Showing posts with label அஜித். Show all posts
Showing posts with label அஜித். Show all posts

August 29, 2017

விவேகம் !!! - என்ன ? ஏன் ? எதற்கு?

பெரிதாக ஆச்சரியமோ, ஏமாற்றமோ இல்லை.
விவேகம் பற்றிய எக்கச்சக்க build up கள் வந்துகொண்டிருந்தபோதே எனது நண்பர்களிடம் "இது அடுத்த பில்லா 2, அசல் மாதிரி தான் வரும் போல கிடக்கு" என்று சொல்லியிருந்தேன்.
படம் பார்த்தவுடன் கடுப்பு + ஏமாற்றத்தின் எரிச்சலில் ஒரு status போட்டாலும் அடுத்த நாள் கொஞ்சம் சாவகாசமாக யோசித்துப் பார்த்தால் விவேகத்தை விடவும் மோசமான படங்கள் வந்திருக்கே.. இது ஒன்றும் ஒரேயடியாகக் கழுவியூற்றக்கூடிய படமா என்று யோசித்தேன்..
என் மாதிரியே யோசிக்கக்கூடிய பலருக்கும் சேர்த்து கொஞ்சம் விரிவு + விளக்கமாக..
Believe in Yourself - உன்னிப்பாக அவதானித்தால் BE YOU எல்லாம் நல்லாத்தான் இருந்தது.
முதலாவது அகோரத் தாக்குதலுக்கு (அந்தக் கொடுமை தான் அறிமுகம்.. ) பின் தல ரசிகர்களின் பெரிய கரகோஷங்களுடன் அறிமுகமாகிறார்.
அதற்குப் பிறகு அதைவிடக் கொடுமையான பாலப் பாய்ச்சலுக்குப் பின் James Bond பாணியிலான Title + song.
தமிழுக்குப் புதிதாக பல விடயங்களை முயன்றதற்கு சிவாவைக் கொஞ்சம் மெச்சலாம்.

One Man army - James Bond like movie என்று முடிவெடுத்த பிறகு, அதிலும் அஜித் தான் நாயகன் என்று தீர்மானித்த பிறகு stylish making & technical perfection இல் மட்டும் கவனம் செலுத்தினால் போதும் என்று இயக்குனர் சிவா முடிவெடுத்திருக்கிறார் போலும்.
அஜித்தின் நடை+ அந்த ஆழமான குரலில் அழுத்தமாகப் பேசும் punch dialogue - பில்லா முதல் ரசிகர்களால் பெரிய வரவேற்புடன் கொண்டாடப்படும் தல ப்ளஸ்களையே தல அஜித்தின் வெறித்தனமான ரசிகர்களே வெறுக்கவைக்கும் அளவுக்கு மாற்றிய கைங்கர்யம் செய்த இயக்குனர் சிவா.
நடக்கச் செய்து செய்து அஜித்தை நடராஜாவாகவே மாற்றிய மற்ற இயக்குனர்கள் வரிசையில்,
(இதிலும் பாடல் காட்சிகளில் நடக்கிறது பரவாயில்லை, அக்ஸராவை துரத்தும்போதும் நடக்கத்தான் வேண்டுமா?)
வசனங்களாக அழுத்தமானவற்றை இழுத்து இழுத்து பேசச் செய்து, அதிலும் விறுவிறுப்பாகக் காட்சிகள் போய்க்கொண்டிருக்கையில் speed breakers ஆக பஞ்ச் வசனங்களை மாற்றி வைத்த சிவா வித்தியாசமானவர் தான்.
அதிலும் மனைவியோடு பேசும்போது கூட அதே தொனி?
முடியல நண்பா சிவா.
அத்தோடு மற்ற படங்களிலெல்லாம் ஹீரோவோடு கூடவே புகழ்பாட வரும் காமெடியனுக்குப் பதிலாக வில்லன் விவேக் ஓபராயை வைத்து 'தல' புகழ் பாட வைத்து சலிப்பு ஏற்படுத்தியதும் கொடுமை.
அஜித் என்ற magic icon மீண்டும் நம்பி நாசம் + மோசம் போயுள்ளது. இப்படியே இன்னொரு படம் வந்தால் இந்த எதிர்பார்ப்பு எல்லாமே நீர்த்துவிடும்.
கமலின் படங்களில் கூட வந்திராத very detailed Technical advancements, latest technology விஷயங்கள் (reverse hacking, hologram imaging, Morse code, mobile signal jamming, tracking with pacemaker) என்று மினக்கெட்ட சிவா & team, அஜித்தின் அர்ப்பணிப்பு + உழைப்பு, வெளிநாட்டில் படப்பிடிப்புக்குக்காக கொட்டிய கோடிகளையும் இன்னும் கொஞ்சம் அர்த்தமுள்ளதாக மாற்றியிருக்கலாம்.
பாலம், அக்சரா கொல்லப்படும் சண்டை, climax எல்லாம் சலிப்புத் தட்டும் அளவுக்கு திகட்டல்.
அதிலும் பொங்கியெழு மனோகரா பாணியில் காஜல் பாட, அஜித் வெறியேறி ஆட.. சொர்ரி அடிக்க..
உஸ்ஸ்ஸ்..
அதிலும் நேரம் வேறு டிக்,டிக்,டிக்...
அஜித்தின் கடின உழைப்பு, தன்னை வருத்தி இந்தப் பாத்திரமாக மாற்றியது, வெற்றியின் ஒளிப்பதிவு, ரூபனின் நேர்த்தியான எடிட்டிங், அனிருத்தின் பின்னணி இசையின் பிரம்மாண்டம், சிவாவின் வசனங்கள் சில, லொக்கேஷன் தெரிவுகள் (அத்தனை அழகும் ஒருவித freshness உம்), தொழிநுட்ப பிரம்மாண்டம் + CG என்று பாராட்டக்கூடிய விடயங்கள் பல தான்.
இன்னொன்று அந்த AK பெயராக பயன்படுத்தப்படும் விதம்.
(ஆனால் சுவரில் சுட்டு செதுக்குவது எல்லாம் ஓவர் நண்பா)
லொஜிக், மஜிக் எல்லாம் இப்படிப் படங்களில் பார்க்கத் தேவையில்லை என்று சொல்வதையும் சரி நண்பா என்று எடுக்கலாம்..
ஆனால் அதுக்காக தனியொருவனாக கையிரண்டில் துப்பாக்கி தாங்கி சடபட என்று ஆயிரக்கணக்கில் வேட்டையாடுவதும் ஆயிரக்கணக்கில் சுடப்பட்டும் ஒன்று கூட உரசிச்ச செல்லாததும், பனி மலையில் தனியொருவனாகக் காய்ந்து கிடப்பவர் திடீரென்று அத்தனை ஆயுதங்களோடு அவதாரம் எடுப்பதெல்லாம் என்ன நண்பா?
நேரக்கணக்கு எல்லாம் Mission Impossible, 24 (English) கணக்கில் இருந்தாலும் கொஞ்சம் ஓவராகவே...
அஜித் ரசிகர்களுக்குப் பிடிக்கும், A பிரிவு ரசிகர்களுக்கு ஏற்றது.. இதெல்லாம் ரசிகர்கள் தம்மைத் தாமே ஏமாற்றிக்கொள்ளும் சில ஆறுதல்களே.
உண்மையாக அஜித்திடம் எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்று யார் யார் ஏற்றுக்கொள்கிறீர்களோ அவர்கள் என் கட்சி.
ஆனால் அடிக்கடி நான் சொல்லும் 'மனம் போல வாழ்வு' என்பது
"எண்ணம் போல் வாழ்வு" என்று வந்த இடம் மனதோடு ஒட்டிக்கொண்டது.
ஆனால் ஒன்று, இனி பல்கேரியா, அல்பேனியா, சேர்பியா இவை பற்றி எங்கு, என்ன கேட்டாலும் விவேகமும் துப்பாக்கிகளும் தான் ஞாபகம் வரப்போகுது.

நிற்க, அடுத்த படமும் சிவாவோடு தானாமே..
இன்னொரு V பெயர்..
வீரம் - 
தமிழ்நாடு 
வேதாளம் - இந்திய அளவு 
இப்போது விவேகம் - சர்வதேச அளவுக்குப் போயாச்சு.
இந்தியாவுக்குள் எட்டிப் பார்க்கவில்லையே..
அப்போ... 
அடுத்த subject Space, UFO அப்படியேதாவது?? 🤔😯


January 20, 2014

வீரம்

அண்மைக்கால ஆணி பிடுங்கல்கள் அமோகமாக இருப்பதால் இதுவும் லேட்டாப் பார்த்த படம்.
எனவே விமர்சன வகையில் சேர்க்காமல் கருத்துப்பகிர்வாக எடுத்துக்கொள்வீர்கள் என்று தெரியும்.

அஜித் ரசிகன் என்று முத்திரை குத்தாமல் (குத்தினாலும் பரவாயில்லை) ரசித்த விஷயங்களில் உடன்பாடுள்ளவற்றை எடுத்துக்கொள்ளுங்கள்.



வீரம் - சிறுத்தையில் தன் திரைக்கதை வேகம், கதையோடு  நகைச்சுவை, ஒவ்வொரு பாத்திரத்துக்கும் கொடுக்க வேண்டிய முக்கியத்துவம் + அழுத்தம் போன்றவற்றை நேர்த்தியாகப் பயன்படுத்தினால் பழகிய கதை + களமாக இருந்தாலும் படம் பெறும் வரவேற்பு என்பதை நிரூபித்தவர் இயக்குனர் சிவா.

தமிழ் சினிமாவில் காலாகாலமாகத் தெரிந்த அதே சென்டிமென்ட்கள், அதே மாதிரியான ஹீரோக்கள், வில்லன்கள், அதே மாதிரி காதல், இப்படி ஏகப்பட்ட 'அதே மாதிரி'கள் இருந்தாலும் சில படங்கள் மட்டும் ஜெயிக்கும் மந்திர formula பல இயக்குனர்கள், முன்னணி நடிகர்களுக்குப் புரிவதில்லை.

இதைக் கை வரப் பெற்ற வெகு சில இயக்குனர்கள் தங்கள் mixingஐ பக்குவமாகச் செய்து ரசிகர்களை ஈர்த்து ஜெயித்துக்கொண்டே இருக்கிறார்கள்.
கொஞ்சம் miss  ஆகினால் கூட மொக்கை ஆகிவிடும் அபாயம் இருப்பதால் உண்மையில் K.S.ரவிக்குமார், ஷங்கர், முன்னைய சுரேஷ் கிருஷ்ணா, P.வாசு, A.R.முருகதாஸ் இன்னும் பலர் உண்மையில் அந்தந்தக் காலகட்டங்களில் பாராட்டக் கூடியவர்களாக இருந்திருக்கிறார்கள்.

சிறுத்தை சிவாவும் தனது இரண்டாவது ஆனால் முக்கிய பரீட்சையில் சித்தி பெற்றுவிட்டார்.

வழமையாக கோட் சூட்டில் யுவனின் பின்னணி இசையுடன் கம்பீர நடை நடக்கும் தலயை வேட்டி சட்டையில் DSPயின் கதறும் இசையில் கெத்தான நடை நடக்க வைத்திருக்கிறார்.

அதுவும் கலக்கலாகத் தான் இருக்கிறது.



எனக்குப் பொதுவாகவே stylish making, நட்சத்திர அந்தஸ்துள்ள, பஞ்ச் வசனங்கள் சொல்வதற்குப் பொருத்தமானவர்கள் சொன்னால் பொருந்துகிற இப்படியான ஹீரோயிசத் திரைப்படங்கள் நேர்த்தியாகப் படம் எடுத்தால் மட்டுமே ஒட்டிக்கொள்ளும்.
இதனால் வீரம் ஆரம்பம் முதல் அச்சுப் பிசகாமல் ஒட்டிவிட்டது.

படம் முழுக்க நட்சத்திரக் கூட்டம் அலையடித்தாலும் அஜித், தமன்னா, சந்தானம், நாசர், அதுல் குல்கர்னி, தம்பி ராமய்யா ஆகியோருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு ஏனையோருக்கான பாத்திரப் பங்களிப்பு அளவோடு பகிரப்பட்டிருப்பது தெளிவான திரைக்கதையோட்டத்துக்கு உதவியிருக்கிறது.

ஏனைய முக்கியமான பெயர் அறிந்த நட்சத்திரங்கள் படத்தின் வெயிட்டுக்கு உதவியிருக்கிறார்கள் போலும்.


ஊகிக்கக் கூடிய திருப்பங்கள் இருந்தாலும் கூட அதை எடுத்திருக்கும் விதமும் அஜித்தின் அலட்டிக்கொள்ளாத ஆனால் ரசிக்கக் கூடிய actionஉம் வீரத்துக்கு வெற்றி தான்.

DSPயின் இசையை இரைச்சல் என்று பலர் சொன்னாலும் இப்படியான படங்களுக்கு படத்துடன் பொருந்துவது இவர் இசை தான் என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
பாடல்கள் ஒரு பக்கம், 'ரத கஜ துராதிபதி'  theme பொருத்தமான இடங்களில் பொங்கி வருகிறது.
ஒளிப்பதிவு புதியவர் வெற்றி. கலக்கி இருக்கிறார். இனி அமோகமாக வாய்ப்புக்கள் குவியலாம்.
ஒவ்வொரு காட்சியின் தன்மையறிந்து நிறங்களையும் கமெராக் கோணங்களையும் மாற்றியிருப்பதில் அசத்தியிருக்கிரார்.

'இவள் தானா' பாடலில் சுவிட்சர்லாந்து அழகை அப்படியே உள்வாங்கி அள்ளித் தெளித்திருப்பது ரசனை.
அதில் ஒரு சில நிமிடங்கள் பின்னால் பனி மலைகளின் வெண்மையுடன் அஜித், தமன்னா இருவரும் வெள்ளை ஆடையில் வரும் காட்சி கொள்ளை அழகு.
(ஆனால் இதே பாடல்களைப் படத்தின் தன்மையுடன் கிராமிய இயற்கை அழகுடன் எடுத்திருந்தால் இன்னும் நல்லா இருந்திருக்காதா சிவா?)



இன்னொரு பலம் பரதனின் சுட்டு சாணை தீட்டிய கத்தி போன்ற வசனங்கள்.
நறுக் + சுருக்.
 நீட்டி முழக்காமல் நெஞ்சில் நிற்பது போல் அளவாக அளந்து எழுதியிருக்கிறார்.
அதிலும் அஜித் முன்னைய பஞ்ச் படங்கள் போல அடுக்கடுக்காமல் பேசாமல் அளவோடு அழுத்தமாகப் பேசியதை ரசிக்கலாம்.
"பெரிய மீசையோட வேற வந்திருக்கிறாய். பஞ்ச் வசனம் பேசாமப் போனா நல்லா இருக்காது"
இப்படி சில நக்கல் இடங்களும் நல்லாவே இருக்கு.

"சோறு போட்டவ எல்லாம் அம்மா; சொல்லிக் குடுத்தவர் எல்லாம் அப்பா" ரக டச்சிங்கும் உண்டு.

முரட்டுக் காளையை தழுவி இருக்கிறார்கள் என்று ஆரம்பத்தில் சொல்லப்பட்டாலும், வானத்தைப்போல, ஆனந்தம் போன்ற 'குடும்ப'திரைச் சித்திரங்களையும் அல்லவா அளவாகக் குழைத்திருக்கிறார்கள்.

puzzle விளையாட்டில் வந்து விழும் set pieceகள் போல அஜித் - தமன்னா,  வில்லன்கள், சந்தானம் & தம்பி ராமையா ஆகியோரும் மட்டுமல்லாமல் சண்டை இயக்குனர், ஒளிப்பதிவாளர்,கலை இயக்குனர், எடிட்டர் ஆகியோரையும் நாம் இயக்குனர் சிவாவுடன் சேர்த்தே பாராட்ட வேண்டும்.

சண்டைக் காட்சிகள் அனல் பறக்கிறது. புதுமையாகவும் வேகமாகவும் இருப்பது முக்கியமானது.
படம் முழுக்க ஏதோஒவ்வொரு கட்டத்தில் சண்டைகள் வந்துகொண்டே இருந்தாலும் சண்டை பயிற்சியாளர் சில்வாவும், ரிஸ்க் எடுக்கும் அஜித்தும் ரசிக்க வைக்கிறார்கள்.

சந்தானம் இருந்தும், மிக நீண்ட காலத்தின் பின் சந்தானத்தினால் படம் ஓடாமல் அந்த பெரும் பாரம் இல்லாமல் சந்தானம் relaxed ஆக ரசித்து நகைச்சுவை செய்ததாக ஒரு எண்ணம் மனதில்.
கொஞ்சக் காலம் அலட்டியாகத் தெரிந்த சந்தானம் மீண்டும் வீரம் முதல் refresh ஆகியுள்ளார் போலத் தெரிகிறது.
அஜித்தும் இவ்வாறு ஜாலியாக காமெடி செய்து நீண்ட காலம்.
அஜித் இல்லாத காட்சிகளை சந்தானம் நிரப்புகிறார்.


இடைவேளைக்குப் பிறகு தம்பி ராமையாவும் சேர்ந்து கொள்வது கலகலப்புக்கு மேல் சிரிப்போ சிரிப்பு.
தம்பி ராமையா தமிழில் இன்னொரு முக்கியமான பல்சுவை ஆற்றலுள்ள நடிகராக வேகமாக வளர்ந்து வருகிறார்.

வில்லன்களில் அதுல் குல்கர்னி அருமையான ஒரு தெரிவு.
ஹீரோ - வில்லன்கள் மோதலில் பறக்கும் பொறி அசத்தல்.

சிவாவின் சிறுத்தையிலும் வீரத்திலும் இருந்து மசாலா இயக்குனர்கள் கற்றுக்கொள்ளவேண்டிய விஷயங்கள் நிறையவே இருக்கின்றன.

அஜித் போன்ற ஒரு மாஸ் ஹீரோவை மாறுபட்ட பாத்திரத்தில் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய விதமாக எவ்வாறு காட்டலாம் என்பதும், இவ்வளவு வேகமான, விறுவிறு காட்சிகளுக்கிடையிலும் சந்தானம் போல தனியாக நின்று சிக்சர் போடக் கூடிய சந்தானத்தை நகைச்சுவை படத்தை மொக்கை போடாமல் எவ்வாறு சுவைக்காக மட்டும் பயன்படுத்தலாம் என்பதையும் முக்கியமாக கவனிக்கவேண்டும்.



ரசித்த இன்னும் சில விஷயங்கள்...

அஜித்தின் வேட்டி - சட்டை கெட் அப்.
படம் முழுவதும் (பாடல்கள் தவிர) வெள்ளையிலேயே வருவது ஒரு கம்பீரம்.
படம் முழுக்க நிறைந்து கிடக்கும் ஒருவித குடும்ப குதூகலம்.
அந்த சுட்டிக் குழந்தை
உறுத்தாமல்,திணிக்காமல் படம் முழுக்க நிறைந்து கிடக்கும் கமெராக் கவிதைகள்.
சந்தானம் அடிக்கும் சிம்பிளான ஆனால் வயிறு வலிக்கும் கமென்டுகள்
தம்பி ராமையாவின் நசுவல் வில்லத்தனம்.
ரமேஷ் கண்ணா - தேவதர்ஷினியின் 'ஓ '
அஜித் - தமன்னா காதலில் விழ வைக்க சந்தானம், தம்பிமார், ரமேஷ் கண்ணா எடுக்கும் முயற்சிகள்..குறிப்பாக அந்த பறவை பேசும் காட்சி + 'தியானம்'
ஒவ்வொரு பாடல் காட்சிக்குமான ஆடைத்தெரிவுகள்.
நான் பார்த்த தமிழின் அசத்தல் சண்டைக் காட்சிகள் நிறைந்த படங்களில் இந்த வீரமும் ஒன்றென நினைக்கிறேன்.


பிடிக்காமல் போன சில விஷயங்கள் 

அஜித்தின் தலை நரைத்திருக்கவும் அவரும் தம்பிமாரும் திருமணம் முடிக்காமலே இருக்க சொல்லப்பட்டும் சப்பைக் காரணம் ஒட்டவில்லை.
(ஆனால் அமரர் பெரியார்தாசன் வரும் அந்த டீக்கடை காட்சி வசனம் டச்சிங்.
"அவன் டீ குடிச்சிட்டே இருக்கிறான்; நான் குடுத்திட்டே இருப்பேனடா")
சில காட்சிகளில் தமன்னா காட்டும் முகபாவங்கள் - படு செயற்கை
இரண்டாம் பாதியில் தாடியில்லாமல் தனியே மீசையுடன் வரும் அஜித் கெட்அப்.
என்ன தான் விறுவிறுப்பு, ரசனையாக இருந்தாலும் மொத்தமாக யோசித்துப் பார்க்கையில் இன்னும் இந்தக் குண்டுச் சட்டியை விட்டு வெளியே வரமாட்டார்களா என ஆயாசப்படவைக்கும் கதை.

சிவா போன்றவர்கள் ரிஸ்க் எடுக்கத் தயாராகும் அஜித் போன்றவர்களை வைத்து இன்னும் கொஞ்சம் வித்தியாசமாக வெளியே வரலாமே?

அஜித்தை சொதப்பிவிடவில்லை; அதை விட என் நேரம் கொட்டாவி இல்லாமல் கொடுத்த காசுக்கு ரசிக்கக் கிடைத்து என்பது வரை திருப்தி.

இதனால் தான் படம் பார்த்தவுடன் போட்ட ட்வீட்.

வீரம் - கதை, களம் இதெல்லாம் பழகியவை என்றாலும் அஜித் மிடுக்கு, படமாக்கிய விதம், சண்டைகளில் புதுமை, சந்தானம் கலக்கலில் #வீரம் வென்றது.
#Veeram

வீரம் - வென்றது.

November 18, 2013

ஆரம்பமும் அழகுராஜாவும் இவை தாண்டி சிலவும் சச்சினும்

அஜித்தின் படமொன்று வெளியாகி இத்தனை நாளுக்குப் பின்னர் நான் பார்த்தது என் வரலாற்றிலேயே (!!) முதல் தடவை.
அலுவலக  ஆணிகள், அலவாங்குகளை சமாளித்து ஆரம்பம் ஓட ஆரம்பித்து பத்து நாட்களின் பின்னரே பார்க்கக் கிடைத்தது.
பார்த்தும் ஐந்து நாளுக்குப் பிறகு தான் பதிவேற்றவும் கிடைப்பது நிச்சயம் காலக்கொடுமை தான்.
பழியும் புகழும் Sooriyan MegaBlast, CHOGM, Sachin என்று பலதுக்கும் பலருக்கும் போய்ச்சேரட்டும்.

இத்தனை நாட்கள் பின்னர் எனது வழமையான நீட்டி முழக்கும் நீ.....ண்ட 'விமர்சனம்' போல இதை எடுத்துக்கொள்ளாமல், போறபோக்கில் சும்மா எடுத்துவிட்டுப் போகிற ட்வீட்களில் சிலவாக எடுத்துக்கொள்ளுங்கள்.


 அஜித் + விஷ்ணுவர்த்தன் + யுவன் ஷங்கர் ராஜா கூட்டணி பில்லாவுக்கு பிறகு மீண்டும் எப்போது சேர்வார்கள் என்று எதிர்பார்க்கவைத்த ஒரு கூட்டணி.
இம்முறையும் ஏமாற்றவில்லை.

பில்லா 2இல் விஷ்ணுவர்த்தனை மிஸ் பண்ணியதை இப்போது நினைத்துக்கொள்வார் அஜித்.

தல கலக்கல், மாஸ், awesome, தாறுமாறு , அப்படி இப்படியென்று ஆயிரக்கணக்கில், விதவிதமாக நம்மவர்கள் அஜித்தைப் புகழ்ந்ததில் தப்பில்லை என்றே தெரிகிறது.
பட ஆரம்பத்திலேயே Ultimate Star, தல என்று எதுவுமே இல்லாமல் வெறும் அஜித்குமார்.
ஓவர் பில்ட் அப் இல்லாமல் ஆனால் அதிரடியான அறிமுகம்.
'தல' இமேஜுக்காக காட்சிகளை உருவாக்காமல் அந்தப் பாத்திரத்துக்கேற்ப அஜித்தை செலுத்தியிருப்பது பாராட்டுக்குரியது.

ஈவிரக்கம் இல்லாமல் கொலைகள் செய்துவிட்டு செல்வதும், திமிரான மிரட்டலும், அலட்சிய சிரிப்பும் அஜித்துக்கு 'வாலி' காலத்திலிருந்து கைவந்த கலை.

நரை முடி செறிந்து கிடக்கும் salt and pepper hair style இந்தப்  படத்தின் கதைக்கு அத்தியாவசியத் தேவை என்றில்லைத் தான்.
ஆனால் அஜித்தின் பாத்திரத்துக்கு அதுவும் அந்த நரையுடன் கூடிய தாடியும் கொடுப்பது இன்னொரு extra கம்பீரம்.


இது தமிழில் ரஜினிக்கு (தர்மதுரை, அண்ணாமலை, படையப்பா) மட்டுமே வாய்த்திருக்கக் கூடிய ஒன்று.

அஜித்தின் உடம்பும் கட்டுக்கோப்பாக இருக்கிறது. பொருத்தமான ஆடைத்தெரிவுகளோடு.
ஆர்யா அளவுக்கு ஆஜானுபாகுவாக இல்லாவிட்டாலும் கம்பீரம். ஆனாலும் அந்த மும்பாய் போலீஸ் சஞ்சயுடன் வரும் காட்சிகளில் அஜித் குறுகித் தெரிகிறார்.

ஆரம்பம் படத்திலும் அஜித்தின் காவடி/பக்தி பாடலும் ஆடலும் சென்டிமென்ட் வெற்றியளித்துள்ளது.
இதற்கு முதல் அமர்க்களம் - காலம் கலிகாலம்
பில்லா - சேவற்கொடி
பில்லா படத்தில் அஜித்தை கிலோமீட்டர் கணக்கில் நடக்க வைத்தே ஓட்டிய விஷ்ணுவர்த்தன், இம்முறை அளவாக நடக்கவும், அழகாக (அஜித்துக்கு ஒத்துவரும் விதத்தில்) ஆடவும், அதிகமாக நடிக்கவும் வைத்துக் கலக்கியிருக்கிறார்.

இதனை இதனால் இவன் முடிப்பான் என்றாய்ந்து
அதனை அவன் கண் விடல்
என்ற குறள் இந்தப் படத்துக்கும் பொருந்தி விடுகிறது.

இயக்குனர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் மற்றும் நடிக, நடிகையர் தேர்வு என்று அத்தனை விடயங்களும் சரியான set pieces சரியான இடங்களில் பொருத்தியதாக இருக்கிறது.
ஆர்யா, நயன்தாரா முதல் அந்த ஹிந்தி அரசியல்வாதி வில்லன் வரை பொருந்திப்போகிற பாத்திரங்கள்.

ஆர்யாவை விட்டால் அந்த ஜாலியான, dont care, romantic Hacker பாத்திரத்துக்கு வேறு யாரும் பொருந்த மாட்டார்கள்.
கலக்குகிறார்; ரசிக்கவும் வைக்கிறார்.

நயன்தாரா, ராஜா ராணியில் ஆர்யாவுக்கு அக்கா போல தெரிந்தவர், அஜீத்துக்குப் பொருத்தமாக இருக்கிறார். ஆனால் படத்தில் காதலில் அஜித் - நயன்தாராவை விழவைத்து டூயட் பாடாமல் செய்தது பெரியதொரு ஆறுதல்.

கதையோடு இயக்குனர் பயணித்தது படத்தின் வேகத்துக்கு உதவியிருந்தது.

எடுத்தெறியும் திமிர்ப்பார்வையும், அலட்சியமான உதட்டசைவும், மிடுக்கான நடையும்.. எதிர்காலத்தில் யாராவது ஜெயலலிதாவைப் பற்றிப் படமொன்று எடுத்தால் நயன்தாராவை விட வேறு யாரும்  ஜெ ஆக நடிக்கப் பொருத்தமாக  இருக்கப்போவதில்லை.

என்னதான் விஷ்ணுவர்த்தனின் Trademark ஆன, stylish making பில்லாவைப் போல ஆரம்பத்திலும் இருந்தாலும், கதை +திரைக்கதை தான் இங்கே பிரதான இடத்தை எடுத்துக்கொள்கிறது.

அதனால் தான் இத்தனை கொலைகள் + வன்முறைகளையும் ரசிக்க (?) முடிகிறது.


முக்கியமாகக் குறிப்பிடவேண்டிய இருவர் இசையமைப்பாளர் யுவன் & ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ்.
அஜித்துக்கும் அவர் பாணி ஸ்டைலிஷ் படங்களுக்கும் (நடைக்கும் சேர்த்தே) மிகப் பொருத்தமான இசையமைப்பாளர் என்றால் அது யுவனே தான்.
சும்மா மிரட்டுகிறார்.

நாணயம், வெப்பம், சூடவா, நீ தானே என் பொன் வசந்தம்  போன்ற திரைப்படங்களில் வியந்து ரசித்த ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ். அவருக்கு ஒரு வித்தியாசமான சவால்.
மும்பையை பல்வேறு வடிவங்களில் கொண்டுவருவதாக இருக்கட்டும்,டுபாயை ரசிக்கும் விதமாக படமாக்குவதிலாகட்டும் பாராட்டுக்கள் ஓம் பிரகாஷ் கலக்கியிருக்கிறார்.

வசனங்கள் நறுக், சுருக் & சில இடங்களில் திடுக்.
சுபா.
தேவையான இடங்களில் பஞ்ச் வைத்து, மற்ற இடங்களில் பட்டுத்தெறிக்கும் வசனங்கள்.
என்னைப் பொறுத்தவரை கனாக்கண்டேன், அயன் படத்துக்குப் பிறகு சுபாவின் வசனங்கள் கூடுதலாக ரசிக்கப்பட்டதும், பொருத்தமாக அமைந்ததும் ஆரம்பத்திலேயாகத் தான் இருக்கவேண்டும்.

 John Travolta, Hugh Jackman ஆகியோர் நடித்த SwordFish படத்தின் சில காட்சிகள் (ஹக்கிங், வங்கிக் கணக்கின் பணப்பரிமாற்றக் கடத்தல்) நாசூக்காக உருவப்பட்டாலும், (லொஜிக் ஓட்டைகள் பார்க்கப்போனால் நிறைய நொட்டைகள் சொல்லலாம்) 26/11 மும்பாய் தாக்குதலில் இன்று வரை அவிழ்க்கப்படாத சில மர்மங்களை லேசாகத் தொட்டு, அதை வைத்து பின்னியிருக்கும் திரைக்கதை என்பதும் நகைச்சுவையோ, வேறெதுவும் தேவையற்ற திசைதிருப்பிகள் இல்லாமல் கொண்டுபோயிருக்கும் விஷ்ணு வாழ்த்துக்களுக்கு உரியவராகிறார்.

ஆனாலும்... அஜித் இல்லாமல் இதே படத்தை நினைத்தால், அப்பளம் தான்.

அஜித் நம்பி இன்னொரு படத்துக்கு அச்சாரமாக விஷ்ணுவுக்கு கார் ஒன்று பரிசளிக்கலாம்.
ஆனால் இனி அஜித் தன் படக்கதைத் தெரிவுகளில் மிகக் கவனமாக இருக்கவேண்டும்.
பில்லா, மங்காத்தா, ஆரம்பம் போதும்.
பில்லாவுக்கும் மங்காத்தாவுக்கும் இடையிலும் மங்காத்தாவுக்கும் ஆரம்பத்துக்கும் இடையிலும் வந்தவை போல 'தல' வலிகள் வேண்டாமே?
'வீரம்' பார்த்தவரை முன்னோட்டங்கள், படங்கள் நல்லாத் தான் இருக்கு.
அட்டகசத்தின் part 2 வாக வந்தால் பரவாயில்லை; ஜனா மாதிரி... நினைத்தாலே உதறுகிறது.

ஆரம்பம் பற்றி கேட்டவரை பார்த்தவர்கள் "ஆகா, ஓஹோ, அற்புதம்" என்று தான் சொல்லியிருக்கிறார்கள்.
ஆரம்பம் 'ஆ!!' 'ரம்பம்' ஆகத் தான் இருக்குமோ என்ற பயத்தோடே சென்ற எனக்கும் திருப்தியே..

ஆரம்பம் - 'தல' ஆட்டம்.

---------------------------
அழகு ராஜா - ஏற்கெனவே அலெக்ஸ் பாண்டியனிலும் வாங்கிக்கட்டியும் திருந்தாத கார்த்திக்கும், மாற்றிக்கொள்ள வேண்டிய காலம் வந்திருப்பதை உணராமல் தான் ஆரம்பித்து வைத்த பாணியை பின்னுக்கு வந்த சிலர் upgrade செய்து அடுத்த லெவலுக்குக் கொண்டுபோயிருப்பதை உணராமல் முதல் தடவை இயக்குனராக வாங்கிக் கட்டியிருக்கும் M.ராஜேஷுக்கும் பாடம் இந்த 'அறுவைப்'படம்.

சந்தானம் இருந்தும் ப்ரேக் இல்லாமல் தறிகெட்டோடும் வண்டியாக...
வசனகர்த்தாவாக வெளுத்து வாங்கும் ராஜேஷ், தன் வழமையான யுக்திகளை விழலுக்கு இறைத்த நீராக விட்டிருக்கிறார்.
இளைய பிரபுவாக கார்த்தி, 1980 Flashback ஐடியா மாதிரி சின்ன சின்ன சுவாரஸ்ய விஷயங்கள் இருந்தும் வளவள கதையும், அதை விட கொளாகொளா திரைக்கதையும் கவிழ்த்துவிட்டன படத்தை.
ஆல் இன் ஆல் அலுப்பு ராஜா .

-------------------------
என்ன தான் எதிர்ப்புக்களுக்கு மத்தியில் மாநாட்டை இலங்கையில் நடத்தி, எவ்வளவு தான் கத்துங்கடா, நான் தான் ராஜா என்று நம்ம ராஜா தொடை தட்டி, மார்தட்டினாலும், இந்த இரண்டு, மூன்று நாட்களில் பலரது கவனத்தையும் ஈர்த்து, உலகம் முழுக்க மக்கள் மனதில் இடம் பிடித்துவிட்டவர்கள் சில பிரித்தானியர்கள்.

கலும் மக்ரே, ஜோன் ஸ்நோ, பென்ட் பியர் ஆகிய ஊடகவியலாளர்கள்.
இவர்கள் ஊடகவியலாளர்களின் அர்ப்பணிப்பையும் துணிச்சலையும் எங்களுக்கெல்லாம் பாடமாகக் கற்பித்துப்போனால், இவர்களால் தெரிவுசெய்யப்பட்டவர்...



'அரசன் எவ்வழி அம்மக்களும் அதே வழி' என்பதாக உதாரண புருஷராக துணிச்சலோடு வடக்கு சென்ற பிரித்தானிய பிரதமர் டேவிட் கமெரோன்.
மரியாதையான வாழ்த்துக்கள் & நன்றிகள்.
எங்கள் மூளைகளும் வாயும் கரங்களும் கட்டிப்போட்டிருக்க எங்களால் முடிந்தது மனதார இவர்களை மனங்களின் சிம்மாசனத்தில் ஏற்றிவைப்பது தான்.

இவர்களால் வெளிப்படுத்தப்படுவன என்ன, இனி இவற்றால் என்ன பலன் என்று எதிர்காலத்தை எதிர்பார்த்திருப்பது ஏமாற்றமாக சிலவேளை அமைந்தாலும் கூட, இவர்களின் தன்னலமற்ற முயற்சிகள் வாழ்த்தப்படவேண்டியவை.
அதற்கான இவர்களின்  உலகாளும் மொழி ஆளுமையும் எம்மவரிடம் வாய்க்காத ஒன்று தான்.
என்றோ ஒருநாள் நானோ, என் வழிவருபவரோ இவற்றுள் பத்து வீதமாவது செய்வோம் என்பது என் நம்பிக்கை.
டேவிட் கமெரோன் முரளியுடன்...
உலக சாதனை விளையாட்டு வீரராக மட்டும் அவரோடு விளையாட்டாக உரையாடினால் மட்டும் போதும் மதிப்புக்குரிய பிரதமரே.

-------------------

சச்சினின் ஒய்வு...

இன்று ட்விட்டரில்  ஒரு விஷயம் பகிர்ந்திருந்தேன்.
"மிகப்பிடித்த வீரராக எல்லோருக்கும் இல்லாவிடினும், யாராலும் வெறுக்கப்பட முடியாதவர் சச்சின்"

24 வருடங்களாக கிரிக்கெட்டின் பிரிக்கமுடியாத ஒரு அங்கமாக இருந்தவர் இன்று விடைபெற்ற அந்த இறுதிக் கணங்கள் நிச்சயம் மனத்தைக் கொஞ்சம் நெகிழ வைத்தவை.
நான் எப்போதுமே சச்சின் ரசிகனாக இருந்தவனில்லை.

அவுஸ்திரேலியா, இலங்கை அணிகளுக்கு எதிராக இந்தியா ஆடும்போது சச்சினின் விக்கெட் விரைவாக விழவேண்டும் என்று விரும்புபவனாக இருந்தாலும் என்றும் சச்சினை வெறுத்தவன் கிடையாது.
ஆனாலும் கடந்த உலகக் கிண்ணத்தொடு சச்சின் ஒய்வு பெற்றிருந்தால் அது அவருக்கான மிகப்பெரும் கௌரவமாக இருந்திருக்கும் என்பது இன்றும் எனது எண்ணம்.

சச்சின் பற்றி நீண்டதாக நிறைய எழுதவேண்டும்; நேரம் கிடைக்கட்டும்.

1989 முதல் சச்சின் டெண்டுல்கரை தொடர்ந்து அவதானித்தவன் என்ற வகையில் இன்று அவர் கண்ணீர் மல்க விடைபெற்றதும், அவரது நீண்ட உணர்ச்சிவயப்பட்ட , ஆனால் அலட்டல் இல்லாத இறுதி உரையும் அவர் மேலான மதிப்பை மேலும் உயர்த்திவிட்டன.
தந்தை, தாய், சகோதரர்கள், மனைவி, பிள்ளைகள் முதல் அத்தனை போரையும் வரிசையாக மனம் திறந்து அவர் சொன்ன வார்த்தைகள் இனி வாழ்வை வாழ்வோருக்கான பாடங்கள்.

'பாரத ரத்னா' தனக்கு உரியவரைப் போய்ச் சேர்ந்திருக்கிறது.
வாழ்த்துக்கள் சச்சின்.

நீங்கள் இவ்வளவு நாள் கிரிக்கெட் ரசிகர்களாக எங்களை உச்சபட்ச உயர்தர விருந்து வழங்கி மகிழ்வித்தமைக்கு நன்றிகள்.
உங்கள் சாதனைகள் உங்களை விட மிகப் பொருத்தமானவரால் முறியடிக்கப்படுவதானால் அது என் வாழ்நாள் காலத்தில் நடக்க வாய்ப்பில்லை; எனக்கு அதில் விருப்பமுமில்லை என்பதை இங்கே பதிவு செய்கிறேன்.

சச்சின் டெண்டுல்கரின் முதலாவது சர்வதேசப் போட்டியை இதே போன்றதொரு நவம்பர் 16இல், 24 ஆண்டுகளுக்கு முதல் அப்பாவுடன் யாழ்ப்பாணத்தில் பார்த்ததும் இன்று சச்சினின் இறுதி சர்வதேசக் கிரிக்கெட் நாளைப் பார்த்ததும் ஒரு வரம் தான்.

சச்சின் மட்டுமன்றி எங்கள் தலைமுறையின் கிரிக்கெட் வாழும் வரலாறுகளான முரளிதரன், பிரையன் லாரா, ரிக்கி பொன்டிங், ஷேன் வோர்ன், டிராவிட், கங்குலி ஆகிய அனைவரதும் முதல் மற்றும் இறுதி சர்வதேசப் போட்டிகளைப் பார்க்கும் அதிர்ஷ்டம் எனக்கு ஒரு கிரிக்கெட் ரசிகனாக வாய்த்திருக்கிறது.

அதிலும் முரளியின் முதலாவதும் கடைசியுமான போட்டிகளை மைதானத்திலேயே பார்க்கக் கிடைத்ததும் பெரிய பேறுகள்.
(ஆனால் மைதானத்துக்கு வெளியே முரளி மனதில் சிறுத்துப்போகிறார்)
அப்பாவுக்கும் வாய்த்த என் தொழிலுக்கும் நன்றிகள்.

சச்சின் பற்றி பிறகு 'பெரிதாக' எழுதும் வரை, என் முன்னைய சச்சின் பற்றிய இடுகைகள்.

சச்சின் டெண்டுல்கர் ஓய்வு - சில சந்தேகங்கள் - ஒரு அலசல்




சச்சின் 200 - சாதனை மேல் சாதனை







July 13, 2012

பில்லா II - பில்லா 2



ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு செக்கனையும் தானே செதுக்கிய ஒருவன் எப்படி அடிமட்டத்திலிருந்து கொலைகள், போராட்டம், துரோகம், ஆசை, பேராசை, போதை, பெண்கள் இவை கடந்து உயர் மட்டம் வரை எழுகிறான் என்பதை Stylish Film making உடன் விறுவிறுப்பாக, முன்னைய பில்லாவின் தொடர்ச்சி என்று காட்டுவதற்காக அங்கே இங்கே தொட்டு பிரம்மாண்டமாகத் தந்திருக்கிறார் 'உன்னைப் போல் ஒருவன்' புகழ் சக்ரி டோலேட்டி.

அஜித் - யுவன் இணைந்த மூன்றாவது இப்படியான படைப்பு.. (பில்லா, மங்காத்தா முன்னையவை)
அஜித் பில்லா 2இல் விஸ்வரூபம் எடுத்து நின்றாலும் இன்னும் மூன்று ஹீரோக்கள் படம் முழுவதும் படத்தை மேலும் பிரம்மாண்டம் ஆக்குகிறார்கள்.
ஒருவர் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா
மற்றவர் ஒளிப்பதிவாளர் R.D.ராஜசேகர்
இன்னுமொருவர் வசனகர்த்தா இரா முருகன் 
(ஜாபார் கான் என்று இன்னொருவரின் பெயரும் வந்தது.. அவர் ஹிந்தி வசனங்களை எழுதினாரோ?)

பில்லா 1 க்கும் பில்லா 2 க்கும் இடையில் ஒற்றுமைகள் அதே போல கதை.. 
அஜித்.. அஜித்தின் பெயர் 
சில பாத்திரப் பெயர்களால் தொடுத்துள்ளார்கள். (ரஞ்சித், ஜெகதீஷ்)
அதே மாதிரியான Stylish making , கவர்ச்சி, mafia, கொலைகள் ..

மற்றும்படி அந்த பில்லாவின் தொடர்ச்சி என்றால் இல்லை.

படம் ஆரம்பிப்பதே ஒரு யுத்த சூழல்.. அமைதியாக இருக்கும் குடும்பம் சிதைக்கப்படுகிறது.
தனியனாகின்ற சிறுவன், இளைஞனாகி அகதியாக ராமேஸ்வரம் நுழைகிறான்.
ஆனால் யுத்தம் நடைபெற்ற இடம் இலங்கை என்று எங்கேயும் தெளிவாகக் காட்டப்படாமல் - ஒரேயொரு இடத்தில் ஒரு அட்டை/ பலகையில் SL என்ற எழுத்துக்களுடன் ஒரு இலக்கக் கோவை வருகிறது.
(இராணுவம் கூட வேறு மாதிரியாகவே சித்தரிக்கப்படுகின்றது.. - எச்சரிக்கை??) பவளத்துறை, அகதி என்று சும்மா பம்மாத்தாக மேலோட்டாமாக ஓட்டுகிறார்கள். 

அகதி என்றால் அதுவும் ராமேஸ்வரம் என்றால் அது இலங்கைத் தமிழன் தானே?
பிறகேன் யாரும் இலங்கைத் தமிழே பேசவில்லை?
ஆனால் தப்புத் தப்பா இலங்கைத் தமிழ் பேசிக் கொல்வதை விட இந்த சினிமாத் தமிழ் எவ்வளவோ மேல் தான்...

"அகதிகள் தான்.. ஆனால் அனாதைகள் இல்லை " வசனம் கை தட்டல்களை அள்ளுகிறது. 
வாழ்க ;)

அஜித்துக்கு அளந்து பேசும் பாத்திரம்.. ஆனால் பேசுகின்ற ஒவ்வொரு வசனமுமே பஞ்ச். அழுத்தமாக அர்த்தத்தோடு வந்து விழுகின்றன.

உட்கார்ந்து வேலை வாங்குறவனுக்கும் உசிரைக் கொடுத்து வேலை செய்றவனுக்கும் வித்தியாசம் இருக்கு

எனக்கு நண்பனா இருக்கிறதுக்கு எந்தத் தகுதியும் தேவையில்லை; ஆனால் எதிரியா இருக்கிறதுக்கு தகுதி வேண்டும் (அட்டகாசம் - உனக்கென்ன பாடலில் வைரமுத்துவின் வரிகள்)

மத்தவங்களோட பயம் நம்ம பலம்

நல்லவங்களைக் கண்டுபிடிக்கிறது தான் கஷ்டம் 

ஆசை இல்லை; பசி (இந்த ஒற்றை வசனம் தான் படத்தின் ஒற்றை வரிக்கதை)

சாவு இருக்கும் வரை ஆயுதத்துக்கு மார்க்கெட் இருக்கும்

தீவிரவாதிக்கும் போராளிக்கும் ஒரே வித்தியாசம் தான்! ஜெயிச்சுட்டா போராளி! தோத்துட்டா உலகமே சொல்லும் தீவிரவாதி 

ஆயிரம் எதிரியை விட்டு வைக்கலாம் ஒரு துரோகியை விட்டு வைக்க கூடாது

சொன்ன நேரத்துக்கு முன்னாலேயே போனா வேற வேலை இல்லாதவன்னு நினைச்சிடுவாங்க..
லேட்டா போனா பொறுப்பில்லாதவன்னு சொல்லிடுவாங்க..
அதனால சொன்ன டைமுக்கு போனாத் தான் நம் மேல ஒரு நம்பிக்கை வரும்

இதுவரை காட்டிக் குடுத்தவங்க எல்லாம் கூட இருந்தவங்க தான்.. சரித்திரத்தைப் புரட்டிப் பாரு

இவை எல்லாமே கரகோஷங்களை அள்ளிக் கொள்ளும் இடங்கள்.
வசனகர்த்தா முருகன் இனித் தொடர்ந்து வாய்ப்புக்கள் பெறுவது உறுதி.

மனோஜ் K ஜெயனுக்கு முக்கியமான வில்லன் பாத்திரங்களில் ஒன்று.. 
(அப்பாடா எத்தனை வில்லன்கள்.. அஜித் உண்மையில் பெரிய ஆள் தான்.. இத்தனை பேரை சமாளிக்க வேண்டி இருக்கிறதே)
பில்லா 1இல் நடித்திருந்த யோக் ஜபீ (ரஞ்சித்) அஜித்துடனே படம் முழுவதும் வருகிறார். பரவாயில்லை.. தேவையான காட்சிகளில் நடிக்கிறார்.

இளவரசு கொஞ்ச நேரம் கலக்குகிறார்.
ஸ்ரீமன் பாவம்.. கொஞ்ச நேரம் தலைகாட்டி பரிதாமாக செத்துப்போகிறார்.



முக்கியமான பாத்திரங்களில் எல்லாம் தமிழுக்குப் புதியவர்கள்.
கதாநாயகி பார்வதி ஓமனக்குட்டன் பரிதாப ஓமனக்குட்டனாக இருக்கிறார். உலக அழகியாமே.. அப்படியா? 
அஜித்தை விட உயரமாக பொருத்தமில்லாமல் இருக்கிறார். வேறு யாரும் கிடைக்கலையா?

வில்லன்கள் இருவரும் செம ஸ்மார்ட். கம்பீரத்துடன் கலக்குகிறார்கள்.
ரஜினிக்கு பிறகு வில்லன்கள் விளையாட அதிக இடம் கொடுத்து அழகு பார்க்கும் ஒரே ஒருவர் அஜித்தாகத் தான் இருக்க முடியும்.
இந்த வில்லன்களுக்கும் தனியான ரசிகர்கள் உருவாகலாம். 

அதிலும் அபாசியாக வரும் சுதன்சு பாண்டே Superb. 
கொஞ்சமாக நரைத்த தலைமுடி + தாடியுடன் மனிதர் அமைதியாக அசத்துகிறார். அந்த நேரிய பார்வையும் அசைவுகளும் செம வில்லத்தனம்.

டிமிட்ரி என்ற பொரோவிய (என்ன பெயரோ? ஏன் டோலேட்டி வெளிநாடுகளின் பெயர்களை உண்மைப் பெயர்களாகப் பயன்படுத்த மாட்டாரோ?)
நாட்டு வில்லனாக வரும் வித்யுத் ஜம்வாலும் ஒரு ஹீரோ போலவே அழகும் உயரமும் கம்பீரமும்.
ஒரு சண்டைக் காட்சியில் கலக்குகிறார்.

கவர்ச்சிக்கென்று வெளிநாடுகளில் இருந்தும் ஹிந்தியிலிருந்தும் இறக்கப்பட்டிருக்கும் பலரில் புருனா அப்துல்லா இன்னொரு நாயகி..
கவர்ச்சியில் தாராள மழை.
பார்வதியை விட இவர் கொஞ்சமாவது நடித்துள்ளார் என்று நிச்சயமாக சொல்லலாம். 

எடிட்டிங் பொறுப்பை எடுத்திருக்கும் சுரேஷ் அர்ஸ் முதல் பாதியில் சும்மா பின்னியிருக்கிறார். அதே வேகத்தை இரண்டாம் பாதியில் அவரைக் காட்ட வைத்திருப்பது டோலேட்டியின் கையில் இருந்திருக்க வேண்டும். ஆனால் இரண்டாம் பாதியில் நாம் எதிர்பார்த்ததை இயக்குனர் நிறைவேற்றவில்லை என்பது அஜித்துக்கும் கொஞ்சம் சறுக்கலே...

இரண்டாம் பாதி நாம் எண்ணுவது அச்சுப் பிசகாமல் அமைந்துபோகிறது இயக்குனரின் அனுபவமின்மையே.. (அவருக்கு இயக்கத்தில் இரண்டாம் படம்.. ஆனால் நாங்க எத்தனை படம் பார்த்திருப்போம் ;))
சுரேஷ் அர்சின் எடிட்டிங்கும் டோலேட்டி & யுவனின் திறமையும் இடைவேளையின் பின்னர் பளிச்சிடும் இடமாக உனக்குள்ளே மிருகம் பாடலைக் குறிப்பிடலாம்.

அஜித்தின் ஹெலிகொப்டர் ரிஸ்க் சாகசம் அற்புதம். மனிதர் ஸ்டைலாக இருக்கிறார்; நடக்கிறார்; நடிக்கிறார்.
ஆனால் திரைக்கதை விடயங்களில் கொஞ்சம் அஜித்தும் தலையிட வேண்டும்.

சாரம் கட்டி செருப்புடன் நடந்த அகதி ஒருவன் படிப்படியாக கோட்டு சூட்டு போட்டு கோடீஸ்வர Don ஆக உயர்வதை நடை, உடை, பாவனைகளில் stylish ஆகக் காட்டுவதில் இயக்குனர் காட்டிய நேர்த்தியை கண்டபடி கொலை செய்யும் காட்சிகளிலும், எப்படி நடக்கிறது என்றே தெரியாமல் இலகுவாக முடிந்துவிடும் மாபெரும் ஆயுதக் கடத்தல்களை லொஜிக் உடன் எடுப்பதிலும் காட்டி இருந்தால் முதல் பாதி போலவே இரண்டாம் பாதியும் ரசிக்கக் கூடியதாகவும் இருந்திருக்கும்.

அதீத கவர்ச்சியும், எடுத்ததெற்கெல்லாம் கொலையும், ஏனென்று கேட்க யாருமே இல்லாத அளவுக்கு சட சடவென செத்து விழும் உயிர்களும் என்று   நம்ப முடியாத காட்சிகள் ஏராளம். தொடர்ச்சியாக மாறி மாறி இவையே எனும்போது கொஞ்சம் எரிச்சலும் வருகிறது.

ஆனால் அஜித்தின் நடிப்பையும் தோற்றத்தையும் ஒவ்வொரு பிரேமிலும் ரசிக்காமல் இருக்க முடியாது. அதற்காகத் தான் பில்லா பலருக்கும் அதிகமாகப் பிடித்திருக்கும்.

அகதி முகாம் போலீஸ் அகதிகளையும் அஜீத்தையும் துன்புறுத்தும் காட்சிகளும் நாயகன் படத்தையும் அஜீத் + அந்த டீக்கடை காட்சி, கமல் + நாயகன்  காட்சிகளை ஞாபகப்படுத்துகின்றன. 
அத்துடன் படத்தின் சில காட்சிகள் அல் பசினோ (Al Pacino) நடித்து 80களில் வெளிவந்த Scarface படத்தை ஞாபகப்படுத்துகின்றன.

அஜித் என்ற ஒரு Match winnerஐ நம்பிக் களம் இறங்கிய இயக்குனர் டேவிட் பில்லா என்ற ஒரே பாத்திரத்தை மிக நேர்த்தியாக வடித்துவிட்டு அதுவே போதும் என்று ஒதுங்கிவிட்டது தான் எமக்கு முழுத் திருப்தியைத் தரவில்லைப் போலும்.
அஜீத் ரசிகர்களுக்கு தலயைத் தல ஆகப் பார்ப்பதில் புளகாங்கிதப்படலாம்...
பில்லா 2 ஆரம்ப வசூலை ஈட்டி சுமார் வெற்றியைப் பெற்றுக் கொள்ளலாம்.


ஆனால் மீண்டும் ஜனா, ஆழ்வார், ஆஞ்சநேயா காலம் மாதிரி இயக்குனர்களை நம்பி தல கவிழ்ந்துவிடுவாரோ என்பது தான் கொஞ்சம் கவலை தருகிறது.


பில்லா 2 இல் ரசித்து வியக்கக் கூடிய விடயங்கள்....
அஜீத்... அற்புதமாக நடக்கிறார்; அழகாக இருக்கிறார்; அளவோடு நடக்கிறார்; ஆழமாக + அழுத்தமாகப் பேசுகிறார்.

யுவனின் பின்னணி இசை.. தீம் இசை ஜொலிக்கிறது, சோகக் காட்சியிலும் தீம் இசையையே கொஞ்சம் வேறுபடுத்தி உருக்குகிறார்.

ஒலிப்பதிவு - R.D. ராஜசேகர் கலக்குகிறார். ஒவ்வொரு இடங்களிலும் அற்புதம் & துல்லியம்.

சண்டைக்காட்சிகள் - விறுவிறு சுறுசுறு.. தீயாக இருக்கிறது.
அதிலும் அந்த போத்தல் சண்டை & ஹெலிகொப்டர் சண்டைகள் class
'பவுடர்' விற்கப் போய் பரபரப்பாக வில்லன்களை வீழ்த்து வெளியேறும் அந்தக் காட்சியும் கலக்கல்.

ஜேம்ஸ் பொன்ட் திரைப்படங்களில் வருகின்ற ஜோர்ஜிய நாட்டின் பனி சூழ்ந்த, அரண்மனை வரும் காட்சிகள்

படம் முழுக்க எடுக்கப்பட்ட வர்ணம் - color tone

முதல் பாதி

முதலமைச்சர் - பில்லா உரையாடல் 

கூரிய நறுக் வசனங்கள் 


குறைகள்... இவற்றைக் குறைத்திருந்தால் முன்னைய விஷ்ணுவர்தனின் பில்லாவை இது நிகர்த்திருக்கும்

நம்பக்கூடிய மாதிரி எடுத்திருக்கப்படக் கூடிய இரண்டாம் பாதி

கதாநாயகி

கொத்துக் கொத்தாக செத்து விழுவோர்

அளவுக்கதிகமாக வரும் ஹிந்தி, ஆங்கில வசனங்கள்..
தம்மிழ்படமா என்று சந்தேகமே வந்திடும் சில நேரம் 
(கொஞ்சம் தமிழ் உப தலைப்பு போட்டிருக்கலாமே.. ரஷ்ய வசனங்களுக்கு மட்டுமே வருகின்றன)

கொஞ்சம் மந்தமாகப்போகும் இரண்டாம் பாதி

இலகுவாக தன் எதிரிகளை வீழ்த்திவிடும் பில்லா முடிவு சுபம் என்பதைக் காட்டிவிடுகிறார்.

சப்பென்று முடியும் உச்சக்கட்டம்..

படத்தில் வராமல் கடைசியில் எழுத்தொட்டத்துடன் வரும் யுவன் பாடிய பாடல்


பில்லா 1 & அண்மைய மங்காத்தாவில் அஜித்தின் ஆற்றல் + உன்னைப் போல் ஒருவனில் சக்ரி டோலேட்டியின் திறமை பார்த்து பில்லா 2 பற்றி அதிகமாகவே எதிர்பார்த்துவிட்டேன்.
அலுப்பிலாமல் ரசித்தாலும், ஒரு action & stylish பிரியனாக ரசித்தாலும் முழுமையான திருப்தியில்லை.


பில்லா 2 - செதுக்கியது போதாது - அஜித் மட்டும் ஆகா 

September 06, 2011

மங்காத்தா



அப்பாடா ஒரு மாதிரியாக மங்காத்தாவை எந்தவொரு இடையூறும் இல்லாமல் ஒரு காட்சியையும் தவறவிடாமல் பார்த்துமுடித்தேன்...

முதல் நாள் காட்சியில் படத்தின் ஆரம்பத்திலேயே எனக்கு க்ளைமாக்ஸ் அமைந்துவிட்டதால்,(அல்லது நான் க்ளைமாக்ஸ் காட்டிவிட்டதால்) பார்க்க முடியாமல் போன மங்காத்தாவை நேற்றும் கொஞ்சம் என்றால் தவறவிட்டிருப்பேன்..

முதல் வாரங்கள் என்பதால் திரையரங்குகளில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.
அதை சமாளிக்கவும், அதில் சம்பாதிக்கவும் எப்படியெல்லாம் திரையரங்குகள் ஐடியா செய்கிறார்கள்..

தெகிவளை கொன்கோர்டில் இன்று முதல் தான் முற்கூட்டிய பதிவாம்.. (Advance Bookings)
இதனால் மணிக்கணக்கில் வரிசையில் நிற்கமுடியாது என்பதால் சினிசிட்டியில் முற்பதிவுக்குப் போனால் அங்கே 6.30 காட்சியை 5.30க்கு காட்டுவோம் என்றார்கள்..

அதற்கிடையில் வந்த ஒரு விளம்பர ஒலிப்பதிவை முடித்து மங்காத்தாவில் அஜித் கார் ஒட்டிய வேகத்துக்கு நிகராக (என்ன இருந்தாலும் தலையை முந்த முடியுமா?) ஓடி முடித்து சினிசிட்டிக்கு வியர்க்க, விறுவிறுக்க ஓடி அமர்ந்தால், கூட்டம் வந்து சேர்ந்த பிறகு தான் படம் ஆரம்பித்தார்கள்.. நேரம் 5.50.

அஜித்தின் ஐம்பதாவது படம்.. முக்கிய மைல் கல்.
வெங்கட் பிரபுக்கு ஹிட் அடித்துக் காட்டவேண்டிய போராட்டம்..

இரண்டிலுமே இருவரும் ஜெயித்துள்ளார்கள் என்று இப்போதே மங்காத்தாவுக்கான வரவேற்பு சொல்கிறதே.. நான் வேறு தனியாக சொல்லவேண்டுமா?

மங்காத்தா ஹிந்தியில் வெளிவந்த ஜென்னத் படத்தின் நேரடி கொப்பி என்று முதலில் சொன்னார்கள்.. இயக்குனர் வெங்கட் பிரபு அதை முற்றாக மறுத்திருந்தார். நான் பார்க்கவில்லை. பார்த்தவர்கள் சொல்லுங்கள்..
பின்னர் இப்போது 2001ஆம் ஆண்டு வந்த ஆங்கிலப்படமான Ocean's 11 இன் கொப்பி/ தழுவல் என்று பலரும் சொல்லக் கேட்டேன்..

ஆனால் சூதாட்டப் பணக் கொள்ளை, மற்றும் திட்டமிட்டுக் கொள்ளையடித்தல் தவிரக் கதையில் வேறு ஏதும் ஒற்றுமை இருக்கக் காணவில்லை. இன்னொரு முக்கியவிடயம் அதில் வரும் George Clooneyயின் நரைத்த முடியுடனான Hair style போலவே அஜித் மங்காத்தாவில் நடித்திருப்பதும் அது தான் இது என்று எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்றிருக்கும் பலருக்கும் அவலாகக் கிடைத்திருக்கும்..

முடிந்தால் 2001இல் வெளிவந்த Ocean's 11 மற்றும் அதைத் தொடர்ந்துவந்த Ocean's 12, Ocean's 13 ஆகியவற்றையும் பார்த்து ஒரு முடிவுக்கு வரட்டும்..

ஆனாலும் The Italian Job படத்தின் சில காட்சிகளை கொஞ்சம் உல்டா பண்ணி இருக்கிறார்கள்.. திருட்டுக் காட்சிகளில்.


கிரிக்கெட் சூதாட்டத்தை மையப்படுத்திய பரபர கதை.. IPL முடிந்தவுடன் படம் வெளியாகி இருந்தால் மேலும் பரபரப்பாக இருந்திருக்கும்..

மும்பையை மையமாகக் கொண்ட பெரும் கிரிக்கெட் சூதாட்டக் கும்பலைக் கண்டுபிடிக்க போலீசில் தனிப்படை அமைக்கப்படுகிறது.
IPL இறுதிப் போட்டிக்காக வரும் பெரும் சூதாட்டப் பணத்தைக் கொள்ளையடிக்க நால்வர் திட்டமிட, அதை அறிந்துகொண்டு ஐந்தாவதாக இணையும் அஜித்தும், சூதாட்டக் கும்பலும், போலீசும் விளையாடும் மங்காத்தா தான் கதை..
வேகமும், திருப்பங்களும், விறுவிறுப்பும், தான் வெற்றிக்கான அடிப்படை என்பதை இயக்குனர் கோவாவின் பின்னர் கற்றுள்ளார் என்று தெரிகிறது.


பெரிய நட்சத்திரப்பட்டாளம் இருக்கே.. அஜித், அர்ஜுன் இருவரும் இருப்பதால் வேறு யாரும் முக்கியத்துவம் பெற மாட்டார்கள் என நினைத்தால் தப்பு.. அங்கே தான் நிற்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு..

அஜித் தன் அட்டகாசமான நடிப்பால் விஸ்வரூபம் எடுத்து நின்றாலும், அர்ஜுன் கடைசிக் காட்சிகளில் அள்ளி எடுத்தாலும்,
ஜெயப்பிரகாஷ், வைபவ், அரவிந்த் ஆகாஷ், பிரேம்ஜி, மஹத் (அவரது உண்மைப்பெயரும் மஹத் தானாமே), அஷ்வின் என்று அனைவருமே படம் முழுக்க வரும் runing roles.

ஆனால் அட்டகாசமாக அஜித் இவர்கள் அத்தனை பேரிலும் அதிகமாக தனித்துத் தெரிகிறார். கூட்டமாக இருக்கும்போதும், தனியாக நடிக்கும் போதும், ஏன் நடக்கும்போதும் கூட அஜித் one man show.

அறிமுகக் காட்சி சண்டையின் போது போலீஸ் உடையில் கொஞ்சம் வயதுபோன தோற்றம் தெரிந்தாலும், நரைமுடி, குளிர் கண்ணாடியுடன் வில்லத்தனமாக கலக்குகிறார் அஜித்.
அதிலும் முக்கியமாக இடைவேளைக்கு முன்னதாக தனியா சதுரங்கம் ஆடும்போதும், கொள்ளையடித்த பணம் காணாமல் தேடும்போது வெறிவந்தவராக அதிரும்போதும், அர்ஜுனுடனான ஆக்ரோஷமான சண்டைகளின் போதும், அதற்கு முன்னர் தொலைபேசும் காட்சியிலும் அஜித் 'மங்காத்தா' பாணியிலேயே சொல்வதாக இருந்தால் Well, I'm Impressed.

வாலி, வரலாறு, பில்லா போன்றே இந்தப் படத்தின் எதிர்மறை, விளத்தனப் பாத்திரம் அஜித் தவிர வேறு யாராலும் இவ்வளவு அற்புதமாக, அசத்தலாக செய்திருக்க முடியாது.
இப்படியொரு வில்லத் தனம், கபடத்தனம், வெறி ஆகியவற்றை வெளிப்படுத்தத் தக்கவாறு காட்சிகளைப் பின்னியிருக்கும் இயக்குனருக்கும் பாராட்டுக்கள்...
முகபாவங்கள், வசன உச்சரிப்புக்கள், உடல் அசைவுகள் வாவ் கலக்கல்.. இப்படியொரு அஜித் இதற்கு முதல் பார்த்ததில்லை.

I m a bad man என்று அஜித் சொல்லும் இடமும், Give me more... என்று கர்ஜிக்கும் இடமும் கலக்கல்.. ஆனால் சரளமாக சில இடங்களில் அஜித் உதிர்க்கும் ஆங்கில தூசணங்கள் கௌதம் மேனனா பட இயக்குனர் என்ற சந்தேகத்தையும் தருகிறது.
வில்லன், கெட்டவன் என்று காட்டத் தான் வேண்டும்.. அதற்காக இத்தனை சிகரெட்டும், மதுப் போத்தல்களுமா? கொஞ்சம் ஓவர் தான்..

மங்காத்தா பற்றிக் கொஞ்சம் விரிவாகப் பேச அஜித் பற்றி அதிகமாகவே புகழ வேண்டி இருக்கிறது.
காரணம் அஜித் இல்லாமல் மங்காத்தா.. கேள்விக்குறியாகவே இருந்திருக்கும்.

நரைத்த முடியுடனும் முழுக்க முழுக்க வில்லத்தனம் உள்ள ஒரு பாத்திரத்தில் எந்தவொரு உச்சபட்ச ஹீரோவும் தங்கள் ஐம்பதாவது திரைப்படத்தில் நடிக்க முன்வந்திருக்க மாட்டார்கள் என்பது உறுதி. அதிலும் அர்ஜுன் போன்ற இன்னொரு பிரபல கதாநாயகரும் இருக்கும் படத்தில் இப்படியான பாத்திரத்தை ஏற்க தனி தில் வேண்டும்.
இன்னொன்று அழகான தோற்றமுள்ள இளம் நடிகர்களும் படத்தில் இருக்கையில் வயதான தோற்றத்துடன் நடிக்க வேறு யாராவது தயாரா? (கமல், ரஜினி தவிர)
நடக்கிறார் என்று அஜித்தை நக்கல் செய்பவர்களுக்கேன்றே வெங்கட் பிரபு நடந்தே சென்று எதிரிகளைத் துவம்சம் செய்வதாக சில சண்டைக் காட்சிகளை அமைத்திருப்பாரோ? யுவனின் பின்னணி இசையோடு கலக்கல் + கம்பீர நடை வருகிறார் அஜித்.

கொஞ்சம் ஆடியும் அசத்தியுள்ளார். கால்களை விட கைகளை அதிகமாகப் பயன்படுத்தி இருந்தாலும் நடன இயக்குனர்களின் அஜித்தின் பலம், பலவீனம் அறிந்து ஆட்டுவித்துள்ளர்கள்.
மச்சி ஓப்பின் தி பாட்டில் பாடலின் இறுதியில் அஜித்தின் குத்து கலக்கல்.

அஜித்திற்கு அடுத்தபடியாக அர்ஜுன்.. கொஞ்சம் அடக்கி வாசித்த்காலும், அமைதியாகவே அதிரடிக்கிறார். மேக்கப் இல்லாத முகத் தோற்றமும், ஆழமான ஊடுருவும் பார்வையுமாக மிளிர்கிறார்.
அஜித்தின் பாத்திரத்துக்கு முன்னால் ஒடுங்கிப்போகாமல் அவரது பாத்திரமும் இருக்கிறது.

கடைசிக் காட்சி கலக்கல்.

அடுத்துக் குறிப்பிடத்தக்கவர் ஜெயப்பிரகாஷ்.
நான் முன்னைய படங்களில் இவர் நடிப்பை சிலாகித்தது போல, இந்தப் படத்திலும் வெளுத்துவாங்கியுள்ளார்.
ரௌத்திரம் படத்தில் இவரது நடிப்பைப் பற்றி நான் சொல்லியிருப்பதையும் கொஞ்சம் வாசித்துப் பாருங்கள்.

வைபவ், அரவிந்த் ஆகாஷ் - வெங்கட் பிரபுவின் வழமையான நடிகர்கள்.. துடிப்பும் முன்னேற்றமும் தெரிகிறது.

பிரேம்ஜி - வரும்போதே மொக்கையான பில்ட் அப். சிரிக்க வைக்க முயல்கிறார். அஜித்துடனான கார் பயணக் காட்சி சிரிப்பு..
அஜித் இவரது முன்னைய 'பஞ்சர்' டயலாக்குகளை வைத்தே மொக்கை போடுவது கல கல.. ஆனால் சீரியசான காட்சிகளிலும் பிரேம்ஜி Blade போடுவது தான் கொடுமை.
இயக்குனர் கவனித்திருக்கலாம்.
தம்பிக்கு இந்தப் படத்திலும் கொஞ்சம் கூடுதலாகவே இடம் கொடுத்துள்ளார் அண்ணன்.. பாடல்கள் உட்பட.

ஆண்களை மையப்படுத்திய இடத்தில் நான்கு நாயகிகள் தேவையா?
தேவையான இடங்களில் மட்டும் பாவித்து படத்தின் சுவைகெடாமல் பார்த்துக்கொண்ட வெங்கட் பிரபு வாழ்க.

லக்ஷ்மி ராய் தான் உண்மையான ஹீரோயின்.

IPL போட்டிகள், கிரிக்கெட் சூதாட்டம், சென்னை சுப்பர் கிங்க்ஸ், பிரேம்ஜி அணியும் தோனியின் ஜெர்சி .. இவற்றோடு லக்ஷ்மி ராய்?
ஏதாவது லிங்க்ஸ் உண்டோ இயக்குனர் சார்?

தேவையானதைக் காட்டி, கலக்கி இருக்கிறார் ல.ரா.

த்ரிஷா அஜித்தின் ஜோடி.. சொந்தக் குரல்.. சிம்பிள் அலங்காரம்.. கொஞ்சம் சிரித்து, கொஞ்சம் கலங்கி, கொஞ்சம் ஆடிக் கலக்கி இடையே காணாமல் போய்விடுகிறார்.

வாடா பின் லேடா பாடல் ரசனை.. உள்ளக அரங்கிலேயே பின்னணிகள் மாறுவதும், த்ரிஷா, அஜித்தின் ஆடைகள் மாறுவதும் அழகு.
அஜித் கொஞ்சம் ஆடிக்கூட இருக்கிறார். ;)

அங்காடித் தெரு அஞ்சலிக்கு என்னாயிற்று? உப்பிய கன்னங்களும், வீங்கிய உடலுமாக.. அதிலும் இப்படியொரு சப்பை பாத்திரம்..
ஆண்ட்ரியா பேசாமல் பாடிக்கொண்டே இருந்திருக்கலாம்..
அஞ்சலியும் இவருமாகப் பங்குபோட்ட பாடலில் கொஞ்சம் அழகாக இருக்கிறார்.

படத்தின் விறுவிறுப்பிலும் பிரம்மாண்டத்திலும் பெரும் பங்கை எடுத்துள்ள இன்னும் இருவர் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா & ஒளிப்பதிவாளர் ஷக்தி சரவணன்.
இருவரும் வெங்கட் பிரபுவின் ஆஸ்தான ஆட்கள் தானே? இயக்குனரைப் புரிந்து படத்தைக் கொண்டு சென்றுள்ளார்கள்.
அக்ஷன் காட்சிகள், சேஸிங் காட்சிகளில் இதைவிட சிறப்பாக செய்திருக்க முடியாது எனும் அளவிற்கு கலக்கல்..

யுவன் பாடல்கள் தான் மங்காத்தாவின் ஆரம்பப் பரபரப்புக்குக் காரணம். அதே ஐ படம் முழுக்க பின்னணி இசையாலும் கொண்டு போயிருக்கிறார்.
முக்கியமாக ஒரு சண்டைக் காட்சியில் அஜீத் வெறி பிடித்தவர் போல அடித்து நொறுக்க அவ்வளவு நேரம் போய்க்கொண்டிருந்த அதிரடி இசை நின்று லத்தீன் பாணியிலான இசை ஒன்று வரும்.. கலக்கல்.

பாடல் காட்சிகளை ரசித்தாலும் கூட, கொஞ்சம் வேகத்தை இந்தப் பாடல்கள் படத்தில் மட்டுப்படுத்தியதாக உணர்ந்தேன்.. மற்றவர்களுக்கு எப்படியோ?

அதே போல சக்தி சரவணன் பல காட்சிகளில் கையாண்டிருக்கும் கமெராக் கோணங்கள் படத்தை மேலும் பிரம்மாண்டப் படுத்துகின்றன. உறுத்தாத கிராபிக்ஸ் காட்சிகளுடன் ஒளிப்பதிவையும் நுணுக்கமாக எடிட் செய்துள்ள இருவரும் தம் பணியை சிறப்பாக செய்துள்ளார்கள்.

மங்காத்தாவில் முக்கியமாகப் பாராட்டப்படவேண்டியவர்கள் வாகன ஓட்டுனர்கள்.
அப்படியொரு மிரட்டல்..
அஜித் ஒரு காட்சியில் மோட்டார் பைக் ஓட்டுகிறார். (அவர் தானே?> டூப் இல்லையே?) பிரமாதம்.

இப்படியான படங்களில் வேகம் தான் லொஜிக் மீறல்களை மறைக்கும். அதை சிறப்பாக நடத்தி முடித்துள்ளார் வெங்கட் பிரபு.
எந்தவொரு விஷயத்தையும் அதிகமாக எம்மை யோசிக்க விடாமல் 'அட' என்று ஆச்சரியப்படுத்தி ரசிக்க வைப்பதோடு, திருப்பங்களை நம்பும்படியாகத் தந்து நிமிர்ந்து உட்கார வைக்கிறார்.
அதிலும் கடைசி முடிவு இப்படி இருக்குமோ அப்படி இருக்குமோ என்று யோசிக்க வைத்து தருகிறார் பாருங்கள் ஒரு திருப்பம்.. கை தட்டல்கள் காது பிளக்கின்றன..

(கடைசிக் காட்சியில் அஜித்தைப் பார்த்து என் புகைப்படம் தேடுவோரே - நான் இந்த ஸ்டைலுக்கு மாறி இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகிறது என்பதைக் குறித்துக்கொள்ளுங்கள்)


வெங்கட் பிரபுவின் திரைப்படங்கள் இளைய தலைமுறைக்கு மிகப் பிடிக்க காரணமான அத்தனை அம்சங்களும் மங்காத்தாவில் நிறைந்தே இருக்கின்றன.

ரசித்த மேலும் சில..
அஜித்தின் சதுரங்கக் காட்சியும் கற்பனையிலே போடும் வியூகமும்.. King maker என்பது மங்காத்தவைப் பொறுத்தவரை அஜித் அல்ல.. அஜித் King, வெங்கட் பிரபு தான் King Maker
வசந்த் வரும் சாராயக் கடைக் காட்சியில் அஜித் அடிக்கும் லூட்டி..
"நான் என்ன சந்தானமா?"
"என்னய்யா அக்ஷன் கிங்?" என்ற அஜித்தின் மிதப்பு..
"மப்பானாலேயே இசைஞானியின் பாட்டு தான்யா வருது" (இசைஞானி ரசிகர்களுக்கு சந்தோசமா /காண்டா?)
த்ரிஷா - அஜித் லவ்(?) காட்சிகள்
சத்தியமா இனிக் குடிக்க மாட்டேம்பா

மங்காத்தா - மிகவும் ரசித்தேன்.. உற்சாகமாக உணர்ந்தேன்..

மங்காத்தா - It's really his game :) Well I am impressed :)



August 31, 2011

மண்ணாகிப் போன மங்காத்தா


அஜித்தின் ஐம்பதாவது படம், அதிலும் பெரிய நட்சத்திரப் பட்டாளம்.. வெங்கட் பிரபுவின் இயக்கம்.. ஏற்கெனவே ஹிட் ஆகிய பாடல்கள் என்று மங்காத்தாவுக்காகக் காத்திருந்ததன் பலனை அனுபவிக்க ஊடக அனுசரணை வழங்கியதால் கிடைத்த ஓசி டிக்கேட்டுக்களுடன் நிம்மதியாக இரவுக் காட்சிக்குப் போயிருந்தோம்...

ஆனால் சவோய் திரையரங்கில் முதல் காட்சி என்றது கொஞ்சம் சங்கடத்தை ஏற்படுத்தியிருந்தது. காரணம் வழமையாகவே ஆங்கில, ஹிந்தி, சிங்களத் திரைப்படங்களை மட்டுமே திரையிடும் அத்திரையரங்கில் ஏதாவது வெகு சில பெரிய தமிழ்த் திரைப்படங்களை மட்டுமே திரையிடுவதுண்டு.

இல்லாவிட்டால் EAP நிறுவனம் வாங்கும் தமிழ்த் திரைப்படங்களின் முதல் காட்சியோடு சரி.
அதற்கும் ஆப்பு வைப்பதாக வேட்டைக்காரனின் முதல் காட்சி அமைந்தது பற்றி உங்களில் பலருக்கும் தெரிந்திருக்கும். ஆர்வ மிகுதியால் ரசிகர்கள் ஆவேசப்பட்டு திரையரங்கின் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியதால் சவோய் திரையரங்குக்குப் பல லட்ச ரூபாய்கள் நஷ்டம் ஏற்பட்டதனால், இனி மேலும் தமிழ்த் திரைப்படங்களை த்திரையிடுவதே இல்லை என  EAP நிறுவனம் அறிவித்திருந்தது.

ஆனாலும் இந்த மங்காத்தா அறிவிப்பு கொஞ்சம் ஆச்சரியம் தான். ஒரு வேலை அஜித் ரசிகர்கள் ரொம்ப நல்லவர்கள் என்று நினைத்தார்களோ? 
ஆனால் திடீரெனப் பெய்த மழையும் சேர்ந்துகொள்ள, 10.30 க்கு ஆரம்பிகவேண்டிய காட்சி திரையரகுக்கு முன்னால் திரண்டிருந்த ஏராளமான ரசிகர்களின் முண்டியடித்தலுடன்  உள்ளே நுழைவதே பெரும்பாடாகியது.
கடைசியில் நண்பர்களின் கடும் முயற்சியினால் உள்ளே நுழைந்து ஆசனத்தில் இடம் பிடித்து 'மங்காத்தா' ஆரம்பிக்கும்போது நேரம் இரவு 11.45. 

ஓரளவு வசதியான ஆசனம் எனக்கும், என்னுடன் வந்தோருக்கும் கிடைத்தாலும், என் அருகே இருந்த இரு ஆசனங்களை வெளியே எங்களை உள்ளே எடுக்க உதவி மற்றவர்களை உள்ளே எடுத்துக்கொண்டிருந்த நண்பர்களுக்காகப் பிடித்துவைத்திருந்தேன்.
அந்த ஆசனங்களை வம்பினால் எடுக்க முயன்று, வாய்த்தர்க்கம் புரிந்து வலுச் சண்டைக்கு வந்த ஒருவரால் எழுத்தோட்டம், அஜித்தின் அதிரடி அறிமுகம் எல்லாம் பார்க்க முடியாமலே போச்சு...

ஆனால் ஒரே விஷயத்தை அந்தக் களேபரத்திலும் கவனித்தேன்.. அஜித் திரையில் வர கீழே இருந்த ஒருவர் ஓடிச் சென்று சீட்டுக்கட்டினால் திரைக்கு அபிஷேகம் செய்த 'கன் கொள்ளாக்' காட்சி... (அட பாவிகளா.. இங்கேயுமா?)

கொஞ்சம் அமைதியாக இன்னும் சில நிமிடங்கள் போக, கொஞ்சம் திரைப்படத்தோடு ஒன்றிக்க, மீண்டும் அதே வம்பு.. இம்முறை கொஞ்சம் கோபமாகக் கையினால் அடக்க வேண்டியேற்பட்டது எனக்கு.. 
பொது இடம், பதவி என்பதெல்லாம் கடந்து எழுந்த அந்தக் கோபம் தவிர்க்க முடியாதது.
நண்பர்களும் பொங்கி எழுந்துவிட்டார்கள்.
சில நிமிடப் பரபரப்புக்குப் பிறகு அந்த வம்பு நபர் வெளியே போய்விட அமைதியாகிப் போனாலும் எழுத்தோட்டம் தவற விட்டது, எழுந்த கோபம் குறையாதது படத்தை ரசிக்கவிடவில்லை.
எனினும் கதையின் வேகம் ரசிக்கவைத்துவிட இடைவேளையில் 'Strictly No Rules' அஜித் சொல்லிவிட , இனித் தான் "மங்காத்தாடா" என்று நானும் நினைத்துக்கொண்டேன்.

இன்று விடுமுறை முதலிலேயே எடுக்கத் தீர்மானித்திருந்ததனால் வீடு போனவுடன் விமர்சனப் பதிவொன்று போட்டிட வேண்டும் என்று திருப்தியோடு 'தலை'யை ரசிக்க ஆரம்பித்தால், எனக்குப் பின்னால் இருந்து படம் பார்த்துக்கொண்டிருந்த நம் நிறுவனத்தலைவர் 
"அடிபட்டு வெளியே நாம் தூக்கியெறிந்த பாம்பு அவ்வளவு நல்லதில்லை" என்று எச்சரிக்கை செய்ததால், சூழ்நிலை கருதியும், குடும்பத்தோடு வந்ததாலும் கொஞ்சநேரத்தில் புறப்படலாம் என்று முடிவெடுத்தேன்..
(அதற்குள் வெளியே காவல்துறை வேறு வந்து என்ன நடந்தது என்று என்னை அழைத்துக் கேட்டுப் போனதாலும் சில நிமிடங்கள் போயிருந்ததால் மீண்டும் ஒரு தடவை ஆரம்பமுதல் பார்க்கவேண்டும் என்று தீர்மானித்திருந்தேன்)

கடத்திய பணம் என்னவாச்சு என்று விநாயக், சகாக்களோடு தேடிக்கொண்டிருக்க, வாகனத்தை தேடி நாங்கள் வெளியே வந்தோம்..

படம் பாதியில் போச்சே என்ற கடுப்பு ஒரு பக்கம், தனியாக வந்திருந்தாள் துணிவாக நின்றிருக்கலாமே என்ற வெறுப்பு ஒரு பக்கமாக "மங்காத்தா" மண்ணாகிப் போச்சு எனக்கு.

பார்த்தவுடன் இப்படியான படங்களுக்கு சூடான விமர்சனம் வந்துவிடுமே, மங்காத்தாவுக்கு மட்டும் என்னாச்சு என்று அக்கறையாகக் கேட்டு மின்னஞ்சல், குறுஞ்செய்தி எனுப்பிய நண்பர்களுக்காக ஒரு சுய விளக்கம் இது..

(ரௌத்திரம் பார்க்கப் போனால் ஒரு வித்தியாச அனுபவம்.. மங்காத்தா முதல் நாளிலேயே ரௌத்திரம் காட்டவேண்டிய நிலை.. என்னடா லோஷா நடக்குது..
நல்லவனா இருக்க விடமாட்டாங்க போல..)

இன்றைய யாழ் பயணம் முடித்து, வந்து மீண்டும் முழுசாய் மங்காத்தா பார்த்த பின்னர் விமர்சனம் வரும்...
(ஓடிக்கொண்டிருக்கும் சொகுசு வண்டியில் பதிவை தட்டடிச்சு, பதிவேற்றுவதும் ஒரு சுகமான முதல் அனுபவம் தான்)

==============================
இன்னொன்று....

வேண்டாம் என்று 'விக்கிரமாதித்தன்' தடுத்தாலும் சொல்லித்தான் ஆகணும்..
காலியில் நடந்தது பார்த்தீங்களா?
இலங்கை அணியை அடிக்கடி மாற்றிக் குழப்புகிறார்கள் என்று தேர்வாளர்கள் மீது வரும் விமர்சனங்களுக்கு இடையிடையே நான் சொல்லும் பதில்.. இவ்வகையான தெரிவுகள்..
காலநிலை, கள நிலைக்கேற்ப செய்யப்படுபவை என்று....
(Selection of Horses for the causes)
இன்றைய அணித்தேரிவும் அத்தகையதே..

மந்திரவாதி எனப்பட்ட அஜந்த மென்டிஸ், ஒருநாள் தொடரில் பிரகாசித்து டெஸ்ட் அறிமுகம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஷமிந்த எரங்க ஆகியோருக்கு மாற்றாக இன்று தெரிவு செய்யப்பட்ட சுரங்க லக்மால், ரண்டிவ் ஆகியோரின் பெறுபேறுகள் பாராட்டப்படக்கூடியவை.
273 என்ற ஒட்ட எண்ணிக்கைக்கு ஆஸ்திரேலியாவை மட்டுப்படுத்தியது பெரிய விஷயமே..


மைக் ஹசியை formக்குக் கொண்டு வந்தது மட்டுமே இலங்கைக்கு இனி சிக்கல்.
ஹசியின் இன்னிங்க்ஸ் திராவிட் பாணியிலான ஒரு பொறுப்பான ஆட்டம்.. பாவம் சதம் பெற முடியாமல் போனது துரதிர்ஷ்டமே.. 
டில்ஷானின் சிறப்பான வழிநடத்தலுக்குக் கிடைத்த பரிசு ஹசியின் விக்கெட்.

டில்ஷான் ஒரு டெஸ்ட் அணித் தலைவராக இன்று தான் எனக்கு சில தீர்மானங்கள் மூலம் மகிழ்ச்சியளித்தார்.
ஆனாலும் இனி துடுப்பாடும் இலங்கை முதல் இன்னிங்சில் 400 ஓட்டங்களையாவது பெற்று இரண்டாம் இன்னிங்க்சிலும் ஆஸ்திரேலியாவுக்கு அழுத்தத்தைக் கொடுக்கவேண்டும்.

இரண்டாவது இன்னின்க்சின் பத்து விக்கெட்டுக்களை எடுப்பது முரளிதரன் இல்லாத இந்த இலங்கை அணிக்கு சிக்கலாக அமையலாம்.
இன்றைய ஆஸ்திரேலியாவின் தடுமாற்றம் ஏழு ஆண்டுகளுக்கு முதல் இலங்கையில் இடம் பெற்ற இலங்கை - ஆஸ்திரேலிய தொடரை மீண்டும் ஞாபகப்படுத்தியது.
அந்தத் தொடரின் மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் முதல் இன்னிங்சில் சுருண்டு பின்னர் மூன்று டெஸ்ட் போட்டிகளையுமே போராடி வென்றது அப்போதைய பொன்டிங்கின் ஆஸ்திரேலிய அணி.

ஆனால் இப்போதைய அணியில் எத்தனை மாற்றங்கள்..
அப்போது வென்று கொடுத்த ஷேன் வோர்னும் இல்லை. ஏனையோர் தடுமாறிய வேளையில் ஓட்டங்கள் குவித்த மார்ட்டின். லீமனும் இல்லை.

இலங்கைக்கு முரளியும் வாசும் மட்டுமே இல்லை.. காலி ஆடுகளம் இருக்கிறதே.. 
ஹெரத்தின் துல்லியமும், ரண்டீவின் சுழற்சியும் மிக்க நம்பிக்கை தருகிறது.
பார்க்கலாம்..
ஆஸ்திரேலியாவின் அச்சுறுத்தும் வேகப்பந்துவீச்சை அனுபவம் வாய்ந்த நம்பகரமான துடுப்பாட்ட வீரர்கள் முறி யடித்தால் எல்லாம் சுபமே..


இஸ்லாமிய நண்பர்கள் அனைவருக்கும் எனது நோன்புப்பெருநாள் நல்வாழ்த்துக்கள்...




ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner