Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

June 10, 2018

காலா !


காலா பற்றிய பார்வைக்குச் செல்ல முதல்...

கதையைச் சொல்லிவிடுவேனோ என்ற பயமில்லாமல் படம் பார்க்காதவர்களும் வாசிக்கலாம்.
கழுவி ஊற்ற/கலாய்க்க எதிர்பார்த்திருப்பவர்கள் முன்னைய காலா பற்றிய என் ட்வீட்ஸ் பார்த்து விட்டு வரலாம்.

நடுநிலை எல்லாம் தேவையில்லை எனக்கு.. இது விமர்சனமும் கிடையாது. வழமையான படங்களுக்கு நான் எழுதுவது போல காலா பற்றிய என் பார்வை மட்டுமே :)

அடுத்து,
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மாஸ் தெரியுமா, charisma தெரியுமா, கரீனா தெரியுமா ?
அவர் திரையில் நின்றாலே அதிரும் தெரியுமா?
இந்தப் படத்தில் ரஜினிக்குப் பதிலாக யார் நடிச்சாலும் எடுபடாது தெரியுமா?

தலைவா.. கோஷக் கூட்டங்கள்..
வசூல் கணக்கு மணித்தியாலம் தோறும் தேடி அப்டேட்டும் கணக்குப்பிள்ளைகள்,
இந்த கோஷப் பார்ட்டிகள், கதை கிடக்கிறது, படம் சொல்லும் விடயம் கிடக்கிறது ரஜினி மட்டுமே போதும் என்று குதூகலிக்கிற குஞ்சுகள்,

எல்லாரும் ஓரமாய்ப்போய் கூலா ஒரு கோலா குடிச்சிட்டு ஓரமாய் நின்று கம்பு சுத்தலாம்.

ஒரு stylish icon ஆக அநேக ரஜினி படங்களில் ரஜினி தோன்றும் காட்சிகளில் கிடைக்கிற அந்த கிக் எனக்கு காலாவிலும் கிடைத்தது. ஆனால் இங்கே பதியப்போவது காலா என்ற ஒரு படத்தைப் பற்றியது.

ரஜினி என்ற ஒரு மிகப்பெரிய ஈர்ப்பு சக்தியின் ஆளுமையும் ஆகர்சமும் கூட சரியான விதத்தில் பயன்படுத்த முடியாமல் போய் படுபாதாளத்தில் வீழ்ந்த அல்ல அல்ல பலூனில் பறந்து வீழ்ந்த லிங்கா போன்ற படங்களும் பார்த்திருக்கிறோம். ரஜினி ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத கபாலி போன்றவையும் வந்தே இருக்கின்றன.

கபாலியில் கற்றுக்கொண்ட பாடங்களையும் சேர்த்துக்கொண்டு ஏற்கெனவே தனக்கு இருக்கும் திறமையான இயக்குனர் என்ற முத்திரையையும் தக்க வைத்துக்கொள்ளும் முயற்சியுடன், மிக நேர்த்தியான தயார்ப்படுத்தலுடன் 'காலா'வில் கை வைத்துள்ளார்.

உழைக்கும் மக்களுக்கு நிலம் சொந்தம் !
இந்த ஒரு வரியின் ஆழமான அரசியலை நேரடியாகவும் அதைச் சூழவுள்ள இந்தியாவின் தேசியவாத, பிராந்திய அரசியலையும் மதவாதப் பிரிவினைகள் மூலமாகப் போராட்டங்கள், மக்கள் எழுச்சிகளைத் திசை திருப்புவதையும் ரஜினியின் மக்கள் மீதான ஈர்ப்பு என்பதைக் கருவியாகக் கையாண்டு குறிப்புக்கள் ஊடாகவும், குறியீடுகளின் கோர்வையாகவும் - பல இடங்களில் நேரடியாகவும் போட்டுத் தாக்கியிருக்கிறார் இயக்குனர் ரஞ்சித்.

"
குறியீடுகளின் கோர்வை.. ரஜினியைக் கருவியாக்கி எடுத்திருக்கும் அதிகாரத்துக்கு எதிரான தன் பிரசாரம். "

சந்திரமுகி, சிவாஜி, கபாலி ஆகியவற்றுக்குப் பிறகு மீண்டு ரஜினி இயக்குனரின் நடிகர் ஆகியிருக்கிறார்.
ரஜினியின் ஈர்ப்பை எங்கெங்கே பயன்படுத்தவேண்டுமோ அந்தந்த இடங்களில் எல்லாம் சிக்ஸர் அடித்திருக்கும் ரஞ்சித் பல இடங்களில் தன்னுடைய படம் இது என்பதை கதையை மேலெழச் செய்து அழுத்தம் காண்பித்துள்ளார்.

முள்ளும் மலரும் திரைப்படத்தின் பின் முழுமையாக அனைத்து வித உணர்வுகளையும் வெளிப்படுத்தும் வாய்ப்புக்கொண்ட பாத்திரம் காலா - கரிகாலனாக.

சிறு குழந்தைகளுடன் கிரிக்கெட் ஆடி bowled ஆவதோடு தாத்தாவாகவும், ஒரு பெரிய குடும்பத்தின் பாசமுள்ள தலைவனாகவும் அறிமுகமாகின்ற ரஜினிக்கு நிகராகக் காட்டப்படுகின்ற அவரது மனைவி செல்வியின் பாத்திரத்தில் ஈஸ்வரி ராவ். ரஜினி ரசிகர்கள் கபாலியில் ராதிகா ஆப்தேக்கு அதிருப்தி காட்டியவர்கள். எனினும் இந்தப் படத்திலும் இனியும் இதை பழகிக்கொள்ளத்தான் வேண்டும்.

ஈஸ்வரி ராவ் கனதியான அந்தப் பாத்திரத்தைக் கையாளும் விதம் அற்புதம். வெட்டென்று பேசும் வெகுளித்தனம், மனதில் அன்பை வைத்து மறுகும் பாசம், காலாவையே கட்டுப்படுத்தும் கண்டிப்பு என்று கலக்குகிறார்.
செல்வி மட்டுமன்றி ஏனைய இரண்டு பெண் பாத்திரங்கள் - முன்னாள் காதலி சரீனா, மராத்தி பேசும் புயலு என்று மூன்று பெண் பாத்திரங்களூடாகவும் சமூகத்தைப் பற்றியும் அரசியலில் பெண்களின் வகிபாகம் பற்றியும் பேச முயற்சித்துள்ளார் ரஞ்சித்.
என்னும் அந்தப் பெண் பாத்திரங்கள் தங்கியிருப்பதையும் தனியாக ஜெயிக்க முடியாமல் போவதையும் குறியீடாகக் காட்டுவதையும் கவனிக்கவேண்டும்.

ரஜினிகாந்தின் அரசியல் மோடி, பிஜேபி சார்ந்தது என்று பேசப்பட்டு விமர்சிக்கப்படும் இப்போதைய காலகட்டத்தில், காவி நிறம், தூய்மை இந்தியா போல தூய்மை மும்பாய், ராமர் கடவுள் (ராம ராஜ்ஜியம் ?), மோடியைப் போலவே படங்கள், கட் அவுட்டில் சிரிக்கும் ஹரி தாதா, போராட்டங்கள், மக்கள் எழுச்சிகள் திசை திருப்பப்படல் என்று பார்த்துப் பார்த்து பகிரங்கமாக ரஜினியை வைத்தே வெளிப்படையாக எதிர்ப்பது கொள்கையின் துணிச்சல்.
அதில் முத்தாய்ப்பு அந்த இறுதியாக வரும் 'சிங்காரச் சென்னை'.

படங்களின் ஒவ்வொரு காட்சியிலும் தாராளமாக குறியீடுகளைப் பின்னணியில் வைத்து தன்னுடைய கொள்கையைக் கொண்டு செல்வதில் ரஞ்சித் ஒரு சமர்த்தர் ; முதல் படத்திலிருந்து.
ரஜினி - கறுப்பு, ஹரி தாதாவினால் தொடர்ச்சியாக ராவணன் என்று கூறப்படும் இடங்கள், ஒரு காட்சியில் பின்னணியில் 'ராவண காவியம்' என்று ராவணனைப் போற்றியுள்ளார் (ராவண காவியத்துக்கு அப்பால் ஈழத்து எழுத்தாளர் டானியலின் நாவலும் தெரிகிறது), கிடைக்கும் இடங்களில் எல்லாம். காலா கூட 'தங்க செல' பாடலில் ஒற்றைத்தலை ராவணன் பச்சப்புள்ள ஆவதாகப் பாடுகிறார்.

ராவணனைப் போற்றி நேரடியாக ராம பக்தர்களை வம்புக்கு இழுக்கும் இடம் அது மட்டுமல்ல.
உச்சக்கட்டக் காட்சிகளில் அதற்கான தனியான இடமுண்டு.

கதாநாயகன் காலாவின் பின்னணியில் புத்தர், கிராமியக் கடவுள் காலா, என்றும் வில்லன் ஹரிதாதாவின் பின்னணியில் ராமர் என்றும் குறிகாட்டி இருப்பது மட்டுமன்றி, ரஜினியின் உச்சக்கட்ட ஹீரோயிசக் காட்சியான மேம்பால சண்டைக்காட்சியில் வில்லனின் வதத்தின் பின்னர் கணபதி சிலைகள் ஆற்றில் கரையும் காட்சியும் உண்டு.

மகனின் பெயர் லெனின்..
எனினும் மகன் கடைக்கொள்ளும் 'விழித்திரு' மக்கள் போராட்ட முறையை எதிர்க்கிறார் காலா. பயனில்லை என்கிறார். எனினும் வன்முறையில் தனது சொந்த இழப்பின் பின்னர் மக்களை சேர்த்து மாபெரும் புரட்சியைத் தானே கொள்கிறார்.

ரஜினியின் தளபதி செல்வமாக வரும் 'வத்திக்குச்சி' திலீபனுக்கு அற்புதமான பாத்திரம். சிறுசிறு பாத்திரத் தெரிவிலும் அக்கறையாக இருந்திருக்கிறார் இயக்குனர். அரவிந்த் ஆகாஷ் ஏற்றுள்ள பொலிஸ் பாத்திரத்தின் பெயர் சிவாஜிராவ் கெய்க்வாட்.


ரஞ்சித்தின் கொள்கை + புத்திசாதுரியம், அண்மைய மக்கள் அரசியல், தலித்திய தத்துவங்கள் என்று படம் முழுக்க விரவி நின்றாலும் அழுத்தமான காட்சிகளாக ரஜினி என்ற ஜனரஞ்சக நடிகனின் சில அழுத்தமான காட்சிகள் எல்லா ரசிகர்களுக்கும் பிடிக்கக்கூடியது.
படத்தின் பிரசார நெடியை சற்றே தணிக்கக்கூடியதாக  அமைவன அவை.
காலாவின் வீட்டுக்கு நானா பட்டேக்கர் (ஹரி தாதா) வந்து, பேசி கிளம்பும் நேரம் "நான் போக சொல்லலையே" என்று அழுத்தமாக சொல்லும் இடமும், அதைத் தொடர்ந்து நானாவின் அழுத்தமான முகபாவங்களும் கலக்கல்.

ஒரு தேர்ந்த நடிகராக நானா பட்டேக்கர் அமைதியான வில்லா முகம் காட்டி ரஜினிக்கு ஈவு கொடுத்து படத்தைத் தூக்கி நிறுத்துகிறார்.

பாட்ஷாவுக்கு ரகுவரன் போல இந்த காலாவுக்கு நானா முக்கியமான ஒரு தூண்.

பாட்ஷா, தளபதி போல போலீஸ் காட்சிகளில் பரபர தீப்பொறி.

"குமார், யார் இந்த ஆளு?" கரகோஷங்களை எழுப்பும் காட்சி.

ஹரி தாதா வீட்டுக்கு காலா போகும் காட்சியும் அங்கே நடக்கின்ற உரையாடலும் அண்மைக்காலத்தில் ஹீரோ - வில்லன் உரையாடல்களில் மிக நுண்ணியமான, அதேவேளையில் கலக்கலான காட்சிகளில் ஒன்று.
(விக்ரம் வேதா இன்னொன்று)
படையப்பா - நீலாம்பரி சந்திப்பு, சிவாஜி - ஆதிசேஷன் சந்திப்புக்களில் பார்த்த அதே ரஜினியின் நெருப்பு.

வெள்ளை - கறுப்பு , இரண்டடி மட்டுமே தூரம், நிலம் எங்களுக்கு வாழ்க்கை உங்களுக்கு அதிகாரம், எங்கள் நிலத்தைப் பறிப்பது உங்கள் கடவுளாக இருந்தால் அந்தக் கடவுளையும் எதிர்ப்பேன் என்று சொல்லும் இடங்கள் தத்துவ சாரங்கள்.
ரஜினியின் மாஸ் அப்பீலும் சேர்ந்து கொள்வதால் தீப்பிடிக்கிறது.

முதுகிலே குத்திக்கோ என்று சொல்லி நடக்கும் அந்த நடை.. ரஜினி ரஜினி தான்.
இத்தனை இருந்தும் மும்பாய் - தாராவி - தமிழர்கள் - நிலம் - போலீஸ் என்ற பின்னணிகளும் காலா சேட் - அவரது நண்பர் வாலியப்பா (சமுத்திரக்கனி)வும், நாயகனை ஞாபகப்படுத்தாமல் இல்லை.
90களில் அப்போதிருந்த சூழ்நிலையை மணிரத்னம் காட்டியதற்கும், இப்போது நவீனமயப்படுத்திய நாயகனாக இந்தக் கால சமூக வலைத்தளங்கள், புதிய தொழிநுட்பங்கள் என்பவற்றுடன் ரஞ்சித் கொண்டுவந்த காலா நாயகனின் புதிய version என்பதற்கும் பெரியளவில் சிந்திக்கவேண்டியதில்லை.

எம்மைக் காட்சிகளில் கோர்ப்பதற்கு காமெராவும் மைக்கும் கையுமாக அலையும் ஒரு ஊடகவியலாளர் (ரமேஷ்) கதை சொல்லியாக ரஞ்சித்தினால் பயன்படுத்தப்பட்டிருக்கிறார். கொஞ்சம் பழைய உத்தி. ஆனால் கடைசிக் காட்சிகளில் அதன் அழுத்தம் முக்கியமானது.

கபாலியைப் போலவே காலாவிலும் காதலும், தொலைந்து போய் மீண்டும் பல ஆண்டுகளுக்குப் பிறகு தேடிவரும் காதலும் உண்டு. அதே போன்ற கலவரத்தில் காணாமல் போன காதல்.
அந்தக் காதலுக்கு இடையில் ரஜினிக்கும் மனைவிக்கும் இடையிலான பாசம் இழையோடும் காட்சிகளும் உண்டு.
ரஞ்சித்தின் படங்களில் மட்டும் கலவரத்தில் காதல் காணாமல் போவதும், காதலர்கள் பின்னர் ஒரு காலம் வரும்வரை தேடாமல் இருப்பதும் நடக்கிறது.

கல்யாணம் நிற்கவும் காணாமல் போகவும் , அந்த வேளையில் வேங்கையனின் மரணத்துக்கும் காரணமான ஹரி தாதாவை சரீனாவுக்கும், ஹரி தாதாவுக்கு வேங்கையனின் தளபதியாக இருந்த கரிகாலனைத் தெரியாமலிருப்பதும் எமக்கு வைக்கப்பட்ட டுவிஸ்ட்??

காலா குடும்பத்தை விட்டு நகர்ப்புற வசதிகளுடன் வெளியேற நினைக்கும் மகன்மாருடன் நிகழ்த்தும் உரையாடல் எத்தனை பேருக்கு தேவர் மகன் சிவாஜி -கமல் காட்சிகளை நினைவில் கொண்டுவந்தது?

ரஞ்சித்தின் வழமையான formula வில் மேலதிகமாக வெளிப்படையான அரசியல் , இப்போது தமிழகத்தில் தகித்துக்கொண்டிருக்கும் அரசியலை மிக சாமர்த்தியமாகக் கையாண்டிருக்கிறார்.

அதற்கு காலாவின் கறுப்பு தேவைப்பட்டிருக்கிறது. தேவையான இடங்களில் லெனின் மூலமாக சிவப்பையும் கையாண்டுள்ளார். இறுதிக் காட்சியில் நீலத்தாலும் பூசி முடிக்கிறார். இவை நிச்சயம் பேசப்படும்; விவாதிக்கப்படும்.

சந்தோஷ் நாராயணனின் இசையின் பங்களிப்பு படத்தின் மிகப்பெரும் பலம். பாடல்களை எல்லாம் எத்துணை திட்டமிட்டு உருவாக்கியுள்ளார்கள் என்பது வியப்புக்குரியது. கூடவே படம் முழுக்கப் பயணிக்கும் இசை ஒரு தனிப்பாத்திரம்.
சந்தோஷும் படத்தின் இன்னொரு இயக்குனர் என்றால் அது மிகையில்லை.
தாராவியைக் காட்டும் விதத்திலும் காட்சிகளூடு எம்மைக் காவிச் செல்வதிலும் ஒளிப்பதிவாளர் முரளியின் பங்கும் பெரியது.

ஆனால் கூடவே சம்பவங்களுக்குப் பாடி ஆடும் அந்த நான்கைந்து பேரின் காட்சிகளை ரஞ்சித் இன்னும் எத்தனை படங்களில் கையாளப்போகிறார்?


இதையெல்லாம் தாண்டி கரிகாலன் இறந்தாரா இருக்கிறாரா என்ற கேள்வியைத் தொக்க வைத்திருக்கும் விதம் சிந்திக்க வைக்கக்கூடியவொன்று.
கிளைமக்சில் ரசிகர்களுக்கு என்ன நடந்திருக்கும் என்ற தெளிவான ஊகத்தைத் தந்துவிட்டு, கதை மாந்தருக்கும் திரைப்பட முடிவுக்கும் சந்தேகம் ஏற்படுவது போல வைத்திருப்பது ஈழத்தினதும், புலம்பெயர் தேசத்தினதும் சிந்தனையில் சிறு பொறியைத் தட்டுவதற்கா?
காரணம் இராவணனின் தலைகள் கொய்யக் கொய்ய முளைப்பது பற்றி சொன்ன இயக்குனர், ஒரு காலா போனாலும் தாராவியில் இருக்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு காலா தான் என்று வேறு ஆழமாகச் சொல்லியும் வைக்கிறார்.

 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படத்தில் செல்வராகவன் "சோழன் பயணம் தொடரும்" என்று காட்டியதை நினைவுபடுத்தும் ரஞ்சித் சுபமான முடிவுக்காக செய்த விட்டுக்கொடுப்பா அது?

காலா - எனக்கு நான் அலுப்பின்றி ரசித்துப் பார்த்த அனுபவம். இயக்குனரின் சாமர்த்தியங்களை ரசித்தேன். குறியீடுகளைக் குறித்துக்கொண்டேன்.
மறைபொருள் அரசியலையும் ஒரு களிமண்ணாக ரஜினியை வைத்துப் பிசைந்து தனக்குத் தேவையான இறுதிப் பொருளை உருவாக்கியதையும் ரசித்தேன்.
சூப்பர் ஸ்டாராக மட்டும் பார்க்க விரும்பும் ரஜினி ரசிகர்களையும் திருப்தி செய்யக்கூடிய மசாலா நுட்பமும் கபாலி கற்றுத் தந்த பாடமாகக் கைவந்துள்ளது.

எனினும் ரஜினியின் ஆன்மிக அரசியலுக்கும் அவர் பேசும் சாமர்த்திய அரசியலுக்கும் ரஞ்சித்தின் 'காலாவுக்கும் இடையில் மயிரளவு கூட சம்பந்தமே இல்லை என்பதை ரஜினி என்ற அரசியல்வாதிக்கும் சேர்த்துக் கொடி பிடிப்போர் புரிந்துகொண்டால் அது தான் தமிழக அரசியலுக்கான விடிவாக இருக்கும்.

எனினும் ஒவ்வொரு காட்சிக்கும் இனி ஒவ்வொருவராகத் தரப்போகும் வியாக்கியானங்களையும் விளக்கங்களையும் நினைத்தால் தான்...

காலா - காலம் சொல்லும் கோலம்









January 05, 2015

ஒரு நாள் மகுடம் சூடும் புள்ளடி ராஜாக்கள் நாம் !

ஜனவரி 8!!!

இந்த ஒரேயொரு நாளுக்காக நாட்டை ஆளும் ராஜாக்களும் தேடி வந்து​ எம் காலில் விழக்கூடத் தயாராக இருப்பார்கள்.

எல்லாம் எங்கள் கைகளால் இடப்போகும் அந்தப் புள்ளடி அவர்களுக்குத் தரப்போகும் நாடாளும் ஆணை.







ஒவ்வொரு வாக்காக தேடும் ஒவ்வொரு தரப்பும், இலங்கையின் இம்முறை ஜனாதிபதித் தேர்தலைப் பொறுத்தவரை இரு தரப்பும் காலில் விழாக்குறையாக கைகளைக் கூப்பித் தொழுது, செய்தவை, செய்யாதவை, இனி செய்ய இருப்பவை என்று அடுக்கி, அடுக்கி அள்ளிப் போடுங்கம்மா வாக்கு என்று சாதாரணர்கள் எங்களுக்கு மேலான அந்தஸ்து வழங்கிக்கொண்டிருக்கிறார்கள்.


வழமையாக ஆட்சி எங்கேயோ நடக்கும், நாம் ஆளப்பட்டுக்கொண்டிருப்போம்.

எங்களுக்கானது தான் ஆட்சி என்ற நிலை தாண்டி, ஆட்சிக்குள்ளே நாம் வாழப் பழகியிருப்போம்.


சகிப்புத்தன்மை என்பதே எங்கள் நரம்புகளுக்குள் ஓடிக்கொண்டிருப்பதால் யார் என்ன செய்தாலும் 'அட்ஜஸ்ட் ' என்பதே தாரக மந்திரமாக வாழ்ந்துகொண்டிருக்கும் அப்பாவிகள் எமக்கு ஐந்து, ஆறு வருடங்களுக்கு ஒருமுறை தான் இப்படியான ராஜ மரியாதை கிடைக்கும்.



எங்கள் குரல்களே எடுபடாமல், அவர்களின் குரல்களை மட்டுமே நாம் தினமும் கேட்டுப் பழகிப்போன நிலையில், எங்கள் குரல்கள், கோரிக்கைகள், அபிலாஷைகள் என்பவற்றை ஆளப்போகிறவர்கள் / ஆண்டவர்கள் கேட்கும் அல்லது  கேட்பவதாகப் பாவனை செய்யும் அதிர்ஷ்டம் வாய்ந்த நாட்கள் இவை.



இவற்றுள் மேலும் ஒரு மகுடம் வைக்கும் நாள் தான் வரும் 8ஆம் திகதி.

தேர்தல் நாள் நாங்கள் தான் ராஜாக்கள்.

எங்கள் கைகள் இடும் புள்ளடிகள் தான் அரச ஆணை.

யாரை நோக்கி எங்கள் கரங்களின் ஆதரவு நீள்கிறதோ அவருக்கு ஆட்சி பீடம்.

நாங்கள் யாரை வேண்டாம் என்கிறோமோ அவருக்கு அது (இம்முறை) எழமுடியாத மரண அடியாக அமையும்.


உங்கள் உங்கள் தீர்மானங்கள் மனதில் எப்போதோ உறுதியாக எழுதப்பட்டிருக்கும்.
அவரா இவரா என முடிவு செய்திருப்பீர்கள்.
யாருக்கு வேண்டுமானாலும் வாக்கை நீங்கள் அளிக்கும் ஜனநாயக உரிமை உங்களுக்கு இருக்கிறது.
வாக்கை நிராகரிக்கும் உரிமை, ஏன் வாக்களிக்காமல் புறக்கணிக்கும் உரிமை கூட உள்ளது.





ஆனால் இலங்கையின் தற்போதைய நிலையைப் பொறுத்தவரை, கடைசி இரு வழிமுறைகளும் எப்போதும் கைகொடுக்காது என்பது அனுபவபூர்வமாக நாம் வலியோடு கண்ட உண்மைகள்.

​அதேபோல, யார் வந்தாலும் என்ன?
ராமன் என்ன ராவணன் என்ன நம்ம வாழ்க்கை நம் கையில் என்று இருந்துவிடுவதனால் மோசமான ஆட்சி ஒன்று உருவானால் அது பற்றி விமர்சிக்க, குறை சொல்ல ஏன் புலம்புவதற்கான தார்மீக உரிமையை இழந்துவிடுகிறோம்.​

அதேபோல எங்களுக்கு சுதந்திரமாக இருக்கும் ஒரே (அல்லது மிக முக்கியமான )உரிமையான வாக்குரிமையைப் பயன்படுத்தாமல் இருப்பதும், அதை இன்னொருவருக்கு விட்டுக்கொடுப்பது போன்றதே.

மாற்றம் செய்வதாக இருந்தால் கூட ஏதாவது செய்தாகவேண்டுமே..
வேண்டுவது வேண்டாதது என்பதைத் தீர்மானிப்பது எம் கைகளாக இருக்கவேண்டும்.
இந்த ஒருநாள் ராஜா பதவிகளை பயன்படுத்துவோமே...

பதிவு செய்துள்ள வாக்காளர்கள்  - மாவட்ட - தொகுதி வாரியாக 


'ஜனநாயகம்' என்பது பெயரளவிலேனும் ஒரு அடிப்படை அம்சமாக நாட்டில் இருக்கையில், கட்சி மாறல்கள், பதவிக்காக கொள்கை மாறல்கள், கூட்டணி சேர்த்தல்கள், விலகல்கள் என்று நடக்கும் பலவிதமான கூத்துக்களிலும் வாக்காளர்களாக எமது விருப்பு, வெறுப்புக்கள் இருப்பதில்லை.

எனவே தான் யார் வரவேண்டும் என்று தீர்மானிப்பதிலாவது  வாக்குரிமையைப் பயன்படுத்தியே ஆகவேண்டும் என்று மற்றவர்களையும் நாம் ஊக்குவிக்கவேண்டி இருக்கிறது.
​"யார் வரவேண்டும் ​என்று பார்த்து வாக்களிப்பது இருக்கும் மட்டுப்படுத்தப்பட்ட தெரிவுகளுக்குள் சிரமமாக இருக்கலாம் ; ஆனால் யார் வரக்கூடாது என்று தீர்மானிப்பதில் பெரியளவு சிக்கல் இருக்கப்போவதில்லையே"


எனவே அங்கே தான் வாக்களிக்காமல் விட்ட, செல்லுபடியற்ற வாக்கை வழங்கிய மந்தைகளுள் ஒருவராக நாம் ஆயிடாமல், ஏதாவது ஒரு தெரிவை வழங்கவேண்டியது அவசியமாகிறது.

இந்த முறை 2014ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பின் படி ஒரு மில்லியனுக்கும் அதிகமான புதிய வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளார்கள்.
இவர்கள் இளையவர்கள்.

அவர்களுக்கு இந்த ஜனநாயகத் தெரிவு முறை மேல் நம்பிக்கையை வழங்குவதும், அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எமக்காக குரல் கொடுக்கும் எமது நம்பிக்கையை வைக்கக்கூடிய பிரதிநிதிகளை நாம் அனுப்பிவைக்கலாமென்ற நம்பிக்கையை வழங்குவதற்கும் வாக்களிக்கத் தூண்டவேண்டும்.

காரணம் இளைய தலைமுறை நம்பிக்கை இழந்துபோன பல விடயங்களுள் ஒன்றாக எமது பிரதிநிதிகளை, எம்மை ஆளுவோரை நாமே தெரிவு செய்வதும் மாறிவிடக்கூடாது என்பதே எனதும் அக்கறையாகும்.

கடந்த காலங்களில் பதிவு செய்த வாக்காளர்களாகிய எம்மில் கால்வாசிப் பங்குக்கும் அதிகமானோர் வாக்களித்ததில்லை.
இது இலங்கை போன்ற கல்வியறிவில் முன்னிலை பெற்ற ஒரு நாட்டுக்கு எவ்வளவு வெட்கக்கேடான ஒரு விடயம்?


------------


வாக்களிக்கும் முறை..

நேரடியாக நாம் எமது ஒரே தெரிவை நாம் செலுத்தலாம்.

இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் ஒரு வேட்பாளருக்கு பெரும்பான்மை / 50.1% வாக்குகள் கிடைக்காவிடில் இரண்டாவது சுற்றுக்கணிப்புக்கு போகவேண்டிய நிலைமை ஏற்படும்.
(அவ்வாறு இதுவரை ஏற்பட்டதில்லை)
இதற்காக மூன்று விருப்பத் தெரிவுகள் வழங்கக்கூடிய வாய்ப்பும் உள்ளது.

கீழே விளக்கப்படம் உள்ளது.


வாக்களிக்கும் முறை பற்றிய சந்தேகங்கள் இன்னும் இருப்பின் கீழ்வரும் ஆங்கில இணையத் தொடுப்பை க்ளிக்கி அறிந்துகொள்ளவும்.


இல்லையேல் இந்த இடுகையின் கீழே comments ஆக இடுங்கள். முடியுமானவரை பதிலிடுகிறேன்.


நாம் வாக்கிடுவோம் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

புள்ளி ராஜாக்களாக தேர்தலுக்குப் பின் பூஜ்ஜியங்களாக  ஆகாதிருக்க (இம்முறையும் ஏமாறினால் - அதை பிறகு பார்க்கலாம் - எத்தனை ஏமாற்றம் கண்டுவிட்டோம் - நம்பிக்கை தானே வாழ்க்கை) புள்ளடி போட்ட ராஜாக்களாக பெருமையுடன் விரலில் முடிசூடிக் கொள்வோம்.


"யார் வேண்டும் என்று வாக்களிப்பது மனதுக்கு இம்முறை ஒவ்வாவிட்டால், யார் எமக்கும் எம் எதிர்காலத்துக்கும் வேண்டாம் என்று வாக்களியுங்கள்."
தெளிவும் தெரிவும் இலகு.

------------------
நள்ளிரவுடன் தேர்தல் பிரசாரங்கள் நிறைவடைகின்றன. இலத்திரனியல், அச்சு, இணைய ஊடகங்கள் வழியான விளம்பரங்களும் பிரசாரங்களும் நாளையுடன் முற்றுப்பெற வேண்டும். 

ஆனால், இணையவெளியில் பல்கிப் பெருகியிருக்கும் சமூக வலைத்தளங்கள் மூலமான விளம்பரங்கள், பிரசாரங்களை எவ்வாறு தேர்தல் திணைக்களம் கட்டுப்படுத்தப்போகின்றது என்ற கேள்விக்கு யாரிடமும் சரியான பதில் இல்லை.
நிறுவனங்களாக, அமைப்புக்களாக இவை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டாலும் தனிநபர்கள் தத்தம் விருப்பு வெறுப்புக்களைக் கொண்டு பிரசாரம் செய்யப்போவதை எவ்வாறு தடுக்கலாம்?

சிக்கலான கேள்வி இது..
தேர்தல் வாக்களிப்பு முடியும் வரை இது தொடரும்.
அதிலும் இம்முறை எழுச்சி கொஞ்சம் வித்தியாசமானதாகவே இருக்கும் என்று என்ணத்தோன்றுகிறது.


May 27, 2014

மோடி...


மோடி அலை இன்னும் ஓயவில்லைத் தான் ;)

நமோ சுனாமி அலை அடித்து வென்று, கொண்டாடி, பலரையும் அழைத்து, பதவியும் ஏற்றாச்சு.

இந்தியாவில் மோடியின் பெரு வெற்றி இந்தியர்களுக்குக் கொடுத்த உற்சாகத்தை விட எம்மவர்கள் பலருக்குக் கொடுத்த புளகாங்கிதம் பென்னாம்பெரிசு.

ஒவ்வொரு காரணம், ஒவ்வொரு பீலிங்கு.

பழிவாங்குதல் பிரதானம்..
ஊழ்வினை உறுத்துது பாருங்கோ.
மனதின் அடியில் கிடக்கும் ஒருவித கோபமும் வெறியும் (அது இனம், மதம் என்று எப்படியும் இருக்கலாம் - இல்லை என்று நடுநிலைவாதிகள் போல் சொல்லாமல் நன்றாக யோசியுங்கள்) ஒரு நப்பாசை..

இல்லாவிட்டால் என் போல ஒரு சின்ன பெட்டாகவும் (பந்தயமப்பா)இருக்கலாம்.
(அந்தப் பந்தயத்தில் நான் வென்றதற்கு என்ன புத்தகத்தைக் கேட்கலாம் என்று ஆலோசனை சொல்லலாம் ஆர்வமும் அன்பும் உள்ளவர்கள்)

ஆனால் இரு மாநிலங்களினால் (தமிழ்நாடு, கேரளா) நிராகரிக்கப்பட்ட ஒருவர், சிறுபான்மையினரால் எதிர்க்கப்படும், விமர்சிக்கப்படும், கிட்டத்தட்ட முற்றாக நிராகரிக்கப்பட்ட ஒருவர் பெற்ற இந்த மாபெரும் வெற்றி எங்களுக்குப் பழக்கமான சிலவற்றை ஞாபகப்படுத்துவதாகவும், எங்கள் தற்காலிக பழிவாங்கும் குதூகலிப்பையும் தாண்டி இனி நடக்கப்போவன பற்றி ஒரு மங்கலான சந்தேகத்தை மயக்கத்துடன் ஏற்படுத்துவது இயல்பே.

சிறுபான்மையினரின் சொற்ப ஆதரவும் இல்லாமல், பெரும்பான்மையினரின் தனி ஆதரவை மட்டும் வைத்துக்கொண்டு (பேரினவாதம் பேசியும் கூட வெல்லலாம்)'ஜனநாயக முறைப்படி' ஆட்சி பீடம் ஏறலாம் என்ற துணிவை இந்த மோடியின் வெற்றி தரலாம்.

நரேந்திர மோடியின் மாபெரும் வெற்றி பேரினவாதம் பேசிப் பெறப்பட்டதல்ல என்பது மிகத் தெளிவானது.
மன்மோகனின் (சோனியாவின் ரிமோட் ஆட்சி) காங்கிரசின் ஆட்சியின் மீதான அதிருப்தியும், மோடியின் குஜராத் மாநில ஆட்சியின் நேர்த்தியான நிர்வாகமும் சேர்த்தே வழங்கியது தான் யாரையும் தங்காத இந்த பெரும்பான்மைப் பல ஆட்சி.

ஆனால் எங்கள் நாட்டின் அரசியல் பின்னணியும் பார்க்கப்போனால் மோடி வழியை(யும்) பின்பற்றினால் எந்தவொரு ஜில்மாலும் இல்லாமலே பெரும்பான்மையுடன் வெற்றியை மீண்டும் பெற்றுக்கொள்ளலாம். (விரித்து ஆராய்ந்து கணித்துக் கொள்வது அரசியலை என்னை விட நன்கறிந்த உங்களுக்குத் தான் இலகுவாச்சே)

மோடியின் வெற்றியை நான் சில காரணங்களுக்காக ரசிக்கிறேன்; வியக்கிறேன்.

தொழிநுட்பத்தையும் சமூக வலைத்தளங்களையும் மோடி சாமர்த்தியமாகவும் சரியான இலக்கு நோக்கியும் பயன்படுத்திய விதம்.
(இதே யுக்தியை ஒபாமாவும் அமெரிக்காவிலே பயன்படுத்தினார். இலங்கையில் தற்போதைய ஜனாதிபதியும் ஓரளவுக்குப் பயன்படுத்தியிருந்தார், இப்போது மிக நுணுக்கமாகவும் துறைசார் வல்லுனர்களின் உதவியோடும் விரிவாகப் பயன்படுத்தி வருகிறார்)

திட்டமிட்ட அவரது வளர்ச்சி, தன் பிம்பத்தின் விளம்பரம், வியூகம் &வெற்றி..
அவரது கம்பீரமான அதேவேளை ஆழம் அறியமுடியாத வெளித்தோற்றம், அதைக் கட்டியமைக்கும் நேர்த்தியான ஆடைத் தெரிவுகள்
(இவரது நாகரிகமான, உறுத்தாத ஆடைத் தெரிவுகள் - dressing sense ரசிக்க வைக்கிறது.)

சமயத்தில் இவரது கூர்ந்த கண்கள் (தெலுங்கு) படங்களில் வரும் வில்லன்களை- சில சமயங்களில் இயக்குனர் P.வாசுவின் வில்லன் தோற்றத்தையும் ஞாபகப்படுத்துகின்றன.

முன்பும் பல தடவை நான் கூறிவந்த - தெற்காசியாவுக்கு இப்போது அவசியப்படுகிற - (எமக்குக் கொஞ்சம் பழக்கமான) சர்வாதிகாரத்தின் சில இயல்புகள் சேர்ந்த - தேவையான போது அதிகாரங்களைப் பிறப்பித்து காரியங்களை செயற்படுத்தும் இறுக்கமான ஆட்சி முறை.

மோடி அமைச்சரவையை அறிவித்த விதத்திலேயே தான் யார், எப்படிப்பட்டவன் என்று காட்டிவிட்டார்.

பெரிய வெற்றிக்குப் பின்னரும் மிகப் பெரிய நாட்டுக்கு மிகச் சிறிய அமைச்சரவை. அதிலே வகுத்துக்கொடுத்த அனுபவமும் இளமையும் பல்வகைமையும் கலந்த அமைச்சரவை.

தேர்தலில் யார் யார் தம் கட்சியில் போட்டியிட வேண்டும் என்று அவரால் தீர்மானிக்கமுடியாவிட்டாலும், யாருக்கு அமைச்சரவையில் இடம் வழங்கவேண்டும் என்று தெளிவாகத் தீர்மானித்து Over 75 தடையைக் கொண்டு வந்தார்.
(அத்வானி, முரளிமனோகர் ஜோஷிக்கு வைத்த ஆப்புடன், சுப்பிரமணிய சுவாமியை ஒதுக்கிய விதமும் சாணக்கியத் தனமானது)

ஆனால் யாரும் எதிர்பாராதவகையில் தன்னை விமர்சித்தவர்கள், எதிர்ப்புத் தெரிவித்தவர்களுக்கும் (மோடியை கொலைக்குற்றவாளி என்றவர்கள், சர்வாதிகாரி என்றவர்கள், அவரை கட்சியிலிருந்து வெளியேற்றவேண்டும் என்று உண்ணாவிரதம் இருந்தவர்களும் சேர்த்து) இடமளித்திருந்தார்.

இது மன்னிப்பா, ராஜதந்திரக் கணக்கா என்பதை அடுத்த ஒரு மாதம் சொல்லும்.

உள்துறை அமைச்சராக ராஜ்நாத் சிங் வருவார் என்று ஊகித்தாலும், சுஷ்மா ஸ்வராஜுக்கு வழங்கிய வெளியுறவு அமைச்சு ஒரு அதிரடி.

இலங்கை ஜனாதிபதியை மட்டுமல்ல, பாகிஸ்தானிய பிரதமரையும் அழைத்து ஆச்சரியப்படுத்தியவர் ஆரம்பத்திலேயே கிளம்பிய எதிர்ப்புக்களை பொருட்படுத்தாதது இனி வரப்போகும் நரேந்திர மோடி என்னும் இரும்பு மனிதரின் ஆட்சிக்கான ஆரம்பக் காட்சி.


சமூக வலைத்தளங்கள் மூலம் வெளிப்படையாக, எல்லோரும் அணுகக் கூடியவராகத் தெரியும் மோடி,
அண்டை நாடுகளைத் தன் பதவியேற்புக்கு அழைத்து ஒரு "ராஜசூயம்" நடத்தி தெற்காசிய அரசியல் மையத்தை மீண்டும் இந்தியாவிடம் தக்க வைத்திருப்பதைக் கோடி காட்டியுள்ள மோடி,

இனி நகர்த்தப்போகும் அரசியல் காய்கள் முதலில் இந்தியாவுக்குள், பின் தெற்காசியாவில், அதன் பின் சர்வதேசத்தில் அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தவல்லன (என்னுடைய எனக்குத் தெரிந்த அரசியல் அறிவின் பிரகாரம்)


இந்த மனிதரைப் பிடிக்கிறதோ இல்லையோ, நிறைய எதிர்பார்க்க வைக்கிறார்.

(இதுவரை நாம் அறிந்த நரேந்திர மோடியின் - 2002 குஜராத் முதல் 2014 இந்தியா வரை - அனேக இயல்புகளும் விஸ்வரூப வளர்ச்சியும் எமக்கு நன்கு பழகிய ஒருவரை ஞாபகப்படுத்துவது எனக்கு மட்டும் தானா?)

- இது மோடியை வெளியே இருந்து பார்த்த ஒருவனது பார்வையே...
ஆழ்ந்த அரசியல், குறிப்பாக இந்திய அரசியல், மோடியை ஆழ்ந்து அவதானித்த அரசியல் பார்வையுள்ளவர்களுக்கு இவை ஒரு கோணத்தினாலான அலசலாகத் தோன்றலாம்; அல்லது பிழையான கணித்தலாகவும் தெரியலாம்.

ஆரோக்கியமான வாதங்கள் /கருத்துப் பகிர்வுகளுக்காகக் காத்திருக்கிறேன்.

மோடியின் வெற்றியுடன் சூரியன் இணையத் தளத்தில் எழுதிய ஒரு பதிவு.

Modi Magic - நரேந்திர மோடி - நமோ என்னும் மாயாஜாலம்

January 30, 2013

விஸ்வரூபம்... விளக்கங்கள், வினாக்கள் & விளங்காதவை


விஸ்வரூபம்...

என்னதான் இந்தப் பெயரில் இருக்கோ தெரியவில்லை ஆரம்பம் முதலே சிக்கல்.. இழுபறி...

நேற்று நீதிமன்றத்தில் கிடைத்த வெற்றி மீண்டும் தடையாக இழுபறி.
கமல் என்ற கலைஞன் முடக்கப்படுகிறான்.. ஒடுக்கப்படுகிறான்..
அரசியல் விளையாட்டுக்களால் பந்தாடப்படுகிறான் என்பது தெரிகிறது.
அவர் வழங்கியுள்ள ஊடகவியலாளர் சந்திப்புப் பேச்சு எவ்வளவு தூரம் காயப்பட்டுள்ளார் என்பதைக் காட்டுகிறது.

தமிழ்நாட்டில் அவருக்கு ஒரு நல்ல படைப்பாளியாக, ஒரு மிகச் சிறந்த கலைஞனாக முக்கியமான அடையாளம் எப்போதும் வழங்கப்பட்டது கிடையாது.
தரத்தால் உயர்ந்திருந்தாலும் மசாலாத் தனங்கள் அங்கீகரிக்கப்பட்ட அளவுக்கு இந்த மகோன்னத கலைஞன்  அங்கீகரிகப்பட்டதில்லை.
இப்போது இந்த விஸ்வரூபம் தடை விவகாரமும் இதையே உறுதிப்படுத்தியுள்ளது.
தமிழகத்தை விட்டே செல்லத் தயார் எனும் அளவுக்கு கமலின் கூற்று மிக ஆழமான வருத்தத்துடன் பதிவு செய்யப்பட்டுள்ளது.


Kamal Haasan Speaks his heart out.



விஸ்வரூபம் தடை, இலங்கையிலும் இந்தியாவிலும், இது பற்றிய எதிர்ப்பு வாதங்கள் ஆகியன வரத் தொடங்கியதிலிருந்து நான் அவதானித்த விடயங்கள், சில விளக்கங்கள் மற்றும் நான் சிலரிடம் கேட்க இருக்கும் வினாக்களுக்கான இடுகையே இது.

நான் மனதில் தோன்றும் எண்ணங்களை என் மனது சொல்கின்றபடி (ஆனால் பொதுவாக மற்றவர் மனதுகள் நோகாதவண்ணம்) எனது Twitter, Facebook பக்கங்கள் வாயிலாக பதிவு செய்தே வருகிறேன்.

கமல்ஹாசன் எனக்குப் பிடித்த நடிகர், படைப்பாளி என்பதையும் தாண்டி விஸ்வரூபம் படம் வெளியாக முன்னமே எழுந்த எதிர்ப்புக்களின் பின்னணி தான் எனையும் யோசிக்க வைத்தது.
ஒரு படைப்பு வெளியான பிறகு வருகின்ற எதிர்ப்புக்கள் சாதாரணமானவை; விமர்சன ரீதியாக ஏற்கக் கூடியவை.
பொதுவெளியில் ஒரு படைப்பு வந்துவிட்டால் விமர்சனங்கள் வரும்.
ஆனால் வெளிவராத ஒரு படைப்புக்கு எதிர்ப்பும் தடையும் எனும்போதும், அது நாடு கடந்து இங்கேயும் பார்க்காதோர் எல்லாம் எதிர்க்கின்றபோது, அதிலும் பிரிவு ரீதியாக அந்த எதிர்ப்புக்கள் இருக்கையில் எல்லாப் பின்னணிகள் மற்றும் நோக்கங்கள் பற்றியும் யோசிக்க வேண்டி இருந்தது.

இணையப் பொதுவெளியில் கமலின் திரைப்படத்துக்கு எதிராக முதலில் வந்து விழுந்த கருத்துக்களை வாசித்த பின்னர் + விஸ்வரூபத்துக்கு எதிராக வந்த கருத்துக்களுக்குக் காட்டப்பட்ட எதிர்ப்புக்களை வாசித்த பின்னர் - எனது வார்த்தைகளை மிகத் தெளிவாகவே முன்வைத்திருந்தேன்.
அத்துடன் நான் எப்போதும் சமய சந்தர்ப்பவாதங்களையும், மதவாதிகளையும், மூட நம்பிக்கைகளையும் கடுமையாக வெளிப்படையாக எதிர்த்துவந்தமையையும் என்னை அவதானித்தவர்களும் என் நண்பர்களும் அறிவர்.
எந்த சமய அடையாளமும் இல்லாமல் இருப்பதால் நான் இந்த விடயத்தில் போலி மதச் சாயத்துடன் வெறுப்பை உமிழ்ந்தவர்களை நான் பக்குவமாகச் சாடியிருந்தேன்.
ஆனால் இணைய வாதப் பிரதிவாதங்கள் இரு இனங்களுக்கிடையிலான முறுகலாக, நிரந்தரப் பிரிவாக மாறக் கூடிய ஆபத்து இருந்ததை (இன்னும் இருப்பதை) மறுப்பதற்கில்லை.

இதில் திருந்தவேண்டியவர்களாக இரு தரப்பினருமே இருக்கிறோம்.

நான் சொல்வது தமிழர் - முஸ்லிம்களாக அல்ல.

விஸ்வரூபம் படம் வெளிவருவதை ஆதரிப்போர் மற்றும் எதிர்ப்போராக.

கருத்து சுதந்திரம் எப்போது சுதந்திரமாகவே இருக்கவேண்டும் என்று நினைப்பவன் நான்.
(எங்கள் உயிர்களை பறிக்கும் அளவுக்கு இல்லாதவிடத்தில் என்ற விடயத்தையும் இங்கே பதியவேண்டும்..)
வெளிவரவே கூடாது என்று வாதங்களை வைப்பவர்கள் சொல்கின்ற விடயங்கள், இஸ்லாம் சமயம் பற்றியும் முஸ்லிம் மக்கள் பற்றியும் படத்தில் மிகத் தவறாக சொல்லப்பட்டுள்ளது என்கிறார்கள்.
இலங்கையில் இது பற்றி வாதிட்டவர்கள் பலர் இதுவரை இதைப் பார்க்கவில்லை.
கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர் என்பது போல.
ஆனால் பார்த்தவர்கள் சொல்வது ஆப்கன் தலிபான்கள் பற்றித் தான் இதில் சொல்லப்பட்டுள்ளது; இஸ்லாமிய மக்கள் பற்றித் தப்பாக சித்தரிக்கப்படவில்லை.
சமயம் என்ற ஒரே அடிப்படையில் இதைக் கண்மூடித்தனமாக எதிர்ப்பது சரியாகுமா?

அடுத்து இதில் அப்படியே தவறாக முஸ்லிம்கள் பற்றி சித்தரிக்கப்பட்டிருந்தாலும் இதை பார்த்து எங்களுடன் பழகும் நம் முஸ்லிம் நண்பர்களை நாம் வெறுத்திடுவோம் என்ற வாதம் எத்துனை தூரம் சரியாகும்?

இவ்வளவு காலமும் இத்தனை விவகாரங்கள், சலசலப்புக்கள், பிரித்தாளும் சதிகளால் வராத பிளவா இதனால் வந்துவிடப் போகிறது?
பாருங்கள், இந்த விவகாரத்தில் நான் விஸ்வரூபத்தை, கமலின் படைப்புரிமை ஆற்றலை வெளிப்படையாக ஆதரித்தும் என்னைப் பற்றி அறிந்த என் முஸ்லிம் நண்பர்கள் என்னுடன் இன்னும் பழகுவதில் எந்தவொரு மாற்றமும் இல்லை.
அவர்களின் கருத்துக்கள் வேறுபட்டதாக இருக்கலாம்.
எதற்காக ஆதரவு என்பது சரியாகப் புத்தியில் ஏறினால் போதும்.

அடுத்தது தவ்ஹீத் ஜமாஅத் என்ற இந்த அமைப்பு.
இந்த அமைப்பும் அந்த ஜெய்னுலாப்தீன் என்ற கண்ணியமற்ற ஒரு பேச்சாளனும் கடுமையாக விமர்சிக்கப்பட்டபோது, பல முஸ்லிம் நண்பர்கள் சொன்ன விடயம் இவர்கள் இஸ்லாமிய வட்டாரத்தில் அங்கீகரிக்கப்பட்டவர்களோ அல்லது மார்க்க ரீதியாகத் தலைமை தாங்குமளவுக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டவர்களோ அல்ல என்பது தான்.

அப்படி இருக்கையில் இந்தப் பிரிவு எப்படி எல்லா இடங்களிலும் (இலங்கையிலும் கூட) ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகம் சார்பாகத் தன் கருத்தைப் பதிவு செய்ய அனுமதிக்கப்படலாம்?
இது இந்து மத மக்கள் மத்தியில் எப்போதுமே முற்றுமுழுதாக அங்கீகரிக்கப்படாத விஸ்வ ஹிந்து பரிஷத், சங்க பரிவார், RSS போன்ற அமைப்புக்களை இந்து மக்களின் பிரதிநிதிகள் என்று சொல்லும் அபத்தம் போன்றதல்லவா?
(மீண்டும் நான் எந்த மதமும் சாராதவன் என்பதை அழுத்தமாக இங்கே பதிகிறேன்)

இந்து சமய சூழலில் வளர்க்கப்பட்டவனாக இருந்ததால் நன்கு அறிந்த சமயமான அதில் காணப்படும் மூட நம்பிக்கைகளை முதலில் எதிர்த்தாலும், நான் தெரிவு செய்து சமய நம்பிக்கைகளை எதிர்த்துவந்திருக்கவில்லை.
எங்கே பிழை இருந்தாலும் அதைப் பகிரங்கமாக எதிர்க்கும் துணிச்சல் இங்கேயும் என்னை நேரடியாகப் பேச வைத்தது.
ஆனால், இதனால் எனது நண்பர்களை இழந்துவிடக் கூடாது என்பதால் தான் சில இடங்களில் அமைதி காத்தேன்.

இதில் தமிழர் எதிர் முஸ்லிம், கமல் எதிர் முஸ்லிம் என்ற வாதங்கள் எல்லாம் அபத்தம்.

கருத்து சுதந்திரம் எதிர் அரசியல் + போலி மதவாத சூழ்ச்சி என்பதே எனதும் நிலைப்பாடு.

தலிபான் தீவிரவாதிகளை தீவிரவாதிகள் என்று காட்டுவதில் என்ன தப்பு?
இதுவரை காலமும் அர்ஜுன், விஜயகாந்த் படங்களில் காட்டவில்லையா என்ற கேள்விக்கு சியர் தந்த எதிர்ப்பதில், இதில் அமெரிக்கர்களை நல்லவர்களாகக் காட்டியுள்ளார்கள் என்பதே.

சரி அந்தக் கோணத்தில் வரட்டுமே?
வந்து, பார்த்து எதிர்க்கலாமே? விமர்சன ரீதியாகத் தோற்கடிக்கலாம் தானே?
எத்தனை வேற்று மொழிப்படங்களில், தமிழர்களையே அல்லது இஸ்லாமியர்களையே தீயவர்களாக, தீவிரவாதிகளாகக் காட்டவில்லை?

இதற்குள் ஒருவர் நந்திக்கடல் - தமிழர் ஒப்பீடு வேறு...
இதுவரை அப்படி வராத மாதிரி.. சிரிப்பாக இல்லை?
அரச இயந்திரம் இதுகாறும் அப்படித்தானே செய்திகளைத் தருகிறது? பொறுத்துக்கொள்ள வில்லையா நாம்?
இந்த ஒப்பீட்டின் அடிப்படையே அபத்தம் என்று இதை ஆதரிப்பவர்களின் அறிவீனம் உணரவில்லையா?
இதை மேற்கோள் காட்டி ஒருவர் அனுப்பிய மடலை மறுதலித்தேன்.



ஒரு படைப்பு என்று வருகையில் எதிர்ப்பைக் காட்டலாம்; விமர்சன ரீதியாக சவால் விடலாம்.
ஆனால் வெளிவரவே கூடாது என்ற விதண்டாவாதமும் வெறுப்பும் ஏனோ?

முஸ்லிம் - தமிழர் என்ற பிரிவினையும் சண்டையும் எழுவதில் வேதனை தான்.. ஆனால் இதன் பின்னணி அரசியலில் உள்ள உண்மைப் பூதங்களை இனம் கானல் முக்கியம்.

நேற்றைய புதிய தலைமுறை தொலைகாட்சி நிகழ்ச்சியில் பத்திரிகையாளர் ஞானி கேட்ட ஒரு கேள்வி கொஞ்சம் நியாயமாகப் பட்டது - தலிபான் மற்றும் ஏனைய தீவிரவாதிகள் உங்கள் சமயத்தை தமது அடையாளமாக, காவலாகப் பயன்படுத்துகிறார்களே? இதை முதலில் தடுக்கவேண்டியது நீங்கள் தானே?
இதனால் தானே அந்தத் தீவிரவாதிகளைப் படங்களிலோ செய்திகளில் காட்டும் போது இஸ்லாமிய சமயமும் அப்பாவி ம்சுலிம் சமூகமும் பாதிக்கப்படுகிறது?
இதைத் தடுக்க உலகளாவிய இஸ்லாமிய சமூகம் எடுக்கவுள்ள நடவடிக்கை என்ன?
இது எனக்கும் நியாயமான கேள்வியாகவே படுவதால் வினாவாகவே விடுகிறேன்.

அடுத்து, இலங்கை இஸ்லாமிய சமூகம் இன்றைய காலகட்டத்தில்  பெரும்பான்மையின் சில தீயசக்திகளால் எதிர்கொள்ளும் இன்னல்கள் மத்தியில் ஒன்றாய் வாழும் தமிழ் சமூகத்துடனும் ஒரு திரைப்பட விவகாரத்துக்காக மோதவேண்டுமா?
இதை விட மிக முக்கியமான விடயங்கள் பல இருக்கையில் அதற்கான போராட்டங்கள் எல்லாம இல்லாமல் இதற்காக மட்டும் அனைவரும் வரிந்துகட்டி இறங்கி இருப்பது, பெரும்பான்மையை விட சிறுபான்மையுடன் மோதுதல் இலகு என்பதாலா?

தமிழ் என்ற மொழியால் நாம் ஓரினம் தானே? சமயம் தானே அடையாளங்களை வேறுபடுத்துகிறது?
இதிலேயும் பிரிந்து நின்று தனித்துவம் என்று தனிமைப்படவேண்டுமா?

விஷ வித்துக்களைக் கக்குகின்ற தமிழ் சகோதரர்களும் உணரவேண்டிய ஒரு விடயம், சிறுபான்மைகள் மேலும் சிதறிவிடக் கூடாது என்பதையே.

மதங்கள் மனிதருக்காகவே தவிர, மனிதரைப் பிரித்து விடுவதற்காக அல்ல என்பதை நாம் இன்னும் உணரவில்லையோ என்று நினைப்பு மேலும் மனிதனாக என்னை தலைகுனிய வைக்கிறது.

இன்னமும் உரத்து சொல்கிறேன்...
கமல் என்ற கலைஞனின் கலைப்படைப்பான விஸ்வரூபத்தை ஆதரிக்கிறேன்.
அதன் வெளியீட்டை விரும்புகிறேன்.
அதேவேளை அதில் இஸ்லாமிய நண்பர்கள் சொல்வது போல, ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகம் கீழ்த்தரமாக சித்தரிக்கப்பட்டிருந்தால், அவர்களது அடையாளங்கள், சமயம் அவமரியாதை செய்யப்பட்டிருந்தால் (குறியீடாகக் கூட) அவர்களது எதிர்ப்பு நியாயமானதே என்பதயும் ஏற்றுக்கொள்வேன்.

-எண்ணத்தில் வந்துவிழுந்த வேகத்தில் வினாக்களையும் விளக்கங்களையும் பதிந்துளேன்.

கமல் ரசிகனாக அல்லாமல் ஒரு கலைஞன் தனது படைப்புக்களை எம்மொழியில் தருவதற்கு இனித் தயங்குவானே என்ற நினைப்பில் ஒரு கலை ரசிகனாக மிக கவலையுடனும் கோபத்துடனும் எதிர்பார்த்திருக்கிறேன்.

January 21, 2013

ஆசிய ஒபாமாவா அமெரிக்க மகிந்தவா?


அகில உலக சுப்பர் ஸ்டார் ஒபாமா தனது இரண்டாவது பதவிக்காலத்துக்காக நேற்று மீண்டும் பதவியேற்றுக்கொண்டார். அமெரிக்காவில் எது மாறினாலும் சில விஷயங்கள் மாறவே மாறா...
குறிப்பாக எழுதப்பட்ட அரசியலமைப்பு சட்டங்கள், பதவியேற்பு முறைகள், ஆட்சிக்கான வரம்புகளில் எந்தக் கொம்பன் வந்தாலும் மாற்றங்களைத் தன் இஷ்டப்படி செய்ய முடியாது.

மூன்றில் இரண்டு என்ன மூன்றில் மூன்று வந்தாலும் இப்படி யாப்பு, சட்டவாக்கங்களில் மாற்றம் செய்வதாக இருந்தால் நிறையப் படிகள் தாண்டி, கொங்கிரஸ், நீதிமன்றம் என்று நிறையப் பேரிடம் முறையான அனுமதி பெற்றேயாக வேண்டும்.

பாருங்கள், புதிய பதவிக்காலம் ஜனவரி 20ஆம் திகதி இடம்பெற்றேயாகவேண்டும் என்று விதிமுறைகள் இருப்பதால், நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆன போதும் அமெரிக்க அதிபராக பராக் ஒபாமாவும், துணை அதிபராக ஜோ பைடனும் நேற்றுத் தமது பதவிகளை வெள்ளை மாளிகையில் ஏற்றுக் கொண்டார்கள்.

இன்று மீண்டும் மக்கள் முன்னிலையில் வைபவ ரீதியாகப் பதவி ஏற்கவுள்ளார்கள்.

அமெரிக்க வரலாற்றில் இரு தடவை பதவியேற்பது இது ஏழாவது தடவை.
இருபதாம் திகதி ராசியில்லை, எட்டாம் நம்பர் தான் ராசி, எனவே இருபத்தாறாம் திகதி பதவி ஏற்கிறேன் என்று ஒபாமா சொல்லவுமில்லை; அப்படி சொன்னாலும் அங்கே அது நடக்காது.

அதேபோல, இரண்டு தடவைகளுக்கு மேலே பதவியில் இருக்கப் போகிறேன் என்று ஒபாமா ஆசைப்பட்டாலும், அவருக்குக் குடும்பப் பலம், பெரும்பான்மைப் பலம், கொங்கிரசிலும் ஏக அங்கீகாரம் இருந்தாலும்... ம்ஹூம்...

இந்த இரண்டாம் தடவையுடன் அவர் மதிப்புக்குரிய முன்னாள் ஜனாதிபதியாக, விரும்பினால் ராஜதந்திரியாக வலம் வரலாம் அவ்வளவு தான்.

எவ்வளவு தான் உலகின் மிகப் பலம் வாய்ந்த பதவியாக, சகல அதிகாரங்களும் கொண்ட பதவியாக அமெரிக்க ஜனாதிபதிப்பதவி கருதப்பட்டாலும், அமெரிக்க அரசியலின் வரையறுக்கப்பட்ட மூன்று கட்ட அரசியல் அமைப்பில் ஜனாதிபதி என்ற பதவி ஒன்று. அவ்வளவு தான்.

நிறைவேற்றதிகாரம்
சட்டவாக்கம்
நீதித்துறை
The three branches of the Federal Government are the Executive Branch, which is the leader or president and his cabinet. The legislative Branch, which is congress. And the Judicial Branch which is the Supreme Court.

இந்த மூன்றும் சரியான அதிகார வரம்புகளுக்குட்பட்டு இயங்குவதால் தான், என்ன தான் சிக்கல்கள் வருமிடத்திலும், அமெரிக்காவின் ஆட்சி, அதிகாரம் மட்டும் உலகில் நிலையாக நடந்துகொண்டிருக்கிறது.

பார்க்கப்போனால் இந்த உறுதியான + சரியாக நடைமுறைப்படுத்தப்படும் யாப்பு அமைப்பினால் அமெரிக்காவை ஜனநாயகத்தை உறுதியாகப் பின்பற்றும் உண்மை நாடாக நாம் கருதலாம்.

(கடந்த வருட எங்கள் அமெரிக்க சுற்றுலாவின்போது, இந்த நடைமுறைகள், இவற்றுள் அடங்கியுள்ள சிறு சிறு பொறிமுறைகள், பிணக்குகள் தீர்த்துக்கொள்ளும் அணுகுமுறைகள் பற்றியெல்லாம் இரு நாட்கள் முழு விளக்கம் அளிக்கப்பட்டபோது அமெரிக்க ஜனநாயகத்தின் மீது உண்மையில் பிரமிப்பு ஏற்பட்டது)

ஜனநாயகக் கட்டமைப்புக்குத் தேவையான இந்த மூன்று பொறிமுறைகளும் சரியான முறையில் எங்கெங்கு அங்கீகரிக்கப்படுகிறதோ, அங்கே மக்களின் உணர்வுகளும் மதிக்கப்படும், நீதி, நியாயமும் சரியாக நடைமுறைப்படுத்தப்படும்...

இதுபற்றியெல்லாம் இலங்கையில் இவன் பேசுகிறானே என்று யாரும் ஆச்சரியப்படாதீர்கள்...

அமெரிக்க ஒபாமாவுக்கும், நம் இலங்கையின் கௌரவ மகிந்த மாமாவுக்கும் (என் போன்ற சின்னக் குழந்தைகளுக்கு மாமா) சமாந்தரக் கோடு வரைந்து ஒப்பிடுவது அண்மைக்காலமாக அரசியல் ஞானிகளின் பொழுதுபோக்காக இருந்துவருகின்றது.

இது ஏன் என நேற்று கொஞ்சம் மண்டையைக் கிளறி ஆராய்ந்து பார்த்தால்... உலகின் மிக சக்திவாய்ந்த பதவி இப்போது ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட நம்ம ஜனாதிபதிப் பதவி தான்...
பின்னே....

நிறைவேற்றதிகாரம்
சட்டவாக்கம்
நீதித்துறை
ஆகிய மூன்றுமே இப்போது ஒரே இடத்தில்...

அதுவும் ஜனநாயக முறைப்படியே அந்த சக்தி வரம்புகளையும் தன் வசப்படுத்திய சாதனை வேறு யாருக்குக் கைவரும்?

J.R.ஜெயவர்த்தன உருவாக்கிய 'ஆணைப் பெண்ணாகவும், பெண்ணை ஆணாகவும் மட்டுமே மாற்ற முடியாத' மற்றெல்லாம் செய்ய முடிந்த நிறைவேற்றதிகார ஜனாதிப் பதவியை சரி நேர்த்தியாகப் பாவிக்கத் தெரிந்த ஒருவராக ஜனாதிபதி மகிந்தவை நான் காண்கிறேன்.

யார் யாரை எப்படி, எந்த இடங்களில் பயன்படுத்தாலம் என்ற Master Mind இந்த MR க்கு நன்றாகவே தெரிந்திருகிறது.
அண்மையில் கூட நான் ஒரு நிலைத் தகவலைப் பகிர்ந்திருந்தேன்..

"கருணாநிதியை எல்லாம் அரசியல் சாணக்கியர் என்று சொன்னவங்க நம்ம ராஜாவை பார்த்தா என்ன சொல்லுவாங்க?சாம,தான,தண்ட,பேதம் நான்கையும் சரியாகப் பயன்படுத்தும் ஒரே அரசியல் ஞானி.மூன்றில் ரெண்டு எல்லாம் எந்த மூலைக்கு...திவிநெகும என்ன நீதிமன்றம் என்ன.. இன்னும் வரும் பாருங்கோ....
கொற்றவ நின் நாமம் நீண்டு வாழ்க."

அதே போல பெரிய பெரும்பான்மை இல்லாமல் தேர்தலில் வென்ற பின்னர், மூன்றில் இரண்டாக நாடாளுமன்றில் பெரும்பான்மையை மாற்றிக் காட்டக் கூடிய ஆற்றல் எத்தனை பேருக்கு வரும்?
சிலர் பதவிக்கு, சிலர் பணத்துக்கு, சிலர் பயத்துக்கு, இன்னும் சிலர் எதுவும் இல்லாமலே... சில அரசியலில் ஆதரவு கொடுத்தால் தான் ஆதரவு என்பதல்ல.. எதிர்க்காமல் இருந்தாலே ஆதரவு தான்.

இது ஜனாதிபதிக்கும் அவர் தம் ஆலோசகர், ஆதரவு வட்டத்துக்கும் நன்கு தெரிந்துள்ளது.
இது அரசியல் ரீதியான , ராஜதந்திர வெற்றி.

சிறுபான்மைக் கட்சிகள் அத்தனையும் சின்னச் சின்னத் துண்டுகளாக உடைத்ததில் ஆரம்பித்த வெற்றி, எல்லாக் கட்சிகளையும், தனது கூட்டணியில் உள்ள கட்சிகளையும் கூட விட்டுவைக்காமல் தொடர்கிறது.

தனியாக நின்றால் தோல்வி என்ற நிலையிலிருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இப்போது தனிப் பெரும் கட்சியாக நிற்கிறது. ஏனைய கட்சிகள் எல்லாவற்றிலும் நான்கைந்து குழுக்கள் அல்லது கோஷ்டிகள்.

எதிரணியில் எதிர்ப்பதற்கு தோதான ஒருவர் இல்லாமல் தனிக்காட்டு ராஜாவாகத் தொடரும் ஜனாதிபதிக்கு , எதிர்க்கட்சித் தலைவராக ரணில் விக்கிரமசிங்க இருக்கும்வரை இவருக்கு எந்தவொரு தொல்லையுமில்லை.
இவர் ஆட்டிவைக்கும் தாளம்+ராகத்துக்கு அவர் ஆடுகிறாரோ என்ற சந்தேகம் எல்லோருக்குமே எப்போதுமே இருந்து வருகிறது.

மறுபக்கம் ஆளும் அணியிலும் அடுத்த இடத்தில் ஒருவர் இல்லை என்பது இன்னொரு முக்கியமான விடயம்.
யாரையும் இவர் வளர்க்கவில்லை என்ற குற்றச்சாட்டைத் தாண்டி, யாரும் வளரவும் இல்லை; வளர முனையவுமில்லை துணியவுமில்லை என்பதே மிகப் பொருத்தமானது.

இப்போது போகிறபோக்கில், அண்மையில் நடந்த நிகழ்வுகள் (நீக்கங்கள், மாற்றங்கள், விலக்கல்கள், விளக்கங்கள்) எல்லாவற்றையும் வைத்துப் பார்க்கையில் மன்னர் இன்னும் மன்னராகவே, இன்னும் ஒரு தசாப்தத்துக்குத் தொடர சிக்கல்கள் (சட்டத்தினால் கூட) இருக்காது என்றே தோன்றுகிறது.

அதற்குப் பிறகு என்ன, தசரதருக்குப் பிறகு ராமரும், ராஜராஜருக்குப் பிறகு ராஜேந்திரரும் வருவதில் ஆச்சரியம் இருக்காதே? அதற்கான திட்டமிடல்கள் இப்போது மாற்ற எண்ணப்பட்டுள்ள புதிய அமைச்சரவையிலிருந்து ஆரம்பிக்கலாம் என்கின்றன பட்சிகள்..

மூன்றாவதாக நீதித்துறை...
இது பற்றி நானும் சொல்லத் தான் வேண்டுமா? அண்மையில் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க (இந்தக் குடும்பப் பெயர் யாருக்கு இருந்தாலும் நம்ம MRக்குப் பிடிக்காதோ?) பதவி அகற்றப்பட்டதன் மூலம், இலங்கையின் தற்போதைய ஆட்சியில் நேரடியாக ஜனாதிபதியினால் வசப்படுத்தப்படாமல் இருந்த நீதித்துறையும் நேரடியாகக் கட்டுப்பாட்டுக்குள்.

நீதிமன்றம் vs நாடாளுமன்றம் மோதலில் ஜனாதிபதியின் வெற்றி எதிர்பார்க்கப்பட்டதே எனினும், உள்நாட்டு, சர்வதேச எதிர்ப்புக்களை அவர் புறந்தள்ளிய விதமும், எந்த ஒரு எதிர்ப்பையும் கணக்கில் எடுக்காமல் புதிய பிரதம நீதியரசராக அவருக்கு வேண்டப்பட்ட மொஹான் பீரிசை உடனடியாக நியமித்த விதமும் வேறு எந்த ஒரு அரச தலைவராலும், எந்த ஒரு நாட்டிலும் சாத்தியப்படக்கூடிய விடயமல்ல.

இப்போது சொல்லுங்கள்...

யாரை யாருடன் ஒப்பிடுவது?

சுகாதார சீர்திருத்தம், சமூக நடைமுறை சீர்திருத்தங்கள், ஓய்வூதிய சிக்கல்கள், ஏன் ஆப்கானிலிருந்து படை வெளியேற்றத்துக்கே கொங்கிரஸ் அவையின் ஆதரவையும், நீதிமன்ற அனுமதியையும் எதிர்பார்த்திருக்கும் ஒபாமா நம்ம தலைவருக்கு ஈடா?

மகிந்தரை ஆசிய ஒபாமா என்பதை விட, முடிந்தால் ஒபாமா - முடிந்தால், அமெரிக்க மகிந்த ஆகட்டும்...

யாரு கிட்ட... ;)

பிற்சேர்க்கை - ஒபாமா சமூக வலைத்தளங்களை சரியான நுட்பத்தோடும் சாதுரியத்தோடும் தன் அரசியல் வெற்றிகளுக்குப் பயன்படுத்தியிருந்தார்.

ஆனால் எங்கள் அரசியல் மேதை எல்லாவற்றிலும் வெற்றிக் கொடி நாட்டிய பிறகு தான் சமூக வலைத்தளங்கள் பக்கம் இளையவரோடு இணைகிறார்.
வெற்றிகள் தானாகத் தேடி வரவேண்டும், தான் தேடிப் போகக்கூடாது என்பதை சிம்போலிக்காக இவரது ட்விட்டர் வருகையும் பேஸ்புக் பிரவேசமும் உணர்த்துகிறதோ?
Twitter.com/PresRajapaksa
மன்னர் யாரையும் இதுவரை தொடரவில்லை; ஒபாமாவைக் கூட, ஆனால் இவரைத் தொடர்வோர் 642.

எப்பூடி ;)

October 12, 2012

உலக T20 கிண்ணத் தொடர் - ஆட்டம் முடிஞ்சாலும் ஆறாத விஷயங்கள் - #ICC World Twenty20


உலக T20 கிண்ண வெற்றி மேற்கிந்தியத் தீவுகளுக்குக் கிடைத்து பற்றி இப்பொழுது சொல்லவந்தால் "அண்ணோய் டீ ஆறிட்டுது" என்று குரல் வரும்....

கொஞ்சம் நேரக் குறைவு, அதைவிட அலுவலகத்தில் பெரிய பெரிய ஆணி புடுங்கல்கள், அலவாங்கு புடுங்கல்கள், சில அதிமுக்கிய முடிவுகளை எடுத்தல்கள் எல்லாம் இருந்ததால், வலைப்பதிவுப் பக்கம் வர முடியவில்லை.
இலங்கை அணி தோற்றதால் மனம் உடைஞ்சு போயிட்டீங்களா அண்ணே  என்று கேட்டு சந்தோசத்தில் மிதக்கும் அன்பு நண்பர்கள்....

கடமையில் என்றைக்கும் கண்ணாய் இருக்கும் உங்கள் லோஷன் தமிழ் மிரரில் உலக T20 கிண்ணம், உலக T20 கிண்ண இறுதி பற்றிய விரிவான கட்டுரையை வாசிக்குமாறு பரிந்துரைக்கிறேன்.


மேற்கிந்தியத்தீவுகள்: கொண்டாடப்படவேண்டிய கோலாகலச் சாம்பியன்கள்



இந்த உலகக் கிண்ண இறுதியிலும் இலங்கை அணி தோற்றதன் பின்னர் எழுந்த பரவலான கருத்துப் பகிர்வுகள், தொடர் நக்கல்கள், எதிர்வு கூறல்கள், எதிர்ப்புக்கள், விமர்சனங்கள், விவாதங்கள் ஆகியவற்றைத் தொடர்ந்து வாசித்து, அவதானித்து, பங்குபற்றி வந்தவன் என்ற அடிப்படையில் சில விஷயங்களை சுருக்கமாகவும் தெளிவாகவும் பகிர்ந்துவிட்டு செல்லலாம் என்று நினைக்கின்றேன்.


இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஆதரவு எனும் தளத்தில் நான் நிற்பதால் சிலருக்கு (வெகு சிலருக்கு) நான் துரோகி, எதிரி & கோமாளி.
அது பற்றி பரவாயில்லை.

அரசியல் ரீதியாக ஒரு அணியை , அதிலும் கிரிக்கெட் அணியை ஆதரிப்பது அல்லது எதிர்ப்பது என்பது பொருத்தமற்றது என்பதே என் வாதம்.
எங்கள் அடையாளமாக இருக்கப் போகிற இலங்கையன், இலங்கையில் பிறந்தவன் என்பது எப்போதும் இலங்கை கிரிக்கெட் அணிக்கான எனது ஆதரவுக்குக் காரணங்களில் ஒன்று.

சரி, இலங்கை கிரிக்கெட் அணியை விட மற்ற அணிகளைப் பிடித்திருந்தால் அந்த அணிகளுக்கான ஆதரவை வழங்குவதில் தவறேதும் இல்லை; ஆனால் இலங்கை அணி தோற்கவேண்டும்; இலங்கை அணி எந்த கிரிக்கெட் அணியோடு விளையாடினாலும் எதிர்க்கவேண்டும் என்ற எண்ணப் பாங்கில் பலர் இருப்பதை அவதானிக்கிறேன்.

அரசியல் காரணங்கள், இலங்கை அரசாங்கம், இராணுவத்தைப் பலர் இதற்கான காரணங்களாக சுட்டி பலர் வாதிட்டதை அவதானித்தேன்.
இதில் அளவுக்கதிகமாக இறங்கி என்னை 'துரோகி' ஆக்கிக்கொள்ள எனக்கு ஆசையில்லை.

ஆனால் தமிழ்த் தேசியம், தமிழருக்கான விடுதலை ஆகியவற்றுக்காக இலங்கை கிரிக்கெட் அணியை எதிர்த்தே ஆகவேண்டும்; இந்த எதிர்ப்பு உலகம் முழுதும் தொனிப்பதால் தமிழருக்கான சர்வதேச ஆதரவும் தமிழர் பிரச்சினை பற்றிய விழிப்புணர்வும் ஏற்படும் என்று ஒரு சிலர் கூறுகிறார்கள்.

எங்கள் ஆழமான, உணர்வுபூர்மான போராட்டம், கிரிக்கெட்டை எதிர்த்து இலங்கை கிரிக்கெட் அணியின் தோல்வியைக் கொண்டாடி ஆறுதல் படும் அளவுக்கு மழுங்கிவிட்டதா என்ற கவலை என்னைப் போல் பலருக்கு.

சிம்பாப்வேயின் ஹென்றி ஒலோங்கா, அன்டி பிளவர் போன்றோர் கறுப்புப் பட்டி அணிந்து போராடியதை ஒரு சிலர் உதாரணம் காட்டியிருந்தார்கள்.
அதன் அடிப்படை விடயத்தை மறந்தார்களா தெரியவில்லை...

நான் இதில் இன்னும் விளக்கவோ, விவாதிடவோ தயாராக இல்லை.
என் நிலைப்பாடு மிகத் தெளிவானது...

இலங்கை கிரிக்கெட் அணிக்கான என் ஆதரவானது எந்த விதத்திலும் இலங்கியில் நடந்த இனப்படுகொலையை மறைக்க ஒரு ஆயுதமாக இருக்கப் போவதில்லை.

இலங்கை அணிக்கான ஆதரவு ஜனாதிபதிக்கான ஆதரவும் கிடையாது.
இலங்கை கிரிக்கெட் அணியைக் கண்மூடித்தனமாக எதிர்ப்பதன் மூலம் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துவிடலாம் என்று நினைப்பவர்கள் யாராவது இருந்தால் அதைவிட முப்பது வருடங்களாக வெளியுலகத்தை எட்டிப் பார்க்கவைத்த எக்கச்சக்கமான விடயங்கள் செய்யாததையா இவை செய்துவிடப் போகின்றன?

அடுத்து பேஸ்புக்கில் இலங்கை கிரிக்கெட் அணியின் தோல்வியைக் 'கொண்டாடி' மகிழ்ந்து இலங்கை அரசின் இனப்படுகொலை, தமிழரை ஒதுக்குவது பற்றிய விடயங்களால் தான் இலங்கை கிரிக்கெட் அணியை எதிர்ப்பதாகச் சொன்ன பலரில் சிலரது Facebook Wallஐப் பார்த்தேன்.... பூராக இந்திய அணியின் ஆதரவு நிலைத் தகவல்கள், படங்கள், ஆதரவு கோஷங்கள்..
இனி நான் ஏதாவது சொல்லணுமா?

சிலருக்கு சிலதைப் புரியவைப்பதை விட நாம் முட்டாள்களாக, முரடர்களாக, கெட்டவர்களாக, சுயநலவாதிகளாக, துரோகிகளாக அல்லது கோழைகளாகவே இருந்துவிட்டுப் போகலாம்.
-------------------------------

இன்னொரு விடயத்தையும் நான்  தெளிவுபடுத்த வேண்டும்...

ஒரு ஊடகவியலாளனாக, ஒலிபரப்பாளனாக நான் எந்த செய்திகளுக்கும் (விளையாட்டு செய்திகளுக்கும் கூட) நான் நடுநிலையாளன் தான்.
ஆனால் இலங்கையில் இருந்து இயங்கும் எமது அடையாளம் இலங்கை. இதனால் இலங்கைக்குத் தான் செய்திகளில், அது விளையாட்டு செய்தியாக இருந்தாலும் முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டியது இலங்கைக்குத் தான் என்பதை அனைவரும் மனதில் கொள்க.

விளக்கம் தேவையாயின் ஒலிம்பிக் நேரத்தில் BBC பிரித்தானிய அணிக்குக் கொடுத்த முக்கியத்துவத்தையும், NDTV, Cricinfo, TOI, Star Networks முதலாயன இந்தியாவுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தையும் பாருங்கள்.

அதே போல இந்த வலைத்தளத்தில் நான் என் சொந்த விருப்பு வெறுப்புக்களை மட்டுமே பொதுவாகப் பகிர்ந்துகொள்கிறேன்.
----------------------------------

இந்த உலக T20 யின் பின்னர், மஹேலவின் T20 தலைமைப் பதவித் துறப்பு இலங்கை அணிக்கு ஒரு புதிய தலைமைத்துவத்தையும், புதிய வழியில் இலங்கை இனி பயணிக்கவேண்டிய கட்டாயம் இருப்பதையும் காட்டி இருக்கிறது.

மஹேல ஜெயவர்தன மீண்டும் தலைமைப் பதவியை ஏற்கும்போதே சொன்னது போல வருகின்ற டிசெம்பர் மாதத்துடன் டெஸ்ட், ஒருநாள் தலைமைப் பதவிகளிலிருந்தும் விலகுவதாக உள்ளார்.

மத்தியூசைத் தலைமைப் பதவிக்குத் தள்ளி இனிப் பழக்கத்தான் வேண்டும்.. ஆனால் தடுமாற்றம் கொஞ்சக் காலத்துக்கு இருக்கத் தான் போகிறது.

சாம்பியன்கள் ஆன மேற்கிந்தியத்தீவுகளின் தலைவர் டரன் சமியை இனிக் கொஞ்சக் காலத்துக்காவது யாரும் இவ்வளவு காலமும் கிண்டலடித்துத் தள்ளியது போல Non playing captain என்று சொல்லமுடியாது.

நல்லதொரு ஆளணி முகாமைத்துவம் தெரிந்த ஒருவராக சமி தன்னை ஆரம்பம் முதல் நிரூபித்து வந்திருக்கிறார் என்பதை நான் மீண்டும் நினைவூட்டுகிறேன்.

ஆஸ்திரேலிய அணித்தலைவர் ஜோர்ஜ் பெய்லியும் கடைசியாக அடித்த ஒரு அரைச்சதம் மூலமாகத் தன் இருப்பைக் கேள்வி கேட்டவர்களைக் கொஞ்சமாவது மௌனிக்க வைத்திருக்கிறார் போலும்.

இந்தியாவின் அரையிறுதிக்கு முன்னதான வெளியேற்றத்தை அடுத்து தோனி மீது மீண்டும் விமர்சனங்கள்..  துடுப்பாட்ட வரிசையில் முன்னே ஏன் அவர் வரவில்லை; துடுப்பாட்ட வரிசை அடிக்கடி மாற்றப்படுவது, அணி வரிசை மாற்றப்படுவது என்றெல்லாம் இனிப் புதிது புதிதாய்க் கிளம்பும்..

அதற்கெல்லாம் சேர்த்துத் தான் இன்னும் மூன்று வருடங்களுக்கு மேல் தான் விளையாடப்போவதில்லை என்று உறுதிபட தோனி அறிவித்துவிட்டார்.

மற்றைய அணித்தலைவர்களுக்கு இத்தொடரின் வெற்றி-தோல்விகள் பெரிதாக தாக்கம் எதையும் கொடுக்கப் போவதில்லை.
--------
நடந்து முடிந்த உலக T20 கிண்ணம் தொடர்பான இன்னும் சுவாரஸ்யங்கள், சாதனைகள், முக்கியமான விடயங்கள் குறித்து தமிழ் மிரரில் இன்னொரு கட்டுரை எழுதத் திட்டமிட்டிருக்கிறேன்.

பருவப்பெயர்ச்சி மழை இந்த உலகக் கிண்ணப் போட்டிகளைப் பதம் பார்க்கப் போகிறது என்று பதறிக்கொண்டிருந்த எமக்கு, அதை விட, இறுதிப் போட்டியில் மழை வந்து விளையாடிவிடப் போகிறது என்று மஹேல ஜெயவர்தன உட்பட நாம் அனைவருமே தேவையற்று டென்ஷன் ஆனாலும் மழை விட்டுக்கொடுத்திருந்தது.
அதற்குப் பிறகு கொட்டிய மழையும், கிழக்கு மாகாணத்தில் தொடர் மழையும் இப்போது எப்பூடி என்று கேட்க வைத்திருக்குமே ,....

அதற்கிடையில் கிரிக்கெட் மழை விடாமல் தொடர்கிறது. தென் ஆபிரிக்காவில் சம்பியன்ஸ் லீக்.
உலக T20 கிண்ணம் போல இதனைத் தீவிரமாகத் தொடராவிட்டாலும் பார்க்கிறேன்..

இலங்கையைப் பிரதிநிதித்துவம் செய்த ஊவா நெக்ஸ்ட் தகுதிகாண் சுற்றோடு வெளியேறியிருக்க, இனி பத்து அணிகள் மோதுகின்றன....

தத்தம் நாடுகளுக்காக உலக T20 யில் ஒன்றாக விளையாடிய சர்வதேச வீரர்கள் நான்கு இந்திய அணிகள், இரு ஆஸ்திரேலிய அணிகள், இரு தென் ஆபிரிக்க அணிகள், நியூ சீலாந்து, இங்கிலாந்திலிருந்து தலா ஒவ்வொரு அணிகளுக்காக எதிரிகளாக விளையாடப் போகிறார்கள்..
ரசிக்கலாம்...



September 12, 2012

மு...


மு - முதலமைச்சர்

முஸ்லிம் காங்கிரசின் முடிவு என்ன என்ன என்று எதிர்பார்த்தே மூன்று நாட்கள் கசிந்துள்ள நிலையில்.. கடன்காரர்களை நேரடியாக சந்திக்காமல் வீட்டில் மனைவி, பிள்ளைகளை அனுப்பி "அவர் வீட்டில் இல்லை" என்று அனுப்பும் குடும்பத் தலைவர் போல இரவும் ஹக்கீமும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசும் நடந்து கொண்டிருக்கும் நிலையை இன்று மாலையில் எல்லோரும் அறிந்திருப்பீர்கள்.

இதில் ஸ்ரீ.ல.மு.கா வை தமிழ்த் தரப்பு திட்டித் தீர்ப்பதோ, இல்லை ஏமாற்றிவிட்டார்கள் என்று வஞ்சம் வளர்ப்பதோ என்னைப் பொறுத்தவரை அர்த்தமற்றது என்றே தோன்றுகின்றது.

அரசாங்கம் வைக்கும் செக் மேட் எப்படியானவை என்றும் தன் பங்காளிக் கட்சிகளை எப்படியெல்லாம் தன்னுடன் வைத்திருக்க முயலும் என்றும், வெளியே இருக்கும் கட்சிகளையும், ஆளுமையுள்ள தலைவர்களையும் எப்படித் தன்னுடன் இணைத்துக்கொள்ள முயற்சிகளை எடுக்கும் என்பதும் அரசியலைத் தொடர்ந்து அவதானிப்போருக்குத் தெரியும்.

இப்போது ஸ்ரீ.ல.மு.காவின் நிலையும் அவ்வாறே. மத்திய அரசில் பங்காளிக் கட்சியாக இருக்கும் நிலையில் மாகாண அரசில் தனித்துப் போட்டியிட்டதே ஒரு இணைந்த ராஜதந்திர முடிவு என்று அரசியல் புரிந்த அனைவருக்குமே தெரியும்.
பள்ளிவாசல் உடைப்புக்களினால் மஹிந்த அரசாங்கம் மீது முஸ்லிம் மக்களுக்கு இருந்த அதிருப்தியை வேறு விதமாக மாற்றி வாக்குகளை மரம் பக்கம் இழுத்து இப்போது மீண்டும் சேரப் போகிறார்கள்.
அவ்வளவு தான்..



சரி, சிலவேளை வாக்களித்த முஸ்லிம் மக்களும், ஏன் வெற்றி பெற்ற வேட்பாளர்களும் கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு சேர்ந்து ஆட்சியமைத்து முஸ்லிம் முதலமைச்சர் என்ற கனவை நனவாக்க விரும்பினாலும், ஏன் ரவூப் ஹக்கீமே விரும்பினாலும் கூட முடியாத அழுத்தம் ஒன்று கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது மிகத் தெளிவு.

கிழக்கு மாகாண சபையில் விருப்பு வாக்குத் தெரிவுகள், சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆளும் கட்சியின் முதலாவது தெரிவாக வந்தமை, முடிவுகள் வெளிவந்த நாள் முதல் அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களும் ஜனாதிபதியும் ஆட்சி தாம் தான் என்று அடித்து அடித்து அறிவித்ததும் சொல்பவற்றை நாம் கவனிக்கவேண்டும்.


ஸ்ரீ.ல.மு.கா வைப் பொறுத்தவரை என்ன தான் ராஜதந்திர நாடகமாக இது இருந்தாலும் தன் பேரம்பேசும் பலத்தை அதிகரித்துக்கொள்ளவும் , இத்தனை உடைவுகள், பிளவுகளுக்குப் பிறகும் தமது கட்சியே முஸ்லிம்களின் பிரதானமான கட்சி என்பதைத் தன வாக்காளர்களுக்கும், அரசாங்கத்துக்கும் ஆணித்தரமாகக் காட்டியுள்ளது.

இன்று இரவு வரை கிடைத்த உறுதிப்படுத்திய ஆனால் உத்தியோகப்பற்றற்ற தகவல்களின் அடிப்படையில் அரசாங்கம் இன்று மாலையில் உறுதியாக அறிவித்த கிழக்கு மாகாணக் கூட்டு பற்றிய முடிவின் பின்னரும், ஸ்ரீ.ல.மு.கா உத்தியோகபூர்வமாக எதையும் அறிவிக்கவிரும்பவில்லையாம்.

ஆளும் கட்சியுடன் சேர்வது என்று கிட்டத்தட்ட முடிவான பின்னரும் கூட அரசாங்கம் இப்படி பகிரங்க அறிவிப்பைத் தம்மை மீறி முதலில் அறிவித்தபின்னர் பேசிக்கொண்டிருக்கிற பேரங்கள்(இப்போது தானா என்று கேட்டு சிரிக்காதீர்கள்) அரசாங்கத்தால் பெயரளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு கொஞ்சமாவது முகத்தை மக்கள் மத்தியில் காட்டலாம் என்று நாளை வரை காத்திருக்கிறார்கள் போலும்.

முதலில் அரசாங்கப் பேச்சாளர்கள் முதலமைச்சரின் பெயரை ஜனாதிபதி அறிவிப்பார்கள் என்றார்கள்.  அரசாங்கம் முஸ்லிம் முதலமைச்சரை விடத் தமிழர் ஒருவர் முதலமைச்சராக வருவதையே விரும்புகிறது என்று அநேகர் பேசியிருந்தநிலையில், கேட்டறிந்த தகவல்களின் படி ஜனாதிபதியின் நம்பிக்கையும் விருப்பும் பெற்ற இருவர் இடையில் சுழற்சி அடிப்படையில் முதலமைச்சர் பதவி பகிரப்படும் என்று தெரிகிறது.

(ஒருவர் தமிழர், அடுத்தவர் முஸ்லிம்)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழரும் ஆட்சிப் பங்காளராக அரசாங்கத்துடன் சேர ஆசைப்பட்டாலும் (ஸ்ரீ.ல.மு.கா வுடன் சேர்வதற்கு முதலமைச்சர் பதவியையே விட்டுக்கொடுக்கத் தயாரானவர்கள் அல்லவா?) கூட அரசாங்கம் அதை அப்போது விரும்பியிருக்குமா என்று இப்போது கேட்பதை விட, சிறுபான்மை ஒற்றுமை என்ற கோஷங்களை விட சேர்ந்து எடுப்பதை எடுத்திருக்கலாமோ என்று இப்போது அங்கலாய்க்கலாம்.

எதிர்ப்பரசியலோடு தனித்திருக்காமல் த.தே.கூ அடுத்த கட்டம் பற்றியும் யாருமில்லாததால் கிடைக்கும் வாக்குகளை விட இவர்களை விட்டால் யாருமில்லை எனும் அளவுக்கு வாக்குகள் கிட்டவேண்டும் என்று ஆழமாக `மக்கள் மத்தியில் வேரூன்ற செயற்படவேண்டும்.
நாடகத்தின் நாளைய காட்சி வரை காத்திருப்போம்......



மு - முகமூடி


அறப்படிச்ச பல்லி கூழ்ப்பானையில் வீழ்ந்தது மாதிரி என்று ஒரு பழமொழி இருக்கிறது பாருங்கள். அது அச்சொட்டாக இயக்குனர் மிஷ்கினுக்குப் பொருந்துகிறது.

மற்றவர்களுக்கு அளவுக்கதிகமாகப் போதிப்பவர்கள் தாம் ஒன்றும் பெரிதாக சாதிப்பதில்லை என்று முகமூடி மூலம் காட்டிவிட்டார் இந்த 'உலக மகா' இயக்குனர்.

Batman - The Dark Knight Rises பாதிப்பில் அப்படியான ஒரு சூப்பர் ஹீரோ படத்தைத் தமிழில் தர நினைத்தது தப்பில்லை. ஆனால் தந்த விதமும் தடுமாறிய இடங்களும் தான் படத்தைப் பப்படம் ஆக்கிவிட்டன.
இடைவேளையுடன் படத்தை முடித்திருந்தால் .... இப்படி நினைக்கவே சந்தோஷமா இருக்கிறது.
ஜீவா, நாங்கள், மிஷ்கின், தயாரிப்பாளர் எல்லாரும் தப்பி இருக்கலாம்.
மிஷ்கினின் சில specialityகள், ஒளிப்பதிவு, ஜீவாவின் உழைப்பு, வாயை மூடி சும்மா இருடா பாடல் காட்சியமைப்பு, சில இயல்பான நகைச்சுவைக் காட்சிகள் ஆகியவை ஆறுதல்..
மிச்ச எல்லாமே மிஷ்கினுக்குப் பாடம்.
எங்களுக்குத் தலைவிதி...

சித்திரம் பேசுதடி, அஞ்சாதே ஆகியவை பார்த்தபிறகு , முகமூடி பற்றி படுமோசமாகப் பலர் பேசியபோதும்கூட இவ்வளவு ஏனைய படைப்பாளிகள், படங்கள் பற்றி வாய் கிழியப் பேசுறாரே ஏதாவது விஷயம் இருக்கும் என்று நம்பி திரையரங்கு போனேன் பாருங்கள்..

இதுவும் தேவை தான்.

முகமூடி - மொக்கை 


ICC World Twenty20 போட்டிகள் ஆரம்பமாவதால் இனி ஐயா கொஞ்சம் பிசி தான்..
அணிகளின் வீரர்கள், தலைவர்கள் ஆகியோரின் ஊடகவியலாளர் சந்திப்புக்கள் , போட்டி ஆயத்தங்கள், பயிற்சிப் போட்டிகளின் விபரங்களை சுருக்கமாக உடனுக்குடன் ட்விட்டர் மூலமாகத் தரவும், 18ஆம் திகதி முதல் போட்டி ஆரம்பமாக முதல் ஒரு முழுமையான கணிப்பு / முன்னோட்ட இடுகை ஒன்றைத் தரவும் எண்ணியிருக்கிறேன்....

சந்திக்கலாம்.

September 05, 2012

காலத்தின் கட்டாயம்??!! - தேர்தல் இடுகை


இன்னும் மூன்று நாட்களில் மூன்று மாகாண சபைத் தேர்தல்கள்..

இதிலே தமிழ் பேசுவோரின் எண்ணிக்கை குறைவான வடமத்திய மாகாணத்தை விட்டுவிடலாம்..
ஆளும் கட்சி நிச்சயம் வெல்லப் போகின்ற ஒரே மாகாணம் இதுவாகத் தான் இருக்கும். 

யாருக்கு வாக்களிப்பது? எப்படிப்பட்டவரைத் தெரிவு செய்வது?

யாரோ சொல்லி எப்பவோ கேட்டது - வேட்பாளர் தெரிவும் வாக்குத் தெரிவும் காதல் போன்றது என்று.. 
நாம் தெரிவு/முடிவு செய்தபிறகு வேறு யார் என்ன சொன்னாலும், யார் பிரசாரம் பண்ணினாலும் மாற்ற முடியாதவாறு உறுதியாக இருக்கவேண்டும்..
(அத்தெரிவு சரியாக இருக்கும்பட்சத்தில்)




இன்று காலை விடியலில் (வழமையாகவே தேர்தல்களுக்கு முன்னதாக செய்கின்ற நிகழ்ச்சி போல) இம்முறை வாக்களிக்கும்போது வாக்காளர்கள் கவனத்தில் எடுக்கவுள்ள முக்கிய விடயம் என்ன என்பது பற்றிக் கேட்டிருந்தேன்.

இதன்மூலமாக ஓரளவுக்கு வாக்காளரின் நாடித்துடிப்பை சரிபார்த்து அறிந்துகொள்ளலாம் என்பதும் ஒரு மினி கருத்துகணிப்பாகவும் இது அமைந்துவிடும் என்பதும் உண்மை. 

கிழக்கில் வீடும், மரமும் அநேகரின் தெரிவு என்பது தெரிந்ததே.. அதேபோல தமிழ் பேசும் வாக்காளர்கள் செறிந்துவாழும் சபரகமுவா மாகாணத்தில் சேவல் என்பது தமிழ் வாக்குகளை சிதறாமல் இருக்கச் செய்யும் என்பதும் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

இது இன்று கருத்துத் தெரிவித்த பலரும் ஏற்றுக்கொண்ட விடயமாக இருந்தது.
எனினும் வேறு தெரிவுகள் இல்லாததால் இருப்பதில் பரவாயில்லை என்று கருதும் மனநிலையுடன் வாக்களிக்கப் போகிறார்கள் என்றே உணர்கிறேன்.

கிழக்கு மாகாண சபையில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 37. (தேர்தல் மூலம் 35 & போனஸ் ஆசனங்கள் 2 ) 
திருகோணமலை மாவட்டம் - 10
மட்டக்களப்பு - 11
அம்பாறை - 14

சபரகமுவா மாகாண சபையில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 44. (தேர்தல் மூலம் 42 & போனஸ் ஆசனங்கள் 2 )
இரத்தினபுரி -24
கேகாலை - 18

எத்தனை உறுப்பினர்களை எந்தக் கட்சிகள் பெற்றுக்கொள்ளும் என்ற ஊக்க விளையாட்டுக்களை உங்கள் தெரிவுக்கே விட்டுவிடுகிறேன்.  



எப்போதும் வலியுறுத்துவது போல, கட்டாயம் வாக்களிக்கச் செல்லுங்கள்; உங்கள் வாக்குகளை நீங்களே வழங்குவதை உறுதிப்படுத்துங்கள்; உங்கள் வாக்குரிமையை விட்டுக்கொடுக்காதீர்கள்; தவறானவர்களைத்தெரிவு செய்யாதீர்கள் என்ற வழமையான ஆலோசனைகளுடன் ... 
நேயர்களின்/ வாக்காளர்களின் எதிர்பார்ப்புக்களைக் கேட்டபோது..



சிறுபான்மையின் வாக்கு சிதறக்கூடாது, தமிழ்ப் பிரதிநிதித்துவம் காக்கப் படவேண்டும், மற்றவர்களை நம்ப முடியாது, இருப்பவர்களில் இவர்கள் பரவாயில்லை, வேறொரு தெரிவும் இப்போதைக்கு இல்லை, சர்வதேசத்துக்கு நாம் பிளவு பட்டுள்ளோம் என்ற தவறான கற்பித்தல் போய்விடக் கூடாது என்ற காரணங்கள் தமிழர்களாலும்,

உள்ளூர் அபிவிருத்தி, உரிமைகளைக் காப்பது, இன ஒற்றுமை, பேரம் பேசும் தன்மை, வால் பிடிப்பது மட்டுமே நோக்கமாக இல்லாமல் பேசவும் செய்கிறார்கள் என்று முஸ்லிம்களும் காரணங்களை அடுக்கினார்கள்.

சபரகமுவா மாகாணத்தைப் பொறுத்தவரை பிரதானமான மலையகத் தமிழ்க் கட்சிகள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து தமிழ்ப் பிரதிநித்துவத்தைக் காக்க உறுதிப் பட்டுள்ளமை மக்களுக்குப் பெரிய ஆறுதலைக் கொடுத்துள்ளது. 
இப்படியான ஒற்றுமை எப்போதாவது தானே சாத்தியப்படுகிறது?

வாக்களித்து என்னாவது, எல்லாரும் கள்ளன்கள் தான். வாக்குக் கேட்டு வென்ற பின் எல்லாருமே மாறி விடுகிறார்கள்.. இதனால் தேர்தலில் நம்பிக்கை இல்லை என்றும் கணிசமான கருத்துக்கள் வந்திருந்தன.


இந்த நம்பிக்கையீனத்தைத் துடைத்தெறிய அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களும் என்ன செய்யப் போகிறார்கள்? இதனால் வாக்கு சதவீதம் கணிசமாக சரிந்தால் பாதிப்பு எமக்குத் தானே? நாம் என்ன செய்யப் போகிறோம்?

எவ்வளவு காலம் வேறு ஒன்றும் இல்லை என்பதனால் இருப்பதில் திருப்தி காணப்போகிறோம்?
நம்பிக்கையீனத்தையே பிரதானமாகக் கொண்டு எவ்வளவு காலத்துக்கு சலிப்புடன் வாக்களிப்பதை வெறும் கடமைக்காக செய்யப் போகிறோம்?
இதற்கான செயற்பாடுகளை எதிர்காலத் தலைமுறைக்கு விட்டிருக்க முடியாது.. உடனேயும் சட்டுப்புட்டென்று ஏதும் செய்யவும் கூடிய நிலை எம்மத்தியில் இல்லை.

நம்பிக்கை ஏற்படுத்தும் எதிர்காலத்துக்கான அரசியல் தலைமையை தேடிக்கொள்ள இந்தத் தேர்தலும் வழிகாட்டப் போவதில்லை.
குறைந்தபட்சம் வட மாகாணத் தேர்தலுக்கு முன்னாவது??

முஸ்லிம்களும் தெளிவாக ஒரு பக்கம் நிற்பதாகத் தெரியவில்லை. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசே அநேகரின் தெரிவாக இருந்தாலும் (இன்று கேட்டவரை & நண்பர்களிடம் அறிந்த வரை) - அந்தந்த ஊர்களில் உள்ளூர் அரசியல்வாதிகளின் செயற்பாடுகளின்படி வெற்றிலையும் கூட சில இடங்களில் செல்வாக்காக இருக்கிறது.

ஆனால் முஸ்லிம் தலைமைகள் உறுதியாக இருக்கும் அளவுக்காவது நம் தமிழ்த் தலைமைகள் இல்லை என்பதை முன்பே ஒரு இடுகையில் கவலையுடன் பகிர்ந்திருந்தேன்.
பிரதியீடுகள் இன்னும் தயாரில்லை என்பது 'மூத்த' தலைமைகளுக்கு ஆறுதலாக இருக்கும்..

ஆனால் ஒன்று அவர்களுக்குப் பாடம் கற்பிக்கவோ, அழுத்தம் கொடுக்கவோ இது தகுந்தவேளை இல்லை என்பதால் வீட்டுக்கு வாக்களித்தே ஆகவேண்டும் என்பது அவர்கள் சொல்வது போல ' காலத்தின் கட்டாயம்' தான்.

July 20, 2012

என்னமோ நடக்குது இலங்கையிலே..


தமிழர் பிரதேசங்களில் புத்தர் சிலைகள்; கட்டாயக் குடியேற்றம்; தமிழர் மற்றும் முஸ்லிம்கள் மீள் குடியேறத் தடை; ஆஸ்திரேலியாவுக்கு அகதிகள் படகில் செல்கிறார்கள்; படகில் செல்ல முயன்றோர் கைது; கைதாகியுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தாமதம்; தாக்குதல்; தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய பூமிகள் அபகரிக்கப்படுகின்றன இவ்வாறெல்லாம் தினம் தோறும் செய்திகளில் நாம் பார்ப்பவை; பதறுபவை; கொதிப்பவை; சில சமயம் என்ன செய்ய முடியும் எம்மால் என்று வெறும் பெரு மூச்சோடு மட்டும் வாளாவிருப்பவை.

மேலே குறிப்பிட்ட ஒவ்வொரு விடயத்திற்கும் இடையில் நெருங்கிய தொடர்புகள் கண்ணுக்குத் தெரியாமல் இருப்பதை இலங்கை அரசியல், நாட்டு நடப்புக்களை அவதானிப்பவர்கள் உணர்வார்கள்.

யுத்தம் முடிந்து முழுமையாக நான்கு ஆண்டுகள் ஆன பின்னரும் இன்னமும் மீள் குடியேற்றம் ஒழுங்காக நடக்கவில்லை..
எத்தனை பேர் எத்தனை விதமாகக் குரல் எழுப்பியும், எங்கெங்கோ இருந்து அழுத்தங்கள் வந்தும் கண் துடைப்பாக அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒன்றிரண்டு மீள் குடியேற்றங்கள் நடந்தனவே தவிர, கட்டாயக் குடியேற்றங்களும், 'தொல் பொருள்' கண்டெடுப்புக்களின்படி புதிய விகாரைகளும் அதனுடன் தொடர்புபட்டவர்களின் குடியேற்றங்களும் தான் சீராக, வேகமாக நடந்து வருகின்றன.

அது சரி, யுத்தம் நடந்து இத்தனை ஆண்டுகளின் பின்னர் ஏன் இவ்வளவு பெருந்தொகையானோர் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளுமே ஆஸ்திரேலியாவுக்குப் படைஎடுக்கவேண்டும்?
அதுவும் உயிரைப் பணயம் வைத்துப் படகுப் பயணம்..
அதிலும் ஆஸ்திரேலியா அண்மைக் காலத்தில் கருணை காட்டவில்லை; கிறிஸ்மஸ் தீவிலும் கொக்கோஸ் தீவிலுமே  செல்வோரை எல்லாம் தடுத்து வைத்துள்ளது என்றும், தெரிந்த பின்னரும் இப்படிப்பட்ட உயிராபத்தான பயணங்களின் அவசியம் என்ன?

தலைக்கு செலுத்தப்படும் தொகை குறைந்த பட்சம் 15 லட்சம் ரூபாய்.
*(ஒரு மாதத்துக்குள் மூன்று மடங்காக உயர்ந்துள்ளது.)

வெற்றிகரமாக கிறிஸ்மஸ் தீவுகளை அடைந்த படகுகளில் (மட்டுமா தெரியாது) சில சிங்களவர்களும் இருந்துள்ளார்கள் என்ற தகவல் வந்துள்ளது.

மாதாந்தம் கிழக்குக் கரையோரப் பிரதேசங்களில் இருந்து குறைந்தது இரண்டாயிரம் பேராவது இவ்வாறு படகுகளில் 'ஆஸ்திரேலியா' செல்கிறார்களாம்.
ஏற்கெனவே இலங்கையில் தமிரின் சனத்தொகை வளர்ச்சி வீதம் மிகக் குறைவடைந்து செல்லும் நிலையில், அத்துமீறிய குடியேற்றங்கள் ஒருபுறம் + இப்படியான இடப் பெயர்வுகள்.

இந்த கடற் பயணங்களும் , கைதுகளும் வலிந்து நடக்கிறதோ? வலிமையான ஒரு பின்னணியோ என்று அந்தப் பிரதேச மக்கள் மட்டுமல்ல நாடு முழுக்க சந்தேகம் இருக்கிறது.
அதற்கேற்பவே ஒன்று விட்ட ஒரு நாள் (அண்ணளவாக) பயணங்களும், படகுகள் கவிழ்வதும், கைதுககுமாக நடந்து கொண்டிருக்கின்றன.

இவ்வளவு இறுக்கமாகக் கரையோரப் பாதுகாப்பு + கண்காணிப்பு இருந்தும் இப்படியான ஆட் கடத்தல்கள் நடப்பதாக இருந்தால் தரகர்கள், இடைத் தரகர்கள் யார் எனத் தெரியவேண்டுமே.
உண்மைகள் எப்போதாவது வரலாம்...

முன்பொரு காலம் இருந்தது தமிழரின் வீடுகளிலும் அவர்கள் வணங்கும் தெய்வப் படங்களைத் தவிர இன்னும் மூன்று அல்லது நான்கு படங்கள்/ சிலைகள் நிச்சயம் இருக்கும்.
மகாத்மா காந்தி, பாரதியார், MGR , புத்தர்.


புத்தரை எம்மவர்கள் அமைதியின் சின்னமாக, சமயம் கடந்து ஒரு ஆன்மீக அடையாளமாகப் பார்த்து மதித்து வந்தார்கள்.
புத்தர் இன்னமும் மாறவில்லை; ஆனால் அவரை இப்போது ஒரு ஆக்கிரமிப்பின் அடையாளமாக மாற்றிவிட்டார்கள்.
எங்கெங்கே புத்தர் சில முளைத்தாலும் இப்போது வணங்குவதை விட, அந்த அமைதி தவழும் முகத்தை ரசிப்பதை விட பயத்தோடு சந்தேகத்தோடு பார்க்க ஆரம்பித்துள்ளார்கள் எம்மவர்கள்.

அதிலும் சிலைகள் முளைத்துள்ள இடங்களைப் பாருங்கள்....
முதலில் கோணேஸ்வரம் - இப்போது அங்கே மலையேறி ஆலயம் செல்லும் வழியில் ஒரு புத்த வழிபாட்டுத் தலமே பெரிதாக எழுந்துள்ளது
கேதீஸ்வரம்
மடு
கதிர்காமம் எப்பவோ கத்தரகம ஆகிவிட்டது.
அம்பாறையில் முஸ்லிம்கள் & தமிழரின் பாரம்பரியப் பிரதேசங்கள் திகவாபி ஆகிவிட்டன.

இது பற்றி தனி மனிதர்களாக, ஊடகங்களாக இன்னமும் செய்திகள், குமுறல்கள் வந்து கொண்டே இருந்தாலும் அந்தந்தப் பகுதியின் மக்கள் பிரதிநிதிகள் குரல் எழுப்பாது குறைந்துவிட்டது. அலுத்து விட்டார்களோ? அல்லது குரல் எழுப்பினால் குரலே இருக்காது என்று ஏதாவது தகவல்?

போன ஞாயிறு தினக்குரலில் ஒரு செய்தி வெளியாகி இருந்தது. கன்னியாய் வென்னிரூற்றுப் பகுதியில் இருந்த அந்தியேட்டி மேடம் என்ற இந்துக்களின் புனித மடம் ஒன்று  அடையாளம் இல்லாமல் செய்யப்பட்டுவிட்டதாக.
கடந்த வருடம் கன்னியாய் சென்ற போதே அங்கே இந்துக்களின் கோவில் கவனிப்பாரற்றுப் பாழ் பட்டுப் போயிருப்பதையும், தமிழ்ப் பெயர்ப் பலகைகள் சிதைந்து போயிருப்பதையும் கண்டேன். அத்துடன் புத்த விகாரை ஒன்று எழுப்பப்படுவதையும், பௌத்த அடையாளங்கள் புதிதாக முளைப்பதையும் காணக்கூடியதாக இருந்தது.

நான் சமய அடையாளங்களை அறவே வெறுப்பவன். கடவுள் என்ற ஒன்றையே கணக்கெடுக்காதவன்.
ஆனால் சமயத்தின் அடிப்படையிலேயே இங்கே இனங்களின் எதிர்காலங்கள் தீர்மானிக்கப்படுகின்றன எனும்போது பேசாமல் சமயத்தை மீண்டும் பின்பற்றலாமோ என்ற எண்ணமும் வருகிறது.

இங்கே ஆலயப் பகுதிகளும் சூழலும் தானே குறிவைக்கப்படுகின்றன.

திருகோணமலையில் முன்பிருந்தே கொஞ்சம் கொஞ்சமாக தமிழரின், முஸ்லிம்களின் நிலப்பகுதிகளின் ஆக்கிரமிப்பு நடந்துகொண்டே இருக்கிறது.
ஒருகாலத்தில் - வெகுவிரைவிலேயே இந்த செந்தமிழ் பூமி திருக்கணாமல ஆகிடும் அபாயம் இருக்கிறது.
இவ்வளவுக்கும்  தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் ஊர்.
சொந்த மண்ணுக்கே இந்நிலை என்றால்???

கிழக்கு மாகாண சபைத் தேர்தல்கள் வருவதை நினைவுபடுத்திக்கொள்வோம்.

தமிழ் தேசியம், உரிமை, நில ஆண்மை, உரிமைகள் என்பவற்றை முன் வைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசையும் தம்முடன் இணைந்து போட்டியிடுமாறு அல்லது தனித்துப் போட்டியிடுமாறு கோரிக்கை விடுத்து வந்தது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் முதலில் தாம் மத்தியில் அங்கம் வகிக்கும் அரசாங்கத்துடனே இந்த மாகாண சபையிலும் இணைந்து போட்டியிடுவதாக அறிவித்தது.
பிறகு தடாலடியாக நியமனப்பத்திரம் தாக்கல் செய்வதற்கு முதல் நாள் தனித்து, மரச் சின்னத்திலே போட்டியிடுவதாக அறிவித்தது.

தனித்துப் போட்டியிடுவதைத் தான் பெரும்பாலான முஸ்லிம்களும் விரும்புகிறார்கள் என்பது இந்த அறிவிப்பைத் தொடர்ந்து வந்த கருத்துக்களில் இருந்து அறியக் கூடியதாகவிருந்தது.
ஆனால் அடுத்த வெடி உடனே ரவூப் ஹக்கீமிடம் இருந்து.
"தனித்துப் போட்டியிட்டாலும் அரசாங்கத்தின் இணக்கத்தோடு தான் தனித்துப் போட்டியிடுகிறோம்" என்று..

இப்போது அரசாங்கப் பக்கம் இருந்து தேர்தலின் பின்னராவது ஆதரவை ஸ்ரீ.ல.மு.கா தங்களுக்குத் தரும் என்று ஒரு கதை பரவவிடப் படுகிறது. ஹக்கீமும் அது போலவே தேர்தலின் பின்னர் இதைப் பற்றித் தீர்மானிப்போம் என்கிறார்.
மதில் மேல் பூனை?

தமிழ் தேசியக் கூட்டமைப்பும் விடுவதாக இல்லை.
இணக்கத்தோடு உரிமைகளை வெல்வோம் என்கிறது.


அதாவது தேர்தலுக்குப் பின் தமக்கு ஆதரவு தருமாறு..

(தமிழ் பேசுபவர் ஒருவர் தான் முதலமைச்சர் என்பது நிச்சயம். அவர் தமிழரா முஸ்லிமா என்று ஒரு சர்ச்சை சண்டை வராது என்று நம்புவோம்.)


இதுவரை தேர்தல்கள் மட்டும் தான் வெல்லப் பட்டுக்கொண்டிருக்கின்றன; உரிமைகளை நாம் அனைவருமே தேடிக் கொண்டு தான் இருக்கிறோம்.



ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner