறையே விருது கிடைக்க மெரில் ஸ்டீரிப் என்ற நடிகை 15 ஆண்டுகளாகப் போராடிக் கொண்டிருக்க(இரு தடவையே இவர் வென்றிருக்கிறார்) இந்தியாவில் புறப்பட்ட இசைப்புயல் ஒரே தடவையில் ஒரே படத்தில் இரு 'ஒஸ்கார்' விருதுகளை வென்று வந்திருக்கிறார்!

உலகம் முழுவதும் ஏ ஆர் ரஹ்மானை கொண்டாடுகிறது. 

இந்தியா முழுவதும் இவரது பெயரை உச்சரித்து உச்சரித்து உருகிப் போகிறது!

மேடையிலே ரஹ்மான் உச்சரித்த 'எல்லாம் புகழும் இறைவனுக்கே'

மத அடையாளம் கடந்து – எல்லாத் தமிழ்பேசும் இதயங்களிலும் தந்த புல்லரிப்பும் புளங்காகிதமும் இருக்கிறதே இந்த ஜென்மத்துக்குப் போதும்!

இலங்கையிலே நாம் வாழும் பிரச்சனைகளின் சூழல் கூட மறந்து போய்த் தமிழையைப் பிறந்ததற்குப் பெருமையடைந்த போது தந்த ரஹ்மானுக்கு மனதால் நன்றிகள் சொன்னேன்!

உலக நட்சத்திரங்கள் அனைவரும் கூடியிருந்த KODAK அரங்கில்,இன்னும் பல கோடி மக்களின் உலகம் முழுவதும் பார்த்திருக்க,ரஹ்மான் தனது பாடலையும் பாடி,அன்னைக்கு அர்ப்பணித்து,அனைவருக்கும் நன்றி சொல்லி உலகின் அதி உயர் திரை விருதுகளை இரு தடவை அள்ளிக்கொண்ட போது எண்பது ஆண்டுகால ஒஸ்கார் சரித்திரத்தில் தமிழுக்குக் கிடைத்த மிகப்பெரிய தருணம் அதுதான்.

கமல் சொன்னது போல இது உலக தரம் என்பதை விட உலகிலே திரை,இசை மற்றும் திரையிசை மூலமாக ஆதிக்கம் செலுத்திவரும் அமெரிக்கத் தரமான விருது எம்மைத் தேடி வந்திருப்பதாக எண்ணிக் கொண்டாலும்,ஒரு தமிழருக்குக் கிடைத்திருப்பது மகிழ்ச்சியே. 

எனினும் தமிழ் திரைப்படம் ஒன்றின் தமிழ்ப்பாடல் மூலமாக எங்கள் ரஹ்மான் எப்போது இந்த விருதை அள்ளிவருவார் என்ற ஏக்கம் எழாமலும் இல்லை.. ஜயகோவுக்கு கிடைத்ததற்குப் பதிலாக ஓ ஷயாவுக்கு கிடைத்திருந்தால் இன்னும் கொஞ்சம் நாங்கள் மகிழ்ந்திருப்போம். மாயா/மாதங்கி ரஹ்மானோடு சேர்ந்து உருவாகிய பாடலாச்சே..

ரஹ்மானுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்து அவரது திறமை,கடுமையான உழைப்பு,புதிய தேடல்களுக்கு நன்றிகளை சொல்லிக் கொள்வதோடு,அவரது நன்றி மறவாமையும்,தன்னம்பிக்கை,தன்னடக்கம் ஆகியவை இன்னும் மேலே மேலே ரஹ்மானை உயரத் தூக்கி செல்லும் என்றும் குறிப்பிட்டே ஆகவேண்டும். 

இன்றைய என் பதிவில் ரஹ்மான பற்றிய எனது மேலும் சில எண்ணக் குறிப்புக்களைப் பகிர்ந்து கொள்ள எண்ணியுள்ளேன்..

மற்ற இசையமைப்பாளர்களிடம் இருந்து ரஹ்மானை வேறுபடுத்திய விடயங்கள் மற்றும் ரஹ்மான் தமிழ் திரையிசையில் ஏற்படுத்திய தாக்கங்கள் என்று நான் கருதும் விடயங்கள்..

இதில் யாருக்காவது மாறுபட்ட கருத்துக்கள் இருந்தால் அல்லது நான் குறிப்பிடாமல் விட்ட விடயங்கள் என்று நீங்கள் கருதுபவை இருந்தால் பின்னூட்டங்கள் மூலமாக அறியத் தாருங்கள்..

  ரஹ்மான அளவுக்கு வேறெந்த இசையமைப்பாளரும் இத்தனை அதிக புதிய பாடக,பாடகியரை அறிமுகப்படுத்தவில்லை..
ரோஜாவில் ஹரிஹரநொடு ஆரம்பித்த இந்த நீண்ட பட்டியல் இறுதியாக வெளிவந்த டெல்லி 6 வரை தொடர்கிறது..

ரஹ்மானின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட அநேகர் (எல்லோருமே என்றுகூட சொல்லலாம்) மிகப் பிரபலமானவர்களாகவும்,ஏனைய எல்லா இசையமைப்பாளரின் இசையிலும் பிரகாசிக்கின்றார்கள் எண்பது குறிப்பிடத் தக்கது.

மிகச் சிறந்த உதாரணங்கள்

ஹரிஹரன்,உன்னி கிருஷ்ணன்,ஸ்ரீநிவாஸ்,ஹரிணி,கார்த்திக்,ஷங்கர் மகாதேவன்,அனுராதா ஸ்ரீராம்,சுபா.. இப்படியே இன்றைய சின்மயீ, நரேஷ் ஐயர்,பென்னி தயாள் வரை வரும்..

அத்துடன் ரஹ்மான் தமிழுக்குக் கொண்டுவந்த ஹிந்தி பாடக,பாடகியரை தங்கள் ஆஸ்தான பாடகராக்கிக் கொண்ட ஏனைய இசையமைப்பாளர்களும் உண்டு..

இந்த ஏராளம் புதிய குரல்கள் மூலமாக தமிழ்த் திரையிசையுலகில் இருந்துவந்த Monopoly உடைந்தது;பாடல்களுக்கும் புத்துணர்ச்சி பிறந்தது.

சுக்விந்தர்,உதித்,மதுஸ்ரீ என்று இந்தப் பட்டியலில் இருப்போர் ரஹ்மானின் இசையில் பாடும்போது தமிழை பிழையில்லாமல் பாடுவதையும்,தேவா,யுவன்,ஸ்ரீக்காந்த் தேவா போன்றோரின் இசைகளில் பாடும்போது தமிழ் சொற்களை கடித்து இம்சிப்பதையும் பார்க்கும்போது, ரஹ்மான் தனது ஒவ்வொரு பாடலிலும் காட்டும் அக்கறை புரிகிறது.

இளைய தலைமுறையாக இருந்தாலும்,புதிய பாடக பாடகியரை ரஹ்மான அறிமுகப்படுத்தினாலும் கூட,இன்றைய இசையமைப்பாளர்களில் ரஹ்மான் அளவுக்கு எந்த ஒரு இசையமைப்பாளரும் மூத்த பாடக,பாடகியரின் குரல்களை அதிகளவில் பயன்படுத்தியவர் எவரு யாருமே கிடையாது..

பீ.சுசீலா(கண்ணுக்கு மையழகு)
டி.கே.கலா(குளிச்சா குத்தாலம்)
கல்யாணி மேனன்(முத்து படப்பாடல்)
சீர்காழி சிவ சிதம்பரம் (ஓடக்கார மாரிமுத்து,அம்மி மிதிச்சாச்சு)
டி.எல்.மகராஜன்(நீ கட்டும் சேலை)
M.S.விஸ்வநாதன் (மழைத்துளி மழைத்துளி)

இன்னும் SPB,K.J.யேசுதாஸ்,மலேசியா வாசுதேவன்,S.ஜானகி,ஜெயச்சந்திரன் போன்றோரை எல்லாம் எண்ணிக்கை இல்லாத அளவுக்கு ரஹ்மான் பயன்படுத்தி ரசிகர்களுக்கு விருந்தளித்திருக்கிறார்.

மேற்குறிப்பிட்ட மூத்த தலைமுறையினரில் பலபேர் நீண்ட காலம் பாடாமல் இருந்தோர் என்பதும் முக்கியமானது..

எனது ஒரே ஆதங்கம் வெண்கலக் குரல் TMSஐயும் ரஹ்மான் ஒரே தடவையாவது ஏதாவது ஓர் பாடலில் பயன்படுத்தி இருக்கலாம் எண்பது தான்.. பொருத்தமான இடம் வரும் வேளை ரஹ்மான் பயன்படுத்துவார் என எதிர்பார்க்கிறேன்.

பல கர்நாடக சங்கீத பின்னணி உடையோர் ரஹ்மான் மூலமாகவே திரையிசை உலகுக்குள் நுழைந்து தரம் மாறாமல் ஜோலிக்கின்றார்கள். 

அந்தந்த SPECIALISTகளை குறித்த பாடல்கள் மூலமாகத் தரும் திறமையும்,கைவண்ணமும் ரஹ்மானின் பிறவி ஞானம் என்றே சொல்லவேண்டும்.

மழலைகளின் குரலுக்கு M.S.ராஜேஸ்வரியையும்,ஜானகியையுமே பலர் பயன்படுத்தி இருக்க,ரஹ்மான் தான் மழலை மாறாத G.V.பிரகாஷின் குரலை அறிமுகப்படுத்திய விதம் தமிழ் திரை இசையில் ஒரு மாற்றத்தின் ஆரம்பம் என்றே சொல்லவேண்டும்.  

ஹிந்தி,ஆங்கிலப் பாடல்களில் எமது தமிழ் இளைய தலைமுறை மோகம் கொண்டு அலைந்த காலம் போய் தமிழ் பாடல்களைப் பிற மொழிபேசுவோரும் முணுமுணுக்க முக்கியமான காரணம் ரஹ்மான் என்றால் அது மிகையல்ல.

இளையரஜாவுக்கு அடுத்தபடியாக பின்னணி இசைக்கு (BGM) அதிக சிரத்தை எடுத்து,பின்னணி இசையைக் கூர்ந்து அவதானிக்க வைத்தவர் ரஹ்மான் மட்டுமே. 
ரஹ்மானின் இசையில் வந்த ரோஜா,பாம்பே,உயிரே,என் சுவாசக் காற்றே,இருவர்,ரங்கீலா,கண்டு கொண்டேன்,திருடா திருடா, இன்றைய Slumdog Millionaire படங்களின் பின்னணி இசைகள் மெய் சிலிர்க்க செய்யும் உலகத் தரம் வாய்ந்தவை.

நாதஸ்வரம்,பறை,தவில்,புல்லாங்குழல்,Saxophone என்று எத்தனையோ வாத்தியங்களை ஒரிஜினல் வடிவம் மாறாமல் பரிமாணங்கள் பல மாற்றி தனது பாடல்களில் பொருத்தமான இடங்களில் பயன்படுத்தி (BGM இலும் கூட) பல இசை விற்பன்னர்களை ஆச்சரியப்படுத்தியவரும் ரஹ்மானே..

டூயட் மறந்து போகுமா??

இளையராஜாவின் பின்னர் பாடல்களின் மூலமாக சாதரண திரைப்படங்களை வெற்றித் திரைப்படங்களாக மாற்றியவர் இசைப் புயல் ரஹ்மான்.ஓடவே இயலாத நோண்டிக் குதிரைத் திரைப்படங்களையும் பல சந்தர்ப்பங்களில் ரஹ்மானின் பாடல்கள் ஒட்டியிருக்கின்றன.

மிக நீண்ட காலத்தின் பின்னர் கவிதை வரிகளையும்,பாடல் வரிகளையும் கூர்ந்து அவதானித்து ரசிக்க வைத்தது ரஹ்மானின் வருகைக்குப் பின்னரே.. (வைரமுத்துவின் மீதான எனது அபிமானத்தின் காரணமாக எனது தனிப்பட்ட கருத்தாகவும் இது இருக்கலாம்)

ராப்,ஜாஸ் என்று புதிய இசை வடிவங்களை ரஹ்மான் தமிழில் பிரபல்யப் படுத்தி இசைக்கு இளைஞர்களை அடிமையாக்கினதோடு ஏனைய எல்லா இசையமைப்பாளர்களும் அவ்வாறு செய்தே ஆகவேண்டிய கட்டாயத்துக்குள்ளாகினர்.
ராஜாவே தனது இசைப்பாணியை மாற்றியே ஆகவேண்டி வந்தது.. ராஜாவின் மகன் யுவனோ இன்னொரு ரஹ்மானாக ஆகிவிட்டார்.

ரஹ்மானின் ஆரம்பத்தில் 'கம்பியுட்டர் இசை தானே.. A.R.ரஹ்மானிடம் எந்த சுய திறமை இல்லை' என்று எழுந்த புழுக்க விமர்சனங்கள் பொய்த்துப் போன விதம்..

இதற்கான முக்கிய காரணம் ரஹ்மானின் ஆழ்ந்த இசைஞானம்,இசை நுணுக்கங்கள் பற்றிய தெளிவான அறிவு,நவீன தொழினுட்பங்களை நுணுக்கமாக தமிழ் திரையிசைக்குள் நுழைக்கத் தெரிந்த புத்திஜீவித்தனம். 

அவ்வளவு தூரம் இயற்கையையும் பாடல்களிலும்,இசையிலும் பங்குபற்ற செய்தார். இயற்கையின் ஒலிகளை ரஹ்மான் தொழிநுட்பம் மூலம் இசையில் இணைத்த புதிய புரட்சியை நிகழ்த்தியதன் மூலம் ஒரு புத்துணர்ச்சி அலையை ரஹ்மான் உருவாக்கியிருந்தார்.

A.R.ரஹ்மானின் வரவின் பின்னர் தான் உயர் தொழிநுட்ப சுத்தங்களும்,நுணுக்கங்களும் பாடல்களிலும்,பின்னணி இசையிலும் எதிர்பார்க்கப் பட ஆரம்பித்தன.

திரையிசையல்லாத Album பாடல்களுக்கும் மவுசு ஏற்பட ரஹ்மானே முக்கிய காரணம். 

கர்நாடக,கிராமிய இசைகளிலும் தனது ஆழ்ந்த அறிவைப் பயன்படுத்தி A.R.ரஹ்மான் பாடல்கள் தந்தது இளைய தலைமுறையினரையும் அவை பற்றி திரும்பிப் பார்க்கவைத்த பங்களிப்பும் ரஹ்மானுக்கு உள்ளதென்பதும் உண்மையே.

புயலாக ஆரம்பித்ததனால் 'இசைப் புயல்' என்று பெயர் சூட்டப் பட்டு விட்டாலும்,இனி யாராவது ரஹ்மானுக்கு பொருத்தமான இன்னுமொரு பட்டம் சூட்டினால் நன்றாக இருக்கும் என்று நான் கருதுகிறேன். (ஒஸ்கார் நாயகன் பரவாயில்லையா???- கமல் கோபிப்பாரா?)

இன்னொரு சந்தோசம்.. முன்பிருந்தே எனக்கு இருக்கும் தனிப்பெருமை - நம்மோட இனிஷியலும் இசைப்புயலின் இனிஷியலும் ஒன்றே.. A.R.  

    

 

  



February 23, 2009

கிரிக்கட் ரசிகர்களுக்கு மட்டும்


ஒரேநாளில் நான்கு சாதனைகள் -  ஐந்து மைல் கற்கள்.

இலங்கை பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான கராச்சி டெஸ்ட் (முதலாவது டெஸ்ட்) போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டத்தில் தான் இத்தனை பரபரப்புக்களும்.

முதல் நாளிலேயே ஆதிக்கம் செலுத்திய இலங்கை அணி அண்மைய ஒரு மாத காலமாக இந்திய அணியிடம் வாங்கிக் கட்டியதை எல்லாம் பரிதாபமான பாகிஸ்தான் அணிக்குத் திருப்பிக் கொடுத்தது. இன்று ஆரம்பிக்கும் மூன்றாவது நாளிலும் முரளி & மென்டிஸ் மற்றும் குழுவினர் விட்ட இடத்திலிருந்து தொடருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்றைய நாளில் நிலைநாட்டப்பட்ட புதிய சாதனைகள் - 

கராச்சி தேசிய மைதானத்தின் பெறப்பட்ட அதி கூடிய மொத்த ஓட்ட எண்ணிக்கை- 644/7.

முன்னைய சாதனை 2006ஆம் ஆண்டில் பாகிஸ்தானிய அணி -  இந்திய அணிக்கெதிராக பெற்ற 599/7  ஓட்டங்கள்.

4வது விக்கெட்டுக்கான உலக சாதனை இணைப்பாட்டம்.
மகேல ஜெயவர்த்தன & திலான் சமரவீர 437 ஓட்டங்கள்.

52வருடகாலம் இருந்த முன்னைய சாதனை
1957இல் இங்கிலாந்தின் பீட்டர் மே & M.C.கௌட்ரி மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிராகப் பெற்றது 411 ஓட்டங்கள்.

இதன்மூலம் தற்போது துடுப்பாட்ட இணைப்பாட்டங்களில் 2ஆம்,3ஆம்,4ஆம் விக்கெட்டுக்களுக்கான உலக சாதனைகளும் இப்போது இலங்கையின் அணியின் வசம்.

இதிலே மிக அதிக ஓட்டங்கள் பெறப்பட்ட முதலிரு உலக சாதனை இணைப்பாட்டங்களும் இலங்கை அணிக்குரியதே 
மகேள ஜெயவர்த்தன & குமார் சங்ககார 2006இல் தென் ஆபிரிக்க அணிக்கெதிராக 624.
சனத் ஜெயசூரிய & ரொஷான் மஹாநாம -1997இல் இந்தியாவுக்கெதிராக 576.

கராச்சி தேசிய மைதானத்தில் பெற்றப்பட்ட எல்லா விக்கெட்டுக்களுக்குமான இணைப்பாட்டம்.
முன்னைய சாதனை 
ஆமிர் சொகைல் & இஜாஸ் அகமெட் 1997இல் மேற்கிந்தியத்தீவுக்கேதிராக 298 ஓட்டங்கள்.     

அது போல இவ்விரண்டு அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டிகளில் பெறப்பட்ட அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையும் இப்போது இலங்கையின் வசம்.
முன்னைய சாதனை 2000ஆம் ஆண்டில் பாகிஸ்தானிய அணி காலி மைதானத்தில் பெற்ற 600/8  ஓட்டங்கள்.

மைல் கற்கள்

நேற்று முன்தினம் மகேல தனது 8000 ஓட்டங்களைக் கடந்தார். (இலங்கையின் முதலாமவர்;உலகளாவிய ரீதியில் 20வது) 

நேற்று திலான் சமரவீர டெஸ்ட் போட்டிகளில் 3000 ஓட்டங்களைக் கடந்தார் (வீட்டிலே முதல்நாள் திலான் சமரவீர ஆடுகளத்துக்கு வந்தநேரம் அப்போது அவர் 2800 ஓட்டங்களில் இருந்தவேளை எனது தம்பியிடம் வேடிக்கையாக சமரவீரவின் 3000 ஓட்டங்கள் கராச்சியில் தான் என்று மூக்குசாத்திரம் சொல்லியிருந்தேன்.)

மகேல சமரவீர இருவரும் வெளிநாடொன்றில் தமது முதலாவது இரட்டைச் சதங்களைப் பெற்றனர். இலங்கை அணியின் சார்பில் வெளிநாட்டு மண்ணில் ஓரே இனிங்சில்,ஓரே டெஸ்டிலும் கூட இரு வீரர்கள் இரட்டைச் சதங்கள் பெற்ற முதல் தடவை இது.

சமரவீரவின் அதிக பட்ச டெஸ்ட் ஒட்ட எண்ணிக்கை நேற்றுப் பெற்ற 231! 

முரளியின் பந்துவீச்சில் மகேல எடுத்த 70வது பிடி! 
இந்த இருவரது இணைப்பே விக்கெட் காப்பாளரல்லாத களத்துடுப்பாட்ட வீரரும் (Non wicket keeping fielder) பந்துவீச்சாளரும் இணைந்து அதிக விக்கெட்டுக்களை வீழ்த்திய சாதனையின் சொந்தக்காரர்கள்!

மகேலவின் ஆட்டம் அவர் மீதான கடுமையான விமர்சனம் தொடுத்தோருக்கும் அழுகுணி அரசியலாட்டம் ஆடித் தலைமைப் பதவியை அவர் விட்டு விலகுவதாக அறிவிக்க சதி புரிந்த சிலருக்கும் கன்னத்தில் விட்ட அறைபோல இருந்திருக்கும்.


ஆங்கிலத்தில் 'Form is temporary but Class is permanent' என்பதை மகேல நிரூபித்துள்ளார்.

இலங்கை அணி இரண்டு டெஸ்ட் போட்டிக்களையும் வென்று நாடு திரும்பிய பின் (பார்க்கும்போது அப்படித்தான் தோன்றுகிறது) ஜனாதிபதி மகேலவை அழைத்து (அவருக்கு இருக்கும் 'பிஸி'யான வேலைகளில் மத்தியிலும்) மகேலவைத் தொடர்ந்தும் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராகத் தொடரச் சொல்வார் என்று நான் நினைக்கிறேன்!

பார்க்கலாம் நடக்குதா என்று!

 

February 22, 2009

சூப்பர் ஹீரோவாக ஒபாமா


ரொம்ப நாளா படங்களோட,கலகலப்பான பதிவொன்றும் போடவில்லை என்று யோசித்தேன். இன்று சீரியஸா எழுதுவதற்கும் விஷயம் எதுவும் இல்லை.. ரொம்ப சீரியசான ஒரு பதிவு (மிக மிக நீளமாக வந்து உங்கள் அநேகம் பேரின் பொறுமையையும் சோதித்திருக்கும்) தந்த பின்னர் இன்று ஞாயிறு கொஞ்சம் இலேசான ஒரு பதிவைத் தரலாம் என்று எண்ணினேன்.. கமல் ஸ்டைலில்.. (ஒரு சீரியஸ் படம்,ரசனையில் உயர்ந்தோருக்கு.. அடுத்தது சிரிக்கக் கூடிய ஒரு ஜாலியான படம்,எல்லோருக்காகவும்..) இதோ உலக நாயகன் (இவரும் தானுங்கோ) ஒபாமா இப்போது சூப்பர் ஹீரோவாக...

Obama the super hero !

ஒபாமாவின் அதீத புகழை முதலிட்டு இலாபமீட்ட அமெரிக்காவின் பொம்மை தயாரிப்பு நிறுவனமொன்றின் ஐடியா தான் இந்த ஒபாமா சூப்பர் ஹீரோ பொம்மை.. குழந்தைகள் மத்தியில் மட்டுமன்றி இளைஞர்கள் மத்தியிலும் இந்த பொம்மைகளுக்கு பயங்கர வரவேற்பு. ஒபாமாவும் தனது கணக்கில் சில்லறை சேர்த்தாரோ தெரியல.. ;)






February 20, 2009

நான் கடவுள் - நான் பக்தனல்ல !!!

பல காலம் எதிர்பார்க்கப்பட்டு நீண்டகாலத்தின் பின் (மூன்று வருடங்கள் என நினைக்கிறேன்) வெளிவந்து சர்ச்சைகள் பாராட்டுக்கள் என்று பலதரப்பட்ட கலவைக் கருத்துக்களோடு இந்தியா, இலங்கை என்று உலகம் முழுவதும் காட்சி தருபவர் தான் 'நான் கடவுள்'.

சில படங்களைப் பார்க்க முதலே நான் விமர்சனங்களைக் கூடியவகையில் வாசிப்பதைத் தவிர்ப்பதுண்டு. காரணம் விமர்சனம் என்ற பெயரில் முழுக்குறைகளையும் சொல்லி முடிவையும் எழுதிப் படம் பார்க்கும் சுவாரஸ்யத்தையே இல்லாமல் செய்துவிடுவர் சிலர்.

ஆனால் நான் பார்ப்பதில்லை என்று முடிவெடுத்துவிட்ட சில தரம் கூடிய படங்களின் விமர்சனங்களை மட்டும் வாசித்துவிட்டு 'அப்பாடா தப்பிட்டோம்' என்று சொல்லி எஸ்கேப் ஆவதுண்டு.

பதிவர்களின் தலையாய கடமை என்பதற்கேற்ப 'நான் கடவுள்' வந்தவுடனேயே பரபரவென்று விமர்சனங்கள் பதிவுலகம் எங்கும் பிரசுரமாயின.

படத்தைப் பார்த்து பிறகு நண்பர்கள் எல்லோரது (அநேகமாக) விமர்சனங்களையும் வாசித்தேன் பின்னூட்டங்கள் இட்டால் என்னுடைய கருத்துக்கள் அங்கேயே வந்துவிடும் என்ற காரணத்தால் யாருக்குமே பின்னூட்டம் போடவில்லை.

'பாலா தான் கடவுள்'
'படம் என்றால் பாலா போல எடுக்கணும்'
'இதுதான் THE BEST' 
என்று ஒரு சில..

மறுபக்கம்
'படமா இது?'
'அகம் பிரம்மாஸ்மி- ஆளை விடுடா சாமி' 
'வன்முறை ரொம்ப ஒவர்'
'இதுக்கா மூன்று வருஷம்'
என்று ஒரு சில..

நான் கடவுள் பார்க்கிற நேரமே ஏதாவது எழுதவேண்டும் என்று இருந்த எண்ணங்களை இந்த விதவிதமான வேறுபட்டு இருந்த விமர்சனங்களுக்குப் பிறகு தள்ளிப்போட்டேன். அவை எவற்றின் தாக்கமும் இருக்கக் கூடாதென்று.

நான் விமர்சனம் எழுவதில் expertம் அல்ல. திரைப்படங்கள் பற்றி எழுதப் பெரியளவில் ஆர்வமும் இல்லை!

வாசிப்பதிலும் வானொலியில் அதுபற்றி சினிமா நிகழ்ச்சியில் அலசுவதிலும் இருக்கும் ஆர்வம் ஏனோ எழுதுவதில் இருப்பதில்லை. (அதிக வேலைப்பளு ஏற்படுத்தும் இயற்கையான சோம்பல் இதற்கான காரணமாக இருக்கலாம்)

எனினும் சில திரைப்படங்களைப் பார்க்கும் நேரம் ஏதாவது எழுதத் தூண்டும். அதை எல்லாம் விமர்சனம் என்று எண்ணாமல் என் கருத்துக்கள் என்று எடுத்துக் கொள்ளவும்.
(ஏற்கெனவே ஜெயம்கொண்டான்,சிலம்பாட்டம் பற்றி மட்டுமே எழுதியிருக்கிறேன்) பலபேர் கும்மியடித்து குதறிவிட்ட திரைப்படங்களைத் தொட மனமே வராது.  (உ.ம் - வில்லு,ஏகன்,படிக்காதவன்)

இனி நான் கடவுளும் நானும்! ..

உங்களில் அநேகர் 'நான் கடவுள்' பார்த்திருப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் எனது சில கருத்துக்கள்.

ஆமோதிப்போ ஆட்சேபமோ பின்னூட்டம் மூலம் சொல்லுங்கள்.


தமிழ்த்திரைப்படங்களில் நாயகர்களின் படங்கள் என்ற நிலையைக் கொஞ்சமாவது மாற்றி இயக்குநர்களின் படங்களைத் தந்தோர் ரொம்பவும் அரிது.
ஸ்ரீதர்,கே.பாலச்சந்தர்,பாரதிராஜா,மகேந்திரன்,மணிரத்னம் ....

இவர்களின் வரிசையில் அண்மைக்கால வரவுகளான ஷங்கர்,பாலா,சேரன்,தங்கபச்சான்,அமீர் என்போரையும் சேர்ப்பதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

எனினும் பாலாவின் முன்னைய 3 திரைப்படங்களோடு பாலாவை அதீத உயரத்துக்கு ஊடகங்களும் விமர்சனங்களும் கொண்டுபோயுள்ளதாக நான் கருதுகிறேன்!

'சேது' வில் தென்பட்ட யதார்த்த நிலை 'நந்தா'விலும் 'பிதாமக'னிலும் தொலைந்து போய்,விளிம்பு நிலை மனித வாழ்க்கை,அசாதாரண நடத்தைகள்,அதீத வன்முறை வெளிப்பாடுகளை வெளிப்படுத்துவதாகவே அமைந்திருப்பது குறிப்பிடத் தக்கது. இந்த வகையிலும்,கதாநாயகப் படைப்பிலும்,அவனது சில அம்சங்களிலும் இயக்குனர் பாலா பிடிவாதமாக சில ஒரே விதமான அம்சங்களை 
(stereo type) பிடிவாதமாக வைத்திருக்கிறார் போலத் தெரிகிறது.
(முரட்டுத் தன்மை,தாய்ப்பாசம் கிடைக்காதவன்/வெறுப்பவன்,ஆவேசமானவன்,மற்ற எல்லோரையும் விட அசாதாரணமான பலம் உடையவன்.. இப்படி அடுக்கிக் கொண்டே போகுமளவுக்கு பாலாவின் ஹீரோக்களுக்கிடையில் ஏராளமான ஒத்த அம்சங்கள்) 

சேதுவில் வந்தது போல வாழ்க்கையில் என்னை,உங்களை போல ஒரு சாதாரண வாழ்க்கை வாழ்கிற,இயல்பான மனிதர்கள் பாலாவின் கதாநாயகர்கள் ஆவது எப்போது? (பிதாமகன் சூர்யா விதிவிலக்கு)

எங்களுக்கு வடிவேலுவும்,விவேக்கும் வந்து அடிக்கிற அபத்த ஜோக்குகளோ,மரத்தை சுத்தியோ,சுவிட்சர்லாந்து,நியூ சீலாந்து,தாய்லாந்து போயோ ஆடிப் பாடுகிற டூயட்டுக்களோ,வாகனங்கள் அங்கும் இங்கும் பறந்து,வாள்,கத்திகள்,அரிவாள்கள் சீவி சுழன்று இரத்தம் கக்கும் கிளைமக்ஸ்களோவேண்டாம்.

ஆனால் பாலாவின் இவை போன்ற படங்கள் தான் யதார்த்தம் என்று சொல்வதில் எனக்கு உடன்பாடு கிடையாது.

யாருமே பேசாத மனிதர்கள் பற்றி பாலா தனது திரைப்படங்களில் பேசுகிறார். அதற்காக மிகுந்த பிரயத்தனப்படுகிறார்.சரி ஆனால் திரைமுழுதும் இத்தனை கோரம் அகோரம் இரத்தம் வேண்டுமா?

நேரிலே வாழ்க்கையில் நாம் காணும் இன்ன பிற அழிவுகள் போதாமல் திரையிலும் வேறு வேண்டுமா?

நிஜ வாழ்க்கையில் நடப்பதையே திரையில் காட்டுகிறார் பாலா என்ற வாதத்தை வைத்தாலும் கூட ஒரு சதவீதத்துக்கும் குறைவாக சமூகத்தில் நடக்கும் விடயங்களை பூதக்கண்ணாடி மூலம் பிரசாரப்படுத்துகிறார் பாலா!

பிதாமகனில் விக்ரமின் பாத்திரம் எவ்வாறு அதீதமான விலங்குப் பாவனைகளோடு காட்டப்பட்டதோ (விக்ரமுக்கு தேசிய விருது கிடைத்தாலும் அந்த பாத்திரத்தின் நாடகத்தன்மையான நடிப்புக்கும் -தங்கமலை ரகசியத்தில் சிவாஜி கணேஷனின் அதீத நடிப்புக்கும் இடையில் பெரிதாக வித்தியாசம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.)அதே போலத் தான் இதிலும் ஆர்யாவின் பாத்திரத்தில் ஒருவித இறுக்கம்,மிருகத்தனம் கலந்து செயற்கை பூசப்பட்டுள்ளது. கண்களில் மட்டும் ஒரு தனி வெறியும்,ஆழ்ந்த தன்மையும்.


நாயகர்களை உருவாக்கும் பிரம்மா பாலா என்பது ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒன்றுதான்! 

பாலாவின் திரைநாயகர்கள் மூவருமே பாலாவினால் செதுக்கப்பட்டவர்கள்.(விக்ரம்,சூர்யா, இப்போது ஆர்யா) சவடால் வசனங்களைப் பேசும் நாயகர்கள் மத்தியில் - பாத்திரமாக அவர்களை ஒன்றித்து விடும் கலை பாலாவுக்கே உரியது தான்!

தனது திரைப்படங்களில் ஏனைய பாத்திரங்களிலும் அந்தந்த பாத்திரப் படைப்புகளுடன் ஒன்றிக்க வைத்து புதிய வாழ்க்கைகளை உருவாக்கி உலவ விடுவதில் நான் கடவுளிலும் பாலா ஜெயித்திருக்கிறார். 

சேதுவில் - அபிதாவின் அண்ணன் 
நந்தாவில் - ராஜ்கிரண்
பிதாமகனில் - மகாதேவன்

போல நான் கடவுளிலும் பாதிரங்களாகவே வாழ்ந்தவர்கள் பலபேர்.

பிரதான பாத்திரங்களில் ஆர்யாவும் பூஜாவும் குறைசொல்ல முடியாமல் தங்கள் வாழ்நாளின் மிகச் சிறப்பான,வாழ்நாள் முழுவதும் பேசப்படக்கூடிய பாத்திரங்களில் தமது திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர். 

பாலாவின் இயக்கத்தில் மரம்,மட்டையே நடிக்கும்போது அவர்களால் முடியாதா?

விழிப்புலற்றவராக இதுவரை ஒரு நாயகி இவ்வளவு இயல்பாக (தமிழில்) நடித்து நான் பார்த்த ஞாபகம் இல்லை. எனினும் பூஜா வரும் பாடும் காட்சிகளில் அவரையே பாடவிட்டிருக்கலாம் என்றே தோன்றியது. செயற்கையாக இருந்தவற்றுள் அதுவும் ஒன்று. குறிப்பாக ' அம்மாவும் நீயே' பாடல் நகைச்சுவையாகப் பயன்படுத்தப்பட்ட காட்சியிலும் பூஜா பாடுவது போல வாயசைப்பது மிகப் பெரிய நகைச்சுவை.

புதிய வில்லன் ராஜேந்திரன்(தாண்டவன்) ஒரு பிரமாதமான அறிமுகம். லாவகமாக மிரட்டுகிறார். குரல் தொனியும் முகமும் கொடூர விழிகளும் - எங்கே இருந்தார் இவ்வளவு நாளும்?? எனினும் வேறு யாராவது இயக்குநர் இவரைப் பார்த்திருந்தால் நிச்சயம் இன்னொரு வடிவேலுவாகவோ முத்துக்காளையாகவோ தான் மாற்றியிருப்பார்.

காசியின் பிரதான சாமியார்,கை கால்களற்ற மலைச்சாமியார்,ஆர்யாவின் தங்கை,கவிஞர் விக்ரமாதித்தியன்,முருகனாக நடிப்பவர்(என்ன அருமையாக நடித்திருக்கிறார்.. தேவையான இடங்களில் வன்மம்,குரூரம்,பின்னர் நகைச்சுவை,பரிதாபம்,அனுதாபம் என்று கலவையாக மனிதர் கலக்குகிறார்) பொலீஸ் அதிகாரி என்று அனைவருமே பாத்திரப் படைப்புணர்ந்து பலம் சேர்ந்துள்ளார்கள்.

பாலாவுக்கே இந்தப்பாராட்டுகளும்!

வழமையான பாலா படங்கள் போலவே,இதிலும் நகைச்சுவைக்கென்று தனியாக யாரும் இல்லாமல் பொதுப்படையான பாத்திரங்களே இங்கும் சிரிக்கவைக்கின்றார்கள்.. ரசிக்கக் கூஇயதாகவே இருந்தாலும்,நகைச்சுவை வழியாகவும் ஜெயமோகன் தெரிகிறார்.

பாலாவின் மூன்று ஆண்டு மினக்கேடு பிச்சைக்காரக் கூட்டத்தினரைப் பார்க்கும்போதே தெரிகிறது..அவர்களைத் தேடிப்பிடிப்பதற்கும்,நடிக்கப் பழக்குவதற்கும் ,அதிலும் இயல்பாக நடிக்க சொல்லிக் கொடுப்பதற்கும் நிச்சயம் பாலாவுக்கு காலம் பிடித்திருக்கும்.

அனைவரது உடல் மொழிகள்,அங்க அசைவுகள்,முக பாவனைகள் அருமை..மனதை உருக வைக்கிறார்கள்..
எனினும் அந்த அப்பாவிகளின் அங்கவீனங்களையும்,அவர்களின் பிறப்பின் அகோரங்கள்,அலங்கோலங்கள்,இயலாமைகளை காட்சிப்படுத்தி பரிதாபம் தேடுவது (பிச்சைப் பாத்திரம் பாடல் முழுவதுமே இது தான்) மனதுக்கு கஷ்டமாக/உறுத்தலாக மற்றவர்களுக்கு - குறிப்பாக பாலாவுக்குப்படவில்லையா?

மிருகங்களை வதை செய்து காட்சிப்படுத்துவதைத் தடுக்க Blue cross இருப்பதுபோல இந்த விதமான பரிதாபக் காட்சிபடுதலுக்கு எதிராக எந்த அமைப்பும் இல்லையா என்ற கேள்வி எனக்குள்..

எனினும் இருவேறு கதைக்களங்களைச் செய்ய வந்த பாலா இரண்டில் எதற்குப் பிரதானம் கொடுக்கவேண்டும் என்பதில் அகோரி பக்கம் சாய்கிறார்.

இரண்டு தளங்களையும் ஒன்றாக இணைக்கும் இடமும் தளம்புகிறது. ஏனைய இவரது மூன்று திரைப்படங்களிலும் இல்லாத இந்த வித்தியாசம் பாலாவின் திரைப்பட ஒட்டத்தைப் பெரிதும் பாதிக்கிறது.

இதனால்தான் திரைப்படத்தின் நீளம் கூடியது என்று நான் நினைக்கிறேன். இளையராஜாவின் இசையில் இரு நல்ல பாடல்கள் மட்டுமே படத்தில் வந்து ஏனையவை வராமல் போவதற்கும் இதுவே தான் காரணம் போல!அச்சாணி திரைப்படத்தின் மீள் உருவாக்கப் பாடலான 'அம்மா உன் கோவிலில்' பாடலைத் திரையில் காணச் சென்ற எனக்கும்,இன்னும் பலருக்கும் ஏமாற்றமே.

பின்னணி இசையின் பிதாமகன் தான் தான் என்பதை இளையராஜா மீண்டும் அழுத்தமாக நிரூபித்திருக்கிறார். அவரின் இசை கலங்க வைக்கிறது,கதறியழ வைக்கிறது,தட தடக்க வைக்கிறது,தவிக்க வைக்கிறது,கண்கலங்க வைக்கிறது... பல இடங்களிலும் ஆர்தர் வில்சனின் கமெராக் கண்ணுக்கு துணை வந்து வழிநெடுக படத்தைக் கொண்டு செல்கிறது.

எனினும் பாலாவின் முன்னைய படங்கள் போலன்றி நான் கடவுளில் கமெரா படத்தின் பிற்பகுதியில் கைகொடுக்கவில்லை.ஆரம்பக் காசி காட்சிகளில் கமெரா கொடுத்த அழுத்தமான,பிரமிப்பான பதிவுகளை ஏனோ பின்னர் வந்த காட்சிகள் தரவில்லை.

பாலாவின் முன்னைய படங்களின் பல பாதிப்புக்கள் பல இடங்களில் சலிப்பைத் தருகிறது.

பழையபாடல்களின் தொகுப்புக்கு ஆடுவது,சண்டைக் காட்சிகளில் தொனிக்கும் அகோர வன்மமும்,வன்முறையும்,நாயகன் எந்த ஒரு பாச உணர்வுக்கும் கட்டுப் படாதது,நீதிமன்ற,போலீஸ் சம்பந்தப்பட்ட காட்சிகள்.. இப்படியே அடுக்கலாம்.

  பாச உறவுகளைத் துண்டித்து வா என்று காசி சாமியார் சொன்ன உத்தரவை வாங்கி தமிழகம் வரும் ஆர்யா, தாயின் உறவைத் துண்டித்தபின் உடனே காசி திரும்பாமல் இருப்பது தாண்டவன் குழுவினரை வதம் செய்வதற்காக என்றால் கிளைமாக்ஸ் காட்சி வரை என் தாமதம்? அகோரிக்கு பார்த்தவுடன் தீயவரைத் தெரியும் எனும்போது பார்த்த மாத்திரத்திலேயே சிலரை அவர் போட்டுத் தள்ளும் போது (encounterஇன் ஆன்மீக வடிவம்??) இதில் மட்டும் தாமதம் ஏன்?

இன்னொரு பக்கம் நான் அவதானித்து,அதிருப்தியடைந்த இன்னொரு விஷயம் கண்மூடித் தனமாக இந்து சமயத்தை பாலாவும்,தனது எழுத்துக்களின் நுண்ணிய திறன் மூலமாக ஜெயமோகனும் பிரசாரப்படுத்துவது.

நான் இதற்குமுன் 'ஏழாவது உலகம்' படித்திருக்கிறேன்.ஜெயமோகனின் மேலும் சில படைப்புக்களைப் படித்துள்ளேன்.அவரது நுண்ணிய,வலிமையான எழுத்துக்கள் பற்றி வியந்தும் இருக்கிறேன்.எனினும் இந்தப்படத்தில் அவர் பல இடங்களில் தனது பிரசார நெடியை வீசுகிறார்.

ஆரம்பக் காட்சிகளில் பல மூட நம்பிக்கைகள்,முட்டாள் தனமான சம்பிரதாயங்களை சாட்டையடிக்கும் வசனங்கள்,போலி சாமியார்களைத் தோலுரிக்கும் போது மேலும் வன்மை பெற்றுப் பாராட்டுக்களைப் பெறுகின்றன.

எனினும் சிவாஜி,ரஜினி,நயன்தாரா போன்றோரை மிமிக்ரி செய்யும் அந்தக் காட்சி தேவை தானா? அதுவும் பாலா போன்ற ஒருவருக்கு? மக்களுக்கு செய்தி சொல்கிறோம் என்ற பெயரில் தாங்கள் இருக்கும் துறையில் உள்ளோரையும் வாங்கு,வாங்கென்று தாக்குவது எவ்வளவு சரியென்று எனக்குத் தோன்றவில்லை..

ரஜினியை சாடை மாடையாக தாக்கியும் அந்த மனிதர் இந்தப்படம் பற்றிப் பாராட்டியது அவரது பெருந்தன்மையா? 'இன்னா செய்தாரை' குறள் ஞாபகம் வந்தது..

நயன் மீது பாலாவுக்கு என்ன தனிப்பட்ட கோபமோ? ஒருவேளை முதலில் பூஜாவை ஒப்பந்தம் செய்யமுதல் நயன்தாராவிடம் கேட்டிருப்பாரோ?

  இறுதிக் காட்சியில் பூஜாவின் பிரசங்கத்தில் (!) இந்து சமயம் மட்டுமே முத்தி தருவதாக மறைமுகமாகக் காட்டப்படுவது உறுத்தவில்லையா? எல்லாப் புகழும் உனக்கே (இஸ்லாம்),ரட்சித்தல்,ரட்சகர்,இயேசு (கிறிஸ்தவம்) என்று ஏனைய சமயங்களைத் தாக்கி கேவலப்படுத்தி இந்து சமயமே வரமும்,தண்டனையும் முறையாகத் தருகிறது என்று நிறுவுவது தமிழின் தரமான இயக்குனர்களில் ஒருவர் என்று கருதப்படும் பாலாவுக்கு எத்துணை அழகு என்று எனக்குத் தெரியவில்லை.

இன்னும் இரு காட்சிகளிலும் இஸ்லாம்,கிறிஸ்தவ மதங்கள் மீது அவதூறு சாயம் பூசப்படுகிறது..பாலாவின் மீதும்,ஜெயமோகன் மீதும் வைத்திருந்த மதிப்பின் மீது சற்றே எனக்கு சரிவு ஏற்படுத்திய விஷயங்கள் இவை.

அவதிப்படுவோருக்கு எல்லாம் மரணங்கள் தான் முடிவென்று பாலா சொல்லவருகிறாரா? அங்கள் இழந்தோர்,அவயவக் குறைபாடு உடையோருக்கு தற்கொலை அல்லது அகோரி வழங்கும் மரணங்கள் தான் முடிவு என்கிறாரா? சுபமான முடிவுகள் தான் திரைப்படங்களுக்கு வேண்டும் என்றில்லை ஆனால் ஆரோக்கியமான சமுதாயத்துக்கு இது போன்ற கருத்துக்கள் மூலமாக சொல்லவரும் கருத்து அபத்தமாக இல்லையா?

இந்து சமயத்தை இவ்வவளவு தூக்கிப் பிடித்தும் காட்டுமிராண்டிக் கொலைகள் மூலமாக தான் வரங்கள் கிடைக்கின்றன என எத்தனை பேர் ஏற்றுக்கொள்வார்கள்.. மொத்தமாக என்னால் 'நான் கடவுளை' அபத்தம் என்று சொல்லி ஒதுக்க முடியாவிட்டாலும்,பாலாவின் அறிவுஜீவித்தனமான ஒரு சில இயக்கு நுட்பங்களையும்,பாலாவின் கைவண்ணம் தெரியும் நடிகர்களின் திறமை வெளிப்பாடுகளையும்,இளையராஜா என்ற மேதையின் கைவண்ணத்தையும் விட்டுப்பார்த்தால் 'நான் கடவுள்' ஒரு வன்முறை சாயம் தெளிக்கப்பட்ட கோரமான சோகக் கோலம் என்றே எனக்குத் தெரிகிறது..  

  


    

February 17, 2009

நந்தா,பிதாமகன்,நான் கடவுள்... லோஷன்??

காதலர் தினம் எல்லாம் கடந்து சென்ற பிறகு வருகிற என் பதிவு..
கொஞ்சம் காதல் பற்றி எழுதினால் என்ன என்று நினைத்தேன்..

நேற்றைய என் பதிவைப் பார்த்தவர்கள் ஏதோ என்னை பாலாவின் கதாநாயகர்களில் ஒருவன் என்று (சேது தவிர) யோசித்து விடுவார்களோஎன்று நினைத்துத் தான் இந்தப் பதிவு என்று யாரும் நினைத்து விடவேண்டாம்..;) (ஒரு முன் ஜாக்கிரதை டிஸ்கி தாங்க)

நந்தா,பிதாமகன்,நான் கடவுள்... லோஷன்??
(நான் கடவுள் பார்த்திட்டேன்.. விமர்சனம் போல ஒன்று எழுத ஆரம்பித்தும் விட்டேன்.. அந்தப் பாதிப்புத் தான்..)

2002இல் நான் எழுதிய (வானொலி நிகழ்ச்சி ஒன்றுக்காக) 'நீ' என்ற கவிதை தான் இது.. (கொஞ்சம் கவிதை சாயல் இருப்பதாக நண்பர்கள்/கவிதை எழுதுவோர் ஏற்றுக் கொண்டார்கள்)

இந்த நீ யார் என்று சொல்லி இப்போ கேட்கப் படாது.. அப்போது யார் அந்த நீ என்று எனக்கே தெரியாது..

ஆனால் இத்தனை எழுதும் போது இருந்த அந்த romantic feeling தனி தான்..

இதனால் தான் நண்பர்களோடு பேசும்போது அடிக்கடி நான் சொல்வது,
"காதல் சொல்லி காதலிப்பதை விட,காதல் தரும் உணர்வுகளை தனிமையில் அனுபவிப்பது அற்புதமானது"


நீ...



நீ...
ஒற்றைச் சொல்லில் உரிமையெடுத்து
உயிரனைத்தையும் ஒன்றுபடுத்தி
ஒருமையில் - தனிமையளித்தும்
தன்மையை அழித்தும்
தன்மையாக ஒலிக்கும் -
முன்னிலையாக உள்ள
படர்க்கைச் சொல் இது!

நீயெல்லாம் - நானாக
நானென்பது நீயென்ன
நீயும் நானும் - நீயானோம்!
நானும் நீயும் - நானானோம்!
நீயின்றி – நானும்
நானின்றி நீயும் - தீயானோம்!

நீ – நீண்டு ஒலிக்கையில்
அளவற்ற அன்பு!
குறுகிச் சிறுக்கையில்
சுருக்கமான தெளிவு!

ஆங்கில YOUவில் இல்லாத
அழகு – அன்பின் அடர்த்தி
தமிழின் 'நீ'யில் உண்டு
தமிழின் 'நீ' மெல்லினம்!
எனவே மென்மையுண்டு!
தனிச் சொல்லாதலால் - மேன்மையுமுண்டு!

நீங்களில் 'கள்' இருக்கலாம்
ஆனால் மயக்கம் இல்லை
ஆம்!
அன்பின் மயக்கம் இல்லை!
நீயில் உரிமையுண்டு
உணர்ச்சியும் உண்டு!

நீரின் குளிர்மை!
தீயின் வெம்மை!
நீரோட்டத்தின் வேகம்!
தீராத மோகம்!
அத்தனையும் சேர்ந்த அற்புதக் கலவை நீ!

புரிந்து கொள்ள முடியாத புதிர் நீ!
கனவு போலக் கலைவாய்
காற்றுப் போலவும் நீ
சிலநேரம் வீசியடிக்கும் கோபப்புயல்
சிலநேரம் இன்பம் தரும் தென்றல்
அடிக்கடி மாறும் காலநிலை போல்
புhந்து கொள்ள முடியாத புதிர்ப்புதையல் நீ!

யாரோ நீ என்று தேடுவதிலே கழியும்
என் சந்தோஷக் கணங்கள்..
கண்டு விட்டால் கலைந்துவிடுமோ
இல்லை காதலால்
நீயும் நானும்
நாமுமாகி
நீ என்பதே நானாகுமோ??

நானெல்லாம் நீயான பின்
தனியாக 'நீ' ஏது?

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner