December 10, 2017

திசர vs ரோஹித் - ஆரம்பிக்கிறது ஆர்வத்தைத் தூண்டும் ஒருநாள் தொடர் - என்னென்ன எதிர்பார்க்கலாம் ?

Iron Man vs Hit Man



இலங்கை அணிக்கு இந்த வருடத்தின் 5வது ஒருநாள் சர்வதேச அணித்தலைவராக திசர பெரேரா. உபுல் தரங்கவின் தலைமையிலான அணி அமீரகத்தில் பாகிஸ்தானிடம் தோற்ற பிறகு பாகிஸ்தானுக்குச் சென்ற இலங்கையின்  T20 அணிக்குத் தலைமை தாங்க இணங்கியதற்குப் பரிசாகவோ என்னவோ 'இரும்பு மனிதர் திசரவுக்கு தலைமைப் பதவி பரிசு கிடைத்துள்ளது.

எனினும் நிரந்தர நியமனம் இல்லையாம். இந்தத் தொடரின் பெறுபேறு பார்த்துத் தான் அடுத்த தொடருக்கான நியமனம் உறுதியாகும் என்று ஸ்ரீ லங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.
புதிய தலைவரின் கீழ், உபாதையடைந்து சில காலமாக அணியை விட்டு வெளியேயிருந்த பல முக்கியமான வீரர்கள் மீண்டும் அணிக்குள் புதிய உற்சாகத்தோடு திரும்பிய இலங்கை அணிக்கு, வருகின்ற 20ஆம் திகதி முதல் பயிற்றுவிப்பாளர் பதவியை ஏற்கப்போகும் சந்திக்க ஹத்துருசிங்கவின் வருகைச் செய்தி கூட இன்னும் உத்வேகத்தை அளித்திருக்கும்.

இலங்கையின் 22வது ஒருநாள் சர்வதேசத் தலைவராக திஸர பெரேரா- மறுபக்கம் இந்தியாவின் 24வது ஒருநாள் சர்வதேச அணித்தலைவராக ரோஹித் ஷர்மா.
இருவருமே தமது சர்வதேச அணித் தலைமைத்துவ அறிமுகங்களை இயற்கை அழகு கொஞ்சும் இமாலயத்தின் தரம்சாலாவில் இன்று ஆரம்பிக்கவுள்ளார்கள்.

பக்கத்து வீட்டுக்காரர் அடிக்கடி சந்தித்து ஹாய் சொல்லிக்கொள்வது போல, எப்போதெல்லாம் பொழுதுபோகவில்லையோ "நீ வா தம்பி" என்று BCCI அழைக்க நம்மவர்கள் அங்கே போவதும், "அண்ணே அனுசரணையாளர் காசு கொஞ்சம் தேவைப்படுது.அணியைக் கொஞ்சம் அனுப்பிவையுங்க" என்று SLC கேட்க இந்தியா இங்கே வருவதும் சகஜமானது.

அய்யய்யோ மீண்டும் மீண்டும் இவங்க தான் விளையாடுறாங்களா என்று கொட்டாவி விடும் அளவுக்கு அண்மைக்காலத்தில் அடிக்கடி இந்திய - இலங்கை போட்டி பார்த்து அலுத்துவிட்டது.
சர்வதேச அரங்கில் ஒருநாள் போட்டிகளில் அடிக்கடி ஒன்றையொன்று எதிர்த்து விளையாடிய அணிகள் இந்த அண்ணன்  - தம்பியரே..
155 போட்டிகள் - 88 இந்தியாவுக்கு வெற்றி, 55 இல் இலங்கை வெற்றி.

(இதற்கு அடுத்தபடியாக இந்தியா இல்லாத நேரம் நம்ம சகபாடியாக 'எல்லாவிதங்களிலும் உதவும் பாகிஸ்தானோடு இலங்கை 153 போட்டிகளை விளையாடியிருக்கிறது.
அதற்குப் பிறகு தான் அவுஸ்திரேலியா - மேற்கிந்தியத் தீவுகள் 139,
அவுஸ்திரேலியா - இங்கிலாந்து 137, அவுஸ்திரேலியா -நியூசீலாந்து 136)

எனினும் இந்திய மண்ணில் வைத்து 48 போட்டிகளில் இந்தியா பெற்றுள்ள 34 வெற்றிகளுக்கு எதிராக இலங்கை 11 வெற்றிகளையே பெறமுடிந்துள்ளது.
அத்துடன் கடந்த எட்டு ஆண்டுகளில் இந்தியாவில் இலங்கை அணி இந்தியாவுக்கு எதிராக 8 தோல்விகளையும் ஒரேயொரு வெற்றியையுமே பெற முடிந்துள்ளது.

ஆனால் இன்று ஆரம்பிக்கவுள்ள தொடர் கொஞ்சம் வித்தியாசமானது.
இந்தியா அண்மைக்காலத்தில் தொடர்ச்சியாக வெற்றி பெறுவதற்கு காரணமாக இருந்த அணித் தலைவர் - ஓட்டக் குவிப்பு இயந்திரம் விராட் கோலிக்கு ஓய்வு. அண்மைக்காலமாக இந்தியா செய்து வருவதைப் போல டெஸ்ட் போட்டிகளுக்கான முதல் தெரிவு பந்துவீச்சாளர்களுக்கு ஒரு நாள் போட்டிகளில் ஓய்வு. எனினும் அவ்வாறு வாய்ப்புக் கிடைக்கும் அக்ஸர் பட்டேல், சஹால், பும்ரா போன்ற வீரர்களும் விக்கெட்டுக்களை எடுப்பதோடு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி டெஸ்ட் அணிக்கான வாய்ப்பையும் தேட முனைகிறார்கள். பும்ரா அவ்வாறு தான் முதற்தடவையாக தென் ஆபிரிக்கா செல்லும் டெஸ்ட் குழாமில் இடம்பிடித்துள்ளார். இந்த ஆரோக்கியமான போட்டி இந்திய அணியின் தெரிவுகளை உயர்மட்டத்தில் பேண உதவுகிறது.

இலங்கை அணியிலோ அண்மைக்காலமாக இதன் தலைகீழ். யாரை அணியில் சேர்ப்பது என்றே தேடித்தேடி சலித்து கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 50க்கும் மேற்பட்ட அறிமுகங்கள்..
சிலர் ஓரிரண்டு போட்டிகளோடு வெளியே. இன்னும் சிலர் ஏன் அணிக்குள்ளே கொண்டுவரப்பட்டார் என்றே தெரியாத மர்மம்.
எனினும் புதிய தெரிவுக்குழு வந்த பிறகு நிலைமை மாறும் என்றால், அதிலும் பெரிய மாற்றம் இல்லை. எனினும் காயம் , உபாதைகளுடன் வெளியேறியிருந்த மத்தியூஸ், அசேல குணரத்ன, குசல் ஜனித் பெரேரா, நுவான் பிரதீப் போன்றோர் அணிக்குத் திரும்பியபிறகு நிலைமை சீராகும் என்றொரு நம்பிக்கை.
ஹத்துருசிங்க பொறுப்பு எடுத்த பிறகு தேவையற்ற அரசியல் உள்ளே நுழையாது என்று நம்பியிருப்போம்.



உலகின் மிக இயற்கை அழகு பொருந்திய மைதானங்களில் நியூ சீலாந்து, தென் ஆபிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள், இலங்கையின் காலி & பள்ளேக்கலைக்கு சவால் விடக்கூடிய அழகு இந்த தரம்சாலாவுக்கு உள்ளது.
இங்கிலாந்தை விடக் குளிரும் சூழல் - சுற்றிவர இமயமலைச் சாரல் - விளையாடும் வீரர்களுக்கு மட்டுமல்ல தொலைக்காட்சியில் பார்க்கும் எமக்கே ரம்மியமான கண்ணுக்கு விருந்து தான்.

மைதானத்தின் அருகிலேயே அமைக்கப்பட்டுள்ள வலைப்பயிற்சிக்கான சிறிய மைதானப்பரப்பும் அழகு தான். உலகின் மிக அழகான ஒரு கிரிக்கெட் சூழல் என்று அடித்தே சொல்லலாம். கொடுத்து வைத்த ரசிகர்களும் வீரர்களும்.

படம் : Twitter - Mohandas Menon

இந்த அழகு கொஞ்சும் மைதானம் தான் இரு அணிகளிலும் உள்ள பல வீரர்களின் கிரிக்கெட் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் தொடரின் ஆரம்பப்புள்ளி.
(இதற்குள்ளே இங்கேயாவது சுத்தமான காற்றை சுவாசியுங்கள் என்று 'அகன்ற வாயும் அடாத்தும் கொண்ட இந்தியப் பயிற்றுவிப்பாளர் ரவி சாஸ்திரி ஒரு ட்வீட்டைப் போட்டு குளவிக்கூட்டைக் கலைத்து விட்டிருக்கிறார்.)

மிக முக்கியமாக இதுவரை 12 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளைத் தொடர்ச்சியாகத் தோற்றுள்ள இலங்கை அணிக்கு இந்தத் தொடர் தோல்வியலைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டிய அதிமுக்கியமான தேவையுள்ளது.
இந்த ஆண்டின் ஜூலை மாதம் ஹம்பாந்தோட்டை - மகிந்த ராஜபக்ச மைதானத்தில் (பெயர் - இட ராசி அப்படியோ தெரியவில்லை) ஆரம்பித்த தோல்விகள் துரத்துகின்றன.

இதுவரை இலங்கை இப்படியான மோசமான தொடர்ச்சியான தோல்விகளைக் கண்டது 1987 முதல் 1988 வரையிலான காலகட்டத்தில் 14 போட்டிகள்.

இந்தத் தொடரிலும் வெள்ளையடிப்பு செய்யப்பட்டால் (ஏற்கெனவே இந்த வருடத்தில் மூன்று அவமானகரமான வெள்ளையடிப்புக்களை சந்தித்து சாதனை படைத்துள்ளது) பதினைந்தாக மாறும்.

இந்தியாவுக்கும் 3-0 என்ற வெற்றி அவசியப்படுகிறது, தென் ஆபிரிக்காவிடமிருந்து மீண்டும் தனது ஒருநாள் தரப்படுத்தலின் முதலாம் இடத்தைப் பெற்றுக்கொள்வதற்கு.
அது கோலி இல்லாமல் சாத்தியப்படுமா? ஏற்கெனவே இலங்கை அணி என்றால் போட்டு வாங்கு வாங்கென வாங்கிக் குவிக்கும் ரோஹித் ஷர்மா இப்போது தலைவராக வேறு இருக்கிறார். அவரது ஒருநாள் உலக சாதனை 264 மறக்குமா?
தவான் வேறு நல்ல போர்மில் இருக்கிறார்.
பாண்டியா, தோனி ஆகியோர் ஓய்வுக்குப் பிறகு திரும்புகிறார்கள். ஓய்வுக்கு முதலே ஒருநாள் போட்டிகளில் நல்ல ஓட்டக் குவிப்பிலேயே இருந்திருந்தார்கள்.
பந்துவீச்சாளர்களும் அண்மைக்காலத்தில் ஒருநாள் போட்டிகளில் உலகின் மிகச்சிறந்த (சொந்த மண்ணிலே இன்னும் சிறப்பாக) அணிகளையும் தடுமாற வைத்துள்ளார்கள்.
எனினும் கடந்த உலகக்கிண்ணம் முதலே இந்தியாவுக்கு தடுமாற்றம் அளித்து வரும் நான்காம் இலக்கமும், தற்போது கோலியின் ஓய்வு, கேதார் ஜாதவின் உபாதை ஆகியவற்றால் வெற்றிடமாகியுள்ள இரு துடுப்பாட்ட இடங்களை இப்போது மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள தினேஷ் கார்த்திக், ரஹானே, மனிஷ் பாண்டே, ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய நால்வரில் யார் நல்ல படியாக நிரப்பப் போகிறார்கள் என்ற ஆரோக்கியமான போட்டியும் உள்ளது. தமிழகத்தின் இளம் சகலதுறை வீரர் வாஷிங்க்டன் கூட ஒரு சகலதுறை வீரராக வாய்ப்பைப் பெற்றுக்கொள்ளக் கூடியவர். T20 தொடரில் இவரது அறிமுகம் உறுதியாகத் தெரிந்தாலும் ஒருநாள் போட்டிகளில் இப்போதைக்கு உள்வாங்கப்படுவாரா என்பது சந்தேகமே.

இலங்கை அணியில் ஆரோக்கியமான ஒரு தெரிவுக்குழப்பம் இப்போது.
இன்று ஆடுகளத்தை மையப்படுத்தியே தெரிவு அமையும் என்றாலும் துடுப்பாட்டப் பலத்தை அதிகரித்து இன்றைய அணியின் பதினொருவரை நாம் தெரிவு செய்யவேண்டும் என்று எண்ணுகிறேன்.

டெல்லி போட்டியில் இலங்கையின் கதாநாயகனாக விளங்கிய தனஞ்சய டீ சில்வா இன்னும் முதுகுப் பிடிப்பிலிருந்து குணமடையாத காரணத்தால் இன்று விளையாடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எனது அணித்தெரிவாக  நேற்று நான் ட்வீட்டிய அணி இது.. :

பல ரசிகர்களின் அபிப்பிராயம் குசல் ஜனித்  பெரேரா அல்லது நிரோஷன் டிக்வெல்ல ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக தனுஷ்க குணதிலகவுடன் களமிறங்கவேண்டும் என்று. எனினும் இந்தியாவின் ஆரம்ப ஸ்விங் பந்துவீச்சாளர்களை சமாளிக்க தயங்கவே பொருத்தமானவர் என்று நான் கருதுகிறேன்.

அத்துடன் மத்தியூஸ், அசேல ஆகியோரின் வருகை இலங்கை அணிக்கு கடந்த சில மாதங்களாக இருந்து வந்த 15-35 ஓவர்கள் வரையிலான மந்த ஓட்ட வேகத்தையும் அதிகப்படுத்த உதவும்.
நான் ஊகித்துள்ள இந்த அணியில் இலங்கை அணி 20 ஓவர்களை பகுதி நேரப்பந்து வீச்சாளர்களைப் பயன்படுத்தியே பலவீனமான (!?) நிலையொன்று இருப்பதாக சிலர் கருத்துவதாலும் அணியின் தலைவர் திசர  பெரேரா 8ஆம் இலக்கத்தில் வராமல் இன்னும் மேலே ஆடலாம் என்ற எண்ணம் இருப்பதாலும் சிலவேளைகளில் இலங்கை ஒரு துடுப்பாட்ட வீரரைக் குறைத்து (எனது தெரிவு திரிமன்னே, ஆனால் பலர் அஞ்சுவது திரிமன்னே பாகிஸ்தானுக்கு எதிராக ஓரளவு ஓட்டங்களைப்  பெற்றவர் என்பதால் குசல் ஜனித்தைத் தான் வெளியே அனுப்புவார்கள் என்று) சச்சித் பத்திரன அல்லது சத்துரங்க டீ சில்வாவை உள்ளே சேர்ப்பார்கள் என்று.

அவர்களும் ஓட்டங்கள் பெறக்கூடியவர்களே.

இரு அணிகளிலும் வாய்ப்பைப் பெறப்போகிற இளைய வீரர்களுக்கு அவர்களது எதிர்காலத்தைத் தக்க வைக்கும் பொன்னான வாய்ப்பாக இன்று ஆரம்பிக்கும் தொடர் அமையவுள்ளது.
அதை விட முக்கியமாக இரு அணிகளிலும் உள்ள மூத்த வீரர்களுக்கு இது வாழ்வா சாவா போராட்டம்.

முக்கியமாக இலங்கை அணியில் திரிமன்னே. டெஸ்ட் போட்டிகளில் மோசமான பெறுபேறுகள் மூலமாக ரசிகர்களின் ஏகோபித்த வெறுப்பையும் இவர் எப்படி மீண்டும் மீண்டும் அணிக்குள் வருகிறார் என்ற மர்மத்தையும் ஏற்படுத்தியுள்ள திரிமன்னே தான் விளையாடிய கடைசி 6 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் மூன்று (இந்தியாவுக்கு எதிராக 1, பாகிஸ்தானுக்கு எதிராக 2) அரைச்சதங்களைப் பெற்றுள்ளார்.இதைத் தொடர்ந்தால் அணியில் இடம்நிச்சயம்.
இளைய வீரர்களின் அழுத்தம் மத்தியூஸ், தரங்க போன்ற வீரர்களுக்கே நெருக்கடியைத் தரக்கூடியது.

இலங்கையின் மிகச் சிறந்த ஒருநாள் வீரரான முன்னாள் தலைவர் உபுல் தரங்க பாகிஸ்தானுக்கு எதிராக சதம் மற்றும் அரைச்சதங்களைப்  பெற்றவர். இந்தத் தொடரில் அப்படியான ஓட்டக் குவிப்பை எதிர்பார்க்கிறோம்.


மீண்டும் பந்து வீசக்கூடியவராக உபாதையிலிருந்து குணமடைந்துள்ள அஞ்செலோ மத்தியூஸிடமிருந்தும், கையில் ஏற்பட்ட காயத்திலிருந்து மீண்டு வந்துள்ள மற்றொரு சகலதுறை வீரர் அசேல  குணரத்னவிடமிருந்தும் நிறையவே எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்விரண்டு பேரும் match winning finishers என்று தம்மை கடந்த காலங்களில் நிரூபித்திருப்பதால் பெரும் எதிர்பார்ப்பு.
அதேபோல சின்ன சனத் - குசல் ஜனித் பெரேரா. தன்னை ஒரு அதிரடி வீரராக அண்மையில் நிரூபித்துக்கொண்டிருந்த போதே உபாதையுடன் வெளியேறியவர் தனது அணி இருப்பிடத்தை நிரந்தரமாக்க ஒரு வாய்ப்புப் பெற்றுள்ளார்.

முக்கியமாக இலங்கையின் இரும்பு மனிதர் திசர பெரேரா. அணியில் பதினொருவரில் ஒருவராகவே இவரது இடம் உறுதியில்லாத போது யானை மாலை போட்டு ராஜாவாகியுள்ள திசரவுக்கு தனது பெறுபேறுகள், அணியின் வெற்றிகள் இரண்டையுமே நிரூபிக்கவேண்டிய சவால்.

எனினும் என்னடா இது World's Best finisherக்கே வந்த சோதனை என்பது போல, இந்தியாவின் தோனிக்கு கடுமையான அழுத்தங்களைக் கடந்த தொடர்களில் விமர்சகர்கள் ஏற்படுத்தியிருந்தார்கள். இலங்கையில் இடம்பெற்ற ஒருநாள் போட்டிகளை வென்றுகொடுக்க தோனியின் பங்களிப்பு அற்புதமானது. ஆனால் அதைத் தொடர்ந்து இந்தியாவிலே இடம்பெற்ற அவுஸ்திரேலிய, நியூ சீலாந்து அணிகளுக்கு எதிரான T20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் எந்தவொரு அரைச்சதமும் பெறாமல் போனதால் வந்த தோல்விகளுக்கு எல்லாம் தோனியின் தலையே உருள ஆரம்பித்தது.
இளம் வீரர்களுக்கு இடம் வழங்க தோனி விலகவேண்டும் என்ற கோஷம் மீண்டும் தூசி தட்டி எடுக்கப்பட்டுள்ளது.
அதற்குப் பதில் வழங்க இந்தத் தொடர் உதவும்.

ஒரு காலத்தில் இந்தியாவின் முதல் தெரிவு விக்கெட் காப்பாளராக இருந்த தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் 32 வயதில் இந்தியாவுக்கு மிக முக்கியமான 4ஆம் இலக்கத்தில்  'துடுப்பாட்ட' வீரராக வருகிறார்.
யுவராஜ் சிங் அதன் பின் இளம் வீரர்கள் ராகுல், மனிஷ் பாண்டே, ஷ்ரேயாஸ் ஐயர், ரஹானே, ஜாதவ் என்று அனைவருமே சறுக்கிய நிலையில் உள்ளூர்ப் போட்டிகளில் ஓட்டங்களை மலையாகக் குவித்து வந்த கார்த்திக்குக்கு தன்னை அணியில் நிரந்தரமாக்கக்கூடிய வாய்ப்புக் கிடைத்துள்ளது. இவரது வயதினால் இதுவே இறுதியான வாய்ப்பாக அமையலாம்.

அதே போல டெஸ்ட் தொடரில் தடுமாறிய ரஹானேக்கும் தன்னை கோலியின் இடத்தில் நிரூபிக்கும் ஒரு வாய்ப்பும், இளம் வீரர்கள் ராகுல், மனிஷ் பாண்டே, ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோருக்கு தம்மை 2019 உலகக்கிண்ணம் வரை அணியில் நிரந்தரமாக இணைக்கும் வாய்ப்பையும் வழங்க இருக்கிறது இத்தொடர்.

எனினும் நிரூபிக்கப்பட்ட இந்தியாவின் துல்லியப் பந்துவீச்சு வரிசையுடன் ஒப்பிடவே முடியாத இலங்கை அணியின் பந்துவீச்சு வரிசை தன்னை எப்படி வெளிப்படுத்தப் போகிறது என்பதிலேயே அதிகம் தங்கியுள்ளது. சும்மாவே வெளுத்து வாங்கும் இந்தியத் துடுப்பாட்ட வீரர்களுக்கு இலங்கைப் பந்துவீச்சாளர்கள் இலகுவான ஓட்டங்களைக் கொடுக்கக் கூடாது.

அத்தோடு மீண்டும் முன்னேறி வரும் களத்தடுப்பு இன்னும் உறுதியாக்கப்பட்டு பழைய உலகத்தரமான நிலைக்கு வரவேண்டும் என்பதும் எமது எதிர்பார்ப்பு.
இந்தியாவும் டெஸ்ட் தொடரில் ஏராளமான பிடிகளைத் தாராளமாக விட்டுப் பழகிய பின்னர் (குறிப்பாக ஸ்லிப் பிடியெடுப்பு) அதிலிருந்து மீள எதிர்பார்த்துள்ளது.

எனவே வழமையான 'கொட்டாவி'த் தொடராக அமையாமல் ஆர்வத்தைத் தூண்டும் ஒரு தொடராக இது அமையும் என்று நம்பியிருப்போம்.

இந்தியத் தீவிர ரசிகர்கள் இலங்கையில் நடந்த வெள்ளையடிப்பாக இதை எதிர்பார்த்திருக்க, ரசல் ஆர்னல்ட் போன்ற மிக வெறித்தனமான இலங்கை ரசிகர்கள் அப்படியெல்லாம் இலகுவாக முடியாது என்பதையும் தாண்டி இலங்கை இரும்பு மனிதனின் தலைமையில் கோலியில்லாத இந்திய அணியை வதம்  செய்வோம் என்று அசுர நம்பிக்கையோடு இருக்கிறார்கள்.

எல்லாம் டெஸ்ட் தொடரில் காட்டிய போராட்டம் தான்.
நம்பிக்கை தானே எல்லாம்...


* படங்கள், தரவுகள் : www.thepapare.com, www.espncricinfo.com, www.howstat.com/cricket





November 24, 2017

ஷங்கர் vs ஷர்மாஸ்- வாய்ப்புக்காகக் காத்திருக்கும் தமிழக வீரர் - யார் இந்த விஜய் ஷங்கர்?

இன்றைய நாக்பூர் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தெரிவு தமிழக சகலதுறை வீரர் விஜய் ஷங்கரா? இல்லை இரு ஷர்மாக்களில் ஒருவரா என்ற கேள்வி எல்லோர் மத்தியிலும் இருந்த நேரம் இந்தியா மூன்று மாற்றங்களை செய்தும் விஜய் ஷங்கருக்கு இடம் கிடைக்கவில்லை.

புவனேஷ் குமாரின் இடத்தில் இன்னொரு வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் ஷர்மா - ஆடுகளமும் வேகப்பந்து வீச்சாளருக்கு சாதகம் என்பதால் நேரடித் தெரிவாக இருந்தார்.

இந்தியா மேலதிகத் துடுப்பாட்ட வீரரை விரும்பி, ஒருநாள் அணியில் நிரந்தர இடத்தைப் பிடித்துள்ள, டெஸ்டில் தனக்கான நிரந்தர இடம் தேடும் ரோஹித் ஷர்மாவையும் உள்ளீர்த்துக்கொண்டது. 
லேசான தசைப்பிடிப்பினால் அவதியுற்ற மொஹமட் ஷமியின் இடத்தை ரோஹித் ஷர்மா தனதாக்கிக்கொண்டார்.

வேகப்பந்துவீச்சுக்கு சாதகம் என்று கருதப்பட்ட ஆடுகளத்தில் இந்தியா வெறுமனே இரண்டு வேகப்பந்துவீச்சாளரோடு களமிறங்குவதா என்று எல்லோரும் சிந்தித்துக்கொண்டிருக்க, அதிலும் இவ்விருவருமே இப்போதைய நிலையில் இந்தியாவின் முதற் தெரிவுகள் இல்லை, ஆனால் நாணய சுழற்சியில் வென்றும் இலங்கை அணி எந்தவொரு ஆதிக்கத்தையும் செலுத்தாமல் 205 ஓட்டங்களுக்குள் சுருட்டப்பட்டுள்ளது.


மீள்வருகை தந்துள்ள இஷாந்துக்கு 3 விக்கெட்டுக்கள். மிகச் சிறப்பாகப் பந்துவீசி தேர்வாளர்கள் தமது தெரிவில் பெருமிதம் கொள்ளச் செய்துள்ளார்.

சுழல் இரட்டையர்கள் அஷ்வினும் ஜடேஜாவும் சேர்த்து 7 விக்கெட்டுக்கள்.
அஷ்வின் இப்போது 296 விக்கெட்டுக்கள். இன்னும் 4 விக்கெட்டுக்களை அவர் எப்போது எடுப்பார் என்பதை அனைவரும் எதிர்பார்த்துள்ளார்கள், உலகில் மிகக் குறைவான போட்டிகளில் 300 டெஸ்ட் விக்கெட்டுக்களைப் பெற்ற சாதனையை நிகழ்த்துவதற்கு.

எனினும் நீண்ட கால நோக்கில் இன்னொரு மிதவேக சகலதுறை வீரரை அடையாளப்படுத்த இப்படியொரு வாய்ப்புக் கிடைக்காது என்பதால் உள்ளூர்ப் போட்டிகள், இந்திய A அணியில் சகலதுறையாளராக சிறப்பாக மிளிர்ந்து நல்ல form யிலுள்ள ஷங்கரை இன்று இந்தியா அறிமுகப்படுத்தவேண்டும் என்று அனைவரும் எண்ணியிருந்தது இன்று நிறைவேறவில்லை.

நேற்றைய எனது பதிவில் இவரைப் பற்றி கொஞ்சம் ஆராய்ந்திருந்தேன்..




இவ்வாறு விஜய் ஷங்கர் இன்று அறிமுகமாகியிருந்தால் 61 ஆண்டுகளில் முதல் தடவையாக இந்திய அணியில் 3 தமிழக வீரர்கள் ஒரே நேரத்தில் விளையாடும் அபூர்வ சந்தர்ப்பம் அமைந்திருக்கும்.
(அஷ்வின், முரளி விஜய் & விஜய் ஷங்கர்)

இறுதியாக 1956இல் - தமிழக வீரர்கள் மூவர் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடியிருந்தனர்.
Brabourne Stadium v England Nov 1961 
AG Kripal Singh, AG Milka Singh and VV Kumar.

சிங் சகோதரர்களில் ஒருவரான மில்கா சிங் இரண்டு வாரங்களுக்கு முன்னர் சென்னையில் காலமானார்.

யார் இந்த விஜய் ஷங்கர்?
இவரது பெறுபேறுகளும் சகலதுறைத் திறமைகளும் என்ன?


 
தமிழ்நாட்டை சேர்ந்த​ 26 வயது நிரம்பிய​ விஜய் ஷங்கர் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்காக இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் விளையாடி உள்ளார். 

கடந்த IPL இல் டேவிட் வோர்னரோடு  போட்டியில் சத இணைப்பாட்டம் புரிந்ததை யாரும் மறந்திருக்க மாட்டீர்கள்.


ஆனால், உள்ளூர் போட்டிகள், ஜூனியர் இந்திய அணி ​, இந்திய A அணி​
என படிப்படியாக தான் இந்திய அணியில் இடம் பிடித்தார்.



2016-2017 பருவகாலத்தில் தமிழ்நாட்டு அணிக்கு விஜய் ஹசாரே கிண்ணப் போட்டிகளில் தலைமை தாங்கி கிண்ணம் வென்று கொடுத்திருந்தார்.


இதன் மூலம் தன்னுடைய தலைமைத்துவ ஆளுமையையும் காட்டி நிற்கும் ஷங்கர், அண்மையில் நியூ சீலாந்து A அணிக்கு எதிராக சிறப்பாக ஆடியிருந்தார்.





இறுதி ஒருநாள் போட்டியில் 5 சிக்ஸர்களுடன் 33 பந்துகளில் 61.


தென் ஆபிரிக்காவில் நடந்த முக்கோணத் தொடரின் இறுதிப் போட்டியிலும் இந்தியாவின் வெற்றிக்கு மிகப்பெரிய பங்களிப்பு இவரது 72 ஓட்டங்கள் மூலமாகக் கிடைத்தது.


காணொளிகள் சிலவற்றில் பார்த்தவரை மிக ஆற்றல் கொண்ட ஒரு சிறப்பான வீரராகத் தெரிகிறார்.



இணையத்தில் தேடியெடுத்த இவரது பெறுபேறுகள்..​




1671 runs (ave 49.14, 5 centuries) and 27 wickets (medium pace) from 32 first class matches





Since 2012-13, Vijay is one of six cricketers who has scored over 1500 runs and taken more than 25 wickets. His first-class batting average is an impressive 49.14 after 32 matches, while his bowling average is 42.81.

​இம்முறை ரஞ்சி கிண்ணத் தொடரிலும் இதுவரை 3 போட்டிகளில் ஒரு சதம் ​பெற்றுள்ளதோடு ஆறு விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.

​வாழ்த்துக்களோடு இந்த தமிழ் வீரரை வரவேற்போம்..
'ஆளப்போறான் தமிழன் கிரிக்கெட் ​உலகை'


​விரைவில் இவருக்கான சரியான வாய்ப்புக் கிடைக்கும் என்று நம்பியிருப்போம்.
நம் அணிக்கு இப்படியானதொரு முறையான வீரர் கிடைக்கவில்லையே என்று ஏங்கவேண்டியும் உள்ளது. இப்படிப்பட்ட ஒரு சகலதுறை வீரராக உருவாகி வந்த அஞ்செலோ மத்தியூஸ் இப்போது உபாதையினால் பந்து வீசுவதில்லை.
தசுன் ஷானக கொல்கத்தாவில் சிறப்பாக பந்துவீசினாலும் இன்னும் துடுப்பாட்டத்தில் சறுக்கி வருகிறார்.
திஸர பெரேரா டெஸ்ட் பக்கத்தை மறந்து வருடங்களாகின்றன.
ஹ்ம்ம்ம்...

இன்னிங்ஸ் தோல்வியை தவிர்ப்பது பற்றி இப்போதே யோசிக்க ஆரம்பித்துவிட்டோமென்றிருக்கிறது நாக்பூர் நிலைமை.


இன்றைய நாளில் இரண்டு ஆறுதல்கள்..

டிமுத் கருணாரத்ன இந்த வருடத்தில் 1000 டெஸ்ட் ஓட்டங்களைப் பூர்த்தி செய்த இரண்டாவது வீரரானார்.
முதலாமவர் தென் ஆபிரிக்க ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் டீன் எல்கர்.


இலங்கையின் அணித்தலைவர் தினேஷ் சந்திமால் தனது 3000 டெஸ்ட் ஓட்டங்களைப் பூர்த்தி செய்திருந்தார். 
தன்னுடைய அரைச்சதத்துடன் 3000 ஓட்டங்களைப் பூர்த்தி செய்த 13வது இலங்கைத் துடுப்பாட்ட வீரர் ஆகியுள்ளார்.




November 23, 2017

நாக்பூர் டெஸ்ட் போட்டி - இந்தியாவின் ஆதிக்கத்துக்கு இடையில் இலங்கைக்கு வாய்ப்புக்கள் ??

ஐந்து வரிகளில் ஒரு செய்தியைத் தரும் புது முயற்சியில் இறங்கியுள்ள 'ஐவரி' தளத்துக்காக வழங்கிய தொலைபேசி மூலமான பேட்டியின் கட்டுரை வடிவமான

ஏ.ஆர்.வி.லோஷன்/ இந்திய எதிர் டெஸ்ட்: இலங்கைக்கு இருக்கும் சாதகங்கள்

இன் மேலதிக தகவல்கள் சேர்க்கப்பட்ட  விரிவான அலசல் இது.

(இயல்பிலேயே கொஞ்சம் சோம்பலுள்ள, நேரமும் இறுகிப்போகிற என் போன்றவர்களுக்கு இப்படியான வசதிகளை ஏனையோரும் தருவது பற்றி ஏன் சிந்திக்கக் கூடாது? ;) நான் பேசிக்கொண்டே இருக்க தட்டச்சி ஏற்றித் தருபவர்களுக்கு சன்மானங்கள் பற்றி பேசித் தீர்மானிக்கலாம் )


இந்தியா - இலங்கை அணிகளுக்கிடையிலான 2009 பருவகால டெஸ்ட் தொடர் மற்றும் அதற்கு முந்திய சில தொடர்களை பொறுத்த வரையில் இலங்கையின் ஆதிக்கம் போட்டியின் முதல் இன்னிங்ஸில்; எப்போதும் மேலோங்கியதாக இருக்கும். 

2009 இல் முதலாம் இன்னிங்சில் 32/4 என்றிருந்தது இறுதி இரண்டு நாட்கள் வரையிருந்த இலங்கையின் ஆதிக்கம் வீணாய்ப்போன கதை பற்றி கடந்த பதிவில் சொல்லியிருந்தேன்.
அதேபோல் 2005 தொடரின் முதல் போட்டியிலும் இலங்கை அணி இந்தியாவை 167 ஓட்டங்களுக்கு உருட்டியிருந்தது, எனினும் இடைவிடாத மழை..
இலங்கை 168/4 என்றிருந்த பலமான நிலையில் போட்டி முடிவுக்கு வந்தது.

இலங்கை அணியின் பந்து வீச்சும் முதலாம் இன்னிங்ஸ்களில் மிகச் சிறந்ததாக இருந்து வந்தது.

முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர்களுக்கு இலங்கையின் பந்துவீச்சாளர்கள் நெருக்கடியை கொடுப்பதும், பின்னர் அந்த நிலைமையில் மாற்றம் ஏற்படுவதுமாக இருக்கும்.

ஆனால் இந்த நிலைமை தற்போது வேறுவிதமாக மாற்றம் அடைந்துள்ளது.

இலங்கை அணியைப் பொறுத்தவரையில் இந்தியாவுடன் ஒரு தொடர் ஆரம்பிக்கும் போது பாரிய உத்வேகத்துடன் விளையாட ஆரம்பிக்கும்.

அது படிப்படியாக குறைவடைந்து செல்லும் நிலைமையை அவதானிக்காலம்.

இதற்கு பிரதான காரணம் இலங்கை அணி வீரர்களினால் டெஸ்ட் போட்டி ஒன்றின் முதல் 3 நாட்கள் வெளிப்படுத்தும் திறமையின் அளவிற்கு இறுதி இருநாட்களில் வெளிப்படுத்த முடியாத நிலை ஏற்படுவதாகும். 

கொல்கத்தா டெஸ்ட் போட்டியின் இறுதிநாள் பின்னர் இந்தியாவின் மனநிலையில் ஒரு தனி உற்சாகம் கிட்டியிருப்பது என்னவோ உண்மை. 
நாளைய நாக்பூர் போட்டியிலும் அதே உத்வேகத்தோடு இறங்கப் போகிறார்கள். குறிப்பாக கடைசி நேர இலங்கை துடுப்பாட்ட வீரர்களின் தடுமாற்றமும், இலங்கை அணியால் எடுக்க முடியாமல் போன கோலி + இந்திய வீரர்களின் விக்கெட்டுக்கள் கோலி போன்ற form இலுள்ள ஆக்ரோஷமான வீரர்களுக்கு மிகப்பெரிய ஆதிக்க மனப்பாங்கைக் கொடுத்திருக்கும்.

எனினும் சுரங்க லக்மால் எடுத்துள்ள விஸ்வரூபம் இந்திய வீரர்களுக்கு தொடர்ந்தும் ஐயத்தையும் தடுமாற்றத்தையும் தரும் என்பது உறுதி.

இரண்டாம் இன்னிங்ஸின் நம்பிக்கை வீரர்கள்

குறிப்பாக தற்போதைய வீரர்களில் திமுத் கருணாரத்ன, அஞ்சலோ மத்தியூஸ் மற்றும் ரங்கன ஹேரத் ஆகிய முன்று வீரர்கள் மாத்திரமே இரண்டாவது இன்னிங்ஸில் நம்பிக்கை அளிக்கக்கூடியவர்களாக உள்ளனர்.

மற்றைய வீரர்களிடம் ஆற்றல் குறைவு அல்லது அனுபவக்குறைவு போன்ற காரணங்களால், அவர்களின் போராட்டத்திறன் குறைவாக உள்ளது.

இந்த காரணத்தினால் இலங்கை அணியினால் இறுதிவரையில் போரடமுடியாதுள்ளது.

முன்னர் அர்ஜூன ரணதுங்க, மஹேலஜெயவர்தன மற்றும் குமார் சங்கக்கார போன்ற வீரர்கள் அணியி ல் இருந்த போதும் இவர்கள் தலைவர்களாக இருந்தபோதும் இதுபோன்ற நிலை இருந்ததில்லை.

அந்த காலத்தில் அணியில் ஒருவர் 'நின்றுபிடித்து' தமது அணியின் ஓட்ட எண்ணிக்கையினை உயர்த்தும் வகையில் செயற்படுவார்.அல்லது காப்பாற்றவாவது போராடுவார்கள்.

ஆனால் தற்போது அவ்வாறான ஒரு வீரர் இலங்கை அணியில் இல்லை என்பது மிகப்பெரிய குறையாக உள்ளது.


வேகப்பந்தும் - சுழற்பந்தும்

இந்திய அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியை பொறுத்தவரையில் நம்பிக்கை அளிக்க கூடிய விடயமாக, இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் சளைக்காது பந்து வீசியமையைக்  கூறலாம்.

இந்திய அணியினருக்கு எதிரான அச்சுறுத்தலான பந்து வீச்சாளர்களையும் இதன் போது அடையாளம் கண்டு கொள்ளக்கூடிய  சந்தர்ப்பம் ஏற்பட்டது.

இருப்பினும் சுழல் பந்து வீச்சாளர்களுக்கு போதுமான நம்பிக்கை நிறைவடைந்த போட்டியில் கிடைக்காமை, அடுத்த போட்டியில் இலங்கை அணிக்கு அது பாதகமான நிலைமையை ஏற்படுத்தும் என்று எண்ணத் தோன்றுகிறது. குறிப்பாக மற்றைய அணிகளுக்கு எதிராக தனது ஆதிக்க வல்லமையைக் காட்டும் ரங்கன ஹேரத் இந்திய அணியுடன் அண்மைக்காலமாக சறுக்கி வருவது இலங்கையைப் பொறுத்தவரை ஆரோக்கியமான விடயமில்லை.
கொல்கத்தாவிலும் ஹேரத்துக்கு முதலாம் இன்னிங்சில் போதிய ஓவர்கள் கிடைக்காமை மற்றும் இரண்டாம் இன்னிங்சில் விக்கெட்டுக்கள் கிடைக்காமை அவரது மனதில் நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தியுள்ளதோ இல்லையோ, இந்தியத் துடுப்பாட்ட வீரர்களுக்கு மனத்திடத்தை வழங்கியிருக்கும்.

எனினும் இந்தியா, தென்னாபிரிக்காவின் தொடரை கருத்திற்கொண்டு, வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான ஆடுகளத்தை உருவாக்குகிறது.

இது இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்களுக்கு ஒப்பீட்டளவில் சற்று சாதகமாக அமையும்.

காரணம், கடந்த இந்தியா, பாகிஸ்தான், சிம்பாப்வே ஆகிய அணிகளுக்கு எதிரான போட்டிகளின் போது இலங்கை அணி சுழல் பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வதில் சற்று தடுமாற்றத்தை சந்தித்திருந்ததை அவதானிக்க முடிந்தது.

சுழற்பந்து வீச்சுக்கு பெயர் போன இலங்கை அணிக்கு, இவ்வாறான நிலைமை ஏற்பட்டுள்ள வருத்தப்பட வேண்டிய விடயமாகும்.

அத்துடன் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களில் பவுன்ஸர் பந்துகள் வீசப்படுவது சற்று குறைவு.

இது இலங்கைக்கு சற்று சாதகமாக அமைந்திருந்தாலும், கடந்த போட்டியில் இந்திய அணி பந்து வீச்சாளர்களின் வேகம் இலங்கை அணியினரை விட சற்று அதிகமாகவே இருந்தது. அத்தோடு இரண்டாம் இன்னிங்சில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் காட்டிய துல்லியம் அற்புதம்.இலங்கை அணி இந்த வேளையில் ஓய்வு வழங்கப்பட்டுள்ள நுவான் பிரதீப்பை நிச்சயம் எண்ணிக் கவலைப்படும். லஹிரு கமகே சிலவேளைகளில் சிறப்பாகப் பந்துவீசியிருந்தாலும் இன்னும் துல்லியம் எதிர்பார்க்கப்படுகிறது. இடது காய் வேகப்பந்து வீச்சாளர் விஷ்வ பெர்னாண்டோ பற்றியும் தேர்வாளர்கள் யோசிக்க இடமுள்ளது.

நாளைய போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ் குமார் இல்லாமையும் இலங்கை அணிக்கு கிடைக்கும் மற்றுமொரு சாதக வாய்ப்பாகும்.
இந்தியா தென் ஆபிரிக்கத் தொடருக்கு தயாராவது பற்றி பகிரங்கமாகவே அறிவித்துள்ள நிலையில் புவனேஷ்குமாரின் இடத்தில் இன்னொரு வேகப்பந்துவீச்சாளராக இஷாந்த் ஷர்மாவை இணைத்துக்கொள்ளப் போகிறதா? இல்லை புதிதாக குழாமில் இணைக்கப்பட்டுள்ள தமிழக சகலதுறை வீரரான விஜய் ஷங்கரை அறிமுகப்படுத்துமா என்ற சுவாரஸ்யமான கேள்வி எழுகிறது.

ஹர்டிக் பாண்டியாவின் வெற்றிகரப் பிரவேசம் இந்தியாவுக்கு மீண்டும் மிதவேக, வேகப்பந்து வீசும் சகலதுறை வீரர்களின் மீது பார்வையை செலுத்த வைத்துள்ளது. ஷங்கரும் தமிழக ரஞ்சி அணிக்கும், இந்திய A அணிக்கும் தான் விளையாடிய போதெல்லாம் சகலதுறை வீரராக அற்புதமாக ஆட்டத் திறனை வெளிப்படுத்தியுள்ளார்.
பாண்டியாவுக்கும் போட்டிக்கு ஒருவர் தேவைப்படுவதை இந்தியா உணர்ந்துள்ளது.
விராட் கோலியும் விஜய் ஷங்கரை சிலாகித்திருப்பதோடு பாண்டியா போன்ற இன்னொருவரை கூடவே வைத்துக்கொள்வதும் அவசியப்படுகிறது.

இப்போதிருக்கும் நிலையில் இஷாந்த் ஷர்மாவுக்கு வாய்ப்பை வழங்குவதை விட புதியவர் ஷங்கரை முயற்சிப்பது இந்தியாவுக்கு எதிர்காலத்தில் நன்மை பயக்கும்.
அத்துடன் விக்கெட்டின்றிப் போன அஷ்வின் பற்றியும் தேர்வாளர்கள் சந்திக்கக்கூடும்.

மத்தியூஸ் மற்றும் திரிமான்னே ஆகியோரின் துடுப்பாட்டம் மட்டுமே இலங்கைக்கு தற்போது வாய்ப்பாக உள்ளது. முதலாவது டெஸ்ட் போட்டியின் பின்னர், ஏனையோரின் துடுப்பாட்டம் குறித்து திருப்தி அடைய முடியவில்லை. எதிர்பார்க்க்கப்பட்ட திமுத், சதீர, சந்திமால் ஆகியோரின் சொதப்பல்கள் நாக்பூரில் தீர்க்கப்படுமா என்பதே கேள்வி.

ஆனால் நம்பி இருக்கக்கூடிய ஒருவராக மாறிவரும் நிரோஷன் டிக்வெல்ல பற்றித் தான் இப்போது பேச்சு.

அடுத்த அணித் தலைவர் உருவாகிறாரா?

நிரோஷன் திக்வெல்லவின் வடிவில் குமார் சங்கக்காரவை ஒத்த ஆக்ரோசமான விக்கட் காப்பாளர் ஒருவரை பார்க்க முடிகிறது. சங்காவின் அதே கண்டி திரித்துவக் கல்லூரியின் பழைய மாணவர் என்பதும் ஆச்சரிய ஒற்றுமை தான்.

அதேநேரம் அவர் மிகவும் அவதானிப்பு மிக்கவராகவும், போட்டி விதிமுறைகள், ஆட்டமிழப்புகள் குறித்த மேலதிக அறிவினை உடையவராகவும் இருக்கிறார். 


கோலி, மொஹமட் ஷமி  ஆகியோருடனான அவரது மோதல்கள் எவ்வளவு தூரம் ஆரோக்கியமானவை என்ற பேச்சுக்கள் ஒரு புறம் இருக்க, சாதுரியமாகப் போட்டி நேரத்தை எதிரணியின் வீண் பேச்சுக்கள் மூலமாகவே வீணாக்கியது பற்றி வெளிப்படையாகப் பேசியுள்ளார் டிக்கா.

அணிக்காக மோதல் குணங்களும், துணிச்சலும் கூடவே மனத்திடமும் கொண்ட  இவரிடம் எதிர்கால அணித் தலைவருக்கான தகுதிகளைக் காணக்கூடியதாக உள்ளது. 

அவர் குறித்து அணித் தேர்வாளர்கள் உரிய அவதானத்தை செலுத்தினால், இலங்கை அணிக்கு எதிர்காலத் தலைவர் ஒருவரை இப்போதிருந்தே செதுக்க முடியும் என்பது என் தனிப்பட்ட கருத்து. 
ஒருநாள் அல்லது T20 போட்டிகளில் இருந்து இதனை ஆரம்பித்துப் பார்க்கலாம்.



இலங்கை அணியின் அணித்தேர்வு குழு சற்று அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

அடுத்த போட்டிக்கான அணித்தெரிவில் என்னென்ன வலுசேர்க்க முடியும் என்பதில் தெரிவுக் குழு அவதானம் செலுத்த வேண்டும்.

தனஞ்யச டி சில்வாவிற்கு அணியில் இடமளிக்கப்படுமா? லஹிரு கமகேவிற்கான வாய்ப்பு தொடருமா? அல்லது தசுன் சானக்கவை முழுநேர பந்துவீச்சாளராக அல்லது துடுப்பாட்ட வீரராக பயன்படுத்துவதா? அல்லது சகலதுறை வீரராக பயன்படுத்துவதா? போன்ற விடயங்களை தீர்மானிக்க வேண்டும்.



மத்தியூஸின் பந்து வீச்சும் இலங்கை அணிக்கு அவசியப்படுகிறது. 

அவர் பந்துவீசுவாராக இருந்தால், அணியின் பந்து வீச்சு பிரிவுக்கு வலு சேர்ப்பதாக அமையும்.
அவர் பந்து வீசாமை இலங்கை அணியின் சமவலுவுக்கு மிகப்பெரிய இழப்பாக அமைகிறது.
இருந்தாலும், அவர் துடுப்பாட்டத்தில் அதிக கவனம் செலுத்துவதும், இலங்கை அணிக்கு தற்போதைக்கு வாய்ப்பாக இருக்கிறது. இலங்கையின் சிரேஷ்ட துடுப்பாட்ட வீரராக அவரிடமிருந்து அதிகளவான ஓட்டங்கள் தேவைப்படுகின்றன.

ஆனால் அவர் கடந்த 2 வருடங்களாக சதம் அடிக்காமை இலங்கை அணிக்கு உள்ள மிகப்பெரிய பிரச்சினையாகும். நாக்பூரில் இந்தக் குறையும் தீருமா இருந்தால் இலங்கை ரசிகர்களுக்குக் கொண்டாட்டம் தான்.

இன்னும் சில மைல் கற்களும் எதிர்பார்க்கப்படும் சாதனைகளும் பற்றி கடந்த பதிவை மீண்டும் வாசித்து அறிந்திடுங்கள்..

17/3 - கொல்கத்தா - மழை - லக்மால் - அதிர்ச்சியோடு ஆரம்பித்த இலங்கை ! தொடரும் தோல்வி வரலாற்றை மாற்றுமா?


ஆசியாவின் சகோதர மோதல் இது ஒருபுறமிருக்க, உலகமே ஆவலுடன் பார்த்திருக்கும் கிரிக்கெட்டின் மிகப் புராதனமான பரம வைரிகளின் முதலான ஆஷஸ் - Ashes பற்றி தமிழ் நியூஸில் நான் எழுதியுள்ள கட்டுரையையும் வாசித்துப் பாருங்கள்.

November 16, 2017

17/3 - கொல்கத்தா - மழை - லக்மால் - அதிர்ச்சியோடு ஆரம்பித்த இலங்கை ! தொடரும் தோல்வி வரலாற்றை மாற்றுமா?

இலங்கைக்கு சவால் ! இந்தியாவில் முதல் வெற்றி கிடைக்குமா?
என்ற தலைப்பில் தமிழ் நியூஸ் இணையத்தில் பிரசுரித்த என்னுடைய கட்டுரையில் இன்றைய கொல்கத்தா மழை நாளின் அவகாசத்தில் மேலும் சில விடயங்கள் சேர்க்கப்பட்டு இந்தப் பதிவு...



எல்லா கிரிக்கெட் ரசிகர்களும் எதிர்பார்த்துள்ள இந்திய - இலங்கை கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகியது.

நாணய சுழற்சியில் வென்றுள்ள இலங்கை அணி முதலில் பந்துவீச முடிவெடுத்துள்ளது.
1969இன் பின்னர் நாணய சுழற்சியில் வென்ற அணியொன்று கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் பந்துவீச முடிவெடுத்த இரண்டாவது சந்தர்ப்பம் இது தான்.
எனினும் மழை, மைதான + ஆடுகள ஈரலிப்பு, மேக மூட்டம் இவற்றைக் கருத்திற்கொண்டு தலைவர் சந்திமால் எடுத்துள்ள தீர்மானம் இதுவரை இலங்கை அணிக்கு சாதகமாகவும், இந்திய அணியின் துடுப்பாட்ட வரிசையைத் துவம்சம் செய்துகொண்டும் இருக்கிறது.
17/3 - கோலியும் ஆட்டமிழந்துள்ளார்.

மிக அபூர்வமாக இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர்கள் காட்டும் ஆதிக்கத் திறனை இன்று காட்டிய சுரங்க லக்மால், 6 ஓவர்கள் பந்துவீசி எதுவித ஓட்டங்களையும் கொடுக்காமல் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.

ஒரு நாளில் எதுவித ஓட்டங்களை கொடுக்காமல் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.
ராகுலும், கோலியும் ஓட்டம் எதுவும் பெறாமல். அதிலும் ராகுல் ஒரு டெஸ்ட் போட்டியின், அதுவும் டெஸ்ட் தொடரின் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தது இன்னொரு சாதனை.
 இவ்வாறு டெஸ்ட்டின் முதல் பந்தில் ஆட்டமிழந்த 31வது வீரர் இவர்.
(7 தொடர்ச்சியான 50+ ஓட்டங்களுக்குப் பிறகு பூஜ்ஜியம்)
முன்பு லக்மால் கிறிஸ் கெய்லையும் இவ்வாறு ஒரு டெஸ்ட் போட்டியின் முதல் பந்தில் ஆட்டமிழக்கச் செய்திருந்தார்.

எல்லோரும் எதிர்பார்த்த வழமையான ஆரம்பத் துடுப்பாட்ட வீரர், தமிழகத்தின் முரளி விஜயை விட்டுவிட்டு விளையாடிய இந்தியாவின் இரு ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களுமே குறைவான ஓட்டங்களோடு ஆட்டமிழந்தனர். இப்படியான வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் அற்புதமாக ஆடக்கூடியவர் விஜய்.
ஆயினும் இப்போது ஆடுகளத்தில் உள்ள புஜாராவும் ரஹானேயும் இப்படியான சூழ்நிலைகளில் நங்கூரத்தை இறக்கி பொறுமையாக ஆடி அணியைக் கரைசேர்க்கக்கூடிய வல்லமை மிக்கவர்கள். டெஸ்ட் போட்டியில் மிகச் சிறப்பான பெறுபேறுகளை அண்மைக்காலத்தில் காட்டிவரும் மிகச்சிறந்த வீரர்கள். இவர்கள் இருவரையுமே இலங்கை அணி விரைவில் ஆட்டமிழக்கச் செய்யவேண்டியிருக்கும்.

எனினும் விட்டு விட்டு விளையாட்டுக் காட்டும் மழையும் மழை இருட்டும் சேர்ந்து ஆட்டத்தை இடையூறு செய்துகொண்டேயுள்ளன. சனிக்கிழமை வரை மழையினால் போட்டி அடிக்கடி தடைப்படுவதற்கு வாய்ப்பிருப்பதாக வானிலை எதிர்வுகூறல்கள் எச்சரிக்கின்றன.

நாளை காலையும் இன்றைப் போலவே தன்மைகள் இருந்தால் இந்தியத் துடுப்பாட்ட வீரர்களுக்கு இன்னும் ஆபத்து இருக்கிறது.

இலங்கை அணியும் தனது பங்குக்கு ஒரு அதிருப்தி தரக்கூடிய அணித் தெரிவை செய்திருந்தது.
பலரும் எதிர்பார்த்த திறமையான வீரர் தனஞ்சய டீ சில்வா மற்றும் சிறப்பான form இல் இருக்கும் ரோஷென் சில்வா இருவரையும் வெளியே இருத்திவிட்டு, அண்மைக்காலமாக சொதப்பிவருகின்ற லஹிரு திரிமன்னேவை அணியில் முக்கியமான 3ஆம் இலக்கத்தில் ஆடுவதற்கு தெரிவு செய்துள்ளது.

திரிமன்னே அணியின் தலைவர் சந்திமாலின் நண்பர் என்பதைத் தாண்டி அவரது தெரிவுகளுக்கு உள்ளக ஆதரவுகள் வேறு பலவும் இருப்பதாகத் தெரிகிறது. நீண்ட கால 3ஆம் இலக்கத் தெரிவாக எண்ணப்பட்டு வந்த குசல் மென்டிசை அணியை விட்டு நீக்கவும் திரிமன்னேவுக்கு இந்த இடத்தை வழங்கும் நோக்கம் இருக்குமோ என்ற ஐயமும் வருகிறது.
(ஒருவேளை யாரும் எதிர்பாராமல் டசுன் ஷானகவை  3ஆம் இலக்கத்தில் இறக்கி அதிர்ச்சி அளிப்பார்களோ?)

இந்தியா ஆடுகளத் தன்மையறிந்து மூன்று வேகப்பந்து வீச்சாளர்களோடு களமிறங்கியிருப்பதைப் போல, இலங்கை அணி இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் மிதவேகப்பந்து வீசும் சகலதுறை வீரர் டசுன் ஷானகவை இணைத்துள்ளது. அசேல குணரத்ன இல்லாததும், அஞ்செலோ மத்தியூஸால் பந்துவீச முடியாததும் இந்த ஆடுகளத்தில் இலங்கைக்கு இழப்பாக இருந்தாலும், இங்கிலாந்துக்கு எதிராக தனது அறிமுகப் போட்டியில் 3 விக்கெட்டுக்களை எடுத்த ஷானகவுக்கு தனது திறமையை சாதகமான ஆடுகளத்தில் காட்ட வாய்ப்புக் கிடைத்துள்ளது.

இலங்கை அணி இந்திய மண்ணில் நீண்ட காலமாக எதிர்பார்த்துள்ள வெற்றியை சுவைக்கக்  கூடிய தருணம் இம்முறையாவது வருமா என்பதே இப்போதைய கேள்வி.


உலகின் முதற்தர டெஸ்ட் அணியாக வலம் வரும் கோலியின் இந்தியா சொந்த மண்ணில் விளையாடும்போது இன்னும் பன்மடங்கு பலத்தோடு தாங்கள் ஏற்கெனவே 9-0 என்று அனைத்துவிதப் போட்டிகளிலும் துடைத்தெறிந்த சந்திமாலின் தலைமையிலான இலங்கை அணியைச் சந்திக்கப்போகிறது.

தரப்படுத்தலில் 6ஆம் இடத்தில் உள்ள இலங்கை அணி அண்மைக்காலமாக வெற்றிகளைப் பெறுவது எப்படி என்றே மறந்து போயுள்ளது.
எனினும் அதிர்ச்சிதரும் விதத்தில் அமீரகத்தில் பாகிஸ்தானை இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இலங்கை வீழ்த்தி இலங்கை ரசிகர்களையே ஆச்சரியப்பட வைத்துள்ளது.
அதுவும் முக்கியமான வீரர்கள் அஞ்சேலோ மத்தியூஸ், அசேல குணரத்ன, குஷால் ஜனித் பெரேரா போன்றோர் இல்லாமலேயே.

இந்தியா சென்றுள்ள அணியில் மத்தியூஸ் இப்போது இருக்கிறார். இது சற்று மேலதிக பலம் தான். எனினும் பாகிஸ்தானை வெல்வது போல இந்தியாவை வெல்வது இலகுவான விடயமல்ல.

இந்திய ஆடுகளங்களின் தன்மைகளும் தட்ப வெப்ப சூழலும் அமீரகத்தை விட இலங்கைக்கு பரிச்சயமானதும் சாதகமானதுமானதும் போல தெரிந்தாலும் வரலாறு சொல்வது போல இந்திய மண்ணில் இலங்கைக்கு டெஸ்ட் வெற்றிகள் இதுவரை சாத்தியப்படவே இல்லை.

டெஸ்ட் அந்தஸ்து பெற்ற காலம் முதல் 35 ஆண்டுகளாக இந்தியாவிலே விளையாடிய டெஸ்ட் போட்டிகள் 17இல் இதுவரை கண்டது 10 தோல்விகளும் 7 வெற்றி தோல்வியற்ற சமநிலை முடிவுகளும் தான்.
இந்த பத்து தோல்விகளில் 8 படுமோசமான இன்னிங்ஸ் தோல்விகள் என்பது இலங்கை அணிகள் எவ்வளவு மோசமாக இந்தியாவில் விளையாடியிருக்கின்றன என்பதற்கு உதாரணம்.
அதிலும் தோல்விகள் அனைத்துமே படுமோசமான தோல்விகள்...


Sri Lanka's 10 Test defeats in India, by margin:
Inns & 106 runs Inns & 67 runs Inns & 8 runs Inns & 119 runs Inns & 95 runs Inns & 17 runs 188 runs 259 runs Inns & 144 runs Inns & 24 runs

இதே காலகட்டத்தில் இலங்கை மண்ணிலே இலங்கை 7 தடவை இந்தியாவை வீழ்த்தியுள்ளது. இலங்கையின் கன்னி டெஸ்ட் வெற்றியும் இந்தியாவுக்கு எதிராகவே பெறப்பட்ட்து என்பதையும் ஞாபகப்படுத்தவேண்டும்.

இந்தியாவின் அநேக பூகோளத் தன்மைகள் இலங்கையை ஒத்திருந்தும், 1990களின் பிற்பகுதி முதல் அண்மைக்காலம் வரை உலகின் தலைசிறந்த வீரர்கள் பலர் இலங்கை அணியில் விளையாடியும் , இந்த ஆண்டுகளில் இலங்கை இந்தியாவை பல்வேறு போட்டிகளில் பல்வேறு நாடுகளில் வைத்து இந்தியாவை வெற்றிகொண்டு ஆதிக்கம் செலுத்தியும் கூட டெஸ்ட் வெற்றி என்பது இந்திய மண்ணில் கைகூடவில்லை.

அரவிந்த டீ சில்வா அடித்து விளாசிய காலம்,
அர்ஜுனன் ரணதுங்க உலகின் மிகச்சிறந்த கிரிக்கெட் அணித்தலைவராக இருந்த காலம்,
சனத் ஜயசூரிய இந்தியப் பந்துவீச்சாளர்களைக் கண்டா இடங்களிலெல்லாம் துவம்சம் செய்த காலம், 
சமிந்த வாஸ் உலகின் மிகச்சசிறந்த இடது கை வேகப்பந்துவீச்சாளராக வலம் வந்த காலம்,
முரளிதரன் உலகின் மிகச்சிறந்த சுழற்பந்து வீச்சாளராகவும் உலக சாதனையாளராகவும் கொடி நாட்டியிருந்த காலம்,
மஹேல ஜயவர்தனவும் குமார் சங்கக்காராவும் உலகின் மிகச்சிறந்த துடுப்பாட்ட வீரர்களாக உலகம் முழுவதும் போற்றிப் புகழப்பட்ட பொற்காலம்...

இந்தக் காலங்களில் கூட இலங்கை அணியால் இந்திய மண்ணில் எதனையும் செய்ய முடியவில்லை.

அதற்கான பகுதியளவான ஒரு காரணம் - இலங்கை பலமாக இருந்த இந்தக் காலகட்டத்தில் இலங்கை அணிக்கு அதிகளவான டெஸ்ட் போட்டிகளை இந்திய மண்ணில் விளையாடும் வாய்ப்பு இந்திய கிரிக்கெட் சபையினால் வழங்கப்பட்டிருக்கவில்லை.
இறுதி 23 ஆண்டுகளில் மூன்றே மூன்று டெஸ்ட் தொடர்களை மட்டுமே இலங்கை இந்தியாவிலே ஆடியிருந்தது. இதே காலகட்டத்தில் பாகிஸ்தான் இலங்கையை ஏழு தடவை தங்கள் நாட்டுக்கு அழைத்திருந்தது.

இலங்கை அணியுடன் இந்தக் காலகட்டத்தில் இந்தியா விளையாடிய ஒருநாள் போட்டிகளின் எண்ணிக்கை ஏனைய எல்லா அணிகளையும் விட அதிகம். இதற்கு விளம்பரதாரர்கள் + அனுசரணையாளர்களின் ஆதிக்கத்துக்கு உட்பட்ட BCCI தான் காரணம்.
எனினும் இத்தகைய நிலையொன்றுக்கு இந்திய கிரிக்கெட் சபையை மட்டும் நாம் குறை சொல்ல முடியாது. காரணம் கடன் சிக்கல்கள், வருமானக் குறைவினால் இலங்கை கிரிக்கெட் சபை எப்போது சிக்கித் திணறினாலும் உடனடியாக உதவ முன்வருவது இந்தியாவே.

அங்கே அழைக்காததற்கும் சேர்த்து இதே காலகட்டத்தில் 7 தடவை டெஸ்ட் தொடர்களுக்காக இலங்கைக்கு வந்திருக்கிறது இந்திய அணி.

அந்த நேரங்களில் அண்மைக்காலம் வரை இலங்கையின் கரமே ஓங்கியிருந்திருக்கிறது.
உலக சாதனை 952 ஓட்டங்களும், சனத், சங்கா, அரவிந்த ஆகியோரின் ஓட்டக் குவிப்புக்களும் முரளிதரன், அஜந்த மெண்டிஸ்ஆகியோரின் பந்துவீச்சும், சச்சின் டெண்டுல்கர், கங்குலி, டிராவிட், லக்ஸ்மன், சேவாக், கும்ப்ளே, தோனி, ஹர்பஜன் என்று இருந்த இந்தியப் பிரபல நட்சத்திரங்களையே இலங்கை மண்ணில் மேவி வென்றிருந்தார்கள். 

எனினும் சரியான வாய்ப்புக்கள் இந்தியாவில் விளையாட இலங்கை நட்சத்திரங்களுக்குக் கிடைத்திருந்தால் இலங்கையின் பெறுபேறுகளும் சாதனைகளும் மேலும் மெருகு பெற்றிருக்கும்.

உதாரணத்திற்கு இலங்கை அணியில் இப்போதுள்ள சிரேஷ்ட வீரர்களான ரங்கன ஹேரத் மற்றும் அஞ்செலோ மத்தியூஸ் ஆகிய இருவரும் மட்டுமே இந்தியாவில் டெஸ்ட் விளையாடிய அனுபவமுள்ளவர்கள்.அதுவும் 2009 ஆம் ஆண்டு.

எனவே எல்லா நாட்டு அணிகளுக்குமே சிம்ம சொப்பனமாக, பொறிக்கிடங்காக இருக்கும் இந்தியா இந்த அனுபவக் குறைவான அணிக்கு பல புதிர்களையும் அழுத்தத்தையும் கொடுக்கும் என்பது உறுதி.

உலகின் மிகச்சிறந்த துடுப்பாட்ட வரிசையையும் மிகச்சிறந்த சுழல்பந்துவீச்சு வரிசையையும் கொண்ட இந்திய அணியை  வீழ்த்துவது உலகின் மிக சிரமமான காரியம். அப்படி ஒரு டெஸ்ட் போட்டியிலாவது  இலங்கை அதை நிகழ்த்துமாயின் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் upset ஆக அது பதிவாகும்.

இதுவரை காலமும் இலங்கை இந்தியாவை இந்தியாவில் வைத்து வெற்றி பெறுவதற்கு நெருங்கி வந்த ஒரு சந்தர்ப்பமும் இங்கே குறிப்பிடப்படவேண்டியது. 
இதுவரையான இறுதி இந்திய சுற்றுலாவாக அமைந்துள்ள 2009இல் அஹமதாபாத் டெஸ்ட் போட்டியில் முதலாம் இன்னிங்சில் இலங்கை இந்தியாவின் முதல் 4 விக்கெட்டுக்களை 32 ஓட்டங்களுக்குள் வீழ்த்தி தடுமாற வைத்திருந்தது. எனினும் டிராவிட், தோனி  ஆகியோரின் சதங்கள்  மூலமாக இந்தியா 400 ஓட்டங்களைக் கடந்தது.

இலங்கை இந்தியாவை விட 334 ஓட்டங்களைப்  பெற்றது. இலங்கை பெற்ற 760 ஓட்டங்களே இந்தியாவில் வைத்து இவ்விரு அணிகளுக்கிடையிலான தொடரில் இந்திய மண்ணில் பெறப்பட்டுள்ள அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாகும்.
(மஹேல 275 ஓட்டங்கள், பிரசன்ன ஜயவர்தன ஆட்டமிழக்காமல் 154, டில்ஷான் 112) மஹேல - பிரசன்னாவின் இணைப்பாட்டமும் ஒரு உலக சாதனையாகும்.

இரண்டாம் இன்னிங்சில் இந்தியாவின் 10 விக்கெட்டுக்களை எடுக்க இலங்கைக்கு 130 ஓவர்கள் இருந்தபோதிலும் கம்பீர், டெண்டுல்கரின் சதங்களோடு போட்டியை இந்தியா சமநிலைப்படுத்தியது.


முரளிதரன், ஹேரத் இருவரும் சேர்ந்து விளையாடிய வெகுசில போட்டிகளில் ஒன்று இது. எனினும் அரிய  வாய்ப்பு தவறிப்போனது.

அந்தப் போட்டியில் விளையாடிய மத்தியூசும், ஹேரத்தும் மறக்கமாட்டார்கள் அந்த அனுபவத்தை.

இன்றைய நாளில் இதுவரை ஆரம்பமும் இதேபோன்று இலங்கை ஆரம்ப விக்கெட்டுக்களை உடைத்து எறிந்துள்ளது.

எனினும் அப்போதைய நட்சத்திரங்கள் விளையாடிய அணியை விட விராட்கோலி தலைமை தாங்கும் இந்த அணி மிகப் பலம் வாய்ந்தது.
சகலதுறை வீரர் ஹர்டிக் பாண்டியாவுக்கு ஓய்வை வழங்கி, மாற்றுப் பந்துவீச்சு வரிசையை பரிசீலிக்கும் அளவுக்கு பலத்துடன் இருக்கிறது.
காயத்திலிருந்து மீண்டு வரும் முரளி விஜயை அணியில் சேர்ப்பதா ராகுலைத் தொடர்ந்து விளையாடவிடுவதா என்பது பற்றிய ஆரோக்கியமான வாதங்கள் இடம்பெறுகின்றன.
அத்தனை துடுப்பாட்ட வீரர்களும் மிகச் சிறப்பான ஓட்ட சேகரிப்பு Form இல் இருக்கிறார்கள்.
ஒருநாள் போட்டிகளில் வெளுத்து வாங்கும் ரோஹித் ஷர்மா அணியில் இணைவதற்கு இன்னமுமே போராடவேண்டி இருக்கிறது.

பந்துவீச்சாளர்களுக்கு இடையிலும் கடுமையான போட்டி.
டெஸ்ட் தரப்படுத்தலில் முதல் இடங்களில் உள்ள அஷ்வினும் ஜடேஜாவும் மட்டுமன்றி அடுத்தகட்ட சுழல்பந்து வீச்ச்சாளர்கள் மற்றும் வேகப்பந்துவீச்சாளர்கள் தயாராக இருக்கிறார்கள். வேகப்பந்து வீச்சாளர்களிலும் கடுமையான போட்டி. ஒருநாள், T20 போட்டிகளில் பிரகாசித்து வரும் பும்ராவுக்கு டெஸ்ட் அணியில் நுழைய முடியாமல் இருக்கிறது.

பலவீனம் என்பதை அடையாளப்படுத்த முடியாத அணியாக இருப்பதே இந்திய அணியின் சிறப்பு. 
இலங்கை அணியோ யாரை சேர்த்து அணியைத் திடப்படுத்துவது என்பதில் குழப்பத்தை எதிர்கொண்டுள்ள அணி.

எனினும் இந்த வருடத்தில் ஒரு சிறப்பான, நம்பிக்கை மிகுந்த ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக பிரகாசிக்கும் டிமுத் கருணாரத்ன இலங்கையின் இப்போதைய நம்பிக்கை.
இந்த வருடத்தில் 1000 ஓட்டங்களைப் பூர்த்தி செய்ய இன்னும் 60 ஓட்டங்கள் தேவைப்படுகின்றன.
அணியின் தலைவர் சந்திமால் டெஸ்ட் போட்டிகள் என்று வரும்போது சிறப்பாகவே ஆடிவருகிறார்.
முன்னாள் தலைவர் மத்தியூஸுக்கு 5000 டெஸ்ட் ஓட்டங்களைப் பூர்த்தி செய்வதற்கு 282 ஓட்டங்கள் தேவைப்படுகின்றன. தன்னை மீண்டும் நிரூபிக்கவேண்டிய தேவையும், நீண்ட காலத்துக்குப் பின்(இரண்டு வருடங்கள்) டெஸ்ட் சதம் ஒன்றைப் பெறவேண்டிய கட்டாயமும் அவருக்கு இருக்கிறது. சிரேஷ்ட துடுப்பாட்ட வீரராக மற்ற இளைய வீரர்களுக்கு நம்பிக்கையளிக்கவேண்டியவரும் இவரே.
விக்கெட் காப்பாளர் நிரோஷன் டிக்வெல்ல மற்றொரு நிச்சயமான வீரர்.
பயிற்சிப் போட்டியில் காட்டிய திறமையினால் இளம் துடுப்பாட்ட வீரர் சதீர சமரவிக்ரம மற்றொரு ஆரம்பத்துடுப்பாட்ட வீரராக விளையாடுவார் என்பது உறுதியாகிறது.

அடுத்த 3ஆம் இடம் தான் இப்போதைக்கு ஆடிக்கொண்டிருக்கிறது. இளம் துடுப்பாட்ட வீரராக நம்பிக்கை தந்த குசல் மெண்டிசை அழைத்துச் செல்லாமல் விட்டதே தவறு என்று எல்லா விதமான விமர்சனங்களும் வந்துகொண்டிருக்க திரிமன்னவா, தனஞ்சய டீ சில்வாவா என்ற கேள்வி இப்போது முன்னிற்கிறது.

இன்று திரிமன்னேவை அணியில் கொண்டுவந்து ரசிகர்களின் சாபத்தை வாங்கிக்கட்டியுள்ளனர் தேர்வாளர்கள். எனினும் திரிமன்னே ஒரு லாவகமான துடுப்பாட்டவீரர் என்பதில் எதுவித சந்தேகமும் இல்லை.தனது பொறுப்பை உணர்ந்து ஆடினால் ஒரு புதிய சங்கக்காரவாக மாறுவார். அப்படி ஆடி இலங்கை அணி ரசிகர்களின் எதிர்ப்பை தனக்கு ஆதரவாக மாற்றிக்கொள்வார் என்றால் அது பெரிய வரமே..

பந்துவீச்சாளர்களில் ஹேரத், டில்ருவான் பெரேராவுடன் இன்னும் இரண்டு வேகப்பந்துவீச்சாளர்கள் + ஷானக என்பது சந்திமால் எதிர்பார்ப்பது போல 'பெரிய' அணிகளை வெற்றிபெற இலங்கை எதிர்பார்க்கும் ஐந்து பந்துவீச்சாளர் வியூகமே.



மறுபக்கம் இதுவரை தான் தலைமை தாங்கிய 29 போட்டிகளில் 19 வெற்றிகளைப் பெற்றுள்ள கோலி, இந்திய டெஸ்ட் தலைமைத்துவ சாதனையாக இரண்டாமிடத்தில் உள்ள கங்குலியின் 21 வெற்றிகளை முறியடிக்க இந்தத் தொடரை வெள்ளையடிக்க வேண்டியுள்ளது.
முதலாமிடம் மகேந்திர சிங் தோனி - 60 டெஸ்ட் போட்டிகளில் 27 இல் வெற்றிகள்.
எனினும் கோலி இரண்டு போட்டிகளின் பின் தற்காலிக ஓய்வு எடுத்துக்கொள்ளவிருக்கிறார் என்பது கவனிக்கக்கூடியது.
கங்குலி இந்த 21 வெற்றிகளைப்பெற 49 டெஸ்ட் போட்டிகளுக்குத் தலைமை தாங்கவேண்டிஇருந்தது.

சில மைல் கற்கள் & சாதனைக்குக் காத்திருக்கும் வீரர்கள்..




அஷ்வினுக்கு 300 விக்கெட்டுக்களைப் பூர்த்தி செய்வதற்கு இந்தத் தொடரில் இன்னும் 8 விக்கெட்டுக்களே தேவைப்படுகின்றன. இந்தத் தொடரின் மூன்று போட்டிகளுக்குள் இந்த இலக்கை அடைந்தால் குறைந்த டெஸ்ட் போட்டிகளில் 300 விக்கெட்டுக்களை அடைந்தவர் என்ற உலக சாதனை அவர் வசமாகும்.


இப்போது 52 போட்டிகளில் 292 விக்கெட்டுக்களை அஷ்வின் வீழ்த்தியுள்ளார்.



அவுஸ்திரேலியாவின் டென்னிஸ் லில்லீ 56 போட்டிகளிலும், நம்மவர் முரளிதரன் 58 போட்டிகளிலும் இந்த 300 விக்கெட்டுக்களை எட்டியிருந்தனர்.

இந்திய சாதனை - அனில் கும்ப்ளே - 66 டெஸ்ட் போட்டிகள்.



இலங்கை அணியின் தலைவர் தினேஷ் சந்திமாலுக்கு 3000 டெஸ்ட் ஓட்டங்களைப் பூர்த்தி செய்ய  இன்னும் 70 ஓட்டங்கள் தேவைப்படுகின்றன.



நூறு டெஸ்ட் விக்கெட்டுக்கள் என்ற இலக்கை அடைவதற்கு டில்ருவான் பெரேராவிற்கு இன்னும் 7 விக்கெட்டுக்களும், லக்மலுக்கு 9 விக்கெட்டுக்களும்தே, உமேஷ் யாதவிற்கு 6 விக்கெட்டுக்களும் வைப்படுகின்றன.


இலங்கை அணிக்கு இழக்க எதுவுமில்லை. போராட்ட குணத்தை உலகின் மிகச்சிறந்த அணிக்கு எதிராக வெளிப்படுத்த, சந்திமால் தனது அணி மீது ரசிகர்களுக்கு நம்பிக்கை அளிப்பதற்கான மிகச்சிறந்த தருணம் இது.
இதுவரை 99 டெஸ்ட் தோல்விகளை (265 போட்டிகளில்) பெற்றுள்ள இலங்கை அணிக்கு 100வைத்து தோல்வியைத் தள்ளிப்போட முடியுமா ?

இன்றைய முதல் நாளில் செலுத்திய ஆதிக்கத்தைக் கொண்டு சென்று அதிர்ச்சியை வழங்கமுடியுமா?
காத்திருப்போம் தெரிந்துகொள்ள...


ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner