July 25, 2012

Amazing Spider-Manஉம் சில அரை குறைகளும்


"எவனுக்கு என்ன பலம் எவனுக்கு என்ன குணம் கண்டதில்லை ஒருவருமே!ஒரு விதைக்குள்ளே அடைப்பட்ட ஆலமரம் கண்முழிக்கும் அதுவரை பொறு மனமே!"

இது வைரமுத்து படையப்பாவுக்காக எழுதிய பாடல் வரிகள்..

இது சூப்பர் ஸ்டார்களுக்கு மட்டுமல்ல எம்மைப் போல சாதாரணர்களுக்கும் பொருத்தமே.
எமக்குள் ஒளிந்து கிடக்கும் ஒரு அசாதாரண சக்தி அபரிதமாக வெளிப்படுவதற்கு ஒரு காலமும், அதற்கான களமும் அமையவேண்டும்.
தூண்டல்களும், சரியான வாய்ப்புக்களும் இல்லாமல் பலருக்குள்ளே இன்னும் எவ்வளவோ ஆற்றல்கள் தூங்கிக் கிடக்கலாம்.

அந்த ஆற்றல்கள் தூண்டப்படும் நேரம் நாம் தான் Super Man, Spider Man or Batman

இப்படியான  சூப்பர் ஹீரோக்கள் படங்கள் நம்பமுடியாத சாகசங்களோடு வந்தும் மக்களை வயது வேறுபாடின்றி, மொழி, நாடுகள் வேறுபாடின்றிக் கவர்ந்துகொள்ளக் காரணமும் எமக்குள் இருக்கும் இவ்வாறான ஆசைகளே.

தனக்குத் தனக்கென்றும் தன் நெருங்கியோருக்கும் ஏதாவது ஆபத்து, அனர்த்தம் நிகழ்கையில் தான் அநேகர் கதாநாயக அவதாரம் எடுக்கிறோம். அதற்குப் பிறகு சமூக நலன் விரும்பிகளாக, சமூகக் காவலர்களாக மாறிவிடுகிறோம்.

பீட்டர் பார்க்கரும் அவ்வாறு தான்..
சாதாரண ஒரு கல்லூரி மாணவன். மனதுக்குள் ஒரு சிறு காதல். புகைப்படம் எடுத்தல் அவனது பொழுதுபோக்கு. நல்லவன் ஆனால் கொஞ்சம் பயந்தவன். கண் முன்னால் நடக்கும் அநீதிகளை வெறுப்பான்; ஆனால் தடுக்கும் அளவுக்குத் துணிச்சல் இல்லை.

தன்னை வளர்க்கும் உறவினர் கண் முன்னால் சுடப்பட்டு இறப்பதைப் பார்ப்பதும், அவர் இறக்கும் முன் ஒரு திருடனுடன் போராடி இறப்பதும் பார்க்கரின் மனதில் ஏற்படுத்தும் மாற்றங்களும், பின்னர் ஆய்வுகூடத்தில் சிலந்திக் கடியும் சேர்ந்து அப்பாவி பார்க்கரை அசகாயசூரனாக மாற்றுகின்றன.

அதன் பின் பலம் வாய்ந்த வில்லனை எதிர்ப்பதும், வீழ்த்துவதும், இடையே காதல் , சென்டிமென்ட் என்று ஒரு தமிழ் சினிமா மாதிரி, அல்லது வழமையான ஆங்கில Super hero படங்களின் பாணியில் தான் படம்.

ஆனால் 3D இல் பார்க்கையில் இன்னும் கொஞ்சம் பரவசம். ஏதோ கண்ணுக்கு முன்னால் நடக்கும் சம்பவங்களைப் பார்க்கிற மாதிரி.
ஸ்பைடர் மான் பாய்கிற காட்சிகளும், வேகமான விறுவிறுப்பு சாகச சண்டைகளும் அப்படியொரு தத்ரூபமும், 3Dஇல் பார்த்தால் தான் அதன் மெய்ப்பாடுகள் விளங்கும் என்கிற மாதிரியும் இருக்கின்றன.



எனக்கு இந்த சாகச வீரர்களின் படங்களில் சிறுவயதிலிருந்து தனியான ஆர்வம் இருந்து வந்தாலும் இந்த Man களில் எல்லாம் Spider Manஇல் மட்டும் தனியான ஒரு அனுதாபம்.
காரணம் Batman க்குத் துணையாக ரொபின், ஒரு சகல வசதிகளும் படைத்த கார் என்று சொகுசான வாழ்க்கை.
Super Man கிரிப்டன் கிரகத்து மனிதர். அதீத சக்தி, வசதியான வேலை என்று அவருக்கும் குறை இல்லை.

ஆனால் இந்த சிலந்தி மனிதன் பாவம்.
பெற்றோர் இன்றிய இளவயதுக் காலம். தனியாகவே போராடவேண்டிய நிர்ப்பந்தம்.
போலீசும், இன்னும் பலரும் ஸ்பைடர் மானையும் கூடக் கெட்டவனாகவே நினைத்துக்கொள்கிற துரதிர்ஷ்ட நிலை வேறு.
காயங்களும் உபாதைகளும் இரத்தக் கீறல்களும் மட்டுமல்ல சோகங்களும் சிக்கல்களும் கூட எம்மைப் போலவே இவரும் தாங்கிக்கொள்ள வேண்டும்.
இதற்கு முந்தைய ஸ்பைடர் மான் படத்தின் கடைசிக் காட்சியில் ஒரு வசனம் சுய புலம்பலாக வரும் " ஸ்பைடர் மானாக நான் இருப்பது எனக்கு வரம் அல்ல; சாபமே" என்று.

இது ஒவ்வொரு ஸ்பைடர் மானிலும் மீண்டும் மீண்டும் அடிநாதமாக வரும்.
சொந்த வாழ்க்கையா? அல்லது சமூகத்துக்கான அர்ப்பணிப்பா என்ற கேள்வி அவருக்குள் ஏற்படுத்தும் போராட்டம் ஒரு அசாத்திய பலம் பொருந்தியவனுக்கானதல்ல; எம் போன்ற ஒரு சாதாரணுக்கானது என்பதே ஸ்பைடர் மானை எம்முள் ஒருவனாக நெருங்க வைத்துவிடுகிறது.
ஆனால் அதிலிருந்து தெளிவு பெற்று மக்களுக்கான, சமூகத்துக்கான கடமை தனக்கு உள்ளது என்பதை உணர்ந்து கொள்வது தான் எமக்கும் இந்த Super Heroவுக்கும் இடையிலுள்ள வித்தியாசம்.

"நீ நல்லவன்; இந்த சமூகத்துக்கு நீ தேவை. ஆனால் உன்னை விரும்புவோர் அதிகரிப்பது போலவே உனக்கு எதிரிகளும் அதிகரிப்பார்கள். இந்தக் கஷ்டத்தில் க்வேன் (பீட்டர் பார்க்கரின் காதலி) அகப்படவேண்டாம். தயவு செய்து அவளிடமிருந்து விலகிவிடு" என்று இறக்கும் தறுவாயில் காதலியின் தந்தை கேட்கும் வாக்குறுதியை மீற முடியாமல் தவிக்கும் இடம் மனதைத் தொடக் கூடியது.

அந்த அழகான, அன்பான காதலியை அவ்வளவு இலகுவாக மறந்துவிட யாருக்குத் தான் முடியும்?
காதலியைப் புரிந்து அவளையும் ஏற்று, அந்தக் காதலியும் தன் காதலன் தனக்கானவன் மட்டுமல்ல, சமூகத்துக்கானவனும் கூட என்பதை உணர்ந்துகொள்வதும் கூட எல்லோராலும் முடிவது இல்லை.

ஒரு சிலந்திக் கடியினாலும், தந்தையின் விஞ்ஞானப் பரம்பரை அலகுகள் வழியாகவும் தனக்குள் கடத்தப்படும் ஆற்றல் + அறிவியலைத் தனக்குள் வைத்திருக்காமல் அல்லது தனக்கென மட்டும் பயன்படுத்தாமல் மக்களுக்காகப் பயன்படுத்தி அதில் தனக்கு வரும் கஷ்ட, நஷ்டங்களைத் தான் தனியாக ஏற்றுக்கொள்வது எல்லா சாதாரணர்களாலும் முடியக்கூடிய விஷயமல்ல.

ஆற்றல்களும் இருந்து, அடக்கமும் இருந்து, தனக்கான கடமைகளையும் உணர்ந்து, அதைத் தவறாகப் பயன்படுத்தாமல் சரியான நோக்கில் தேவையான இடங்களில் மட்டும் பயன்படுத்துவதால் தான் அந்த பீட்டர் பார்க்கர் என்ற சாதாரணன், சிலந்தி மனிதனாக மாறுகையில் The Amazing Spiderman ஆகிறான்.

எல்லாவற்றையும் அரைகுறையாக வைத்துக்கொண்டு, எமக்குள்ளேயே குறைகள் ஆயிரத்தை வைத்துக்கொண்டு மற்றவர் குறைகளைப் பூதக்கண்ணாடி வைத்துத் தேடி அதை ஊதிப் பெருப்பித்து, ஊகங்கள் பூசியும், ஊரெல்லாம் பரப்பியும் குறுக்குவழியில் கோட்டையைப் பிடிக்க முயல்வதால் நாம் இன்னும் அரை குறைகளாவே இருக்கிறோம்.

(நாம் என்கையில் நாம் எல்லோரும் அல்ல... தொப்பி அளவானவர்கள் மட்டும்)

எமது ஆற்றல்கள் புரிந்தால், எமக்குள்ளே இருக்கும் திறமையை நாம் உணர்ந்தால் அவற்றை மற்றவர் அறிந்து எம்மை ஏற்றிவிடாவிட்டாலும், எம்மாலேயே எமக்கான பாதைகளை வகுத்து எம்மையும் உயர்த்தி, எமக்கானவரையும் , மற்றவரையும் கூட அவர்களுக்கானவற்றை சரியாக வழங்கிட முடியும்.
அப்போது நாங்களும் எங்கள் மட்டத்தில் ஒவ்வொரு Super Heroes தான்....

July 20, 2012

என்னமோ நடக்குது இலங்கையிலே..


தமிழர் பிரதேசங்களில் புத்தர் சிலைகள்; கட்டாயக் குடியேற்றம்; தமிழர் மற்றும் முஸ்லிம்கள் மீள் குடியேறத் தடை; ஆஸ்திரேலியாவுக்கு அகதிகள் படகில் செல்கிறார்கள்; படகில் செல்ல முயன்றோர் கைது; கைதாகியுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தாமதம்; தாக்குதல்; தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய பூமிகள் அபகரிக்கப்படுகின்றன இவ்வாறெல்லாம் தினம் தோறும் செய்திகளில் நாம் பார்ப்பவை; பதறுபவை; கொதிப்பவை; சில சமயம் என்ன செய்ய முடியும் எம்மால் என்று வெறும் பெரு மூச்சோடு மட்டும் வாளாவிருப்பவை.

மேலே குறிப்பிட்ட ஒவ்வொரு விடயத்திற்கும் இடையில் நெருங்கிய தொடர்புகள் கண்ணுக்குத் தெரியாமல் இருப்பதை இலங்கை அரசியல், நாட்டு நடப்புக்களை அவதானிப்பவர்கள் உணர்வார்கள்.

யுத்தம் முடிந்து முழுமையாக நான்கு ஆண்டுகள் ஆன பின்னரும் இன்னமும் மீள் குடியேற்றம் ஒழுங்காக நடக்கவில்லை..
எத்தனை பேர் எத்தனை விதமாகக் குரல் எழுப்பியும், எங்கெங்கோ இருந்து அழுத்தங்கள் வந்தும் கண் துடைப்பாக அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒன்றிரண்டு மீள் குடியேற்றங்கள் நடந்தனவே தவிர, கட்டாயக் குடியேற்றங்களும், 'தொல் பொருள்' கண்டெடுப்புக்களின்படி புதிய விகாரைகளும் அதனுடன் தொடர்புபட்டவர்களின் குடியேற்றங்களும் தான் சீராக, வேகமாக நடந்து வருகின்றன.

அது சரி, யுத்தம் நடந்து இத்தனை ஆண்டுகளின் பின்னர் ஏன் இவ்வளவு பெருந்தொகையானோர் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளுமே ஆஸ்திரேலியாவுக்குப் படைஎடுக்கவேண்டும்?
அதுவும் உயிரைப் பணயம் வைத்துப் படகுப் பயணம்..
அதிலும் ஆஸ்திரேலியா அண்மைக் காலத்தில் கருணை காட்டவில்லை; கிறிஸ்மஸ் தீவிலும் கொக்கோஸ் தீவிலுமே  செல்வோரை எல்லாம் தடுத்து வைத்துள்ளது என்றும், தெரிந்த பின்னரும் இப்படிப்பட்ட உயிராபத்தான பயணங்களின் அவசியம் என்ன?

தலைக்கு செலுத்தப்படும் தொகை குறைந்த பட்சம் 15 லட்சம் ரூபாய்.
*(ஒரு மாதத்துக்குள் மூன்று மடங்காக உயர்ந்துள்ளது.)

வெற்றிகரமாக கிறிஸ்மஸ் தீவுகளை அடைந்த படகுகளில் (மட்டுமா தெரியாது) சில சிங்களவர்களும் இருந்துள்ளார்கள் என்ற தகவல் வந்துள்ளது.

மாதாந்தம் கிழக்குக் கரையோரப் பிரதேசங்களில் இருந்து குறைந்தது இரண்டாயிரம் பேராவது இவ்வாறு படகுகளில் 'ஆஸ்திரேலியா' செல்கிறார்களாம்.
ஏற்கெனவே இலங்கையில் தமிரின் சனத்தொகை வளர்ச்சி வீதம் மிகக் குறைவடைந்து செல்லும் நிலையில், அத்துமீறிய குடியேற்றங்கள் ஒருபுறம் + இப்படியான இடப் பெயர்வுகள்.

இந்த கடற் பயணங்களும் , கைதுகளும் வலிந்து நடக்கிறதோ? வலிமையான ஒரு பின்னணியோ என்று அந்தப் பிரதேச மக்கள் மட்டுமல்ல நாடு முழுக்க சந்தேகம் இருக்கிறது.
அதற்கேற்பவே ஒன்று விட்ட ஒரு நாள் (அண்ணளவாக) பயணங்களும், படகுகள் கவிழ்வதும், கைதுககுமாக நடந்து கொண்டிருக்கின்றன.

இவ்வளவு இறுக்கமாகக் கரையோரப் பாதுகாப்பு + கண்காணிப்பு இருந்தும் இப்படியான ஆட் கடத்தல்கள் நடப்பதாக இருந்தால் தரகர்கள், இடைத் தரகர்கள் யார் எனத் தெரியவேண்டுமே.
உண்மைகள் எப்போதாவது வரலாம்...

முன்பொரு காலம் இருந்தது தமிழரின் வீடுகளிலும் அவர்கள் வணங்கும் தெய்வப் படங்களைத் தவிர இன்னும் மூன்று அல்லது நான்கு படங்கள்/ சிலைகள் நிச்சயம் இருக்கும்.
மகாத்மா காந்தி, பாரதியார், MGR , புத்தர்.


புத்தரை எம்மவர்கள் அமைதியின் சின்னமாக, சமயம் கடந்து ஒரு ஆன்மீக அடையாளமாகப் பார்த்து மதித்து வந்தார்கள்.
புத்தர் இன்னமும் மாறவில்லை; ஆனால் அவரை இப்போது ஒரு ஆக்கிரமிப்பின் அடையாளமாக மாற்றிவிட்டார்கள்.
எங்கெங்கே புத்தர் சில முளைத்தாலும் இப்போது வணங்குவதை விட, அந்த அமைதி தவழும் முகத்தை ரசிப்பதை விட பயத்தோடு சந்தேகத்தோடு பார்க்க ஆரம்பித்துள்ளார்கள் எம்மவர்கள்.

அதிலும் சிலைகள் முளைத்துள்ள இடங்களைப் பாருங்கள்....
முதலில் கோணேஸ்வரம் - இப்போது அங்கே மலையேறி ஆலயம் செல்லும் வழியில் ஒரு புத்த வழிபாட்டுத் தலமே பெரிதாக எழுந்துள்ளது
கேதீஸ்வரம்
மடு
கதிர்காமம் எப்பவோ கத்தரகம ஆகிவிட்டது.
அம்பாறையில் முஸ்லிம்கள் & தமிழரின் பாரம்பரியப் பிரதேசங்கள் திகவாபி ஆகிவிட்டன.

இது பற்றி தனி மனிதர்களாக, ஊடகங்களாக இன்னமும் செய்திகள், குமுறல்கள் வந்து கொண்டே இருந்தாலும் அந்தந்தப் பகுதியின் மக்கள் பிரதிநிதிகள் குரல் எழுப்பாது குறைந்துவிட்டது. அலுத்து விட்டார்களோ? அல்லது குரல் எழுப்பினால் குரலே இருக்காது என்று ஏதாவது தகவல்?

போன ஞாயிறு தினக்குரலில் ஒரு செய்தி வெளியாகி இருந்தது. கன்னியாய் வென்னிரூற்றுப் பகுதியில் இருந்த அந்தியேட்டி மேடம் என்ற இந்துக்களின் புனித மடம் ஒன்று  அடையாளம் இல்லாமல் செய்யப்பட்டுவிட்டதாக.
கடந்த வருடம் கன்னியாய் சென்ற போதே அங்கே இந்துக்களின் கோவில் கவனிப்பாரற்றுப் பாழ் பட்டுப் போயிருப்பதையும், தமிழ்ப் பெயர்ப் பலகைகள் சிதைந்து போயிருப்பதையும் கண்டேன். அத்துடன் புத்த விகாரை ஒன்று எழுப்பப்படுவதையும், பௌத்த அடையாளங்கள் புதிதாக முளைப்பதையும் காணக்கூடியதாக இருந்தது.

நான் சமய அடையாளங்களை அறவே வெறுப்பவன். கடவுள் என்ற ஒன்றையே கணக்கெடுக்காதவன்.
ஆனால் சமயத்தின் அடிப்படையிலேயே இங்கே இனங்களின் எதிர்காலங்கள் தீர்மானிக்கப்படுகின்றன எனும்போது பேசாமல் சமயத்தை மீண்டும் பின்பற்றலாமோ என்ற எண்ணமும் வருகிறது.

இங்கே ஆலயப் பகுதிகளும் சூழலும் தானே குறிவைக்கப்படுகின்றன.

திருகோணமலையில் முன்பிருந்தே கொஞ்சம் கொஞ்சமாக தமிழரின், முஸ்லிம்களின் நிலப்பகுதிகளின் ஆக்கிரமிப்பு நடந்துகொண்டே இருக்கிறது.
ஒருகாலத்தில் - வெகுவிரைவிலேயே இந்த செந்தமிழ் பூமி திருக்கணாமல ஆகிடும் அபாயம் இருக்கிறது.
இவ்வளவுக்கும்  தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் ஊர்.
சொந்த மண்ணுக்கே இந்நிலை என்றால்???

கிழக்கு மாகாண சபைத் தேர்தல்கள் வருவதை நினைவுபடுத்திக்கொள்வோம்.

தமிழ் தேசியம், உரிமை, நில ஆண்மை, உரிமைகள் என்பவற்றை முன் வைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசையும் தம்முடன் இணைந்து போட்டியிடுமாறு அல்லது தனித்துப் போட்டியிடுமாறு கோரிக்கை விடுத்து வந்தது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் முதலில் தாம் மத்தியில் அங்கம் வகிக்கும் அரசாங்கத்துடனே இந்த மாகாண சபையிலும் இணைந்து போட்டியிடுவதாக அறிவித்தது.
பிறகு தடாலடியாக நியமனப்பத்திரம் தாக்கல் செய்வதற்கு முதல் நாள் தனித்து, மரச் சின்னத்திலே போட்டியிடுவதாக அறிவித்தது.

தனித்துப் போட்டியிடுவதைத் தான் பெரும்பாலான முஸ்லிம்களும் விரும்புகிறார்கள் என்பது இந்த அறிவிப்பைத் தொடர்ந்து வந்த கருத்துக்களில் இருந்து அறியக் கூடியதாகவிருந்தது.
ஆனால் அடுத்த வெடி உடனே ரவூப் ஹக்கீமிடம் இருந்து.
"தனித்துப் போட்டியிட்டாலும் அரசாங்கத்தின் இணக்கத்தோடு தான் தனித்துப் போட்டியிடுகிறோம்" என்று..

இப்போது அரசாங்கப் பக்கம் இருந்து தேர்தலின் பின்னராவது ஆதரவை ஸ்ரீ.ல.மு.கா தங்களுக்குத் தரும் என்று ஒரு கதை பரவவிடப் படுகிறது. ஹக்கீமும் அது போலவே தேர்தலின் பின்னர் இதைப் பற்றித் தீர்மானிப்போம் என்கிறார்.
மதில் மேல் பூனை?

தமிழ் தேசியக் கூட்டமைப்பும் விடுவதாக இல்லை.
இணக்கத்தோடு உரிமைகளை வெல்வோம் என்கிறது.


அதாவது தேர்தலுக்குப் பின் தமக்கு ஆதரவு தருமாறு..

(தமிழ் பேசுபவர் ஒருவர் தான் முதலமைச்சர் என்பது நிச்சயம். அவர் தமிழரா முஸ்லிமா என்று ஒரு சர்ச்சை சண்டை வராது என்று நம்புவோம்.)


இதுவரை தேர்தல்கள் மட்டும் தான் வெல்லப் பட்டுக்கொண்டிருக்கின்றன; உரிமைகளை நாம் அனைவருமே தேடிக் கொண்டு தான் இருக்கிறோம்.



July 13, 2012

பில்லா II - பில்லா 2



ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு செக்கனையும் தானே செதுக்கிய ஒருவன் எப்படி அடிமட்டத்திலிருந்து கொலைகள், போராட்டம், துரோகம், ஆசை, பேராசை, போதை, பெண்கள் இவை கடந்து உயர் மட்டம் வரை எழுகிறான் என்பதை Stylish Film making உடன் விறுவிறுப்பாக, முன்னைய பில்லாவின் தொடர்ச்சி என்று காட்டுவதற்காக அங்கே இங்கே தொட்டு பிரம்மாண்டமாகத் தந்திருக்கிறார் 'உன்னைப் போல் ஒருவன்' புகழ் சக்ரி டோலேட்டி.

அஜித் - யுவன் இணைந்த மூன்றாவது இப்படியான படைப்பு.. (பில்லா, மங்காத்தா முன்னையவை)
அஜித் பில்லா 2இல் விஸ்வரூபம் எடுத்து நின்றாலும் இன்னும் மூன்று ஹீரோக்கள் படம் முழுவதும் படத்தை மேலும் பிரம்மாண்டம் ஆக்குகிறார்கள்.
ஒருவர் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா
மற்றவர் ஒளிப்பதிவாளர் R.D.ராஜசேகர்
இன்னுமொருவர் வசனகர்த்தா இரா முருகன் 
(ஜாபார் கான் என்று இன்னொருவரின் பெயரும் வந்தது.. அவர் ஹிந்தி வசனங்களை எழுதினாரோ?)

பில்லா 1 க்கும் பில்லா 2 க்கும் இடையில் ஒற்றுமைகள் அதே போல கதை.. 
அஜித்.. அஜித்தின் பெயர் 
சில பாத்திரப் பெயர்களால் தொடுத்துள்ளார்கள். (ரஞ்சித், ஜெகதீஷ்)
அதே மாதிரியான Stylish making , கவர்ச்சி, mafia, கொலைகள் ..

மற்றும்படி அந்த பில்லாவின் தொடர்ச்சி என்றால் இல்லை.

படம் ஆரம்பிப்பதே ஒரு யுத்த சூழல்.. அமைதியாக இருக்கும் குடும்பம் சிதைக்கப்படுகிறது.
தனியனாகின்ற சிறுவன், இளைஞனாகி அகதியாக ராமேஸ்வரம் நுழைகிறான்.
ஆனால் யுத்தம் நடைபெற்ற இடம் இலங்கை என்று எங்கேயும் தெளிவாகக் காட்டப்படாமல் - ஒரேயொரு இடத்தில் ஒரு அட்டை/ பலகையில் SL என்ற எழுத்துக்களுடன் ஒரு இலக்கக் கோவை வருகிறது.
(இராணுவம் கூட வேறு மாதிரியாகவே சித்தரிக்கப்படுகின்றது.. - எச்சரிக்கை??) பவளத்துறை, அகதி என்று சும்மா பம்மாத்தாக மேலோட்டாமாக ஓட்டுகிறார்கள். 

அகதி என்றால் அதுவும் ராமேஸ்வரம் என்றால் அது இலங்கைத் தமிழன் தானே?
பிறகேன் யாரும் இலங்கைத் தமிழே பேசவில்லை?
ஆனால் தப்புத் தப்பா இலங்கைத் தமிழ் பேசிக் கொல்வதை விட இந்த சினிமாத் தமிழ் எவ்வளவோ மேல் தான்...

"அகதிகள் தான்.. ஆனால் அனாதைகள் இல்லை " வசனம் கை தட்டல்களை அள்ளுகிறது. 
வாழ்க ;)

அஜித்துக்கு அளந்து பேசும் பாத்திரம்.. ஆனால் பேசுகின்ற ஒவ்வொரு வசனமுமே பஞ்ச். அழுத்தமாக அர்த்தத்தோடு வந்து விழுகின்றன.

உட்கார்ந்து வேலை வாங்குறவனுக்கும் உசிரைக் கொடுத்து வேலை செய்றவனுக்கும் வித்தியாசம் இருக்கு

எனக்கு நண்பனா இருக்கிறதுக்கு எந்தத் தகுதியும் தேவையில்லை; ஆனால் எதிரியா இருக்கிறதுக்கு தகுதி வேண்டும் (அட்டகாசம் - உனக்கென்ன பாடலில் வைரமுத்துவின் வரிகள்)

மத்தவங்களோட பயம் நம்ம பலம்

நல்லவங்களைக் கண்டுபிடிக்கிறது தான் கஷ்டம் 

ஆசை இல்லை; பசி (இந்த ஒற்றை வசனம் தான் படத்தின் ஒற்றை வரிக்கதை)

சாவு இருக்கும் வரை ஆயுதத்துக்கு மார்க்கெட் இருக்கும்

தீவிரவாதிக்கும் போராளிக்கும் ஒரே வித்தியாசம் தான்! ஜெயிச்சுட்டா போராளி! தோத்துட்டா உலகமே சொல்லும் தீவிரவாதி 

ஆயிரம் எதிரியை விட்டு வைக்கலாம் ஒரு துரோகியை விட்டு வைக்க கூடாது

சொன்ன நேரத்துக்கு முன்னாலேயே போனா வேற வேலை இல்லாதவன்னு நினைச்சிடுவாங்க..
லேட்டா போனா பொறுப்பில்லாதவன்னு சொல்லிடுவாங்க..
அதனால சொன்ன டைமுக்கு போனாத் தான் நம் மேல ஒரு நம்பிக்கை வரும்

இதுவரை காட்டிக் குடுத்தவங்க எல்லாம் கூட இருந்தவங்க தான்.. சரித்திரத்தைப் புரட்டிப் பாரு

இவை எல்லாமே கரகோஷங்களை அள்ளிக் கொள்ளும் இடங்கள்.
வசனகர்த்தா முருகன் இனித் தொடர்ந்து வாய்ப்புக்கள் பெறுவது உறுதி.

மனோஜ் K ஜெயனுக்கு முக்கியமான வில்லன் பாத்திரங்களில் ஒன்று.. 
(அப்பாடா எத்தனை வில்லன்கள்.. அஜித் உண்மையில் பெரிய ஆள் தான்.. இத்தனை பேரை சமாளிக்க வேண்டி இருக்கிறதே)
பில்லா 1இல் நடித்திருந்த யோக் ஜபீ (ரஞ்சித்) அஜித்துடனே படம் முழுவதும் வருகிறார். பரவாயில்லை.. தேவையான காட்சிகளில் நடிக்கிறார்.

இளவரசு கொஞ்ச நேரம் கலக்குகிறார்.
ஸ்ரீமன் பாவம்.. கொஞ்ச நேரம் தலைகாட்டி பரிதாமாக செத்துப்போகிறார்.



முக்கியமான பாத்திரங்களில் எல்லாம் தமிழுக்குப் புதியவர்கள்.
கதாநாயகி பார்வதி ஓமனக்குட்டன் பரிதாப ஓமனக்குட்டனாக இருக்கிறார். உலக அழகியாமே.. அப்படியா? 
அஜித்தை விட உயரமாக பொருத்தமில்லாமல் இருக்கிறார். வேறு யாரும் கிடைக்கலையா?

வில்லன்கள் இருவரும் செம ஸ்மார்ட். கம்பீரத்துடன் கலக்குகிறார்கள்.
ரஜினிக்கு பிறகு வில்லன்கள் விளையாட அதிக இடம் கொடுத்து அழகு பார்க்கும் ஒரே ஒருவர் அஜித்தாகத் தான் இருக்க முடியும்.
இந்த வில்லன்களுக்கும் தனியான ரசிகர்கள் உருவாகலாம். 

அதிலும் அபாசியாக வரும் சுதன்சு பாண்டே Superb. 
கொஞ்சமாக நரைத்த தலைமுடி + தாடியுடன் மனிதர் அமைதியாக அசத்துகிறார். அந்த நேரிய பார்வையும் அசைவுகளும் செம வில்லத்தனம்.

டிமிட்ரி என்ற பொரோவிய (என்ன பெயரோ? ஏன் டோலேட்டி வெளிநாடுகளின் பெயர்களை உண்மைப் பெயர்களாகப் பயன்படுத்த மாட்டாரோ?)
நாட்டு வில்லனாக வரும் வித்யுத் ஜம்வாலும் ஒரு ஹீரோ போலவே அழகும் உயரமும் கம்பீரமும்.
ஒரு சண்டைக் காட்சியில் கலக்குகிறார்.

கவர்ச்சிக்கென்று வெளிநாடுகளில் இருந்தும் ஹிந்தியிலிருந்தும் இறக்கப்பட்டிருக்கும் பலரில் புருனா அப்துல்லா இன்னொரு நாயகி..
கவர்ச்சியில் தாராள மழை.
பார்வதியை விட இவர் கொஞ்சமாவது நடித்துள்ளார் என்று நிச்சயமாக சொல்லலாம். 

எடிட்டிங் பொறுப்பை எடுத்திருக்கும் சுரேஷ் அர்ஸ் முதல் பாதியில் சும்மா பின்னியிருக்கிறார். அதே வேகத்தை இரண்டாம் பாதியில் அவரைக் காட்ட வைத்திருப்பது டோலேட்டியின் கையில் இருந்திருக்க வேண்டும். ஆனால் இரண்டாம் பாதியில் நாம் எதிர்பார்த்ததை இயக்குனர் நிறைவேற்றவில்லை என்பது அஜித்துக்கும் கொஞ்சம் சறுக்கலே...

இரண்டாம் பாதி நாம் எண்ணுவது அச்சுப் பிசகாமல் அமைந்துபோகிறது இயக்குனரின் அனுபவமின்மையே.. (அவருக்கு இயக்கத்தில் இரண்டாம் படம்.. ஆனால் நாங்க எத்தனை படம் பார்த்திருப்போம் ;))
சுரேஷ் அர்சின் எடிட்டிங்கும் டோலேட்டி & யுவனின் திறமையும் இடைவேளையின் பின்னர் பளிச்சிடும் இடமாக உனக்குள்ளே மிருகம் பாடலைக் குறிப்பிடலாம்.

அஜித்தின் ஹெலிகொப்டர் ரிஸ்க் சாகசம் அற்புதம். மனிதர் ஸ்டைலாக இருக்கிறார்; நடக்கிறார்; நடிக்கிறார்.
ஆனால் திரைக்கதை விடயங்களில் கொஞ்சம் அஜித்தும் தலையிட வேண்டும்.

சாரம் கட்டி செருப்புடன் நடந்த அகதி ஒருவன் படிப்படியாக கோட்டு சூட்டு போட்டு கோடீஸ்வர Don ஆக உயர்வதை நடை, உடை, பாவனைகளில் stylish ஆகக் காட்டுவதில் இயக்குனர் காட்டிய நேர்த்தியை கண்டபடி கொலை செய்யும் காட்சிகளிலும், எப்படி நடக்கிறது என்றே தெரியாமல் இலகுவாக முடிந்துவிடும் மாபெரும் ஆயுதக் கடத்தல்களை லொஜிக் உடன் எடுப்பதிலும் காட்டி இருந்தால் முதல் பாதி போலவே இரண்டாம் பாதியும் ரசிக்கக் கூடியதாகவும் இருந்திருக்கும்.

அதீத கவர்ச்சியும், எடுத்ததெற்கெல்லாம் கொலையும், ஏனென்று கேட்க யாருமே இல்லாத அளவுக்கு சட சடவென செத்து விழும் உயிர்களும் என்று   நம்ப முடியாத காட்சிகள் ஏராளம். தொடர்ச்சியாக மாறி மாறி இவையே எனும்போது கொஞ்சம் எரிச்சலும் வருகிறது.

ஆனால் அஜித்தின் நடிப்பையும் தோற்றத்தையும் ஒவ்வொரு பிரேமிலும் ரசிக்காமல் இருக்க முடியாது. அதற்காகத் தான் பில்லா பலருக்கும் அதிகமாகப் பிடித்திருக்கும்.

அகதி முகாம் போலீஸ் அகதிகளையும் அஜீத்தையும் துன்புறுத்தும் காட்சிகளும் நாயகன் படத்தையும் அஜீத் + அந்த டீக்கடை காட்சி, கமல் + நாயகன்  காட்சிகளை ஞாபகப்படுத்துகின்றன. 
அத்துடன் படத்தின் சில காட்சிகள் அல் பசினோ (Al Pacino) நடித்து 80களில் வெளிவந்த Scarface படத்தை ஞாபகப்படுத்துகின்றன.

அஜித் என்ற ஒரு Match winnerஐ நம்பிக் களம் இறங்கிய இயக்குனர் டேவிட் பில்லா என்ற ஒரே பாத்திரத்தை மிக நேர்த்தியாக வடித்துவிட்டு அதுவே போதும் என்று ஒதுங்கிவிட்டது தான் எமக்கு முழுத் திருப்தியைத் தரவில்லைப் போலும்.
அஜீத் ரசிகர்களுக்கு தலயைத் தல ஆகப் பார்ப்பதில் புளகாங்கிதப்படலாம்...
பில்லா 2 ஆரம்ப வசூலை ஈட்டி சுமார் வெற்றியைப் பெற்றுக் கொள்ளலாம்.


ஆனால் மீண்டும் ஜனா, ஆழ்வார், ஆஞ்சநேயா காலம் மாதிரி இயக்குனர்களை நம்பி தல கவிழ்ந்துவிடுவாரோ என்பது தான் கொஞ்சம் கவலை தருகிறது.


பில்லா 2 இல் ரசித்து வியக்கக் கூடிய விடயங்கள்....
அஜீத்... அற்புதமாக நடக்கிறார்; அழகாக இருக்கிறார்; அளவோடு நடக்கிறார்; ஆழமாக + அழுத்தமாகப் பேசுகிறார்.

யுவனின் பின்னணி இசை.. தீம் இசை ஜொலிக்கிறது, சோகக் காட்சியிலும் தீம் இசையையே கொஞ்சம் வேறுபடுத்தி உருக்குகிறார்.

ஒலிப்பதிவு - R.D. ராஜசேகர் கலக்குகிறார். ஒவ்வொரு இடங்களிலும் அற்புதம் & துல்லியம்.

சண்டைக்காட்சிகள் - விறுவிறு சுறுசுறு.. தீயாக இருக்கிறது.
அதிலும் அந்த போத்தல் சண்டை & ஹெலிகொப்டர் சண்டைகள் class
'பவுடர்' விற்கப் போய் பரபரப்பாக வில்லன்களை வீழ்த்து வெளியேறும் அந்தக் காட்சியும் கலக்கல்.

ஜேம்ஸ் பொன்ட் திரைப்படங்களில் வருகின்ற ஜோர்ஜிய நாட்டின் பனி சூழ்ந்த, அரண்மனை வரும் காட்சிகள்

படம் முழுக்க எடுக்கப்பட்ட வர்ணம் - color tone

முதல் பாதி

முதலமைச்சர் - பில்லா உரையாடல் 

கூரிய நறுக் வசனங்கள் 


குறைகள்... இவற்றைக் குறைத்திருந்தால் முன்னைய விஷ்ணுவர்தனின் பில்லாவை இது நிகர்த்திருக்கும்

நம்பக்கூடிய மாதிரி எடுத்திருக்கப்படக் கூடிய இரண்டாம் பாதி

கதாநாயகி

கொத்துக் கொத்தாக செத்து விழுவோர்

அளவுக்கதிகமாக வரும் ஹிந்தி, ஆங்கில வசனங்கள்..
தம்மிழ்படமா என்று சந்தேகமே வந்திடும் சில நேரம் 
(கொஞ்சம் தமிழ் உப தலைப்பு போட்டிருக்கலாமே.. ரஷ்ய வசனங்களுக்கு மட்டுமே வருகின்றன)

கொஞ்சம் மந்தமாகப்போகும் இரண்டாம் பாதி

இலகுவாக தன் எதிரிகளை வீழ்த்திவிடும் பில்லா முடிவு சுபம் என்பதைக் காட்டிவிடுகிறார்.

சப்பென்று முடியும் உச்சக்கட்டம்..

படத்தில் வராமல் கடைசியில் எழுத்தொட்டத்துடன் வரும் யுவன் பாடிய பாடல்


பில்லா 1 & அண்மைய மங்காத்தாவில் அஜித்தின் ஆற்றல் + உன்னைப் போல் ஒருவனில் சக்ரி டோலேட்டியின் திறமை பார்த்து பில்லா 2 பற்றி அதிகமாகவே எதிர்பார்த்துவிட்டேன்.
அலுப்பிலாமல் ரசித்தாலும், ஒரு action & stylish பிரியனாக ரசித்தாலும் முழுமையான திருப்தியில்லை.


பில்லா 2 - செதுக்கியது போதாது - அஜித் மட்டும் ஆகா 

July 12, 2012

விட்டுவிடுங்கள்... பாவம் எங்கள் பிஞ்சுகள்



அண்மையில் நாம் வாழும் சமூகம் எத்தகையது என்று அருவருப்பும், வெறுப்பும், கொஞ்சம் அச்சமும் கொள்ள வைத்த ஒரு நிகழ்வு கிருலப்பனையில் இடம்பெற்ற சிறுமியின் மீதான பாலியல் வல்லுறவும் கொலையும்.
எதுவும் அறியாத ஏழு வயது சிறுமி.. அதுவும் உறவுக்கார இளைஞர்களால்.

எப்படிப்பட்ட ஒரு இழிவான, வக்கிரமான சமூகத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்?

அதைத் தொடர்ந்து இரு நாட்களின் பின்னர் ஒரு செய்தி வெளியாகி இருந்தது.

ஒரு பிரதேச சபைத் தலைவர் ஐந்து வயது சிறுமி ஒருத்தியைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதை அடுத்து சிறை வைக்கப்பட்டுள்ளதாக.

கடந்த வாரம், அரசாங்க அமைச்சினால் வெளியிடப்பட்ட தகவலில், கடந்த வருடத்தில் மாத்திரம் 1000க்கு மேற்பட்ட பாலியல் வல்லுறவு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் இவற்றுள் கிட்டத்தட்ட பாதியளவானவை சிறுவர், சிறுமியர் மீதானவையாம்.
அதிலும் அண்மைய இரு வருடங்களில் இப்படியான வக்கிரங்கள் ஐந்து வீதத்தால் அதிகரித்திருக்கிறது என்ற செய்தி வேறு.

எங்கே போய்க்கொண்டிருக்கிறோம் நாம்?



இந்த செய்திகளை பார்த்தபோது மனதில் பலவிதமான சிந்தனைகள் எழுந்தன..

இப்படியான வக்கிரபுத்தியுள்ளவர்களுக்கு வழங்கப்படவேண்டிய தண்டனை..
மரண தண்டனை வழங்குவது இனி யாராவது இதே தவறை செய்ய எண்ணினால் அச்சுறுத்தும் என்பது சரி தான்.. ஆனால் தவறு செய்தவனுக்கு அது கொடுக்கப் போவது வெறும் சில நிமிடத் துயரத்தை மட்டுமே.
ஆனால் அவனால் சீரழிக்கப்பட்ட அந்த சிறு மொட்டுக்கள்? பாதிக்கப்பட்ட , பலியாக்கப்பட்ட அப்பாவிகளுக்கும், அவர்கள் குடும்பத்துக்கும் என்ன பதில்? என்ன பரிகாரம்?

இனி எவரும் இந்தக் குற்றங்களை இழைக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
இலங்கையில் இப்படியான குற்றங்களுக்கான தண்டனைகள் வீரியம் குறைந்தனவாகவே இருக்கின்றன என்றொரு கருத்து இருக்கிறது.

நேற்று காலை விடியலிலும் நேயர்களிடம் இது பற்றிய கருத்துப் பகிர்வொன்றை நடத்தியிருந்தேன்.

ஒவ்வொருவரும் கொதித்துப் போய்த் தங்கள் கருத்துக்களைக் கொட்டியிருந்தார்கள்.

மரண தண்டனை முதல் பகிரங்க மரண தண்டனை, அவயங்களைத் துண்டித்தல், கல்லெறிந்து கொல்லல் ... மத்திய கிழக்கில் வழங்கப்படும் தண்டனைகள், மாறா வடுக்களை ஏற்படுத்தல், பாலியல் குற்றவாளி என்பதை உடலில் தெரியக் கூடிய இடத்தில் பொறித்தல்...
இன்னும் சிட்டிசன் படப் பாணியில் குடியுரிமை பறித்தல் இப்படி பல தண்டனைகள் சொல்லப்பட்டன.

அதில் ஒருவர் நான் மனதில் நினைத்த ஒரு விடயத்தைத் தெளிவாக சொல்லியிருந்தார்.
வழங்கப்படும் தண்டனையானது குற்றம் செய்தவருக்கு படிப்பினையாகவும், இனி இப்படியான செயல்களைச் செய்ய எண்ணுவோருக்கு பயம் தருவதாகவும், பாதிக்கப்பட்டவருக்கு கொஞ்சமாவது ஆறுதல் தருவதாகவும் அமையவேண்டும்.

உண்மை தான்....


குழந்தைகளை வீட்டிலோ, பாடசாலைகளிலோ அடித்துத் தண்டனை கொடுப்பதே தவறு எனக் கூறும் ஒரு பக்குவப்பட்ட உலகில் வாழ்ந்துகொண்டே இப்படிப் படுபாதக செயல்களில் ஈடுபடுவர்களைக் கொலை செய்யும் அளவுக்குக் கோபம் வருவதில் தவறு இல்லையே 



தண்டனைகள் அச்சப்படுத்தும்.. திருத்தத் தான் தண்டனைகள் என்பது இந்தக் குற்றங்களைப் பொறுத்தவரை பொருந்தாது.
இந்த மிருகங்கள் எப்படியும் இனித் திருந்தாது. எதிர்காலத்துக்கான இளசுகளை சிதைத்தவர்கள் இனியும் வாழக் கூடாது.

இப்பொழுது கொலையுண்டதால் தான் அந்தக் குறித்த சிறுமியின் விடயம் வெளியே வந்தது.. அதற்கு முதலே ஒரு மாத காலம் இந்தக் கொடூரம் அந்தக் காமுகர்களால் நிகழ்ந்துள்ளது.
இப்படி இன்னும் வெளிவராத கொடூரங்கள் இலங்கையின் எந்தெந்த மூலைகளில் நடந்துகொண்டிருக்கின்றனவோ?
இலங்கையில் மட்டுமல்ல.. இன்னும் பல்வேறு இடங்களிலும் கூட..

பாலியல் கல்வி பாடசாலைகளில் கற்பிக்கப்படவேண்டியதன் அவசியம் இப்போது முன்னெப்போதும் இல்லாதவாறு அதிகமாகப் பேசப்படுகிறது.
ஆனால் அதைவிட குடும்ப சூழல் ஆரோக்கியமானதாகவும், நட்புறவு, சகஜபூர்வமாகவும் இருக்கவேண்டியுள்ளது.
குழந்தைகள் தயக்கம், பயம் இன்றி பெற்றோருடன் தங்கள் பிரச்சினைகள், சந்தேகங்கள், பயன்களைக் கலந்துபேசக் கூடிய சூழல் வரவேண்டும்.
அதற்கு பெற்றோரும் தக்கவர்களாக, தவறுகள் இல்லாதோராக, உதாரணமாகக் கொள்ளக் கூடியோராக நடந்துகொள்ளல் அவசியம்.
எவ்வளவு தான் பிசியாக இருந்தாலும் தங்கள் குழந்தைகள் மீது யாராவது ஒரு பெற்றோராவது தங்கள் குழந்தையை அக்கறையாக, கொஞ்சம் உன்னிப்பாக அவதானித்துக் கவனிக்கவேண்டும்.
காரணம் பெற்றோரின் கவனிப்பு இல்லாத குழந்தைகள் இலகுவாகக் காமுகரிடம் சிக்கி சீரழிந்து விடுகிறார்கள்.

உங்கள் குழந்தைகளுக்கு அடிப்படையான விஷயம் ஒன்றை சொல்லிக் கொடுங்கள்.
Good touch & Bad touch என்பவை என்னென்ன என்று ஆறுதலாக சொல்லிக் கொடுங்கள்.
பிறரின் தப்பான தொடுகைகளைத் தவிர்க்கச் சொல்லுங்கள். கை கொடுத்தல், தலையைத் தடவுதல்/ தொடுதல் தவிர வேறு உடம்பின் பகுதிகளில் பிறர் அனாவசியமாக தொட்டால் உங்களுக்கு உடனே சொல்லச் சொல்லுங்கள்.

அன்னியர் யாராவது தனி இடங்களுக்கு அழைத்தல், தவறாகப் பேசுதல், சந்தேகமான நடத்தையுடன் அணுகுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டால் உடனே உங்களிடம் சொல்லச் சொல்லுங்கள்.

இதெல்லாவற்றையும் விட அன்றாடம் அவர்கள் சந்திக்கின்ற அசாதாரணமான நிகழ்வுகளை மறக்காமல் உங்களோடு பகிர்ந்துகொள்ளும் ஒரு வழக்கத்தை ஏற்படுத்துங்கள்.

இளம் பெண்கள் மீதான பாலியல் ரீதியிலான சேஷ்டைகள், வன்முறைகளைக் கூட அவர்களால் எதிர்க்கவோ, தடுக்கவோ முடியும்..
ஆனால் இந்தப் பிஞ்சுகள், பதின்ம வயதுகளின் தொடக்கத்தில் இருக்கும் குழந்தைகளால் என்ன செய்ய முடியும்?
பெரியவர்களிடம் முறையிடுவதைத் தவிர...
தண்டிப்பதை விட தடுப்பது முக்கியம் என்று கருதும் எம்மவருக்கு அவசியமான முற்காப்பு நடவடிக்கைகள் இவை.

ஆனால் கேவலமான விஷயம் என்னவென்றால் சில இடங்களில் மகள்மாரையே சிதைத்த தந்தை மார், சிற்றப்பான்மார், மாமன்மார் ஏன் தாத்தாமாரும் இருப்பது தான்..
என்ன கீழ்த்தரமான பிறவிகள்..

எத்தனை குழந்தைகளின் எதிர்காலம் யாருக்கும் தெரியாமல் இப்படி பாழாகப் போனது என்று கணக்கெடுப்பு இல்லை.. அவர்களின் மனநிலையும் சிதைக்கப்பட்டு அவர்களின் எதிர்கால சுமுகவாழ்வு இல்லாமல் போய் ஒரு எதிர்கால சந்ததியே கருக்கப்படும் இந்தப் பாதகத்துக்குக் காரணமானவர்கள் வெளிச்சத்துக்கு வருவது சமூகத்தின் ஒவ்வொரு உறுப்பினர் கையிலுமே தங்கியுள்ளது.

யுத்தகாலத்திலே நடந்த ஆக்கிரமிப்பு அட்டூழியங்களால் எத்தனை பெண்களின் உள்ளமும் உடலும் சிதைக்கப்பட்டன என்பது வெளிச்சத்துக்கு வராமலே போனது போல, குழந்தைகள் மீதான வன்முறைகளும் வெளியுலகுக்குத் தெரியாமலே வந்திருக்கும்.
ஆயுதங்கள் காட்டிய துஷ்பிரயோகம் முடிந்து இப்போது மனதுக்குள் அடங்கியிருக்கும் வக்கிரங்கள் இந்தப் பிஞ்சு நெஞ்சங்கள் மீது குடும்ப சூழலுக்குள்ளிருந்தே பாய்வதா?
பாவம் அந்தப் பிஞ்சுகள் விட்டுவிடுங்கள்..

இனி வீதியிலோ, வெளியிலோ, சொந்தக்காரர் அல்லது விருந்தினர் வீடுகளிலோ அழகான, செல்லமான சுட்டிக் குழந்தைகளை நாம் செல்லமாகக் கொஞ்சுவதோ, தட்டிக் கொடுப்பதோ, ஏன் பேசுவதோ கூட தப்பான அர்த்தத்திலும், சந்தேகமான பார்வையோடும் நோக்கப்படலாம்.

எங்கள் குழந்தைகளோடும் இனித் தெரிந்தவர் உறவினர்கள் கூட நெருங்கிப் பழகத் தயங்கும் ஒரு இறுக்கமான சூழல் இருக்கப் போகிறது..

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

இறுதியாக முக்கியமான ஒன்று..
சமூகத்தில் நடக்கும் அத்தனை தவறுகள், இழி செயல்கள், பாதகங்களையும் எங்களால் தடுக்க முடியாவிடினும் குறைந்தபட்சம் குரல் எழுபலாம்..
இல்லாவிட்டால் இப்படியோ சமூக வலைத்தளங்கள், ஊடகங்களின் மூலம் குமுறலைக் கொட்டித் தீர்த்து சமூகத்துக்கு வெளிப்படுத்தலாம்.
இதன் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.

ஆனால் அதெல்லாவற்றையும் விட எங்களை நாமே தனிப்படத் திருத்திக்கொள்வோம்.
இதனால் உலகில் ஒரு கெட்டவர் குறையலாம்.. சில தவறுகள் நிகழலாமல் போகும்.
இப்படியே சமூகத்தவரின் ஒவ்வொரு அங்கத்தவராகத் தங்கள் குற்றங்களைக் குறைக்க குறைக்க ஆரோக்கியமான சூழல் ஒன்று உருவாகும் இல்லையா?

உணர்வோம்; உயர்வோம்.


July 01, 2012

ஸ்பெய்ன் வெல்கிறது... என்ன சொல்றீங்க?

 ஐரோப்பியக் கிண்ணக் கால்பந்து இறுதிப்போட்டி இன்று நள்ளிரவு....
ஸ்பெய்ன் எதிர் ஜெர்மனி என்று எதிர்வு கூறியிருந்த நான் உட்பட ஏராளமானோருக்கு விக்கிரமாதித்தன் மாபெரும் அதிர்ச்சியை இத்தாலியின் மரியோ பலோடேல்லி கொடுத்திருந்தார்.
ஜெர்மனியின் வெளியேற்றம் ஒரு மிக வித்தியாசமான இறுதிப் போட்டியைக் கொடுத்துள்ளது.
இதுவரை முக்கியமான தொடர்களின் இறுதிப்போட்டிகள் எவற்றிலும் ஒன்றையொன்று சந்தித்திராத இரு அணிகள் இன்று ஒன்றையொன்று சந்திக்கவுள்ளன..



வழமைபோலவே இந்த இறுதிப்போட்டி பற்றிய சில முக்கியமான முன் எதிர்வுகூறல்கள், சுவாரஸ்ய விடயங்கள் இன்னும் பல & அரையிறுதிகளின் முக்கியமான பார்வை ஆகியவை எல்லாம் பற்றி தமிழ் மிரரில் விரிவாக எழுதியுள்ளேன்...

வாசித்துக் கருத்திடுங்கள் என்று அன்போடும், உரிமையோடும் அழைக்கிறேன்....



விக்கிரமாதித்தனுக்கு எல்லாம் இன்று பயப்படுவதாக இல்லை நான் ;) 
ஸ்பெய்ன் வெல்கிறது.
பயிற்றுவிப்பாளர் விசெண்டே டெல் பொஸ்கே  attacking mode க்கு இன்று தன்னை மாற்றிக்கொள்வார் என்று நம்புகிறேன். 
உலகக் கிண்ண இறுதிப்போட்டியில் நெதர்லாந்துக்கு எதிராக விளையாடிய ஸ்பெய்ன் அணியை இன்று இத்தாலிக்கு எதிராகப் பார்க்க ஆசைப்படுகிறேன்.
டேவிட் வியாவையும் புயோலையும் ஸ்பெய்ன் இன்று அதிகம் miss பண்ணாமல் அதற்கேற்ப ஏனைய வீரர்கள் ஈடுகொடுத்து விளையாடுவார்கள் என நம்புகிறேன்.

ரமோஸ், அலோன்சோ, இனியெஸ்டா ஆகியோர் முன்னாலும், கசியாஸ் கோல் காப்பிலும் கலக்கினால் அது ஸ்பெய்னுக்கு தொடர்ச்சியான இரண்டாவது ஐரோப்பியக் கிண்ணத்தை வென்றுகொடுக்கும்.

இத்தாலியில் வயதேறினாலும் கலக்கிக் கொண்டிருக்கும் அன்ட்ரே பிர்லோ, இப்போது கோல்களைத் தொடர்ந்து அடித்துவரும் பலோடேல்லி, மற்றும் நம்பகமான கோல் காப்பாளர் புபோன் ஆகியோர் ஸ்பெய்னை அச்சுறுத்தக் கூடியவர்கள்.

ஸ்பெய்ன் - இத்தாலி மோதலை ரசிக்க முதல் இவ்விரு அணிகளுக்கிடையிலான இன்றைய இறுதிப்போட்டியின் இன்னும் சில முக்கிய, சுவாரஸ்ய விடயங்களைப் பற்றி அறிய கீழே உள்ள இணைப்பையும் சொடுக்கி வாசியுங்கள்..
 

EURO 2012 FINAL - KEY FACTS : Spain v Italy


ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner