November 30, 2009

கமலும் மாதவியும் பிபாஷாவும் சரத்பாபுவும்



கடந்த வாரத்தில் ஒருநாள் எமது வெற்றி TVயில்; 'சட்டம்' திரைப்படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

இதுவரையில் வெற்றி TVயில் உள்ளூர்த் தயாரிப்புக்கள் எவையும் ஆரம்பிக்காத காரணத்தால் இதுவரை பார்க்காத, அரிய, அருமையான பல படங்களையே பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

பல தடவைகள் பாதி பார்த்தும் முழுமையாக 'சட்டம்' பார்க்கும் வாய்ப்பு கிடைத்திருக்கவில்லை.

80களுக்கே உரிய வழமையான மசாலா படக்கதை.

கமல் - மாதவி ஜோடி
சரத்பாபு கமலின் நண்பனாக
ஜெய்சங்கர் வில்லனாக
கதாநாயகன் பொலிஸ் சி.ஜ.டி & நண்பன் வழக்கறிஞர் – வில்லனுக்காக வாதாடுபவர்
நாயகி மேல் நண்பனின் காதல் - இதனால் கமல் - சரத்பாபு மோதல்
என்ற இலகுவில் ஊகிக்கக்கூடிய திரைக்கதை.

எனினும் அருமையான பாடல்கள்.
இன்று வரை மனதில் நிற்கின்ற 'நண்பனே எனது உயிர் நண்பனே', 'ஒரு நண்பனின் கதை இது', 'அம்மம்மா சரணம் சரணம்'

பொதுவாகவே தமிழ்ப்படங்களில் (முள்ளும் மலரும், சட்டம், வேலைக்காரன், அண்ணாமலை, முத்து) சரத்பாபு – கதாநாயகனின் நண்பனாக வந்து எதிரியாக மாறும் கதையமைப்பு காணப்பட்டாலே படம் வெற்றிபெறும் வழமை இருந்திருக்கிறது. (ரஜனி அல்லது கமல் கதாநாயகர்களாக நடித்து)

சரத்பாபுவின் அந்த அதீத கம்பீர குரல் என்னை ஈர்த்த ஒரு விடயம்.
இப்போதும் கமல், ரஜனி நாயகர்கள்.. பாவம் 'நண்பர்' சரத்பாபு. அப்பா, மாமா அல்லது சம்பந்தியாக –

படத்தின் ஒரு காட்சியில் மாதவியும் கமலும் காதலித்து – உரையாடுகிறார்கள்.
காதலுடன் மாதவி கமலிடம் கேட்கிறார் திருமணம் முடிக்கலாமா என்று...

கமல் வேடிக்கையாக – மாதவியை சீண்டுவதற்கு சொல்லும் பதில் ' இப்போ என்ன அவசரம்... 2,3 பிள்ளைகள் பிறக்கட்டும்... அப்புறம் முடிக்கலாம்...'

இந்த living together பற்றி அப்போதே யோசித்தவர் 'நம்மவர்'! திருமணம் செய்யாமல் காதல் மட்டும் செய்துகொண்டே (சமூகத்துக்குப் பயந்து, தயங்கி) மனசுக்குள்ளே ஓரமா ஆசையிருந்தும் இது சரியா தப்பா என்று இப்போதும் 'ரூம் போட்டு' யோசிக்கிறோம் நாம்!

இன்றைய பொலிவூட் கவர்ச்சித்தாரகை பிபாஷா பாசுவைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு அடிக்கடி முன்னைய நடிகை மாதவியை ஞாபகம் வரும்.

80களில் மாதவி அளவுக்கு கவர்ச்சிக்காட்டிய கதாநாயகி யாரையும் ஞாபகமில்லை.
எனக்கு ஞாபகம் வரும் காலத்திலிருந்து ஸ்ரீதேவி, ஸ்ரீப்ரியா, அம்பிகாவுக்குப் பின் கமல், ரஜனி ஆகியோருடன் ஜோடி போட்டவர் மாதவியாகத் தான் இருக்கமுடியும்.

இதோ மாதவி & பிபாஷா பாசு – கண்கள், உதடுகள், உடலமைப்பு எல்லாவற்றையும் ஒப்பிட்டுப்பாருங்கள்.

மாதவி



பிபாஷா



பிபாஷா பாசு – புதிய மாதவிதானே....

என்ன ஒன்று...
பிபாஷா மாதவியை விட பல மடங்கு தாராளம்.

மாதவியின் கவர்ச்சிக்காகவே இருவரும் மாறி மாறி ஒப்பந்தம் செய்தார்கள் என அப்போது நான் விகடனிலோ குமுதத்திலோ வாசித்த ஞாபகம்.
மாதவியின் கண்களில் அப்படியொரு கூர்மையும், போதையும் இருக்கும்.


இதோ போனசாக ஒரு அரிய படம்.. டிக் டிக் டிக் படத்தில் கமலும் மாதவியும் படு கவர்ச்சியாக(அந்தக் காலத்திலேயே) தோன்றி பரபரப்பை ஏற்படுத்திய ஒரு போஸ் இது..



சாகித்திய விருது & விழா - சாதனை,சந்தோசம் & சங்கடங்கள்+சலிப்புக்கள்


மேல்மாகாணத்தின் முதலாவது சாகித்திய விழா கடந்த செவ்வாய்க் கிழமை இடம்பெற்றது.
இலங்கையின் ஏனைய மாகாணங்களில் சாகித்திய விழாக்கள் கொண்டாடப்பட்டு வந்தாலும் அனைத்துவிதமான தமிழ்பேசும் மக்களும் வாழ்கின்ற மேல்மாகாணத்தில் என்ன காரணமோ இவ்வாறான சாகித்திய விழா இடம்பெறவேயில்லை.

தற்செயலாக அன்றொரு நாள் ஒரு பொதுவிடத்தில் மேல்மாகாண சபை உறுப்பினர் குமரகுருபரனை சந்தித்தபோது அவர் தான் எனக்கு சொன்னார் இவ்வாறு தாங்கள் ஒன்றுபட்டு தமிழ் சாகித்திய விழாவை மேல்மாகாணத்தில் நடாத்தவிருப்பதாக.
அரசியல்ரீதியாக தெரிவு செய்யாதீர்கள் என்று எனது கோரிக்கையை முன்வைத்துவிட்டு வந்துவிட்டேன்.

சிலவாரங்களில் எனக்கு மாகாணசபை உறுப்பினர் பிரபா கணேசனின் செயலாளர் மூலமாக அறிவிக்கப்பட்டது எனக்கும் விருது இருப்பதாக.
உள்ளூர சந்தோசம் இருந்தாலும் வேறு யார் யாருக்கு விருதுகள் கிடைக்கின்றன என அறிய ஆவலாக இருந்தது.
(அப்போது தானே தெரிவுகளின் அடிப்படை பற்றி அறியலாம்)

எனினும் எனக்கு உறுதியாக விருதுகள் பற்றி தெரிந்தது கடந்த திங்கட்கிழமை பத்திரிக்கை பார்த்த பிறகு தான்.. ஊடகவியலாளர்கள்,கலைஞர்கள்,சமூக சேவையாளர்கள் என்று 41 பேர் கௌரவிக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

நம்ம பெயரும் இருப்பது கண்ட பின் தான் வீட்டுக்கே சொன்னேன்.. (ஒரு முன் ஜாக்கிரதை தான்)

ஆனால் பத்திரிகையிலும் சரி, பிறகு தரப்பட்ட நினைவு சின்னம், சான்றிதழிலும் எனது பெயர் தவறான முதல் எழுத்துடன் தரப்பட்டது எனக்கு வழமையாகவே நடக்கும் கொடுமை தான்..
வாமலோசனன் என்ற பெயரை வாமலோஷன் என மாற்றியதோடு, அப்பாவின் பெயரை இரண்டாக்கி அதில் ஆங்கில Bயை தமிழில் எழுதி மகா ரணகளமாக்கி விட்டார்கள்.

நல்ல காலம் எனது பெயர் நிறையப் பேருக்குள்ள ஒரு பொதுவான பெயராக இல்லை.. இல்லாவிட்டால் யாரும் நம்ப மாட்டார்கள் போலும்....

எனக்கு 2006ஆம் ஆண்டே சாகித்திய விருதொன்று கிடைத்தது.. அது மத்திய மாகாண சபையினால் ஊடகம் மூலமாக நான் மலையக மக்களின் அபிவிருத்தி,கல்வி மேம்பாடு,அரசியல் விழிப்புணர்வு போன்றவற்றை ஏற்படுத்தியமைக்காக வழங்கப்பட்டதாகவே அறிவிக்கப்பட்டது.

அந்தவேளை இந்த விருதை மிக இளவயதில் பெற்றவன் என்ற பெருமையும் எனக்குக் கிடைத்தது.
அத்துடன் மலையகத்தில் பிறக்காத,வசிக்காத ஒருவனுக்கு இந்த விருது வழங்கப்பட்டது சரியா என்று அதிருப்திகளும் எழுந்தது வேறு கதை..

விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படவேண்டிய பலரின் பெயர்கள் இருந்தன. அவர்களுள் சிலருக்கு விருதுகள் பெருமை தராமல், அவர்கள் வந்து விருதுகள் பெறுவதால் விழா பெருமையடையும் என்று எனக்குத் தோன்றியது.

விருது கிடைப்பது பற்றி உறுதியாகத் தெரியவந்ததும் - என் அலுவலகத்தில் அறிவித்ததுமே நிறுவனத்தின் அத்தனை உயர் அதிகாரிகளும் பாராட்டு மழையில் குளிர்வித்துவிட்டார்கள். அதற்குள் நமது பதிவுலக நண்பர் வந்தியத்தேவன் விருதுகிடைத்த தகவல் பற்றி வாழ்த்துப்பதிவும் போட்டுவிட, வாழ்த்துக்கள் பலவேறு.

விருது விழாவுக்கு அடுத்த நாள் கலைநிகழ்ச்சிகளும் நடைபெறவிருப்பதாக எனக்கு ஒரு அழைப்பு கிடைத்திருந்தது. எனினும் விருதுபெறும் விழாவிற்கு எந்த அழைப்பிதழும் அனுப்பப்பட்டிருக்கவில்லை.

எனவே 3 மணிக்கு ஆரம்பமாவதாக சொல்லப்பட்ட விழா, விருது வழங்கல் மற்றும் சில பேச்சுக்கள், நிகழ்ச்சிகளோடு இரண்டு, மூன்று மணித்தியாலங்களில் நிகழ்ச்சி முடிந்துவிடும் என்று பெற்றோர், மனைவியுடன் மகனையும் (ஒரே இடத்தில் இருப்பதாக இருந்தால் அவன் சகிப்பு நேரத்தின் அளவு ஆகக்கூடியது 2,3 மணித்தியாலங்கள் தான்) கூட்டிப்போனால் நடந்ததோ வேறு!

நேரத்துக்கே விழா ஆரம்பித்து சிறப்பு, பல அரசியல் அதிதிகள், மாகாண சபையின் 3 உறுப்பினர்களே இணைந்து – (இவர்கள் மூவருமே மனோ கணேசனின் ஜனநாயக மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள்) மேல்மாகாண கலாசார அமைச்சின் அனுசரணையில் தம் சொந்த ஒதுக்கீட்டில் செய்ததுடன், அவர்கள் எதிர்க்கட்சியில் அமர்ந்து இருந்துக்கொண்டு இந்த முயற்சியை எடுத்ததும் சில பல குறைகளை மறந்துவிடக்கூடியது.

ஆளும் கட்சியிலிருந்தும் உதவிகளைப் பெற முடிந்தும் செய்யாமல் போன பலர் ஞாபகம் வந்தார்கள்.

ஆளும் தரப்பின் அனுசரணையோ என்னவோ வரவேற்புரை சிங்களத்தில்.. அதிக மொழிப்பெயர்ப்புக்கள். பல சிங்கள் உரைகள், முகத்துதிகள்.

அளவுக்கதிகமான உரைகள், பல கலை நிகழ்ச்சிகள் என்று நிகழ்ச்சி இழுத்துக்கொண்டே போக, பொறுமையிழந்து போன பலரின் சலசலப்பு தானாகவே தெரிந்தது. இதற்கிடையில் வருவோர் போவோர் என்று பலபேர் ஒலிவாங்கியை கையிலெடுத்து, அறிவிப்பு என்று முகத்துதிகள் பல செய்து எமது உயிர் வாங்கியது மிகக்கொடுமை.

மேடையேறிய மேல்மாகாண கலாசார பண்பாட்டு அலுவல்கள் அமைச்சரும், பிரதம அதிதியாக வருகை தரவிருந்த ஆளுநர் அலவி மௌலானாவுக்குப் பதிலாக வந்திருந்த ஜனாதிபதியின் ஆலோசகர் A.H.M.அஸ்வரும் - அரசின் புகழ்பாடி, சமாதானத்தை வலியுறுத்தியதோடு, மனோ கணேசனையும் அவரது கட்சியையும் அரசுக்கு அழைத்ததும் - பின்னர் மேடையேறிய மனோ கணேசன் தனது கட்சியின் வளர்ச்சி, நோக்கம், தன் கட்சி உறுப்பினர்களின் முயற்சியால் இந்த விழா முன்னெடுக்கப்பட்டது பற்றிச்சொல்லி, பின்னர் அரசுடனும், ஜனாதிபதியுடனும் தான் இணைவதாக இருந்தால் முன் வைக்கின்ற நிபந்தனைகள் பற்றி சொன்னதும் சாகித்திய விழாவில் அரசியல் வாசத்தைப் பூசின.

தமிழ்த் தரப்பின் நியாயத்தை வலியுறுத்தி, அரசியல் ரீதியான தேர்வு ஒன்றை ஜனாதிபதி பெற்றுத் தருவதாக உறுதியளித்தால்.. நடைமுறைப்படுத்தினால்... என்ற இன்னும் நாம் அடிக்கடி கேட்கின்ற கோரிக்கைகளை முன்வைத்து.. இவை எல்லாம் நடந்தால் அரசுப் பக்கம் வரத் தயார் என்று மனோ கணேஷன் மேடையில் சொல்லி இருந்தார்.

அடுத்த நாளே தமிழ் தரப்பின் போதுவேட்பாளர் பற்றியும் அதன் பின் வெள்ளிக்கிழமை சரத் பொன்சேக்காவுடன் மனோ கணேஷன் பேச்சு நடத்தியதாக செய்தி வந்ததும் புதிய விஷயங்கள்.

சிறப்புரை ஆற்றிய கம்பவாரிதி இ.ஜெயராஜ் 'இலங்கையின் அனைத்து தமிழ் மக்களினதும் நம்பிக்கையைப் பெற்றுள்ள ஒரு தலைவராக மனோ கணேஷன் வளர்ந்து வருகிறார்' என்று பாராட்டியது ஒரு கவனிக்கக் கூடிய விஷயம்.

அத்துடன் தமிழுக்கு 'அன்பு' என்ற அர்த்தம் உள்ளதெனவும் விளக்கம் கொடுத்தார்.

அடுத்ததாக உரையாற்றிய கொழும்பு பல்கலைப் பேராசிரியர் கீதபொன்கலன் (இவர் சிறப்புரையாற்றுவதாக இருந்தபோதும் - நேரம் இழுத்துக்கொண்டு போன நிலையறிந்து – சபையோரின் பொறுமையிழந்த நிலையறிந்து 5 நிமிடங்களுள் தனது பேச்சை முடித்தார் என்பது சிறப்பு) கம்பவாரிதியாரை சாடைமாடையாக ஒருபிடிபிடித்து 'தமிழ் அன்பு, பெருமை என்று பழங்கதை பேசிக்கொண்டிருக்காமல் உண்மை நிலையறிந்து அடுத்த கட்டம் பற்றி யோசிக்க வேண்டும். உலகில் மிகப் பின்தங்கிய இனம் தமிழினம். மற்ற இனங்களைவிட ஜம்பது வருடமாவது பின்தங்கா இருக்கிறோம்' என்று காரத்தைக் கொட்டிப்போனார்.

இடையே பாடசாலை மாணவர்களுக்கிடையே நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் சான்றிதழ்கள், கிண்ணங்கள் வழங்கப்பட்டன. நல்ல முயற்சி அது.

41 சாகித்திய விருது பெற்றவர்களைத்தவிர – 5 பேருக்கு சிறப்புப் பாராட்டு வழங்கப்பட்டது.

சமூக சேவைக்காக - புரவலர் ஹாஷிம் உமர்
கலைப்பணிக்காக - பிரபல நடன ஆசிரியை திருமதி. வாசுகி ஜெகதீஸ்வரன்
கல்வித்துறைக்காக - பேராசிரியர் கலாநிதி கீதபொன்கலன்
கலைத்துறைக்காக - பிரபல நாடகக்கலைஞர் கலைச்செல்வன்
எழுத்துப்பணிக்காக - துப்பறியும் கதை எழுத்தாளர் மொழிவாணன்


நான் பெரிதும் மதிக்கின்ற, தத்தம் துறைகள் மூலம் தமிழுக்கும் சமூகத்துக்கும் உண்மையான சேவையாற்றிய பலரோடு சேர்ந்து எனக்கும் விருது கிடைத்ததில் உண்மையில் மனம் நிறைவாய் உணர்ந்தேன்.

இலங்கை ஒலிபரப்புத்துறையில் நாடகத்துறை ஜாம்பவனான திரு.M.அஷ்ரப்கான், நான்கு தசாப்தகாலமாக வானொலி நாடகங்களில் நடித்துவரும் திருமதி.செல்வம் பெர்னான்டோ, இலங்கையின் சிரேஷ்ட மெல்லிசை, திரையிசைப் பாடகர் முத்தழகு, எனது தாத்தாவின் காலத்திலிருந்து எழுத்துப்பணியில் ஈடுபட்டுவரும் திரு.மானா மக்கீன், மொழிபெயர்ப்புத்துறையில் கரை கண்ட நாடாளுமன்ற மொழிபெயர்ப்பாளர் திரு.எம்.கே.ராகுலன், பிரபல செய்தியாசிரியர் வீரகேசரியின் பொறுப்பாசிரியர் ஆர்.பிரபாகரன், பிரபல கல்வியாளரும், நீர்கொழும்பு விஜயரத்தினம் மகா வித்தியாலய அதிபரும், எம்மூர்க்காருமான திரு.நா.கணேசலிங்கம், சகபதிவரும், பிரபல கவிஞருமான, நீண்டகால இலக்கியப் பணியாளர் மேமன்கவி, தினகரன் ஊடகவியலாளர் – ஒலி ஒளி விமர்சனம் மூலம் அடிக்கடி எமது குறை நிறைகளைத் தொட்டுக்காட்டும் திரு.அருள் சத்தியநாதன், எமது சிரேஷ்ட ஒலி, ஒளிபரப்பாளர்களான அண்ணன்மார் M.N.ராஜா, P.சீதாராமன், நேரடி வர்ணனை, சமய நிகழ்ச்சிகள், எழுத்து என்று புலமைவாய்ந்த திரு.ஸ்ரீதயாளன், சிரேஷ்ட எழுத்தாளர்கள் திரு.அந்தனி ஜீவா, திரு.பீ.முத்தையா, என்னுடன் சூரியனில் பணிபுரிந்த, திறமையான, நேர்மையான, செம்மையான செய்தி ஆசிரியர் இந்திரஜித் (இப்போது சூரியன்செய்தி முகாமையாளர்), தம் திறமைகளை இலங்கை இசைத்துறையில் பதித்துவரும் இளம் இசையமைப்பாளர்கள் ஸ்ருதி பிரபா, செந்தூரன் ஆகியோர் உண்மையில் சரியான தெரிவுகள்.

ஆனால் நாமெல்லாம் இந்தத்துறைக்குள் இறங்க முன்னரே தமக்கான எல்லா விருதுகளையும் பெறக்கூடிய தகைமை, புலமை, ஆற்றல் கொண்டிருந்த இலக்கியப் படைப்பாளிகள் டொமினிக் ஜீவா, தெளிவத்தை ஜோஸப் ஆகியோருக்கும் எம்முடன் சாகித்திய விருதுகளை வழங்கியதை என்னால் ஜீரணிக்கமுடியவில்லை.

மிகப்பொருத்தமானவர்கள் தெரிவுசெய்யப்படாதது, யாரென்றே பலரால் அறியப்படாதவர்கள் தெரிவுசெய்யப்பட்டது என்று சில குறைகள் இருந்தாலும் ஆக்கபூர்வமான முதல் முயற்சியை எடுத்த பிரதான ஏற்பாட்டாளர் மாகாண சபை உறுப்பினர் ராஜேந்திரனுக்கும் சக மாகாண சபை உறுப்பினர்கள் பிரபா கணேஷன், குமரகுருபரன் ஆகியோருக்கும் நன்றிகள்.

நேரம் நீடித்து – பலரை சங்கடப்படுத்தியதும் (நானாவது இடையிடையே தூங்கி வழிந்தேன்; பலபேர் குறட்டையுடன் தூக்கம்) அவசர ஏற்பாடுகளினால் கொஞ்சம் சொதப்பியதும் (இதற்கான காரணம் ராஜேந்திரன் தனது பிறந்தநாள் அன்று தான் - செவ்வாய் - இதை நடாத்த விரும்பியுள்ளார்) அரசியல் காரணங்களும், ஏனைய தமிழ் அரசியல்வாதிகள் வராததும் தவிர எதிர்வரும் வருடங்களில் நடைபெறவுள்ள மேல்மாகாண சாகித்திய விழாக்களுக்கு இது நல்லதொரு ஆரம்பம் என் நம்பலாம்.



அன்பான வேண்டுகோள் -ஏற்கனவே விருதுபெற்றமைக்கு அன்போடு நீங்கள் வாழ்த்தி இருப்பதனால் - முன்பே வாழ்த்தியிருப்பவர்கள் பின்னூட்டங்களில் வாழ்த்தவேண்டாம்.

மீண்டும் வாழ்த்தினால்..... வேறொன்றுமில்லை. நன்றி சொல்லமாட்டேன்.

November 26, 2009

நதியா நதியா நைல் நதியா...



முதலில் எனக்கு கிடைத்த மேல்மாகாண தமிழ் சாகித்திய விருதுக்கு அன்போடு நீங்கள் அனைவரும் வழங்கிய வாழ்த்துக்கள், ஆசிகளுக்கு நன்றிகள்....

அந்த சாகித்திய விழா, என்னுடன் விருது பெற்றோர் பற்றி கொஞ்சம் விரிவாக ஒரு பதிவு வரும்.. உண்மையில் விரைவாக வரும்..

என் மீதுள்ள மேலிட்ட அன்பினால் பதிவுகள் தந்த அன்பு நண்பன் வந்தியத்தேவன், தம்பிகள் சதீஷ், சந்த்ரு ஆகியோருக்கும் பின்னூட்டங்களில் வாழ்த்திய அத்தனை அன்பு உள்ளங்களுக்கும் நன்றிகள்..

என்னுடைய வலைப்பதிவுப் பக்கமும் நண்பர்களின் வலையுலகப் பக்கமும் முழுமையாக வந்து ஒரு சில நாட்களாகின்றன. கொஞ்சம் அலுவலகப் பணிகள் அதிகமாக இருந்தாலும், அது தான் காரணம் என்று சொல்லமாட்டேன்..

எவ்வளவு தான் ஆணி பிடுங்கல் இருந்தாலும் ஆணிகளில் மாட்டி சிக்கி கிழிந்துவிடாமல் பதிவு போடுவது எனக்கு எப்போதுமே வழக்கமானது.

ஆனால் இம்முறை எனக்கு ஆப்பு வைக்கப்பட்டதும் என் அலுவலக வேலைகளிலேயே சிக்கல்களையும் எரிச்சலையும் ஏற்படுத்திய ஒரு விடயமாக அமைந்தது எனது அலுவலக கணினி எமது பொறியியலாளர் ஒருவரின் அதிமேதாவித்தனத்தால் செயல் இழந்தது தான்..

நன்றாக வேலை செய்துகொண்டிருந்த எனது கணினியை இடம் மாற்றி அழகுபடுத்த அந்த அன்பர் கடந்த ஞாயிறு மேற்கொண்ட அதி தீவிர முயற்சியில் கணினியின் Power supply unit வெடித்து சிதறியுள்ளது.

அதை இதோ செய்கிறேன், இன்றே சரி செய்கிறேன் என்று இழுத்துக் கொண்டே இருக்கும் புண்ணியவானால் அலுவலக நேரத்தில் தனிப்பட்ட வலையுலகப் பயணங்கள் எல்லாம் பாழ்.. அலுவலக,நிகழ்ச்சிப் பணிகளுக்காக மட்டும் எல்லா அறிவிப்பாளருக்குமான பொதுக் கணினியில் கொஞ்ச நேரம் துழாவுவதொடு சரி..

வீட்டுக்கு வந்தால் எனக்கொரு செல்லக் குட்டி வில்லன் இருக்கிறான்.. அவனோடு சில மணிநேரங்கள் கட்டாயம் விளையாடியே ஆகவேண்டும்.
அதன் பின் வந்து கணினிக்கு முன் அமர்ந்தால், எங்கிருந்தாலும் அவனுக்கு செவி முளைத்து வந்துவிடுவான்..

அதற்குப் பிறகு கணினியும் நானும் அவன் சொன்னபடி தான்..
அவனுக்கு என்னென்ன , யார் யார் தேவையோ அத்தனையும் கணினித் திரையில் வந்தாக வேண்டும்..
அது டோரா, மிக்கி மவுஸ், டொம் அன்ட் ஜெர்ரி, பன்டா கரடி தொடக்கம் கமல், சூர்யா, தனது படம் இன்னும் பல விஷயங்கள் வரை போகும்..
அவனுக்கு அலுக்கும் வரை அல்லது தூக்கம் வரும் வரை கணினி என் கைகளுக்கு வராது..

பதிவுகள் பல நாள் போடாததால் பதிவுப் பக்கம் புற்று கட்டிவிடும் என்று சக நண்பர் ஒருவர் வேறு பயமுறுத்தி இருக்கிறார்.

இன்று காலை அலுவலகம் வந்தால் ஆச்சரியத்திலும் ஆச்சரியம்..

எனது மேசையில் எனது அலுவலகக் கணினி பாவனைக்கு தயார் நிலையில் திருத்தப்பட்டு இருக்கிறது..(கொடுத்த வசையும், அனுப்பிய மிகத் தீவிரமான மெமோவும் இவ்வளவு துரிதமாக வேலை செய்துள்ளதா?)

வாழ்க எம் பொறியியலாளர்...

======

பதிவிடப் பல விஷயங்கள் இருக்கின்றன..
கிரிக்கெட் பக்கம் போய்ப் பதிவிடலாம் என்று பார்த்தால் நடக்கும் போட்டிகள் முடியட்டுமே எனத் தோன்றுகிறது..

குழப்படிகாரப் பையன் ஸ்ரீ ஒருமாதிரியாக இலங்கையின் முகத்தில் மட்டுமல்லாமல் என் முகத்திலும் கரி பூசிவிட்டான்..

இலங்கை அணி அடிப்படியில் மீண்டும் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பம் மிகப் பிரகாசமாகத் தெரிகிறது.

மறுபக்கம் பாகிஸ்தானின் புதிய நம்பிக்கை உமர் அக்மல் கன்னி சதம் பெற்றுள்ளார்..
உண்மையில் கிரிக்கெட் கூடிப் போச்சுத்தான்..
======

இலங்கைப் பதிவர்களின் இரண்டாவது சந்திப்பு ஏற்பாடுகள் மிக மும்முரமாக இடம்பெறுவது மிகுந்த மகிழ்ச்சி..

நல்ல ஒரு குழு சேர்ந்துள்ளார்கள்.. அவர்களின் நிகழ்ச்சி நிரல், ஏற்பாடு விபரங்கள், இடம், நேரம் இதர விஷயங்களை அறிந்துகொள்ள..

இலங்கைத் தமிழ்ப் பதிவர் சந்திப்பு – அறிவிப்பும் நிகழ்ச்சி நிரலும்


பலபேரும் இதுபற்றி அறிவித்தல் பதிவுகள் போட்டுள்ளார்கள்.. சுபாங்கன் தான் முதலில் பதிவு போட்டவர் என்ற அடிப்படையிலும், ஏற்பாட்டுக் குழுவில் ஒருவர் என்ற அடிப்படையிலும் அவரது சுட்டியைத் தந்துள்ளேன்.

எல்லாரும் இது பற்றி அறிவித்தல் பதிவுகள் போடுவது கூறியது கூறலாக அமையும் என்பதால், நான் இப்போதைக்கு இது பற்றி விளம்பரத் தட்டியை என் தளத்தின் மேலே போட்டிருப்பதோடு இப்போதைக்கு விடுகிறேன்.

முதலாவது சந்திப்புக்கு பின்னர் புதிய பதிவர்கள் பல்கிப் பெருகியதுபோல, இரண்டாவது பதிவர் சந்திப்புக்குப் பிறகு இன்னும் புதிய பதிவர்கள் பெருகுவார்கள் என நினைக்கிறேன்.

=========

இன்றைய நாள்,நாளைய நாள் என்று ஏகப்பட்ட எதிர்பார்ப்பில் பலர் இருக்கிறார்கள் என்று புரிகிறது..

ஜெனரல் சரத் பொன்சேகாவின் அறிவித்தல் பற்றி மட்டுமல்ல என்று உங்களுக்கும் தெரியும்..
எனினும் ஏமாற்றங்களும் எதிர்பார்ப்புக்களும் மட்டுமே வழக்கமாகிப் போன எமது வாழ்க்கையிலே எனக்கு எவ்விதமான நம்பிக்கையும் இல்லை.. அதனால் ஏமாற்றங்களோ, எதிர்பார்ப்புக்களோ இருக்கப்போவதுமில்லை.
=========

தலைப்புக்கும் பதிவுக்கும் சம்பந்தமில்லை என யோசிப்போருக்கு, இன்று எனது காலை நிகழ்ச்சியில் ஒலிபரப்பிய பல இனிமையான பாடல்களில் இன்னும் மனதில் நிற்கும் பூமழை பொழியுது திரைப்படப் பாடல் தான் அது..

வரிகள், SPB +சித்ராவின் குரல் இனிமை என்பவற்றையும் விட, R.D.பர்மனின் மெட்டும், பாடலின் வரிகளோடு இணைந்து ஒலிக்கும் மிருதங்க,தபேலா தாளக்கட்டுக்களும் மனத்தைக் கொள்ளை கொண்டன.. எனவே தான்..

நதியா நதியா நைல் நதியா...

இதுமட்டுமல்லாமல் நீண்ட தேடலுக்குப் பின்னர் இன்று பாய்மரக்கப்பல் திரைப்படப் பாடலான 'ஈரத் தாமரைப்பூவே' பாடலையும் தேடி என் ஒலிபரப்புக்கு உதவிய தம்பி திஷோவுக்கும் நன்றிகள்..


November 20, 2009

சச்சினை நான் வெறுக்கிறேன்..


நான் சச்சினை வெறுக்க காரணங்கள் பத்து..


மொழிபெயர்க்க நேரம் இல்லை.. மன்னிக்கவும்..
இதை சொடுக்கி அங்கே போய் வாசியுங்கள்..



ஒரு விளம்பரம் தான்.. ஹீ ஹீ..

இலங்கையின் கிரிக்கெட் சுவரும், சாதனைகள் பலவும்..



இதை நான் பதிவிட ஆரம்பிக்கும்போது இலங்கை அணிக்கு ஒரு மகத்தான கன்னி டெஸ்ட் வெற்றியை இந்தியாவில் பெறும் வாய்ப்பு அஹ்மேதாபாதில் கிடைத்துக் கொண்டு இருக்கிறது.

நாளைய இறுதி நாளில் இன்னும் எட்டு இந்திய விக்கெட்டுக்களை எடுக்கவேண்டும்.. ஆனால் ஆடுகளத்தில் படுத்துக் கிடந்தது இலங்கையின் வெற்றியைத் தடுக்கக்கூடிய டிராவிட் காலி..

எந்தப் பந்துவீச்சாளருக்கும் உதவி,ஒத்தாசை தராத ஒரு (flat pitch) ஆடுகளமாக இருந்தபோதும் (சுனில் கவாஸ்கர் குஜராத் அரசுக்கு வீதிகளை சீராக, செப்பனாக அமைக்க இந்த மைதானப் பராமரிப்பாளரை அணுகச் சொல்லி பகிரங்க நக்கலடித்திருந்தார்) இன்று கொஞ்சம் அதிகமாகவே பந்து திரும்புவதையும், மேலெழும் தன்மை மாறுபடுவதையும் (variable bounce) பார்த்தால் நாளை ஆடுகளம் முரளி,ஹேரத் சொல்வதைக் கேட்கும் ஆடுகளமாக மாறலாம் என் நினைக்கிறேன்.

இன்று மிஸ்ராவின் சில பந்துகளும்,நேற்று சச்சினின் பந்தும் திரும்பிய கோணங்களைப் பார்த்த்திருந்தால் முரளி நிச்சயம் மகிழ்ந்திருப்பார். ஆனால் வழக்கத்தை விடக் கொஞ்சம் வேகமாகப் பந்தை தள்ளிவிடவேண்டி இருக்கும். இல்லாவிட்டால் மிக மெதுவான இந்த ஆடுகளத்தில் இந்திய துடுப்பாட்ட வீரர்கள் குந்தி இருந்து படையல் எடுப்பார்கள்.

இனி போட்டியில் இலங்கை வெல்வதும், சமநிலையில் போட்டி நிறைவடைவதும் முரளி,ஹேரத் ஆகியோரின் கைகளிலும், இந்திய துடுப்பாட்ட வீரர்களின் பொறுமையிலும் தான் தங்கியுள்ளது.

இலங்கை அணிக்கு இன்னும் ஓவர்கள் இருக்கின்றன இந்திய அணியை அள்ளி சுருட்டுவதற்கு..முடியுமா?

அண்மைக் காலமாக 'பழைய' பயங்கரமான முரளியைப் பார்க்காத எமக்கு ஒரு வாய்ப்பு.. இதுவரை காலமும் இந்திய மண்ணில் பெரியளவில் பிரகாசிக்காத முரளிக்கும் தன்னை இறுதியாக ஒருமுறை நிரூபிக்க அருமையான வாய்ப்பு.

அதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, மகேல ஜெயவர்த்தன ஆடுகளத்தில் நின்ற நேரம் வரை எத்தனை சாதனைகள் உடைந்து விழுந்திருக்கின்றன.

இது போல ஆடுகளங்களில் இதெல்லாம் சகஜமப்பா என்று யாராவது சப்பைக் கட்டு கட்டுவீர்களாக இருந்தால், உலகில் தற்போதுள்ள எல்லா ஆடுகளங்களின் தன்மைகளையும் பரீட்சித்துவிட்டு வருமாறு அனுப்பிவைக்கிறேன்..
தென் ஆபிரிக்கா,மேற்கிந்தியத்தீவுகள்,பாகிஸ்தான் ஆடுகளங்கள் கூட இப்படித் தான்..

எனவே எல்லோராலும் முடியாது இது போல துடுப்பெடுத்தாட..
டிராவிட், மஹேல போன்ற நேர்த்தியான,நுணுக்கமறிந்த துடுப்பாட்ட சிற்பிகளால் தான் இவ்வாறான அருமையான ஆட்டங்களைக் கட்டியெழுப்ப முடிகிறது.

முச்சதங்களை இரண்டு தரம் பெற்ற மூவரோடு நாலாமவராக (அந்த மூவர் பிரட்மன், லாரா, சேவாக்)இணையும் வாய்ப்பை தவறவிட்ட மகேல பல்வேறு ஏனைய மைல் கற்களையும், சாதனைகளையும் தாண்டி இருக்கிறார்.

சத்தமில்லாமல் சாதனைகளைப் படித்துக் கொண்டிருக்கும் இருவராக நான் கிரிக்கெட்டில் கருதும் மூன்று எளிமையான,அமைதியான கிரிக்கெட் வீரர்கள் இருக்கிறார்கள் - மகேல, டிராவிட், சந்தர்போல்..

மற்றவர்களின் அதிரடி,ஆர்ப்பாட்டங்கள் வெளியே அவர்களை ஹீரோக்களாக்க இவர்கள் அணிக்கு பின்னணியாக,தூணாக இருந்து தேவையானபோது காப்பாற்றவும்,தேவையானபோது வென்றுகொடுக்கவும் துணை நிற்கிற ஆணிவேர்கள்.

இரு சுவர்கள்.. கிரிக்கெட் இன்னும் கனவான்களின் ஆட்டம் தான்..

டிராவிடை இந்திய சுவர்(wall) என்று சொல்வது போல, மகெலவை இலங்கையின் சுவர் என்று சொன்னால் அது மிகப்பொருத்தமே.

இப்போது வந்த பொடிசுகள் வெளியே பிரம்மாண்டமாகக் காட்டப்படும் இன்றைய நவீன விளம்பர விளையாட்டுலகில், எத்தனை பேருக்கு மஹேல,டிராவிட் ஆகிய இருவரும் டெஸ்ட் போட்டிகளில் சதங்கள் பெற்றிருப்பது தெரியும்?

இருவரும் இப்போது ஒரே போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளின் சரித்திரப் பிரசித்திபெற்ற சேர்.கார்பீல்ட் சொபெர்சை முந்தியுள்ளனர்.

டிராவிட் 11000 ஓட்டங்களைப் பூர்த்தி செய்த ஐந்தாவது வீரர் என்ற பெருமையைப் பெற்ற அதே போட்டியில் மஹேல 9000 ஓட்டங்களைப் பூர்த்தி செய்துள்ளார்.

இவருக்கு முன்னர் எட்டு பேர் மாத்திரமே ஒன்பதாயிரம் டெஸ்ட் ஓட்டங்கள் தாண்டியவர்கள்.

கடந்த வருட வரலாற்றில் இந்திய மண்ணில் இலங்கை வீரர் யாரும் பெற்றிராத இரட்டை சதத்தை மஹேல அடைந்துள்ளார்.
அத்துடன் யூனுஸ் கான் வைத்திருந்த, இந்திய மண்ணில் ஒரு வெளி வீரர் வைத்திருந்த அதிகூடிய ஓட்ட எண்ணிக்கை (267 ) என்ற சாதனையும் மகேலவினால் மேவப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் பதினோரு வருடங்களாக இந்திய மண்ணில் இலங்கை வீரர் ஒருவரும் சதம் பெற்றிராத குறையினை டில்ஷான் தீர்த்துவைத்தார்.. மஹேல மேலும் அதிகமாக சென்று இரட்டை சதத்தையும், விக்கெட் காப்பாளர் பிரசன்ன ஜெயவர்த்தன 150ஐயும் பெற்றுக் கொண்டார்.

எனது முன்னைய இந்தத் தொடர் பற்றிய முன்னோட்டப் பதிவில் நான் குறிப்பிட்டது போல, பிரசன்ன தன துடுப்பாட்ட ஆளுமையை வெளிப்படுத்தி இருக்கிறார். சங்கா இனியும் சந்தேகம் வேண்டாமே..

ஆனால் பாவம் பிரசன்ன, தனது அற்புதமான திறமையை இன்றைய நாளில் காட்டினாலும், மகேலவின் அற்புதத்தின் முன்னாள் பிரசன்னவின் சதம் அதிகம் பேசப்பட்டு பொருளாக மாறமுடியாமல் போயிற்று.

பிரசன்ன - மகேலவின் இணைப்பாட்டமும் (351 )ஒரு சரித்திரம் ஆகியுள்ளது.72 வருட காலம் நிலைத்திருந்த டெஸ்ட் கிரிக்கெட் சரித்திரத்தின் ஆறாவது விக்கெட்டுக்கான இணைப்பாட்டத்தை முறியடித்துள்ளார்கள் இந்த ஜெயவர்த்தனேக்கள். (இதற்கு முன்னர் பிரட்மனும், பிங்கில்டனும் இந்த சாதனையை தம் வசம் வைத்திருந்தனர்)

இதுமட்டுமன்றி இந்த இணைப்பாட்டம் எந்த ஒரு அணியினாலும் இந்திய அணிக்கேதிராகப் பெறப்பட்ட மூன்றாவது பெரிய இணைப்பாட்டமாகும்.

மொத்த ஓட்ட எண்ணிக்கையிலும் ஒரு அதிசயிக்கத்தக்க சாதனை.. இந்திய மண்ணில் பெறப்பட்ட மிகக் கூடுதலான ஓட்ட எண்ணிக்கை இதுவே..
இதற்கு முன் இந்திய அணி 23 வருடங்களுக்கு முன் இலங்கை அணிக்கெதிராக 676 ஓட்டங்களைக் குவித்ததே இதுவரை சாதனையாக இருந்தது.

அத்துடன் இலங்கை அணியினால் வெளிநாடொன்றில் பெறப்பட்ட மிகப்பெரிய ஓட்ட எண்ணிக்கையும் இதுவே.

மஹேல - ஆர்ப்பாட்டம் இல்லாத அசத்தல்

மகேலவைப் பலரும் உள்நாட்டில் மட்டும் ஓட்டங்கள் குவிப்பவர்;வெளிநாடுகளில் சறுக்குபவர் என்று கண்மூடித்தனமாகக் கருத்துக் கூறும் நிலையில், அவரது சில சாதனைக் குறிப்புக்களைக் கவனத்தில் எடுப்பது நல்லது..

கடைசியாக அவர் விளையாடிய முப்பது டெஸ்ட் போட்டிகளில், 3706 ஓட்டங்களை 77 .45 என்ற சராசரியில் குவித்துள்ளார்..
இதில் 15 சதங்கள், 7 அரை சதங்கள்.. இந்த சத்தங்களில் ஏழு வெளிநாடுகளில் பெறப்பட்டவை.. ஒவ்வொன்றும் ஒவ்வொரு நாட்டில்..
இதுவரை மஹேல சதம் குவிக்காத ஒரே நாடு தென் ஆபிரிக்கா மட்டுமே..
இது போதுமா?

இது மட்டுமன்றி இந்திய அணிக்கெதிராக 13 டெஸ்ட் போட்டிகளில் மகேலவின் சராசரி ஐந்து சதங்களோடு 79.77.
இவ்விரு அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டிகளில் அதிக ஓட்டங்களைக் குவித்தவராகவும் மஹேல மாறியுள்ளார்.

உலக சாதனையாளர் சச்சின் 28 இன்னிங்க்சில் பெற்ற 1412 ஓட்டங்களை, மஹேல 19 இன்னிங்க்சில் முந்தியுள்ளார்.

இன்னொரு சுவாரஸ்ய சாதனை..

அதிக இரட்டை சதங்களைப் பெற்றோர்..
பிரட்மன் 12 , லாரா 9 , ஹம்மன்ட் 7 .. என்ற வரிசையில் ஆறு இரட்டை சதங்கள் பெற்ற நால்வரில் மூவர் இலங்கை வீரர்கள்.

பாகிஸ்தானின் ஜாவேத் மியன்டாட் தவிர, மார்வன் அத்தப்பத்து, குமார் சங்கக்கார மற்றும் தற்போதைய ஹீரோ மஹேல.

இப்படியே மஹேல தொடர்ந்து பிரகாசித்தால் அவருக்கு இப்போது தான் 32 வயதாவதால், சச்சின், பொன்டிங் ஆகியோருக்கு ஒரு ஆரோக்கியமான போட்டியைக் கொடுக்கலாம்.. ஆனால் சர்வதேச கிரிக்கெட் பேரவை தான் இலங்கைக்கு அதிக டெஸ்ட் போட்டிகளை வழங்காத சாபக்கேடும் தொடர்கிறதே..

இலங்கை வீரர்கள் இத்தனை சாதனை படைத்த இன்றைய நாளில், இந்தப் போட்டியில் இந்திய வீரர்களுக்கு பல வேண்டாத அவமானங்கள் வந்து சேர்ந்துள்ளன.

இந்திய சுழல் பந்துவீச்சாளர்களால் வழங்கப்பட்ட மூன்றாவது அதிகூட்டிய ஓட்டங்கள் இவை (495 ). இலங்கை உலக சாதனை படைத்தபோது இந்திய சுழல்பந்து வீச்சாளர்கள் எழுநூறு ஓட்டங்களை கொடுத்திருந்தார்கள்.

இந்திய மண்ணில் ஒரு இந்திய சுழல்பந்துவீச்சாளர் கொடுத்த அதிக ஓட்டங்களை கொடுத்தார் அமித் மிஸ்ரா.. 61 வருடங்களுக்கு முன்னர் வினு மன்கட் கொடுத்திருந்த ஓட்டங்களை இன்று முந்திக் கொண்டார்.

ஹர்பஜனின் மோசமான பந்துவீச்சுப் பெறுதி இது தான்.. (இன்னுமா உலகம் இவரை நம்பிக்கிட்டு இருக்கு? என் சார்பாக இலங்கை அணி இவர் முகத்தில் குத்தியுள்ளது சந்தோசமே..)

நான்கு இந்தியப் பந்து வீச்சாளர்கள் இந்திய மண்ணில் ஒரே இன்னிங்க்சில் நூறு ஓட்டங்களுக்கு மேல் வழங்கிய நான்காவது சந்தர்ப்பம் இது.

ஒரே டெஸ்டில் இரு அணியினதும் விக்கெட் காப்பாளர்கள் சதமடித்த இரண்டாவது சந்தர்ப்பம் இது.
இதற்கு முன்னரும் இந்தியா சம்பந்தப்பட்ட போட்டி ஒன்றிலேயே இந்த அதிசயம் நிகழ்ந்தது.
2001 இல் இந்தியாவின் அஜய் ரத்ராவும், மேற்கிந்தியத் தீவுகளின் ரிட்லி ஜகொப்சும் சதங்கள் பெற்றனர்.

நாளை ஒரு தீர்க்கமான நாள். இந்திய வீரர்கள் பொறுமையோடும்,நிதானத்தோடும் ஆடினால் தோல்வியிலிருந்து தப்பலாம்.

இலங்கை அணி தகுந்த நெருக்கடிகளை வழங்கினால் மேலும் துல்லியமாகவும், சமயோசிதமாகவும் பந்துவீசினால் புதிய சரித்திரம் படைக்கலாம்.

எத்தனை தடவை முற்கூட்டியே ஊகம் சொல்லி மூக்குடைபட்டாலும் அதில் ஒரு சுவாரஸ்யமும் த்ரில்லும் தான்..

இம்முறையும் அந்த வகையில் நான் சொல்வது..ஆடுகளம்,இந்தியாவின் நம்பகமான துடுப்பாட்ட வரிசை என்று பல காரணங்கள் இருந்தும் என்னைப் பொறுத்தவரை இலங்கை அணிக்கு அதிகமான வாய்ப்பு இருக்கிறது.
அஹ்மேதாபாத் இலங்கையின் கிரிக்கெட்டின் புதிய சரித்திரத்தை எழுதும் என நம்புகிறேன். (சங்கா +முரளி குழுவினரே..மறுபடி கரி பூசாதீங்கப்பா..)

இந்திய அணிக்கு நாளை காவல் தெய்வங்களாக கம்பீர், சச்சின், தோனி ஆகியோர் தான் இருக்கக் கூடும்.. லக்ஸ்மன்,யுவராஜ் மீது எனக்கென்னவோ நம்பிக்கை வைக்க தோன்றவில்லை.

அதிலும் இந்திய வீரர்கள் இவ்வாறான நெருக்கடியான நேரங்களில் மனம் தளர்ந்து போவதும்,பதற்றமடைவதும் இலங்கை அணிக்கு சாதகமான விஷயங்கள்

ஆனால் முரளி தனது மாயாஜாலங்களை காலை முதலே காட்டாவிட்டால்.. மதியத்துக்குப் பிறகு நாம் கொட்டாவி விட்டுக் கொண்டே வேறு அலைவரிசைகளை மாற்றி படமோ,பாட்டோ பார்க்கலாம்..

போட்டியில் இலங்கை சிலசமயம் வெல்லாவிட்டாலும் மஹேல என்றொரு இலங்கையின் சுவர் தன்னை விஸ்வரூபப் படுத்தி மீண்டும் காட்டி இருப்பது பெருமையான விஷயமே..

November 17, 2009

மறக்க முடியாத நவம்பர்!


நேற்று கொழும்பு அமெரிக்க நிலையத்தில் இடம்பெற்ற ஓவியக்கண்காட்சி ஒன்றுக்கு அழைக்கப்பட்டிருந்தேன்.

எங்கள் அலுவலகத்தில் பணிபுரியும் சிங்கள நண்பரொருவரின் ஓவியக்கண்காட்சி அது. சிரேஷ்ட முகாமைத்துவத்திலுள்ளவன் என்பதனால் வந்திருந்த அதிதிகளுடன் என்னையும் விளக்கேற்றவும் புகைப்படம் பிடிக்கவும் அழைத்தார்கள்.

பிரதம அதிதியாக வந்திருந்தார் ஒரு அமைச்சர். எனக்கும் கைலாகு கொடுத்து சிரித்துப் பேசிவிட்டுப் போன பிறகுதான் அவர் யாரென்றே ஞாபகம் வந்தது.....

கடந்த வருடம் இதே நவம்பரில் கிட்டத்தட்ட இதே நாட்களில் (சரியாக நவம்பர் 18ம் திகதி) ஒரு ஊடகவியலாளர் மாநாட்டில் என்னைத் தற்கொலை போராளியுடன் சம்பந்தமுடையவன் என்று அறிவித்த அதே ஊடகத்துறை அமைச்சரான லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன.

அன்று குற்றவாளி - இன்று அமைச்சருடனேயே சேர்த்து ஒரு அதிதி!

காலம் எப்படியெல்லாம் மாறுகிறது.

......................
மறக்க முடியாத நவம்பர் மாதத்தின் ஒருவார வடுக்கள் கொஞ்சம் மறைந்துபோய், நான் முன்பு போல் சகஜமானாலும், சந்தோஷமாகவே இருந்தாலும் இப்போதும் அந்த நாட்களை நினைக்கும்போது உள்ளேயுள்ள அப்பாவிகள் பலரின் முகங்கள், அவர்களில் சிலரின் அவலக்கதைகள் நிழலாடுகின்றன.

எனக்கான குரல்கள் ஒலித்தன! அவர்களுக்கு யார் உள்ளார்கள்?

பாவம் அந்தக் காலத்தின் கைதிகள் என்று பரிதாபப்படுவதைத்தவிர வேறு வழியில்லை!

கமல்,சுஜாதா,அசின்,SPB ஒரே கட்சியில்..


தொடர் பதிவுகள் என்றாலே தொந்தரவு என்று விலகிச்செல்லும் பலநேரம் இருந்தாலும், ஒருசில தொடர் பதிவுகளை வாசிக்கும் போது யாராவது என்னையும் இந்தத்தொடர் பதிவிற்கு அழைக்கமாட்டார்களா என்று ஆசையும் வரும்.

அப்படிப்பட்ட மூன்று தொடர் பதிவுகளை அண்மையில் பல பதிவுகளில் வாசித்திருந்தேன். அதில் ஒன்றுக்கு அன்புத் தம்பி சுபாங்கன் என்னை அழைத்துள்ளார்.

மகிழ்ச்சியுடன் பதிவிடுகிறேன்.

மூலப்பதிவிலிருந்து சுவைக்காக ஒரு சில விடயங்களை மட்டும் மாற்றிவிட்டேன்.

இதோ எனக்குப்பிடித்த என்னுடைய கட்சிக்காரர்களும், எதிர்க் கட்சிக்காரர்களும்..

எழுத்தாளர்&கவிஞர்

பிடித்தவர் : சுஜாதா

எழுத்து நடை, சிந்தனைப்போக்கு, காலத்துக்கேற்ப தன்னை புதுப்பித்துக்கொண்ட திறன், எதிர்காலத்தைப் பற்றி நிகழ்காலத்திலேயே சிந்தித்தவர் என்று இவர் பற்றி ஏராளம் சொல்லலாம். இவரது எழுத்து சிறுவயது முதலே என்னை கவர்ந்தது. சுஜாதாவின் இறப்பு என்னை மிகவும் பாதித்தது.
: வைரமுத்து
சிறுவயது முதலே இவரது பாடல்களால் ஈர்க்கப்பட்டு, கவிதைகளையும் நேசித்தேன்.

இவர்களிருவரையும் ஏன் பிடிக்கும் என்று எழுதப்போனால் ஒரு தனிப்பதிவே போடலாம்.அநேகமாக இவர்கள் இருவரதும் எல்லா நூல்களுமே நான் வாங்கிவைத்துள்ளேன்.


பிடிக்காதவர்: ஞானி (ஆவி ஞானியே தான்.அதாவது ஆனந்த விகடன் ஞானி), சோ வகையறாக்கள்.திடமான கொள்கையற்றவர்கள்; தாம் சாதிக்காமல் போதிக்க நினைப்பவர்கள். தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களைத் திணிப்பதோடு இவர்களின் சில பிற்போக்கான சிந்தனைகள் எரிச்சலூட்டும்.

சிறுகதை என்று சிறுவர்களுக்கான கதைகளும். கவிதை என்று கதைகளை எழுதி வதைப்போரும், தமக்குத்தாமே 'கவிஞர்' மகுடம் ஒட்டிக்கொள்வோரும் கூட எனது பிடிக்காத எழுத்தாளர் பட்டியலில் உள்ளார்கள்.




நடிகர்

பிடித்தவர் : கமல்ஹாசன்

என்ன இவரிடம் இல்லை?
பிறவிக்கலைஞன், தாகம், தேடல், முயற்சி, பரந்த அறிவு எனப் பிடித்த குணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.


பிடிக்காதவர்: விஜய் என்று சொல்வேன் என்று நினைத்தால் தப்பு!
இவரை விட பிடிக்காத பெரிய பட்டியலே உள்ளது. நினைத்தாலே மனதில் சொல்லொணா எரிச்சல் வருகிற, மூஞ்சியில் மூன்று குத்துவிடலாம் என நினைக்கிற சிலர் – பிரஷாந், மனோஜ், முரளி, விக்ராந்த், 'ஆனந்த தாண்டவம்' ஹீரோ.. பெயரும் ஞாபகம் வருதில்ல

நடிகை

பிடித்தவர் : அசின், ஜோதிகா, ஸ்ரீதேவி

பின்னிருவரின் திருமணத்தின் பின்னதான ஓய்வின் பின் அசின் தான் என்னைக் குத்தகை எடுத்துள்ளார்.
மூவரதும் இயல்பான அழகு, ஆபாசமில்லாத நடிப்பு, பாத்திரமுணர்ந்த உணர்வு வெளிப்பாடுகள் இவைமட்டுமன்றி, மூவரின் கண்களும், உதடுகளும் அவர்களது சமகாலத்தவரை பின்தள்ளிவிட்டனர்.


பிடிக்காதவர்: த்ரிஷா, ஷ்ரேயா, ராதிகா

நடத்தை, நடிப்பு, dressing sense என்று எதுவுமே இவர்களிடம் எனக்கு பிடிப்பதில்லை. ரசித்ததைவிட அருவருத்ததே அதிகம். (த்ரிஷா, ராதிகாவின் வெகுசில படங்கள் பிடித்தவை)


இயக்குனர்

பிடித்தவர் : மணிரத்னம், பாசில், கமல்ஹாசன்

இம்மூவரினது இயக்கத்தில் வெளிவந்த ஒரு திரைப்படத்தையும் நான் இதுவரை தவறவிட்டதில்லை. அவற்றுள் எந்தவொன்றும் பிடிக்காமல் போனதுமில்லை. என் ரசனைக்குகந்த விஷயங்களை, மேலும் தரமான ரசனையோடு தரும் சிற்பிகள்.


பிடிக்காதவர்: பேரரசு
மொக்கையை கூட ரசிக்கலாம் இது சக்கை.
கொடுமையோ கொடுமை.
இதுல வேற நடித்தும், பாடல் எழுதியும் வேறு கொல்கிறார். இனி இசையமைக்கவும் போறாராம்!
தாங்காது சாமி தாங்காது.

பாடகர்

பிடித்தவர்: எப்போதும் SPB
நடிப்புக்கு கமல் என்றால் பாடலுக்கு பாலு தான்!
திறமைகளும் அவற்றால் வந்த சாதனைகளும் குவிந்திருந்தாலும் தலைக்கனம் ஏறாத ஒரு அன்பு மலை! பண்பும், பணிவும், எந்தப்பாடலையும் ரசிக்க வைக்கும் அந்த ஈடுபாடும், இளையோரை ஊக்குவிக்கும் நல்ல மனதும் பிடிக்கும்.

வித்தியாசமான குரல்வளம் கொண்ட அருண்மொழியும் பிடிக்கும்.


பிடிக்காதவர்: தமிழில் பாடுகிறோம் என்று கொடுமையாகக் காதுகளில் ஈயம் கரைத்து ஊற்றித் தமிழைக்கொலை செய்யும் சுக்வீந்தர் சிங் மற்றும் உதித் நாராயணன்.


பாடகி

பிடித்தவர் : P.சுசீலா

தாய்மையின் கனிவு, காதலின் ஏக்கம், மனைவியின் அன்பு, தமிழின் இனிமை, பெண்மையின் இயல்பு என்ற அத்தனையையும் சம விகிதத்தில் கலந்த இந்தக் குயில் குரலின் பல பாடல்களில் மனதைத் தொலைத்தவன் நான்.

இவர் கலந்து கொண்ட மேடை நிகழ்ச்சி ஒன்றைத் தொகுத்து வழங்கி அவரிடம் வாழ்த்துக்கள் பெற்றது வாழ்நாளில் மிகப்பெருமையான விஷயம்.

சித்ரா, சுஜாதா அண்மைய புதிய பாடகி ஷ்ரேயா கோஷல், கல்யாணியும் இவரது சாயலுடையவர்கள் என்பதால் பிடிக்கும்.


பிடிக்காதவர் : மதுஸ்ரீ

A.R.ரஹ்மான் தமிழ்த்திரைப்பட பாடல்களுக்குத் தந்த சாபம்! இசைப்புயலின் இசையில் மட்டும் ஓரளவு திருத்தமாகப்பாடி மற்ற இசையமைப்பாளர்களின் இசையில் தமிழை வன் புணர்ச்சி செய்கிறார். இவரது தமிழ்க்கொலை தாங்காமல் இவரது சில பாடல்களை நான் ஒலிபரப்புவதே இல்லை.


இசையமைப்பாளர்

பிடித்தவர் - வித்யாசாகர்

முன்பிருந்தே இவர் மீது ஒரு கிறக்கம்,அனுதாபம்,இவரது மெட்டுக்கள் கேட்டு ஆச்சர்யம்.
இசைஞானி-இசைப்புயல் இருவரையும் ஈடு கொடுக்கக்கூடிய இசை ஞானம்.
பல மிகப் பெரும் வெற்றிப் படங்களுக்கு இசையமைத்தும் பெரியளவில் பேசப்படவில்லை.
மிகப் பெரும் ஹிட் பாடல்கள் கொடுத்தான் முன்னணி இசையமைப்பாளராக யாரும் ஏற்கிறார்கள் இல்லை என இவர் மீது ஒரு எனக்கு ஒரு இரக்கம் உள்ளது.


பிடிக்காதவர் - கார்த்திக் ராஜா

பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா கேட்ட பிறகு பெரிதாக வருவார் என்று எதிர்பார்த்து ஏமாந்ததோ என்னவோ இவர் மீது கோபமாக உள்ளது.
இவரது மெட்டுக்கள் எனக்கு சுத்தமாக பிடிப்பதில்லை.
விதிவிலக்கு - அடியே கிளியே -குடைக்குள் மழை

கிரிக்கெட் வீரர்

பிடித்தவர் -
பலபேர் இருந்தும்.. சட்டென்று மனதில் வருபவர் ரொஷான் மகாநாம. எளிமையான,நல்ல மனிதர். நேர்மையான நேர்த்தியான விளையாட்டுவீரர்.

பிடிக்காதவர் -
ஹர்பஜன் சிங்.. கண்டால் முகத்தில் ஓங்கிக் குத்துவிடவேண்டும் போல் இருக்கும் ஒரே ஒருவர் இவர் மட்டும்.
இவருக்கு அடுத்தபடியாக இவரது 'நண்பர்' ஸ்ரீசாந்தும் இருக்கிறார்


அரசியல்வாதி பற்றி நான் எதுவும் சொல்லவில்லை.
காரணம் பிடித்தவராக யாருமே இல்லை. (உயிருடன்)
பிடிக்காதவர் என்று யாரை சொல்வது என்று தெரிவுக் குழப்பம்.

இந்த தொடர் பதிவை தொடர நான் அழைக்கும் நால்வர் -





ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner