October 31, 2010

மெகா ஸ்டாரும் மேர்வின் மாமாவும்

சுவர்ணவாகினி தொலைக்காட்சியில் மெகா ஸ்டார் என்றொரு Reality show நடைபெற்று (சிங்கள மொழியில் தான்)நேற்று இறுதிப் போட்டி மிகப் பிரம்மாண்டமாக இடம்பெற்றது.
நாடு முழுவதிலும் பிரபலமான நடிக,நடிகையர்,பாடக,பாடகியர் மட்டுமல்லாது பிரபல,இளம் சிங்கள அரசியல் பிரமுகர்களும் கலந்துகொண்ட போட்டி நிகழ்ச்சி இது.
பாடலும் ஆடலும் என்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி அப்பாவி வாசகர்களின் smsகள் மூலமான வாக்குகள் அடிப்படியில் வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள்.

தொடர்ந்து இந்த நிகழ்ச்சியைப் பார்க்காவிட்டாலும், அரசியல்வாதிகளும் வருவதால் அவர்கள் வரும் அங்கங்களில் நடக்கும் வேடிக்கை சுவாரஸ்யங்களுக்காகப் பார்ப்பதுண்டு.

நேற்று இறுதிப் போட்டி.. எனது அவதாரம் வானொலி நிகழ்ச்சிக்கிடையிலும் இடையிடையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

இந்த பரபர அரசியல்வதிகளுக்கெல்லாம் இவ்வாறு ஆடவும் பாடவும், இதற்கென்று ஒத்திகை பார்க்கவும்,ஒளிப்பதிவுக்கும் எங்கிருந்து நேரம் வருகுதென்று நான் அடிக்கடி யோசிப்பதுண்டு.

               தயாசிறி ஜயசேகர - ஐ.தே.க வின் எதிர்காலம்???


அதிலும் நேற்று இறுதிப் போட்டிக்குத் தெரிவான நான்கு போட்டியாளர்களில் இருவர் நாடாளுமன்ற உறுப்பினர்கள்.
ஐக்கிய தேசியக் கட்சியின் அண்மைக்கால துடிதுடிப்புப் பீரங்கியான தயாசிறி ஜெயசேகரவும், ஐ.தே.கவில் தேர்தலில் போட்டியிட்டு ஆளும் கட்சிக்கு மாறிய உபேக்ஷா ஸ்வர்ணமாளியுமே(பபா நாடகத்தால் பிரபலமான நடிகை/model)அவர்கள்.
இவர்களோடு நடிகரான சுரேஷ் கமகே என்பவரும்,பாடகரான அஜித் வீரசிங்க என்பவரும் போட்டியிட்டனர்.

அதிகளவு மக்கள் செல்வாக்கோடு கம்பீரமான தோற்றம் மற்றும் பாடும்,மக்களைக் கவரும் ஆற்றல்களால் தயாசிரியே இந்த இறுதிப் போட்டியில் வெல்வார் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.
பபாவின் கடைசி நேரக் கவர்ச்சி அலையும் தற்போது ஆளும் கட்சியில் இருப்பவர் என்பதும் அவருக்கும் வாக்குகளைத் தரும் என்ற பேச்சும் இருந்தது.
  உபேக்ஷா ஸ்வர்ணமாலி - ஆளும் பக்கத்திலே வளமான எதிர்காலம் :)

இறுதிப் போட்டிக்கான சிறப்பு நடுவர்களின் வருகையிலேயே பரபரப்பு தொற்றியது..

இலங்கை அரசியலின் பரபரப்பு சர்ச்சை நாயகனும், அண்மையில் மாமரத்தில் கட்டி அடித்த நாடாளுமன்ற தாதாவுமான மேர்வின் சில்வா MP அரங்கத்துள் பிரவேசிக்கும்போதே அதிரடியுடன் தான் வந்தார்.

வாசலில் அரைகுறை ஆடைகளுடன் வரவேற்புப் பணியில் ஈடுபட்டிருந்த நங்கையரை மேலும் கீழுமாகப் பார்த்தவர் நேரடி ஒளிபரப்பில்,"இப்படியான ஆடைகளில் பெண்களை நிறுத்திவைப்பது கலாசாரத்துக்கு ஒவ்வாது.உங்கள் தொலைக்காட்சிக்கு இது அழகில்லை" என்று நெத்தியடி கொடுத்தவர், "கட்சி பேதம் தாண்டி 'நடுவராக' இருப்பேன்" என்று அசத்திவிட்டு சென்றார்.
  மேர்வின் சில்வா - மெகா ஸ்டார் - அசைக்க முடியாத அதிரடி நாயகன்

அடடா மேர்வின் கலக்குறாரே என்று பார்த்தால்,மூன்று இடங்களில் முகம் சுளிக்க வைத்தார்..

1.தொகுப்பாளர் பிரபல நடிகர் கமல் அத்தாராச்சி இவரை 'அண்ணா' என்று கூறிப் பேச அழைக்க,நல்ல காலம் தன்னை மாமா என்று அழைக்கவில்லை என்று வேடிக்கையாக சொன்ன மேர்வின் சில்வா, நகைச்சுவையாகப் பேசுகிறேன் என்று அசிங்கமாக சொன்னது..
"எனக்கு மகள் இல்லை என்பதால் கமல் என்னை மாமா என்று அழைக்கவில்லைப் போலும். நாளும் எனக்கும் உடலில் வலு இருக்கிறது.எனது மனைவிக்கும் அழகும் இளமையும் இன்னும் மிச்சம் இருக்கிறது.இப்போது விரும்பினாலும் மகள் ஒன்றைப் பெறலாம்"

2 .விறுவிறுப்புக்காக செட் அப் செய்யப்பட குழப்பம் ஒன்றில் பம்புவா என்ற பொதுவாக சிங்களவர் சபைகளில் பேசத் தயங்கும் வார்த்தையை உபயோகித்தது.

3 .உபேக்ஷா அழகாக சிங்களப் பாரம்பரியப் பாணியில் உடையணிந்து பாடல் ஒன்றைப் பாடி முடிக்க மேர்வின் அடித்த கமென்ட் "உபெக்ஷாவின் காலத்தில் நான் இளைஞனாக இருந்திருந்தால் மேலும் மகிழ்ந்திருப்பேன்" இத்தோடு நிறுத்தி இருந்தால் பரவாயில்லை.

வழியலாக உபெக்ஷாவிடம் தான் குழந்தையாக மாறிப் பால் குடிப்பதுகூட சுகானுபவமாக இருக்கும் என்று புலம்பி வைத்தார் அந்தப் பெரிய மனுஷன்.இவ்வளவுக்கும் சபையில் அவர் மனைவியும் அமர்ந்திருக்கிறார்.

ஆளும் கட்சி ஆச்சே.. அதுவும் இவரது அருமை,பெருமைகள் தெரிந்தவராதலால் உபேக்ஷா தடுமாறி,சங்கடத்துடன் சிரித்து மழுப்பினாலும்,தொகுப்பாளர் நகைச்சுவைக்காக இதை நாடாளுமன்ற உறுப்பினர் பேசினார் என்று சமாளித்தாலும்,அடுத்துப் பேச வந்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும்,பெண் உரிமைகள் பற்றி அதிகம் குரல் கொடுப்பவருமான ரோசி சேனநாயக்க விடவில்லை.
சபையில் இவ்வாறான அசிங்கமாகக் கருத்துரைக்கக் கூடாது என்று கண்டித்தார்.
அவர் முடிக்க முதலே மேர்வின் சில்வா பாய்ந்துவிழுந்து (நாடாளுமன்றத்தில் நடப்பது போலவே) ரோசீயை அடக்கிவிட்டார்.

சபை முழுவதும் ஸ்தம்பித்துவிட்டது.

அதற்குப் பிறகு யார் நிகழ்ச்சியையும் முடிவையும் பார்ப்பார்.

நேற்றைய மெகா ஸ்டார் உண்மையில் மேர்வின் சில்வா தான்..

நேற்றைய இறுதியில் மேலும் சில சுவாரஸ்யங்கள்..

முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டீ சில்வா அதிதிகளில் ஒருவராக வந்து அமைதியாக இருந்தார்.

ஐ.தே.க அதிரடி உறுப்பினர் தயாசிறி ஜயசேகர மை நேம் இஸ் கான் படப் பாடல் 'மித்துவா' வை அருமையாகப் பாடி நடித்தார்.

பபா உபேக்ஷா கவர்ச்சி உடை,கவர்ச்சி நளினங்களோடு அரபுப் பாடல் ஒன்றுக்குப் போட்ட ஆட்டம் ஒன்று போதும், உலகின் கவர்ச்சிகர நாடாளுமன்ற உறுப்பினராக அவருக்கு விருது கொடுக்கலாம்.(என்ன ஒன்று, மேர்வின் சில்வா பகிரங்கமாக உணர்ச்சிவசப்பட்டு விட்டார்)

 ஒவ்வொருவர் மேடைக்கு வரும்போதும் நோ நோ என்று எழும் சபையோரின் குரல்கள் தயாசிரிக்கு யெஸ் யெஸ் என்று முழங்கின..
சரி தயாசிறி இலகுவாக வென்று விடுவார் எனப் பார்த்தால்.. முடிவில் பெரிய சலசலப்பு..

பெரிதாக அறியப்படாத அஜித் வீரசிங்க வென்றதாக அறிவிக்கப்பட்டார்.
அறிவித்த விதத்திலேயே எக்கச்சக்க குளறுபடிகள் இருந்தது போலத் தெரிந்தது.
மேர்வின் சில்வா முகத்தில் அந்த வேளையில் ஒரு நக்கல்+மர்மப் புன்னகை.

நிறைய சிங்கள நண்பர்களுடன் பேசியபோது இது பற்றி கட்சி பேதம் தாண்டி அதிருப்தி தெரிவித்தார்கள்.

அதான் முதலிலேயே சொன்னேனே நேற்றைய மெகா ஸ்டார் மேர்வின் சில்வா தான் என்று..


*இது பற்றிய வீடியோ காட்சிகள் இணையமெங்கும் பரவிக் கிடக்கின்றன. என் முதுகு தாங்காது என்பதால் நான் இங்கே ஏற்றவில்லை. தேடிப் பார்த்து பயன்பெறுங்கள்.

*இத்தாலிய 'தீராத விளையாட்டுப் பிள்ளை' பிரதமர் சில்வியோஸ் பெர்லுச்கொனியின் நேற்றைய பேட்டி ஒன்றும் ஞாபகம் வந்தது..
"பெண்கள்,வேலை,விளையாட்டில் என் காதல் ஒரு போதும் ஓயாது"
அவருக்கு இப்போது வயது 74.

October 29, 2010

செல்லமாத் தட்டுங்க - மலேசிய அனுபவம்

இது என்னடா செல்லமாத் தட்டுங்க என்றாரே. ஏதாவது கில்மாப் பதிவான்னு நீங்க யோசிக்கலாம்.
ஒண்ணுமில்ல, மலேசியாவுக்கு அண்மையில் பயணம் போயிருந்தேன். அங்கே இரு வாரங்களுக்கு மேல் தங்கியிருந்த நேரம் கண்ட காட்சிகள்,அனுபவங்களைப் பதிவாக இடலாம் என்று தலைப்புக்கு யோசித்த போது தில்லாலங்கடி வடிவேலு ஞாபகம் வந்தார்.

அதான் கொஞ்சம் மலேசிய விஷயங்களை உங்களுடன் செல்லமாத் தட்டலாம் என்று..

             இரட்டையில் ஒற்றைக் கோபுரப் பின்னணியுடன் லோஷன் :)

சிங்கப்பூருக்கு அடிக்கடி போயிருந்தாலும் மலேசியா நான் போனது இதுவே முதல் தடவை.

சிங்கப்பூர் போய் அங்கிருந்து சொகுசுப் பேரூந்து மூலமாக மலேசியாவுக்குள் நுழைந்தோம்.

மனைவி, நான், மகன் எம்முடன் மனைவியின் சின்னண்ணனும் வந்திருந்தார்.
ஒரு பத்துப் பேர் ஒரு பிரம்மாண்டப் பேரூந்தில்.
சொகுசான பயணம். பாதைகளும் சீர் என்பதனால்.

சிங்கப்பூர் எல்லை தாண்டியபோதே இரு நாடுகளுக்குமிடையிலான பாரிய வேறுபாடுகள் தெரிகின்றன.
சிங்கப்பூர் வெளிநாட்டின் பாரிய முதலீடுகளுடன் மிக வேகமாக முன்னேறுவதையும் மலேசியா அண்மைக்காலத்தில் துரத்துவதையும் உணரமுடிகிறது.

வெளியே இருந்து பார்க்க மலேசியா ஒன்றுபட்ட அழகான நாடாகத் தெரிகின்றபோதும் உள்ளே நுழைந்து அவதானித்தால் பிளவுகள்,பிரச்சினைகள்,பேதங்கள் ஊடறுத்துத் தெரிகின்றன.
                   நாம் தங்கியிருந்த அழகான வீடு

நான் தங்கியிருந்தது மலேசியாவில் வளர்ந்துவரும் இளம் அரசியல்வாதி/தொழிலதிபர் வீட்டிலே.
இதனால் அங்குள்ள பிரபல இந்திய/தமிழ் கட்சியான மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சி பற்றியும் பல உள்ளக விஷயங்கள் அறியக் கிடைத்தது.

அக் கட்சியினுள் இருக்கும் உட்கட்சி மோதல்களும் அண்மைக்கால கட்சியின் சரிவுகளும்,பத்திரிகையில் வரும் கோமாளித்தனமான அறிக்கைகளும் இலங்கை,தமிழக தமிழ்க் கட்சி அரசியல்களுக்கு எந்த வகையிலும் குறைந்தன அல்ல.
லாவகமாக நுழைந்து வெளியேறுவதிலும் சமாளிப்பதிலும் இவனும் ஒரு பக்கா அரசியல்வாதி  தான் :)

இன்னும் சில உதிரி தமிழ் அரசியல் கட்சிகளும் இந்தியர்களின் வாக்குகளுக்காக பிரதிநிதித்துவம் என்ற பெயரில் அரசியல் செய்கின்றன.

ஒப்பீட்டளவில் குறைந்த தமிழ் சனத்தொகை இருந்தாலும் மூன்று தமிழ் பத்திரிகைகள்..
மூன்றுமே நல்ல விற்பனையாம்.

மலேசியாவில் பரந்துபட்ட வன்முறைகள்.. குறிப்பாக தமிழர் செறிந்து வாழும் இடங்களில் அதிகம்.
பத்திரிகைகளில் இவை நாளாந்தம் முழுப்பக்கங்களையும் பிடிக்கின்றன.

இரு முக்கிய தமிழ் வானொலிகள்..
THR RAAGAA, MINNAL FM.

இவற்றுள் ராகா மிகப் பிரபல்யம்.

தமிழர்களுக்கே உரிய உணர்வுகள் மேலிட சென்ற இடமெல்லாம் யுத்தம், ஈழத் தமிழர் நிலை, இலங்கை நிலைமை குறித்து அனுதாபம்+அக்கறையுடன் விசாரிக்கிறார்கள்.
ஊடகங்கள் பல கட்டியெழுப்பிய சில மாய விஷயங்களை நம்பியிருப்பவர்கள் நான் சொன்ன சில விஷயங்களை நம்ப மறுத்து பின் மௌனமாகிறார்கள்.
தமிழகம்,தமிழ் ஈழம் இரண்டுமே தங்கள் உறவு பூமிகள் என்கிறார்கள்.

மலேசியாவில் மிக ரசித்த ஒரு விஷயம் அந்த இயற்கை அழகும், அதை அனைவருமே சேர்ந்து பாதுகாக்கும் விதமும்.
கிட்டத்தட்ட முழுவதுமே மலைநாடாகத் தெரியும் மேட்டு நிலப் பிரதேசம்.. அதில் அமைக்கப்பட்டுள்ள வீதிகளும் கட்டடங்களும் கண்கவர்பவை.

நான் மனைவியுடன் பேசும்போது சும்மா வேடிக்கையாக கடித்தது - "இது மலேசியா இல்லை.. மலை ஏறுரியா? அல்லது மலை ஏரியா"

நாங்கள் இருந்தது செரேம்பன் பகுதியின் கொஞ்சம் பணக்காரப் பகுதியான பாயு ஏரிப் பகுதி. இயற்கையான அழகு சூழ்ந்த,தனிமையான நகரத்தை விட்டு கொஞ்சம் விலகிய பகுதி.
நாம் தங்கியிருந்த வீட்டுக்குப் பின்னாலேயே அழகான ஏரி.
                      பாயு ஏரிக்கரையில் என் மகன் 

பறந்து விரிந்த ஐநூறுக்கு மேற்பட்ட ஏக்கர் கொண்ட பிரதேசத்தில் மொத்தமாகப் பத்தே பங்களாக்கள்.வாகனம் இல்லாமல் அந்தப் பகுதியில் வாழ்வது ரொம்பவே சிரமம்.

பகலில் வெயிலும் இரவில் A/C போட்ட ஊருமாக இருப்பது நன்றாகவே பிடித்திருந்தது.

மலேசியாவில் பல வீட்டு சாப்பாடுகள் அவ்வளவு நாவுக்குப் பிடிக்கவிலை.
காரணம் தேங்காய்ப்பால்,உப்பு அறவே இல்லை/மிகக் குறைவு.உறைப்பு/காரமும் இல்லை.
ஆனால் வெளி உணவகங்களில் வெளு வெளு என்று வித விதமாக வெளுத்திருந்தோம்.
வித விதமாக உணவு உண்பதற்கு இருபத்து நான்கு மணிநேரமும் அநேகமான இடங்களில் உணவகங்கள் இருக்கின்றன.

எந்த நேரமும் அவை நிறைந்தே இருக்கின்றன. எல்லா நேரமும் யாராவது சாப்பிட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.
எப்படித் தான் முடியுதோ?

சாப்பாட்டுக் கடை மலேசியாவில் எங்கு திறந்தாலும் வியாபாரம் கொடி கட்டுமாம்.நம் பெரிய புள்ளி நண்பருக்கு மொத்தமாக 36 உணவகங்களில் பங்குகள்/உரிமை இருக்கிறது.

           எப்படிப் பார்த்தாலும்,எங்கிருந்து பார்த்தாலும் அழகு - இரட்டைக் கோபுரங்கள் 

மலேசியாவில் கவனித்த இன்னொரு விடயம்.. பொதுப் போக்குவரத்தை நம்பி இருக்க முடியாது.சொந்த வாகனம் நிச்சயமாகத் தேவை.

 எனக்கு நம்ம நண்பரின் உதவியால் வாகன வசதியும் கிடைத்தது..
ஆசைதீர எல்லா விதமான வாகனங்களையும் (சொகுசு S series பென்ஸ் தொடக்கம்,Double Cab, Lorry வரை ;))மலேசியாவின் வீதிகளில் அங்கே இருந்த மூன்று வாரங்களும் ஓடித் திரிந்தது மறக்க முடியாதது.
                    'காடி' ஓடும் போதும் கையில் கமெரா :)

ஜென்டிங்,படு மலை (Batu Caves) போன்ற இடங்களுக்கும் நானே கார் செலுத்தியிருந்தேன்.
சாரதி அனுமதிப் பத்திரம் தேவையில்லையா என்று கொஞ்சம் சந்தேகமாகக் கேட்டேன்.
"நீங்க ரூல்ஸ் படி காடி(காடி என்று தான் கார்களை சொல்கிறார்கள் - மலாய்)ஓட்டுவீங்களா?அப்பிடின்னா எவனும் பிடிக்க மாட்டான்" - நண்பர்.
"அப்பிடியே உங்களை விசாரிச்சா நம்ம பேர சொல்லுங்க.. நம்ம பெயரையும் தெரியலையா, ஒரு பத்து வெள்ளியை போலீஸ்காரன் கையில வச்சிட்டுப் போய் கிட்டே இருங்க"

உண்மை தான் .. சில தமிழ்ப்படங்களில் காட்டுவது போல, மலேசியாப் போலீஸ் ஒன்றும் நேர்மையின் சிகரங்கள் அல்ல.. பணம் எதையும் அங்கே செய்கிறது.
ஐந்து கிராம் போதைவஸ்து வைத்திருந்தாலே தூக்கு எனக் கடுமையான சட்டம் இருக்கும் அந்த நாட்டில் நம் நண்பரின் தெரிந்த அரசியல் ஆளுமை மிக்கவர்களால் பெரிய,பெரிய குற்றங்கள் செய்தவர்கள் கூட சில ஆயிரம் வெள்ளிகளால் வெளியே வந்துவிடுகிறார்கள்.

தமிழர்கள் பலர் அங்கே தாதாக்களாகக் கொடி கட்டிப் பறக்கிறார்கள்.அல்லது இப்படி சொல்லலாம்.. தாதாக்களில் பலர் தமிழர்கள்.

கண்ணுக்கு முன்னா ஒரு கை வெட்டலையும், அசிட் அடித்த சம்பவத்தையும் பார்த்தேன்..
என்னடா இப்படிக் கொலை வெறியாகத் திரிகிறார்களே என்று கொஞ்சம் அரண்டு போனேன்.
பல்வேறு கோஷ்டிகள். வியாபாரம் செய்வதற்கு இப்படி ஏதாவது பக்கபலம் தேவை என்கிறார்கள்.

சில தமிழர் பிரதேசங்கள் வன்முறை நிறைந்த இடங்களாக இருக்கின்றன.நாங்கள் அங்கே இருந்த காலகட்டத்திலே தான் பிரபல பணக்காரப் பெண்மணி சொசிலாவதி என்பவர் இரு தமிழ் வழக்கறிஞ சகோதரர்களால் கொடூரமாகக் கொலைசெய்யப்பட்டிருந்தார்.
அந்தக் கொலை விவகாரம் ஒவ்வொருநாளும் புதுசு புதுசா பூதாகாரமாக மாறிக் கொண்டிருந்தது.
கிட்டத்தட்ட இனப்பிரச்சினை ஒன்றுக்கே வித்திடும் போல இருந்தது.
காரணம் கொலைகாரர்கள் இந்தியர்கள்,தமிழர்கள்.
கொலை செய்யப்பட்டவர்கள் மலாயர்கள்.
இப்படி சிறு சிறு விவகாரங்கள் இப்போது உள்ளே புகைந்து கொண்டிருக்கின்றன.
சில சட்ட விவகாரங்களிலும் இந்தியர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக படித்தவர்கள் ஒரு சிலருடன் கொஞ்சம் ஆழமாகப் பேசியபோது குமுறினார்கள்.

                  ஏதோ ஒரு கட்டடத்தின் அழகிய உட்புறம்.. 
             எனக்கு இது சொந்தமில்லை என்று சொன்னாலும் நம்பவா போறீங்க ;)

 பல மலாய் வார்த்தைகள் தமிழோடு கலந்ததைக் கண்டேன்..
காடி(கார்),திமாம்(எடை போடுதல்),லீமா(தேசிக்காய்)இப்படிப் பல..
ஆனால் மலேசிய தமிழர்கள் பலர் பேசும் தமிழும் அழகாக சுத்தமாக இருக்கிறது..

பசியாற, தாகம் தீர,வெந்நீர்,உலாப் போறீங்களா,மருத்துவர், இப்படிப் பல பல..
அவர்களது பேசும் பாணியில் கேட்க இன்னும் சுவையாக இருக்கிறது.

பொதுவாக சமயம்,கலை,கலாசாரம் பற்றிய அக்கறை,ஆர்வம் இருந்தபோதும் இவை அருகிவருவதாக சொல்கிறார்கள்.
ஆனால் பலரிடமும் அடுத்தடுத்த தலைமுறையைப் பற்றிய கவலை இருக்கிறது.

மிகப் பெரும் பணக்காரர்களாக உள்ள தமிழர்களையும் பார்த்தேன்.. அன்றாடம் பத்து வெள்ளி உழைக்க சிரமப்படும் சிலரையும் கண்டேன்.
பணம் இருந்தால் அனுபவிக்க ஒரு சொர்க்கபுரி மலேசியா என்பதில் ஐயம் இல்லை.

மலாய் பெண்கள் ஆண்களை விடத் தோற்றப் பொலிவாக இருக்கிறார்கள். சீனப் பெண்களில் கால் அழகும்,மலாய்ப் பெண்களின் கண் அழகும் சிறப்பு என நினைக்கிறேன்.
இஸ்லாமிய நாடு எனும்போதும் பொது இடங்களில் கட்டை உடைக் கலாசாரம் கலக்குகிறது.
இரவு விடுதிகளும் கோலாலம்பூரில் நிரம்பி வழிகின்றன.

அநேகமான சீனப் பெண்கள் இந்திய தமிழ் ஆண்களைக் காதல் செய்வதை விரும்புவதாக அங்கே இருந்தபோது ஒரு ஆங்கிலப் பத்திரிகைகளில் பார்த்தேன்.

பார்க்க இடங்கள் பலவும் கூட இருக்கின்றன.

 பார்த்த இடங்களில் லங்காவி + ஜென்டிங் பிரதேசங்கள் கண்ணிலேயே நிற்கிறது..
இது தவிர பட்டு முருகன் ஆலயத்துக்கு மனைவியை அழைத்து சென்றிருந்தேன்.. அந்த ஆலய அமைப்பும்,இயற்கையிலேயே உருவான மலை அமைப்புடன் கூடிய அழகும் கண்ணைக் கவர்ந்தன.


Petronas Twin Towers கட்டட அமைப்பின் உறுதி கண்டு வியந்தேன்.
நான் முன்பு கொழும்பு உலக வர்த்தக மையத்தின் 34 வது மாடியில் அலுவலகத்தைக் கொண்டிருந்தாலும், Petronas Twin Towers இன் நாற்பதாவது மாடியில் நின்று பார்த்தபோது (அதற்கு மேலே பார்வையாளருக்கு அனுமதி இல்லை) மேலேயும் சில அலுவலகங்கள் இயங்குகின்றன.
எல்லாத் தளங்களும் அலுவலகங்கள் இயங்குகின்றனவாம்.
                மலேசியாவின் உயரமான இடத்திலிருந்து.....

சில,பல பொருட்கள் மலேசியாவில் விலை மலிவு(மனைவி வாங்கி சேர்த்து, என் வங்கிக் கணக்கை முடித்த சோகக் கதையைக் கேட்காதீர்கள்). மேலும் சில பொருட்கள் நம்பி வாங்குவோரை ஏமாற்றிவிடும்..
உதாரணமாக புத்தம் புதிய நோக்கியா செல்பேசி ஒரே Shopping complexஇல் அருகருகே உள்ள கடைகளில் கிட்டத்தட்ட இருநூறு ரிங்கிட்டுக்கள் வித்தியாசம்.
சில இலத்திரனியல் பொருட்களில் ஏமாற்றி விடுவார்கள்.
ஆனால் சில அழகுசாதனப் பொருட்கள் மற்றும் இதர சில பொருட்கள் மலேசியாவில் இருந்தும் சிங்கப்பூரில் பின்னர் வாங்கலாம் என்று விட்டு சென்றால் அந்தப் பொருட்கள் அங்கே கிடையாது.
உதாரணமாக -
Perfumes, Adidas Special Edition Perfume, Shower Gel, Body spray

அந்த Adidas World cup football special edition Perfumery set வாங்காமல் விட்டுவிட்டேன் என்று மிகக் கவலைப்படுகிறேன்.

எல்லாம் சொல்லிட்டு செல்லமாத் தட்டுங்க பற்றி சொல்லாவிட்டால் சரியில்லையே.. (தில்லாலங்கடி பார்க்காத அப்பாவிகளுக்காக) Selamat Datang என்றால் மலாய் மொழியில் நல்வரவு/வணக்கம் என்று அர்த்தம்.

அடுத்த முறை மலேசியா செல்வதாக இருந்தால் லங்காவியில் இன்னும் கொஞ்ச நாள் நிற்கவேண்டும் என முடிவெடுத்துள்ளேன்.

இந்தப்பதிவில் நான் பகிர்ந்துள்ள விஷயம் எல்லாமே நான் அவதானித்தவை. மலேசியாவில் உள்ள நண்பர்கள் யாராவது இதிலே வேறுபட்ட/மாறுபட்ட கருத்துக்கள் இருந்தால் எடுத்து சொல்லலாம்.

அப்பாடா.. ஒரு பயணக்கட்டுரையைத் தொடரும் போடாமல் பதிவாகப் போட்ட எனக்கு யாராவது விரும்பினால் விழாவும் எடுக்கலாம் ;)

இன்னும் சில சின்னச் சின்ன மலேசிய அனுபவங்களை நேரம் கிடைக்கின்ற பொழுதுகளில் பகிர்கிறேன்.

இப்போ செல்லமாத் தட்டுங்க.. வாக்குகளை ;)

பி.கு- இன்று பிறந்தநாள் கொண்டாடும் என் அன்புத் தம்பி செந்தூரனுக்கு இனிய வாழ்த்துக்கள்.

October 25, 2010

ஏமாளிகள் நாங்களா?

நேற்றைய நாளில் இரவு கொஞ்சம் தாமதமாகத் தான் இணையம் மேய நேரம் கிடைத்தது.
இரண்டு விளையாட்டு செய்திகள் மனத்தைக் கொஞ்சம் சலனப்படுத்தி இருந்தன.

அண்மைக்காலத்தில் மிக ரசித்த இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கும் கிரிக்கெட் சூதாட்டக்காரர் ஒருவருடன் நெருங்கிய தொடரோபுடைய பெண் ஒருத்திக்கும் இடையில் இருப்பதாக சந்தேகிக்கப்படும் உறவு பற்றிய செய்தி.

பொது நலவாயப் போட்டிகளில் இலங்கைக்குக் குத்துச் சண்டைப் போட்டியில் தங்கம் வென்று தந்த மஞ்சு வன்னியாராச்சி ஊக்க மருந்து உட்கொண்டதாக வெளியான தகவல்.

இவற்றுள் ரெய்னா பற்றிய செய்தி தந்த தாக்கம் அதிகம்.
ரெய்னா இந்திய அணியில் இணைந்துகொண்ட காலம் முதலே ஒரு திறமையான,தேவையற்ற சர்ச்சையில் சிக்காத,துடிப்பான வீரர் என்று எனக்கு மிகப்பிடித்திருந்தது.
எதிர்கால இந்தியாவின் தலைவர் என்று மனசுக்குள் நினைத்து வைத்திருந்தேன்.

ஆனால் வயசுக் கோளாறு போல இருக்கு.

அகப்பட்டுள்ள ஹோட்டல் உள்ளக வீடியோ கமெராவின் பதிவுகளில் சுரேஷ் ரெய்னாவோடு தொடர்ச்சியாக திரிகிற/காணப்படுகிற/பழகிற அழகிய இளம் பெண், ஒரு பிரபல கிரிக்கெட் சூதாடியின் நெருங்கிய சகபாடி எனக் கூறப்படுகிறது.

சரி தெரியாமல் தான் அந்தப் பெண்ணுடன் ரெய்னா பழகினார் என்று வைத்தாலும், வீரர்கள் தாங்கும் அறைக்கு அடிக்கடி அறியாத பெண்கள் வந்துபோவதை எவ்வளவு தூரம் அணி முகாமைத்துவம் அங்கீகரிக்கிறது?

அடுத்து இந்த விவகாரத்தில் சில கேள்விகள்..

ICCயின் ஊழல் ஒழிப்பு பிரிவுக்கு அறிவிக்காமல் ஸ்ரீலங்கா கிரிக்கெட் முதலில் இந்த வீடியோப் பதிவை இந்தியாவின் BCCIக்கு அனுப்பியுள்ளது ஏன்?
அடுத்து BCCIஇன் செயலாளர் ஸ்ரீனிவாசன் (இவர் தான் ரெய்னா விளையாடும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் உரிமையாளர் என்பதும் முக்கிய விடயம்) இந்த விடயத்தைத் தக்கபடி விசாரிக்காமல்/வெளிப்படுத்தாமல் SLC(ஸ்ரீலங்கா கிரிக்கெட்)இடம் இந்த விடயத்தைப் பெரிது படுத்தாமல் விடுமாறு கூறியது ஏன்?

அதற்குப் பிறகு இது ஒரு பெரிய விஷயமே இல்லை என்பது போல ஒரு அறிக்கை இடமிருந்து..
லண்டன் பத்திரிகையொன்று வெளியிட்ட இந்த செய்து முற்று முழுதாகத் தவறென்றும் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் அப்படியொரு தகவலைத் தமக்கு அளிக்கவே இல்லையென்றும் ஆனால் ரெய்னாவோடு இருந்த அந்தப் பெண் ரெய்னாவின் முகவர் என்றும் சொல்லியுள்ளது.
அத்துடன் இலங்கை வீரர்கள் சிலருக்கும் அவர் முகவராம்.
ரெய்னாவிடம் சில ஒப்பந்தப் பத்திரங்களில் கையெழுத்து வாங்கவே சில இரவுகளில் ரெய்னாவை சந்தித்தாராம்.

இப்படியான வீரர்களின் தனிப்பட்ட முகவர்களால் தான் அண்மைக் காலத்தில் சூதாட்டங்கள் இடம்பெற்றதாக தெரிவித்திருந்ததும் பாகிஸ்தான் வீரர்கள் மூவருடன் சம்பந்தப்பட்ட மசார் என்ற சந்தேக நபரையும் 'முகவர்' என்றே பாகிஸ்தானிய வீரர்கள் கூறியது ஞாபகம் வருகிறது.

பாகிஸ்தான் வீரர்களின் விடயம் வெளிவந்தபோது பரபர செய்திகளை வெளியிட்ட Cricinfo தளம்,
 இது பற்றி ஒரு செய்தி கூட நேற்று தரவில்லை.

BCCIயின் அளவுகடந்த/வரம்பு மீறிய அதிகாரத்துக்கு இன்னொரு நல்ல உதாரணம் தென் ஆபிரிக்காவின் பலம் வாய்ந்த கிரிக்கெட் சபைத் தலைவர் மயோலாவின் சரணாகதி.

இந்தியாவுக்கெதிரான தென் ஆபிரிக்கத் தொடரின்போது UDRSஐப் பயன்படுத்த இந்தியா விரும்பாவிட்டால் தாங்கள் இந்தியாவுடன் ஒத்துப் போவதாகப் பரிதாபமாக சொல்கிறார் மயோலா.
தென் ஆபிரிக்க வீரர்களுக்கு UDRS பயன்படுத்தி தீர்ப்புக்களை செம்மையாகப் பெறும் ஆசை இருந்தாலும் இந்தியா இதை விரும்பாவிட்டால் என்ன செய்வது என்று கேட்கிறார் மயோலா.

ஆனால் ICCஇன் தகவலின் படி, போட்டிகளை நடத்தும் நாடு இது பற்றிய முடிவை எடுக்கலாம் என்று சொல்கிறது. ஆனால் சுற்றுலா வரும் நாட்டுடன் கலந்துபேசி முடிவெடுப்பதே கனவான் ஆட்டத்தின் கண்ணியம் என்பதால் இலங்கை போலவே தென் ஆபிரிக்காவும் கப் சிப்.

எதிர்பாராத ஒருவர் பற்றிய பரபர வந்து ஓய்வதற்கிடையில் பந்தயக்காரர்கள்,சூதாட்ட சர்ச்சைகளையும் அணி முரண்பாடுகளையும் தத்தெடுத்த நாட்டிலிருந்து மீண்டும் ஒரு புயல்.

பழைய குப்பைகளைக் கிளறி மீண்டும் புதிய நாற்றத்தை அனுப்புகிறார்கள்.

பாகிஸ்தானிய கிரிக்கெட் சபையின் முன்னாள் தலைவர் டாக்கிர் சியா மீண்டும் சந்தேகத்துக்குரிய சிட்னி டெஸ்ட் போட்டி பற்றிய விவகாரத்தைக் கிளறி இருக்கிறார்.
அந்தப் போட்டி முடிவை மாற்ற/மாற்றியதில் ஆறு பாகிஸ்தானிய வீரர்களை சந்தேகிப்பதாக அப்போது பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்குக் கடிதம் அனுப்பியதாக இப்போது சொல்கிறார் இவர்.

அத்துடன் 2002 ஆம் ஆண்டு காலகட்டத்தில் அப்போது குற்றம் சாட்டுக் களங்கப்பட்டிருந்த  ஒரு பிரபல வீரரை அணியில் எடுக்குமாறு தனக்குப் பலவிதமான அழுத்தங்கள் தரப்பட்டதாகவும் இப்போது மனம் திறந்திருக்கிறார் இவர்.

தாகிர் சியா சொல்லி இருக்கும் அந்த முன்னாள் பிரபல வீரர் பாகிஸ்தானின் முன்னாள் தலைவர் சலீம் மலிக்கைப் பற்றித் தான் என்று சின்னக் குழந்தைக்கும் கூடத் தெரியுமே.

பத்து ஆண்டுகளாகத் தடைக்கு உள்ளாகி இருக்கும் சலீம் மலிக்கும் இன்று தன பங்குக்கு பொங்கி வெடித்துள்ளார்.
தன்னைக் குற்றவாளியெனத் தீர்ப்பளித்து கிரிக்கெட்டிலிருந்து ஆயுட்காலத் தடை விதித்தபோது சந்தேகத்துக்குரியவர்களாகக் கருதப்பட்ட பலர் தப்பித்திருப்பதாகவும் தான் மட்டுமே பலிக்கடா ஆக்கப்பட்டதாகவும் குமுறியுள்ளார் மலிக்.

அவர் மூவரைப் பெயரிட்டுள்ளார்..
பாகிஸ்தானின் தற்போதைய பயிற்றுவிப்பாளர் வக்கார் யூனுஸ், இங்கிலாந்தின் சுழல் பந்து வீச்சுப் பயிற்றுவிப்பாளராக இருக்கும் முஷ்டாக் அஹமத், தற்போது உள்ளூர் நடுவராக இருக்கும் அகரம் ரேசா ஆகியோரைப் பார்க்கையில் தனக்குக் கோபம் வருவதாக சொல்கிறார் மலிக்.

உண்மையில் அந்தக் காலகட்டத்தில் சலீம் மாலிக்கின் தலைமையில் பாகிஸ்தானின் பல வீரர்கள் சந்தேகிக்கப்பட்டார்கள். அடா உர் ரஹ்மான் ஆயுட்காலத் தடைக்குள்ளானார்.
ஆனால் பெரிய தலைகள் தப்பிக் கொண்டன என்று பேசப்பட்டன.
இவர்கள் மட்டுமில்லாமல், வசீம் அக்ரம்,ரஷீத் லடிப்,மொயின் கான்,அகீப் ஜாவேத் இன்னும் பலரின் தலைகளும் உருண்டன.

ஆனால் அந்த விசாரணைகளும் பாகிஸ்தானில் இப்போது நடப்பது போல என்ன நடந்தது என்று தெரியாமலே மறக்கப்பட்டு விட்டன.

இந்திய அணி வீரர்களின் ஒற்றுமையோ என்னவோ அசாருதீன் விவகாரத்தில் வேறு யாரின் பெயர்களும் பெரிதாக வெளியே வரவில்லை..
(ஜடேஜா மட்டுமில்லாமல், நயன் மோங்கியா,மனோஜ் பிரபாகர் மீதும் சந்தேகம் இருந்தபோதும்)

அர்ஜுன ரணதுங்க காலத்தில் இலங்கை அணியும் சில போட்டிகளை வேண்டுமென்றே விட்டுக் கொடுத்தது என்று பேச்சு இருந்தது. அர்ஜுன=அரவிந்த இணைந்து அணியைக் கொண்டு சென்றதால் இருவர் மீதும் சந்தேகம் இருந்தாலும் இங்கும் இறுக்கமாக இருந்த அணி ஒற்றுமை தான் விஷயங்களை வெளிவிடாமல் செய்ததோ????

ஆனால் பாகிஸ்தானுக்குள்ளே இருக்கும் உள்ளகக் குளறுபடிகளும் ஒருவரை ஒருவர் காலை வாரிவிடும் குணமும் இன்னும் பல விஷயங்களை வெளியே கொண்டுவரும் என்று எண்ணத் தோன்றுகிறது.

குற்றம் நிரூபிக்கப்படும் வரை நாம் எல்லோரும் நல்லவர்களே என்று நம்பியிருக்க வேண்டியது தான்..

இந்தக் காலகட்டத்தில் கிரிக்கெட்டிலும் எல்லோரையும் சந்தேகத்துடனேயே நோக்க வேண்டி இருக்கிறதே..


இன்னும் எத்தனை இடிகளைத் தாங்கிக்கொள்ள கிரிக்கெட் தயாராக வேண்டுமோ?

October 20, 2010

சில பல கிரிக்கெட் சேதிகள்..



இலங்கை கிரிக்கெட்டில் ஒரு விவகாரம் இப்போது பரபரவாகியிருக்கிறது.
இங்கிலாந்துக்கு அண்மையில் இலங்கையின் 19 வயதுக்குட்பட்ட அணி சென்றிருந்தது. ஒரு நாள் தொடரில் இலங்கை இறுதிப் போட்டிக்கு முன்னதாக நான்கு போட்டிகளில் ஒன்று மழையினால் பாதிக்கப்பட 2 -1 என்று முன்னிலையில் இருந்தது.
இறுதியான போட்டியில் இங்கிலாந்து அணியை 184 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க செய்தும், மழை காரணமாகப் பாதிக்கப்பட்ட போட்டியில் இலங்கை எதிர்பார்த்ததை விட விரைவாக,குறைந்த ஓட்ட எண்ணிக்கைக்கு சுருண்டது.
இதை இங்கிலாந்து அணியே எதிர்பார்த்திருக்காது.


இப்போது இந்தத் தோல்வி பற்றி எழுந்திருக்கும் பர பர என்னவென்றால்,குறித்த நேரத்தில் இலங்கைக்கான விமானத்தில் ஏறுவதற்காக இலங்கை அணி வேண்டுமென்றே போட்டியில் விரைவாக விக்கெட்டுக்களை இழந்தது என்பதே.


அணி முகாமையாளராக சென்ற தேவராஜன் கொடுத்துள்ள அறிக்கை இதை மறைமுகமாக சுட்டுகிறது.


எனினும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் இதை மறுத்துள்ளது.


சில பத்திரிகைத் தகவல்களின்படி அந்தக் குறித்த விமானத்தைத் தவறவிட்டிருந்தால் இன்னும் ஒருவாரம் கழித்தே இலங்கை அணி வீரர்கள் விமானம் ஏறி இருப்பார்கள் என்றும் இதற்காக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் எக்கச்சக்கமாக செலவிட நேர்ந்திருக்கும் என்று சொல்லப்படுகிறது.


கூட்டிக் கழித்துப் பார்த்தால் இப்படித் தான் சூதாட்டம்,போட்டிகளை விட்டுக் கொடுத்தல் போன்றவை ஆரம்பிக்கிறது போலும்....
ஆனால் வளரும் பயிர்களையே களையாக்குகிறார்களே..


=================================


கொஞ்சக் காலமா நான் உட்பட எல்லா கிரிக்கெட் விமர்சகர்களாலுமே கிழித்துக் காயப்போடப்பட்ட பங்களாதேஷ் அணிக்கு வந்த ரோஷத்தைப் பாருங்களேன்.
வெட்டோரி,மக்கலம்,ரைடர்,டெய்லர்,டபி,மில்ல்ஸ் என்று அனைவரும் அடங்கிய பலம் வாய்ந்த நியூ சீலாந்து அணியைக் கூப்பிட்டு வைத்துக் கொத்திக் குதறி அனுப்பி விட்டார்கள்.
ஐந்து போட்டிகளில் எதையுமே வெல்ல முடியாமல் அவமானப்பட்டுப் போயுள்ளது நியூ சீலாந்து.
                                     ஷகிப் -  தலை தல தான் :)


ஷகிப் அல் ஹசன் தனியொருவராக விஸ்வரூபம் எடுத்து நியூ சீலாந்து அணியை வதம் செய்திருக்கிறார்.
முதல் போட்டியுடன் தலைவர் மோர்தசா காயத்துடன்(வழமை போல) நொண்டியடித்துக் கொண்டு விலகிக் கொள்ள ஷகிபின் ராஜநடை ஆரம்பித்தது.


71 என்ற சராசரியில் ஒரு அழகான சதத்துடன் 213 ஓட்டங்கள்.16க்குக் குறைவான சராசரியுடன் 11விக்கெட்டுக்கள்.
பேசாமல் பங்களாதேஷ் இனிமேலும் ஷகிபையே நிரந்தரத் தலைவராக நியமித்து விடலாம்.
அவர் வந்தால் அணி புது வேகமும் உத்வேகமும் பெறுகிறது.
யாராவது சொதப்பினால் கூட எந்திரன் சிட்டி போல தனி நபராக நின்று கலக்குகிறார்.


உலகக் கிண்ணம் சொந்த மண்ணிலும் இடம்பெறுவதால் பங்களாதேஷ் மீது மீண்டும் எதிர்பார்ப்பு கூடுகிறது.


ஷகிப் மட்டுமில்லாமல் எதிர்காலத்தில் பிரகாசிக்கக் கூடிய சிலரை இப்போதே குறித்து வைத்துக் கொள்ளுங்கள்..
ருபெல் ஹோசெய்ன், ஷுவோ,இம்ருல் கயேஸ்,மீள் வருகை தந்திருக்கும் ஷஹ்ரியார் நபீஸ்,நிறைய நம்பிக்கை தரும் முஷிபுகூர் ரஹீம் மற்றும் சுனைத் சித்திக் ஆகியோர்.


நியூ சீலாந்து பாவம். வெட்டோரியின் கீழ் கட்டுப்பாடான அணியாக வளர்ந்து வந்த இந்த அணியில் தொடர்ந்து பிரகாசிக்கும் வீரர்கள் குறைவு. வெட்டோரி மட்டுமே எல்லாப் போட்டிகளிலும் தனியா ஜொலிக்கிறார். மற்றவர்கள் ஒவ்வொரு போட்டியில் சாம்பியனாகவும் ஏனைய போட்டிகளில் சொதப்பலாகவும் மாறி மாறி விளையாடுவது தான் பிரச்சினை.
             ஐயோ அம்மா.. நான் இந்தியாவுக்குப் போக மாட்டேன் 


ஆறு வருடங்களில் நியூ சீலாந்து முதல் தடவையாக தரப்படுத்தலில் ஏழாம் இடத்துக்கு வீழ்ந்திருகிறது.


இப்போது இந்தியாவுக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான அணித் தேர்வுக்கு முதலில் அவசர விசாரணை இடம்பெறுகிறது. இந்த மோசமான தோல்விக்குக் காரணம் தேடப் போகிறார்களாம்.


இந்தியாவுக்கு அடுத்த பலியாடுகள் வருகின்றன.
  
வெட்டோரி பாவம், திறமையான தலைவர். பதவி பறிபோகக் கூடாது.


==============================


தலைவராக இருப்பவர் எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு என்னைப் பொறுத்தவரை சில உதாரணங்கள் உண்டு.. (கிரிக்கெட்டில் மட்டும்)
பாகிஸ்தானின் ஷோயப் மாலிக், அண்மையில் சல்மான் பட்,மிக முக்கியமாக மேற்கிந்தியத் தீவுகளின் க்றிஸ் கெய்ல்..
                            கெய்ல் - ஆடிய ஆட்டமென்ன 


கெய்ல் ஒரு சோம்பேறித் தனமான தலைவர். களத்தடுப்பில் இருக்கையில் அவரைப் பார்த்தால் சொங்கித் தனமாகத் தோன்றும்.
அணியை உற்சாகப் படுத்தவும் மாட்டார்.
பந்துவீச்சு மாற்றங்களையும் ஏனோ தானோ என்றே செய்பவர்.
அவரது அதிரடித் துடுப்பாட்டம் மட்டும் ஒரு சில போட்டிகளைக் காப்பாற்றி வந்துள்ளது.
எனினும் டெஸ்ட் போட்டிகள் குறித்தான அவரது அணுகுமுறையும் பணம் பற்றிய அவரது பேராசையும் எனக்கு கெய்ல் மீது வெறுப்பையே தந்து வந்துள்ளது.


தலைவராக இருந்துகொண்டும் ஒப்பந்தங்களுக்காக அணியை வைத்து கிரிக்கெட் சபையுடன் பேரம் பேசுவது.ஓரிரண்டு தொடர்களைக் கைவிட்டு பெரும் புகழோடு ஒரு காலத்தில் விளங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணியை பதினோருவரையே தேட வைத்துத் தவிக்கவிட்டவரும் இதே கெய்ல் தான்.


இவரது தலைமையில் மேற்கிந்தியத் தீவுகள் அணி இருந்ததை விடக் கீழே போனதும்,ஒற்றுமை இல்லாமல் போனதும் தான் மிச்சம்.


ஏன் இவர் இவ்வளவு மோசமாக இருந்தும், முரண்பட்டு நடந்தும் தலைமைப் பதவியைத் தூக்காமல் விட்டு வைத்தார்கள் என்ற கேள்வி எனக்கு.


இப்போது தான் ஒப்பந்த சிக்கல் மீண்டும் எழுந்ததனால் தலைமைப் பதவியைப் பறித்திருக்கிறார்கள்.உப தலைவர் ட்வெய்ன் பிராவோவும் அம்போ..
ஆனால் இலங்கைக்கு வரப்போகும் குழுவில் இவர்கள் இருவரையும் சேர்த்திருப்பது வேறு யாரும் இவர்களைப் பிரதியிட இல்லையா?
( T20 போட்டிகளால் அளவுக்கதிகமான பிரபலமும் - over rated சாதித்தவற்றை விட சம்பாதித்தது கூடவும் கொண்டவருமான கீரன் பொல்லார்டையும் எனக்குப் பிடிப்பதில்லை)


புதிய தலைவர் டறேன் சம்மி ஒரு திறமையான சகலதுறை வீரர். தனது பிராந்திய அணியைத் திறம்பட வழி நடத்தியிருக்கிறார். ஆனால் டெஸ்ட் போட்டிகளில் அனுபவம் போதாது. இலங்கையுடன் இலங்கையில் நிச்சயம் தடுமாறுவார்.
பார்க்கலாம்.


அத்துடன் நீண்ட காலத்துக்குப் பிறகு ஒரு வெள்ளை இன வீரர் உப தலைவராகிறார்.
ஆஸ்திரேலியாவில் பிராந்திய கிரிக்கெட் விளையாடியவரும் பெற்றோர் வழியாக மேற்கிந்தியத்தீவுகளுக்கு உரித்துடையவருமான பிரெண்டன் நாஷ் தான் அவர்.
சிறப்பாக ஆடிவரும் டெஸ்ட் வீரர்.


இனியாவது மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் உருப்படட்டும்.


=======================
               Flower - ஆறு வருடங்களுக்குப் பிறகு பூக்கவில்லை 


பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட சிம்பாப்வேயின் கிரான்ட் ப்ளவரின் மீள் வருகை ஏமாற்றம் தந்தது.
ஆறு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சர்வதேச அரங்குக்கு வருவது இலேசான ஒன்று அல்ல.
அதிலும் 39 வயதில்.
ஏன் இவருக்கு இந்த ஆசை என்று யோசித்தேன்.
பாவம். கொஞ்சம் தடுமாறி இருந்தார்.இரு போட்டிகளிலும் வெறும் 35 ஓட்டங்கள்.
ஒவ்வொரு போட்டியிலுமே ஒரு திறமையான இளம் வீரரின் இடம் ப்ளவருக்குப் போய்க் கொண்டிருந்தது.(Coventry,Masakadza)


தென் ஆபிரிக்காவுக்கு எதிரான தொடரில் சிம்பாப்வேயின் டெய்லர் வழமை போல் கலக்கி இருந்தார். டேய்பு கடைசிப் போட்டியில் மீண்டும் பழைய டேய்புவை ஞாபகப்படுத்தினார்.
முக்கிய சுழல் பந்துவீச்சாளர் ரே ப்ரைசை அணியிலிருந்து நீக்கிய தவறை உணர்ந்திருப்பார்கள்.
வழமையாக சிறப்பாக செய்யும் சுழல் பந்துவீச்சாளர்கள் இம்முறை சோபிக்கவில்லை.




மறுபுறம் தென் ஆபிரிக்காவின் அறிமுகங்கள் அசத்தினார்கள்.
வேகப் பந்துவீச்சாளர் தெரோன் மற்றும் துடுப்பாட்ட வீரர் கொலின் இங்க்ராம். எதிர்காலம் வலமாக இருக்கிறது இருவருக்கும் தென் ஆபிரிக்காவுக்கும்.
தெரோனின் யோர்க்கர் பந்துகள் துல்லியம்.


ஹாஷிம் அம்லா தொடர்ந்து ஜொலிக்கிறார். ICC விருது நழுவியது துரதிர்ஷ்டம்.


இறுதி ஒரு நாள் போட்டி நாளை மறுதினம்.சிம்பாப்வே ஏதாவது அதிசயம் நிகழ்த்துமா பார்க்கலாம்.


====================


பாகிஸ்தானிய கிரிக்கெட்டில் என்னப்பா நடக்குது?


தென் ஆபிரிக்காவுக்கான தொடருக்கு 17 பேர் கொண்ட குழு,..
ஹொங் கொங்கில் இடம் பெறும் தொடருக்கு அணித் தலைவர் ஷோயிப் மாலிக்.


இலங்கை இதற்காக தெரிவு செய்துள்ள குழு பலமானது.
தலைவராக ஜீவந்த குலதுங்க.


நவம்பர் ஆறு,ஏழாம் திகதிகளில் ஹொங் கொங்கில் இடம் பெறுகிறது.


======================
ஆஸ்திரேலிய - இந்திய ஒரு நாள் தொடர் இன்று தான் ஆரம்பிக்குது .. முதல் போட்டி தான் மழையால் கழுவப்பட்டு விட்டதே.


இந்தத் தொடரில் ஆஸ்திரேலியா வெல்லும் என்ற நம்பிக்கையில்லை. (கிளார்க்கை நான் நம்பவில்லை என்பதே சரி :))




ஆனால் இரு அணிகளின் இளையவர்களிடமும் நிறைய எதிர்பார்க்கிறேன்..
குறிப்பாக ஷீக்கார் தவான்,அஷ்வின்,பெர்குசன் & ஹெஸ்டிங்க்ஸ்..



அட இதப் பாருங்கப்பா.. நம்ம கிளார்க் அடிச்சு நொறுககிறார்.விக்கிரமாதித்தன் returns ;)
ஹசி form க்குத் திரும்புகிறார்.


ஜடேஜா,முனாப் படேல்,ரோகித் ஷர்மா ஆகியோர் குழுவில் இருந்தும் அணியில் செர்க்காமை, இந்தியா திருந்தியுள்ளது என்பதைக் காட்டுகிறது.


இரு அணிகளிலும் இன்று இரு அறிமுகங்கள்.
வாழ்த்துக்கள்.


===============


அன்றொரு பதிவில் மீண்டும் கிரிக்கெட் விளையாடத் தொடங்கியது பற்றியும் எனது பந்துவீச்சு மோசமாகிப்போனது பற்றியும் புலம்பி வைத்திருந்தேன்.
எத்தனை பேர் கடின பந்து என்று 'பெரிதாக' நினைத்தீர்களோ?


வெறும் டென்னிஸ் பந்து விளையாட்டு தான்.


ஆனால் அந்தப் பின்னூட்டத்திலேயே அன்று மாலையே ஓரளவு சிறப்பாகப் பந்து விழுவது (line & length)பற்றி ஆறுதல்பட்டிருந்தேன்.


கடந்த ஞாயிறு நடந்த ஒரு போட்டியில் வீரகேசரி அணிக்கெதிராக ஒரு Hat trick எடுத்திருந்தேன்.
அதிலும் இரண்டு விக்கெட்டுக்கள் நேரடியாக விக்கெட்டைத் தகர்த்தவை.(bowled)
(நம்புங்கப்பா.. இதுக்காக வீடியோ எடுத்தா பதிவேற்றுறது?)


நம்ம சகா பிரதீப் மூன்று சிக்சர்களுடன் பத்துப் பந்துகளில் 32 ஓட்டங்கள் பெற்றும் வீரகேசரியின் வெற்றியை நம்ம வெற்றியால் தடுக்க முடியவில்லை. :(


அன்று நடந்த பரிசளிப்பு நிகழ்வில் அஜந்த மென்டிஸ் தான் பிரதம அதிதி. எனினும் இருட்டியதால் பரிசுகள் அளிக்கப்படவில்லை.


இன்று போட்டியை ஒழுங்குபடுத்திய கென்ட் விளையாட்டுக் கழகத்தினர் எனக்கான சிறந்த பந்துவீச்சாளர் விருதைக் கொண்டு வந்து கையளித்தார்கள்.
                                  Best bowler award :) :) :)
                          
                         தோற்றாலும் வெற்றி தான் !!!
                    (எங்கள் அணியே வெற்றி அணி தானே ;))



October 18, 2010

இந்திய - ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் - லோஷன் பார்வை

இந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் முடிந்த பிறகு முழுமையான அலசலை சுருக்கமாகத் தரவேண்டும் என்று எதிர்பார்த்திருந்தேன்.சில,பல வேலைகள் நேரமில்லாமல் செய்ய,ஒரு நாள் போட்டித் தொடர் ஆரம்பமாகிறதே என்று கவலைப்பட்டால் கொச்சியில் பெய்த மழை கொஞ்சம் என் பதிவுக்கு உதவியுள்ளது.


அன்புத் தம்பி 'அனலிஸ்ட்' கங்கோன் எனது வேலையை இன்னும் இலகுபடுத்தியுள்ளார்.

இந்திய அவுஸ்ரேலியத் தொடர் - என் பார்வையில்


தரவுகளைத் தேடிப்பிடித்து நுணுக்கமாகப் பதிவு போட சோம்பல் இடம் கொடுக்காது.
எனவே தரவுகள்+தகவல்கள்=முழுமை விவரம் அறிய கங்கோனின் பதிவை வாசித்து விட்டு இங்கே வாருங்கள்.


இந்தத் தொடர் மீது எனக்கு ஆரம்பிக்கையிலேயே பெரீய எதிர்பார்ப்பு இருந்தது.


சில காரணங்கள்


1 .சச்சின்+பொன்டிங் போட்டி.

இருவரும் அதிகூடிய ஓட்டக் குவிப்பில் போட்டி போட்டுக் கொண்டிருப்பது ஒருபுறம் சச்சினின் ரன் குவிப்பு form + விருது கிடைத்த காலகட்டம் & பொன்டிங் இந்திய ஆடுகளங்களில் தன்னை நிரூபிக்கக் கிடைக்கும் இறுதி வாய்ப்பு என்று உப காரணங்களும்.




2 . ஷேன் வோர்னுக்குப் (வோர்னும் பெரிதாக சாதிக்கவில்லை)பின்னர் இந்தியாவில் பிரகாசிக்கக் கூடிய ஒரு ஆஸ்திரேலிய சுழல்பந்துவீச்சாளரை தேடிக் கொண்டிருந்தேன்.
(ம்ஹூம் ஹோரிட்சும் வாங்கிக் கட்டிக் கொண்டார்)


3. ஆஸ்திரேலியாவின் புதிய தலைமுறை வேகப்பந்துவீச்சு உலகின் பலம் வாய்ந்த துடுப்பாட்ட வரிசைக்கு எதிராக என்ன செய்யும் என்பதை அறிந்துகொள்ளும் ஆர்வம்.


4 .ஹர்பஜன் தன்னை நிரூபிப்பாரா அல்லது ஓஜா தனக்கு நிரந்தர இடமொன்றைத் தேடிக் கொள்வாரா அல்லது அஷ்வினுக்கான இடம் ஒன்று வருமா என்ற ஒரு ஆசை.


5 . இந்தியா எப்படியான ஆடுகளங்களைத் தயார்ப்படுத்தி இருக்கிறது?


                                 இது நிச்சயம் ஜெயிக்கிற கூட்டம் !!!


விமர்சகர்கள் இந்தியாவுக்குத் தான் இத் தொடர் என்று அடித்து ஆணித்தரமாக சொல்லி இருந்ததை மனம் தொடர் ஆரம்பிக்குமுன்னரே ஏற்றுவிட்டது.
இதற்கு ஆஸ்திரேலிய அணியில் காணப்பட்ட சில ஓட்டைகள் முக்கிய காரணம்.
(பொன்டிங்கின் இந்திய ஆடுகள சறுக்கல், நோர்த்+ஹசியின் சொதப்பல்கள்,பிராட் ஹாட்டின் இல்லாமை,பந்துவீச்சின் மீது நம்பிக்கையின்மை.. இவையெல்லாவற்றையும் விட இந்தியாவின் சச்சின்+சேவாகின் விஸ்வரூபம்)


ஆனால் இறுதியாக இரண்டுக்கு பூஜ்ஜியம் என்று இந்தியா வென்ற போதும் இரு டெஸ்ட் போட்டிகளிலும் மிக முக்கியமாக முதலாவது போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு இறுதிக் கட்டம் வரை ஆஸ்திரேலியா கொடுத்த சவால் மெச்சத்தக்கது.
இந்தியாவும் விமர்சகர்களும் நினைத்த அளவுக்கு இலகுவாக இத்தொடர் அமையவில்லை.


இத்தொடரின் விசேடமாக அமைந்தது என்று நான் நினைப்பது சச்சின் vs பொன்டிங் ஓட்டக் குவிப்பு தான்.
             இன்னும் எத்தனை சாதனைகள் இவர் வசமில்லை??


சச்சின் டெண்டுல்கர் இரு அரைச் சதங்களோடும், ஒரு இரட்டை சதத்துடனும் 403 ஓட்டங்களைக் குவிக்க, ரிக்கி பொன்டிங் மூன்று அரைச் சதங்களுடன் 224 ஓட்டங்களைக் க்வித்திருந்தார்.இந்த மூன்றில் ஒன்று சதமாக மாறியிருந்தால் ஒரு போட்டியின் முடிவாவது மாறக் கூடிய வாய்ப்பிருந்தது.


ஷேன் வொட்சன் ஆரம்பத்துடுப்பாட்ட வீரராக தன்னைத் தொடர்ந்து சிறப்பாக நிரூபித்துவருவதை இந்தத் தொடரும் காட்டியுள்ளது.
இந்திய அணியின் ஒவ்வொரு போட்டிகளில் விளையாடிய லக்ஸ்மன்,புஜாரா,விஜய் ஆகியோர் சிறப்பாக அந்தந்தப் போட்டிகளின் வெற்றிகளுக்குத் துணைபுரிந்தனர்.

ஆஸ்திரேலிய அணியில் மார்க்கஸ் நோர்த் ஒரு அபாரமான சதத்தைப் பெற்றதும் டிம் பெய்னின் போராடிப் பெற்ற 92 ஓட்டங்களும் லக்ஸ்மன் வென்று கொடுத்த மொகாலி டெஸ்ட்டின் ஆட்டமிழக்காத 73 ஓட்டங்களுடன் ஒப்பிடக்க்கூடியவை.


லக்ஸ்மன் பற்றி நான் ஏற்கெனவே மொஹாலி டெஸ்ட் பற்றிய பதிவில் புகழ்ந்து தள்ளி விட்டேன்.


டிம் பெய்னின் துடுப்பாட்ட நுட்பங்கள் என்னைப் பெரிதும் ஈர்க்கின்றன.
பிராட் ஹடின் குணமடைந்து நேற்று தனது நியூ சவுத் வேல்ஸ் அணிக்காக அரைச் சதம் ஒன்றையும் பெற்று வெற்றியீட்டிக் கொடுத்துள்ள நிலையில் ஆஷஸ் தொடரில் பெய்ன் தனது இடத்தை ஹடினிடம் கொடுக்க நேரிடும் என்று தெரிகின்ற போதும், ஒரு சிறப்புத் தேர்ச்சி பெற்ற துடுப்பாட்ட வீரராக பெய்ன் அணிக்குள் வரலாம் என்று சொல்லும் அளவுக்கு அவரது temperament+foot work சிறப்பாக உள்ளன.
                                             No Pain(e) No gain !!! 


நோர்த் என்னைப் பொறுத்தவரை இன்னும் தன்னை நிரூபிக்கவில்லை. அவரிடம் தொடர்ச்சியாகப் பிரகாசிக்கும் தன்மை இல்லை.நியூ சிலாந்தில் வைத்தும் இந்தியாவில் வைத்தும் அணியில் இதோ இடம் போகப் போகிறது எனும் நிலை வந்த பிறகு தான் சதமடித்து துண்டு விரித்து இடத்தைக் காப்பாற்றிக் கொள்கிறார்.


32 இன்னிங்க்சில் ஐந்து சதம்,நான்கு அரைச்சதம் என்பது ஆஸ்திரேலிய அணியில் இருப்பதற்குப் போதுமானதில்லை என்றே நான் கருதுகிறேன்.


இவரை விட ஆஸ்திரேலிய தேர்வாளர்கள் பிராட் ஹோட்ஜை அணியில் வைத்திருந்துக்கலாம்.டெஸ்ட்.முதல் தரப் போட்டிகளில் மனிதர் ஓய்வு பெற்ற பிறகும் மட்டுப்படுத்தப்பட்ட,போட்டிகளில் வெளுத்து நொறுக்குகிறார்.


அடுத்த சொதப்பல் மைக்கேல் கிளார்க். இவரை விட இத்தொடரில் ஹில்பென்ஹோஸ்,ஹோரிட்ஸ் பெற்ற ஓட்டங்கள் அதிகம்.
வழமையாக சுழல் பந்துவீச்சாளருக்கு எதிராக உட்கார்ந்து ஓங்கி அடிப்பவர் இம்முறை பலியாடு போல மாறி மாறி உருட்டிப் பந்தாடப்பட்டார்.
அவரில் நான் ரசிக்கிற front foot drives, sweep, leg side flicks எதையுமே காணவில்லை.
சைமன் கடிச் சில இன்னிங்க்சில் நின்றுபிடித்தாலும் அவரது ஓட்டங்களோ,ஓட்டவேங்கமோ ஆஸ்திரேலிய அணிக்குப் பெரிதாக உதவவில்லை.

 மைக்கல் ஹசியும் ஏமாற்றமே.. நான் மிக ரசித்த Mr.Cricket வெகு விரைவில் இடத்தை இழப்பார் அல்லது ஓய்வு பெற அழுத்தப்படுவார் என்ற நினைப்பே மனத்தைக் கலக்கப்படுத்துகிறது.


ஆஷஸ் தொடருக்கு முன்னதாக தேர்வாளர்கள் கிளார்க்கை வெளியே அனுப்புவார்கள் என நான் நினைக்கவில்லை. ஆனால் ஹசி,நோர்த் ஆகியோர் போலவே கிளார்க்குக்கான விட்டுக்கொடுப்புக் கால எல்லையும் குறுகியதே.


டேவிட் ஹசி, கலும் பெர்குசன்,ஏட்ரியன் பின்ச், பில் ஹியூஸ் ஆகியோர் கதவுகளைத் தட்டிக்கொண்டே இருக்கிறார்கள்.
இந்திய,இலங்கை அணிகளுக்கேதிரான ஒரு நாள் போட்டிகள் இவர்களின் போர்மில் மாற்றங்களைத் தந்தால் ஒழிய ஆஷசில் புதிய ஆஸ்திரேலியா இங்கிலாந்தை சந்திப்பதைத் தவிர்க்க முடியாது.



இந்திய அணியில் கங்கோன் தனது பதிவில் சொன்னதைப் போல விரேந்தர் சேவாக் இனி மேலும் தனது சில நுட்பங்களில் மாற்றங்களைக் கொண்டுவராவிட்டால் bodyline attack/Bouncers இனால் அடிக்கடி ஆட்டமிழக்கவேண்டி வரலாம்.


தலைவர் தோனியும் கம்பீரும் சறுக்கினார்கள்.ரெய்னா பெற்ற அந்த 86 ஓட்டங்களை விட மற்ற இரு இன்னிங்க்சிலும் தடுமாறி இருந்தார்.
புஜாரா மிகத் தெளிவான ஒரு நம்பகமான துடுப்பாட்ட வீரராக ஜொலிப்பார்.ஆனால் எப்போது இவருக்கான நிரந்தர இடம் கிடைக்கும் என்பதே கேள்வி.விஜய்க்கு சேவாக்,கம்பீரின் காயங்கள்,உபாதைகள் காரணமாக கிடைக்கின்ற டெஸ்ட் வாய்ப்புக்கள் போலத் தான் புஜாராவுக்குமா என்ற கேள்வியும் எழும்பாமல் இல்லை.
                          இந்தியாவின் இளைய எதிர்காலம் - விஜய் & புஜாரா 


விஜய் கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் தனக்கான படிக்கற்கள் போட்டுவருகிறார். கன்னி சதம் அபாரம்.
இப்போது எனக்குள்ள ஒரு கேள்வி டிராவிட்டின் ஓய்வின் பின் உடனடியான தெரிவு விஜயா? அல்லது புஜாராவா? 


இந்திய அணியின் மத்தியவரிசை என்ற கோட்டைக்குள் இடம் பிடிக்க தவம் செய்து போராட வேண்டியது இன்றும் தொடர்கிறது.
டிராவிடின் 77 ஓட்டங்கள் தவிர இந்தியப் பெருஞ்சுவர் ஓட்டை விழுந்த சுவராகவே தெரிந்தது.
புஜாராவின் புயல் வேகப் பிரவேசமும் டிராவிடை இனி மேலும் அழுத்தத்துக்கு உள்ளாக்கலாம். 


புஜாராவைப் பற்றி கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கு முன்பே நான் 'அவதாரம்' நிகழ்ச்சியில் சிலாகித்துக் குறிப்பிட்டிருந்தேன்.
ஆனால் டெஸ்ட் அணிக்குள் இவ்வளவு சீக்கிரம் இடம்பெறுவார் என நினைக்கவில்லை.
பத்ரிநாத்,மனோஜ் திவாரி,விராத் கொஹ்லி ஆகியோர் தமது டெஸ்ட் கனவுகளைத் தற்காலிகமாகத் தள்ளி வைக்க வேண்டியது தான்.


பத்ரிநாத் இனி மற்றுமொரு கிரிக்கெட் துரதிர்ஷ்டசாலியாக கிரிக்கெட் வாழ்நாளைக் கழிக்க வேண்டியது தான்.. பாவம்.


சச்சின் - இவரைப் பற்றி எத்தனை தடவை தான் எழுதுவது? இனி என்னதான் எழுதுவது?
இந்தத் தொடர் சச்சினின் தொடர் என்று வருங்காலத்தில் பேசப்படலாம் - Botham's Ashes போல.


இத்தொடரில் சச்சின் தனது டெஸ்ட் வாழ்க்கையின் 14000 ஓட்டங்களைப் பூர்த்தி செய்திருந்தார்.பெங்களூரில் பெற்ற இரட்டை சதமானது சச்சினின் 49 வது டெஸ்ட் சதமும், ஆறாவது இரட்டை சதமும் ஆகும்.
                              And now, all 5 are playing in the squad!!! 


இந்த கிரிக்கெட் கடவுளையா சிலர் ஓய்வு பெற சொல்லி, இளையோருக்கான முட்டுக்கட்டையாக வர்ணித்து சிறுமை செய்தார்கள் என்று கோபமாகவும் இருக்கிறது.
இந்த ஒரு வருட காலம் சச்சினின் பொற்காலம் என்று சொல்லலாம்.
இரு இரட்டை டெஸ்ட் சதங்கள் + அபூர்வமான ஒரு நாள் இரட்டை சதம்,ஆயிரக்கணக்கான ஓட்டங்கள், ICCயின் விருதுகள் என்று மனிதர் மீண்டும் இருபது வயது குறைந்தது போலத் தெரிகிறார்.
டென்ஷன் இல்லாமல் மிக இலகுவாக சச்சின் ஓட்டங்கள் குவிப்பதாகவும் தெரிகிறது.


இளையவர்கள் முரளி விஜய்,சுரேஷ் ரெய்னா,செடேஷ்வர் புஜாரா ஆகியோரோடு ஆடிய போது சச்சினின் இளமை அவர்களுடன் போட்டிபோட்டது விசித்திரமான வேடிக்கை.
இந்த மூவருக்கும் இரு தசாப்த அனுபவம் நிச்சயம் பல விஷயங்களை அந்த இணைப்பாட்டத்தில் வழங்கி இருக்கும்.


பந்துவீச்சாளர்களின் முழுப்பலம் இந்தியாப் பக்கம் இம்முறை வெற்றியை சரித்துக்கொண்டன.
சாகீர் கான் கூடுதல் விக்கெட்டுக்களை (12 )வீழ்த்தி இருந்தார். ஹர்பஜன் 11 விக்கெட்டுக்கள். ஆனால் இவர்களை விட அதிக சந்தர்ப்பங்களை ஏற்படுத்தி சிறப்பாக பந்துவீசியவர் பிரக்யான் ஓஜா(9 விக்கெட்டுக்கள்).




சாகிர் கான் மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளார். ஆனால் முன்னைய சாஹீரின் புதிய பந்து வித்தையை இப்போது பார்த்தல் குறைந்துள்ளது.ரிவேர்ஸ் ஸ்விங்கைக் கூடுதலாகப் பயில்கிறாரோ?
இஷாந்த் ஷர்மா துடுப்பாட்ட வீரராக மிளிர்ந்த அளவுக்கு (இரண்டாம் இன்னிங்க்ஸ் பந்துவீச்சைத் தவிர) பந்துவீச்சாளராக இன்னும் பிரகாசிக்கலாம்.
ஹர்பஜன்+ஓஜா ஆஸ்திரேலியாவை அச்சுறுத்தியதைப் பார்த்தால் இன்னும் சாதகமான ஆடுகளங்கள் கிடைத்தால் நியூ சீலாந்து போன்ற அணிகளைத் துவைத்துப் பிழிந்து விடுவார்கள்.(ஏம்பா நம்ம அஷ்வினும் பத்ரி போலத் தானா? நல்ல காலம் ஒரு நாள் தொடரில் ஒட்டுமொத்த சீனியர்களும் ஓய்வெடுத்தது)


இதேபோல ஆஸ்திரேலிய அணியின் சார்பாகக் கூடுதல் விக்கெட்டுக்களை ஜோன்சன் வீழ்த்தி இருந்தபோதும் சிறப்பாகப் பந்துவீசி இந்திய துடுப்பாட்ட வீரர்களை அச்சுறுத்தியவர் பென் ஹில்பென்ஹோஸ்.
இந்திய ஆடுகளங்களில் இவ்வளவு நெருக்கடியை உருவாக்க முடியுமென்றால் ஆஷசில் இங்கிலாந்துக்கெதிராக போல்லினஜ்ரும் முழு ஆரோக்கியத்துடன் திரும்புகையில் ஆஸ்திரேலியா சிறப்பாக செய்யும் என நம்பலாம்.
ஹோரிட்சும் இந்தியா தந்த பாடங்களோடு ஷேன் வோர்ன் தரும் உபதேசங்கள் மூலமாகவும் மெருகு பெறுவார் என நம்பலாம்.


    பொன்டிங் அண்ணே நானும் ஒரு Bowler என்று அடிக்கடி ஞாபகப்படுத்தவேண்டி இருக்கே.. 


பொன்டிங்கும் நெருக்கடியான நேரங்களில் இனியும் அணில் ஏறவிட்ட நாய் போலவோ,இடியே தலையில் விழுந்தது போலவோ முகத்தை வைத்திருக்காமல் வொட்சன்,கிளார்க்,கடிச்,நோர்த் போன்ற பல பகுதி நேரப் பந்துவீச்சாளர்களையும் பயன்படுத்தி விக்கெட்டுக்களை எடுக்க முயற்சி செய்தல் வேண்டும்.


இக்கட்டான நேரங்களில் எல்லாம் போச்சே என்றிராமல் புதிய வழிகளைத் தேடுவதே தலைவனின் சிறப்பம்சம்.
ஆஸ்திரேலிய அணியின் தலைவரொருவர் அடிக்கடி தலை குனிவதும்,விரல் நகம் கடிப்பதும்,விரக்தியோடு நோக்குவதுமாக இருப்பதை பொன்டிங்கில் மாத்திரமே கண்டுள்ளேன்.
மாறவேண்டும்.
                               தலைவா மீண்டும் எழுவது எப்போது??


தோனியில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆக்கபூர்வமான முன்னேற்றம் கண்டேன்.வெற்றிக்கு முனையும் பாங்கையும் கண்டேன்.இஷாந்த்,லக்ஸ்மன் ஆகியோர் முதல் போட்டியை வென்று கொடுத்த உற்சாகம் தொற்றிக் கொண்டதோ?
ஆனால் துடுப்பாட்ட வீரராக இன்னும் கொஞ்சம் சிரத்தை எடுத்தாலே நெருக்கமான வெற்றிகளை இன்னும் இலகுபடுத்த முடியும்.
அண்மைக்காலமாக இந்திய அணியில் பார்க்கின்ற ஒரு ஆரோக்கியமான மாற்றம்,இறுதி வரை போராடுவது.


காலியில் கடைசி நாள் கடை நிலை வீரர்கள்+லக்சமனின் துடுப்பாட்டம் மற்றும், மொஹாலி இஷாந்த்+லக்ஸ்மன் இணைப்பாட்டம் நல்ல உதாரணங்கள்.
பெங்களூரில் பதினைந்து ஆண்டுகளாகப் பெறமுடியாத வெற்றியையும் பெற்றுள்ளது இந்தியா.


இருபத்தெட்டு வருடங்களுக்குப் பிறகு ஆஸ்திரேலிய அணி ஒரு தொடரில் தான் விளையாடிய அத்தனை டெஸ்ட்டிலும் (இரண்டாக இருந்தாலும் கூட) தோற்றிருக்கிறது.
போர்டர் கட்டியெழுப்பிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் சாம்ராஜ்யத்தில் அதிக தோல்விகளை பெற்று அவமானத்துக்குள்ளாகி வருகிறார் ரிக்கி பொன்டிங்.இனி ஒரு தடவை இந்தியாவில் ஒரு டெஸ்ட் தொடர் வெற்றியைப் பெற்றுக் கொடுக்க முடியுமோ தெரியாது. ஆனால் ஆஷஸ் தொடர் வெற்றி இப்போதைய ஆஸ்திரேலிய அணிக்கும் சோர்ந்து போயுள்ள பொண்டிங்குக்கும் உடனடித் தேவை.


இந்திய அணிக்கு.... எல்லாம் சரி, எப்போது UDRSஐ ஏற்றுக்கொண்டு ஆரோக்கியமான (முழுமையான )கிரிக்கெட் தொடர் ஒன்றை உள்நாட்டில் நடத்துகின்றீர்களோ அது மேலும் இந்தியாவின் பெருமையை உயர்த்தும்.
சச்சின் என்ற கிரிக்கெட்டின் மிக உயர்ந்த சாதனையாளரும் இந்த UDRSக்கு தடைக்கல்லாக இருப்பது மிகக் கவலையானதும் சச்சினுக்கு குறையைத் தருகின்ற ஒரு விஷயமாகவும் இருக்கிறது.


இந்தத் தொடர் இன்னும் முழுமை பெற்றிருக்கும் நடுவர்களின் தீர்ப்புக்களில் சர்ச்சைக்குரியவையும் தவறானவையும் UDRSஎனப்படும் தொலைக்காட்சி நடுவரிடம் மேன்முறையீடு செய்யப்படும் முறையினால் களையப்பட்டு/குறைக்கப்பட்டிருந்தால்.


BCCIக்கு -ஆரோக்கியமான கிரிக்கெட் சூழல் ஒன்று உருவாகி இருக்கும் நிலையில், IPL கலாசாரம்,ஒருநாள் பணக் குவிப்பு கோலாகலங்களை ஒரு புறம் தள்ளிவைத்துவிட்டு டெஸ்ட் போட்டிகளை ரசிகர்கள் மத்தியில் இன்னும் அதிகமாகக் கொண்டு செல்ல தொடர்ந்து வழியமைக்கவேண்டும்.(பெங்களூரில் திரண்ட ரசிகர்களின் எண்ணிக்கை வரவேற்புக்குரியது)
அடிக்கடி இலங்கையுடன் ஒருநாள் தொடர்களில் ஆடாமல் இருத்தல் மிக அவசியம்.


பங்களாதேஷிடமே பரிதாபகரமாக வாங்கிக்கட்டிக் கொண்டு இந்தியாவை டெஸ்டில் எதிர்கொள்ள வரும் வெட்டோரியின் நியூ சீலாந்து அணியை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது.


சச்சின் இன்னும் எத்தனை சாதனைகளுக்கு நாள் குறித்துவிட்டாரோ?

October 16, 2010

ஆர்வமுள்ளவர்களை அழைக்கிறேன்/றோம்

'வடலி' வெளியீடுகளின் அறிமுக விழா 


இன்று மாலை 5.30 க்கு கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் வடலி வெளியீட்டின் ஆறு நூல்கள் அறிமுகமாகின்றன.

ஆர்வமுள்ளவர்களை வந்து கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறேன்/அழைக்கிறோம்.

October 14, 2010

சில சந்தோஷங்கள் + சில வருத்தங்கள்

இந்த ஓரிரு நாட்களில் மனசைப் பாதித்த சில விஷயங்கள்.. சந்தோஷங்களும் வருத்தங்களும்


மனசை நெகிழ்ச்சிப் படுத்தி மகிழ வைத்த விடயம் - சிலி சுரங்கத் தொழிலாளர்கள் மீட்பு


இரு மாதங்களாக நிலத்தின் கீழ் 700 மீட்டர் ஆழத்தில் சிக்குண்டிருந்த 33 தொழிலாளர்களையும் பத்திரமாக மீட்டெடுக்க நடத்தப்பட்ட பெரு முயற்சி உண்மையில் மனிதாபிமானத்தின் வெற்றியே தான்.


இந்த முயற்சியின் முக்கிய தருணங்கள் ஒவ்வொன்றையும் தொலைக்காட்சியில் நேரடியாகப் பார்த்துக் கொண்டிருந்தபோது அதன் ஆபத்தும் கொஞ்சம் சறுக்கினாலும் உயிர்கள் போய்விடக் கூடிய சிக்கலும் உணரக் கூடியதாக இருந்தது.


எனது விடியல் நிகழ்ச்சி மூலமாக நேற்றுக் காலையில் முதலாவது நபர் மீட்கப்பட்டதை மகிழ்ச்சியோடு நேயர்களுக்கு அறிவித்தேன்.
இன்று காலை செய்தியறிக்கைக்கு முன்பதாக 33  வது நபர் பத்திரமாக பூமிப்பரப்புக்கு திரும்பிய தகவலையும் நானே அறிவிக்கக்கூடிய வாய்ப்புக் கிடைத்தது.


இந்த மீட்பு நடவடிக்கையின் இறுதிக் கட்டமாக கீழே சென்று சுரங்கத் தொழிலாளர்களைக் காப்பாற்றி மேலே அனுப்பி வைத்த மீட்புப் பணியாளர்கள் அறுவரும் மேலே வரும் வரை மனசு பதைபதைத்துக் கொண்டிருந்தது.
ஒவ்வொருவராக ஒருவர் மட்டுமே வரக் கூடியதான அந்த சிறு கொள்கலன் (Phoenix Capsule) மூலமாக மேலே வந்தபோதெல்லாம் நிலைகொள்ள முடியாத ஒரு உணர்வு.


கூடி இருந்த மக்கள்,ஊழியர்கள், முக்கியமாக இந்த மீட்பு நடவடிக்கையை நேரில் வந்து மேற்பார்வை செய்து தானும் உணர்வுகளில் பங்கெடுத்த சிலியின் ஜனாதிபதி செபஸ்டியன் பினேரா ஆகியோரைப் பார்த்தபோது ஒவ்வொருவரும் எவ்வளவு தூரம் மனத்தால் இந்த மீட்பு நடவடிக்கையோடு இணைந்த்திருந்தார்கள் எனப் புரிந்தது.


சிக்குண்டிருந்த ஒவ்வொருவரும் மீட்கப்பட்டு வெளியே வந்த நேரம் மக்கள் அடைந்த உற்சாகம் தாங்களே அல்லது தங்கள் உறவினர்களோ வந்ததாக எழுப்பிய மகிழ்ச்சிக் குரல்களும் பாடிய பிரார்த்தனைப் பாடல்களும் மனிதாபிமானத்தை சத்தமாக சொல்லின.


சிலியின் ஜனாதிபதி ஒவ்வொருவரையும் ஆரத் தழுவி வரவேற்றதும் ,அவரது உணர்ச்சிமிக்க உரையும் இறுதி நபர் வெளியேறும் வரை காத்திருந்ததும் உணர்ச்சிப் பெருக்கால் கலங்கிய கண்களும் உண்மையான மக்கள் தலைவராக அவர் மேல் மதிப்பை உயர்த்தியுள்ளது.
                  முதலாவது தப்பியவரை ஆரத்தழுவும் அன்புத் தலைவன்.. 
Chile's President Sebastian Pinera embraces miner Florencio Antonio Avalos Silva after he was rescued from the collapsed San Jose gold and copper mine where he was trapped with 32 other miners for over two months near Copiapo in Chile. (AP Photo)


மீட்பு என்றால் இது தான்.. யாரொருவருக்கும் எந்த இழப்பும் வராமல்,நம்பிக்கை இழக்காமல் அத்தனை பேரையும் மீட்டு உலகையே ஆச்சரியப்படுத்தியுள்ளார்கள்.
அவர்கள் அத்தனை பேருக்கும் குறிப்பாக தம் உயிரையும் பணயம் வைத்துக் கீழிறங்கி பொறுமையாக 33 பேரையும் மேலே அனுப்பிவிட்டு தாம் இறுதியாக வந்தார்களே.. அந்த அறுவருக்கும் ஒரு ராஜ வணக்கம்.


அதிலும் இறுதியாக மேலே வந்த மீட்பர்(இப்படி சொன்னாலும் தப்பில்லையே?) சுரங்கத்திலிருந்து புறப்படும்போதும்,மேலே வந்து காட்டிய திருப்தி கலந்த முகபாவம் ஒரு மொழி கடந்த கவிதை.


ஒவ்வொரு மனித உயிரின் மதிப்பையும் உணர்த்திய சிலி எங்கே? நாம் எங்கே?


உயிர்களின் மதிப்பு எமக்குத் தெரிவதில்லை.
உயிர்கள் மிக மலிவான இடங்களில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்று நினைக்கும்போது மனம் நொந்துபோகிறது.


இதே சுரங்க அனர்த்தம் இலங்கையில் நடந்திருந்தால்?
நினைக்கவே பயமாக இருக்கிறது..
இந்த 33 பேரும் காணாமல் போனோரின் பட்டியலில் சேர்ந்திருப்பார்களோ? அல்லதுஉள்ளேயே கதை முடிந்திருக்குமோ?

அண்மையில் வாசித்த பள்ளிச் சிறுமி ஒருத்தியின் கொலை.
தந்தையே துன்புறுத்தி,வதைத்துக் கொன்றானாம்.


நேற்று தலவாக்கலையில் அணைக்கட்டின் மேல் இறந்துகிடந்த வாலிபன்.


கிளிநொச்சியில் இரு தற்கொலைகள்.. மீளக் குடியேறியோரின் மன விரக்தியின் அளவு அதிகரித்துக்கொண்டே போவதாக தகவல்கள் கூறுகின்றன.


இன்றைய சிலி சுரங்க மீட்பானது எனது மனது முழுவதும் இனம்புரியாத உற்சாகம்,மகிழ்ச்சியைத் தந்துள்ளது.
உயிர்கள் காப்பற்றப்ப்படும்போது ஏற்படும் இவ்வாறான மகிழ்ச்சி ஏன் எல்லோருக்கும் இருப்பதில்லை?


முதலாவது சுரங்கத் தொழிலாளி வெளியே மீட்கப்படும் காட்சி..





இந்த நிகழ்வோடு ஒப்பிடும்போது மிக சிறிய அளவிலான சில மகிழ்ச்சிகள்+வருத்தங்கள்...


மகிழ்ச்சிகள்..


இலங்கை குத்துச்சண்டை வீரர் மஞ்சு வன்னியாராச்சியின் தங்கப் பதக்க வெற்றி..
அவர் காட்டிய போராட்ட குணம்+விடா முயற்சி.. வென்ற பிறகு அவரில் தெரிந்த பெருமிதம்.
                                                         72 வருடங்களுக்குப் பின்னர் குத்துச் சண்டையில் தங்கம் 


37 வயதிலும் இளைஞரைஎல்லாம் தூக்கி சாப்பிடும் உற்சாகத்துடனும் உடல்வலுவுடனும் சாதனை மேல் சாதனையும் சதங்களும் குவித்துவரும் சச்சின் டெண்டுல்கர்.


எந்திரனில் வந்த சிட்டியுடன் ஓட்டக் குவிப்பில் சச்சினைப் போட்டியிட வைத்தாலும் சச்சின் ஜெயிப்பார் என்று இப்போது அவர் இருக்கும் form ஐப் பார்க்கையில் எண்ணத் தோன்றுகிறது.
அவரது ஆறாவது இரட்டை சதத்தை மகள் சாராவுக்குப் பிறந்த நாள் பரிசாக வழங்கியது அற்புதம்.
                                  கிரிக்கெட் உலகில் இரு தசாப்தங்களுக்குப் பிறகும் இன்னும் அசுர பசியுடன்.. 


இந்த அபார ஓட்டக் குவிப்பு சச்சினை நீண்ட காலத்துக்குப் பின்னர் (டெஸ்ட் துடுப்பாட்ட தரப்படுத்தலில் முதலிடத்துக்குக் கொண்டுவந்துள்ளது.
ஓய்வு பெற முதல் தனது சாதனையை இன்னொருவர் இனி எட்ட முடியாத ஒரு இடத்தில் கொண்டுபோய் வைத்துவிடுவார் போலத் தெரிகிறது.
நான் சச்சினின் ரசிகன் அல்லன். ஆனாலும் இந்த வயதிலும் அடித்தாடும் அவரது ஆற்றல் அசர வைக்கிறது.


எனக்குப் பிடித்த முரளி விஜயின் கன்னி சதம்.
விஜய் விளையாடிய (நான் பார்த்த)முதல் போட்டியிலேயே (சென்னை அணிக்காக விளையாடிய ரஞ்சி கிண்ணப் போட்டி ஒன்று என நினைக்கிறேன்) அவரது அணுகுமுறையும் தன்னம்பிக்கையும் பிடித்திருந்தன.
கிடைக்கும் வாய்ப்புக்களை எல்லாம் பயன்படுத்தி ஜொலிக்கிறார்.




பங்களாதேஷின் வெற்றியும் கலக்குகின்ற ஷகிப் அல் ஹசனும். தலைமைப் பதவி மீண்டும் வந்தவுடன் ஜொலிக்கிறார்.
இன்றும் சதமடித்துள்ளார்.
இன்றும் வங்கப் புலிகள் வெல்வர் போலத் தெரிகிறது.
வென்றால் சரித்திரம்.


வருத்தங்கள்..


                                                                          வேதனையும் சாதனையும்.. 


ஆஸ்திரேலிய அணியின் தொடர் தோல்வி.
எப்படி இருந்தவர்கள்????
இந்தியாவில் தொடர்ந்து பிரகாசிக்கத் தவறிய பொன்டிங் இம்முறை சிறப்பாகத் துடுப்பெடுத்தாடியும் தலைவராக அவரால் சாதிக்க முடியாமை.


என் செல்ல மகனுக்காக அவன் ஆசைப்பட்டு நாம் வாங்கிவைத்த சிறிய கைக்கடிகாரம் ஒன்று எப்படியோ பொதியொன்றில் தவறியது.
இன்னும் அவன் அதை ஞாபகம் வைத்து எம்மிடம் கேட்பது.


நீண்ட காலத்துக்குப் பிறகு மீண்டும் கிரிக்கெட் விளையாடத்தொடங்கியுள்ளேன்(ளோம்). முன்பிருந்த அளவு கூட என் பந்துவீச்சு சீராக இல்லை.வயது ஏறுகிறதோ?


ஆனால் களத்தடுப்பு+துடுப்பாட்டத்தில் அது பெரிதாகத் தெரியவில்லையே,..
(மானத்தை வாங்குகிற மாதிரி நோ கொமென்ட்ஸ் ப்ளீஸ்.. ஹீ ஹீ)



ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner