June 18, 2017

CT 17 - இறுதிப்போட்டியில் இந்தியாவின் ஆதிக்கம் - பலப் பரீட்சையில் ஜெயிக்குமா பாகிஸ்தான்?


ஒரு இந்திய - பாகிஸ்தான் மோதல்..
எனினும் முன்னைய ஷார்ஜா, டொரொண்டோ, ஏன்  ஆசியக் கிண்ண மோதல் அளவுக்கு பரபரப்பும் எதிர்பார்ப்பும் இல்லை.
காரணம் அண்மைக்கால இந்தியாவின் எழுச்சி + ஆதிக்கம் & பாகிஸ்தானின் சரிவும் இந்தியாவுக்கு எதிரான போட்டிகளில் சரணாகதியாகும் அளவுக்கான தடுமாற்றம்.

எனினும் இந்தப் பாகிஸ்தான் அணி கொஞ்சமாவது எதிர்பார்க்க வைக்கிறது.
காரணம் கறுப்புப் பக்கங்களோடு சம்பந்தப்பட்ட ஒரு சில வீரர்கள் பாக்.அணியில் இருந்தும் அதை விட துடிப்பான இளைய இரத்தம் பாய்ச்சப்பட்டு சப்ராஸ் என்ற ஒரு போராளி தலைவராக இருப்பது.

இந்தியாவுக்கோ நிதானமும் அனுபவமும் சேர்ந்த தோனி  அணியைத் தேவையான போது திடப்படுத்த ஆக்ரோஷமும் மோதும் ஆற்றலும் கொண்ட கோலியின் தலைமையிலான இந்தியா முழுக்கவே புதியது.
எந்த அணியாக எதிரணி இருந்தாலும் வெல்ல முயற்சிக்கும்.

அமீர் மீண்டும் பாகிஸ்தான் அணியில்..

300+ ஆடுகளம் ஒன்றில் இரண்டு அணிகளுமே தங்களது உறுதியான பந்துவீச்சாளர்களின்  30 முக்கியமான ஓவர்களை இறுக்கமாக்கிக் கொள்ளவே பார்க்கின்றன.

பாகிஸ்தானுக்கு இமாத் வசீம் தன்னை ஒரு விக்கெட்டுக்கள் பறிக்கும் சகலதுறை வீரராகவும், இந்தியாவுக்கு அதே பாத்திரத்தை ஜடேஜா ஏற்பதிலுமே இன்றைய போட்டியின் சாதகத்தன்மை தங்கியுள்ளது என்பேன்.
அஷ்வினின் சுழலையும் இன்று இந்தியா அதிகமாக எதிர்பார்க்கும்.
பாகிஸ்தானுடன் முதலாவது போட்டியில் மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்திய உமேஷ் யாதவ் அஷ்வினுக்குப் பதிலாக விளையாடுவார் என்று நான் எதிர்பார்த்தேன்.

பாகிஸ்தான் பந்துவீச்சில் கலக்கும் அணி என்றால் இந்தியா துடுப்பாட்ட அணி.
அதிகூடிய ஓட்டங்களைக் குவித்துள்ள முதலிருவரும் (தவான், ரோஹித் ஷர்மா) இந்தியரே. இவர்கள் இருவருடன் இலங்கையுடன் பூஜ்ஜியம் பெற்றாலும் மற்ற மூன்று போட்டியிலும் அரைச்சதங்கள் பெற்ற அணித்தலைவர் விராட் கோலியும் அசுர ஓட்டக்குவிப்பில் இருக்கிறார்கள்.
Dhawan, Rohit & Kohli vs Junaid, Amir & Hasan Ali

அதிக விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ள ஹசன் அலி 15 - 40 வரையான ஓவர்களைத் தீர்மானிக்கப்போகும் சூத்திரதாரி.
இந்த ஓவர்களில் தக்கவைக்கும் விக்கெட்டுக்களும், சேகரிக்கப்போகும் ஓட்டங்களும் போட்டியின் வெற்றியைத் தீர்மானிக்கும் காரணியாக அமையும்.

300 ஓட்ட ஆடுகளம் என்பதால் பகுதி நேரப் பந்துவீச்சாளர்கள் குறிவைக்கப்படுவார்கள்.
அதிலே இந்தியாவின் பலம் கொஞ்சம் அதிகமாகத் தெரிகிறது.
பாகிஸ்தான் அடிக்கடி Panickstan ஆவதால்..
இந்தியாவின் துடுப்பாட்ட வரிசை நீண்டதும் நம்பிக்கையானதுமாகத் தன்னை நிரூபித்திருப்பது.

சப்ராஸ் இலங்கைக்கு எதிரான போட்டியில் காட்டியது போன்ற பொறுமையையும், அசார் அலி அரையிறுதியில் காட்டிய நிதானத்தையும் இன்று காட்டவேண்டும்.
புதியவர் ஃபக்கார் சமான் பாகிஸ்தானின் ஆரம்பத் தலைவலியைப் போக்க வந்திருக்கும் வரம்.
அதே போல இந்தியாவின் ஆரம்ப ஜோடியும் பாகிஸ்தானின் அமீர்- ஜுனைத்த்தை தாண்டுவதில் இன்றைய போட்டியின் போக்கு இருக்கும்.

களத்தடுப்பு என்னும் பலவீனம் இரு அணிகளிடம் இருந்தாலும் ஜடேஜா, பாண்டியா போன்றோரால் இந்தியா மேவி நிற்கிறது.

தலைவர்களில் கோலியை விட சப்ராஸ் உணர்ச்சிவயப்படுத்தலைக் கட்டுப்படுத்தி நிதானமாக நிலைமையைக் கையாளக் கூடியவர். எனினும் கோலியின் ஆக்ரோஷமான, கவனம் சிதறாத துடுப்பாட்டம் மூலம் இந்தக் குறையை கோலி நிவர்த்தி செய்துவிடுகிறார்.
விக்கெட் எடுத்தால் கொண்டாடும், தனது சாதுரியப் பந்துவீச்சு மூலம் துடுப்பாட்ட வீரர்களைத் தடுமாற வைக்கும் ஹசன் அலி- கோலி  மோதல் இடைப்பட்ட ஓவர்களில் சுவாரஸ்யமாக இருக்கும்.

இப்படியான முக்கிய போட்டிகளின் அனுபவத்தில் இந்தியா முந்தி நிற்பதும், இந்தியாவுடனான போட்டிகள் என்றவுடனேயே பாகிஸ்தான் பயந்து நடுங்கியோ, காரணமின்றிய ஒரு அழுத்தத்தில் சிக்கி சின்னாபின்னமாவதை அடிக்கடி கண்டபிறகு இந்தியாவுக்கே இன்று அதிக வாய்ப்பு இருப்பதாகக் கணிக்கிறேன் :)

அத்துடன் நாணய சுழற்சி வெற்றியும், இந்தியாவின் அண்மைக்கால பலமான துரத்தியடித்தலும் சேர்ந்துகொள்கிறது இன்று. பாகிஸ்தான் இந்தியாவின் அதிரடி விளாசலில் இருந்து தப்பிக்கவேண்டுமாக இருந்தால் 300+ ஓட்டங்களைப் பெறுவதோடு ஆரம்ப விக்கெட்டுக்களை உடைக்கவேண்டும்.
பாகிஸ்தானின் ஓட்டக் குவிப்பைத் தடுக்க இந்தியாவின் ஆரம்ப ஓவர்களில் இன்று உமேஷ் யாதவ் இன்மை இந்தியாவைப் பாதிக்கும்.
எனினும் இந்தியாவின் வாய்ப்பே இன்று அதிகம்.

பி.கு - வரலாறும் அவ்வாறே சொல்கிறது ;)

இவ்விரு அணிகளும் தம்மிடையே மோதிய 128 போட்டிகளில் 72 தடவை பாகிஸ்தானும் 52 தடவை இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளன. (4 போட்டிகள் முடிவில்லை)

எனினும் ICC தொடர்களில் 8 க்கு 2 என்னும் கணக்கில் இந்தியா முன்னிலை பெறுகிறது.
(T 20 போட்டிகளையும் சேர்க்கையில் அது 13 -2 என மாறுகிறது)
ஆனால் (ஷார்ஜா போட்டிகளின் கைங்கர்யத்தில்) ஒரு நாள் போட்டிகளின் இறுதிப்போட்டிகளில் பாகிஸ்தான் 7 போட்டிகளையும் இந்தியா 3 போட்டிகளையும் வென்றுள்ளன.

மேலதிகமாக இந்தியாவின் அரையிறுதி வெற்றி போலவே, Michael Vaughanஉம் இன்று இந்தியாவே வெல்லும் என்று சொல்லியிருக்கிறார்.
இன்றைய இறுதிப் போட்டி பற்றிய விரிவான கட்டுரை ஒன்றை, தரவுகள் + விளக்கங்களுடன் ஒரு புதிய இணையத் தளத்துக்காக இங்கே எழுதியுள்ளேன்.
வாசித்துப் பகிருங்கள்..
உங்கள் விமர்சனங்களையும் வழங்குங்கள்.


June 15, 2017

இந்தியாவுக்கு இலகுவா? பழி தீர்க்குமா பங்களாதேஷ்? #CT17 - நேற்று பாகிஸ்தான்.. இன்று?

நேற்று பாகிஸ்தான்.. இன்று?
ஒரு மாதிரி ஆனானப்பட்ட இங்கிலாந்தையே வீட்டுக்கு அனுப்பீட்டிங்கள்ள என்று தகவல் அனுப்பி, கருத்திட்ட அன்புள்ளங்களுக்கு நன்றிகள் 
நம்ம விக்கி - (அச்சச்சோ விக்கிரமாதித்தன் என்று சொல்வதே இந்தக் காலகட்டத்தில் நல்லது. ) யின் ஆற்றல் இப்படித்தான் சில நேரம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி விடுகிறது.
பாகிஸ்தானின் அசத்தல் அப்படி.. வாழ்த்துக்கள்.
அவர்களால் எதுவும் முடியும்.. அவர்களே நினைத்து, விரும்பினால் என்பதை நேற்று(ம்) நிரூபித்திருந்தார்கள்.

இங்கிலாந்துக்குத் தான் கிண்ணம் என்று நான் உட்பட எண்ணி வைத்திருந்த அத்தனை பேர் முகத்திலும் கிலோக்கணக்கில் கரியை அப்பிப் பூசி விட்டனர் பாகிஸ்தானிய பந்துவீச்சாளர்கள்.

இங்கிலாந்து அணியைத் தடுமாற வைத்தது பாகிஸ்தானின் மத்திய நேர ஓவர்கள் தான்.
குறிப்பாக நேற்றைய நாயகன் ஹசன் அலி தான். இலங்கை அணியையும் சிதறடித்த ஒரு முக்கிய பந்துவீச்சாளர். துல்லியமான குறியுடன் அபரிதமான வேகமும் கொஞ்சம் reverse swing உம்  சேர்ந்தால் இந்த ஹசன் அலி.
விக்கெட் எடுத்த பிறகு இவர் எடுக்கும் திருவிழா தான் கொஞ்சம் கடுப்பேற்றும் விடயம்.


தவிர, அமீரின் உபாதை காரணமாக நேற்று அறிமுகமான ருமான் ரயீஸின் துல்லியமும் கவனிக்கக்கூடியது.
ஜுனைத் கான் இன்னொரு பக்கம் திடமாக, தூணாக.
இங்கிலாந்து அணியின் தடுமாற்றம் எந்தவொரு கட்டத்திலும் நேற்று அவர்களை தலை நிமிர விடவில்லை.
எந்தவொரு துடுப்பாட்டவீரரும் அரைச்சதம் பெற முடியாமல் போன அளவுக்கு பாகிஸ்தான் மிகத்துல்லியம்.

எனினும் பாகிஸ்தான் வழமையாக செய்வது போல துடுப்பாட்டத்தில் சிறிய இலக்காக இருந்தாலும் தடுமாறி தாமாகவே விக்கெட்டுக்களைக் கொடுப்பார்கள் என்று எதிர்பார்த்திருந்தது நேற்று நடக்காமல் போனது.
இலங்கைக்கு எதிரான போட்டியில் அதிர்ஷ்டமும் சப்ராசும் காப்பாற்றியது போல தேவையின்றி இலகுவான வெற்றி.
இங்கிலாந்தின் பந்துவீச்சாளர்களால் எந்தவொரு சிறு அழுத்தத்தையும் கொடுக்க முடியவில்லை.

அடித்தளம் போட்டுக்கொடுத்த ஆரம்ப ஜோடி பாகிஸ்தானின் நீண்ட தலைவலிக்கு மிகப்பெரிய நிவாரணி.
ஃபக்கார் சமான்  பாகிஸ்தானுக்கு ஒரு வரம் தான். நிதானமான அசார் அலிக்கு பொருத்தமான ஒரு ஜோடி.
1999க்குப் பிறகு முக்கியமான ஒரு தொடரின் இறுதியை எட்டியுள்ளது பாகிஸ்தான்.

அத்துடன் Champions Trophy வரலாற்றில் இரண்டாவது தடவையாக இரு ஆசிய அணிகள் மோதும் இறுதிப்போட்டி இது.
2002இல் இதற்கு முதல் இந்தியாவும் இலங்கையும் சந்தித்த இறுதிப்போட்டி மழையினால் கழுவப்பட்டு இரு அணிகளும் கிண்ணம் பகிரப்பட்டது.

எல்லாம் சரி..
பாகிஸ்தானின் ஆற்றல், அபாரமான ஆட்டத்தை வாழ்த்தாமல், ஆடுகளத்தன்மை தமக்கு சாதகமாக அமையவில்லை என்று குறைப்பட்டுக்கொண்ட இங்கிலாந்து அணித்தலைவர் ஒயின் மோர்கனை என்னவென்பது?
அவர் மீதான மதிப்பு அப்படியே சரேலென இறங்கிட்டது.

இங்கிலாந்து ஆடுகளம் ஒன்றிலேயே அவர்களது வீரர்களால் பிரகாசிக்க முடியவில்லை என்று தாங்கள் முன்பு ஆடிய ஆடுகளங்கள் போல அமையவில்லை என்று குறைப்பட்டு நொண்டிச் சாக்கு சொல்லி இவர் மீது நாம் அனைவருமே வைத்திருந்த மிகப்பெரிய பிம்பத்தை சிதைத்துக்கொண்டார்.

உண்மை தான் எமக்கே இங்கிலாந்தின் தோல்வி அதிர்ச்சியைத் தந்தது என்றால் ஒரு இலட்சிய அணியை 2019 உலகக்கிண்ணம் நோக்கி உருவாக்கி வரும் மோர்கனுக்கு அடித்து மிகப்பெரிய தாக்கமாக தான் இருந்திருக்கும்.
ஆனால் நேற்று மோசமாக விளையாடியதை ஆடுகளத்தை இவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை என்று ஏற்றுக்கொள்வதே சரியானதாகும்.

பாகிஸ்தானின் நேற்றைய வெற்றியும்  இந்த உத்வேகமும் கிண்ணம் மீதான அவர்களது ஒரு குறி இறுகியிருப்பதைக் காட்டுகிறது. ஆனால் இன்னமும் இவர்கள் அடுத்த போட்டியில் எப்படி சொதப்புவார்களோ என்ற ஒரு அவநம்பிக்கையைத் தராமல் இல்லை.
அதிலும் இந்தியாவை இறுதிப் போட்டியில் சந்தித்தால் பேய். பிசாசைக் கண்டது போல பதறித் துடித்து தாமாகவே வீழ்ந்து போவது எப்போது மாறும்?

-------------------------

 இன்றைய அரையிறுதி பங்களாதேஷ் அணியைப் பொறுத்தவரையில் முதலாவது. ICC தொடர்களில் அவர்கள் இதுவரை எட்டிப் பார்க்காத ஒரு கட்டம் இது.
இரு தடவைகள் வங்கப் புலிகள் இப்படியான கட்டத்தை எட்ட நினைத்தவேளையில் அவர்களது கனவைக் கருக்கிய, கிட்ட வந்த வாய்ப்பை இல்லாமல் செய்த அதே எதிரியை இன்று அரையிறுதியில் சந்திக்கிறார்கள்.
இறுதியாக இவ்விரு அணிகளும் ICC தொடர் ஒன்றின் முக்கிய போட்டியில் மோதியபோது நடந்தது சாதாரண கிரிக்கெட் ரசிகனுக்கும் ஞாபகமுள்ள ஒரு விடயமே..
அவசரப்பட்டு கொண்டாடி ஒரே ஒரு ஓட்டத்தினால் பங்களாதேஷ் தோற்றுப் போனது.

http://www.espncricinfo.com/…/eng…/current/match/951353.html
அதற்கு முதல் 2015 உலகக்கிண்ணக் காலிறுதி..
ரோஹித் ஷர்மாவின் ஆட்டமிழப்பு சர்ச்சை, பின்னர் இரு அணிகளின் ரசிகர்களின் சமூக வலைத்தள மோதல்கள் என்று இன்று வரை கசப்பு தொடர்கிறது.
எனினும் இப்போது பங்களாதேஷ் அடைந்துள்ள முன்னேற்றம், 2015 உலகக்கிண்ணத்துக்குப் பின்னர் படிப்படியாகக் கண்ட முன்னேற்றங்களின் காரணகர்த்தாவாக ஒரு இலங்கையர் - பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹத்துருசிங்க காரணமாக இருந்தாலும், இந்த மாற்றத்தின் விதை இன்று சந்திக்கவுள்ள இந்தியாவுடனேயே விதைக்கப்பட்டது என்பது பலரும் அவதானிக்காத ஒரு விடயம்.


2015இல் இந்தியா பங்களாதேஷுக்கு விஜயம் செய்து விளையாடிய ஒருநாள் தொடர் தான் அது.
தோனியின் தலைமையிலான முழுப்பலம் வாய்ந்த இந்திய அணியைத் துவம்சம் செய்ய பங்களாதேஷ் எடுத்த ஆயுதம் தான் நான்கு முனை வேகப்பந்துவீச்சு.
முஸ்டபிசூர் ரஹ்மான் தனது முதல் இரண்டு போட்டிகளிலும் முறையே 5,6 என்று விக்கெட்டுக்களை அள்ளியெடுத்து இந்தியாவை சுருட்டியிருந்தார்.
அதன் பின்னர் தான் வங்கப் புலிகள் சொந்த மண்ணில் வந்த அணிகளையெல்லாம் வேட்டையாடி மகிழ்ந்து பலம் பெற்று, பின் இலங்கையில் வைத்தே சிங்கங்களை சிதறடித்துவிட்டு தங்கள் பலம் அப்படியொன்றும் திடீரெனக் கிடைத்த மாயாஜால வரம் அல்ல என்று நிரூபித்துள்ளார்கள்.
படிப்படியாகக் கட்டமைக்கப்பட்ட பங்களாதேஷ் அணிக்கு இந்த Champions Trophy இல் தங்கள் எழுச்சியை அடையாளப்படுத்திக்கொள்ள நியூசீலாந்து அணிக்கெதிரான வெற்றி உதவியிருக்கிறது. இன்றைய போட்டி பங்களாதேஷின் வரலாற்றில் மிகப்பெரிய வெற்றியை எழுத உதவலாம்.

எனினும் கோலி தலைமையிலான இந்தியா இலங்கை அணியுடன் கண்ட சறுக்கல், கொஞ்சம் மிதப்பில் இருந்த நடப்புச் சாம்பியன்களுக்கு விழிப்பைக் கொடுத்துள்ளது போல தெரிகிறது.
ஏற்கெனவே துடுப்பாட்டத்தில் தனது வலிமையை நம்பியுள்ள இந்தியா அண்மைக்காலமாகஆடுகளங்களுக்கு ஏற்ப பந்துவீச்சின் வியூகங்களை மாற்றும் திடத்தைக் கொண்டுள்ளது.

இந்திய, ஆசிய ஆடுகளங்கள் என்றால் (பகுதி நேரப் பந்துவீச்சாளரையும் சேர்த்து) சமயத்தில் நான்கு சுழலையும் பயன்படுத்துவதும், வெளிநாடுகளில் புவனேஷ்குமார், பும்ரா, யாதவ், பாண்டியா என்று வரிசையாக அடுக்கக்கூடிய நம்பிக்கையும் வளர்ந்திருக்கிறது.
இன்றும் இந்திய அணிக்கான வாய்ப்புக்களே மிக அதிகம் என்பது சொல்லித்தான் தெரியவேண்டும் என்றில்லை.
தமீம் இக்பாலின் தொடர்ச்சியான சிறப்பான ஆட்டமும், கடைசியாக நடந்த போட்டியில் ஷகிப், மஹ்மதுல்லாவின் சதங்கள் என்று பங்களாதேஷ் ஓட்டங்களோடு உலா வர, தவானின் உச்சபட்ச உற்சாக ஓட்டங்களும், மீண்டும் எழுந்துள்ள கோலியின்துடுப்பாட்ட அதிரடியும் இந்தியாவுக்கு திடம் அளித்துள்ளது. இது தவிர தோனியின் அனுபவம் ஒரு பக்கம், இன்று முன்னூறாவது போட்டியில் ஆடும் யுவராஜ் சிங்கின் அடித்து நொறுக்கும் அதிரடி form என்பன மேலும் பெரிய பலங்கள்.
முக்கியமாக இப்படியான அழுத்தம் நிறைந்த போட்டிகளை சமாளிக்கும் அனுபவத்திறன் இந்திய அணிக்கு அதிக சாதகத் தன்மையை இன்றைய நாளில் வழங்கலாம்.
எனினும் இதைக் குறித்துக்கொள்ளுங்கள்...
ஆரம்ப ஓவர்களில் பறிக்கப்படும் விக்கெட்டுகளும், 20 - 40 ஓவர்களில் சேர்க்கப்படும் ஓட்டங்களும் தான் போட்டியின் போக்கை தீர்மானிக்கும்.
இதற்கு களத்தடுப்பு முக்கியமாக அமையும்.
முக்கியமான பிடிகளைத் தவறவிடும் அணி (இலங்கையைப் போல), ரன் அவுட் வாய்ப்புக்களை நழுவவிடும் அணி இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழக்கும் என்பது உறுதி.

கால்பந்து உலகக்கிண்ணத்தில் ஒக்டோபஸ் போல இங்கிலாந்தின் முன்னாள் அணித்தலைவர் மைக்கேல் வோன் வேறு இன்று இந்தியா வெற்றிபெறும் என்று ஆரூடம் சொல்லி இந்திய ரசிகர்களின் சாபத்தை வாங்கிக் கட்டியுள்ளார் 

நான் அப்படியெல்லாம் இல்லாமல் - நேற்று சொன்ன மாதிரியே பலத்தை அடிப்படையாக வைத்தே ஏன் கணிப்பை முன்வைத்துள்ளேன். (நம்புங்கப்பா..
டீல் பேசலாம் என்று சொல்லியும் யாரும் சீரியசாக அணுகவில்லை என்பது பயங்கர ஏமாற்றமே)
நாணய சுழற்சி வெற்றி மூலம் இந்தியா முதலாவது வாய்ப்பைத் தனதாக்கியுள்ளது.
ஆடுகளத்தின் சாதகத்தை தனது பந்துவீச்சாளருக்கு முதலில் விக்கெட்டுக்களை எடுக்கும் வாய்ப்பைக் கொடுத்துள்ளது.
பங்களாதேஷ் 320 ஓட்டங்களையாவது குவித்துக்கொண்டாலே தங்கள் நான்கு வேகப்பந்துவீச்சாளரோடு இந்த உலகக்கிண்ணத்தின் மற்றொரு upsetஐ நிகழ்த்தலாம்.
(இந்தியாவோடு எப்போதுமே சிறப்பாக செய்யும் ருபெல் + முஸ்டாபிசூர் ஆகியோரைக் கவனியுங்கள்)
இல்லாவிடில் இந்தியா வெறியோடு துரத்தி அடிக்கும்.
(பதிவு அடித்து ஏற்றும் இந்த நேரம் ஷகிப் அல் ஹஸனின் விக்கெட்டும் போயிருப்பது போட்டியை இந்தியாவின் பக்கம் நகர்த்தியுள்ளது என நம்புகிறேன். 280 வரை ஓட்ட எண்ணிக்கையைக் கொண்டுபோனால் மேக  மூட்டமான சூழ்நிலையில் மின்விளக்குகளும் ஒளிரும் நிலையில் பங்களா பந்துவீச்சாளர்கள் கொஞ்சம் அழுத்தங்களை ஏற்படுத்தலாம்)

இன்று அது நடந்தால்... Champions Trophy இன் சரித்திரத்தின் மிகப்பெரிய தலைகீழ் முடிவாக அமையும்.
இந்தியா வென்றால் இந்தோ - பாக் மோதலுக்கு கிரிக்கெட் உலகமும் சமூக வலைத்தளங்களும் தயாராகிவிடும் 
இன்றைய மழை கலந்த காலநிலை போட்டியின் முடிவில் Duckworth Lewis ஐ அழைக்கும் வாய்ப்பும் நிறையவே இருப்பதாகவே தெரிகிறது.
இன்றைய நாள் இனிதாகட்டும் 

June 14, 2017

CT 17 யாருக்கு? யார் கிண்ணத்தை வெல்லவேண்டும்?


இலங்கையின் கிண்ணக் கனவு கலைந்தது..
(மெல்லிய கோடாக மட்டுமே இருந்த நம்பிக்கைக்கு இந்தியாவுக்கு எதிரான வெற்றியும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சில கட்டங்களும் சின்னதொரு ஆசையை ஊட்டியது காலத்தின் கோலம் தான் )
*இலங்கை கிரிக்கெட் அணியின் எதிர்காலம், குறிப்பாக தடுமாறும் பந்துவீச்சு பற்றி விரிவான ஒரு இடுகையை Champions Trophy தொடர் முடியும் நேரம் தரலாம் என்று நம்பியிருக்கிறேன்.

ஆனால் மூன்று ஆசிய அணிகளோடும் போட்டிகளை நடத்தும் நாடும் அதிக வாய்ப்புடைய நாடும், இந்தத் தொடரில் இதுவரை ஒரு போட்டியிலும் தோற்காத ஒரே அணியுமான இங்கிலாந்தோடும் இன்றும் நாளையும் அரையிறுதிகள்.
நிறையப்பேருக்கு இப்போதிருக்கும் ஆர்வம், என்னைப்போன்ற இலங்கை ரசிகர்கள் எந்த அணிக்கு ஆதரவு என்று..
அநேகரின் ஊகம் இந்தியாவுக்கு கிடைக்கக் கூடாது என்று எல்லா இலங்கை ரசிகர்களும்வேண்டிக்கொள்வார்கள் என்பதே,,
காரணம் கலாய்த்தல்கள், கேலிகளாக ஆரம்பித்து துவேசம் கக்கி, தூசன மோதலாக தனிப்பட்ட பகைத் தாக்குதல்களாக மாறி நிற்கிறது இலங்கை - இந்திய ரசிகர் மோதல்கள்.
ஆனால், நான் முன்னரே சொன்னது போல இம்முறை அதிக வாய்ப்புடைய இரு அணிகளாக Champions Trophy ஆரம்பிக்க முதலே நான் சொல்லி வைத்த இரு அணிகளான இந்தியா - இங்கிலாந்து (2013 இறுதி போல) சந்திக்கத் தான் அதிக வாய்ப்புத் தெரிகிறது.

எனினும் இதுவரை கிண்ணம் வெல்லாத அணிகளில் ஒன்று - பாகிஸ்தான் தவிர்த்து வெல்வதே எனக்கு இப்போது விருப்பம்.
(பாகிஸ்தான் அந்த அணியின் நிறைந்து கிடக்கும் திறமை, உத்வேகம் தாண்டி ஊழல், சந்தேகம் ஆகியவற்றின் நிழல் இன்னும் படிந்து கிடப்பதாலும் முக்கியமான போட்டிகளில் நம்பமுடியாமல் சொதப்பிவிடுவதாலும் வேண்டாம்)
இந்தியாவுக்கும் வேண்டாம்..
போன முறை வென்றார்களே..
இப்போது இந்திய ரசிகர்கள் - Indian hater இடம் இதைத் தானே எதிர்பார்க்கலாம் என்று சிரிப்பது தெரிகிறது.
இருக்கட்டும்..
நடப்புச் சம்பியன்கள் மீண்டும் வெல்வதை விட, புதிய அணி ஒன்று வெல்வது கிரிக்கெட்டுக்கும் நல்லது இல்லையா?


2015 உலகக்கிண்ணம் முதல் படிப்படியாக முன்னேற்றம் கண்டு, அனேக அணிகளை சொந்த மண்ணிலும், வெளி மண்ணிலும் வீழ்த்தி,எழுச்சி கண்டு வரும் பங்களாதேஷுக்கு இந்த வெற்றிக்கிண்ணம் 1996 உலகக்கிண்ணம் இலங்கைக்குக் கொடுத்த உத்வேகத்தையும் புத்தெழுச்சியையும் கொடுக்கும்.
ஷகிப் அல் ஹசன், முஷ்பிக்குர் ரஹீம், தமீம் இக்பால் போன்ற இப்போது அனுபவம் வாய்ந்த நட்சத்திரங்களோடு, அணித் தலைவர் மோர்ட்டசாவுக்கும் இத்தனை காலம் பட்ட கஷ்டங்களுக்கும் இட்ட முயற்சி விதைகளுக்கும் நல்ல அறுவடையாக அமையும்.

பலருக்கு பங்களாதேஷ் அணியைப் பிடிப்பதில்லை - அவர்களது ரசிகர்களின் அளவுகடந்த அலப்பறை காரணமாக.
அந்த ஆர்வக்கோளாற்றுக்கு காரணம் வெற்றிக்காக காத்திருக்கிறார்கள்.
சகல துறையிலும் நேர்த்தி பெற்ற அணியாக சர்வதேசத் தரம் வாய்ந்த இளம் வீரர்களோடு பங்களாதேஷ் எழுந்து வருகிறது.
இது புலிகள் அவர்களுக்கான நேரம்.

ஆனால், பங்களாதேஷை விட இந்த CT 2017 ஐ வெல்ல மிகப் பொருத்தமான அணி இங்கிலாந்து.

2010இல் இதுவரை இங்கிலாந்து வென்றுள்ள ஒரேயொரு உலகக்கிண்ணமான World T20 வென்ற Collingwood இன் தலைமையிலான அணியை விட உறுதியான அணி.
பந்துவீச்சு, துடுப்பாட்டம், களத்தடுப்பு என்று சகலதுறையிலும் பலம் பொருந்திய அணி.
அடுத்த உலகக்கிண்ணத்தைக் குறி வைத்து பொறுக்கி எடுத்து உருவாக்கப்பட்ட அணி.
கடந்த ஒன்றரை வருடகாலமாக எல்லா அணிகளுக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கும் அணி.
ஒருநாள் துடுப்பாட்டத்தில் உலகின் மிகச்சிறந்தவரிசை இங்கிலாந்தினுடையது என்று அடித்துச் சொல்வேன்.
மற்ற அணிகளில் இப்படியொரு அதிரடி ஆட்டம் ஆடும் Bairstow போன்ற வீரரை இன்று வரை அணிக்கு வெளியே வைத்திருக்க மாட்டோம்.
முதற்தர தெரிவான சகலதுறை வீரர் வோக்ஸ் காயமடைந்து இரண்டு ஓவர்களோடு முதல் போட்டியிலேயே வெளியேற தடுமாறாமல் அவரது பிரதியீடு ஜேக் போல் அள்ளிஎடுக்கிறார் விக்கெட்டுக்களை.
இம்முறை வெல்லாவிட்டால் வேறு எப்போது என்னும் அளவுக்கு சொந்த மண்ணில் வாய்ப்புக் காத்துக் கிடக்கிறது.
வெல்லட்டும் மோர்கனின் அணி.

(CT17 தொடர் ஆரம்பிக்க முதலே இலங்கை, அவுஸ்திரேலிய அணிகள் மீதான நம்பிக்கையீனமும் சேர்ந்துகொள்ள நமக்கு நெருக்கமான நண்பர்களிடம் "இங்கிலாந்து அணிக்குக் கிண்ணம் கிடைப்பதே பொருத்தமானதும் அந்த அணி அண்மைக்காலமாகக் காட்டிவரும் அதீத ஈடுபாடு + அர்ப்பணிப்புக்கும் பரிசுமாகும்" என்று சொல்லி வைத்திருந்தேன்)

இங்கிலாந்து எதிர் பங்களாதேஷ் இறுதிப்போட்டி ஒரு சுவாரஸ்யமானதாக அமையும்.
இங்கிலாந்துக்கு அடுத்தபடியாக பங்களாதேஷ் தான் நான்கு வேகப்பந்துவீச்சாளர்களை நம்பி இந்த ஆடுகளங்களில் பயன்படுத்தும் ஒரே அணி.
ஆசிய அணி ஒன்று இப்படி உறுதியான முடிவோடு விளையாடுவது அந்த அணியின் மீதும் ஹத்துருசிங்க, மோர்ட்டசா மீதும் மதிப்பை ஏற்றி வைக்கிறது.

ஆனால், கணிப்புக்கள், எதிர்பார்ப்புக்கள் எல்லாம் தாண்டி கிரிக்கெட்டில் எதிர்பாராதவை நடைபெறுவதும் உண்டு.
இந்தியா - பாகிஸ்தான் இறுதிப்போட்டியை விரும்பும் 'போர்' விரும்பிகளும் இருக்கிறார்கள்.

இந்தியாவின் ஆதிக்கமும் அசுர பலமும் எல்லோரும் அறிந்தவை.

கோலி என்ற ஆக்ரோஷம் மிக்க தலைவரே போதும், தரையோடு தரையாக வீழ்ந்து கிடக்கும் அணியைத் துள்ளிப்பாயும் வேங்கைகளாக மாற்றிவிட.
தோனியின் சாதுரியமும் அனுபவமும் சேர்ந்துகொள்ள அவர்களது துடுப்பாட்டப் லமும் துணையாக இருக்கிறது. கூடவே பந்துவீச்சு - இலங்கை அணி துரத்தி அடித்த அந்தப் போட்டி தவிர இதுவரை காலமும் ஒருநாள் போட்டிகளின் ஸ்திரமான பந்துவீச்சாகத் தெரிந்ததும் தெரிவதும் இதுவே. எந்த அணியையும் தடுமாற வைக்கக்கூடியது.

2013 இறுதிப்போட்டி போல இந்தியாவின் வெற்றி அலை தொடரலாம்.

அல்லது தோல்விகளிலிருந்து மீண்டு 1992இல் கிரிக்கெட் உலகை ஆச்சரியப்படுத்தியது போல பாகிஸ்தான் சப்ராசின் தலைமையில் எழுந்தாலும் அதிசயமில்லை.

நீண்ட காலத்துக்குப் பிறகு ஒரு அதிரடியும் ஓட்டக்குவிப்பும் கலந்த ஆரம்ப ஜோடி கிடைத்துள்ளது. ஹபீஸ், ஷோயிபின்  அனுபவம், அசார் அலியின் நிதானம், இளைய வீரர்களின் அதிரடி, சப்ராஸின் கூலான அணுகுமுறை, பலமும் பயங்கரமும் நிறைந்த வேகப்பந்துவீச்சு.
இதை விட ஒரு பாகிஸ்தான் அணி எப்படியிருக்கவேண்டும்?
ஆனால் எதிராணிகளால் சுருட்டப்படுவதை விட பாகிஸ்தான் தன்னைத்தானே தோற்கடித்துக்கொள்வது தான் அதிகம். சப்ராஸ் + அமீரினால்  இலங்கைக்கு எதிராக அப்படியொரு  தோல்வியடையாமல் தப்பித்துக்கொண்டது. ஆனால் கடந்த போட்டியின் நாயகர்களில் ஒருவரான மொஹமட் அமீர் உபாதை காரணமாக இன்று விளையாடவில்லை.

சுருக்கமாக - திறமையை அந்தந்த நாளில் காட்டும் அணிகளில் ஒன்று வெல்வதில் நாம் என்ன சொல்ல முடியும் 
கொள்ளுப்பிட்டி பிலாவூஸ் மட்டன் கொத்து மொரட்டுவையில் உள்ள திசர பெரேரா (இது வேற திசர) வீட்டு நாய்க்குத் தான் கிடைக்கும் என்றால் அதை யாராவது மாற்ற முடியுமா? 

*எனது Facebook நிலைத்தகவலாக இன்று பகிர்ந்ததை மேலும் விரித்து இங்கே பதிவிட்டுள்ளேன்.

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner