May 25, 2011

அழகர்சாமியின் குதிரை



சில திரைப்படங்கள் பார்க்கும்போது இதற்குமேல் இந்தப் படத்தை வேறு யாராலும் சிறப்பாக எடுத்திருக்கவோ, வேறு யாராலும் நடித்திருக்கவோ முடியாது என்று திருப்தியாகத் தோன்றும்..
அப்படியான ஒரு ரசனையான படம் அழகர்சாமியின் குதிரை.

பாஸ்கர் சக்தியின் சிறுகதையாக வாசித்திருந்த அழகர்சாமியின் குதிரை திரைப்படமாகவும் அதே கம்பீரத்துடனேயே உலா வருகிறது.

வெண்ணிலா கபடிக்குழு, நான் மகான் அல்ல அடுத்து இது என மூன்று வெவ்வேறான தளங்களில் வித்தியாசம் காட்டிவரும் இயக்குனர் சுசீந்திரன் கவனிக்க வைக்கிறார். இவர் இயக்கும் அடுத்த படத்தை இப்போதே எதிர்பார்க்கும் முதலாமவன் நான் ஆகட்டும்.

சிறுகதைகளோ நாவல்களோ திரைப்படங்களாக மாறும்போது இயல்புகள் மீறப்படுவதும்,  மூலப்பிரதியில் கண்டசுவை இல்லாமல் போவதும் பல தடவை நாம் கண்ட அனுபவம்.

ஆனால் அழகர்சாமியின் குதிரையில் அந்தக் குறை இல்லாததற்கான காரணம் /காரணங்கள் என நான் நினைப்பது....
படத்தில் முக்கியமான பாத்திரங்களை ஏற்றிருக்கும் அநேகர்/ எல்லோருமே புதுமுகங்கள்.. இதனால் பாத்திரங்களில் நடிக,நடிகையரின் இமேஜ் உறுத்தல்கள் தொற்றவில்லை.
இசைஞானியின் மூன்றே மூன்று பாடல்கள் என்பதால் படத்தின் கதையோட்டத்தை அவை பாதிக்கவில்லை.
சிறுகதையில் தரப்பட்ட பாத்திரங்கள் தவிர எவற்றையும் நகைச்சுவைக்காக இயக்குனர் இணைக்கவும் இல்லை; கிளைக்கதைகள் எவற்றையும் புகுத்தவும் இல்லை.

ஆனாலும் கதையை எதுவித மாற்றமும் இல்லாமல் திரைக்கதையை சுசீந்திரன் உருவாக்கி இருப்பது முதல் பாதியின் மெதுவான நகர்வுக்குக் காரணம் என நினைக்கிறேன்.. 

பாஸ்கர் சக்தி இத் திரைப்படத்தின் இணை இயக்குனராகவும் இருப்பது படத்தின் மற்றொரு பலம் போல் தெரிகிறது. 

மூடநம்பிக்கைகளும், போலியான கடவுளர் உருவாக்கமும் சாதாரண மக்களின் வாழ்வில் செலுத்தும் தாக்கமும், கிராமங்களில் இந்தக் கடவுள்களும் கடவுள்களின் ஏஜென்ட்களான மந்திரவாதிகள், பூசாரிகள் செய்கின்ற பித்தலாட்டங்களும் கதையில் நன்றாக உரிபடுகின்றன.

தேனிப்பக்கம் உள்ள மலைப்பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள இந்தப் படம் கண்ணுக்குக் குளிர்ச்சியாக வருவதை மண்ணின் மைந்தன் தேனி ஈஷ்வர் உறுதிப்படுத்தியுள்ளார்.
கண்ணுக்கு உறுத்தலும் இல்லை; தேவையற்ற தொழினுட்பங்களும் இல்லை.
இயக்குனர் சொல்ல வந்த கதையை எங்கள் கண்களுக்கு நாங்களே பார்ப்பதாகக் காட்டியுள்ள ஒளிப்பதிவும், சிரத்தையான நேர்த்தியான படத்தொகுப்பும் சர்வதேசத் திரைப்படமொன்றின் பிரமிப்பை வழங்குகின்றன.
(படத்தொகுப்பு - காசி விஸ்வநாதன்)

அண்மையில் பார்த்த சில ஜப்பானிய, சீன மொழித் திரைப்படங்களில் மனதை அள்ளும்சிறு சிறு உணர்ச்சி சித்திரப்படுத்தல்கள் இதிலும் உண்டு.
சில காட்சிகள் ஏனோ மைனா படத்தைக் கண்ணுக்குள் கொண்டு வந்தன. எடுக்கப்பட்ட மலைப்புறப் பிரதேசங்களாக இருக்கலாம். 

இளையராஜாவின் பாடல்கள் மூன்றும் கதையுடனேயே இணைந்து பயணிப்பதால் அவை பற்றிப் பேசாமல், இசை பற்றி அதிகமாகவே சிலாகிக்கலாம்.. 
பல இடங்களில் இசையைப் பேச விட்டுள்ளார் ராஜா.. பல இடங்களின் காட்சிகளின் வசனங்கள் தரும் உணர்ச்சிகளை விட இளையராஜாவின் இசை தரும் அழுத்தம் அதிகம்.

வழமையாக இப்படியான சில கலைப்படங்களில், அல்லது மசாலா இல்லாத வித்தியாசமான படங்களில் கமல்ஹாசன், விக்ரம் அல்லது சூர்யா போன்றோர் தங்கள் உடலை வருத்தி, அழகைக் குறைத்துக் குரூபிகளாக நடிப்பதைத் தமிழ்த் திரைப்படங்களில் பார்த்துப் பழகிய எமக்கு அப்புக்குட்டி ஒரு அதிசயமான மகிழ்ச்சி.

தமிழ்த்திரைப்பட கதாநாயகர்களுக்கான எந்தவொரு இயல்பும் இல்லாத அவலட்சண தோற்றம், குள்ள உருவத்தோடு இந்தக் கதையின் நாயகனாக அப்புக்குட்டி.
குதிரைக்கும் அப்புக்குட்டிக்கும் இருக்கும் பாசம், நெருக்கம் நெகிழ்ச்சியைத் தருவதாகக் காட்சிப் படுத்தப்படுகிறது.. அப்புக்குட்டி காட்டும் உணர்ச்சிப் பிரவாகத்துக்கேற்ற குதிரையின் அசைவுகளும், பின்னணி இசையும் டச்சிங். 

இதற்கு முதல் அப்புக்குட்டியை சிறு பாத்திரத்தில் குள்ள நரிக் கூட்டத்தில் பார்த்து ரசித்திருந்தேன்.
இதில் கனதியான பாத்திரமொன்றை ஏற்று சிறு சிறு உணர்ச்சிகளையும் கொட்டிக் கலக்கி இருக்கிறார்.
ஆனால் இனி? ஒரு காமெடியனாக, கோமாளியாக எம் தமிழ்த் திரையுலகம் அவரை மாற்றிவிடும். எம்மை ஏமாற்றிவிடும்.. 
பாவம்.

சரண்யா மோகன் இவரின் ஜோடி என்பதால் மட்டும் கதாநாயகி ஆகப் பார்க்கப்படுகிறார். கொஞ்ச நேரமே வந்தாலும் மனதை அள்ளிக் கொள்கிறார்.
அழகான சரண்யாவுக்கும் அப்புக்குட்டிக்கும் எப்படி திருமணம்? ஏன் என்று அழுத்தமாக, அழகாக சொலும் கட்சி நறுக். 

காதல் ஜோடியாக கண்ணால் கதை பேசும் பிரபாகரன்-அத்வைதா ஜோடி கவர்ந்தது.
பிரபாகரன் முக்கியமான கட்டங்களுக்குத் தேவைப்படுகிறார்.
அத்வைதா அழகாக இருக்கிறார். கண்களால் பேசத் தெரிந்துள்ளது. நல்ல படங்களாப் பார்த்துக் குடுங்கப்பா.. 


போலீசாக வந்து போலி சாமியாராக மாறும் சூரி கலகலக்க வைக்கும் ஒரு பாத்திரம்.கதையோடு ஒட்டிச் செல்லும் நகைச்சுவையில் ரசிக்க வைக்கிறார். கிடைக்கும் வாய்ப்புக்களில் வெளுத்துவாங்கும் சூரியை யாராவது தொடர்ந்து முக்கிய படங்களில் பயன்படுத்தலாம்.

போலீஸ் அதிகாரி, கிராமத் தலைவர், கோடாங்கி, ஆசாரியார், பொன்னம்மா, கோடாங்கியாரின் மனைவி, மைனர் என்று அச்சு அசல் இயல்பான தெரிவுகள்.
ரசிக்க வைக்கும் இயல்பான நடிப்புக்கள்; கதையுடன் கூடவே பயணிக்கும் சிம்பிளான நகைச்சுவைகள்..

கிராமத்துக்கே தெய்வமான அழகர்சாமியின் வாகனமாக இருக்கும் மரக்குதிரை காணாமல் போய் விடுகிறது. கிராமத்துக்கு தெய்வ குற்றம் வந்து மழை வராமல் போய்விடும் எனப்பயந்து,அதைத் தேடித் திரிந்து போலி மாந்திரீகவாதி ஒருவனின் வழிகாட்டலில் உண்மையான வெள்ளைக் குதிரை ஒன்று அகப்பட்டுவிடுகிறது. அந்தக் குதிரையே தங்கள் கடவுளின் குதிரை என்று கட்டிவைக்க, குதிரையின் உண்மையான சொந்தக்காரனான அழகர்சாமி வேறு ஊரிலிருந்து வருகிறான்..
அந்தக் குதிரையுடன் அவன் சொந்த ஊர் செல்லாவிட்டால் அவனுக்குத் திருமணம் நடக்காது.. 
அதன் பின் நடப்பவை தான் முடிவாக..

கடவுளின் பெயரும் உயிர்க் குதிரையின் சொந்தக்காரனின் பெயரும் அழகர்சாமி என்பதிலிருந்து பல இடங்களில் மூட நம்பிக்கைகளையும் கடவுள், பக்தி போன்றவற்றை முட்டாள் தனமாக நம்புவதையும் கிண்டலாக, குத்தலாக சாடுகிறது திரைப்படம்.

அதுவும் கடைசிக் காட்சிகள்.. கலக்கல்..
ஓவராகப் பிரசாரப் படுத்தாமல் மேலோட்டமாகக் கதையுடனேயே இப்படியான மூடநம்பிக்கைக் கிழிப்பு இருப்பது ரசிக்கவைக்கிறது.

முதல் பாதியில் கொஞ்சம் வேகத்தைக் கூட்டி அந்தக் காதல் பாடலையும் தவிர்த்திருந்தால் இன்னும் அழகர்சாமியின் குதிரையின் ஆரோகணித்து நாம் பயணித்திருக்கலாம்..

ஆனாலும் தாதாக்களையும், தாத்தாக்களையும் வைத்து அரைத்த மாவையே அரைக்கும் தமிழ் சினிமாவுக்கு இப்படியான படங்களும், இயக்குனர் சுசீந்திரன், கதாசிரியர் பாஸ்கர் சக்தி போன்றோரும் புதிய ஊட்டச் சத்துக்கள்.
பாராட்டுக்கள் இவர்களுக்கு..

ஆனாலும் எனக்கு மனத் திருப்தியாக உள்ளது..
சுசீந்திரன் எனது அபிமானத்துக்குரிய இயக்குனர்களில் ஒருவராக இப்போதே மாறியுள்ளார்.

அழகர்சாமியின் குதிரை - அமைதியான ரசனையான சவாரிக்கு 

May 24, 2011

ஒபாமா - ஐயோ அம்மா... இலங்கையின் மிகச் சிறந்த கிரியேட்டிவ் ஆன நகைச்சுவைப் பதிவு ;)


ஜாலியான தமிழில் தான் இந்த ஜோக் வேண்டும் என்றால் நல்ல ஜாலியான பதிவர் யாரையாவது அணுகி மொழிபெயர்த்துக்கொள்ளுங்கள் ஜாலி மக்காள்ஸ்.. 



அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும் கனேடியப் பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பரும் ஒருநாள் சந்தித்துக் கொண்டார்கள்..
நம்ம கஞ்சிபாய் கண்டுபிடித்த ஒரு காலயந்திரம் - Time Machineஅவர்களுக்குக் காட்சிப்படுத்தப்பட்டது.

இந்தக் கால யந்திரத்தின் ஸ்பெஷல் என்னவென்றால் ஐம்பது வருடங்களுக்குப் பின்னதான எதிர்காலத்தைத் துல்லியமாக சொல்லும் ஆற்றல் இருந்தது தான்.

ஒபமா முதலில் அதன் அருகே போய் " ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னர் அமெரிக்கா எப்படி இருக்கும்" எனக் கேட்டார்..

உடனே அந்தக் கால யந்திரம் ஒரு சீட்டை வெளியே தள்ளியது..

அதில்...

நாடு புதிய ஜனாதிபதி ஜோஸ் பெர்னாண்டேசின் ஆட்சியில் மிகுந்த பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் தன்னிறைவு பெற்றதாகவும் இருக்கும். பாதுகாப்புப் பிரச்சினைகள், வன்முறைகள் இருக்காது..

எந்தவொரு பிரச்சினையும் இல்லை. பொருளாதாரமும் சீராக இருக்கிறது.
உப ஜனாதிபதி ஜின் டவோ சீன மொழியைக் கட்டாய மொழியாக எல்லாப் பாடசாலைகளிலும் அறிமுகப்படுத்தியிருக்கிறார்"

வாசித்து முடித்த ஒபமா நெற்றியில் துளிர்த்த வியர்வையைக் கைக்குட்டையால் துடைத்துக் கொண்டே போய் அமர்ந்துகொண்டார்.

அடுத்து கனேடிய பிரதமர், "ஐம்பது ஆண்டுகளின் பின்னர் கனடா எப்படி இருக்கும்?"

கால யந்திரம் - Time Machine முன்பு தந்தது போலவே ஒரு துண்டு சீட்டை வெளியே தள்ளுகிறது..
அதை எடுத்த ஹார்ப்பர் அப்படியே வெறித்துப் பார்த்துக் கொண்டு நிற்கிறார்.

"யோவ் ஹார்ப்பர் என்னைய்யா இது? நான் சொன்னனே தானே? நீரும் சொல்லும் என்ன எழுதியிருக்கெண்டு" ஒபாமா ஆர்வத்துடன் கேட்கிறார்.

"தெரிஞ்சா சொல்ல மாட்டேனா? எல்லாமே 'தமிழில்' இருக்கே.. .. ஒண்ணுமே புரியல"



பி.கு - விடியலில் இன்று காலை சொன்னது

சிரிப்பு வரலேன்னாக் கூட எனக்காகக் கொஞ்சம் சிரிச்சுக்கோங்க.. வோட்டுப் போடாமல் போனாலும் பின்னூட்டம் போடமால் போனாலும் கூட நான் கோபித்துக்கொள்ள மாட்டேன் ;)
ஆனால் கிரியேட்டிவ் இல்லையென்று மட்டும் சொல்லப்படாது..
அழுதிருவேன்..


May 20, 2011

இந்துக் கல்லூரியும் இலங்கை ஜனாதிபதியும்



கடந்த ஞாயிற்றுக் கிழமை, நான் கல்வி கற்ற கொழும்பு பம்பலப்பிட்டிய இந்துக்கல்லூரியின் வைர விழாக் கொண்டாட்டங்களை முன்னிட்டு நடைபெற்ற கலை கலாசார நிகழ்வுகளுக்கு செல்லும் வாய்ப்புக் கிட்டியது.

சிறப்பு அழைப்புக் கிடைத்தும் உள்ளே நுழைவதற்குள் கொஞ்சம் சலித்துவிட்டது.

அதிமேதகு ஜனாதிபதி பிரதம விருந்தினராக வருகை தருவதால் இறுக்கமான மிக இறுக்கமான பாதுகாப்பு ஏற்பாடுகள்..
வாகனத்தை தொலைவில் நிறுத்திவிட்டு, உடலில் இன்னொரு உறுப்பாகவே கடந்த சில வருடங்களாக ஒட்டியுள்ள செல்பேசியையும் உள்ளே வைத்துவிட்டுத் தான் விழா நடந்த கல்லூரி மைதானத்துக்குள் நுழைய முடிந்தது.

கல்லூரியின் விளையாட்டு அரங்கு (பவிலியன்)க்கு முன்னால் அமைக்கப்பட்ட பிரம்மாண்டமான மேடையும், மேடைக்கு சில அடிகள் முன்னால் அமைக்கப்பட்ட தடுப்பின் பின்னால் அமைக்கப்பட்ட தற்காலிகக் கொட்டகையும் மைதானத்தின் புற்றரையை முக்கால்வாசியாவது மறைத்திருந்தன.

மைதானத்தில் நிறைந்திருந்த மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்களுக்கு ஈடாக ஜனாதிபதிக்கான பாதுகாப்புக்காகக் குவிக்கப்பட்டிருந்த பாதுகாப்புப் படையினரும் இருந்தனர்.

தலைநகரில் அறுபது ஆண்டுகளைக் கடந்து தனித்துவத்தை இழக்காமல் ஒரு பாடசாலை தனித்தமிழ் மொழியில் (கடந்த சில வருடங்களாக ஆங்கில மொழிக் கல்வியும் உள்ளது) இயங்கி வருவது உண்மையில் பெருமைப்படக்கூடிய விஷயம் தான்.

சிற்சில சலசலப்புகள், சர்ச்சைகள் (அதிபர், அதிகார சர்ச்சை) ஆங்காங்கே கல்லூரியை இடையிடையே 'பிரபலம்' ஆக்கிக் கொண்டிருந்தாலும் கல்லூரியின் கல்வித் தரமும், வளர்ச்சியும் ஏறுமுகமாகவே இருந்துவருகிறது.

நாற்பதாவது வருடப் பூர்த்தியைக் கல்லூரி கொண்டாடியபோது தேசியப் பாடசாலையாகத் தரம் உயர்த்தப்பட்டது இன்னமும் மனதிலே பசுமையாக நினைவில் உள்ளது.

அது என் கொழும்பு இந்துக் கல்லூரி வாழ்க்கையில் முதல் வருடம். அதற்கு முதலும் ஒரு இந்துக் கல்லூரி தான் எனக்குப் பாடசாலையாக இருந்தது. (யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி)

கொழும்பின் முதலாவது தமிழ்த் தேசியப் பாடசாலைக்கு இலங்கையின் அரச தலைவரின் முதல் விஜயம் என்று மேடையில் அறிவிப்பு செய்துகொண்டிருந்த அறிவிப்பாளர் மூன்று தடவையாவது சொல்லி இருப்பார். ஆனால் உண்மை அதுவல்ல..

ஜனாதிபதி ராஜபக்ச எமது பாடசாலைக்கு விஜயம் செய்வது இதுவே முதல் தடவையாக இருக்கலாம்.

ஆனால் இலங்கையின் அரச தலைவர் இந்துக் கல்லூரிக்கு வருவது இது முதல் தடவையல்ல என்பது அங்கே இருந்த அனேக ஆசிரியருக்கும், என் போன்ற நீண்ட காலம் கல்லூரியில் கற்ற பழைய மாணவருக்கும் நன்றாகவே ஞாபகம் இருக்கக் கூடியவை.

அது 1991ஆம் வருடம்..

எம் இந்துக் கல்லூரி நாற்பதாவது அகவையைப் பூர்த்தி செய்த அந்த வருடத்தில் எம் பழைய மாணவர்கள், அபிவிருத்தி சபையினர், கொழும்பு கல்வியியலாளர்கள் பலரின் ஒன்றுபட்ட முயற்சியினாலும், அப்போதைய கல்வி ராஜாங்க அமைச்சராக இருந்த திருமதி ராஜமனோகரி புலேந்திரனின் தூண்டுதலாலுமே இந்துக் கல்லூரி கொழும்பின் முதலாவது தமிழ் தேசிய பாடசாலையாகத் தரமுயர்த்தப்பட்டது.

அந்த ஆண்டு எனக்கு மறக்க முடியாதது.. கல்லூரியில் முதல் ஆண்டிலேயே நடந்த பரிசளிப்பு விழாவில் எட்டு பரிசுகள்..

அதுவும் பரிசளிப்பு விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட அப்போதைய ஜனாதிபதியான பிரேமதாசவின் கைகளினால்.
முதல் தடவையாக வெள்ளை முழுநீளக் கால் சட்டை அணிந்து நின்ற பெருமிதம் இருந்தாலும் மனதில் அப்போதிருந்த ஒரே ஒரு விடயம், பிரேமதாசவிடமிருந்து எனக்குப் பரிசும் சான்றிதழும் கிடைக்கக் கூடாது என்பது தான்.. ஆனால் எனது பெயர் வாசித்தபோது அவர் தான் சான்றிதழ்களைக் கொடுத்தார்..

அந்தப் பரிசளிப்பு விழா நடந்தது பவிலியனில்.. இப்போதைப் போல அவ்வளவு கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்கவில்லை என்றே ஞாபகம்.
எனவே தான் முன்னர் ஜனாதிபதியொருவர் இந்துக் கல்லூரியின் பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டது என்னைப் பொறுத்தவரை நன்றாகவே ஞாபகம் இருக்கிறது.

ஆனால் இரண்டு முக்கிய விஷயங்கள்..

அப்போது ரணசிங்க பிரேமதாச தமிழில் உரையாற்றவில்லை..
ஜனாதிபதி மகிந்த ஒரு தமிழ்ப் பாடசாலைக்கு செல்வது இதுவே முதல் தடவை...

கவனித்த ஒரு சில விஷயங்கள்...

ஜனாதிபதியை வரவேற்ற அவர் பாணியில் சால்வை அணிந்த சிறார்கள்..
ஆனால் பவம் அவர்கள் ஒரு மணி நேரத்துக்கு மேலாக கொடிகளை ஆட்டிக் கொண்டு நின்று கொண்டிருந்தார்கள்.


மாலை வெயில் முகத்துக்கு அடிக்க கைகளால் அல்லது அழைப்பிழ்களால் கண்ணைக் கூசும் வெயிலை மறைத்துக் கொண்டிருந்த என் போன்ற முன் வரிசை விருந்தினர்கள்..


ஜனாதிபதியிடம் பாடசாலை, பாடசாலை சமூகம் சார்பாகக் கோரிக்கை முன்வைத்தவர்களின் அந்தக் கால ஆங்கில உச்சரிப்புக் கொஞ்சம் கடுப்பேற்றியது. இவ்வளவுக்கும் நன்றாகக் கற்றுத் தேர்ந்த புலமை வாய்ந்தவர்கள்...
அத்துடன் எல்லோருமே தனியே நீச்சல் தடாகத்தைக் கோருவதிலே குறியாக இருந்தார்கள்.

இதிலும் இந்தியாவிருத்திச் சங்கத்தின் பொதுச் செயலாளர் பேசும் நேரம் ஜனாதிபதியைப் புகழ்வதாக முன்னைய ஆட்சியில் பாடசாலைக்கு எதுவும் கிடைக்கவில்லை என்று குறைவாக சொல்லியது அவ்வளவு நாகரிகமாகப் படவில்லை.

ஜனாதிபதியின் உரையை ரசித்தேன்.. (உடனே யாராவது வந்து கும்மாதேங்கப்பா)

சிங்களத்தில் அவர் பேசப் பேச அறிவிப்பாளர் தமிழில் மொழிபெயர்த்துக் கொண்டிருந்தார்.
கொஞ்ச நேரத்தில் ஜனாதிபதி வழமையாகவே அவர் தமிழர் மத்தியில் பேசும்போது செய்வதைப் போல,
"இங்கே நீங்கள் யாரும் சிரிக்கவில்லை என்றால் நான் எனக்குத் தெரிந்த தமிழில் பேசுகிறேன்" என்று ஆரம்பித்தார் பாருங்கள்...
"நான் இங்கே வந்ததைப் பாடசாலைக்குப் பெருமையான விஷயமாகப் பலர் சொன்னீர்கள்..

ஆனால் உண்மையில் இந்தப் பாடசாலைக்கு வந்தது எனக்குத் தான் பெருமை " என்று கரகோஷங்களை அள்ளிக் கொண்டவர், விடாமல் கஷ்டமான தமிழ் வார்த்தைகளையும் கடித்துத் துப்பி அரை மணிநேரத்துக்குக் கிட்ட சொற்பொழிவாற்றினார்.

அதிலே ரசித்த முக்கிய விடயம்.. சில தமிழ் சொற்றொடர்களை சொல்லிமுடித்து அதன் அர்த்தத்தை சிங்கள மொழியில் சொன்னது.. Tele prompterகள் முன்னால் இருந்தும் அதைத் தான் பயன்படுத்தவில்லை என்று காட்ட இந்த யுக்தியா?

ஆனால் கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்திய விடயம், Diaspora என்று புலம்பெயர் தமிழர் பற்றிக் காட்டமாக ஜனாதிபதி சொன்ன சில விஷயங்கள்..

"இங்கே இருக்கும் உங்களுக்குத் தான் இந்த நாட்டின் உண்மை நிலவரங்கள் தெரியும்.. வெளிநாட்டிலிருந்து ஒரு போதும் இங்கே வராமல் இந்த நாட்டைப் பற்றிப் பேசுவோர் இங்கே வந்து பார்க்கவேண்டும்.. அவர்களில் பலருக்கு தமிழே தெரியாது... " அப்படி அண்மைக் காலத்தில் புலம் பெயர் தமிழர்களைத் தாக்கும் தன் வழமையான பிரசங்கத்தையே நடத்தி முடித்தார்.

ஆனால் ஒவ்வொரு பஞ்ச் வசனங்களுக்கும் கிடைத்த கரகோஷங்களைப் பார்த்தால் அன்றைய கூட்டம் மேலதிகமாக ஒரு ஆயிரம் வாக்குகளை மேதகுவுக்குக் கொடுக்கும் போலத் தெரியுது..
அவரது உரை முடிந்து விருதுகள் வழங்கி விடைபெற்றதுடன் பலரையும் காணவில்லை..
பாதுகாப்புகளும் வாபஸ்..

ஜனாதிபதி சென்ற பின் கலைஞர் கருணாநிதி எழுதி இசைப்புயல் இசை அமைத்த 'செம்மொழியாம்' பாடலுக்கான நடனம் ஆரம்பித்தது..
உலகத்தை நினைத்தேன் சிரிப்புத் தான் வந்தது..

கவனித்த இன்னொரு விடயம்...

அதிபர் அடுத்த நாளுடன் தான் பதவி விலகுவதை மேடையில் அறிவித்திருந்தார்.. ஒரு பிரம்மாண்ட விழாவேடுத்துத் தான் இந்த அறிவித்தல் வரும் என்பது பலரும் எதிர்பார்த்தது தான்..

ஆனால் அவர் சொல்லாமலே இன்னொருவர் அவரது இறுதி நாளாக அதிபர்  அறிவித்த நாளை விடுமுறை தினமாக இன்னொருவர் அறிவித்தது எதோ ஒன்றை சொல்வது போல் இருந்தது..

எப்போ வரும் நீச்சல் தடாகம் என்று பலர் யோசித்துக் கொண்டிருக்க, புதிய அதிபர் எப்படியிருப்பார், யார் வருவார் என்று சிலர் குழம்பிக் கொண்டிருக்க காத்திருந்த நண்பன் ஒருவனின் பிறந்தநாள் பார்ட்டி ஒன்றில் வெளுத்து வாங்குவதற்காக நான் புறப்பட்டேன்..

பி.கு - படங்கள் Facebookல் J A L A l THASS STUDIO  இருந்து எடுத்துக் கொண்டேன். நன்றிகள்..
எனது புகைப்படம் ஒன்றையும் ஏற்றாமல் விட்டதற்குக் கண்டனங்கள்.

வைர விழா சிறப்பிதழ் அழகாகவும், நேர்த்தியாகவும் இருக்கிறது..

May 11, 2011

'தலைவர்' டில்ஷான்


இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய தலைவராக டில்ஷான் அறிவிக்கப்படும்போதே இட எண்ணிய பதிவு இது..  ஆனால் இங்கிலாந்து தொடர் ஆரம்பிக்கு முன்னராவது இந்தப் பதிவை இட முடிந்தது மகிழ்ச்சியே.

இலங்கை கிரிக்கெட் அணிக்குள், தேர்வில், தேர்வாளரில் + தலைமைத்துவத்தில் இருந்த சிக்கல்கள் அத்தனையும் தீர்ந்து சுமுகமான சூழல் திரும்பியுள்ளது ஆறுதல் தருகிறது.

(ஹஷான் திலகரட்ன கிளப்பியுள்ள ஆட்ட நிர்ணயக் குற்றச்சாட்டு என்ற புதிய பூதம் இன்னும் உறுதியாகாத தனிக்கதை- உறுதியாகும் வரை எவையும் வதந்திகளே)
டில்ஷான் தலைமைக்குப் பொருத்தமானவரா இல்லையா என்ற கேள்விகளுக்கு அப்பால், நான் எனது முன்னைய கிரிக்கெட் பதிவில் சொன்னதுபோல, தற்போதைய சூழலில், சங்கக்கார, மஹேல ஆகியோருக்கு அடுத்தபடியாக டில்ஷான் தான் இருக்கிறார் என்பதே முக்கியமானது.
இவருக்கு நேரடிப் போட்டியாகக் கருதப்பட்ட அஞ்சேலோ மத்தியூஸ் அனுபவமும் குறைந்தவர்; உபாதைக்கும் உள்ளாகியுள்ளார். இவர்கள் நால்வரைத் தவிர மூன்று விதமான கிரிக்கெட்டிலும் விளையாடுவோர் இலங்கை அணியில் வேறு இல்லை.

டில்ஷான் தலைவராகத் தெரிவு செய்யப்படுவதை எதிர்த்தோர் (நானும் தான்) முன்வைத்த காரணங்கள் - தனிப்பட்ட ஒழுக்கக் குறைபாடு, ஆவேசப்படக் கூடியவர், தலைவராகப் பக்குவமான மனோபாவமோ, உதாரணபுருஷராக இருக்கக் கூடிய இயல்போ இல்லை, துடுப்பாட்டத்தில் நிதானமில்லாத, அவசரப்படும் அணுகுமுறை, சங்கக்காரவை விடவும் வயது அதிகம் (அணியிலேயே தற்போது வயது கூடியவாறான சமரவீரவை விடவும் சில நாட்களே இளையவர் டில்ஷான்)

டில்ஷானுக்கும் சர்ச்சைகளுக்கும் அப்படியொரு நெருங்கிய உறவு என்பதும் இவருக்குத் தலைமைப் பதவி வழங்குவதை (நானுட்பட) பலர் விரும்பாமைக்கான காரணம் இருந்தது..

திருமண முறிவு, அதன் பின் ஊக்க மருந்து அல்லது போதை மருந்து உட்கொள்ளல், சிம்பாப்வே சுற்றுலாவின் போது(டில்ஷான் முதல் தரம் தலைவராகக் கடமையாற்றிய ஒருநாள் தொடர்) இளம் பெண் மீதான பாலியல் வன்முறைக் குற்றச் சாட்டு, கிரிக்கெட் சூதாட்டம்/நிர்ணயத்தில் தொடர்பு .. ஆனால் இவை எவற்றிலும் டில்ஷான் குற்றவாளி என்று ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்படவில்லை..
அதன் பின் ரண்டீவை சேவாகுக்கு எதிராக நோ போல் வீசத் தூண்டியமை யார் மறந்தாலும் இந்திய ரசிகர்களுக்கு மறக்காது..

ஆனால் இந்த சர்ச்சைகள் ஏற்படும்போதெல்லாம் டில்ஷான் உறுதியாகத் துடுப்பாட்டம் மூலமாகத் தன்னை நிரூபித்து வந்திருக்கிறார்.. அதற்குக் காரணம் அவரிடம் உள்ள தன்னம்பிக்கை. ஆனால் இந்தத் தன்னம்பிக்கை கொஞ்சம் அதிகமாகப் போகும் நேரங்களில் அவசரப்பட்டு ஆட்டமிழப்பதும் உண்டு.

ஆனால் அத்தனையையும் கடந்து திலகரட்ன டில்ஷான் தலைவராக நியமிக்கப்பட்ட தேவை +காரணம் & நிர்ப்பந்தம் - வேறு பொருத்தமானவர் யாரும் இப்போது இன்மை & குறுகிய கால நோக்கத்துடனான, தோல்வியைத் தவிர்க்க எண்ணிய எண்ணமே.

(புதிய, இளைய ஒருவரை ரிஸ்க் எடுத்துத் தலைவராக நியமித்து அதிக சேதாரத்தை இந்த சூழ்நிலையில் சந்திக்க இலங்கை தயாராக இல்லை.. தென் ஆபிரிக்காவின் கிரேம் ஸ்மித், இந்தியாவின் தோனி, ஆஸ்திரேலியாவின் பொன்டிங் உதாரணங்கள் இங்கே, இப்போது பொருந்தா.. அந்த மூன்று 'இளைய' தலைவர்களுக்கும் அனுபவம் வாய்ந்த அணி , குறிப்பாக அனுபவம் +பலம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் இருந்தார்கள். இலங்கையின் நிலை இப்போது அப்படியல்ல..

முரளியும் இல்லை; போதாக்குறைக்கு மாலிங்கவும் டெஸ்ட் குழுவில் இல்லை.

இப்படி ஒரு சூழ்நிலையில் அனுபவம் வாய்ந்தவரான டில்ஷானின் தெரிவு நிகழ்ந்திருப்பது நியாயமானதாகவே படுகிறது.

இங்கிலாந்துத் தொடருக்குப் பிறகும் இந்த வருட இறுதி வரையாவது டில்ஷான் தலைவராகத் தொடர்வது இலங்கை அணிக்கு நன்மை பயக்கும் என நம்பி இருக்கலாம்.

இங்கிலாந்துத் தொடருக்கு உடற்தகுதியின்மை காரணமாக செல்லாமலிருக்கும் மத்தியூஸ் விரைவில் குணமடைந்து அணிக்குள் வந்து உப தலைவராக டில்ஷானின் கீழ் அனுபவத்தைப் பெற்றுக்கொள்வது இலங்கையின் எதிர்காலத்துக்கான முதலீடாகும்.

திலகரட்ன டில்ஷான் தலைவராக அறிவிக்கப்பட்ட பிறகு காட்டி வருகின்ற பக்குவங்களும் நிதானமான அணுகுமுறைகளும் மனநிறைவைத் தருகின்றன.
தலைவரான உடனேயே இந்தியாவில் இருந்து நாடு திரும்பி பத்திரிகையாளர்களை சந்தித்தமை, சீரான, நாகரிக சிகை, உடை அலங்காரங்களுடன் கலந்துகொண்டமை, இங்கிலாந்து செல்லும் அணிக்குத் தலைமை தாங்குவதொடு முற்கூட்டியே சக வீரர்களுடன் இணைந்து புரிந்துணர்வை ஏற்படுத்த விரும்பியமை போன்றவை பாராட்டுக்குரியவை.

தலைவராக முதலாவது ஊடகவியலாளர் சந்திப்பு... அருகே நிஷாந்த ரணதுங்க (செயலாளர்) & துலிப் மென்டிஸ் (தலைமைத் தேர்வாளர்) 

ஒரு தலைவர் எப்படியான முன்னுதாரணமாக இருக்கவேண்டுமோ அப்படியாக நடக்க ஆரம்பித்துள்ளார்.
அனால் டில்ஷான் முற்கூட்டியே இங்கிலாந்துத் தொடருக்காக IPL ஐ விட்டு வெளியேற விரும்பியபோதும் இலங்கை கிரிக்கெட் இல்லை வேண்டாம் என்று நிறுத்திய வேடிக்கையும் நடந்தது.


திலகரட்ன டில்ஷான் - இலங்கை கிரிக்கெட் அணியின் முதலாவது மலாய் இனத்தை சேர்ந்த அணித்தலைவர்.

பிறப்பால் முஸ்லிமாக இருந்து, பாடசாலைக் காலத்தின் பின்னர் பௌத்தராக  மதம் மாறியவர்.(1998 இல் இங்கிலாந்து கிரிக்கெட் சுற்றுலாவுக்கு முன்னர்)
துவான் மொஹம்மத் டில்ஷானாக இருந்தவர், திலகரட்ன முதியன்சலாகே டில்ஷானாக மாறிப்போனார். இல்லாவிடில் இலங்கை அணியின் முதலாவது முஸ்லிம் தலைவராக டில்ஷான் சாதனை படைத்திருப்பார்.

(இன்னொரு சுவாரஸ்யம் டில்ஷானின் மூத்த சகோதரன் சம்பத் - இன்னும் முதல் தரப் போட்டிகளில் விளையாடி வருகிறார் - யாழ்ப்பாணத்தில் பிறந்தவர்)

ஆனால் அண்மையில் இலங்கையின் பிரபல ஆங்கில நாளிதழுக்கு வழங்கிய பேட்டியில் தன் மதமாற்றம் குறித்த விளக்கத்தை டில்ஷான் வழங்கியுள்ளார்.
தன் தாய் பௌத்தர் என்றும் சிறுவயதில் இருந்து தனக்கு இஸ்லாம் முறைப்படி பிரார்த்தனை செய்யத் தெரிந்திருக்கவில்லை என்றும், தாயுடன் களுத்துறை மகா போதிக்கு சென்று வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இப்போது தந்தையாரும் பௌத்தராக மாறியுள்ளதாக டில்ஷான் கூறியுள்ளார்.

Dilshan’s decision to change his name from Tuwan Mohamed Dilshan to Tillakeratne Mudiyanselage Dilshan and convert from Islam to Buddhism in 1998 has intrigued many.
In his own words Dilshan describes the change: “Although my father Tuwan Mohamed was Malay I didn’t know anything about Islam. I didn’t know how to speak or to pray from my small age. I used to go to the temple with my mother who was a Buddhist. I discussed with my parents why I am having a Malay name because in future I was going to follow Buddhism, that’s why I changed my name and took after my mother. “I changed my name in 1998 to Tillekeratne Mudiyanselage before going to England with the Sri Lanka ‘A’ team. Because we stayed in my mother’s home town Kalutara we regularly visited the Kalutara Bodhiya. My father has also converted to Buddhism and he goes to the temple regularly more than us. He is the one who lights the oil lamp in front of the Buddha statue at home.”

இலங்கையின் அண்மைக்கால அணித்தலைவர்களில் டில்ஷான் வித்தியாசமானவராக இருக்கப் போகிறார். அர்ஜுன ரணதுங்கவுக்குப் பிறகு இலங்கைக்குத் தலைமை தாங்கப்போகிற ஆக்ரோஷமான தலைவர் இவர்.
சனத் ஜெயசூரிய, மார்வன் அத்தப்பத்து , ஹஷான் திலகரட்ன, மஹேல ஜெயவர்த்தன, குமார் சங்கக்கார ஆகிய அனைவருமே கொஞ்சம் அமைதியான, கனவான் தன்மை கொண்டவர்கள். ஆனால் டில்ஷான் எதிரணி வீரர்களுடன் (சில நேரம் சக வீரர்களுடனேயே) முரண்பட்டு மோதுகின்ற குணமுடையவர். வம்புச்சண்டைகளுக்குப் போகும் சுபாவமும், நிதானமில்லா நிலையும் கொண்டவர்.

ஆனால் டில்ஷான் துடுப்பெடுத்தாடக் களம் இறங்கும் போது எல்லாரையும் விட அதிக மனவுறுதியோடும், பயப்படா இயல்போடும் இருப்பார் என்று சக வீரர்களும் பயிற்றுவிப்பாளர்களும் சொல்கிறார்கள்.

அர்ஜுன ரணதுங்க போன்ற ஒருவர், அல்லது ஆஸ்திரேலியாவின் முரட்டுத் தன்மை கொண்ட வீரர் போன்ற ஒருவர் இலங்கை அணியின் தலைவராக வருதல் இந்தக் காலகட்டத்தில் இலங்கைக்குத் தேவையான ஒன்று என்றே நான் கருதுகிறேன்.

இந்திய அணி தொடர்ச்சியான தோல்விகளாலும், கிரிக்கெட் சூதாட்டக் குற்றச்சாட்டுக்களினாலும் தளர்ந்து பலவீனப்பட்டிருந்த நேரத்தில் சௌரவ் கங்குலி அணித்தலைவராக வந்து ஏற்படுத்திய மாற்றங்கள் நல்ல உதாரணம்.
சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி பத்தாண்டுகளுக்கு மேலாகியும் டில்ஷான் மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் தன்னை நிலை நிறுத்தி, அணியில் நிரந்தர இடம் பிடித்தது கடந்த நான்கு ஆண்டுகளாகத் தான்.

இப்போது ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகவும் தலைவராகவும் தேவைப்படும் நேரங்களில் சகலதுறை வீரராகவும் மூன்று முக்கிய பொறுப்புக்களை ஒரே நேரத்தில் டில்ஷானினால் சமாளிக்க முடியுமா என்ற கேள்வியே முக்கியமானது.
சச்சின் டெண்டுல்கர் போன்ற சிறந்த துடுப்பாட்ட வீரர்களின் துடுப்பாட்டத் திறனையே தலைமைத்துவம் மழுங்கடித்திருக்கும் வரலாறு இருக்கையில் டில்ஷானுக்கு என்ன நடக்கும்?


டில்ஷானிடம் உள்ள மிகப்பெரிய சொத்து அவரது அசாத்திய நம்பிக்கை.. இதனால் தான் மத்திய வரிசையில் தடுமாறிக்கொண்டிருந்த டில்ஷானினால் அப்போதைய இலங்கை அணித் தலைவராக இருந்த மஹேல ஜெயவர்தனவினால் சுமத்தப்பட்ட/வழங்கப்பட்ட ஆரம்பத் துடுப்பாட்டப் பொறுப்பைத் துணிச்சலாக எதிர்கொள்ள முடிந்தது.

அடிக்கடி மாறிக் கொண்டிருந்த இலங்கையின் டெஸ்ட் ஆரம்ப ஜோடியையும் டில்ஷானின் மாற்றத்துக்குப் பிறகு நிலையாகக் கொண்டு வர முடிந்தது.

கடந்த பருவகாலத்தில் மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் டில்ஷான் குவித்த சதங்களின் எண்ணிக்கை 11.



டில்ஷானின் இந்தத் திடீர் எழுச்சிக்கான மற்றொரு காரணமாக அவரது புதிய திருமணமும் சொல்லப்படுகிறது. குடும்ப, முதல் மண சிக்கலால் அதிக மன உளைச்சலுக்கு டில்ஷான் ஆளாகி இருந்ததாக அறிய வந்தது.

அந்த வேளையில் தான் இந்தியாவில் IPL உம்,  உலக Twenty 20 இல் டில்ஷான் கண்டுபிடித்து IPLஇல் பிரபலமாகிய Dillys Scoopஉம் அதன் பின் இந்தியாவில் இடம்பெற்ற டில்ஷானின் இரண்டாவது திருமணமும் டில்ஷானை ஒரு நட்சத்திரமாக்கி நம்பிக்கையையும் அதிகரித்தன..

இன்று டில்ஷான் சர்வதேசக் கிரிக்கெட்டில் தவிர்க்க முடியாத ஒரு நட்சத்திரம்.. ஒரு போட்டியைத் தனித்து மாற்றும் ஆற்றல படைத்தவர்.. அந்த ஆற்றலைத் தலைவராகவும் தளர்ந்து போயிருக்கும் இலங்கை அணிக்கு வழங்க முடியுமா என்பதே அவர் மீதுள்ள பெரிய கேள்வி..

டில்ஷானின் மற்றொரு சிறப்பு அவரது விக்கெட்டுக்களை எடுக்கும் பயனுள்ள பந்துவீச்சும், மின்னல் வேகக் களத்தடுப்பும்.. இந்த வேகமான துடிப்பான களத்தடுப்பு டில்ஷானின் வயதேற ஏற இன்னும் மெருகேறுவது ஆச்சரியம் கலந்த ஆனந்தம்.

களத்தடுப்பின் முக்கியத்துவம் பற்றி டில்ஷான் நன்கு அறிந்தவர். அவரது அசாத்திய நம்பிக்கையைப் பாருங்கள்.. "இலங்கை அணியின் களத்தடுப்பை என் தரத்துக்கு உயர்த்த முயற்சிப்பேன்" - அண்மையில் வழங்கியுள்ள பேட்டி ஒன்றில்

அத்துடன் தேவையேற்படும் நேரங்களில் ஒரு விக்கெட் காப்பாளராகவும் மாறக் கூடியவர்.

டில்ஷான் பாடசாலைக் காலத்தில் ஒரு விக்கெட் காப்பாளராகத் தான் தன் கிரிக்கெட்டை ஆரம்பித்திருந்தவர். தென் ஆபிரிக்க, இங்கிலாந்து நாடுகளுக்கான இலங்கையின் 'A' சுற்றுலாக்களின் பொது டில்ஷான் முதன்மை விக்கெட் காப்பாளராகவும் , முன்னைய தலைவரும் முதன்மை விக்கெட் காப்பாளருமான குமார் சங்கக்கார இவருக்கு உதவி விக்கெட் காப்பாளராகவும் சென்ற சுவாரஸ்யமான வரலாறும் பலருக்குத் தெரியாது.
எனினும் அப்போது ரொமேஷ் களுவிதாரணவை தேசிய அணியில் விக்கெட் காப்பாளராக அகற்ற மோத முடியாமல் போகவே டில்ஷான் துடுப்பாட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தி துடுப்பாட்ட வீரராக மாறியிருந்தார்.

அத்துடன் மேலதிகமாகக் களத்தடுப்பிலும் தன் துரித திறனை வளர்த்துக்கொண்டார்.

இன்று இலங்கையின் புதிய தலைவர் டில்ஷான் இவ்வாண்டு IPLஇல் தனது இறுதிப் போட்டியை விளையாடுகிறார். இந்தப் போட்டியுடன் இங்கிலாந்து புறப்படும் அவர் பொறுப்பான ஒரு அணித் தலைவராக இலங்கையை இங்கிலாந்து சுற்றுலாவின் முதலாவது பயிற்சிப் போட்டியிலிருந்து வழிநடத்தப் போவது ஆரோக்கியமான ஒரு ஆரம்பமே..



வாழ்த்துக்கள் முன்னாள் குழப்படிகாரரே..இந்நாள் தலைவரே..

இன்று பெங்களூர் Royal Challengers அணிக்கு இளைய இந்திய வீரர் விராட் கொஹ்லி தலைமை தாங்குவதும் இன்னொரு ஆரோக்கியமான அத்திவாரம் தான்.. IPLஇல் மிக இளவயதான தலைவர் இவரே.. இவரை எதிர்த்து ராஜஸ்தான் Royalsக்கு தலைமை தாங்கும் ஷேன் வோர்ன் தான் இன் வயது முதிர்ந்த தலைவராம். இருவரின் சாதனைகளுமே முறியடிக்கப்பட முடியாதவை என நான் உறுதியாக நம்புகிறேன்.

இன்றைய தனது இறுதி IPL போட்டியில் டில்ஷான் கலக்கட்டும்...
இதே கலக்கலை ஒரு ஆக்ரோஷமான தலைவராக ஆளுமையுடன் இலங்கைக்கு குறைந்தது ஒரு வருடமாவது வழங்கட்டும்.. (மத்தியூசோ மற்றொருவரோ தயாராகும் வரை)

May 09, 2011

அன்னையர் தினமும் அல்லாடும் மனமும்

நேற்று அன்னையர் தினம்..

அன்றைய நாள் மட்டும் அம்மாவே தெய்வம் என்று சொல்கிற சிலருக்கான நாள் என்று இதை சொல்வோரும் உண்டு..

எமது வெற்றி FM வானொலியினால் கொழும்பில் உள்ள அன்னையர் இல்லத்துக்கு சென்று முழுநாளும் அங்கே சேவை செய்வது என்றும் அவர்களுக்கான அத்தியாவசிய, மருத்துவ தேவைகளைப் பூர்த்தி செய்வதாகவும் முடிவெடுத்தோம்.

வர்த்தக வானொலியாக இருந்தாலும் இந்த சேவை நோக்கில் நாம் அனுசரணையாளர் எவரையும் பணரீதியாக பங்களிப்பு செய்யக் கேட்காமல், எங்களது பங்களிப்பையே ஈடுபடுத்திக்கொண்டோம். அப்படியும் தாமாக மருந்துப் பொருட்களையும்,சேலைகளையும் சில நலன்விரும்பிகள் தந்திருந்தார்கள்.


என்னைப் பொறுத்தவரை காதல், பாசம், அன்னை இப்படியெல்லாம் தனித்தனியாக நாட்கள் வைத்து நினைவுகூரப்படவேண்டிய அவசியம் எங்கள் வாழ்வியலில் தேவையில்லை. ஆனாலும் சிறப்பு நாள் ஒன்று இருந்தால் தப்பில்லையே.. அன்றைய தினத்தில் அந்தந்த தினத்துக்குரியவரை சிறப்பு செய்து மேலும் மகிழ்விக்கலாமே..

ஒரு வாழ்த்து அட்டை.. எம் கைப்பட எழுதிய சிறு வரிகள்.. அவர்களுக்குப் பிடித்த, தேவையான பரிசுப் பொருட்கள்.. அவர்களுடன் நாம் கழிக்கும் அவர்களுக்குப் பிடித்த பொழுதுகள்.. இவையெல்லாம் சின்ன சின்ன சந்தோஷங்களாக இருந்தாலும் எங்கள் வாழ்க்கையின் சலித்துப் போகும் பொழுதுகளைப் புத்துணர்ச்சியுடன் புதுப்பிக்கின்ற விடயங்களல்லவா?

நான் இந்த சிறு சந்தோஷமளிக்கும் விடயங்களில் இருந்து எப்போரும் தவறுவதில்லை.. அது எனது நெருங்கிய உறவுகளாக இருக்கலாம் .. நண்பர்களாக இருக்கலாம்.. அல்லது நெருங்கியவர்களாக இருக்கலாம்..

அன்னையர் தினத்திலும் என் அன்னைக்கும் சிறு பரிசளித்து, எனது மகனின் அன்னை(வேறு யார் என் அன்பு மனைவியே தான்)க்கும் பரிசு ஒன்றை வழங்கி சந்தோஷப்படுத்திவிட்டுத் தான் அன்னையர் இல்லத்திற்கு சென்றேன்..

முதலில் என் அன்னையும், இனால அன்னையானவளும் தானே? இதனால் தான் Twitterஇல் துணிச்சலாக சொல்லியிருந்தேன் "அன்னையர் இல்லத்தில் சேவை செய்ய வந்துளேன்.. என் அன்னையையும் என் மகனின் அன்னையையும் நான் நேசிப்பதால் எனக்குத் தகுதி உள்ளது"

தன் அன்னையை நேசிக்காத எவனுக்கும் இங்கே இடமில்லை என்பது எழுதப்படாத வாக்கியமாக அங்கே இருக்க வேண்டும்.

மொத்தமாக 24 தாய்மார். பார்க்கப் பாவமாக, பரிதாபமாக இருந்தார்கள். ஒவ்வொருவர் முகத்திலும் காலம் தந்த சுருக்கங்களுடன், பிள்ளைகள் தந்த கவலை ரேகைகளும்..



அதில் ஆறு பிள்ளைகள் பெற்ற அம்மா, அரைப் பைத்தியமாகப் புலம்பிக் கொண்டிருந்தார்.

ஒரு பெண் லண்டனிலாம்.. ஏனைய ஐந்து ஆண் பிள்ளைகளும் யாழ்ப்பாணத்தில். பேரப்பிள்ளைகளின் படத்தை வைத்து ஒவ்வொரு நாளும் ஆசை தீரப் பார்ப்பதும், தன் மகிழ்ச்சியான கடந்தகாலத்தை இரை மீட்பதுமே அவரது இன்றைய சந்தோஷங்கள்..

இவ்வளவுக்கும் தன் பிள்ளைகளைக் குறை சொல்லாத பொன்னான மனது.
"அவங்கள் பாவம்.. தூரம் தானே.. பிசியா இருப்பான்கள்..பிள்ளைகள் குடும்பத்தோட என்னையும் பார்க்கக் கஷ்டமாத் தானே இருக்கும்"

ஐந்து ஆண் பிள்ளைகளையும் செருப்பாலே நாலு விளாரத் தான் மனம் சொல்லியது.

இன்னொரு வயோதிபத் தாய், தன் பிள்ளைகளாக எங்கள் கரங்களைப் பிடித்து வருடி, உச்சி மோந்து அன்பை வெளிப்படுத்த முடியாமல் இருக்கும் குறையைப் போக்கிக் கொண்டார்.
இன்னொரு தாய்க்குக் கண்ணெல்லாம் கலங்கி பேச முடியாமல் தவித்தார்..

பத்து மாதம் சுமந்து பாலூட்டி வளர்த்த தாய்மாரை அவர்களது முதுமைப் பருவத்தில், அவர்களின் இரண்டாவது மழலைப் பருவத்தில் தனியாகக் கொண்டுவந்து யாரோ ஒரு சிலரின் மேற்பார்வையில் இப்படியான "அன்னையர் இல்லங்கள்" எனப்படும் முதியோர் காப்பகங்களில் விட்டுச் செல்வது என்ன ஒரு ஈனத்தனமான செயல்?

கதைகளிலும், சில படங்களிலும், மேலை நாடுகளில் நடப்பதாக இதுவரை செய்திகளிலும் கேள்விப்பட்டு வந்த கேவலமான நடப்புக்களைக் கண்முன்னே எம் சமூகத்தில் கண்டபோது மனதில் கலவையான உணர்வுகள்..

அந்த அன்பான, அன்புக்கு ஏங்கும் அம்மாமார்களின் மீது பரிதாபம்; அவர்களைக் கவனிக்காமல் இங்கே கொண்டு வந்து தவிக்க விட்டுப் போன அரக்கர்களின் மீது கடுங்கோபம்; தங்கள் தாய்மாரைப்போலவே இந்த இருபத்துநான்கு பேரையும் பார்த்துக்கொள்ளும் அந்த இல்லத்துப் பெண்மணிகள் மூவர் மீது மதிப்பு; கடமையாகக் கருதாமல் தங்கள் மனமொத்து, அன்போடும், அக்கறையோடும் இவர்களை காலையிலிருந்து மாலைவரை கவனித்துக்கொண்ட எங்கள் வெற்றிக் குழுவினர் பற்றிய பெருமிதம்.

அங்கே இருந்த இன்னொரு அம்மையார் எழுபது பராயம் தொட்டுள்ள ஒருவர். எங்கள் அம்மா சிறுவயதில் குடியிருந்த டோரிங்டன் தொடர்மாடியில் அம்மாவின் வீட்டருகில் வசித்தவராம். அம்மாவின் சகோதரங்கள் அத்தனை பேரின் பெயரையும் ஞாபகம் வைத்து சொல்லி இருந்தார்.

அச்சொட்டான ஞாபக சக்தி.
அவருடன் கொஞ்சம் விசேட தேவைக்குரிய அவரையோ விடக் கொஞ்சம் இளைய ஒரு பெண்மணி.
ஆங்கில பாட ஆசிரியையாம். சிறு உரையாற்றியும் இருந்தார். அப்போது அவரது பெயரைக் கேட்டபோது செல்வி என்று குறிப்பிட்டார்.

பிறகு வீடு வந்த பின்னர் தான் அம்மா சொன்னார்.. அந்த அம்மையார் தனது சகோதரியும் சகோதரியின் கணவரும் விபத்தொன்றில் இறந்த பின்னர் அவர்களின் விசேட தேவைக்குரிய மகளைக் கவனித்துக் கொள்வதற்காக திருமணமே முடிக்காமல் செல்வியாகவே இருக்கிறார்.

இப்படியும் தியாகிகள்.. இவர்களின் முடிவும் இங்கே தான்...

மனம் கொஞ்சம் பாரமாக, கொஞ்சம் பெருமிதமாக நேற்றைய பொழுது.

--------------------------

பெருமிதத்துக்கான காரணம், எமது வெற்றி FM வானொலியும், எமது நிறுவனமான Universal Networks நிறுவனமும் இணைந்து நேற்றைய அன்னையர் தினத்திலேயே அன்னையர் இல்லத்தில் வைத்து அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட "எம்மால் முடியும்" சமூக சேவைத் திட்டம்.

நீண்ட காலமாக என் மனதில் இருந்த சமூகத்துக்கு ஏதாவது எம்மால் கொடுக்கப்படவேண்டும் என்ற ஆசைக்கு உரம்போட்ட இந்தத் திட்டம் நான் இட்ட பெயருடனேயே ஒரு நீண்ட கால செயற்பாடாக ஆரம்பித்தமை மகிழ்ச்சி.

எம்மால் முடியும் பற்றி விரிவாக அறிய..

http://www.vettri.lk/index.php?mainmnu=FM&page=morenews&nid=26

தமிழ் மிரரில் வந்துள்ள செய்தி 

வீரகேசரி இணையத்தில் 

------------------------------


நேற்று முன் தினம் எங்கள் வீட்டுக்கு முன்னால் உள்ள ஒரு வெற்றுக் காணியில் படர்ந்து, அடர்ந்திருந்த செடி,கொடி,பற்றைகளை ஒரு மனிதர் தனியாளாக நின்று வெட்டி, அகற்றிக் கொண்டிருந்தார்.
மாலை வரை வீட்டிலேயே இருந்ததால் பால்கனியில் நின்று அவரையே அவதானித்துக் கொண்டிருந்தேன்.. அன்றைய அனல் பறக்கும் வெயிலில் வெற்றுடல் வியர்வையில் குளிக்க, வாயில் எதோ முணுமுணுத்தபடி (பாடலோ, யாரையாவது திட்டியதோ) கருமமே கண்ணாக இருந்தார்.
உழைப்பு என்றால் அது உழைப்பு..

இன்று வேளை விட்டு வந்து வாகனம் விட்டு இறங்கும் நேரம் அவ்விடத்தில் நின்று கொண்டிருந்த அவரை அழைத்து அன்றைய வேலைக்கு எவ்வளவு கூலி எனக் கேட்டேன்..
முன்னூறு ரூபாயாம்.. அமெரிக்கன் டொலரில் மூன்று கூட இல்லை..

என் மனைவியிடம் வந்து பேசிக் கொண்டிருக்கையில் உலகம் வழங்கும் ஊதியம் பற்றி சும்மா ஒப்பீடு செய்து பார்த்தேன்..
வேறு யாரும் ஏன்? என்னையே எடுத்துப் பார்த்தேன்..

அலுவலகத்தில் இருக்குமிடத்தில் (கூட்டங்கள்,ஒலிப்பதிவுகள், நேரடிக் கள நிகழ்வுகள் இல்லாத இடத்து)ஏசி குளிரில் இதமான சூழலில் வேலை, நேரத்துக்கு தேநீர், அலுவலக செலவிலேயே கணினிப் பாவனை, களை நீக்கக் காதுக்கு இனிய பாடல்கள்..

தேவைஎல்லாவற்றையும் நிறைவு செய்துகொண்டே அந்த முன்னூறு ரூபாயின் பல மடங்கும் சுளையான சம்பளம்..
ஆனால் வெயிலில் நாள் முழுக்க மாரடிக்கும் அவனுக்கு ????

இது தான் உலகம்..



இதை இங்கே சொல்ல இன்னொரு காரணமும் உள்ளது..

-----------------

பொதுவாக வேலை வழங்குனரிடம் இரக்க சுபாவம் கொஞ்சம் இருக்க வேண்டும் என எண்ணுபவன் நான். எனக்கு வாய்த்த முதலாளிகளிடமும் இதே குணம் இருந்ததும் இருப்பதுவும் நான் பெற்ற பேறு தான்.

பொருத்தமானவர்களைத் தெரிவு செய்யும் அதிகாரம் அல்லது சிபாரிசு செய்யும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதனால் திறமைக்கு முதலிடம் கொடுப்பதோடு, திறமையானவர்கள் கஷ்டப்படும் நிலையில் இருந்தால் அவர்களுக்கு முன்னுரிமை வழங்குவதிலும் நான் பின்னிற்பதில்லை.

ஆனால் இவ்வாறு இரங்கி நான் செயற்பட்ட சில இடங்களில் யாருக்கு இரக்கப்பட்டேனோ அவர்களே ஏமாற்றி செல்லும்போது மனமே வெறுத்துவிடும்.
நிறுவன உரிமையாளரின் முன்னால் ஒரு குற்றவாளி போல் நான் உணர்வதுண்டு.
முதுகில் குத்தலும், உதவி செய்யும் எம் மேலேயே குதிரை சவாரி செய்வதும் எம் துறையில் சகஜம் என்பதால் நான் தட்டிவிட்டுக் கொண்டு போய்க கொண்டே இருப்பேன்...

அப்படியான ஒரு நிகழ்வு இன்று..
ஆனால் அது இந்தக் குறிப்பிட்ட ஒருவரிடம் இருந்து எனக்கு வரும் என்று நான் எண்ணியிருக்கவில்லை.

ஒன்பது மாதம் வேறொரு இடத்தில் ஊதியமில்லாமல் உழைத்துக் களைத்த ஒருவரை எமது நிறுவனம் புதியவரால் வாங்கப்பட்ட பின்னர் அழைத்து ஊதியத்தோடு திறமையைக் காட்ட வாய்ப்பும் வழங்கினால், சொல்லிக்கொள்ளாமல் இன்னொரு இடத்தில் நேர்முகத் தேர்வுக்கு சென்று இருப்பதை என்னவென்பது?

அதுவும் சில வாரங்களாகத் திட்டமிட்டு...

இப்படி ஒரு சிலரை முன்னர் மன்னித்து மீண்டும் வாய்ப்புக் கொடுத்துள்ளேன்.
ஆனால் இப்போது நிறுவனம் புதியதாக நல்ல அத்திவாரத்தில் வளரும் நேரம் புதியவர்களுக்கு ஒரு தவறான உதாரணமாக இது அமைந்துவிடக் கூடாது என்பதனால் களை எடுக்க வேண்டி வந்தது.

(எனது நிர்வாகத்தில் நான் செய்த ஐந்தாவது களையெடுப்பு.. மற்றையவை ஒழுக்க சீர்கேடுகளினால் செய்யப்பட்டவை.. இது நம்பிக்கைத் துரோகம்)

நிறுவனத் தலைவர்களும் கோபத்துடன் எனக்கு சொன்ன நட்பு அறிவுரை
" அதிகம் இரக்கம் காட்டினால் ஏமாளி என்று நினைத்துவிடுவார்கள்.."



May 07, 2011

எங்கேயும் காதல்




கொஞ்ச நாட்களுக்குப் பிறகு மீண்டும் ஓர் புதிய படம் - முதல் நாள்,முதல் காட்சி.

எங்கேயும் காதல் பாடல்கள் அத்தனையும் ஹிட் என்பதனால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தன. அத்துடன் நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு அதிலும் படம் முழுக்கவுமே பிரான்சின் பாரிசில் எடுக்கப்பட்டது என்பது வேறு காட்சிகள் மீது ஆர்வத்தை ஏற்படுத்தியிருந்தது.

அண்மைக்காலத்தில் சராசரியாக ரசிக்கக் கூடிய படங்களிலே நடித்துவரும் ஜெயம் ரவி, மொக்கைப் படங்களாக இருந்தாலும் சற்றே வித்தியாசமாக இயக்கம் பிரபுதேவா என்ற சிறு எதிர்பார்ப்புக்களும் இருந்தன.

மிக சராசரியான காதல் கதை. நட்பு, துரத்தல், நடிப்பு, ஊடல் + இதர மசாலாக் கலவைகள் சேர்ந்த காதல்.. என்ன ஒரு வித்தியாசம் அழகான பாரிஸில்

வெளிநாட்டில் இந்திய பண்பாட்டின்படி வாழும்(அப்படித் தான் இயக்குனர் அறிமுகப்படுத்துகிறார்) இளம் பெண்ணொருத்திக்கும் இந்தியாவில் வெளிநாட்டு கலாசாரத்தில் வாழும் இந்தியப் பணக்கார வாலிபனுக்கும் இடையிலான காதல் தான் கதை.



காதல் என்பதே பிடிக்காத "No commitments, No disappointments" என்ற policy உடன் பெண்களுடன் ஜாலியாக வாழ்க்கையை அனுபவிக்கும் கமல் (ஜெயம் ரவி) பாரிஸில் விடுமுறையைக் கழிக்க வரும் வேளையில் சந்திக்கின்ற அழகான இந்தியப் பெண் கயல்விழி எனப்படும் லோலிட்டா (ஹன்சிகா).

ஜெயம் ரவியின் கண்ணைப் பார்த்துக் காதல் வசப்படுகிறாராம். இந்தப் படத்தில் தான் ரவியின் கண்கள் பல இடங்களில் அவரைக் கவிழ்த்துவிடுவதும் நடக்கிறது. காட்சிகளில் கண்கள் சிறிதும் பெரிதுமாகத் தெரிகின்றன.

இன்னொரு காட்சியில் ரவியின் குரல் பிடித்திருப்பதாக ஹன்சிகா சொல்வதும், ரவி தன்னைத் தானே சுய கிண்டல் செய்வதும் நச்.

அறிமுகக் காட்சிகளில் முத்தங்கள் பரிமாறப்படும் புகைப்படங்களோடு, பாரிசைக் காதல் தலைநகரமாக அறிமுகப்படுத்துகிறார் இயக்குனர் பிரபுதேவா.
ரசிக்கக்கூடிய நாயகன், நாயகி அறிமுகங்கள்.. கூடவே பிரகாஷ்ராஜ். ரசனையான ரகளை..

ஆனால் இந்த சுவையைத் தொடர்ந்து கொண்டுபோகாமல் தடுமாறும் திரைக்கதை.

பிரகாஷ்ராஜ் இன்னுமொரு காட்சியிலும் இடையில் சும்மா வந்துபோகிறார்.. குறைந்தபட்சம் இறுதிக் காட்சியிலாவது ஏதாவது திருப்பத்துக்கு அவரைப் பிரபுதேவா பயன்படுத்தி இருக்கலாமே.

இதே கதையை எதோ ஒரு ஹிந்திப் படத்திலோ, ஆங்கிலப்படத்திலோ (ரசனையான திரைப்படமாக)ன் பார்த்த ஞாபகம்.

நான்கே பிரதான பாத்திரங்கள்..


ரவி - பணக்கார ஜாலி இளைஞனாகப் பொருந்திப் போகிறார். எந்த உடையிலும் அழகு + கம்பீரம். கொஞ்சம் நடிக்கவும் செய்கிறார். கலக்கலாக நடனமும் ஆடுகிறார்.

வழிப்பறித் திருடனுடனான துரத்தல் சண்டைக் காட்சிகளும் ஹன்சிகாவுடன் வீதியில் திரியும் காட்சிகளும் ரவியின் துடிப்பான, குறும்பான நடிப்புக்களில் களை கட்டுகின்றன.

ஹன்சிகா - முகம் மட்டும் பார்த்தால் காதலிக்க வைக்கும் கண்கள்.. முத்தமிட ரசனையான உதடுகள்; மூக்கையும் உதடுகளையும் மட்டும் பார்த்தல் கொஞ்சம் பூமிகாவையும் நினைவு படுத்துகிறார்.
முழுவதுமாகப் பார்த்தால் குஷ்பு (இந்தக்கால சைஸ் குஷ்பு தான்) ஞாபகம் வருகிறார். அணியும் இறுக்கமான, குட்டையான ஆடைகளில் சில நேரம் கவர்ச்சியாகவும் பல நேரங்களில் அப்பாவி லூசாகவும் தெரிகிறாரே தவிர ரவிக்குக் காதல் வருமளவுக்கு இல்லை.
சில பொருத்தமான ஆடைகளுடன் வரும் காட்சிகளிலும், சேலையில் வரும் காட்சியில் கொள்ளை அழகு.

இப்படியான உப்பு, புளி மூட்டைகளான வெள்ளைத் தோல் நாயகிகள் தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனையா, இல்லை நாயகர்கள்,இயக்குனர்களின் விருப்பத்தாலான ரசனைத் திணிப்பா?

சுமன் - நாயகியின் அப்பாவாக .. ரவியிடம் உருகி தந்தை சென்டிமென்ட் காட்டும் காட்சி தவிர நடிக்க வாய்ப்பு இல்லை.

ராஜூ சுந்தரம் - ஏகன் தோல்விக்குப் பிறகு வாய்ப்பில்லாமல் இருந்தவருக்கு தம்பியால் வழங்கப்பட்ட இந்தக் காமெடியன் வாய்ப்பில், கோமாளித் தனங்கள் செய்து சிரிக்கவைக்க முனைந்துள்ளார். ஒன்றோ,இரண்டோ இடங்களில் மட்டும் கொஞ்சமாக சிரிப்பு எட்டிப் பார்க்கிறது. பல இடங்களில் எரிச்சலே மிஞ்சுகிறது. பழைய சேஷ்டைகள்.

பிரான்ஸ் என்ற காரணத்தால் கவர்ச்சிக்காக இயக்குனர் பிரபுதேவா மினக்கெடவில்லை.  வீதிகளில் சர்வசாதாரணமாகப் பெண்களைக் காட்டினாலே போதுமே..


ஒளிப்பதிவாளர் நீரவ் ஷாவுக்கு நல்ல வாய்ப்பு.. பாடல் காட்சிகளில் மட்டுமல்லாமல் எல்லாக் காட்சிகளிலுமே கலக்கி இருக்கிறார்.
படம் முழுவதுமே கதையின் ரோதனையான போக்கைக் குறைத்து
 மனத்தைக் குளிர்விப்பது அழகான குளிர்மையான ஒளிப்பதிவே.

அன்டனியின் எடிட்டிங் ஸ்பெஷல் பாடல் காட்சிகளில் மட்டும் கலக்கல்.. ஏனையவற்றில் திரைக்கதையின் இழுவை எடிட்டிங்கை மேவி சொதப்புகிறது.
ஹரிஸ் ஜெயராஜின் இசையில் உருவான நல்ல பாடல்கள் அனைத்துமே காட்சிகளாக வீணடிக்கப்படாமல் அழாகவே வந்துள்ளன. 

ரசனையான காட்சிப்படுத்தலும், மிகையில்லா நடன அமைப்புக்களும் அருமை.
ஆனால் இரண்டு பாடல்கள் செருகப்பட்டுள்ள இடம் திணிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதனால் 'தீயில்லை','நெஞ்சில் நெஞ்சில்' பாடல்களோடு ஒன்றிப் போக முடியவில்லை.

வாலி, தாமரை, முத்துக்குமார், மதன் கார்க்கி ஆகியோர் செதுக்கிய வரிகள் அருமையான பாடல்களாக எம்மை உருக வைத்தன எனினும் படம் வந்த பிறகு மனதில் காட்சிகளாக நிற்குமா என்ற கேள்வி இன்னும் இருக்கிறது.
கதையோட்டம் பாடல்களை ஈர்க்காமல் செய்துவிட்டது.

ஆனால் பிரபுதேவா தோன்றும் ' எங்கேயும் காதல்' , ரவி ரசிக்க வைக்கும் 'லோலிட்டா', வெள்ளைக்கார , கருப்பின இளைஞர்கள் கலக்கும் 'நங்கை' எல்லாம் ரசனையும் ரகளையும் சேர்ந்து சுவைக் கலவைகள்.


இந்தப் பாடல்களை உருவாக்கக் காட்டிய சிரத்தையில் கால்வாசி அளவாவது திரைக்கதையிலும் காட்டியிருந்தால் 'எங்கேயும் காதல்' எங்கேயோ போயிருக்கும்.

பழைய பாணியிலான திரைகதியில் பல லொஜிக் ஓட்டைகள்.. அத்துடன் அந்தக் கடைசி புறா பறக்கும் காட்சியுடன் எரிச்சலை ஏற்படுத்துகிறார் பிரபுதேவா.

ஹன்சிகா - ரவி காதல் பிறக்கும் காட்சிகள் ஈர்ப்பை ஏற்படுத்தாமல் ஜாலியாகவே செல்வது திரைப்படத்தின் பலவீனம். ஒருவேளை நகைச்சுவை காட்சிகள் இல்லாப் பலவீனத்தை இப்படி சரிக்கட்டினரோ?

வசதியான தயாரிப்பாளரின் அனுசரணையுடன் பிரபுதேவா மற்றும் நடிகர் குழுவினர் ஜாலியாக பிரான்ஸை சுற்றிப்பார்த்து வந்துள்ளார்கள்; என்ன நீரவ் ஷாவின் உதவியுடன் எமக்கும் செலவில்லாமல் பிரான்ஸ் பார்க்கக் கிடைக்கிறது.

ஆனால் என்ன.. சன் டிவி இந்தப் படத்தையும் 'வெற்றி'ப் படமாக 'மாற்றி' விடும்.. பிரபுதேவா தனது நான்காவது மொக்கைக்குத் தயாராகிவிடுவார்..
ஹன்சிகா தமிழின் முதன்மை நாயகி ஆகிவிடுவார்..
என்னமோ போங்க..


எங்கேயும் காதல் - பெயரிலும் பாடல்களிலும் மட்டும்...


May 02, 2011

வானம்



எவன்டி உன்னைப் பெத்தான் பாடல் தந்த பரபரப்பு படத்தை மிக எதிர்பார்க்க வைத்திருந்தது.

இது தவிர தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற வேதம் படத்தின் தமிழ்ப்பதிப்பே இதுவென்பதும், தெலுங்கு இயக்குனர் க்ரிஷ் தான் படத்தை தமிழிலும் இயக்குகிறார் என்பதும் வேறு வானம் படத்தைக் கொஞ்சம் எதிர்பார்க்க வைத்தன.

அத்துடன் தமிழில் இரு நாயகர்கள் சேர்ந்து நடித்தாலே அபூர்வம்.. அதிலும் 'இளைய' 'சின்ன' போன்ற பட்டங்களை இட்டுக்கொள்ளும் நாயகர்கள் தேசிய விருது பெற்ற பிரகாஷ் ராஜுடன் சேர்ந்து நடிப்பதும் எனக்குள் இந்தப் படத்தைப் பார்க்கவேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி இருந்தது.

பிறருக்காக உதவும், வாழும் நல்ல மனது வேண்டும்; இறைவன் நல்லவர்கள் வடிவில் வாழ்கிறான் என்ற போதனை தான் படத்தின் கரு.

ஐந்து வேறு பட்டவரின் கிளைக் கதைகள் வந்து இரண்டாம் பாதியின் முடிவுக் கட்டத்தில் சேருமாறு திரைக்கதை.

இராணுவத்தில் சேருமாறு தாய் கேட்டும் தானுண்டு தன் வாழ்க்கையுண்டு என்று, யார் பற்றியும் பொருட்படுத்தாமல் ஒரு ரொக் இசைக் கலைஞனாக வருவதே இலட்சியம் என்று வாழும் இளைஞன் பரத்..

தூத்துக்குடி உப்பளத்தில் கந்துவட்டிக்குப் பணம் கடன் வாங்கிவிட்டு, கட்டமுடியாமல் மகனைப் பணயமாகக் கடன்கொடுத்தவன் சிறைப்பிடிக்க, மீட்க சிரமப்படும் ஏழைத்தாய் சரண்யாவும் அவரின் மாமனாரும்...

கோவையில் மனைவி, தம்பியுடன் வாழ்ந்துவரும் நிலையில் விநாயக சதுர்த்தியில் ஏற்படும் மத சண்டையினாலும் வேண்டுமென்றே மேற்கொள்ளப்படும் பழிவாங்கலினாலும் மனைவி வயிற்றிலுள்ள குழந்தையை இழந்தும், தம்பியைப் பிரிந்தும் மனம் முழுக்க சோகத்துடன் வாழும் முஸ்லிம் நடுத்தர மனிதர் பிரகாஷ் ராஜ்.

வாழ்க்கையில் நிம்மதி இல்லாமல் வேதனைப்படும் விபச்சாரி சரோஜா(அனுஷ்கா)..

குப்பத்தில் பிறந்து கேபிள் ராஜாவாகக் கும்மாளமிட்டு அலைந்து பணக்காரக் காதலியாக செட் பண்ணப் போலிப் பணக்கார வேடம் இட்டுப் பணம் தேடி அலையும் இளைஞன் (சிம்பு என்று முன்னர் அழைக்கப்பட்ட STR)
இந்த ஐவரும் சந்தித்துக் கொள்ளும் இடம் பரபரப்பாக இருந்திருக்க வேண்டாமா?

கதை தொய்ந்துபோகும் இடத்தில் அந்த உச்சக்கட்டம் வருகிறது.

முதல் பாதியில் கொஞ்சம் இழுவையாகவும் கோர்வையின்றிப் படம் நகர்வதுவும் இரண்டாம் பாதியில் சீர்செய்யப்பட்டாலும் கடைசிக் காட்சிகள் எந்தவொரு பரபரப்பையும் எனக்குத் தரவில்லை.
செண்டிமெண்ட் வரவழைக்க காட்டப்படும் சில காட்சிகளில் ஆயாசமே வருகிறது..

விபசாரியின் சோகங்கள், சிம்புவின் காதல், பிரகாஷ் ராஜின் கொஞ்சம் ஓவர் அக்டிங், பரத்தின் மனமாற்றம் என்று பல இடங்கள்..
உதவி செய்யாமல் நாம் கைவிட்டு செல்வோர் எமக்கு வந்து உதவி செய்வது, திருடுபவன் மனம் திருந்தி திருடிய பொருளை மீண்டும் கொண்டு வந்து ஒப்படைப்பது என்று சிறுவயது அம்புலிமாமா நீதிக்கதைகள் போல இருக்கின்றன.

வானம் என்ற பெயர்ப் பொருத்தமோ என்னவோ, ஏராளமான நட்சத்திரங்கள்.. பல இடங்களில் முகில்கள் போலவே அலையும் கதை..

பிரகாஷ் ராஜ் என்றவுடன் நிறையவே எதிர்பார்த்தால் மனிதர் கிடைத்த வாய்ப்பில் நிறைவாக செய்துள்ளார்.
சோனியா அகர்வால், வேகா, தண்டபாணி, ஜெயப்ரகாஷ், பிரம்மானந்தம் என்று சிறு சிறு காட்சிகளில் வந்து வீணாக்கப்படும் நட்சத்திரங்கள் அதிகம்.
ராதாரவி ஒரே காட்சியில் வந்தாலும் மற்றவர்கள் எல்லோரையும் தூக்கி சாப்பிட்டுவிடுகிறார்.

விண்ணைத் தாண்டி வருவாயாவில் சிம்புவுடன் சுற்றிய கணேஷ் இதில் மாமா.. கலக்குகிறார் மனிதர்.

சந்தானம் தான் படத்துக்கு ஒரு துள்ளல் கொடுப்பவர்.. கடித்துத் தள்ளுகிறார்.
மோட்டார் சைக்கிள் கடி தொடக்கம், அம்பானியின் மகள் என்று அடுக்கடுக்காக சந்தானம் வெகு லாவகமாக கடிக்கிறார்.

இப்போது தமிழ் சினிமாவின் டிமாண்ட் மிக்க கொமெடியன் இவர் தானாம்.
ஒரு நிகழ்ச்சிக்கு அழைப்பதாயின் பத்துலட்சம் இந்திய ரூபாய் கேட்கிறார்.

"கஷ்டப்பட்டு மேல வந்தாலும் விட மாட்டேங்கிறாங்கப்பா" என்ற வசனத்தோடு அறிமுகமாகிறார் எஸ்.டி.ஆர்.
"Who am i?" என்று ரொக் பாடலோடு அறிமுகமாகிறார் பரத்.
பரத் பாத்திரத்தோடு ஒன்றினாலும், சிம்பு விடுவதாக இல்லை. குப்பத்துப் பையனாக இருந்தாலும் பளபள முகமும், நுனிநாக்கு ஆங்கிலமும்  துருத்துகின்றன.

ஆனால் துடிதுடிப்பும், சந்தானத்தோடு சேர்ந்து அடிக்கும் கூத்துக்களும் ரசனையானவை.
"என்ன வாழ்க்கைடா இது" ஒவ்வொரு முறை சொல்லப்படும் இடங்களும், விதங்களும் டச்சிங்.. ரசனை

எவன்டி உன்னைப் பெத்தான் பாடல் மிகப்பெரிய பொருள் செலவில் உருவாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. உண்மைதான். ஆனால் இன்னும் கொஞ்சம் ரசனையாக செய்திருக்கலாமோ எனத் தோன்றுகிறது. அதிலும் அந்த சப்பை மூஞ்சி பிகரான ஜாஸ்மினைப் பார்த்துப் பாடியதால் பாட்டு வேஸ்ட்டாகி விட்டது.

ஸ்னேஹா உள்ளாலுக்காக எழுதிய பாடலை இப்படி ஒருத்திக்காகப் படமாக்க வேண்டி வந்துவிட்டதே என்று நாயகி இல்லாமலேயே பாடலை எடுத்துள்ளார்கள் போலும்.

no money பாடல் படமாக்கப்பட்ட விதம் கலக்கல். செம குத்து.. சிம்பு கலக்குகிறார். அனுஷ்காவும் திறமை 'காட்டுகிறார்.'

தெய்வம் வாழ்வது எங்கே பாடல் வரிகளால் எனக்கு முன்பே பிடித்துப்போன பாடல்.. ஆனாலும் ஆரம்ப எழுத்தோட்டத்திலும், இடை நடுவேயும், பின்னர் அடிக்கடி துண்டு துண்டாக வரும்போதும் அந்த அழுத்தம் இல்லாமல் போய்விடுகிறது.
வரிகள் எழுதிய முத்துக்குமாருக்கு வாழ்த்துக்கள்.

அனுஷ்காவைப் பற்றி சொல்வதற்குப் பெரிதாக எதுவுமே இல்லை. உடலின் பாதியளவைக் காட்ட முயற்சித்தாலும் நடிப்பே வராத அந்த முகமும், அசாதாரண உயரமும், தமிழ் வசனங்களோடு பொருந்தாத உதட்டசைவுகளும் சலிப்பையே தருகின்றன.

அனுஷ்கா தனியாக வரும் ஆரம்பக் காட்சிகள் தெலுங்கில் இருந்து நேரடியாக எடுக்கப்பட்டுள்ளன போல் தெரிகிறது.
அந்தப் பாடலிலும் காட்சிகளிலும் அப்படியொரு டப்பிங் நெடி.

சரண்யாவும்,அவரது மாமனாராக வருபவரும் காட்டும் உணர்ச்சிகள் நெகிழ வைக்கின்றன.
உப்பளக் காட்சியில் அந்த சிறுவனும் மனத்தைக் கொள்ளை கொள்கிறான்.
கம்பீரமான போலீஸ் அதிகாரியாக வருபவர் மிரட்டுகிறார்.

பல இடங்களில் வசனங்கள் அபாரம்.. ஆகா போடா வைக்கின்றன..
விபசாரியின் வாய்கள் உதிர்க்கும் தத்துவங்கள் "நாங்க துணிய அவுத்துட்டு விக்கிறோம், நீங்க துணிய போட்டுக்கிட்டு விக்கிறீங்க", சிம்பு சொல்கிற "பொய் சொல்றது எப்பவும் இலகு.. உண்மை சொல்றது தான் மச்சி கஷ்டம்"..
இன்னும் பல இடங்கள் அபாரம்.
வசனகர்த்தா - ஞானகிரி..(புதியவரா?)

ஒளிப்பதிவு நீரவ் ஷாவாம்.. அப்படியா?
Editor அந்தனியும் கூட எவ்வளவு முயன்றும் சில காட்சிகளை ஓட்ட வைக்க முடியவில்லை.
பின்னே ஐந்து கோணத்தில் ஒரு திரைக்கதை நகர்ந்தால்?
போதனை, சொல்ல வந்த நீதிகள் எல்லாம் சரி.. ஆனால் படமாக்கிய விதம் தான் சறுக்கி விட்டது..

ஓவர் செண்டிமெண்டும் ஓவர் போதனையும் ரோதனை என்பதை யாரும் இயக்குனருக்கோ, சிம்புவுக்கோ சொல்லவில்லையோ?
சிம்பு எதை செய்தாலும் ஓவராகத் தான் செய்கிறார் போலும்.. 


ஒழுங்காக சமைக்கப்படாத நல உணவு போல் ஆகிவிட்டது 'வானம்'.
ஆனால் நல்லதொரு படத்தைத் தர முயன்ற குழுவினருக்கு வாழ்த்துக்கள்..
ஆனாலும் தயாநிதி அழகிரியின் நிறுவனத்தின் புண்ணியத்தில் 'வானம்' எப்படியும் 'வெற்றி' பெற்று விடும்..
அடுத்த முயற்சியில் சிரத்தை எடுத்து நல்லதாகத் தர முயற்சி செய்யுங்கள்..

வானம் - மப்பாகத் தான் இருக்கிறது  

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner