January 30, 2013

விஸ்வரூபம்... விளக்கங்கள், வினாக்கள் & விளங்காதவை


விஸ்வரூபம்...

என்னதான் இந்தப் பெயரில் இருக்கோ தெரியவில்லை ஆரம்பம் முதலே சிக்கல்.. இழுபறி...

நேற்று நீதிமன்றத்தில் கிடைத்த வெற்றி மீண்டும் தடையாக இழுபறி.
கமல் என்ற கலைஞன் முடக்கப்படுகிறான்.. ஒடுக்கப்படுகிறான்..
அரசியல் விளையாட்டுக்களால் பந்தாடப்படுகிறான் என்பது தெரிகிறது.
அவர் வழங்கியுள்ள ஊடகவியலாளர் சந்திப்புப் பேச்சு எவ்வளவு தூரம் காயப்பட்டுள்ளார் என்பதைக் காட்டுகிறது.

தமிழ்நாட்டில் அவருக்கு ஒரு நல்ல படைப்பாளியாக, ஒரு மிகச் சிறந்த கலைஞனாக முக்கியமான அடையாளம் எப்போதும் வழங்கப்பட்டது கிடையாது.
தரத்தால் உயர்ந்திருந்தாலும் மசாலாத் தனங்கள் அங்கீகரிக்கப்பட்ட அளவுக்கு இந்த மகோன்னத கலைஞன்  அங்கீகரிகப்பட்டதில்லை.
இப்போது இந்த விஸ்வரூபம் தடை விவகாரமும் இதையே உறுதிப்படுத்தியுள்ளது.
தமிழகத்தை விட்டே செல்லத் தயார் எனும் அளவுக்கு கமலின் கூற்று மிக ஆழமான வருத்தத்துடன் பதிவு செய்யப்பட்டுள்ளது.


Kamal Haasan Speaks his heart out.



விஸ்வரூபம் தடை, இலங்கையிலும் இந்தியாவிலும், இது பற்றிய எதிர்ப்பு வாதங்கள் ஆகியன வரத் தொடங்கியதிலிருந்து நான் அவதானித்த விடயங்கள், சில விளக்கங்கள் மற்றும் நான் சிலரிடம் கேட்க இருக்கும் வினாக்களுக்கான இடுகையே இது.

நான் மனதில் தோன்றும் எண்ணங்களை என் மனது சொல்கின்றபடி (ஆனால் பொதுவாக மற்றவர் மனதுகள் நோகாதவண்ணம்) எனது Twitter, Facebook பக்கங்கள் வாயிலாக பதிவு செய்தே வருகிறேன்.

கமல்ஹாசன் எனக்குப் பிடித்த நடிகர், படைப்பாளி என்பதையும் தாண்டி விஸ்வரூபம் படம் வெளியாக முன்னமே எழுந்த எதிர்ப்புக்களின் பின்னணி தான் எனையும் யோசிக்க வைத்தது.
ஒரு படைப்பு வெளியான பிறகு வருகின்ற எதிர்ப்புக்கள் சாதாரணமானவை; விமர்சன ரீதியாக ஏற்கக் கூடியவை.
பொதுவெளியில் ஒரு படைப்பு வந்துவிட்டால் விமர்சனங்கள் வரும்.
ஆனால் வெளிவராத ஒரு படைப்புக்கு எதிர்ப்பும் தடையும் எனும்போதும், அது நாடு கடந்து இங்கேயும் பார்க்காதோர் எல்லாம் எதிர்க்கின்றபோது, அதிலும் பிரிவு ரீதியாக அந்த எதிர்ப்புக்கள் இருக்கையில் எல்லாப் பின்னணிகள் மற்றும் நோக்கங்கள் பற்றியும் யோசிக்க வேண்டி இருந்தது.

இணையப் பொதுவெளியில் கமலின் திரைப்படத்துக்கு எதிராக முதலில் வந்து விழுந்த கருத்துக்களை வாசித்த பின்னர் + விஸ்வரூபத்துக்கு எதிராக வந்த கருத்துக்களுக்குக் காட்டப்பட்ட எதிர்ப்புக்களை வாசித்த பின்னர் - எனது வார்த்தைகளை மிகத் தெளிவாகவே முன்வைத்திருந்தேன்.
அத்துடன் நான் எப்போதும் சமய சந்தர்ப்பவாதங்களையும், மதவாதிகளையும், மூட நம்பிக்கைகளையும் கடுமையாக வெளிப்படையாக எதிர்த்துவந்தமையையும் என்னை அவதானித்தவர்களும் என் நண்பர்களும் அறிவர்.
எந்த சமய அடையாளமும் இல்லாமல் இருப்பதால் நான் இந்த விடயத்தில் போலி மதச் சாயத்துடன் வெறுப்பை உமிழ்ந்தவர்களை நான் பக்குவமாகச் சாடியிருந்தேன்.
ஆனால் இணைய வாதப் பிரதிவாதங்கள் இரு இனங்களுக்கிடையிலான முறுகலாக, நிரந்தரப் பிரிவாக மாறக் கூடிய ஆபத்து இருந்ததை (இன்னும் இருப்பதை) மறுப்பதற்கில்லை.

இதில் திருந்தவேண்டியவர்களாக இரு தரப்பினருமே இருக்கிறோம்.

நான் சொல்வது தமிழர் - முஸ்லிம்களாக அல்ல.

விஸ்வரூபம் படம் வெளிவருவதை ஆதரிப்போர் மற்றும் எதிர்ப்போராக.

கருத்து சுதந்திரம் எப்போது சுதந்திரமாகவே இருக்கவேண்டும் என்று நினைப்பவன் நான்.
(எங்கள் உயிர்களை பறிக்கும் அளவுக்கு இல்லாதவிடத்தில் என்ற விடயத்தையும் இங்கே பதியவேண்டும்..)
வெளிவரவே கூடாது என்று வாதங்களை வைப்பவர்கள் சொல்கின்ற விடயங்கள், இஸ்லாம் சமயம் பற்றியும் முஸ்லிம் மக்கள் பற்றியும் படத்தில் மிகத் தவறாக சொல்லப்பட்டுள்ளது என்கிறார்கள்.
இலங்கையில் இது பற்றி வாதிட்டவர்கள் பலர் இதுவரை இதைப் பார்க்கவில்லை.
கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர் என்பது போல.
ஆனால் பார்த்தவர்கள் சொல்வது ஆப்கன் தலிபான்கள் பற்றித் தான் இதில் சொல்லப்பட்டுள்ளது; இஸ்லாமிய மக்கள் பற்றித் தப்பாக சித்தரிக்கப்படவில்லை.
சமயம் என்ற ஒரே அடிப்படையில் இதைக் கண்மூடித்தனமாக எதிர்ப்பது சரியாகுமா?

அடுத்து இதில் அப்படியே தவறாக முஸ்லிம்கள் பற்றி சித்தரிக்கப்பட்டிருந்தாலும் இதை பார்த்து எங்களுடன் பழகும் நம் முஸ்லிம் நண்பர்களை நாம் வெறுத்திடுவோம் என்ற வாதம் எத்துனை தூரம் சரியாகும்?

இவ்வளவு காலமும் இத்தனை விவகாரங்கள், சலசலப்புக்கள், பிரித்தாளும் சதிகளால் வராத பிளவா இதனால் வந்துவிடப் போகிறது?
பாருங்கள், இந்த விவகாரத்தில் நான் விஸ்வரூபத்தை, கமலின் படைப்புரிமை ஆற்றலை வெளிப்படையாக ஆதரித்தும் என்னைப் பற்றி அறிந்த என் முஸ்லிம் நண்பர்கள் என்னுடன் இன்னும் பழகுவதில் எந்தவொரு மாற்றமும் இல்லை.
அவர்களின் கருத்துக்கள் வேறுபட்டதாக இருக்கலாம்.
எதற்காக ஆதரவு என்பது சரியாகப் புத்தியில் ஏறினால் போதும்.

அடுத்தது தவ்ஹீத் ஜமாஅத் என்ற இந்த அமைப்பு.
இந்த அமைப்பும் அந்த ஜெய்னுலாப்தீன் என்ற கண்ணியமற்ற ஒரு பேச்சாளனும் கடுமையாக விமர்சிக்கப்பட்டபோது, பல முஸ்லிம் நண்பர்கள் சொன்ன விடயம் இவர்கள் இஸ்லாமிய வட்டாரத்தில் அங்கீகரிக்கப்பட்டவர்களோ அல்லது மார்க்க ரீதியாகத் தலைமை தாங்குமளவுக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டவர்களோ அல்ல என்பது தான்.

அப்படி இருக்கையில் இந்தப் பிரிவு எப்படி எல்லா இடங்களிலும் (இலங்கையிலும் கூட) ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகம் சார்பாகத் தன் கருத்தைப் பதிவு செய்ய அனுமதிக்கப்படலாம்?
இது இந்து மத மக்கள் மத்தியில் எப்போதுமே முற்றுமுழுதாக அங்கீகரிக்கப்படாத விஸ்வ ஹிந்து பரிஷத், சங்க பரிவார், RSS போன்ற அமைப்புக்களை இந்து மக்களின் பிரதிநிதிகள் என்று சொல்லும் அபத்தம் போன்றதல்லவா?
(மீண்டும் நான் எந்த மதமும் சாராதவன் என்பதை அழுத்தமாக இங்கே பதிகிறேன்)

இந்து சமய சூழலில் வளர்க்கப்பட்டவனாக இருந்ததால் நன்கு அறிந்த சமயமான அதில் காணப்படும் மூட நம்பிக்கைகளை முதலில் எதிர்த்தாலும், நான் தெரிவு செய்து சமய நம்பிக்கைகளை எதிர்த்துவந்திருக்கவில்லை.
எங்கே பிழை இருந்தாலும் அதைப் பகிரங்கமாக எதிர்க்கும் துணிச்சல் இங்கேயும் என்னை நேரடியாகப் பேச வைத்தது.
ஆனால், இதனால் எனது நண்பர்களை இழந்துவிடக் கூடாது என்பதால் தான் சில இடங்களில் அமைதி காத்தேன்.

இதில் தமிழர் எதிர் முஸ்லிம், கமல் எதிர் முஸ்லிம் என்ற வாதங்கள் எல்லாம் அபத்தம்.

கருத்து சுதந்திரம் எதிர் அரசியல் + போலி மதவாத சூழ்ச்சி என்பதே எனதும் நிலைப்பாடு.

தலிபான் தீவிரவாதிகளை தீவிரவாதிகள் என்று காட்டுவதில் என்ன தப்பு?
இதுவரை காலமும் அர்ஜுன், விஜயகாந்த் படங்களில் காட்டவில்லையா என்ற கேள்விக்கு சியர் தந்த எதிர்ப்பதில், இதில் அமெரிக்கர்களை நல்லவர்களாகக் காட்டியுள்ளார்கள் என்பதே.

சரி அந்தக் கோணத்தில் வரட்டுமே?
வந்து, பார்த்து எதிர்க்கலாமே? விமர்சன ரீதியாகத் தோற்கடிக்கலாம் தானே?
எத்தனை வேற்று மொழிப்படங்களில், தமிழர்களையே அல்லது இஸ்லாமியர்களையே தீயவர்களாக, தீவிரவாதிகளாகக் காட்டவில்லை?

இதற்குள் ஒருவர் நந்திக்கடல் - தமிழர் ஒப்பீடு வேறு...
இதுவரை அப்படி வராத மாதிரி.. சிரிப்பாக இல்லை?
அரச இயந்திரம் இதுகாறும் அப்படித்தானே செய்திகளைத் தருகிறது? பொறுத்துக்கொள்ள வில்லையா நாம்?
இந்த ஒப்பீட்டின் அடிப்படையே அபத்தம் என்று இதை ஆதரிப்பவர்களின் அறிவீனம் உணரவில்லையா?
இதை மேற்கோள் காட்டி ஒருவர் அனுப்பிய மடலை மறுதலித்தேன்.



ஒரு படைப்பு என்று வருகையில் எதிர்ப்பைக் காட்டலாம்; விமர்சன ரீதியாக சவால் விடலாம்.
ஆனால் வெளிவரவே கூடாது என்ற விதண்டாவாதமும் வெறுப்பும் ஏனோ?

முஸ்லிம் - தமிழர் என்ற பிரிவினையும் சண்டையும் எழுவதில் வேதனை தான்.. ஆனால் இதன் பின்னணி அரசியலில் உள்ள உண்மைப் பூதங்களை இனம் கானல் முக்கியம்.

நேற்றைய புதிய தலைமுறை தொலைகாட்சி நிகழ்ச்சியில் பத்திரிகையாளர் ஞானி கேட்ட ஒரு கேள்வி கொஞ்சம் நியாயமாகப் பட்டது - தலிபான் மற்றும் ஏனைய தீவிரவாதிகள் உங்கள் சமயத்தை தமது அடையாளமாக, காவலாகப் பயன்படுத்துகிறார்களே? இதை முதலில் தடுக்கவேண்டியது நீங்கள் தானே?
இதனால் தானே அந்தத் தீவிரவாதிகளைப் படங்களிலோ செய்திகளில் காட்டும் போது இஸ்லாமிய சமயமும் அப்பாவி ம்சுலிம் சமூகமும் பாதிக்கப்படுகிறது?
இதைத் தடுக்க உலகளாவிய இஸ்லாமிய சமூகம் எடுக்கவுள்ள நடவடிக்கை என்ன?
இது எனக்கும் நியாயமான கேள்வியாகவே படுவதால் வினாவாகவே விடுகிறேன்.

அடுத்து, இலங்கை இஸ்லாமிய சமூகம் இன்றைய காலகட்டத்தில்  பெரும்பான்மையின் சில தீயசக்திகளால் எதிர்கொள்ளும் இன்னல்கள் மத்தியில் ஒன்றாய் வாழும் தமிழ் சமூகத்துடனும் ஒரு திரைப்பட விவகாரத்துக்காக மோதவேண்டுமா?
இதை விட மிக முக்கியமான விடயங்கள் பல இருக்கையில் அதற்கான போராட்டங்கள் எல்லாம இல்லாமல் இதற்காக மட்டும் அனைவரும் வரிந்துகட்டி இறங்கி இருப்பது, பெரும்பான்மையை விட சிறுபான்மையுடன் மோதுதல் இலகு என்பதாலா?

தமிழ் என்ற மொழியால் நாம் ஓரினம் தானே? சமயம் தானே அடையாளங்களை வேறுபடுத்துகிறது?
இதிலேயும் பிரிந்து நின்று தனித்துவம் என்று தனிமைப்படவேண்டுமா?

விஷ வித்துக்களைக் கக்குகின்ற தமிழ் சகோதரர்களும் உணரவேண்டிய ஒரு விடயம், சிறுபான்மைகள் மேலும் சிதறிவிடக் கூடாது என்பதையே.

மதங்கள் மனிதருக்காகவே தவிர, மனிதரைப் பிரித்து விடுவதற்காக அல்ல என்பதை நாம் இன்னும் உணரவில்லையோ என்று நினைப்பு மேலும் மனிதனாக என்னை தலைகுனிய வைக்கிறது.

இன்னமும் உரத்து சொல்கிறேன்...
கமல் என்ற கலைஞனின் கலைப்படைப்பான விஸ்வரூபத்தை ஆதரிக்கிறேன்.
அதன் வெளியீட்டை விரும்புகிறேன்.
அதேவேளை அதில் இஸ்லாமிய நண்பர்கள் சொல்வது போல, ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகம் கீழ்த்தரமாக சித்தரிக்கப்பட்டிருந்தால், அவர்களது அடையாளங்கள், சமயம் அவமரியாதை செய்யப்பட்டிருந்தால் (குறியீடாகக் கூட) அவர்களது எதிர்ப்பு நியாயமானதே என்பதயும் ஏற்றுக்கொள்வேன்.

-எண்ணத்தில் வந்துவிழுந்த வேகத்தில் வினாக்களையும் விளக்கங்களையும் பதிந்துளேன்.

கமல் ரசிகனாக அல்லாமல் ஒரு கலைஞன் தனது படைப்புக்களை எம்மொழியில் தருவதற்கு இனித் தயங்குவானே என்ற நினைப்பில் ஒரு கலை ரசிகனாக மிக கவலையுடனும் கோபத்துடனும் எதிர்பார்த்திருக்கிறேன்.

விஸ்வரூபம்... ம்ம்ம்


தமிழ்நாட்டில் தடை நீங்கியது..

எத்தனை  திருப்பங்கள், குழப்பங்கள், திடுக் திடுக் கணங்களைத் தாண்டி இந்தத் தீர்ப்பு?

ஒரு மாநில அரசின் முட்டாள் தனமான வாதங்களை எதிர்த்து கமலின் வழக்கறிஞர்கள் நீதிபதியிடம் வைத்த நியாயமான வாதங்கள் வென்றிருக்கின்றன.

மதவாதிகளைத் (அடிப்படை இல்லாமல் படம் பார்க்காமலே, இதிலே ஆபத்துள்ளது என்று முதலில் இருந்து கடைசிவரை குரல் எழுப்பிய சிலரை மட்டும்)  தூண்டி விட்டு அப்பாவிகளை மனம் நோகச் செய்து அரசியல் நாடகம் ஒன்றைத் திரைப்பட உரிமைகளுக்காக தமிழ்நாட்டு அரசாங்கம் நடத்தியிருக்கிறது என்று பெரும்பாலானவர்கள் நம்ப நியாயம் இருக்கிறது.
ஆனால் கமல் என்ற ஒரு பெரிய நடிகனால். படைப்பாளியால் தனக்குக் குவிந்த அனுதாபம், ஆதரவு, தன்னிடம் பக்கபலமாக இருந்த பணபலம், புத்திஜீவிகளின் ஆதரவு , நுணுக்கமான ஆளுமையும் அணுகுமுறையும் என்று பல காரணிகளை வைத்துப் போராடி இந்தத் தடையை நீக்கி விஸ்வரூப வெற்றியை அடைய முடிந்தது.

இது அவருக்கும் அவரது விஸ்வரூபம் திரைப்படத்துக்கும் பெரிய இலவச விளம்பரமாகவே இனி அமைந்துவிடப் போகிறது.
படம் என்ன தான் மரண மொக்கையாகவே இருந்தாலும் கூட, இனி கமலின் ஆதரவாளர்கள் மட்டுமல்ல, கருத்து வெளிப்பாட்டின் ஆதரவாளரும் கூட தங்களுக்கு ஏற்பட்ட ஒரு அவமானமாக, ஒரு சவாலாகக் கருதி விஸ்வரூபத்தை வெற்றியடைய வைப்பார்கள் என்பது நிச்சயம்.

ஆனால் இதே மாதிரியான தடை, போராட்டம், எதிர்ப்பு விளையாட்டுக்கள் இனியும் இளைய, புதிய படைப்பாளிகளையும் பதம் பார்க்கையில் அவர்களால் இவ்வாறு உத்வேகத்துடன் போராட முடியுமா?
அவர்களின் முடக்கங்கள் நல்ல படைப்புக்களை முடக்கி விடும் அபாயமும் இருக்கிறது.

இதற்கெல்லாம் ஒரே வழி துப்பாக்கி படம் பற்றிய சர்ச்சைகளுக்கு தமிழக நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு - திரைப்படத்தின் கருத்துக்கள் சொல்லப்படும் விடயங்கள் சம்பந்தப்பட்ட சர்ச்சைகளுக்கு தணிக்கை சபையில் மேன்முறையீடு செய்வதே சிறந்த வழி என்பதே இனித் தொடரப்படவேண்டும்.

விஸ்வரூபம் பற்றிய வழக்கு தமிழகத்தில் கமல் தரப்புக்கு, திரைப்பட வெளியீட்டுக்கு சாதகமாக வந்தவுடன் நான் பதிந்த Facebook status -

கலை+கருத்து வெளிப்பாடு வென்றது; அரசியலும் அவதூறும் தோற்றது.
மதமும் மார்க்கமும் இங்கே அரசியலுக்காகவே பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது தெளிவு.

இதை முன்பிருந்தே நான் நண்பர்களிடம் மறக்காமல் சொல்லிவந்தேன்.
இனியும் தேவையற்ற சீண்டல்கள் வேண்டாம்.

இலங்கையிலும் சிக்கல்கள் இருக்காது என்று நம்பியிருப்போம்.
காரணம் தணிக்கை சபைத் தலைவர் தன்னைப் பொறுத்தவரை விஸ்வரூபத்தில் எந்தவொரு சர்ச்சையும் இல்லை என்றிருக்கிறார்.

நல்ல முயற்சிகளும் நம்பிக்கையும் உண்மையும் என்றும் தோற்பதில்லை.

லங்கைத் திரைப்படத் தணிக்கை சபை ஏற்கெனவே பச்சைக் கொடி காட்டி இருந்தாலும் இங்கேயும் எழுந்த முஸ்லிம் தரப்பு எதிர்ப்புக்களால் சற்று ஒத்தி வைத்துள்ளார்கள்.
தமிழகத் தீர்ப்புக்காக இவர்களும் காத்திருந்ததாகப் பட்சிகள் கூறியிருக்கின்றன.
எனவே நாளை படம் இலங்கையில் திரையிட ஓகே சொல்லப்படலாம் என நம்பப்படுகிறது.

காரணம் வீரகேசரிக்கு இலங்கை தணிக்கை சபையின் தலைவர் காமினி சுமனசேகர வழங்கிய பேட்டியில் சில விடயங்களைத் தெளிவாக சொல்லியுள்ளார்.

கேள்வி: இலங்கை தணிக்கை சபை என்ற வகையில் விஸ்வரூபம் தொடர்பில் உங்களுடைய கருத்தினை கூற முடியுமா?

பதில்: என்னைப் பொறுத்தவரையில், திரைத்துறையைச் சார்ந்தவன் என்ற ரீதியில் விஸ்வரூபம் திரைப்படத்தில் பிழை என்று சொல்வதற்கு எதுவும் இல்லை. மதங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக கருத்துக்கள் இல்லை.

இலங்கையில் விஸ்வரூபம் திரையிடப்படுமா? தணிக்கை சபை விளக்கம்

காத்திருப்போம்....

ஆனால் எதிர்ப்புத் தெரிவிக்கும் தரப்பானது மேலிடம் வரை அழுத்தம் கொடுக்குமோ என்ற நிலை தான் யோசிக்க வைக்கிறது.

இப்போது இருக்கும் நிலையில் இலங்கையின் முஸ்லிம் சமூகமானது எல்லாப் பக்கமிருந்தும் அழுத்தங்களை பெரும்பான்மையிடமிருந்து அடைந்துகொண்டிருக்கும் நிலையில் (ஹலால், பள்ளிகள் உடைப்பு, பொது பலசென விவகாரங்கள் என்று பலப்பல) அவர்கள் இந்த விடயத்திலாவது வென்று காட்ட, அல்லது தங்கள் உணர்வுகளைக் கொட்ட நினைப்பார்கள்.

ஆனால் இந்த விஸ்வரூப விவகாரமானது சாதாரண மக்கள் மத்தியில் பெரிதாக ஆழமாகப் பேசப்படாவிட்டாலும் இணைய வெளியில், சமூக வலைத்தளங்களில் பெரும் மோதலையும், அமைதியற்ற சூழ்நிலையையும் கசப்புணர்வுகளையும் ஏற்படுத்துவிட்டிருக்கிறது.
இது மாறா வடுக்களையும் ஏற்படுத்தியுள்ளது.

இது பற்றிய சில கேள்விகள், தெளிவாக்கங்கள், மற்றும் புரிதல்களைப் பதியவேண்டிய அவசியம் ஒரு ஊடகவியலாளனாகவும், கருத்து சுதந்திரத்தை மதிப்பவனாகவும், நண்பர்களாகப் பலருடனும் பல மட்டத்தில் பழகுபவனாகவும், ஒரு மனிதனாகவும் பதியவேண்டி இருக்கிறது.

அதை நாளை (இலங்கையில் விஸ்வரூபம் திரையிடப்பட்டால் எப்படியும் மாலையாகும் தானே?) விரிவாகப் பதிகிறேன்.

அதுவரை... ஒரேயொரு விடயம்...

விஸ்வரூபம் திரைப்படம் மற்றும் கமலுக்கான எனது ஆதரவு  வெளிப்படையாகவே இருந்தது. காரணத்தையும் நான் மிகத் தெளிவாக சொல்லி இருந்தேன்.

ஒரு கருத்து, கலை வெளிப்பாட்டுக்கான சுதந்திரமாக இதை நான் பார்த்தேன்.
ஒரு படைப்பு வெளியான பின்னரே அதைப் பற்றிய விமர்சனங்கள், எதிர்வினைகளால் அதை எதிர்க்கலாம் அல்லது ஆதரிக்கலாம்.
மற்றும்படி எந்த நல்ல உள்ளம் கொண்டவரையும் எதிர்க்கக் கூடாது என்பதிலும் மிகக் கவனமாக இருந்தேன்.

ஆனால் குதர்க்கம் பேசுவோர் மற்றும் வேண்டுமென்றே பிரிவினைவாதம் பேசியும் பேதம் பார்த்தும் தடி  என்று கோஷம் இட்டோரையும் நான் பகிரங்கமாகவே எதிர்த்திருந்தேன்.

என் நண்பர்கள் யாராயினும் புரிந்துகொண்டார்கள்; புரிந்துகொள்ளாதவர் என்னையும் சரியாக அறிந்து கொள்ளாதோரே.

இனியும் மோதல்கள், குத்தல்கள், விஷமப் பிரிவினைகள் மற்றும் விதண்டாவாதப் பிளவுகள் வேண்டாம்.
நாளை 'விஸ்வரூபம்; தமிழகத்தில் பார்த்து விமர்சனங்கள் வரட்டும்... இங்கே ஆறுதலாகத் தெரிந்து, தெளிந்து கொள்வோம்.

January 28, 2013

மப்பிள், 'மப்'பில் & மப்பில்


ஹர்ஷுவுக்கு அப்பிள் சாப்பிட விருப்பம், ஆனால்  அப்பிள் என்று தெரிந்தால் சாப்பிட மாட்டான்...

ஒரு நாள் விருந்தகம் ஒன்றுக்கு சாப்பிடப் போயிருந்தோம்..
சாப்பாட்டுக்குப் பின்னர் ஒவ்வொருவரும் வேறு வேறு dessert order பண்ணி சாப்பிடும் நேரம், இவன் தனக்குப் பிடித்த ஏதோ ஒன்றை உண்டு முடித்துவிட்டு, தன்னுடைய தாயாரின் Fruit salad ஐயும் பதம் பார்க்க ஆரம்பித்த நேரத்தில் அவன் குறிவைத்து பப்பாளி மற்றும் மாம்பழத் துண்டுகளையே எடுத்துக் கொண்டிருந்தான்.

மனைவி ஒரு அப்பிள் துண்டத்தை எடுத்து வாயில் வைத்தவுடன் இது என்ன என்று கேட்டான் ஹர்ஷு.

மனைவி அப்பிள் என்று சொல்ல முதல் நம்ம ஐடியா மூளை மின்னல் வேகத்தில் செயற்பட்டு "மப்பிள்" என்று ஒரு வார்த்தையை விட்டது.

"அது என்னப்பா புது Fruit?" என்று அவன் உடனேயே துருவிக் கேட்க, (நான் Mango + Apple = Mapple என்று தான் உடனே அப்பிடி சொன்னது) சமாளித்து அது ஒரு வித்தியாசமான பழம் என்று சொல்லிட்டேன்.

"அப்பா எங்கட ஆர்ப்பிக்கோல அது கிடைக்கும் தானே? ஓகே.. அம்மா எனக்கு அடிக்கடி மப்பிள் வாங்கித் தாங்க" என்று ஹர்ஷு தனக்குப்  பிடித்த புதிய பழத்தைத் தொடர்ந்து சுவைக்கத் தொடங்கிட்டான்.

இப்போதும் எங்கள் வீட்டில் அப்பிள் வாங்கினாலும் அவனுக்குக் காட்டாமல் தோலை சீவித் தள்ளி மப்பிள் ஆக மாற்றி அவன் வாய்க்கு சுவைக்கக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் கொடுமை என்னவென்றால், அண்மையில் பாடசாலைக்கும் இவனுக்கு சிற்றுண்டியாக மனைவியார் மப்பிள் கொடுத்துவிட்டிருக்கிறார்.
ஹர்ஷுவின் மிகப் பிரியமான கொள்கையான Sharing is the best thing in the world என்பதற்கிணங்க நண்பர்களுக்கும் கொடுத்திருக்கிறார்.

இப்போ அவர்கள் வீடுகளிலும் அந்த நண்பர்கள் தங்கள் அப்பா, அம்மாமாருக்கு மப்பிள் கேட்டு தொல்லையாம் ;)

நம்ம ஐடியாவுக்கு காப்புரிமை எடுக்கணும் போல இருக்கே.

--------------------

மடிக் கணினியும் ஐபோனும் தண்ணி பட்ட பாடு நம்ம ஹர்ஷுவுக்கு.
சில Apps பற்றி அவனிடம் கேட்டுக் கற்கும் அளவுக்கு நம் நிலைமை.

மடிக் கணினியைத் திறந்து கூகிள் பண்ணியே சகல விடயங்களையும் தேடி அறிகிறான். நானும் மிக அவதானமாக Safe search On போட்டே வைத்துள்ளேன்.
ஏதாவது ஒரு விஷயம் பற்றிப் பேசினால் உடனேயே அதைப் பற்றித் தேடி அசத்தியும் விடுகிறான்.

பிரான்சின் ஈபில் கோபுரம், உலக நாடுகளின் எண்ணிக்கை, Samsung Galaxy, iPhone 5, கடல் படம் பற்றி, A.R.ரஹ்மான், சில கார்ட்டூன்களின் தயாரிப்பு நிறுவனங்கள் இவை பற்றி கூகிளிலும், கிரிக்கெட்டில் இந்த SLPL, Player Profiles, IPL முதல் எனக்கே இன்னும் சரியாகத் தெரியாத Big Bash League இவ்வளவு ஏன்  Carribean T20 League பற்றியும் அதில் விளையாடும் அணி வீரர்கள் பற்றியும் Cricinfo மற்றும் இன்னும் சில தளங்களிலும் தேடி அசத்தி விடுகிறான்.

அதிலும் உலக வரைபடம், நாடுகள், நகரங்கள், கொடிகள் பற்றித் தேடுவது இவனுக்கு மிகப்பிடித்தது.

வயதுக்கு மீறிய செயல் என்றோ கெட்டுவிடுவான் என்றோ நான் நினைத்து இதைத் தடுப்பதில்லை.

எங்கள் காலத்தில் நாங்கள் புத்தகங்கள் தேடி வாசித்தது இப்போது என் மகன் காலத்தில் கணினியும் தேடியந்திரமும்.

ஒரு சில மாதங்களுக்கு முன்னர்  நான் வியாழன் விடியலுக்காக அழிந்துபோன 'லெமூரியா' கண்டம் பற்றித் தேடிக் கொண்டிருந்தேன்...
இவன் வந்து எட்டிப் பார்த்தான் , ஒரு சில வினாடிகள் தான்.

அதற்குப் பிறகு கொஞ்ச நேரத்துக்குப் பிறகு "அப்பா The lost land எங்கேயப்பா இருக்கு? மப்பில் காணேல்லையே ?"  என்ற ஹர்ஷுவிடம் "The lost land ?? எங்கேடா பார்த்தாய்? " என்று கேட்டேன்.

"அதானப்பா நீங்கள் கூகிள் பண்ணித் தேடிக் கொண்டிருன்தீன்களே.. The lost land  Lemuria அதான் "
கொஞ்சம் ஆச்சரியப்பட்டுப் போனாலும், அவனுக்குப் புரிகிற மாதிரி குமரிக்கண்டம் ஆழிப் பேரலையால் அழிந்த கதை பற்றி சொல்லித் தூங்கச் செய்தேன்.

அடுத்த நாள் இது பற்றிய காணொளி ஒன்றை அனுப்புகிறேன் என்று நம்பிக்கையும் கொடுத்தேன்.
மறுநாள் வேலை மும்முரத்தில் மறந்தே போனேன்.

மாலையில் வீடு திரும்புகிறேன்; வாசல் வரை வந்து வரவேற்ற ஹர்ஷு " என்னாப்பா நீங்க மறந்திட்டீங்களே.. வாங்கோ நான் லப்பில் The lost land Lemuria Video வச்சிருக்கிறேன்"

ஆடை மாற்றி அலுப்புத் தீர்க்க முன்னர் அவன் காட்டி, தன் மழலையில் வழங்கிய விரிவுரையில் ஆழிப்பேரலை, குமரிக்கண்ட அழிவு எல்லாமே புதுசாய்த் தெரிந்தன...

--------

வியாழக்கிழமை இரவு,

Sports week நிகழ்ச்சி ஒளிப்பதிவு முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தேன். பத்தரமுல்லை சந்திக்குக் கொஞ்சம் முன்னதாக திடீரென குறுக்கு வீதியொன்றின் வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் அப்படியே என் வாகனத்தை உராஞ்சுகிற மாதிரி வந்து வீதியின் மறுபக்கப் புற்றரையுடன் மோதி நின்றது.
சடுதியாக என் வாகனத்தை நிறுத்தி விட்டு மோட்டார் சைக்கிளில் வந்து விழுந்தவருக்கு என்னாச்சு என்று பார்க்க ஓடினேன்.

கிட்டப் போகின்ற நேரமே அப்படியொரு நெடி. சாராயம்.
அண்ணன் புல் மப்பில் என்று புரிந்துபோனது.

சரி பாவம் என்று மோட்டார் சைக்கிளை அப்புறப்படுத்தி, சற்று சிராய்ப்புக் காயங்களுடன் கிடந்த அவரை எழுப்பினால் மனிதர் தள்ளாடும் நிலையில். காயங்கள் + வலியுடன் தாறுமாறாக என்னை ஏச ஆரம்பித்துவிட்டார்.

முதலில் நானே தான் தன்னை ஊற்றித் தந்து புல்லா மப்பு ஏற்றியதாக சொன்னவர், பிறகு சத்தம் கேட்டு வந்த அண்டை அயலாரைப் பார்த்தவுடன் நான் தன்னை மோதித் தள்ளி விட்டதாக உளற ஆரம்பித்தார்.

இதெல்லாம் உனக்குத் தேவையாடா லோஷா என்று என்னை நானே நொந்து கொள்ள ஆரம்பித்தபோது தான் போலீசார் வந்தார்கள். அப்பாடா என்று அவர்களுக்கு நடந்த கதையைச் சொல்லி இந்தக் குடிகாரனாச்சு நீங்களாச்சு என்று கிளம்பிய நேரம், அந்த மப்புக் கேஸ் எனக்கு நன்றி சொல்ல ஆரம்பித்தது.

தலையை சுற்ற ஆரம்பித்தது..
ஒருவாறு கிளம்பி வந்துவிட்டேன்.

என்னடா கேஸ் இது... ஒரு வேளை நடுவில கொஞ்சம் பக்கத்தைக் காணோம் + கஜினி கலந்த கலவையோ?

-----

மப்பு பற்றிச் சொல்லும்போது தான் இன்னொரு சம்பவம்...
நேற்றிரவு தூங்குகிற நேரம்,

ஹர்ஷு " அப்பா, சிகரட் குடிக்கிறதால என்னென்ன வருத்தம் வரும்?"
அவனுக்குப் புரிகிற மாதிரி எல்லா நோய்களையும் சொன்னேன்.

"அவ்வளவு Bad disease எல்லாம் வருதெண்டு தெரிஞ்சும் ஏனப்பா Arpicoல சிகரெட் விக்குறாங்க?"

பதில் சொல்ல முடியவில்லை.



Smoking and Non smoking







January 23, 2013

விடைபெறும் தலைவனும், எதிர்கால நம்பிக்கையும் - இலங்கை கிரிக்கெட் பற்றி


நாளை இலங்கை அணியின் அண்மைக்கால மிகச் சிறந்த கிரிக்கெட் அணித் தலைவர்களில் ஒருவரான / முதன்மையானவரான மஹேல ஜெயவர்த்தன இலங்கை அணியின் தலைவராக தனது இறுதிப் போட்டியில் விளையாடவுள்ளார்.

யாருக்குத் தெரியும் புதிய அணித்தலைவராக வருபவர் சொதப்பி, தடுமாறி வேறு யாரும் இல்லாமல் மீண்டும் மஹேலவை "கொஞ்ச நாள், புதியவரைத் தெரிவு செய்யும் வரை தலைவராக இருந்து அணியைக் காப்பாற்றுங்கள்" என்று ஸ்ரீலங்கா கிரிக்கெட் கேட்டால், வேறு வழியின்றி மஹேல மூன்றாவது தடவையாகத் தலைமை என்ற முள் கிரீடத்தை சுமக்கலாம்...
வேறு வழி?


ஆனால் இலங்கை அணிக்குத் தலைவராக மிகச் சிக்கலான காலகட்டத்தில் சிறப்பாக செயற்பட்ட அவரை இனிமேலும் துடுப்பாட்ட வீரராகவும் அணிக்குள் வைத்துக்கொள்ளத் தெரிவாளர்கள் தயாராக இல்லை என்பது போல சில செய்திகள்/வதந்திகள் உலாவர ஆரம்பித்துள்ளன.

மஹேல வெளிநாடுகளில் குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் தடுமாறி வந்திருக்கிறார் என்பது நிஜம். ஆனால் ஆஸ்திரேலிய தொடரில் கடைசி இரு இனிங்க்சில் அரைச் சதம் அடித்து விமர்சனங்களின் வாய்களைக் கொஞ்சம் அடைத்திருந்தார்.

மஹேலவின் வெளிநாட்டு டெஸ்ட் துடுப்பாட்ட தடுமாற்றங்களுக்கு வெளிநாடுகளில் இலங்கை அணியின் மொத்தத் தடுமாற்றம் வழங்கிய அழுத்தமும் காரணமாக இருந்திருக்கவேண்டும்.
இனி முடிவு தெரிவாலரின் கைகளில் மட்டுமல்ல, மஹேலவின் மனதிலும் தான்..

அடுத்த உலகக் கிண்ணம் வரை விளையாடும் எண்ணத்தில் அவரும், சம காலத்தவரான சங்கக்காரவும் இருப்பதாக நம்பப்படுகிறது.
மஹேல பற்றிய எனது கட்டுரை...

மஹேல: இலங்கையின் மறக்கமுடியாத தலைவர்



தலைவராக மஹேல விடைபெறுவது இலங்கையைப் பொறுத்தவரை எப்படியோ, எனக்கு தனிப்பட்ட முறையில் மிக மனதில் தாக்கம் செலுத்தும் ஒரு விடயம்.
கனவான் தன்மையான, கண்ணியமான இலங்கை வீரர்களில் ரொஷான் மகாநாம, சங்கக்கார, அரவிந்த டி சில்வா, முரளிதரன் ஆகியோரோடு நான் மதித்த இன்னொருவர் மஹேல.
விடை கொடுப்போம் எங்கள் தலைசிறந்த கிரிக்கெட் தலைவனுக்கு....

--------

அண்மையில் எனது தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒளிப்பதிவுக்காக CSN கலையகம் சென்றிருந்தநேரம், அங்கே சிங்கள மூல நிகழ்ச்சிக்காக வந்திருந்த இலங்கை அணியின் டெஸ்ட் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான திமுத் கருணாரத்னவுடன் உரையாடக் கிடைத்தது.

இது பற்றி முன்னம் ஒரு இடுகையில் சுருக்கமாகச் சொல்லியிருந்தேன்.


அவரது ஆஸ்திரேலிய டெஸ்ட் இன்னிங்க்ஸ் ஆட்டங்களை சிலாகித்து நான் ஆரம்பித்த உரையாடலில் அவர் என்னிடமே தனது துடுப்பாட்டக் குறைகளைப் பற்றி கேட்க, நான் அவரைப் பற்றி தமிழ் மிரரில் குறிப்பிட்ட சில விஷயங்களை சிங்களத்தில் மொழி பெயர்த்து சொல்ல என்று நட்புடன் வளர்ந்தது.

அவரது துடுப்பாட்டத்தில் நான் கவனித்த Back foot shots, எனக்கு மிகப் பிடித்த (நான் ஆடும் டென்னிஸ் பந்து கிரிக்கெட்டிலும் கூட) square cut போன்றவற்றை நான் ரசித்து சொல்ல,
திமுத் - பாடசாலைக் காலத்திலிருந்தே எனக்கு  Back foot shots மிகப் பிடிக்கும், ஆப்படியான அடிகள் எனக்கு பந்தைப் பற்றித் தீர்மானிக்க இன்னும் கொஞ்சம் அதிகப்படியான நேர அவகாசத்தைத் தருவதாக உணர்கிறேன்.
ஆனால் எல்லா நேரமும், எல்லா ஆடுகளங்களிலும் இவ்வாறு ஆட முடியாது என்று எனது பாடசாலைப் பயிற்சியாளரில் இருந்து கிரகாம் போர்ட் வரை சொல்லி வருகிறார்கள்.

நான் - ஆஸ்திரேலியப் பந்துவீச்சாளர்களை அவர்கள் ஆடுகளங்களில் சந்தித்த அனுபவம்?
திமுத் - எனக்கு அந்த த்ரில் பிடித்திருந்தது. அவர்களை அடித்துத் தான் வழி பார்க்கவேண்டும். Aggression is the key. மஹேல அய்யா (அண்ணா) அப்படித் தான் அணுகச் சொன்னார். டில்ஷான் அய்யாவும் கூட இருந்தது உதவியாக இருந்தது.
எனக்கும் அது பிடித்திருந்தது.

நான் - ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் என்ற இடம் நிச்சயமில்லை என்ற அழுத்தம் இருக்கிறதா?
திமுத் - (சிரித்துக்கொண்டே) ஆமாம் கொஞ்சம்... எப்போ யாரை மாற்றுவார்கள் என்று தெரியாது. ஆனால் மஹேல அய்யா "நீ நல்லா விளையாடினா இடம் உனக்குத் தான்" என்று உறுதியளித்தது நம்பிக்கையளிக்கிறது.
டில்ஷான் இந்தத் தொடர் முடிவில் தனது ஓய்வை அறிவிப்பதாக சொல்லி இருந்தார். ஏனோ அறிவிக்கவில்லை.
அப்படி அவர் விரைவில் ஒய்வு பெற்றால் பரணவிதான அலது தரங்க என்னோடு சேர்வார்கள் என்று நம்புகிறேன்.

என்னிடம் அடுத்து திமுத் ஒரு கேள்வி கேட்டார்....
வர இருக்கும் பங்களாதேஷ் தொடருக்கு யார் யார் அணியில் விளையாடவேண்டும் என்று விரும்புகிறீர்கள்?

நான் சொன்னேன் - சொந்த மண்ணில் விளையாடப் போகிறோம்.. புதிய தலைவர் வேறு. (அவரைப் பொறுத்த வரையில் - Team Talks அடுத்த தலைவர் மத்தியூஸ் தானாம். உப தலைவர் பற்றி உறுதியாகத் தெரியாதாம்.. ஆனால் சந்திமாலுக்குக் கொடுப்பது எதிர்காலத்துக்கு நல்லது என்பதில் இருவருமே இணங்கினோம் )
எனவே மூத்த வீரர்கள் நான்கு பேருக்கும் (மஹேல, சங்கா, டில்ஷான், சமரவீர - இவர் எப்படியும் தூக்கப்படுவது உறுதி) விரும்பினால் ரங்கன ஹெரத்துக்கும் கூட தற்காலிக ஓய்வைக் கொடுத்து இளையவர்களை முழுக்கக் களம் இறக்கிப் பார்க்கலாம் என்று.

திமுத் சொன்னார் - பங்களாதேஷ் குறைத்து மதிப்பிடக் கூடிய அணியில்லை. எங்கள் ஆடுகளங்களும் அவர்களுக்கும் சாதகமானவை. எனவே ஒரேயடியாக அனுபவமில்லாத அணியை இறக்கவும் முடியாது.
அவர்களில் அநேகர் எங்களுடன் Under 19 Series, World Cup விளையாடியவர்கள். நாங்கள் தான இப்போதும் அணியில் இடம் கிடைக்கப் போராடுகிறோம்.

அதற்குப் பிறகு சும்மா பேசியபோது, மஹேல, சங்கா இவர்களின் ஓய்வுத் திட்டங்கள் பற்றி அணியிலுள்ள இளையவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று கேட்ட போது,
"அடுத்த உலகக் கிண்ணம் வரை விளையாடும் ஆசை  இருக்கிறது போல... ஆனால் டெஸ்ட் போட்டிகளில் அவர்களால் சாதிக்க முடிந்த எல்லாம் சாதித்துக் காட்டி விட்டார்களே. ஆனால் ஒன்று, அவர்கள் வெளிநாடுகள் போல, டெஸ்ட்டில் இருந்து மட்டும் ஒய்வு என்று அறிவித்தால் இங்கே உள்ளவர்கள் (தெரிவாளர்கள்) அவர்களைப் புதைத்தே விடுவார்கள். இரண்டு பேரும் விமர்சனங்கள் தாண்டியவர்கள். அவர்களுக்குத் தெரியும் , எப்போது முடிவெடுக்க வேண்டும் என்று.

என்ன ஒரு சின்ன ஆதங்கம் எங்களைப் போல சில இளையவர்கள் இன்னும் கொஞ்சக் காலம் டியூன் (form) இறங்காமல் தொடர்ந்து போராடிப் பத்திரிகைத் தலைப்புக்களில் பெயர் வருமாறு விளையாடவேண்டும்" என்றார் கொஞ்சம் யோசனை, நிறைய உறுதியோடு.


இந்தியாவின் திவாரிகள், ரஹானேக்களின்  நிலையில் தான் இலங்கையிலும் திரிமன்னேக்களும் , சந்திமால்களும் இன்னும் பலரும் இருக்கிறார்கள்.

வாழ்த்துக்களை சொல்லிவிட்டு இதை இடுகையாகத் தமிழில் போடுகிறேன் என்றேன்..
"பாசை விளங்காது.. பார்த்து சிக்கலில் என்னை மாட்டாது நல்லபடியா எழுதுங்கோ அண்ணே. முடிந்தால் மாகான அணிகளின் போட்டிகளைப் பார்க்க வந்தால் வந்து சந்தியுங்கோ" என்று விடைபெற்றார்.

நல்லபடி பராமரித்தால் எதிர்காலத்துக்கான ஒரு நீண்டகால முதலீடு திமுத் கருணாரத்ன.

------

நியூ சீலாந்து அணி பற்றிய அலசல் ஒன்று....


நியூசிலாந்து அணிக்கு என்ன நடந்தது?: ஓர் அலசல்





January 21, 2013

ஆசிய ஒபாமாவா அமெரிக்க மகிந்தவா?


அகில உலக சுப்பர் ஸ்டார் ஒபாமா தனது இரண்டாவது பதவிக்காலத்துக்காக நேற்று மீண்டும் பதவியேற்றுக்கொண்டார். அமெரிக்காவில் எது மாறினாலும் சில விஷயங்கள் மாறவே மாறா...
குறிப்பாக எழுதப்பட்ட அரசியலமைப்பு சட்டங்கள், பதவியேற்பு முறைகள், ஆட்சிக்கான வரம்புகளில் எந்தக் கொம்பன் வந்தாலும் மாற்றங்களைத் தன் இஷ்டப்படி செய்ய முடியாது.

மூன்றில் இரண்டு என்ன மூன்றில் மூன்று வந்தாலும் இப்படி யாப்பு, சட்டவாக்கங்களில் மாற்றம் செய்வதாக இருந்தால் நிறையப் படிகள் தாண்டி, கொங்கிரஸ், நீதிமன்றம் என்று நிறையப் பேரிடம் முறையான அனுமதி பெற்றேயாக வேண்டும்.

பாருங்கள், புதிய பதவிக்காலம் ஜனவரி 20ஆம் திகதி இடம்பெற்றேயாகவேண்டும் என்று விதிமுறைகள் இருப்பதால், நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆன போதும் அமெரிக்க அதிபராக பராக் ஒபாமாவும், துணை அதிபராக ஜோ பைடனும் நேற்றுத் தமது பதவிகளை வெள்ளை மாளிகையில் ஏற்றுக் கொண்டார்கள்.

இன்று மீண்டும் மக்கள் முன்னிலையில் வைபவ ரீதியாகப் பதவி ஏற்கவுள்ளார்கள்.

அமெரிக்க வரலாற்றில் இரு தடவை பதவியேற்பது இது ஏழாவது தடவை.
இருபதாம் திகதி ராசியில்லை, எட்டாம் நம்பர் தான் ராசி, எனவே இருபத்தாறாம் திகதி பதவி ஏற்கிறேன் என்று ஒபாமா சொல்லவுமில்லை; அப்படி சொன்னாலும் அங்கே அது நடக்காது.

அதேபோல, இரண்டு தடவைகளுக்கு மேலே பதவியில் இருக்கப் போகிறேன் என்று ஒபாமா ஆசைப்பட்டாலும், அவருக்குக் குடும்பப் பலம், பெரும்பான்மைப் பலம், கொங்கிரசிலும் ஏக அங்கீகாரம் இருந்தாலும்... ம்ஹூம்...

இந்த இரண்டாம் தடவையுடன் அவர் மதிப்புக்குரிய முன்னாள் ஜனாதிபதியாக, விரும்பினால் ராஜதந்திரியாக வலம் வரலாம் அவ்வளவு தான்.

எவ்வளவு தான் உலகின் மிகப் பலம் வாய்ந்த பதவியாக, சகல அதிகாரங்களும் கொண்ட பதவியாக அமெரிக்க ஜனாதிபதிப்பதவி கருதப்பட்டாலும், அமெரிக்க அரசியலின் வரையறுக்கப்பட்ட மூன்று கட்ட அரசியல் அமைப்பில் ஜனாதிபதி என்ற பதவி ஒன்று. அவ்வளவு தான்.

நிறைவேற்றதிகாரம்
சட்டவாக்கம்
நீதித்துறை
The three branches of the Federal Government are the Executive Branch, which is the leader or president and his cabinet. The legislative Branch, which is congress. And the Judicial Branch which is the Supreme Court.

இந்த மூன்றும் சரியான அதிகார வரம்புகளுக்குட்பட்டு இயங்குவதால் தான், என்ன தான் சிக்கல்கள் வருமிடத்திலும், அமெரிக்காவின் ஆட்சி, அதிகாரம் மட்டும் உலகில் நிலையாக நடந்துகொண்டிருக்கிறது.

பார்க்கப்போனால் இந்த உறுதியான + சரியாக நடைமுறைப்படுத்தப்படும் யாப்பு அமைப்பினால் அமெரிக்காவை ஜனநாயகத்தை உறுதியாகப் பின்பற்றும் உண்மை நாடாக நாம் கருதலாம்.

(கடந்த வருட எங்கள் அமெரிக்க சுற்றுலாவின்போது, இந்த நடைமுறைகள், இவற்றுள் அடங்கியுள்ள சிறு சிறு பொறிமுறைகள், பிணக்குகள் தீர்த்துக்கொள்ளும் அணுகுமுறைகள் பற்றியெல்லாம் இரு நாட்கள் முழு விளக்கம் அளிக்கப்பட்டபோது அமெரிக்க ஜனநாயகத்தின் மீது உண்மையில் பிரமிப்பு ஏற்பட்டது)

ஜனநாயகக் கட்டமைப்புக்குத் தேவையான இந்த மூன்று பொறிமுறைகளும் சரியான முறையில் எங்கெங்கு அங்கீகரிக்கப்படுகிறதோ, அங்கே மக்களின் உணர்வுகளும் மதிக்கப்படும், நீதி, நியாயமும் சரியாக நடைமுறைப்படுத்தப்படும்...

இதுபற்றியெல்லாம் இலங்கையில் இவன் பேசுகிறானே என்று யாரும் ஆச்சரியப்படாதீர்கள்...

அமெரிக்க ஒபாமாவுக்கும், நம் இலங்கையின் கௌரவ மகிந்த மாமாவுக்கும் (என் போன்ற சின்னக் குழந்தைகளுக்கு மாமா) சமாந்தரக் கோடு வரைந்து ஒப்பிடுவது அண்மைக்காலமாக அரசியல் ஞானிகளின் பொழுதுபோக்காக இருந்துவருகின்றது.

இது ஏன் என நேற்று கொஞ்சம் மண்டையைக் கிளறி ஆராய்ந்து பார்த்தால்... உலகின் மிக சக்திவாய்ந்த பதவி இப்போது ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட நம்ம ஜனாதிபதிப் பதவி தான்...
பின்னே....

நிறைவேற்றதிகாரம்
சட்டவாக்கம்
நீதித்துறை
ஆகிய மூன்றுமே இப்போது ஒரே இடத்தில்...

அதுவும் ஜனநாயக முறைப்படியே அந்த சக்தி வரம்புகளையும் தன் வசப்படுத்திய சாதனை வேறு யாருக்குக் கைவரும்?

J.R.ஜெயவர்த்தன உருவாக்கிய 'ஆணைப் பெண்ணாகவும், பெண்ணை ஆணாகவும் மட்டுமே மாற்ற முடியாத' மற்றெல்லாம் செய்ய முடிந்த நிறைவேற்றதிகார ஜனாதிப் பதவியை சரி நேர்த்தியாகப் பாவிக்கத் தெரிந்த ஒருவராக ஜனாதிபதி மகிந்தவை நான் காண்கிறேன்.

யார் யாரை எப்படி, எந்த இடங்களில் பயன்படுத்தாலம் என்ற Master Mind இந்த MR க்கு நன்றாகவே தெரிந்திருகிறது.
அண்மையில் கூட நான் ஒரு நிலைத் தகவலைப் பகிர்ந்திருந்தேன்..

"கருணாநிதியை எல்லாம் அரசியல் சாணக்கியர் என்று சொன்னவங்க நம்ம ராஜாவை பார்த்தா என்ன சொல்லுவாங்க?சாம,தான,தண்ட,பேதம் நான்கையும் சரியாகப் பயன்படுத்தும் ஒரே அரசியல் ஞானி.மூன்றில் ரெண்டு எல்லாம் எந்த மூலைக்கு...திவிநெகும என்ன நீதிமன்றம் என்ன.. இன்னும் வரும் பாருங்கோ....
கொற்றவ நின் நாமம் நீண்டு வாழ்க."

அதே போல பெரிய பெரும்பான்மை இல்லாமல் தேர்தலில் வென்ற பின்னர், மூன்றில் இரண்டாக நாடாளுமன்றில் பெரும்பான்மையை மாற்றிக் காட்டக் கூடிய ஆற்றல் எத்தனை பேருக்கு வரும்?
சிலர் பதவிக்கு, சிலர் பணத்துக்கு, சிலர் பயத்துக்கு, இன்னும் சிலர் எதுவும் இல்லாமலே... சில அரசியலில் ஆதரவு கொடுத்தால் தான் ஆதரவு என்பதல்ல.. எதிர்க்காமல் இருந்தாலே ஆதரவு தான்.

இது ஜனாதிபதிக்கும் அவர் தம் ஆலோசகர், ஆதரவு வட்டத்துக்கும் நன்கு தெரிந்துள்ளது.
இது அரசியல் ரீதியான , ராஜதந்திர வெற்றி.

சிறுபான்மைக் கட்சிகள் அத்தனையும் சின்னச் சின்னத் துண்டுகளாக உடைத்ததில் ஆரம்பித்த வெற்றி, எல்லாக் கட்சிகளையும், தனது கூட்டணியில் உள்ள கட்சிகளையும் கூட விட்டுவைக்காமல் தொடர்கிறது.

தனியாக நின்றால் தோல்வி என்ற நிலையிலிருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இப்போது தனிப் பெரும் கட்சியாக நிற்கிறது. ஏனைய கட்சிகள் எல்லாவற்றிலும் நான்கைந்து குழுக்கள் அல்லது கோஷ்டிகள்.

எதிரணியில் எதிர்ப்பதற்கு தோதான ஒருவர் இல்லாமல் தனிக்காட்டு ராஜாவாகத் தொடரும் ஜனாதிபதிக்கு , எதிர்க்கட்சித் தலைவராக ரணில் விக்கிரமசிங்க இருக்கும்வரை இவருக்கு எந்தவொரு தொல்லையுமில்லை.
இவர் ஆட்டிவைக்கும் தாளம்+ராகத்துக்கு அவர் ஆடுகிறாரோ என்ற சந்தேகம் எல்லோருக்குமே எப்போதுமே இருந்து வருகிறது.

மறுபக்கம் ஆளும் அணியிலும் அடுத்த இடத்தில் ஒருவர் இல்லை என்பது இன்னொரு முக்கியமான விடயம்.
யாரையும் இவர் வளர்க்கவில்லை என்ற குற்றச்சாட்டைத் தாண்டி, யாரும் வளரவும் இல்லை; வளர முனையவுமில்லை துணியவுமில்லை என்பதே மிகப் பொருத்தமானது.

இப்போது போகிறபோக்கில், அண்மையில் நடந்த நிகழ்வுகள் (நீக்கங்கள், மாற்றங்கள், விலக்கல்கள், விளக்கங்கள்) எல்லாவற்றையும் வைத்துப் பார்க்கையில் மன்னர் இன்னும் மன்னராகவே, இன்னும் ஒரு தசாப்தத்துக்குத் தொடர சிக்கல்கள் (சட்டத்தினால் கூட) இருக்காது என்றே தோன்றுகிறது.

அதற்குப் பிறகு என்ன, தசரதருக்குப் பிறகு ராமரும், ராஜராஜருக்குப் பிறகு ராஜேந்திரரும் வருவதில் ஆச்சரியம் இருக்காதே? அதற்கான திட்டமிடல்கள் இப்போது மாற்ற எண்ணப்பட்டுள்ள புதிய அமைச்சரவையிலிருந்து ஆரம்பிக்கலாம் என்கின்றன பட்சிகள்..

மூன்றாவதாக நீதித்துறை...
இது பற்றி நானும் சொல்லத் தான் வேண்டுமா? அண்மையில் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க (இந்தக் குடும்பப் பெயர் யாருக்கு இருந்தாலும் நம்ம MRக்குப் பிடிக்காதோ?) பதவி அகற்றப்பட்டதன் மூலம், இலங்கையின் தற்போதைய ஆட்சியில் நேரடியாக ஜனாதிபதியினால் வசப்படுத்தப்படாமல் இருந்த நீதித்துறையும் நேரடியாகக் கட்டுப்பாட்டுக்குள்.

நீதிமன்றம் vs நாடாளுமன்றம் மோதலில் ஜனாதிபதியின் வெற்றி எதிர்பார்க்கப்பட்டதே எனினும், உள்நாட்டு, சர்வதேச எதிர்ப்புக்களை அவர் புறந்தள்ளிய விதமும், எந்த ஒரு எதிர்ப்பையும் கணக்கில் எடுக்காமல் புதிய பிரதம நீதியரசராக அவருக்கு வேண்டப்பட்ட மொஹான் பீரிசை உடனடியாக நியமித்த விதமும் வேறு எந்த ஒரு அரச தலைவராலும், எந்த ஒரு நாட்டிலும் சாத்தியப்படக்கூடிய விடயமல்ல.

இப்போது சொல்லுங்கள்...

யாரை யாருடன் ஒப்பிடுவது?

சுகாதார சீர்திருத்தம், சமூக நடைமுறை சீர்திருத்தங்கள், ஓய்வூதிய சிக்கல்கள், ஏன் ஆப்கானிலிருந்து படை வெளியேற்றத்துக்கே கொங்கிரஸ் அவையின் ஆதரவையும், நீதிமன்ற அனுமதியையும் எதிர்பார்த்திருக்கும் ஒபாமா நம்ம தலைவருக்கு ஈடா?

மகிந்தரை ஆசிய ஒபாமா என்பதை விட, முடிந்தால் ஒபாமா - முடிந்தால், அமெரிக்க மகிந்த ஆகட்டும்...

யாரு கிட்ட... ;)

பிற்சேர்க்கை - ஒபாமா சமூக வலைத்தளங்களை சரியான நுட்பத்தோடும் சாதுரியத்தோடும் தன் அரசியல் வெற்றிகளுக்குப் பயன்படுத்தியிருந்தார்.

ஆனால் எங்கள் அரசியல் மேதை எல்லாவற்றிலும் வெற்றிக் கொடி நாட்டிய பிறகு தான் சமூக வலைத்தளங்கள் பக்கம் இளையவரோடு இணைகிறார்.
வெற்றிகள் தானாகத் தேடி வரவேண்டும், தான் தேடிப் போகக்கூடாது என்பதை சிம்போலிக்காக இவரது ட்விட்டர் வருகையும் பேஸ்புக் பிரவேசமும் உணர்த்துகிறதோ?
Twitter.com/PresRajapaksa
மன்னர் யாரையும் இதுவரை தொடரவில்லை; ஒபாமாவைக் கூட, ஆனால் இவரைத் தொடர்வோர் 642.

எப்பூடி ;)

January 18, 2013

தமிழ் சாம்பியன்களும், 96 சாம்பியன்களும்


இந்த வருடத்தின் ஆரம்பத்திலிருந்து தனியார் தொலைக்காட்சியான CSN தொலைக்காட்சியில் (இதன் பின்னணி, பக்கபலம் பற்றி விமர்சனங்கள் உண்டு.. எனக்கும் கூட.. அது கிடக்கட்டும் ஒரு பக்கம்)வாராந்த விளையாட்டுத் தொகுப்பான Sports week என்ற நிகழ்ச்சியை வழங்கி வருகிறேன்.

சர்வதேச விளையாட்டுச் செய்திகளையும், அதிகமாக இலங்கையில் இடம்பெறும் உள்ளூர் விளையாட்டுச் செய்திகளையும் தொகுப்பாகத் தரும் இந்த வாராந்த நிகழ்ச்சியில் அந்த வாரம் இடம்பெற்ற மிக முக்கிய நிகழ்வை சிறப்பு விவரணத் தொகுப்பாகவும் வழங்கி வருகிறோம்.

அத்துடன் வாராந்தம் முடியுமானவரை தமிழ்பேசும் இலங்கை விளையாட்டு விற்பன்னர்கள், சாதனையாளர்கள் அல்லது வளர்ந்துவரும் நட்சத்திரங்களை சிறு பேட்டிகள் மூலம் அறிமுகப்படுத்தலாம் என்றும் நிகழ்ச்சித் தயாரிப்பாளரும் நானும் முடிவெடுத்தோம்.
தேடி அழைத்துவருவது தயாரிப்பாளரின் பொறுப்பு....


முதல் வாரம் - ஒரு துறுதுறுப்பான மெல்லிய இளம் பையனை (இளைஞனாக மாறிக்கொண்டிருக்கும்) அறிமுகப்படுத்தி "இவர் தான் தினேஷ் காந்தன். டென்னிஸ் வீரர்" என்றார் தயாரிப்பாளர்.

உண்மையாக அவரைப் பற்றி எதுவுமே தெரியாததால் "தம்பி உங்களைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்.. மன்னிக்கவும் உண்மையாக உள்ளூர் டென்னிஸ் போட்டிகள் பற்றி எதுவுமே தெரியாது" என்று கேட்டேன்.
"அண்ணா நான் தான் இப்போ இலங்கையின் தேசிய டென்னிஸ் சாம்பியன்" என்று தன்னடக்கமாகவே சொன்னார் அந்த இளைஞர்.
உண்மையாக மனவருத்தமாக இருந்தது.

தமிழ்பேசும் ஒரு தேசிய சம்பியனைத் தெரியாமல் இருந்திருக்கிறேன் என்று.
நிகழ்ச்சிக்காகப் பேட்டி எடுக்க முன்பதாக சிறிது நேரம் உரையாடிக்கொண்டிருந்தபோது பெருமையாக இருந்தது.


மட்டக்களப்பில் பிறந்த தினேஷ் காந்தன் சிறுவயது முதல் தனது மூத்த சகோதரர்களைப் போல ஆர்வத்துடன் டென்னிஸ் விளையாடிவந்தவர்.
சிங்களப் பயிற்றுவிப்பாளர் ஒருவர் இவர் திறமையைக் கண்டு கொழும்புக்கு அழைத்துவந்த பின்னர் ஒவ்வொரு வயதுப் பிரிவாக வெற்றிகளைக் குவித்து இப்போது தேசிய டென்னிஸ் சாம்பியன் ஆகியிருக்கிறார்.

சிறு வயதுப் பிரிவுகளில் கிடைத்த அனுசரணைகள் இப்போது தனக்குக் கிடைப்பதில் சிரமம் இருக்கிறது என்று கொஞ்சம் வருத்தப்பட்ட தினேஷுக்கு சர்வதேச மட்டத்தில் ATP தரப்படுத்தலில் இடம் பிடிக்குமளவுக்கு சர்வதேசப் போட்டிகளில் விளையாடவேண்டும். தரப்படுத்தலில் இணையும் வரை சொந்த செலவு தான். அதற்குப் பிறகு தான் இப்போது பெடரரும், நடாலும் குவிப்பது போல பணத்தையும் புகழையும் குவிக்கலாம்.

நம்பிக்கையோடு போராடும் தம்பி தினேஷ் காந்தனுக்கு வாழ்த்துக்கள்.

--------------
அடுத்த வாரம் ஒரு தமிழ் கராத்தே வீரனை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது.
நான் கல்விகற்ற கொழும்பு, பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரியிலே எனக்கு இளவல்.
வேணு சுதர்ஷன்... இப்போது ஜப்பானின் அங்கீகாரம் பெற்ற கராத்தே கறுப்புப் பட்டித் தேர்ச்சியில் தரநிலை மூன்றாம் இடம் பெற்றுள்ளார்.
இலங்கையின் முன்னணி கராத்தே பயிற்றுவிப்பாளாராக இருக்கிறார்.
பெருமையாக இருந்தது.

கடந்த வருடம் தேசிய கராத்தே சாம்பியன்ஷிப்பில் அதிக தங்கப்பதக்கங்களை அள்ளியவர்கள் இவரது மாணவர்கள் தான்.
சர்வதேசப் போட்டிகளில் மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் பெற்று சாதனை படைக்கும் வகையில் மாணவர்களைத் தயார் செய்யும் இலட்சியத்தோடு இருக்கிறார் சுதர்ஷன்.

--------------

கடந்த சனிக்கிழமை கொழும்பு NCC மைதானத்தில் ஒரு கண்காட்சி கிரிக்கெட் போட்டி இடம்பெற்றது.
இலங்கைக்கு உலகக்கிண்ணம் வென்று கொடுத்த அணிக்கு எதிராக இலங்கையை கிரிக்கெட்டில் பிரதிநிதித்துவப் படுத்திய முன்னாள் வீரர்கள் விளையாடும் போட்டி.

டிக்கெட் வெறும் 50 ரூபாய் தான்.

1996 ஆம் ஆண்டு இலங்கைக்கு பெருமை சேர்த்த அந்த ஹீரோக்களை மீண்டும் ஆடுகளத்தில் காணும் வாய்ப்பைத் தவற விட முடியுமா?



இன்னமும் Twenty 20 போட்டிகளில் தன் மாயவித்தைகளைக் காட்டிவரும் முத்தையா முரளிதரன், கடந்த வருடத்தின் சிறந்த நடுவர் விருது பெற்ற குமார் தர்மசேன (இப்போது தென் ஆபிரிக்காவில் இடம்பெற்றுவரும் தொடரில் நடுவராகக் கடமையாற்றுகிறார்) ஆகியோரைத் தவிர மற்ற வீரர்கள் எல்லோரும் வந்திருந்தார்கள்.

சேருகின்ற நிதி எல்லாம் சிறுவர் இருதய சத்திர சிகிச்சை நிதியத்துக்காக என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

நல்ல காரியத்துக்கும், இலங்கைக்கு இதுவரை கிடைத்த மிகப் பெரிய கிரிக்கெட் பெருமையைப் பெற்றுத் தந்த ஹீரோக்களைப் பார்ப்பதற்கும் (இனி அடுத்த உலகக் கிண்ணம் எப்போதோ?) மைதானம் நிறைய ரசிகர்கள்...
எதிரணியில் (Sri Lanka Legends) விளையாடிய பலரும் கூட இலங்கையின் புகழ் பெற்ற வீரர்களே..

ஆனால் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் மறைமுக எதிர்ப்போ என்னவோ சமரவீர அறிவிக்கப்பட்டிருந்தும் அணியில் இடம் பெறவில்லை. முதல் நாள் நடக்கவிருந்த கழகங்களுக்கு இடையிலான இறுதிப்போட்டியும் இதே நாளில் பக்கத்துக்கு மைதானத்தில் - SSC நடத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
அதேபோல சிரேஷ்ட வீரர்களான துலிப் மென்டிஸ் , லப்ரூய் போன்றோரும் இல்லை.

ஆனால் முன்பு அப்பா மூலமாக அறிந்த, கொஞ்சம் பார்த்தும் இருக்கிற ஹேமந்த தேவப்ரிய, சிதத் வெத்திமுனி போன்றோரின் சிறப்பான, stylishஆன துடுப்பாட்டப் பிரயோகங்களைப் பார்த்தது மிக மகிழ்ச்சி.
வயசு போனாலும் சிங்கங்கள் சிங்கங்களே...

அதற்குப் பிறகு தானே சாம்பியன் சிங்கங்கள் 16 ஆண்டுகளுக்குப் பிறகு களம் இறங்கின.
ஒரு நாள் கிரிக்கெட்டின் விதிமுறைகளை வசப்படுத்தி வெளுத்து நொறுக்கிய அதே சனத் - களு ஆரம்பத் துடுப்பாட்டம். கண்கொள்ளாக் காட்சி என்று யோசிக்கும்போதே மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினருக்கு அவசர அரசியல் பணி போலும், ஒரே ஓட்டத்துடன் வெளியேறினார்.

ஆஸ்திரேலியாவிலிருந்து வந்திருந்த அசங்க குருசிங்க கொஞ்ச நேரம் துடுப்பெடுத்தாடினார்.

அடுத்து நான் எப்போது பார்த்தாலும் பரவசப்படும் இலங்கையின் மிகச் சிறந்த துடுப்பாட்ட வீரராக எப்போதுமே நான் கருதும் அரவிந்த டி சில்வா...

அரவிந்தவும் களுவிதாரணவும் கொஞ்ச நேரம் அளித்த துடுப்பாட்ட விருந்துக்குப் பின்னர், அரவிந்த ஆட்டமிழக்க மைதானத்தின் பெருமளவு கோஷங்களுடன் ஆடுகளத்துக்குள் நுழைந்தவர் கப்டன் கூல் (இவர் தான் ஒரிஜினல் Captain Cool) அர்ஜுன ரணதுங்க...
அதே நடை.. அதே பருமன்.. ஆடுகளத்தில் வந்து அசைந்து ஆடியதும், அடித்தாடியதும் கூட அப்படியே..
இரண்டு பெரிய ஆறு ஓட்டங்களையும் அடித்து ரசிகர்களைப் பரவசப்படுத்தினார்.

முன்னதாக ரணதுங்க களத்தடுப்பில் ஈடுபட்டபோதும் , பந்துவீசி விக்கெட் எடுத்தபோதும் ரொம்ப ரசித்திருந்தோம்...
களு வழமையான அதே அதிரடியில் அரைச் சதம் பெற்ற பின் ஆடுகளத்திலிருந்து விலகி, ரொஷான் மகாநாமாவை உள்ளே அனுப்பிவைத்தார்.

எனக்கு மிகப் பிடித்த ஒரு கண்ணியமான கிரிக்கெட் வீரர். அதே நுணுக்கமான, அழகான ஆட்டப்பிரயோகங்கள்.. மகாநாமவையும் துடுப்பெடுத்தாடிப் பார்த்தது ஜென்ம சாபல்யம் போல..


எதிர்பார்த்ததைப் போல முன்னைய உலக சாம்பியன்களுக்கு வெற்றி.
மீண்டும் ஒரு உலகக் கிண்ணம் வென்றது போல ரசிகர்கள் மத்தியில் அப்படியொரு உற்சாகம்.
வந்த பயன் முடிந்தது.

முன்னதாக  சமிந்த வாசின் பந்துவீச்சையும் முன்னைய காலத்தை ரீவைண்ட் செய்து பார்த்தது போல பார்த்த அனுபவம் ரசனை.

வெளியே வருகின்ற நேரம், இலங்கை அணி அண்மைக்காலத்தில் தவற விட்ட மூன்று உலகக் கிண்ணங்களும் - குறிப்பாக கைகளுக்குள் வந்தும் கடைசியாகத் தவறவிட்ட உலக T20 கிண்ணம் மனதில் வந்து போனது..... ம்ம்ம்ம்ம்ம்
இனி எப்பவோ?

--------
அடுத்த உலகக் கிண்ணம், இலங்கையின் கிரிக்கெட் எதிர்காலம் பற்றிப் பேசுகின்றபோது இலங்கையின் எதிர்கால கிரிக்கெட் வீரர்களில் ஞாபகம் வரும் ஒருவரை நேற்று தற்செயலாக சந்தித்திருந்தேன்...
அவர் திமுது கருணாரத்ன.

என்னை அறிமுகம் செய்துகொண்டு கொஞ்சம் பேசிய வேளையில் அவர் பற்றி நான் இறுதியாக எழுதிய தமிழ் மிரர் கட்டுரையில் குறிப்பிட்ட விடயத்தையும் சொன்னேன்.
மிக மனம் திறந்து பேசிய திமுது சொன்ன விடயங்களைத் தனியொரு இடுகையாகத் தருகிறேன்.

இறுதியாக நான் எழுதியிருக்கும் கட்டுரை...


இலங்கைக்கு தோல்வியும் கேள்வியும்; அவுஸ்திரேலியாவுக்கு வெற்றியும் வினாவும்



January 14, 2013

கண்ணா லட்டு தின்ன ஆசையா



சிரிக்க வைக்கப் போகிறோம் தயாராக வாங்கோ... என்று சந்தானம் அழைத்தபிறகு, போதாக்குறைக்கு இணையம் மூலமாகவே கடந்த இரண்டாண்டுகளில் எங்கள் இதயம் கவர்ந்த பவர் ஸ்டார் இருக்கும்போது கேட்கவா வேண்டும்?

இரட்டை அர்த்தம் இல்லாமல், சலிக்கவைக்காமல், தொய்வில்லாமல் ஒரு முழுநீள நகைச்சுவைப் படத்தைக் கொடுப்பதும் சவாலான விடயம் தான்.
ஆனால் சாதித்துக் காட்டியிருக்கிறார் சந்தானம் ஒரு தயாரிப்பாளராக.

மணிகண்டன் இயக்குனர். அவருக்குப் பெரிதாக வேலையில்லை - காரணம் 30 ஆண்டுகளுக்கு முன்னர் பாக்யராஜ் இயக்கி நடித்து வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற 'இன்று போய் நாளை வா' படத்தின் ரீமேக் தான் இந்த 'கண்ணா லட்டு தின்ன ஆசையா'

காலத்துக்குப் பொருத்தமாக மட்டும் சில மாற்றங்கள் செய்து, பக்குவமாகப் பாத்திரங்களைத் தெரிவு செய்து இளைஞரின் இந்தக் கால டேஸ்ட் அறிந்து பவர் ஸ்டாரையும் இறக்கி ஹிட் அடித்திருக்கிறார்கள்.

இன்று போய் நாளை வா போலவே ஒரு அழகான பெண்ணை வட்டமடிக்கும் நான்கு வாலிபர்கள்.அவளை அடைய இவர்கள் படாத பாடு படுவதை நகைச்சுவையாக சொல்கிறது படம்.

பொதுவாகவே இப்படியான தழுவல்கள் அல்லது ரீ மேக்குகள் என்றால் பழைய படத்தோடு ஒப்பிட்டுப் பார்ப்பது தவிர்க்க முடியாதது. இதுவே புதிதாக வரும் படங்களின் மீது அழுத்தத்தைக் கொடுத்து பழசு சிறப்பானதாகத் தெரியும்.
க.ல.தி.ஆசையாக்கும் அதே நிலை தான்.

திரைக்கதை சக்கரவர்த்தி பாக்யராஜை யாராவது நெருங்க முடியுமா? அவரது இ.போ.நா.வாவில் பாக்யராஜ் மீது ஒரு பரிதாபம் தானாக ஒட்டி, அவருக்கு ராதிகா கிடைக்க மாட்டாரா என்ற ஏக்கத்தை எமக்கு ஏற்படுத்தும்.



இங்கே அந்த செண்டிமெண்ட் மிஸ்ஸிங்... ஆனால் அதையெல்லாம் தூக்கி சாப்பிட்டு சிக்சர், பவுண்டரிகள் அடித்து க.ல.தி.ஆசையாவைக் கரை சேர்க்கிறார்கள் சந்தானமும் பவர் ஸ்டாரும்.

ஆரம்பிக்கும்போதே பலருக்கு நன்றிகளுடன் தான் ஆரம்பம்..
முக்கியமாக இயக்குனர் K.பாக்யராஜுக்கு நன்றி சொல்லி பிரச்சினையைத் தீர்த்துவிட்டார்கள்.

படம் ஆரம்பிக்கும் போதே N.சந்தானம் வழங்கும் என்ற எழுத்துக்கள் தோன்றும்போதே கரகோஷங்கள்... பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் என்ற பெயர் வரும்போது எழுந்த கரகோஷம் இருக்கே... அட அட அட.. மனுஷன் நின்று சாதிச்சிட்டார்.
இவ்வளவுக்கும் பவர் ஸ்டாரின் எந்த ஒரு படமும் இலங்கையில் திரையரங்குகளில் திரையிடப்படவில்லை.

ஹீரோவா அப்பாவியா சேது என்று ஒரு புதுமுகம் அறிமுகமாகிறார். (பையன் வைத்தியராம்.. சேதுராமன் தான் முழுப்பெயர் என்று அறிந்தேன்)
ஆனாலும் சீனியர்கள் சந்தானம், பவர் ஸ்டாரின் பெயர்களுக்குப் பிறகே சேதுவின் பெயர் திரையில்.
வசனங்கள், கலாய்த்தல், கடிகளில் சந்தானம் புகுந்து விளையாடுகிறார் படம் முழுவதுமே..

"பல் இருக்கிறவன் பட்டாணி சாப்பிடலாம்.. ஆனால் இப்பிடி பல் இருந்தால் பாறாங்கல்லையே உடைக்கலாம்"பவர் ஸ்டாரின் பல்லுக்கு அடிக்கும் கமென்ட் முதல், பவரின் முகத்தையே பப்பாளி என்று நக்கல் அடிப்பது இன்னும் கிடைக்கும்போதெல்லாம் அப்பாவி பவர் ஸ்டாரை வாருவது என்று கலக்குகிறார் சந்தானம்.
சந்தானம் காட்டில் (மட்டும்) இப்போ கன மழை போலும்....
"எத்தனை காலத்துக்குத் தான் மற்றவங்க காதலையே ஊட்டி வளர்க்கிறது? எனக்கும் ஊட்டில்லாம் போய் டூயட் பாட ஆசை வராதா மச்சான்?' கலக்கல்..

ஆனால் இப்படிக் கலாய்க்கப்படும் நேரமெல்லாம் பச்சைக் குழந்தை போல அப்பாவி லுக்கைக் காட்டுவதாலேயே பரிதாபத்தை வெளிப்படுத்தி மனதை வென்றுவிடுகிறார் பவர் ஸ்டார்.
அவரது வழமையான அலப்பறைகளுக்குப் படத்திலே பொருத்தமான பாத்திரம்.. அலட்டிக்கொள்ளாமல் அந்தப் பார்வை, மீசை, உடல் அசைவு என்று சிரிக்கவைக்கிறார்.
கூடவே அவரது அண்ணன், அப்பா ஆகிய பாத்திரங்களும் சேர்ந்து ஜாலியோ ஜிம்கானோ தான்.

புதுமுக ஹீரோ சேது அழகாக இருக்கிறார். ஆனால் பாவமாகத் தெரிகிறார். பின்னே, சந்தானமும், பவரும் அடிக்கிற லூட்டிக்கு ரஜினி, கமலே நடித்திருந்தாலும் கூட எடுபட்டிருக்காது போல.

கதாநாயகி விஷாகா அழகு தான்.. நடித்தும் இருக்கிறார். எந்த நேரமும் இதழோரம் ஒரு சிரிப்பு.. ஒரேயொரு பாடலில் தாராளமாகக் காட்டுவதைத் தவிர அடக்கமாகவும் அழகாகவும் இருக்கிறார்.

எங்கேயோ பார்த்த முகமாய் இருக்கே என்று பார்த்தால் சாமர்த்தியமாக தேவதர்ஷனி பேசும் வசனத்திநூடாக சொல்லிவிடுகிறார்கள்..
த்ரிஷாவோடு ஒரு விளம்பரத்தில் டல் திவ்யாவாக வந்து தூள் திவ்யாவாக வருவாரே, அவர் தான்.

VTV கணேஷ், டான்ஸ் மாஸ்டர் சிவஷங்கர், கோவை சரளா, தேவதர்ஷினி என்று ஒரு பட்டாளமே சிரிக்கவைக்க..
இன்று போய் நாளை வாவின் பாத்திரங்களையே கொஞ்சம் மாற்றியுள்ளார்கள்.

ஆனால் இங்கே மேலதிகமாக சிம்புவையும் கௌதம் வாசுதேவ மேனனையும் கொண்டுவந்து கலர் ஏற்றியுள்ளார்கள்.
சிம்பு தனது இமேஜை உயர்த்திக்கொள்ள கிடைத்த சிறு இடம் பயன்படுகிறது.
தமனின் பின்னணி இசையும் பாடல்களும் பட ஓட்டத்துடனேயே பயணிக்கத் துணை வருகின்றன.

ஆசையே அலை போலே, அடியே அத்தை மகளே இரண்டும் ஆட வைக்கும் ராகம் என்றால்.. நான் உன்னை வாழ்த்திப்பாடுகிறேன் ரீ மெக்கான லவ் லெட்டர் கலக்கல் ரகம்...
M.பாலசுப்ரமணியத்தின் ஒளிப்பதிவை இந்தத் திரைப்படத்திலும் (முன்னதாக ஒரு கல் ஒரு கண்ணாடி, நீர்ப்பறவை)  ரசித்தேன். இவரது plus point அந்த விரிந்து பரந்த Long shot & Top angle அன்று நினைக்கிறேன்.

நடன இயக்குநர்களைப் பற்றியும் இங்கே சொல்லியே ஆகவேண்டும்.
காரணம் சந்தானத்தையும் பவர் ஸ்டாரையும் ஆட வைத்து அதையும் ரசிக்கச் செய்துள்ளார்களே.
மூவரினதும் அறிமுகங்கள், அதிலும் பவரின் அறிமுகம் கலக்கல்.
அதேபோல மூவரும் வீட்டில் நுழைய எடுக்கும் முயற்சிகளில் பவர் ஸ்டாரின் நடனமும், சந்தானத்தின் பாட்டும் வயிறு வலிக்க சிரிக்கவைக்கின்றன.

ஒவ்வொரு காட்சிக்கும் வாய்விட்டு சிரிக்க, வசனங்களைக் கேட்டு கேட்டு ரசிக்க, கவலைகளை மறக்க நிச்சயமாக நம்பிப் பார்க்கலாம் - கண்ணா லட்டு தின்ன ஆசையா
(முக்கியமாக பாக்யராஜின் ஒரிஜினலோடு ஒப்பிடாமல் பார்த்தால்)
முக்கியமாக இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாமலே நகைச்சுவை விருந்தளித்தமைக்கு பெரிய பாராட்டுக்கள்.

கண்ணா லட்டு தின்ன ஆசையா - டபிள் ஸ்பெஷல் (சந்தானம் & பவர் ஸ்டார்) பொங்கல் விருந்து 


அனைத்து நண்பர்களுக்கும் இனிய தைப்பொங்கல், தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்.

January 12, 2013

அலெக்ஸ் பாண்டியன்



சில சப்பைக் கதைகளைக் குப்பையாய் எடுத்து எப்படியாவது ஒப்பேற்றிவிடலாம் என்று யோசிக்கின்ற இயக்குனர்களுக்கு ஹீரோவின் மாஸ், ஹீரோயினின் கவர்ச்சி, ஹிட் ஆன பாடல்கள், நகைச்சுவை நடிகரின் விளாசல் form ஆகியன துணை இருக்கும்.

இயக்குனர் சுராஜின் முன்னைய திரைப்படங்கள் அவரது 'பெருமை' சொல்லக் கூடியவை, மூவேந்தர், தலைநகரம், மருதமலை, படிக்காதவன் & மாப்பிள்ளை.
இந்தப் படங்கள் எல்லாம் 'எப்படி; என்று நம்ம எல்லோருக்குமே தெரியும்.. ஆனாலும் கலக்கல் காமெடி இந்தப் படங்களில் எல்லாம் இருந்தது.

அலெக்ஸ் பாண்டியனில் கார்த்தி - வழமையான கார்த்தி. தாடி, சண்டை, காமெடி.

என்ன இதிலே கையில் ஒரு tattoo அடித்திருப்பதாலோ என்னவோ எந்த ஒரு வில்லன் அடியாட்களும் இவரை சும்மா அசைத்துக்கூடப் பார்க்க முடியாமல் இருக்கிறது.
ஹீரோவை விட உயரமான அனுஷ்கா கவர்ச்சி காட்ட முயல்கிறார். ஆனால் கிழவியாகத் தெரிகிறார்.

ஒரு பாட்டும் மனசில் நிற்கவில்லை; தேவி ஸ்ரீ பிரசாத் வழமை போலவே போட்டுக் குத்தி எடுத்ததை தாறுமாறாகக் குலுக்கி ஆடி ஒரு வழி பண்ணுகிறார்கள்.


சந்தானம் தான் படத்தின் ஹீரோ. படத்தைத் தனியாளாக நின்று எல்லாப் பக்கமும் அடி வாங்கி (அண்மைக்காலமாக மகேந்திரசிங் தோனி இந்திய அணிக்காக ஒருநாள் இனிங்க்ஸ் ஆடுவது போல) , குதம் இரண்டு, மூன்று தரம் கிழிந்தும் கூட கொஞ்சம் ரெட்டை அர்த்தம், நிறைய கலக்கல் பதிலடிகள், கலாய்த்தல்கள் சகிதம் முடிந்தவரை முயன்றிருக்கிறார்.
சண்டையும் கொஞ்சம் போட்டிருந்தால் அவர் தான் படத்தின் ஹீரோ.

A4 காகிதத் தாள் ஒன்றை எடுத்து எட்டாய்க் குறுக்கு வாட்டாய் மடித்துக் கிழித்து வரும் ஒரு கீலத்தில் எழுதக் கூடிய கதை.
படத்தின் இசை வெளியீடு, ட்ரெய்லர் இவற்றுக்கு மினக்கெட்ட அளவுக்குக் கொஞ்சம் கதையை மெருகேற்ற முனைந்திருக்கலாம் என்று சலிக்க வைக்கிற சப்பைக் கதை.

விசு, சுமன், பிதாமகன் மகாதேவன், போதாக்குறைக்கு ஹிந்தி மிலிந்த் சோமன்.... அவ்வ்வ்வவ்
இத்தனை பேர் இருந்தும் அசைக்க முடியாத ஆளாக ஹீரோ அலெக்ஸ் பாண்டியன்.
பேரை மட்டும் ரஜினியிடம் இருந்து சுட்டால் போதுமா?
கதையும் ஒழுங்கான திரைக்கதையும் வேண்டாம்?

பெயர்களின் எழுத்தோட்டம் ஆரம்பிப்பதே மகா நீளமான ஒரு ரயில் சண்டைக் காட்சியுடன்.... எப்படா அடிச்சு முடிப்பாங்க என்று இருக்க, முதல் பாதி முழுக்க சந்தானத்தின் மூன்று 'கும்' சகோதரிகளுடன் கார்த்தி அடிக்கும் இரட்டை அர்த்த, நெளிய வைக்கும் லூட்டிகளுடன்...

அட கதையின் மெயின் டிரக்குக்கு வரச் சொன்னால் இன்னொரு கொட்டாவி விட வைக்கும் வாகன சண்டை..

சுமோக்கள், பஜெரோக்கள், லான்ட் ரோவர்களைஎல்லாம் துவைத்து எடுக்கிறது சந்தானம் வாங்கிய புதிய டப்பா வான். (இதுக்குப் பிறகு நான் ஐந்தாண்டுகளாக வைத்திருக்கும் என் வானைப் பார்க்க பெருமையா இருக்கு. யாராவது ஒரு அமைச்சர் பட்டாளத்துடன் துணிந்து என் வாகனத்தில் இருந்து மோதலாம் போல)

லொஜிக் கொஞ்சம் மீறி எடுத்த படங்கள் பார்த்திருக்கிறேன், லொஜிக்கே இல்லாத படங்கள் கூட பார்த்திருக்கிறேன்.
ஆனால் இப்படியொரு மஜிக் படத்தைப் பார்த்ததே இல்லை மக்கள்ஸ்...
இதுக்கு மேல சொன்னா அழுதுருவேன்.

ஒன்றே ஒன்று சொல்லிட்டு முடிச்சிடலாம்...
என்னுடைய இந்த சின்ன வயசுக்குள்ள, எழுபத்தைந்து வருட சினிமாக்களில் லட்சம் தடவை பார்த்த மகா உன்னதக் காட்சியை மீண்டும் இயக்குனர் சுராஜின் புண்ணியத்தால் பார்க்கக் கிடைத்தது...
நீண்ட நேரம் தண்ணீருக்குள் மூழ்கடிக்கப்பட்டு, கைகள் கட்டப்பட்ட ஹீரோவை வில்லன்கள் விளையாட வெளியே எடுத்தால் கண்ணை திறந்து பார்ப்பாராம்; அடியாட்கள் அவரைத் தொடர்ந்து தாக்கக் கஷ்டப்படும் ஹீரோயின் "ஆம்பிளையா இருந்தா அவிழ்த்து விடுங்கடா அவரை" என்கிறார்.
அதுக்குப் பிறகு தான் என்ன நடக்கும் என்று வில்லன்களுக்கும் தெரியும்... எங்களுக்கு சூனியம்.
இந்த ட்ரிகரைக் கொஞ்சம் இறுக்கி அழுத்தியிருக்கக் கூடாதா ராசா?


இதுக்குள்ள மனோபாலாவை வச்சு 'வேட்டைக்காரனுக்கு' நக்கல் வேறு... தேவை தான்.

கார்த்தி இப்படியே இன்னொரு படம் நடித்தா தொடர்ந்து ப்ரூவுக்கு விளம்பரங்களும், "என்னா மாமா சௌக்கியமா?" என்று அண்ணாவின் பட விழாக்களுக்கு விளம்பரங்களும் செய்துகொண்டு ஜாலியாத் திரியலாம்...


படம் முடிஞ்சுது எழும்பி ஓடிடலாம்னு பார்த்தா கொடுமை 'Bad boy' என்று ஒரு வணக்கம் பாட்டு வேறு.

அய்ய்ய்ய்யய்ய்ய்ய்யய்ய்யொ (சந்தானம் ஸ்டைலில்) சத்தியமா முடியலடா சாமி....

அலெக்ஸ் பாண்டியன் - அலுப்பு + அறுவை 


பி.கு - திரையரங்குகளில் எவ்வளவு தான் படத்துக்கு முன்பும், இடைவேளையின்போதும் புகைப்பிடித்தலுக்கு எதிராக மனதில் பதிகிற மாதிரி விளம்பரம் போட்டாலும், இடைவேளையின்போது கதவைத் திறந்தால் மூச்சே முட்டுகிற மாதிரி புகை மண்டலம்.
நண்டு, சுண்டான் எல்லாம் கையிலும் வாயிலும் எரியும் துண்டுகளோடு.
உங்களையெல்லாம் அலெக்ஸ் பாண்டியனை ஆறேழு தடவை புகைச்சுக்கொண்டே படம் பாருங்கடா என்று வதைச்சு எடுக்கவேண்டும்.

January 10, 2013

மஹேல: இலங்கையின் மறக்கமுடியாத தலைவர்

இலங்கை அணியின் தலைவராக இரு வேறு காலகட்டங்களில் தலைமை தாங்கிய மஹேல ஜெயவர்த்தன இரண்டாவதும் இறுதியுமான தடவையாகத் தனது தலைமைப் பதவியிலிருந்து விலகிக் கொள்கிறார்.

இலங்கை - அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான சிட்னி டெஸ்ட் போட்டியின் பின்னதாக மஹேல தனது டெஸ்ட் தலைமைப் பதவியிலிருந்தும், அதன் பின்னர் இடம்பெறவுள்ள அவுஸ்திரேலிய அணிக்கெதிரான ஒருநாள் தொடருக்குப் பிறகு ஒருநாள் தலைமையிலிருந்தும் விலகுவதாக இந்த இரண்டாம் முறை தலைமைப் பதவியை ஏற்கும்போதே மஹேல அறிவித்திருந்தார்.

தலைவராகக் கடுமையான சவால்களை எதிரணியிடமிருந்து மட்டுமல்லாமல் கிரிக்கெட் சபையின் அரசியலிலிருந்தும் மஹேல எதிர்கொண்டிருந்தார். அப்படியிருந்தும் இலங்கை கிரிகெட் அணியின் மிகச் சிறந்த தலைவராக எப்போதும் கருதப்படக்கூடிய அர்ஜுன ரணதுங்கவுக்கு அடுத்தபடியாக இலங்கைக்குக் கிடைத்த மிகச் சிறந்த தலைவராக மஹேல ஜெயவர்த்தன இருக்கிறார்.

தரவுகளையும் பெறுபேறுகளையும் வைத்து இலங்கையின் தலைவர்களை நாம் பார்த்தால்... (இப்போது நடைபெற்று வரும் சிட்னி டெஸ்ட் போட்டியைக் கருத்தில் எடுக்கவில்லை)



 


இலங்கையின் மிகக் கடினமான காலகட்டத்தில் தலைமை தாங்கிய மிகச் சிறந்த தலைவராக மஹேலவை நாம் கருதலாம். மஹேல இலங்கை அணியில் இளவயது வீரராக அணிக்குள் வரும்போதே எதிர்கால அணித்தலைவர் என்ற எதிர்பார்ப்பு இவர் மீது வைக்கப்பட்டிருந்தது. இளம் வயதிலேயே அணியின் உப தலைவராக நியமிக்கப்பட்டார். ஆனால் அதன் பின்னர் துடுப்பாட்டம் சற்றுத் தளம்ப ஆரம்பிக்க, உப தலைமைப் பதவி பாரத்தை நீக்கிக் கொண்டார்.

மீண்டும் 2006இல் தலைவராக ஆரம்பித்த மஹேல, முதலாவது டெஸ்ட் போட்டியிலேயே பங்களாதேஷுக்கு எதிராக வெற்றியைப் பெற்றுத் தந்து மங்கலகரமாக ஆரம்பித்து வைத்தார். (முரளிதரனின் 1000ஆவது சர்வதேச விக்கெட்டும் அதே போட்டியிலேயே வீழ்த்தப்பட்டது)

அடுத்து இலங்கையில் வைத்து பாகிஸ்தானிடம் தோல்வி. எழுந்த விமர்சனங்களுக்கு மஹேல பதிலளிக்க எடுத்துக்கொண்ட களம், இங்கிலாந்து. முதலாவது போட்டியில் இனிங்சினால் தோல்வியடைய இருந்த இலங்கை அணியைத் தனியொருவராக, தலைவராக நின்று காப்பாற்றி வெற்றி தோல்வியற்ற நிலையைப் பெற்றுக் கொடுக்கிறார் மஹேல. முதலாவது இனிங்சில் 61. இரண்டாவது இனிங்சில் 119.

இரண்டாவது டெஸ்ட்டில் இலங்கை அணி தோற்றாலும், மூன்றாவது டெஸ்ட்டில் வென்று இலங்கை தொடரை சமப்படுத்திப் பெருமையோடு நாடு திரும்ப - இலங்கை அணியின் புதிய பொற்காலத்தை உருவாக்கும் ஒருவராக மஹேல கணிக்கப்படுகிறார். அதை நிரூபிப்பது போலவே மஹேலவின் தலைமையில் வெற்றிகள் கிடைத்தன.


ஆசியக் கிண்ண வெற்றியும், டெஸ்ட் போட்டிகள், ஒருநாள் போட்டிகளின் வெற்றிகளும் (இங்கிலாந்தை இங்கிலாந்து மண்ணில் வைத்தே 5-0 என்று வெற்றிகொண்டது உட்பட) இவற்றுக்கு எல்லாம் சிகரம் வைப்பது போல 2007ஆம் ஆண்டின் உலகக் கிண்ணத்தில் இலங்கையின் அதிரடியும் குறிப்பாக மஹேல ஜெயவர்த்தன அபாரமாக ஆடி வென்று கொடுத்த அரையிறுதி ஆட்டம் இன்னும் யார் மனதிலும் நீங்காது.

இலங்கை அணி இறுதிப் போட்டிவரை வந்தது பலருக்கும் இலங்கை அணி மீது பெரிய எதிர்பார்ப்பையும் நம்பிக்கையையும் கொடுத்திருந்தது. துடுப்பாட்டத்தைத் தலைமைத்துவ அழுத்தம் பாதிக்கவில்லை எனும் அளவுக்கு அணிக்கான தனது துடுப்பாட்டப் பங்களிப்பையும் வழங்கியிருந்தார். அணியின் பெறுபேறுகளும் மற்றைய அணிகளுடன் ஒப்பிடுமளவுக்கு மிகச் சிறப்பாகவும் ஒற்றுமையாகவுமே இருந்து வந்தன.

எனினும் அர்ஜுனவுக்குப் பிறகு இலங்கை அணியில் தலைவர்களுக்கு இருந்துவந்த பெரிய சிக்கலான கிரிக்கெட் சபையுடனான பிரச்சினைகளும், அரசியல் நேரடி, மறைமுகத் தலையீடுகளும் மஹேலவையும் தொல்லைப்படுத்தியே இருந்தன.

பொதுவாகவே மென்மையான அணுகுமுறை உடையவராக மஹேல இருந்தாலும், அவர் தனது தலைமைத்துவத்திலும் பேச்சு அணுகுமுறைகளிலும் நேர்மையாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் இருந்துவந்த ஒருவர்.

2009இல் இலங்கைக்கு வந்திருந்த இந்திய அணி, முதல் நான்கு ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும் இலங்கை அணியை வெற்றி கொண்ட நேரத்தில் மஹேல முதல் தடவையாகக் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டிருந்தார். ஆனாலும் தலைமைப் பதவியைக் காவுகொள்ளும் அளவுக்கு அவை எவையுமே இருக்கவில்லை.

ஆனாலும் ஐந்தாவது போட்டியில் இலங்கை அணி ஓர் ஆறுதல் வெற்றியைப் பெற்ற பின்னர் அனைவரும் ஆச்சரியப்படும் விதத்தில் மஹேல ஜெயவர்த்தன தாம் தலைமைப் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

புதிய தலைவராக குமார் சங்கக்கார பொறுப்பெடுத்த பின்னர் ஒரு சிரேஷ்ட வீரராக ஆலோசனைகளில் மஹேலவின் பங்களிப்பு புதிய தலைவருக்கு மிகப் பயனுடையதாக அமைந்ததோடு துடுப்பாட்ட வீரராக மேலும் பரிணமித்தது.

அணிக்காக எதையும் செய்யக் கூடியவர் என்பதை மஹேல நிரூபித்த மற்றொரு சந்தர்ப்பம் 2011 உலகக்கிண்ணம். சங்கக்காரவைப் பலப்படுத்த மஹேல அனுபவம் குறைவான இலங்கை அணியின் உபதலைவராகவும் பணியாற்ற சம்மதித்தார்.



இலங்கை கிரிக்கெட்டின் விதி... உலகக்கிண்ணத்தின் இன்னொரு இறுதிப்போட்டித் தோல்வி... அதைத் தொடர்ந்து எழுந்த சர்ச்சைகள் அடங்க முன்னரே சங்கக்கார தலைமைப் பதவியிலிருந்து விலகிக்கொண்டார்.

அதற்குப் பின் இலங்கை கிரிக்கெட்டின் குழப்பமான காலம்... டில்ஷானின் தலைமை, உறுதியற்ற அணி, வெற்றிகள் வறண்டு போயின... தென் ஆபிரிக்காவிலே கன்னி டெஸ்ட் வெற்றியொன்றைப் பெற்றாலும், அதன் பின்னர் டில்ஷான் பதவி விலகிக் கொண்டார்.

தலைமைத்துவத்துக்கான நீண்ட காலத் தேடலுக்கு முன்னதாக இலங்கை அணியை ஸ்திரப்படுத்தவும், புதிய ஒரு தலைவரை இனம் காணவும் மீண்டும் இலங்கைக்குக் கிடைத்த விடை/தீர்வு மஹேல மட்டும் தான்...

அணிக்காக முள் முடியை மீண்டும் தரித்துக்கொண்ட மஹேலவுக்கு முதலாவது பணியிலேயே பெரும் பாராட்டுக்கள். அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற முக்கோணத் தொடரில் பெற்ற வெற்றிகளும், இறுதிவரை இலங்கை அணி வந்ததும் மஹேலவின் தலைமையில் மீண்டும் இலங்கை அணி எழுச்சி பெறும் என்ற நம்பிக்கையை அளித்திருந்தன.

தான் மீண்டும் தலைமை தாங்கிய முதலாவது போட்டியிலேயே இங்கிலாந்துக்கெதிராக 180 ஓட்டங்களையும் அபாரமாகப் பெற்ற மஹேல இலங்கைக்கு வெற்றியையும் பெற்றுக்கொடுக்கிறார். மீண்டும் வெற்றியுலா...

ஆனால், 2013ஆம் ஆண்டின் ஆரம்ப அவுஸ்திரேலியத் தொடருடன் தான் மீண்டும் தலைமைப் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தே பதவியேற்ற மஹேல அணியை ஒற்றுமைபடுத்தியும் இருந்தார்; வெற்றிகளையும் இலங்கைக்குப் பெற்றுக் கொடுத்திருந்தார்; எதிர்காலத்துக்கான இலங்கை அணியொன்றையும் உருவாக்கியுள்ளார். ஆனால் இதற்கெல்லாம் விலையாக இவரது துடுப்பாட்டம் அண்மைக்காலத்தில் தடுமாறுகிறது... குறிப்பாக வெளிநாடுகளில்.

அத்துடன் கிரிக்கெட் சபையுடனும் தெரிவாளர்களுடனும் இவரது நேரடி, மறைமுக மோதல்கள் நிச்சயமாக நிம்மதியான தலைமைத்துவ காலத்தை வழங்கியிருக்காது.

அண்மையிலும் கூட கிரிக்கெட் சபை மீது தான் நம்பிக்கை இழந்ததாகப் பகிரங்கமாகவே அறிவித்திருந்தார். 

அத்துடன் பல இளம் வீரர்களை நம்பிக்கையாக அணியில் சேர்த்து அவர்களுக்கு ஒரு தந்தை போல, மூத்த சகோதரன் போல வழிகாட்டியாக நம்பிக்கை கொடுத்து உருவாக்கி விட்டவர். முரளி, வாஸ் ஆகியோருக்குப் பிறகு இலங்கை என்ற கேள்விக்குறிக்கு விடையாக மஹேல கொடுத்த நம்பிக்கை மூலமாக ஹேரத், மாலிங்க, குலசேகர இன்னும் மஹேல கண்டுபிடித்த அகில தனஞ்செய என்று பலர் உருவாகியுள்ளார்கள்.

ஆனால், மஹேலவின் இரண்டாவது கட்டத் தலைமையின் மிக உச்சபட்ச தருணம் இலங்கையில் இடம்பெற்ற உலக Twenty 20 போட்டித் தொடர். இலங்கைக்கான மிகப் பெரிய வாய்ப்பாக இந்த உலகக் கிண்ண வெற்றி அமைந்திருக்கும்.

மஹேல ஒரு தலைவராக மிகச் சிறப்பாக அணியை வழிநடத்தி, துடுப்பாட்ட வீரராகவும் பிரகாசித்திருந்தார். இவரது தலைமைத்துவம் பல கட்டங்களில் வியந்து பாராட்டப்பட்டது.

ஆனால் இறுதிப் போட்டியின் தோல்வி எல்லோரையுமே நிலைகுலைய வைத்தது.

அதைவிட, மஹேல உடனடியாகவே Twenty 20 தலைமைப் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். முதலிலே தீர்மானித்திருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இப்போது டெஸ்ட் தலைமையிலிருந்தும் அதன்பின்னர் இடம்பெறவுள்ள ஒருநாள் தொடரின் பின்னர் முழுமையாகவும் தலைமையிலிருந்து விடைபெறுகிறார் மஹேல.

அவர் விட்டுச் செல்லும் நிலையிலிருந்து மத்தியூஸ் அணியைத் தொடர்ந்து அழைத்துச் செல்வாரா என்பது ஒருபக்கம், மஹேல தனியொரு துடுப்பாட்ட வீரராக எவ்வளவு காலம் தொடரப் போகிறார் என்பது மறுபக்கம் என்று கேள்வி தொக்கி நிற்கிறது.

ஆனால், ஒரு சிரேஷ்ட வீரராக இனி தலைவராகப் பயணிக்க இருக்கும் மத்தியூசுக்கு இவரது அனுபவ ஆலோசனைகள் எவ்வளவு தேவைப்படுமோ, அதேபோல இளம் துடுப்பாட்ட வீரர்களுக்கும் மஹேல நல்ல வழிகாட்டியாக இருக்கப் போகிறார்.

*தமிழ் மிரருக்காக நான் எழுதிய கட்டுரை. இங்கே மீள் பிரசுரம் செய்துள்ளேன் 

மஹேல: இலங்கையின் மறக்கமுடியாத தலைவர்


ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner