February 27, 2010

சச்சின் 200 - சாதனை மேல் சாதனை



சச்சின் டெண்டுல்கரின் இரட்டை சதம்..

இந்த வாரம் முழுவதும் இது பற்றிப் பேசாதோர் கிடையாது.. பதிவிடாதோர் கிடையாது..
உடல் நிலை மோசமாக இருந்ததாலும், தொண்டை எரிச்சல் பாடாய்ப் படுத்தியதாலும் இன்று வரை சச்சினின் சாதனை பற்றி இன்றுவரை என்னால் பதிவிட முடியாமல் இருந்தது.

பேசவே இயலாத (அழைப்பெடுத்து அலுத்துப் போய்த் திட்டித் தீர்த்துள்ள நண்பர்களே காரணம் என் தொண்டை நோவு தான்) இரண்டாவது நாள் ஓய்வில் இன்று இதைப் பதிவிட முடிந்துள்ளது.

பலர் வாழ்த்தி விட்டார்கள்,இன்னும் பலர் அதன் அருமை பெருமைகளைப் பட்டியலிட்டு விட்டார்கள்..
இன்னும் சிலர் அரசியலும் பேசிவிட்டார்கள்..
இவ்வரிய சாதனை பற்றி இன்னொரு கோணத்திலே சில கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள இந்தப்பதிவு.

39 ஆண்டுகளாக (2961 போட்டிகள்)ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் எந்தவொரு வீரராலும் எட்டப்பட முடியாதவொரு சாதனையை சச்சின் டெண்டுல்கர் க்வாலியர் மைதானத்தில் தன வசப்படுத்தினார்.
அத்துடன் இதை எட்டியதன் மூலம் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் தனிநபராக ஒரு வீரர் பெற்ற அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையையும் சச்சின் தனதாக்கியுள்ளார்.

கடந்த ஒரு வருடத்துக்கும் குறைவான காலப்பகுதியில் சச்சின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளின் எட்ட முடியாத எல்லையாகக் கருதப்பட்ட இரட்டை சதத்தை சச்சின் டெண்டுல்கர் நெருங்கிய மூன்றாவது சந்தர்ப்பம் இது.
(நியூ சீலாந்துக்கு எதிராக கிரைச்ட்சேர்ச்சில் 163 இல் வைத்து உபாதை காரணமாக வெளியேறினார், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஹைதராபாத்தில் வைத்து 175 இல் ஆட்டமிழந்தார்)

இப்போது சச்சின் சர்வதேசப் போட்டிகளில் மற்றொரு அரிய சாதனையை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறார்.. சர்வதேசப் போட்டிகளில் சதங்களில் சதம்.இதுவரை டெஸ்ட் & ஒரு நாள் போட்டிகளில் மொத்தமாக 93 சாதனைகளைப் பெற்றுள்ளார்.இந்த வயதிலும் இவற்றுள் கடைசியாகப் பெற்ற 10 சதங்களும் கடந்த ஓராண்டு காலப்பகுதியில் விளையாடிய 34 இன்னிங்க்சில் பெற்றவை.
இந்த சிங்கத்தையா ஓய்வு பெறவேண்டும் என்று பலர் ஓலமிட்டார்கள் என வேடிக்கையாக இருக்கிறது..

2007 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்துக்குப் பிறகான இந்த ஆண்டுகளில் தொடர்ச்சியாக ஓட்டங்கள் குவித்துள்ள ஒரே ஒரு வீரராக சச்சின் டெண்டுல்கர் என்று சொன்னால் கூடத் தவறில்லைப் போல் தெரிகிறது..

இவற்றைக் கொஞ்சம் அவதானியுங்கள்..

31 டெஸ்ட் போட்டிகளில் 12 சதங்களுடன் 2779 ஓட்டங்கள். சராசரி 59.12
57 ஓர்நாள் சர்வதேசப் போட்டிகளில் 2751 ஓட்டங்கள்.சராசரி 51.2.
54 டெஸ்ட் இன்னிங்க்சில் 23 இன்னிங்க்சில் அவர் குறைந்தது 50 ஓட்டங்களாவது பெற்றுள்ளார்.
54 ஓர்நாள் இன்னிங்க்சில் 21 தடவை.

2007 உலகக் கிண்ணத்துக்குப் பிறகு சச்சினை விட அதிக டெஸ்ட் போட்டிகளில் பலர் விளையாடி இருந்தாலும் சச்சினை விட அதிக டெஸ்ட் சதங்களை யாரும் பெறவில்லை.
இலங்கையின் மஹேல ஜெயவர்த்தன மட்டுமே சச்சினை விட அதிகம் டெஸ்ட் ஓட்டங்கள் பெற்றவர்.
இதே காலகட்டத்தில் இந்தியாவின் தோனியும்,யுவராஜ் சிங்கும் மட்டுமே சச்சினை விட அதிக ஒரு நாள் ஓடங்கள் பெற்றவர்கள்.
இத்தனைக்கும் தோனியும் யுவராஜும் முறையே 92 மற்றும் 84 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி இருக்க, சச்சின் விளையாடியது வெறும் 58 போட்டிகள் மட்டுமே.

கௌதம் கம்பீரும் ரிக்கி பொண்டிங்கும் மாத்திரமே இந்தக் காலகட்டத்தில் சச்சினை விட அதிக ஒரு நாள் சதங்கள் பெற்றவர்கள்.

2007 உலகக் கிண்ணப்போட்டிகளுக்கு முன்பதாக தன கிரிக்கெட் வாழ்க்கையில் சிறு சரிவைக் கண்டிருந்த, டெனிஸ் எல்போ பிரச்சினையால் கிரிக்கெட் வாழ்கையே முடிந்துவிடுமோ என்ற நிலையிலிருந்த சச்சின் மீண்டும் எடுத்த விஸ்வரூபம் தான் என்னைப் பொறுத்தவரை சச்சினின் மிக சிறந்த கிரிக்கெட் காலகட்டம்.
எனவே அதிகூடிய சதங்களைப் பெற்ற ஒருவரையே அதிகூடிய ஓட்டப் பெறுபேற்று சாதனை சென்று சேர்ந்திருப்பது மிகப் பொருத்தமானதே.. வேறு யாராவது சயீத் அன்வரின், சார்ல்ஸ் கோவேன்றியின் சாதனையை முரியடித்திருந்தால் அது அவ்வளவு பொருத்தமாகத் தோன்றியிராது.

அன்வரும் இதையே ஒத்துக் கொண்டுள்ளார். எனக்கும் சிறுவயதிலிருந்து அப்போது ரிச்சர்ட்சுக்கு சொந்தமான சாதனையை சச்சின்,சனத் ஜெயசூரிய அல்லது ஹெய்டன்,லாரா உடைப்பதே தகும் எனத் தோன்றி வந்துள்ளது.குருட்டு அதிர்ஷ்டத்தில் ஒரு நாள் கிடைக்கும் வாய்ப்பில் யாரும் ஒரு சாதனையைப் படைப்பதை கிரிக்கெட்டை ஆழ்ந்து நேசிக்கும் மனம் ஏற்றுக் கொள்வதில்லை.

அன்றைய இரட்டை சத ஆட்டம், ஒரு நாள் கிரிக்கெட்டில் ஒரு அற்புதமான விரிவுரை&விருந்து..

பொறுமை,ஆளுமை,அதிரடி,அசத்தல்,அடக்கி ஆளல்,அடங்கிப் போதல் என்று அனைத்தையும் 37 வயதான அந்த கிரிக்கெட் சிங்கத்திடம் பார்த்தேன்..
இருபது வருடங்களாக ஓயாமல் கிரிக்கெட் விளையாடி வந்தாலும் சலிக்காத,கலைக்காத கிரிக்கெட் தாகம் தான் சச்சினை இன்னும் சாதனை மேல் சாதனை படைக்க வைத்துக் கொண்டுள்ளது.

உலகின் மிக சிறந்த வேகப்பந்து வீச்சாளராகக் கருதப்படும் டேல் ஸ்டேய்னை அடித்து நொறுக்கி ஒன்றுமில்லாமல் செய்ததாகட்டும், கார்த்திக்,பதான்,டோனி அதிரடியாட்டம் ஆடும் வேளையில் புன்முறுவலோடு அவர்களை ஆதிக்கம் செலுத்தவிட்டு தான் அடங்கிப் போனதிலாகட்டும்,
சின்னப் பையன் போல் பந்தை நோக்கித் துள்ளிவந்து ஆறு ஓட்டங்கலாகப் படையல் போட்டதாகட்டும், நின்று கொண்டே நிதானமாக கவர் டிரைவ், ஸ்குயார் டிரைவ், ஒன் டிரைவ் என்று கிரிக்கெட் பாடங்கள் நடத்தியதாக இருக்கட்டும்..
சச்சின் மீண்டும் காட்டிய விஷயம் - சச்சின் - கிரிக்கெட்டின் கடவுள்.

சச்சின் டெண்டுல்கரை உங்களுக்குப் பிடிக்குதோ,பிடிக்கவில்லையோ அனைவரும் இதை ஏற்றே ஆகவேண்டும்.

இவ்வாறான நீண்ட இன்னிங்ஸ்களை ஆடுவோர், குறிப்பாக ஒருநாள் போட்டிகளில் களைப்படைந்து தசைப்பிடிப்பு போன்ற உபாதைகளுக்கு இலக்காகி தமக்காக இன்னொருவரை வைத்து ஓடியே ஓட்டங்கள் எடுப்பதைப் பார்த்த எமக்கு 37 வயதிலும் சளைக்காமல் ஐம்பது ஓவர்களும் ஓடி ஓடியே ஓட்டங்கள் பெற்ற சச்சின் ஆச்சரியத்தின் சின்னம் தான்.

சனத் நெதர்லாந்து அணிக்கெதிராக அடித்து நொறுக்கியிருந்த 24 நான்கு ஓட்டங்கள் என்ற சாதனையும் சச்சினினால் இந்த க்வாலியர் போட்டியில் சச்சினினால் முந்தப்பட்டது.
இதன் மூலம் ஒருநாள் போட்டியொன்றில் பவுண்டரிகளில் சதமடித்தவர் சச்சின் மட்டுமே ஆகிறார்.

சச்சின் கடைசி பத்து ஓட்டங்களையும் பெறுவதற்கு பத்து பந்துகளை எடுத்துக் கொண்டார்.
அதுபோல இந்தியாவுக்கு மேலதிகமாக,வேகமாக ஓட்டங்கள் தேவைப்பட்டதால் தோனியும் கடைசி நேரத்தில் அதிக பந்துகளைத் தானே எடுத்து அதிரடி நிகழ்த்தி இருந்தார்.

இல்லாவிட்டால் அவர் சந்தித்த 147 பந்துகளில் பெற்ற 200 ஓட்டங்களை விட இன்னும் அதிகப்படியான ஓட்டங்கள் பெற்று இந்த மைல்கல்லை இன்னும் கொஞ்சம் அப்பால் நகர்த்தி இருப்பார்.

தோனி அதிகம் பந்துகளை இறுதி நேரத்தில் சச்சினுக்கு வாய்ப்பளிக்காமல் இருந்தது குறித்து அதிக விமர்சனங்கள் எழுந்துள்ளன. எனக்கும் கூடப் பார்த்துக் கொண்டிருந்தபோது தோனி கையில் கிடைத்தால் சாத்தவேண்டும் போல அவ்வளவு கோபம் வந்தது.எனினும் தலைவராகவும் சக வீரராகவும் தோனி செய்தது சரியே எனத் தோன்றுகிறது.

காரணம் தென் ஆபிரிக்கா மிக ஆபத்தான அணி.எந்தவொரு இலக்கையும் அனாயசமாக துரத்தியடிக்கக்கூடிய வல்லமையுள்ளது. அதற்கெதிராக எத்தனை ஓட்டங்கள் பெறமுடியுமோ அத்தனை ஓட்டங்கள் பெற்றாக வேண்டும்.
அடுத்து, சச்சின் களைத்துப் போயிருந்தார்.அவரை அதிகமாக அதிரடியாட்டத்துக்கு தூண்டி அழுத்தத்துக்கு உட்படுத்த முடியாது.
எத்தனையோ வீரர்கள் முயன்று முடியாமலே இருந்த முடிவிலி சாதனையொன்று சச்சினினால் எட்டப்பட்டுள்ளது.
எனினும் இந்த சாதனையை இவரை விட சிறந்தவீரர் ஒருவர் எட்ட முடியும் என நான் நினைக்கவில்லை.அதுவும் சச்சின் தனது கிரிக்கெட் வாழ்க்கையின் உச்சக்கட்டத்தில் இதை எட்டியிருப்பதும் பல விமர்சகர்களை வாய்மூட வைத்திருக்கும்.இன்னும் சக வீரர்களுக்கும்,பல இளைய வீரர்களுக்கும் உற்சாகத்தை வழங்கி இருக்கும்.

கவாஸ்கர் சொன்னது போல சச்சின் இன்னொரு சாதனையைத் தான் ஓய்வு பெற முதல் குறிவைக்க வேண்டும்.. இதுவரை சச்சின் பெறாத டெஸ்ட் முச்சதம்.

கிரிக்கெட் ரசிகர்களாக நாமெல்லாரும் பெருமையடையக் கூடிய காலகட்டம் இதுவென நினைக்கிறேன்.

இனிவரும் எந்தவொரு காலகட்டத்திலும் எந்தவொரு வீரரும் எட்ட முடியாத (என்னைப் பொறுத்தவரை முடியவே முடியாத) சாதனைகளைப் படைத்த இருவர் (சச்சின் டெண்டுல்கர்& முத்தையா முரளிதரன்) விளையாடும் காலத்தில் நாம் இருக்கிறோம்.

முரளியின் டெஸ்ட் சாதனைகளையும், சச்சினின் ஒரு நாள் சாதனைகளையும் இன்னொருவர் எதிர்காலத்தில் முறியடிப்பது இயலாதென்றே நான் உறுதியாக நினைக்கிறேன்.
இறுதியாக, லாராவின் இறுதி வருடங்கள் எவ்வாறு லாராவுக்கு ஓட்டங்கள் மழையாகப் பொழிந்ததோ அவ்வாறே சச்சினுக்கும் இந்த நான்கு வருடங்கள் அமைந்திருக்கின்றன. ஆனாலும் சச்சின் டெண்டுல்கர் இன்னும் இரு வருடங்களாவது விளையாடுவார் என்றே தோன்றுகிறது.

இன்னுமொரு விஷயம் சொல்லியே ஆகவேண்டும்...
அந்த இரட்டை சத சாதனையை இந்திய மக்களுக்கு சமர்ப்பித்தது சாதரணமான விடயம் என்று சொல்லலாம்..ஆனால் இந்திய அணியின் சமீப கால தொடர்ச்சியான வெற்றிகளுக்குக்குக் காரணகர்த்தா என பயிற்சியாளர் கரி கேர்ஷ்டனுக்கு அதை சமர்ப்பித்தது பெருந்தன்மை.. கேர்ச்டனும் இந்த ஒரு நாள் இரட்டை சத வாய்ப்பை சொற்பத்தில் தவறவிட்டவர் என்பது குறிப்பிடத் தக்கது.(UAE அணிக்கெதிராக 96 உலகக் கிண்ணத்தில்)

அடுத்தநாள் நாளேடுகளில் சச்சின் 200௦௦


படங்கள் - cricinfo

சச்சின் சிங்கமே, இன்னும் சில ஆண்டுகள் கிரிக்கெட்டில் சாதனை வயல்களில் அறுவடை நடத்து.. உன் இளமை தானே தெரிகிறதே.. இனியும் யாராவது ஓய்வு பெற சொல்லி சொல்வார்கள்?

சச்சினின் அரிய புகைப்படத் தொகுப்புகள்




சச்சின் பற்றிய எனது முன்னைய பதிவுகள்








23 comments:

Unknown said...

Yes.....!
Sachin Is Best

Bavan said...

உங்கள் பதிவைத்தான் எதிர்பார்த்திருந்தேன்.. என்னடா இன்னும் காணலயே என்று..;)

//39 ஆண்டுகளாக (2961 போட்டிகள்)ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் எந்தவொரு வீரராலும் எட்டப்பட முடியாதவொரு சாதனையை சச்சின் டெண்டுல்கர் க்வாலியர் மைதானத்தில் தன வசப்படுத்தினார்//

அட இதுவரை 2961 போட்டிதான் விளையாடி இருக்காங்களா...

// சர்வதேசப் போட்டிகளில் சதங்களில் சதம்.இதுவரை டெஸ்ட் & ஒரு நாள் போட்டிகளில் மொத்தமாக 93 சாதனைகளைப் பெற்றுள்ளார்.//

விட்டா மனுசன் சாதனைகளிலயும் செஞ்சரி போட்டுரும்..ஹிஹி

//சனத் நெதர்லாந்து அணிக்கெதிராக அடித்து நொறுக்கியிருந்த 24 நான்கு ஓட்டங்கள் என்ற சாதனையும் சச்சினினால் இந்த க்வாலியர் போட்டியில் சச்சினினால் முந்தப்பட்டது.//

வட போச்சே.. பரவால்ல நம்ம சச்சின்தானே பரவால்ல...;)

//காரணம் தென் ஆபிரிக்கா மிக ஆபத்தான அணி.எந்தவொரு இலக்கையும் அனாயசமாக துரத்தியடிக்கக்கூடிய வல்லமையுள்ளது//

அதே ஆனால் கிப்ஸ் தேவையில்லாத சொட்களைவிளையாடி ஆட்டிழந்ததும், சிமித் இல்லாததும்தான் கவலை தென்னாபிக்கா இவர்கள் இருவரும் இருந்தால் ஒரு 350+ ஓட்டங்களை எட்டியிருக்கும்..

அம்லா போட்டுத்தாக்கிய பவுண்டரிகளைப்பார்த்து எங்கே தென்னாபிரிக்கா திரும்பவும் விரட்டியடித்துவிடுமோ என்று பார்த்தேன்..;)

ஆனால் இருபது இருபது கிறிக்கட்டின் வருகையும், தட்டையான மைதானங்களும் எதிர்காலத்தில் பலர் 200ஓட்டங்களை பெறுவார்களோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது,

சச்சின் எனும் சரித்திரத்தின் சாதனையை இருபது இருபது கெடுக்காமல் இருந்தால் சரி...

பல இடங்களில் சச்சினுக்கு வாழ்த்தியிருந்தாலும் மீண்டும் சரித்திர நாயகனுக்கு தலைவணங்குகிறேன்...

//இனியும் யாராவது ஓய்வு பெற சொல்லி சொல்வார்கள்?//

சொன்னவன் உசிரோட இருப்பான்னு நினைக்கிறீங்க..ஹிஹி

வந்தியத்தேவன் said...

முதலில் சச்சினுக்கு வாழ்த்துக்கள். வாழ்க்கையில் நான் பார்க்கத் தவறவிட்ட போட்டிகளில் இதுவும் ஒன்று கிரிக்கின்போவின் வசதியால் ஓரளவு பார்க்க அல்ல வாசிக்க முடிந்தது.

உடனடியாக உங்களிடம் இருந்து பதிவு எதிர்பார்த்தேன் ஹிஹிஹி.

சச்சினின் அதிரடியை யூடூயூப்பில் ஓரளவு பார்த்தேன் வழக்கம் போல் உங்கள் விஜயகாந்த் பாணியிலான உங்கள் புள்ளிவிபரங்கள் தூள்.

இங்கிலாந்துப் பத்திரிகைகளில் ஒரு மூலையில் இந்த சரித்திரச் செய்தியைப் பிரசுரித்தார்கள்.

கன்கொன் || Kangon said...

அன்று அடித்த அடி... அடியா அது....
கொலைவெறி...

அருமையாக ஆடினார்....
எனது அதிர்ஷ்ரத்திற்கு அதை நான் முழுவதுமாகப் பார்த்தேன்.

சாதனைகளின் நாயகன் தான் சச்சின்.

நானும் நீங்கள் சொன்ன முரளி, சச்சின் ஆதிக்க ஆண்டுகளில் வாழ்வதைப் பெருமையாக நினைக்கிறேன்.

நீங்கள் சொல்வது சரிதான், சச்சினின் சாதனைகளை முறியடிப்பது மிகக் கடினம், இன்றைய காலகட்டத்தில் ஒருவர் 10 ஆண்டுகள் தொடர்ந்து விளையாடுவதே பெரிய விடயமாகிவருகிறது...

சச்சினுக்கு வாழ்த்துக்கள்... :)

Bavan said...

அண்ணே சச்சினுடன் கிறிக்கட் உலகுக்கு வந்த வினோத் கம்ளி(பெயர் சரிதானே), அவர் இன்று யோசிப்பார் நான் அண்டைக்கு ஒழுங்கா விளையாடி டீம்ல இருந்திருக்கலாமட் எண்டு..;)

கன்கொன் || Kangon said...

//இங்கிலாந்துப் பத்திரிகைகளில் ஒரு மூலையில் இந்த சரித்திரச் செய்தியைப் பிரசுரித்தார்கள்.//

:P

அண்ணா,
டோணி கடைசி நேரத்தில விளாசியது தொடர்பாக,
அவரது திட்டம் சரியென்றாலும் அதை இன்னும் சிறப்பாக நடைமுறைப்படுத்தியிருக்கலாம் என்று நினைக்கிறேன்.
கடைசிப் பந்து பரிமாற்றத்தில் வாய்ப்பு வழங்கியதை விட சிறிது முன்னுக்கே வழங்கிவிட்டு பின்னர் தான் அடித்து நொருக்கியிருக்கலாம்.
எனக்கு ஞாபகம் உள்ளவரை, ஒரு பந்துப் பரிமாற்றத்தில் டோணி கடைசிப் பந்தில் ஓர் ஓட்டம் எடுத்தார், அதைத் தவிர்த்து சச்சின் 200 ஐத் தாண்டிய பின்னர் தான் விளாசியிருக்கலாம் என்று நினைக்கிறேன்.

மற்றையது மின்னொளியில் இந்தளவு பெரிய ஓட்ட எண்ணிக்கையை கடப்பது அவ்வளவு சுலபமாக இருக்காது என்று நம்புகிறேன், அதுவும் இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் மின்னொளி என்பது இரண்டாவதாகத் துடுப்பெடுத்தாடும் அணிக்கு பெரிய நெருக்கடியைக் கொடுப்பது வழக்கம்.

EKSAAR said...

சச்சின் வெளிநாட்டு மைதானம் ஒன்றில் இச்சாதனையை நிகழ்த்தியிருந்தால் பாராட்டத்தான் வேண்டும்,

ஆனால் இந்திய ஆடுகளங்களில் என்பதுதான் உதைக்கிறது.

சச்சினின் குணமான தனக்கான ஆட்டம்தான் இந்த 200 இலக்கை அடைய சாத்தியமாக்கியது.

கவனம் கலையாமல் ஆடியமையை பாராட்டத்தான் வேண்டும்

எட்வின் said...

ம்ம்ம்ம் சச்சின் சாதனைகளின் மன்னன். கேரி கிரிஸ்டனுக்கு சமர்ப்பித்தது நிச்சயம் பெருந்தன்மையானது.

நிச்சயம் இதை எல்லாம் காண நேர்ந்ததே நமக்கெல்லம் மிகப்பெரிய பாக்கியம் தான்.

Unknown said...

வயசானாலும் சிங்கம் சிங்கமே

balavasakan said...

அண்ணா !! நல்லகாலம் .. பல வேலைகளுக்கிடையில் நான் இந்த போட்டியை தவறவிடவில்லை அந்த பட்டிங் பவர் பிளேயையுந்தான் கரக்டா பட்டிங் பவர்பிளே தொடங்க வீட்ட வந்து மட்ச் பாரத்தேன் ...நானும் சச்சின் 200 அடித்தால் உடனே ஒரு பதிவு போடணும் எண்டுதான் இருந்தன் பட் முடியாமப்போட்டுது...

நீங்க சொன்னது ரொம்ப சரி இந்த காலகட்டதில் நாங்கள் கிரிக்கெட் ரசிகர்களாக இருக்க கொடுத்து வச்சிருக்கணும்.....

கன்கொன் || Kangon said...

// சச்சின் வெளிநாட்டு மைதானம் ஒன்றில் இச்சாதனையை நிகழ்த்தியிருந்தால் பாராட்டத்தான் வேண்டும்,

ஆனால் இந்திய ஆடுகளங்களில் என்பதுதான் உதைக்கிறது. //

வெளிநாடுகளில் என்று மொட்டையாக சொல்வதை விடுத்து பந்துவீச்சாளர்களுக்கும் ஏதாவது உள்ள ஆடுகளம் என்ற சொல் சரியாக இருந்திருக்கும். (நீங்கள் சொல்ல வந்தது சரியாக இருந்திருக்கும் என்று சொல்ல வந்தேன்.)

அடுத்தது ஆடுகளம் எந்தளவுக்கு தட்டையாக இருந்தாலும் சர்வதேச ரீதியில் அதில் வெறும் 10 ஓட்டங்கள் பெறுவதற்கும் நிச்சயமான திறமை வேண்டும்.
அதில் 200 என்பது சாதனையே சகோதரா.
200 ஓட்டங்களை எங்கு பெற்றாலும் அது சாதனையே.
200 என்பது சாதாரணமான விடயமல்ல...
(நீங்கள் மட்டந்தட்டுவதால் சச்சினின் சாதனை ஒன்றும் இல்லாமல் போவதில்லை. ஆனால் உங்களை வீணே முட்டாளாக்கிக் கொள்ளாதீர்கள்)
சாதனைகளை மட்டந்தட்டாதீர்கள்.

KANA VARO said...

முரளியின் டெஸ்ட் சாதனைகளையும், சச்சினின் ஒரு நாள் சாதனைகளையும் இன்னொருவர் எதிர்காலத்தில் முறியடிப்பது இயலாதென்றே நான் உறுதியாக நினைக்கிறேன்.///

உண்மை தான். சாதனைகளுடன் நல்ல அலசல் பதிவு…

nadpudan kathal said...

உடனே வரும் என்று எதிர்பார்த்தேன் அண்ணா உங்கள் பதிவை....

சச்சின் எதுவுமே சொல்ல முடியாத சிங்கம் .... இவர் எல்லா சாதனைகளுக்கும் சொந்தக்காரர் என்று சொல்ல்வது கிரிக்கேட்க்குதான் பெருமை....

//இன்னுமொரு விஷயம் சொல்லியே ஆகவேண்டும்...
அந்த இரட்டை சத சாதனையை இந்திய மக்களுக்கு சமர்ப்பித்தது சாதரணமான விடயம் என்று சொல்லலாம்..ஆனால் இந்திய அணியின் சமீப கால தொடர்ச்சியான வெற்றிகளுக்குக்குக் காரணகர்த்தா என பயிற்சியாளர் கரி கேர்ஷ்டனுக்கு அதை சமர்ப்பித்தது பெருந்தன்மை.//

இந்தியா அணையில் இருக்க கூடிய ஆனவம்மில்லாத எனக்கு தெரிந்த வீரர் இவர்தான் அண்ணா.... அதுக்கே இவரை வாய் விட்டு புகழலாம்...

அஹோரி said...

//எனக்கும் கூடப் பார்த்துக் கொண்டிருந்தபோது தோனி கையில் கிடைத்தால் சாத்தவேண்டும் போல அவ்வளவு கோபம் வந்தது.//

நெசம்தான்

Nirosh said...

/////இனிவரும் எந்தவொரு காலகட்டத்திலும் எந்தவொரு வீரரும் எட்ட முடியாத (என்னைப் பொறுத்தவரை முடியவே முடியாத) சாதனைகளைப் படைத்த இருவர் (சச்சின் டெண்டுல்கர்& முத்தையா முரளிதரன்) விளையாடும் காலத்தில் நாம் இருக்கிறோம்./////

அண்ணா.... எத்தனையோ பதிவுகள் படித்திருந்தும் உங்கள் பதிவை படித்த பின்பு வரும் திருப்தி எல்லாவற்றிலும் கிடைப்பதில்லை.., எனக்கு சிறுவயதில் இருந்தே இந்திய அணியையும் சச்சினையும் அறவே பிடிக்காது...அனால் பிடித்த விடயம் சச்சின் 200 ஓட்டங்கள் பெற்றது..! சச்சினை பிடிக்காத எல்லோரும் நீங்கள் சொன்னதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அருமையான பதிவு அழகாக சொன்னீர்கள் வாழ்த்துக்கள்..! அண்ணா என்னுடைய ஒரு சிறு வேண்டுகோள் நான் குறிப்பிடும் கிரிக்கெட் வீரர்கள் பற்றி நீங்கள் ஏற்கனவே பதிவு இட்டிருக்கலாம் ஆனாலும் இவர்களைப்பற்றிய ஒரு சிறந்த ஆழமான பதிவை உங்களிடம் இருந்து எதிர்பார்கின்றேன்..! Mahela Jeyawardena, Aravinda de Silva, Michael Bevan, lara,
Graham Thorpe, Martin Crowe, Courtney Walsh, Andy Flower, Hansie Cronje, Jacques Kallis.

சி.வேல் said...

//எனக்கும் கூடப் பார்த்துக் கொண்டிருந்தபோது தோனி கையில் கிடைத்தால் சாத்தவேண்டும் போல அவ்வளவு கோபம் வந்தது.//

His records not at all achieve by someone

CRicket is not one man show its a team game , sachin is Great but his game not often win games for india,



He misses centuries 18 times, More than 50 times he fail to Finish the game for India with ridiculous shots, all unforced error , without responsibility( paddle sweep shot in 175 , situation 18 balls 21 needed against AUS) . But in nineties he never do that mistakes, ok, I love sachin he was not at all like that kind of gentleman, but records state so consequently

டெக்‌ஷங்கர் @ TechShankar said...

East Or West Sachin is the Best. It was an amazing performance by Sachin.
Congrats to Sachin Dear Little Master.

Have a look at here too..

Sachin Tendulkar's Rare Photos, Sachin's Kids pictures, Videos

archchana said...

சச்சினிற்கு வாழ்த்துக்கள் . எனக்கும் பிடித்த வீரர் சச்சின் தான். (அதனால் என் மகன் பெயரும் சச்சின் தான்)

//அண்ணே சச்சினுடன் கிறிக்கட் உலகுக்கு வந்த வினோத் கம்ளி(பெயர் சரிதானே)//
........அறிமுகப்படுத்தபட்டது மஞ்ச்ரேகர் அப்படி இல்லையா..

Yogi said...

loshan anna !! google reader-la full feed kodungal !! :-)

ப. அருள்நேசன் said...

லோசன் அண்ணா, எமது வாழ்த்துக்களும் சச்சினுக்கு நிச்சயமாக உண்டு

சச்சின் கிறிகட்டின் சிங்கம்தான்! எந்தச் சந்தேகமும் இல்லை, நல்ல Article அண்ணா, நானும் எதிர்பர்த்தேன் உங்கள் ஆக்கத்தை அல்ல வாழ்த்துச்செய்தியை.


//சச்சின் - கிரிக்கெட்டின் கடவுள்.// அப்ப அண்ணா நாத்திகர்கள் என்ன செய்வதாம்???

வாழ்த்துக்கள் அண்ணா
ப. அருள்நேசன்

Nimalesh said...

SRT = CRICKET............simple way to explain.....

யோ வொய்ஸ் (யோகா) said...

என்றைக்கும் சாதனை படைப்பவர்கள் அலட்ட மாட்டார்கள் என்பதற்கு சச்சின் ஒரு சிறந்த உதாரணம் அடுத்தவர் நம்ம ரகுமான்

Unknown said...

சச்சினின் சாதனை சுலபமானதுக்கு மூல முழுக் காரணம் தோனியே. அழுத்தமில்லாமல் 200 எட்ட அவரது அதிரடிமூலம். உதவினார். சச்சின் 1999ல் இருந்த ஃபோர்முக்கு அந்த நேரத்தில் மறுமுனையில் இப்படியான அதிரடி மன்னர்கள் கிடைத்திருந்தால் இந்தச் சாதனையெல்லாம் எப்போதோ தகர்ந்திருக்கும். முதல் 15 ஓவரிலும் அடித்து கடைசி ஓவரிலும் அடித்து சச்சின் அணியை ஒரு காலத்தில் தனியாகச் சுமந்தார் என்பதை ஒப்புக்கொள்ளவேண்டும். (எப்போதாவது அடிக்கும் ஜடேயா போன்றோரை இங்கே கணக்கில் கொள்ளலாகாது). அசார் தவிர உலகத்தரத்தில் ஒருவரும் இருக்கவில்லை. கங்கூலியின் தலமையில் சேவாக் நிரந்தரமான பின்னர்தான் சச்சின்மீதான சுமை கொஞ்சமாவது குறைந்தது. (சேவாக் நிரந்தரமான காலமும், டிராவிடின் பொற்காலமும் கிட்டத்தட்ட ஒன்றே). போட்டிகளை வெல்லக்கூடிய ஒழுங்கான பந்து வீச்சாளர்கள்கூட சச்சின் விளையாடிய அணிகளில் இருந்ததில்லை. (ஸ்ரீநாத், கும்ப்ளே சரி... அவர்கள் தவிர மற்றதெல்லாம் சொத்தை)... எல்லாவற்றையும்விட ஒவ்வொரு போட்டிகளிலும் சதம் அடித்தேயாகவேண்டும் என்று சச்சினை அழுத்தும் வெறித்தனமான ரசிகர்கள் மற்றும் முட்டாள்தனமான விமர்சகர்கள்.... இதையெல்லாம் சமாளித்து பத்து வருடம் விளையாடுவதே பெரிய விஷயம். (22 வயதில் அணிக்குள் நுழைவதற்குப் பலர் பாடுபடும்போது, சச்சின் சூப்பர் ஸ்டார்). சச்சின் 20 வருடம் விளையாடி 21வது வருடத்தில் ஒருநாள் போட்டியில் இரட்டைச் சதம் அடித்தது புகழப்பட வேண்டியதே.

2004ல் சச்சின் 200 அடிப்பார் என்று சொல்லி நண்பர்களிடம் நன்றாக வாங்கிக்கட்டினேன். உண்மையில் 2003-2007 காலப்பகுதியில் சச்சின்மீதான நம்பிக்கையைப் பயங்கரமாக இழந்திருந்தேன்.அதுவும் 2007 இங்கிலாந்துத் தொடரில் டெஸ்ட் போட்டிகளில் மிக மிக மிக மெதுவாக ஆடினார். ஒருநாள் போட்டிகளில் 90களிலேயே உபாதைக்குள்ளாகினார். இதெல்லாத்தையும் கடந்து வந்திருக்கிறதுதான் சச்சினின் சாதனை. அவர் அடிக்கிற சதங்களோ இந்த இருநூறோ அல்ல

எனக்குப் புரியாத விஷயம் இதுதான். என் நண்பர் ஒருவர் சச்சினைக் கண்டபடி விமர்சிப்பார். இதுவரை கனடாவில் மூன்றுவருடம் கல்லி கிரிக்கெட் ஆடியிருக்கிறேன். அந்த மூன்றுவருடங்களிலும் சேர்த்து அந்த நண்பர் எடுத்த ஓட்டங்களே நூற்றைம்பதைத் தாண்டாது. இப்படியான அரைவேக்காடுகள்கூட சச்சினை சுயநலத்துக்காக ஆடுவதாக விமர்சிப்பது கடுப்பேத்துகிறது. உலகத்தில் செஞ்சரி அடித்தாலும், அடிக்காட்டாலும் திட்டுவாங்கிற ஒரே ஆள் சச்சின்தான்.

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner