March 31, 2016

கறுப்புத் தொப்பிகளின் கனவை சிதறடித்த சிவப்பு சட்டை சிங்கங்கள் & கெயில் - கோலி மும்பாய் மோதல் - உலக T20

ரோய் அதிரடியாக நேற்றைய நாள்..
மும்பாயில் இன்று கோலி - கெயில் மோதலா..
கெயில் - அஷ்வின் மோதலா என்று எல்லோரும் நினைத்துக்கொண்டிருக்க, 

ரோயின் அதிரடியினால் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து என்ற தலைப்பில் தமிழ் மிரர் மற்றும் தமிழ் விஸ்டனுக்கு எழுதியுள்ள கட்டுரையில் சிற்சில புதிய சேர்க்கைகளுடன் இந்த இடுகை.

---------------

ஆப்கானிஸ்தானுடன் தடுமாறி, ஒரே ஒரு ஓவரில் விளாசப்பட்ட ஓட்டங்களினால் மயிரிழையில் வென்ற இங்கிலாந்து அணி இறுதிப் போட்டிக்குச் செல்லும் என்றும், 

இந்தியா, அவுஸ்திரேலியா போன்ற அணிகளையே வீழ்த்தியிருந்த நியூ சீலாந்து அணி இங்கிலாந்திடம் இப்படி தோற்றுப் போகும் என்றும் யார் எதிர்பார்த்திருப்பார்கள்?

இது தான் கிரிக்கெட்டினது, அதை விட T20 கிரிக்கெட்டின் ஆச்சரியமான விடயம்.

நேற்றைய இடுகையில் அளவுக்கதிகமாக போற்றிப் புகழ்ந்தே கேன் வில்லியம்சனின் மாயாஜால தலைமைத்துவத்தை அப்படியே இல்லாமல் செய்துவிட்டேனோ?
(நியூ சீலாந்துமற்றும் வில்லியம்சனின் ரசிகர்கள் பலர் எனக்கு வசவுகளை அனுப்பியிருந்தனர். மன்னிச்சூ)


தொட்டது எல்லாம் துலங்கி வந்த வில்லியம்சனின் பந்துவீச்சு மாற்ற மாயாஜாலங்களை எல்லாம் நேற்று ஜேசன் ரோய் வெளுத்து வாங்கி நியூ சீலாந்தின் உலக T20 கனவைத் தகர்த்து எறிந்திருந்தார்.

இது ஜேசன் ரோயின் கன்னி அரைச் சதம் என்பது பலருக்கும் ஆச்சரியம் தந்த ஒரு விடயமாக இருக்கும்.
இவரது strike rate உயர்வானது. ஆட்டமிழப்பதைப் பற்றிக் கவலைப்படாமல் அடித்தாட ஆரம்பத்தில் அனுப்பப்படும் அதிரடி வீரர்.

25 வயதான ரோய்  பற்றி அவர் விளையாடும் சரே பிறந்தியத்துக்காக விளையாடும் இலங்கையின் முன்னாள் நட்சத்திரம் குமார் சங்கக்கார மற்றும் இங்கிலாந்தின் முன்னாள் அதிரடி வீரர் கெவின் பீட்டர்சன் ஆகியோர் சிலாகித்து சிபாரிசு செய்திருந்தனர்.
தொடர்ச்சியாகத் தனது ஆற்றலை வெளிப்படுத்திவந்த ரோய், நேற்று முக்கியமான போட்டியில் தன்னை நிரூபித்துக்கொண்டார்.

உலக T20 சுற்றின் முதற்சுற்றுத் தவிர்ந்து அடுத்த knockout சுற்றுக்களில் பெறப்பட்ட இரண்டாவது அதிகூடிய தனி நபர் ஓட்ட எண்ணிக்கை இதுவே.
2009 உலக T20போட்டித் தொடரின் அரையிறுதியில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக இலங்கையின் டில்ஷான் பெற்ற ஆட்டமிழக்காத 96 தான் அதிக பட்ச ஓட்ட எண்ணிக்கை.

2012 இறுதிப் போட்டியில் சாமுவேல்ஸும் இலங்கை அணிக்கு எதிராக 78 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்திருந்தார்.

ஆனால் போட்டியின் சிறப்பாட்டக்காரராக தெரிவான ரோய் சொன்னதைப் போல இங்கிலாந்தின் கடைசி நேரப் பந்துவீச்சுக் கட்டுப்பாடு தான் போட்டியை இங்கிலாந்துப் பக்கம் திருப்பியது என்பதையும் நாம் கவனிக்கவேண்டும்.

முதல் 10 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 89 ஓட்டங்களை எடுத்திருந்த நியூ சீலாந்து, கடைசி 10 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 64 ஓட்டங்களை மட்டுமே எடுக்க முடிந்தது.
அதிலும் கடைசி 4 ஓவர்களில் வெறும் 20 ஓவர்களை மட்டுமே பெற முடிந்தது.

தனது முதல் இரு ஓவர்களில் 20 ஓட்டங்களைக் கொடுத்த பென் ஸ்டோக்ஸ், அடுத்த இரு ஓவர்களில் 6 ஓட்டங்களைக் கொடுத்து 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
Death overs என்று சொல்லப்படும் கடைசி ஓவர்களில் ஸ்டோக்ஸ் இப்போது கலக்கி வருகிறார்.

அடுத்த Flintoff  என்று வர்ணிக்கப்பட்ட ஸ்டோக்ஸ், இங்கிலாந்துக்கு ஒரு மிகச்சிறந்த சகலதுறை வீரர் உருவாகியுள்ளார்.

ஏற்கெனவே நான் சொன்னது போல, இந்த இங்கிலாந்து அணியை இவ்வகை துரித கிரிக்கெட் போட்டிகளுக்கு என்று செதுக்கி செதுக்கி செய்துள்ளார்கள்.
அத்தனை பேரும் T20 சிறப்புத் தேர்ச்சி பெற்ற வீரர்கள்.


பெரிய அணிகளை அசத்திய நியூ சீலாந்தின் ஆரம்பம் கப்டில், வில்லியம்சன், மன்றோ ஆகியோரினால் வேகம் எடுத்தபோதும், இவர்கள் மூவரின் ஆட்டமிழப்புடன் இங்கிலாந்து அடக்கிவிட்டது.

இங்கிலாந்தில் ரோய், 44 பந்துகளில் 78 ஓட்டங்களை விளாசி ஆட்டமிழந்த பிறகு ஒரு பக்கம் ரூட் நிதானமாக நின்றுகொண்டிருக்க, அதிரடியாய் வந்து பட்லர் 17 பந்துகளில் 3 சிக்ஸர்களுடன் 32 ஓட்டங்களைப் பெற்று இங்கிலாந்தை கொல்கத்தாவில் இடம்பெறும் இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார்.

ஏனைய அணிகள் எல்லாவற்றினதும் பெரிய துடுப்பாட்ட வீரர்களையும் தடுமாற வைத்த சன்ட்னர், சோதி இருவரும் 7.1 ஓவர்களில் நேற்று 70 ஓட்டங்களைக் கொடுத்தனர்.

நியூ சீலாந்தின் அரையிறுதி தோல்வி சாபம் மீண்டும்.
இது ICC தொடர்களில் நியூ சீலாந்தின் 9வது தோல்வி.
தென் ஆபிரிக்கா, பாகிஸ்தானும் இதேயளவு தோல்விகளைக் கண்டுள்ளன.

ஆனால், இந்த இளம் அணியை இன்னும் கட்டமைத்து எதிர்காலத்தில் ஒரு உறுதியான அணியாக உருவாக்கும் திடத்தை இந்த உலக T20 வழங்கி இருக்கிறது.

இப்போது எஞ்சியுள்ள 3 அணிகளுமே தங்களது இரண்டாவது உலக T20 கிண்ணத்தைக் குறிவைத்துள்ளன.

-----------------
இங்கிலாந்தை எதிர்வரும் 3ஆம் திகதி இறுதிப் போட்டியில் சந்திக்கும் அணி எது என்பதை தீர்மானிக்கும் பலப்பரீட்சை இன்றிரவு மும்பையில்.

நேற்றைய இடுகையில் இன்றைய போட்டி பற்றியும் விவரமாக அலசியுள்ளேன்.
அதையும் வாசித்திருப்பீர்கள் என நம்புகிறேன்.


கெயிலை சமாளிக்கு வழிவகை பற்றி இந்தியா சிந்திக்கும் அதேவேளை, யுவ்ராஜுக்குப் பதிலாக மனிஷ் பாண்டேயா, அஜியன்கே ரஹானேயா என்பது பற்றி தோனி முடிவு செய்தாலும் ரசிகர்கள், விமர்சகர்கள் மத்தியில் இன்னும் குழப்பமே.
தொடர்ந்து சறுக்கி வரும் இந்தியாவின் மூவர் (தவான்,ரோஹித் ஷர்மா, ரெய்னா) இன்றாவது formக்குத் திரும்புவார்களா என்பது பெரிய ஒரு கேள்வி.

வழமையாகவே அணியில் மாற்றங்களை விரும்பாத தோனி, யுவராஜின் உபாதை காரணமாக கட்டாயமாக மாற்றம் ஒன்றை செய்தே ஆகவேண்டிய நிலையில், form இல் இல்லாத மூவரில் யாரையும் மாற்ற விரும்பமாட்டார் என்பது உறுதி.

மேற்கிந்தியத் தீவுகளுக்கும் அன்ட்ரே ப்ளட்ச்சரின் காயம் காரணமாக பேரிழப்பு.
இவருக்குப் பதிலாக குழுவுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள லென்டில் சிமன்ஸ் இன்று அணியில் இனைக்கப்படுவார் என்று நம்பலாம்.
காரணம் ஏற்கெனவே IPL போட்டிகளில் மும்பாய் அணிக்காக ஆடிய அனுபவம் அவருக்குக் கை கொடுக்கும்.


கெயிலுக்கு ஒரு சாதனை மைல் கல்லுக்கு இன்னும் 2 சிக்ஸர்கள் தேவைப்படுகின்றன.
சர்வதேச T20 போட்டிகளில் இதுவரை 100 சிக்சர்களை யாரும் பெற்றதில்லை.

பிரெண்டன் மக்கலம் 91 சிக்சர்கள்.
அண்மையில் ஓய்வுபெற்ற ஷேன் வொட்சன் 83 சிக்சர்கள்.

இதுவரை இந்தத் தொடரில் மும்பாயில்  பெறப்பட்ட குறைவான ஓட்ட எண்ணிக்கையே 172 என்பதால் இன்றும் துடுப்புக்களின் போராக இருக்கும்.
எனவே பந்துவீச்சாளரின் அனுபவத் திறன் இரு பக்க அணித் தலைவர்களுக்கும் முக்கியமானது.

அஷ்வினை வைத்து கெயிலை IPL போட்டிகளில் மடக்குவது போல தோனி திட்டம் வைத்திருப்பதாக பலர் சொல்கிறார்கள்.
ஆனால் சர்வதேச T20 போட்டிகளில் இந்தியாவுடன் கெயிலின் சராசரி 50க்கு மேல்.


ஆனால் எல்லோரும் ஆடுகளம் பற்றி நேற்று மேற்கிந்தியத் தீவுகளின் தலைவர் டரன் சமியிடம் கேட்டபோது அவர் சிரித்துக்கொண்டே சொன்னது 
"22 யார் நீளமும், 6 யார் அகலமும் கொண்ட ஆடுகளம் போதும். அதிலே துடுப்பாடலாம்"


இந்த மனிதர் சமியைப் பற்றி நான் அடிக்கடி சிலாகித்துள்ளேன். மனிதர் ஒரு கூலான ஆள்.
எதையும் ரொம்ப சிம்பிளாக எடுத்துக் கொள்வார்.
ஆனால் அணிக்காக விளையாடுவதில் அர்ப்பணிப்பு கொண்டவர்.
இறுதிவரை போராடும் இயல்புள்ள ஒரு தலைவர்.

கோலி பற்றி மேற்கிந்தியத்தீவுகள் பயப்படுகிறதா என்று கேட்டதற்கு இல்லை என்றவர், "கிறிஸ் கெயில் என்று ஒருவரைப் பற்றி கேள்விப்பட்டு உள்ளீர்களா?" என்று பதில் கேள்வி கேட்டு இருந்தார். 

இது தான் கிரிக்கெட்டுக்கு தேவை.

சவால்களை அந்தந்த சந்தர்ப்பங்களில் சந்திக்கும் அணி சாதிக்கும்.
தமது இரண்டாவது உலக T20 கிண்ணத்துக்கு குறிவைக்கும் இரு அணிகளில் எந்த அணி தடைதாண்டி கொல்கத்தா போகும் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

கோலி- கெயில் பற்றி எல்லோரும் பரபரப்பதை பார்த்தால், இன்று இவ்விருவரும் சொதப்ப, யாரோ இன்னொரு புதியவர் அல்லது எதிர்பாராத ஒருவர் புகுந்து விளையாடப் போகிறார் போலத் தெரிகிறதே..
(இது விக்கிரமாதித்தன் டிசைன் மக்கள்ஸ்)

இதேவேளை, இன்று மேற்கிந்தியத் தீவுகள் தோல்வியடைந்தால் அது நிறைய சந்தேகங்களையும் சர்ச்சைகளையும் கிளப்பும் என்பது இன்னொரு முக்கிய விடயம்.
IPL தொடர்புகள், இந்திய விளம்பர மற்றும் அனுசரணை விடயங்கள், அத்துடன் கடந்த வருட கிரிக்கெட் தொடர் கைவிடப்பட்டு எழுந்த முரண்பாடுகளும், இந்த வருட இறுதியில் இடம்பெறும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் என்று பல விடயங்கள் பற்றி சந்தேகங்கள் பின்னப்படும்.

ஊடங்கள், அதிலும் இந்திய ஊடகங்கள் சும்மாவா இருக்கும்?

--------------

நேற்று மகளிர் உலக T20 கிண்ணத்துக்கான அரையிறுதியில் அவுஸ்திரேலிய மகளிர் அணி பெற்ற 5 ஓட்டங்களாலான விறுவிறுப்பான வெற்றி, அவர்களை 4வது தொடர்ச்சியான T20 கிண்ண அரையிறுதிக்கு அழைத்துச் சென்றுள்ளது.

3 தடவைகள் கிண்ணம் வென்று நடப்புச் சம்பியனாகத் திகழ்ந்துகொண்டிருக்கும் மஞ்சள் மகளிர் 4வது கிண்ணத்துக்கு இப்போதே உரிமை கொண்டாட ஆரம்பித்துவிட்டனர் போலத் தெரிகிறது.

கடந்த மாதம் தான் தங்கள் சொந்த நாட்டில் வைத்து இந்தியாவின் மகளிரினால் T 20 தொடரில் படுமோசமாகத் தோற்கடிக்கப்பட்டது உங்களுக்கும் ஞாபகம் இருக்கலாம்.


March 30, 2016

உலக T 20 - அரையிறுதிகள் - தலை(மை)களின் மோதலும் அதிரடிகளின் எதிரடிகளும்

மீண்டும் தொடர்ச்சியாக எழுதும் ஒரு உத்வேகம் கிடைத்திருப்பதால் உலக T 20 - அரையிறுதிகளுக்கு முன்பாக... என்ற தலைப்பில் ஒரு வருட இடைவெளியின் பின் மீண்டும் தமிழ் மிரருக்கும், தமிழ் விஸ்டனுக்கும்  எழுதியுள்ள கட்டுரையின் சற்று விரிவுபடுத்தப்பட்ட இடுகை.


போட்டிகளை நடாத்தும் நாடாகவும், இம்முறை உலக T20 கிண்ணத்தை வெல்லக்கூடிய வாய்ப்பை அதிகளவில் கொண்ட நாடாகவும் கருதப்படும் இந்தியாவுடன், தத்தம் பிரிவுகளில் ஏனைய அணிகளை விட ஆதிக்கம் செலுத்திய நியூ சீலாந்து,இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய அணிகள் அரையிறுதிப் போட்டிகளுக்குத் தெரிவாகியுள்ளன.

இவற்றில் நியூ சீலாந்தைத் தவிர ஏனைய மூன்று அணிகளும் முன்னர் ஒவ்வொரு தடவை உலக T20 கிண்ண வெற்றியை சுவை பார்த்திருக்கின்றன.
இந்தியா - 2007
இங்கிலாந்து -2010
மேற்கிந்தியத் தீவுகள் - 2012

நியூ சீலாந்து இதுவரை இறுதிப் போட்டிக்கும் தகுதி பெற்றதில்லை.

அத்துடன் 2007இல் நடைபெற்ற முதலாவது உலக T20க்குப் பிறகு இப்போது தான் அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.

நியூ சீலாந்துக்கும் உலகக்கிண்ண அரையிறுதிகளுக்கும்  இருந்து வந்த மாற்றமுடியாத சாபம், கடந்த 2015 உலகக்கிண்ணத்தின் இறுதிப் போட்டிக்குத் தெரிவானதோடு நீங்கியது என்று ஆறுதல்பட்டு, உறுதிப்பட இன்று இங்கிலாந்து அணியை வெல்லுமா பார்க்கலாம்.

2010இல் உலக T20 கிண்ணத்தை வென்ற பிறகு, அதேபோன்ற கட்டமைப்புக் கொண்ட நம்பிக்கையான அணியோடு களம் புகுகிறது இங்கிலாந்து.
அடுத்துவந்த இரண்டு உலக T20 தொடர்களிலும் அரையிறுதியைக் கூட எட்டவில்லை இங்கிலாந்து.

இந்தியா கடந்த முறை இலங்கையுடன் இறுதிப் போட்டியில் தோல்வியுற்றிருந்தது.

2012இல் சம்பியனான மேற்கிந்தியத் தீவுகள் கடந்த முறையும் அரையிறுதியை எட்டிய அணி.

இவற்றுள் நியூ சீலாந்து மட்டுமே எந்தவொரு போட்டியிலும் தோல்வியுறாமல் தொடர்ச்சியாக வெற்றிகளுடன் வலம் வரும் ஒரே அணி.
ஏனைய அணிகள் தலா ஒவ்வொரு தோல்விகளைக் கண்டுள்ளன.

ஆசிய அணிகளின் ஆதிக்கம் ஆசிய ஆடுகளங்களில் குறைந்து செல்லும் என்று எனது முன்னைய இடுகைகளில் எதிர்வுகூறியதைப் போலவே, இந்தியா மட்டுமே எஞ்சியிருக்கிறது.
துரித வேக கிரிக்கெட் போட்டிகள், IPL போன்ற போட்டிகளில் விளையாடிய அனுபவங்கள் என்று பல காரணிகளோடு, இலங்கை, பாகிஸ்தான் ஆகிய அணிகள் மிக மோசமாக விளையாடியதும் முக்கியமான காரணங்கள்.


முதலாவது அரையிறுதி - இங்கிலாந்து எதிர் நியூ சீலாந்து 
சிவப்புச் சட்டை எதிர் கறுப்புத் தொப்பி 



கேன் வில்லியம்சனின் சாதுரியமான வழிநடத்தலில் எந்த அணியாக இருந்தாலும், எந்த ஆடுகளமாக இருந்தாலும் அடித்தாடி வரும் நியூ சீலாந்து அணி தான் இந்த உலக T20 தொடரின் அசத்தல் அணி.

இங்கிலாந்துக்கு இன்றைய டெல்லி ஆடுகளம் ஏற்கெனவே இலங்கை அணியுடன் வெற்றிபெற்ற போட்டி மூலம் பரிச்சயமாக இருந்தாலும், நியூ சீலாந்து ஆடுகளங்கள் பற்றி இந்தத் தொடரில் ஒரு பொருட்டாகவே இருந்ததில்லை.

சொந்த நாடான இந்தியாவை விட ஒவ்வொரு ஆடுகளத்தையும் சரியாக வாசித்தறிந்து ஒரு ஜோசியக்காரர் போல முன்னதாகவே நடப்பதை உய்த்தறிந்த லாவகத்தோடு புதிய தலைவர் கேன் வில்லியம்சன் அணியை ஒவ்வொரு போட்டிக்கும் ஏற்றது போல - குறிப்பாக பந்துவீச்சாளரை மாற்றி மாற்றி வெற்றிகளை சுவைத்தது ஒரு ரசனையான ஆச்சரியம்.
நான் இப்போது இவரது தலைமைத்துவ அணுகுமுறையின் ரசிகனாகி விட்டேன். (இந்த திருஷ்டி இன்று வில்லியம்சனை சொதப்பினால் மன்னித்துவிடுங்கள் கிவி ரசிகர்களே.)

அவரது மாற்றங்கள் ஒவ்வொரு முறையுமே வெற்றிக்கான ரகசியமாக மாறியிருந்தது. தலைமைப் பொறுப்பில் மிகத் துல்லியமாக செயற்படும் வில்லியம்சனுக்குத் துணையாக கப்டில்லின் அதிரடி இருக்கிறது.

தேவையான நேரங்களில் மன்றோ, அண்டர்சன், அனுபவம் வாய்ந்த ரொஸ் டெய்லர் மற்றும் எலியட் என்று திடமான துடுப்பாட்ட வரிசை.
கடைசி நேர அதிரடிக்கு சகலதுறை வீரர் சன்ட்னர், விக்கெட் காப்பாளர் லூக் ரொங்க்கி.
எனினும் இன்னும் துரத்தியடிப்பதில் நியூ சீலாந்து இந்த தொடரில் ஆடவில்லை என்பது சிக்கலைத் தரலாம்.

இதுவரை தங்கள் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களான டிம் சௌதீ, ட்ரேன்ட் போல்ட் ஆகியோரைப் பயன்படுத்தாமலே ஆச்சரியத்தை அளித்துவரும் நியூ சீலாந்து, இன்று எந்தெந்தப் பந்துவீச்சாளரை அணிக்குள் அழைக்குமென்று எதிர்பார்க்க வைக்கிறது.
சோதி, சன்ட்னர்,அண்டர்சன், எலியட் (பகுதி நேரம்)  ஆகிய பந்துவீச்சாளர்கள் மட்டுமே நான்கு போட்டிகளிலும் விளையாடிய பந்துவீச்சாளர்கள். 
எப்போதும் உயர்தரத்தில் இருக்கும் களத்தடுப்பு இவர்களது கூடிய பலம்.

இன்னொரு சாதுரியமான அணித் தலைவர் ஒயின் மோர்கனின் தலைமையில் களமிறங்கும் இங்கிலாந்தும் சகலதுறைத் திறமையும், T20 போட்டிகளுக்கு என்றே வார்க்கப்பட்டது போன்ற கட்டமைப்புக் கொண்ட அணி தான்.

ஹேல்ஸ், ரோய், பட்லர், ஸ்டோக்ஸ் போன்ற அசத்தல் அதிரடி வீரர்களுடன், எந்தப் போட்டிகளிலும் நம்பியிருக்கக்கூடிய மோர்கன், ரூட் போன்ற துடுப்பாட்ட வீரர்களும், கூடவே மொயின் அலியும் இருப்பதால், இந்த அணியும் துடுப்பாட்டத்தில் பலமான ஒரு அணியே.

பந்துவீச்சில் நியூ சீலாந்து அளவுக்கு பலமான அணியாகத் தெரியாவிட்டாலும் (குறிப்பாக கெயிலின் அதிரடியில் சிக்கியதும், மத்தியூஸ் தனித்து நின்று வெளுத்து வாங்கியதும் சில உதாரணங்கள்) தேவையான சந்தர்ப்பங்களில் விக்கெட்டுக்களை உடைக்கக் கூடிய ஜோர்டான், வில்லி, சுழல்பந்து வீச்சாளர் அடில் ரஷிட் ஆகியோர் எப்போதும் ஆபத்தானவர்களே.

கூடவே துரித வேகக் களத்தடுப்பு.
நல்ல உதாரணம் அன்றைய ரூட்டின் பிடிஎடுப்பு.

சுழல்பந்துக்கு சாதகம் தரக்கூடிய, கொஞ்சம் மந்தமான டெல்லி ஆடுகளத்தில் இன்று நாணய சுழற்சியின் ஆதிக்கம் எவ்வளவாக இருக்கும் என்பது ஊகிக்க முடியாத ஒன்று.

அதிரடி வீரர்களின் மோதல் மட்டுமன்றி, அணித் தலைவர்களின் வியூக மோதலாகவும் இருக்கப் போகிறது.

-------------------------

இரண்டாவது அரையிறுதி - இந்தியா எதிர் மேற்கிந்தியத் தீவுகள் 

சொந்த நாட்டின் சூரர்கள் எதிர் துரித அடி மன்னர்கள் 

கெயில் என்னும் புயலுக்கும் கோலி என்ற இந்தியாவின் புதிய புயலுக்கும் இடையிலான மோதலாகத் தெரிகிறது.
முதலாவது போட்டியில் இங்கிலாந்தை அடித்து விரட்டிய பின் காயம் காரணமாக சற்று ஓய்ந்து காணப்படும் கிறிஸ் கெயில் நாளைய மும்பாய் போட்டியில் சதம் அடிக்க ஆசைப்படுவதாக சொல்லியிருப்பது இந்திய ரசிகர்களுக்குக் கொஞ்சம் கிலி தரும் ஒரு விடயமாக இருக்கலாம்.
அதேவேளை சத்தமில்லாமல் வெளுத்து வாங்கி, தனியொருவராக கடைசிப் போட்டியை  வென்று கொடுத்த  கோலியின் form இந்தியாவுக்குப் பெரியதொரு உற்சாகம்.



ஆனால்  இவ்விருவரை விட இந்தியாவின் ஆஷிஷ் நெஹ்ரா, ரவிச்சந்திரன் அஷ்வின், மேற்கிந்தியத் தீவுகளின் சாமுவேல் பத்ரி ஆகியோரின் அனுபவத்துடன் கூடிய பந்துவீச்சு ஆற்றல் தான் இவ்விரு அணிகளின் அடிப்படை என்று சொன்னால் அதில் ஐயமில்லை.

இந்த மூவரும் தங்கள் பந்துவீச்சில் காட்டும் தனித் திறமையும், தங்கள் அனுபவத்தை ஏனைய பந்துவீச்சாளரோடு பகிரும் விதமும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு கூடுதல் பலத்தைத் தொடர்ச்சியாக வழங்கி வருவதை ஒவ்வொரு போட்டியிலும் இவர்களது பந்துவீச்சுப் பெறுபேறுகளை அவதானித்தால் அறிந்துகொள்ளலாம்.

ஆனால் சர்ச்சைகள் இல்லாதவர் என்பதால் பெரிய விளம்பர வட்டம் இவர் மீது இல்லை.
அஷ்வின் மூன்றாம் இடத்தில்.
இந்தியாவின் இன்னொரு சுழல் துரும்புச் சீட்டான ஜடேஜா 7 ஆம் இடத்தில்.

மேற்கிந்தியத் தீவுகளை விட இந்தியாவின் பந்துவீச்சு உறுதியானதாகத் தெரிகிறது.
ஐந்து நிச்சயமான பந்து வீச்சாளரோடு, தேவையேற்பட்டால் ரெய்னா, யுவராஜும் இருக்கிறார்கள்.
கெயிலை மடக்க அஷ்வினை தோனி பயன்படுத்தக் கூடும்.
பாண்டியா இந்தியாவுக்கு அண்மைக்காலத்தில் கிடைத்த பயன்மிக்க சகலதுறை வீரர்.

மறுபக்கம் மேற்கிந்தியத் தீவுகளில் சற்றே தொய்ந்துள்ள பந்துவீச்சை சமி  சாதுரியமாக மாற்றிப்போடும் மாற்றங்கள் மூலமாக சமாளித்து வருகிறார்.

ஆனால், இந்தியாவின் துடுப்பாட்டம் கோலியையே மையமாக வைத்திருக்க, அவரைச் சுற்றியுள்ள ஏனைய துடுப்பாட்ட வீரர்களும் தக்க நேரத்தில் துணைக்கு வரவேண்டும்.
குறிப்பாக முதல் மூவரும்.
தோனியும், யுவ்ராஜூம் தங்கள் பங்களிப்புக்களை இணைப்பாட்டங்கள் மூலமாக வழங்கிவருகின்றனர் - ஓர் அளவுக்காவது.

யுவராஜ் சிங்கின் கால் உபாதை அவருக்குப் பதிலாக இந்தியக் குழுவில் இணைக்கப்பட்டுள்ள மனிஷ் பாண்டே விளையாடக்கூடிய வாய்ப்பு இருக்கலாம் என்று பேசப்படும் நிலை, இந்தியாவுக்கு பாதகமா, அல்லது அதிக சாதகமா என்று சொல்ல முடியாது.
ஆனால் இப்போது குழுவுக்குள் வந்துள்ள பாண்டேயா, இல்லாவிட்டால் முன்பே குழுவில் இருக்கும் ரஹானேயா நாளை விளையாடுவார்கள் என்பது முக்கியமான ஒரு கேள்வி.

ஆனால் யுவராஜின் இன்மை அணியின் சமபலத்தை  சற்று தடுமாறவைக்கும் என்பது உறுதி.

மேற்கிந்தியத் தீவுகளின் துடுப்பாட்டப் பலம் ஆப்கானிஸ்தான் அணியினால் சோதிக்கப்பட்டது.
ஆனால் அசுர அடிகளுக்குப் பழக்கப்பட்ட கரீபியன் அதிரடி வீரர்கள் IPL மூலமாகப் பழகிய மும்பாய் ஆடுகளங்களை வசப்படுத்திக்கொள்ள சொற்ப நேரமே எடுக்கும்.

கெயில், சாமுவேல்ஸ், ப்ராவோ, ரசல், சமி , போதாக்குறைக்கு இலங்கை அணியை சிதறடித்த ப்ளட்ச்சர் வேறு.

இரு அணிகளும் துரத்தி அடிப்பதில் ஆர்வம் காட்டும்; அத்துடன் கோலியின் அண்மைக்கால துரத்தியடித்தல்கள் நாணய சுழற்சியில் மேலும் முக்கியத்தைத் தரும்.

மும்பாய் ஆடுகளம் மட்டும் துடுப்பாட்ட சாதகமாக இருந்தால் ஓட்டங்கள் மலையாகக் குவியும் கோலாகலத் திருவிழாவாக இருக்கும்.



March 29, 2016

விராட் கோலி என்ற துரத்தல் மன்னன், போராடித் தோற்ற மத்தியூஸ், ஆறுதல் தந்த ஆப்கன்ஸ் - முடிவுக்கு வந்த சூப்பர் 10

3 நாட்களில் நடந்த ஆறு போட்டிகளில், இப்போது அரையிறுதிக்கான நான்கு அணிகளும் தெரிவாகியிருக்கின்றன.

நேற்று நடைபெற்ற இறுதி சூப்பர் 10 போட்டி வெறும் சம்பிரதாயபூர்வமான போட்டியாக மட்டுமே நடைபெற்றது.
அதிலும் இலங்கை அணி தோற்று, நடப்பு சம்பியனாகப் போய் , எல்லாவற்றையும் இழந்து நொண்டிக் கொண்டு நாடு திரும்புகிறது.

1996இல் உலக சம்பியனாக இங்கிலாந்து போய், முதற்சுற்றோடு நாடு திரும்பிய 1999 உலகக்கிண்ண அணியே ஞாபகம் வருகிறது.

இனி ஹேரத், டில்ஷான் ஆகியோரின் ஓய்வுக்கு (அறிவித்தல் விரைவில் வரும் என நினைக்கிறேன்)பிறகு இளைய அணி ஒன்று மத்தியூசை மையமாக வைத்துக் கட்டி எழுப்பப்பட வேண்டும்.

சிலவேளை காலம் எடுக்கும், ஆனால் பல வாய்ப்புக்கள் கொடுத்தும் அணியில் தங்கள் இருப்பை உறுதியோ நியாயமோ படுத்த முடியாத பலரை அணியை விட்டு வெளியே அனுப்பிவிட்டு, தகுதியான இளையவர்களுக்கு அணியில் இடம் கொடுக்கவேண்டும்.
தெரிவுக்குழுவில் இருக்கும் அரவிந்த, சங்கா, களுவிதாரண போன்றவர்கள் அனுபவம், சிரேஷ்ட வீரர்கள் என்ற 'அடையாளங்களை'அடித்து விழுத்திவிட்டு திறமைக்கும் பெறுபேறுகளுக்கும் முக்கியத்துவம் கொடுப்பார்கள் என்று நம்பியிருப்போம்.

-----------

6 போட்டிகளில் 5 இறுதி வரை விறுவிறுப்பை அளித்த போட்டிகள்.
இரண்டு போட்டிகள் மனதை உடைத்த போட்டிகளாகவும், மூன்று போட்டிகள் 'அட' போட்டு உற்சாகமாக ரசித்து முடிவுகளை ரசித்துக் கொண்டாடிய போட்டிகளாகவும் அமைந்தன.

இவ்வகைத் துரித வேகப் போட்டிகளில் ஒரு ஓவரில், சில பந்துகளில் முடிவுகள் சடுதியாக மாறிவிடும்; இதனால் தான் இந்த அணி வெல்லும் என்று அறுதியாக உறுதியாக எந்தவொரு போட்டி பற்றியும், அது எந்தவொரு பலமான அணியாக இருந்தபோதும் நான் ஊகம் தெரிவிப்பதில்லை.

-------------------
அவுஸ்திரேலிய அணியின் விஸ்வரூபம்..
ஸ்மித் தன்னை இவ்வகைப் போட்டிகளிலும் நிரூபித்ததும், அவுஸ்திரேலிய அணியின் முதலாவது  5 விக்கெட்  பெறுதி ஜேம்ஸ் ஃபோல்க்னர் மூலமாகக் கிடைத்தது என்று பாகிஸ்தானை சுருட்டி அனுப்பியது அவுஸ்திரேலியா.

பூம் பூம் அப்ரிடியின் ஓய்வை இந்தத் தோல்வியுடன் எதிர்பார்த்தவர்களுக்கு, இப்போது இல்லை, பிறகு அறிவிக்கிறேன் என்றிருக்கிறார்.
ஆனால் பாகிஸ்தானின் முடிவுரையோடு, அப்ரிடிக்கும் முடிவுரை எழுதப்பட்டு இருக்கிறது அவுஸ்திரேலியாவினால். பாகிஸ்தான் நிறைய எதிர்பார்க்க வைத்து இப்படியே சொதப்புவது வழக்கம் தான்.

ஸ்மித், மக்ஸ்வெல், வொட்சன் மூவரினதும் அதிரடிகள் ஒன்றாகச் சேருமிடம் அவுஸ்திரேலியா அசைக்க முடியாத பலம் கொண்ட அணியாக எல்லா அணிகளையும் துவம்சம் செய்யக் கூடிய அணி தான்.
ஆனால், நான் முன்னைய இடுகைகளில் சொன்னது போல, இந்த அணி இப்போது தொடர்ச்சியான, சடுதியான, சில நேரங்களில் அனாவசியமான மாற்றங்களுக்கு உள்ளாக்கப்பட்டு வருவதால் இன்னும் T20 போட்டிகளில் வெற்றிபெறும் அணியாகத் தன்னை நிலை நிறுத்திக்கொள்வதில் சிக்கல் இருக்கவே செய்யும்.

அடம் சம்பாவை நல்லதொரு சுழல்பந்து வீச்சாளராக இவர்கள் இனி ஒருநாள் போட்டியிலும் முயற்சிக்கலாம்.
ஆனால் ஞாயிறு நடந்தது போல அவரை சரியாகப் பயன்படுத்தாமல், முன்னைய (வோர்ன் தவிர்ந்த) ஏனைய அவுஸி  சுழல்பந்து வீச்சாளருக்கு நேர்ந்தது போலவே நேருமோ என்ற சந்தேகமும் எழுகிறது.

---------------------------
ஒரு இலங்கை ரசிகனாக மேற்கிந்தியத் தீவுகளின் வெற்றிக்கு ஆசைப்பட்டேன்.
தென் ஆபிரிக்கா வென்று இருந்தால் இலங்கையின் வாய்ப்பு அன்றே அருகியிருக்கும்.

உலகக்கிண்ணம் என்றாலே தாமாகவே சறுக்கி, சொதப்பும் தென் ஆபிரிக்காவை சுழற்றிப் போட, அண்மைக்காலமாக பெரிதாகப் பந்துவீசாத கிறிஸ் கெயில் உபயோகப்பட்டார்.
முதற்போட்டியில் இந்தியாவுக்கு படுதோல்வியைப் பரிசளித்த அதே நாக்பூர் ஆடுகளம் வேலையைக் காட்ட எவ்வளவு தான் முயன்றும் தென் ஆபிரிக்காவால் பெற முடிந்தது 122 ஓட்டங்களே..

கெயிலின் அதிரடியோடு மேற்கிந்தியத் தீவுகள் இதைக் கடக்கும்.
தென் ஆபிரிக்காவின் படுதோல்வி net run rate விஷயத்திலும் இலங்கைக்கு உதவும் என்று நம்பியிருக்க, நாக்பூரின் ஆடுகளம் விளையாட்டுக் காட்ட ஆரம்பித்தது.
(இன்னும் எத்தனை போட்டிகளை இந்த ஆடுகளம் நாசப்படுத்தப் போகிறது?)
மார்லன் சாமுவேல்ஸ் நின்றிருக்க, அவரைச் சுற்றி சடுதியாகச் சரியாய் ஆரம்பித்த விக்கெட்டுக்களும் , ஓட்டங்களைப் பெறுவதில் இருந்த சிரமமும் சேர்ந்து கடைசி ஓவர் வரை போட்டி சென்றது ஏற்படுத்திய பதைபதைப்பு விளையாடிய நாட்டின் ரசிகர்களுக்குக் கூட இராது.

Chokers பட்டத்தால் கேலி செய்யப்படும் தென் ஆபிரிக்கா இறுதிவரை போராடித் தோற்றது, பின்னர் நடைபெற்ற இலங்கை - இங்கிலாந்து போட்டிக்கு மேலும் முக்கியத்துவத்தை வழங்கினாலும், உலகக்கிண்ண, உலக T20 போட்டிகளில் தென் ஆபிரிக்காவின் தொடரும் தடுமாற்றத்தைக் காட்டி நிற்கிறது.

------------------

முந்தைய போட்டியில் இந்தியாவை கிட்டத்தட்ட வெல்லும் நிலையிலிருந்து ஒரே ஒரு ஓட்டத்தால் போட்டியைத் தாரைவார்த்த பங்களாதேஷ் நியூ சீலாந்து அணியை வெல்லாது என்பது அனைவரும் அறிந்ததே.

ஆனாலும் அந்த ஒரு ஓட்டப் போராட்டத்துக்குப் பிறகு இப்படி ஒரு மோசமான தோல்வியை நியூ சீலாந்து அணியிடம் சந்திக்கும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.

கறுப்புத் தொப்பிகளின் ஓட்டக்குவிப்பு மன்னரான கப்டில்லுக்கு ஒய்வு கொடுத்த போட்டியில், வில்லியம்சன், மன்றோ, டெய்லர் ஆகியோரின் நிதான ஓட்ட சேகரிப்பில் 145 ஓட்டங்களைப் பெற்றது.
அணித் தலைவர் வில்லியம்சன் இன்னும் form க்குத் திரும்பாதது நியூ சீலாந்துக்கு கவலை தரக்கூடிய ஒரு விடயம் என்று கடந்த இடுகையில் சொல்லி இருந்தேன்.
இந்தப் போட்டியில் 42 ஓட்டங்களைப் பெற்றுக் காட்டியிருக்கிறார்.
ஆனாலும் ஆடுகளத்தின் தன்மைக்கேற்ற நிதானமான ஆட்டம் தான்.

பங்களாதேஷ் அணி துரத்தப் பார்க்குமா என்று யோசிக்க முதலே, 70 ஓட்டங்களுக்கு சுருண்டு போனது.
இது பங்களாதேஷின் T20 சர்வதேசப் போட்டிகளில் மிகக் குறைவான ஓட்ட எண்ணிக்கை. (முன்னதாக 78 - இதுவும் நியூ சீலாந்துக்கு எதிராகவே)
நியூ சீலாந்துக்கு எதிராக ஒரு அணி பெற்ற குறைந்த ஓட்டங்களும் இதுவே.

தலா மூன்று விக்கெட்டுக்கள் எடுத்த சோதி, எலியட் ஆகியோரை வில்லியம்சன் கையாண்ட விதம் ரசிக்கக் கூடியது.
இந்தப் போட்டியிலும் சௌதீ, போல்ட் விளையாடியிருக்கவில்லை.

------------------

இங்கிலாந்து வென்றால் அரையிறுதி, தோற்றால் வெளியே, 
இலங்கை வென்றால் தான் இலங்கைக்கு மட்டுமில்லை, தென் ஆபிரிக்காவுக்கும் வாய்ப்பு என்ற நிலையில் ஆரம்பித்த  போட்டியில், ஆரம்பம்  என்னவோ அருமை தான்.

எதிர்பார்த்தது போலவே சுழலைப் பயன்படுத்தி இங்கிலாந்தை தடுமாற வைத்த அணித் தலைவர் மத்தியூஸ், தானும் கலக்கியிருந்தார்.
10 ஓவர்களில் 65 ஓட்டங்கள் மட்டுமே.
ஆனால் இங்கிலாந்து அதற்காகத் தடுமாறவில்லை.
சுழல்பந்து வீச்சாளர்கள் ஓயும் வரை காத்திருந்து, விக்கெட்டுக்களைக் கையில் வைத்துக்கொண்ட இங்கிலாந்து, ரோய், ரூட் ஆகியோர் இட்டுக் கொடுத்த அடித்தளத்தைப் பயன்படுத்திக்கொண்டு, அதிரடி மன்னன் ஜோஸ் பட்லரைக் களமிறக்கியது.

மரதன் போல போய்க்கொண்டிருந்த இங்கிலாந்தின் ஆட்டம், 100 மீட்டர்  வேகம் எடுத்தது. அணித் தலைவர் ஒயின் மோர்கனுடன் சேர்ந்து வெறும் ஆறு ஓவர்களில் 74 ஓட்ட இணைப்பாட்டம்.

போதாக்குறைக்கு மத்தியூசின் பந்துவீச்சு மாற்றங்களின் தடுமாற்றமும் சேர்ந்துகொள்ள இங்கிலாந்தின் ஆதிக்கம் உறுதியானது.
இலங்கை வசமிருந்த போட்டி, அப்படியே மாறிப்போனது.

திசர பெரேரா, டசுன் ஷானக ஆகியோரை எல்லாம் பட்லர் ஆடுகளத்தை நன்கு பரிச்சயம் ஆக்கிக் கொண்ட பின்னர் பந்துவீச இறக்கி பலிக்கடா ஆக்கிக்கொண்டார்.

திசர இத்தனை கால அனுபவத்துக்குப் பிறகும் இப்படியான கட்டங்களில் பக்குவமற்றுப் பந்துவீசுவது, இலங்கையின் துரதிர்ஷ்டமே.

கடைசி 5 ஓவர்களில் 72 ஓட்டங்கள் வாரி வழங்கப்பட்டன.
மத்தியூசின் இந்தப் பாரிய தவறு போட்டியை அப்படியே இங்கிலாந்து வசமாக்கிவிட்டது.

பெரிய இலக்கின் அழுத்தம்.
இலங்கை அணியின் ஆட்டம் ஆரம்பத்திலேயே தெறித்து விட்டது.
15/4 என்று இருக்கையில் இது இப்போதே முடிந்த கதை என்று எல்லோருமே நினைத்திருக்க, மத்தியூஸ் - கப்புகெதர இணைப்பாட்டம் ஆச்சரியமூட்டியது.

இலங்கை அணியிடம் சில காலமாகக் காணாமல் போயிருந்த பொறுமையுடன் கூடிய போராட்ட குணம் வெளிப்பட்டது இங்கே.
மத்தியூஸ் ஒரு finisher ஆக நின்று இலங்கை அணிக்கு பல போட்டிகளை வென்று கொடுத்திருக்கிறார்.
ஆனால் சாமர கப்புகெதர மிக நீண்ட காலமாக அவர் மீது வைத்திருந்த ரசிகரின் எதிர்பார்ப்பை இப்போது வாய்ப்புக் கிடைக்கும் நேரங்களில் கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படுத்துவது ஆறுதல்.

நிதானமாக ஆரம்பித்து புயலடித்த இணைப்பாட்டம் 10 ஓவர்களில் 80 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தது.
இலங்கை அணியின் வெற்றிக்கான துரத்தல் உயிர் பெற, சரியான தருணத்தில் திசர பெரேரா சேர்ந்துகொண்டார்.
பந்துவீச்சில் வாரி வழங்கிய ஓட்டங்களை திசர அடித்தாடி கொஞ்சம் எடுத்துக் கொடுத்தார்.
அவர் ஆட்டமிழக்க, தான் கொடுத்த ஓட்டங்களை அடித்தாடி எடுத்துக் கொடுக்க டசுன் ஷானக வந்தார்.

இருவரும் சேர்ந்து கொடுத்த ஓட்டங்கள் 18 பந்துகளில் 42 ஓட்டங்கள்.
அடித்துப் பெற்றவை 20 பந்துகளில் 35.

ஆனாலும் கால் தசைப்பிடிப்பு உபாதையுடனும் அதை சகித்துக்கொண்டு போராட்டத்தைத் தொடர்ந்த மத்தியூஸ் இலங்கை அணிக்கு ஒரு சரித்திரபூர்வ வெற்றியைப் பெற்றுத் தரப்போகிறார் என்ற நம்பிக்கை இருந்தது.

ஷானக ஜோ ரூட்டின் அபார பிடியெடுப்பில் ஷானக ஆட்டமிழக்க, மீண்டும் இங்கிலாந்தின் கரம் ஓங்கியது.
அந்தப் பிடியெடுப்பு  மிக உன்னதமான பிடிகளில் ஒன்று.
சில அங்குலங்கள் விலகி இருந்தால் நான்கு ஓட்டங்கள்..
போட்டியின் போக்கும் மாறியிருக்கும்.
ஷானக இலங்கை அணி மெருகு ஏற்றி எடுக்கக் கூடிய ஒரு வீரர்.

கிட்ட்டத்தட்ட ஒற்றைக் காலுடன் இறுதிவரை முயன்ற மத்தியூசினால் ஸ்டோக்ஸ் வீசிய அபாரமான இறுதி ஓவரில் வெற்றிக்குத் தேவையான 15 ஓட்டங்களைப் பெற முடியாமல் போக, இலங்கை 10 ஓட்டங்களால் தோற்றுப் போனது.

தனியொருவனாக நின்று போராடிய தலைவர் மத்தியூஸ் 54 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 73.
3 நான்கு ஓட்டங்கள், 5 ஆறு ஓட்டங்களுடன்.

இந்தப் போராட்ட குணம் மீண்டும் பழைய இலங்கை அணியை ஞாபகப்படுத்துகிறது.
தோற்றாலும் போராடித் தோற்றோம் என்பது ஆறுதலானது.
இனி மீண்டும் புதிதாய் இலங்கை அணி எழும் என்ற நம்பிக்கையும் வருகிறது.

மறுபக்கம் இங்கிலாந்து நம்பிக்கையுடன் அரையிறுதிக்கு உறுதியான அணியாகச் செல்கிறது.

----------------

ஆரம்பம் முதலே ஒரு வெற்றியுடனாவது தான் விடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஆப்கன் அணி இந்தப் பிரிவில் மிகப் பலம் வாய்ந்த அணிக்கு எதிராகத் தான் அதை செய்யப்போகிறது என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டோம்.

ஆனால் நடந்தது அது தான்..
ஆப்கன் அடித்த ஆப்பு, அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்றுவந்த மேற்கிந்தியத் தீவுகளுக்கு அடிக்கப்பட்டது தான் இந்த உலகக்கிண்ணத்தின் பெரிய அதிர்ச்சி.

மேற்கிந்தியத் தீவுகளின் பந்துவீச்சில் மிகத் தடுமாறி 123 ஓட்டங்களை மட்டுமே பெற்ற ஆப்கானிஸ்தான் வழமை போல தங்களது துடிப்பான களத்தடுப்பு, கட்டுப்பாடான பந்துவீச்சு மூலம் மேற்கிந்தியத் தீவுகளை மடக்கியது ஒரு விறுவிறுப்பான திரைப்படம் போன்றது.

ஆரம்பத்தில் பத்ரியின் அற்புதப் பந்துவீச்சும், ஆப்கனின் எதிர்கால நட்சத்திரம் நஜிபுல்லா சட்ரானின் அதிரடியும் ரசிக்க வைத்தவை என்றால், பிற்பாதியில் அமீர் ஹம்சாவின் பந்துவீச்சு - 4 ஓவர்களில் 9 ஓட்டங்கள் (இவர் தான் இங்கிலாந்துடன் ஒரே ஓவரில் 25 ஓட்டங்களைக் கொடுத்தவர்) மற்றும் ஆப்கானின் துரித களத்தடுப்பு.

இலங்கையை இறுதி வரை போராட வைத்தது.தென் ஆபிரிக்காவைத் தடுமாற வைத்தது.
இங்கிலாந்துடன் வெல்ல வேண்டிய போட்டியை வெல்லும் அவதியில் வீணாய் இழந்தது.
ஆனால், இன்று இந்தப் பிரிவில் பலமான அணிக்கு பலமாக ஒரு அடி கொடுத்து சரித்திரபூர்வமான வெற்றி !!! 
எப்பவோ கிடைத்திருக்கவேண்டிய வெற்றி, இன்று கிடைத்திருக்கிறது.
சிம்பாப்வே தவிர்ந்த டெஸ்ட் அணி ஒன்றுக்கு எதிரான முதலாவது சர்வதேச T20 வெற்றி. 
ஒருநாள் போட்டிகளில் பங்களாதேஷையும் வென்றுள்ளார்கள்.
போராட்ட குணத்துக்கும் பொறுமைக்கும் எப்பொழுதும் என்று அழைக்கும் இந்த வருங்கால சம்பியன்களுக்கு வாழ்த்துக்கள்.
ICC இன்னும் அதிகதிகமான போட்டிகளை வழங்கட்டும்; இன்னும் பல 'பெரிய' அணிகளைக் கவிழ்த்து ஆப்படிக்கும் இந்த ஆப்'GUN'

----------------------

இந்தியாவா அவுஸ்திரேலியாவா அரையிறுதியில் என்ற கேள்விக்குப் பதில் சொன்ன போட்டி, கடைசியாக விராட் கோலியின் போட்டியாக மாறிப்போனது.

கோலி பற்றி எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
காரணம் அவுஸ்திரேலியாவின் கையில் இருந்த போட்டியைக் கடைசி வரை தனி நபராக துடுப்போடு போராடி கரை சேர்த்தவர் கோலி தான்.

இந்தக் கால துடுப்பாட்ட வீரர்களில் தனக்கு சமகாலப் போட்டியாளர்களை எல்லாம் இப்படியான துரத்தியடிக்கும் ஆட்டங்களில் தூக்கி சாப்பிட்டு விடுகிறார் கோலி.

ஒருநாள், T20 போட்டிகளில் இலக்குகளைத் துரத்துவதில் விராட் கோலி காட்டும் அசாத்தியத் துணிச்சலும் அந்த நேரம் அவரது அசராத நம்பிக்கையும் பாராட்டுக்குரியவை.

எந்தவொரு தேவையற்ற அடிப் பிரயோகங்களுக்கும் செல்லாமல் அழகான துடுப்பாட்ட பிரயோகங்களுடன் எந்தவொரு பந்துவீச்சாளரையும் நொறுக்கித் தள்ளுவதில் கோலி ஒரு சூரன்.

தனது ஆக்ரோஷத்தால் எதிரணி ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்துக் கொண்ட விராட் கோலி அதே ஆக்ரோஷத்தைத் துடுப்பில் காட்டுவதன் மூலம் எதிரணி ரசிகர்களின் மதிப்பையும் அன்பையும் இப்போது சம்பாதித்து வருகிறார்.

முதல் 3.4 ஓவர்களில் 50 ஓட்டங்களைத் தடுமாற வைத்து ஓட்ட வேகத்தை மந்தப்படுத்தி 160 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்தியத்தில் மந்தமாகிக் கொண்டிருந்த ஆடுகளத்தின் தன்மை போலவே, தோனியின் பந்துவீச்சு மாற்றங்களும் ஒரு காரணம் என்றால், வேகம் குறைந்துகொண்டே செல்லும் ஆடுகளத்தில் மறுபக்கம் விக்கெட்டுக்கள் போய்க்கொண்டிருக்க கோலி ஒரு சுவராக (புதிய சுவர் என்றே சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்)மாறி நின்று கொண்டார் என்பது இந்திய அணிக்குக் கிடைத்த ஒரு வரமே.

முதலில் யுவராஜுடன் 45 ஓட்ட இணைப்பாட்டம்.
இது அணியைத் திடப்படுத்த யுவராஜ் தனது கால் உபாதையுடனும் கோலியின் வேகத்துக்கு ஈடு கொடுத்து ஓட்டங்களை ஓடிப் பெற்றது மெச்சக் கூடியது.

அடுத்து கோலி-தோணி இணைப்பாட்டம்.
வெற்றிக்கான 67 ஓட்டங்களை 31 பந்துகளில் இருவரும் சேர்ந்து குவித்தது அவுஸ்திரேலியாவுக்கு ஆப்பாக அமைந்தது.

வழமையாக பந்துவீச்சாளர்களை பாராட்டக்கூடிய விதத்தில் கையாளும் ஸ்டீவ் ஸ்மித் தடுமாறியது நம்பமுடியாத ஒரு விடயம்.

மெதுவான ஆடுகளத்தில் 2 ஓவர்களில் 11 ஓட்டங்களை மட்டுமே கொடுத்த சம்பாவுக்கு மேலதிக ஓவர்கள் கொடுக்காமல் விட்டதும், முதலிலேயே கோலியினால் தாக்கி நம்பிக்கை இழந்திருந்த ஃபோல்க்னருக்கு மீண்டும் கடைசி ஓவரை வழங்கியது என்று ஸ்மித் சொதப்பியிருந்தார்.

கோலியின் off drive கள்  ஒரு பக்கம் ரசிக்க வைத்தால், மறுபக்கம் கோலி- தோனி இருவரும் ஒற்றை ஓட்டங்களை இரண்டாக மாற்றிக்கொண்ட வேகமான லாவகம் அசத்தல்.


51 பந்துகளில் கோலி பெற்ற 82 ஓட்டங்கள் இந்தியாவின் மிகப்பெறுமதி வாய்ந்த சில ஓட்டங்கள்.
இனி எந்த ஆடுகளமாக இருந்தாலும் எந்தவொரு அணியும் கோலி இருக்கும்வரை இந்தியாவை இரண்டாவதாகத் துடுப்பெடுத்தாடப் பணிக்கப் பயப்படும்.

கோலி -  Genius & Chasing King.

--------------
அரையிறுதிகளில் இப்போது ஏற்கெனவே கிண்ணம் வென்ற மூன்று அணிகளோடு இதுவரை உலக T20 கிண்ணம் வெல்லாத நியூ சீலாந்தும்.

நாக்பூரின் தோல்விக்குப் பிறகும் பங்களாதேஷுடன் தடுமாறி இருந்தாலும், கோலி கொடுத்த அவுஸ்திரேலியாவுக்கு எதிரான வெற்றி இப்போது இந்தியாவுக்கு பெரிய உற்சாக மாத்திரை.

உலகக்கிண்ண அரையிறுதிகள் தாண்டியதில்லை என்ற சாபம் கடந்த உலகக்கிண்ணத்தோடு நீங்கினாலும் இன்னும் உலகக்கிண்ணம் ஒன்று இல்லை என்ற குறை போக்க உத்வேகத்தோடு போராடும் வில்லியம்சனின் நியூ சீலாந்து.

T20 சிறப்புத் தேர்ச்சி  வீரர்களோடு வெறித் தனமாக விளையாடும் இங்கிலாந்து, ஆப்கனிடம் அடி வாங்கிய புலியாகக் காயத்துடனும் அதே வேளை  2012 வெற்றியை மீண்டும் பெறக் காத்துள்ள மேற்கிந்தியத் தீவுகள்.

இனி களை  கட்டும் அரையிறுதிகள்.

---------
மெல்பேர்னில் அவுஸ்திரேலியா தனது ஐந்தாவது உலகக்கிண்ணம் வென்று இன்று ஒரு வருடப் பூர்த்தி.

March 24, 2016

அந்த ஒரு ஓட்டம் & Finisher தோனி - கையிலிருந்த வெற்றிகளைத் தாரை வார்த்த ஆப்கன் & பங்களா

ஒரே நாள், இரண்டு போட்டிகள், இரண்டு 'சிறிய'அணிகள் - பெரிய அணிகளை மண் கவ்வ வைக்கக் கூடிய சந்தர்ப்பங்களை தங்கள் அவசரம், கவனக்குறைவு, நிதானமின்மை காரணமாகத் தவறவிட்ட ஆச்சரியமான சந்தர்ப்பங்கள்.​



அதிர்ச்சியை(upset) அளித்திருக்கவேண்டிய இரு போட்டிகள், எதிர்பார்த்த 'பெரிய' அணிகளுக்கு வெற்றிகளைக் கொடுத்த வழமையான நாளாக மாறிப்போனது.



minnows என்று அழைக்கப்படும் சிறிய அணிகளுக்கு ஆதரவை இப்படியான போட்டிகளில் வழங்கும் என் போன்றவர்களுக்குக் கவலை தந்த இந்த முடிவுகள், இந்த உலக T20 தொடரில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தவிருந்த சந்தர்ப்பத்தைத் தவறவிட்டுள்ளன.


முக்கியமாக அரையிறுதிக்கு செல்லும் அணிகளில் ஏற்படவிருந்த மாற்றம் இப்போது இல்லாமல் போயுள்ளது.

இது உலக T20 கிண்ணத்தை வெல்லும் வாய்ப்பிலும் மாற்றம் தரலாம்.


நேற்று இந்தியாவும் இங்கிலாந்தும் தோற்றிருந்தால் அரையிறுதி வாய்ப்புக்களை இழந்திருக்கும்.


ஆப்கானிஸ்தான் இங்கிலாந்தை மடக்கி வீழ்த்தும் சந்தர்ப்பம் ஒன்றை டெல்லியில் 15 ஓட்டங்களால் தவறவிட்டது.

பெங்களூரில் நேற்றிரவு பங்களாதேஷ் அதைவிட மிக நெருக்கமாக வந்து 39.3 ஓவர்களுக்குத் தங்கள் கைவசம் இருந்த வெற்றியை அப்படியே கடைசி மூன்று பந்துகளில் இந்தியாவுக்குத் தாரை வார்த்துக் கொடுத்தது.


​இங்கிலாந்து அணியை தனது அபாரமான சுழல் பந்துவீச்சின் மூலம் ஒரு கட்டத்தில் 85 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகள் என்ற நிலையில் தடுமாற வைத்திருந்த ஆப்கானிஸ்தான், இதோ முதல் தடவையாக சிம்பாப்வே தவிர்ந்த இன்னொரு டெஸ்ட் அணியை வீழ்த்தப்போகிறது என்று அனைவருமே எதிர்பார்த்திருக்க, மொயீன் அலியையும் டேவிட் வில்லியையும் இணைப்பாட்டத்தை உருவாக்க தெரியாத்தனமாக அனுமதித்தது.

120 ஓட்டங்களுக்குள் சுருட்டக்க்கொடிய சந்தர்ப்பம் இருந்தும், அத்தனை நேரமும் தனது பந்துவீச்சாளரை சரியாகக் கையாண்டு கொண்டிருந்த அணித் தலைவர் அஸ்கர் ஸ்டனிக்சாய் ​19வது ஓவரை இடது கை சுழல்பந்து வீச்சாளர் ஹம்சாவுக்கு வழங்கினார்.

ஆடுகளத்தைப் பழகியிருந்த இரண்டு இடது கைத் துடுப்பாட்ட வீரர்களுக்குப் பந்து வீச ஒரு இடது கை சுழல்பந்து வீச்சாளர்..
அந்த ஓவரில் பறந்த 3 சிக்சர்களுடன் 25 ஓட்டங்கள்..

அத்தோடு போட்டியின் உத்வேகம் அனுபவமுள்ள இங்கிலாந்தின் வசமாகியது.

143 என்ற இலக்கு வெற்றி கிட்டும் என்ற அவாவுடன் காத்திருந்த ஆப்கன் அணிக்கு கொஞ்சம் தடுமாற்றத்தை வழங்கியிருக்கவேண்டும்.

வழக்கமான தடாலடி ஆரம்பத்தை வழங்கும் ஷசாட் முதல் ஓவரிலேயே ஆட்டமிழக்க இங்கிலாந்தின் கை ஓங்கியது.

சிறு சிறு அதிரடிகளுக்கு இடையில் விக்கெட்டுக்கள் சிதறிக் கொண்டே போயின.
இறுதியாக ஷஃபிக்குல்லா 20 பந்துகளில் 35 ஓட்டங்களை வெளுத்து விளாசினாலும், 15 ஓட்டங்களால் தோல்வி.

ஆப்கானிஸ்தான் ரசிகர்களையும் வீரர்களையும் காலாகாலத்துக்கும் உறுத்தி வாட்டப்போகும் ஒரு விடயம்..
அந்த 19வது ஓவரில் 25 ஓட்டங்கள்..
தோல்வி 15 ஓட்டங்களால்.

கொஞ்சம் பதறாமல், 85/7 என்பதிலே வைத்து இங்கிலாந்தை நசுக்கி இருந்தால்..

இதனால் தான் கிரிக்கெட்டில் அடிக்கடி சொல்லப்படுவது 
"அப்படி நடந்திருந்தால், ஆனால் போன்ற பதங்களைப் பயன்படுத்தாதீர்"- There is no IFs and BUTs in cricket.
 என்று.

​ஆப்கானிஸ்தான் விட்ட தவறைப் பற்றி பேசுகையில், மொயீன் அலியின் பொறுமை பற்றியும் பாராட்ட வேண்டும்.

-----------------
ஆசியாவில் இந்திய அணிக்கு இந்த சில மாதங்களாக சவால் விடக்கூடிய அணியாக உருவாகிவரும் ஒரே அணி என்றால் அது பங்களாதேஷாகவே இருக்கவேண்டும்.

2015 உலகக்கிண்ணத்தில் கண்ட காலிறுதித் தோல்விக்குப் பிறகு இந்தியாவைத் தங்கள் கிரிக்கெட் வைரிகளாக வரித்துக்கொண்ட பங்களாதேஷ் (ரசிகர்கள்) கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் இந்தியாவை தங்கள் அணி தோற்கடிக்கவேண்டும் என்று ஆசைப்படுகின்றனர்.
(முன்னைய பாகிஸ்தான் - இந்திய மோதல், பின் இன்று வரை சமூக வலைத்தளங்களில் பரவலாக இடம்பெறும் இலங்கை - இந்திய ரசிகர் மோதல் எல்லாம் இந்த வங்கப்புலி - இந்திய மோதல்களிடம் தோற்றுவிடும் போலத் தெரிகிறது)

அதற்கேற்றது போல இந்திய அணி பங்களாதேஷ் சென்றபோது ஒருநாள் தொடரில் பங்களாதேஷ் இந்தியாவை 2-1 என வீழ்த்தியது.

ஆசியக் கிண்ண 


T20

​ போட்டிகளிலும் இலங்கையும், பாகிஸ்தானும் வீழ்ந்துவிட, பங்களாதேஷே இந்தியாவுடன் இறுதிப் போட்டியில் மோதியது.



இதனால் நேற்றைய பெங்களூர் போட்டி இந்திய அணிக்கு ஒரு சவாலானதாகவே அமையும் என்று யார் கருதினார்களோ இல்லையோ, நான் கருதியிருந்தேன்.

அந்தளவுக்கு இந்தியாவின் பலவீனங்களை பங்களாதேஷ் அறிந்துவைத்துள்ளது என்று நான் கருதுகிறேன்.



பாகிஸ்தான் அணியிடம் தோற்றிருந்தாலும் அவுஸ்திரேலிய அணிக்கு பங்களாதேஷ் இறுதிவரை சவால் விடுத்தது.



இந்தியா நாக்பூரில் கவிழ்ந்து போனது, அடுத்து பாகிஸ்தானையும் கோலியின் துணையுடன் தடுமாறியே வென்றது.



இதற்கிடையில் போட்டி ஆரம்பிக்க முன்னரே மார்ச் 23இல் முன்னைய இந்தியாவின் உலகக்கிண்ணத் தோல்விகள் பற்றி மீம்கள் புறப்பட்டிருந்தன.




நாணய சுழற்சியின் வெற்றிக்குப் பிறகு இந்தியாவைத் துடுப்பாட அனுப்பியதிலிருந்து வங்கப்புலிகள் இந்தியாவை அடக்கிக்கொண்டே இருந்தார்கள்.
வழமையாக சீறும் in -form கோலியும் நேற்று அடங்கி, மடங்கிப் போனார்.
24 பந்துகளில் 24.
அதிக பட்ச ஓட்டங்கள் எடுத்த ரெய்னா மட்டும் கொஞ்சம் வேகமாக 23 பந்துகளில் 30 ஓட்டங்களைப் பெற்றார்.
கடைசிப் பந்துவரை நின்ற finisher தோனி கூட 12 பந்துகளில் தடுமாறி 13 ஓட்டங்களையே பெற்றார்.
(finisher என்று இதை வைத்து எழுந்த கேலிகளை இறுதிப் பந்தில் விக்கெட் காப்பாளராக தோனி finish செய்தது தனிக்கதை)

147 என்ற இலக்கை நோக்கிய பங்களாதேஷின் துடுப்பாட்டம் பெங்களுர் ஆடுகளத்தில் பெரிய சிரமமானது என்று யாரும் கருதியிருக்கவில்லை.

காரணம் ஆடுகளம் அப்படியானதொன்றும் பயங்கரமானதல்ல..
இந்திய வீரர்கள் பங்களாதேஷின் கட்டுப்பாடான பந்துவீச்சில் தான் ஆட்டமிழந்திருந்தார்கள்.

அதேபோல, தமீம் இக்பாலின் அதிரடி பங்களாதேஷை நேர்த்தியாக செலுத்தியது.
அஷ்வின், ஜடேஜா ஆகியோரின் சுழல்பந்து வீச்சு இடையிடையே பங்களாதேஷைத் தடுமாற வைத்தாலும், இந்தியா தவற விட்ட பிடிகளும் ஷகிப், சபிர் ரஹ்மான், சௌம்ய சர்க்கார் என்று வருவோர் எல்லாருமே அதிரடிகளை நிகழ்த்தி போட்டியை பங்களாதேஷ் பக்கமே வைத்திருந்தனர்.

இடையிடையே தோனியின் சமயோசிதம் ஜொலித்தது.
அதில் முக்கியமானது தோல்வி நிச்சயம் என்று தெரிந்த பொழுதிலும் களத்தடுப்பு வியூகங்களை நம்பிக்கையோடு மாற்றியதும், துரித வேக ஸ்டம்பிங் ஒன்றும்.

பலரும் கடைசிப் பந்தின் ஆட்டமிழப்பு பற்றி சிலாகித்தாலும் - சிலர் தோனி தவறவிட்ட பிடியோன்று பற்றி கிண்டல் அடித்தாலும் எனக்கு துரித வேகத்தில் தோனி சபீர் ரஹ்மானை ஆட்டமிழக்கச் செய்த அந்தத் துரித ஸ்டம்பிங் போட்டியின் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்திய ஒரு முக்கிய கட்டம் என்பேன்.

ஆரம்பத்தில் அடி விழுந்தாலும் இளையவர்கள் மீது நம்பிக்கை வைத்து கடைசி இரு ஓவர்களை அனுபவம் குறைந்த இளையவர்கள் பும்ரா, பாண்டியா ஆகியோருக்கு வழங்கிய தோனியின் மனத்திடம் பாராட்டுதற்குரியது.
பல நேரம் அதிர்ஷ்டத்தின் துணையும் இந்த Captain Cool பக்கம் இருப்பதையும் நாம் சொல்லியே ஆகவேண்டும்.

நேற்று இந்த இரு இளையவர்களும் பதறி ஓட்டங்களை அள்ளி வழங்கி இந்தியா தோற்றிருந்தால் தோனியும் சேர்த்தே சபிக்கப்பட்டிருப்பார்.

அஷ்வின், ஜடேஜாவின் இறுக்கமான ஓவர்களும், பும்ராவின் 19வது ஓவரும் கொடுத்த அழுத்தம், இறுதி பாண்டியாவின் ஓவரில் 11 ஓட்டங்கள் பெறவேண்டிய நிர்ப்பந்தத்தை வழங்கியது.

முஷ்பிக்குர் ரஹீம்  இரண்டாவது, மூன்றாவது பந்துகளில் அடித்த நான்கு ஓட்டங்கள் நிலையை இலகுவாக்கி, 3 பந்துகளில் 2 ஓட்டங்கள் என மாற்றியது.

ஒவ்வொரு ஓட்டமாக எடுத்து வெல்லவேண்டிய போட்டியை, அப்ரிடி, தோனி போல ஆறு அடித்து வெல்கிறோம் என்று அரைகுறை பலத்துடன் அடிக்கப் போய் அடுத்தடுத்து முஷ்பிக்குரும் , அவ்வளவு நேரம் நிதானமாக ஆடி வங்கத்தைக் கரை சேர்ப்பார் என்று நம்பிக்கை தந்துகொண்டிருந்த மஹ்முதுல்லாவும் ஆட்டமிழக்க - 
கடைசிப்பந்தில் இரண்டு ஓட்டங்கள் வெற்றிக்கு, ஒரு ஓட்டம் பெற்றால் Super Over என்று போட்டி விறுவிறுப்பின் உச்சக்கட்டத்தை எட்டியது.

நேற்று பங்களாதேஷின் எல்லா துடுப்பாட்ட வீரருமே சராசரியான ஓட்ட நிலை ஒன்றைப் பெற்ற பின்பு, தேவையற்று பெரிய அடிகளுக்குப் போய், கவனக்குறைவாக ஆட்டமிழந்தது கவனிக்கக் கூடியது.
வெற்றி பெறும்போது நிதானமாக அந்த வெற்றியை எடுத்துக்கொள்ளத் தெரியாமல் போயுள்ளது.
இவர்களில் நிதானமாக அண்மைக்காலத்தில் ஆடிவரும் மஹ்முதுல்லாவும் சேர்ந்தது தான் பங்களாதேஷின் துரதிர்ஷ்டம்.

பாண்டியா கடைசிப் பந்து வீசும் வரை அவருக்கு ஆலோசனையின் மேல் ஆலோசனை.
குறிப்பாக அணியின் தலைவர் தோனியும், சிரேஷ்ட பந்துவீச்சாளர் நேஹ்ராவும்.
இருவரது திட்டமும் off திசையைக் குறிவைத்தே அமைய, பந்துவீச முதலே துடுப்பாட்ட வீரர்கள் பெறவுள்ள bye ஓட்டத்தைத் தடுத்து ஆட்டமிழக்கச் செய்ய கையுறையைக் கழற்றி வைத்த தோனியின் சமயோசிதம் பாராட்டுதற்குரியது.

கொஞ்சமும் பதறாமல் தோனி ஓடிவந்தே விக்கெட்டைத் தகர்த்து ஆட்டமிழக்கச் செய்த விதம் இவரது Captain Cool என்ற பட்டத்துக்கான நியாயம்.

தோனி நிஜமான finisher ஆன மற்றொரு சந்தர்ப்பம்.

2007 உலக T20இல் இறுதிப்போட்டியின் இறுதி ஓவரை ஜோகிந்தர் ஷர்மாவுக்குக் கொடுத்த சந்தர்ப்பத்தை நேற்றைய கடைசி ஓவர் ஞாபகத்துக்குக் கொண்டுவந்தது.


இந்த ஒரு ஓட்டத் தோல்வி பங்களாதேஷுக்கு மிக நீண்ட காலம் மன உளைச்சலைக் கொடுக்கும்.
இந்தியாவுக்கு எதிரான முதலாவது T20 சர்வதேச வெற்றிக்கு இன்னும் காத்திருக்கவேண்டும்.

இந்தியாவின் தடுமாற்றம் தொடர்ந்தாலும் நேற்றைய மயிரிழை அதிர்ஷ்ட வெற்றி அவர்களை வியூக ரீதியில் நிறைய யோசிக்க வைக்கும்.

இனி அடுத்து அரையிறுதிக்கான முக்கியமான போட்டியான அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் சுழலை வைத்து சாதிக்க நினைக்கும்.

தற்போதைய அணிகளின் நிலைகள்.


பங்களாதேஷும் ஆப்கானிஸ்தானும் வாய்ப்பை இழந்துள்ளன.
ஏனைய அணிகள் அனைத்துக்குமே வாய்ப்பு உள்ளது.

நாளைய இரு போட்டிகளும் வாழ்வா சாவா போட்டிகள் தான்.

அவுஸ்திரேலியா எதிர் பாகிஸ்தான் 
அப்ரிடியின் இறுதிப் போட்டியாக அமையலாம்.
அவுஸ்திரேலியாவின் பலத்தைப் பரிசீலிக்கலாம்.
இந்த உலக T20 தொடருடன் தான் சர்வதேச ஓய்வை அறிவிப்பதாக அவுஸ்திரேலிய சகலதுறை வீரர் ஷேன் வொட்சன் இன்று அறிவித்திருந்தார்.

தென் ஆபிரிக்கா எதிர் மேற்கிந்தியத் தீவுகள் 

தென் ஆபிரிக்காவின் இறுதி வாய்ப்பாகவும், மேற்கிந்தியத் தீவுகளின் உறுதியைப் பரீட்சிக்கும் போட்டியாகவும் அமையும் இரண்டாவது போட்டி.






ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner