Showing posts with label சூர்யா. Show all posts
Showing posts with label சூர்யா. Show all posts

October 14, 2012

மாற்றான்




இரட்டை வேடங்களில் ஹீரோ.. இரு வேறு குணங்கள்.. ஒரே ஹீரோயின். ஒரு வில்லன். ஒரு ஹீரோ இறக்க மற்றவர் சுபமாக்கும் எத்தனையோ படங்களை MGR காலத்திலிருந்து இன்றைய கதாநாயகர்கள் காலம் வரை பார்த்துவிட்டோம்.

ஆனால் K.V.ஆனந்தின் மாற்றான் வித்தியாசம்; கதாநாயகர்கள் ஒரே உடம்பில் ஒட்டிப் பிறந்த இரட்டையர். கதையும் களமும் புதியது என்றார்கள்.
தொடர்ச்சியாக வெற்றிப் படங்களில் நடித்து (அல்லது பெரிதாகத் தோல்வியடையாத படங்களைத் தந்து ) வருகின்ற சூர்யாவும், வெற்றிப்படங்களையே தந்துவருகின்ற இயக்குனர் K.V.ஆனந்தும் ஒன்றாக இணைவது படத்தைப் பற்றி நம்பிக்கையையும் ஏற்றிவிட்டது.

ஆனால் உண்மையாக படத்தின்  trailer மற்றும் சாருலதா விளம்பரம் ஆகியன மாற்றான் மீது எதிர்பார்ப்பைக் குறைத்திருந்தன என்பது உண்மை.

கொஞ்சம் விஞ்ஞானம் , கொஞ்சம் காதல், கொஞ்சம் துப்பறிதல் என்று வழமையான K.V.ஆனந்தின்  பாணியில் இரட்டைவேடக் கலப்பையும் சேர்ந்து தூவி, சுபாவின் வசனங்கள், திரைக்கதையில் ஒரு சூப்பர் ஹிட் படத்தைத் தந்திருக்கலாம் தான்.
ஆனால் ஒரு சில இடங்கள் தவிர ஏனைய இடங்களிலெல்லாம் மாற்றான் இழுக்கிறது.

மரபியல் /மரபணு விஞ்ஞானி தனது பிள்ளைகளையே சோதனைக்கான காலமாகப் பிறக்க வைக்கிறார். ஒட்டிப்பிறக்கும் குழந்தைகள் சந்திக்கும் சவால்கள்.. தந்தையார் ஒரு விஞ்ஞானியாக இருந்து, கடுமையான உழைப்பு, முயற்சியால் வெற்றிகரத் தொழிலதிபராக மாறுவது.. அவரைச் சுற்றி நடக்கும் சதிகள், மர்மம், இரட்டையரின் காதல், அதன் பின்னான சண்டை, துரத்தல், முடிச்சவிழ்த்தல் என்று சொல்லும்போது பரபரவெனத் தெரிகின்ற இத்தனை விடயங்களின் தொகுப்பு எப்படியான ஒரு பூரணமான சூடான திரைப்படமாக வந்திருக்கவேண்டியது... சோர்வாக, சொதப்பலாக சூர்யாவுக்கு அண்மைக்காலத்தின் இரண்டாவது சறுக்கலாக வந்திருக்கிறது.

ஒட்டிப்பிறந்த இரட்டையரை இடைவேளை வரை ஒவ்வொரு காட்சிகளிலும் காட்டுவதில் எடுத்த சிரத்தையும், காட்சிக்குக் காட்சி காட்டிய நுணுக்கமும் பாராட்டுக்குரியவை.
அதிலும் பாடல் காட்சிகள், நடனங்கள், இடைவேளைக்கு முன்னதான நீளமான சண்டைக்காட்சி ஆகியவற்றில் ஒளிப்பதிவாளர் சௌந்தர்ராஜன், எடிட்டர் அன்டனி ஆகியோரின் உழைப்பு மெச்சக்கூடியது.
குழப்பமான கதைக்களத்தை சாமர்த்தியமாக சுபா இரட்டையரின் கதை அனுபவத்தினாலும், காட்சிகளை சுவாரஸ்யமாக எடுத்திருப்பதிலும் நகர்த்த முயன்றிருக்கிறார் இயக்குனர்.

ஆனால் தமிழ் சினிமாவின் சில தவிர்க்க முடியா விடயங்கள் தடைக்கற்கள் ஆகின்றன.
இரட்டையரில் ஒருவர் அமைதியான, புத்திசாலி என்றால் மற்றவர் குறும்பான, முரட்டுத்தனம் மிக்கவராம். ஒரே காதலிக்கு இருவரும் ஆசைப்படுவது.

சூர்யாவின் நடிப்பைப்பற்றி இன்னும் பாராட்ட வேண்டுமா?
எத்தனையோ படங்களில் நிரூபிக்கப்பட்ட நடிப்பு.
இருவேடங்களையும் வேறுபடுத்திக் காட்டுவதில் ஜெயித்துள்ளார்.
ஆனால் மீசையில்லாத விமலனாக அவரது முகத்தில் முதுமை தெரிகிறது.
அகிலனாக முதல் பாதியில் கலக்கோ கலக்கல். (குறிப்பாக அந்த போலீஸ் நிலையக் காட்சி ;) )
ஆனால் ஏதோ ஒன்று முழுப்படத்திலும் சூர்யாவிடம் மிஸ்ஸிங்.
ஏழாம் அறிவு hangover இருப்பது போலவும் தோன்றுகிறது.

காஜல் அகர்வால். அழகு.. அவர் கண்கள் அதைவிட அழகு..
நடிக்கிறார் என்பதை விட அதிகமாக மொழிபெயர்க்கிறார்.. விழிகளாலும் எம்மையும்..
சின்மயியின் பின்னணிகுரல்  மிக நன்றாக ஒத்துவருகிறது.

ஆனால் சூர்யா - காஜல் அகர்வால் காதல் ஏனோ அபத்தமாக உள்ளது.. நாணிக்கோணி பாடல் தவிர...
ஆரம்பம் முதலே.. ஏன், எதற்கு என்ற கேள்விகளை எழுப்பிப் பார்த்தால் ஆடுவதற்கும் பாடுவதற்கும் வெளிநாடு செல்வதற்கும் கதாநாயகனுக்கு ஒரு துணை தேவைப்பட்டுள்ளது.
விமலனிடம் காதல் வயப்பட்டு அப்படியே இடைவேளையின் பின் ஒரு பாட்டிலே காதல் மாறிவிடுவது கடுப்பாக்குகிறது.

நாணிக்கோணி பாடலின் இரண்டாவது சரணத்தின் பின்னணி இசையிலும் வரியிலும் இரண்டாவது சூர்யாவின் முகபாவம், கண்கள் மாறும் தோரணையில் இதோ இரட்டையர் ஒரு பெண் மீது காதல் கொள்வது வாலிக்குப் பின் வித்தியாசமாக K.V.ஆனந்தினால் இங்கே காட்டப்படப் போகிறதோ என்று பார்த்தால்.. ப்ச்...

பாடல் காட்சிகளை வழமைபோலவே K.V.ஆனந்த் கதை சொல்லப் பயன்படுத்தியிருப்பது புத்திசாலித்தனம்.
ரெட்டைக் கதிரே , இரட்டையரின் வளர்ச்சி, தந்தையின் முன்னேற்றம் ஆகியவற்றைக் காட்டவும்,
யாரோ யாரோ - கதாநாயக மாற்றம், காதல் மாற்றம் ஆகியவற்றைக் காட்டவும் பயன்படுத்தப்பட்டுள்ளன...
படம் என்னவோ இழுவையாக இருந்தாலும், பாடல்கள் படமாக்கப்பட்டிருப்பது ரசனை.  அது K.V.ஆனந்தின் கைவந்த கலையாயிற்றே.

சூர்யாக்களின் தந்தையாக வரும் சச்சின் கெடேக்கர் ஏற்கெனவே தெய்வத் திருமகளில் அமலா பாலின் தந்தையாக நடித்தவர். மனிதர் அற்புதமாக நடித்துள்ளார்.அந்தக் கண்கள் மிரட்டல்.
தாயாக நடித்திருப்பவர் தாராவாம். பார்த்த முகமில்லை. ஆனால் தமிழ் சினிமாக்களின் வழமையாக உருகும் பாசமுள்ள தாய்.

நகைச்சுவைக்கெனத் தனியாக காட்சிகளோ, நகைச்சுவை நடிகர்களோ இல்லாதது தொய்வாக சில இடங்களில் இருந்தாலும், படம் இழுக்கும் இழுவையில் கடியான நகைச்சுவையும் இருந்திருந்தால் சுவிங்கம் தான்.

உளவாளி, பத்திரிகையாளராக வருகின்ற அந்த வெள்ளைக்காரப் பெண் திருப்பத்துக்கு உதவினாலும், அவர் உளவு பார்க்கும், அகப்படும், இறக்கும் இடங்களெல்லாம் ஏகத்துக்கு ஓட்டைகள்.

பாடல்களில் ரசிக்கவைத்த ஹரிஸ் ஜெயராஜ் பின்னணி இசையில் மீண்டும் ஒரு தடவை ஏமாற்றியிருக்கிறார்.
அதிலும் அந்த 'உக்வேனிய' துரத்தல் காட்சிகளில் சுத்தம்...

 தமிழில் முதன் முதலாக performance capture technology முறையைப் பயன்படுத்தி எடுக்கப்பட்ட காட்சிகளும், ரஷ்யா, சேர்பியா, குரோஷியா, அல்பேனியா போன்ற நாடுகளில் எடுக்கப்பட்ட காட்சிகளும் புதுமையானவை.
ஆனால் இவற்றையெல்லாம் விழுங்கிவிடுகின்றன இலகுவாக ஊகிக்கக்கூடிய கதைத் திருப்பங்களும், இழுவையான வெளிநாட்டுத் துப்பறியும் காட்சிகளும், சண்டைகளும்.
பீட்டர் ஹெய்னாம் சண்டைப் பயிற்றுவிப்பாளர். இடைவேளைக்கு முன்னதான சண்டைக்காட்சியில் இரட்டையர் மோதும் காட்சிகள் ரசிக்கவைத்தாலும் நீளமோ நீளம்.
அதேபோல அந்த வெளிநாட்டு சண்டைகளும் செம நீளம்.. கொட்டாவி வருகிறது.

ஒலிம்பிக் போட்டிகளும், பதக்கங்கள் வெல்ல ஒவ்வொரு நாடும் (முக்கியமாக வல்லரசுகள்) படும் பாடுகளைக் காட்டியிருக்கும் விதம் தமிழுக்குப் புதியது.
ரஷ்யப் பின்னணி இருப்பதால் எங்கே அமெரிக்க ஏகாதிபத்திய வால் என்று முத்திரை குத்திவிடுவார்களோ என்ற பயத்தில் படத்தின் ஆரம்பத்திலேயே
"இந்தப் படம் எந்த நாட்டையும் மோசமாகக் காட்டும் நோக்கத்தில் எடுக்கப்படவில்லை" என்ற அறிவித்தலையும் கொடுத்துவிடுகிறார்.
படத்தில் சொல்லப்பட்டுள்ள ரஷ்யாவிலிருந்து பிரிந்த அந்த உக்வேனியா எங்கே இருக்கிறது என்று யாராவது தேடப் போகிறார்கள்.
ஆனால் அங்கே சென்று குற்றவாளிகளையும் ஆதாரத்தையும் தேடும் காட்சிகள் ஒட்டவில்லை.
வில்லனை பாசம் கடந்து வெறுக்கச் செய்வதற்கு அந்த 'பத்து அப்பா' வசனத்தை வைத்து அபத்தமாக்குகிறார்.

சுவாரஸ்யமாக, பிரமிக்கும் விதத்தில் எடுத்திருக்கவேண்டிய படம் தறிகெட்டு முடியமாட்டாதா என்று கெஞ்சிக் கேட்கும் வகையில் முடிகிறது.
எந்த நேரத்தில் மாற்றான் என்று பெயர் வைத்தார்களோ, சூர்யாவுக்கும்  K.V.ஆனந்துக்கும் இனித் தங்களை மீள்வாசித்துக்கொள்ளவேண்டிய நேரத்தை மாற்றான் தந்திருக்கிறது.
சூர்யாவின் அதிதீவிர ரசிகர்களையும், காஜல் அகர்வாலையும் மட்டும் கவரலாம்..

படம் தந்த சில பாடங்கள்..
எந்தவொரு கண்டுபிடிப்புமே சில தீய பக்கவிளைவுகளைத் தரக் கூடியதே..
சூர்யாவையும், சுபாவையும் மட்டும் நம்பி ரசிகர்களைக் கதை என்று ஒரு விஷயத்தில் சொதப்ப முடியாது.




மாற்றான் - ஏமாற்றினான்


November 02, 2011

ஏழாம் அறிவு / 7ஆம் அறிவு



படத்துக்கான கதையை முடிவு செய்தபோது ஆரம்பித்த பரபரப்பு, விளம்பரங்கள், ஏக பில்ட் அப்புகள் வெளிவந்த பின்னரும் இந்தப் பதிவை எழுதும் வரைய தொடர்கின்றன.

A.R.முருகதாஸ் என்ற அற்புதமான திரைக்கதை சிற்பியை, ரசிக்கக் கூடியதாக மசாலாக் கதைகளை விறுவிறுப்பாக த் தந்த திறமையான இயக்குனர் என்று A.R.முருகதாஸ் மீது ஒரு தனி விருப்பம் + நம்பிக்கை இருந்தது.
தமிழில் இருந்து அகில இந்தியாவுக்கு அவர் செல்லக் காரணமாக அமைந்த 'கஜினி' சூர்யாவுடன் மீண்டும் இணைகிறார் என்றவுடன் 'நிறைய' எதிர்பார்த்தவர்களில் நானும் ஒருவன்.

பாடல்கள் ஏமாற்றினாலும் படத்தில் திருப்தி கிடைக்கும் என நம்பியிருந்தேன்.
கதைக்களம் என்று தொலைகாட்சி, இணைய, சஞ்சிகைப் பேட்டிகளில் இயக்குனரும், நடிகரும் அவ்வாறே மாறி மாறி சொல்லி நம்ப வைத்திருந்தார்கள்.

ஆனாலும் முருகதாஸ் உலகத்தரம், வெளிநாடுகளுக்கு சவால், தமிழனின் பெருமை, ஈழத் தமிழருக்கு அர்ப்பணிப்பு என்று மீண்டும் மீண்டும் சொல்லி (விளம்பரப்படுத்தி) வந்தது 'அட என்னடா இது' என்ற சலிப்பையும் ஏற்படுத்தியது உண்மை.

வேலாயுதம் - ஏழாம் அறிவு இரண்டுக்கும் ஒரே நேரத்தில் முதல் காட்சி டிக்கெட் தந்து எதற்குப் போயிருப்பேன் என்றால் நிச்சயம் ஏழாம் அறிவு தான் என் தெரிவாக இருந்திருக்கும்.
ஆனால் வேலாயுதம் தான் எனக்கு வாய்த்தது. அந்த நாள் மறக்க முடியாத நாள் ஆகிவிட்டது.
ஏழாம் அறிவு பார்க்க வெள்ளிக்கிழமை தான் அமைந்தது.

அதற்குள் இலங்கையில் கடுமையாக ஏழாம் அறிவுடன் தணிக்கையும் இன்னும் பல விஷயங்களும் விளையாடிவிட்டன.

பௌத்த மதம், சீனா, இந்தியா, தமிழின் தொன்மை, தமிழன் பற்றிய வசனங்கள் என்று பல விடயங்கள் சம்பந்தப்பட்டிருப்பதாக அறிந்தவுடன் தணிக்கைக் குழு உஷாராகி வெட்டிக் கொத்தி விட்டார்கள்.
அப்படியும் இந்தியத் தொலைக்காட்சிகளில் வரும் Trailerகளால் பயந்து போன ஏழாம் அறிவின் இலங்கை இறக்குமதியாளரான தமிழர் ஏன் வம்பு என்று படத்தை EAP நிறுவனத்துக்கு (பெரும்பான்மை உரிமையாளர்) விற்றுவிட்டார்.

நான் போன நேரம் மருதானை சினிசிட்டி திரையரங்கின் நான்கு திரைகளிலும் ஏழாம் அறிவே ஓடிக் கொண்டிருந்தது. (மறுபக்கம் கொட்டாஞ்சேனை சிநிவொர்ல்டில் மூன்று அரங்கிலும் வேலாயுதமாம்) அதில் நாம் இருந்த மண்டபமும் இன்னொன்றும் வெள்ளி இரவுக் காட்சி ஹவுஸ் புல்.

ஏழாம் அறிவு படத்தைப் பற்றி Twitter ஸ்டைலில் சொல்வதானால்

ஏழாம் அறிவு = Genetics + Gymnastics + Gimmicks 

1600 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியத் தமிழ் வீரன் ஒருவனால் சீனருக்குக் கற்றுக்கொடுக்கப்பட்ட தற்பாதுகாப்புக் கலையும், மருத்துவமும் இந்தியாவுக்கு எதிராகத் திரும்புகிறது எனும்போது பரம்பரைகள் கடந்தும் மரபணுக்கள் மூலமாகக் கடத்தப்படும் மரபியல் ஆற்றல்களை மீள எழுப்பி பதினாறு நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்த வீரனை மீண்டும் எழுப்பும் ஒரு நவீன புனை கதை??/விஞ்ஞான கதை.

கதையாக இதை சுருக்கமாக சுவை பட எழுதியிருந்தால்.. அதுவும் எழுதியவர் சுஜாதாவாக இருந்தால்?? நினைக்கவே சுகமாக இல்லை?
அதே தான் படம் முடியும்போது என் எண்ணமும்....
முருகதாஸின் பட விவாதங்களில் கலந்துகொள்ளும் ஆரோக்கியமான குழு எடுத்த கதை சுவாரஸ்யமானது தான். திரைக்கதையிலும் இதே குழு செயற்பட்டுள்ளதா என்பதே கேள்வி.

தீனா, ரமணா, கஜினி மூன்று A.R.முருகதாஸின் முன்னைய படங்களிலும் கதைவிடை தெரிந்த, முக்கியமான திருப்பங்கள் சில மட்டும் உள்ளதாக இருந்தாலும், திரைக்கதை அமைக்கப்பட்ட விதம், விறுவிறுப்பையும் எதிர்பார்ப்பையும் பிரமிப்பையும் ஏற்படுத்தியிருக்கும்.

ஏழாம் அறிவுக்காக இத்தனை காலம் ஒதுக்கியும்.....
சூர்யாவின் உடலுக்கான உழைப்பு, கதைக்களத்தின் பிரதான கருவான போதி தர்மனின் வரலாறு, அது பற்றிய தகவல்கள், மரபியல் பற்றிய விடயங்கள் என்று பாராட்டக் கூடிய விடயங்கள் படத்தில் நிறைந்திருந்தாலும் நிறைவான விடயங்களை விடக் குறைகள் காணக்கூடிய விடயங்கள் அதிகமாக இருக்கின்றன என்பதை இதுவரை பார்த்தவர்களும், விமர்சனங்கள் பல வாசித்தோரும் உணர்ந்திருப்பீர்கள்.

முதலில்,
வித்தியாசமான முயற்சி, தமிழனின் பெருமை, தமிழனுக்கான படம் இப்படியான படங்களை வெல்ல வையுங்கள் என்று கொடி பிடிப்போருக்கு -

வித்தியாசமான முயற்சி என்றால் இந்த சன் பிக்சர்ஸ் தயாரித்து பாரிய விளம்பரத்தோடு, பெரிய விளம்பர உத்திகள், எங்கே திறந்தாலும் உலகத் தரத்தில் ஒரு முயற்சி என்று பீத்திக்கொள்ளும் இந்த ஏழாம் அறிவுக்கு அல்ல, ஏழைகளின் தயாரிப்பாக வந்து விளம்பரம் இல்லாமல், மக்களை சென்று சேராமல் பெட்டிக்குள்ளே சுருண்டு போய் விலை போகாமல் கிடக்கும் நல்ல, சிறந்த, யதார்த்த படங்களுக்கு ஆதரவைக் கொடுங்கள்..

அழகர் சாமியின் குதிரைக் குட்டி, பூ, அங்காடித் தெரு, மைனா, நந்தலாலா,ஒன்பது ரூபா நோட்டு , தென் மேற்குப் பருவக்காற்று இப்படியான படங்களை நீங்கள் ஆதரித்தால் நானும் உங்கள் கட்சி..
குறைந்தது ஆயிரத்தில் ஒருவன்..
இன்று வரை இயக்குனர் செல்வராகவன் அது ஈழத் தமிழருக்கு சமர்ப்பணம் என்று உருகி பேட்டி கொடுத்து ஆலவட்டம் பிடித்து இலங்கையிலும்,லண்டனிலும், கனடாவிலும், ஜெர்மனியிலும் படத்தை ஓட்ட செய்யவில்லை.

தமிழனின் பெருமை, வீரம் எல்லாம் இப்படி சூர்யாவின் Six pack பார்த்து தான் தெரிந்து கொள்ளவேண்டும் என்றால் ..........................

ஒருவன் இருக்கும் வரை அவன் பற்றிப் பேசாதார், எட்டியும் பாராதார் எல்லாம் இறந்த பின் (இறக்கவில்லை இன்னும் என்று இன்னமும் சொல்வோரும் நிறையவே உண்டு.. எனக்கு ஏன் வம்பு) வீரமா, துரோகமா என்று வசனம் வைப்பதை நாம் கரகோஷம் செய்து உருக வேண்டுமா?

போதி தர்மன் என்ற தமிழர் மூலமாகத் தான் இப்போது சீனர் உலகத்துக்கு வழங்கியதாகக் கூறப்படும் குங் பூ (Kung Fu) சீனருக்கே கற்பிக்கப் பட்டதாக ஏழாம் அறிவு மூலமாகத் தான் நான், இன்னும் பலரும் அறிந்துகொண்டோம் என்பது உண்மை.
ஏழாம் அறிவு பார்த்து வந்து, நள்ளிரவு தாண்டி இரு மணி நேரமாவது அது பற்றிய தகவல்களைத் தேடிக் கொண்டிருந்தேன்..
(உண்மையா அல்லது ஏதாவது ஒரு சிறு தகவல்/ எடுகோளை வைத்து இட்டுக் கட்டி விட்டார்களா என்று தேடி அறியும் ஆர்வம் தான்)

http://www.buddhanet.net/e-learning/buddhistworld/chan.htm






தமிழனின் வீரத்தைத் தான் காட்ட இந்தப் படம் என்று முருகதாஸும், சூரியாவும், தயாரிப்பாளர் உதயநிதியும் சொல்வதை நாம் நம்பினால் தெலுங்கில் போதி தர்மன் ஆந்திராவிலே பிறந்ததாகக் காட்டி தமிழன் தலையில் மிளகாய் அரைக்கிறார்களாம்.
(அவ்வாறு குறிப்பிடப் படவில்லை என்றும் இன்னும் சிலர் சொல்கிறார்கள்.. தெலுங்குப் பதிப்புப் பார்த்தவர்கள் ஆதாரப் படுத்துக)

போதி தர்மர் தமிழர்தானே? காஞ்சிபுரத்தில் தானே பிறந்தார்.?அப்புறம் ஏன் தெலுங்கு படத்துல அவர் குண்டூர்ல பிறந்ததாகவும் ..ஹிந்தி படத்துல தாரவில பிறந்ததாகவும் சொல்கிறார்கள்.இரண்டு மொழிகளிலும் அவர் தமிழர்ன்னு பெருமையா சொல்லி இருக்கலாமே ? 
- இன்று Facebookஇல் பார்த்த ஒரு கருத்துப் பகிர்வு 

அத்துடன் தமிழன் என்று வந்த வசனங்கள் எல்லாமே தமிழனுக்குப் பதிலாக அங்கே இந்தியன் பிரதியீடு..

இது எல்லாம் வியாபார தந்திரம், மொழி மாறும் சினிமாவில் இது சகஜம் என்று சொல்வோருக்கு..

படத்திலேயே பல இடங்களில் குழப்பம் வரவில்லையா?

இந்தியருக்காக இந்தியாவுக்காக கதாநாயகனும் நாயகியும் நண்பர்களும் போராடுகிறார்கள்.
ஆனால் எங்கே போனாலும் தமிழர் என்றால் அடிக்கிறார்கள்; இந்தியாவிலும் தமிழரை மதிக்கிறார்கள் இல்லை என்ற புலம்பல்..
"வெளிநாடுகளில் இந்தியன் என்றால் ஒதுக்குகிறார்கள்; இந்தியாவில் தமிழன் என்றால் ஒதுக்குகிறார்கள்"

இறுதியாகவும் ஆரியர் அழித்த திராவிடம் பற்றி கதாநாயகனின் பிரசங்கம்.
இந்தியர்களின் கவனத்துக்கு இது..



சரி பிற விஷயங்கள் கடந்து படத்துக்குள் 'கொஞ்சம்' நுழைவோமானால்,

படத்தில் எனக்குப் பிடித்த விஷயங்கள் -
இயக்குனரின் தேடல் - தகவல் சேகரிப்பும், அதை நுணுக்கமாக ஒரு விவரணம் போல அல்லாமல் கொடுக்க முயன்ற விதமும். (ஆனாலும் போதி தர்மரின் காட்சிகளில் ஒலிக்கும் பின்னணிக் குரலும், போதி தர்மரைத் தெரியுமா என்று மக்களிடம் கேட்கும் காட்சிகளும் கொஞ்சம் Documentary உணர்வைக் கொடுத்துள்ளன என்பதை ஏற்கத் தான் வேண்டும்.
முதல் இருபது நிமிடங்கள் - சூர்யாவின் அமைதி தவழும் முகமும், பின்னணி இசையும், அந்தக் குளிரான சீனப் பகுதிகளை ரவி K சந்திரனின் ஒளிப்பதிவு தந்துள்ள விதமும் அருமை

சூர்யாவின் உழைப்பு - இரு வேடங்களிலும் தன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு உழைத்துள்ளார்.

ஒளிப்பதிவு - பாடல் காட்சிகள் + வீதியில் நடக்கும் ஒரு சண்டைக் காட்சி தவிர ஏனைய அனைத்து இடங்களிலும் ரவி K சந்திரன் கலக்கி இருக்கிறார்.
ஆனாலும் ரவி K சந்திரனின் தனித்துவ முத்திரைகளை ஏழாம் அறிவில் காணமுடியவில்லை

வில்லனாக வரும் Johnny Tri Nguyen - இந்த வியட்நாமிய வில்லன், அதிகமாகப் பேசாமலே கண்களாலும் அக்ஷனாலும் மிரட்டி இருக்கிறார்.  பல இடங்களில் சூர்யாவை விடக் கரகோஷங்கள் இவருக்கு..

படம் முழுக்க பரவி இருக்கும் பல தகவல்கள் - சில இடங்களில் இது சாதாரண ரசிகர்களுக்கு Over dose ஆக இருக்கலாம். எனக்குப் பிடித்திருந்தது.
 ஆனால் மரபியல் கற்கைகளை ஒரு கல்லூரி மாணவி சும்மா ஏதோ வீட்டுப் பாடம் செய்வது மாதிரி, வெகு சாதாரணமாக வீட்டிலேயே ஆய்வு கூடம் வைத்து செய்வதெல்லாம் சாத்தியமா? (அப்பா கமல் வைத்துக் கொடுத்திருப்பாரோ?)
கற்றவர் பார்த்துக்குங்கப்பா

அன்டனியின் editing -  காக்க காக்கவில் ஆரம்பித்தவர் இன்றுவரை எந்தப் படத்திலும் சொதப்பியதாக இல்லை.


பிடிக்காத/கடுப்பேற்றிய/உறுத்திய விஷயங்கள்

ஷ்ருதி ஹாசன் - பாடல் காட்சிகள் தவிர வேறு எதிலுமே இவர் அழகாகவும் இல்லை; பொருத்தமாகவும் இல்லை. வெள்ளை வெளேரென்று ஒரு குச்சியாக பல இடங்களில் நின்று விட்டுப் போகிறார். முக பாவத்தைப் பார்த்தால் சும்மாவே அழுதுவிடுவார் போல..
தமிழின் பெருமை பற்றி சொல்கிற படம் என்று விட்டு தமிழை டமிலாகப் பேசும் இவரிடம் தமிழின் பெருமையைப் பேசச் சொல்கிற இடங்கள் இயக்குனருக்கே உறுத்தலாக இருக்கவில்லையோ?

உன்னைப் போல் ஒருவனில் இசையமைப்பாளராகத் தேறியதை ஏனைய எல்லா இடங்களிலும் கோட்டை விட்டுவிட்டார்.
முதலில் ரஹ்மானின் செம்மொழி பாடலைக் குதறியவர், எல்லேலோமமா பாடலில் ளகர, லகரங்களைக் கொன்றார்; படத்தில் அனேக வசனங்களையும்...
தந்தையார் த்ரிஷாவுக்குத் தமிழ் சொல்லிக் கொடுக்க முதல் மகளுக்கு சொல்லிக் கொடுத்தால் புண்ணியம்.

லொஜிக் - விஜய், அஜித், ரஜினி படங்களில் பார்க்கத் தேவையில்லை. ஆனால் சரித்திரத்தையும் தற்காலத்தையும் விஞ்ஞானத்தின் மூலமாக இணைக்கும் படத்தில் இதை A.R.முருகதாஸ் பல இடங்களில் கோட்டை விடுகிறார்.
சில முக்கிய கோட்டைகள்...

இந்தியாவின் முன்னணி விஞ்ஞானி சீனர்களுடன் நடத்தும் ரகசியக் கொடுக்கல் வாங்கலுக்கு சாதாரண மின்னஞ்சலைப் பயன்படுத்துகிறாராம். அதுவும் சர்வசாதாரணமாக அவரது மின்னஞ்சலில் இருந்து தகவல்களைப் பிறர் எடுக்கிறார்களாம்.

போலீஸ் நிலையத்தில் வந்து அந்த டொங் லீ அத்தனை பேரைத் தாக்கி வெறியாட்டம் ஆடிய பின்னரும் இப்படி வெளிப்படையாக அவன் நடமாட முடிகிறது. போலீசு என்னாச்சுய்யா?

அதுசரி இலங்கையர் நாம் இந்தியாவுக்குள் நுழையத் தான் இத்தனை கெடுபிடியா? சீனர்கள் அவ்வளவு இலகுவாக நுழைய முடிகிறதா?
இது தான் உண்மை நிலவரமா?

நுணுக்கு காட்டியில் ஷ்ருதி பார்க்கும் மரபியல் அணுக்கள் - முருகதாசின் படத்தில் இப்படி?? நம்ப முடியவில்லை

அந்த வீதியில் நடக்கும் சண்டை + Hypnotism மூலமாக வில்லன் வாகனங்களை வைத்து சூர்யா+ஸ்ருதியைக் கொல்ல எத்தனிக்கும் இடம்..

(கிராபிக்ஸ் சொதப்பலும் அப்படியே உறுத்தித் தெரிகிறது)

சீனாவில் காலமான போதி தர்மரது DNA மூலக் கூறுகள் இந்தியாவில் இருக்கும் சாதாரண கல்லூரி மாணவிக்கு எப்படிக் கிடைக்கிறது?

பாராட்டக் கூடிய பாரிய முயற்சி ஒன்றில் இறங்கிய இயக்குனர் + குழு இப்படியான விடயங்களையும் சரியாகத் திட்டமிட்டிருக்கலாமே..



பாடல்கள் எல்லாமே இடைச் செருகல் போலவும், ஒளிப்பதிவு சீரில்லாததாகவும் தெரிகிறது.
இன்னும் என்ன தோழா பாடல் கதை சொல்லிப் போவதாக இருப்பதாலோ என்னவோ மனதில் நிற்பதாக இல்லை.
(நக்கீரன் You tubeஇல் ஏற்றியுள்ள வீடியோ இதை விட உசுப்பேற்றும்.. ஆனால் இறுதி யுத்தத்தில் வதை பட்ட எங்கள் மக்களைக் காட்சிப் பொருளாக்கி இருப்பது கொடுமை + கண்டிக்கத் தக்கது)

இடைவேளைக்குப் பிறகு எல்லாக் காட்சிகளுமே திருப்பங்களை ஏற்படுத்தாமல், அடுத்தது என்ன என்று இலகுவாக ஊகிக்குமாறு அமைத்திருப்பது வழமையான முருகதாஸின் புத்திசாதுரியத் தனம் எங்கே போனது என்று கேட்க வைக்கிறது.

நோக்கு வர்மம் தான் hyptonizeஇன் ஆரம்பம் என்று காட்டியுள்ள முருகதாஸ் சில கணங்களில் ஒருவரை வசப்படுத்துவது முடியுமா என்ற சாத்தியத்தையும் ஆராய்ந்திருக்கலாமே.
http://www.wikihow.com/Hypnotize-Someone

அடுத்து நோக்கு வர்மம், வசியப் படுத்தல் போன்றவை இலிருந்து வேறுபடுவதையும் அவை பற்றி ஓரளவாவது அறிந்தவர்கள் உணர்ந்திருப்பார்கள்.

http://en.wikipedia.org/wiki/Hypnotherapy

இக்கால சர்க்கஸ் சாகச வீரன் சூர்யாவின் பாத்திர உருவாக்கம் கொஞ்சம் சறுக்கி இருக்கிறது.
ரிங்கா ரிங்கா பாடல்களில் ஆரம்பிக்கும் பாத்திரம் அதற்குப் பின் இன்னும் ஒரே ஒரு பாடலின் சில இடங்களில் சாகசம் செய்வதோடு சரி..

இலங்கையில் தணிக்கை செய்யப்பட காட்சியை Facebook, You tube இல் நானும் பார்த்திருந்தேன்.
போதி தர்மனின் மரபணுக்கள் தட்டி எழுப்பப்படாமலே வீராவேசம் பொங்க ஸ்ருதிக்கு அவர் வீரம் பற்றி சொல்வது கொஞ்சம் திணிக்கப்பட்ட உறுத்தலாக இருக்கிறது.

கஜினி படத்தில் எனக்கு அலுக்கப் பண்ணிய ஒரே விடயம் சூர்யா இரட்டை வில்லன்களுடன் போடும் அந்தக் கடைசி சண்டை..
அதே போலத் தான் ஏழாம் அறிவிலும் இறுதி சண்டை. வில்லனை சூர்யா வீழ்த்துவார் எனத் தெரியும்.
ஆனால் ஏராளம் கிராபிக்ஸ் சொதப்பல்களுடன் இழுத்து நடக்கும் சண்டை சலிக்க செய்கிறது.

அதுசரி முக்கியமான கேள்வி.. நோக்கு வர்மம் போதி தர்மரின் பரம்பரையில் வந்த சூர்யாவைத் தானே பாதிக்காது? ஸ்ருதியைக் கொள்ள வில்லன் அவரையே பயன்படுத்தியிருக்கலாமே? ஏன் பயன்படுத்தவில்லை ?
இயக்குனர் Johnnyக்கு சொல்லவில்லையோ?

எக்கச் சக்க சொதப்பல்களுடன் இந்தப் படத்தை எனக்கு ஏற்கவும் முடியவில்லை; ரசிக்கவும் முடியவில்லை.

சொல்ல வந்த விஷயம்/ஆதங்கம் எல்லாமே சரி என்று வைத்தாலும் ... சொன்னவிதம்...?????????!!!!!!! இதுக்கு ஏன் இவ்வளவு Build-Up????

அதிலும் எல்லாவற்றுக்கும் மகுடம் வைப்பதாக சூரியா இறுதியில் மஞ்சளையும் மாக்கோலத்தையும் வைத்து தமிழருக்கு சொல்லும் அறிவுரை சின்னப் பிள்ளைத் தனம். (சொல்லி முடிக்க திரையரங்கிலிருந்து கேட்ட ஒரு குரல் -இதெல்லாம் தெரியும்டா.. போடா ---)
தமிழரைக் கேவலப்படுத்த இதை விட வேறு ஒன்றுமே வேண்டாம்.
அதில் முருகதாசும் பெருமையோடு கமேராவுக்குப் பின்னால் அமர்ந்திருக்கிறாராம்.

சீன இந்திய யுத்தம் என்பதை தமிழ், தமிழர் என்ற உசுப்பேற்றலுடன் + DNA, Bio war விஞ்ஞானப் புதுமையுடன் தரப் பார்த்திருக்கிறார்...
ஆனால் தயாரிப்பு மச மச கொச கொச..

இன்னும் எத்தனை நாள் தான் தமிழ்,தமிழர் என்று எங்களை நாமே உசுப்பேற்றி, ஏமாற்றப் போகிறோம்? ஏமாறப் போகிறோம்....??

ஏழாம் அறிவில் தான் பாடலே வருதே..

இன்னும் என்ன தோழா, எத்தனையோ நாளாய்....

ஏழாம் அறிவு - ஏமாற்றம் 



முக்கிய குறிப்பு - சூர்யா ரசிகர் என்று வராமல் அர்த்தமுள்ள, ஆக்க பூர்வ வாதங்களுடன் வரும் பின்னூட்டங்கள் என்றால் அனானிகளாக வந்தாலும் தாராளமாக வரவேற்கிறேன். :)


June 03, 2010

சிங்கம் - கிர்ர்ர்ர்





நேற்று தான் சிங்கம் பார்க்கப் போக நேரம் கிடைத்தது.
பார்க்கப் போகு முன்பே காது வழியாகக் கேட்ட விமர்சனங்கள் பொதுவாக நல்லது என்றே சொல்லின.. ஒரு சில சாமி மாதிரி என்று சொல்லின..


நானும் ஹரியின் படம்.. முன்னர் வெளிவந்திருந்த பட போஸ்டர்கள் , அது பற்றி நான் போட்ட பதிவு (ஓடுரா ஓடுரா சிங்கம் வருது..  )என்று எல்லாவற்றுக்கும் தயாராய்த் தான் போயிருந்தேன்.


ஆனால் உண்மையாக முதல் காட்சியிலிருந்து படம், குறிப்பாக வேகமான திரைக் கதை கட்டிப் போட்டு விட்டது.






சுருக்கமாக சொல்லப் போனால்..
வெகு பழக்கமான தமிழ் சினிமாவின் போலீஸ் கதை.


நேர்மையான துணிச்சலான போலீஸ் அதிகாரிக்கும் விடாப்பிடியான அடாவடித்தனம் செய்யும் எந்தவொரு பாதகத்துக்கும் அஞ்சாத பயங்கர வில்லனுக்கும் இடையிலான விறுவிறு மோதல் தான் கதை.


இப்படியான ஒரே விதமான கதைகளும் மீண்டும் மீண்டும் வந்தாலும் சில வெற்றி பெற்றே ஆகின்றன..
காரணம் ஒன்றும் மாய வித்தை அல்ல.. மிக சிம்பிளான அடிப்படை விஷயங்கள்.
Basic formulas..


திரைக்கதையின் வேகம்
பொருத்தமான நாயகன்.. அல்லது பொருந்திப் போகிற நாயகன்..
சுவாரஸ்யமான ஒரு சில காட்சிகளாவது..
பலமான ஒரு வில்லன்..


இவை நான்கும் இந்தப்படத்திலே இருப்பதால் சன் பிக்சர்சுக்கு - Sun Pictures உண்மையிலேயே முதன் முறையாக ஒரு வெற்றிப் படம் கிடைத்துள்ளது.


ரொம்பவே லேட்டாப் பார்த்ததால் சிங்கம் பற்றி விமர்சனம் எழுதத் தேவையில்லை என்றே முதலில் எண்ணியிருந்தேன்.
எனினும் படம் முடிந்து வெளியே வரும்போது யாரோ ஒரு இளைஞர் சொன்ன ஒரு கொமெண்டில் கிடைத்த உற்சாகம் சிங்கத்தில் நான் ரசித்த,பிடித்த, பிடிக்காத விஷயங்களைப் பற்றி எழுதவேண்டும் என்று பதிவுப் பக்கம் கூட்டிவந்துவிட்டது.


"அப்ப நாளைக்கு ப்லொகில் சிங்கம் விமர்சனம் பார்க்கலாம் போல"
- ஆனால் எக்கச்சக்க ஆணி பிடுங்கல்களால் ஒரு நாள் தாமதம்.. ;)


பரவாயில்லையே நாமளும் வலைப்பதிவர் தானா? ;)




சூர்யா கம்பீரமாக சிங்கம் மாதிரியே இருக்கிறார்.
இறுக்கிய கம்பீர உடலும்,முறுக்கிய மீசையும்,மிடுக்கான நடையும்,பார்வையிலேயே தெரிகிற பொறுப்பும் நேர்மையும் அவரது home workஐயும் பாத்திரத்துக்குத் தன்னைப் பொருத்த அவர் எடுத்த கடின உழைப்பையும் காட்டுகிறது.




கண்கள் பேசுகின்றன.. கைகள் ரொம்பவும் அதிகமாகவே சில சமயம் பேசுகின்றன..
ஹரி படம் என்பதால் அதிக முறைப்பு,அதீத பேச்சு..அதிரடி சண்டைகள்,பாய்ச்சல்கள்,ஓட்டங்கள் என்பவற்றைத் தவிர்க்க முடியாது தான்..


சூர்யாவைப் பார்க்கும் போதெல்லாம் அடிக்கடி எழும் ஆதங்கம் அனுஷ்காவுடன் இவரைப் பார்த்த பின் மீண்டும் எழுந்தது..
சே.. இன்னும் கொஞ்சம் உயரமாக இருந்திருக்கக் கூடாது..
பல இடங்களில் உறுத்துகிறது.


படத்தில் சூர்யாவை விட முதலில் இருந்து முடிவு வரை அதிக பில்ட் அப் கொடுக்கப்படுபவர் வில்லன் மயில்வாகனம் பிரகாஷ் ராஜ்.


(இந்தப் படத்தில் ஹீரோ வில்லன்களின் பெயரைக் கேட்க சர்வசாதாரணமாக இலங்கையின் பல பாகங்களில் வைக்கப்படும் பெயர்கள் ஞாபகம் வருகிறது. துரைசிங்கம் - மயில்வாகனம்)


மனிதர் மின்னுகிறார். படத்தைத் தூக்கி நிறுத்துவது இவர் தான்.
சவால் விடுவதாகட்டும்,மிரட்டுவதாகட்டும்,ஆவேசம்,கோபம், அவமானம் படுவதாகட்டும் பிரகாஷ் ராஜ் பிரகாசிக்கிறார்.


கடைசிக் காட்சி வரை பி.ரா அதகளம்..
இவ்வளவு நாளும் பார்த்த படங்களிலெல்லாம் பிரகாஷ் ராஜ் வந்தால் கூட நடிக்கும் எந்தக் கொம்பனாக (ஹீரோ) இருந்தாலும் பிரகாஷ் ராஜின் பிரம்மாண்ட விஸ்வரூப நடிப்புக்குள் வீழ்ந்து காணாமல் போனதையே பார்த்திருக்கிறேன்.


வசூல் ராஜா - கமல்,மொழி-பிருதிவிராஜுக்குப் பிறகு முதல் தடவையாக ஒரு  ஹீரோ பிரகாஷ்ராஜ் என்ற மலையை விழுங்கி மேவி நிற்கிறார்.


சூர்யா அந்த வகையில் ஜொலித்திருக்கிறார்..
ஒரு வேளை ஹரி அமைத்த பாத்திரப் படைப்பு அவ்வாறு சூர்யாவை அதாவது துரைசிங்கத்தை கர்ஜிக்க வைத்திருக்கலாம்..


அனுஷ்கா - அப்பப்பா.. என்ன கவர்ச்சி.. காட்சிகளில் நல்ல பெண்ணாக வந்து போனாலும் இந்தப் 'புலி' பாடல் காட்சிகளில் உரித்துக் காட்டுகிறது..
உயரம் தான் கொஞ்சம் உறுத்துகிறது.
ஒரு பாடல் காட்சியில் ஓவரோ ஓவர்..
இன்னும் ஒரு சிம்ரனாக இடுப்பை இயன்றவரை காட்டி,அசைத்து ஆடுகிறார்.




விவேக் - மினி வெண்ணிற ஆடை மூர்த்தி.. பத்மஸ்ரீக்கு சரக்கு தீர்ந்து விட்டது.. பச்சையாக கொச்சை பேசுகிறார். சில காட்சிகள் சிரிக்க வைத்தாலும் வடிவேலுவாக மாறுகிறாரோ எனத் தோன்றுகிறது..


ஏனைய நடிகர் பட்டாளம்..


நாசர் - அளவெடுத்த பாத்திரம்
ராதாரவி - பல நாளுக்குப் பிறகு மிடுக்கு..
விஜயகுமார் - (ஹரியின்) மாமாவுக்கு மரியாதை
நிழல்கள் ரவி - கடைசிக் காட்சியில் மிளிர்கிறார்
போஸ் வெங்கட் - நேர்மை,பாவம்,பரிதாபம்




சில காட்சிகள் ரசனை..


கோவில் காட்சி.. சூர்யாவின் கண்ணில் அப்படியொரு காந்தம்.
அனுஷ்காவிடம் தன் சம்மதம் சொல்லும் சூர்யா..
நாசர் நாயகன் பாடலுடன் மூக்குடைபடுவது..
நல்லூரிலும் பின்னர் சென்னையிலும் பி.ரா-சூர்யா சந்திக்கும் அனல் பறக்கும் காட்சிகள்..
யுவராணி வரும் சில காட்சிகள்..


ஆனால் சிங்கம் படம் என்பதால் அடிக்கடி சூர்யா அடிக்கும் போதெல்லாம் சிங்கம் கிராபிக்சில் வருவது கார்ட்டூன் ஞாபகம் வருகிறது


அக்ஷன் காட்சிகள் வழமையான ஹரி மசாலா.. ஆனால் சூர்யா பறந்து பறந்து அடிப்பதைப் பார்க்க பயமாக உள்ளது.. இந்த வெற்றி அவரையும் விஜய்.அஜீத்தோடு போட்டி போட வைத்து விடுமோ என்று..


ஒளிப்பதிவாளர் பிரியன் தன்னுடைய உச்சபட்ச உழைப்பை ஹரிக்கு கொடுத்திருக்கிறார்.
பாடல் காட்சிகளில் அதிகமாக ஜொலிக்கிறார்.


பாடல்கள் படத்தில் நல்லாவே வந்திருக்கின்றன.


முதல் பாடல் மட்டும் ரொம்ப்பவே ஓவர் பில்ட் அப்..
கால்பந்துப் போட்டியில் ஒரு கோல் சூர்யா அடிப்பாராம்.. உடனே அணி வெல்லுமாம்.. கிழவங்க எல்லாம் 'சுறா' விஜய் கணக்குல இவரைத் தூக்குவாங்களாம்.
என்ன கொடும இது சூர்யா.. சாரி ஹரி..


எவ்வளவு தான் புதுசாப் படத்தைக் காட்டினாலும், சில ஊகிக்கக் கூடிய திருப்பங்களும், ஹரியின் 'சாமி' ஞாபகங்களும், அரிவாள், ஏலே,தூத்துக்குடி,கிராமிய மற்றும் குடும்ப செண்டிமென்ட்களும் கொஞ்சம் பழைய வாசனை தருகிறது.


அதுபோலவே சூர்யா-பிரகாஷ்ராஜ் மோதலில் நம்ப முடியாத சில லாஜிக் மீறல்களும் .. (மயில்வாகனத்தின் உறுத்துகின்ற பொய் மீசை போலவே)
ஆனாலும் வேகம் அதிவேக திரைக்கதை இவை எல்லாவற்றையும் கொஞ்சம் தள்ளி வைக்கிறது.


அது சரி இதுவும் விஜய் வேணாம் என்று சொன்ன கதையாமே..
அடிச்சுது அப்பாவிகளான நமக்கும் சூர்யா+ஹரிக்கும் லக்..
பின்ன நம்ம டாக்டர் போலீசா நடிச்சிருந்தா நமக்கெல்லாம் வாந்திபேதி வந்திருக்காது??


விஜயை நினைச்சா பரிதாபமா இருக்கு..
எத்தனை வெற்றி பெற்ற படங்களை நிராகரித்து டப்பாக் கதைகளை எடுத்து தானும் டப்பா ஆகிக் கொண்டிருக்கிறார்.


(உண்மையை சொன்னால் நிறையப் பேருக்கு கோவம் வரும் தான்.. ஆனால் இது உண்மையிலேயே நக்கல் அல்ல.. மனசில் உள்ள ஆதங்கம்)


நேற்று இலங்கையில் ஐந்தாவது நாள்.. அப்படியும் Houseful.
பார்த்த எல்லோரது முகத்திலும் ஒரு திருப்தி..


எனக்கு முன் இருக்கையில் இருந்த ஒரு அறுபது வயது மதிக்கத்தக்க அங்கிளின் கமெண்ட் "மசாலா எண்டா ஹரி தான்".
இது தான் ஹரியின் Success formula..


எனக்கு சிங்கத்தைப் பொறுத்தவரையில் செம திருப்தி..
போரடிக்கவில்லை..
எதிர்பார்த்துப் போயிருந்த ஹரியின் பாணிப் படம்..
சூர்யா சிங்கமாக கர்ஜித்திருக்கிறார்..
போஸ்டரில் பார்த்தது போல பயமுறுத்தவில்லை.;)


அவரது கண்ணும்,மீசையும்,நெஞ்சு நிமிர்த்திய கம்பீரமும் இன்னும் கண் முன்னமனசில் நிழலாடுகிறது..
பிரகாஷ்ராஜின் விஷமத்தனமான வீம்புகளும் தான்..


சிங்கம் - ரியல் சிங்கம் தான்..


சிங்கம் -கிர்ர்ர் 
(கர்ஜிக்கிறதை சொன்னேங்க.. ஹீ ஹீ)






பி.கு - இலங்கையில் சிங்கத்துக்கு நம் வெற்றி FM வானொலி உத்தியோகபூர்வ வானொலி என்று அதுக்கும் இதுக்கும் லிங்க் குடுக்காதீங்க மக்கள்ஸ்..
அசல்,ஆதவன்,வி.தா.வ,சுறா.. என் ரெட்டை சுழி,கனகவேல் காக்க ஆகிய டப்பிகளுக்கும் நாம் தான்..
ஸோ அது வேற.. இது வேற..




ஸ்பெஷல் வாழ்த்துக்கள்..
இன்று பிறந்தநாள் காணும் இசைராஜா இளையாராஜா அவர்களுக்கும், அவர் ரசிகர்களுக்கும்..
நாளை பிறந்த நாள் காணும் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கும் அவர் தம் ரசிகர்கள் (இவருக்கும் இருப்பாங்க தானே.. ;)) மற்றும் தொண்டரடிப்பொடிகளுக்கும் வாழ்த்துக்கள்..

October 21, 2009

ஓடுரா ஓடுரா சிங்கம் வருது..


சிங்கம் படப்பிடிப்பு ஆரம்பிச்சிட்டாங்களாம்..
காடெல்லாம் மன்னிக்க.. கோடம்பாக்கமேல்லாம் ஒரே பரபரப்பு..

ஆதவன் புகழ் சூர்யா மீண்டும் அரிவாள் புகழ் ஹரியோடு இணைந்தால் சும்மாவா..

இது சூர்யாவின் 25வது படமாம்..

சும்மா நெட்டில் தேடிப்பார்த்தவேளையில் சூர்யாவின் சிங்கம் பட ஸ்டில்கள் பார்த்து மிரண்டு (உண்மையிலேயே) போனேன்..

நல்லாத் தானே இருந்தீங்க சூர்யா..

எல்லாம் நல்லாத் தானே போயிட்டிருந்துது.. யார் வைத்த சூனியம் இது?

அமைதியா ரிவர் போல போல போய்க் கொண்டிருந்த உங்களுக்கு டெர்ரர் ஆகும் இந்த ஐடியாவைக் கொடுத்த அறிவுஜீவி யார்?(கிடைத்தால் நாலு சாத்துங்க சூர்யா ரசிகர்களே)

இதோ நீங்களும் கண்டுகளிக்க சிங்கம் ஸ்டில்ஸ்...(யாம் பெற்ற இன்பம்.. சேம் ப்லட் தியரி தானுங்கோ..)

முன்னெச்சரிக்கை..
பலவீனமான இதயம் படைத்தவர்கள்.. பயந்த சுபாவமுள்ளவர்கள்.. சூர்யாவின் தீவிர,அதி தீவிர ரசிகர்கள் இவற்றை பார்க்க முன் ஒரு தடவை மனசைத் திடப் படுத்திக் கொள்க..











படங்களையும் பார்த்து அவற்றில் உள்ள அதிரடி பன்ச் வசனங்களையும் வாசித்தீர்களா?

நான் முன்பே எனது ஆதவன் விமர்சனத்தில் சொன்னது போல சூர்யாவை தேடி எதோ ஒரு பட்டம் வருவது கிட்டத்தட்ட உறுதியான மாதிரி தெரியுதில்ல? இந்த எல்லா சிங்கம் ஸ்டில்களையும் விட பெட்டரான ஒன்று கீழே..

ஒரிஜினல் சிங்கம்..


நல்லவனா இருப்போம்னு பார்த்தா யாரும் விடுறாங்க இல்லையே.. ;)

சூர்யா நான் ஆதவன் விமர்சனத்தில் சொன்ன ஆலோசனையைக் கொஞ்சம் கருத்தில் கொள்க.. இல்லைன்னா குறைந்தபட்சம் ஜோவுடனாவது பேசிப் பாருங்க..


October 17, 2009

ஆதவன் - இன்னொரு குருவி??





உலகம் முழுவதும் தீபாவளி தினத்தன்று திரையிடப்படும் ஆதவன் திரைப்படத்தை ஒருநாள் முன்னதாகவே பார்க்கக்கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

நான் படித்த பாடசாலை கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியின் மாணவத் தலைவர் மன்றம் நிதி திரட்டும் நோக்கில் முதல்காட்சியை வாங்கிக் காட்டியதில் எம் வானொலி வெற்றி FM ஊடக அனுசரணை வழங்கியதில் இந்த அதிர்ஷ்டம் எனக்கு.

பாடல்கள் ஏற்கெனவே ஹிட்.. சூர்யாவின் தொடர்ச்சியான வெற்றிகள்.. அத்துடன் சூர்யாவின் அண்மைய பத்திரிகைகளின் மீதான தாக்குதல்கள் பின் மன்னிப்பு.. நயனின் பிரபுதேவா காதல் சர்ச்சை..மாபெரும் வெற்றி பெற்ற தசாவதாரத்துக்குப் பின் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் படம்..குருவி பறக்காமல் மடங்கியபிறகு உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கின்ற படம் என்று ஏகப்பட்ட எதிர்பார்ப்புக்களும் போட்டிக்கு வராமல் வேட்டைக்காரன் பின்தங்கியதால் ஏற்பட்ட வாய்ப்பும் ஆதவனை அசைக்க முடியாதவனாக மாற்றும் என்று பரவலாக நம்பப்பட்டது.

எனக்கு மனம் என்னவோ ஆதவன் இந்த அளவுகடந்த எதிர்பார்ப்புக்களால் கவிழும் என்றே சொல்லியது. எனினும் மசாலா வித்தை அறிந்த கே.எஸ்.ரவிக்குமார் மீது கொஞ்சம் நம்பிக்கை இருந்தது.

ஏற்கெனவே கதை ஓரளவு கசிந்திருந்தது..
சூர்யா பணத்துக்காக கொலை செய்யும் ஒரு அடியாள்.சரோஜாதேவி,நயன்தாரா குடும்பத்துக்குள் ஒரு கொலை செய்ய நுழைந்து காதல்வயப்பட்டு பின் மனம் மாறுவது தான் கதை என்று தகவல்கள் சொல்லியிருந்தன.
கொஞ்சம் கூட மாறுபடாமல் அப்படியே கதை..


கதை ரமேஷ் கண்ணாவுடையது.. அவர் இளையமான் என்ற கோமாளிப் பாத்திரத்திலும் வந்து சிரிக்கவைக்கிறார்.. (இளையராஜா பாதி..ரஹ்மான் பாதியாம்)

திரைக்கதை மற்றும் வசனம் கே.எஸ்.ரவிக்குமார்..

சூர்யாவின் பெயர் திரையில் தோன்றும்போதே விசில் ஆரவாரங்கள்.ரசிகர்கள் கணிசமான அளவில் அவருக்கு அதிகரித்துள்ளனர்.

பட்டப் பெயர்கள் எதுவும் இல்லாத ஹீரோ என்ற நல்லபெயர் சூர்யாவிற்கு இருக்கும்போதிலும்,சிறுவயது சூரியாவின் புகைப்படங்கள் முதல் ஜோ-சூரியா அவர்கள் மகள் தியா உள்ள புகைப்படம் வரை காட்டி அவர் பெயரை காண்பிப்பது வெகுவிரைவில் ஸ்டாராகவோ,தளபதியாகவோ இவரும் மாறப்போகிறார் என்பதற்கான ஆரம்பமோ..

நயன்தாரா,வடிவேல் ஆகியோருக்கும் அவர்களுடைய வழமையான ரசிகர்கள்..

Action திரைப்படம் என்பதை எழுத்தோட்டத்திலேயே அழுத்தமாக நிரூபிக்க முயன்றுள்ளார் இயக்குனர்.

படத்தொகுப்பு டோன்மாக்ஸ். பல இடங்களில் இவர் கைவண்ணம் மினுங்கினாலும் கொஞ்சம் அவசரம் தெரிகிறது.

சூர்யாவின் உடல் மொழிகளும்,முக பாவனைகளும் அசத்தல்.கட்டுமஸ்தான உடல் கம்பீரத்தை அள்ளித் தருகிறது.எனினும் அயனின் பாதிப்பு நிறையவே..இதனால் சில காட்சிகளில் ஏற்கெனவே பார்த்த அசதி..

அந்த அசதியைப் போக்கி திரைப்படத்தோடு இறுதிவரை எங்களை ஒட்டி,ஈர்க்க செய்பவர் வடிவேலு..நீண்ட நாட்களுக்குப் பிறகு திரைக்கதையோடு ஒட்டி வரும் வகையில் வைகைப் புயலடிக்கிறார்.

பல இடங்களில் வடிவேலு தன்னை மட்டுமே பார்க்கும் விதத்தில் centre of attractionஐ எடுத்துக் கொள்கிறார்.

சூர்யாவும் அவரும் சேர்ந்து சிரிக்கவைத்த அத்தனை இடங்களும் தீபாவளிப் பட்டாசுகள்.
பார்த்தீபனிடம் படும் அவஸ்தையை விட வடிவேலு அதிகம் பட்ட அவஸ்தை இந்த ஆதவனிலாகத் தான் இருக்கும்.
அந்தளவுக்கு சூர்யா மிரட்டுவதும் வடிவேலு மடங்கி அடங்குவதும் ரசனை மிகுந்த சிரிப்பு வெடிகள்..

பாலம்,வெடிகுண்டு,வீடியோ என்று தினுசு தினுசாக வடிவேலு மாடிக் கொள்வது புதுசு..
கிட்டத் தட்ட படத்தின் இரண்டாவது நாயகன் வைகைப் புயல் தான்..


நயன்தாரா அறிமுகம் முதலே காட்டுவதும் மறைப்பதும் என்று அழகு,கவர்ச்சி திருவுலா நடத்துகிறார். கொஞ்சம் உருகவும் செய்கிறார்..
எந்த உடையிலும் அழகாக நயனின் உடல்.. பாடல் காட்சிகளில் நயன் சும்மா உடலைக் குலுக்கி நடக்கவே திரையரங்கில் விசில்கள் பறக்கிறது..(இவ்வளவுக்கும் அநேகர் பள்ளி சிறுவர்கள்.. பிரபுதேவாவில் தப்பில்லை..அவரென்ன முனிவரா? )

உடல் கச்சிதமாக கட்டழகாக இருந்தாலும் கூட,முகம் என் இப்படி கிழடு தட்டிவிட்டது? கவலை? பதற்றம்? அளவுக்கதிக வேலை?

சிலநேரங்களில் நயனை விட அவர் பாட்டியாக வரும் கன்னடத்துப் பைங்கிளி சரோஜாதேவியின் முகம் அழகாகத் தெரிகிறது.

நயன்தாராவுடன் ஒத்தைக்கு ஒத்தையாக ஒரு பாட்டில் குழுவோடு சேர்ந்து ஆட்டம் போடுகிறார்.. அடடா.. சிவாஜி,எம்.ஜி.ஆரின் ஆவிகள் பார்த்தாலும் ஆசைகொள்ளும். அதே கை,கண் அசைவுகள் தான் ரொம்பவே ஓவர்..
சரோஜாதேவியின் அளவுக்கதிக பூச்சலங்காரங்களைக் கலாய்க்கிறார்கள்.

காலஞ்சென்ற மலையாள நடிகர் முரளிக்கு படம் முழுக்க நிறைக்கும் கம்பீரமான பாத்திரம். மனிதரின் கண்களும் பேசுகின்றன.படத்தின் ஆரம்பத்திலேயே அவருக்கு அஞ்சலிகளைத் தெரிவித்துள்ளனர்.

ஷாயாஜி ஷிண்டே கொல்கத்தாவாழ் தமிழ் பேசும் முஸ்லிம் கூலிப்படைத் தலைவன்..

நீண்ட நாட்களுக்குப் பின் ஆனந்தபாபு.. பாடும் வானம்பாடியிலும் பின் புது வசந்தத்திலும் அசத்திய அந்த டிஸ்கோ கலைஞனா இந்தளவு வயக்கெட்டுப் போய் வில்லனாக?
போதை எவ்வளவு கொடியது??

கே.எஸ்.ரவிக்குமாரின் திரைப்படங்கள் என்றாலே நட்சத்திர அணிவகுப்பு என்பது போலே இதிலும் அனுகாசன், பெப்சி விஜயன்,ரியாஸ்கான், அலெக்ஸ், மனோபாலா, சத்யன் என்று வருகிறார்கள்..
சிலருக்கு மனதில் ஓட்டும் பாத்திரங்கள்..

வில்லன் ராகுல் தேவ் மிரட்டுகிறார்.. ஆனால் பெயரும்,பேசும் தமிழும்.கொல்கத்தவோடு ஒட்டவில்லை என்பது உறுத்தல்..

கே.எஸ்.ஆர் இயக்கும் படங்களில் உள்ள அவரது வழமையான டச்சுகள் மிஸ்ஸிங்.. நிறைய ஓட்டைகள்.. அடிப்படை லாஜிக் மீறல்கள்..

ரெட் ஜெயண்டோடு இணைந்ததோ என்னவோ குருவி போல பறக்க பல இடங்களில் சூர்யாவும் ஆசைப்பட்டுள்ளார். பொருந்தவில்லை..
அதுக்குத் தான் இளைய தளபதி இருக்கிறாரே.. நீங்களும் மூக்குடைபட வேண்டுமா சூர்யா?

கட்டடங்கள் தாண்டிப் பாய்கிறார்.. துப்பாக்கிக் குண்டின் வேகத்துக்கு ஈடுகொடுத்து தோளில் குண்டடி தாங்குகிறார்.. கயிற்றிலே ஹெலிகொப்டர் வரை சென்று ஆகாய சாகசம் புரிகிறார்..குருவி பரவாயில்லை..
ஐயோ சாமி.. இருந்த நல்லதொரு நடிகரையும் நாசமாக்கி விட்டுத் தான் விடுவீர்களோ?

சூர்யாவின் இமேஜ் கெடுபடுவது தாங்கமுடியாதவராக நீங்கள் இருக்கும்பட்சத்தில் க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சி பார்க்காதீர்கள்.

ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் பாடல்கள் படத்துக்கு மிகப்பெரும் பலம்.காட்சியமைப்பிலும் ஒளிப்பதிவாளர் ஆர்.கணேஷ் ஐஸ்லாந்தையும்,தென் ஆபிரிக்காவையும் தன காமராக் கண்களால் எடுத்து விருந்து படைக்கிறார்.


எனினும் முதல் பாதியில் டம டமவைத் தவிர மற்றைய இரு பாடல்களும் சுமார் ரகமே.. மூன்று ஹிட் பாடல்களுமே பிற்பாதியில் வருவது கதையோட்டத்தை இழுக்கிறது.

சண்டைக் காட்சிகள்,துரத்தும் காட்சிகளில் கனல் கண்ணன்,பிரெஞ்சு சண்டைக் கலிஞர் ஆகியோருக்கு ஈடு கொடுக்கிறது ஹரிஸ் ஜெயராஜின் இசையும்..

வடிவேலு இல்லாவிட்டால் படம் நுரை தள்ளி இருக்கும்.

எல்லாத் திருப்பங்களையும் எளிதில் யூகிக்கக் கூடியளவுக்கு பலவீனமான திரைக் கதை. தீபாவளிக்கு திரைக்கு கொண்டுவரவேண்டுமென்று அவசரப்பட்டிருப்பது தெரிகிறது.

கமலோடு செய்த வித்தியாச முயற்சிகளை சூர்யாவோடு செய்யப்போய் சூடுபட்டுள்ளார் இயக்குனர்.

பத்து வயசுப் பையனாக சூர்யாவைக் கட்ட முற்பட்டு தோல்வி கண்டுள்ளார்.கிராபிக்ஸ்/மோர்பிங் முகம் உறுத்துகிறது.(இதைத் தான் கஷ்டப்பட்டு நடித்தோம் என்று பில்ட் அப கொடுத்தார்களா?)
எரிச்சலும் வருகிறது. பொருந்தவில்லை.

பல கிராபிக்ஸ் காட்சிகள் சொதப்பல்..
ஹொவ்ரா பாலம்,குளுமையான இயற்கைக் காட்சிகள்,பணத்தைக் கொட்டிஎடுத்த பாடல் செட்கள் என்பனவற்றை ஒளிப்பதிவாளர் சரியாக செய்தும் இவ்வாறான குளறுபடி கிராபிக்சினால் சில காட்சிகள் படுத்து விடுகின்றன.

சில வசனங்கள் கூர்ந்து கவனிக்கத் தக்கவை..

ஆரம்பத்தில் குழந்தைகளைக் கடத்திக் கொன்று உடல்பாகங்களை விற்பனை செய்யும்(நோய்டா விவகாரம்) கும்பல் பற்றி ஆராயவரும் நீதிபதியிடம் பத்திரிக்கையாளர் ஒருவர் கேட்கும் கேள்விகளும் அதற்கு சூடாகி நீதிபதி(முரளி) வழங்கும் பதில்களும் நடிகர்-பத்திரிக்கையாளர் விவகாரத்தின் பாதிப்பா?

(உன்னைப் போல பத்திரிகையாளர்களால் தான்யா எல்லாருக்கும் கெட்ட பெயர்.. எப்பிடி வேணாலும் கேள்வி கேப்பீங்களா? silly question)

வடிவேலு சூர்யாவைப் பார்த்து சிவாஜி,எம்ஜீஆர்,ரஜினி,கமல் என்று வரிசையாக ஒப்பிடுவது, பத்து படியில் நூறு பிட்டு நான்.. என்று சூர்யாவுக்கான பன்ச்..

ஆனாலும் எந்தவொரு இரட்டை அர்த்த வசனமும் இல்லாததால் பாராட்டுக்கள் வசனகர்த்தா ரவிக்குமாருக்கு..

நயன்தாராவின் கவர்ச்சியும் கல கல குடும்ப சூழலில் கொஞ்சம் மறைந்துவிடுகிறது..குடும்பப் பட்டாளங்களும் கலர்புல் பாடல்களும் ஹிந்தி படங்களை ஞாபகப்படுத்தினாலும் ஆபாசமில்லாத படம் என்பதால் குடும்பங்களோடு ரசிக்கத் தடையில்லை.. (மாசிலாமணியும் அப்பிடித் தானேங்கோ??)

இறுதி இருபது நிமிடங்களில் இயக்குனர் கொஞ்சமாவது தன கைவண்ணத்தை வித்தியாசமாகக் காட்டி இருந்தால் ஆதவன் இன்னும் கொஞ்சம் தப்பித்திருப்பான்..

தனது வழமையான பாணியில் இறுதிக் காட்சியில் வந்து கலகலக்க வைக்க முயன்றுள்ளார் கே.எஸ்.ரவிக்குமார்.. அவருடன் தயாரிப்பாளர் உதயநிதி வேறு..ஆனால் சிரிப்பு என்னவோ வரமாட்டேன் என்கிறது..

சிரிக்கவைக்கும் நடுப்பகுதி இருந்தாலும் வடிவேலுவும் பாடல்களும்,சூர்யாவின் துடிப்பும் இல்லாவிட்டால் ஆதவன்.. இயலாதவன்..

கலைஞர் டிவி புண்ணியத்தில் நஷ்டத்திலிருந்து தப்பித்துக் கொள்ளும்..
ஆனால் சூர்யாவின் 'திறமையான,மாற்று வழியில் வரும்' நடிகர் பெயர் காலி..

குருவியைத் தயாரித்த நிறுவனம் குடும்ப பூச்சு,காமெடி நெடி பூசி பறக்கவிட நினைத்துள்ள மற்றொரு குருவி???

ஆதவன் = குடும்பம்+காமெடி+குருவி??


பி.கு - சூர்யா நடிக்கும் அடுத்த படம் ஹரியின் இயக்கத்தில் சிங்கம்..
தாங்காது சூர்யா..
எதற்கும் மறுபடி பாலாவிடமோ, கௌதம் மேனனிடமோ, முருகதாசிடமோ பேசுவது நல்லது


April 06, 2009

அயன் - நான் guarantee !!! ஒரு முழுமை விமர்சனம்

Loshan


'அயன்' திரைப்படம் வந்தவுடனேயே இரண்டாவது காட்சியே பார்த்துவிட வேண்டும் (முதல் காட்சி எப்படியும் பார்க்க முடிந்திருக்காது) என்று நான் முடிவெடுக்க ஒன்றல்ல – பல காரணங்கள் 
அண்மைக்காலத்தைய சூர்யா படங்கள் கொடுத்த திருப்தியும் நல்ல ரசனையும்,'அயன்' படப்பாடல்கள் அத்தனையுமே பிடித்தமானதாக இருந்ததும்,அசினுக்குப் பிறகு நம்ம ரசனைக்குரியவராக அண்மைக்காலமாக தமனா மாறியிருப்பதுவும்,கே.வி.ஆனந்தின் முன்னைய 'கனாக் கண்டேன்'கொடுத்த நம்பிக்கையும் தான்.

படத்தின் ஆரம்ப எழுத்தோட்டத்திலேயே பல நாடுகளில் எடுக்கப்பட்ட படம் என்பதை மிகத் தெளிவாக,நுட்பமாகக் காட்டிவிடுகிறார் ஆனந்த்.அசத்தலான பிரமாண்டம் அது! 

stylish ஆன சூர்யாவின் அறிமுகமும் அதிலேயே corporate கம்பெனிகளுக்கு கொடுக்கும் சாட்டையடியும்,பொன்வண்ணன் - பிரபு போன்றோர் அறிமுகமாவதுமே திரைப்படம் ஒரு வித்தியாசமான பாதையில் செல்லப்போகிறது என்ற நம்பிக்கையைத் தந்து நிமிர்ந்து உட்கார வைக்கிறது.

                                       Loshan
அப்படியே பரபர வேகம்... 'பளபள' பாடலும் பரபரக்கிறது. நடனக்காட்சி அமைப்புக்கள்,நடன அமைப்புக்கள்,குறிப்பாக பல்வேறு கெட் அப்பில் வரும் சூர்யாவும்,பல நாடுகளில் எடுக்கப்பட்ட காட்சிகளும் அசத்துகிறது.

கோங்கோ நாட்டில் எடுக்கப்பட்ட காட்சிகள் அப்படியொரு இயல்பு!

முதல் தடவையாக தமிழ் சினிமாவின் கமெரா படாத ஆபிரிக்க மண்ணைத் தொட்ட ஆனந்தின் கமெராவுக்கு வாழ்த்துக்கள்.. (ஆனால் படத்தில் ஒளிப்பதிவைக் கையாண்டுள்ளார் M.S.பிரபு - திருத்தம் நன்றி இரா.பிரஜீவ்) 

குறிப்பாக அந்த துப்பாக்கிச் சூட்டுக் காட்சியில் எனக்கொரு கணம் எம் நாட்டின் நினைவு வந்து போனது.  
ஆப்பிரிக்க நாடுகள் பலவற்றுக்கும் எங்கள் நாட்டுக்குமிடையில் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன என்பது உண்மைதான்.

வசனங்களிலேயே பல விஷயம் சொல்லி விடுகிறார். இன்னும் கொஞ்சம் நீண்டிருந்தாலும் சலிப்பைத் தந்துவிடக் கூடிய அபாயத்தை புரிந்து கொண்டு காட்சிகளின் வேகத்தினால் சுவாரஸ்யமாக்கியிருக்கிறார் இயக்குநர்.

கதை,திரைக்கதை சுபா என்றால் இது போல இருக்கும் என்பது எதிர்பார்க்கக் கூடியதே.. பரபர வேகத்துக்கு ஆனந்தின் ஒளிப்பதிவும்,அண்டனியின் படத்தொகுப்பும் பெரும் பங்காற்றியிருக்கின்றன.. 

பிரபு - கம்பீரம் திரைப்படத்தின் தூண்களில் ஒருவர். சூர்யா கொஞ்சம் வேகம் - கொஞ்சம் விளையாட்டு என்றிருப்பதனால் பிரபுதான் திரைப்படத்தின் மையம் என்று பலவிடயங்களில் தோன்றுகிறது. உனக்கும் எனக்கும்,பில்லாவுக்கு பிறகு பிரபு பெருமைப்படக் கூடிய ஒரு பாத்திரம்! கண்களிலேயே பேசும் போது தந்தையார் சிவாஜி தெரிகிறார்.

எனினும் பிரபு ஒரு கடத்தல் பெரும்புள்ளியாக இருந்தும் இரு அடியாட்களோடு மட்டும் அவரை உலவ விட்டு சொதப்பி இருக்கிறார் இயக்குனர்.. ஏன் ஏன் ஏன்?

வில்லனை நல்லவேளை 'சேட்' ஆக காட்டியது! நிறைய பெண்களையே பொறாமைப்பட வைக்குமளவுக்கு அழகான நேரான முடி! 
மனிதர் கலக்குகிறார்! மிரளவும் வைக்கிறார். எனினும் வித்தியாசம் என்று எதுவுமில்லை.

கனாக்கண்டேனில் - பிருதிவிராஜ் வந்த அளவுக்கு மீண்டும் கே.வி.ஆனந்திடம் எதிர்பார்த்து என் தப்புத்தான்!
தாய் ரேணுகா பாத்திரம் மூலமாக நிற்கிறார்.. பிரபுவை வையும் இடமெல்லாம் எங்கே flashback போட்டு அறுக்கப் போகிறார்களோ பார்த்தால் நல்ல காலாம் அப்படி எதுவும் செய்து சொதப்பவில்லை..  

ஜெகன் தன் 'வீட்டிற்கு' கூட்டிப் போவது கலகல கலாட்டா!
ஆனால் கூத்துப்பட்டறையின் திறமையான கலைராணிக்கு ஒரு டப்பா பாத்திரம்.. ஏன் இந்தக் கொடுமை?

முதல் தரம் பட்ட 'பலான' அனுபவத்தையே சூர்யா இரண்டாவது தடவை உண்மை வீட்டிலே காட்டுமிடத்தில் இதுவரை எந்த கதாநாயகிக்கும் இல்லாத அறிமுகக் காட்சி தமன்னாவுக்கு! 
அது ஒரு வித்தியாசமான டூ பீஸ்! (ஜொள்ளர்களே படம் பாருங்க ... )

அசின் மும்பை பக்கமே போனால் அவர் வெற்றிடம் நிச்சயம் தமன்னாவுக்குப் போகும் என்று அடித்து சொல்லும் முதல் நபராக நானும் இருப்பேன்! குறும்பு காதல் சோகம் கோபம் அவற்றுடன் கவர்ச்சியும் தேவையான அளவு பொருத்தமான இடங்களில் வெளிப்படுகிறார்.

                                           Loshan

நல்லா மேலே வாங்கக்கா!

(ஆனால் ஏதோ ஒரு minus இருப்பதாக மனசு சொல்லுது என்னவென்று சரியாகக் கண்டுபிடிச்சு எனக்கு மின்னஞ்சலில் அனுப்புவோருக்கு என் சார்பில் நண்பர் காலாண்டி பரிசு கொடுப்பார்.)

தமிழ்த்திரைப்பட இயக்குனர்களுக்கு 'பில்லா' வின் பிறகு மலேசிய மேனியா பிடிச்சிருக்கு போல – 'அயன்'இலும் பாடல்களுடன் மட்டுமல்லாமல் ஜெகனை சாகடிக்கவென்றே மலேசியாவுக்கு கூட்டிப்போகிறார்கள். எனினும் ஆபிரிக்காவில் அசத்தும் காட்சிகள் போல மலேசியக் காட்சிகள் இல்லை!

விஜய் டிவி புகழ் ஜெகனுக்கு முதல் முறையாக ஒரு நல்ல நீண்டநேரம் வரக்கூடிய பாத்திரம் ஜெகனின் ஜொலிக்கிறார்.

                                   
                                      Loshan
ஜெகனுக்கு இனிமேலாவது நல்ல வாய்ப்புக்கள் கிடைக்கும்!  சூர்யா gap விடும் இடமெல்லாம் மனிதர் பட்டை கிளப்புகிறார்! அவரது timing sense of humour அபாரம்! சீனியர் கருணாவையும் ஓரங்கட்டி விடுகிறார்.
ஜெகன் தன் தங்கையை சூர்யா லவ்வும்போது மாமாவாக மாறிப்போவது நல்ல காமெடி.. நல்ல காலம் எனக்கும் தங்கைகள் இல்லை. எனது நெருங்கிய நண்பர்கள் யாருக்குமே தங்கைமார்,அக்காமார் இல்லை.. ;)

ஜெகன் பற்றி எனது முன்னைய பதிவொன்றுக்கு இங்கே சொடுக்குங்கோவ்..

சூர்யா – smart & class ! அவரது துள்ளல்,துடிப்பு,நடிப்பு நகைச்சுவை அனைத்துக்குமேற்ற மற்றுமொரு படம்! பல இடங்களில் விஜய்,அஜித் பட formulaக்கள் தெரிந்தாலும் சூர்யாவின் தனித்துவம் எல்லாவற்றையும் மறக்கடித்து விடுகிறது.


                                     Loshan
சூர்யா பார்க்கும் போது சில நேரங்களில் தோனி போல இருக்கிறார். எந்த ஒரு கெட் அப்பும்,ஆடைகளும் அவருக்கு பொருந்தி விடுகிறது.. இன்னும் கொஞ்சம் உயரமாக இருந்திருந்தால் சிலவேளை போலிவூடில் ஷாருக்கான்,சல்மான் கான்,ஆமிர்கானுக்கெல்லாம் சவால் விட்டிருப்பார்..

'குருவி' விஜய் மாதிரியே பறக்கிறார்; பாய்கிறார்..சில இடங்களில் காதில் பூச்சுற்றினாலும் விஜய்க்கும் அவருக்கும் ஒரே வித்தியாசம் - அவருக்கு எவ்வளவு பாய்ந்தாலும் காயம் வராது - இவருக்கு காயமும் வருதே!

அக்ஷன் காட்சிகளில் அசத்தும் அதே அளவுக்கு ஆட்டம் ஒட்டம் தமன்னாவுடன் காதல் பொன்வண்ணனிடம் பதுங்கலிலும் பின்னி மினுங்குகிறார்.

தனக்கென்று தனி formulaவை வைத்துக் கொள்ளாமல் இப்படியே வேறுபட்ட கதைகளை மாற்றி மாற்றி எடுத்தால் என்ன வேடத்தில் சூர்யா நடித்தாலும் யாரும் ஏற்றுக்கொள்வார்கள்.

அந்த நகைக்கடை முதலாளி நம்ம S.P.முத்துராமனா? மனிதர் இணை தயாரிப்பாளர் என்று பெயரையும் போட்டுக் கொண்டதோடு பார்ட் டைமாக இனி நடிக்கவும் ஆரம்பிக்கலாம்.. 

ஹரிஸ் ஜெயராஜ் பாடல்கள் போலவே பின்னணி இசையிலுத் பிளந்து கட்டினாலும் ஒரு சில இடங்களில் சொதப்புகிறார்.. எனினும் பல இடங்களில் இவரை விட்டால் ரஹ்மானையும் மிஞ்சிவிடும் அபாரம்!

'விழிமூடி' பாடல் டச்சிங் ரகம் என்றால்,'அய்யய்யோ' - அட்டகாசம்; 'நெஞ்சே' காட்சிகளின் ரம்மியம். ஹரிஸின் இசையை அனுபவித்து –பாடல் வரிகளை ரசித்து ஆழ்நது படமாக்கியிருக்கிறார்கள்.

                                   Loshan
80களில் சகலகலாவல்லவன்,முரட்டுக்காளை பின்னர் அண்மையில் ஜெமினி என்று அடிக்கடி தமிழ் திரையுலகின் போக்குகளை மாற்றி வந்துள்ள AVM நிறுவனம் அயன் மூலமாக மேலும் ஒரு மாற்றம் கொண்டுவரும் போலுள்ளது..

படத்தை பார்த்துக் கொண்டு போகும் போது எனக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு பார்த்த மெக்சிகனோ அல்லது ஸ்பானியப் படமோ ஞாபகம் வந்தது.

படத்தின் ஆரம்பக் காட்சிகளில் DVD சுட்டு படமாக்குகிறார்கள் என்று விலாவாரியாகக் காட்டியதும் உங்களையும் சேர்த்தா K.V.ஆனந்த்?

அதிலும் வில்லனும் வில்லனின் காட்சிகளின் ஸ்பானிய பாணி பின்னணி இசையும் ஆபிரிக்காவின் சில காட்சிகளும் பல கடத்தல் காட்சிகளும் அந்த ஒரிஜினல் படத்தையே அடிக்கடி ஞாபகப்படுத்துது. 
ஆனால் பெயர் மட்டும் வருவதில்லையே!

கடத்தலில் இப்படி இப்படியெல்லாம் வழிகளுண்டா?

சுங்கத்தினரும் கடத்தல்காரர்களும் அயனுக்கும் ஆனந்துக்கும் நன்றி சொல்வார்கள் - அல்லது வெளில வாய்யா வச்சுக்கிறோம் என்பார்கள் -

வேறெந்நத் தமிழ்படத்திலும் இதுவரை பார்க்காதளவுக்கு கடத்தலை அக்குவேறு ஆணிவேறாகப் புட்டுப் புட்டு வைத்திருக்கிறார் - ஒருவேளை அனுபவமோ?

கிளைமாக்ஸ் காட்சி கூட பல ஹொலிவூட் படங்களை ஞாபகப்படுத்தியது.  நிறைய LOGIC ஓட்டைகள் இருந்தாலும் கூட சுவாரஸ்யத்தில் ஒன்றுமே உறுத்தவில்லை.

பாடல்காட்சிகளில் நேர்த்தி & நயம்.ஒவ்வொன்றிலுமே கலைநயம்,வெளிநாட்டுப் பயணம்,பணச் செழுமை தெரிகிறது.

அறிவுரை சொல்லும் காட்சியொன்றில் இயக்குனர் சங்கரையும் வருகிறார்!  

ஆனால் அண்மைக்காலத்தில் நான் பார்த்த படங்களின் தொடக்கம் முதல் முடிவு வரை தொய்வில்லாமல் ரசித்த ஒரு படம் அயன்!

ஜாலியாக ஒரு 2 ½ மணிநேரத்தை ரசிக்க 'அயன்' Jolly guarantee ! 

டிஸ்கி - படம் முடிந்து வெளியே வரும் நேரம் அடை மழைக்கிடையில் சூர்யாவின் ஸ்டாண்டை விட நானும் நண்பர்களும் ஓடி பாய்ந்து நனையாமல் என் வாகனத்தை தேடி ஏறியது,எந்த ஒரு HOLLYWOOD படத்திலுமே இதுவரை வந்திருக்காது.. ஆனால் ஒன்றிரண்டு பெண்கள் மாத்திரமே படம் பார்க்க வந்திருந்தது கொடுமை என்று நண்பர் காலாண்டி முணுமுணுத்தது இன்னும் எதிரொலிக்கிறது..   





ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner