April 27, 2011

கோ



முதல் படத்திலேயே என்னை ஈர்த்த K.V.ஆனந்தின் மூன்றாவது படம்.
ஒவ்வொரு படத்திலும் தெரிந்த சமூகத்தின் தெரியாத சில பக்கங்களை கொஞ்சம் அதிர்ச்சியாகத் தருவது K.V.ஆனந்தின் பாணி.
கோவில் அவர் கையாண்டிருப்பது ஊடகங்கள் vs அரசியல்..

ஒரு பத்திரிகைப் படப்பிடிப்பாளன் தான் ஹீரோ.
ஒரு பத்திரிக்கை அலுவலகத்தின் சூழலின் பின்னணியுடன், அரசியல் சம்பவங்களின் காட்சி மாற்றங்களுடன் எந்தவொரு தொய்வும் இல்லாமல் நகர்கிறது கதை.

ஏற்கெனவே பிரபலமான Hit பாடல்களும், அற்புதமான படப்பிடிப்பும், சுருக்கமான நறுக் வசனங்களும் படத்தின் மிகப் பெரும் பலங்கள்.

வங்கிக் கொள்ளையைத் துணிச்சலாகப் படம் பிடித்து காவல் துறைக்கு உதவி ஹீரோவாகும் அஷ்வின் (ஜீவா), அந்த சம்பவத்திலேயே மற்றொரு துணிச்சலான நிருபர் ரேனுவை(புதுமுக நாயகி கார்த்திகாவை) சந்திக்கிறார்.
அதன் பின் தொடர்ச்சியாக இருவரும் ஜோடிபோட்டு துணிச்சலாக ஊழல், மோசடி, வன்முறை செய்யும் அரசியல்வாதிகளை ஆளும்கட்சி, எதிர்க்கட்சி பேதமின்றி தங்கள் நாளிதழான 'தின அஞ்சல்' மூலமாக வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார்கள்.

இவர்களுக்குப் பக்கபலமான நேர்மையான ஆசிரியரும் சேர்ந்துகொள்ள யாராயிருந்தால் என்ன என்று செய்திகள் சுட சுட வருகின்றன.

இடையில் நேர்மையான எண்ணத்துடன் மக்களுக்கு சேவை செய்ய வரும் இளைஞர் இயக்கமான 'சிறகுகள்' அமைப்பின் நல்ல செயல்களைப் புகைப்படத்துடன் செய்திகளாக்க அந்த அமைப்பு மக்களின் மனதில் இடம்பிடித்து அரசமைக்கும் அளவுக்கு உயர்கிறது.

ஒரு அமைதிப் புரட்சியினூடாக ஆட்சியை மாற்றிய பின் ஜீவாவும் அவரது பத்திரிகையும் அடுத்தடுத்து எதிர்கொள்ளும் சிக்கல்களும் திரைக்கதை எங்களுக்குத் தரும் அதிர்ச்சிகளும் கோவின் பரபரப்பான இறுதிக்கட்டத்துக்குக் கொண்டு செல்கின்றன.

ஆனால் ஒரு முக்கிய வேண்டுகோள் 'கோ' பார்த்தவர்களுக்கு.. படத்தின் முடிவை மட்டுமல்ல, இடைவேளைக்குப் பின்னதான எதையுமே பார்க்காதவர்களுக்கு சொல்லிவிடாதீர்கள். பார்க்கும் ஆர்வத்தையே இல்லாமல் செய்துவிடும்.

திரைக்கதையில் இயக்குனருடன் எழுத்தாளர்கள் சுபாவும் இணைவதால் வழமையாக சுபாவின் துப்பறியும்/மர்மக் கதைகளில் காணக்கூடிய சில பரபரப்புக்கள், திருப்பங்களைக் காணக் கூடியதாக உள்ளது.

சு(ரேஷ்) பத்திரிகை அலுவலகத்தில் ஒருவராக நடிக்கவும் செய்கிறார். எடிட்டர் அண்டனியும் வேறு ஒரு காட்சியில் வருகிறார்.

பத்திரிகைப் பின்னணியில் இருந்தவர் என்ற காரணத்தால் மிகத் தத்ரூபமாக அதைக் காட்சிகளில் கொண்டு வந்துள்ளார் ஆனந்த்.
பரபரப்பாக தலைப்புக்கள் மாற்றப்படுவது, ஆசிரியர், துணை ஆசிரியர் முறுகல்,மோதல்கள், வழக்கறிஞர் ஆலோசனைகள், புகைப்படப் பிடிப்பாளர்களுக்கு எப்போதும் கொமென்ட் அடிக்கும் சீனியர், இப்படியே பல பல..

கோட்டா சீனிவாசராவ் அதிரடி என்றால் பிரகாஷ்ராஜ் அமைதியான அதகளம். ஆனாலும் முதுகைப் பார்த்த ஜீவாவுக்கு தன் இன்னொரு முகத்தை அவர் இறுதிவரை காட்டவே இல்லையே..

பிரகாஷ்ராஜ் முகத்தில் பல உணர்ச்சிகளைக் கொட்டிக் குமுறும் இடங்களில், குறிப்பாக அந்த கார் பேட்டிக் காட்சிகளில் கண்ணுக்கு முன் முதல்வன் ரகுவரன் வந்து போகிறார். இந்தப் பாத்திரத்தில் ரகுவரனைப் பொருத்திப் பார்த்தால்.. தமழ் சினிமா ரகுவரனை நிறையவே மிஸ் பண்ணுகிறது.

ஆரம்ப அக்ஷன் காட்சிகளும் இறுதிக்கட்ட காட்சிகளும் முழுமை பெறுவது அன்டனி + ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் நாதனினால் தான்.

அந்த அரங்கக் குண்டுவெடிப்பிலும், பாடல் காட்சிகளிலும் அன்டனி ஜொலிக்கிறார் என்றால், ரிச்சர்ட் நாதனின் கைவண்ணம் பாடல் காட்சிகளில் குறிப்பாக எல்லா நட்சத்திரங்களும் வந்து ஆடிக் கலக்கும் அக நக பாடல், அமளி துமளி பாடலில் தன் கைவண்ணத்தைக் காட்டியுள்ளார்.

எங்கே தான் இப்படி இடங்களை ஆனந்த் தேடிப்பிடித்தாரோ.. அழகின் உச்சபட்சமாக மலைக்கவைக்கின்றன அந்த மலை உச்சிகளும், அழகான இடங்களும்..

அக நக பாடலில் சூரியா, ஜெயம் ரவி, கார்த்தி, அப்பாஸ், தமன்னா, பரத் என்று எல்லோரும் 'ஓம் ஷாந்தி ஓம்' பாணியில் முகம் காட்டி,ஆடிவிட்டு செல்கிறார்கள்..
அதைத் தொடர்ந்துவரும் காட்சிகளில் கொஞ்சம் நடிகர்களையும், கொஞ்சம் பத்திரிகையாளரையும் கலாய்க்கிறார் இயக்குனர்.
அதிலும் ஸ்மிதா கோத்தாரியாக வரும் சோனா மச்சான்சில் ஆரம்பித்து பேசும் பிரசாரம் நமீதா ரசிகர்கள் பலரைக் கொதிக்க வைக்கும்..;)


சிம்பு நடிக்க இருந்த பாத்திரம் ஜீவாவுக்கேன்றே உருவாக்கியது போல அச்சொட்டாகப் பொருந்துகிறது. ஜீவாவின் துடிப்பும், கண்களும் பாத்திரத்துக்கு ஏற்றவை.
சிம்புவை நேரடியாகவே பொருந்திப் பார்க்க வைப்பதாக பாடல் காட்சியிலும் பின்னர் சில காட்சிகளிலும் உலவ விடப்பட்டுள்ள 'பல்லன்', ஆனந்தின் பழி தீர்த்தலா? ;)

கார்த்திகா தாய் ராதாவை ஞாபகப் படுத்துகிறார். கண்களும், உதடுகளும் உயரமும் ஈர்க்கின்றன.. ஆனால் அந்த மேலுயர்ந்த மூக்கு இவற்றைக் கொஞ்சம் பின்தள்ளி ஈர்ப்பைக் குறைக்கிறது.
துடுக்குப் பெண்ணாகத் துள்ளித் திரியும் பியாவை விடக் கார்த்திகாவுக்கு நடிக்கும் வாய்ப்புக் குறைவே.
பாடல் காட்சிகளில் கார்த்திகாவின் உயரமே குறையாகி விடுகிறது.

பியாவுக்கு ஏற்ற வேடம்.. முன்பென்றால் நிச்சயம் லைலாவை இந்த வேடத்தில் பொருத்தலாம்.. ஆனால் கவர்ச்சியையும் கொஞ்சம் சேர்த்துப் பியா கலக்கி இருக்கிறார்.

காதல் தோல்வியென்று தெரியும் கணத்திலும் கலங்கிய கண்களுடனும் தன் வழமையான சுபாவத்தை மாற்றாமல் அடிக்கும் கூத்துக்கள் டச்சிங்.

அஜ்மல் கம்பீரமாக இருக்கிறார்; திடகாத்திரமாக இருக்கிறார். அவரது பாத்திரப்படைப்பில் சிறப்பாக பரினமித்துள்ளார். மேடைகளில் பொங்கிப்பிரவாகிக்கையில் கண்களும் பேசுகின்றன.

அந்தப் பத்திரிகையாசிரியர் க்ரிஷ் ஆக வருபவர் அருமையான ஒரு தெரிவு.
நவீன ஊடகத்துறையின் முக்கிய கூறான புகைப்படத்துறை ஏற்படுத்தும் தாக்கங்கள் பற்றியும், செய்திகளை உருவாக்கல்(News making), பரபரப்பு செய்திகளை உருவாக்கல்(sensationalism/sensational news reporting), செய்திகளின் தாக்கங்களை மக்களின் உணர்வுகளாக்கி அந்த அலையினால் ஆட்சிமாற்றத்தையே ஏற்படுத்தல் போன்றவை பற்றியும் மிக நுணுக்கமாக ஊடகவியல் பாடம் நடத்துகிறார் இயக்குனர்.

முன்னைய படங்களான கனாக்கண்டேன், அயன் போன்ற படங்களைப் போலவே கோ விழும் காட்சிக் கோர்வைகளைத் தொடர்புபடுத்தி துரிதப்படுத்துவதில் மற்றும் ஒரு காட்சியில் வரும் பாத்திரமாக இருந்தாலும் அந்தப் பாத்திரத்தின் கனதியையும் தேவையையும் நியாயப்படுத்துவதிலும் ஆனந்தின் கைவண்ணம் மெச்ச வைக்கிறது.

நக்சல் தலைவனாக வரும் போஸ் வெங்கட், சிறகுகளில் ஒருவராக வரும் ஜெகன் ஆகியோரையும் புத்திசாலித்தனமாக உலவவிட்ட விதங்களையும் சமகால இந்திய அரசியல் நையாண்டிகளையும் தன்னைப் புண்ணாக்கும் விதமாக அமைந்துவிடாமல் தந்திருப்பதையும் கூடக் குறிப்பிடலாம்.  

அரசியல் கிண்டல்களை விமர்சனமாக வைத்திருக்கும் இப்படமும் அரசியல் கலவையுடன் தான் வெளியிடப்பட்டுள்ளது என்பது சுவாரஸ்யமானது. (Red Giantஇன் வெளியீடு)
ஆனால் தமிழக தேர்தலுக்கு முன் வெளியாகியிருந்தால் ஏதாவது விழிப்புணர்ச்சி தந்திருக்குமா என்பது எனக்குத் தெரியாத ஒன்று.


கோ பார்த்த பிறகு மனதில் தோன்றியவை..

நல்ல கதை இருந்தால் IPL காலத்திலும் படம் ஹிட் ஆகும்

சிம்பு கோவைத் தவறவிட்டமைக்கு நிச்சயம் கவலைப்படுவார்.

K.V.ஆனந்தை 'பெரிய' ஹீரோக்கள் தேடுவார்கள்.

கார்த்திகா இனி ஆர்யா, விஷால், விக்ரம், விஜய், வினய் போன்ற உயரமான ஹீரோக்களால் தேடப்படுவார்.

ஜீவா அனைத்துப் பாத்திரங்களுகுமே பொருந்திப்போகும் ஒரு Director material
பியாவின் கதாநாயகி சுற்று இத்துடன் முடிந்தது

ஆலாப் ராஜுவின் ஆலாபனைகள் தான் இன்னும் ஆறு மாத காலத்துக்கு எல்லாப் படங்களிலும்..

ஹரிஸ் ஜெயராஜ் இனியும் தொடர்ந்து கொஞ்சமும் யோசிக்காமல் தன் முன்னைய பாடல்களையே கொஞ்சம் (மட்டும்) மாற்றிப் புதிய படங்களுக்குப் பயன்படுத்தலாம்.


கோ என்ற தலைப்பு எவ்வாறு பொருந்துகிறது என்று கொஞ்சமாவது யோசித்தால் மன்னன், ஆட்சி, தலைமை என்ற ஒத்த கருத்துள்ள சொற்கள் நினைவுக்கு வருகின்றன.

பன்ச் வசனங்கள் பேசாமல், பெரியளவு ஸ்டன்ட் காட்டாமல், புத்தி சாதுரியம், மக்கள் மீதான நேசத்துடன் போராடி வெல்லும் ஹீரோவை எங்கள் ஊடகத்துறையில் இருந்தே உருவாக்கித் தந்தமைக்கு இயக்குனருக்கு நன்றிகள்..

நேர்மைக்காகவும், மக்கள்+சமூக நன்மைக்காகவும் (படத்தினைப் பார்த்தவர்கள் இறுதியில் திரையில் தோன்றும் திருக்குறளை ஞாபகப்படுத்தவும்; மற்றவர்கள் திரைப்படத்தை முழுமையாகப் பார்க்கவும்) போராடும் ஊடகவியலாளர்களை நினைவுபடுத்தியதற்கு சிக்கலான ஒரு இடத்தில் இந்த சிக்கலான பணியைக் காமெராவை எடுக்காமல் கையில் மைக் எடுத்து முன்னெடுக்கும் ஒருவனின் நன்றிகள்.


April 19, 2011

சங்கா, இலங்கை... டில்ஷான்.. என்ன? ஏன்?



தொண்ணூறுகளுக்குப் பிறகு சர்வதேசக் கிரிக்க்ட்டைப் பொருத்தவரை எழுதப்படாத விதியாக மாறிய ஒரு விடயம் தான் நான்கு வருடங்களுக்கு ஒரு முறை வரும் உலகக் கிண்ணத்தைக் குறியாக வைத்துக் கட்டமைக்கப்படும் அணிகளின் உள்ளடக்கமும் நிர்வாகமும்.

ஆஷசில் மோதும் எதிரிகள் இருவரும் இதில் கொஞ்சம் விதிவிலக்காக இருந்தாலும் ஆசிய அணிகளும் தென் ஆபிரிக்காவும் உலகக் கிண்ணம் என்ற உயரிய உன்னதத்தையே தம் அணிகளின் இறுதி இலக்காக வைத்துக் கொண்டு வருகின்றன.

நான்காண்டுத் திட்டங்களாக அணிகளை உருவாகுவது, தலைவர்களைக் கட்டியெழுப்புவது என்று இந்த உலகக் கிண்ணத்தை மையப்படுத்திய அண்மைக்காலத்தில் நாம் அவதானிக்கலாம்.

உலகின் முக்கிய அணித் தலைவர்கள் தாம் பதவிகள் விலகுதலை அறிவிப்பதும் அல்லது பதவிகளை கை மாற்றுவதும், வீரர்கள் தம் ஓய்வை அறிவிப்பதும் கூட இந்த உலகக் கிண்ண மேடைகளில் தான்.

இம்முறை உலகக் கிண்ணத்தைத் தொடர்ந்தும் பல அணித தலைவர்களில் மாற்றங்கள்; சில வீரர்களின் ஓய்வுகள்.

இவற்றுள் நியூ சீலாந்தின் வெட்டோரி, தென் ஆபிரிக்காவின் ஸ்மித் ஆகியோர் தத்தம் அணிகளின் ஒருநாள் தலைமைகளில் இருந்து ஓய்வு பெறுவதாக முற்கூட்டியே அறிவித்திருந்தனர்.

நடப்பு சாம்பியனாக இருந்த ஆஸ்திரேலியா காலிறுதியுடன் வெளியேறியதை அடுத்து ரிக்கி பொன்டிங் உலகக் கிண்ணத்தின் பின் பதவி விலகிய முதல் தலைவராகினார்.


அதன் பின் இறுதிப் போட்டியில் இந்தியா வென்று, இலங்கை தோற்றபின்னர் உடனே என்று இல்லாமல், நாடு திரும்பிய பிறகு இலங்கை அணித்தலைவர் குமார் சங்கக்கார தான் பதவி விலகும் முடிவை அறிவிக்கிறார்; அடுத்த நாள் உப தலைவராகக் கடமையாற்றிவந்த மஹேல ஜெயவர்த்தன பதவி விலகுகிறார்; அதே அன்று தேர்வுக்குழுத் தலைவரான அரவிந்த டீ சில்வா தலைமையிலான குழுவும் தம் பதவிக்காலம் முடிவடைய மூன்று வாரகாலம் இருக்கும் நிலையில் பதவி விலகுகிறது.

அத்துடன் உலகக் கிண்ணத்துக்கு முன்னதாகவே தெரிந்த பயிற்றுவிப்பாளர் டிரேவர் பெய்லிஸ் தன் பதவிக்காலம் முடிவடைவதால் மீண்டும் ஆஸ்திரேலியா திரும்பியிருந்தார்.

இதனால் இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலமானது முற்றிலும் புதியதாக, மீள் உருவாக்கப்பட்டே முன்கொண்டு செல்லப்படவேண்டிய நிலை உருவானது.
இந்தப் பரபரப்பு சூழ்நிலை கடந்த பத்து நாட்களாக நீடித்திருந்தது.


அரசியல் தலையீடுகள், முரண்பாடுகள் மற்றும் அழுத்தங்கள் காரணமாகவே இந்த விலகல்கள் இடம்பெற்றதாகப் பரபரப்பாகப் பேசப்பட்டது.

இதிலே சங்காவின் திடீர் பதவி விலகல் கொஞ்சம் ஆச்சரியமானதாகவே அல்லது அதிர்ச்சி தருவதாகவே இருந்தாலும் , அடுத்த உலகக் கிண்ணத்தைக் குறிவைத்து இனி அணியொன்றைக் கட்டியெழுப்புவது சம்பந்தமாகப் பார்த்தால் சங்காவின் இந்த முடிவும் அர்த்தமுள்ளதாகவே தெரிகிறது.
அத்துடன் என்னைப் பொருத்தவரை சங்கக்காரவின் தலைமைத்துவம் மிகச் சிறந்தது என்று சொல்வதற்கில்லை. மஹேல, சனத் ஜெயசூரிய போன்றவர்களுடன் ஒப்பிடுகையில் சங்கா தலைவராக சராசரியாகவே இருந்தார்.

இறுதிப் போட்டியிலும் இலங்கை தோற்றிருந்த இன்னும் சில போட்டிகளிலும் சங்கா தலைவராக சில,பல இடங்களில் சறுக்கியிருந்தார். எனவே புதியவர் ஒருவரைத் தலைவராக்குவது இலங்கைக்கு புதிய உத்வேகத்தைத் தரலாம்.
ஆனால் இருக்கும் சிக்கல் யாரோருவரையும் அடுத்த தலைவராக இலங்கை தயார்ப்படுத்தி இருக்கவில்லை.
இப்போது டில்ஷானை தெரிவு செய்துள்ளார்கள். அதுபற்றி பின்னர் அலசலாம்..


மகேலவின் விலகல் சாதாரணமானது. அவர் முன்னாள் தலைவர். சங்கக்காரவுக்கு உதவியாகத் தான் இந்த உலகக் கிண்ணம் வரை மட்டும் உபதலைவராக இருக்க ஒப்புக் கொண்டவர். எனவே தான் உலகக் கிண்ணம் முடிய, சங்கா விலக மகேலவும் விலகியுள்ளார்.
தலைவரும் உப தலைவரும் இல்லாத இடத்தில், ஏன் அணியும் இப்போதைக்குத் தேர்வு செய்யப்படவேண்டிய தேவை இல்லாத நேரத்தில் தேர்வாளர்கள் எதற்கு?
இதனாலேயே முப்பதாம் திகதிக்கு முடியவேண்டிய தம் கால எல்லைக்கு முன்பதாகவே தாம் தேர்வுக்குழுவில் இருந்து விலகுவதாக அரவிந்தவும் ஏனைய தேர்வாளர்களும் அறிவித்தனர்.
எனவே இதுவும் இயல்பானதே.. சந்தேகப்படவேண்டிய தேவையில்லை. ஒன்றில் தொடங்கிய தொடர்ச்சியான ஒவ்வொரு தாக்கங்கள்.

ஆனால் சங்கக்கார இதை முதலில் தன்னுடைய பேட்டியில் மறுத்திருந்தாலும் பெய்லிஸ் விடைபெறும் நேரம் வழங்கிய பேட்டியில் அரசியல் தலையீடுகள் இருப்பதாகவும் வீரர்கள் தம் மனதை ஒருமுகப்படுத்தி விளையாடுவது உண்மையில் மெச்சக்கூடியது என்று பரபரப்பை ஏற்படுத்திய பிறகு, சங்காவின் நீண்ட மனம் திறந்த பேட்டியில் சில விஷயங்கள் வெளியாகின..

கொஞ்சம் வெளிப்படையாக, கொஞ்சம் மறைமுகமாக சங்கா சொன்ன விஷயங்கள்.. மற்றும் நாம் உணரக்கூடிய விஷயங்கள்..
பதினொருவர் கொண்ட அணியைத் தெரிவு செய்வதில் தலையீடுகள், அழுத்தங்கள் இருப்பதில்லை எனினும் அணி ஒன்று  தேர்வுக் குழுவினால் தெரிவு செய்யப்பட்ட பின்னர் விளையாட்டு அமைச்சர் அங்கீகாரம் வழங்கவேண்டிய நிலை உள்ளது.
அணியில் வீரர் ஒருவரை சேர்க்கவேண்டும் என்று அழுத்தம் தரப்படுவதில்லை; எனினும் சில சமயங்களில் குறிப்பிட்ட வீரர்கள் ஏன் சேர்க்கப்படுவதில்லை என்று கேள்விகள் வந்துள்ளன.
அணிக்குள் எந்தவொரு அரசியல் குழு நடவடிக்கைகளும் இல்லை எனினும் கிரிக்கெட் சபை நிர்வாகத்தில் அரசியல் நிறையவே உள்ளது.

உடனடியாக விளையாட்டு அமைச்சர் கொண்டுவந்த புதிய தேர்வுக்குழுவானது அனுபவம் வாய்ந்த முன்னாள் வீரர்களை உள்ளடக்கிய ஒன்று தான்.
இலங்கை அணியின் தலைவராக, முகாமையாளராக, தேர்வாளராக கடமை ஆற்றிய அனுபவம் கொண்ட துலீப் மென்டிஸ், முன்னாள் இலங்கை வீரர்கள் டொன் அனுரசிரி, ரஞ்சித் மதுரசிங்க, சமிந்த மென்டிஸ் (தேர்வுக்குழுவுக்கு இவர் புதியவர்)

ஆனால் அரவிந்த குழுவினர் தம் கடமையை நேர்மையாகவும் பெரும்பாலாக திருப்தியாக இருக்கக் கூடிய விதத்திலும் செய்ததைப் போல இந்த புதியவர்கள் செய்வார்களா என்பது சந்தேகமே.
காரணம் முன்பு அனுரசிரி, மதுரசிங்க தேர்வாளர்களாக இருந்தபோது அவ்வளவு திருப்தியாக செயற்பட்டிருக்கவில்லை.

இப்போது ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் துரித நடவடிக்கைகள் ஓரளவு நிதானத்தையும் தெளிவையும் காட்டுகின்றன..

முதலில் டில்ஷானின் தலைவர் நியமனம்..


சங்கா,மஹேல ஆகியோருக்கு அடுத்தபடியாக இலங்கை அணியின் சிரேஷ்ட வீரர் இவர் தான். அத்துடன் இலங்கை அணியில் மூன்றுவிதமான போட்டிகளிலும் விளையாடும் மிகச் சிலரில் இவர் முதன்மையானவர். எனவே இருப்பவரில் தேடும்போது டில்ஷான் தெரிவுசெய்யப்படுவார் என்பது எல்லோருக்குமே தெரிந்திருந்தது.

சங்கக்கார டெஸ்ட் அணித் தலைவராக யாரும் பொறுப்பேற்காத பட்சத்தில் தானே டெஸ்ட் அணியின் தலைவாரக நீடிக்கத் தயார் என்று அறிவித்திருந்தார். ஆனால் தேர்வாளர்கள் இப்போது இங்கிலாந்துத் தொடருக்கான சகலவிதமான போட்டிகளுக்குமே டில்ஷானைத் தலைவராக அறிவித்துள்ளார்கள்.
இது டில்ஷான் மீதான நம்பிக்கை என்பதை விட, அணிகளையும் தலைமையும் உடைப்பதை விட ஆரம்பத்தில் சிலவேளைகளில் சறுக்கினாலும் ஒரே ஒருவரிடம் அனைத்தையும் ஒப்படைப்பது சிறப்பானது எனத் தேர்வாளர்கள் கருதியுள்ளார்கள் எனத் தெரிகிறது.

புதிய தலைவர் டில்ஷான் பற்றி தனியாகக் கொஞ்சம் விரிவாக அலசலாம் என நினைக்கிறேன்..

அதற்கு முன் உப தலைவராக யாரும் நியமிக்கப்படாமை பற்றியும் பார்க்கவேண்டும்.
டில்ஷானுடன் அடுத்த தலைமைப் பதவிக்கு இணைப் போட்டியாளர் எனக் கருத்தப்பட அஞ்சேலோ மத்தியூஸ் காயம் காரணமாக ஓய்வெடுப்பதனாலேயே இதுவரை உபதலைவர் யாரென அறிவிக்கப்படவில்லை என ஊகிக்கலாம்.

அடுத்து இன்று வெளியான செய்தி - துடுப்பாட்டப் பயிற்றுவிப்பாளராக மார்வன் அத்தப்பத்துவின் நியமனம். இது சிலகாலம் எதிர்பார்க்கப்பட்ட வரவேற்கக் கூடிய ஒரு விடயமே எனினும் ஏற்கெனவே சிறப்பாகத் தன பங்களிப்பை வழங்கிவந்த சந்திக்க ஹத்துருசிங்கவை கழற்றிவிட்டு அத்தப்பட்டது பக்கம் தாவியது அவ்வளவு நன்றாக இல்லை என எண்ணத் தோன்றுகிறது.

ஆனால் இலங்கையின் பயிற்றுவிப்பு அமைப்பு பொதுவாகவே அண்மைக்காலங்களில் உறுதியாகவே இருந்து வருகிறது.
எனவே அத்தப்பத்த்துவின் வருகையுடன் இப்போது இடைக்காலப் பயிற்றுவிப்பாளராக இருக்கப்போகிற ஸ்டுவர்ட் லோவுடன் இலங்கையின் துடுப்பாட்டம் மேலும் நிதானம் பெரும் என்பதையும் மத்தியவரிசைத் தடுமாற்றம் இல்லாமல் போகும் என்றும் நம்பி இருக்கலாம்.



எனினும் உலகக் கிண்ணத்தில் முதல் சுற்று, கால் இறுதிகளில் வெளியேறிய அணிகளே பதறியடித்து சடுதியான மாற்றங்களை அவசர,அவசரமாக செய்யாதபோது இரண்டாம் இடத்தைப் பெற்ற இலங்கை இப்படிப் பதறியடித்து மாற்றங்களை அவசர,அவசரமாக செய்வது இலங்கை ரசிகர்களுக்கே உள்ளே உண்மையாகவே ஏதாவது அரசியல் கோல்மாலுகள் இருக்கலாமோ என்ற ஐயத்தை ஏற்படுத்துவது இயல்பானது தான்.

ஆனால் இது ஒரு முக்கிய தொடருக்குப் பின் சாதரணமாக நடக்கின்ற சில,பல மாற்றங்கள் என்பதை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ளல் வேண்டும்.
சாதாரணமாகஇது எம்மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியிராது. ஆனால் ரொம்ப எதிர்பார்த்து இறுதிப் போட்டியில் தோற்றதும், அதிலும் இந்தியாவிடம் தோற்றதும் அதைத் தொடர்ந்துவந்த சில இந்திய-இலங்கை அரசியல் 'உபசார' முறுகல்களும் இப்படியொரு தோற்றப்பாட்டை ஏற்படுத்திவிட்டன.

இப்போது IPLஇல் விளையாடிவரும் இலங்கை வீரர்களை அவசர,அவசரமாக விளையாட்டு அமைச்சர் அழைத்திருப்பதற்கும் இலங்கை ஜனாதிபதி+அமைச்சர் குழுவினருக்கு இறுதிப் போட்டியில் வழங்கப்படாத 'மரியாதை' தான் காரணம் என்பது அண்மைய முறுகல்களில் இருந்து எல்லோருக்கும் புரியக் கூடியதாக இருக்கும்.

ஆனால் பணக்கஷ்டத்திலும் எக்கச்சக்க கடன் தொல்லையிலும் இருக்கும் இலங்கை கிரிக்கெட் பணத்தை அடிக்கடி வாரி வழங்கும் இந்திய கிரிக்கெட் சபையுடன் இது விவகாரமாக மோதிக் கையைக் கடித்துக் கொள்ள மாட்டார்கள் என எதிர்பார்க்கிறேன்.

உலகக்கிண்ணத்துக்கு முன்பே வீரர்களுக்கு சொல்லி இருந்ததைப் (OR என்று சொல்லப்படுவதைப்) போல மே 20ஆம் திகதி வரை விளையாட விடுவார்கள் என்று நம்புகிறேன்..
பேச்சுவார்த்தை அப்படி எதுவும் இல்லை என்று இந்திய கிரிக்கெட் சபை நேற்று சொல்லி இருந்தாலும் காதும் காதும் வைத்தாற்போல இந்த விவகாரத்துக்கு இலங்கை - இந்திய கிரிக்கெட் சபைகள் முடிவு கட்டும் என்று நம்பி இருக்கலாம்.
(எம் இரு நாடுகளும் மீனவர் பிரச்சினை, அகதிகள் பிரச்சினை முதல் அனைத்துவிதப் பிரச்ச்சினைகளையும் இப்படித் தீர்ப்பது தானே வழக்கம்)


டில்ஷான் பற்றி அடுத்த பதிவில் அலசுகிறேன்...(இன்னும் வேறு சில விஷயங்கள் பற்றியும்)


பி.கு - கடந்த பதிவில் உங்களை ஊகிக்க விட்ட விஷயத்தில்....
##இம்முறை எந்த IPL அணிக்கு ஆதரவு என்று கேட்கும் நண்பர்களுக்கு......
சிலர் சரியாக ஊகித்திருந்தார்கள்...

இம்முறை நான் கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணிக்கு என் முதல் ஆதரவு.. சென்னை சூப்பர் கிங்க்சை விட ஒரு சில புள்ளிகளால் கொச்சி என் ஆதரவைப் பெற்றுக் கொள்கிறது.. மூன்றாம் இடத்தை டெக்கான் சார்ஜர்சுக்கு வழங்குகிறேன் :)

சரியான விடைகளை ஊகித்த நண்பர்கள்
 வந்தியத்தேவன், Komalan, M.Shanmugan,  தர்ஷன்,  Nirosh,  Subankan,  Vijayakanth, வடலியூரான்


April 08, 2011

இந்தியாவின் உலகக் கிண்ண வெற்றி - சொல்பவை என்ன?


உலகக் கிண்ணம் இந்தியாவுக்கு சொந்தமாகி 6 நாட்களாகின்றன.
கடந்த உலகக் கிண்ணங்கள் போலவே இம்முறையும் பொருத்தமான ஒரு அணியையே உலகக்கிண்ணம் போய்ச் சேர்ந்துள்ளது. Worthy winners..





இறுதிப் போட்டியில் இலங்கை அணியின் தோல்வி ஒரு ரசிகனாக எனக்குக் கவலை தந்தாலும் பொருத்தமான ஒரு அணி வெற்றியீட்டியுள்ளது என்பதால் இந்தியாவை மனமார வாழ்த்தி இருந்தேன்.


உலகக்கிண்ணம் ஆரம்பமாவதற்கு முன்பே உலகின் அத்தனை விமர்சகர்களும் எதிர்வுகூறியது போலவே இந்தியா கிண்ணத்தை வென்றெடுத்துள்ளது.
போட்டிகளை நடாத்தும் இரு நாடுகளுக்கும் ஏனைய அணிகளை விட வாய்ப்புக்கள் அதிகம் என்று கருத்துக்கள் வெளியாகி இருந்தன. ஆடுகள, காலநிலை சாதகங்கள் போலவே அணிகளும் பலமாகவும் சமநிலையுடனும் இருந்தன.


இதனால் தான் உலகக் கிண்ணம் ஆரம்பிக்குமுன் Feb 18ஆம் திகதி இட்ட முன்னோட்டப் பதிவிலும் இலங்கை - இந்திய இறுதிப் போட்டி இடம்பெறும் என்று உறுதியாக எதிர்வுகூறியிருந்தேன்.


இந்தியா, இலங்கை இரு அணிகளுமே இறுதிப் போட்டிக்குத் தெரிவாகும் என்பது அனைவரும் எதிர்பார்த்த விடயமே ஆயினும் இரு அணிகளுமே முதல் சுற்றில் சிற்சில சிக்கல்களை எதிர்கொண்டே கால் இறுதிக்குள் நுழைந்திருந்தன.


ஒப்பீட்டளவில் இலங்கைக்கு பாகிஸ்தானுடனான தோல்வியும் ஆஸ்திரேலியாவுடனான மழை கழுவிய போட்டியில் குறைந்த ஒரு புள்ளியும் வழங்கிய தலையிடியை விட, இந்தியாவுக்கு முதல் சுற்றில் இருந்த சிக்கல்கள் பாரியவை.


favorites என்ற பெருமையை இல்லாமல் செய்துவிடக் கூடியதாக இங்கிலாந்துடனான சமநிலையும் தென் ஆபிரிக்காவுக்கேதிரான அதிர்ச்சித் தோல்வியும் அமைந்தன. பலம் குறைந்த அணிகள் என்று சொல்லப்பட்ட மேற்கிந்தியத் தீவுகள், நெதர்லாந்து, அயர்லாந்து அணிகளை வெல்லவும் இந்தியா கொஞ்சமாவது சிரமப்பட்டிருந்தது.


ஆனால் சச்சின் டெண்டுல்கர் உலகக்கிண்ண வெற்றியின் பின்னர் சொன்னது போல இந்த முதல் சுற்றின் சிரமங்களும் தடுமாற்றங்களும் தான் அடுத்த மூன்று முக்கிய போட்டிகளையும் மூன்று பலம் பொருந்திய அணிகளை வீழ்த்த உதவியது.


இந்த உலகக் கிண்ணத்தில் குழுவில் அடங்கியிருந்த பதினைந்து வீரர்களையும் பயன்படுத்திய ஒரே முக்கிய அணி இந்தியா மட்டுமே. இது இந்தியா சரியான அணியைத் தெரிவு செய்யத் தடுமாறுகிறது என்ற ஐயத்தைத் தோற்றுவித்திருந்தாலும் இறுதியில் அனைத்தும் நன்மைக்கேயாக முடிந்தது.


ஒவ்வொரு அணிக்கும் எதிராக அந்த அணிகளின் பலம், பலவீனத்துகேர்பவும் ஆடுகளத்தன்மைக்கு ஏற்பவும் அணியைத் தேர்வு செய்யக் கூடிய நம்பிக்கையை தலைவர் தோனிக்கும் பயிற்றுவிப்பாளர் கேர்ஸ்டனுக்கும் இது வழங்கியிருந்தது.


இறுதிப் போட்டிக்கு வந்த அணிகளில் இலங்கையின் பாதை ஓரளவு இலகுவானது. இங்கிலாந்து, நியூ ஸீலாந்து ஆகிய இரு அணிகளையும் இலங்கையின் சுழல்பந்துவீச்சுக் கோட்டையான பிரேமதாஸ மைதானத்தில் வைத்து வீழ்த்துவது என்பது ஒன்றும் பெரிய கஷ்டமான வேலையில்லை.


ஆனால் இந்தியாவுக்கு காலிறுதியில் நடப்பு உலக சாம்பியன் ஆஸ்திரேலியா..
அரையிறுதியில் முதல் சுற்றுக்களில் விஸ்வரூபம் காட்டி நின்ற மற்றொரு அணியான பாகிஸ்தான்.
எவ்வளவு தான் இந்தியாவில் எல்லோரும் வாய்ப்புள்ள அணியாக ஏற்றுக்கொண்டாலும் இவ்விரு அணிகளும் இந்தியாவில் எந்த சூழ்நிலையிலும் வீழ்த்தலாம் என்ற ஊகங்களும் வெளிப்பட்டிருந்தன. அதுமட்டுமன்றி


இந்தியா முக்கிய போட்டிகளை விளையாடிய அஹ்மேதாபாத், மொஹாலி ஆகிய இரு மைதானங்களுமே இந்தியாவுக்கு வரலாற்று ரீதியாக இலங்கைக்கு சாதகத்தன்மை வழங்கியவை அல்ல.. டோனி அடிக்கடி சொல்லி வருவதும் இந்தியா அண்மைக்காலத்தில் நிரூபித்துவருவதும் இதையே.. சாத்தியப்படாதவற்றை சாத்தியப்படுத்துவது.


ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் ஆகிய அணிகளை தோற்கடித்ததன் மூலம் இந்தியா தன சுய பலத்தை எடை போட்டு அறிந்தது.
இந்த இரு வெற்றிகளும் உண்மையில் உலகக் கிண்ணங்கள் இரண்டை வென்ற திருப்தியை இந்தியாவுக்குத் தந்திருக்கும் என்பதில் ஐயம் இல்லை.


எனினும் இறுதிப் போட்டியை நாங்கள் நான்கு கால் பாதிகளாக எடுத்துக் கொண்டால், முதல் இருபத்தைந்து ஓவர்களும் , இறுதி இருபத்தைந்து ஓவர்களும் இந்தியா வசமாகியது.. இந்த இறுதிக்கட்டம் தான் தீர்க்கமானது.


இலங்கை அணியின் இருபத்தாறாம் ஓவரில் இருந்து ஐம்பதாவது ஓவர் வரையும் அதன் பின் சச்சின், செவாகை ஆட்டமிழக்கச் செய்து இன்னும் சில ஓவர்கள் வரையும் இலங்கையின் கையில் இருந்த போட்டியை கம்பீர், கொஹ்லி, தோனி ஆகியோர் லாவகமாக தம் வசப்படுத்தியத்தை சொல்கிறேன்.






கிட்டத்தட்ட ஒரே விதமாக நோக்கப்பட்டு வந்த ஒரே விதமான குணாம்சங்கள் கொண்ட அணித்தலைவர்களான சங்கக்காரவும் தொனியும் வேறுபட்டுத் தெரிந்த ஒரு முக்கிய போட்டி இது.
தோணி தனது நுண்ணிய நுட்பங்களைப் பயன்படுத்தியதும், சங்கக்கார பயன்படுத்தவேண்டிய நுணுக்கங்களைப் பயன்படுத்தாமல் போனதும் இந்த இறுதிப் போட்டியின் முடிவுகளாக அமைந்தன.


சங்கா முதல் இரு விக்கெட்டுக்களை மிக விரைவாக வீழ்த்தியபின் கிடைத்த அருமையான சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இந்தியா மீது அழுத்தங்களைப் பிரயோகிக்கத் தவறி இருந்தார். இந்தத் தொடர் முழுவ்பதும் ஓட்டங்களைப் பெரிதாகக் குவித்திராத தோனி ஒவ்வொரு ஓட்டங்கலாகப் பெறுவதைத் தடுத்து அவரைத் திக்கு முக்காட வைத்திருக்கலாம்.


மாலிங்கவை (இவர் மட்டுமே இறுதிப் போட்டியில் இந்தியாவை அச்சுறுத்திய ஒரேயொரு இலங்கைப் பந்துவீச்சாளர்) இடையிடையே பயன்படுத்தி ஏதாவது வித்தியாசமாக செய்யவும் முயலவில்லை.
முரளியின் இரண்டு முக்கிய ஓவர்கள் இறுதிவரை பயன்படுத்தாமல் விடப்பட்டதும் ஏன் என்ற கேள்வியும் எழுகிறது.


சந்காவின் பிழைகள் இவை என்றால் அணியில் செய்யப்பட நான்கு மாற்றங்களுமே சொதப்பியது சோகக் கதை.
அத்துடன் வழமையாக மிக சிறப்பாக செயற்படும் இலங்கையின் களத்தடுப்பு கடைசி இரு போட்டிகளிலும் படுமோசமாக இருந்ததும், இந்தியா மிகச் சிறப்பாகக் களத்தடுப்பில் இலங்கையை ஓரங்கட்டியதும் முக்கியமானது.


களத்தடுப்பு வியூகங்கள்(ஒவ்வொரு வீரர்களின் பலம்,பலவீனங்களைக் கணித்து அமைக்கப்பட்ட வியூகங்கள்), சாகிர் கானையும், யுவராஜையும் பந்துவீச்சில் பக்குவமாகப் பயன்படுத்தியது, கம்பீர்-கொஹ்லியின் இணைப்பாட்டதுக்குப் பின ஐந்தாம் இலக்கத்தில் (யுவராஜை முந்தி) வந்து போட்டியை முழுவதுமாகத் தன கையகப்படுத்தியதாகட்டும்... தோனி அன்றைய தினம் நிஜமான கதாநாயகன் தான்.


அதிலும் வென்றவுடன் ரவி சாஸ்திரியுடனான உரையாடலில் தோனி கம்பீரத்துடன் சொன்ன சில வார்த்தைகள் அப்படியே மனதைத் தொட்டன..
"இன்று நாம் தோற்றிருந்தால் அஷ்வினுக்குப் பதில் ஸ்ரீசாந்தை சேர்த்தது பற்றியும், யுவராஜுக்குப் பதில் நான் ஐந்தாம் இலக்கத்தில் ஆடியது பற்றியும் கேள்விகள் வந்திருக்கும்.. இவையெல்லாம் சேர்ந்து தான் இன்றைய வெற்றிக்கு என்னை உத்வேகப்படுத்தியிருந்தன"


இது தான் தலைமைத்துவம். என்ன தான் சில முடக்கல்கள், முடமாக்கும் விமர்சனங்கள் இருந்தாலும் உடைத்துப் போட்டு தோனி இந்தியாவுக்கு வேறு எந்தத் தலைவர்களும் பெற்றுத் தராத இமாலய வெற்றிகளைப் பெற்றுத் தர இந்த உறுதியும் , கொஞ்சம் கர்வமும் தான் காரணம்.


மஹேலவின் அபார சதம் அநியாயமாகப் போனது கவலை என்றால்.. முரளிதரனின் விடைபெறும் போட்டி வீணாய்ப் போனது சோகம்..


மஹேலவின் அந்த சதம் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் பெறப்பட்ட தலை சிறந்த சத்தங்களில் ஒன்று.
இதுவரையும் மஹேல பெற்ற சதங்களில் எவையும் தோல்வியில் முடிந்ததும் இல்லை;
உலகக் கிண்ணத்தில் சத்தங்கள் பெற்ற வீரர்கள் தோல்வியுற்ற அணியில் இருந்ததும் இல்லை.
மஹேல சிறப்பாக ஆடி, அபாரமாக ஓட்டங்கள் சேர்த்து இலங்கையை 274 என்ற பெரிய இலக்கைப் பெற்றுக் கொடுத்தும் தோல்வியிலே முடிந்தது தான் மன வேதனை+ஏமாற்றம்.


தோல்வியைப் பரிசாகப் பெற்றுக் கொள்ளக் கூடிய ஒரு சதமல்ல மஹேலவின் சதம்.


இந்தியா வென்றபின் நான் ரசித்து நெகிழ்ந்த ஒரு சில விஷயங்கள்....






ஹர்பஜன், யுவராஜின் ஆனந்தக் கண்ணீரும்.. சச்சினின் பிரகாசமான முகமும்
தோனி காட்டிய அடக்கத்தை மீறிய குழந்தைத்தனமான மகிழ்ச்சி
முன்னாள் வீரர்கள் பலரின் முகத்தில் தெரிந்த 'அப்பாடா' என்ற திருப்தி
எம் ஊடகவியலாளர் அறையில் இந்திய ஊடகவியளாள நண்பர்களின் ஆனந்தமும் கண்ணீரும் எம்முடன் அவர்கள் பகிர்ந்த மகிழ்ச்சியும்
கொஹ்லி,அஷ்வின் போன்ற இளம் வீரர்கள் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சி+நெகிழ்ச்சி
சச்சினைக் காவிக் கொடுத்த அதே கௌரவத்தை கேர்ஸ்டனைக் காவியும் கொடுத்தது
யுவராஜிடம் சில காலமுன் பார்க்காத அந்த நிதானம்
என்னைப் பொறுத்தவரை இந்தியாவின் இந்த வெற்றியின் மூலம் உலகக் கிண்ணம் மிகப் பொருத்தமான வெற்றியாளரைப் போய்ச் சேர்ந்துள்ளது.


இந்தக் கிண்ணம் சச்சினின் கரங்களை அலங்கரித்திருப்பதும் சச்சின் டெண்டுல்கருக்குக் கிடைக்கவேண்டிய கிரிக்கெட்டின் இறுதி கௌரவமாக அமைகிறது.
அதே போல தற்போதைய கிரிக்கெட் உலகின் மிகச் சிறந்த தலைவராகப் பலரும் ஆமோதித்துள்ள தோனியினால் இந்தக் கிண்ணம் வெல்லப்பட்டிருப்பதும் காலத்துக்கு மிகப் பொருத்தமாகவே அமைகிறது.


 இம்முறை இந்தியாவின் இந்த வெற்றியானது கிரிக்கெட் உலகுக்குத் தரப்போகும் செய்தி என்னவென்பது அடுத்த ஆண்டில் இலங்கையில் இடம்பெறும் World T20இல் தெரியவரும்.
ஆஸ்திரேலியாவின் வீழ்ச்சியும் இந்த கிரிக்கெட் சக்திப் பரம்பலில் முக்கிய இடம்பெறப் போகிறது.


சர்வதேசக் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவின் ஆதிக்கம் உடைக்கப்பட்ட பின்னர் இப்ப்போது இந்தியாவின் இந்த உலகக் கிண்ண வெற்றியானது அடுத்த கிரிக்கெட்டின் முன்னெடுப்பின் முக்கியமான கட்டமாகிறது.


1983இல் இந்தியா உலகக் கிண்ணம் வென்றது முதல் ஒவ்வொரு தடவை ஆசிய அணியொன்று உலகக் கிண்ணம் வென்றதும் கிரிக்கெட்டின் பரம்பலுக்கும் ஆசியாவின் ஆதிக்கத்துக்கும் கிரிக்கெட்டின் வர்த்தக ரீதியான வெற்றிக்கும் முக்கியமானதாக அமைந்திருக்கிறது.


ஆனால் இந்தியாவினதும் ரசிகர்களினதும் துரதிர்ஷ்டமோ என்னவோ, உலகக் கிண்ண வெற்றியின் உன்னதத்தை நீண்ட நாட்கள் கொண்டாட முடியாமல் ஒரு வாரத்துக்குள்ளேயே  வந்து சேர்கிறது நவீன கிரிக்கெட்டின் பணக்கார கிரிக்கெட் கேளிக்கைத் திருவிழாவான IPL.


அதுவும் அதே இந்தியாவில்.


இந்த IPL அலையில் உலகக் கிண்ணத்தில் ஒன்றுபட்ட இந்திய ரசிகர்களின் ஆதரவு அலைகள் தமக்குப் பிடித்த வீரர்கள், அணிகள் பால் பிரிவடையப் போகின்றன.


இது நவீன கிரிக்கெட்டின் ஒரு வித சாபம் தான்..
ஒரு வாரத்தின் முன்னர் சேர்ந்தவர்கள் எதிரணிகளில் முட்டி மோதுவதும், மோதிக் கொண்டவர்கள் முறைத்துக் கொள்வதும் சகஜமாகிவிடும்..






ஆனால் புதிய இரு IPL அணிகளின் வருகையும், அநேகமான வீரர்கள்,ஏன் தலைவர்களே இடம்மாறி இருப்பதுவும் இம்முறை IPLஐ ரசிக்க விடுவதில் கொஞ்சம் தயக்கத்தைத் தருகின்றன. ஓரிரு நாட்கள் பார்க்க சரியாகிவிடும்..


ஆனாலும் உலகக் கிண்ணத்தொடு ஓடித் திரிந்ததும் பறந்து திரிந்ததும் கிரிக்கெட் என்றாலே கொஞ்சம் தள்ளி இருக்கலாமோ என்ற உணர்வை ஒருபக்கம் தந்தாலும் IPL தரும் ஒரு வித பரபர, கிளு கிளு கவர்ச்சி எப்படியும் ஒட்ட வைத்துவிடும்..


பற்றியும் அதை விட முக்கியமான இலங்கை கிரிக்கெட் அணியின் அண்மைய நம்ப முடியாத குழப்பங்கள் பற்றியும் விளக்கமான பதிவொன்றை இந்த வார இறுதி நாட்களுக்குள் தர முயல்கிறேன்...




சில குறிப்புக்கள் - இந்தியா வென்றதால் உடன் பதிவிடவில்லை என்ற நண்பர்களின் ஆதங்கங்களுக்கும், இலங்கை தோற்றதனால் பதிவே தரமாட்டீர்களா என்றவர்களுக்கும் இந்தப் பதிவு பதில் அல்ல..
அந்தத் தோல்வியின் களைப்பு (கவலை அல்ல) தந்த அலுப்பும், பயண விடுமுறையின் காரணமாக பாக்கியிருந்த வேலைகளும் மேலும் சில குடும்பப் பளுக்களும் தான் இந்தப் பதிவையே மூன்று நாட்களாக இழுபறித்தன என்பதே அந்த நண்பர்களுக்கான பதில்.


வெற்றியும் தோல்வியும் வீரனுக்கே. :)


மற்றொரு முக்கிய குறிப்பு - இந்த இறுதிப் போட்டியில் இலங்கை பணம் வாங்கிக் கொண்டு தோற்றது.. வீரர்கள் பணத்துக்க் அடிமையாகி போட்டியை விட்டுக் கொடுத்தார்கள் என்றெல்லாம் பரவலாக வதந்திகள் பரவுகின்றன..
எலும்பில்லாத நாவுகள் எப்படியும் புரண்டு பேசும்..
ஆனால் இப்படியான பேச்சுக்கள் இந்தியாவின் வெற்றியின் மகத்துவத்தையும் கேள்விக்குறியாக்கி,கேவலப்படுத்திவிடும் என்பதையும் நாம் உணரவேண்டும்..


இம்முறை எந்த IPL அணிக்கு ஆதரவு என்று கேட்கும் நண்பர்களுக்கு......


கடந்த மூன்று முறையும் என் முதல் ஆதரவு சென்னை சூப்பர் கிங்க்ச்சுக்கே.. 
பஞ்சாபும் ராஜஸ்தானும் கொஞ்சம் பிடித்தே இருந்தன..


இம்முறை??? அடுத்த பதிவுக்கு முதல் ஊகியுங்களேன்...
சரியாக ஊகிப்போர் பெயர்கள் அடுத்த பதிவில் இடம்பெறும்...



April 02, 2011

மும்பாய் வண்கேடே இறுதியிலிருந்து..

எமது ஊடகவியலாளர் அறையினுள்ளே ஒரு அழகான தரைக் கோலம் 

இன்று மும்பாய் இறுதிப் போட்டிக்காக மகாராஷ்டிரா முழுவதும் அரச அலுவலகங்களில் விடுமுறை. ஆனால் கடைகள் சில தான் மூடியுள்ளன.'இந்தியா உலகக் கிண்ணம் வென்றால் நாடு முழுவதும் விடுமுறையோ?



மைதானத்தை சுற்றியுள்ள ஒன்றரை கிலோமீட்டர் தூரத்தில் வாகனங்கள் உள் நுழைய முடியாது.

பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகத் தீவிரம். இராணுவத் தாங்கிகள், விமான எதிர்ப்பு ஏவுகணைகள், தானியங்கித் துப்பாக்கி கொண்டு திரியும் விசேட ராணுவத்தினர் என்று அவசரகால நிலையிலிருந்த நம் நாட்டைப் பார்த்த ஞாபகம்.

மைதானத்துக்குள்ளே நுழைவதற்குள் எத்தனை கெடுபிடி? முதலில் பைகளைக் கொண்டு போக விடமாட்டோம் என்று ஹிந்தியில் இராணுவம்.ஊடகவியலாளர்கள் என்று சொன்னபிறகும் எங்கள் இருவரினதும் மடிக்கணினிகளை அனுமதிக்க மறுத்த காவல்துறை.
ஆங்கிலத்தில் பாதி எங்களுக்குத் தெரிந்த ஹிந்தியில் மீதியாக கஷ்டப்பட்டு அவர்களுக்குப் புரியச் செய்து வண்கேடே மைதானத்துக்குள் ஊடகவியலாளரான நாம் நுழையும் வாயிலான பல்கலைக்கழக வாயிலோடு நுழைந்தால் முன்னூறுக்கு மேற்பட்ட ஊடகவியலாளர்கள்.

கள நேரடித் தகவல்களுடன் நானும் விமலும் 

இலங்கையில் இருந்த திட்டமிட்ட போட்டிக்கான ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கும் நடைமுறை இங்கே இருக்கவில்லை. நீண்ட நேரம் காக்கவைத்து உள்ளே அனுப்பினர்கள்.

நுழைவாயில் பிரதேசம் 

நல்ல காலம் ICC  பெரிய அதிகாரி கொலின் ஜிப்சன் புண்ணியத்தில் அந்தக் காய்ந்த நேரத்தில் கொஞ்சம் குடிக்க பெப்சியும் தண்ணீரும் கிடைத்தன.
வரவேற்புக்கு இலங்கைக்குப் பிறகு சென்னை தான். மும்பாய், மொஹாலி எல்லாம் கடுப்பேற்றிய இடங்கள்.

இந்த கிரிக்கெட் சபைகளுடன் பார்க்கையில் இலங்கை ஆயிரம் மடங்கு அற்புதமான உபசாரத்தை வழங்கி இருந்தது.


நாணய சுழற்சி குழப்பமானது.. சங்கக்கார தலை என்று சொன்னது இந்தியத் தலைவருக்கு மாறிக் கேட்டதாம்.. போட்டித் தீர்ப்பாலருக்குக் கேட்கவே இல்லையாம்.
இரண்டாம் முறை இடம்பெற்ற நாணய சுழற்சியிலும் சங்கா வென்றார்.

இன்றுன் மட்டும் மும்பாய்க்கு வந்த விசேட விமான சேவைகள் பன்னிரெண்டாம்.
அதிலும் இன்றைய உள்ளூர் விமான சேவைக் கட்டணங்களை எல்லாம் கண் மண் தெரியாமல் உயர்த்தியுள்ளார்கள்.. இலங்கையில் எரிபொருள்களின் விலைகளை நேற்று உயர்த்தியது போல..

இலங்கை ரசிகர்களும் இருக்கிறார்கள் 

சச்சின், முரளி ஆகிய இருவரினது இறுதி உலகக் கிண்ணப் போட்டி என்பது பலருக்கும் செண்டிமெண்டைக் கிளறியுள்ளது.
சச்சின் சறுக்கி விட்டார்.

அவரது நூறாவது சதத்தை எதிர்பார்த்து வந்தோர்க்கு ஏமாற்றமே.

எங்கு பார்த்தாலும் மூவர்ணக் கொடிகள்..


மகேள தனது மூன்றாவது உலகக் கிண்ண சதத்தையும் இந்த உலகக் கிண்ணத் தொடரில் தன் இரண்டாவது சதத்தையும் பூர்த்தி செய்தார்.
சாகிர் கானின் பந்தில் சதத்துக்கான ஓட்டம் பெறத் தயாராகும் மஹேல

இதற்கு முதல் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் சதமடித்த ஐவரும் உலகக் கிண்ணத்தைத் தம் அணிக்கு வென்று கொடுத்துள்ளார்கள்.
(லோயிட், ரிச்சர்ட்ஸ், அரவிந்த டீ சில்வா, பொன்டிங், கில்கிரிஸ்ட்)

கமீரும் இன்னும் சொற்பவேளையில் சதம் பெற்றுவிடுவார் போல் தெரிகிறது. ஒரே உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இரு வீரர்கள் சதம் அடித்த வரலாறு இதுவரை இல்லை.

டில்ஷான் இந்த உலகக் கிண்ணத்தில் ஐந்நூறு ஓட்டங்களைப் பூர்த்தி செய்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
சச்சினால் அவரை முந்த முடியவில்லை. (482) 



சாகிர் கான் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்த ஷஹிட் அப்ரிடியை சமன் செய்தார்.

முரளிதரனுக்கு இன்னும் இருக்கும் சொற்ப ஓவர்களில் உலகக்கிண்ணங்களில் மொத்தமாகக் கூடிய விக்கெட்டுக்களை வீழ்த்திய மக்க்ராவின் சாதனையை சமப்படுத்த மூன்று விக்கெட்டுக்கள் தேவை.

மும்பாய் மைந்தன் பந்துவீசுகிறார் 

சச்சின் அண்மையில் உலகக் கிண்ணத்தில் இரண்டாயிரம் மொத்த ஓட்டங்களைப் பெற்ற ஒரே வீரரானார்.
இன்று சங்காவும் மஹேலவும் ஆயிரம் ஓட்டங்களை நெருங்கி வந்து மயிரிழையில் தவற விட்டனர்.
சங்கா -991 மஹேல - 975
அடுத்த உலகக் கிண்ணத்தில் பார்த்துக்கலாம்.

மஹேல சதம் 


ரிக்கி பொண்டிங்கின் அதிக உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாடிய சாதனையை (46) சச்சின் டெண்டுல்கரால் முறியடிக்க முடியாமலேயே போய் விட்டது.
சச்சினின் இன்றைய இறுதி அவரது 45வது போட்டி. 
இன்று முரளிதரனின் 40வது போட்டி.

இந்த இறுதிப் போட்டியைப் பார்க்க பல பிரபலங்கள், மிகப் பிரபலங்கள் எங்களுடன் வந்திருந்தார்கள் என்பது எமக்கும் பெருமை தானே..

இலங்கை ஜனாதிபதி, அவர் புதல்வர் நாமல் ராஜபக்ச, சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த், அமீர் கான், ராகுல் காந்தி, முன்னாள் வீரர்கள் ரொஷான் மகாநாம, அடம் கில்கிரிஸ்ட், இப்படிப் பலர்..
இவர்களில் நாம் இருந்த ஊடகவியாலளர் பகுதிக்கு அருகில் இருந்த நடிகர் பாரத்தை மட்டும் கண்டுகொண்டோம்.

கண்ணாடி சுவருக்கப்பால் சைகையால் பேசிக்கொண்டோம்.
இந்தியா சிறப்பாக செய்யும்போது தன்னை மறந்து எழுந்து ஆரவாரம் செய்வதும் சச்சின், சேவாகின் ஆட்டமிழப்பின்போது அழும் முகத்துடன் இருந்ததும் ஒரு தீவிர ரசிகராகக் காட்டியது.


இன்று ரசிகர்கள் பலவிதங்களில் பாவம்.. 
அவர்களால் கமேராக்களை உள்ளே கொண்டுவர முடியாமல் போன சோகம் அப்படியே தெரிந்தது. முடியுமானவரை தம் செல்பேசிகளைக் கமேராவாகப் பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள்.
கண்ணாடி சுவர்களோடு எம்முடன் மொழிகடந்து நட்பானவர்களுக்கு மின்னஞ்சல் வழியாக சில படங்களை அனுப்பி வைத்தோம்.

மஹேலவின் சதத்தை வாழ்த்தும் இந்திய ரசிகர்கள் 

முடியுமானவரை எடுத்த படங்களை என் Facebookஇல் பகிர்ந்துள்ளேன்..










உலகக் கிண்ண இறுதி - இந்தியா vs இலங்கை ஒரு இறுதிப் பார்வை


மும்பையில் இடம்பெறும் முக்கிய உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்காக போட்டிகளை நடத்தும் இரு நாடுகளும் எதிர்பார்த்தது போலவே (நானும் பலரும்)தெரிவாகி இருக்கின்றன.
விக்கிரமாதித்தனாக இருந்தாலும் நான் உலகக்கிண்ணம் ஆரம்பிக்க முன்னரே எதிர்வு கூறியது இப்போது நடந்துள்ளது.

இரு அணிகளும் மும்பாய்க்கு சென்றுள்ள நிலையில் நான் இரண்டாவது அரையிறுதி நடந்த மொஹாலிக்கு அருகில் உள்ள சண்டிகார் நகரில் இருந்து இந்தப் பதிவை இடுகிறேன்.
சண்டிகாரில் ஆரம்பித்து மும்பாய் வரை பதிவும் நீள்கிறது.
(கொழும்பு தவிர வெளியூர் ஒன்றில் இருந்து நான் இடும் முதலாவது வரலாற்று சிறப்புமிக்க பதிவு என்ற பெருமை பெரும் பதிவு இது)

நேற்று முன்தினப் போட்டி மொஹாலி மைதானத்திலிருந்து பார்த்த அனுபவம் ஒரு பரவசம்.

பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள்.. பல மிக முக்கிய பிரபலங்கள். அதை விட பதினைந்து மணி நேர இடைவிடாத, தூக்கமற்ற பயணத்தின் பின் கடுமையான பாதுகாப்புக் கெடுபிடிகளைத் தாண்டி உள்ளே நுழைந்து தமிழில் அங்கிருந்து வெற்றி மூலம் உலகம் முழுவதும் தகவல் கொடுத்த நானும் விமலும்..

இந்தியாவின் துடுப்பாட்டத் தடுமாற்றங்களின் போது மொஹாலியே கலங்கியதும், பின் பாகிஸ்தனிய விக்கெட்டுக்கள் சரிய சரிய  உயிர் பெற்று உற்சாகம் பெற்றதும் கண்கொள்ளாக் காட்சிகள்.
ஆனாலும் எனது கமெராக் கண்களுக்குள் இந்த அற்புதமான காட்சிகள் எவற்றையும் பிடித்துக்கொண்டு போக்கிஷமாக்கிக் கொள்ளும் வாய்ப்பை வழங்காத பாதுகாப்புக் கெடுபிடியாளர்களுக்கு தலையில் இடி விழ...

அரையிறுதியில் இந்தியா வென்று அதன் அமளிதுமளி அடங்க ஒரு நாளாகியது .. சண்டிகாரில். ஆனாலும் இந்தியாவுக்குத் தான் உலகக் கிண்ண வாய்ப்பு என்று அதிக நம்பிக்கை கொண்டுள்ளார்கள். (இலங்கை அணி மீது மதிப்புக் கலந்த பயம் இருந்தாலும்)
நேற்று நாம் சண்டிகார் நகரில் சுற்றித் திரிந்தபோது நாம் இலங்கையர் என்று அடையாளம் கண்டவர்கள் எம்மை இறுதிப் போட்டியில் சந்திக்கும் எதிரிகளாக நோக்காமல் சிநேகபூர்வமாக வரவேற்றமையும் சனத், முரளி, மாலிங்க, மஹேல பற்றி விசாரித்தமையும் முக்கியமானவை.


இந்தியா vs இலங்கை - இறுதிப் போட்டியின் சுவாரஸ்ய ஒற்றுமைகள்



இந்தியா, இலங்கை இரண்டு அணிகளுமே இறுதிப் போட்டிக்கு வரும் மூன்றாவது முறை இது.
இரு அணிகளும் இறுதிக்கு வந்த முதல் தடவை கிண்ணத்தைக் கைப்பற்றின. (இந்தியா - 1983, இலங்கை -1996)
அடுத்த முறை இரு அணிகளுமே ஆஸ்திரேலியாவிடம் தோற்றுப் போயின. (இந்தியா - 2003, இலங்கை -2007)
இப்போது போட்டிகளை நடத்தும் இரு அணிகளும் தங்கள் இரண்டாவது கிண்ணத்துக்காகக் களம இறங்குகின்றன.

போட்டிகளை நடத்தும் நாடோன்றாக இலங்கை உலகக் கிண்ணத்தை வென்றது.வேறு எந்த நாடும் செய்யாத ஒரு விடயம். இம்முறை இலங்கை இரண்டாவது தடவையாக அதை நிகழ்த்தும் வாய்ப்பு இருக்கிறது.
இதேவேளை இந்தியா ஒரு சரித்திர சாதனைக்குக் காத்திருக்கின்றது. எந்தவொரு நாடும் தன் சொந்த மைதானத்தில் உலகக் கிண்ணம் வென்றதில்லை.

அத்துடன் இந்த உலகக் கின்னத்தைத் தங்கள் இருபது வருட கிரிக்கெட் கதாநாயகன், இந்தியாவின் கிரிக்கெட் கடவுளுக்காக வெல்ல வேண்டிய கடப்பாட்டுடன் இந்தியா களம் காண்பது போலவே, தங்கள் இருபது வருட உலக சாதனையாளர், சுழல் பந்து வெற்றியாளர் முரளிதரனுக்காக இந்த உலகக் கிண்ணத்தை வென்று ஆகவேண்டிய கடப்பாடு இலங்கை அணிக்கு இருக்கிறது.

ஏற்கெனவே நியூ சீலாந்துடனான இலங்கை அணியின் அரையிறுதிப் போட்டியுடன் இலங்கை மண்ணில் தனது இறுதி ஒரு நாள் போட்டியை விளையாடி சொந்த நாட்டு ரசிகர்களுக்கு விடையளித்துள்ள முரளி மும்பாயில் உலகக் கிண்ண வெற்றியுடன் ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவாரா என்பதையும், தனது கிரிக்கெட் வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள சச்சின் டெண்டுல்கர் தனது இறுதி உலகக் கிண்ணப் போட்டியை வெற்றிகரமாக முடித்துக்கொள்வாரா என்பதையும் ஆவலுடன் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளார்கள்.

கடந்த உலகக் கினத்திளிருந்து இந்த உலகக் கிண்ணம் வரை தமக்குள்ள அடிக்கடி மோதிக் கொண்ட அணிகள் இவை தான். 34 ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் இதுவரை மோதியிருக்கின்றன. அண்மைக்காலத்தில் இவை எப்போது சந்தித்தாலும் 'அட மறுபடி இவர்களா? ' என சலித்துக் கொட்டாவி விடும் எங்களுக்கு இந்த இறுதிப் போட்டியில் இவை சந்திப்பதானது பெரும் பரபரப்பையும் விறுவிறுப்பான போட்டியையும் தரும் என்பதில் சந்தேகம் இல்லை.
காரணம் கடந்த நான்கு வருடகாலத்தில் தொடர்ச்சியாகவே திறமையாகவும் வெற்றியின் தாகத்தோடும் விளையாடிய இரு அணிகள் இவை தான்.

உலகக் கிண்ணத்தில் இதுவரை ஏழு தடவைகள் இலங்கையும்ஜ் இந்தியாவும் மோதியுள்ளன.. இதில் நான்கு தடவைகள் இலங்கை வென்றுள்ளது .(79, 96 முதல் சுற்று + அரையிறுதி , 2007)
இரண்டு தடவைகள் இந்தியா.(99, 2003)
92ஆம் ஆண்டு போட்டி மழையினால் கழுவப்பட்டது.

இந்த முறை உலகக் கிண்ணப் போட்டிகளிலும் இவ்விரு அணிகளின் பெறுபேறுகளும் ஒரே மாதிரியாக இருக்கின்றன.

முதல் சுற்றில் இவ்விரு அணிகளும் தத்தம் பிரிவில் முதலிடம் பெறும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தன.
அந்தந்தப் பிரிவுகளில் ஆதிக்கம் செலுத்திய தென் ஆபிரிக்காவிடமும், பாகிஸ்தானிடமும் தோற்று ரசிகர்களை ஏமாற்றின.
இலங்கை ஆஸ்திரேலியாவுடனான போட்டியை மழை காரணமாகக் கழுவிக் கொள்ள, இந்தியா அதிர்ச்சியாக இங்கிலாந்தோடு சமநிலை முடிவைப் பெற்றது.
இரண்டும் தத்தம் கால் இறுதிகளில் ஆஷஸ் எதிரிகளை வெளியே அனுப்பின.

இரண்டு அணிகளுமே தலா ஒவ்வொரு வேகப் பந்துவீச்சாளரில் முழு நம்பிக்கையையும் சுழல் பந்துவீச்சாளரில் தங்கியிருப்பையும் கொண்டுள்ளன.
இரு அணிகளிலும் நான்கு துடுப்பாட்ட வீரர்கள் தான் தொடர்ந்து திறமை காட்டி வந்துள்ளனர்.
இலங்கை - தில்ஷான், தரங்க, சங்கக்கார, மஹேல
இந்தியா - டெண்டுல்கர், சேவாக், கம்பீர், யுவராஜ்

முன்னைய எதிர்வுகூறல் பதிவில் சொன்னது போல முதல் தடவையாக விக்கெட் காப்பாளர் தலைமை தாங்கி இம்முறை தன் அணிக்கு உலகக் கிண்ணம் வென்று தரப் போகிறார் - யார் வென்றாலும்.

---------------

மும்பாய் வன்கேடே ஆடுகளம் எல்லோருக்கும் எல்லாம் தரக்கூடியது என்று சொல்கிறார் ஆடுகளப் பராமரிப்பாளர் சுதிர் நாய்க். உண்மை தான்..
இறுதியாக மும்பாயில் நடந்த இலங்கை - நியூ ஸீலாந்து முதல் சுற்றுப் போட்டியில் இது தெளிவாகத் தெரிந்தது.
சங்கா சதம்.

வேகப் பந்துவீச்சாளர் சௌதீ 3 விக்கெட்டுக்கள்.
பின்னர் முரளியின் சுழலில் வீழ்ந்த நான்கு விக்கெட்டுக்கள்.
ஆனாலும் நாணய சுழற்சி கொஞ்சம் ஆதிக்கம் செலுத்தும் என்றே தெரிகிறது.

சச்சினின் சொந்த ஊரில் சங்காவின் அணி சரித்திரம் படைக்குமா எனப் பார்க்கலாம்.

இரண்டு அணிகளும் தங்கள் சமபல அணிகளைத் தெரிவு செய்யும் எனத் தோன்றுகிறது.
இரு வேகம் + இரு சுழல் + பகுதி நேரப் பந்துவீச்சாளர்கள்.
சகல வீரர்களும் சம பலம் போல் தெரிந்தாலும், மத்திய வரிசையில் இலங்கை அணி தடுமாறிக் கொண்டிருப்பது இந்தியாவுக்கு அதிக வாய்ப்புக்களை வழங்குகிறது.
அரங்கில் நிறைந்து வழியப் போகிற ரசிகர்களின் ஏக ஆதரவு இந்தியாவுக்கு மேலதிக பலத்தை வழங்குமா அல்லது அழுத்தத்தைக் கொடுக்குமா என்பது முப்பது மில்லியன் அமெரிக்கன் டொலர் கேள்வி.(உலகக் கிண்ணப் பரிசுத் தொகை)

அணிகளைப் பற்றி அலசல்
இந்தியா பாகிஸ்தானை வென்ற அதே அணியில் ஒரு மாற்றத்தை செய்வது உறுதி. நெஹ்ரா விரலில் காயம் என்று செய்திகள் வந்துள்ள நிலையில் அஷ்வின் அணிக்குள் வருவது உறுதி. நெஹ்ரா முழு ஆரோக்கியத்துடன் இருந்திருந்தாலும் இந்த மாற்றத்தை இந்தியா செய்திருக்கும் என்றே நம்பலாம்.
தென் ஆபிரிக்காவுடன் சொதப்பியதன் பின்னர் பாகிஸ்தானுடன் நேஹ்ராவின் துல்லியப் பந்துவீச்சைக் கண்டவர்கள் வாயடைத்திருப்பார்கள்.

இலங்கை அணி தனது அணித தெரிவில் கொஞ்சம் தடுமாறுவது போல் தெரிகிறது.
மத்திய வரிசைக் குழப்பம் என்று வெளியே நாம் யோசிக்கும் அளவுக்கு அணிக்குள்ளே அந்தளவு குழப்பம் இல்லை எனக் காண்கிறேன்.
கபுகெதரவை அணிக்குள் சாமர் சில்வாவுக்குப் பதில் கொண்டுவருவார்கள் ன்று ஒரு கதை இலங்கை முகாமுக்குள் இருந்து தெரியவந்தது.

ஆனால் அஞ்சேலோ மத்தியூசின் காயம்+உபாதை காரணமாக அவருக்குப் பதிலாக சுராஜ் ரண்டீவ் விளையாடுவதை ICC இன்று உறுதிப்படுத்தியுள்ளது.

இது இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் இம்முறை வீரர்களை காயம் காரணமாக மாற்றும் விதிகளைக் கொஞ்சம் தளர்த்தியதனால் பயன்படுத்திய அதே உத்தியை இலங்கை இந்த இறுதிப் போட்டிக்குப் பயன்படுத்துகிறது.
ஆஸ்திரேலியா போல்லின்ஜர் காயம் காரணமாக வெளியேறியதை அடுத்து துடுப்பாட்ட வீரர் ஹசியை அணிக்குள் கொண்டு வந்ததும் நேரடியாக அவரைப் பதினோருவருள் ஒருவராகக் கொண்டு வந்ததும் இங்கிலாந்து கெவின் பீட்டர்சனுக்குப் பதிலாக ஒயின் மோர்கனை அணிக்குள் கொண்டு வந்து நேரடியாக இறுதி அணிக்குள் இணைத்ததைப் போலவே இந்தியாவில் வீழ்த்த இலங்கை வகுத்த வியூகம் தான் சுராஜ் ரண்டீவ் + சமிந்த வாஸ் ஆகியோரைப் பக்கபலமாகக் கொண்டு வந்தமை.

முரளிதரன்,மத்தியூசின் காயங்கள் காரணமாக இவர்கள் தயார்நிலை மேலதிக வீரர்களாக வியாழன் மாலை மும்பாய்க்கு வந்து சேர்ந்துள்ளார்கள்.ஆனாலும் மத்தியூஸ் மட்டுமே காயம் காரணமாக விளையாட முடியாத நிலைக்கு ஆளாகியுள்ளார். இதனால் யின் தொழிநுட்பக் குழுவானது மத்தியூசுக்குப் பதிலாக ரண்டீவைப் பிரதியிட அனுமதி வழங்கியுள்ளது.

எனவே இந்திய அணிக்கெதிராக சிறப்பாகப் பிரகாசித்துள்ள ரண்டீவையும்   திசர பெரேராவையும் ஒரே நேரத்தில் விளையாடும் வாய்ப்பை இலங்கை பெற்றுள்ளது. ஆனால் எவ்வளவு தான் உபாதை இருந்தாலும் முரளி விளையாடுவது இலங்கை அணித்தரப்பால் உறுதிப் படுத்தப்பட்டுள்ளது. எனவே சச்சினை அடிக்கடி வீழ்த்திய சமிந்த வாசை இலங்கை அணியால் உள்ளே கொண்டுவர எடுத்த முயற்சி பலன் தரவில்லை.


மைதானத்துக்குள் நுழைந்தவுடன் பயிற்சியில் ஈடுபடும் வீரர்களினைப் பார்த்தால் விளையாடும் வீரர்களை அறிந்துகொள்ளலாம்.
முரளிதரன் முழு ஆரோக்கியத்துடன் இருக்கிறார்.
பெரேரா, குலசேகர இருவருமே பந்துவீசுகிறார்கள்.
ரந்தீவின் பந்துகள் எகிருகின்றன.
வாஸ் சந்தோஷத்துடன் பயிற்சியில் ஈடுபடுகிறார்.

மறுபக்கம் அஷ்வினும் யூசுப் பதானும் பந்துகளை அதிகமாக வீசுகிறார்கள். இருவருக்கும் இடையில் தெரிவுப் போட்டியோ? என்று யோசித்தால் அஷ்வின் இன்றும் அணியில் இல்லை. மாறாக ஸ்ரீசாந்தையும் அதிகளவில் பந்துகளை வீசுமாறு தோனி சொல்வதையும் கண்டேன். நேஹ்ராவுக்குப் பதிலாக ஸ்ரீசாந்தை ஆச்சரியமூட்ட அணியில் கொண்டுவரக்கூடும் தோனி என்று நேற்று இந்திய உடகங்கள் சொன்னது உண்மையாகியுள்ளது.

இந்தப் பதிவு சண்டிகாரில் ஆரம்பித்து, மும்பாய் ஹோட்டலில் தொடர்ந்து இப்போது வண்கேடே மைதானத்தில் முடிகிறது.
எனவே நேற்று, இன்று குழப்பங்கள் இருந்தால் மன்னியுங்கள் மக்கள்ஸ்..

எனது எதிர்வுகூறல்கள் இந்த இறுதிப் போட்டிக்கு வேண்டாமே என நினைக்கிறேன்..

சில படங்களுடனான சிறு சிறு பதிவுகள் தொடரும்.

நாணய சுழற்சி முடிந்து இலங்கை அணித் தலைவர் சங்கக்கார வெற்றியீட்டி முதலில் துடுப்பெடுத்தாடுகிறது இலங்கை அணி.
மும்பாய் ஆடுகளத்தின் முடிவுகள் நாணய சுழற்சியிலும் தங்கி இருக்கின்றன.

இங்கே இரண்டாவதாகத் துடுப்பெடுத்தாடி ஒரு அணி வெற்றி பெற்ற பெரிய ஓட்ட எண்ணிக்கை1997 இல் இலங்கை இந்தியாவை வென்ற 225 .

அதே போல் இவ்விரு அணிகளும் சந்தித்த இறுதி நான்கு உலகக் கிண்ணப் போட்டிகளிலும் முதலில் துடுப்பெடுத்தாடிய அணியே வெற்றியீட்டி உள்ளது.

படங்களை முடியும் வரை பதிவாக ஏற்றுகிறேன்..



ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner