மன் மதன் அம்பு

ARV Loshan
47
மூன்று பேருக்கிடையிலான காதல்,பத்துக்குட்பட்ட பாத்திரங்களின் பங்குபற்றுதலில் நிறையக் கலகல கொஞ்சம் ஆழமான காதல்,கொஞ்சம் அழுத்தமான செண்டிமெண்டோடு தொய்யாமல் துரிதமாகப் பயணிக்கும் அருமையாகக் கோர்க்கப்பட்ட அழகான படம்.

மன் மதன் அம்பு என்று மூவரையும் தனித்தனியாகப் பிரித்து ஏற்கெனவே விளம்பரங்கள் காட்டிவிட்டாலும் கதை என்ன என சுவாரஸ்யமாகத் திரைப்படம் மூலமாகவே விவரிப்பது கமலின் திரைக்கதையும் கே.எஸ்.ரவிக்குமாரின் இயக்கமும் தான்.

த்ரிஷா நடிகை, மாதவன் அவரின் காதலன்,பணக்காரர், கமல் இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற மேஜர், சங்கீதா விவாகரத்தானவர், இரு குழந்தைகளின் தாயார்.
 இந்த நான்கு முக்கிய பாத்திரங்கள்+சங்கீதாவின் குறும்புக்கார மகன், மலையாள இயக்குனர் குஞ்சு குருப்(என்ன பெயரைய்யா இது), ரமேஷ் அரவிந்த், ஊர்வசி, உஷா உதூப் என்று ஒரு சில பாத்திரங்களோடு சுவாரசியமாகப் பயணிக்கிறது கதை.

மற்றவர்கள் தொடத் தயங்கும் சில விஷயங்களை துணிச்சலாக எடுத்து லாவகமாகக் கதை சொல்வதில் கமலுக்கு நிகர் அவரே.. மீண்டும் மன்மதன் அம்புவில் நிரூபித்துள்ளார்.
நடிகையின் காதலும்,காதலின் இடையே புதிய காதலும்..

ஆள் மாறாட்ட வித்தைகள் தமிழ் சினிமாவில் வழக்கமே என்றாலும்,இதில் லாஜிக் பார்க்கக்கூடாது என்பது நியதிஎனினும் சொல்லும் விதத்தில் சொதப்பாமல்,சுவையாக சொல்வதில் ஜெயிக்க வேண்டுமே.. அதில் கமலும்,இயக்குனர் ரவிக்குமாரும் வெற்றிக்கொடி நாட்டியுள்ளார்கள்.

இப்போதே சொல்லிவைக்கிறேன்..

கமலுக்கு அடுத்தவொரு பிரம்மாண்ட வெற்றிப்படம்.
உதயநிதி ஸ்டாலின் போட்டதற்குப் பல மடங்கு எடுத்துவிடுவார்.
அவரது செழுமையின் உறுதி கண்களுக்கு ஐரோப்பிய சுற்றுலா இலவசமாகப் போய்வந்த குளிர்ச்சியைக் கொடுக்கிறது.

சூர்யா கௌரவ நடிகராக வந்து ஒரு அசத்தல் ஆட்டம்+அலட்டல் இல்லாத அறிமுகம் காட்டிவிட்டு செல்கிறார். அதே காட்சிகளில் கே.எஸ்.ஆரும் தனது சென்டிமென்டான தலைகாட்டலைக் காட்டிவிட்டு திருப்தியாகிறார்.

படத்தின் 90 சதவீதமும் நடப்பது ஐரோப்பிய நாடுகளிலும்,நகர்கின்ற கப்பலிலும் தான்.
ஆனாலும் அந்நியத்தனம் இல்லாமல் அழகு தமிழை ரசிக்கக் கூடியதாக இருப்பதற்குக் காரணம் கமல்.

கமலின் வயது படத்துக்குப் பெரிய ப்ளஸ்.பாத்திரத்தில் கச்சிதமாகக் கமல் ஒட்டவில்லை என்றால் தானே அதிசயம். முதல் காட்சியில் அதிரடி அறிமுகம் முதலே ரசிக்கவைக்கிறார்.

கதை,திரைக்கதை,வசனம் - கமல்..
கமல் படமே தான் என்றாலும் த்ரிஷாவை சுற்றித் தான் கதை.
ஆனாலும் த்ரிஷாவை கனமான பாத்திரமாகப் பார்க்கும் முதல் படம் எனும் வகையில் கமல் அவரிலும் தெரிகிறார்.
எந்தவொரு காட்சியும் அனாவசியம் என்று சொல்ல முடியாமல் தொய்வில்லாமல் கதை செல்கிறது.

இடையிடையே சினிமா நடிகர்களை, குறிப்பாக நடிகைகளை சமூகம் பார்க்கும் விஷமா,விமர்சனப் பார்வையை மாதவன் பேசும் வசனங்கள் மூலமாகக் கொட்ட வைக்கிறார்.

அறிவுஜீவித்தனமான தமிழ்+ஆங்கில வசனங்களும்,புத்திசாலித்தனமான தர்க்கங்களும், கிரேசி மோகன் பாணியிலான நகைச்சுவை சரவெடிகளும் கலந்துகட்டி ஒரு அருமையான வசன விருந்தே படைத்திருக்கிறார்.(உலக நாயகனின் வழமையான நண்பர் குழாம் கதை விவாதத்தில் இடம்பெற்றிருந்தாக அறிந்தேன்)

நேர்மையானவங்களுக்கு திமிர் என்பது ஒரு கேடயம்.
இது ஒரு சாம்பிள் வசனம்.. வசனக் கூர்மைகளை ரசிக்கவென மீண்டும் இரு தடவையாவது பார்க்கும் திட்டம்.

மிக முக்கியமான விடயம் அண்மைக்காலத்தில் சர்ச்சை கிளப்பிய கமல்-த்ரிஷா கவிதை இன்று நான் பார்த்த இலங்கையில் முதல் காட்சியில் இடம் பெற்றிருந்தது.
(இலங்கையின் தணிக்கைக் குழுவிலும் நேற்று இது பற்றி விவாதங்கள் இடம்பெற்றதாக அறிந்தேன். இனித் தூக்கப்படுமா தெரியவில்லை)



பாடல்கள் படத்தின் ஓட்டத்தோடேயே கதை சொல்லிகளாகப் பயணிப்பதும் நல்ல யுக்தி..
அதிலும் 'நீலவானம்' நான் முன்பு ரசனைப் பதிவில் சொன்னது போல, முன்னைய காதலைக் கமல் Flashbackஆக சொல்வதாக அமைத்துள்ளார்கள்.
ஆனால் காட்சிகள் பின்னோக்கி செல்வதாக அமைத்திருப்பது புதுமை.. காட்சிகள் Rewindஇல் செல்கையில் வாயசைப்பு மட்டும் சரியாக அமைவதும் புதிய பாராட்டக்கூடிய முயற்சி. வாயசைப்பில் சிரமம் உண்டு என்பதால் இடை நடுவே சொற்கள் தடுமாறி,இடம் மாறுவதைப் பொறுக்கலாம்.

பாடல் முடிகையில் அரங்கம் நெகிழ்ந்து சில வினாடிகள் அமைதியாகி,பின்னர் கரகோஷித்தது இங்கே ஒரு புதுமை.

தகிடுதத்தம் காட்சியோடு பொருந்தி ஒவ்வொரு வரிகளுக்கும் அர்த்தம் கொடுத்தது. நடன அசைவுகள்,பாடல் காட்சியில் வரும் வெள்ளைக்காரரும் ஆடுவது ரசனை.

கமல்+த்ரிஷா கவிதை முடியும்வரை ரசித்துக் கரகோஷம் கொடுத்த ஒரு ரசனை மிக ரசிகர்களோடு இருந்து பார்த்த பெருமை.. (நம் பதிவர்கள் சுபாங்கன்,பவன் ஆகியோரும்,சில நம் பதிவுலக ரசிகர்களும் வந்திருந்தது இடைவேளையின் பின்னரே தெரிந்தது)

கமலின் முகபாவ மாறுதல்கள் பார்த்தால் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல அத்தனை அற்புதம்.எத்தனை Close up காட்சிகள்.. கண்கள் பேசுகின்ற விதங்கள் லட்சக்கணக்கான வார்த்தைகள் சொல்லாத விடயங்கள்.
அத்தனை காட்சிகளிலும் கண்கள்,உதடுகளின் அசைவுகளைக் கவனித்தாலே சிலைகளும் நடிக்கக் கற்றுக்கொண்டு விடும்.

அதிலும் த்ரிஷாவுக்குத் தன் கடந்தகாலம் பற்றி சொல்லி, த்ரிஷா மன்னிப்புக் கேட்கும் இடத்தில் சோகம்+விரக்தியுடன் உதடு காய்வது போல ஒரு அசைவு கொடுப்பார்.. Class !!!

கமலுடன் சேர்ந்த ராசி த்ரிஷாவின் நடிப்பில் அப்படியொரு பக்குவம். முதல் தடவை கலக்கி இருக்கிறார் என நினைக்கிறேன். நடிகை என்பதனால் கொஞ்சம் கவர்ச்சியாகவே வலம் வருகிறார்.அவரது தொடை, மார்பு Tattoo தெரியவேண்டும் என்றே திட்டமிட்டு தேர்வு செய்துள்ள ஆடை வடிவமைப்பாளர் கௌதமிக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.. வாலிப சமூகம் சார்பாக.

தமிழ் நடிகைகளின் தமிழ் பற்றிக் கமல் கிண்டல் பேசும் இடங்களில், முகத்துக்குப் பூச்சையும் பேச்சில் ஆங்கிலத்தையும் பூசிவிடவேண்டும் என்று சொல்லும் இடத்தில் அப்படியொரு முகபாவம்.
மாதவனுடன் ஆரம்பக் காட்சிகளிலும் கமலுடன் இடையில் வரும் காட்சிகளிலும் ஜொலிக்கிறார்.

மாதவன் - நிறைய வித்தியாசம் காட்டி நடிக்க வசதியான பாத்திரம்.சந்தேகம்,உருகுதல்,காதல்,கோபம்,அப்பாவித்தனம் என்று கலக்குகிறார். கொஞ்சம் அன்பே சிவம் மாதவன் எட்டிப் பார்த்தாலும்,மாதவன் த்ரிஷாவுடன் கோபப்படும் இடங்களில் காரம்.

கமல்- மாதவன் தொலைபேசி உரையாடல்கள், தண்ணி அடித்து உளறும் காட்சிகள்,கடைசி நிமிடங்கள் - சிரிப்பு சரவெடிகள்.ஒவ்வொரு சொல்லையும் அவதானித்து ரசிக்கவேண்டிய இடங்கள்.

சங்கீதா குண்டாக,காமெடியாகக் கலக்குகிறார். பாத்திரத்துக்குக் கனகச்சிதம்.சில காட்சிகளில் த்ரிஷாவையும் விஞ்சி வெளுத்துவாங்குகிறார்.
இவரின் மகனாக வரும் அந்தக் குட்டிப் பையன் படு சுட்டி.. பிரமாதப்படுத்துகிறான்.கண்ணாடியும் அவனும்,அவனின் கூர்மையான அவதானிப்பும் பல திருப்பங்களைத் தருகின்றன.

வெற்றிப் படத் தயாரிப்பாளராக வரும் குஞ்சன் (இவரது உண்மைப் பெயரே இதானாம்) வரும் நேரமெல்லாம் சிரிப்பு வெடி தான்.
ரமேஷ் அரவிந்த் கமலின் நண்பராக,ஊர்வசி அவர் மனைவியாக.. கொஞ்சம் நெகிழ்ச்சிக்காக.
புற்றுநோய் நோயாளியாக இருந்தும் கமலுடன் ரமேஷ் அரவிந்த் பேசும் கட்சிகள் நெகிழ்ச்சியான நகைச்சுவைகள்.. கொஞ்சம் யதார்த்தமான கவிதைகள் எனவும் சொல்லலாம்.
 கமலின் வழமையான நடிகர் பட்டாளத்தில் இந்தப் படத்தில் நடித்துள்ளவர்கள் இவர்கள் இருவருமே..


 கமலின் முதல் மனைவியாக கொஞ்ச நேரமே வந்தாலும் கண்களையும், மனதையும் அள்ளி செல்கிறார் அழகான ஜூலியட். தொடர்ந்தும் தமிழ்ப்படங்கள் நடிக்கலாமே அம்மணி?

யாழ்ப்பாணத் தமிழ் பேசிக்கொண்டு வரும் பாத்திரம் சுவாரஸ்யம். அவரது பாத்திரம் இயல்பாகவே இருக்கிறது.புலம்பெயர் இலங்கைத் தமிழரைக் கொஞ்சம் ஈர்ப்பதற்கான ஒரு கொக்கி? அவரது மனைவி வரும் ஒரே காட்சியும் ரசனை.

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தும் ஒரு (ஒரேயொரு) frameஇல் வந்துபோகிறார். எது என்று கண்டுபிடிப்போருக்கு அவரே பரிசளிக்கட்டும்.


கதையோட்டத்தில் கண்ணுக்கு விருந்தான அழகான இடங்களையெல்லாம்,உல்லாசக் கப்பலின் அழகான பகுதிகளை இன்னும் அழகாகக் காட்டும் ஒளிப்பதிவாளர் புதியவராம்.. வாழ்த்துக்கள். முதல் படத்திலேயே கவர்ந்திருக்கிறார் மனுஷ நந்தன். இவர் பிரபல எழுத்தாளர் ஞானியின் மகன் என்பது கூடுதல் தகவல்.

பிரான்ஸ்,ஸ்பெயின், இத்தாலி ஆகிய இடங்களின் அழகு அப்படியே படத்துக்குப் பொலிவு கொடுக்கிறது.

எடிட்டரும் புதியவராம் ஷான் முஹம்மத்.மேருகூட்டியே இருக்கிறார்.

பாடல்களில் கலக்கிய DSP படத்தின் பின்னணி இசையிலும் பின்னி எடுத்துப் பிரகாசித்துள்ளார். சென்டிமென்ட் காட்சிகளில் வயலினும் சேர்ந்து உருக்குகிறது.ஆனால் சில இடங்களில் வசனங்களை இசை விழுங்குவதாக நான் உணர்ந்தேன்.

ஆரம்பக் காட்சிகளில் வரும் பாடல் வரிகளும் இசையும் மனதைத் தொட்டது.. ஆனால் அது இறுவட்டில் வரவில்லை.தேடிப் பார்க்கவேண்டும்.

எனக்குப் படம் பார்க்கையில் சலிப்பையும் எரிச்சலையும் தந்த ஒரே விடயம் கீழே ஆங்கிலத்தில் இடப்பட்ட உப தலைப்புக்கள். பல இடங்களில் கவனத்தை சிதறடித்துவிட்டது.இதற்காகவும் படத்தை மீண்டும் பார்க்கவேண்டும்.

இடைவேளை வரும் இடம் நெஞ்சைத் தொட்டது. அதிலும் த்ரிஷா - கமலின் புதிய வாழ்க்கை ஆரம்பிக்கக் காரணமான சம்பவம் என்பவற்றை ஒரே புள்ளியில் இணைப்பது திரைக்கதையில் உள்ள நெகிழ்ச்சியான ஒரு சாமர்த்தியம்.

 இடைவேளைக்குப் பிறகு என்னவொரு வேகம்+விறுவிறுப்பு.. ஒரு நிமிடம் அங்கே இங்கே திரும்பமுடியாமல் செய்திருக்கிறார்கள் கமல்+ KSR கூட்டணி..

வசனங்களின் இடையே திரையுலகம்,சமூகம்,திருமணத்தின் சில முட்டாள் தனமான பிணைப்புக்கள், காதல் பற்றிய தன எண்ணம்,மேல் தட்டு வாழ்க்கை, தமிழின் பிரயோகம் என்று பல விஷயங்களையும் கமல் தன பார்வையில் அலசினாலும் பாத்திரங்களை ஓவராக புத்திஜீவித்தனமாக அலைய விடாததும்,அலட்ட விடாததும் பாராட்டுக்குரியது.

*** கதை என்ன,எப்படி என்று நான் எதுவுமே சொல்லவில்லை;அது என் வழக்கமும் இல்லை. பார்த்து ரசியுங்கள்;சிரியுங்கள்.

ரசிக்கவும்,சிரிக்கவும்,மெச்சவும் அருமையான ஒரு விருந்து....

மன்மதன் அம்பு - ஜோராப் பாயுது..


பிற குறிப்பு - 9வது கமல் படம் தொடர்ந்து முதற்காட்சி பார்த்து சாதனை வைத்துவிட்டேன்.அதுவும் அலுவலக நேரத்தில்... அலுவலகம் வந்தால் நம்ம தலைவர் "கமல் படம் ரிலீசா? அதான் இவ்வளவு நேரமும் பண்ணவில்லை" என்று சொன்னது ஹைலைட். இவ்வளவுக்கும் நம் பெரியவர் சிங்களவர்.
இப்படிப்பட்டவங்க இருக்கிற காரணத்தால் தானே மழையே பெய்யுது ;)


* கமலின் இரண்டாவது மகளின் காதலர் என்று பரபரப்பாகப் பேசப்பட்ட அந்த இளைஞரும் எம்முடனேயே கடைசி வரிசையில் இருந்து படம் பார்த்திருந்தார் என்பது கூடுதல் விசேஷம்.
(தம்பி திருமணம் நடந்தாக் கூப்பிடுங்க)

Post a Comment

47Comments

Please Select Embedded Mode To show the Comment System.*