February 28, 2010

கோ கா கூ - ஞாயிறு ஸ்பெஷல்


கோவா

கடந்த வாரம் கோவா பார்த்தேன்..
பலர் பலவிதமாக கோவா பற்றிப் பேசிவிட்டார்கள்.. சிலர் ஹோமோ செக்சுவல் படம்,, குடும்பத்தோடு போகாதீர்கள் என்று பயமுறுத்தி வேறு இருந்தார்கள்.எல்லோரும் வயதுவந்தவர்களாக (என் குட்டி மகன் தவிர) இருக்கையில் இதென்ன பெரிய விஷயம்?அதுவும் படுக்கையறை அசைவுகளையே நடனமாக சின்னத்திரை வழியே கூட வீட்டுக்குள் கொண்டுவந்த பிறகு கோவா என்ன பெரிய விஷயம் என்று மனைவியுடனேயே போயிருந்தேன்.

கதை எனப் பெரிதாக எதுவுமில்லை.வழமையான தனது நட்சத்திரப் பவர் இல்லாத நடிகர் பட்டால நகைச்சுவைக் கடிகளுடன் சிரிக்க வைத்துள்ளார் வெங்கட் பிரபு.ஆனால் சென்னை 28 ,சரோஜா ஆகியன தந்த ரசனை சிறப்போ,சிரிப்பின் தரமோ இதில் இல்லை எனத் தான் சொல்லவேண்டும்.

யுவன் ஷங்கர் ராஜாவும் முன்னைய இரு படங்களின் அளவுக்கு இதில் முன்னின்று உழைக்கவில்லை.

பிரேம்ஜி அண்ணனின் ஆசீர்வாதத்தோடு படத்தின் ஹீரோவாக முன்னிறுத்தப்படுகிறார்.குழப்பமாக ஆங்கிலம் பேசும் ஜெய்யும்,ப்ளே போயாக தன்னைக் காட்டிக்கொள்ளப் பார்க்கும் வைபவ்வும் பல காட்சிகளில் ரசிக்கவே வைக்கிறார்கள்.
இவர்களுக்குப் பிறகு தான் சின்ன வயதில் அணிந்த அதே ஆடைகளோடு தூக்கலான கவர்ச்சியோடும், கதை பேசும் கண்களோடும் வரும் பியாவும், ஜெசிக்கா அல்பாவாக வரும் அந்த வெள்ளைக்காரப் பெண்ணும், சிக்ஸ் பக் காட்டுகின்ற அரவிந்தும் மனதில் நிற்கிறார்கள்.

கோவா என்றாலே பீச் என எங்களுக்கு ஞாபகம் வருவது போய், வெங்கட் பிரபு புண்ணியத்தினால் இனிமேலும் பிகினி பெண்களும், குடியும் கும்மாளமும் தான் ஞாபகம் வரப் போகின்றது..
ஆனாலும் பார்க்கும்போது நல்லாத் தான் இருக்கு..

ஜாக்-டானியல் உறவு படு சீரியசாக அவர்கள் நடித்தாலும் சிரிப்பை வரவழைக்கும் காட்சிகள்.எனினும் அவர்களுக்கிடையிலும் காணப்படும் உறவு பற்றிய பொறாமை,possesivness ஆகியனவற்றை இயக்குனர் காட்டியிருக்கிறார்.

பிரேம்ஜி இன்னும் எவ்வளவு காலம் தான் முன்னணி ஹீரோக்களின் பஞ்ச வசனங்களை வைத்து தன் பிழைப்பை ஓட்டப் போகிறார்?
வெங்கட் பிரபுவின் துளி ஐடியாவை வைத்து தமிழ்ப்படம் என்ற கோட்டையே கட்டிவிட்டார்கள்.
ச்நேஹாவும் சில காட்சிகளில் கிறங்கடிக்கிறார்.ஆனால் அருமையான நடிகை இப்படி அரைகுறை சரக்கானது தான் விதியோ?இவர் திறமையை வெங்கட் பிரபு நல்லாவே 'பயன்படுத்தி' உள்ளார் எனத் தெரிகிறது.
படத்தின் இறுதிக்காட்சி உண்மையில் அசத்தல்.அதிலும் சிம்புவின் ஐடியா கலக்கல்.

பார்க்கப் பரவாயில்லை.. ரசிக்க ஓகே என்று சொல்லலாமே தவிர இதை உலக தரப்படம் என்று சொல்ல நான் என்ன சாருவா?




காப்பாத்துங்கோ..

இப்போது எனது இரண்டு வயதுக் குழப்படி செல்ல மகன் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தைகளில் ஒன்று இது.
நாம் பேசும் வார்த்தைகள் பலவற்றை டக்கென்று எடுத்துக் கொள்ளும் இவன் நிறையப் பேச முயல்கிறான்.
சாப்பாடு,குளி,பேனா, புக்,டோய்ஸ்,வேணாம் போன்ற சின்ன சின்ன முக்கியமான வார்த்தைகளோடு இந்த 'காப்பாத்துங்கோ'வும் அடிக்கடி வருகிறது.

துறு துறுவென்று எல்லா இடமும் ஓடிப் போய் ஒளிந்துகொண்டும், எங்கேயாவது மேசை,கட்டில்,ஜன்னல் என்று உயரமான இடங்களில் ஏறி நின்றும் விளையாட்டுக் காட்டும் அவன் தன்னால் இறங்கவோ,சமாளிக்கவோ முடியாவிட்டால் "அப்பா காப்பாத்துங்கோ" அல்லது "அம்மா காப்பாத்துங்கோ" என்று கூப்பிடுகிறான்.

நாங்கள் அதிகம் வீட்டில் பயன்படுத்தாத வார்த்தையான இதை எங்கிருந்து பொறுக்கி எடுத்தான் என்று தேடினால்...
சுட்டி டிவி யில் ஒளிபரப்பாகும் ஜி பூம் பாய் என்ற தமிழ் கார்ட்டூனிலிருந்து..

இன்னும் என்னென்ன சொல்லி எம்மை ஆச்சரியப்படுத்தப் போகிறானோ?





கூட்டணி,கூட்டு & கூத்து

தேர்தல் பரபரப்பு ஓவொரு நாளும் தீப்பிடித்தது போல பரவுகிறது..

கொள்கைகள் எப்படி இருந்தாலென்ன, கோட்பாடுகள் என எவை இருந்தாலென்ன.. அதெல்லாம் கிடக்கட்டும் போ என்று கூட்டணிகள் பலப்பல பெயர்களில் உருவாகியுள்ளன.சின்னங்கள்,பெயர்கள் பற்றி வாக்காளர்கள் மட்டும்மல் போட்டியிடும் வேட்பாளர்களுக்கே குழப்பம் வந்துவிடும்.


பின்னே, கொழும்பு மாவட்டத்தில் 19 உறுப்பினர்களைத் தெரிவு செய்ய 22 அரசியல் கட்சிகளும்,16 சுயேச்சைக் குழுக்களும் மொத்தம் 836 வேட்பாளர்களைக் களமிறக்குகின்றன.

ஒரு சில உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படவுள்ள அம்பாறை(திகாமடுல்ல) மாவட்டத்தில் கட்சிகளும்,குழுக்களுமாக 66 போட்டியிடுகின்றன.

யாழ்ப்பாணத்தில் மட்டும் 15 கட்சிகள்&12 சுயேச்சைக் குழுக்கள்..
திருகோணமலையில் 17 கட்சிகள்&14 சு.குழுக்கள்..

வாக்குகள் பிரிந்து,பிரதிநிதித்துவம் குறைந்து போனால் எல்லாம் இவர்களுக்குக் கவலையில்லை.
போகிறபோக்கில் வாக்காளர்களை விடப் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை கூடிவிடும் போல.

கூட்டுக்கள்,குத்து வெட்டுக்கள் எல்லாம் கடைசி நேரம் வரை மாறிக்கொண்டே இருக்கும்.

இம்முறை அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட தேர்தல் குழப்பங்கள் சிறுபான்மை தமிழ்க் கட்சிகளிடத்திலேயே ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு.. கடந்த தேர்தலில் வடக்கு-கிழக்கில் மொத்தமாக 22 உறுப்பினர்களைப்பெற்று மிகப்பலமாக நின்ற இந்தக் கட்சி காலவோட்டத்திலும், கால மாற்றத்திலும் இப்போது சின்னாபின்னமாகிப் பல வடிவங்களிலும் தேர்தல் காண்கின்றது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் கடந்த முறை அதிக வாக்குகள் பெற்றும் வாய்ஜாலம் மட்டும் நிகழ்த்தியவர்கள் அகற்றப்பட அவர்கள் தனி அணியாகக் களம் காண்கிறார்கள்.
ஆனால் இத்தனை சுயேச்சைகள் ஏன்?
அதுவும் ஜனாதிபதி தேர்தலில் கிடைத்த 20 சதவீத வாக்குப் பதிவு கண்ட பிறகும்.

காசு கூடிப்போனால் கட்டுப்பணம் இழப்பது பொழுதுபோக்கோ?

வாக்குப் பிரிப்பான்கள்,செயலற்றவர்கள்,கடந்த முறை எதுவும் செய்யாதொரின் கூத்துக்களை அறியாதோர் அல்ல மக்கள்.போலிகளா இனங்கண்டு கொள்ள்ளலே காலத்தின் தேவை.

கொழும்பிலும் தமிழர் வாக்குகள் உடைபடவே போகின்றன. ஆனால் இங்கே ஓரளவு சுலபம்.ஆளும் கட்சிக்கு வாக்காக இருந்தால் தமிழ் தெரிவுகள் அளவோடு இருக்கின்றன.எதிரணியாக இருந்தாலும் மூன்று தெரிவுகள் உள்ளன.
முஸ்லிம் வாக்காளர்களுக்கும் கொழும்பைப் பொறுத்தவரை குழப்பம் இருக்காது.

ஆனால் அம்பாறை,மட்டக்காளப்பில் தமிழ் பேசும் இனத்தவர் இருவருக்குமே வாக்குப் பிரிப்பின் மூலம் சர்வநாசம் நிச்சயம்.
இப்போது சொலுங்கள் எமக்கு நாமே ஆப்பு வைக்கின்றோம் என்பது சரி தானே?

அவசரப்பட்டு அரசியல் எதிர்வு கூறாததும் நல்லதாவே போச்சு..
நாளையோ,இல்லை செவ்வாயோ ஒரு விரிவான தேர்தல் அலசல் பதிவிடலாம் என எண்ணியுள்ளேன்.. எதோ என்னால் முடிந்த அரசியல் கடமை.

இன்னொரு கூத்து இரண்டாவது நாளாக இன்று பார்த்து முடித்தேன்..
பாசத்தலைவனுக்கு ஒரு பாராட்டு விழா..
அய்யோ அம்மா.. பாசமோ பாசம்.. அப்படியொரு பாசம்..
அது பற்றி தனியொரு பதிவே இடவேண்டும் எனுமளவுக்கு பார்த்து உருகிப் போன பாசம்..


இனிவரும் நாட்களில் வரப்போகும் பதிவுகள்..

விண்ணைத்தாண்டி வருவாயா விமர்சனம்
பொது தேர்தல் பார்வை
பாசத்தலைவா.. ;)

February 27, 2010

சச்சின் 200 - சாதனை மேல் சாதனை



சச்சின் டெண்டுல்கரின் இரட்டை சதம்..

இந்த வாரம் முழுவதும் இது பற்றிப் பேசாதோர் கிடையாது.. பதிவிடாதோர் கிடையாது..
உடல் நிலை மோசமாக இருந்ததாலும், தொண்டை எரிச்சல் பாடாய்ப் படுத்தியதாலும் இன்று வரை சச்சினின் சாதனை பற்றி இன்றுவரை என்னால் பதிவிட முடியாமல் இருந்தது.

பேசவே இயலாத (அழைப்பெடுத்து அலுத்துப் போய்த் திட்டித் தீர்த்துள்ள நண்பர்களே காரணம் என் தொண்டை நோவு தான்) இரண்டாவது நாள் ஓய்வில் இன்று இதைப் பதிவிட முடிந்துள்ளது.

பலர் வாழ்த்தி விட்டார்கள்,இன்னும் பலர் அதன் அருமை பெருமைகளைப் பட்டியலிட்டு விட்டார்கள்..
இன்னும் சிலர் அரசியலும் பேசிவிட்டார்கள்..
இவ்வரிய சாதனை பற்றி இன்னொரு கோணத்திலே சில கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள இந்தப்பதிவு.

39 ஆண்டுகளாக (2961 போட்டிகள்)ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் எந்தவொரு வீரராலும் எட்டப்பட முடியாதவொரு சாதனையை சச்சின் டெண்டுல்கர் க்வாலியர் மைதானத்தில் தன வசப்படுத்தினார்.
அத்துடன் இதை எட்டியதன் மூலம் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் தனிநபராக ஒரு வீரர் பெற்ற அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையையும் சச்சின் தனதாக்கியுள்ளார்.

கடந்த ஒரு வருடத்துக்கும் குறைவான காலப்பகுதியில் சச்சின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளின் எட்ட முடியாத எல்லையாகக் கருதப்பட்ட இரட்டை சதத்தை சச்சின் டெண்டுல்கர் நெருங்கிய மூன்றாவது சந்தர்ப்பம் இது.
(நியூ சீலாந்துக்கு எதிராக கிரைச்ட்சேர்ச்சில் 163 இல் வைத்து உபாதை காரணமாக வெளியேறினார், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஹைதராபாத்தில் வைத்து 175 இல் ஆட்டமிழந்தார்)

இப்போது சச்சின் சர்வதேசப் போட்டிகளில் மற்றொரு அரிய சாதனையை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறார்.. சர்வதேசப் போட்டிகளில் சதங்களில் சதம்.இதுவரை டெஸ்ட் & ஒரு நாள் போட்டிகளில் மொத்தமாக 93 சாதனைகளைப் பெற்றுள்ளார்.இந்த வயதிலும் இவற்றுள் கடைசியாகப் பெற்ற 10 சதங்களும் கடந்த ஓராண்டு காலப்பகுதியில் விளையாடிய 34 இன்னிங்க்சில் பெற்றவை.
இந்த சிங்கத்தையா ஓய்வு பெறவேண்டும் என்று பலர் ஓலமிட்டார்கள் என வேடிக்கையாக இருக்கிறது..

2007 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்துக்குப் பிறகான இந்த ஆண்டுகளில் தொடர்ச்சியாக ஓட்டங்கள் குவித்துள்ள ஒரே ஒரு வீரராக சச்சின் டெண்டுல்கர் என்று சொன்னால் கூடத் தவறில்லைப் போல் தெரிகிறது..

இவற்றைக் கொஞ்சம் அவதானியுங்கள்..

31 டெஸ்ட் போட்டிகளில் 12 சதங்களுடன் 2779 ஓட்டங்கள். சராசரி 59.12
57 ஓர்நாள் சர்வதேசப் போட்டிகளில் 2751 ஓட்டங்கள்.சராசரி 51.2.
54 டெஸ்ட் இன்னிங்க்சில் 23 இன்னிங்க்சில் அவர் குறைந்தது 50 ஓட்டங்களாவது பெற்றுள்ளார்.
54 ஓர்நாள் இன்னிங்க்சில் 21 தடவை.

2007 உலகக் கிண்ணத்துக்குப் பிறகு சச்சினை விட அதிக டெஸ்ட் போட்டிகளில் பலர் விளையாடி இருந்தாலும் சச்சினை விட அதிக டெஸ்ட் சதங்களை யாரும் பெறவில்லை.
இலங்கையின் மஹேல ஜெயவர்த்தன மட்டுமே சச்சினை விட அதிகம் டெஸ்ட் ஓட்டங்கள் பெற்றவர்.
இதே காலகட்டத்தில் இந்தியாவின் தோனியும்,யுவராஜ் சிங்கும் மட்டுமே சச்சினை விட அதிக ஒரு நாள் ஓடங்கள் பெற்றவர்கள்.
இத்தனைக்கும் தோனியும் யுவராஜும் முறையே 92 மற்றும் 84 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி இருக்க, சச்சின் விளையாடியது வெறும் 58 போட்டிகள் மட்டுமே.

கௌதம் கம்பீரும் ரிக்கி பொண்டிங்கும் மாத்திரமே இந்தக் காலகட்டத்தில் சச்சினை விட அதிக ஒரு நாள் சதங்கள் பெற்றவர்கள்.

2007 உலகக் கிண்ணப்போட்டிகளுக்கு முன்பதாக தன கிரிக்கெட் வாழ்க்கையில் சிறு சரிவைக் கண்டிருந்த, டெனிஸ் எல்போ பிரச்சினையால் கிரிக்கெட் வாழ்கையே முடிந்துவிடுமோ என்ற நிலையிலிருந்த சச்சின் மீண்டும் எடுத்த விஸ்வரூபம் தான் என்னைப் பொறுத்தவரை சச்சினின் மிக சிறந்த கிரிக்கெட் காலகட்டம்.
எனவே அதிகூடிய சதங்களைப் பெற்ற ஒருவரையே அதிகூடிய ஓட்டப் பெறுபேற்று சாதனை சென்று சேர்ந்திருப்பது மிகப் பொருத்தமானதே.. வேறு யாராவது சயீத் அன்வரின், சார்ல்ஸ் கோவேன்றியின் சாதனையை முரியடித்திருந்தால் அது அவ்வளவு பொருத்தமாகத் தோன்றியிராது.

அன்வரும் இதையே ஒத்துக் கொண்டுள்ளார். எனக்கும் சிறுவயதிலிருந்து அப்போது ரிச்சர்ட்சுக்கு சொந்தமான சாதனையை சச்சின்,சனத் ஜெயசூரிய அல்லது ஹெய்டன்,லாரா உடைப்பதே தகும் எனத் தோன்றி வந்துள்ளது.குருட்டு அதிர்ஷ்டத்தில் ஒரு நாள் கிடைக்கும் வாய்ப்பில் யாரும் ஒரு சாதனையைப் படைப்பதை கிரிக்கெட்டை ஆழ்ந்து நேசிக்கும் மனம் ஏற்றுக் கொள்வதில்லை.

அன்றைய இரட்டை சத ஆட்டம், ஒரு நாள் கிரிக்கெட்டில் ஒரு அற்புதமான விரிவுரை&விருந்து..

பொறுமை,ஆளுமை,அதிரடி,அசத்தல்,அடக்கி ஆளல்,அடங்கிப் போதல் என்று அனைத்தையும் 37 வயதான அந்த கிரிக்கெட் சிங்கத்திடம் பார்த்தேன்..
இருபது வருடங்களாக ஓயாமல் கிரிக்கெட் விளையாடி வந்தாலும் சலிக்காத,கலைக்காத கிரிக்கெட் தாகம் தான் சச்சினை இன்னும் சாதனை மேல் சாதனை படைக்க வைத்துக் கொண்டுள்ளது.

உலகின் மிக சிறந்த வேகப்பந்து வீச்சாளராகக் கருதப்படும் டேல் ஸ்டேய்னை அடித்து நொறுக்கி ஒன்றுமில்லாமல் செய்ததாகட்டும், கார்த்திக்,பதான்,டோனி அதிரடியாட்டம் ஆடும் வேளையில் புன்முறுவலோடு அவர்களை ஆதிக்கம் செலுத்தவிட்டு தான் அடங்கிப் போனதிலாகட்டும்,
சின்னப் பையன் போல் பந்தை நோக்கித் துள்ளிவந்து ஆறு ஓட்டங்கலாகப் படையல் போட்டதாகட்டும், நின்று கொண்டே நிதானமாக கவர் டிரைவ், ஸ்குயார் டிரைவ், ஒன் டிரைவ் என்று கிரிக்கெட் பாடங்கள் நடத்தியதாக இருக்கட்டும்..
சச்சின் மீண்டும் காட்டிய விஷயம் - சச்சின் - கிரிக்கெட்டின் கடவுள்.

சச்சின் டெண்டுல்கரை உங்களுக்குப் பிடிக்குதோ,பிடிக்கவில்லையோ அனைவரும் இதை ஏற்றே ஆகவேண்டும்.

இவ்வாறான நீண்ட இன்னிங்ஸ்களை ஆடுவோர், குறிப்பாக ஒருநாள் போட்டிகளில் களைப்படைந்து தசைப்பிடிப்பு போன்ற உபாதைகளுக்கு இலக்காகி தமக்காக இன்னொருவரை வைத்து ஓடியே ஓட்டங்கள் எடுப்பதைப் பார்த்த எமக்கு 37 வயதிலும் சளைக்காமல் ஐம்பது ஓவர்களும் ஓடி ஓடியே ஓட்டங்கள் பெற்ற சச்சின் ஆச்சரியத்தின் சின்னம் தான்.

சனத் நெதர்லாந்து அணிக்கெதிராக அடித்து நொறுக்கியிருந்த 24 நான்கு ஓட்டங்கள் என்ற சாதனையும் சச்சினினால் இந்த க்வாலியர் போட்டியில் சச்சினினால் முந்தப்பட்டது.
இதன் மூலம் ஒருநாள் போட்டியொன்றில் பவுண்டரிகளில் சதமடித்தவர் சச்சின் மட்டுமே ஆகிறார்.

சச்சின் கடைசி பத்து ஓட்டங்களையும் பெறுவதற்கு பத்து பந்துகளை எடுத்துக் கொண்டார்.
அதுபோல இந்தியாவுக்கு மேலதிகமாக,வேகமாக ஓட்டங்கள் தேவைப்பட்டதால் தோனியும் கடைசி நேரத்தில் அதிக பந்துகளைத் தானே எடுத்து அதிரடி நிகழ்த்தி இருந்தார்.

இல்லாவிட்டால் அவர் சந்தித்த 147 பந்துகளில் பெற்ற 200 ஓட்டங்களை விட இன்னும் அதிகப்படியான ஓட்டங்கள் பெற்று இந்த மைல்கல்லை இன்னும் கொஞ்சம் அப்பால் நகர்த்தி இருப்பார்.

தோனி அதிகம் பந்துகளை இறுதி நேரத்தில் சச்சினுக்கு வாய்ப்பளிக்காமல் இருந்தது குறித்து அதிக விமர்சனங்கள் எழுந்துள்ளன. எனக்கும் கூடப் பார்த்துக் கொண்டிருந்தபோது தோனி கையில் கிடைத்தால் சாத்தவேண்டும் போல அவ்வளவு கோபம் வந்தது.எனினும் தலைவராகவும் சக வீரராகவும் தோனி செய்தது சரியே எனத் தோன்றுகிறது.

காரணம் தென் ஆபிரிக்கா மிக ஆபத்தான அணி.எந்தவொரு இலக்கையும் அனாயசமாக துரத்தியடிக்கக்கூடிய வல்லமையுள்ளது. அதற்கெதிராக எத்தனை ஓட்டங்கள் பெறமுடியுமோ அத்தனை ஓட்டங்கள் பெற்றாக வேண்டும்.
அடுத்து, சச்சின் களைத்துப் போயிருந்தார்.அவரை அதிகமாக அதிரடியாட்டத்துக்கு தூண்டி அழுத்தத்துக்கு உட்படுத்த முடியாது.
எத்தனையோ வீரர்கள் முயன்று முடியாமலே இருந்த முடிவிலி சாதனையொன்று சச்சினினால் எட்டப்பட்டுள்ளது.
எனினும் இந்த சாதனையை இவரை விட சிறந்தவீரர் ஒருவர் எட்ட முடியும் என நான் நினைக்கவில்லை.அதுவும் சச்சின் தனது கிரிக்கெட் வாழ்க்கையின் உச்சக்கட்டத்தில் இதை எட்டியிருப்பதும் பல விமர்சகர்களை வாய்மூட வைத்திருக்கும்.இன்னும் சக வீரர்களுக்கும்,பல இளைய வீரர்களுக்கும் உற்சாகத்தை வழங்கி இருக்கும்.

கவாஸ்கர் சொன்னது போல சச்சின் இன்னொரு சாதனையைத் தான் ஓய்வு பெற முதல் குறிவைக்க வேண்டும்.. இதுவரை சச்சின் பெறாத டெஸ்ட் முச்சதம்.

கிரிக்கெட் ரசிகர்களாக நாமெல்லாரும் பெருமையடையக் கூடிய காலகட்டம் இதுவென நினைக்கிறேன்.

இனிவரும் எந்தவொரு காலகட்டத்திலும் எந்தவொரு வீரரும் எட்ட முடியாத (என்னைப் பொறுத்தவரை முடியவே முடியாத) சாதனைகளைப் படைத்த இருவர் (சச்சின் டெண்டுல்கர்& முத்தையா முரளிதரன்) விளையாடும் காலத்தில் நாம் இருக்கிறோம்.

முரளியின் டெஸ்ட் சாதனைகளையும், சச்சினின் ஒரு நாள் சாதனைகளையும் இன்னொருவர் எதிர்காலத்தில் முறியடிப்பது இயலாதென்றே நான் உறுதியாக நினைக்கிறேன்.
இறுதியாக, லாராவின் இறுதி வருடங்கள் எவ்வாறு லாராவுக்கு ஓட்டங்கள் மழையாகப் பொழிந்ததோ அவ்வாறே சச்சினுக்கும் இந்த நான்கு வருடங்கள் அமைந்திருக்கின்றன. ஆனாலும் சச்சின் டெண்டுல்கர் இன்னும் இரு வருடங்களாவது விளையாடுவார் என்றே தோன்றுகிறது.

இன்னுமொரு விஷயம் சொல்லியே ஆகவேண்டும்...
அந்த இரட்டை சத சாதனையை இந்திய மக்களுக்கு சமர்ப்பித்தது சாதரணமான விடயம் என்று சொல்லலாம்..ஆனால் இந்திய அணியின் சமீப கால தொடர்ச்சியான வெற்றிகளுக்குக்குக் காரணகர்த்தா என பயிற்சியாளர் கரி கேர்ஷ்டனுக்கு அதை சமர்ப்பித்தது பெருந்தன்மை.. கேர்ச்டனும் இந்த ஒரு நாள் இரட்டை சத வாய்ப்பை சொற்பத்தில் தவறவிட்டவர் என்பது குறிப்பிடத் தக்கது.(UAE அணிக்கெதிராக 96 உலகக் கிண்ணத்தில்)

அடுத்தநாள் நாளேடுகளில் சச்சின் 200௦௦


படங்கள் - cricinfo

சச்சின் சிங்கமே, இன்னும் சில ஆண்டுகள் கிரிக்கெட்டில் சாதனை வயல்களில் அறுவடை நடத்து.. உன் இளமை தானே தெரிகிறதே.. இனியும் யாராவது ஓய்வு பெற சொல்லி சொல்வார்கள்?

சச்சினின் அரிய புகைப்படத் தொகுப்புகள்




சச்சின் பற்றிய எனது முன்னைய பதிவுகள்








February 24, 2010

சிதறிப்போனாயே ஸ்ரீதர் அண்ணா.. நினைவுப் பகிர்வு




பல்கலைத் தென்றல் ஸ்ரீதர் பிச்சையப்பா -

உலகில் ஒரு சில கலைஞருக்கே இவர் போல எல்லா ஆற்றல்களும் பொருந்தி இருக்கும்..இவருக்கு என்ன தெரியாது என்பதை விரல் விட்டு எண்ணிவிடலாம்.. அனைத்துக் கலைகளும் அறிந்த ஒரு அரிய மனிதர்..

சின்னவயதில் தொலைக்காட்சியில் இவர் பாடவும்,நடிக்கவும் பார்த்து ரசித்திருந்தேன்.. பின்னர் மேடை நிகழ்ச்சிகளில் ஒரு நாடக நடிகராக, எந்தப் பாடலையும் லாவகமாகப் பாடி ரசிகர்களின் மனதை இலகுவாக வென்றுவிடும் ஒரு ஸ்டாராக பார்த்து வியந்த காலம் ஒரு காலம்.

பதின்ம வயதுகளின் ஆரம்பத்தில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தில் சிறுவர் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் நேரங்களில் நாடகங்களில் நடிக்க ஸ்ரீதர் அண்ணா வரும் நேரங்களில் அவரது அந்தக்கால ஹிப்பி ஸ்டைல்கள் பார்த்து நம்ம நாட்டிலும் ஸ்டார் ஒருவர் இருக்கிறார் என்று நினைத்துக் கொள்வதுண்டு.

கொஞ்சம் வளர்ந்து தெரிவு செய்யப்பட்ட நாடக நடிகனாக ஒரு சில நாடகங்கள்,கதம்பம் நிகழ்ச்சியில் நகைச்சுவை நாடகங்களில் நடிக்கின்ற வாய்ப்புக் கிடைத்த நேரங்களில் அவருடன் கொஞ்சம் பேசிப் பழகக் கிடைத்தது.

இதற்கிடையில் அவருக்கு காரைதீவில் நடந்த ஒரு குண்டுவெடிப்பில் அவரது ஒற்றைக்கண் பாதிக்கப்பட்ட செய்தியும் அதிலிருந்து மீண்டு அவர் வழக்கம் போலவே இசை நிகழ்ச்சிகள்,கலை நிகழ்ச்சிகளில் அசத்துவதும் கண்ட போது மேலும் மதிப்பு அவர்மேல் ஏற்பட்டது.
ஆனால் இத்தனை காலமும் அவரை ஒரு இசை,நாடக,நகைச்சுவைக் கலைஞராகவே அறிந்திருந்தேன்..

சக்தி வானொலியில் எனது ஒலிபரப்பு வாழ்க்கை ஆரம்பித்த நேரம் எழில்வேந்தன் அவர்களால் (எழில் அண்ணா) பாடிக் கேட்ட பாடல் என்ற நிகழ்ச்சியை அப்போதைய அறிவிப்பாளர் ஜானு(ஜானகி) உடன் சேர்ந்து சுவாரஸ்யமாகவும் விஷயஞானத்துடனும் தொகுத்து வழங்க ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் ஸ்ரீதர் அண்ணா அழைக்கப்பட்டிருந்தார்.

அந்தக் காலகட்டத்தில் தான் ஸ்ரீ அண்ணாவுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பும் அவரது சகலதுறைத் திறமைகளையும் அறிந்துகொள்ளும் சந்தர்ப்பமும் எனக்குக் கிட்டியது.
இசை,திரை இசை,கவிதை, கவிஞர்கள்,வானொலி நிகழ்ச்சிகள்,நூல்கள் ,அரசியல்,நாடகங்கள்,சமூகம் என்று நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவரோடு உரையாடாத,விவாதிக்காத விஷயமே கிடையாது.
இத்தனைக்கும் என்னை "இவன் யாரு பொடியன் தானே" என்று நினைக்காமல் மன சுத்தியோடும் உண்மை நட்போடும் பழகுவார்.

சந்தோஷமாக மனநிறைவாக சிரிக்க வைப்பார்.. எல்லாவித நகைச்சுவைகளும் இவருக்கே உரிய கடி,நக்கலுடன் வெளிவரும்..

பின்னர் சக்தி டிவியில் நான் தொகுத்து வழங்கிய உள்நாட்டுப் பாடல்களின் இசையணித்தேர்வு நிகழ்ச்சியான இசைக் கோலங்களில் ஸ்ரீதர் பிச்சையப்பா அவர்களை ஒரு அருமையான பாடலாசிரியராக இனங்கண்டுகொண்டேன்.
அப்போது தான் முதல் தடவையாக என் மனதிலே ஒரு கேள்வி தோன்றியது..
இந்த மனுஷன் என் தன்னை முழுமையாக இந்தத் துறையில் வெளிப்படுத்துகிறாரில்லை.. தனக்குள் இருக்கும் பல்வேறுபட்ட திறமைகளை இவராலேயே அடையாளம் கண்டு தனது எல்லைகளை விஸ்தரிக்க முடியவில்லையா?

இடையிடையே எழில் அண்ணாவுடன், அப்துல் ஹமீத் அண்ணாவுடன், தயானந்தா அண்ணாவுடன் பேசிக்கொண்டிருந்த சிலநேரங்களில் பல்வேருபட்டோர் பற்றிய பேச்சுக்கள் வரும் வேளையிலே எல்லோராலும் சிலாகித்துப் பெசப்பட்டவராக ஸ்ரீதர் அண்ணா இருப்பார்.

காலங்கள் மாறின.. நான் சூரியனில் இணைந்தேன்.. இணைந்து ஒரு சில மாதங்களில் சூரியனின் ஏற்பாட்டில் (வியாசாவின் பெரும் பங்களிப்போடு) பத்து வெவ்வேறு நகரங்களில் மிக பிரமாண்டமான தொடர் இசை நிகழ்ச்சிகள் (பாபா பூம்பா) நடத்தி இருந்தோம்.

பிரபல தென் இந்தியப் பாடகர் மலேசியா வாசுதேவனை அழைத்திருந்தோம்.. அவரோடு இலங்கையின் பல பாடக பாடகியரையும் இணைத்துக்கொள்வோம் என்றவுடனேயே எங்களின் ஒட்டுமொத்த முதல் தெரிவு ஸ்ரீதர் பிச்சையப்பா (தம்பதி).
(இன்னும் பொப்பிசை சக்கரவர்த்தி எ.ஈ.மனோகரன்,முபாரிஸ்,பிரேமானந்,மொரீன் ஜனெட், செல்லத்துரை)


பாபா பூம்பா நிகழ்ச்சியொன்றில் ஏ.ஈ.மனோகரன் அவர்களுடனும் ,காலம் சென்ற ஸ்ரீதர் பிச்சையப்பா அவர்களுடனும்..
2002

அந்தப் பதினாறு நாட்களும் எங்களுக்கு வாழ்க்கையின் பல்வேறு பாடங்கள் சொல்லித் தந்த நாட்கள்.
மலேசியா வாசுதேவன் என்ற மாபெரும் இசை சிகரத்தை ஒரு அப்பாவிக் குழந்தையாகவும்,நல்ல மனிதராகவும் நாம் கண்டோம்..

ஸ்ரீதர் பிச்சையப்பா என்ற எமது கலைஞனை ஒரு ஞானியாக, ஒரு பூரணமான கலைஞனாக,நல்ல மனிதனாக, (நான் அப்போது கண்டவரை) நல்ல ஒரு கணவனாக,எந்தவொரு பாடலையும் பாடி கல் போல அசையாதிருக்கும் மக்களையும் கரகொஷங்களோடு ரசிக்க செய்யும் ஒரு மாயாஜாலப் பாடகனாக.. இன்னும் பல்வேறு வடிவங்களில் கண்டுகொண்டேன்..

வவுனியாவில் நீண்ட காலத்துக்குப் பிறகு ஒரு நிகழ்ச்சியாக எமது நிகழ்ச்சி இருந்த வேளையில் ஸ்ரீ அண்ணாவுக்கு அங்கிருந்த ரசிகர்கள் கொடுத்த வரவேற்பும் அதற்கு இவர் கொடுத்த நன்றியரிவித்தலுடனான பாடலும் எப்போதும் எனக்கு மறக்காது.

பாபா பூம்பா நிகழ்ச்சியின் ஒன்பதாவது நிகழ்ச்சியை கண்டியில் முடித்துவிட்டு பத்தாவது நிகழ்ச்சிக்காக கொழும்பு நோக்கி வரும்வேளையில் எங்கள் வாகனத்திலேயே ஸ்ரீ அண்ணாவும் வந்துகொண்டிருந்தார்.
பல்வேறு விஷயங்களையும் பேசிக் கொண்டுவரும் வேளையில் வழக்கமாகவே அவரோடு நான் வாக்குவாதப்படும் குடி,புகை பிடித்தல் சம்பந்தமான விவகாரமும் வந்தது.

அவர் அன்று குதர்க்கமாக சொல்லி என் வாயை அடைத்த ஒரு வாசகம் இப்போதும் மனதிலே நிற்கிறது...
"டேய் தம்பி.. என்னைத் தான் நீங்கள் எல்லோரும் சகலதுறைக் கலைஞன் என்கிறீர்களே..அப்பிடியென்றால் இவையும் இருக்கத் தானே வேண்டும்.. எல்லாவற்றையும் இருக்கின்ற கொஞ்சக் காலத்தில் அனுபவித்துப் பார்க்கிறேனே"

அந்த அதிகாலை வேளையிலும் அப்போது அவர் இருந்த வத்தளை வீட்டுக்கு வற்புறுத்தி அழைத்து சுட சுட தேநீரும் தந்து உபசரித்து தனது கலைக் களஞ்சிய அறையைக் காட்டினார்..

ஆனந்த அதிர்ச்சியில் நானும் என்னுடன் வந்திருந்த மப்ரூக்,விமலும் ஒருகணம் உறைந்துபோனோம்..
பின்னே ஒரு அறை முழுவதும் வைக்க இடமில்லாமல் நூல்கள்,இசைத் தட்டுக்கள்,ஓவியங்கள் என்றால்....

அந்த ஓவியங்கள் எல்லாமே அவரே வரைந்ததாம்.. மலைத்துப் போனோம்.. அவர் என்னைப் பொறுத்தவரையில் அந்தக் கணத்தில் இமயமலையளவு உயரத்துக்குப் போயிருந்தார்.

இருந்த இரு மணிநேரத்தில் அங்கிருந்த அவரது ஓவியங்கள் பற்றி அவருடன் பேசினோம்;பல அரிய நூல்களைத் தட்டிப் பார்த்து வியந்தோம்;சில நூல்களை இரவல் பெற்றுக்கொண்டோம்(நான் வாங்கியதை எல்லாம் திருப்பிக் கொடுத்துவிட்டேன்);அவரது இன்னுமொரு ஆற்றலான புகைப்படக் கலை பற்றியும் கூட அறிந்த ஆச்சரியப்பட்டோம்..

அதற்குப் பிறகும் பல தடவை ஸ்ரீ அண்ணாவை சூரியனின் பல நிகழ்ச்சிகள்,நேரடி இசை நிகழ்ச்சிகளுக்கு அழைத்தபோதும், மேலும் பல்வேறு போது நிகழ்ச்சிகளில் சந்தித்தபோதும், நான் அவதானித்த விடயம்..
ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் முதல் இருந்ததை விட அவரது உடல் வாடி,வயக்கெட்டிருக்கும்.

இதைப்பற்றிக் கண்டித்துக் கொஞ்சம் கோபமாக சொன்னாலும் கூட,என் தாடையைத் தடவி ஏதாவது சமாளித்துவிட்டு சென்றுவிடுவார்.

உள்ளூர் சஞ்சிகையில் அவர் தொடர்ந்து எழுதிவந்த இலக்கியம்,கவிதை போன்ற விஷயங்கள்.. அப்பப்பா என்னவ்பொரு தரம்,இலக்கிய நயம்.. எனது வேண்டுகோளை ஏற்று இடையிடையே தனது ஓவியங்களையும் பிரசுரித்து வந்திருந்தார்.

எனது நிகழ்ச்சிகள் பற்றி இறுதிக் காலத்தில் அவர் நோய்வாய்ப்படும் வரை விமர்சிப்பார்;பாராட்டுவார்..

ஸ்ரீதர் அண்ணாவினால் எனக்குக் கிடைத்த மிக சிறந்த விஷயங்களில் ஒன்றாக நான் கருதுவது, சூரியனில் நான் தேர்வு செய்து பின்னர் என்னுடன் வெற்றி வானொலிக்கும் அழைக்கப்பட்டு இப்போது கட்டார் நாட்டில் வேறு துறையில் பணிபுரியும் சுபாஷ்..
எப்போதுமே யாரையும் சிபாரிசு செய்யாத ஸ்ரீ அண்ணா சுபாஷை என்னிடம் அனுப்பிவைத்தபோது தொலைபேசியில் சொன்ன விஷயம் "லோஷன், இவன் கெட்டிக்காரன்..வாய்ப்பு ஒன்று கொடு.உனக்கு நல்ல பெயர் எடுத்து தருவான்"

சுபாஷ் இறுதிவரை அப்படியே நடந்துகொண்டிருந்தான்.. ஸ்ரீ அண்ணாவுக்கும் நன்றியுடன் இருக்கிறான்.

அவருக்கே உரிய வித்தியாசமான சிகை அலங்காரம்,ஆடை அலங்காரம், பேச்சு என்று நண்பர்கள்,நட்போடு திரிந்துகொண்டிருந்தாலும்,பாவம் அவரைத் தனிப்பட்ட வாழ்க்கையின் தனிமையும்,வெறுமையும் உள்ளேயே உருக்கி இருக்கிறது.
அத்தோடு இந்தக் கேடுகெட்ட குடியும்..

ஐம்பது வயது கூட எட்டாமல் இவர் இறப்பார் என்று யார் தான் நினைத்தோம்..
அண்மையில் கூட ஒரு பாடல் சம்பந்தமாக் செல்பேசியில் என்னை அழைத்து கேட்டிருந்தார்.

எப்படிப்பட்ட ஒரு அருமையான கலைஞன்..
இவரை நாம் இன்னும் முழுமயாகப் பயன்படுத்தவில்லை என்ற வருத்தமும், அவர் தன்னை முழுமையாக உணர்ந்து வெளிப்படுத்தவில்லை என்று அவர் மீது கோபமும் எனக்கு துக்கத்தை விட அதிகமாக இருக்கிறது.

அன்புக்குரிய ஸ்ரீதர் அண்ணாவின் ஆத்மா சாந்தியடைவதாக..

கொழும்பு 7 இல் உள்ள கலாபவனத்தில் இன்று காலை 11 மணிமுதல் ரசிகர்கள்,மக்களின் அஞ்சலிக்காக இவரது பூதவுடல் வைக்கப்பட்டு மாலை 3.30க்கு தகனக்கிரியைக்காக பொரளை மயானத்துக்கு எடுத்து செல்லப்படவுள்ளது.

பல்கலைத் தென்றல் ஸ்ரீதர் பிச்சையப்பா அவர்களுக்கான அஞ்சலி நிகழ்ச்சி எங்கள் வெற்றி வானொலியில் இன்றிரவு ஒன்பது மணி செய்தி அறிக்கையைத் தொடர்ந்து இடம்பெறவுள்ளது.
அவருடன் இணைந்து பணியாற்றிய பலர்,இன்னும் பல முக்கிய கலைஞர்கள் ஸ்ரீதர் அண்ணாவைப் பற்றிய தங்கள் கருத்துக்களைப் பகிரவும் உள்ளார்கள்.




February 20, 2010

தலை போல வருமா?


முன்பு வாசித்த கதை ஒன்று...

அசோகச் சக்கரவர்த்தி தனது பரிவாரம் சூழ வந்து கொண்டிருந்தார்.(கலிங்கத்து போரின் பின்,அசோகர் பௌத்தராக மாறிய பின்னர்.)

எதிரே ஒரு பௌத்த துறவி வந்து கொண்டிருந்தார்.அவரைக் கண்டதுமே உடனடியாக ஓடிச்சென்று பணிவுடன் பௌத்த துறவியின் காலில் விழுந்து வணங்கினர் அசோகர்.

இதனைப் பார்த்துக்கொண்டிருந்த அமைச்சருக்கு மனம் பொறுக்கவில்லை.ஒரு மாபெரும் சக்கரவர்த்தி ஒன்றுமில்லாத ஒரு துறவியின் பாதத்தில் விழுந்து வணங்குவதா என்று பொருமினார்.

அரண்மனை வந்தவுடன் மன்னருக்குத் தன் எண்ணத்தை வெளிப்படுத்தினார்."எத்தனை எத்தனை தேசம் வென்ற பெருமை மிகுந்த மணிமகுடம் தாங்கும் தங்கள் சிரம் யாரோ ஒரு பரதேசியின் காலில் படுவதா?" என்று வருத்தமும், அதிர்ப்தியும் கலந்த குரலில் சொன்னார் அமைச்சர்.

மன்னர் அசோகர் பதிலேதும் சொல்லாமல் அர்த்த புஷ்டியோடு சிரித்தார். ஒரு சில நாட்களின் பின்னர் மன்னர் அமைச்சரை அழைத்தார்.

"அமைச்சரே, எனக்கு உடனடியாக மூன்று தலைகள் வேண்டும்.
ஒரு ஆட்டின் தலை, ஒரு கரடித்தலை, ஒரு மனிதத் தலை உடனடியாக கொண்டு வாருங்கள்" உத்தரவிடுகின்றார் அசோகர்.

ஆடு பலியிடப்பட்டது - ஆட்டுத்தலை பெறப்பட்டது.

கரடி வேட்டையாடப்பட்டு - கரடித்தலையும் தயார்.

மரண தண்டனைக் கைதி ஒருவருக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டு மனிதத் தலையும் பெறப்பட்டது.

மன்னரிடம் அவர் கேட்டபடியே மூன்று தலைகளையும் கொண்டு போனார் அமைச்சர்.

அசோகச் சக்கரவர்த்தி "மிக நல்லது அமைச்சரே இப்போதே இந்த மூன்று தலைகளையும் கொண்டு சென்று சந்தையில் விற்று வாருங்கள்" என்று உத்தரவிடுகின்றார். (அப்போது மன்னர்களுக்கும் அமைச்சர்களுக்கும் வேற வேலையே இருந்திருக்காது போல)

அமைச்சர் சந்தைக்கு மூன்று தலைகளோடும் போனார்.

ஆட்டின் தலை முதலில் விலை போனது.

கரடியின் தலையும் பாடம் பண்ணி வீட்டில் வைக்க என்று யாரோ ஒரு பந்தாக்காரர் வாங்கிப் போனார்.

மனிதத் தலையை மட்டும் வாங்குவார் யாருமில்லை; மாறாகப் பார்ப்பவர் எல்லோரும் அருவருப்புடனும் அச்சத்துடனும் விளகிப்போயினர்.

மன்னரிடம் போய் விஷயத்தை சொன்னார் அமைச்சர்.

"சரி பரவாயில்லை மனிதத் தலையை மட்டும் இலவசமாகக் கொடுத்துப் பாருங்கள்" என்று சொன்னார் அசோகர்.

ம்ஹூம்...
யாரும் வாங்குவதாயில்லை.

மன்னர் இலவசமாகக் கொடுக்கச் சொன்னார் என்று சொல்லியும் கூட யாருமே வாங்குவதாயில்லை.

அரண்மனை திரும்பிய அமைச்சர் அசோகச் சக்கரவர்த்தியிடம் சொல்கின்றார்.

பௌத்த துறவியின் காலில் விழுந்து வணங்கிய சம்பவத்தை நினைவூட்டிய அசோகர், "பார்த்தீரா அமைச்சரே,
உயிர் என்ற நிலை இருக்கும் வரைதான் தலைக்கு விலை உண்டு. அதனால் உயிருள்ளவரை பணிபவரை பணியவும், வணங்குபவரை வணங்கவும் இந்தத் தலை தாழ்வது தவறாகாது. நிலையறிந்து தலை தாழ்வது எம் நிலையை உயர்த்தும்" என்று விளங்கினாராம் அசோகர்.

தலை பற்றித் தெரிந்து கொண்ட அமைச்சர் தலைகுனிந்து, தலையாட்டினாராம்.

வாசித்த பின் கொஞ்சநேரம் யோசித்து பார்த்தேன்,
அசோகர் சொன்னது சரி.

எனினும் அசோகரின் மகன் கொண்டுவந்த அறம் ஆதிக்கம் செலுத்தும் எம் நாட்டில் அசோகர் போன்றவர்கள் ஆட்சியிலும் இல்லை !
நாம் தலைகுனிந்து வணங்கும் அளவுக்குத் தகுதியான அறமுணர்ந்த,அகிம்சை வழி நிற்கும் பௌத்த துறவிகளும் இல்லை!

பி.கு-
எப்ப 'தல' அஜித் கலைஞர் கலந்து கொண்ட அவருக்கான பாராட்டு விழாவில் ஐயா என முறைப்பாட்டை முன்வைத்தாரோ, அன்றிலிருந்து தலயின் தலை உருளாத நாளில்லை என்று சொல்லலாம்..

ரஜினி கை தட்டியது,பின்னர் கலைஞரை சந்தித்தது ..
இப்போது அவருக்கு படங்கள் நடிக்க முடியாதவாறு தடையாம், எந்தவேளையிலும் கைதாவாராம் என்றெல்லாம் பரபரப்பு வேறு கிளம்பி இருக்கு.
கலைஞர் டிவி யிலும் முன்பு 'பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா' விளம்பரத்தில் இசைஞானிக்கு அடுத்தபடியாக, விஜய்க்கு முதல் போடப்பட்டு வந்த அஜித்தின் பெயர் இப்போதெல்லாம் மிஸ்ஸிங்...
இன்று அந்நிகழ்ச்சியில் அவர் பேச்சும் கட்டா? பார்த்தவர்கள் சொல்லுங்கள்..

இதுக்குள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,ஜாகுவார் தங்கம் இவர்களின் தலைகளும் உருள்கின்றன.
எங்கு பார்த்தாலும் தல,தல என்றே பேச்சு இருக்கும் நேரத்தில் தான் தலையைப்பற்றிய என் முன்னைய பதிவொன்றும் ஞாபகம் வந்தது..

இன்று சனிக்கிழமையாதலால் அதை ரிப்பீட்டடடிக்கிறேன்.. :)

வாசிக்காதவர்கள் வாசிச்சுக்கொங்கோ.. வாசிச்சவங்க மறுபடி ஞாபகப்படுத்திக்கொங்கோ..

முக்கிய குறிப்பு -
இன்று காலமான இலங்கையின் பிரபல சகலதுறைக் கலைஞர் ஸ்ரீதர் பிச்சையப்பா அவர்களையும் கவலையுடன் ஞாபகப்படுத்திக் கொள்கிறேன்.
அவருடனான எனது ஞாபகப் பகிரலுக்கு நேரம் தேவைப்படுவதால் அதை திங்கள் பதிவிடுகிறேன்.

February 19, 2010

ஜெயசூரிய ஜெயவேவா! முரளி - பிறகு பார்க்கலாம்


வந்துட்டாரைய்யா..

ஜனாதிபதித் தேர்தலில் இட்ட மை நகத்திலிருந்து முற்றாக அகலும் முன் அடுத்த தேர்தலாக நாடாளுமன்றத் தேர்தல் இதோ எட்டிப்பார்க்கப் போகிறது.

வேட்பாளர் தெரிவுகளும், கூட்டணி வியூகங்களும் இன்றும் இழுபறி – அரைகுறை நிலைகளிலேயே உள்ளன.

தாங்கள் தாங்களே மக்களுக்கு தம்மை நினைவூட்டிக் கொள்ள போஸ்டர்களில் சிரிக்கும் பலரைக் கண்டு சிரிப்புத் தான் வருகிறது.

விருப்பத்தெரிவு வாக்குகளுக்காக இப்போதே சண்டைகள் சொந்தக்கட்சிக்குள்ளேயே குத்துவெட்டுக்கள், கயிறிழுப்புக்கள் தொடங்கிவிட்டன.

ஆளுந்தரப்பிலே முன்பு ஐக்கிய தேசியக்கட்சியிலிருந்து அரசுப்பக்கம் தாவிய முக்கியஸ்தர்கள் அனைவருக்குமே (அமைச்சர்.கலாநிதி சரத் அமுனுகம தவிர) ஆப்பு வைக்கப்பட்டுவிட்டது.

பெருமளவு வாக்குகளில் செல்வாக்கு செலுத்தக்கூடிய மாவட்ட அமைப்பாளர் பதவி இந்தக் கட்சி மாறியவர்கள் யாருக்குமே வழங்கப்படவில்லை. தேர்தலில் இவர்கள் வென்றாலும் கூட அடுத்த அமைச்சரவையில் பலபேர் கழற்றிவிடப்படுவார்கள் என்றே தோன்றுகிறது.

இந்த ஒதுக்கப்பட்டவர்களில் அரசின் பிரசார பீரங்கிகள் கெஹெலிய ரம்புக்வெல்ல, ராஜித சேனாரத்ன போன்றோரும் அடங்குவது அதிசயம்.

ஜனாதிபதியின் புதல்வர் நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதியின் சொந்த மாவட்டத்தில் போட்டியிடுவதன் மூலம் மற்றுமொரு அரசியல் வம்சம் உருவாகிறது.

எனினும் ஒருகுடும்பத்தில் தேர்தலில் போட்டியிட ஒருவருக்கே வாய்ப்பு என – ஆளுங்கட்சி முடிவெடுத்திருப்பதால், பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க உட்பட பலரின் வாரிசு அரசியல் திட்டங்களுக்கு ஆப்பு.

அப்படியானால் ஜனாதிபதியின் சகோதரர்கள் பற்றி? அவர்களது குடும்பங்கள் பற்றி?

பலரும் எதிர்பார்த்திருந்த விஷயம் உறுதியாகியுள்ளது.

அதிரடி வீரர் சனத் ஜெயசூரிய தனது அடுத்த இனிங்சை இப்போது அரசியலில் ஆரம்பிக்கிறார்.

கிரிக்கெட்டில் அவரது ஆட்டம் ஆட்டங்காண ஆரம்பிக்கவே – சனத் தனது அடுத்த கட்ட நகர்வை இரகசியமாக ஆரம்பித்திருந்தார்.

முன்பொரு தடவை அணியிலிருந்து நீக்கப்பட்ட நேரம் ஜனாதிபதியின் தலையீட்டினால் அசந்த டீமெல் மீது அழுத்தம் பிரயோகிக்கப்பட்டதற்கு நன்றிக்கடனாகவும், அடுத்த கட்ட வாழ்வின் இருப்புக்காகவும் சனத் ஜெயசூரிய கால் காப்பு, கை கிளவுஸ் கழற்றிவிட்டு, கை கூப்பிக்கொண்டு களமிறங்கப் போகிறார்.

அவர் எடுத்த முடிவு என்னைப்பொறுத்தவரை சரிதான்!

இலங்கை அணியில் அவரது இடம் காலி!

T 20 அணியில் மட்டுமே எஞ்சியிருக்கிறார்.
அதுவும் உறுதியில்லை. IPL ஆட்டமும் இந்த வருடத்துடன் சரி என்று நினைக்கிறேன்.

எதிர்க்கட்சியில் இறங்கி உள்ளே – வெளியே விளையாட முடியாது – வேறு வழி?

All the best Sanath!

ஆளுங்கட்சி என்பதால் பெரிதாக பவுன்சர்கள், யோர்க்கர்கள் வராது – ஆனால் play with straight bat(நேர்மையாக விளையாடுங்கள்)
ஆனால் கிரிக்கெட்டையும் அரசியலையும் சமனாகக் கொண்டு செல்வதாக மாத்தறை மன்னன் பேட்டியளித்துள்ளார். எப்படியென்று தான் புரியவில்லை..

ஏற்கனவே களம்கண்டு – காயமும் கண்ட அர்ஜீன ரணதுங்க, ஹஷான் திலகரட்ண ஆகியோரும் இம்முறை தேர்தலில் நிற்பர் என நினைக்கிறேன்.

எனினும் சனத்தின் தோழரான மற்றொருவர் முரளீதரன் கண்டியில் தேர்தலில் களமிறங்குவார் எனக்கிளம்பிய ஊகங்கள் பொய்த்துவிட்டன.

இப்ப வேணாமே.. ப்ளீஸ்

ஒரு ஆங்கில இணையத் தளத்தில் முரளி நுவர எலியவில் களம் காண்கிறார் என்று செய்தி பிரசுரிக்கப்பட்டிருந்தாலும் அது சும்மா ஊகமாம்.
அவர் குடும்பத்திலிருந்து கிடைத்த உறுதியான தகவல் இது.
இறுதி நேர அழுத்தங்கள் கூட அவர் முடிவை மாற்றாது என்பது நிச்சயம்.

அவர் தனது தந்தையைப் போல ஒரு ஐடியல் / ஐடியா Businessman. அவசரப்பட்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விலகமாட்டார்.

இன்னும் இளமையும், திறமையும் மிச்சமிருக்கே...

2011 உலகக்கிண்ணத்துக்குப் பின்னர் ஒரு தேர்தல் வந்தால் முரளீதரன் ஆளுந்தரப்பின் வேட்பாளராக கண்டி மாவட்டத்தில் களத்தில் குதிப்பார்/குதிக்கலாம்..

இந்தப் பதிவுக்கு நேரடி சம்பந்தம் இல்லாவிட்டாலும் இதையும் சும்மா வாசித்துப் பாருங்களேன்..

தமிழ்க்கூட்டமைப்பு, எதிர்த்தரப்புக் கூத்துக்கள், கூட்டுக்கள், குழப்பங்கள் பற்றி பிறகு பார்ப்போம்.

February 17, 2010

இன்று என் நாள்

இன்று ரொம்ப நாட்களுக்குப் பிறகு எனக்கு ஒரு ஆறுதலான, திருப்தியான,மகிழ்ச்சியான, நிறைவான நாள்..
டென்ஷனில்லாமல் விடுமுறையில் வீட்டிலும் இருந்தேன்..

அண்மைக்காலப் பல பதிவுகளுக்கு நண்பர்கள் இட்ட பின்னூட்டங்களுக்குப் பதில் அளிக்கவில்லை என்ற விஷயம் மனதை உறுத்திக் கொண்டே இருப்பதால், இன்று கிடைக்கும் இந்த நேரத்தில் பின்னூட்டங்களுக்குப் பதில் இடப் போகிறேன்..

அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள்..

February 13, 2010

என்னைப் பி(பீ)டித்த கிரிக்கெட் - தொடர் பதிவு


அலுவலக வேலைகள் காரணமாகவும், எங்கள் வெற்றி வானொலியின் இரண்டாவது பிறந்தநாள் எதிர்வரும் ஞாயிறு வருவதன் காரணமாகவும் ஆறுதலாக இருந்து வலைப்பதிவு போட தாராளமாக நேரம் கிடைக்காததால் ஒன்றிரண்டு வலைப்பதிவுகள் வாசித்துக் கொண்டிருந்த என்னை சுவாரஸ்யமான கிரிக்கெட் தொடர் பதிவுக்கு ஒரே நேரத்தில் இரு நண்பர்கள் அழைத்துள்ளார்கள்.


கிரிக்கெட் பதிவு என்றால் அதுக்குப் பிறகு சொல்லவும் வேணுமா?
நிலவில் இருந்தாவது நேரத்தை எடுத்துப் பதிவு போட்டிட மாட்டேனா? ;)

அதுவும் வாசித்த பலரின் பதிவுகளும் அத்தனை சுவாரஸ்யம்..

தொடர் பதிவுக்கு அழைத்த நண்பர்கள் யோ(கா)வுக்கும், வரதராஜலுவுக்கும் நன்றிகள்..


இத்தொடர் பதிவின் விதிகள்
§ உண்மையை மட்டுமே சொல்லவேண்டும்.
§ தற்போது கிறிக்கற் விளையாடும் வீரர்கள் மட்டுமே குறிப்பிடவேண்டிய அவசியமில்லை
§ குறைந்தது இருவரையாவது தொடர்பதிவுக்கு அழைக்கவேண்டும்.

உண்மை சொல்ல வேண்டும் என்ற விதிமுறை இருந்ததனால் அநேகமான கேள்விகளுக்கு நான் ஒன்றுக்கு மேற்பட்டவர்களைக் குறிப்பிட்டுள்ளேன்.. :)

#######

1.பிடித்த கிறிக்கற் வீரர்?

அல்லன் போர்டர்..(Allan Border) முன்னாள் உலக சாதனையாளர் & ஆஸ்திரேலியா முன்னாள் அணித்தலைவர்..
அவரது போராட்ட குணம்,தன்னம்பிக்கை, சாதாரண,பலவீன அணியாக இருந்த ஆஸ்திரேலியாவை முதல் தர அணியாக மாற்றிய அர்ப்பணிப்புடன் கூடிய கடும் உழைப்பு என்று அத்தனை விஷயங்களையும் பிரமிப்பு கலந்த மதிப்புடன் நோக்குகிறேன்.

அத்துடன் மேலதிகமாக எம்மிருவர் முதல் எழுத்துக்களும் A.R.

இப்போது விளையாடுவோரில் முரளிதரன், மஹேல ஜெயவர்த்தன, மைக் ஹசி..



2.பிடிக்காத கிறிக்கற் வீரர்?

ஹர்பஜன் சிங்
தனது நடத்தைகளால் எனக்கு எரிச்சலையும் கடுப்பையும் கிளப்புபவர்.அடிக்கடி இவர் பற்றி வசைபாடி எழுதியது உங்களுக்கு ஞாபகமிருக்கும்.

சலீம் மாலிக்,ஜெப்ப்ரி போய்கொட் (Geoffrey Boycott),இன்னும் சில இங்கிலாந்து வீரர்களையும் அவர்கள் சுயநலங்களால் பிடிப்பதில்லை.


3.பிடித்த வேகப்பந்துவீச்சாளர்?

எபோதும் வசீம் அக்ரம்,ரிச்சர்ட் ஹட்லி, க்ளென் மக்க்ரா,கோர்ட்னி வோல்ஷ் போன்றோரை அவர்களின் விடா முயற்சி மற்றும் அணிக்காக தம்மை அர்ப்பணிக்கும் பாங்குக்காகப் பிடிக்கும்..

புதியவர்களில் ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஜோன்சன், டக் போலின்ஜர்,தென் ஆபிரிக்காவின் வெய்ன் பார்நெல் ஆகியோரை ரசிக்கிறேன்..



4.பிடிக்காத வேகப்பந்துவீச்சாளர்?

நடத்தைக்காக ஸ்ரீசாந்த்,சோயிப் அக்தார், அன்ட்ரே நெல்..
சோம்பேறித்தனத்துக்காக ப்ரமோடைய விக்ரமசிங்க,அபே குருவில்லா


5.பிடித்த சுழற்பந்துவீச்சாளர்?

முரளி மற்றும் வோர்ன், இறந்துகொண்டிருந்த சுழல் பந்துவீச்சுக் கலையை தத்தம் பாணிகளால் (Off spin & Leg spin)உயிர்ப்பூட்டி தாமும் உயர்ந்தவர்கள்..கிரிகெட் வரலாற்றின் தலைசிறந்த இரு சுழல் பந்துவீச்சாளர்கள்..



6.பிடிக்காத சுழல்ப்பந்துவீச்சாளர்?

வேறு யார் ஹர்பஜன் தான்..
இவருக்குப் பின் இலங்கையின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் என்ற பெயரில் பந்தை எறிந்த வர்ணவீர, பந்தை சும்மா வீசிய டொன் அனுரசிறி, இந்தியாவின் நிகில் சோப்ரா,நிலேஷ் குல்கர்னி, இங்கிலாந்தின் பின் கதவால் வந்த ரிச்சர்ட் இல்லிங்க்வோர்த்(Richard Illingworth)..

7.பிடித்த வலதுகைத்துடுப்பாட்டவீரர்?

அரவிந்த டீ சில்வா, சச்சின் டெண்டுல்கர், டீன் ஜோன்ஸ்(Dean Jones), மஹேல ஜெயவர்த்தன, ரிக்கி பொன்டிங்,


8.பிடிக்காத வலதுகைத்துடுப்பாட்டவீரர்?

அசிங்கமாக, பொறுப்பில்லாமல் ஆடுபவர்கள் என்பதனால் மைக் அர்தேர்டன் (முன்னாள் இங்கிலாந்தின் உம்மணாமூஞ்சி தலைவர்), பங்களாதேஷின் மொகமட் அஷ்ரபுல், பாகிஸ்தானின் சலீம் மாலிக்

9.பிடித்த இடதுகைத்துடுப்பாட்டவீரர்?

அல்லன் போர்டர், சயீத் அன்வர், இங்கிலாந்தின் க்ரஹம் தோர்ப்(Graham Thorpe), குமார் சங்கக்கார, மைக் ஹசி, மத்தியூ ஹெய்டன், அடம் கில்க்ரிஸ்ட்

10.பிடிக்காத இடதுகைத்துடுப்பாட்டவீரர்?

ஆஸ்திரேலியாவின் டரன் லீமன்(Darren Lehmann), இலங்கையின் அசங்க குருசிங்க,மேற்கிந்தியத் தலைவர் க்றிஸ் கெய்ல் (ஓவரான தலைக்கனம் என்று கருதுகிறேன்)


11.பிடித்த களத்தடுப்பாளர்?
ஜொன்டி ரோட்ஸ்,ரிக்கி பொண்டிங்,ரொஷான் மகாநாம, டில்ஷான், போல் கோல்லிங்க்வூட், ப்ரெட் லீ (எல்லைக் கோடுகளில் இவரது வேகமே தனி)



12.பிடிக்காத களத்தடுப்பாளர்?

இலங்கையில் அவிஷ்க குணவர்தன, நுவான் சொய்சா, டில்கார பெர்னாண்டோ,

13. பிடித்த ALL-ROUNDER?

எப்போதுமே ஸ்டீவ் வோவில் ஒரு தனியான மதிப்பு உள்ளது.
இவருக்குப் பின்னர் முன்னாள் வீரர்களான மல்கொம் மார்ஷல்,கபில் தேவ், கிறிஸ் கேயார்ன்ஸ்,வசீம் அக்ரம்..
ஷேன் வொட்சன், பாகிஸ்தானின் அப்துல் ரசாக், இந்தியாவின் அண்மைக்காலப் புது வரவு ரவீந்தர் ஜடேஜா, இலங்கையின் பார்வீஸ் மஹாரூப்,அன்ஜெலோ மத்தியூஸ், இங்கிலாந்தின் போல் கொள்ளிங்க்வூத், பங்களாதேஷின் ஷகிப் அல் ஹசன், ட்வெய்ன் பிராவோ என்று பட்டியல் நீள்கிறது.. :)

14.பிடித்த நடுவர்?

காலம் சென்ற டேவிட் ஷேப்பெர்ட், டிக்கி பேர்ட், வெங்கட்ராகவன், டரில் ஹார்ப்பர், சைமன் டௌபல்,அலீம் டார்

15.பிடிக்காத நடுவர்?

இலங்கையின் B.C. கூரே, ஆனந்தப்பா, சமரசிங்க, இந்தியாவின் ப்ரொபசர் ஷர்மா, ஆஸ்திரேலியாவின் டரல் ஹெயார்


16. பிடித்த நேர்முக வர்ணனையாளர்?
ரிச்சி பேனோ, ஹர்ஷா போக்லே, ஹென்றி பலோபெள்ட்- Henry Blofeld(அருமையாக கலகலப்பாக நேர்முக வர்ணனை செய்யும் இவர் இப்போது எங்கே?), இயன் செப்பல், டோனி கிரெய்க், ரவி சாஸ்திரி, ரமீஸ் ராஜா, மைக்கல் ஹோல்டிங் (அந்த வித்தியாசமான ஆங்கில உச்சரிப்புக்காகவே ரசிக்கலாம்

16. பிடிக்காத நேர்முக வர்ணனையாளர்?
ரஞ்சித் பொணான்டோ, மைக் அர்தேர்டன், சுனில் கவாஸ்கர்


18.பிடித்த அணி?
இலங்கை,ஆஸ்திரேலியா


18.பிடிக்காத அணி?
இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள்
படு மோசமாக விளையாடித் தோற்கும்போது சமயத்தில் இலங்கை அணியுமே பிடிக்காத அணியாக மாறி விடும்


20.விரும்பிப்பார்க்கும் அணிகளுக்கிடையிலான போட்டி?

ஆஸ்திரேலியா எதிர் இலங்கை
ஆஸ்திரேலியா எதிர் தென் ஆபிரிக்கா

21.பிடிக்காத அணிகளுக்கிடையிலான போட்டி?

அண்மைக்காலத்தில் இலங்கையும் இந்தியாவும் அடிக்கடி விளையாடி வருவது சலிப்பாக உள்ளது.
மற்றும்படி பலவீனமான ஒரு நோஞ்சான் அணியை இன்னொரு அணி துரத்தி வேட்டையாடும் எந்தவொரு போட்டியும் சகிக்காது

22.பிடித்த அணித்தலைவர்?

எப்போதுமே அல்லன் போர்டர்..
அர்ஜுன ரணதுங்க, சௌரவ் கங்குலியை தனிப்பட்ட முறையில் பிடிக்காவிட்டாலும் அவர்களின் தலைமைத்துவத்தை எப்போதுமே உயர்வாக மதிக்கிறேன்..

அண்மைக்காலத்தில் மஹேல ஜெயவர்த்தன, மார்க் டெய்லர்
எதிர்காலத்துக்கு ஷகிப் அல் ஹசன் & கமேரோன் வைட்

23.பிடிக்காத அணித்தலைவர்?

எபோதுமே தோல்வியிலிருந்து தப்பித்துக்கொள்ள விளையாடிய Defensive அணுகுமுறை கொண்ட எந்தவொரு தலைவரையும் பிடிக்காது என்பதால் வரிசை மிக நீளம்..

குறிப்பாக கவாஸ்கர், ஹஷான் திலகரத்ன, மைக் அர்தேர்டன், மற்றும் பாகிஸ்தானிய குழப்பத் தலைமைகள் பல..

24.உங்களுக்கு பிடித்த போட்டிவகை?

வீரர்களின் உண்மையான மனத்திடத்தை எப்போதுமே சோதிக்கும் டெஸ்ட் போட்டிகள்

25.பிடித்த ஆரம்பத்துடுப்பாட்ட ஜோடி?

டெஸ்டில்
மத்தியூ ஹெய்டன்& ஜஸ்டின் லங்கர்
சனத் ஜெயசூரிய&மார்வன் அதபத்து

ஒருநாளில்
சனத் ஜெயசூரிய&ரொமேஷ் களுவிதாரண
ஹெய்டன்&கில்க்ரிஸ்ட்
சயீத் அன்வர்&அமீர் சொகைல்
சச்சின்&கங்குலி

26.பிடிக்காத ஆரம்பத்துடுப்பாட்ட ஜோடி?

இலங்கை அடிக்கடி மாற்றிய பல ஜோடிகள்
சேவாக்& ஆகாஷ் சோப்ரா
மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இங்கிலாந்தின் சொதப்பல்,சோம்பேறித்தனமான ஆரம்ப ஜோடிகள்

27.(உங்கள் பார்வையில்) சிறந்த டெஸ்ட் வீரர்?

முரளிதரன்,சச்சின்,ஸ்டீவ் வோ&ரிச்சர்ட் ஹட்லி..
இவர்களின் சாதனைகள் ஒவ்வொன்றின் பின்னாலும் கடும் அர்ப்பணிப்பும், அணிக்கான தேவையும் இருந்துள்ளன.
போராளிகள் இவர்கள்

28.கிறிக்கற் வாழ்நாள் சாதனையாளர் (உங்கள் பார்வையில்)?
முத்தையா முரளிதரன்
தோல்விகளை வாடிக்கையாகக் கொண்டிருந்த ஒரு அணியைத் தூக்கி நிறுத்தியவர்.
இப்போது வரை இவர் விளையாடினால் இலங்கை தோற்பதை விட வெல்வதற்கான வாய்ப்புக்களே அதிகம்..
தன்னம்பிக்கையும் ஆனால் அடக்கமும் நிறைந்த ஒரு மனிதர்.
தனித்துப் பல போட்டிகளை வென்றெடுத்த வீரர்கள் இவரோடு ஒப்பிடும்போது மிகக் குறைவே..


29. சிறந்த கனவான் வீரர் ?
கோட்னி வோல்ஷ்
நியாயமாகவும் ,கண்ணியமாகவும் நடந்துகொள்ளும் ஒரு நல்ல மனிதர்

ரொஷான் மகாநாம
சர்ச்சைகளில் சிக்காதவர்.பலருக்கு உதவிகள் செய்து உயர்த்திவிட்டவர்.
கண்ணியமான,பண்பானவர்.(நேரிலேயே கண்டுள்ளேன்)



30. நான் பார்த்து வியந்த வீரர்கள்?

சனத் ஜயசூரிய, முரளிதரன், சச்சின், விவ் ரிச்சர்ட்ஸ், ஜொண்டி ரோட்ஸ்,மத்தியூ ஹெய்டன் .. இப்போது டில்ஷான் & கம்பீர்..

தொடர்ச்சியான அசத்தும் ஆற்றல்&மற்றவர்களிடம் இருந்து தனித்து தெரியும் சுபாவம்


குறிப்பு - இது என் ரசனை. பிடித்தாலும்,பிடிக்காவிட்டாலும் கருத்து சொல்லிட்டுப் போங்க..
எனது சிறு வயது கிரிக்கெட் நினைவுகளை மீட்ட உதவிய இனிமையான தொடர் பதிவை தொடக்கிய பவன் மற்றும் அழைத்த நண்பர்கள் யோ(கா)வுக்கும், வரதராஜலுவுக்கும் மீண்டும் நன்றிகள்.


இத்தொடரை தொடர கிரிக்கெட் மற்றும் விளையாட்டுப் பதிவுகளை சுவாரஸ்யமாகவும் ஆர்வமாகவும் தரும் இருவரை அழைக்கிறேன்..



(நான் அழைப்பவர்களுக்கு ஒரு கருத்து. என் விருப்பங்கள் உங்களின் விருப்புக்களுக்க முற்றுமுழுதாக எதிராக இருந்தாலும் தொடருங்கள். விருப்புக்கள் வேறுபட்டன. தனிப்பட்ட விருப்புக்களுக்கு நான் தலைவணங்குகிறேன், நீங்களும் அவ்வாறே செய்யுங்கள்)

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner