Showing posts with label விமர்சனம். Show all posts
Showing posts with label விமர்சனம். Show all posts

June 10, 2018

காலா !


காலா பற்றிய பார்வைக்குச் செல்ல முதல்...

கதையைச் சொல்லிவிடுவேனோ என்ற பயமில்லாமல் படம் பார்க்காதவர்களும் வாசிக்கலாம்.
கழுவி ஊற்ற/கலாய்க்க எதிர்பார்த்திருப்பவர்கள் முன்னைய காலா பற்றிய என் ட்வீட்ஸ் பார்த்து விட்டு வரலாம்.

நடுநிலை எல்லாம் தேவையில்லை எனக்கு.. இது விமர்சனமும் கிடையாது. வழமையான படங்களுக்கு நான் எழுதுவது போல காலா பற்றிய என் பார்வை மட்டுமே :)

அடுத்து,
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மாஸ் தெரியுமா, charisma தெரியுமா, கரீனா தெரியுமா ?
அவர் திரையில் நின்றாலே அதிரும் தெரியுமா?
இந்தப் படத்தில் ரஜினிக்குப் பதிலாக யார் நடிச்சாலும் எடுபடாது தெரியுமா?

தலைவா.. கோஷக் கூட்டங்கள்..
வசூல் கணக்கு மணித்தியாலம் தோறும் தேடி அப்டேட்டும் கணக்குப்பிள்ளைகள்,
இந்த கோஷப் பார்ட்டிகள், கதை கிடக்கிறது, படம் சொல்லும் விடயம் கிடக்கிறது ரஜினி மட்டுமே போதும் என்று குதூகலிக்கிற குஞ்சுகள்,

எல்லாரும் ஓரமாய்ப்போய் கூலா ஒரு கோலா குடிச்சிட்டு ஓரமாய் நின்று கம்பு சுத்தலாம்.

ஒரு stylish icon ஆக அநேக ரஜினி படங்களில் ரஜினி தோன்றும் காட்சிகளில் கிடைக்கிற அந்த கிக் எனக்கு காலாவிலும் கிடைத்தது. ஆனால் இங்கே பதியப்போவது காலா என்ற ஒரு படத்தைப் பற்றியது.

ரஜினி என்ற ஒரு மிகப்பெரிய ஈர்ப்பு சக்தியின் ஆளுமையும் ஆகர்சமும் கூட சரியான விதத்தில் பயன்படுத்த முடியாமல் போய் படுபாதாளத்தில் வீழ்ந்த அல்ல அல்ல பலூனில் பறந்து வீழ்ந்த லிங்கா போன்ற படங்களும் பார்த்திருக்கிறோம். ரஜினி ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத கபாலி போன்றவையும் வந்தே இருக்கின்றன.

கபாலியில் கற்றுக்கொண்ட பாடங்களையும் சேர்த்துக்கொண்டு ஏற்கெனவே தனக்கு இருக்கும் திறமையான இயக்குனர் என்ற முத்திரையையும் தக்க வைத்துக்கொள்ளும் முயற்சியுடன், மிக நேர்த்தியான தயார்ப்படுத்தலுடன் 'காலா'வில் கை வைத்துள்ளார்.

உழைக்கும் மக்களுக்கு நிலம் சொந்தம் !
இந்த ஒரு வரியின் ஆழமான அரசியலை நேரடியாகவும் அதைச் சூழவுள்ள இந்தியாவின் தேசியவாத, பிராந்திய அரசியலையும் மதவாதப் பிரிவினைகள் மூலமாகப் போராட்டங்கள், மக்கள் எழுச்சிகளைத் திசை திருப்புவதையும் ரஜினியின் மக்கள் மீதான ஈர்ப்பு என்பதைக் கருவியாகக் கையாண்டு குறிப்புக்கள் ஊடாகவும், குறியீடுகளின் கோர்வையாகவும் - பல இடங்களில் நேரடியாகவும் போட்டுத் தாக்கியிருக்கிறார் இயக்குனர் ரஞ்சித்.

"
குறியீடுகளின் கோர்வை.. ரஜினியைக் கருவியாக்கி எடுத்திருக்கும் அதிகாரத்துக்கு எதிரான தன் பிரசாரம். "

சந்திரமுகி, சிவாஜி, கபாலி ஆகியவற்றுக்குப் பிறகு மீண்டு ரஜினி இயக்குனரின் நடிகர் ஆகியிருக்கிறார்.
ரஜினியின் ஈர்ப்பை எங்கெங்கே பயன்படுத்தவேண்டுமோ அந்தந்த இடங்களில் எல்லாம் சிக்ஸர் அடித்திருக்கும் ரஞ்சித் பல இடங்களில் தன்னுடைய படம் இது என்பதை கதையை மேலெழச் செய்து அழுத்தம் காண்பித்துள்ளார்.

முள்ளும் மலரும் திரைப்படத்தின் பின் முழுமையாக அனைத்து வித உணர்வுகளையும் வெளிப்படுத்தும் வாய்ப்புக்கொண்ட பாத்திரம் காலா - கரிகாலனாக.

சிறு குழந்தைகளுடன் கிரிக்கெட் ஆடி bowled ஆவதோடு தாத்தாவாகவும், ஒரு பெரிய குடும்பத்தின் பாசமுள்ள தலைவனாகவும் அறிமுகமாகின்ற ரஜினிக்கு நிகராகக் காட்டப்படுகின்ற அவரது மனைவி செல்வியின் பாத்திரத்தில் ஈஸ்வரி ராவ். ரஜினி ரசிகர்கள் கபாலியில் ராதிகா ஆப்தேக்கு அதிருப்தி காட்டியவர்கள். எனினும் இந்தப் படத்திலும் இனியும் இதை பழகிக்கொள்ளத்தான் வேண்டும்.

ஈஸ்வரி ராவ் கனதியான அந்தப் பாத்திரத்தைக் கையாளும் விதம் அற்புதம். வெட்டென்று பேசும் வெகுளித்தனம், மனதில் அன்பை வைத்து மறுகும் பாசம், காலாவையே கட்டுப்படுத்தும் கண்டிப்பு என்று கலக்குகிறார்.
செல்வி மட்டுமன்றி ஏனைய இரண்டு பெண் பாத்திரங்கள் - முன்னாள் காதலி சரீனா, மராத்தி பேசும் புயலு என்று மூன்று பெண் பாத்திரங்களூடாகவும் சமூகத்தைப் பற்றியும் அரசியலில் பெண்களின் வகிபாகம் பற்றியும் பேச முயற்சித்துள்ளார் ரஞ்சித்.
என்னும் அந்தப் பெண் பாத்திரங்கள் தங்கியிருப்பதையும் தனியாக ஜெயிக்க முடியாமல் போவதையும் குறியீடாகக் காட்டுவதையும் கவனிக்கவேண்டும்.

ரஜினிகாந்தின் அரசியல் மோடி, பிஜேபி சார்ந்தது என்று பேசப்பட்டு விமர்சிக்கப்படும் இப்போதைய காலகட்டத்தில், காவி நிறம், தூய்மை இந்தியா போல தூய்மை மும்பாய், ராமர் கடவுள் (ராம ராஜ்ஜியம் ?), மோடியைப் போலவே படங்கள், கட் அவுட்டில் சிரிக்கும் ஹரி தாதா, போராட்டங்கள், மக்கள் எழுச்சிகள் திசை திருப்பப்படல் என்று பார்த்துப் பார்த்து பகிரங்கமாக ரஜினியை வைத்தே வெளிப்படையாக எதிர்ப்பது கொள்கையின் துணிச்சல்.
அதில் முத்தாய்ப்பு அந்த இறுதியாக வரும் 'சிங்காரச் சென்னை'.

படங்களின் ஒவ்வொரு காட்சியிலும் தாராளமாக குறியீடுகளைப் பின்னணியில் வைத்து தன்னுடைய கொள்கையைக் கொண்டு செல்வதில் ரஞ்சித் ஒரு சமர்த்தர் ; முதல் படத்திலிருந்து.
ரஜினி - கறுப்பு, ஹரி தாதாவினால் தொடர்ச்சியாக ராவணன் என்று கூறப்படும் இடங்கள், ஒரு காட்சியில் பின்னணியில் 'ராவண காவியம்' என்று ராவணனைப் போற்றியுள்ளார் (ராவண காவியத்துக்கு அப்பால் ஈழத்து எழுத்தாளர் டானியலின் நாவலும் தெரிகிறது), கிடைக்கும் இடங்களில் எல்லாம். காலா கூட 'தங்க செல' பாடலில் ஒற்றைத்தலை ராவணன் பச்சப்புள்ள ஆவதாகப் பாடுகிறார்.

ராவணனைப் போற்றி நேரடியாக ராம பக்தர்களை வம்புக்கு இழுக்கும் இடம் அது மட்டுமல்ல.
உச்சக்கட்டக் காட்சிகளில் அதற்கான தனியான இடமுண்டு.

கதாநாயகன் காலாவின் பின்னணியில் புத்தர், கிராமியக் கடவுள் காலா, என்றும் வில்லன் ஹரிதாதாவின் பின்னணியில் ராமர் என்றும் குறிகாட்டி இருப்பது மட்டுமன்றி, ரஜினியின் உச்சக்கட்ட ஹீரோயிசக் காட்சியான மேம்பால சண்டைக்காட்சியில் வில்லனின் வதத்தின் பின்னர் கணபதி சிலைகள் ஆற்றில் கரையும் காட்சியும் உண்டு.

மகனின் பெயர் லெனின்..
எனினும் மகன் கடைக்கொள்ளும் 'விழித்திரு' மக்கள் போராட்ட முறையை எதிர்க்கிறார் காலா. பயனில்லை என்கிறார். எனினும் வன்முறையில் தனது சொந்த இழப்பின் பின்னர் மக்களை சேர்த்து மாபெரும் புரட்சியைத் தானே கொள்கிறார்.

ரஜினியின் தளபதி செல்வமாக வரும் 'வத்திக்குச்சி' திலீபனுக்கு அற்புதமான பாத்திரம். சிறுசிறு பாத்திரத் தெரிவிலும் அக்கறையாக இருந்திருக்கிறார் இயக்குனர். அரவிந்த் ஆகாஷ் ஏற்றுள்ள பொலிஸ் பாத்திரத்தின் பெயர் சிவாஜிராவ் கெய்க்வாட்.


ரஞ்சித்தின் கொள்கை + புத்திசாதுரியம், அண்மைய மக்கள் அரசியல், தலித்திய தத்துவங்கள் என்று படம் முழுக்க விரவி நின்றாலும் அழுத்தமான காட்சிகளாக ரஜினி என்ற ஜனரஞ்சக நடிகனின் சில அழுத்தமான காட்சிகள் எல்லா ரசிகர்களுக்கும் பிடிக்கக்கூடியது.
படத்தின் பிரசார நெடியை சற்றே தணிக்கக்கூடியதாக  அமைவன அவை.
காலாவின் வீட்டுக்கு நானா பட்டேக்கர் (ஹரி தாதா) வந்து, பேசி கிளம்பும் நேரம் "நான் போக சொல்லலையே" என்று அழுத்தமாக சொல்லும் இடமும், அதைத் தொடர்ந்து நானாவின் அழுத்தமான முகபாவங்களும் கலக்கல்.

ஒரு தேர்ந்த நடிகராக நானா பட்டேக்கர் அமைதியான வில்லா முகம் காட்டி ரஜினிக்கு ஈவு கொடுத்து படத்தைத் தூக்கி நிறுத்துகிறார்.

பாட்ஷாவுக்கு ரகுவரன் போல இந்த காலாவுக்கு நானா முக்கியமான ஒரு தூண்.

பாட்ஷா, தளபதி போல போலீஸ் காட்சிகளில் பரபர தீப்பொறி.

"குமார், யார் இந்த ஆளு?" கரகோஷங்களை எழுப்பும் காட்சி.

ஹரி தாதா வீட்டுக்கு காலா போகும் காட்சியும் அங்கே நடக்கின்ற உரையாடலும் அண்மைக்காலத்தில் ஹீரோ - வில்லன் உரையாடல்களில் மிக நுண்ணியமான, அதேவேளையில் கலக்கலான காட்சிகளில் ஒன்று.
(விக்ரம் வேதா இன்னொன்று)
படையப்பா - நீலாம்பரி சந்திப்பு, சிவாஜி - ஆதிசேஷன் சந்திப்புக்களில் பார்த்த அதே ரஜினியின் நெருப்பு.

வெள்ளை - கறுப்பு , இரண்டடி மட்டுமே தூரம், நிலம் எங்களுக்கு வாழ்க்கை உங்களுக்கு அதிகாரம், எங்கள் நிலத்தைப் பறிப்பது உங்கள் கடவுளாக இருந்தால் அந்தக் கடவுளையும் எதிர்ப்பேன் என்று சொல்லும் இடங்கள் தத்துவ சாரங்கள்.
ரஜினியின் மாஸ் அப்பீலும் சேர்ந்து கொள்வதால் தீப்பிடிக்கிறது.

முதுகிலே குத்திக்கோ என்று சொல்லி நடக்கும் அந்த நடை.. ரஜினி ரஜினி தான்.
இத்தனை இருந்தும் மும்பாய் - தாராவி - தமிழர்கள் - நிலம் - போலீஸ் என்ற பின்னணிகளும் காலா சேட் - அவரது நண்பர் வாலியப்பா (சமுத்திரக்கனி)வும், நாயகனை ஞாபகப்படுத்தாமல் இல்லை.
90களில் அப்போதிருந்த சூழ்நிலையை மணிரத்னம் காட்டியதற்கும், இப்போது நவீனமயப்படுத்திய நாயகனாக இந்தக் கால சமூக வலைத்தளங்கள், புதிய தொழிநுட்பங்கள் என்பவற்றுடன் ரஞ்சித் கொண்டுவந்த காலா நாயகனின் புதிய version என்பதற்கும் பெரியளவில் சிந்திக்கவேண்டியதில்லை.

எம்மைக் காட்சிகளில் கோர்ப்பதற்கு காமெராவும் மைக்கும் கையுமாக அலையும் ஒரு ஊடகவியலாளர் (ரமேஷ்) கதை சொல்லியாக ரஞ்சித்தினால் பயன்படுத்தப்பட்டிருக்கிறார். கொஞ்சம் பழைய உத்தி. ஆனால் கடைசிக் காட்சிகளில் அதன் அழுத்தம் முக்கியமானது.

கபாலியைப் போலவே காலாவிலும் காதலும், தொலைந்து போய் மீண்டும் பல ஆண்டுகளுக்குப் பிறகு தேடிவரும் காதலும் உண்டு. அதே போன்ற கலவரத்தில் காணாமல் போன காதல்.
அந்தக் காதலுக்கு இடையில் ரஜினிக்கும் மனைவிக்கும் இடையிலான பாசம் இழையோடும் காட்சிகளும் உண்டு.
ரஞ்சித்தின் படங்களில் மட்டும் கலவரத்தில் காதல் காணாமல் போவதும், காதலர்கள் பின்னர் ஒரு காலம் வரும்வரை தேடாமல் இருப்பதும் நடக்கிறது.

கல்யாணம் நிற்கவும் காணாமல் போகவும் , அந்த வேளையில் வேங்கையனின் மரணத்துக்கும் காரணமான ஹரி தாதாவை சரீனாவுக்கும், ஹரி தாதாவுக்கு வேங்கையனின் தளபதியாக இருந்த கரிகாலனைத் தெரியாமலிருப்பதும் எமக்கு வைக்கப்பட்ட டுவிஸ்ட்??

காலா குடும்பத்தை விட்டு நகர்ப்புற வசதிகளுடன் வெளியேற நினைக்கும் மகன்மாருடன் நிகழ்த்தும் உரையாடல் எத்தனை பேருக்கு தேவர் மகன் சிவாஜி -கமல் காட்சிகளை நினைவில் கொண்டுவந்தது?

ரஞ்சித்தின் வழமையான formula வில் மேலதிகமாக வெளிப்படையான அரசியல் , இப்போது தமிழகத்தில் தகித்துக்கொண்டிருக்கும் அரசியலை மிக சாமர்த்தியமாகக் கையாண்டிருக்கிறார்.

அதற்கு காலாவின் கறுப்பு தேவைப்பட்டிருக்கிறது. தேவையான இடங்களில் லெனின் மூலமாக சிவப்பையும் கையாண்டுள்ளார். இறுதிக் காட்சியில் நீலத்தாலும் பூசி முடிக்கிறார். இவை நிச்சயம் பேசப்படும்; விவாதிக்கப்படும்.

சந்தோஷ் நாராயணனின் இசையின் பங்களிப்பு படத்தின் மிகப்பெரும் பலம். பாடல்களை எல்லாம் எத்துணை திட்டமிட்டு உருவாக்கியுள்ளார்கள் என்பது வியப்புக்குரியது. கூடவே படம் முழுக்கப் பயணிக்கும் இசை ஒரு தனிப்பாத்திரம்.
சந்தோஷும் படத்தின் இன்னொரு இயக்குனர் என்றால் அது மிகையில்லை.
தாராவியைக் காட்டும் விதத்திலும் காட்சிகளூடு எம்மைக் காவிச் செல்வதிலும் ஒளிப்பதிவாளர் முரளியின் பங்கும் பெரியது.

ஆனால் கூடவே சம்பவங்களுக்குப் பாடி ஆடும் அந்த நான்கைந்து பேரின் காட்சிகளை ரஞ்சித் இன்னும் எத்தனை படங்களில் கையாளப்போகிறார்?


இதையெல்லாம் தாண்டி கரிகாலன் இறந்தாரா இருக்கிறாரா என்ற கேள்வியைத் தொக்க வைத்திருக்கும் விதம் சிந்திக்க வைக்கக்கூடியவொன்று.
கிளைமக்சில் ரசிகர்களுக்கு என்ன நடந்திருக்கும் என்ற தெளிவான ஊகத்தைத் தந்துவிட்டு, கதை மாந்தருக்கும் திரைப்பட முடிவுக்கும் சந்தேகம் ஏற்படுவது போல வைத்திருப்பது ஈழத்தினதும், புலம்பெயர் தேசத்தினதும் சிந்தனையில் சிறு பொறியைத் தட்டுவதற்கா?
காரணம் இராவணனின் தலைகள் கொய்யக் கொய்ய முளைப்பது பற்றி சொன்ன இயக்குனர், ஒரு காலா போனாலும் தாராவியில் இருக்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு காலா தான் என்று வேறு ஆழமாகச் சொல்லியும் வைக்கிறார்.

 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படத்தில் செல்வராகவன் "சோழன் பயணம் தொடரும்" என்று காட்டியதை நினைவுபடுத்தும் ரஞ்சித் சுபமான முடிவுக்காக செய்த விட்டுக்கொடுப்பா அது?

காலா - எனக்கு நான் அலுப்பின்றி ரசித்துப் பார்த்த அனுபவம். இயக்குனரின் சாமர்த்தியங்களை ரசித்தேன். குறியீடுகளைக் குறித்துக்கொண்டேன்.
மறைபொருள் அரசியலையும் ஒரு களிமண்ணாக ரஜினியை வைத்துப் பிசைந்து தனக்குத் தேவையான இறுதிப் பொருளை உருவாக்கியதையும் ரசித்தேன்.
சூப்பர் ஸ்டாராக மட்டும் பார்க்க விரும்பும் ரஜினி ரசிகர்களையும் திருப்தி செய்யக்கூடிய மசாலா நுட்பமும் கபாலி கற்றுத் தந்த பாடமாகக் கைவந்துள்ளது.

எனினும் ரஜினியின் ஆன்மிக அரசியலுக்கும் அவர் பேசும் சாமர்த்திய அரசியலுக்கும் ரஞ்சித்தின் 'காலாவுக்கும் இடையில் மயிரளவு கூட சம்பந்தமே இல்லை என்பதை ரஜினி என்ற அரசியல்வாதிக்கும் சேர்த்துக் கொடி பிடிப்போர் புரிந்துகொண்டால் அது தான் தமிழக அரசியலுக்கான விடிவாக இருக்கும்.

எனினும் ஒவ்வொரு காட்சிக்கும் இனி ஒவ்வொருவராகத் தரப்போகும் வியாக்கியானங்களையும் விளக்கங்களையும் நினைத்தால் தான்...

காலா - காலம் சொல்லும் கோலம்









August 29, 2017

விவேகம் !!! - என்ன ? ஏன் ? எதற்கு?

பெரிதாக ஆச்சரியமோ, ஏமாற்றமோ இல்லை.
விவேகம் பற்றிய எக்கச்சக்க build up கள் வந்துகொண்டிருந்தபோதே எனது நண்பர்களிடம் "இது அடுத்த பில்லா 2, அசல் மாதிரி தான் வரும் போல கிடக்கு" என்று சொல்லியிருந்தேன்.
படம் பார்த்தவுடன் கடுப்பு + ஏமாற்றத்தின் எரிச்சலில் ஒரு status போட்டாலும் அடுத்த நாள் கொஞ்சம் சாவகாசமாக யோசித்துப் பார்த்தால் விவேகத்தை விடவும் மோசமான படங்கள் வந்திருக்கே.. இது ஒன்றும் ஒரேயடியாகக் கழுவியூற்றக்கூடிய படமா என்று யோசித்தேன்..
என் மாதிரியே யோசிக்கக்கூடிய பலருக்கும் சேர்த்து கொஞ்சம் விரிவு + விளக்கமாக..
Believe in Yourself - உன்னிப்பாக அவதானித்தால் BE YOU எல்லாம் நல்லாத்தான் இருந்தது.
முதலாவது அகோரத் தாக்குதலுக்கு (அந்தக் கொடுமை தான் அறிமுகம்.. ) பின் தல ரசிகர்களின் பெரிய கரகோஷங்களுடன் அறிமுகமாகிறார்.
அதற்குப் பிறகு அதைவிடக் கொடுமையான பாலப் பாய்ச்சலுக்குப் பின் James Bond பாணியிலான Title + song.
தமிழுக்குப் புதிதாக பல விடயங்களை முயன்றதற்கு சிவாவைக் கொஞ்சம் மெச்சலாம்.

One Man army - James Bond like movie என்று முடிவெடுத்த பிறகு, அதிலும் அஜித் தான் நாயகன் என்று தீர்மானித்த பிறகு stylish making & technical perfection இல் மட்டும் கவனம் செலுத்தினால் போதும் என்று இயக்குனர் சிவா முடிவெடுத்திருக்கிறார் போலும்.
அஜித்தின் நடை+ அந்த ஆழமான குரலில் அழுத்தமாகப் பேசும் punch dialogue - பில்லா முதல் ரசிகர்களால் பெரிய வரவேற்புடன் கொண்டாடப்படும் தல ப்ளஸ்களையே தல அஜித்தின் வெறித்தனமான ரசிகர்களே வெறுக்கவைக்கும் அளவுக்கு மாற்றிய கைங்கர்யம் செய்த இயக்குனர் சிவா.
நடக்கச் செய்து செய்து அஜித்தை நடராஜாவாகவே மாற்றிய மற்ற இயக்குனர்கள் வரிசையில்,
(இதிலும் பாடல் காட்சிகளில் நடக்கிறது பரவாயில்லை, அக்ஸராவை துரத்தும்போதும் நடக்கத்தான் வேண்டுமா?)
வசனங்களாக அழுத்தமானவற்றை இழுத்து இழுத்து பேசச் செய்து, அதிலும் விறுவிறுப்பாகக் காட்சிகள் போய்க்கொண்டிருக்கையில் speed breakers ஆக பஞ்ச் வசனங்களை மாற்றி வைத்த சிவா வித்தியாசமானவர் தான்.
அதிலும் மனைவியோடு பேசும்போது கூட அதே தொனி?
முடியல நண்பா சிவா.
அத்தோடு மற்ற படங்களிலெல்லாம் ஹீரோவோடு கூடவே புகழ்பாட வரும் காமெடியனுக்குப் பதிலாக வில்லன் விவேக் ஓபராயை வைத்து 'தல' புகழ் பாட வைத்து சலிப்பு ஏற்படுத்தியதும் கொடுமை.
அஜித் என்ற magic icon மீண்டும் நம்பி நாசம் + மோசம் போயுள்ளது. இப்படியே இன்னொரு படம் வந்தால் இந்த எதிர்பார்ப்பு எல்லாமே நீர்த்துவிடும்.
கமலின் படங்களில் கூட வந்திராத very detailed Technical advancements, latest technology விஷயங்கள் (reverse hacking, hologram imaging, Morse code, mobile signal jamming, tracking with pacemaker) என்று மினக்கெட்ட சிவா & team, அஜித்தின் அர்ப்பணிப்பு + உழைப்பு, வெளிநாட்டில் படப்பிடிப்புக்குக்காக கொட்டிய கோடிகளையும் இன்னும் கொஞ்சம் அர்த்தமுள்ளதாக மாற்றியிருக்கலாம்.
பாலம், அக்சரா கொல்லப்படும் சண்டை, climax எல்லாம் சலிப்புத் தட்டும் அளவுக்கு திகட்டல்.
அதிலும் பொங்கியெழு மனோகரா பாணியில் காஜல் பாட, அஜித் வெறியேறி ஆட.. சொர்ரி அடிக்க..
உஸ்ஸ்ஸ்..
அதிலும் நேரம் வேறு டிக்,டிக்,டிக்...
அஜித்தின் கடின உழைப்பு, தன்னை வருத்தி இந்தப் பாத்திரமாக மாற்றியது, வெற்றியின் ஒளிப்பதிவு, ரூபனின் நேர்த்தியான எடிட்டிங், அனிருத்தின் பின்னணி இசையின் பிரம்மாண்டம், சிவாவின் வசனங்கள் சில, லொக்கேஷன் தெரிவுகள் (அத்தனை அழகும் ஒருவித freshness உம்), தொழிநுட்ப பிரம்மாண்டம் + CG என்று பாராட்டக்கூடிய விடயங்கள் பல தான்.
இன்னொன்று அந்த AK பெயராக பயன்படுத்தப்படும் விதம்.
(ஆனால் சுவரில் சுட்டு செதுக்குவது எல்லாம் ஓவர் நண்பா)
லொஜிக், மஜிக் எல்லாம் இப்படிப் படங்களில் பார்க்கத் தேவையில்லை என்று சொல்வதையும் சரி நண்பா என்று எடுக்கலாம்..
ஆனால் அதுக்காக தனியொருவனாக கையிரண்டில் துப்பாக்கி தாங்கி சடபட என்று ஆயிரக்கணக்கில் வேட்டையாடுவதும் ஆயிரக்கணக்கில் சுடப்பட்டும் ஒன்று கூட உரசிச்ச செல்லாததும், பனி மலையில் தனியொருவனாகக் காய்ந்து கிடப்பவர் திடீரென்று அத்தனை ஆயுதங்களோடு அவதாரம் எடுப்பதெல்லாம் என்ன நண்பா?
நேரக்கணக்கு எல்லாம் Mission Impossible, 24 (English) கணக்கில் இருந்தாலும் கொஞ்சம் ஓவராகவே...
அஜித் ரசிகர்களுக்குப் பிடிக்கும், A பிரிவு ரசிகர்களுக்கு ஏற்றது.. இதெல்லாம் ரசிகர்கள் தம்மைத் தாமே ஏமாற்றிக்கொள்ளும் சில ஆறுதல்களே.
உண்மையாக அஜித்திடம் எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்று யார் யார் ஏற்றுக்கொள்கிறீர்களோ அவர்கள் என் கட்சி.
ஆனால் அடிக்கடி நான் சொல்லும் 'மனம் போல வாழ்வு' என்பது
"எண்ணம் போல் வாழ்வு" என்று வந்த இடம் மனதோடு ஒட்டிக்கொண்டது.
ஆனால் ஒன்று, இனி பல்கேரியா, அல்பேனியா, சேர்பியா இவை பற்றி எங்கு, என்ன கேட்டாலும் விவேகமும் துப்பாக்கிகளும் தான் ஞாபகம் வரப்போகுது.

நிற்க, அடுத்த படமும் சிவாவோடு தானாமே..
இன்னொரு V பெயர்..
வீரம் - 
தமிழ்நாடு 
வேதாளம் - இந்திய அளவு 
இப்போது விவேகம் - சர்வதேச அளவுக்குப் போயாச்சு.
இந்தியாவுக்குள் எட்டிப் பார்க்கவில்லையே..
அப்போ... 
அடுத்த subject Space, UFO அப்படியேதாவது?? 🤔😯


December 16, 2014

லிங்கா - Lingaa


ரஜினிக்கு எனது அப்பாவின் வயது..

அப்பா என்னை முதன்முதலாக அழைத்துப்போன ரஜினி படம் பொல்லாதவன் (என்று நினைவு). 

வீட்டில் வந்து படி படியாக ​ஏறி நின்று ரஜினி ஸ்டைலில் நின்று பாடியதும் இன்று வரை நினைவில்.



இப்போது அப்பா வங்கியாளராக இருந்து ஒய்வுபெற்றுவிட்டார்.

இளமை வயதில் எங்களுக்குச் சரிக்குசரியாக அப்பாவும் கிரிக்கெட் விளையாடியது இப்போது அப்பாவால் முடியாது.

நாம் இப்போது பார்க்கும் T20 கிரிக்கெட் போட்டிகள் அப்பாவின் ரசனைக்கு ஒத்துவருவதில்லை.



IPL போட்டிகள், இப்போதைய கால்பந்து போட்டிகளில் அவருக்கு ஆர்வம் இல்லை.

கேட்டால் "too many matches, too many players, too many changes.. all way too much" என்பார்.



சின்ன வயதில் நான் வாசித்த மாயாவி கொமிக்ஸ் இப்போது பழசு. கதைகள் பழசு. ஆனால் இப்போதும் மாயாவி புதுசா கதையா வந்தாலும் மாயாவி அப்படியே தான் இருக்கப் போகிறார்.



Spider Man போன்ற சாகசப் பாத்திரங்களுக்கும் அதே மாதிரி நிலை தான்.



இதைத் தான் லிங்கா படத்தில் ரஜினியோடு ஒப்பிட்டு பார்க்கச் சொல்கிறார்கள் ரஜினிகாந்த் ரசிகர்கள் / பக்தர்கள்.



அப்படி பார்த்தால் கோச்சடையான் (அது குறைப் பிரசவம்.. அல்ல அதைவிட மோசமான கொடும் அவஸ்தை படைப்பு)போல தான் ரஜினியின் இனி வரும் எல்லாப் படங்களும் வரவேண்டும்.



ரஜினியின் ஸ்டைலும் அந்த charismaவும் இன்னொருவருக்கு வராது..
என்றும் சூப்பர் ஸ்டார் அவர் தான் என்ற வாதங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்தக் காலகட்டத்தில் பெரிதாக பேசப்படுவதற்கு என்ன காரணம் என்பது பாபா தோல்வி முதல் ஆராயப்படவேண்டியவை.


ரஜினி என்ற மாபெரும் பிம்பம் கூட ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாவிட்டால் புஸ் தான் என்பதை பாபாவும் காட்டியது, பின்னர் அண்மையில் கோச்சடையானும் அதே கதை தான்.

லிங்கா பற்றிய பேச்சுக்கள் கிளம்ப ஆரம்பித்தபோதே, மிகப் பெரிய எதிர்பார்ப்புக்கள் அனைவருக்கும் ஏற்பட்டமைக்கான காரணங்கள்...
4 வருடங்களுக்குப் பிறகு ரஜினி மீண்டும் ரஜினியாக நடிக்கிறார் (ரா வன் - சிட்டி, கோச்சடையான் கார்ட்டூன் என்பதெல்லாம் ரஜினி ரசிகர்களுக்கு தீனியே அல்ல)
ரஜினியின் மிகப்பெரிய இரு படங்களைத் தந்த K.S.ரவிக்குமார் இயக்குகிறார் எனும்போது குறி தப்பாது.
ரவிக்குமாரைப் போல விரைவாகவும், விறுவிறுப்பாகவும் பெரிய ஸ்டார்களை வைத்து திரைப்படங்களைத் தரக்கூடியவர்கள் பெரியளவில் யாரும் கிடையாது.

இத்தனை எதிர்பார்ப்புக்கள் ரசிகர்கள் மத்தியில் இருக்கையில் படத்தை இயக்கிய K.S.ரவிக்குமார், நடித்த ரஜினி ஆகிய இருவருமே கதை, திரைக்கதை படமாக்கல் என்று சகல விஷயங்களிலும் பொறுப்பாக இருந்திருக்க வேண்டாமா?

ரஜினிக்காக படம் பார்க்க வெறியோடு காத்திருக்கும் ரசிகர்கள் எதை, எப்படி கொடுத்தாலும் ரசிப்பார்கள் என்று ஒரு மிதப்பு எண்ணம்? அல்லது ரஜினி என்ற மாபெரும் கவர்ச்சிக் காந்தம் இருப்பதால் கதை என்ற வஸ்து ஒரு பொருட்டேயல்ல என்ற ஒரு நினைப்பா?

எந்தவொரு புதுமையும் இல்லாத, 'கத்தி' பாணி கதை..
கத்தி கோபியின் கதை கூட பரவாயில்லை, கொஞ்சம் திருப்பம், தண்ணீர், விவசாயிகள் பிரச்சினை என்று கொஞ்சம் புதுசாய்ப் பேசியிருந்தது.
லிங்காவிலே அணை கட்டும் கதை.
இரண்டாவது ரஜினி இல்லாமலேயே லிங்கேஸ்வரரைக் கொண்டே கட்டி முடித்திருக்கலாம்.
ரஜினி என்பதால் இரண்டாவது லிங்கா தேவைப்பட்டிருக்கிறார்.

முத்து, அருணாச்சலம், சிவாஜி போலவே பணத்தையும் சொத்தையும் மக்களுக்காகவே தானம் செய்து தியாகம் செய்யும் ரஜினி.

நல்லவனாக, மிக நல்லவனாக இருந்து கெட்ட பெயர் வாங்கி, சுட்டாலும் சங்கு வெண்மை தான் என்று லேட்டா மக்களுக்குத் தெரியவரும் ரொம்ப.... நல்லவரு பாத்திரம்.

எத்தனை படங்களில் ரஜினி இப்படியே மாறாத டெம்பிளேட்டில் நடித்தாலும் ரசிகர்கள் பொறுத்துக் கொள்ளுவாங்களாம்.
ரஜினியை விட ரொம்பபபப நல்லவங்கப்பா நாங்க என்று நினைத்திருக்கிறார் KSR.

அணையைப் போலவே ரொம்பப் பழசான, எங்கேயும் திருப்பங்கள் என்று இல்லாத, இலகுவாக ஊகிக்கக்கூடிய திரைக்கதை.
ரஜினிக்கு இருக்கிற மாஸ், சந்தானத்தின் கலகலா, வழமையான ரவிக்குமார் டச்சுகள் ஆக்கியவற்றை வைத்து ஒப்பேற்றிவிடலாம் என்று ஒரு அசாத்திய நம்பிக்கையோடு ஆரம்பித்த K.S.ரவிக்குமார், வழமையை விட அவசரமாக படமாக்கிய விதத்தில் தான் தனது வழமையான ரஜினி பாணி வெற்றியிலிருந்து சறுக்கிவிட்டார் என்று கருதுகிறேன்.

(வசூலில் கோடி என்று வருமானம் பற்றி பேசி, ரஜினி மாஸ் என்று விட்டுக்கொடுக்காமல் விளையாடும் ரஜினி பக்தர்கள் மனசாட்சியைத் தொட்டு சொல்லட்டும் ஒரு மொத்த package ஆக லிங்கா நல்லா இருக்கு என்று.)



ரஜினியின் வயதும் அண்மையில் நோய்வாய்ப்பட்டு மீண்டவர் என்பதாலும் அவரை நோகாமல் நொங்கு எடுக்கப் பார்த்து அதுவே படத்தைப் பங்கம் பண்ணியதோ?

ஆனால் தன் மீது தயாரிப்பாளர், ரசிகர், இயக்குனர் என்று அனைவரும் வைத்த நம்பிக்கையைக் குறைவிடாமல் முதல் காட்சி அறிமுகத்தின் கலக்கல், பிரம்மாண்ட அறிமுகம் முதல், ஒவ்வொரு பிரேமில்வரும் தனக்கேயான ஸ்டைல்களில் கலக்கி 
"யென்னடா ராஸ்கல்ஸ், சூப்பர் ஸ்டார் எப்பவும் நான் தாண்டா.. ஹா ஹா ஹா " என்று ஆணி அடித்து நிற்கிறார் இந்த 64 வயது youngster.
(இப்ப சொல்லுங்கடா - அதான் சூப்பர் ஸ்டார் கெத்து )

ஓ நண்பா, மோனா பாடல்களிலும், ராஜாவாக, கலெக்டராக வரும் காட்சிகளிலும் பொருத்தமான ஆடைகள், கம்பீரம் என்று ஸ்டைல் அபாரம்.

இளைய ரஜினி, சந்தானம், கருணாகரன் குழுவோடு திரிகையிலும், அனுஷ்காவோடு லூட்டி அடிக்கையிலும் வயசு உறுத்துவதோடு ஏதோ  பொருந்தவில்லை.

அதிலும் ரஜினி - அனுஷ்கா நெக்லஸ் கொள்ளை காட்சிகளில் இரட்டை அர்த்த உரையாடல்கள் வேறு.
ஐயா ரஜினி இது தான் பெரிய ஆபாசம் ஐயா. அடுக்குமா?
(இங்கே நான் சொல்லவேண்டி இருக்கு - எட்டாம் எட்டு இப்போது நீங்கள்)

ரஜினியின் பாட்ஷா இன்று வரை ரஜினியின் the Best என்று நாம் சொல்வதற்கான முக்கியமான காரணங்களில் ஒன்று வில்லன் ரகுவரன் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.
பாட்ஷா ஞாபகம் வந்தால் மார்க் ஆண்டனியும் ஞாபகம் வந்தே ஆகணுமே..

அதேபோல படையப்பா - நீலாம்பரி, சிவாஜி - ஆதிகேசவன் , எந்திரன் (எந்திரன் படமாக என்னைத் திருப்தி செய்யாவிட்டாலும் 'மே....' சொல்லும் வில்லன் ரஜினி சொல்லி வேலையில்லை)

லிங்காவில் இது(வும்) மிஸ்ஸிங்.
உப்புச்சப்பற்ற இரு வில்லன்கள். இந்த இருவரையும் சமாளிக்க சந்தானமும் இளவரசுவும் போதுமே..
ஜெகபதி பாபுவும் அந்த வெள்ளைக்காரனும் முன்னைய MGR, சிவாஜி பட வில்லன்களின் நம்பியார்களை, அசோகன்களை ஞாபகப்படுத்திவிட்டுப் போகிறார்கள்.

ரஜினியைப் போலவே இந்தப் படத்தைக் கொஞ்சமாவது தாங்கும் இன்னொருவர் சந்தானம் மட்டுமே.

ரஜினியும் சந்தானமும் கலக்கல் இணைப்பு.
சிவாஜியில் விவேக், சந்திரமுகியில் வடிவேலுவுக்குப் 
ரஜினி, ரவிக்குமார் முதல் அத்தனை பேருக்குமே நெத்தியடி நக்கல்.
எப்பவுமே படங்களின் கடைசியில் வந்து கலகலத்து செல்லும் இயக்குனர் K.S.ரவிக்குமாருக்கே "finishing குமார்" என்று பஞ்ச் வைக்குமிடம் கலக்கல்.

ரஜினி தலை கோதும் ஸ்டைலையும் அடிக்கடி வாரிவிடுகிறார்.
கலாய்க்கும் இடங்களிலும் முத்துமுதல் KSR செய்துவரும் ரஜினிக்கான அரசியல் தூவல்கள் ஆங்காங்கே..

"நீ வேணாம் வேணாம்னாலும் ஜனங்க விடமாட்டாங்க போல இருக்கே.. ஊரே மரியாதை கொடுக்குதே"
ஒரு சாம்பிள்.

"பறக்காஸ்" சந்தானத்தின் புண்ணியத்தில் இப்போது செம ஹிட்.
Byeக்குப் பதிலாக இனி 'பறக்காஸ்' பரவலாகப் பயன்படுத்தப்படும்.
ஆனால் இதை வைத்தே 'லிங்கா'வை கலாய்க்கும் கூட்டமும் அதிகம்.

ஆரம்பத்திலேயே "ஜெயிலுக்குப் போறதுன்னா எங்களையும் கூட்டிட்டு வந்திர்றே, ஜெர்மனி போறதுன்னா மட்டும் தனியாவே போயிடுறே" என்று ஆரம்பிக்கும் சந்தானம், வயது இடைவெளியினால் "நன்பேண்டா" என்பதில் டா வை சொல்லாமல் நிறுத்த, ரஜினி அதை சொல்வது கலகலப்பு.

இயக்குனர் சறுக்கும் இன்னும் ஒரு முக்கிய இடம் கதாநாயகிகள்.
வயதேறிய ரஜினி என்பதால் இந்தத் தெரிவுகள் என்று தெரியும்.
ஆனால் ரஜினியை விட வயது கூடியவராக அனுஷ்கா தெரிகிறார்.
(இந்த இடத்தில் அதான் நம்ம தலைவர் என்று கோரஸ் வரவேண்டும்)
அனுஷ்காவுக்கு ரஜினி மேல் காதல் வரும் காட்சிகள் சந்தானத்தின் காமெடியை விட காமெடி.
பயங்கர நாடகத் தன்மை.

இதை விட தாத்தா ரஜினி - சோனாக்ஷி சின்ஹா பாட்டி காதல் பண்டைய கால மன்னர் பாணி லவ்வு.
ஆனால் சோனாக்ஷிக்கு நடிக்கக் கிடைத்த வாய்ப்புக்களை சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார்.

உருக வைக்க, ரஜினி பற்றி உருக, போற்றிப் புகழ, புலம்ப என்று ஏராளம் நட்சத்திரங்கள்.. எல்லாம் கிழடு கட்டைகள்..
மீண்டும் 'கத்தி' ஞாபகம்.
விஜயகுமார், ராதாரவி,சுந்தர்ராஜன்,இளவரசு, மனோபாலா இவர்கள் எல்லாம் போதாமல் பாவம் அந்த அற்புத இயக்குனர் K.விஸ்வநாதன் வேறு..
ஒருவேளை ரஜினியின் வயசை இளமையாகக் காட்ட இப்படியொரு ஐடியாவோ?


லிங்காவிலே இருக்கும் குறைகளுக்கும் அரைகுறைத் தன்மைக்கும் என்ன தான் இயக்குனர் K.S.ரவிக்குமார் பொறுப்புக் கூறுகின்ற அவஸ்தை இருந்தாலும், படத்தின் பிரம்மாண்டம், முக்கியமாக அணைக்கட்டு அமைக்கப்படும் காட்சிகள், அரண்மனைக் காட்சிகள் என்பவை நிச்சயம் பாராட்டப்படவேண்டியவை.

அதிலும் இத்தனை விரைவாக படமாக்கியதும் இந்த விடயத்தில் பாராட்டப்படவேண்டியது தான்.

அணை கட்டும் பாடல் ரஹ்மானாலும் ரவியினாலும் ரத்தினவேலுவின் ஒளிப்பதிவிலும் நிற்கிறது.

A.R.ரஹ்மானையும் ஒளிப்பதிவாளர் ரத்தினவேலுவையும் படம் முழுதும் தேடவேண்டி இருக்கிறது.
இயக்குனர் ரவிக்குமாரின் அவசர உழைப்பு இசைப்புயலின் நிதானமான பின்னணி இசையை இல்லாமல் செய்துவிட, அவசரமாக அடித்து அப்படி இப்படி போட்டிருக்கிறார்.

அணை கட்ட வரும் சவால்கள்,அணை கட்டிய பிறகு வரும் துன்பங்களெல்லாம் ஒரு நாடகப் பாணியில் சவசவ என்று இழுக்க, கட்டிய அணை திறந்து, தாத்தா ரஜினியை நல்லவர் என்று ஊரும் ஏற்று கோவிலும் திறந்தபிறகு இனி என்னடா படத்தில் இருக்கு என்று நாம் கேட்போம் என்று தான் ஆரம்பத்திலேயே வைத்தார் இயக்குனர் ட்விஸ்ட்டு (என்னமோ போங்க KSR )

பற்றைகளும் இருளும் சேர்ந்து கிடக்கும் அந்தப் பழைய கோவிலில் ஒரு இத்தனூண்டு உருத்திராட்சக் கொட்டையை எடுக்க சூப்பர் ஸ்டாரால் தான் முடியும்.
(இங்கே மீண்டும் தலைவர்டா , ரஜினி rocks வேண்டும்)

கடைசியாக ஆண்டாண்டு காலமாக நாம் பார்த்து வந்த அதே மாதிரி ஒரு சப்பை கிளைமாக்ஸ்.
கதாநாயகியை வில்லன் கடத்துவான், வெடிகுண்டை சேர்த்துக் கட்டுவான், கடைசி செக்கனில் குண்டை இலக்கு மாற்றி ஹீரோ ஊரையும் (கொஞ்சம் பெரிய படமென்றால் நாட்டையும்) கதாநாயகியையும் சேர்த்துக் காப்பாற்றுவார்.

அனைவருமே கிழித்து தொங்கப்போட்ட பலூன், மோட்டர் பைக் சாகசம்.
ஸ்ஸப்பா...

ரஜினியின் பாபா பட்டம் magic , ரவியின் ஆதவன் ஹெலி சாகசம் இரண்டையும் மிஞ்சி இருவரும் சேர்ந்து ஒரு பிரம்மாண்டம் நிகழ்த்தவேண்டும் என்று முடிவு கட்டியிருப்பார்கள் போலும்.

லிங்குசாமியும் கண்ணுக்கு முன்னால் வந்து போனார்.

பரவாயில்லை K.S.ரவிக்குமாருக்கும் திருஷ்டிப்பொட்டு வேண்டும் தானே?

முதலில் S.P.முத்துராமன், பின்னர் சுரேஷ் கிருஷ்ணா, பின்னர் K.S.ரவிக்குமார், இப்போது ஷங்கர் இப்படி ரஜினியை அந்தந்தக் கால trendகளுக்கு ஏற்றது போல பயன்படுத்துவதும் இந்த 'லிங்கா' சறுக்கலுக்குக் காரணமாக இருக்கலாம்.

லிங்கா ரஜினி ரசிகர்களைத் திருப்திப் படுத்தியுள்ளது என்று ரஜினி பக்தர்கள்/ வெறியர்கள் (மட்டும்) சொல்வார்கள்.
நம்பாதீர்கள்.
ரஜினியை ரஜினியாக ரசிக்க ரஜினி ரசிகராக இல்லாத என் போன்றோருக்கும் பிடிக்கும்..
இதனால் தான் இன்றும் சூப்பர் ஸ்டார் என்ற எழுத்துக்கள் திரையில் வரும்போதும், ரஜினியின் பஞ்ச் ஸ்டைலாக வரும்போதும் நாமும் விசில் அடிக்காத குறையாக குதூகலிக்கிறோம்.
எனவே ரஜினி கலக்கல்,மாஸ்.. படம் மட்டும் வாய்க்கவில்லை என்று சொல்வது வெறும் சப்பைக்கட்டு.

அவர்கள் பாவம், இப்போது இளைய தளபதி மற்றும் தல ரசிகர்களையும் சமாளித்து மோதவேண்டி இருக்கிறதே..
இப்படித் தான் சொல்லவேண்டிய ஒரு கட்டாயம்.
ஆனால், அடி மனதில் அழுது கொண்டிருப்பார்கள் என்பது நிச்சயம்.

நமக்கு ரொம்ப நெருங்கிய ரஜினி ரசிகர்கள் சிலரின் புலம்பல்கள் இதற்கு மிக ஆணித்தரமான சாட்சி.

ரஜினியால் அவர்களுக்கு கொஞ்சம் திருப்தியாக இருக்கலாம்; ஆனால் ஒரு total package ஆக படம் failure.
இந்தியா தோல்வி; கோளி சதம் என்பது போல தான் இது..
கொஞ்சம் ஆறுதல் பட்டுக்கொள்ள மட்டுமே..

அடுத்த ரஜினி படம் வரும்வரை (இனியும் நடித்தால் - ரஜினியின் மாஸ் போனதென்று பொங்கவேண்டாம் ரஜினி வால்ஸ்... அவரது வயதும் உடல் இயக்கமும் அப்படி) காத்திருக்கட்டும் ரசிகர்கள்..

நூறு கோடி வசூல் என்பதால் படம் சூப்பர் என்று சொல்வதும் சிரிப்பைத் தரும் ஒரு வாதமாகும்.
'ரஜினி' படம் என்பதால் இதெல்லாம் படத்துக்கு முன்னதான வியாபாரம் & எப்படித் தான் படம் இருந்தாலும் அப்படி என்ன இருக்கிறது என்று பார்க்கச் செல்லும் கூட்டத்துக்காக டிக்கெட்டுக்கள் இன்னும் விற்கும்.
இன்னும் கோடிகள் புரளலாம்.
அதே போல கோடிகளைக் கொட்டிப் பார்த்த கோடிக் கணக்கானோர் "குப்பை, மொக்கை, அறுவை. பிளேடு, சப்பா" என்று  சமூக வலைத்தளங்களிலும், விமர்சன தளங்களிலும்,WHATS APP Chatsஇலும் கரித்துக்கொட்டப் போகிறார்கள் என்பதும் உறுதியே.


லிங்கா - சூப்பர் ஸ்டார் கட்டிய அணை KSR பலூனில் வெடிச்சுப் போச்சு 

----------------------------------------
ரஜினி பற்றிய சில பதிவுகள்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் Special சூரிய ராகங்கள் 2013.

சூப்பர் ஸ்டார் சூரிய ராகங்கள் - Super Star Rajini Birthday Special Sooriya Raagangal 2014






October 26, 2014

கத்தி


ஒரு திரைப்பட இயக்குனரை மதிப்பிடுவதற்கு அவரது இரண்டாவது படத்தையும் பார்க்கவேண்டும். ஆனால் ஒரு இயக்குனரைப் பிடித்துப் போவது முதல் படத்திலேயே நடக்கக்கூடியது இயல்பானதே.

தீனாவில் பிடித்துப்போன A.R.முருகதாஸ் என்ற இயக்குனர் மேல் ரமணா திரைப்படத்தின் பின்னர் மதிப்பும் எதிர்பார்ப்பும் ஏறியது.

எங்கள் எதிர்பார்ப்புக்கள் தாண்டிய ஒரு படைப்பை, நாங்கள் எதிர்பார்க்கும் ஒரு வடிவத்தில் ஒரு பிரசாரமாக இல்லாமல், சுவாரஸ்யமாகத் தரமுடியும் என்றால் பிடித்த இயக்குனராக அவர் மாறிவிடுவது இயல்பு தானே?

ரமணாவின் பின்னர் முருகதாஸின் கஜினியும் அவரது படமாக்கலில், கதை சொல்லும் விதத்தில் பிடித்துப்போனது.
எனினும் ரமணாவின் முருகதாஸ் காணாமல் போயிருந்தார்.

கஜினிக்குப் பின்னர் முருகதாஸ் மற்றைய 'வெற்றிகர' வர்த்தக வெற்றிக்கான படங்களைத் தரும் இயக்குனர்களில் ஒருவராக உருமாறிப்போனார் .
படத்தின் வேகத்தைக் குறைக்கும் பாடல்களும், தேவையற்ற நீளமான சண்டைக்காட்சிகளும் முருகதாசினதும் அடையாளங்கள் ஆகிப்போயின.

ஏழாம் அறிவின் பிரசாரப்பாணியும் ஓவரான அலட்டலும் எரிச்சலூட்டியது.

துப்பாக்கி ரசித்த படம்.. ஆனாலும் படத்தின் சில காட்சிகளின் சாமர்த்தியத்திலும் சில காட்சிகளின் ரசிப்பிலும் தான் முருகதாஸ் தெரிந்தார்.
மற்றும்படி அது முற்றுமுழுதான விஜய் படம் தான்.

கத்தி பற்றிய அறிவித்தல்கள், விளம்பரங்கள் வந்தபோதும் இதுவும் வழக்கமான  விஜய் படமாகத் தான் இருக்கப் போகிறது என்று நினைத்தவர்களில் நானும் ஒருவன்.

பெட்ரோமக்ஸ் லைட்டுடன் குழாய்க்குள் விஜய் அமர்ந்திருக்கும் டீசர் போஸ், கண் மண் தெரியாமல், தொடர்பேதும் இல்லாதது போல வந்த கத்தி ட்ரெய்லர் என்பன இந்தப் படமும் தலைவா, சுறா, வில்லு மாதிரி ஆகிடுமோ என்ற எண்ணத்தை இன்னும் கொஞ்சம் உறுதிப்படுத்தி இருந்தன.
போதாக்குறைக்கு விஜய் இரட்டை வேடம் வேறு.

ட்விட்டர், Facebook எங்கும் கலாய்ப்புக்கள், காமெடிகளுக்கும் குறைவில்லாமல் களைகட்டியிருந்தது.

ஆனால் இந்த டீசர், ட்ரெய்லர் இரண்டிலுமே கலாய்க்கப்பட்ட முக்கிய விடயங்களையே படத்தின் பரபரப்பான இடமாக்கி நியாயம் செய்து இருக்கிறார் இயக்குனர்.
படமும் அவ்வாறு தான்.

விஜய்க்கேற்ற மாஸும் இருக்கிறது, A.R.முருகதாஸின் கிளாசும் இருக்கிறது.



இந்தப் படக்கதை கோபி என்பவர் எழுதிய 'மூத்த குடி' என்றும் A.R.முருகதாஸ் சுட்டுக்கொண்டார் என்றும் கதைகள் உலாவுகின்றன. காட்சிக்கு காட்சி விவரித்ததை எல்லாம் வெட்கமின்றி முருகதாஸ் உருவிக்கொண்டார் என்று தாக்கல் செய்த வழக்கில் கோபி தோற்றுவிட்டாராம். ஆனால் மீண்டும் வழக்குத் தாக்கல் செய்யப் போகிறாராம்.

நாலு இட்லி+ஒரு டீ= ‘கத்தி’ சுட்ட கதை

உண்மை வெல்லட்டும்.



அப்படி முருகதாஸ் என்ற படைப்பாளி நேர்மையின்றி திருடியிருப்பாரே ஆயின் நிச்சயம் அது கேவலமானதே.
ஆயினும் எடுத்த படத்தை செம்மையாகத் தந்துள்ள முருகதாஸ் இயக்குனராகவும், பல இடங்களில் கூர்மையாக இருக்கும் வசனங்களை எழுதிய எழுத்தாளராகவும் பாராட்டுக்களைப் பெறுகிறார் ARM.

சொல்ல வந்த விடயம் ரசிகர் மனதில் பதியவேண்டும் என்ற நோக்கம் கனகச்சிதம்.

விஜய்யின் வழமையான ஹீரோயிசம் படத்தில் அடக்கி வாசிக்கப்பட்டமைக்கு இதுவும், படம் வெளியாவதில் இருந்த சிக்கல்களும் சமபங்கு வகித்துள்ளன எனக் கருத இடமுண்டு.

ஆனாலும் படத்தின் நாயகனாக கதை நிற்கையில் விஜய் உணர்ச்சிமயமாகப் பேசும் வசனங்கள் வழமையான அரசியல் பஞ்ச் வசனங்கள் கொடுக்காத கெத்தைக் கொடுக்கின்றன.

இதைத் தான் விஜய் புரிந்துகொள்ளவேண்டி இருக்கிறது.
தேவையற்ற காட்சிகள் மூலம் திணிக்கப்படும் பில்ட் அப் ஆக இல்லாமல் கருமேகம் விலக்கி வெளிவரும் சூரியன் பின்னணியில் விஜய்யின் பெயர் எழுத்தோட்டத்தில்.
குறியீடு?
(அம்மா பார்த்தா பரவாயில்லையா?)


ஒரு காத்திரமான கதை..

பலபேர் விமர்சனம் என்று கதையை முழுதுமாக சொல்லியிருந்தாலும் நான் இன்னும் பார்க்காத பலருக்காக மேலோட்டமாகவே சொல்லிவைக்கிறேன்.

படித்த பட்டதாரி விஜய் ரொம்ப நல்லவர்.
கிராம மக்களுக்காக உயிரையே தியாகம் செய்யக் கூடிய உத்தமர்..
கிராமத்தின் தண்ணீர் வளத்துக்காக பெரு வர்த்தக நிறுவனங்களால் சூறையாடப்படும் கிராம  வளங்களுக்காக போராடுபவர்.

சிறையிலிருந்து தப்பும் சில்லறைக் கிரிமினல் மற்ற விஜய்.
(ஆனால் சிறையிலிருந்து கைதி தப்பும் காட்சி படு காமெடி.. தப்பிக்கும் கைதியைப் பிடிக்க இன்னொரு கைதியிடம் உதவியா? என்னா இயக்குனரே என்னாச்சு?)

வில்லன் பெரும் கோலா நிறுவன உரிமையாளரான பெரு வர்த்தகர்.

வளச் சுரண்டலுக்கு எதிரான  ஜீவானந்தத்தின் (ஜீவானந்தம்பெயரையும் இந்த விஜய் பாத்திரம் பேசும் கம்யூனிசக் கருத்துக்களையும் கவனியுங்கள்) போராட்டம் பெண்களாலும், வயது முதிர்ந்தவர்களாலும் முன்னெடுக்கப்படுகிறது.

கத்தி எனப்படும் கதிரேசனின் (படப் பெயர் வைக்கப்பட்டமைக்கான காரணத்தை வில்லன் மூலம் ஒரே வசனத்தால் கடைசி நேரம் இயக்குனர் சொல்கிறார்) அடிதடி, அதிரடியால் சுபம்.

சுவாரஸ்யமாகக் கதையை விஜய் மசாலாவும் தடவிச் சொல்லியிருக்கிறார் முருகதாஸ்.
(இரட்டை வேடம் கூடக் கதைக்கு அவசியமற்றது.. அதையே யாரும் ஏன் என்று கேட்காத அளவுக்கு விஜய் கொண்டு சுவாரஸ்யப்படுத்தியுள்ளார் ARM)



ஆனால் முதல் முக்கால் மணி நேர இழுவைக் கதை..

அந்த சிறைத் தப்பியோட்டம் முதல் சமந்தாவைக் காதலிப்பது வரை தேவையற்ற கவனச் சிதறல்.
அதுசரி சமந்தா இந்தப் படத்துக்கு எதுக்கு?

சமந்தாவை விஜய் பார்த்தவுடனேயே லவ்வுவதும், பின் எதற்கென்றே தெரியாமல் சமந்தா இவரை லவ்வுவதும் அந்தக்கால MGR - சிவாஜி படங்களில் வரும் காதல் தோற்றது போங்கள்.
(ரொம்ப பழைய இட்லி இது)

அதேபோல தான் பாடல்களும் வேகமாக செல்லும் படத்துக்கு இடையில் செக்கிங் பொயிண்டுகள் போல. பொறுமையை மிகவும் சோதிக்கின்றன.

கேட்கும்போது நல்லாவே இருக்கும் பாடல்களில் பக்கம் வந்து மட்டும் பக்காவாக பொருந்தி வந்திருக்கிறது. மற்றவை எல்லாமே 'ஏன்பா இந்தப் பாடல் இந்த நேரத்தில்?' என்று கேட்க வைப்பவை தான்.  அதுவும் செல்பிபுள்ள படு ஏமாற்றம். அப்படியே துப்பாக்கி - கூகிள் பாடலை ஞாபகப்படுத்துகிறது.

இந்த இழுவையைக் கொஞ்சம் வெட்டி, செதுக்கியிருந்தால் 2 மணி 40 நிமிடம் நீண்ட படம் இன்னும் கச்சிதமாக விறுவிறுப்பாக இருந்திருக்கும்.

எனக்கு வழங்கிய பேட்டியில் 'கதையின் முக்கிய இடத்தில் இந்தப் பாடல் வருவதால் மிகக் கவனமாக வார்த்திகளைக் கோர்த்து செதுக்கிய பாடல்' என்று பாடலாசிரியர் மதன் கார்க்கி சொன்ன 'பாலம்' பாடல் படத்திலேயே இல்லை.

பின்னணி இசையில் அனிருத் கலக்கியிருக்கிறார்.

அனிருத்தின் இசையும் George C. Williamsஇன் ஒளிப்பதிவும் வழமையான முருகதாஸ் படங்களின் சாயலை மாற்றியுள்ளன என்பது உண்மை.

கத்தி - Kaththi Theme the Sword of Destiny விஜய் ரசிகர்களுக்கு ஒரு கலக்கல் தீம்.
அஜித் ரசிகர்கள் இன்னமும் பில்லா, மங்காத்தா இசைகளைக் கொண்டாடுவதைப் போல விஜய் ரசிகர்களுக்கும் ஒரு விருந்து கிடைத்துள்ளது.

ஆனால் நன்றாக அவதானித்தால் தேவா ரஜினிக்கு போட்ட பாட்ஷா தீம் புதிய டெக்னோ மிக்ஸில் வந்திருப்பதை உணரலாம். (சரி சரி அடுத்த சூப்பர் ஸ்டாருக்கு இதைக் கூட செய்யலேன்னா எப்பிடி? ;) )

எனினும் வில்லன்னுக்கான பின்னை இசை - Bad Eyes Villain Theme காமெடி.
வில்லனை கோமாளியாகக் காட்டும் இயக்குனருக்கு மேலாக அனிருத் வேற.
வில்லன் இன்னும் கொஞ்சம் வலிமையானவனாக இருந்திருக்கலாமோ?



ஆனால், விஜய் இரு பாத்திரங்களுக்கு இடையில் வேறுபடுத்திக் காட்டுவதில் வெற்றி கண்டிருக்கிறார்.

கெட் அப்பில் உடை, சிறிய தாடி தவிர வித்தியாசம் இல்லை,
ஆனால் உடலசைவுகள், முகபாவங்களில் ஜீவானந்தமும் கதிரேசனும் வேறு வேறு என்பது தெளிவு.

கிராமத்துக் காட்சிகளில் ஜீவா விஜய்யின் துடிப்பும் உருக்கமும், நீருக்கான விழிப்புணர்வுப் போராட்டத்தில் கதிரின் அதிரடியும் புரட்சி முழக்கமும் பாராட்டக்கூடியவை.e
விருது வாங்கச் செல்லும் முன் காசோட விருதா, அப்பிடின்னா வர்றேன் என்று கலகலப்போடு செல்லும் விஜய், ஜீவானந்தம் யார் என்ற பின்னணி திரையில் விரிந்த பின் மனம் மாறும் இடம் அருமை.
(ஆனால் Flashback காட்சிகளில் தொனிக்கும் விவரணப் பாணி கொஞ்சம் சோர்வு தான்)

விஜய் வாயிலாக வரும் இட்லி - கம்யூனிச விளக்கம் புதுசும், இலகுவானதும்..
(இதை வைத்து மொக்கைகள் கிளம்பினாலும் கூட) சிந்திக்கக் வைக்கக்கூடிய ஒன்று தான்.
உன் பசி தீர்ந்த பிறகு நீ சாப்பிடும் அடுத்த இட்லி மற்றவனுடையது...
(இனி இட்லி சாப்பிட்டால் கம்யூனிசம் ஞாபகம் வந்து டயட்டிங் நடக்கும்)



Corporate என்பது ஒரு சிலந்தி வலை என்பதையும் வளங்களை உறிஞ்சும் நிறுவனங்களையும் போட்டுத் தாக்கியிருக்கும் இயக்குனர் தப்பித்துக்கொள்ள முன்னாள் கொக்கா கோலா விளம்பரத் தூதுவர் விஜய் வம்பில் மாட்டியுள்ளார்.
பாவம்.

இங்கே யார் பாவம் செய்யவில்லையோ அவர் முதல் கல்லை வீசலாம் என்று விஜய் துணிச்சலாக சமூகம் முன் வரலாம்.

அவர் பாட்டுக்கு விளம்பரம், சினிமா, பணம், லைட்டா அரசியல் ஆசை என்று வாழ்ந்துகொண்டிருக்க இவனுகள் ஒரு பக்கம், உணர்ச்சிவசப்பட்டு காமெடி பண்ணி.. சே.
(இது சே குவேரா சே அல்ல)

முருகதாஸ் வசனங்களின் கூர்மையில் அதிகமானோரை யோசிக்க வைத்திருக்கிறார். (கதை உண்மையில் அவருடையதாக இல்லாவிடினும் வசனங்கள் அவருடையவை என்ற நம்பிக்கையில்)

உணவுப் பொருட்களில் அழகு சாதனங்கள், வாசனைத் திரவியங்கள் செய்வோர் பற்றிப் போட்டுத் தாக்கியவை பற்றி நுகர்வோர் சிந்திப்பது ஒரு பக்கம் இருக்க, சும்மா கொக்கா கோலா - விஜய், லைக்கா தயாரிப்பு பற்றி முட்டையில் ரோமம் பிடுங்கும் 'போராளிகள்' இந்த வளச் சுரண்டல் 

Corporate தயாரிப்பு நிறுவனங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தலாமே.

5000 கோடி கடன் பெற்று கை விரித்த விஜய் மல்லையா, "வெறும் காத்தைhi மட்டுமே வித்து கோடிகோடியா ஊழல் பண்ணுற ஊருய்யா இது " என்று 2G ஊழல் பற்றிக் கலைஞர் கருணாநிதி குடும்பம் என்று நேரடியாகவே அடித்துள்ள வசனகர்த்தா முருகதாஸ், இந்தப் படத்தில் காட்டப்பட்ட நில அபகரிப்பு போலவே அப்பாவிகளின் நிலங்களை அபகரித்து சொத்துக் குவிப்பு செய்தோர் பற்றியும் பொங்கியிருந்தால் இவரை நானும் நேர்மையான படைப்பாளி என்பேன்.

ஆனால் சட்ட விரோத சொத்துக் குவிப்பால் தண்டனை பெற்ற 'அம்மாவுக்கு' ஆதரவு தெரிவித்த உண்ணாவிரத்தில் கலந்துகொண்ட சமூகப் போராளி இவர் அது பற்றி மூச்.

ரமணாவுக்குப் பிறகு புள்ளிவிபரம் என்றவுடன் நாங்கள் அனைவருமே விஜயகாந்த்தை கலாய்ப்பது வழக்கம்.
ஆனால் எழுதிக்கொடுத்த குருஜி நம்ம முருகதாஸ் தான் என்பதை கத்தியில் அழுத்தமாக நினைவுபடுத்தியுள்ளார்.

தளபதி பத்திரிகையாளர்கள் முன்னால் அடுக்கடுக்காக புள்ளிவிவரங்களை அடுக்குமிடம் சீரியஸாக யோசிப்பதை விட சிரிக்க வைக்கிறது.

உருக்கமான புள்ளிவிபரங்கள் தான்.
ஆனால் கையில் நோட்டு எதுவும் இல்லாமல் ஒற்றை இலக்கங்களைக் கூட கதிரேசன் புட்டு புட்டு வைப்பது, நம் அரசாங்க ஊடகவியல் சந்திப்பு வேடிக்கைகளை நினைவுக்குக் கொண்டுவருகிறது.


Dont hate the media, Be the media என்று மக்கள் ஊடகங்கள் பற்றி சொல்லப்படும் விடயத்தை ஒரு வெகுஜனப் போராட்டம் எவ்வாறு ஊடகங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது என்று உதாரண ரீதியாகக் காட்டியுள்ள சென்னைக்கான நீர் வெட்டுக் காட்சிகள் கனகச்சிதம்.


இயக்குனரும் தண்ணீர் வாளியுடன் வந்து ஆங்கிலத்தில் பஞ்ச்சும் பேசிச் செல்கிறார்.

ஆனால் முருக்ஸ் & விஜய்க்கு பத்திரிகைகள், ஊடகங்களோடு என்ன கடுப்போ சரமாரியாகத் தாக்கியிருக்கிறார்கள்.
அவர்கள் சொன்னதில் உண்மை இல்லாமல் இல்லை; ஆனாலும் முற்று முழுதான மட்டந்தட்டலும் தாக்குதலும் இனி பின் விளைவுகளைத் தருமா பார்க்கலாம்.

பாட்ஷா படம் ரசிகர்களுக்கு மட்டுமில்லை எல்லா ஹீரோக்களுக்கும் கூட இன்னும் மனதிலே ஒரு inspiration தான் போலும்.
ரஜினி சொல்லும் 'உள்ளே போ' இங்கே விஜய் சொல்லும் 'உள்ளே வை' ஆக வருகிறது.

பாட்ஷாவின் "உள்ளே போ" கத்தியில் "உள்ளே வை" ஹா ஹா ஹா... இனி ஐ ஆம் ஆல்சோ வெயிட்டிங் ;)
(மீண்டும் அடுத்த சூப்பர் ஸ்டார்? ;))

நகைச்சுவைக்கு சதீஷ் ok ரகம் தான். ஆனால் இதுபோன்ற கதைக்கு சும்மா தொட்டுக்கொள்ள ஒரு துக்கடா நகைச்சுவை பாத்திரம் போதும் என்னும் அளவுக்கு - துப்பாக்கியில் சத்யன் போல, அவரது பாத்திரம் ஓகே.

ஆனால் அந்த வயது முதிர்ந்தவர்களின் துடிப்பான நடிப்பும் காட்டும் முகபாவமும் மனதில் நிற்கக் கூடியவை,
அத்துடன் படத்துக்கு உருக்கத்தையும் கொடுக்கின்ற யுக்தி.

தூக்கச் சொன்ன 'லைக்கா' தெரிந்தது எப்படி? ;)


படத்தை யதார்த்தமாக மனதில் பதியும் அளவுக்குக் கதை சொன்ன முருகதாஸ் விட்ட சறுக்கல்களில் 
அந்த சில்லறை சண்டையும் (ஆனால் விஜய் ரசிகர்களுக்கு இது கோலாகலம் தான்), கடைசிக் காட்சிச் சண்டையும் லொஜிக் தாண்டிய ரோதனை.

கஜினியில் சூர்யா, வில்லன் இரட்டையருடன் சண்டையிடும் அந்த நீளமான காட்சிகள் தந்த அதே ஆயாசம்.
அதிலும் தனக்காகப் போராடிய கதிரேசனை தாக்கிக் கொல்லக்கூடிய நிலையிலும் மற்ற 'அமைதி' விஜய் அகிம்சாமூர்த்தியாக ஒரு சலனமும் காட்டாமல் நிற்பது கொடுமை.
'யோவ் அடியா' என்று தியேட்டரில் யாரோ கூவுகிறார்கள்.

ஐ ஆம் வெயிட்டிங் என்று துப்பாக்கி போலவே இடைவேளைக்கு முன்னர் ஒரு பஞ்ச், விஜய் ரசிகர்களுக்கு குஷி கொடுக்க.
அதே போல பாத்திரத்துக்கு வெயிட் கொடுப்பதாக பின்னப்பட்ட காட்சிகளின் மூலம் 'இளைய தளபதி'யை ஏற்றி வைப்பதிலும் இயக்குனர் விஜய் ரசிகர்களிடம் ஜெயித்திருக்கிறார்.

இதனால் கதை  மூலமாக எல்லாத் தரப்பிடமும் , விஜயை மையப்படுத்தி விஜய் ரசிகரிடமும் சரியாகப் பாய்ந்துள்ளது 'கத்தி'.

கத்தி - தீட்டிய அளவுக்கு கூர்மை தான் 


January 22, 2014

ஜில்லா

யாழ்ப்பாண ஆர்ப்பாட்டத்துக்குப் பிறகும், ஜில்லா வந்து இருவாரம் ஆகும் நேரத்திலும் சளைக்காமல் ஜில்லா பற்றி தில்லா எழுதுகிறேன் என்றால் ஒரு பின்னணி இருக்கவேண்டுமே...

ஒன்றல்ல, இரண்டு..

வீரம் பற்றி எழுதிய பின் ஜில்லா பற்றி எப்போ எழுதுவீங்க என்று கேட்டு வந்த அன்புக் கோரிக்கைகள்.
மொக்கைக்கும் சராசரிக்கும் இடையில் என்று போட்ட என் ட்வீட்டின் காரணம் அறிய விரும்பிய சில ரசிக விருப்பங்கள்.

படம் பார்த்து முடிந்தவுடன் போட்ட ட்வீட்...

ஜில்லா - இழுவை.விஜய்க்கு போலீஸ் கெட் அப் தவிர எல்லாமே செட் ஆகும் கதை.ஆனால் மொக்கைக்கும் சராசரிக்கும் இடையில் ஆடுது. #ஜில்லா - என்னத்த சொல்ல



ஜில்லா ஓரளவாவது ஓட ஒரே காரணம், விஜய் என்னும் மாஸ்.
மற்றும்படி படத்தின் ஏனைய விஷயங்கள் எல்லாம் படு லூஸ்.

ஆனால் மாஸ் விஜய் எப்படித்தான் இவ்வளவு நீண்ட கால அனுபவத்துக்குப் பிறகும் இப்படியான கதைகளை ஏற்று நம்பி நடிக்கிறாரோ என்று அசதியை விட எரிச்சல் வருகிறது.

ஒருவேளை அந்த ஜனா, ஆஞ்சநேயா, ஆழ்வார் காலத்தில் அஜித் புதிய இயக்குனர்களை நம்பி ஏமாந்தது போல விஜயும் இப்போது அதே மாதிரியான ஒரு காலகட்டத்திலோ?

ஆனால் நிறையப்பேர் நினைப்பது போல இயக்குனர் நேசனுக்கு இது முதல் படம் அல்ல. முன்பு  முருகா என்று ஒரு படம் எடுத்திருக்கிறார். அத்துடன் வேலாயுதம் படத்தில் இயக்குனர் ராஜாவின் உதவியாளராம்.

சரி கதை பழசு என்றாலும், விஜய் மாதிரியான ஒரு ஹீரோவுக்கு ஒரு தீர்மானிக்கப்பட்ட கட்டமைப்புக்குள்ளேயே பாத்திர வடிவமைப்பு இருந்தாலும் படமாக்கலாவது சுவாரஸ்யமாக (வித்தியாசமாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை) இருக்கவேண்டுமென்று இயக்குனருக்கோ, விஜய்க்கோ கூட இருக்கும் அல்லக்கைகளுக்கோ கூடத் தெரியவில்லை?

ஜில்லா படம் ஓடுகிறது என்று விஜய் ரசிகர்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள், அல்லது நம்ப வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
சொல்லவேண்டிய நிர்ப்பந்தமும் இருக்கிறது.(பிறகு மனசுக்குள்ளே துள்ளாத மனமும் துள்ளும் விஜய் போல குமுறிக் குமுறி அழுது கொண்டிருக்கிறார்கள்)

இது ஒரு விதத்தில் வீரத்தினால் என்றும் சொல்லவேண்டியுள்ளது.
வீரம் ஓடிக்கொண்டிருப்பதால் ஜில்லா ஓடுகிறது, ஜில்லா மோசமில்லை, சுமார் என்று சும்மாவாவது சொல்லவேண்டிய ஒரு காலத்தின் கட்டாயம்.

ஜில்லா, வீரம் இரண்டுமே ஊகிக்கக் கூடிய, ஏற்கெனவே பார்த்த முன்னைய படங்களின் சாயல்கள் கொண்டவை; இரு பெரும் ஹீரோக்களின் படங்கள் என்று இருந்தாலும் பெரிய, முக்கிய வித்தியாசங்கள் திரைக்கதை + பாத்திரப் பொருத்தம் + படத்தை இயக்கிய விதம்.


விஜய்க்கு போலீஸ் கெட் அப் செட் ஆவதில்லை என்று தெரிந்தும் போலீசாக வரும் இந்தப் பாத்திரத்தை எப்படித்தான் ஏற்கத் துணிந்தார் என்பது தான் கேள்வி.
எத்தனை தடவை போலீஸ் வேடம் ஏற்று விஜய் சிரிப்பு போலீஸ் ஆகியிருக்கிறார் எண்ணிப் பாருங்கள்.

"அதென்ன எல்லா ஹீரோவுக்குமே போலீஸ் வேடம் பொருந்துதே, ஏன் விஜய்க்கு மட்டும் பொருந்துதில்லை ?" அண்மையில் விஜய் ரசிகர் ஒருவர் அழாக்குறையாக என்னிடம் கேட்டிருந்தார்.

இதற்கு விளக்கம் சொல்லப் போய், என் வீட்டுக்கு முன்னாலும்  ஆர்ப்பாட்டம் நடந்தாலும் பரவாயில்லை.

ஒரு போலீஸ் வேடம் தாங்கும்  நடிகர்களைப் பாருங்கள்.
சூர்யா, விக்ரம், கமல் இந்த அவதாரங்களை விடுங்கள். இவர்கள் எந்தச் சிறு பாத்திரமாக இருந்தாலும் தங்களை உருக்கி வார்த்து நடிப்பவர்கள்.
ஆனால் அஜித், கார்த்தி போன்றோர் அண்மையில் நடித்தபோது கூட பொருந்தியிருந்ததே..

வேறொன்றுமில்லை, பாருங்கள் ஜில்லாவில் விஜய் போலீஸ் ஆகிறாராம். ஆனால் போலீஸ் பயிற்சிக்கு வேடிக்கையாகப் போனால் என்ன, சீரியஸ் போலிஸ் ஆக, சின்சியர் ஆக அவர் ஒரு சாமி போல, துரைசிங்கம் போல மாறி நெஞ்சை நிமிர்த்தி லெக்சர் குடுக்கும்போது கூட அந்தக் குறுந்தாடி கெட் அப்பை மாற்றி நம்பும் மாதிரி இருக்கவேண்டாம்?
அதே படத்தில் பரோட்டா சூரி கூட போலீஸ் என்றால் பொருத்திய மாதிரித் தெரிகிறாரே.

அடுத்து இயக்குனர் விட்ட பெரிய பிழை, அல்லது அது இயக்குனர் நேசன் குழம்பிய விஷயமாகவும் இருக்கலாம்.

விஜயை எப்படிக் காட்டுவது?
போலீசாக மாறிய பிறகும் அதே ஜாலி விஜயாகக் காட்டுவதா, அல்லது கொஞ்சமாவது விறைப்பாக மாற்றுவதா என்று.
இதனால் நிமிடத்துக்கு நிமிடம் சந்திரமுகியாகவும் கங்காவாகவும் கங்காரு போல விஜய் தாவுவதாக ஒரு உணர்வு.

இதனால் அடிக்கடி போக்கிரி விஜய் ஞாபகம் வருவதையும் தவிர்க்க முடியவில்லை.

ஆனால் துள்ளல், எள்ளல் விஜய் கலக்குகிறார்.
அவரது துடிப்பும், இளமையும், குறும்பும் நடனமும் வேறு யாராலும் நிகர்க்க முடியாதது.

அதையே அவரது plus pointsஆக வைத்தே அழகாய் இந்தக் கதையைப் பின்னியிருக்கலாம் நேசன். பிளந்து கட்டியிருக்கலாம்.

அடுத்து மோகன்லால்....

சிவன்..இல்லை இல்லை அவர் சொல்வதைப் போல் ஷிவன்...

காலாகாலமாக தமிழ் சினிமாவில் ராஜ்கிரண், ரகுவரன், பிரகாஷ் ராஜ் ஏன்அண்மையில் இதே விஜயின் தலைவாவில் சத்யராஜ் ஏற்ற அரதப் பழசான தாதா பாத்திரம்.

இதற்காக மினக்கெட்டு ஏன் இந்த மலையாள சிங்கம் தமிழுக்கு வந்து மொக்கை சுண்டெலியாக மாற வேண்டும்?

சரி மோகன்லால் கிடைத்தாலும் கிடைத்தார் அவருக்கேற்ற கெத்தை பாத்திரத்திலாவது வைக்கவேண்டாம்?

இதே போன்றதொரு பாத்திரத்தில் அஜித்தின் தீனாவில் சுரேஷ் கோபிக்கு இருந்த இமேஜின் கால்வாசி கூட இல்லை.
கிட்டத்தட்ட இன்னொரு வில்லன் ஆக்கியுள்ளார்கள்.
பாதி வசனங்களில் மலையாள வாசனை.

இப்படியான இரண்டு தாதா படங்களில் இலகுவாக ஊகிக்கக்கூடிய விடயங்கள் படம் முழுக்க.

சில எதிரிகள், சில துரோகிகள், படத்தின் எப்போது எப்படி பெரிய தாதாவும் சின்ன தாதாவும் ஏன்மோதிக்கொள்வார்கள்? எப்படி சேர்வார்கள் என்ற formulaவில் அட்சரம் பிசகாமல் எடுத்து எங்களையெல்லாம் தேர்ந்த சினிமா பார்வையாளர்களாக மாற்றி வெற்றி கண்டிருக்கிறார் நேசன்.
சின்னப் புள்ளத் தனமா இல்லை?

விஜயின் அறிமுகக் காட்சியிலேயே தீனா படத்தின் அறிமுகக் காட்சியை ஞாபகப்படுத்திவிடும் இயக்குனர், விஜய்க்கு போலீசையும் காக்கி சீருடையையும் பிடிக்காமல் போவதற்கான  (முன்னைய தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களின் புஸ் நெடி வருகிறது) காரணத்தை நீட்டி முழக்கி சொதப்புகிறார்.

அதிலும் ஜில்லா என்ற பெயருக்கு சொல்லும் விளக்கம் இருக்கே... (அந்த விளக்கம் வில்லன்களுக்கு இல்லீங்கோ, எங்களுக்கு) தெய்வமே....

வீரம் படத்தில் தம்பி ராமையாவை எப்படி இயக்குனர் சிவா பயன்படுத்தி ஸ்கோர் செய்கிறார்?
இங்கே அந்த அற்புத நடிகரை சும்மா வீணடித்திருக்கிறார்.

சம்பத் வழக்கம் போலவே அழுத்தமாகக் கலக்கி இருக்கிறார்.


காஜல் அகர்வாலுக்கு வழமையான விஜய் பட கதாநாயகியின் வேலை. கொஞ்சமாக நடித்து நிறைய கண்ணால் பேசி, பாடலுக்கு எல்லாம் அழகாக ஆடி...

ஆனால் விஜய் தான் படம் முழுக்க..

இதுவே தான் புதியவர் நேசனைத் தடுமாற வைத்திருக்கிறது போலும்.
விஜய் ரசிகரை (மட்டும்) குறிவைத்து அவர்களைத் திருப்திப்படுத்தினால் போதும் என்று படக்கதையைத் திருத்தியிருப்பார் போலும்.

மோகன்லாலின் பாத்திரத்துக்கு இன்னும் கொஞ்சம் வெயிட் கொடுத்து, விஜய் போலீசாக வந்த பிறகு ஒரு சரேல் மாற்றத்தையும் கொடுத்திருந்தால் துப்பாக்கி போல விஜய்யை ஜில்லாவும் ஒரு தூக்கு தூக்கியிருக்கும்.

அதுசரி, கண்டாங்கி சேலைக்கும் - ஜப்பானிய கிமோனோ உடைக்கும் என்னா சம்பந்தம்?
வைரமுத்து இழைத்து இழைத்து எழுதி, இமானின் நயந்து ரசிக்கக் கூடிய இசையில் விஜயும் ஷ்ரேயா கோஷலும் பாடி உருகவைத்த அந்தப் பாடலை எவ்வளவு அழகாக எடுப்பார்கள் என்று கற்பனை பண்ணி வைத்திருந்தேன். சொதப்பியிருக்கிறார்.

எனது எதிர்வுகூறல்கள் jinx ஆவது கிரிக்கெட்டில் மட்டும் தான் என்று நினைத்தேன்... ஜில்லா பாடலுக்கும் jinxஆஆ???

கண்டாங்கி பாடல் பற்றி பாடல் வெளிவந்த இரவு போட்ட status

விஜயினதும் காஜலினதும் அழகான அசைவுகளும் கண்களின் பாஷையும் தான் எஞ்சியிருக்கு.

ஆனால் விசிலோடு ஆரம்பித்து விசிலோடு முடிகிற விரசாப் போகையிலே போக்கிரி வசந்த முல்லையை ஞாபகப்படுத்தினாலும் ரசனையுடன் படமாகியிருக்கிறது.
விஜய்யின் ரசிக்கக் கூடிய குறும்புகளுடன் தமிழரின் பண்டைய நடன, கலையம்சங்கள் பாடல் முழுக்க வந்துபோகின்றன.

விஜய் எங்களை மறந்து ரசிக்கச் செய்கிற இடங்கள் தான் படத்தின் பெரிய ஓட்டைகளை ஓரளவுக்கு அடைத்து மொக்கை லெவலில் இருந்து சராசரிக்கு எடுத்துச் செல்கிறது.
அந்த அலட்சியமான கெத்து, அனாயசமான சண்டைக் காட்சிகள், காஜலுடனான குறும்பு காட்சிகள் (ஆனால் டிக்கி லோனா பிடிகள் எல்லாம் கொஞ்சம் அதிகமானவை தான்.. மாறி மாறி அமுக்குகிறார்களாம். சிரிக்கணுமோ?) - அதிலும் அந்த தாத்தா கதை கலக்கல், என்று விஜய் முத்திரைகள் பாராட்டுக்குரியவை.

இப்படியே ரசித்து விஜய்யிடம் ரசிகர்கள் (விஜய் ரசிகர்கள் மட்டுமல்ல) எதிர்பார்க்கும் விடயங்களையும் விஜய் சிறப்பாக செய்யக் கூடிய விடயங்களையும் இணைத்து இழைத்து ஜில்லாவை நேசன் இயக்கியிருந்தால்....
அதுசரி நினைப்பதெல்லாம் நடப்பதில்லையே.

விஜய்யும் ஜெயலலிதா குழப்பங்கள், தடை வருமோ வராதோ, பஞ்ச் வசனப் பயம் என்று குழம்பி குழம்பியே இருந்திருப்பதால் முழு ஈடுபாட்டோடு இருந்திருக்க மாட்டார் போலும். பாவம்.

ஜில்லா - இதுக்கு மேல என்ன சொல்ல நல்லா.


ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner