December 26, 2014

Boxing Day Tests - மக்கலம் அதிரடி, சூப்பர் ஸ்மித், பரிதாப இலங்கை, போராடும் இந்தியா

தமிழ் விஸ்டனுக்கான நேற்றைய எனது அலசலில், இரண்டு போட்டிகள் இன்று தற்போது ஆரம்பித்துள்ள நிலையில், இன்றைக்கேற்ற மாற்றங்கள், மேலும் சில புதிய குறிப்புக்களுடன் இந்த இடுகை..

-----------------------------

நத்தார் தினத்துக்கு அடுத்த நாளான Boxing Dayஇல் இடம்பெறும் பெருமைக்குரிய டெஸ்ட் போட்டிகள் இம்முறை உலகின் மூன்று வெவ்வேறு இடங்களில் இடம்பெறுவது சிறப்பு.

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் அவுஸ்திரேலியா - இந்தியா மூன்றாவது டெஸ்ட்.
தென் ஆபிரிக்காவின் போர்ட் எலிசபெத்தில் தென் ஆபிரிக்கா - மேற்கிந்தியத் தீவுகள் இரண்டாவது டெஸ்ட்.
இந்த இரண்டு தொடர்களிலும் முதல் போட்டிகளில் சொந்த மண் அணிகள் (Home teams) ஆதிக்கம் செலுத்தக்கூடிய வெற்றிகளைப் பெற்று இன்றைய போட்டியிலும் வெற்றிபெறும் தாக்கம் செலுத்தக்கூடிய மனநிலையில் இருக்கின்றன.

ஆனால், 
கிரைச்ட்சேர்ச்சில் இன்று ஆரம்பமாகியுள்ள நியூ சீலாந்துக்கு எதிரான இலங்கையின் முதல் டெஸ்ட் போட்டியானது இவற்றிலிருந்து வேறுபட்டு தொடரின் முதல் போட்டியாக அமைகிறது.
ஆனால், ஆடுகளத் தன்மைகள், தட்ப வெப்ப நிலைகள், அணியின் நிலைகள் ஏன் அனுபவ நிலைகளில் கூட, போட்டியை நடாத்தும் நாடு தான் வாய்ப்பு அதிகம் உடையதாகக் காணப்படுகிறது.



கிரைஸ்ட்சேர்ச்  நகரம் டிசெம்பர் 26 கிரிக்கெட் போட்டி என்றவுடன் சரியாக பத்து வருடங்களுக்கு முன்னர் இப்படியான ஒரு Boxing Day நாளில் வந்த சுனாமி பேரழிவு நினைவுக்கு வந்து அச்சமூட்டுகிறது.
இன்றும், நேற்றிரவும் இலங்கையில் காணப்படும் மாறுபட்ட காலநிலை அறிகுறிகள் வேறு பயமுறுத்துகின்றன.
(ஆனால் இதையெல்லாம் விட, இன்று நியூசிலாந்து அணித்தலைவர் மக்கலமின் துடுப்பாட்ட சூறாவளி தான் இலங்கைக்கு அதிக பாதிப்பு)

ஆனால் 2010, 2011 ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்த நில அதிர்வு அனர்த்தங்களினால் முன்னைய கிரைஸ்ட்சேர்ச் - லங்காஸ்டர் பார்க் சேதமாகிவிட, அண்மைக்காலத்தில் சில ஒருநாள் போட்டிகளை மட்டும் நடத்தியுள்ள புதிய மைதானமான ஹக்லி ஓவல் (Hagley Oval) முதல் தடவையாக டெஸ்ட் போட்டி ஒன்றை அரங்கேற்றுகிறது.
இப்போதைக்கு ஆடுகளத் தன்மைகள் பற்றி வெளியாகும் தகவல்களின் அடிப்படையில் நியூ சீலாந்தின் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அதிக சாதகத் தன்மை காணப்படுவதாகத் தெரிகிறது.

டிம் சௌதீ, ட்ரெண்ட் போல்ட், நீல் வாக்னர்  ஆகிய மூன்று முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களுடன் சகலதுறை வீரர்களான மித வேகப்பந்துவீச்சாளர்களையும் சேர்த்துக்கொண்டு தாக்குதல் மழை பொழிய தயாராகிறது நியூசிலாந்து என்று நான் சொன்னது சரியாக அமைந்தது.

மறுபக்கம் இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சு இளையது,அனுபவக் குறைவானது.
ஆனால் ஷமிந்த எறங்க, சுரங்க லக்மால், தம்மிக பிரசாத் ஆகிய மூவரும் சாதகமான சூழ்நிலைகளில் எந்த அணிக்கும் ஆச்சரியத்தை பரிசளிக்கக்கூடியவர்கள். (மூவரும் ஆரோக்கியமாக சேர்ந்தே விளையாடுவது மகிழ்ச்சி)
இங்கிலாந்து(ஹெடிங்க்லே), துபாய் டெஸ்ட் போட்டிகள் நல்ல உதாரணம்.

இன்று ஆரம்பத்தில் ஆடுகளத் தன்மைகளை ஓரளவு சாதகமாக்கி சிறப்பாகப் பந்துவீசிய இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர்கள் மக்கலமின் வருகையோடு தடுமாறிப்போனார்கள்.

ஆனால் ஹேரத் உபாதை காரணமாக முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என்பது இலங்கைக்கு ஒரு மிகப்பெரிய பின்னடைவு. புதிய சுழல்பந்துவீச்சாளர் தரிந்து கௌஷால் எப்படியான ஒரு தாக்கத்தை வழங்குவார் என்ற கேள்வியும் எழுகிறது.
இன்று ஆரம்பத்திலே மிகக் கடுமையான மக்கலம் தாக்குதலுக்கு உள்ளான கௌஷால் மக்கலமையே தனது கன்னி டெஸ்ட் விக்கெட்டாக எடுத்தது சற்று ஆறுதல்.

ஆனால் இப்படியான அளவில் சிறிய மைதானங்களில், மக்கலம் போன்ற துடுப்பாட்ட வீரர்களுக்கு எதிராக அறிமுகம் ஆவது மனநிலையை சிதைத்துவிடும்.

டில்ஷான், மஹேல ஆகியோரின் டெஸ்ட் ஓய்வுக்குப் பிறகு இலங்கையின் துடுப்பாட்ட வரிசையும் சங்கக்கார, அணித் தலைவர் அஞ்சேலோ மத்தியூஸ் ஆகியோரிடம் அதிகமாகத் தங்கியுள்ளது.

டெஸ்ட் போட்டிகளில் அண்மைக்காலமாக நம்பிக்கை தந்துவரும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் கௌஷால் சில்வா, அணியின் உப தலைவர் லஹிறு திரிமான்ன, தினேஷ் சந்திமால் ஆகியோர் தங்கள் பொறுப்பை உணரவேண்டிய காலம் இது.
இந்திய அணியின் கோளி, விஜய், ரஹானே, புஜாரா போன்றோர் சச்சின், டிராவிட், கங்குலி, லக்ஸ்மன் ஆகியோர் விட்டுப்போன இடங்களை மிகச்சிறப்பாக நிரப்பியது போல இலங்கை அணிக்கும் இது அத்தியாவசியத் தேவை ஆகிறது.

அத்துடன் பிரசன்ன ஜெயவர்த்தன மீண்டும் அணிக்குள் வந்திருப்பது துடுப்பாட்ட வரிசைக்கு ஓரளவு திடத்தைக் கொடுக்கும் எனலாம்.

மறுபக்கம் நியூ சீலாந்தோ அண்மைக்காலமாக ஓட்டங்களை மலையாகக் குவித்துவரும் மூன்று துடுப்பாட்ட வீரர்களோடு மிகப் பலமாக நிற்கிறது.
அணித் தலைவர் பிரெண்டன் மக்கலம், ரோஸ் டெய்லர், இளம் வீரர் கேன் வில்லியம்சன் ஆகிய மூவருமே சதங்கள், அரைச் சதங்கள் என்று தொடர்ந்து குவித்து வருகிறார்கள். 

இன்று பிரெண்டன் மக்கலமின் அதிரடி, இந்த வருட ஆரம்பத்திலே இந்தியாவுக்கு எதிராகப் பெற்ற இரட்டைச் சதம் மற்றும் முச்சதம் ஆகியவற்றை ஞாபகப்படுத்தியது.

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் கடந்த மாதம் இரட்டைச் சதம் பெற்றிருந்தார்.
இன்று ஆரம்பம் முதல் மக்கலமின் அதிரடி இலங்கையினால் கட்டுப்படுத்த முடியா அளவுக்கு மிக ஆவேசமானதாக இருந்தது.
நியூ சீலாந்து சார்பாக டெஸ்ட் போட்டிகளில் வேகமான சதம் பெற்ற மக்கலம் (74 பந்துகள்), 11 ஆறு ஓட்டங்கள், 18 நான்கு ஓட்டங்களோடு வெறும் 134 பந்துகளில் 195 ஓட்டங்களை எடுத்து அபார ஆட்டம் ஆடியிருந்தார்.

வெறும் 5 ஓட்டங்களாலும், ஒரேயொரு சிக்சராலும் மூன்று வேறு சாதனைகளைத் தவறவிட்டார்.

1.வேகமான டெஸ்ட் இரட்டைச் சதம் - இப்போதும் ஒரு நியூ சீலாந்து வீரரிடம் தான் இந்த சாதனை இருக்கிறது. 
நேதன் அஸ்ட்டில் - 153 பந்துகள் இங்கிலாந்துக்கு எதிராக 2001/02

2. ஒரு வருடத்தில் 200+ நான்கு பெறுபேறுகள் பெற்ற மைக்கேல் கிளார்க்கின் சாதனையை சமப்படுத்த முடியாமல் போனது.

3.ஒரு டெஸ்ட் இன்னிங்க்சில் பெறப்பட்ட அதிக சிக்சர்கள் - 
வாசிம் அகரம் சிம்பாப்வேக்கு எதிராக 12 சிக்சர்கள்.
மக்கலம் இதே மாதிரி பாகிஸ்தானுக்கு எதிராகவும் 11 சிக்சர்களை கடந்த மாதம் பெற்றிருந்தார். மீண்டும் தவற விட்டார்.

ஆனால் மக்கலமின் துணிகரமான அதிரடியும் பின்னர் ஜிம்மி நீஷமின் வேகமான ஓட்டக்குவிப்பும் இலங்கையை முதல் நாளில் பின்னால் தள்ளியுள்ளன.
எனினும் மத்தியூஸ் பெற்ற இரு விக்கெட்டுக்கள மூலம் ஆட்ட முடிவில் ஓரளவு சமாளித்துள்ளது இலங்கை.

இனி இலங்கை துடுப்பாடும்போது இதே மாதிரி ஓட்டங்களைக் குவிக்குமா என்பதும், இந்த ஆடுகளத்தில் நியூ சீலாந்து பந்துவீச்சாளர்களை நேர்த்தியாகக் கையாளுமா என்பதும் தான் முக்கியமான கேள்விகள்.

இலங்கையின் முதலாவது வெளிநாட்டு டெஸ்ட் வெற்றி 1995இல் நியூசிலாந்து மண்ணில் வைத்தே ஈட்டப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.  எனினும் அதன் பின்னர் நியூசிலாந்து மண்ணில் விளையாடிய ஆறு டெஸ்ட் போட்டிகளில் 2006இல் பெறப்பட்ட ஒரேயொரு வெற்றி மாத்திரமே இலங்கைக்கு மகிழ்ச்சியை அளிப்பதாகும்.

நான்கு தோல்விகளும் ஒரு வெற்றி தோல்வியற்ற முடிவும் இலங்கையின் அனுபவத்துக்கு திருப்தியானதல்ல.


கடந்த முறை ICC உலக டெஸ்ட் அணியின் தலைவராக அறிவிக்கப்பட்டு பெருமைப்படுத்தப்பட்ட மத்தியூஸ் இளைய அணியை பலம் வாய்ந்த மக்கலமின் அணிக்கு எதிராக எவ்வாறு வழிநடத்துவார் என்பதை ஆர்வத்தோடு அறியக் காத்திருப்போம்.

-------------------
அவுஸ்திரேலிய - இந்திய அணிகள் இரண்டுக்குமே காயங்கள், உபாதைகள் தொல்லை தரும் ஒரு தொடராக அமைந்துள்ள இந்தத் தொடரில் இனி அவுஸ்திரேலியா தோற்க வழியில்லை.
இந்த Boxing Day டெஸ்ட்டில் தோற்காமல் இருந்தாலே தொடர்வெற்றி வசப்படும்.

புதிய அவுஸ்திரேலிய டெஸ்ட் தலைவர் ஸ்டீவ் ஸ்மித்துக்கு இதை விட வேறு மகிழ்ச்சி என்னவாக இருக்க முடியும்?

ஆனால் இந்திய அணித் தலைவர் தோனிக்கு இன்னொரு முக்கியமான போட்டி. அவரது டெஸ்ட் தலைமைத்துவம் மற்றும் அணியில் இருப்பு ஆகிய இரண்டுமே கேள்விக்குட்படுத்தப்பட்டு வரும் நிலையில் அழுத்தத்துடன் விளையாடவேண்டி இருக்கிறது.

இதற்குள் அணிக்குள் கோளி மற்றும் தவானுக்கு  இடையில் மோதல் என்று வேறு பரபரப்பு.

புவனேஷ்குமார் மீண்டும் விளையாடவருகிறார் என்பது மகிழ்ச்சியான செய்தியாக இருக்க, A தர ஒப்பந்தம் வழங்கப்பட்ட அவருக்குப் பதிலாக வருண் ஆரோனை நீக்கி மீண்டும் மொஹமட் ஷமியை இன்று விளையாடவிட்டு ஆச்சரியத்தை ஏற்படுத்திய இந்தியா, ரோஹித் ஷர்மாவின் மோசமான பெறுபேறுகளை அடுத்து அவரை நீக்கி சுரேஷ் ரெய்னாவுக்கு ஒரு வாய்ப்பைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்க, A தர ஒபந்தம் வழங்கப்பட்ட அவரையும் அணியில் சேர்க்காமல் லோகேஷ் ராகுல் என்ற கர்னாடக இளைய வீரருக்கு அறிமுகம் வழங்கியிருக்கிறது.

இந்த ராகுல், இந்திய சுவர் - சிரேஷ்ட ராகுலினால் (டிராவிட்) பெரிதும் போற்றப்பட்டவர். அவுஸ்திரேலிய மண்ணில் இந்திய A அணிக்காக பிரகாசித்தவரும் கூட.

அவுஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரை இளம் சகலதுறை வீரர் மிட்செல் மார்ஷ் காயமடைந்திருப்பதால் இளம் துடுப்பாட்ட வீரர் ஜோ பேர்ன்ஸ் இப்போட்டியில் அறிமுகம் ஆகிறார்.
இவ்வருடம் அவுஸ்திரேலியா டெஸ்ட் போட்டிகளில் அறிமுகப்படுத்தும் 5வது புதிய வீரர் பேர்ன்ஸ்.

இன்று சிறப்பாக ஆரம்பித்த பேர்ன்ஸ் 13 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
அதே போல ரொஜர்ஸ் மற்றொரு அரைச்சதம்.ரொஜர்ஸ் பெற்ற தொடர்ச்சியான அரைச்சதம். ஆனால் அரைச்சதங்களைப் பெரிய ஓட்டங்களாக மாற்றிக்கொள்ள முடியாதது அவுஸ்திரேலியாவைப் பொறுத்தவரை இழப்பே.

அதேபோல ஷோன் மார்ஷ். இன்றுமொரு முப்பது. தனது ஆரம்பங்களை பெரிய ஓட்டங்களாக மாற்றிக்கொள்ள முடியாமல் தடுமாறுகிறார்.

டேவிட் வோர்னர், ஷேன் வொட்சன் ஆகியோர் வலைப் பயிற்சிகளின்போது கண்ட காயங்கள், உபாதைகள் குணமடைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இரண்டாவது போட்டியில் உபாதைக்குள்ளாகிய வேகப்பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் மீண்டும் ரயன் ஹரிசுக்கு வழிவிட்டுள்ளார்.

'சகலதுறை வீரர்' என்ற மகுடத்துடன் தான் அறிமுகமாகி 10 வருடங்களைப் பூர்த்தி செய்யும் ஷேன் வொட்சனுக்கும் நாளைய போட்டி ஒரு பரீட்சை தான். மிட்செல் மார்ஷ் போன்ற இளைய வீரர்களால் அவரது இடத்துக்கு அழுத்தம் வந்துகொண்டே இருக்கிறது.
இன்று சிறப்பாக ஆடி அரைச்சதம் பெற்றாலும் இது அவரது இடத்தை நீண்டகாலத்துக்கு தக்கவைக்க போதாது.

தொடர்ந்து ஓட்டங்களை மலைபோல் குவித்துவரும் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வோர்னர், முரளி விஜய் ஆகியோரை ரசிகர்கள் மிக ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறார்கள்.


ஸ்மித் இன்றைய முதல் நாள் ஆட்டம் முடிவடையும் வரை ஆட்டமிழக்காமல் 72 ஓட்டங்களோடு நிதானமாக ஆடிவருகிறார்.
25வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்த இளைய அவுஸ்திரேலிய தலைவருக்கு 2000 டெஸ்ட் ஓட்டங்களைப் பூர்த்தி செய்ய இன்னும் 18 ஓட்டங்கள் தேவை.

இந்தியா இந்த மெல்பேர்ன் மைதானத்தில் இறுதியாக விளையாடிய ஐந்து டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வி. எனினும் முன்னாள் அவுஸ்திரேலிய அணித் தலைவர் ரிக்கி பொன்டிங் கூறுகிறார் "இந்தியா இத்தொடரில் ஒரு போட்டியில் வெல்வதாக இருந்தால், அது இந்த டெஸ்ட்டில் தான்"
காரணம், சுழல் பந்து மற்றும் துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமான ஆசிய ஆடுகளங்கள் போன்றது நாளைய மெல்பேர்ன் ஆடுகளம்.
ஆனால் அடிலெய்டிலும் இவ்வாறே சொல்லி, இறுதியாக இந்தியா மண் கவ்வியது.

டெண்டுல்கர், டிராவிட், கங்குலி, லக்ஸ்மன், கும்ப்ளே இருந்த காலகட்டத்தில் கூட இந்தியா மெல்பேர்னில் டெஸ்ட் போட்டிகளை வெல்ல மட்டுமில்லை, வெற்றி தோல்வியின்றிய முறையில் கூட போட்டிகளை முடித்துக்கொள்ள முடியவில்லை.
இங்கே இந்தியா போட்டியொன்றை வென்று 33 வருடங்கள் ஆகிறது.

அவுஸ்திரேலியா கடந்த 16 ஆண்டுகளில் மூன்றே தரம் தான் தோற்றுள்ளது. இரு தடவை இங்கிலாந்திடம், ஒரு தடவை தென் ஆபிரிக்காவிடம்.
17 ஆண்டுகளாக ஒன்றில் வெற்றி அல்லது தோல்வியை மட்டுமே தந்து வருகிறது மெல்பேர்ன் டெஸ்ட் போட்டிகள்.

ஸ்டீவ் ஸ்மித்தின் ஆசை போல 4 -0 என வெள்ளை அடிக்கப்படுமா, இந்தியா புதிய வரலாற்றை மாற்றி தோனியின் தலைமையைக் காப்பாற்றுமா என்பது தான் மிகப் பெரிய கேள்வி.

----------------------
ஹாஷிம் அம்லா, ஏபீ டி வில்லியர்ஸ் என்ற துடுப்பாட்ட எந்திரங்கள், ஸ்டெய்ன், மோர்க்கல், பிலாண்டர் போன்ற வேகப்பந்து வீச்சு சூறாவளிகளை எதிர்த்து முக்கியமான வீரர்களை மட்டுமன்றி, முக்கியமாக தன்னம்பிக்கையே இல்லாமல் தடுமாறிக்கொண்டிருக்கிறது தினேஷ் ராம்டின் தலைமயிலான மேற்கிந்தியத்தீவுகள் என்னும் கப்பல்.


சந்தர்போல் என்ற நாற்பது வயது போராளி துடுப்பாட்ட நங்கூரமாக நின்றாலும், சாமுவேல்ஸ், ஸ்மித், ராம்டின் போன்றோர் நம்பிக்கை தந்தாலும், வேகப்பந்துவீச்சாளர் கமர் ரோச்சின் காயமும் புதிய சிக்கலைக் கொடுக்கிறது. ஜெரோம் டெய்லர் மட்டுமே மற்ற அனுபவமுள்ள பந்துவீச்சாளர்.
தென் ஆபிரிக்கா முதலாவது போட்டி போல இலகுவான வெற்றியைப் பெறாவிட்டாலும் மேற்கிந்தியத் தீவுகள் போராடக்கூடிய வாய்ப்பும் இல்லை என்றே தெரிகிறது.

டீவில்லியர்ஸ், ஸ்டெய்ன் ஆகிய இருவருக்கும் இன்றைய Boxing Day டெஸ்ட் போட்டி மைல் கல் போட்டிகளாக அமைகின்றன.
96 டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக விளையாடி சாதனை படைத்த அடம் கில்கிறிஸ்ட்டின் சாதனையை நாளைய டெஸ்ட்டில் முறியடிக்கவுள்ளார் AB.

இன்னும் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினால் தென் ஆபிரிக்காவுக்காக அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது பந்துவீச்சாளர் என்ற பெருமையை மக்காயா ந்டினியிடம் இருந்து பறிப்பார் டேல் ஸ்டெயின்.

அத்துடன், முதலாவது டெஸ்ட் போட்டியில் அறிமுகமான ஸ்டியான் வான் சைல் சதம் அடித்து சாதனை படைத்த உற்சாகத்தோடு, காயமடைந்துள்ள விக்கெட் காப்பாளருக்குப் (குவின்டன் டீ கொக்) பதிலாக இன்னொரு இளம் துடுப்பாட்ட வீரர் டெம்பா பவுமா அறிமுகமாகிறார். இவர் ஒரு கறுப்பின வீரர் என்பது கூடுதல் பெருமை.

தென் ஆபிரிக்காவுக்காக டெஸ்ட் துடுப்பாட்ட வீரராக விளையாடவுள்ள முதலாவது கறுப்பின வீரர் என்ற பெருமையும் பவுமாவுக்குக் கிடைக்கவுள்ளது.
ஹெர்ஷல் கிப்ஸ், டுமினி, அல்விரோ பீட்டர்சன் போன்ற வீரர்கள் எல்லோரும் கலப்பினத்தவர்.


மாற்றங்களை தகுந்த முறையில் உள்வாங்கி வரும் தென் ஆபிரிக்கா இலகுவான தொடர் ஒன்றில் இதை நிகழ்த்துவதில் கூடுதல் வெற்றிகண்டுள்ளனர்.




--------------------



இலங்கையில் இருந்து புதிதாக இயங்கிவரும் தமிழ் விஸ்டனுக்காக நான் இதுவரை எழுதிய முன்னைய கட்டுரைகளை கீழ்வரும் இணைப்புக்கள் மூலம் வாசியுங்கள்.





December 16, 2014

லிங்கா - Lingaa


ரஜினிக்கு எனது அப்பாவின் வயது..

அப்பா என்னை முதன்முதலாக அழைத்துப்போன ரஜினி படம் பொல்லாதவன் (என்று நினைவு). 

வீட்டில் வந்து படி படியாக ​ஏறி நின்று ரஜினி ஸ்டைலில் நின்று பாடியதும் இன்று வரை நினைவில்.



இப்போது அப்பா வங்கியாளராக இருந்து ஒய்வுபெற்றுவிட்டார்.

இளமை வயதில் எங்களுக்குச் சரிக்குசரியாக அப்பாவும் கிரிக்கெட் விளையாடியது இப்போது அப்பாவால் முடியாது.

நாம் இப்போது பார்க்கும் T20 கிரிக்கெட் போட்டிகள் அப்பாவின் ரசனைக்கு ஒத்துவருவதில்லை.



IPL போட்டிகள், இப்போதைய கால்பந்து போட்டிகளில் அவருக்கு ஆர்வம் இல்லை.

கேட்டால் "too many matches, too many players, too many changes.. all way too much" என்பார்.



சின்ன வயதில் நான் வாசித்த மாயாவி கொமிக்ஸ் இப்போது பழசு. கதைகள் பழசு. ஆனால் இப்போதும் மாயாவி புதுசா கதையா வந்தாலும் மாயாவி அப்படியே தான் இருக்கப் போகிறார்.



Spider Man போன்ற சாகசப் பாத்திரங்களுக்கும் அதே மாதிரி நிலை தான்.



இதைத் தான் லிங்கா படத்தில் ரஜினியோடு ஒப்பிட்டு பார்க்கச் சொல்கிறார்கள் ரஜினிகாந்த் ரசிகர்கள் / பக்தர்கள்.



அப்படி பார்த்தால் கோச்சடையான் (அது குறைப் பிரசவம்.. அல்ல அதைவிட மோசமான கொடும் அவஸ்தை படைப்பு)போல தான் ரஜினியின் இனி வரும் எல்லாப் படங்களும் வரவேண்டும்.



ரஜினியின் ஸ்டைலும் அந்த charismaவும் இன்னொருவருக்கு வராது..
என்றும் சூப்பர் ஸ்டார் அவர் தான் என்ற வாதங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்தக் காலகட்டத்தில் பெரிதாக பேசப்படுவதற்கு என்ன காரணம் என்பது பாபா தோல்வி முதல் ஆராயப்படவேண்டியவை.


ரஜினி என்ற மாபெரும் பிம்பம் கூட ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாவிட்டால் புஸ் தான் என்பதை பாபாவும் காட்டியது, பின்னர் அண்மையில் கோச்சடையானும் அதே கதை தான்.

லிங்கா பற்றிய பேச்சுக்கள் கிளம்ப ஆரம்பித்தபோதே, மிகப் பெரிய எதிர்பார்ப்புக்கள் அனைவருக்கும் ஏற்பட்டமைக்கான காரணங்கள்...
4 வருடங்களுக்குப் பிறகு ரஜினி மீண்டும் ரஜினியாக நடிக்கிறார் (ரா வன் - சிட்டி, கோச்சடையான் கார்ட்டூன் என்பதெல்லாம் ரஜினி ரசிகர்களுக்கு தீனியே அல்ல)
ரஜினியின் மிகப்பெரிய இரு படங்களைத் தந்த K.S.ரவிக்குமார் இயக்குகிறார் எனும்போது குறி தப்பாது.
ரவிக்குமாரைப் போல விரைவாகவும், விறுவிறுப்பாகவும் பெரிய ஸ்டார்களை வைத்து திரைப்படங்களைத் தரக்கூடியவர்கள் பெரியளவில் யாரும் கிடையாது.

இத்தனை எதிர்பார்ப்புக்கள் ரசிகர்கள் மத்தியில் இருக்கையில் படத்தை இயக்கிய K.S.ரவிக்குமார், நடித்த ரஜினி ஆகிய இருவருமே கதை, திரைக்கதை படமாக்கல் என்று சகல விஷயங்களிலும் பொறுப்பாக இருந்திருக்க வேண்டாமா?

ரஜினிக்காக படம் பார்க்க வெறியோடு காத்திருக்கும் ரசிகர்கள் எதை, எப்படி கொடுத்தாலும் ரசிப்பார்கள் என்று ஒரு மிதப்பு எண்ணம்? அல்லது ரஜினி என்ற மாபெரும் கவர்ச்சிக் காந்தம் இருப்பதால் கதை என்ற வஸ்து ஒரு பொருட்டேயல்ல என்ற ஒரு நினைப்பா?

எந்தவொரு புதுமையும் இல்லாத, 'கத்தி' பாணி கதை..
கத்தி கோபியின் கதை கூட பரவாயில்லை, கொஞ்சம் திருப்பம், தண்ணீர், விவசாயிகள் பிரச்சினை என்று கொஞ்சம் புதுசாய்ப் பேசியிருந்தது.
லிங்காவிலே அணை கட்டும் கதை.
இரண்டாவது ரஜினி இல்லாமலேயே லிங்கேஸ்வரரைக் கொண்டே கட்டி முடித்திருக்கலாம்.
ரஜினி என்பதால் இரண்டாவது லிங்கா தேவைப்பட்டிருக்கிறார்.

முத்து, அருணாச்சலம், சிவாஜி போலவே பணத்தையும் சொத்தையும் மக்களுக்காகவே தானம் செய்து தியாகம் செய்யும் ரஜினி.

நல்லவனாக, மிக நல்லவனாக இருந்து கெட்ட பெயர் வாங்கி, சுட்டாலும் சங்கு வெண்மை தான் என்று லேட்டா மக்களுக்குத் தெரியவரும் ரொம்ப.... நல்லவரு பாத்திரம்.

எத்தனை படங்களில் ரஜினி இப்படியே மாறாத டெம்பிளேட்டில் நடித்தாலும் ரசிகர்கள் பொறுத்துக் கொள்ளுவாங்களாம்.
ரஜினியை விட ரொம்பபபப நல்லவங்கப்பா நாங்க என்று நினைத்திருக்கிறார் KSR.

அணையைப் போலவே ரொம்பப் பழசான, எங்கேயும் திருப்பங்கள் என்று இல்லாத, இலகுவாக ஊகிக்கக்கூடிய திரைக்கதை.
ரஜினிக்கு இருக்கிற மாஸ், சந்தானத்தின் கலகலா, வழமையான ரவிக்குமார் டச்சுகள் ஆக்கியவற்றை வைத்து ஒப்பேற்றிவிடலாம் என்று ஒரு அசாத்திய நம்பிக்கையோடு ஆரம்பித்த K.S.ரவிக்குமார், வழமையை விட அவசரமாக படமாக்கிய விதத்தில் தான் தனது வழமையான ரஜினி பாணி வெற்றியிலிருந்து சறுக்கிவிட்டார் என்று கருதுகிறேன்.

(வசூலில் கோடி என்று வருமானம் பற்றி பேசி, ரஜினி மாஸ் என்று விட்டுக்கொடுக்காமல் விளையாடும் ரஜினி பக்தர்கள் மனசாட்சியைத் தொட்டு சொல்லட்டும் ஒரு மொத்த package ஆக லிங்கா நல்லா இருக்கு என்று.)



ரஜினியின் வயதும் அண்மையில் நோய்வாய்ப்பட்டு மீண்டவர் என்பதாலும் அவரை நோகாமல் நொங்கு எடுக்கப் பார்த்து அதுவே படத்தைப் பங்கம் பண்ணியதோ?

ஆனால் தன் மீது தயாரிப்பாளர், ரசிகர், இயக்குனர் என்று அனைவரும் வைத்த நம்பிக்கையைக் குறைவிடாமல் முதல் காட்சி அறிமுகத்தின் கலக்கல், பிரம்மாண்ட அறிமுகம் முதல், ஒவ்வொரு பிரேமில்வரும் தனக்கேயான ஸ்டைல்களில் கலக்கி 
"யென்னடா ராஸ்கல்ஸ், சூப்பர் ஸ்டார் எப்பவும் நான் தாண்டா.. ஹா ஹா ஹா " என்று ஆணி அடித்து நிற்கிறார் இந்த 64 வயது youngster.
(இப்ப சொல்லுங்கடா - அதான் சூப்பர் ஸ்டார் கெத்து )

ஓ நண்பா, மோனா பாடல்களிலும், ராஜாவாக, கலெக்டராக வரும் காட்சிகளிலும் பொருத்தமான ஆடைகள், கம்பீரம் என்று ஸ்டைல் அபாரம்.

இளைய ரஜினி, சந்தானம், கருணாகரன் குழுவோடு திரிகையிலும், அனுஷ்காவோடு லூட்டி அடிக்கையிலும் வயசு உறுத்துவதோடு ஏதோ  பொருந்தவில்லை.

அதிலும் ரஜினி - அனுஷ்கா நெக்லஸ் கொள்ளை காட்சிகளில் இரட்டை அர்த்த உரையாடல்கள் வேறு.
ஐயா ரஜினி இது தான் பெரிய ஆபாசம் ஐயா. அடுக்குமா?
(இங்கே நான் சொல்லவேண்டி இருக்கு - எட்டாம் எட்டு இப்போது நீங்கள்)

ரஜினியின் பாட்ஷா இன்று வரை ரஜினியின் the Best என்று நாம் சொல்வதற்கான முக்கியமான காரணங்களில் ஒன்று வில்லன் ரகுவரன் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.
பாட்ஷா ஞாபகம் வந்தால் மார்க் ஆண்டனியும் ஞாபகம் வந்தே ஆகணுமே..

அதேபோல படையப்பா - நீலாம்பரி, சிவாஜி - ஆதிகேசவன் , எந்திரன் (எந்திரன் படமாக என்னைத் திருப்தி செய்யாவிட்டாலும் 'மே....' சொல்லும் வில்லன் ரஜினி சொல்லி வேலையில்லை)

லிங்காவில் இது(வும்) மிஸ்ஸிங்.
உப்புச்சப்பற்ற இரு வில்லன்கள். இந்த இருவரையும் சமாளிக்க சந்தானமும் இளவரசுவும் போதுமே..
ஜெகபதி பாபுவும் அந்த வெள்ளைக்காரனும் முன்னைய MGR, சிவாஜி பட வில்லன்களின் நம்பியார்களை, அசோகன்களை ஞாபகப்படுத்திவிட்டுப் போகிறார்கள்.

ரஜினியைப் போலவே இந்தப் படத்தைக் கொஞ்சமாவது தாங்கும் இன்னொருவர் சந்தானம் மட்டுமே.

ரஜினியும் சந்தானமும் கலக்கல் இணைப்பு.
சிவாஜியில் விவேக், சந்திரமுகியில் வடிவேலுவுக்குப் 
ரஜினி, ரவிக்குமார் முதல் அத்தனை பேருக்குமே நெத்தியடி நக்கல்.
எப்பவுமே படங்களின் கடைசியில் வந்து கலகலத்து செல்லும் இயக்குனர் K.S.ரவிக்குமாருக்கே "finishing குமார்" என்று பஞ்ச் வைக்குமிடம் கலக்கல்.

ரஜினி தலை கோதும் ஸ்டைலையும் அடிக்கடி வாரிவிடுகிறார்.
கலாய்க்கும் இடங்களிலும் முத்துமுதல் KSR செய்துவரும் ரஜினிக்கான அரசியல் தூவல்கள் ஆங்காங்கே..

"நீ வேணாம் வேணாம்னாலும் ஜனங்க விடமாட்டாங்க போல இருக்கே.. ஊரே மரியாதை கொடுக்குதே"
ஒரு சாம்பிள்.

"பறக்காஸ்" சந்தானத்தின் புண்ணியத்தில் இப்போது செம ஹிட்.
Byeக்குப் பதிலாக இனி 'பறக்காஸ்' பரவலாகப் பயன்படுத்தப்படும்.
ஆனால் இதை வைத்தே 'லிங்கா'வை கலாய்க்கும் கூட்டமும் அதிகம்.

ஆரம்பத்திலேயே "ஜெயிலுக்குப் போறதுன்னா எங்களையும் கூட்டிட்டு வந்திர்றே, ஜெர்மனி போறதுன்னா மட்டும் தனியாவே போயிடுறே" என்று ஆரம்பிக்கும் சந்தானம், வயது இடைவெளியினால் "நன்பேண்டா" என்பதில் டா வை சொல்லாமல் நிறுத்த, ரஜினி அதை சொல்வது கலகலப்பு.

இயக்குனர் சறுக்கும் இன்னும் ஒரு முக்கிய இடம் கதாநாயகிகள்.
வயதேறிய ரஜினி என்பதால் இந்தத் தெரிவுகள் என்று தெரியும்.
ஆனால் ரஜினியை விட வயது கூடியவராக அனுஷ்கா தெரிகிறார்.
(இந்த இடத்தில் அதான் நம்ம தலைவர் என்று கோரஸ் வரவேண்டும்)
அனுஷ்காவுக்கு ரஜினி மேல் காதல் வரும் காட்சிகள் சந்தானத்தின் காமெடியை விட காமெடி.
பயங்கர நாடகத் தன்மை.

இதை விட தாத்தா ரஜினி - சோனாக்ஷி சின்ஹா பாட்டி காதல் பண்டைய கால மன்னர் பாணி லவ்வு.
ஆனால் சோனாக்ஷிக்கு நடிக்கக் கிடைத்த வாய்ப்புக்களை சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார்.

உருக வைக்க, ரஜினி பற்றி உருக, போற்றிப் புகழ, புலம்ப என்று ஏராளம் நட்சத்திரங்கள்.. எல்லாம் கிழடு கட்டைகள்..
மீண்டும் 'கத்தி' ஞாபகம்.
விஜயகுமார், ராதாரவி,சுந்தர்ராஜன்,இளவரசு, மனோபாலா இவர்கள் எல்லாம் போதாமல் பாவம் அந்த அற்புத இயக்குனர் K.விஸ்வநாதன் வேறு..
ஒருவேளை ரஜினியின் வயசை இளமையாகக் காட்ட இப்படியொரு ஐடியாவோ?


லிங்காவிலே இருக்கும் குறைகளுக்கும் அரைகுறைத் தன்மைக்கும் என்ன தான் இயக்குனர் K.S.ரவிக்குமார் பொறுப்புக் கூறுகின்ற அவஸ்தை இருந்தாலும், படத்தின் பிரம்மாண்டம், முக்கியமாக அணைக்கட்டு அமைக்கப்படும் காட்சிகள், அரண்மனைக் காட்சிகள் என்பவை நிச்சயம் பாராட்டப்படவேண்டியவை.

அதிலும் இத்தனை விரைவாக படமாக்கியதும் இந்த விடயத்தில் பாராட்டப்படவேண்டியது தான்.

அணை கட்டும் பாடல் ரஹ்மானாலும் ரவியினாலும் ரத்தினவேலுவின் ஒளிப்பதிவிலும் நிற்கிறது.

A.R.ரஹ்மானையும் ஒளிப்பதிவாளர் ரத்தினவேலுவையும் படம் முழுதும் தேடவேண்டி இருக்கிறது.
இயக்குனர் ரவிக்குமாரின் அவசர உழைப்பு இசைப்புயலின் நிதானமான பின்னணி இசையை இல்லாமல் செய்துவிட, அவசரமாக அடித்து அப்படி இப்படி போட்டிருக்கிறார்.

அணை கட்ட வரும் சவால்கள்,அணை கட்டிய பிறகு வரும் துன்பங்களெல்லாம் ஒரு நாடகப் பாணியில் சவசவ என்று இழுக்க, கட்டிய அணை திறந்து, தாத்தா ரஜினியை நல்லவர் என்று ஊரும் ஏற்று கோவிலும் திறந்தபிறகு இனி என்னடா படத்தில் இருக்கு என்று நாம் கேட்போம் என்று தான் ஆரம்பத்திலேயே வைத்தார் இயக்குனர் ட்விஸ்ட்டு (என்னமோ போங்க KSR )

பற்றைகளும் இருளும் சேர்ந்து கிடக்கும் அந்தப் பழைய கோவிலில் ஒரு இத்தனூண்டு உருத்திராட்சக் கொட்டையை எடுக்க சூப்பர் ஸ்டாரால் தான் முடியும்.
(இங்கே மீண்டும் தலைவர்டா , ரஜினி rocks வேண்டும்)

கடைசியாக ஆண்டாண்டு காலமாக நாம் பார்த்து வந்த அதே மாதிரி ஒரு சப்பை கிளைமாக்ஸ்.
கதாநாயகியை வில்லன் கடத்துவான், வெடிகுண்டை சேர்த்துக் கட்டுவான், கடைசி செக்கனில் குண்டை இலக்கு மாற்றி ஹீரோ ஊரையும் (கொஞ்சம் பெரிய படமென்றால் நாட்டையும்) கதாநாயகியையும் சேர்த்துக் காப்பாற்றுவார்.

அனைவருமே கிழித்து தொங்கப்போட்ட பலூன், மோட்டர் பைக் சாகசம்.
ஸ்ஸப்பா...

ரஜினியின் பாபா பட்டம் magic , ரவியின் ஆதவன் ஹெலி சாகசம் இரண்டையும் மிஞ்சி இருவரும் சேர்ந்து ஒரு பிரம்மாண்டம் நிகழ்த்தவேண்டும் என்று முடிவு கட்டியிருப்பார்கள் போலும்.

லிங்குசாமியும் கண்ணுக்கு முன்னால் வந்து போனார்.

பரவாயில்லை K.S.ரவிக்குமாருக்கும் திருஷ்டிப்பொட்டு வேண்டும் தானே?

முதலில் S.P.முத்துராமன், பின்னர் சுரேஷ் கிருஷ்ணா, பின்னர் K.S.ரவிக்குமார், இப்போது ஷங்கர் இப்படி ரஜினியை அந்தந்தக் கால trendகளுக்கு ஏற்றது போல பயன்படுத்துவதும் இந்த 'லிங்கா' சறுக்கலுக்குக் காரணமாக இருக்கலாம்.

லிங்கா ரஜினி ரசிகர்களைத் திருப்திப் படுத்தியுள்ளது என்று ரஜினி பக்தர்கள்/ வெறியர்கள் (மட்டும்) சொல்வார்கள்.
நம்பாதீர்கள்.
ரஜினியை ரஜினியாக ரசிக்க ரஜினி ரசிகராக இல்லாத என் போன்றோருக்கும் பிடிக்கும்..
இதனால் தான் இன்றும் சூப்பர் ஸ்டார் என்ற எழுத்துக்கள் திரையில் வரும்போதும், ரஜினியின் பஞ்ச் ஸ்டைலாக வரும்போதும் நாமும் விசில் அடிக்காத குறையாக குதூகலிக்கிறோம்.
எனவே ரஜினி கலக்கல்,மாஸ்.. படம் மட்டும் வாய்க்கவில்லை என்று சொல்வது வெறும் சப்பைக்கட்டு.

அவர்கள் பாவம், இப்போது இளைய தளபதி மற்றும் தல ரசிகர்களையும் சமாளித்து மோதவேண்டி இருக்கிறதே..
இப்படித் தான் சொல்லவேண்டிய ஒரு கட்டாயம்.
ஆனால், அடி மனதில் அழுது கொண்டிருப்பார்கள் என்பது நிச்சயம்.

நமக்கு ரொம்ப நெருங்கிய ரஜினி ரசிகர்கள் சிலரின் புலம்பல்கள் இதற்கு மிக ஆணித்தரமான சாட்சி.

ரஜினியால் அவர்களுக்கு கொஞ்சம் திருப்தியாக இருக்கலாம்; ஆனால் ஒரு total package ஆக படம் failure.
இந்தியா தோல்வி; கோளி சதம் என்பது போல தான் இது..
கொஞ்சம் ஆறுதல் பட்டுக்கொள்ள மட்டுமே..

அடுத்த ரஜினி படம் வரும்வரை (இனியும் நடித்தால் - ரஜினியின் மாஸ் போனதென்று பொங்கவேண்டாம் ரஜினி வால்ஸ்... அவரது வயதும் உடல் இயக்கமும் அப்படி) காத்திருக்கட்டும் ரசிகர்கள்..

நூறு கோடி வசூல் என்பதால் படம் சூப்பர் என்று சொல்வதும் சிரிப்பைத் தரும் ஒரு வாதமாகும்.
'ரஜினி' படம் என்பதால் இதெல்லாம் படத்துக்கு முன்னதான வியாபாரம் & எப்படித் தான் படம் இருந்தாலும் அப்படி என்ன இருக்கிறது என்று பார்க்கச் செல்லும் கூட்டத்துக்காக டிக்கெட்டுக்கள் இன்னும் விற்கும்.
இன்னும் கோடிகள் புரளலாம்.
அதே போல கோடிகளைக் கொட்டிப் பார்த்த கோடிக் கணக்கானோர் "குப்பை, மொக்கை, அறுவை. பிளேடு, சப்பா" என்று  சமூக வலைத்தளங்களிலும், விமர்சன தளங்களிலும்,WHATS APP Chatsஇலும் கரித்துக்கொட்டப் போகிறார்கள் என்பதும் உறுதியே.


லிங்கா - சூப்பர் ஸ்டார் கட்டிய அணை KSR பலூனில் வெடிச்சுப் போச்சு 

----------------------------------------
ரஜினி பற்றிய சில பதிவுகள்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் Special சூரிய ராகங்கள் 2013.

சூப்பர் ஸ்டார் சூரிய ராகங்கள் - Super Star Rajini Birthday Special Sooriya Raagangal 2014






December 03, 2014

பிலிப் ஹியூஸ் - பலியெடுத்த பவுன்சர் - மனதை உறுத்தும் நினைவுகள்

பிலிப் ஹியூஸின் திடீர் மரணம் !!!


கிரிக்கெட் உலகையே உலுக்கிப்போட்டது; கிரிக்கெட் வீரர்கள் மட்டுமல்ல, கிரிக்கெட் என்றால் என்னவென்று அறியாதவர்கள் கூட, விபரங்களைத் தெரிந்து கொண்டு கண்ணீர் விடும் அளவுக்குக் கவலைப்படுகிறார்கள்.
வெறித்தனமாக, அனுபவித்து ரசிக்கும் ஒரு விளையாட்டு ஒரு திறமையான, எதிர்காலம் இன்னும் வளமாக இருக்கவேண்டிய ஒரு இளம் வீரனைப் பலி எடுத்துவிட்டதே என்ற வேதனை பலருக்கும்.

ஹியூஸின் மரணத்தைத் தொடர்ந்து விளையாட்டு உலகமே சோகத்தில் ஆழ்ந்தது, விளையாட்டுக்கு கிடைத்த கௌரவம் மட்டுமல்ல, இறந்துகொண்டிருக்கும் மனிதம் இப்படியான விஷயங்களிலாவது உயிர்க்கிறது என்று ஒரு திருப்தி.

Philip Hughes - Memories and Tributes


பில் ஹியூஸின் செய்தி கேள்விப்பட்டவுடன் முதலில் இன்னொரு பவுன்சர், இன்னொரு காயம் அவ்வளவே என்று தான் தோன்றியது.
சம்பவத்தின் தீவிரம் புரிய ஆரம்பித்தபின், அவுஸ்திரேலிய அணியின் ரசிகனாக ​இருந்த நான் சுயநலமாகப் பார்த்தது இந்திய அணிக்கு எதிரான தொடருக்கு இது இழப்பாக இருக்காது என்பதைத் தான்.
(அந்த நேரம் ஹியூஸின் மரணம் பற்றி சிறிதளவேனும் சிந்திக்கவில்லை)

மரணம் பற்றிய செய்தி கிடைத்தவுடன் மனதில் கவலையை விட அதிர்ச்சி.
அதிலும் அந்த மரணம் நிகழ்ந்த தேதி, மனதில் கவ்வியிருந்த சோகத்தை மேலும் கனக்கச் செய்தது.
இது பற்றி உடனே மனம் வெதும்பி இட்ட நிலைத்தகவல்

இளவயது மரணங்கள் தரும் வேதனை மிகக் கொடிது.இன்னும் வாழும் காலம் இருக்க களத்திலேயே வீரனாக மரித்த ஹியூசுக்கு(ம்) அஞ்சலிகள். ‪#‎RIPHughes‬கொண்ட இலட்சியம், தேர்ந்தெடுத்த பாதை, வாழ்க்கையாகக் கொண்ட களம்.சென்று வா வீரனே..

பில் ஹியூஸின் இறுதிச் சடங்குகள் இன்று நடைபெற்றன.

Phillip Hughes funeral - நெகிழ வைக்கும் இறுதிச்சடங்கு

கிரிக்கெட் உலகமே மீண்டும் கவலையுடன் வேதனையின் வலியுடன் அஞ்சலித்தது. ஒரு விளையாட்டு வீரனுக்குக் கொடுக்கவேண்டிய உச்சபட்ச கௌரவத்தை அவுஸ்திரேலியா நாடே வழங்கியிருக்கிறது.
அவுஸ்திரேலிய வீரர்கள், முக்கியமாக அணித் தலைவர் மைக்கேல் கிளார்க் பகிர்ந்து கொண்ட துயர், நினைவுப் பதிவுகள் மனதில் நெகிழ்ச்சியைத் தந்தவை.

பிலிப் ஹியூஸின் இறுதிச் சடங்கில் மைக்கேல் கிளார்க்கின் உணர்ச்சிபூர்வமான உரை - Michael Clarke's Emotional Speech at Phil Hughes Funeral


ஒரு சகோதரன் போல பழகினேன் என்று சும்மா வாய்மொழியாக சொல்லிவிட்டுப் போய்விடலாம்; ஆனால் அதை நிரூபிப்பதாக இருந்த மைக்கேல் கிளார்க், ஹியூசுக்கு இடையிலான நெருக்கம் உருக்கம் தரக்கூடியது.

கிளார்க்கின் உரை மனதை நெகிழ வைத்திருந்தது. இந்த துர்ச்சம்பவத்துக்குப் பிறகு கிளார்க்கின் அணுகுமுறைகள், அவர் நிகழ்த்திய உரைகள் மூலமாக மனதில் அபிமானத்தை அதிகரித்திருக்கிறார்.

இவ்வளவு ஹியூஸுடன் இளைய சகோதரன் அளவுக்கு நெருக்கமான உறவைப் பேணியும் எந்தவிதத்திலும் ஹியூஸை அணிக்குள் சேர்ப்பதற்கு செல்வாக்கைப் பிரயோகிக்காத கிளார்க்கின் கண்ணியம் பாராட்டக் கூடியதே.

இன்று வரை நீடிக்கும் ஏனைய கிரிக்கெட் வீரர்களின், கனவான் தன்மையும் கண்ணியமும் போற்றக்கூடியவை.

-------------------

அதேநேரம், மனதில் ஒருவித குற்றவுணர்வு இப்போது வரை நீடிக்கிறது.
பாடசாலை, கழகம் (வின்னர்ஸ்) என்று கடினபந்து விளையாடிய காலத்தில் (நான் சுழல்பந்து வீசும் கீழ் வரிசை துடுப்பாட்ட வீரர்) எனக்கு துடுப்பெடுத்தாட வாய்ப்புக் கிடைத்தது மிக அரிதாகவே.

அதிலே பெரிய சந்தோஷம் அந்தக் காலத்தில். எல்லாம் உடம்பில் எங்கேயாவது பந்து தாறுமாறாப் பட்டிடுமோ என்ற பயம் தான். அத்துடன் தலைக்கவசம் அணிந்து விளையாட கொஞ்சமும் விருப்பம் இல்லை என்பதும் சேர்த்து.

யார் அடிமையாக அகப்படுகிறார்களோ அவர்கள் தான் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள்.
கழகத்துக்காக விளையாடிய நாட்களில் அவ்வாறு அப்பாவியாக சிக்கிப் போனவன் என்னுடைய கடைசித் தம்பி.

அவனும் அவனுடைய வகுப்பு நண்பன் ஒருவனதும் கடமை, புதிய பந்தை சமாளித்து முதல் பத்து ஓவர்கள் நின்று பிடிப்பது. அதற்குப்பிறகு எங்கள் அதிரடி வீரர்கள் வந்து ஓட்டங்களை அடித்துப் பெற்றுக்கொள்வார்கள்.
இதற்காக ஒவ்வொரு போட்டியிலும் சரமாரியாக உடம்பில் வேகப்பந்துகளை வாங்கிக்கொள்வான். போட்டி முடிந்து உடம்பைப் பார்த்தால் உடம்பு முழுவதும் சிவப்பு பந்துகளாக வீங்கிக் கிடக்கும்.

ஒரு தரம் வேகப்பந்து அவனது விரலை முறித்தும் வெளிக்காட்டாமல் 15 ஓவர்கள் நின்று ஆடி வெளியே வந்தபோது பதறிவிட்டேன்.

அதே போல நாம் களத்தடுப்பில் ஈடுபடும்போது எங்கள் நண்பர்களாக இருப்பவர்கள் எதிரணியில் விளையாடினாலும் எமது வேகப்பந்துவீச்சாளர்கள் மூலமாகத் தாக்குவதையும் ஊக்குவித்ததோடு, அதை ஒரு ஆயுதமாகவும், சில நேரங்களில் விக்கெட் எடுக்கப் பயன்படுத்தும் வியூகமாகவும் பயன்படுத்தியிருந்தோம் என்று எண்ணும்போது கொஞ்சம் வெட்கமாகவும் இருக்கிறது.

ஒரு பவுன்சர் பந்து போதும் ஒருவரின் உயிரைக் குடித்துவிடும் என்று அப்போது நாம் கொஞ்சமும் நினைத்திருக்கவில்லை. போட்ட பந்துகளில் தப்பித் தவறி, எகிறிக்குதித்த ஒரு பந்து தற்செயலாக யாராவது ஒருவருக்கு ஒரு பெரிய ஆபத்தை ஏற்படுத்தியிருந்தால்???
வாழ்நாள் முழுக்க மனதை உறுத்திக்கொண்டே இருக்கும் ஒரு சம்பவமாக மாறியிருக்கும்.

அந்த வேளையில் நானும் நாமும் நடந்துகொண்ட விதமும், அப்பாவிகளை பலிக்கடா ஆக்கிய விதமும் இப்போதும் வெட்கமாக இருக்கிறது.
அதேபோல தான், கிரிக்கெட் போட்டிகள் பார்க்கும் நேரமும் நான் ஆதரவு கொடுக்கின்ற அணிகளின் வேகப்பந்து வீச்சாளர்கள் பவுன்சர் பந்துகள், short pitched, bodyline length பந்துகள் மூலமாக எதிரணி வீரர்களைத் தாக்குவதை ஒரு குரூர ரசனையுடன் பார்த்திருக்கிறேன்.
(மிட்செல் ஜோன்சனின் ஆஷஸ் பவுன்சர், வேகத் தாக்குதல்களை மீண்டும் மீண்டும் ரசித்திருக்கிறேன்)


தற்செயலாக காயங்கள், உபாதைகள் ஏற்படும்போது மனக்கவலை கொண்டாலும், மிட்செல்  ஜோன்சன் , டேல் ஸ்டெய்ன் (நான் ஆதரவு தெரிவிக்கும் அணிக்கு விளையாடும் நேரம் மட்டும்), சில நேரங்களில் மாலிங்க போன்ற இலங்கை பந்துவீச்சாளர்கள் வீசும் இவ்வகைப் பந்துகளை ரசித்திருக்கிறேன்.
இறுதியாக இங்கிலாந்தில் வைத்து இலங்கை டெஸ்ட் தொடரை வென்ற நேரம் சமிந்த எரங்கவின் பவுன்சர் மூலமாக விழுத்தப்பட்ட விக்கெட்டுக்கு அடைந்த குதூகலம் இப்போதும் ஞாபகம் இருக்கிறது.

இப்பொழுது அதை நினைக்கையிலும் கொஞ்சம் மனதில் குற்றவுணர்ச்சி தான்.
-----------------

ஆனாலும், பவுன்சர் பந்துகளை (பவுன்சருக்கு எகிறி என்றொரு வார்த்தையை அண்மையில் அறிந்தேன். நன்றாகவே இருக்கிறது) தடை செய்யவேண்டும் என்றும், அதற்கு மேலே சென்று கடின பந்து பாவனையை முற்றாகத் தடை செய்வதன் மூலமாக கிரிக்கெட்டை மேலும் ரசிக்கவும் செய்யலாம், பாதுகாப்பு உபகரணங்களும் தேவையில்லை என்று எழும் கோஷங்களுக்கு நான் கடும் எதிர்ப்பை பதிவு செய்கிறேன்.

நாம் நேசிக்கும் ஒரு விளையாட்டின் மூலம் மரணம் என்பதை பலர் சொல்லும்போது, இல்லை இது இந்த விளையாட்டில் நடந்த ஒரு விபத்தின் மூலமான மரணமே தவிர, கிரிக்கெட் தான் இந்த மரணத்துக்குக் காரணம் என்று யாரும் சொல்லாதீங்கடா என்று சத்தமாகக் கத்தவேண்டும் போல இருந்தது.

ஒவ்வொரு விளையாட்டின் தனித்துவமான அம்சங்களுக்காகவே அவை ரசிக்கப்படுகின்றன.

கால்பந்து விளையாட்டில் ஓயாமல் ஓடுவதும், அபாயகரமான உதைகளும் tackle மற்றும் foulகளும் மரணங்களைத் தூண்டுகின்றன என அவற்றைத் தடை செய்வதுண்டா?
அல்லது குத்துச்சண்டை காரணமாக நீண்ட கால உபாதைகள், சில உடனடி மரணங்கள் சம்பவிக்கின்றன என தடை செய்யக் கோரிக்கைகள் விடப்படுவதுண்டா?

கிரிக்கெட்டில் கூட இவ்வாறான விபத்துக்கள், அசம்பாவிதங்கள் எப்போதாவது தான் நடப்பதுண்டு.
கிரிக்கெட் மைதானத்தில் நிகழ்ந்த ஏழாவது துரதிர்ஷ்டமான மரணம் இதுவாகும்.
(இதில் எவையுமே சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் நடந்தவை அல்ல என்பதும் முக்கியமானது)

தலைக்கவசம் அணிந்திருந்தும் மணிக்கு 135 km வேகத்தில் பட்ட பந்து எப்படி பிலிப் ஹியூஸின் உயிரைப் பறித்தது?
இதோ விளக்கப்படம் 


ஆனால் கிரிக்கெட்டின் மீதான அண்மைய சாபமோ என்னவோ கடந்த வாரம் இஸ்ரேலில் நடந்த ஒரு கழக மட்டக் கிரிக்கெட் போட்டியில் நடுவர் ஒருவர் பந்து தாக்கி பலியாகியுள்ளார்.

ஆபத்து இல்லாத இடம் எது? ஆபத்து இல்லாத செயல்கள் எவை?
எனினும் எல்லா விடயங்களிலும், எல்லா நேரங்களிலும் நாம் எம்மை காத்துக்கொள்வதும், முற்கூட்டியே அலட்சியமாக இல்லாமல் தக்க உபகரணங்கள் / பாதுகாப்பு காப்புக்கள் இல்லாமல் இப்படியான திடீர் ஆபத்துக்களை எதிர்கொள்வது புத்திசாலித்தனம் இல்லை தான்.

அண்மையில் வாசித்த சச்சின் டெண்டுல்கரின் சுயசரிதையிலும் - Playing it my way ஒரு அத்தியாயத்தில் நான் மும்பாய் அணிக்கு விளையாட ஆரம்பித்தபோதும் தலைக்கவசம் இல்லாமல் ஆடியதைப் பற்றி சொல்லியிருக்கிறார்.
அதே நேரம் தான் பாதுகாப்பைப் பற்றி கவனமாக இருந்தது பற்றியும் சொல்லியிருக்கிறார்.


இந்தவேளையில் தான் முன்னைய மேற்கிந்தியத்தீவுகள் அணியின் Fearsome Foursome என்று அழைக்கப்பட்ட ஹோல்டிங், ரொபேர்ட்ஸ், கார்னர், மார்ஷல் போன்றோரையும், அவுஸ்திரேலியாவின் டென்னிஸ் லில்லீ, ஜெப் தொம்சன், இங்கிலாந்தின் பொப் வில்லிஸ், ட்ரூமன், ஜோன் ஸ்னோ போன்றோரையும் தலைக்கவசம் இல்லாமல் எதிர்கொண்டு ஆடிய வீரர்களின் துணிச்சல் உண்மையில் மெச்சத் தக்கது தான்.

எத்தனை எலும்புகள் உடைந்து தெறித்திருக்கும். எத்தனை வீரர்கள் தம் கிரிக்கெட் வாழ்வை பாதியில் முடித்துக்கொண்டார்கள்.

தலைக்கவசங்கள் புழக்கத்துக்கு வந்தபோதும் அதைப் பயன்படுத்தாமல் துணிச்சலாக தங்கள் துடுப்பாலேயே தடுத்தாடிய சேர்.விவியன் ரிச்சர்ட்ஸ், சுனில் கவாஸ்கர் (skull guard எனப்படும் மண்டையோட்டைப் பாதுகாக்கும் சிறு கவசம் ஒன்று மட்டும் பயன்படுத்தியிருந்தார்) இன்னும் மற்ற வீரர்களை மதிப்போடு எண்ணிப் பார்க்கவேண்டி இருக்கிறது.
அதிலும் இக்காலத்தை விட அந்தக்காலத்தில் வேகமும் அதிகம், மைதானங்களும் பெரிதாக இப்போது போல மூடப்பட்டு பராமரிக்கப்பட்டவை அல்ல.

எனினும் இப்போது வளர்ந்து வந்த ஒரு நட்சத்திரம், அனைவராலும் நேசிக்கப்பட்ட ஒரு நல்ல வீரரின் மரணத்தைத் தொடர்ந்து இதை ஒரு பாடமாக தக்க காப்புக்களோடு விளையாடுவது ஆரோக்கியமானதே.


இப்போது இருக்கும் கேள்வி, 9ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டிருக்கும் இந்தியாவுக்கு எதிரான தொடரில் அவுஸ்திரேலியாவின் மிட்செல் ஜோன்சனும் குழுவினரும், தங்கள் வழமையான வேகப்பந்துவீச்சின் பிரம்மாஸ்திரங்களான பவுன்சர் மற்றும் short pitch பந்துகளை பயன்படுத்துவார்களா?

அடுத்த பதிவில் இப்போது ஹியூஸின் நினைவுகளால் சோகமாகிப்போயுள்ள அவுஸ்திரேலிய - இந்திய தொடர் பற்றிய எனது கருத்துக்களைப் பகிர்கிறேன்.

இந்தப் பதிவின் படங்கள் : www.mirror.co.uk
                                                      espncricinfo.com
                                                      https://www.facebook.com/SooriyaRaagangal


ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner