September 29, 2012

தீவுகளின் மோதலும் குழம்பியுள்ள கப்டன் கூலும் இந்திய - பாக் போரும் - #ICCWT20


இலங்கை அணிக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இடையிலான இன்றைய ஆட்டம் உலகம் முழுவதும் பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் ஒரு விறுவிறு போட்டி...

ஒரு தீவுக்குள்ளே ஒரு தீவுடன், பல தீவுகள் சேர்ந்த கூட்டணியின் மோதல் இன்றைய இரவின் சுவாரஸ்ய மோதல்.



இரண்டு அணிகளுமே இம்முறை  ICC உலக Twenty 20 வெல்வதற்கான பெரிய வாய்ப்புடைய அணிகள்.
இரண்டுமே மந்திரவாதிகள் என்று சொல்லப்படும் சுழல்பந்துவீச்சாளர்களையும், அச்சுறுத்தும் அதிரடி ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களையும் கொண்ட அணிகள்.
இரண்டு அணிகளுமே ஆச்சரியப்படும் விதமாக தத்தமது இலகுவாக வெல்ல வேண்டிய முதலாவது Super 8 போட்டிகளில் தட்டுத் தடுமாறி, இறுதி சந்தர்ப்பம் வரை சென்று வென்றுள்ளன.
இன்று வெல்கின்ற அணி கிட்டத்தட்ட அரையிறுதி வாய்ப்பைத் தம் வசப்படுத்தும்.

Favoritesஆ அல்லது Hostsஆ என்பதே இன்றைய கேள்வி.
மென்டிஸ் (இன்று அணியில் இடம் கிடைத்தால்) எமக்கு சொல்லியபடி கெய்லை அசத்துவாரா என்றும் பார்க்கவேண்டும்.

மகளிர் போட்டிகளில் அண்மைக்காலத்தில் சாதித்து, முன்னேறி வரும் மேற்கிந்திய மகளிரை இலங்கை மகளிர் நேற்று ஆச்சரியப்படுத்தி வென்ற உற்சாகத்தை இன்று இலங்கை ஆண்கள் அணி தனக்கு உத்வேகமாக மாற்றிக் கொள்கிறதா என்று பார்க்கலாம்.

இதுவரை இவ்விரு அணிகளும் சந்தித்துள்ள 3 T20 போட்டிகளிலும் இலங்கை அணியே வெற்றியீட்டியுள்ளது.

இதுவரை ஹம்பாந்தோட்டை, கொழும்பில் பெய்த மழை, பள்ளேக்கலையில் மட்டும் பெய்யவில்லை; ஆனாலும் மழை பெய்வதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாக காலநிலை அவதான மையம் சொல்லியிருக்கிறது.
இன்றும் மழை பள்ளேக்கலையில் விட்டுக்கொடுத்து மைதானம் நிறைந்த விறுவிறுப்பான போட்டியொன்றை நடத்த இடம் தரவேண்டும் என்று வருணபகவானிடம் கேட்போம்.

இன்றாவது கொழும்பை விட்டு வேறிடத்தில் இடம்பெறும் இம்முறை ICC உலக Twenty 20  போட்டி யொன்று பார்க்கலாம் என்று பார்த்தால் விதி சதி செய்துவிட்டது.
என் தலைவிதி அவ்வளவு தான்.
அவதாரத்தோடு பார்ப்போம்..  

------------------


இந்திய அணித்தலைவர் மகேந்திரசிங் தோனியை நினைத்தால் பாவமாகத் தான் இருக்கிறது.
எத்தனை தலைவலிகளைத் தான் தாங்கிக்கொள்வார்?

வென்றால் ஒரேயடியாக உச்சத்தில் ஏற்றுவதும் தோற்றால் அவரையே குறிவைத்துத் தாக்குவதும், அணித்தெரிவில் அவரையே முழுமுதல் காரணியாக மாற்றி யாராவது ஒரு வீரர் அணியில் சேர்க்கப்படாவிட்டால் தோனி அவரை வேண்டுமென்றே அணியில் சேர்க்கவில்லை என்று கொடும்பாவி கொழுத்துவதும், குறிவைத்து வெட்டுகிறார் என்பதும், ஜோகீந்தர் ஷர்மா, பாலாஜி, ரவீந்திர ஜடேஜா போன்றோர் அணிக்குள் வந்தால் தோனியின் 'ஆசி' பெற்றவர்கள் என்று (அஷ்வின், கோஹ்லி, ரோஹித் ஷர்மா போன்றோருக்கும் இவ்வாறே சொல்லப்பட்டது என்பதும் தனிக்கதை) பரபரப்பதும் சகஜமே.

நேற்றைய இந்தியா ஆஸ்திரேலியாவிடம் வாங்கிக்கட்டிய போட்டியில் (விக்கெட்டுக்களின் அடிப்படையில் ஆஸ்திரேலியாவின் நான்காவது பெரிய வெற்றி) இந்தியா தோற்றதை விட, ஆஸ்திரேலியாவின் ஷேன் வோட்சனின் சகலதுறைப் பெறுபேறு, வொட்சன் - வோர்னரின் ஆரம்ப சாதனை இணைப்பாட்டத்தை (ஆஸ்திரேலியாவின் எந்த விக்கெட்டுக்குமான மிகச் சிறந்த இணைப்பாட்டம் & இம்முறை ICC உலக Twenty 20 போட்டிகளில் மிகச் சிறந்த ஆரம்ப இணைப்பாட்டம்) விட, இந்தியப் பந்துவீச்சாளர்கள்   தங்கள் வியூகங்களைத் தவறவிட்டு மிக மோசமாகப் பந்துவீசியதை விட (வோர்னர் & வொட்சன் விட்டால் தானே?) அதிகம் பேசப்பட்டு, அலசப்பட்டு, தோனி தாறுமாறாக விமர்சிக்கப்பட்ட விடயம் - விரேந்தர் சேவாக் அணியில் நேற்று சேர்க்கப்படாதது.

உலகிலேயே அதிகமாக அறிவுரை சொல்லப்படுகிற சில மனிதர்களில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இருப்பதைப் போல, உலகில் அதிகமான கிரிக்கெட் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்கிற இருவரில் ஒருவராக (மற்றவர் நிச்சயம் சச்சின் டெண்டுல்கர் தானே?) தோனி இருக்கிறார்.

ஆஸ்திரேலிய தொடரில் மூத்த வீரர்களுடன் தோனிக்கு இடம்பெற்ற நேரடி, மறைமுக மோதல்கள் இன்று வரை தொடர்ந்தவண்ணமே உள்ளன.
ஐந்து வயது கூடிய வீரர்களில், தோனியின் வார்த்தைகளில் "Those 5 senior people" டிராவிடும், லக்ஸ்மனும் ஓய்வை அண்மையில் அறிவித்தார்கள்.
(லக்ஸ்மன் ஓய்வு பெற்றதும், தோனியை விருந்துக்கு அழைக்காததும் தனியான சுவாரஸ்யக் கதைகள்)
சச்சின் T20 போட்டிகளில் விளையாடுவதில்லை. (அவரது ஓய்வு எப்போது என்று யாரும் கேட்கப்படாது.. உஸ்)

அடுத்தது சேவாக் .... இவர் தான் அண்மையில் தூக்கப்படுவதும் சேர்க்கப்படுவதுமாக இருக்கிறார்.
ஆனால் அண்மைக்காலத்தில் தான் அணியில் நிரந்தரமாக இருக்கப்படவேண்டும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் விரு, விறுவிறு ஆட்டம் ஏதும் ஆடியதாகவும் இல்லை.
அவரை அணியை விட்டுத் தூக்கி, ஐந்தாவது பந்துவீச்சாளரை அணிக்குள் கொண்டு வந்தது இங்கிலாந்துக்கு எதிராக சரியான முடிவாகவே இருந்தது.

ஆனால் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக இர்பான் பதான் சோபிக்கவில்லை.
நேற்று பந்துவீச்சாளர்களால் எதையும் செய்ய முடியவில்லை; (தோனியிடம் கேட்டபோது அவர் வழமையாகவே தோற்றவுடன் அடுக்கடுக்காக எடுத்துவிடும் காரணங்களில் சிலவற்றை நேற்றும் சொன்னார் - "மழை எங்கள் வேகத்தைத் தடுத்துவிட்டது;  மழை ஈரம் சுழல் பந்துவீச்சாளர்களின் கைகளை வழுக்கிவிட்டது") ஆனால் பதான் தான் இந்தியாவின் அதிகூடிய ஓட்டங்கள் பெற்றவர்.

ஆனால் தோனியின் துடுப்பாட்டத் தடுமாற்றம், இந்தியாவின் நேற்றைய படுதோல்வி ஆகியன ரசிகர்கள், விமர்சகர்கள், ஊடகங்களின் அழுத்தம் ஆகியன நாளைய முக்கிய கிரிக்கெட் யுத்தமான பாகிஸ்தானுடனான போட்டியில் சேவாக்கை அணிக்குள் உள் எடுக்கச் செய்யுமா என்ற வினாவை எழுப்புகிறது.

ஆஸ்திரேலியாவுடனோ, இங்கிலாந்துடனோ தோனி செய்ததைப் போல மூன்று/ இரண்டு சுழல் பந்து வீச்சாளர்களைப் பாகிஸ்தானுடன் ஈடுபடுத்துவது சிக்கலானது. சிலவேளை அஷ்வினையும், ஹர்பஜனையும் சேர்த்து விளையாடவிடலாம்..(பகுதி நேரப் பந்துவீச்சாளர்களே தமது பலம் என்று தோனி இந்த உலகக் கிண்ண ஆரம்பத்திலேயே சொல்லி இருப்பதால் பஜ்ஜி பாகிஸ்தானை சந்திப்பது சிலவேளை தான்)
எனவே செய்யப்படும் மாற்றங்களில் சேவாக் உள்ளே வரலாம்...

இங்கிலாந்தை வென்றபிறகு யாரை எடுப்பது, யாரை விடுவது என்ற ஆரோக்கியமான குழப்பம் இருப்பதாகப் பேட்டியளித்த தொனிக்குன் இப்போது இப்படியொரு தர்மசங்கடம்... Captain Cool ஆகத் தன்னைக் காட்டிக்கொண்டாலும் தோனியின் ஆழ்மனதில் எத்தனை குழப்பங்களோ?

ஆனால்  ICC உலக Twenty 20  ஆரம்பிக்க முதல் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தோனியும் பயிற்றுவிப்பாளர் டங்கன் பிளெச்சரும் எம்மை சந்தித்த நேரம், அதற்கு முதல் நாள் தான் நியூ சீலாந்து அணிக்கெதிரான ஹைதராபாத் T20 போட்டியில் தோனியினால் இந்தியா தோற்றிருந்ததாக விமர்சனங்கள் எழுந்திருந்த நேரம், அணித் தெரிவுகள், முன்னைய தொடர் பற்றி பேச்சுக்கள் வந்தபோது தோனி சாமர்த்தியமாக அதேவளை கூலாக "இந்த  ICC உலக Twenty 20 பற்றியே கேள்விகள் இருக்கட்டும். வேறு விஷயங்கள் வேண்டாம்" என்று நழுவிக்கொண்டார்.

அப்படி இருந்தும் சேவாக், கம்பீர் இருவரது அணி இருப்பு பற்றியும், ஹர்பஜன், யுவராஜ் மீண்டும் பயிற்சிப் போட்டிகள் இல்லாமல் அணிக்குள் வந்தது பற்றிய கேள்விகள் சுற்றி சுற்றி வந்தபோது, தோனியின் முகம் கொஞ்ச மாற, இடையே குறுக்கிட்ட பிளெச்சர் கொஞ்சம் கடுகடுத்த தொனியில் "அதான் முதல்லையே சொன்னமில்ல,  ICC உலக Twenty 20 பற்றி மட்டுமே கேட்க சொல்லி?" என்றார்.

ஆனால் தோனி மீண்டும் கூலாக ஏனைய கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
யுவராஜ்  தெரிவானது அனுதாபத்தினலா என்ற கேள்விக்கு மட்டும் " அது ஒரு தெரிவுக்குழு முடிவு; ஆகவே அது பற்றிக் கருத்து சொல்ல முடியாது. ஆனாலும் ஒரு சகலதுறை வீரராக அவரது வருகை, தலைவராக எனக்கு மகிழ்ச்சி தருகிறது" என்று பக்குவமான பதிலைத் தந்திருந்தார்.

தோனி அன்று சொன்ன ஒரு விடயம், நான்கு பந்துவீச்சாளர்கள் இந்திய அணிக்குப் போதும்; ஐந்தாவது நான்கு ஓவர்த் தொகுதியை வீசத் தரமான பந்துவீசும் சகலதுறையாளர்கள் இந்தியாவிடம் இருக்கிறார்கள் என்று.
யுவராஜ் சிங், கோஹ்லி, ரெய்னா, ரோஹித் ஷர்மா என்று பட்டியல் நீள்கிறது. போதாக்குறைக்கு சர்ச்சை நாயகன் சேவாக்கும் இருக்கிறார்.
இவர்களில் யுவராஜுக்கு இன்னும் சரியான வாய்ப்பு பந்துவீசுவதில் வழங்கப்படவில்லையோ என்று தோன்றுகிறது.
3 போட்டிகளில் 6.4 ஓவர்களே வழங்கப்பட்டுள்ளன. இதற்குள் நான்கு விக்கெட்டுக்கள்.
தோனி நாளை யோசிக்க வேண்டிய விடயத்துள் இதுவும் ஒன்று.

--------------

இந்தியா நேற்று ஆஸ்திரேலியாவிடம் மரண அடி வாங்கியதற்கு சில மணிநேரம் முன்பாக, அதே மைதானத்தில் பாகிஸ்தான் தென் ஆபிரிக்கா என்ற பலமான அணியை நேற்று பலரும் ஆச்சரியப்படுத்தும் விதத்தில் வீழ்த்தி அதீத மனோ தைரியத்தோடு இந்தியாவுக்காகக் காத்திருக்கிறது.

இதுவரை எந்தவொரு உலகக் கிண்ணக் கிரிக்கெட்டிலும் இந்தியாவை வென்றிராத பாகிஸ்தானுக்கு நாளை அரியதொரு வாய்ப்பு.

இதுவரை ஐந்து 50 ஓவர் உலகக் கிண்ணப் போட்டிகளில் இந்தியாவை வெல்ல முடியாமல் தொற்றுள்ள பாகிஸ்தான், T20 போட்டிகள் இரண்டிலும் வெற்றிக்கு சமீபமாக வந்தும் இரண்டிலும் தோற்றுள்ளது.
ஒன்று சமநிலையில் முடிவுற்று Bowl out இல் இந்தியா வென்றது.
அடுத்தது எல்லோருக்கும் ஞாபம் இருக்கிற மிஸ்பா ஸ்ரீசாந்த்துக்கு கொடுத்த பரிசு மூலம் இந்தியா முதலாவது  ICC உலக Twenty 20 கிண்ணம் வென்ற இறுதிப் போட்டி.


பஞ்சாப், மொஹாலியில் இவ்விரு அணிகளும் மோதிக்கொண்ட உலகக் கிண்ண அரையிறுதியை நேரடியாகப் பார்த்த பின்னர், நாளையும் நம்ம கொழும்பில் நேரடியாகப் பார்த்து ரசிக்கக் காத்திருக்கிறேன்.

அதற்கு முதல் இடம்பெறும் ஆஸ்திரேலியா - தென் ஆபிரிக்க போட்டியும் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை முக்கியமானது & விறுவிறுப்பானது தான். ஆனால் ரசிகர்களுக்கு அதையெல்லாம் விட இந்திய - பாகிஸ்தான் யுத்தம் தானே பரவசம்?



September 27, 2012

மழையா கிரிக்கெட்டா? Super 8 - ICC World Twenty20


27 போட்டிகள் கொண்ட உலக T20  கிண்ணத்தின் பன்னிரண்டு போட்டிகள் நிறைவடைந்து இன்று பிற்பகல் முதல் Super 8 சுற்று ஆரம்பிக்கிறது.
இதிலும் பன்னிரண்டு போட்டிகள்.
ஆனால் இரு பிரிவுகள்...

இந்தப் போட்டிகள் பற்றியும், நடந்து முடிந்த முதல் சுற்றுப் போட்டிகள் பற்றியும் முடிந்தளவு முழுமையாக தமிழ் மிரரில் எழுதியுள்ளேன்.


'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை



அதில் எழுதாத மேலும் சில விடயங்கள்.....

காலியில் நேற்று முதல் ஆரம்பித்துள்ள மகளிர் உலக T20 யின் முதல் சுற்றுப் போட்டிகள் அனைத்தும் ரசிகர்களுக்கு இலவசம். இதன் மூலமாவது பெண்கள் கிரிக்கெட்டைப் பிரபல்யப்படுத்த முயல்கிறது ICC.

முதல் தடவையாக மகளிருக்கான தரப்படுத்தல்களும் இம்முறையே வெளியிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மகளிர் அணிகள் இம்முறையும் கிண்ணம் வெல்ல அதிகம் வாய்ப்புள்ள அணிகள் என்று தெரிந்தாலும், வேகமாக வளர்ந்து வரும் இந்திய, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளிடம் இருந்து போட்டியை எதிர்பார்க்கிறேன்.

இலங்கை மகளிர் அணி முதல் சுற்றில் ஒரு போட்டியை வென்றாலே பெரிது.


ஆனால் உலகமே இம்முறை அதிகமாகப் பார்க்கப் போகிறது என்று விளம்பரப்படுத்தப்பட்ட இந்த உலக T20  கிண்ணத்தொடர் மழையினால் விழுங்கப்படும் அபாயம் இருக்கிறது.
பள்ளேக்கலை போட்டிகள் மழையினால் பெரிதாகப் பாதிக்கப்படாது எனினும் கொழும்புப் போட்டிகளை மழை கழுவி முடிக்கும் அபாயம் உள்ளது.
முதல் சுற்றில் ஒரேயொரு போட்டி மழையினால் சமநிலையில் முடிந்தது.
இரு போட்டிகளில் டக்வேர்த்-லூயிஸ் (Duckworth - Lewis) விதி பயன்படுத்தப்பட்டது.  

எனினும் இந்த முக்கியமான இரண்டாம் சுற்றில் எத்தனை போட்டிகள் ரசிகர்களுக்கு ஏமாற்றம் தருமோ என்ற கேள்வி எழுகிறது.

மழைத் தொந்தரவு இல்லாமல் போட்டிகள் நடந்தால் எல்லாப் போட்டிகளுமே மிக விறுவிறுப்பாக அமையும் என்பது எல்லோரதும் எதிர்பார்ப்பு.
இலங்கை அணி விளையாடுகின்ற மூன்று போட்டிகளுக்குமே டிக்கெட்டுகள் விற்று முடிந்துள்ளன.
உலகம் முழுவதும் எதிர்பார்க்கப்படும் இந்திய - பாகிஸ்தான் போட்டியினது டிக்கெட்டுக்களும் முடிந்துள்ளன.
ஒரே நாளில், ஒரே மைதானத்தில் இரு போட்டிகள் நடைபெறுவதால் ரசிகர்களுக்கு ஒரே டிக்கெட்டில் இரண்டு விறுவிறு போட்டிகள் என்னும் மகிழ்ச்சி.


மேற்கிந்தியத் தீவுகளை Favorites என்று கொண்டாடிக் கொண்டிருந்த பந்தயக்கரர்கள் எல்லாரும் இப்போது தென் ஆபிரிக்காவை முதலாவது தெரிவாக்கி விட்டார்கள்.
இலங்கை இரண்டாவது, இந்தியா மூன்றாவது & பாகிஸ்தான் நான்காவது.


சங்கக்கார வேறு இப்போதைய இலங்கை ஆடுகளங்கள் சுழல் பந்துவீச்சாளர்களுக்கு மட்டும் சாதகத் தன்மை வழங்குவதில்லை; ஆடுகளங்கள் மாறியுள்ளன. வேகப்பந்து வீச்சாளர்கள் தங்களுக்கு சாதகத் தன்மையை எடுத்துக்கொள்ளலாம் என்று சொல்லியுள்ளதைப் பார்க்கையிலும், முதல் சுற்றின் சில பெறுபேறுகளைப் பார்க்கையிலும் யார் வேண்டுமானாலும் சிறப்பாக ஆடினால் ஆதிக்கம் செலுத்தலாம் என்பது உறுதியாகிறது.

இதுவரை புதிய வீரர்கள் எவரும் தம்மை இந்தத் தொடர் மூலமாக அடையாள படுத்தாவிட்டாலும்,
ஹர்பஜன் சிங், அஜந்த மென்டிஸ், இம்ரான் நசீர், பிரெண்டன் மக்கலம், ரோஹித் ஷர்மா, நசீர் ஜம்ஷெட், லக்ஷ்மிபதி பாலாஜி, யசீர் அரபாத் ஆகிய 'பழைய' மறந்து போனவர்கள் தம்மை நிரூபித்து வெளிப்படுத்தியுள்ளார்கள்.

நான் எதிர்பார்த்த எந்தவொரு அதிர்ச்சி (upset)  முடிவும் இம்முதற் சுற்றில் இடம் பெறவில்லை எனினும் , தென் ஆபிரிக்கா இலங்கையை வென்றதும், ஆஸ்திரேலியா மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தியதும், நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து இந்தியாவிடம் தோற்றதையும் இந்த வகைக்குள் சேர்க்கலாம்.

தொடர் ஆரம்பிக்க முதலே எதிர்பார்த்தது போல சாதனைகள் சில உடைக்கப்பட்டுள்ளன. இனியும் சில உடையலாம்.

மக்கலம்  அதிகூடிய தனி நபர் ஓட்ட எண்ணிக்கையைப் பெற்றுள்ளார்.
அஜந்த மென்டிஸ் மிகச் சிறந்த பந்துவீச்சுப் பெறுதியைப் பெற்றுள்ளார்.
இனி உடையப் போகின்றவை என்னென்ன?

ஏற்கெனவே நேற்று எதிர்வுகூறியது போல அகில தனஞ்செய விளையாடுகிறார். ஆனால் காயத்திலிருந்து குணம் அடைந்துவிட்டாரா என்று சந்த்கத்தில் இருந்து அஜந்தா மென்டிசும் இன்று விளையாடுகிறார் என்பது இலங்கை ரசிகர்களுக்கு உற்சாகம் தரக்கூடிய செய்தி இது.
டில்ஷான் முனவீர தனக்கான வாய்ப்புக்கள் இரண்டைப் பயன்படுத்துவதால் மஹேல மீண்டும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ஆகிறார்.

பிறந்தநாளை இன்று கொண்டாடும் பிரெண்டன் மக்கலமும் அவரது அணியும் இன்று ஒன்றுக்கு இரண்டு மந்திரவாதிகளை எப்படி சமாளிப்பார்கள் என்று பார்க்க ஆவலாகவுள்ளது.
அத்துடன் அறிமுகமாகவுள்ள 18 வயதான தனஞ்செயவின் நான்கு ஓவர்களையும் தவறவிடப் போவதில்லை.
தம்பி என்ன செய்வார் என்று பார்ப்போம்.
இலங்கைக்காக T20 சர்வதேசப் போட்டியில் விளையாடும் மிக இள வயதானவர் இவர் தான்.
 

காத்திருந்து ரசிக்கலாம்..

போட்டி நடைபெறும் நாட்களில் இன்னும் சுவாரஸ்ய, பின்னணிக் கதைகளையும், பரபர விஷயங்களையும் கூடப் பகிர்ந்து கொள்கிறேன்.

ஷஹிட் அப்ரிடி எமக்கு சொன்ன கதையும், நான் அவருடன் சீண்டிக்கொண்ட ஒரு விடயமும் கூட வரும்..



September 20, 2012

வாயை மூடி சும்மா இருடா - கோளிக்கு ஒரு பாட்டு - #ICCWT20


இந்தியாவின் அண்மைக்கால நம்பிக்கை விராட் கோளி...
இவர் அடித்தால் தான் இந்தியா ஜெயிக்கும் என்ற நிலை.
தனது சிறப்பான, தொடர்ச்சியான துடுப்பாட்டப் பெறுபேறுகள், அணிக்கான அர்ப்பணிப்பு என்பவற்றால் நிரந்தர இடத்தை மூன்று வகை கிரிக்கெட் அணிகளிலும் (டெஸ்ட், ODI, T20) பெற்றுக் கொண்டதோடு அணியின் உப தலைவராகவும் உயர்ந்திருக்கிறார்.

 அண்மையில் ICC விருதுகளில் கடந்த வருடத்தின் சிறந்த ஒருநாள் வீரருக்கான விருதையும் வென்ற திறமையாளர்.

எல்லா நாடுகளிலும் இவருக்கென்று ரசிகர் பட்டாளம்..  அதைவிட ரசிகையர் எண்ணிக்கை அதிகம்.

ஆனால் இந்தச் சின்னத் தம்பி எவ்வளவுக்கெவ்வளவு நல்லா மைதானத்தில் விளையாடுகிறாரோ, எவ்வளவுக்கெவ்வளவு உயிரைக் கொடுத்து இந்திய அணியைப் பல தடவை காப்பாற்றுகிறாரோ, அதேயளவுக்கு எதிரணி வீரர்கள், ரசிகர்களின் கடுப்புக்கும் ஆளானவர்.

காரணம் வாய் நிறைய இவர் வைத்துள்ள வசை வார்த்தைகள்.. ஹிந்தி தெரியாதவர்களும் கூட அகராதி தேடி அர்த்தம் தெரிந்து புல்லரித்துப் போயுள்ளார்கள்.

பொதுவாக விளையாடிக்கொண்டிருக்கும்போது விரக்தியான, கோபமான நேரங்களில் எதிரணியை வசை பாட, தன்னைத் தானே நொந்துகொள்ளவே இவ்வாறான தகாத வார்த்தைகள்/தூசணங்களை - காது கொடுத்துக் கேட்கவே முடியாத வார்த்தைகளை வெளிவிடுவதுண்டு.
(sledging and swearing)

ஆனால் இந்த இளம் வீரர், இந்திய 19 வயதுக்குட்பட்ட அணியின் முன்னாள் தலைவர், எதிர்கால இந்திய அணியின் தலைவர், தன் சந்தோஷங்களைக் கொண்டாடவும், சதங்களை அடையும்போதும், அரைச் சதங்களைப் பெறும்போதும் ஏன் பிடிகளை எடுக்கும்போது கூட வாயிலிருந்து துப்புகின்ற வார்த்தைகள்?

இப்படி சாதனைகளைக் கொண்டாடும் போதும் தகாத வார்த்தைகளை உதிர்ப்பது அதை வாழ்த்துகின்ற ரசிகர்களையும் கேவலப்படுத்தும்  என்று தம்பிக்கு அனுபவமுள்ள இந்திய வீரர்கள் யாராவது சொல்ல மாட்டார்களா ?

அப்பப்பா.... கடும் கோபம் வருகையில் கூட நாகரிகமான நாம் அவ்வாறு பேச மாட்டோம்..

நேற்றும் கூட அப்பாவி ஆப்கானிஸ்தானிய அணிக்கெதிராக அரைச் சதம் பெற்ற பிறகு அந்த வீரர்களின் அம்மாக்களை இழிவுபடுத்தியிருந்தார்.
இன்னும் கொஞ்சமென்றால் அந்த அப்பாவி அணி இந்தியாவுக்கு ஆப்பு அடித்த அணியாக மாறியிருக்கும்.

ஹ்ம்ம் இவரெல்லாம் இந்திய அணியின் தலைவராக வந்து.....


சர்வதேசக் கிரிக்கெட்டில் இப்போதிருக்கும் மிகச் சிறந்த இளம் வீரர் என்றும் எதிர்காலத்துக்கான மிகச் சிறந்த நம்பிக்கையான வீரர்களில் ஒருவர் என்றும் சொல்லக் கூடிய ஒருவர் தூஷண வார்த்தைகளால் தான் ஞாபகிக்கப் படுகிறார் என்பது அவருக்கே அசிங்கம் தானே?

ஆஸ்திரேலியாவில் நடுவிரல் காட்டிப் பரபரப்பானவர் என்பதும் கோளி தனது குறுகிய கால கிரிக்கெட் வாழ்க்கையில் பதித்துள்ள மற்றொரு சாதனை.


நேற்றைய போட்டியின் வெற்றியைத் தொடர்ந்து போட்டியின் சிறப்பாட்டக்காரராகத் தெரிவு செய்யப்பட்ட கோளி ஊடகவியலாளர் சந்திப்புக்கு வந்திருந்தார்.

கொஞ்சம் இறுக்கமாகவே காணப்பட்ட அவரிடம் சில சீண்டல் கேள்விகளும் தொடுக்கப்பட்டன.

குறிப்பாக இந்திய ஊடகவியலாளர்களே இவரை சீண்டப் பார்த்தார்கள்.
நானும் பார்த்தேன் விராட் கோளி அந்த ஊடகவியலாளர்களின் அம்மாக்கள், சகோதரிகளையும் அர்ச்சிக்கப் போகிறார் என்று.
ஆனால் கோபத்தை முகத்தில் காட்டினாலும் வார்த்தைகளைப் பார்த்துப் பக்குவமாகக் கையாண்டார்.

அந்தக் கேள்விகளும் கோளியின் பதில்களும்...

தொடர்ச்சியாக சிறப்பாக ஆடி ஓட்டங்களைக் குவித்துவருகிறீர்களே.. உங்களில் தான் இந்திய அணி அதிகமாகத் தங்கி இருக்கிறதா?

இல்லையே.. இந்திய அணியின் துடுப்பாட்ட வலிமை உலகம் அறிந்தது. இப்போது நான் சிறப்பான formஇல் இருப்பதாக உணர்கிறேன். (Presently i'm going through a purple patch, i think) அது அணிக்கும் பயன்பெறுவதில் மகிழ்ச்சி.

இந்திய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களின் அண்மைக்கால மோசமான பெறுபேறுகள் பற்றி?
(முகத்தை இறுக்கமாக்கிக் கொண்டே) இதே ஆரம்ப வீரர்களில் ஒருவர் தான் ஒரு நாள் போட்டியொன்றில் இரட்டை சதம் அடித்தவர் என்பதை மறந்துவிடாதீர்கள். கிரிக்கெட் என்றால் அப்படித்தான். எல்லா நாளும் ஒரே மாதிரி இருக்காது.
உங்களுக்கு எல்லாம் இன்று நாங்கள் பெற்ற ஓட்டங்கள் 159 என்பது மட்டும் தான தெரிகிறது.
ஆனால் அதன் முக்கியத்துவம், அதைப் பெற நாம் எடுத்த முயற்சி எல்லாம் பெரியவை.


இதற்கு முந்தைய போட்டிகளிலும் நீங்கள் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடியும் உங்கள் மோசமான பந்துவீச்சால் இந்தியா தோற்றிருக்கிறதே...

எங்கள் பந்துவீச்சு ஆரம்பத்தில் இன்றும் சிறப்பாகத் தான் இருந்தது. ஆனால் கடைசி ஓவர்கள் சில நேரங்களில் தடுமாறிவிடுகிறோம். இனி அதை சரி செய்வோம்.
எங்கள் பந்துவீச்சாளர்களில் முழுமையான நம்பிக்கை இருக்கிறது.


அடிக்கடி உணர்ச்சிவசப்படுகிறீர்களே.. இது உங்கள் பெறுபேறுகளைப் பாதிக்கும் என்று உணரவில்லையா?

அந்த உணர்ச்சி தான் என்னை ஊக்குவிக்கிறது. அது எனக்குத் தேவை. ஆனால் முன்பு போல இல்லாமல் இப்போது கட்டுப்படுத்திக்கொள்கிறேன்.



இந்த ஊடகவியலாளர் சந்திப்பு முடிந்து வெளியே போன கோளியைக் கேள்வி கேட்ட இந்திய நிருபர்களில் ஒருவர் அணுகி ஹிந்தியில் எதோ கேட்டார் ..
அதற்கு கோளி ஆங்கிலத்தில் கொஞ்சம் சூடாகவே சொன்ன பதில் "Call and ask our selectors"
அந்த ஹிந்தி நண்பரிடம் என்ன கேட்டீர்கள் என்று ஆர்வமாகக் கேட்டேன்.
ரோஹித் ஷர்மா பற்றிக் கேட்டாராம்.

கோளி இலங்கையில் சில ரசிகர்களோடு காட்டிய பந்தா பற்றியும் பலர் என்னிடம் புலம்பியதையும், அவரிடமே நேரடியாக ட்விட்டரில் கண்டித்ததையும் உங்களில் பலர் பார்த்திருப்பீர்கள்.

தம்பி நல்லா விளையாடுகிறீர்கள்.. ஆனால் உங்கள் துடுக்கான வாயை விட துடுப்பை அதிகமாகப் பேசவிடுங்கள்.
இன்னும் நல்லா வருவீர்கள்.


-----------------------

10 விக்கெட்டுக்களால் இன்று தென் ஆபிரிக்காவிடம் சரணடைந்து இம்முறை   ICC WORLD TWENTY20இலிருந்து வெளியேறும் முதல் அணியாக மாறியுள்ளது சிம்பாப்வே.
திறமையான வீரர்கள் பலர் இருந்தும் அடுத்தடுத்த போட்டிகளில் இலங்கையிடமும் தென் ஆபிரிக்காவிடமும் இப்படி சிம்பாப்வே சுருளும் என்று யாரும் நினைத்திருக்கமாட்டார்கள்.

ஆப்கானிஸ்தான் அணிஇடம் இருந்து பிரெண்டன் டெய்லரின் அணி நிறையக் கற்க வேண்டியுள்ளது. இன்னொரு பக்கம் சிம்பாப்வே பற்றிப் பரிதாபமும் கொள்ளவேண்டியுள்ளது.. பின்னே இலங்கை, தென் ஆபிரிக்க அணிகளோடு ஒரே பிரிவில் அகப்பட்டுக் கொண்டால்?

ஆனால் நாளை இரவு ஆப்கானிஸ்தானும் கூட மூட்டை கட்டலாம்.
இந்திய அணியோடு சவால் விட்டு விளையாடி இருந்தாலும், இங்கிலாந்தின் இரு பயிற்சிப் போட்டி வெற்றிகளும் அவர்களைப் பலமான அணியாகக் காட்டுகிறது.


இத்தொடரின் முதலாவது அதிர்ச்சியை நாளை காபூல் மைந்தர்கள் தரட்டும் என வாழ்த்துகிறேன்....


September 19, 2012

மென்டிஸ் விட்ட பீலா & நேற்றுப் போட்டது 'அந்த' போலா? - #ICCWT20


நேற்று இலங்கையின் ஆரம்பமே அமர்க்களமாகி இருக்கிறது.
இலங்கை வெல்லும் என்ற நம்பிக்கை இருந்தாலும் இப்படி அமோகமாக வெல்லும் என்றும் முதலாவது போட்டி இப்படி ஒரு பக்கத்துக்கு இலகுவாக வெற்றியைக் கொடுக்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டோம்.

இரண்டு மென்டிஸ்களும் சேர்ந்து உருட்டி எடுத்து விட்டார்கள் பரிதாபமான சிம்பாப்வே அணியை.

அஜந்த மென்டிஸ் தான் வைத்திருந்த T20 சர்வதேசப் போட்டிகளின் மிகச் சிறந்த பந்துவீச்சு சாதனையை நேற்று மேலும் ஒரு படி உயர்த்தியுள்ளார்.
ICC உலக T20 போட்டிகளில் பெறப்பட்ட மிகச் சிறந்த பந்துவீச்சுப் பெறுதியை வைத்திருந்த உமர் குல்லையும் (6 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்கள்) மென்டிஸ் பின் தள்ளியுள்ளார்.

இலங்கையின் இரண்டாவது மிகப்பெரிய T20 வெற்றி இது. (ஓட்டங்களின் அடிப்படையில்)

இரண்டு மென்டிஸ்களும் நேற்று தங்களுடைய நாளாக மாற்றிக்கொண்டார்கள்.
ஜீவன் மென்டிஸ் துடுப்பாட்டத்தில் இலங்கை அணிக்குத் திடத்தைக் கொடுத்திருந்தார்.
நேற்று சங்காவை விட, ஆரம்பத்தில் ஜீவன் தான் இலங்கை அணிக்கு ஜீவனைக் கொடுத்திருந்தார். (வசன உதவி நன்றி கங்கோன் கோபி)

பந்துவீச்சிலும் நேற்று வீழ்த்தப்பட்ட பத்து சிம்பாப்வே விக்கெட்டுக்களில் ஒன்பதை மென்டிஸ்களே கைப்பற்றியிருந்தார்கள்.
ஆறு அஜந்த & மூன்று ஜீவன்.

மென்டிஸ் ஒன்பது மாத காலம் காயம் காரணமாகவும், form இழப்பு காரணமாகவும் அணியிலிருந்து வெளியேறி, மீண்டும் SLPLஇல் காட்டிய திறமை காரணமாக அணிக்குள் அழைக்கப்பட்ட போது தனது முதல் ஒன்றரை ஆண்டுகளில் காட்டிய அதே மாயாஜால வித்தைகளை மென்டிஸ் தொடர்ந்தும் காட்டுவாரா என்ற சந்தேகம் எல்லோருக்குமே இருந்தது.

மென்டிசின் முதல் ஒன்றரை ஆண்டுகளில் அவர் சுழல் பந்துவீச்சாளர்களை இலகுவாக ஆடும் இந்திய அணியையே ஆசியக் கிண்ணப் போட்டிகளிலும், பின்னர் இலங்கையில் இடம்பெற்ற டெஸ்ட் தொடரிலும் உருட்டி எடுத்திருந்தார் என்பதை இந்திய வீரர்களே கனவில் கூட மறக்க மாட்டார்கள்.

ஆனால் அதன் பின்னர் கொஞ்சக் காலத்திலேயே மென்டிசின் மந்திரவித்தைகளை முதலில் பாகிஸ்தானும், பின்னர் இந்தியாவும் நொறுக்கித் தள்ள அதன் பின் பிள்ளைப் பூச்சிகளான நியூ சீலாந்து போன்ற அணிகள் கூட மேன்டிசைக் கணக்கெடுக்காமல் அடித்தாடிய காலமும் இருந்தது.

இதனால் மென்டிசில் எங்களுக்கெல்லாம் பெரிய டவுட்டு..

உலகக் கிண்ணப் போட்டிகள் ஆரம்பிக்க முன்னர் ஒவ்வொரு நாளும் அணிகளின் தலைவர்கள், வீரர்களுடன் ஊடகவியலாளர் சந்திப்புக்கள் பல இடம்பெற்றன.

அதில் ஒன்றில் அஜந்த மென்டிசை நாம் சந்தித்தபோது, அவரிடம் ஏதாவது புதிய 'ஆயுதங்கள்' இருக்கின்றனவா என்று கேட்டபோது, முன்பு தன்னிடம் இல்லாத Off spin பந்துவீச்சைத் தான் SLPL இல் பரீட்சித்ததாகவும், அதே போல காயத்திலிருந்து மீண்ட பிறகு கொஞ்சம் பந்துவீசும் பாணியை மாற்றி இருப்பதாகவும் சொல்லி இருந்தார்.
அந்த மாற்றம் தனக்கு பந்துவீச்சை மேலும் மெருகேற்ற உதவியதாகவும் சொல்லி இருந்தார்.

SLPL இன் அரையிறுதிகள் தவிர்ந்த ஏனைய போட்டிகள் பார்க்காததால் எனக்கு மென்டிஸ் சொன்னவை உண்மையா எனத் தெரிந்திருக்கவில்லை.
எனவே  இது முன்பே பலர் செய்வது போல ஒரு பீலா என்றே நினைத்திருந்தேன்..

ஆனால் நேற்று மென்டிஸ் சொன்னது உண்மை தான் என்று புரிந்தது.. அந்த பழைய வித்தைகள் பாவம் பச்சைக் குழந்தைகள் சிம்பாப்வேக்கு மிக மிக அதிகம் தான்.

மென்டிஸ் இன்னும் ஒன்றையும் சொல்லி இருந்தார்.
"கிறிஸ் கெய்லின் அதிரடியை சமாளிக்கவும் தன்னிடம் வித்தை இருக்கு "
கெய்ல் நல்ல 'மூடில்' இருந்து கொஞ்சநேரம் ஆடுகளத்தைப் பழகியும் விட்டால் மென்டிஸ் என்ன, முரளி, வோர்ன், கும்ப்ளே வந்தாலுமே ஒன்றும் செய்ய முடியாது.

எனவே நாம் மனசுக்குள் கொஞ்சம் சிரித்துக் கொண்டோம்..

அடுத்ததாக "கெய்ல் சுழல் பந்துவீச்சாளர்களைப் பெரிதாக அடித்தாட மாட்டார்' என்றும் போட்டார் பாருங்கள் அடுத்த பிட்டு.

என்னடா இவன் என்று நினைத்தேன்.. இலங்கைக்கு இரண்டாம் சுற்றில் ஒரு போட்டி மேற்கிந்தியத்தீவுகளுடன் நடைபெறும்.. மே.இ அடுத்த சுற்றுக்குத் தெரிவானால்..

அப்போது மென்டிஸ் கெய்லுக்கு பந்துவீசும் போது அன்றைக்கு சொன்னது நடக்கிறதா என்று பார்க்கவேண்டும் என்று நினைத்திருந்தேன்.
ஆனால் நேற்று மனிதர் சுழற்றிய சுழற்றில் சிம்பாப்வே சுழன்றதைப் பார்த்தபிறகு உண்மையாவே ஏதாவது விஷயம் இருக்குமோ என்று யோசிக்கிறேன்..
நேற்று மசகட்சாவை ஆட்டமிழக்கச் செய்தது அந்த off spin பந்தோ?

நேற்று தொலைக்காட்சியில் வசீம் அக்ரம் "நான் இலங்கைத் தேர்வாளராக இருந்தால் அனைத்து T20 , ஒருநாள் போட்டிகளிலும் அஜந்தா மென்டிசை விளையாடத் தெரிவு செய்வேன், அவர் ஒரு விக்கெட் எடுக்கும் பந்துவீச்சாளர். டெஸ்ட் போட்டிகளில் வேண்டுமானால் ஆடுகளத்தைப் பொறுத்து அவரது தெரிவு அமையும்"

சௌரவ்  கங்குலி "மென்டிஸ் ஒன்றும் பெரிய மந்திரவாதி அல்ல. அவரது பந்துவீச்சை முதல் தடவை எதிர்கொள்ளும் எல்லா அணிகளுமே தடுமாறும். நாமும் முதல் சில தடவைகள் உருண்டு தான் பின்னர் அவரைப் பழகி அடித்தோம்..சிறப்பாக அடித்தாடும் ஆற்றல் உள்ளவர்கள் அவரை சிறப்பாகக் கையாளுவார்கள்"
(பாருங்களேன்.. பழைய கடுப்பு மாறவில்லை)

கெவின் பீட்டர்சன் (அவர், அந்த ட்விட்டர் தான்) "மென்டிஸ் இன்று கலக்கினார். அவரது பந்துவீச்சை இன்று எந்தத் துடுப்பாட்ட வீரராலும் ஊகித்து ஆடுவது சிரமமாகவே இருந்திருக்கும்"

காத்திருக்கிறேன் அஜந்த மென்டிஸ் தென் ஆபிரிக்காவை எப்படிக் கவனித்துக்கொள்ளப் போகிறார் என்று பார்க்க.
ஆனால் ஒன்று என்னதான் புதிய வீரர்கள். ஆடுகளம் என்று பேசினாலும் ஒரு பந்துவீச்சாளர் தனது நான்கே ஓவர்களில் இரு தடவைகள் ஆறு விக்கெட்டுக்களை எடுத்திருக்கிறார் என்று சொன்னால் அது உண்மையில் பெரிய விஷயம் தான்.

Player Overs Mdns Runs Wkts Econ Team Opposition Ground Match Date Scorecard
BAW Mendis 4.0 2 8 6 2.00 Sri Lanka v Zimbabwe Hambantota 18 Sep 2012 T20I # 263
BAW Mendis 4.0 1 16 6 4.00 Sri Lanka v Australia Pallekele 8 Aug 2011 T20I # 203

ஆனால் இன்று ஹம்பாந்தோட்டையிலிருந்து வந்த ஒரு தகவலின்படி தென் ஆபிரிக்காவின் மூன்று வீரர்களுக்கு வயிற்று உபாதை என்றும் அவர்கள் இன்று பயிற்சியில் ஈடுபடவில்லை என்றும் தெரியவந்தது.
(அந்த மூன்று பேர் - A.B.De Villiers, Kallis & Amla)
நேற்று மென்டிசின் பந்துவீச்சைப் பார்த்திருப்பார்களோ? ;)

-----------------


ஆஸ்திரேலியா எதிர் அயர்லாந்து
இந்தியா எதிர் ஆப்கானிஸ்தான் போட்டிகள் பார்க்க இன்று வந்துள்ள R.பிரேமதாச மைதானத்தில் இன்று பார்த்து மனம் கொதித்து உரியவர்களுக்கு (ICC, SLC & Spokesman of President) உடனடியாக ட்வீட்டும், கடித மூலம் & வாய் மூல முறைப்பாடும் செய்த விடயம்
ரசிகர்களுக்கான அறிவித்தல் பலகைகள், அறிவிப்புக்கள் உள்ள இடங்களில் தமிழ் மொழி எங்கும் இல்லாமை.
அத்தனை அறிவுறுத்தல்களும் வெறும் ஆங்கிலம் & சிங்களத்தில் தான்.

https://twitter.com/LoshanARV/status/248380116604973056

தமிழ் அரச மொழி அமுலாக்கம், தமிழ் மொழி எல்லா அலுவலகங்கள், திணைக்களங்கள், பொது இடங்களில் பயன்படுத்தப்படவேண்டும் என்று அரசு வாய் கிழியக் கத்திக்கொண்டிருக்க இங்கே சர்வதேச கிரிக்கெட் போட்டித் தொடரொன்றில் தமிழ் மொழிக்கு இடம் இல்லையா?

இது வரை எந்தத் தரப்பிடமிருந்தும் பதில் இல்லை.. பார்க்கலாம் யார், எப்போது, என்ன பதில் தருவார்கள் என்று....

September 17, 2012

ஆரம்பமாகிறது ICC World Twenty20


19 நாள் திருவிழா..
பரபரப்புக்குக் குறைவில்லை.
ESPN-STAR ஒளிபரப்பு நிறுவனங்களின் கூற்றுப்படி இம்முறை நடைபெறும் இத்தொடரானது ஒளிபரப்பு, பார்வையாளர் சாதனைகளைஎல்லாம் முறியடித்துவிடுமாம்.

ஆமாம் நாளை ஆரம்பமாகவுள்ள  ICC World Twenty20 என்று அழைக்கப்படுகின்ற Twenty 20 போட்டிகளுக்கான உலகக் கிண்ணத்தொடர்   பற்றித் தான் சொல்கிறேன்.

SLPL வணிகரீதியில் வெற்றியைத் தந்த பின்னர் இன்னுமொரு வசூல் வெற்றியைத் தரக்கூடியதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு இது அமையப் போகிறது.
அநேகமான போட்டிகளுக்கான டிக்கெட்டுக்கள் பெருமளவில் விற்று முடிந்திருக்கின்றன. கண்டி, ஹம்பாந்தோட்டையிலும் கூட.
அரையிறுதி, இறுதிப் போட்டிகளுக்கான டிக்கெட்டுக்கள் அத்தனையும் காலி.

நல்ல காலம் நான் ஊடகவியலாளனாக ICCயின் அடையாள அட்டை அனுமதிப் பத்திரம் (Media accreditation) பெற்றுக்கொண்டேன்.
ஆர்வமுள்ள அப்பா, குடும்பத்தாருக்கு (நம்ம ஹர்ஷு இப்ப ஒரு கிரிக்கெட் ரசிகன்.. சங்கா, மத்தியூஸ், தோனி, பிராவோ அவனுடைய favorites) டிக்கெட்டுக்கள் வாங்கிவிட்டேன்.

அமெரிக்க சுற்றுலாவுக்குப் பின்னர் வீட்டிலும், வெளியிலும் குவிந்து கிடந்த வேலைகளுக்கு மத்தியிலும் வந்திருந்த கிரிக்கெட் அணிகளின் ஊடக சந்திப்புக்கள், பேட்டிகள், சில பயிற்சிப் போட்டிகள், படம் பிடித்தல்கள் என்று முடியுமானவரை ஓடி ஓடி திருப்தியாக விஷயங்கள் சேகரித்துவிட்டேன்.

படங்களைத் தொகுப்பாக என் பேஸ்புக் பக்கங்களில் பதிந்துள்ளேன்.

அவற்றின் பின்னால் சுவாரஸ்யமான பல சம்பவங்களும் இருக்கின்றன.

இனி போட்டிகள் நடைபெறும் தினங்களிலும் முடியுமானவரை ஒவ்வொரு நாளிலும் சிறு சிறு இடுகைகள் மூலமாக சேர்த்து வைத்துள்ள அந்த விஷயங்களைப் பகிரலாம் என்று நம்புகிறேன்.
(சிரிக்காதீங்க பாஸ்.. நம்பிக்கை தானே வாழ்க்கை)

2011 உலகக் கிண்ண நேரம் ஓடி ஓடி உழைத்துக் களைத்ததை விட,  நான்கு மணி நேரம் மட்டுமே நீடிக்கும் இந்த T20 தொடர் அதிகமான நேரத்தை எடுக்காதே....

அதை விட மனதுக்கு மிகத் திருப்தியான விடயம் ICC World Twenty20 என்று அழைக்கப்படுகின்ற Twenty 20 போட்டிகளுக்கான உலகக் கிண்ணத்தொடர் பற்றிய முழுமையான முன்னோட்டப் பார்வையை ஒரு விரிவான இடுகையாக இட வேண்டும் என்று எண்ணி அதில் வெற்றியும் கண்டுவிட்டேன்.

தமிழ் மிரர் இணையத்துக்காக இரு பகுதிகளாக எழுதியுள்ளேன்.
கீழேயுள்ள சுட்டிகளின் வழி அவற்றை வாசித்து விட்டு மீண்டும் வாருங்கள்..

இன்னும் சில நம்ம ஸ்பெஷல்கள் இங்கே இருக்கின்றன.
அவற்றையும் வாசித்துக் கீழே கருத்திடலாம், கலந்துரையாடலாம், இல்லை கலாய்க்கலாம்..


உலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1




உலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2




வாசித்தீர்களா?

இப்போ வாருங்கள்..

ஆசியாவிலே இடம்பெறும் முதலாவது  Twenty 20 போட்டிகளுக்கான உலகக் கிண்ணத்தொடர் இது.

கடந்த ICC World Twenty20 பற்றிய முன்னோட்ட இடுகைகள்


T 20 உலகக் கிண்ணம் 2010- என் பார்வை





ஆசிய அணிகள்+ஆஸ்திரேலியா - உலகக் கிண்ண உலா





எந்த அணிக்கான/அணிகளுக்கான வாய்ப்பு அதிகம் என்று ஊகிக்க முடியாதவாறு அனேக அணிகள் சம பலத்தோடு இருக்கின்றன/ தெரிகின்றன.



அண்மையில் தான் விருதுகளை மலையாகக் குவித்து வென்று வரும் சங்கக்கார ஒரு பேட்டியில் சொல்லி இருந்தார், இலங்கையின் ஆடுகளங்கள் இப்போது நிறையவே மாறிவிட்டன.. எனவே சுழல் பந்துவீச்சாளர்களுக்கு மட்டுமே சாதகத்தன்மையை இத்தொடர் வழங்கும் என்று எதிர்பார்க்கவேண்டாம் என்று..

T20 போட்டிகள் என்றாலே அதிகம் சாதிக்கின்ற அல்லது அதிக முக்கியத்துவம் பெறுகின்ற சகலதுறை வீரர்களும், அதிரடி சிக்சர் மன்னர்களும் குதித்துள்ள களத்திலே தனித்துத் தெரியப் போகின்றவர்கள் யார் எனும் ஆர்வம் ....

கடந்த ICC World Twenty20 இல் டில்ஷான், அப்ரிடி ஜொலித்தது போலவும், மத்தியூசின் அபார பிடி உலகப் புகழ் பெற்றது ;போலவும், இம்முறை யார் நட்சத்திரமாகப் போகிறார்?

புதிதாக வெளிவரப் போகிற புதுமுக நட்சத்திரங்கள் யார்?

என்னென்ன புதிய சாதனைகள் படைக்கப்படும்?
இவ்வாறான எதிர்பார்ப்புக்களைத் தாண்டி, எனக்கு இருக்கும் சின்னச் சின்ன ஆசைகளாக ஆப்கானிஸ்தான், அயர்லாது ஆகிய அணிகள் தங்கள் தடம் படைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.

இலங்கை கிண்ணம் வெல்லவேண்டும் என்பது ஓவரான ஆசையோ தெரியவில்லை.. ஆனால் இந்த சிறு அணிகள் தங்களைப் பெரியளவில் வெளிப்படுத்தவேண்டும் என்பது நியாயமான ஆசை தானே?

T20 போட்டிகளில் கணிப்புக்கள் செய்வது என்பது எமது மூக்கை நாமே உடைத்துக்கொள்வது போல.. அனுபவப்பட்டிருக்கிறேன்.

அய்யோ அம்மா.. என்னா அடி இது..



ஆனால் ஒன்று மட்டும் உறுதியாக சொல்வேன்...
Favorites என்ற முத்திரையோடு வருகிற சில அணிகளுக்காவது அதிர்ச்சிகள் காத்திருக்கும்...

நாளை  இரவு 7.30 முதல் இனி கிரிக்கெட் கோலாகலம் தான்...

September 12, 2012

மு...


மு - முதலமைச்சர்

முஸ்லிம் காங்கிரசின் முடிவு என்ன என்ன என்று எதிர்பார்த்தே மூன்று நாட்கள் கசிந்துள்ள நிலையில்.. கடன்காரர்களை நேரடியாக சந்திக்காமல் வீட்டில் மனைவி, பிள்ளைகளை அனுப்பி "அவர் வீட்டில் இல்லை" என்று அனுப்பும் குடும்பத் தலைவர் போல இரவும் ஹக்கீமும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசும் நடந்து கொண்டிருக்கும் நிலையை இன்று மாலையில் எல்லோரும் அறிந்திருப்பீர்கள்.

இதில் ஸ்ரீ.ல.மு.கா வை தமிழ்த் தரப்பு திட்டித் தீர்ப்பதோ, இல்லை ஏமாற்றிவிட்டார்கள் என்று வஞ்சம் வளர்ப்பதோ என்னைப் பொறுத்தவரை அர்த்தமற்றது என்றே தோன்றுகின்றது.

அரசாங்கம் வைக்கும் செக் மேட் எப்படியானவை என்றும் தன் பங்காளிக் கட்சிகளை எப்படியெல்லாம் தன்னுடன் வைத்திருக்க முயலும் என்றும், வெளியே இருக்கும் கட்சிகளையும், ஆளுமையுள்ள தலைவர்களையும் எப்படித் தன்னுடன் இணைத்துக்கொள்ள முயற்சிகளை எடுக்கும் என்பதும் அரசியலைத் தொடர்ந்து அவதானிப்போருக்குத் தெரியும்.

இப்போது ஸ்ரீ.ல.மு.காவின் நிலையும் அவ்வாறே. மத்திய அரசில் பங்காளிக் கட்சியாக இருக்கும் நிலையில் மாகாண அரசில் தனித்துப் போட்டியிட்டதே ஒரு இணைந்த ராஜதந்திர முடிவு என்று அரசியல் புரிந்த அனைவருக்குமே தெரியும்.
பள்ளிவாசல் உடைப்புக்களினால் மஹிந்த அரசாங்கம் மீது முஸ்லிம் மக்களுக்கு இருந்த அதிருப்தியை வேறு விதமாக மாற்றி வாக்குகளை மரம் பக்கம் இழுத்து இப்போது மீண்டும் சேரப் போகிறார்கள்.
அவ்வளவு தான்..



சரி, சிலவேளை வாக்களித்த முஸ்லிம் மக்களும், ஏன் வெற்றி பெற்ற வேட்பாளர்களும் கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு சேர்ந்து ஆட்சியமைத்து முஸ்லிம் முதலமைச்சர் என்ற கனவை நனவாக்க விரும்பினாலும், ஏன் ரவூப் ஹக்கீமே விரும்பினாலும் கூட முடியாத அழுத்தம் ஒன்று கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது மிகத் தெளிவு.

கிழக்கு மாகாண சபையில் விருப்பு வாக்குத் தெரிவுகள், சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆளும் கட்சியின் முதலாவது தெரிவாக வந்தமை, முடிவுகள் வெளிவந்த நாள் முதல் அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களும் ஜனாதிபதியும் ஆட்சி தாம் தான் என்று அடித்து அடித்து அறிவித்ததும் சொல்பவற்றை நாம் கவனிக்கவேண்டும்.


ஸ்ரீ.ல.மு.கா வைப் பொறுத்தவரை என்ன தான் ராஜதந்திர நாடகமாக இது இருந்தாலும் தன் பேரம்பேசும் பலத்தை அதிகரித்துக்கொள்ளவும் , இத்தனை உடைவுகள், பிளவுகளுக்குப் பிறகும் தமது கட்சியே முஸ்லிம்களின் பிரதானமான கட்சி என்பதைத் தன வாக்காளர்களுக்கும், அரசாங்கத்துக்கும் ஆணித்தரமாகக் காட்டியுள்ளது.

இன்று இரவு வரை கிடைத்த உறுதிப்படுத்திய ஆனால் உத்தியோகப்பற்றற்ற தகவல்களின் அடிப்படையில் அரசாங்கம் இன்று மாலையில் உறுதியாக அறிவித்த கிழக்கு மாகாணக் கூட்டு பற்றிய முடிவின் பின்னரும், ஸ்ரீ.ல.மு.கா உத்தியோகபூர்வமாக எதையும் அறிவிக்கவிரும்பவில்லையாம்.

ஆளும் கட்சியுடன் சேர்வது என்று கிட்டத்தட்ட முடிவான பின்னரும் கூட அரசாங்கம் இப்படி பகிரங்க அறிவிப்பைத் தம்மை மீறி முதலில் அறிவித்தபின்னர் பேசிக்கொண்டிருக்கிற பேரங்கள்(இப்போது தானா என்று கேட்டு சிரிக்காதீர்கள்) அரசாங்கத்தால் பெயரளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு கொஞ்சமாவது முகத்தை மக்கள் மத்தியில் காட்டலாம் என்று நாளை வரை காத்திருக்கிறார்கள் போலும்.

முதலில் அரசாங்கப் பேச்சாளர்கள் முதலமைச்சரின் பெயரை ஜனாதிபதி அறிவிப்பார்கள் என்றார்கள்.  அரசாங்கம் முஸ்லிம் முதலமைச்சரை விடத் தமிழர் ஒருவர் முதலமைச்சராக வருவதையே விரும்புகிறது என்று அநேகர் பேசியிருந்தநிலையில், கேட்டறிந்த தகவல்களின் படி ஜனாதிபதியின் நம்பிக்கையும் விருப்பும் பெற்ற இருவர் இடையில் சுழற்சி அடிப்படையில் முதலமைச்சர் பதவி பகிரப்படும் என்று தெரிகிறது.

(ஒருவர் தமிழர், அடுத்தவர் முஸ்லிம்)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழரும் ஆட்சிப் பங்காளராக அரசாங்கத்துடன் சேர ஆசைப்பட்டாலும் (ஸ்ரீ.ல.மு.கா வுடன் சேர்வதற்கு முதலமைச்சர் பதவியையே விட்டுக்கொடுக்கத் தயாரானவர்கள் அல்லவா?) கூட அரசாங்கம் அதை அப்போது விரும்பியிருக்குமா என்று இப்போது கேட்பதை விட, சிறுபான்மை ஒற்றுமை என்ற கோஷங்களை விட சேர்ந்து எடுப்பதை எடுத்திருக்கலாமோ என்று இப்போது அங்கலாய்க்கலாம்.

எதிர்ப்பரசியலோடு தனித்திருக்காமல் த.தே.கூ அடுத்த கட்டம் பற்றியும் யாருமில்லாததால் கிடைக்கும் வாக்குகளை விட இவர்களை விட்டால் யாருமில்லை எனும் அளவுக்கு வாக்குகள் கிட்டவேண்டும் என்று ஆழமாக `மக்கள் மத்தியில் வேரூன்ற செயற்படவேண்டும்.
நாடகத்தின் நாளைய காட்சி வரை காத்திருப்போம்......



மு - முகமூடி


அறப்படிச்ச பல்லி கூழ்ப்பானையில் வீழ்ந்தது மாதிரி என்று ஒரு பழமொழி இருக்கிறது பாருங்கள். அது அச்சொட்டாக இயக்குனர் மிஷ்கினுக்குப் பொருந்துகிறது.

மற்றவர்களுக்கு அளவுக்கதிகமாகப் போதிப்பவர்கள் தாம் ஒன்றும் பெரிதாக சாதிப்பதில்லை என்று முகமூடி மூலம் காட்டிவிட்டார் இந்த 'உலக மகா' இயக்குனர்.

Batman - The Dark Knight Rises பாதிப்பில் அப்படியான ஒரு சூப்பர் ஹீரோ படத்தைத் தமிழில் தர நினைத்தது தப்பில்லை. ஆனால் தந்த விதமும் தடுமாறிய இடங்களும் தான் படத்தைப் பப்படம் ஆக்கிவிட்டன.
இடைவேளையுடன் படத்தை முடித்திருந்தால் .... இப்படி நினைக்கவே சந்தோஷமா இருக்கிறது.
ஜீவா, நாங்கள், மிஷ்கின், தயாரிப்பாளர் எல்லாரும் தப்பி இருக்கலாம்.
மிஷ்கினின் சில specialityகள், ஒளிப்பதிவு, ஜீவாவின் உழைப்பு, வாயை மூடி சும்மா இருடா பாடல் காட்சியமைப்பு, சில இயல்பான நகைச்சுவைக் காட்சிகள் ஆகியவை ஆறுதல்..
மிச்ச எல்லாமே மிஷ்கினுக்குப் பாடம்.
எங்களுக்குத் தலைவிதி...

சித்திரம் பேசுதடி, அஞ்சாதே ஆகியவை பார்த்தபிறகு , முகமூடி பற்றி படுமோசமாகப் பலர் பேசியபோதும்கூட இவ்வளவு ஏனைய படைப்பாளிகள், படங்கள் பற்றி வாய் கிழியப் பேசுறாரே ஏதாவது விஷயம் இருக்கும் என்று நம்பி திரையரங்கு போனேன் பாருங்கள்..

இதுவும் தேவை தான்.

முகமூடி - மொக்கை 


ICC World Twenty20 போட்டிகள் ஆரம்பமாவதால் இனி ஐயா கொஞ்சம் பிசி தான்..
அணிகளின் வீரர்கள், தலைவர்கள் ஆகியோரின் ஊடகவியலாளர் சந்திப்புக்கள் , போட்டி ஆயத்தங்கள், பயிற்சிப் போட்டிகளின் விபரங்களை சுருக்கமாக உடனுக்குடன் ட்விட்டர் மூலமாகத் தரவும், 18ஆம் திகதி முதல் போட்டி ஆரம்பமாக முதல் ஒரு முழுமையான கணிப்பு / முன்னோட்ட இடுகை ஒன்றைத் தரவும் எண்ணியிருக்கிறேன்....

சந்திக்கலாம்.

September 05, 2012

காலத்தின் கட்டாயம்??!! - தேர்தல் இடுகை


இன்னும் மூன்று நாட்களில் மூன்று மாகாண சபைத் தேர்தல்கள்..

இதிலே தமிழ் பேசுவோரின் எண்ணிக்கை குறைவான வடமத்திய மாகாணத்தை விட்டுவிடலாம்..
ஆளும் கட்சி நிச்சயம் வெல்லப் போகின்ற ஒரே மாகாணம் இதுவாகத் தான் இருக்கும். 

யாருக்கு வாக்களிப்பது? எப்படிப்பட்டவரைத் தெரிவு செய்வது?

யாரோ சொல்லி எப்பவோ கேட்டது - வேட்பாளர் தெரிவும் வாக்குத் தெரிவும் காதல் போன்றது என்று.. 
நாம் தெரிவு/முடிவு செய்தபிறகு வேறு யார் என்ன சொன்னாலும், யார் பிரசாரம் பண்ணினாலும் மாற்ற முடியாதவாறு உறுதியாக இருக்கவேண்டும்..
(அத்தெரிவு சரியாக இருக்கும்பட்சத்தில்)




இன்று காலை விடியலில் (வழமையாகவே தேர்தல்களுக்கு முன்னதாக செய்கின்ற நிகழ்ச்சி போல) இம்முறை வாக்களிக்கும்போது வாக்காளர்கள் கவனத்தில் எடுக்கவுள்ள முக்கிய விடயம் என்ன என்பது பற்றிக் கேட்டிருந்தேன்.

இதன்மூலமாக ஓரளவுக்கு வாக்காளரின் நாடித்துடிப்பை சரிபார்த்து அறிந்துகொள்ளலாம் என்பதும் ஒரு மினி கருத்துகணிப்பாகவும் இது அமைந்துவிடும் என்பதும் உண்மை. 

கிழக்கில் வீடும், மரமும் அநேகரின் தெரிவு என்பது தெரிந்ததே.. அதேபோல தமிழ் பேசும் வாக்காளர்கள் செறிந்துவாழும் சபரகமுவா மாகாணத்தில் சேவல் என்பது தமிழ் வாக்குகளை சிதறாமல் இருக்கச் செய்யும் என்பதும் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

இது இன்று கருத்துத் தெரிவித்த பலரும் ஏற்றுக்கொண்ட விடயமாக இருந்தது.
எனினும் வேறு தெரிவுகள் இல்லாததால் இருப்பதில் பரவாயில்லை என்று கருதும் மனநிலையுடன் வாக்களிக்கப் போகிறார்கள் என்றே உணர்கிறேன்.

கிழக்கு மாகாண சபையில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 37. (தேர்தல் மூலம் 35 & போனஸ் ஆசனங்கள் 2 ) 
திருகோணமலை மாவட்டம் - 10
மட்டக்களப்பு - 11
அம்பாறை - 14

சபரகமுவா மாகாண சபையில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 44. (தேர்தல் மூலம் 42 & போனஸ் ஆசனங்கள் 2 )
இரத்தினபுரி -24
கேகாலை - 18

எத்தனை உறுப்பினர்களை எந்தக் கட்சிகள் பெற்றுக்கொள்ளும் என்ற ஊக்க விளையாட்டுக்களை உங்கள் தெரிவுக்கே விட்டுவிடுகிறேன்.  



எப்போதும் வலியுறுத்துவது போல, கட்டாயம் வாக்களிக்கச் செல்லுங்கள்; உங்கள் வாக்குகளை நீங்களே வழங்குவதை உறுதிப்படுத்துங்கள்; உங்கள் வாக்குரிமையை விட்டுக்கொடுக்காதீர்கள்; தவறானவர்களைத்தெரிவு செய்யாதீர்கள் என்ற வழமையான ஆலோசனைகளுடன் ... 
நேயர்களின்/ வாக்காளர்களின் எதிர்பார்ப்புக்களைக் கேட்டபோது..



சிறுபான்மையின் வாக்கு சிதறக்கூடாது, தமிழ்ப் பிரதிநிதித்துவம் காக்கப் படவேண்டும், மற்றவர்களை நம்ப முடியாது, இருப்பவர்களில் இவர்கள் பரவாயில்லை, வேறொரு தெரிவும் இப்போதைக்கு இல்லை, சர்வதேசத்துக்கு நாம் பிளவு பட்டுள்ளோம் என்ற தவறான கற்பித்தல் போய்விடக் கூடாது என்ற காரணங்கள் தமிழர்களாலும்,

உள்ளூர் அபிவிருத்தி, உரிமைகளைக் காப்பது, இன ஒற்றுமை, பேரம் பேசும் தன்மை, வால் பிடிப்பது மட்டுமே நோக்கமாக இல்லாமல் பேசவும் செய்கிறார்கள் என்று முஸ்லிம்களும் காரணங்களை அடுக்கினார்கள்.

சபரகமுவா மாகாணத்தைப் பொறுத்தவரை பிரதானமான மலையகத் தமிழ்க் கட்சிகள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து தமிழ்ப் பிரதிநித்துவத்தைக் காக்க உறுதிப் பட்டுள்ளமை மக்களுக்குப் பெரிய ஆறுதலைக் கொடுத்துள்ளது. 
இப்படியான ஒற்றுமை எப்போதாவது தானே சாத்தியப்படுகிறது?

வாக்களித்து என்னாவது, எல்லாரும் கள்ளன்கள் தான். வாக்குக் கேட்டு வென்ற பின் எல்லாருமே மாறி விடுகிறார்கள்.. இதனால் தேர்தலில் நம்பிக்கை இல்லை என்றும் கணிசமான கருத்துக்கள் வந்திருந்தன.


இந்த நம்பிக்கையீனத்தைத் துடைத்தெறிய அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களும் என்ன செய்யப் போகிறார்கள்? இதனால் வாக்கு சதவீதம் கணிசமாக சரிந்தால் பாதிப்பு எமக்குத் தானே? நாம் என்ன செய்யப் போகிறோம்?

எவ்வளவு காலம் வேறு ஒன்றும் இல்லை என்பதனால் இருப்பதில் திருப்தி காணப்போகிறோம்?
நம்பிக்கையீனத்தையே பிரதானமாகக் கொண்டு எவ்வளவு காலத்துக்கு சலிப்புடன் வாக்களிப்பதை வெறும் கடமைக்காக செய்யப் போகிறோம்?
இதற்கான செயற்பாடுகளை எதிர்காலத் தலைமுறைக்கு விட்டிருக்க முடியாது.. உடனேயும் சட்டுப்புட்டென்று ஏதும் செய்யவும் கூடிய நிலை எம்மத்தியில் இல்லை.

நம்பிக்கை ஏற்படுத்தும் எதிர்காலத்துக்கான அரசியல் தலைமையை தேடிக்கொள்ள இந்தத் தேர்தலும் வழிகாட்டப் போவதில்லை.
குறைந்தபட்சம் வட மாகாணத் தேர்தலுக்கு முன்னாவது??

முஸ்லிம்களும் தெளிவாக ஒரு பக்கம் நிற்பதாகத் தெரியவில்லை. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசே அநேகரின் தெரிவாக இருந்தாலும் (இன்று கேட்டவரை & நண்பர்களிடம் அறிந்த வரை) - அந்தந்த ஊர்களில் உள்ளூர் அரசியல்வாதிகளின் செயற்பாடுகளின்படி வெற்றிலையும் கூட சில இடங்களில் செல்வாக்காக இருக்கிறது.

ஆனால் முஸ்லிம் தலைமைகள் உறுதியாக இருக்கும் அளவுக்காவது நம் தமிழ்த் தலைமைகள் இல்லை என்பதை முன்பே ஒரு இடுகையில் கவலையுடன் பகிர்ந்திருந்தேன்.
பிரதியீடுகள் இன்னும் தயாரில்லை என்பது 'மூத்த' தலைமைகளுக்கு ஆறுதலாக இருக்கும்..

ஆனால் ஒன்று அவர்களுக்குப் பாடம் கற்பிக்கவோ, அழுத்தம் கொடுக்கவோ இது தகுந்தவேளை இல்லை என்பதால் வீட்டுக்கு வாக்களித்தே ஆகவேண்டும் என்பது அவர்கள் சொல்வது போல ' காலத்தின் கட்டாயம்' தான்.

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner