August 31, 2010

இலங்கைக்கு விடைகள்,இந்தியாவுக்கு வினாக்கள் - முக்கோணத் தொடர்

சனிக்கிழமை - இலங்கையில் நடைபெற்ற முக்கோணத் தொடரின் இறுதிப் போட்டி.
இத் தொடர் ஆரம்பிக்கும்போதே அதிக பலமுள்ள அணியாகத் தெரிந்த இலங்கை அணி மிகப் பொருத்தமாக வெற்றி ஈட்டிக் கொண்டது.




எதிர்பார்த்ததை விட இலகுவான வெற்றி.
இறுதிப் போட்டியொன்றில் ஒரு அணி 74 ஓட்டங்களால் தோற்கிறது என்று பார்த்தால் வென்ற அணியின் திறமையை விட தோற்றுப் போன அணியின் பலவீனங்களே பெரிதாகத் தெரியும்.
இங்கும் அதுவே உண்மையாகிறது.


இரு அணிகளுக்கிடையிலும் தொடர் முழுவதும்,இறுதிப் போட்டியிலும் தெரிந்த வித்தியாசங்கள்..


அனுபவம்..
இந்திய தங்கள் முக்கியமான நான்கு வீரர்கள் இன்மையை அதிகமாக உணர்ந்திருக்கும்.


இணைப்பாட்டத்தின் முக்கியத்துவம்.
சேவாக்கை மட்டுமே இந்தியா நம்பியிருக்க மற்றவர்கள் கை விரித்திருந்தார்கள்.
இலங்கையின் சிரேஷ்ட வீரர்கள் முக்கியமான தருணங்களில் இணைப்பாட்டங்களை உருவாக்குவதில் அக்கறை எடுத்தார்கள்.


ஆரம்பப் பந்துவீச்சாளர்களுக்குத் துணையாக இன்னொரு விக்கெட்டுக்களை வீழ்த்தக் கூடிய வேகப் பந்துவீச்சாளர்.
இலங்கை அணிக்கு திசர பெரேரா தொடர் முழுவதிலும் ஒரு ஹீரோ.,அதிலும் இந்திய அணிக்கெதிராக மட்டும் அவர் காட்டும் அசகாய சூரத்தனம் வியப்பாக இருக்கிறது.
இறுதிப் போட்டியிலும் திசர கைப்பற்றிய மூன்று விக்கெட்டுக்கள் முக்கியமானவை.


இந்திய அணி முனாப் படேலை தாமதமாகப் பயன்படுத்த ஆரம்பித்தது.. நியூசீலாந்துடன் முனாப்பின் பந்துவீச்சு பெரிதும் கை கொடுத்தது.ஆனாலும் நெஹ்ராவும்,பிரவீன் குமாரும் இலங்கையுடன் சோபிக்கவில்லை.


ஒரு அணியின் ஆட்டப் போக்கைத் தீர்மானிக்கும் முக்கிய ஏழாம் இலக்கத் துடுப்பாட்ட வீரர் இந்தியாவைப் பொறுத்தவரை இம்முறை ஏழரை சனியன் ஆனது.
ரவீந்திர ஜடேஜாவை நான்கு போட்டிகளில் நம்பி நாசமாப் போய்,அவரிலும் மோசமான போர்மில் இருந்த ரோகித் ஷர்மாவை இறக்கி மேலும் மோசம் போனதே மிச்சம்.


இலங்கை அணியோ அந்த ஏழாம் இலக்கத்தை சுழற்சி முறையில் கையாண்டது.
இறுதிப் போட்டியில் சாமர சில்வா தேவையான முக்கியமான ஓட்டங்களை எடுத்ததும் அதே இலக்கத்தில் தான்.


இருந்துபாருங்கள் உலகக் கிண்ணத்தில் இம்முறை தாக்கம் செலுத்தப் போகும் ஒரு முக்கிய காரணி இந்த ஏழாம் இலக்கத் துடுப்பாட்டம்.


தோற்கும் அணியெல்லாம் படுதோல்வி அடைந்ததாகவும்,நெருக்கமான போட்டிகள் அற்ற தொடராகவும் அமைந்த இந்தப் போட்டியில் இறுதியில் இலங்கை வென்றதிலிருந்து இலங்கை அணி தான் இம்மூன்று அணிகளில் பலமானது என்று நாம் கருத முடியாது.
காரணம் எல்லா அணிகளும் இன்னொரு அணியிடம் தோற்றன.தோற்கும்போதும் மிக மோசமாகத் தொற்றிருந்தன.
ஆனால் அணியின் கட்டமைப்பிலும்,அனுபவ ஆழத்திலும்,பந்துவீச்சு வரிசையிலும் இலங்கை அணி முந்திக்கொள்கிறது.


இந்தியாவின் ஒவ்வொரு வெற்றியிலும் செவாக்கே தெரிந்தார்.


இறுதிப் போட்டியில் இவை நன்றாகவே தெரிந்தது.


தேவையான முக்கியமான நேரத்தில் இலங்கையின் டில்ஷான்,மஹேல ஜெயவர்த்தன,சங்கக்கார ஆகிய மூன்று சிரேஷ்டர்களின் துடுப்பாட்டம் துணை வந்தது.


மஹெலவை ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக மீண்டும் அனுப்பிய முடிவை நான் கடந்த பதிவொன்றில் சிலாகித்து எழுதியிருந்தது ஞாபகமிருக்கும்.
இறுதிப் போட்டியில் மஹேல-டில்ஷான் இணைப்பாட்டம் தான் இலங்கையின் முதல் துருப்புச் சீட்டு.
20 ஓவர்களுக்குள் 121 ஓட்டங்கள்.. இதில் மஹேல 39ஓட்டங்கள் மட்டுமே. ஆனால் கிட்டத்தட்ட அரைவாசிப் பந்துகளை எதிர்கொண்டு.
மறுபக்கம் டில்ஷான் அதிரடி..
இது தான் ஒரு இணக்கமான இணைப்பாட்டத்துக்கு அடிப்படை.


 மீண்டும் ஒரு முக்கிய இணைப்பாட்டம் சங்கக்கார-டில்ஷான்.
85 ஓட்டங்கள் 16 ஓவர்களில்.
இந்தியாவிடமிருந்து முற்று முழுதாகக் கிண்ணத்தை இலங்கை பறித்துக் கொண்டது இந்த இணைப்பாட்டத்தின்போது தான்.
டில்ஷானிடமிருந்து அதிரடியை எடுத்துக்கொண்டார் சங்கா.
டில்ஷான் வேகமாக சதமடிக்க சங்காவின் அரைச் சதம் அதை விடக் கொஞ்சம் வேகமாக வந்தது.
இதில் இன்னொரு முக்கியவிடயம், இலங்கை,இந்திய வீரர்களைப் பொதுவாக எல்லா விமர்சகர்களுமே சொந்தநாட்டில் மட்டும் சோபிப்பவர்களாக விமர்சிப்பதுண்டு.


ஆனால் டில்ஷான் ஒரு நாள் போட்டிகளில் இதற்கு முன் ஏழு சதங்களைப் பெற்றிருந்தாலும் அவர் இலங்கையில் பெற்ற முதல் சதம் இது.
இப்போது என்ன சொல்வார்கள்?


கடைசிப் பத்து ஓவர்கள் தோனிக்கு என்ன செய்வது என்ற குழப்பத்தைத் தந்ததாக இருந்திருக்கவேண்டும்.
காரணம் மிக மெதுவாகவே பந்துவீச்சாளர்களையும்,களத்தடுப்பாளரின் நிலையையும் மாற்றிக் கொண்டார்.
இதானால் பின்னர் ஊதியத் தொகையில் கணிசமான தொகையையும் தோனி+குழுவினர் இழந்தார்கள்.


ஜடேஜாவை விட்டுவிட்டு மேலதிகத் துடுப்பாட்ட வீரரை இறுதிப் போட்டிக்காக எடுத்தது எவ்வளவு பயனைக் கொடுத்தது என்று தெரியவில்லை.
காரணம் பகுதி நேர சுழல் பந்துவீச்சாளர்கள் ஓட்டங்களை ஓரளவு கட்டுப்படுத்தினாலும் ஒரே ஒரு விக்கெட்டை மட்டுமே எடுத்தனர்.


இலங்கை அணி பெற்ற மொத்த ஓட்ட எண்ணிக்கை (299 ) இத் தொடரில் அதிகூடியது என்பதுடன் தம்புள்ளை மைதானத்தில் பெறப்பட்ட மூன்றாவது அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையுமாகும்.


இந்திய அணியின் துடுப்பாட்டம் இந்தத் தொடரில் இந்தப் பெரிய எண்ணிக்கையைத் துரத்திப் பிடிக்கும் அளவுக்கு வலிமையானதாக இருந்ததில்லை.
கார்த்திக் தவறான நடுவரின் தீர்ப்புக்கு இலக்காக, சேவாக்கும் கொஞ்ச நேரத்தில் விடைபெற இந்தியாகொஞ்சம் கொஞ்சமாகப் பின் தங்க ஆரம்பித்தது. ஓரளவு வேகமாக ஆட முனைந்த யுவராஜ் சிங்கின் ஆட்டமிழப்பின் பின் நத்தையோட்டுக்குள் சுருண்டு கொண்டது.
தலைவர் தோனி மட்டும் தனியாக நின்று மானம் காக்கும் நோக்கோடு இறுதிவரை ஆடிக் கொண்டிருந்தார்.இத்தொடரில் தோனியின் ஒரே அரைச் சதம் இதுவே.


பந்துவீச்சாளர்கள் ஓட்டங்களைக் கட்டுப்படுத்தி ஏற்படுத்திய அழுத்தம் பல விக்கெட்டுக்களைப் பெற்றுக் கொடுத்தது.
இந்தியா சுழல் பந்துவீச்சாளர் ஒருவரையும் நிறுத்திவிட்டு விளையாட இலங்கையின் சுராஜ் ரண்டீவ் மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தி இருந்தார்.


நடுவர்களால் இந்திய அணிக்கு பாதிப்பு என்று எழுந்த குரல்கள் எல்லாம் இறுதிப் போட்டியில் மௌனமாகிப் போயின.
கார்த்திக்கை வீட்டுக்கு அனுப்பியது அசாத் ரௌப்.
அதன் பின்னர் அசோகா டீ சில்வா இந்தியத் துடுப்பாட்ட வீரர்களைப் பல முறை காப்பாற்றிவிட்டார்.


 அதிலும் யுவராஜ் நிச்சயம் அசோகா டீ சில்வாவுக்கு நன்றி தெரிவித்துத் தோப்புக்கரணம் போட்டாலும் பதிவு போட்டாலும் கூடத் தகும்.துடுப்பில் பட்டு சென்ற பந்தையே கவனிக்காதவராக நடுவர் தப்ப விட்டார்.
யுவி ஒன்றும் கில்க்ரிச்டோ,அரவிந்த டீ சில்வாவோ ஏன் குறைந்தபட்சம் சங்கக்காரவோ இல்லையே.
தப்பித்தோம் என்று நின்று விட்டார்.


ஆனால் UDRS என்று சொல்லப்படும் தொலைகாட்சி நடுவரிடம் மேன் முறையீடு செய்து செப்பனான முடிவைப் பெறும் நடைமுறையை இனி எல்லா அணிகளுக்கும் கட்டாயமாக்குவது அத்தியாவசியம்.
எல்லா நாடுகளும் பயன்படுத்துகையில் இந்தியாவுக்கு மட்டும் என் முடியாது? இதை ICCயும் கண்டிக்காதாம்.


ஆஸ்திரேலியா இந்தியா வருகையிலும் இதை இந்தியா வேண்டாம் என்று விட்டது.
உலகக் கிண்ணப் போட்டிகளில் UDRS பயன்படுத்தப்பட இருக்கையில் ஏன் ICC இப்போதே எல்லாப் போட்டிகளுக்கும் இதைக் கட்டாயமாக்கக் கூடாது?


தொடர் முழுவதும் தனித்து தெரிந்த சேவாக் தொடர் நாயகனாகத் தெரிவு செய்யப்பட்டார்.
அவர் பெற்ற மொத்த ஓட்டங்களை (268 ) விட இறுதியின் நாயகன் டில்ஷான் 29 ஓட்டங்களே குறைவாகப் பெற்றார்.
வேறு எவருமே 200 ஓட்டங்களைக் கடக்கவில்லை.
இலங்கை அணித்தலைவர் சங்கக்காரவும் எல்லாப் போட்டிகளிலும் சராசரியாக ஓட்டங்கள் பெற்றிருந்தவர்.


பிரவீன் குமார் தன்னை மீளவும் நிறுவிய தொடர் இது.ஒன்பது விக்கெட்டுக்களை அவர் வீழ்த்தியிருந்தார்.
கைல் மில்ல்ஸ்,நெஹ்ரா ஆகியோரும் திசர பெரேராவும் தலா எட்டு விக்கெட்டுக்கள்.
எனினும் திசர கொடுத்தது வெறும் 64 ஓட்டங்கள் மட்டுமே.
இந்தியா அணிக்கெதிராக மட்டும் அவரை ஆயுதமாகப் பயன்படுத்தாமல் ஏனைய அணிகளுக்கு எதிராகவும் பயன்படுத்தும் நேரம் வந்தாச்சு.




இந்தத் தொடர் மூலமாக மீண்டும் அணிக்குள் இடம் பிடிக்க முனைந்த ஒருவர் முனாப் படேல்.இப்படியான ஆடுகளங்களுக்கு(மட்டும்) உகந்தவர் முனாப்.


இலங்கை அணியின் சாமர சில்வாவும் தனக்கான துண்டை விரித்து அணிக்குள் இடத்தை உறுதிப் படுத்திக் கொண்டார்.
பாவம் சமரவீர.. வயதும் அவருக்கு சதிசெய்யலாம்.
கபுகேடரவும் கவனமாக இருக்கவேண்டி வரும்.வருகிறார்கள் சந்திமால் மற்றும் ஜீவன் மென்டிஸ்.


இந்தியா அணியின் ரோகித் ஷர்மாவும்,ரவீந்திர ஜடேஜாவும் வீடு செல்லத் தயாராகிறார்கள் எனத் தெரிகிறது.
ஆனால் அடுத்து இந்தியாவின் ஏழாம் இலக்கம்?அல்லது சகலதுறை வீரர் யார்?


இறுதிப் போட்டியில் ரோகித்தை எடுத்ததற்குப் பதிலாக சௌரப் திவாரிக்கு ஒரு வாய்ப்பை வழங்கி இருக்கலாம். ஒரு ஐந்து ஓட்டங்களாவது கூட எடுத்திருப்பார்.

இந்த முக்கோணத் தொடர் கிரிக்கெட்டில் தந்த நன்மைகள் எவையுமில்லை.
மற்றுமொரு போட்டி - விளம்பரதாரர்களுக்காக..
இறுதிப் போட்டியில் மைதானத்தை ரசிகர்கள் நிறைத்தாலும் ஏனைய போட்டிகள் பலவற்றில் ரசிகர்கள்(தொலைகாட்சி ரசிகர்களும் கூட) ஈடுபாடு காட்டவில்லை என்பது கிரிக்கெட்டுக்கு ஆரோக்கியமானதல்ல.


இந்தியா அணிக்கு ICC தரப்படுத்தலில் இலங்கையால் நெருக்கடி கொடுக்கப்பட்டதையும் (ஆஸ்திரேலியா -1 ,இந்தியா,இலங்கை,தென் ஆபிரிக்கா சமபுள்ளிகளோடு இருந்தாலும் தசம புள்ளிகளால் இரண்டாம் இடம்) தோனி ஒரு நாள் தரப்படுத்தலில் தன முதல் இடத்தை இழந்ததையும் இத் தொடரின் முக்கிய விளைவுகளாக வேண்டுமானால் கொள்ளலாம்.


இலங்கை அணிக்கு விடைகளையும் இந்தியா அணிக்கும் தேர்வாளருக்கும் கேள்விகளையும் எழுப்பிவிட்டுப் போயுள்ளது இந்த முக்கோணத் தொடர்.

August 30, 2010

சீ சீ சீ....

இரண்டு பதிவுகள் மனதில் சேமிக்கப்பட்டுக் காத்துக் கொண்டிருந்தாலும் இந்த மூன்று நாட்களில் மனதை அரித்துக் கொண்டிருந்த சில விஷயங்களை முதலில் பதிவாகக் கொட்டிவிடவேண்டுமென்று இந்தப் பதிவு..




சவூதி அரேபியாவிலிருந்து இலங்கை திரும்பிய வீட்டுப் பணிப்பெண் ஆரியவதிக்கு நடந்த கொடூரம்.


பதினெட்டு ஊசிகள்,ஆணிகள் அவரது உடலுக்குள் அவர் வேலை செய்த எஜமானர் குடும்பத்தினரால் ஏற்றப்பட்டிருக்கின்றன.
இதுவரை சத்திரசிகிச்சையின் பின் அகற்றப்பட்டு எடுக்கப்பட்டவை இததனை.
இன்னும் எத்தனை ஆரியவதி என்ற அப்பாவியின் உடலுக்குள் இருக்கின்றனவோ தெரியாது..


இலங்கையிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டுவேலை,தொழிற்சாலை வேலைகளுக்கு செல்லும் எத்தனையோ ஆண்களும் பெண்களும் சொல்லொணாக் கொடுமைகளை அனுபவித்து நாடு திரும்பி இருக்கிறார்கள்.


பிணமாகத் திரும்பிய பலரைப் பற்றி அறிந்திருக்கிறோம்.
பிணமாகியும் அங்கேயே மறைக்கப்பட்ட பலரை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்..


இப்போது ஆரியவதிக்கு நடந்த ஆணியேற்றிய கோரம்..


அந்த மத்திய கிழக்கு எஜமானர்கள் மனிதர்களா?
ஏன் இப்படி ஒரு கோர வெறி?


சக மனிதர்களைத் துன்புறுத்துவதில் குடும்பமாக ஏன் இப்படி ஒரு இன்ப வெறி அவர்களுக்கு?
பணிப்பெண்கள்,வேலையாட்கள் என்றால் அவர்களுக்கேயான அடிமைகளாக நினைத்துவிட்டார்களா?


அரபு நாடுகளில் மட்டும் இவ்வகையான செயல்கள் பணியாளர்களுக்கு எதிராக நடைபெறுவது ஏன் என்று புரியவில்லை.


அந்த உல்லாச அரபுக்களின் மார்க்கம் அன்பையல்லவோ போதிக்கிறது?


வெளிவந்த சில உண்மைகள் இப்படியிருக்க இன்னும் வெளியே வராமல் என்னென்ன நடந்திருக்கிறதோ?நடந்துகொண்டிருக்கிறதோ?


இவர்களுக்கான தண்டனையை வழங்குமா சவூதி அரசு?
இலங்கை அரசு இப்படியான சம்பவங்கள் இனியும் நடக்காமல் தடுக்க தனது நட்பு நாடுகளுள் ஒன்றான சவூதி அரேபியாவை நேருக்க வேண்டும். அல்லது பணிப்பெண்களை ஜோர்டானுக்கு அனுப்பாமல் நிறுத்தியது போல சவூதிக்கும் அனுப்புவதை தடுக்க வேண்டும்.


இதனால் அரேபியர்கள் நிறுத்திக் கொள்வார்கள் என்று நான் நினைக்கவில்லை.
அவர்கள் தொடர்ந்தும் இந்தியா,பிலிப்பைன்ஸ்,பங்களாதேஷ் போன்ற நாடுகளிலிருந்து தங்களுக்கான 'வதைபடக்கூடிய அடிமைகளை' அழைத்துக் கொள்வார்கள்.



சிலாபம் காளி கோவிலில் நடந்த மிருக பலி..


என்ன தான் சிறு தெய்வ வழிபாடு, முன்பிருந்தே வந்தது என்று சப்பைக் கட்டு சாட்டுக்கள் சொன்னாலும் நானூறுக்கு மேற்பட்ட உயிர்கள் ஒரு ஆலயத்தில் வைத்து பக்தி என்ற பெயரில் பலி கொடுக்கப்பட்டது தவறே.


இதை நியாயப்படுத்தி ஒரு சிலர் கருத்து சொல்லி வருவது பெரும் வேடிக்கை மட்டுமல்ல வெட்கமும் கூட..


அவர்கள் இந்த பலியை வேள்வியாக,முன்பிருந்தே இருந்துவரும் வழிபாட்டு முறையாக நியாயப்படுத்துவதன் காரணம், இந்த மிருகபலியை முன்னின்று தடுக்க முனைந்தவர்கள் பௌத்த பிக்குகள் என்பதே.
எங்கள் சமய விவகாரம்.. நாம் பார்த்துக் கொள்வோம் என்ற குறுகிய நோக்கமே இது.


யார் தடுத்தாலென்ன.. நியாயம் என்றால் நியாயம் தான்.


ஒரு பக்கம் வடக்கு-கிழக்கில் போர் என்ற பெயரில் மக்கள் கொன்று குவிக்கப்பட்ட போது இவர்களின் நியாயம் எங்கே போனது என்ற கேள்வியில் இருக்கும் நியாயம் மிகச் சரியானதே.


ஆனால் அதற்காக இது சரி என்று ஆகிவிடாது.
உயிர்கள் என்றால் உயிர் தான்.
சமயம்-வழிபடும் இடம் என்றால் அதற்குரிய புனிதம் வேண்டியதே.




அசைவ உண்ணி நீ யார் இது பற்றிப் பேச என்று கேட்டால், வெள்ளி-செவ்வாய் தாவர உன்னிகளாக அப்படியானால் ஏன் விரதமிருந்து கோவில் போகிறீர்கள் என்று நானும் கேட்கத் தயார்.


பௌத்த பிக்குகள் செய்ததை ஏன் இந்த சைவ உண்ணிகள், அகிம்சாவாதிகள்,அன்பைப் போதிப்பவர்கள் செய்யவில்லை?
அவர்கள் செய்யும் போது ஏன் கடுக்கிறது?


இதற்குள் வழிபடுவது எப்படியும் செய்யப்படலாமாம்..இறைவனை நாம் அறிந்த முறையில் வழிபடுவதை இறைவன் ஏற்பாராம்.. கண்ணப்ப நாயனாரை உதாரணமாக அழைத்து வருகிறார்கள்.
இந்தக் காலம் மனிதர்கள் நாகரிகமடைந்த காலம். இன்னும் உயிர்ப்பலி தேவையா?


இன்னும் சிலர் அகிம்சை+உயிர்ப்பலியை மூடநம்பிக்கைஎன்று வகைப்படுத்துகிறார்கள்.
ஒரு சில உயர்சாதிப் பிரிவினர் உருவாக்கிக் கொண்ட விதியாம் இது.. எனவே கோவில்களில் ஆடு,மாடு,கோழி அடிக்கலாமாம்.


எங்கே போய் என் தலையை முட்டுவேன்..


இப்போது சொல்லுங்கள் சமயங்கள் எம்மை நல்வழிப்படுத்தும் என இளைஞர்கள் நம்புவீர்களா?




பாகிஸ்தானும் கிரிக்கெட் சூதாட்டமும்..


மீண்டும் ஒரு தடவை பாகிஸ்தான் கிரிக்கெட் சூதாட்டப் புயல் சந்தேகத்தில் சிக்கி இருக்கிறது.


ஆஸ்திரேலியாவுடன் படுதோல்வி தோற்ற சர்ச்சையால் பலபேருக்குத் தண்டனை வழங்கப்பட்டு(அதில் ஒரு சிலர் மன்னிப்புப் பெற்று இப்போது தான் மீண்டும் விளையாட ஆரம்பித்துள்ளார்கள்) காயம் ஆறி மீண்டும் அடித்தளத்திலிருந்து அணி கட்டமைக்கப்படும் நேரம் மறுபடி ஒரு பெரிய சர்ச்சை.




இம்முறை பணம் கொடுத்து வீரர்களை தன் கைப்பாவையாக ஆட்டிவைத்த பந்தயக்கார சகோதரர்கள் கையும்களவுமாக அகப்பட்டு அதில் ஒருவர் கைதாகியும் இருக்கிறார்.


பாகிஸ்தான் வீரர்களின் முகவராக இருந்து அவர்களுக்கு இங்கிலாந்தில் வாய்ப்பை,அனுசரணைகளை பெற்றுத் தரும் ஒரு முகவராக நீண்ட காலம் செயல்பட்டு பாகிஸ்தானிய முன்னணி வீரர்களோடு நெருங்கிப் பழகிய மசார் மஜீத் இப்போது Scotland Yardஇன் பிடியில்.


இப்போதைக்கு இந்தப் பாகிஸ்தானிய அணியில் நால்வர் தன்னிடம் 'வேலை' செய்ததாக மசார் கூறியுள்ளார்.
அதில் உறுதி செய்யப்பட்டுள்ள இருவர் இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டிகளில் பிரகாசித்த மொஹம்மத் ஆமீர்,மொஹம்மத் ஆசிப்.


அடுத்த இருவரில் ஒருவர் பாகிஸ்தானிய அணியினாலேயே சந்தேகத்துக்குள்ளாக்கப்பட்ட குள்ளநரி கம்ரன் அக்மல்.
அடுத்தவரின் பெயர் சாதாரண ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகனையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கும் என்பதில் ஐயமில்லை..
தற்போதைய டெஸ்ட் அணியின் தலைவர் சல்மான் பட். 


இப்போது இவர்களில் மூவரின் செல்லிடப் பேசிகளும் பறிமுதலாகி இருக்கின்றன.
ஏற்கெனவே ICCயின் லஞ்ச ஊழல் ஒழிப்புப் பிரிவின் சந்தேகப் பட்டியலில் கைது செய்யப்பட்ட மசாரும் பாகிஸ்தானிய வீரர்கள் பலரும் இருப்பது குறிப்பிடத்தக்கது.


எனக்கு முன்பே ஆசிப்,பட் ஆகியோரைக் கண்ணில் காட்டமுடியாது.
சோம்பேறித் தனமும்,கள்ளத் தனமும் கலந்த கலவையாகவே இவர்களைப் பார்த்தால் எனக்குத் தோன்றியது..தோன்றுகிறது.


ஆனால் சிறப்பாக விளையாடி வந்தவரும்,உயிரைக் கொடுத்துப் பந்துவீசி வந்தவருமான ஆமிரைப் பிடித்திருந்தது.
ஆனால் இப்போது?
வழமையான பாகிஸ்தானிய கிரிக்கெட் வீரராகி விட்டார். :(


இந்த Spot betting எனப்படும் கிரிக்கெட் சூதாட்டமானது போட்டிகளின் முடிவுகளை பேரம் தாக்கத்தை ஏற்படுத்தாது எனினும் இதுவும் கிரிக்கெட்டுக்கு ஏற்படுத்தும் துரோகம் தான்.
போட்டியின் ஒவ்வொரு கட்டத்தில் ஏற்கெனவே பேசி வைத்தது போல பணம் வாங்கிக் கொண்டு செயற்பட இந்தப் புதிய பையன் ஆமிரினால் மட்டுமல்ல,உலக சாதனையாளர் சச்சின் டெண்டுல்கரினாலும் முடியும்.
யாரின் சந்தேகப் பார்வையும் படாது..


இது பற்றி விரிவாக,ஆதங்கத்துடன் சக பதிவர் கங்கோன் கோபி பதிவிட்டுள்ளார்.



பாகிஸ்தான் ஏற்படுத்தியிருக்கும் அதிர்வலைகள்....





திருடனாய்ப் பார்த்து திருந்தவேண்டும்.
மனசாட்சியின் படி ஒவ்வொருவரும் விளையாடினால் மட்டுமே இதனை தடுக்கமுடியும்.


காரணம் நானும் இப்படியான ஒரு சந்தர்ப்பத்தில் பணம் வாங்கியிருப்பேன் எனவே நினைக்கிறேன்.. யாரும் இங்கே மகான்கள் அல்ல.


சந்தேகப் பார்வை பாகிஸ்தானின் மேல் படிந்துள்ளமையானது அதனுடன் விளையாடும் சகல அணிகளுக்கும் சங்கடத்தையும் பாகிஸ்தானுக்கேதிராகப் பெற்ற வெற்றிகளின் மீதான சந்தேகத்தையும் தரப்போகின்றன.




நேற்றைய படுதோல்வியும் இங்கிலாந்தின் திறமையாக அல்லாமல்,பாகிஸ்தானின் மோசடியாகவே நோக்கப் படுகிறது.


இதற்கெல்லாம் முக்கிய முடிவு ஒன்றை சர்வதேச கிரிக்கெட் பேரவை எடுத்தே ஆகவேண்டியுள்ளது.
உடனடியாக முழு விசாரணை ஒன்றை நடத்தாமல் போட்டிகளைத் தொடரக் கூடாது.
சம்பந்தப்பட்டவர்கள் என உறுதிப்படுத்தப்பட்ட அத்தனை பாகிஸ்தானிய வீரர்களையும் தடை செய்யவேண்டும்.


சீ.. கிரிக்கெட்டில் ஏமாளிகள் ரசிகர்கள் நாமா?


சீ - சீரழிவு சீ - சீர்கேடு சீ- சீப்பான(cheap) விஷயங்கள் 

#*# இப்போது மனப் பாரம் கொஞ்சம் இறங்கி இருக்கிறது.
நேரமிருந்தால் கிரிக்கெட் மற்றும் திரைப்பட பதிவுகள் இரண்டு இன்றும் நாளையும் வரும்.

August 25, 2010

அவுட்டும் டவுட்டும் - எதிர்வுகூறல்களும் எனது பார்வையும்

சேவாக் - ரண்டீவ்- நோ போல் சர்ச்சை கொஞ்சம் ஓய்ந்து போகும் நேரம் இலங்கை-இந்திய அணிகளுக்கிடையிலான மற்றொரு போட்டியில் இன்னுமொரு சர்ச்சை..

இலங்கை அணி இந்திய அணியை உருட்டி எடுத்த போட்டியில்(ஞாயிறு) ஐந்து விக்கெட்டுக்களை எடுத்த திசர பெரேராவை விட அதிகமாகப் பேசப்பட்ட ஒருவராக மாறிப்போனார் இப்போது விளையாடாத,ஓய்வு பெற்ற குமார் தர்மசேன.

(இந்தியாவுக்கு எப்போதும் இலங்கை OFF SPINNERS தான் தொல்லையா? முரளி,மென்டிஸ்,ரண்டீவ்.. இப்போது ஓய்வு பெற்ற ஒரு OFF SPINNER தர்மசேன)
தர்மசேன - இந்தியாவில் இருக்கு தர்ம அடி 

ஒரு ஆட்டமிழப்பு அல்ல.. சுளையாக ஐந்து தீர்ப்புக்கள் தவறாக அமைந்து போயின.(மூன்று - தர்மசேன,இரண்டு - அசத் ரௌப்)
இதெல்லாம் கிரிக்கெட்டில் சகஜமே என்றாலும் இந்தியாவுக்கெதிராக இவற்றுள் நான்கு அமைந்துபோனது தான் சிக்கலே.

(சேவாகுக்கு ஆட்டமிழப்பு கொடுத்ததில் தப்பில்லை என்று தளமே சொன்னதாக கிரிக்கெட் அனலிஸ்ட் கண்கோன் ஆதாரம் காட்டி இருந்தார். ஆனாலும் எனக்கென்னவோ அது தவறான தீர்ப்பு என்றே தோன்றியது.)

போட்டியின் முடிவை மாற்றியதிலும் இந்த தீர்ப்புக்கள் முக்கிய பங்கு வகித்திருக்கலாம்.
அண்மைக்காலம் வரை சராசரி நல்ல நடுவராக இருந்துவந்த தர்மசேன இவ்வளவு மோசமாக தீர்ப்புக்கள் வழங்கியதை நான் கண்டதே இல்லை.

எவ்வளவு தான் ஒரு அணியின் ஆதரவாளராக இருந்தபோதும் தவறான தீர்ப்புக்களால் தனது அணி வெற்றிபெறுவதை எந்தவொரு உண்மையான கிரிக்கெட் ரசிகனும் விரும்பமாட்டான்.
நானும் அவ்வாறே...

அன்றைய போட்டியில் இலங்கையின் அபாரமான வெற்றி, திசர பெரேராவின் மிக சிறப்பான பந்துவீச்சு, மஹேல மீண்டும் ஆரம்ப வீரராக மாறி ஆடிய அதிரடியும், இந்தியாவின் படுமோசமான துடுப்பாட்டமும் குமார் தர்மசேனவின் கோல்மால் தீர்ப்புக்களால் மறைக்கப்பட்டதை நினைத்து அடுத்த நாள் வரை கொதிப்புடன் இருந்தேன்.
ஆனாலும் பதிவு போடக் கொஞ்ச நேரம் கூடக் கிடைக்கவில்லை.

இன்று கொட்டித் தீர்த்தாச்சு.

வீரர்கள் தவறிழைத்தால் போட்டி மத்தியஸ்தர் தலையிடாவிட்டாலும் பாய்ந்து விழுந்து தண்டனை கொடுக்கும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் குமார் தர்மசேனவுக்கு இன்னும் எந்தத் தண்டனையும் கொடுக்காதது ஆச்சரியமாக உள்ளது.

இரண்டு,மூன்று போட்டித் தடைகளோ அல்லது இனிமேலும் கையையே மேலே தூக்கக் கூடாது என்ற தண்டனைகளோ கொடுத்ததாக அறியிலேன்..
கன்னி ஐந்து விக்கட் பெறுதி - திசர பெரேரா 

இன்று இந்தியாவுக்கும் நியூ சீலாந்துக்கும் இடையிலான போட்டி அரை இறுதி போல அமைகிறது.
மழை பெய்தாலும் நியூ சீலாந்து உள்ளே.. தர்மசேன இன்று நடுவராக வந்தாலும் நியூ சீலாந்து உள்ளே என்று இந்தியா நடுங்கிக் கொண்டிருக்கிறது.
(ஆனாலும் கொஞ்சம் ஆறுதல்.. தர்மசேன இன்று துணை வில்லனாகத் தான் வரமுடியும் - இன்று மூன்றாவது நடுவர்)

தோனி,ரோகித், கார்த்திக் என்று தடுமாறும் துடுப்பாட்ட வரிசையுடன் எகிறிக் குதிக்கும் பந்துகளுக்கு துணைபோகும் தம்புள்ளை ஆடுகளமும் இன்று பலவீனமான அணி என்று கருதப்பட்ட நியூ சீலாந்து அணிக்கு சாதகமான நாளாக இருக்கும் என நம்புகிறேன்.
இன்னும் கிரவுண்டில் உள்ள காண்டு போகலையா மிஸ்டர்.தோனி?
மைதான ஊழியர்களுடன் இந்தியத் தலைவர் 


Spongy Bounce என்று இந்தியாவினால் வெறுக்கப்படும் ஆடுகளத்தில் நியூ சீலாந்தின் சாதுரியமான,ஸ்விங்கைப் பக்குவமாகக் கையாளும் வித்தை தெரிந்த நியூ சீலாந்தர்கள் இன்று செவாக்கைக் கைப்பற்றுவதிலும் யுவராஜ்,ரெய்னாவை அடக்குவதிலும் அவர்கள் இறுதிப் போட்டி வாய்ப்புக்கள் இருக்கின்றன.
என்னைய்யா இது? இப்பவே கன்னத்தில் கை வச்சா எப்பிடி?
பயிற்றுவிப்பாளர் கிரேட்பட்ச்சுடன், தலைவர் ரோஸ் டெய்லர்&குப்டில் 

(சேவாக்கும்,பிரவீன் குமாரும் கூடக் கை விட்டால்.. விராட் கோஹ்லி இன்று அணிக்குள் வந்தால் ஏதாவது மாற்றம் நிகழலாம்)

இலங்கை அணியில் சில மாற்றங்கள் தெம்பையும் மகிழ்ச்சியையும் தருகின்றன.

இளையவர்களுக்குக் கொடுக்கப்படும் வாய்ப்பு+நம்பிக்கை.

திசர பெரேராவை இந்தியாவுக்கெதிராக (மட்டுமே) பயன்படுத்தி நட்சத்திரமாக மாற்றும் உத்தி..
சங்கக்கார அண்மையில் ஜீவன் மென்டிஸ்,தினேஷ் சந்திமால் ஆகியோர் உலகக் கிண்ண அணியில் வேண்டும் என்று வழங்கிய பேட்டி.

சந்திமால் அண்மையில் தென் ஆபிரிக்க A அணிக்கெதிராக அபார இரட்டை சதமடித்தது முக்கியமானது.

இதே போல மஹெலவை இப்போதாவது ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக அனுப்ப முடிவெடுத்ததும்,சாமர சில்வாவின் ஓட்டங்களுடனான மீள் வருகையும் இலங்கை அணியை மேலும் ஸ்திரப்படுத்துகின்றன.
முரளிதரனும் மீண்டும் ஒருநாள் அணிக்குள் வருமிடத்து(வருவார் தானே?) உபகண்ட ஆடுகளங்களில் இடம்பெறும் உலகக் கிண்ணப் போட்டிகளில் (பவுன்சி ஆடுகளம் தம்புள்ளையில் போட்டிகள் இல்லை :)) இலங்கை அசைக்க முடியாத பலத்துடன் திகழும்.

அதற்கு முதலில் 28 ஆம் திகதி இறுதிப் போட்டியிலும் இலங்கை வெல்லுமா பார்க்கலாம்.
முக்கியமான விடயம் - இதுவரை தோனியின் தலைமையில் இந்தியா இலங்கையில் வைத்து எந்தவொரு கிண்ணத்தையும் தோற்கவில்லை.
இறுதியாக ஆசியக் கிண்ணத்தையும் எடுத்து சென்றது ஞாபகமிருக்குத் தானே?
இம்முறை பார்க்கலாம்..

தர்மம்(தர்மசேன அல்ல) தலை காக்கும் என்று பெரியவங்க சும்மாவா சொன்னாங்க..

August 20, 2010

அன்புள்ள சந்தியா - தொடர்ச்சி

இந்தக் கதையைப் படிக்க முதல் இங்கே சென்று முழுவதும் வாசித்து விட்டு வாருங்கள்..

அன்புள்ள சந்தியா





அதன் தொடர்ச்சி..


அந்தக் கதையின் ஹீரோ.. வேண்டுமானால் பெயரை சுதா என்று வைத்துக் கொள்வோம்..


பிறந்த திகதி பார்த்த சுதாவுக்கு மனதெல்லாம் மல்லிகைப் பூ.. இனித் தொடரலாம் என்று நினைத்தவனுக்கு கண்ணை மூடினால் கனவில் "காதல்அணுக்கள்" பாடலுக்கு சந்தியாவுடன் தான் டூயட் பாடி ஆடுவது சன் டி வியில் போகும் பட ட்றேயிலராக மீண்டும் மீண்டும் ஓடுகிறது.


பல தமிழ்ப் படங்களில் பார்த்த ஹீரோவாக அந்த நொடியிலிருந்து மாறிப் போனான் சுதா.. 


மண் சரிவில் சிக்கியிருந்த காரை எடுக்க ஊரவரை எல்லாம் உதவிக்கு அழைத்து சந்தியாவின் புன்னகையுடன் கூடிய நன்றியைப் பரிசாக எடுத்துக் கொண்டபோது உலகமே தன் காலடியில் வீழ்ந்து கிடப்பதாக உணர்ந்தான்.
புன்னகையா அது? ஆயிரம் கோடி வெண் மல்லிகையை பனித்துகள்களோடு ஒரே நேரத்தில் கொட்டி இறைத்து மனசுக்குள் தூவியது போல இருந்தது..


கண்களில் அப்படியொரு நன்றியுணர்வு..


போய் வருகிறேன் சொல்லிக் காரில் ஏறி சந்தியா செல்லும் நேரம் தன்னிடம் இருந்து இதயம் அவளுடனே ஏறிக் காரில் செல்வதாய் ஒரு உணர்வு..
மனது கனத்துப் போய் இருந்தாலும் மனசெங்கும் எதோ ஒரு குளு குளு உணர்வு பரவி இருந்ததாக உணர்ந்தான்,,

வாழ்க்கையில் முதல் தடவை என்று அவன் நினைக்கப் பார்த்தாலும் மனசு "டே பொய் சொல்லாதடா.. போன கிழமை கொடிகாமப் பக்கத்திலேயும் இப்படி ஒரு பீலிங் வரலையா?" என்று கேட்டு குட்டி அடக்கியது.


சந்தியா சந்தியா என்று கையில் கிடைத்த தாள்களிலெல்லாம் ஒரு ஆயிரம் தடவையாவது தனக்குத் தெரிந்த மொழிகளிலெல்லாம் எழுதிப் பார்த்து பரவசமடைந்துகொண்டான்.

போதாக்குறைக்கு சந்தியா என்ற பெயரை தனக்குத் தெரிந்த Facebook,Orkut என்று சகல இடங்களிலும் அவள் இருக்கிறாளா எனத் தேட ஆரம்பித்தான்..


வானொலியில் எப்போதுமே அன்புள்ள சந்தியா பாடல் ஒலிக்காதா என்று ஏங்கினான்.. 
அந்த கதாநாயகனாக நடித்த சொங்கி ஹீரோவை விடத் தானே ஹீரோவாகவும், சந்தியாவே தன் காதலியாகவும் ஏங்க ஆரம்பித்தான்..


Facebook,Gmail ஸ்டேட்டஸ் ஆகப் போட 'அன்புள்ள சந்தியா' பாடலின் வரிகளைத் தேடி எடுத்து உருகினான்.. 


இந்தக் காதல் என்பதே தொல்லை..
உயிரோடு எரிக்குதே என்னை..
உன்னை நீங்கினால் நானும் எங்கே போவேனோடி




கிடைத்த இடைவெளிக்குள் ஏழாம் இலக்க,இரண்டாம் இலக்கப் பொருத்த,பலாபலன்களைப் பஞ்சாங்கம்,நியூமேரோலோஜி என்று கிடைத்த எல்லாவற்றிலும் தேடுவதில் சாப்பாடு,தண்ணியும் மறந்து போனது.


விடுமுறையில் வீடு வந்தவன் இப்படியாகி விட்டானே எனத் தாயாரும் தங்கையும் அங்கலாய்க்க ஆரம்பித்தனர்.
தங்கைக்கு கொஞ்சம் புரிந்துவிட்டது..


பக்கத்து நாடு சந்தியா எனும் அளவுக்கு போய் விட்டான். அதைவிட அவனது பெயரே மறந்து அதுவும் சந்தியா என்று உளறிவிடுவான் போல அப்படியொரு மயக்கம்..

இணையத்தில் onlineஇல் இருந்துகொண்டே ஸ்டேட்டசில் பிசி போட்டு சந்தியா பற்றி சகல விஷயத்தையும் கூகிளிட்டுக் கொண்டிருந்தான்.
பல்லாயிரம் சந்தியாக்களில் படமில்லாத தன் அழகுதேவதை எங்கே என்று ஏங்கிய அவன் தங்கையின் ஆளரவம் அறையில் கேட்டு திரும்பினான்.. 


என்ன எனும் பாவனையில் தங்கையை நோக்க, "உங்க ஆள் லைனில் இருக்கு.. உன்னோட பேசணுமாம்" என்று கொஞ்சம் கிண்டலாகவே சொன்னாள்.


வானத்திலிருந்து தேவதைகள் ஆயிரம் மலர்க்கூடைகளை தன் மேல் கவிழ்த்தமாதிரி சந்தோசத்துடன் மனதில் ஆயிரம் வயலின்கள் இசை மீட்ட, ஆனால் அந்த மகிழ்ச்சியைப் பெரிதாக வெளிக்காட்டமால் "எப்படி நம்ம வீட்டு டெலிபோன் நம்பர்???.. " என்று தங்கையிடம் இழுத்தான்..


"ஆ.. அதான் சந்தியா போகும்போது அம்மாட்ட வாங்கீட்டு போனா.. சரி சரி வழியாம போய்க் கதை" என்று தங்கை சீண்டினாள்..


சிறகு முளைத்து கிட்டத்தட்ட பறந்தே தொலைபேசியை பதற்றம்,மகிழ்ச்சி,பரவசத்துடன் எடுத்தான்..


"ஹலோ"
"மிஸ்டர்.சுதா?"
"ஓமோம்.. சந்தியா?"
"ம்ம்.."
"பத்திரமா போய் சேர்ந்தீங்களா?"
"ஓ யா.. தாங்க்ஸ்.. உங்கட உதவியை வாழ்க்கையில் மறக்க மாட்டேன்"
"இதெல்லாம் என்ன.. சிம்பிள் விஷயம்..உங்களுக்காக இதைக் கூட செய்யாட்டில் எப்பிடி?" 


போனில் வழிவது வெளியே தெரியுதோ என்று எதேச்சையாக உதட்டோரத்தைத் துடைத்துக் கொண்டான்..


"மிஸ்டர்.சுதா உங்க வீட்டு அட்ரசைக் கொஞ்சம் சொல்றீங்களா?"
முகவரியை சொல்லிப் போட்டு.. "விரும்பினால் என்னுடைய மொபைல் இலக்கமும் வேணுமா?"
என்று இழுத்தான் நம்ம ஹீரோ..
"ம்ம் சொல்லுங்களேன்"


நின்ற இடத்திலிருந்தே பாய்ஸ் சித்தார்த் மாதிரி,அலைபாயுதே மாதவன் மாதிரி ஒரு ஜம்ப்.. 
அடுத்து அவளின் இலக்கத்தைக் கேட்கலாம் என்று நினைத்து விட்டு,
"அது சரி ஏன் அட்ரஸ்?" என்று கேட்டான்..
"இல்லை.. இன்னும் பத்து நாளில் எனக்கு கல்யாணம்.அதான் கார்ட் அனுப்ப"


டமார்.. 
தொலைபேசி ஒரு பக்கம் விழுந்து கிடக்க.. சுதா மயக்கமாய் நிலத்தில்..
"ஐயோ அம்மா. அண்ணா மயங்கி விழுந்திட்டார்" என்ற தங்கையின் குரல் சந்தியாவுக்கும் கேட்டது.. 


சுதாவின் அறையில் போட்டிருந்த வானொலியில் 
"அன்புள்ள சந்தியா உன்னை நான் காதலிக்கிறேன்" என்று கார்த்திக் உருக ஆரம்பித்தார். 




பி.கு - இது சிறுகதை போல இருந்தா அப்படியே நினையுங்க.இல்லேன்னா எதிர்வினை,புனைவு,மொக்கை அப்பிடி எதுவேணும்னாலும் வச்சுக் கொள்ளலாம்.. 


சுதா=சுபாங்கன் அப்படி நினைத்தால் அதற்கும் நினைப்பவர்களே பொறுப்பு..


மேலதிக குறிப்பு
இதற்கு முன்னைய பதிவுக்கான பின்னூட்டங்களுக்கு பின்னூட்டமிடும் அவரவரே பொறுப்பு.
அவரவருக்கு அவரவர் பதில் கொடுப்பதால் நான் என் பதில்களை மேலதிகமாகத் தரவில்லை.
ஒட்டுமொத்தமாக இரவு பதிலிடுகிறேன்.


.

August 18, 2010

சேவாக் 99 Not out + ரண்டீவ் No ball

ரண்டிவ்- சேவாக்- 99 not out - நோ போல் விவகாரம் சூடு இன்னும் ஆறாமலே இருக்கிறது..


நேற்று முழுக்க எக்கச் சக்க பிசியாக இருந்ததால்(அலுவலகத்துக்கும் போகவில்லை.. இரவு பத்து மணிவரை இணையமும் பார்க்கவில்லை என்றால் நீங்களே யோசியுங்கள்) இரவுக்குப் பிறகு இப்போது வரை தான் இந்த விவகாரம் பற்றி முழுக்க வாசித்து அனைத்துப் பக்கக் கருத்துக்களையும் வாசித்துக் கொண்டுள்ளேன்.


எனது தனிப்பட்ட கருத்தை அறிந்துகொள்ளப் பலர் ஆர்வம் காட்டியதைப் பார்த்தேன்..


என்னைப் பொறுத்தவரை கிரிக்கெட் ஆனது விதிகளுக்குட்பட்டு,அதன் மான்மியம்,மேன்மைகளுடன் விளையாடப்பட வேண்டியது..எப்படி வேண்டுமானாலும் என்பதல்ல,இப்படித் தான் விளையாடப்பட வேண்டும் என்று எப்போதும் விரும்புபவன்.
சுராஜ் ரண்டிவ் அன்று செய்தது அவர் வேண்டுமென்றே தெரிந்தே செய்திருந்தால் கண்டிக்கப்பட வேண்டியது.
கிரிக்கெட்டில் கண்ணியமாக விளையாட வேண்டியதும் Fair play என்பதும் இருக்க வேண்டும்.
ரன்டிவை வேறு யாராவது தூண்டி விட்டிருந்தால் அவரும் கண்டிக்கப்பட வேண்டியவரே..




இலங்கை அணித்தலைவர் சங்கக்கார தான் சூத்திரதாரி என்று வாய் கிழியப் பாய்ந்து பாய்ந்து கத்திய இந்திய ஊடகங்கள் இன்று டைம்ஸ் நாளிதழினால் மூக்குடைபட்டு நிற்கின்றன.
அது டில்ஷானாம்..
ஹர்ஷா போகலே தனது ட்விட்டரில் அவசரப்பட்டு சங்காவைக் குற்றம் சுமத்திய இந்திய ஊடகங்களை மன்னிப்புக் கோருமாறும் ஹர்ஷா கோரியுள்ளார்.
  
times now saying dilshan was the instigator.so what about the allegations against sangakkara?am waiting for an apology from indian media.
indian media quick to level allegations. can they look inwards? is it fair to haul an honourable man over the coals? evidence unnecessary? 
there was a time when accuracy and decency were the hallmarks of journalism.now speed and disregard for people. 
the performance of the media that insinuated against sangakkara was far worse than what randiv did. randiv apologised. can we?


ஆரம்பத்தில் விளையாட்டில் இதெல்லாம் சகஜம் என்று கூறிய சேவாக்(பரிசளிப்பில்) பின்னர் குய்யோ முறையோ என்று முறையிட்டதும், கட்டாக் மைதானத்தில் சச்சினை அடிக்க விடவில்லை.. இலங்கை அணியில் பலருக்கும் நான் சதம் அடிப்பது பிடிக்கவில்லை என்று சொல்வதும் சிறுபிள்ளைத் தனமாக இல்லையா?
(கட்டாக் போட்டியில் சச்சினை சதம் அடிக்க விடாமல் தடுத்தது தினேஷ் கார்த்திக்கா அல்லது லசித் மாலிங்கவா? நல்லத் தேடிப் பாருங்கப்பா.)


அதுவும் ரண்டீவ் மன்னிப்புக் கேட்டதாக அவரே தனது ட்விட்டரில் சொன்ன பிறகு.. 
ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டும் சங்கக்காரவும் பெரிய மனசுடன் மன்னிப்புக் கேட்டுவிட்டார்கள்.
செவாக்கோ தோனியோ இப்போது அதைப் பெரிதுபடுத்தாமல் விட்டபிறகும் இன்னும் சில விமர்சனப் புண்ணாக்குகள் குரல் எழுப்பிக் கொண்டிருப்பது எரிச்சலாயும் வேடிக்கையாயும் இருக்கிறது.


 விதி மீறல் இல்லை எனும்போது மன்னிப்பு தான் இங்கே முடிவாக அமைகிறது..


சேவாகிற்கு சதம் அடிக்க முடியாமல் போனதற்கு ரண்டிவ் நோ போல் மட்டுமல்ல.. ICC விதிகளும் ஒரு காரணமே.. 
நோ போல் பந்தின் ஒரு ஓட்டத்துடன் வெற்றி கிடைத்தால் அந்தப் பந்தில் பெறப்பட்ட சிக்சர் செல்லாது என்ற விதி பத்தாண்டுகளுக்கு மேல் சர்வதேச கிரிக்கெட் விளையாடிவரும் செவாகிற்கே தெரியாத போது இப்போது தான் விளையாட ஆரம்பித்திருக்கும் ரண்டீவுக்குத் தெரிந்திருக்கும் என நான் நினைக்கவில்லை. 


ரண்டீவ் மன்னிப்புக் கோரியதன் மூலம் தான் வேண்டுமென்றே செய்ததை ஒத்துக் கொண்டவராகிறார்.அவரைக் கண்டிக்கிறேன்.


ஆனால் 2002 ஆம் ஆண்டு கண்டியில் டெஸ்ட் போட்டியொன்றில் கங்குலி சதம் அடிப்பதை இலங்கை தடுத்தது என்று சொல்வதும்,1986 ஆம் ஆண்டு கான்பூர் டெஸ்ட்டில் அசாருதீனை 199 ஓட்டங்களில் LBW மூலம் இலங்கை ஆட்டமிழக்க செய்திருக்கக் கூடாது என்று சொல்வதும் ரொம்பவே ஓவர்...


அப்படிப் பார்த்தால் சனத் ஜெயசூரிய ஒரு முறை இந்தியாவுக்கெதிராக 199 ஓட்டங்களில் ஆட்டமிழந்ததும் இந்தியா கண்டிக்கப்படவேண்டிய செயலாகிறது.. 
அதே போல சனத் ஜயசூரியவை அப்போதைய உலக சாதனையை ஏற்படுத்த விடாமல் 340 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க செய்ததும் தவராகிறதே..




இன்னொரு முக்கியமான தகவல்..


இதுவரை ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் 99 ஓட்டங்களில் ஆட்டமிழக்காமல் நின்றவர்கள் பத்துப் பேர்..
தங்கள் அணி இலக்கை எட்டும் போது ஆட்டமிழக்காமல் 99 ஓட்டங்களோடு நின்றோர் சேவாக்கை விட மேலும் நான்கு பேர்.. 


இவர்களிடமிருந்து ஏதாவது முறைப்பாடுகள்???


இன்னும் சில சுவாரஷ்யங்களைப் பதிவில் பகிர்ந்துகொள்ள எண்ணினேன்..
இவை பல்வேறு தளங்கள்,ட்விட்டர்களில் கண்டெடுத்தவை..


ரண்டீவ் செய்தது பிழை என இலங்கை அணியின் தீவிர ரசிகர்களே ஒத்துக் கொண்ட பிறகும் பொதுமைப் படுத்தி இலங்கையரையும் இலங்கையின் ஒட்டுமொத்த அணியையும் பலர் தாக்குவது கண்டே இந்த மொக்கை போடலாம் என்று எண்ணம் வந்தது.


மொக்கைக்குள்ளும் சில முக்கிய உண்மைகள் சுட்டால் நான் பொறுப்பல்ல..


அதே ரண்டிவ் ஓவரில் முதல் பந்தை சங்கா பிடிக்கத் தவறி பை ஓட்டங்கள் நான்கு கிடைத்ததும் சங்கா வேண்டுமென்றே செய்ததாம்.. சிலர் சொல்கிறார்கள்.. இவனுங்களை என்ன செய்வது?
அடுத்த இரு பந்துகளும் ரண்டிவினால் சேவாக்கை ஓட்டம் பெறாமல் செய்த நல்ல பந்துகள் தானே?
அந்த இரண்டு பந்துகளையும் கூட அவர் நோ போல்களாகவோ,வைட்களாகவோ போட்டிருக்கலாமே? (ஒரு தர்க்கத்துக்காக)


ஒட்டு மொத்தமாக எல்லாவற்றையுமே தவறாகப் பார்த்துவிட முடியாது..


கங்கோனின் ஒரு தர்க்க நியாயப் பதிவை வெகுவாக ரசித்தேன்..
ரந்தீவின் நோ போலும் என் கருத்துக்களும்...


ஆதரவாகவும் எதிராகவும் வந்த பின்னூட்டங்களும் பல விஷயங்களை(நாம் அறியா விஷயங்களையும்) தெளிவுபடுத்தியுள்ளன.


* ரோஸ் டெய்லர்,சங்கா தயவு செய்து சேவாக்கை சதம் அடிக்க விடுங்கப்பா.. இல்லேன்னா ஊடகவியலாளர் மத்தியில் அழுதிரப்போறார்..
*மிஸ்டர்.சேவாக் பங்களாதேசைப் பார்த்து Ordinary team என்று சொன்னபோது அவர்களுக்கும் இப்படித் தானே வலித்திருக்கும்?
*ஆடத் தெரியாதவன் மேடை கோணல் என்று சொன்னானாம்..
டோனி தம்புள்ளை பயிற்சி ஆடுகளங்கள் ஆபத்தானவை என்று அழுதார்..
இப்போது சேவாக் சதம் அடிக்க விடல என்று அழுகிறார். 


Pretty lame on the part of the bowler to pull a stunt like this, but good on him for having the decency to come forward and apologize.


சச்சின் இவர்கள் அணியில் இருப்பது பெரிய ஆச்சரியம்.
*ICC இனியொரு விதி கொண்டுவரவேண்டும். யாராவது துடுப்பாட்ட வீரர் சதம் அடிக்காமல் 99 ஓட்டங்களில் ஆட்டமிழந்தால் பந்துவீசிய பந்துவீச்சாளர் மன்னிப்புக் கேட்கவேண்டும்..



Just got the news that Dilhara Fernando going all around the cricketers' rooms to apologize for his no balls. :D 


To avoid suspicion in the future SLC has ordered bowlers a no ball every 2 overs #NoBallSaga


SLC to probe about Virat Kohli and Rohit Sharma got only 0 runs. If this pre-planned, action likely against bowlers. #NoBallSaga 


What? Tharanga missed a century in the last match? Got only 0? Why they didn't bowl easy balls to him? #IamFromIndianMedia


Why indians didn't bowl easy balls to these people? http://bit.ly/9LBSsj #SehwagWants100 #IamFromIndianMedia


Indians should've bowled easy balls to help them reach 100. #SehwagWants100 


India denied century to Mahela (94*) in Dambulla, to Kandamby (93* & 91*), Mahanama (92*) by not bowling easy balls. #SehwagWants100 


*முதல் இரு பந்துகள் நல்லபடி வீசிய பிறகே ரண்டீவ் நோ போல் பந்தை வீசியுள்ளார். எனவே சேவாக்கின் இயலாமைக்கு என் சுராஜ் ரண்டீவ் குற்றவாளியாக்கப் படவேண்டும்?


*சுராஜ் ரண்டீவை தண்டிக்கச் சொல்கிறார்.. பேடி.. இவருக்கென்ன அருகதை இருக்கிறது? Sportsmanship பற்றிக் கதைக்க?
உலகின் மிகச் சிறந்த சாதனையாளரை ஏற்றுக் கொள்ள முடியாத எரிச்சல்காரர் தானே பேடி..


*ரண்டீவ் தன மீது தவறு இருக்கிறதோ இல்லையோ மன்னிப்புக் கேட்டார். ஆனால் அம்லா விவகாரத்தில் சேவாக் மன்னிப்பும் கேட்கவில்லையே?


*கட்டாயம் சதம் அடிக்க இலகுவாகப் பந்து போட்டிருக்கனுமா?எதிரணியின் வீரர்கள் பெரும் ஒவ்வொரு மைல் கல்லும் கூட எதிரணியின் வெற்றியாக அமைவதால் அதையும் கொடுக்கக் கூடாது என்பதே வீரர்களின் நோக்காக இருக்கவேண்டும்.
எனவே ரண்டீவ் செய்தது சரியே.




பவனின் எரியாத சுவடிகளில் இருந்து.. 


I DONOT THINK ITS A BIG DEAL!!!! SEHWAG CANT SAY THAT SRILANKA DID NOT WANT HIM TO GET THAT 100!!!JUST BECAUSE HE'S IN FORM DOESN'T MEAN THAT IT'S COMPULSORY TO GET HIS 100!!!!IT WOULD BE A STRANGE THING IF EVERY TEAM SHOULD ALLOW ONE OF THE OPPOSITION'S PLAYERS TO GET A 100 IF THERE ON 95 OR MORE.


அடித்தால் ஓட்டம் எடுத்து விடுவான்(சேவாக்) என சங்கா சொல்வதாக வீடியோவில் குரல் பதிவாகியுள்ளது.
அப்படிஎனினும் நோ போல் போடுமாறு சங்கா சொல்லவில்லையே?
அடிக்க முடியாதவாறு கஷ்டமான பந்தை வீசுமாறு சொல்லி இருக்கலாமே.


UDRSஐ இந்தியா முதலில் ஏற்கட்டும் அதன் பின் Sportsmanship பற்றிப் பேசட்டும்..


Dear Aravida & SLC. Please ban Randiv at least 1 year and strip the captaincy of Sanga. Both Sanga & Randiv sould be responsible & both should be punished. This is shame and ridiculus. Sanga got now Aussie attitude. He criticized India after the second test saying India had a bad/negative attitude. Thereafter SL lost 3rd test and the ODI. Who got the bad attitude by bowling a No Ball purposely? India or SL. If these two are not punished, I will never support SL cricket.


This is a joke. Randhiv apologizing for Sehwag's inability to score the century. SLC has no backbone. It wasnt intentional. If it was why did Randhiv bowled to legal deliveries to him before the no ball. ICC must make a rule - every bowler must apologize to the batsman if he fails to score a century. Grow up Sehwag


சச்சின் என்ற கண்ணியவான் எத்தனை தடவை சதங்களை மற்றவர்களால் தவறவிட்டும் எப்போதும் யாரையும் குறை சொன்னதில்லையே.. (கட்டாக் உட்பட) இவர் மட்டும் என் இப்படி ?


I think the reason behind alleging sanga directly may be that he just replaced sehwag in the icc test top batsmen?


BCCI to probe on Ojha and Ishant's resistance when Murali was trying to get 800 wickets, says it's not sportsmanship. #NoBallSaga


வேறு யார் செய்திருந்தாலும் இதைக் கணக்கெடுக்காமல் இருந்திருக்கலாம்.. இலங்கையிடமிருந்து இப்படியான கீழ்த்தரமான செயலை நாம் எதிர்பார்க்கவில்லை.


பவனின் எரியாத சுவடிகளில் இருந்து..


From the days of Ranatunga & Mendis the lankans have a hateful mentality towards Indians. Remember how Jayasurya & co. batted on for 900 odd runs in a test innings without declaring & how PM Rajiv Gandhi was attacked in lanka. The Lankans have taken us for granted & are not shying away from insulting us. The amount of money they are milking by playing India again & again is not a good gesture in their eyes & Indian players are not gaining anything by playing sub-standard competitors.Instead playing Australia will at least guarantee competitive cricket. Look at Pakistan, the moment India stopped playing with them, they are ruined financialy & their cricket is in disarray. Now is time to show the Lankan board & players their true place in the cricket heiarchy & let us show the weight of 1.25 billion people to them.


வளர்ந்து வரும் ஒரு வீரருக்கு இது அழகில்லை. ரண்டீவ் செய்தது தவறு என்ற தெரிந்த படியால் தானே சேவாக்கிடம் போய் மன்னிப்புக் கேட்டார்?


Randiv didn't want him to score a 100. Its simple as that. If a team is winning a match and one of their batsman is on 99, would you let him score 100 simply becoz u r going to lose anyway? I think Randiv did the right thing by preventing Mr Sehwag from scoring a 100 on a dead asian pitch.


இப்படியாக இரு பக்கக் கருத்துக்களும் பொங்கி வழிந்து கொண்டிருக்கின்றன..
வாதம்,விவாதம் செய்யப் போனால் தர்க்கிக்க,தாக்க ஏராளமான விடயங்கள் இருக்கின்றன.. 
யாருமே இங்கே கிரிக்கெட்டில் எல்லா நேரத்திலும் உத்தமர்கள் கிடையாது..


கிரிக்கெட்டின் வரலாற்றுப் புத்தகங்களை,அதன் கறுப்புப் பக்கங்களையும் சேர்த்தே புரட்டிப் பாருங்கள்..


இதைத் தான் கங்கோனும் இன்றைய கும்மியில் சொல்லி இருந்தார்..



ரந்தீவ் செய்தது வேணுமெண்டுதான், என்னைப் பொறுத்தவரை.
ஆனா திட்டமிடப்பட்டதல்ல...


அதுதான் என் கருத்து.


நீங்க விளையாடிக் கொண்டிருக்கும்போது சில விடயங்கள் உங்களை மீறி, உங்கட மனச்சாட்சி வேல செய்யாம நடக்கும்.


நான் ஒரு பதிவு எழுதினன் எண்டு நினைக்கிறன் நான் துடுப்பாட்ட வீரருக்கு பக்கத்தில நிண்டு ஒரு பிடிய பிடிக்கும்போது நிலத்திலயும் பந்து பட்டு பிடிச்சிற்கு ஆட்டமிழப்புக் கேட்டன் எண்டு.
அந்தக் கணத்தில ஒண்டுமே தெரியாது.
ஆட்டமிழப்புக் கேட்கும்போது எங்கள மீறினதுதான் நடக்கும்.
நடுவர்கள் அந்தப் பிடி சரியா எண்டு கதைக்கும்போதுதான் எனக்கு பந்து நிலத்தில பட்டது எண்டு நினைவுக்கு வந்தது, ஆனா எனக்கு (சுய)நினைவு வரும்போது என்னால சொல்ல முடியாது, ஏனென்டா நடுவர்கள் கதைச்சு முடிக்கிற கட்டம்.


இதுதான் கிறிக்கற்.


ரந்தீவிற்கும் இதுதான் நடந்திருக்கும்.
அந்தக்கணத்தில தன்னைத்தாண்டி அதச்செய்திற்று பிறகு அந்த மனநிலையில இருந்து வெளில வரேக்க மனச்சாட்சி உள்ள ஒவ்வொருவனுக்கும் தான் செய்தது பிழை எண்டு விளங்கும்.
வருத்தம் தெரிவிக்குமளவிற்கு ரந்தீவ் நல்ல மனதுக்காரர்.
என் மனதில நான் வேணுமெண்டு போட்டன் எண்டு எனக்கு மட்டும் தான் தெரியும்.


ஐசிசி கண்டுபிடிக்க முடியாது.


ஏன் பெரிய நோ போல் போட்டாய் எண்டு ஐசிசி கேட்டா இதுக்கு முதல் யாருமே பெரிய நோ போல் போட்டதில்லயா எண்டு தர்க்கரீதியா கதைக்கலாம்.


எனது கருத்தும் இதே..


கமல் விருமாண்டியில் சொன்னது போல.. 
மன்னிப்புக் கேட்கிறவன் மனுஷன்.. மன்னிப்புக் கொடுக்கிறவன் பெரிய மனுஷன்..


ஆனால் ஒன்று இனிமேல் எந்தவொரு பந்துவீச்சாளரும் 99  ஓட்டங்களைப் பெற்றுள்ள துடுப்பாட்ட வீரரை ஆட்டமிழக்கச் செய்ய துணியமாட்டார்..
அத்துடன் நோ போல் போடுகிற ஒவ்வொரு பந்துவீச்சாளரையும் எல்லாரும் சந்தேகப்படப் போறாங்களே.. 


போடுவியா? இனிமேல் நோ போல் போடுவியா?
  

August 14, 2010

அரோகரா அரோகரா - தேர்களின் தொல்லை

ஊர்களில் தேர்கள் எல்லாம் ஆலய வெளி வீதிகளில் ஓடும்.. அந்தக் காட்சி கண்கொள்ளாக் காட்சி.
கடவுள் பக்தி இல்லாதோருக்கும் கூட அந்த தேர்பவனிக் காட்சியின் அழகு மனதில் ரசனையைத் தரும்..


சின்ன வயதில் ஆலயத் தேர் உற்சவங்கள் எனக்கு உற்சாகம் தருவன. வழிபடப் போவதை விட வேடிக்கை பார்க்கப் போவதும்,அப்பாவை.அம்மாவை நச்சரித்து வாங்கும் விளையாட்டுப் பொருட்களுக்காகவும்..
அப்பா எங்களைத் தவறாமல் அழைத்து செல்லும் சில தேர் உற்சவங்கள், யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தன் தேர், மருதடி விநாயகர் தேர், இணுவில் ஆலயங்கள் மூன்றின் தேர்கள்(சிவகாமி அம்மன்,கந்தசுவாமி,மடத்துவாசல் பிள்ளையார்).


அப்போது கொஞ்சமாவாது பக்தி இருந்ததால் கும்பிடுவதற்காகவும் போவதுண்டு. ஆனால் அத்தனை சனக் கூட்டத்தின் மத்தியில் பக்திமயமாக ரத உற்சவங்களை நான் எப்போதுமே பார்த்ததில்லை..ரதத்தின் அழகை,வடம் பிடித்த அழகை,அரோகராக் கோஷங்களின் தொனியையும்,தேர்ச் சக்கரங்களுக்கு முட்டுக் கொடுத்து அழகாய்த் திருப்பும் அழகையும் ரசிப்பதுண்டு.


கொஞ்சம் வளர்ந்து கொழும்பு வந்தபிறகு கொழும்பு ஆலயங்களின் தேர்களுக்கு அப்பா,அம்மா அழைக்கும் போது எப்படியாவது எஸ்கேப்பாகக் காரணங்கள் கண்டுபிடித்து நானும்,தம்பிமாரும் தப்பிவிடுவதுண்டு.


அருகிலேயே இருந்த மயூரா அம்மன் தேருக்கு மட்டும் ஒன்றோ இரண்டு தடவை போன ஞாபகம்.
யாழ்ப்பாணத்தில் ஆலயத்தின் அகன்ற வீதிகளில் வலம் வந்த பிரம்மாண்ட தேர்களைப் பார்த்த எமக்கு நகர வீதிகளில் போக்குவரத்து பஸ்கள்,கார்களுக்கிடையில் இயந்திரமயமாக நகரும் இந்த சிறு தேர்கள் பிடிக்கவில்லை.


கொஞ்சம் வயசும் மனசும் பக்குவப்பட தேர் உற்சவங்கள் என்றாலே மனதில் ஒருவித வெறுப்பும் வேறு..
பின்னே ..
வீதிப் போக்குவரத்துக்களை நிறுத்தி,நேர விரயத்தை ஏற்படுத்தி.. தேவையற்ற மேலதிக செலவுகள் என்று பார்க்கும்போதே இது தேவை தானா என்று மனதில் சலிப்பும் எரிச்சலும் ஏற்படும்..


இது தனியே இந்துக் கோயில்களின் தேர் உற்சவங்களுக்கு மட்டுமல்ல.. விகாரைகளின் பெரஹெராக்கள்,கிறிஸ்தவ ஊர்வலங்களுக்கும் தான்..


அண்மையில் நடந்த ஆடிவேல் விழா ரதபவனி,கொம்பனித்தெரு சிவசுப்பிரமணிய சுவாமி தேர்,இன்று வெள்ளவத்தைப் பகுதியைத் திணறடித்த மயூராபதி அம்மன் தேர் என்று இவற்றைப் பார்த்த பிறகு மனதிலே தோன்றிய சில விஷயங்கள் தான் இவை..


பகல் நேரங்களிலே,வேலை நேரங்களிலே வீதிகளை மணிக்கணக்காக மறித்து இத்தனை ஆடம்பர ஊர்வலங்கள் தேவையா?


கடவுள் இப்படிக் கேட்டாரா?


கண் முன்னே தெரியாத கடவுளுக்காக எத்தனை அப்பாவிகளின் நேரத்துடன் விளையாடுகிறீர்கள்?


அரசியல்வாதிகள்,பிரமுகர்கள் செல்வதற்காக பாதைகள் மூடப்படும் நேரம்(இப்போது கொஞ்சம் குறைந்துள்ளது) முணுமுணுத்து சபிக்கும் உங்களைப் போலத் தானே இந்த தேர்கள்,ஊர்வலங்கள் வீதியில் செல்கையிலும் மற்றவர்கள் வசைபாடுவார்கள்?


பகல் நேரங்களை விட்டு அதிகம் வாகனப்போக்குவரத்து இல்லாத இரவு நேரங்களில் இந்தத் தேர்களை உலாவரச் செய்யலாமே.. 
யாருக்கும் தொல்லையும் இல்லை.நிறைய பக்தர்களும் வருவார்களே..


கடவுள் தேர்த் திருவிழா தான் கேட்டிருந்தாலும் இந்த நேரம் தான் நடத்தவேண்டும் என்று கேட்கவில்லையே.. 
சுபநேரம் அப்பிடி இப்படி சொல்வோருக்கு- மலையகப் பகுதிகளின் பல இடங்களில் குளிரிலும் இரவுகளில் தேர்த் திருவிழாக்கள் நடக்கிறது.


தலைநகரில் கலாசார அடையாளம் காட்டுகிறோம் என்போருக்கு - இது மட்டுமல்ல.. இன்னும் பல வழிகள் இருக்கின்றன.. அவற்றிலே உங்கள் கலாசார வெளிப்பாடுகள்,பக்தி வெளிப்பாடுகளைக் காட்டுங்கள்.


அவசர வேலைகள்,கடமைகள்,ஏன் ஆபத்துக் கட்டங்களில் வைத்தியசாலை செல்வோரைத் தொல்லைப் படுத்தாதீர்கள்.


இன்று வெள்ளவத்தையில் மயூராபதி அம்மன் திருவிழாக்கோலம் பூண்டு வீதிவலம் வந்தபோது பாதைகள் திருப்பிவிடப்பட்டு,வழமையாக நான் பத்து நிமிடங்களில் கடக்கும் தூரத்தை அரை மணி நேரம் சென்றும் கடக்க முடியாமல் கடுப்புடன் காத்திருந்தவேளையில் அருகே என் போலவே நின்றிருந்த வாகனங்களில் இருந்தோர் திட்டிய திட்டுக்கள்(அதில் ஒரு வாகனத்தில் ஒரு வயோதிபரை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்கிறார்கள் - நாங்கள் கொஞ்சப் பேர் பாதையை விலக்கி,வாகனங்களை ஒதுக்கி வழியேற்படுத்திக் கொடுத்தோம்) பக்தர்களுக்கு தான் என்றால் பக்தர்களைக் காத்து அருள் புரியும் அம்மனுக்கும் சாரும் தானே?


எல்லாம் பணம் செய்யும் வேலை.. வசூலுக்குத் தான் பகல் வேளை ,பிரதான வீதித் தேர் உற்சவம் என்றார் ஆலய சபையொன்றில் இருக்கும் நம்ம நண்பர் ஒருத்தர்.
சுவாமியைக் காட்டி வியாபாரிகள்,பெரிய வர்த்தகர்களிடம் காணிக்கை பெறும் முயற்சியாம் இது..
கடவுளே.. 


ஒரு பக்கம் போலி சாமியார்கள்,போலி பகவான்கள் சமயத்தின் பெயர்களை நாறடித்து இளையவர்களை சமயத்திலிருந்து தூர விரட்டிக் கொண்டிருக்கும் நேரத்தில் இப்படியான ஆடம்பரங்கள்,அலங்கார ஊர்வலங்கள் சாமானியர்களை சமயங்களின் மீதும் சாமிகள் மீதும் இன்னும் தூரப்படுத்தும் என்பதையும் சம்பந்தப்பட்டவர்கள் உணரவேண்டும்.




நாளுக்கொரு புத்தர் சிலைகள் ஒவ்வொரு மூலையில் முளைப்பது போலவே, சின்ன சின்ன சிலைகள் வைத்துள்ள கோவில்கள் எல்லாம் அனுசரனையாளர்களோடு பெரிசாகிக் கொண்டிருக்கின்றன.
நாளை ஒரே நாளில் ஐந்து கோவில்களின் தேர்கள் ஓடலாம்..
மக்கள் எப்பாடு பட்டால் என்ன?


இதைத் தட்டிக் கொண்டிருக்க விமான நிலையம் சென்று கொண்டிருக்கும் என் நண்பர் குகன் அனுப்பிய sms "விமான நிலையம் செல்லும் பாதையில் போக்குவரத்து நெரிசல்"


என்ன காரணம் என்று கேட்டு அனுப்பினேன்..


"எதோ ஒரு புத்த விகாரையின் பெரஹெராவாம்"


அரோகரா... சாரி.. அனே தெய்யனே..

பி.கு - இந்தப் பதிவில் இரு படங்களை (மயூராபதி அம்மன் தேர்) பதிவர் மாயாவின் தளத்திலிருந்து பெற்றேன் 

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner