Showing posts with label ஊடகவியலாளர். Show all posts
Showing posts with label ஊடகவியலாளர். Show all posts

May 03, 2012

பத்திரிகை சுதந்திரம் + உரிமைகளில் வியக்க வைக்கும் எம் வெள்ளை வான் நாடு


May 3 - இன்று உலக பத்திரிகை சுதந்திரத்துக்கான நாள்..



நாம் வாழும் வெள்ளை வான் (White Van) நாட்டுக்கும் இதற்கும் நேரடிசம்பந்தம் இல்லை என்றாலும், உண்மையை சொல்லப் போய், மக்களுக்காகாகவும் உரிமைகளுக்காகவும், ஜனநாயகத்துக்காகவும் தங்கள் உயிர்களை நீத்த உண்மையான ஊடகப் போராளிகளையும், உயிரைப் பற்றி அஞ்சாமல் இன்னமும் நேரடியாகும் மறைமுகமாகவும் எழுதிவரும், பேசி வரும் பல நேர்மையான ஊடகவியலாளரையும் நாம் இன்றைய நாளில் நினைக்கவே வேண்டி இருக்கிறது.

அன்று எமது பாடசாலைக்காலத்தில் அறிந்த ரிச்சர்ட் சொய்சா முதல், பணியை நான் ஆரம்பித்த காலத்தில் பலியெடுக்கப்பட்ட நிமலராஜன், நடேசன், சிவராம்(தராகி), பழகி, பேசிய லசந்த விக்கிரமதுங்க என்று இன்னும் பலியானோர் எத்தனை பேர்.. கடத்தப்பட்டு காணாமல் போனோர் எத்தனை பேர்; கடத்தப்பட்டு, மிரட்டப்பட்டு கட்டுப்படுத்தப்பட்டோர் எத்தனை பேர்; கைது செய்யப்பட்டதால் வாய் மூடப்பட்டோர் எத்தனை பேர் என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.
எனினும் இன்னும் உண்மைகள் பேசப்படுகின்றன.. எதோ ஒரு விதத்தில் வெளிவருகின்றன..

இந்த வருடத்துக்கான உலக பத்திரிகை சுதந்திரத்துக்கான நாள் பற்றிய தொனிப்பொருளான "ஊடக சுதந்திரத்தை அடிப்படையாகக் கொண்ட சரியான, தரமான தகவல்களை அறிந்துகொள்வதில் இருக்கும் சிக்கல்கள்/இடர்ப்பாடுகள்" பற்றிய ஒரு கலந்துரையாடல் கொழும்பு அமெரிக்கன் நிலையத்தில் - American Centre (துறைசார்ந்தோர் மற்றும் துறை சார் நிபுணர்கள் கலந்துகொண்டார்கள்) இடம்பெற்றது.

தகவல் அறியும் உரிமையும் ஊடக சுதந்திரத்தின் முக்கிய கூறு என்பது வலியுறுத்தப்பட்ட இந்தக் கலந்துரையாடலில், அமெரிக்காவில் இருந்து நேரடியாக காணொளி உரையாடல் மூலமாக இணைந்துகொண்ட ஊடகவியலாளர்களைக் காப்பாற்றும் அமைப்பின் - Committe to Protect Journalists இணைப்பாளரான போப் டியேட்ஸ் சொல்லியிருந்த கருத்துகள் நிச்சயம் முக்கியமானவை.

ஊடக சுதந்திரத்தின் அடிப்படைகள், அரசாங்கம் ஒன்று மக்களுக்கு அவர்கள் அறிய விரும்பும் தகவல்களை ஏன் வழங்கவேண்டும், இதுகுறித்தான 2004ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சர்வதேசப் பிரகடனம், இதனை ஏற்று அமுல்படுத்தியுள்ள நாடுகள் என்று பல்வேறு விடயங்களைப் பற்றிக் குறிப்பிட்டார்.

அதிலே நாட்டு எல்லைகள் தாண்டி உலகின் அனேக மக்கள் அறிந்துகொள்ள விரும்பும் விடயங்கள் ஒரே வகையானவை என்ற விடயம் சுவாரஸ்யமானது..
அரச அதிகாரிகள்,அமைச்சர்களின் சம்பள விபரம்
தேர்தல் பற்றிய விபரங்கள்
அரச சொத்து, ஒப்பந்த விபரங்கள் போன்றவை தானாம் முதல் மூன்று விடயங்கள்..
அதன் பின் தான் விதிகள், விபரங்கள், விளக்கங்கள் தேடுகிறார்களாம்.

இந்தியாவில் எவ்வளவு தூரம் இந்தத் தகவல் அறியும் சட்ட மூலத்தால் ஊடகவியலாளர்களை விட, பொதுமக்கள் பலன் அடைந்துள்ளார்கள் என்பதை இலங்கையின் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஒருவர் வியந்துரைக்க, இந்திய ஊடகவியலாளர்கள் இருவர் அதுபற்றி கொஞ்சம் சொன்னார்கள்.

நாம் இங்கே பெருமூச்சு விட்டுக்கொண்டு இருக்கவேண்டி உள்ளது.
இப்படியான சட்ட மூலம் ஒன்றை இங்கே எதிர்க்கட்சி நாடாளுமன்றத்தில் கொண்டு வர முயல அரசாங்கம் அதை எதிர்த்து, தாமே அப்படியான சட்ட மூலம் ஒன்றைக் கொண்டுவருவதாக அறிவித்தவர்கள் தான்.. ம்ஹூம்.. வருடங்கள் ஆகிவிட்டன..

இப்படியான கலந்துரையாடல்கள் எனக்குப் பலவேளை சலிப்பையே தரும்.. காரணம் பேசிப் பேசிப் பயனென்ன கண்டோம்?
எல்லாம் பேசுவோம்.. பலவேளை தீர்மானங்கள் கூட எடுப்போம்.. ஆனால் பலன்?

எல்லா நாடுகளிலும் விதிகள் இருந்தாலும் எமக்கு மட்டும் எல்லாம் விதிவிலக்குத் தான்.

2002ஆம் ஆண்டு யுத்த நிறுத்தகாலம் இருந்தவேளையில் பத்திரிகை சுதந்திரத்தின் அடிப்படையில் 51ஆம் இடத்தில் இருந்த இலங்கை இப்போது 163ஆம் இடத்தில்..

இலங்கைக்கு கீழே இன்னும் 16 நாடுகள் மட்டுமே..

அவை ஈரான், சீனா, எரித்ரியா, யேமன், சூடான், சிரியா, சோமாலியா, வியட்நாம், மியான்மார், வட கொரியா போன்ற 'பெயர்' பெற்ற நாடுகள்..
இந்த இணைப்பைப் பாருங்கள்...
http://en.rsf.org/press-freedom-index-2011-2012,1043.html

ஊடகத் தொழில் பற்றி என் கவியரங்கக் கவிதை ஒன்று..

ஊடகத்துவம் - கவியரங்கக் கவிதை



இரண்டாண்டுகளுக்கு முன்னர் எழுதிய ஊடக சுதந்திரம் பற்றிய இடுகை..

இலங்கையில் ஊடக சுதந்திரம் ..




இலங்கையிலே ஊடகவியலாளனாக இருப்பது பெருமையாகவே இருக்கிறது.

April 19, 2012

கடுப்பைக் கிளப்பும் விடுப்பு


விடுமுறைகள் மலிந்த ஒரு நாட்டில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பது பெருமையான விஷயமா தெரியவில்லை; ஆனால் நிச்சயமாக தனிப்பட்ட முறையில் எனக்கு அவ்வளவு மகிழ்ச்சி இல்லை. உடனே தொழில்துறை, ஆக்கபூர்வம், நாட்டின் மொத்த உற்பத்தி எப்படி இப்படி பெரிதாக சிந்தித்து என்னை ரொம்பப் பெரிசா எல்லாம் மாற்றிவிடாதீர்கள்.

இவ்வளவு விடுமுறை இருந்தும் நீண்ட விடுமுறைகளையோ, மற்றவர்கள் விடுமுறை அனுபவிக்கும் பண்டிகைக்கால விடுமுறைகளையோ அனுபவிக்க முடியாதவன் என்பதால் தான் இந்தக் கடுப்பு.
அவனவன் ஆசையாகக் கேட்டு, அனுதாபம் தேடி விடுமுறை கேட்கிற நேரம் அள்ளி அள்ளிக் கொடுக்கும் எனக்கு அனேக நேரங்களில் விடுமுறை இல்லை.

விடுமுறை இல்லாமலே வேலை செய்து (விடியல் செய்து) பழகியதோ என்னவோ, விடுமுறை எடுப்பதிலும் ஆர்வம் இல்லாமல் போய்விட்டது.. அத்துடன் விடுமுறை கொடுப்பதும் நானே என்பதனாலும் இருக்கலாம்..
ஆனால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணம் சொல்லி விடுமுறை எடுப்பதில் ஒரு சுவாரஸ்யம் தான். அத்துடன் பணிபுரியும் இடம் ஊடகத்துறை என்பதால் அனாவசிய விடுமுறைகளை எம்மவர்கள் எடுப்பதும் கிடையாது; பொறுப்பானவர்கள். :))


இந்திய கார்ட்டூனிஸ்ட் நண்பர் சதீஷ் ஆச்சார்யாவின் கைவண்ணம்..


ஆனால் வேறு வேறு இடங்களில் எடுக்கப்படும் விடுமுறைகளைப் பற்றி ஒருமுறை விடியல் செய்தபோது நிறைய சுவாரஸ்யமான விடயங்கள் வெளிவந்தன..
அதுபற்றி இந்த இடுகைக்குப் பின்னர் இதுபற்றி ஒரு விடியல் செய்து எல்லாவற்றையும் தொகுத்துப் பதிகிறேன்..

அண்மையில் வாசித்த இணையத்தளக் கட்டுரை ஒன்றில் சில சுவாரஸ்யமான தகவல்களைக் கண்டேன்.. அவற்றை உங்களோடு பகிர்ந்துகொள்ளலாம் என்று..

தொழிலாளர்கள் பொதுவாக எடுக்கும் சுகயீன விடுமுறைகளில் என்ன செய்கிறார்கள்? என அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகள் வெளிவந்துள்ளன.
அவர்களில் பெரும்பான்மையானவர்களுக்கு உண்மையிலேயே உடல்நலம் சரியில்லை என்று இந்த ஆய்வு சொல்லியிருப்பது ஆச்சரியமானது.

அண்மையில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், பல்வேறுபட்ட வேலைகளில் மற்றும் பல மட்டங்களிலான சம்பளங்களிலுள்ள ஆண்கள் மற்றும் பெண்களின் புள்ளிவிபரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

புதிய வேலை வாய்ப்புத்தளமான theFIT இந்த ஆய்வை, 5000 பேரை மையமாகக்கொண்டு நடாத்தியுள்ளது.
இந்த ஆய்வின்படி 84 சதவீதமானோர் அவர்கள் கடைசியாக எடுத்த சுகயீன விடுமுறையானது, உடல் நிலை சரியில்லாத தமது குழந்தைகளைக் கவனிக்கவே எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

அதிசயிக்கத்தக்கதாக ஐந்து ஆண்களில் ஒருவரும் ஏழு பெண்களில் ஒருவரும் மட்டுமே சுகயீனம் என பொய்யான காரணத்தைக்கொண்டு விடுப்பு எடுத்துள்ளனர். உண்மையான காரணத்தை சொல்ல முடியாத சந்தர்ப்பங்களில், ஒருநாளேனும் ஓய்வாக இருப்பதற்கு, வேறுவேலைகளுக்கான நேர்முகத்தேர்வுகள் போன்ற காரணங்களுக்காகவே சுகயீனம் என்று அவர்கள் சொல்லியுள்ளதாகவும் இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. (இந்த ஆய்வு அமெரிக்கா மற்றும் மேலைத்தேயத்தில் எடுத்திருக்கிறாங்க என்று மனசுக்குள் சொல்லுவீங்களே)  

பெண்களைப் பொறுத்தவரை இப்படிப் பொய்யான விடுப்புகள் எடுப்பது குறைவாகவே உள்ளது. அதிலும் அவர்களுக்குரிய விடுமுறை நாட்களில் கூட வேலை செய்வதில் பெண்கள் விருப்பம் காட்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (அட இதை நம்ப முடியலையே... இலங்கையில் இந்தக் கருத்துக்கணிப்பை யாராவது எடுப்பீங்களா?)

41 வீதமான ஆண்களுடன் ஒப்பிடும் போது 54 சதவீதமான பெண்கள், ஒன்பது மணிநேரம் வரை வேலையில் ஈடுபடுவதாகவும்  இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. மேலும் 91 சதவீதமானவர்கள், வாரநாட்கள் ஐந்திலும் தங்களது வேலையை வேலைநேரத்தில் செய்வதுடன்,  ஆண்களில் கிட்டத்தட்ட பாதியளவான 47 சதவீதம் பேர், எட்டு மணித்தியாலங்கள் வரை வேலை செய்வதாகவும், 41 சதவீதம் பேர், எட்டு மணித்தியாலங்களுக்கு அதிகமான நேரம் வேலையில் ஈடுபடுவதாகவும் மேற்படி ஆய்வு குறிப்பிட்டுள்ளது. (ஆகா என்னைப் போலவும் கணிசமானோர் இருக்கிறார்கள் என்று ஒரு ஆறுதல் )



மொத்த வேலைபுரிபவர்களில் 65 வீதமானோரும்,அதில் பெண்களில் 67 வீதம் மற்றும் ஆண்களில் 60 வீதமானோரும் தங்களது விடுமுறை நாட்களில் கூட வேலை புரிவதாகவும் ஆய்வு கூறியுள்ளது. மேலும் பெண்கள், தாம் செலவிடும் நேரம் பயனுள்ளதாக அமையவேண்டுமெனவும் விரும்புவதாக குறிப்பிட்டுள்ளனர்.

இறுதியாக விசித்திரமான கருத்தொன்றையும் வெளியிட்டுள்ளது இந்த ஆய்வறிக்கை.
இது உண்மையில் என்னை ஆச்சரியப்படுத்தியது.
 26 வீதமான ஆண்கள் தமது சம்பள விவரங்களை நண்பர்களிடம் சொல்ல தயங்குகிறார்களாம். பெண்களில் கூட 17 வீதமானோருக்கு இதே மனநிலை காணப்படுகிறதாம்!

யோசித்துப் பார்த்தேன்.. சரியாகத் தான் இருக்கும்.. இந்தக் காலப் பொருளாதார நிலையில் நண்பர்களிடம் கூட இதைச் சொல்லாமல் இருப்பது தான் சரியாக இருக்கும்..
எங்களைப் பிச்சைக்காரன் என்று கேவலப்படுத்தாமல் இருக்கவும், பெரும் பணக்காரன் என்று நினைத்துக் கடன் கேட்டுத் தொல்லை தராமல் இருக்கவும்..

நண்பர்ஸ்.... இப்ப இதை வாசித்த பிறகு என்ன முடிவு எடுத்திருக்கிறீர்கள்?
விடுமுறை எப்படி எடுப்பது என்று ஐடியா போடவா? அல்லது உண்மை மட்டுமே சொல்லி இனிமேல் விடுப்புக் கேட்கப் போகிறீர்கள் என்றா?
எப்படி முடிவெடுத்தாலும் அது எனக்கு மட்டும் எப்போதும் கடுப்பைத் தரும் என்பது நிச்சயம்.

குறிப்பு - ஊர்ப்பேச்சு வழக்கில் விடுமுறையை விடுப்பு என்று சொல்வதும் வழக்கம்.

இதே மாதிரியான முன்னைய இடுகைக்குக் கிடைத்த வரவேற்பும், திருப்தியும் இந்த இடுகையை இட எனக்கு உற்சாகம் தந்தது..
படித்த, பிடித்த விஷயங்களைத் தானே பிடித்த மாதிரியாகப் பகிர ஆசைவரும்.
இந்த இணைப்பு உங்கள் வாசிப்புக்காகவும் தொடர்ந்து வரும்..


November 20, 2011

நானும் சக்தியும்


பதின்மூன்று வருடங்களுக்கு முன்பு இதே மாதிரியான நவம்பர் 20 மாலை, சந்தோஷக் களைப்புடன் அன்று தான் அணிந்த புத்தம் புதிய இளம் பச்சை ஷேர்ட்டுடன், அதற்கு மட்சிங்காக என் முதல் கிடைத்த சம்பளத்தில் வாங்கிய டையையும் கழற்றாமல் 138ஆம் இலக்க பஸ்ஸில் வந்திறங்கி அப்போது நம் இருந்த வீட்டுக்கு வழியான மயூரா பிளேஸ் ஊடாக நடந்து வரும்போது மனதெல்லாம் ஒரு நிம்மதி, பெருமிதம்; அத்துடன் இன்னும் செல்லும் பாதை நீளமாக ஆனாலும் நல்லதாக இருக்கும் என்றொரு நம்பிக்கை.

வைரமுத்து சொன்னது போல "ஒரு காக்காய் கூட உன்னைக் கவனிக்காது; ஆனால் உலகமே உன்னைக் கவனிப்பதாக எண்ணிக்கொள்வே" என்ற வரிகள் அப்போது எனக்கும் பொருத்தம்.

ஆமாம் நான் ஐம்பது நாட்களாக வேலை செய்துகொண்டிருக்கும் வானொலி, ஐம்பது நாள் பரீட்சார்த்த ஒலிபரப்பு முடித்து உத்தியோகபூர்வமாக நிகழ்ச்சிகளுடன் சக்தி FM என்ற பெயருடன் மிக விமரிசையாக ஒலிபரப்பை ஆரம்பித்த நாள் அது 20-11-1998.

சக்தி FMக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். 


அட... பதின்மூன்று ஆண்டுகள்.. எப்படி ஓடி முடிந்து விட்டன?
எத்தனை மாற்றங்கள்?
என் வாழ்க்கையிலும்.. இந்த வானொலியிலும்????

சக்தியில் ஆரம்பித்த என் வானொலிப் பயணம், சூரியனுக்குப் போய் அங்கே கழிந்த ஆறு ஆண்டுகளுக்குப் பின் வெற்றியில் வந்து நிற்கிறது.
DJ Special ஆக சக்தியில் நான் ஆரம்பித்த இந்த நெடும் பயணம், வானொலி தொலைக்காட்சி இரண்டினதும் பணிப்பாளராக என்னை உயர்த்தியிருக்கிறது.

சக்தி FM ஆரம்பிக்கக் காரணமாக அமைந்த எழில் அண்ணாவும் அங்கில்லை; பரீட்சார்த்த ஒலிபரப்புக் காலத்தில் அங்கே இருந்த யாருமே இப்போது அங்கே இல்லை.
ஒலிபரப்பு ஆரம்பித்த முதல் நாள் அங்கே இருந்த எந்தவொரு ஒலிபரப்பாளருமே இப்போது அங்கே இல்லை.(செய்தியாளர்கள் கூட)
வாழ்க்கை என்றால் இப்படித் தான்.

ஆனால் இன்றும் சக்தி FM வானொலிக்கு என்று ஒரு தனியான மதிப்பும், நிலைத்த தன்மையும் இருக்கிறது என்றல் நிச்சயம் அது மகிழ்ச்சிக்குரியதும் நானும் பெருமைப்படக் கூடியதும் தான்.

சக்தியின் முதல் மூன்று பிறந்தநாள் கொண்டாட்டங்களின்போதும் அங்கே இருந்தவன் என்ற பெருமை இன்று வரை மனதில் பசுமையாக உள்ளது.
சக்தி FM + சக்தி TV இனது முதலாவது பிறந்தநாள் கொண்டாடியபோது - 1999
(அப்போது இரண்டு பிறந்த நாட்களுமே ஒரே நாளில் - நவம்பர் 20)

அந்த அத்திவாரமும், சரியான வழிகாட்டலும், பயிற்சியும் தான் இன்றளவு வரை நேர்த்தியாக நான் நடக்கவும், இந்தளவு நான் முன்னேறவும், நான் பழக்கிய, பழக்கும், வழிநடத்தும் இளையவர்கள் சிறப்பாக மிளிரவும் காரணமாக உள்ளது என்பதை எப்போதுமே நன்றியுடன் நினைக்கிறேன்.

சக்தியின் என் ஆரம்பம் பற்றி சுருக்கமாக முன்னைய பதிவொன்றில் சொல்லி இருக்கின்றேன்.


10 ஆண்டுகள்... சாதனை? பகுதி 1


10 ஆண்டுகள்.. சாதனை - பகுதி 2



எழில் அண்ணா இல்லாமல் இந்தப் பயணம் சாத்தியமாக இராது.
இன்று வரை அவரது அன்பும் ஆசியும் இருப்பதை ஒரு வரமாகவே நினைக்கிறேன்.

வானொலிகளில் நாங்கள் ஒலிபரப்புக்காக வைத்துள்ள பதிவுப் புத்தகம் - Log Book என்பது மிக முக்கியமான ஒன்று.
சக்தி - பெயரில்லாமல் ஒரு புதிய பரீட்சார்த்த வானொலியாக ஆரம்பித்த முதல் நாளிலேயே எழில் அண்ணா இதை எங்களுக்குப் பழக்கப் படுத்தியிருந்தார்.

இன்றைய சக்தி வானொலி அறிவிப்பாளர்கள் பலருக்கே தெரியாத ஒரு விடயம் - சக்தியின் பரீட்சார்த்த ஒலிபரப்பு ஆரம்பித்தது 103.9 என்ற அலைவரிசையில்.. அதன் பின்னர் ஆஸ்திரேலியாவில் நடந்த ஒரு முக்கோணக் கிரிக்கெட் தொடரின் (Carlton & United Series 1998) நேரலை வானொலி ஊடாக மும்மொழியிலும் ஒலிபரப்பானது.
அதன் பின்னர் தான் நிரந்தரமாக 105.1 என்ற அலைவரிசைக்கு மாற்றப்பட்டது.

சக்தியின் பரீட்சார்த்த ஒலிபரப்பின் Log Bookஇன் ஒரு சில முக்கிய பக்கங்களின் புகைப்படங்கள் இங்கே....

ஒக்டோபர் முதலாம் திகதி பரீட்சார்த்த ஒலிபரப்பை ஆரம்பித்தாலும், முழுமையாக ஒரு அணியை உருவாக்கவேண்டும் என்பதிலும், செய்வன திருந்தச் செய்து பூரணமான பின்னரே ஒலிபரப்பை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கவேண்டும் என்பதிலும் உறுதியாக இருந்த எழில் அண்ணா ஐம்பது நாட்கள் பரீட்சார்த்த ஒலிபரப்பில் எம்மை ஈடுபடுத்தினார்.

எழில்வேந்தன் அண்ணாவின் முத்து முத்தான கையெழுத்துக்களில் பரீட்சார்த்த ஒலிபரப்பின் முதல் தருணங்கள்..


ஒலிபரப்பை அவர் ஆரம்பித்து வைக்க, ரமணீதரன் அண்ணா (இவர் தொலைக்காட்சிப் பிரிவின் எல்லாமாக இருந்தவர்), ஜானகி ஆகியோர் இணைந்துகொண்டார்கள்.

சரியாக ஒரு மணிநேரத்தில் நான் இணைந்துகொண்டேன்.
என் எழுத்துக்களில் காலையில் பூக்கும் - காதலே நிம்மதி பாடல் முதல்..
எனினும் நானாக ஒலிபரப்பிய முதல் பாடல்
நீ காற்று நான் மரம் - நிலாவே வா

எனது முதலாவது அறிவிப்பு நேரடியாக வானொலியில் ஒலிபரப்பானது ஒரு பரவசமான உணர்வு .
"நீங்கள் கேட்டுக்கொண்டிருப்பது 103.9 என்ற அலைவரிசையில் ஒரு புதிய தமிழ் வானொலியின் பரீட்சார்த்த ஒலிபரப்பு"

அப்போது சக்தி TVயில் செய்தி வாசிப்பில் ஈடுபட்டு வந்த சூரியப்பிரபா அக்கா (இப்போது திருமதி. சூரியப்பிரபா ஸ்ரீகஜன்), கனடாவில் இப்போது வானொலி பொறியியலாளராக இருக்கும் கௌரிஷங்கர் (ஷங்கர்) ஆகியோரும் அன்று பின் இணைந்து கொண்டார்கள்.

அன்றைய நாளின் ஒலிபரப்பு நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு நிறைவுக்கு வரும் நேரம் அறிவித்த வசனங்கள் என் எழுத்துக்களில் அந்த Log bookஇல்.



 நவம்பர் 20 என் வாழ்வில் மறக்க முடியாத நாள்.
இலங்கையின் இரண்டாவது இருபத்து நான்கு மணிநேர தமிழ் வானொலி சேவையின் பிறப்பு.
காலையில் எனது அறிவிப்புடன் பக்திப் பாடல்கள்...
முழு நாளும் ஏராளமான பரிசுகள் வழங்கல்; துடிப்பான ஒரு புதிய குழுவுடன் புதிய இலக்குகளோடு எமது பயணம் ஆரம்பித்தது.

அன்று முதல் இன்று வரை சக்தி FMஇல் மாறாதிருக்கும் சில விடயங்களை மீண்டும் மீட்டிப் பார்த்தபோது,
அழகான தமிழும் இணைந்த இலச்சினை (Logo), வணக்கம் தாயகம் என்ற காலை நிகழ்ச்சிப் பெயர், 105.1 FM.

இந்த வேளையில் சக்திக்கும் எனக்கும் இருக்கும் ஒரு அற்புதத் தொடர்பு - நான் சூரியனில் இருந்தவேளையில் நான் பயிற்சியளித்து, எனக்குக் கீழே பணியாற்றிய துடிப்பான தம்பி காண்டீபன் இப்போது சக்தியின் பணிப்பாளர். பெருமையும் மகிழ்ச்சியும்.

அவருக்கும் அவர் தம் குழுவினருக்கும் என் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

சக்தி என்ற பெயரை அறிமுகப்படுத்திய வேளையில் எழில் அண்ணா அறிமுகப்படுத்திய நிலையக் குறியிசைகளில் ஒன்று இன்னும் மனதிலே ஒலிப்பது...

புதிய சிந்தனை 
புதிய தகவல்கள்  
புதிய ஒலிநயம்
சக்தி FM

அதே போல அந்தக் காலகட்டத்தில் வந்திருந்த திரைப்படம் ஒன்றில் பாரதியின் பாடல் ஒன்றும் சக்தி என்றே SPBயின் குரலில் ஒலித்திருக்கும்..
அதை அடிக்கடி ஒலிபரப்புவதில் ஒரு பரவசம்..

துன்ப மிலாத நிலையே சக்தி,
தூக்க மிலாக்கண் விழிப்பே சக்தி;
அன்பு கனிந்த கனிவே சக்தி,
ஆண்மை நிறைந்த நிறைவே சக்தி;
இன்ப முதிர்ந்த முதிர்வே சக்தி,
எண்ணத் திருக்கும் எரியயே சக்தி,
முன்புநிற் கின்ற தொழிலே சக்தி,
முக்தி நிலையின் முடிவே சக்தி.





என் தொழிலுக்கும் வாழ்வுக்கும் சக்தி கொடுத்த சக்திக்கு என் இனிய வாழ்த்துக்கள்...

அந்த சக்தியின் சக்திகளுக்கும், சொந்தங்களுக்கும் இனிய வாழ்த்துக்கள்....



October 13, 2011

நவீனகால இலத்திரனியல் ஊடகங்கள் எதிர்நோக்கும் சவால்கள்.


அண்மையில் கொழும்பு தமிழ் சங்கத்தில் வாராந்த நிகழ்ச்சி ஒன்றில் ஊடகங்கள், ஊடகவியலாளர்கள் பற்றி உரையாற்ற அழைத்திருந்தார்கள்.
நான் எடுத்துக் கொண்டு உரையாற்றிய தலைப்பு -
நவீனகால இலத்திரனியல் ஊடகங்கள் எதிர்நோக்கும் சவால்கள்.



கட்டுரை வடிவில் அந்த உரையை இங்கே பதிவிட முடியாமல் இருந்தாலும் ஒலிப்பதிவு செய்து ஒலிவடிவில் தரவேற்றியுள்ளேன்.
கேட்டு உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.

ஊடகவியலாளர்கள், ஊடக விமர்சகர்களும் உங்களது கருத்துக்களை இங்கே தரலாம்....

எனது உரை..
பாகம் 1




பாகம் 2




சபையோரின் கருத்துக்கள் + விமர்சனங்கள் + கேள்விகள்




எனது முடிவுரை + பதில்கள்




ஒலிப்பதிவைத் தொகுத்து பதிவேற்றும் விதமாகத் தயார்ப்படுத்தித் தந்த தம்பி கன்கோன் கோபிகிருஷ்ணாவுக்கு நன்றிகள்.


November 27, 2010

இன்று இரவு வெற்றி பெற்றவர்களில்... 'வித்தி'

எமது வெற்றி FM வானொலியில் சனிக்கிழமைகளில் இரவு மணி செய்தியறிக்கையைத் தொடர்ந்து ஒலிபரப்பாகும் 'வெற்றி பெற்றவர்கள்' நிகழ்ச்சியில் இன்று சிரேஷ்ட ஊடகவியலாளர் சு.வித்தியாதரன் அவர்களை நான் பேட்டி காண்கிறேன்.


உதயன்,சுடரொளி ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றபின்னர் வித்தியாதரன் அவர்கள் வானொலி ஒன்றுக்கு வழங்கும் முதல் பேட்டி இதுவாகும்.
'வித்தி' அவர்களின் எதிர்கால அரசியல் பிரவேசம் பற்றி ஒரு பரபரப்பு இருக்கும் சூழ்நிலையில் 'வெற்றி பெற்றவர்களிலும்' இது பற்றி மனம் திறக்கிறார்.

வெற்றி FM வானொலியில் இன்றிரவு மணி செய்தியறிக்கையைத் தொடர்ந்து 'வெற்றி பெற்றவர்கள்'

இணையம் வழியாக செவிமடுக்க www.vettri.lk

வானொலி பண்பலைவரிசைகள்....(இதுவரை யாரும் கேட்காமல் இருந்தால் ;))
கொழும்பில் 99.6 FM
கண்டியில் 101.5 FM
வடக்கு கிழக்கில் 93.9 FM
தென் கிழக்கு மற்றும் ஊவாவில் 93.6 FM
நாடு முழுவதும் 106.7 FM

May 24, 2010

அகிலன் இன்று வெற்றியின் காற்றின் சிறகுகளில்

இலங்கை வந்துள்ள கவிஞர்,பதிவர்,எழுத்தாளர் த.அகிலனை இன்று எமது வெற்றி வானொலியின் காற்றின் சிறகுகள் நிகழ்ச்சி மூலம் நான் நேர்காணவுள்ளேன்.
இன்றிரவு இலங்கை நேரப்படி 9 .15 இலிருந்து இந்த நிகழ்ச்சி ஒலிபரப்பாகவுள்ளது.



இலங்கையைச் சேர்ந்த அகிலன்,பதிவுலகினாலும்,பின்னர் தனது கவிதைகளினாலும் உலகம் முழுதும் உள்ள தமிழர்களால் அறியப்பட்டவர்..
அண்மைக்காலத்தில் மரணத்தின் வாசனை,வடலி வெளியீடுகள் ஆகியன் இவரை மேலும் உலகறிய செய்துள்ளன..

இன்றிரவு வெற்றி FM மூலமாக அகிலன் பகிரும் தனது அனுபவங்களைக் கேட்க...



December 11, 2009

ஊடக மாயம்? உண்மை சொல்கிறேன்..



நேற்று எனது பதிவுக்குப் பின் வந்த பல பின்னூட்டங்களுக்கு தெளிவாகப் பதில் கொடுக்கவேண்டும் என்று அமர்ந்தபோது பதில்கள் நீண்டு கொண்டே போயின..
குற்றச் சாட்டுக்கள்,கேள்விகள் உடனடியாகப் பதிலளித்து தெளிவுபடுத்தப் படாவிட்டால் அந்தப் பொய்களும் போலிகளுமே உண்மையாக மாறக்கூடிய அபாயம் இருப்பதாலே இந்த தெளிவாக்கப் பதிவு..

நான் அடிக்கடி சொல்லும் விஷயம் தான்.. பாராட்டுக்களைப் பொதுமைப் படுத்தலாம்.. குற்றச் சாட்டுக்களை யாரும் பொதுமைப் படுத்தாதீர்.. அப்பாவிகளும் பாவிகளாக்கப்படும் அபாயமும் அவலமும் உள்ளது.

ஜனூஸ் எழுதியதும் இருக்கிறம் பிரசுரித்ததும் பொதுமைப்படுத்தி அனைத்து இலத்திரனியல் ஊடகங்களையும் ஒலிபரப்பாளர்களையும் தாக்கியிருப்பது கண்டனத்துக்குரியதே. ஒருசிலர், சிலர் போன்ற சொற்களைப் பாவிப்பதன் மூலம் யாரும் தப்பிவிடமுடியாது.

ஜனூஸ் என்பவர் தனக்கு நடந்த பாதிப்புக்களோ, நிமலின் நண்பருக்கு நடந்த அனுபவங்களோ எல்லோருக்குமோ, பெரும்பாலானோருக்கோ நடந்திருக்கலாமென்பதில்லையே..

அப்படியே அவர்கள் அதை வெளிக்கொணர்ந்திருந்தாலும் - பொதுவான ஊடகமான இருக்கிறம் அப்படியே அதை வெளியிட முடியுமா?

குறைந்த பட்சம் இவாறான கட்டுரைகள் பிரசுரிக்க முன் குறித்த ஊடகங்கள் சிலவற்றுடன் தொடர்பு கொண்டாவது தகவல்களை உறுதிப் படுத்தியாவது இருக்கலாம்..
என்னுடன் நாளுக்கு ஒரு தடவையாவது கட்டுரை வேண்டும் என்று தொலைபேசியில் அழைக்கும் சஞ்சித் சும்மாவாவது கேட்டிருக்கலாமே..

புல்லட் தெளிவாக ஒரு விடயம் பற்றிப் புரிந்திருக்கிறார்..
எம் வானொலித்துறை ஒரு கனவு தொழிற்சாலை போன்றது. பிரபல்யம்,பணம்,புகழ் ஈட்டப்படுகின்ற இடம் இது. எனினும் கொடுக்கப்படும் விலை கொஞ்சம் கஷ்டமானது.

ஆரம்பத்தில் கடும் உழைப்பும் பொறுமையும் இல்லாவிட்டால் நின்று நிலைப்பது கடினம்.
அந்த ஆரம்பகால கட்டத்தில் சகித்து, தூக்கம் தொலைத்து, பசி,வேறு வேலை மறந்து தொழிலில் தம்மை ஆழ்மனதோடு ஈடுபடுத்திய சிலரே பின்னர் படிப்படியாக உயர்ந்து சொகுசு சம்பளம், புகழோடு இருக்கிறார்கள்.

இடை நடுவே விலகிக் கொண்டு சபிப்போர் பலர் இருக்கலாம். இது ஒன்றும் எட்டு மணிநேர சிம்பிள் வேலை இல்லை.ஒரு தவம் போல.
எல்லாரும் இங்கே வேலை செய்தாலும், ஈடுபாடு, கவனம் சிதறாமை, நேரக் கட்டுப்பாடு, தேடல்,முயற்சி,பயிற்சி, வாசிப்பு, நேர்மை போன்றவை இருந்தால் மட்டுமே முன்னேறலாம்;நிலைத்து நிற்கலாம்.

சில தரவுகளைத் தரவேண்டும்..

எந்த துறையில் உங்களுக்கு பயிற்சிகளோடு சம்பளமும் தரப்படுகிறது?

என் ஆரம்ப சம்பளம் (பத்தாண்டுகளுக்கு முன்னர் 7000 ரூபாய்)..
இன்று ஆரம்ப அடிப்படை சம்பளம் சுமார் 8000 ரூபாய் முதல் 12000 ரூபாய் வரை வழங்குவது உறுதி.(நீங்கள் வெற்றி,சக்தி,சூரியன் என்று எங்கும் கேட்கலாம்)

எல்லா நிறுவனங்களும் நிதி நிலைமை நொடிக்கும்போதும் சளைக்காமல் சலுகை வழங்குவது எம் துறையில் தானே?
ஆரம்ப பயிற்சி காலத்தில் மட்டுமே சம்பளம் கொடுக்கப்படுவதில்லை (ஒன்று முதல் நான்கு மாத காலம்) அதிலும் எங்கள் வெற்றியில் நாட்டின் சிக்கலான பொருளாதாரம் கருதி போக்குவரத்து கட்டணமாக மூவாயிரம் ரூபாய் கொடுக்கிறோம்..
பகுதி நேரமாக உழைப்போரே ஒரு மணி நேரத்துக்கு நூறு ரூபாய்க்கு மேல் உழைக்கிறார்கள்.
வெளி விளம்பரங்களுக்கு குரல் கொடுத்தால் மேலும் பணம் (சில நிறுவனங்கள் இதை அனுமதிப்பதில்லை)

இப்படி இருக்கையில் //இலங்கையிலே மிகவும் குறைவாக சம்பளம் பெறுவோரின் பட்டியலில் இவர்களின் பெயர்தான் முதன்மை வகிக்கும். அதிலும் எவ்.எம் வானொலிகளில் பணியாற்றும் இன்றைய இளைஞர்கள் வாழ்க்கையை மென்று விழுங்கி ஏப்பம் விட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஜீவிதத்தின் பிடிமானம் குறைந்து எதிர்காலத்தைப் பற்றிய கேள்விகளோடு அலைகிறார்கள். 'கொழும்பு காசு இல்லாவிட்டால் எலும்பு' என்ற நிலை வரும் போது ஊடகத்தில் மகனுக்கோ, மகளுக்கோ ஊரிலிருந்து A.T.Mபணம் அனுப்பும் அப்பாவிப் பெற்றோர்கள் எத்தனையோ பேர். 'இதைவிட இவன் என்னோடையே இருந்து ஆடு, மாடாவது மேய்ச்சிருக்கலாம்'//

என்று அவர் எழுத நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கவேண்டுமா? செய்தொழில் தெய்வம் என்பது சும்மாவா?

அடுத்து லீலைகள் மாயாஜாலங்கள் பற்றி சொல்கிறார். எல்லாத் துறைகளிலும் இது போன்ற அபத்தங்கள் இருக்கின்றன.
சினிமா,ஊடகம்,அரசியல் போன்றவை வெளியே தெரிகிற கண்ணாடித் துறைகள் என்கின்ற காரணத்தால் இங்கே சிறு சம்பவங்கள் நடந்தால் கூட கண்,காது,மூக்கு முளைத்து வெளியே வந்துவிடுகின்றன.
அப்படி முறை,வழி தவறியவர்கள் வானொலி வரலாற்றில் இருந்து எவ்வாறு காணாமலே போயுள்ளார்கள் என்பது கண்கூடு தெரியும்..
வெளியே இருந்து பார்க்கின்ற இளைய தலைமுறையினருக்கு தவறான பக்கங்களைக் காட்டக்கூடாது என்பதேலேயே இந்தப் பதிவுகள்.

நம்மோடு பணிபுரியும் (செய்திப் பிரிவு) ரஜனிகாந்தும் இது பற்றி சொல்லி இருப்பது தான் ரொம்பவே ஆச்சரியம்..

// ரஜனிகாந்த் said...
“உண்மையை உண்மையாக சொல்வதுதான் மென்மை - அதுவே மனிதத் தன்மை” அதில் என்ன தப்பு இருக்கிறது. ஊடகங்களின் ஆரம்ப காலத்தினை பாருங்கள், அங்கு திறமைக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்பட்டதாக அறிகிறேன் - ஆனால் இப்ப திறமையுடன் (திறமை இல்லாவிட்டாலும்) சதைக்கு முன்னுரிமை உண்டாம். ‘சதைகள் வதைகள் ஆவதைப் பற்றி எனக்கு கவலை இல்லை – ஆனால் திறமைசாலிகள் வீனடிக்கப்படுகிறார்கள் என்ற ஆதங்கம் மட்டுமே எனக்கு!

December 11, 2009 7:34 AM

//
அவரது பிரிவில் தான் பெண்களே இல்லையே.. ஒருவேளை அவர் முன்பு பணிபுரிந்த ஊடகத்தை(அது ஒரு பத்திரிகை) அல்லது வேறு ஏதாவது பற்றி சொல்கிறாரோ தெரியவில்லை.

இப்படி சொல்வோருக்கு ஒரு சின்னக் கேள்வி.. சதைக்கும் கவர்ச்சிக்கும் முக்கியத்துவம் கொடுப்பது உண்மையானால் அநேகமான ஊடகங்களில் பெண்கள் தானே பெரிய பதவிகளில் இருக்க வேண்டும்?

இப்படிப் பேசி பேசியே ஊடகங்களில் இருக்கும் பெண்களை கேவலப்படுத்துவது வழக்கமாகிப் போச்சு.. வெட்கமில்லையா உங்களுக்கு?
இதற்குள் இவர்களே தான் வெளியே நின்று பெண்கள் அடக்கப்படுகிறார்கள் என்று கோஷமிடுபவர்கள்..
பாரதியின் பிறந்தநாளான இன்று "நெஞ்சில் உரமும் இன்றி.. " ஞாபகம் வருகிறது.

உங்களில் சிலர் சொன்னது போல முட்டி பிடித்து, வாளி பிடித்து முதுகெலும்பு வளைத்து தற்காலிகமாக முன்னேறி பதவி பிடித்த சிலரும் என்னவானார்கள் என்பது காலம் தந்த பாடம். உண்மைத் திறமையும், தொழில் நேர்மையும் எப்போதும் முன்னேற்றங்களை தடுக்காது.

இதெல்லாம் ஊடகங்களுக்குள் வரமுயன்று தோற்றுப் போனவர்களும், நேரடியாக அறியாமல் நண்பர்கள் மூலமாக அறிந்தவர்களும் காலாகாலமாக சொல்கின்ற விஷயங்கள்.

நின்று பிடிக்கக்கூடிய திறமை, தன்னம்பிக்கை இல்லாமல் தோற்றோடிப் போய் சீசீ இந்தப் பழம் புளிக்கிறது என்று சொல்வோரை என்னவென்பது?

திருவாளர்கள் அப்துல் ஹமீது,கே.எஸ்.ராஜா, நடராஜசிவம்,எழில்வேந்தன்,தயானந்தா முதலானோர் காணாத வெட்டுக்களா? அவர்கள் நின்று பிடிக்கவில்லையா?

வெட்டுக்கள் வந்தாலும் தாண்டி நிற்க உறுதியான முதுகெலும்பும், திறமையும் இருந்தால் போதும் என நினைப்பவன் நான்.

பல பேர் எதிர்ப்பார்ப்போடு உள்ளே நுழைய முற்பட்டாலும் எத்தனை பேரால் எத்தனை ஊடகங்களில் உள்வாங்கப்பட முடியும்? இதனால் தான் பலருக்கு ஏமாற்றங்கள்.ஆனால் தகுதியும்,திறமையும் உள்ளவர்கள் என்றாவது உள்ளே வரத்தான் போகிறார்கள். (ஊடகப் பயிற்சி நெறிகள்,நிறுவனங்கள் பற்றி இன்னொருநாள் பார்க்கலாம்)

இன்றெல்லாம் ஊடகங்கள் பற்றி என்றவுடன் எல்லோரும் வரிந்து கட்டிக்கொண்டு குதிப்பது வழக்கமாகி விட்டது. சினிமா,அரசியல் போல.. விமர்சனங்கள் என்பது பிழையில்லை.ஆனால் உள்ளே நடப்பது எல்லாமே தெரியும் என்பது போல எழுதுவது தான் தவறு என்கிறேன்.

நானும் ஒரு நீண்ட பதிவு ஊடகங்கள் பற்றி எம்மைப் பற்றி எழும் சில விமர்சனங்களின் உண்மை,போய் பற்றி எழுதவேண்டும் என்று எண்ணிவந்தாலும் இன்னும் சந்தர்ப்பம் வாய்ப்பதாகவில்லை.
அதில் ஒரு சில விஷயங்களை எழுதக் காரணமான அந்தக் கட்டுரைக்கும், உங்கள் பின்னூட்டங்களுக்கும் நன்றிகள்.

இறுதியாக ஒன்று.. மடியிலே கனமும் மனதிலே பயமும் இல்லாததனால் தான் பொய்,புரட்டுகள்,போலிக் குற்றச்சாட்டுக்கள் கண்டால் கோபமும் வருகிறது..

ரௌத்திரம் பழகு..

இன்று பிறந்த பாரதி சொன்னது போல -
"பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப் பருவம் எய்திக் கொடுங் கூற்றுக்கிரையெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?"


December 10, 2009

அண்ணனும் திண்ணையும், இருக்கிறம் கட்டுரையும்


இந்த வாரம் வெளிவந்துள்ள 'இருக்கிறம்' சஞ்சிகையில் அதன் ஆசிரியர் இளையதம்பி தயானந்தா எழுதியுள்ள ஒருபக்க ஆசிரியர் பகுதியிலிருந்து மனதைத் தொட்ட, உண்மையான வரிகள் சில..


ஒருவார காலதாமதத்தில் இருக்கிறமை அச்சிட வேண்டிய தேவை இப்போது இல்லை. அத்தகைய தேவைகள் கடந்த காலங்களில் இருந்தன. இப்போது அது இல்லையென்றே தெரிகிறது. நவம்பர் மாதக் கடைசி வாரத்தில் மீண்டும் ஒரு தலையங்கம் எழுதப்படுகிறது. இது எழுதப்படுகிறபோது 27ம் திகதி முடியவில்லை. உங்கள் கைகளில் 'இருக்கிறம்' அச்சாகி வருகிறபோது டிசம்பர் தொடங்கிவிடும். கடலலை போல எதையும் பொருட்படுத்தாது காலம் ஓடிக்கொண்டே இருக்கிறது என்பதை உணர முடிகிறது. சில முடிவுகள் அல்லது தொடக்கங்கள் மிகக் குறுகிய கால இடைவெளியில்கூட நடந்து விடுகிறது. என்னதான் சொன்னாலும் நவம்பரின் இறுதி வாரத்தில் எதையேனும் செய்துவிடும் போக்கு எல்லோரிடமும் தெரிவதை உள்ளூர உணர முடிகிறது.

எங்கட மொழியில் சொன்னா அண்ணன் இப்ப திண்ணையில இல்லை. சும்மா கிடக்கிற அந்தத் திண்ணையில் இப்ப எல்லோரும் கூடிப்பேசுகினம். கூட்டங்கள் போடுகினம். அயலில மாநாடு வச்சு ஒரு பகுதி தன்ர உலகத் தலைமையை உறுதி செய்ய முயலுது. இன்னொரு பக்கத்தில் எல்லாத் தலையளையும் ஒண்டாக்கி யாரோ மிளகாய் அரைக்கினம். என்னத்தைச் சொன்னாலும் உரியவன் இல்லையெண்டால் எல்லாம் ஒரு முழம் கட்டைதான்.

எங்கட பக்கத்தில் இப்ப எல்லோரும் பசியோட இருக்கிறம். யார் குத்தினாலும் அவசரமா எங்களுக்கு அரிசி வேணும். உரல் கொண்டந்தவன் யார்? உலக்கை கொடுத்தவன் யார்? எவன் வீட்டில் நெல்லுக் குத்தப்படுகுது, என்பதான விசயத்தில் கவனம் செலுத்த முடியவில்லை. காது, கண்ணெல்லாம் பஞ்சாகி அரிசிக்காக நாங்கள் கைகள் நீட்டுகிற காலத்தில இதையெல்லாம் யோசிக்க முடியாது. யாரும் வடை தந்தா சாப்பிட நாங்கள் தயார். உழுந்தாட்டினவன் யார்? ஓட்டை போட்டவன் யார்? எண்டெல்லாம் இனி யோசிக்க முடியாது.

எழுத்தோட எழுத்தா நவம்பர் கடைசியில இன்னொன்றையும் சொல்ல வேணும்.
கோவணத்தையாவது காப்பாத்த நாங்கள் நினைக்கிறபோது, அயல் வீட்டில பட்டு வேட்டி கட்டிக்கொண்டு சால்வை சாத்த வரச்சொல்லி ஒரு மூத்தவா கூப்பிடுகிறார். அவர் கட்டி இருக்கிறது பட்டு வேட்டி இல்லை என்று தெரிந்தவர்களுக்கு தெரியும். ஆனாலும் அவருக்கு சால்வை போர்த்த தயாராகிறவர்கள் பற்றி மனவேதனை இருக்கிறது.

செம்மொழி மாநாடு என்ன பாரதப் போரின் பத்தாம் நாளா?

அண்ணன் தயானந்தா எம் பலபேரின் மதிப்பிற்குரிய அற்புதமான ஒரு ஊடகவியலாளர்;மனிதர்..
அவர் எழுதும் இந்த ஒருபக்கம் எம்மில் பலர் எழுதும் பல நூறு பக்கங்களுக்கு மேலான வலிமையையும்,அடர்த்தியான பொருளும் அடங்கியது. இந்த ஒருபக்கத்துக்காகவே இருக்கிறம் வாசிக்கும் பலரை நான் அறிவேன்.

இதே இதழில் ஒவ்வொரு வாரமும் விளையாட்டு கட்டுரைகளை நான் எழுதிவருகிறேன்..

இவ்வார இதழை நான் நேற்று வாசித்தபோது எனக்கு கடும் கோபத்தையும் எரிச்சலையும் ஏற்படுத்திய விடயம்..
ஊடக மாயம் என்றவொரு கட்டுரை..

இந்தக் கால இலத்திரனியல் ஊடகங்கள் பற்றி எல்லாருமே வரிந்து கட்டிக்கொண்டு விமர்சனங்கள் தொடுத்துவரும் நிலையில் (என்ன செய்வது.. ஒரு சிலர் விடும் தவறுகளால் ஒட்டுமொத்த ஊடகவியலாளரும் விமர்சிக்கப்படுவது எமது சாபமாகிப் போனது) எஸ்.ஜனூஸ் என்பவர் கண்மூடித் தனமாக இந்தக் கால ஊடகவியலாளர் வெட்டுக் கொத்துக்களே பிழைப்பாகக் கொண்டுள்ளது போலவும், வாழ வருமானம் இல்லாமல் கையேந்தி பிச்சை எடுக்கும் நிலையில் அல்லலுறுவது போலவும் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார்.

இதில் அது தொடரும் எனப் போட்டிருப்பது மற்றுமொரு வேடிக்கை..

யாரடா இந்த ஜனூஸ்.. இப்படியொரு ஒலிபரப்பாளரை இதுவரை கேள்விப்பட்டதில்லையே என விசாரித்துப் பார்த்தால் ஒரு சில மாதங்கள் இன்னொரு தனியார் வானொலியில் பணி செய்துகொண்டிருந்து பின் ஒழுங்கான உச்சரிப்பு இல்லாததாலும் சில ஒழுக்காற்றுப் பிரச்சினைகளாலும் விலக்கப்பட்டவராம் எனத் தெரியவந்தது.
இப்படிப்பட்ட ஒருவர் பல ஆண்டுகளாக நிலைத்துள்ள ஊடகங்களையும் எம்மையும் தரக்குறைவாகப் பேசுவதா?
இப்படிப்பட்ட ஒருவர் தான் இவ்வளவு தூரம் விமர்சிக்கிறாராம்..

அவரின் அக்கட்டுரையில் ஒரு சில வசனங்கள்...


வளரும் பயிரை முளையிலே கிள்ளி எறிகின்ற உத்தமர்கள் நிறைந்த இடம்தான் இந்த ஊடகங்கள்.


எனது பார்வையில், இந்த வரலாற்றுத் தவறை அதிகம் புரிந்து கொண்டிருப்பது இலத்திரனியல் ஊடகங்களே. சம்பாத்தியம் அதிகம் இல்லாவிட்டாலும், அற்ப சொற்ப சம்பாத்தியங்களுக்காக வேண்டாத வேலையைச் செய்துகொண்டிருக்கிறார்கள். காலம் காலமாக இன்றைய ஒளி, ஒலி ஊடகங்களில் அரங்கேறும் அசிங்கங்களை வார்த்தைகளால் வர்ணிக்கமுடியாது. இப்போதெல்லாம் மழை பெய்யாமைக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். அத்தனை அசிங்கங்கள். அதிலும் குறிப்பாக அறிவிப்பாளர்கள் புரியும் மாயலீலைகள், தந்திரங்கள் கொஞ்சமா? நஞ்சமா?

வாழ்வின் ஒவ்வொரு வினாடியையும் வீணாக்கும் இந்தத் தொழில் தேவைதானா? இந்தக் கேள்வியை முக்கியத்துவமாகப் பார்க்கவேண்டும்.

இலங்கையிலே மிகவும் குறைவாக சம்பளம் பெறுவோரின் பட்டியலில் இவர்களின் பெயர்தான் முதன்மை வகிக்கும். அதிலும் எவ்.எம் வானொலிகளில் பணியாற்றும் இன்றைய இளைஞர்கள் வாழ்க்கையை மென்று விழுங்கி ஏப்பம் விட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஜீவிதத்தின் பிடிமானம் குறைந்து எதிர்காலத்தைப் பற்றிய கேள்விகளோடு அலைகிறார்கள். 'கொழும்பு காசு இல்லாவிட்டால் எலும்பு' என்ற நிலை வரும் போது ஊடகத்தில் மகனுக்கோ, மகளுக்கோ ஊரிலிருந்து A.T.M பணம் அனுப்பும் அப்பாவிப் பெற்றோர்கள் எத்தனையோ பேர். 'இதைவிட இவன் என்னோடையே இருந்து ஆடு, மாடாவது மேய்ச்சிருக்கலாம்' என்று ஒரு அப்பா சலிக்கிற நேரமா பார்த்து 'ஹலோ யாரு பேசுறீங்க, உங்களுக்கு என்ன பாட்டு வேண்டும்' என்று ஏதோ ஒரு அலைவரிசையில் பேசிக்கொண்டிருப்பான் மகன். அந்த வரட்டு சந்தோஷத்தில் தன்னை சமாதானப்படுத்திக் கொள்ளும் தாய்மார்களும், தந்தைமார்களும் எத்தனை பேர்?


திறமையை வெளிப்படுத்த நீங்கள் தேர்ந்தெடுக்கும் களங்களில் வாழ்க்கை வளம் பெறுவதற்கான வாய்ப்புகளும் இருக்க வேண்டும். இல்லையென்றால் சம்பந்தப்பட்டவர்கள் ஏற்படுத்தித் தரவேண்டும். அதைவிடுத்து, அனுபவிப்பவர்கள் அனுபவிக்க, வாழ்க்கையில் போலி அரிதாரம் பூசி நடிப்பவர்கள் அறிவிப்பாளர்களா?

ஒரு ஒலிபரப்பாளனாக நான் கௌரவமாகவும், என் சக ஒலிபரப்பாளர்கள் மரியாதையாகவும் நடத்தப்படுவதையே நான் விரும்புகிறேன்.

இவர் தான் பட்ட கசப்பான அனுபவங்களை பொதுமைப்படுத்துவது சரியல்ல. தனது நடத்தையால் தானே தேடிக் கொண்டவை அவை.. இது போன்ற ஆக்கங்களை வெளியிடுவது வளர்ந்துவரும் இருக்கிறம் சஞ்சிகைக்கும் அழகல்ல.

அதுவும் தயானந்தா அவர்கள் ஆசிரியராக இருக்கும் ஒரு சஞ்சிகையிலா?
(அண்ணன் வெளிநாட்டில் இருப்பதால் தம்பிமார் எதை வேண்டுமானாலும் பிரசுரித்து அண்ணனுக்கு களங்கம் தேடித் தரப் போகிறார்களா?)
யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் எழுதலாமா?
இருக்கிறம் காரர் எதை பிரசுரிப்பது எதை தணிக்கை செய்வது என சிந்திக்காமலா அச்சிடுகிறார்கள்?

உடனடியாகவே இருக்கிறமின் இலங்கையில் உள்ள துணை ஆசிரியர் சஞ்சீத்துக்கு ஒரு கண்டனக் கடிதம் அனுப்பியுள்ளேன்..
ஒரு பொறுப்பான ஊடகத்தின் முதன்மைப் பதவியில் இருக்கும் என்னால் நான் இருக்கும் துறையையே விமர்சித்து இப்படிப்பட்ட குப்பைத் தனமான ஆக்கங்கள் வரும் சஞ்சிகைக்கு தொடர்ந்து எழுத முடியாதென்று..
இருக்கிறம் சஞ்சிகைக்கு நான் தொடர்ச்சியாக எழுதிவர ஒரே காரணம் தயானந்தா அண்ணா மட்டுமே.. (தரப்படும் சன்மானம் பற்றி பேசவேண்டாமே.. ;))

விமர்சனங்கள் என்றால் வேறு.. இது சேறு பூசும் செயல் அல்லவா?

ஏற்கெனவே அச்சுவாலை சந்திப்பினால் பதிவர்கள் பலரோடு முரண்பட்டுள்ள இருக்கிறம், இவ்வாறு ஆதாரமில்லாத கட்டுரைகளினால் வானொலிகளையும் பகைத்துக்கொள்ளப் போகிறதா?

நண்பர் ஹிஷாமின் நியாயமான கோபப் பதிவு இது..

November 04, 2009

இருக்கிறம்-அச்சுவலை சந்திப்பு - எனது பார்வை..








நேற்றைய இருக்கிறமின் அச்சுவலை சந்திப்பு பற்றியே இன்று ஒரே பரபரப்பு..
அனேகமாக அனைவரது பதிவுகளையும் வாசித்துள்ளேன்.. பலபேருக்கு ஏமாற்றம். பல பேருக்கு கோபம்.

தனிப்பட்ட முறையில் என்னைப் பொறுத்தவரை எந்தவொரு ஏமாற்றமோ, கோபமோ இல்லை. காரணம் இது இப்படி தான் நடைபெறும் என்பது நான் ஏற்கெனவே எதிர்பார்த்ததும் அறிந்ததும்..

ஆரம்பத்தில் சஞ்சித்(இருக்கிறம் இணை ஆசிரியர்) இப்படி ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்வதாக சொல்லி பதிவர்களையும் ஊடகத்தினரையும் இணைப்பதாக இந்த சந்திப்பு அமையும் என்றும் ஒரு சந்திப்பு நிகழ்வாக இது அமையுமே தவிர வாத-விவாதங்களுக்கு இடம் அமையாதென சொல்லி இருந்தனர்.

இதனால் தான் நானோ இல்லாவிடில் வந்தியத்தேவனோ இது பற்றி ஆரம்பத்தில் பதிவுகள் இட்டபோது இதை வலைப்பதிவர் சந்திப்பு என்று எந்தவொரு இடத்திலும் குறிப்பிடவில்லை.

தாக சாந்தியும் உண்டு என அவர்கள் சொன்னபோது, நான் அதுபற்றி எந்த மறுப்பும் சொல்லவிரும்பவில்லை.அது அவர்களின் ஏற்பாடு.. விரும்பியோர் குடிக்கலாம்..குளிக்கலாம்.. இல்லை என் போல மறுக்கலாம்..

இது பதிவர்களுக்கான சந்திப்பு இல்லை என்பதாலேயே நான் என் சார்பான கருத்தாக எல்லாருக்கும் அழைப்பு மின்னஞ்சலாகவோ, தனிப்பட்ட அழைப்பாகவோ அனுப்பப்படவேண்டும் என்று வலியுறுத்தி இருந்தேன்.
நிகழ்ச்சி நிரல் தயாரிப்பு பற்றி பேச்சு வந்தபோதும் ஒரு கெட் டு கெதர் போலவே இது இருக்கப் போவதனால் சில பேச்சுகள் இருக்கும், வெளிநாட்டிலிருந்து சிலர் பேசுவர்; வேறு விஷயங்கள் இருக்காது என்று இருக்கிறம் தரப்பில் சொல்லப்பட்டது.

நான் என்னுடைய நெருக்கமான சில நட்புப் பதிவர்களைக் கூட வலியுறுத்தி அழைக்கவில்லை என்பதிலிருந்து கடந்த முறை பதிவர் சந்திப்புக்கும் நேற்றைய அச்சுவலை சந்திப்புக்கும் இடையிலான வித்தியாசத்தை உணர்ந்திருப்பீர்கள்.


இருக்கிறம் தங்கள் தெளிவான நோக்கத்தை வெளிப்படுத்தியதாகவே நான் உணர்ந்தேன். அவர்களுக்கு பதிவர்கள்,எழுத்தாளர்களின் பங்களிப்பு தேவைப்படுகிறது. இந்த சந்திப்பின் நோக்கம் அதுவே. அதுபோலவே இலத்திரனியல் ஊடகங்களின் ஆதரவும் அவசியம். எம்மிடையே ஏற்படுத்தப்படும் இணைப்பின் மூலம் எல்லாவற்றையும் சாதிக்க நினைத்தார்கள்.
இதில் தவறேதும் இருந்ததாக நான் எண்ணவில்லை.

பல பதிவர்கள் முதல் பதிவர் சந்திப்பை போலவே இதனை எண்ணி நிறைய எதிர்பார்த்ததே ஏமாற்றத்துக்கான காரணம் என நான் எண்ணுகிறேன்.

Cowboy மது நேரடி ஒளிபரப்புக்கான ஆயத்தம் செய்கிறார் என்றவுடனேயே நான் நண்பர் வந்தியிடம் கேட்டது "ஏன் இதற்கு இந்த ஏற்பாடு எல்லாம்??"

எந்தவொரு நிகழ்வையும் நல்லபடி 'பயன்'படுத்தவேண்டும் என்ற கருதுகோள் என்னிடம் எப்போதுமே உண்டு என்பதால் எந்தவொரு ஏமாற்றமும் எனக்கு இல்லை.
அது அது அப்படி எப்படி வருகிறதோ அதன் போக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும் என நினைப்பவன் நான்..

நண்பர்களை சந்தித்தேன்.. பல புதியவர்களை முதல் தடவை சந்தித்தேன்..
பல நண்பர்களோடு நீண்ட நாட்களுக்குப் பின் உரையாடச்க்கொடிய வாய்ப்பும் கிட்டியது.

என் ஒலிபரப்புத் துறை குருக்களான திரு.எழில்வேந்தன்,திரு.நடராஜசிவம் ஆகியோரை ஒரே இடத்தில் சந்திக்கும் வாய்ப்பு, தயானந்தா அண்ணா, என்னுடன் பணியாற்றிய குருபரன் அண்ணா ஆகியோரது குரல்வழியான சந்திப்பு என்று மகிழ்ச்சிக்குரிய பல நிகழ்வுகள்..

வித்தியாதரன் அவர்களின் அனுபவப் பகிர்வுகள் தந்த பயன்..
(எங்கள் செய்தி ஆசிரியர்கள் அனைவரையும் அங்கே வர செய்திருக்கவேண்டும் என்று பின்னர் தான் நினைத்தேன்)

அவரது துணிச்சலுக்காகவும் சில விஷயத் தெளிவுக்காகவும் நான் மிக மரியாதை வைத்துள்ள வித்தியாதரன் அவர்கள் குறிப்பிட்ட பல விஷயங்கள் உண்மையாக இருந்தாலும், இலங்கையில் செய்தி தாள்களில் புதுமை புகுத்துகிறோம் என்று, இந்திய சஞ்சிகைகளின் பாணியில்
"அராலியில் நேற்று டுமீல்", "கொழும்பில் பகீர்" என்று தலைப்பு செய்திகளை வேடிக்கை ஆக்கியவர் என்று எனக்கு அவர் மீது தனிப்பட்ட விமர்சனமும் உள்ளது.

உரையாற்ற பதிவர்கள் எவரையும் அழைக்காதது (வைத்தியரை தவிர.. நான் அழைக்கப்பட்டது ஒலிபரப்பாலனாக.. மருதமூரான் யாழ்தேவி திரட்டி சார்பாக) ஒரு பெரும் குறையாக எனக்கு இப்போது தொடருகிறது. அப்போதே தோன்றி இருந்தால் சன்ஜீத்தை அழைத்து சொல்லி இருப்பேன்.

வைத்தியர் முருகானந்தத்தின் உரையை நான் தாமதமாக சென்றதால் தவற விட்டு விட்டேன்.
மற்றும்படி சில போரடித்த உரைகள், சில இருக்கிறம் பற்றிய கருத்துரைகள் தவிர எல்லா உரைகளையும் அமைதியாக ஓரிடத்தில் இருந்து அவதானிக்க கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

பின்னால் இருந்த ஜல்லிப்புக்கள்,ஜில்லிப்புக்களில் கலந்து கொள்ளாமல் இருந்துவிட்டேன்.உரைகளின் பின்னர் கல கல உரையாடல்களில் இணைந்து கொண்டபோது பல வேடிக்கைகள்..பல நகைச்சுவைகள்.. (இவை போதுமெனக்கு???)

உறுத்தலாக தோன்றும் சில விஷயங்களை சொல்லாவிட்டால் இன்றிரவு சாப்பிட்ட இடியப்பம் சீரணிக்காது..

கல்யாண வீடுகள் தொடக்கம் கல்லூரி ஒன்றுகூடல் வரை வந்துள்ள தண்ணியடிக் கலாசார ஒன்றுகூடல்களை ஒன்றுமே சொல்லாத சமுதாய சீர்திருத்தவாதிகள் சிலர் அச்சுவலை சந்திப்பைக் காரணம் காட்டி சாடுவது ஏன்?

குடித்து ருசித்த சில நல்லவர்கள் இருக்கிறம் குழுவுக்கு நன்றிப் பதிவுகள் போடாதது ஏன்? (முதலிலேயே சாட்டையடிகள் விழுந்ததாலா?)

இவ்வளவுக்கும் நான் குடிப்பவனல்லன்.. அத்துடன் குடிப்பவர்களை வெறுப்பவனுமல்லன்.

நான் இருக்கிறம் இதழுக்கு ஆக்கங்கள் வரைந்தாலும் இடித்துரைக்க என்றும் தயங்காதவன்.. எனினும் ஒருவராவது கருத்துரை பகிரும் நேரத்தில் இது பற்றி அங்கு எடுத்துரைக்கவோ,கேள்வி கேட்கவோ இல்லை.. அது ஏன்?
நாகரிக நோக்கமோ?

ஆனாலும் இறுதியாக என்னுடன் பயணித்த சில நண்பர்களுக்கும் முன்பு என்னுடன் பேசிக் கொண்டிருந்த சிலருக்கும் முன்பே சொன்னேன்..
கடுமையான விமர்சனப் பதிவுகள் வரும் பாருங்கள் என்று..

தாக சாந்தி பற்றி பதிவுகளில் போட்டபோது பின்னூட்டங்களில் அதற்காகவே வருவோம் என்று சொன்ன பலர் ஞாபகம் வருகிறார்கள்.. அவர்களும் சேர்ந்து இருக்கிறமைக் கும்முவது எனக்கு பதிவுலக நியாயமாகப் படவில்லை.

மு.மயூரன், Cowboyமது, கோபி, யோகா, அருண், கீர்த்தி - சிந்தனை சிறகினிலே போன்றோரின் பதிவுகளின் நியாயமான சில ஆதங்கங்களை ஏற்றுக் கொள்கிறேன்.

ஆனால் யாரும் இதை இருக்கிறம் ஏற்பாடு செய்த நிகழ்வு என்ற பின்னணி தாற்பரியத்தை உள்வாங்காததன் காரணம் 'சந்திப்பு' என்ற வார்த்தையா எனத் தெரியவில்லை..

எனினும் அனைவர் சார்பாகவும் இருக்கிறம் குழுவுக்கும், நிறுவனத்துக்கும் நன்றிகள்.. ஏற்பாட்டுக்கு..

பரபரப்பிலே, பதிவுகளின் சூட்டிலேயும் இருக்கிறமுக்கு விளம்பரம் வந்துவிட்டது.. அது பதிவுலகின் ஒரு கைங்கர்யமாக அமையட்டும்..

ஊர் இரண்டு.. கூத்தாடிகள் சிரிக்கிறார்கள்..

மழை, சேறு, சகதி, ஈரம், தண்ணி, போதை, இழுபறி, தொழினுட்பத் தடங்கல், எதிர்பார்த்த ஆரோக்கிய விவாதங்கள்,கருத்துப் பரிமாறல்கள் இல்லாமை போன்ற பல குறைகள் இருந்தாலும் (இவற்றை எல்லாம் விலாவாரியாக பல பதிவர்கள் சொல்லி விட்டார்கள்) ஒரு முக்கிய தேவைப்பாட்டை எல்லா இலங்கைப் பதிவர்களும் உணர்ந்துள்ளார்கள் என்பது தெளிவு.

இரண்டாவது பதிவர் சந்திப்பே அது... யார் எங்கே நடத்தப் போகிறார்கள்? போகிறோம் என்பது கேள்வி..

யார் எங்கே எப்போது ஏற்பாடு செய்தாலும் ஒரு விஷயம்..

அனைவரும் எம்மைக் கூர்ந்து நோக்குகிறார்கள்..

அடுத்த பதிவர் சந்திப்பை (கவனியுங்கள் பதிவர் சந்திப்பு) ஏற்பாடு செய்வோர் மிக நுணுக்கமாக, அனைத்து விஷயங்களையும் கவனித்து,உள்வாங்கி, விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளும் மனத் திடத்தோடு ஏற்பாடு செய்ய வேண்டும்.



October 23, 2009

இலங்கையில் ஊடக சுதந்திரம் ..


உலகில் மிக பயங்கரமான. அச்சுறுத்தல் நிறைந்த தொழில் எது என்று கேட்டால் எந்தவித சந்தேகமும் இல்லாமல் சொல்லக்கூடியது ஊடகவியல் தான்.

இலத்திரன் ஊடகங்கள் ,பத்திரிகை என்ற இரண்டுமே இந்தக் காலகட்டத்தில் அநேகமான நாடுகளில் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் எல்லோரும் அறிந்ததே.

வருடாந்தம் எத்தனை ஊடகவியாளர்கள் கைது செய்யப்படுகிறார்கள்..
எத்தனை பேர் தண்டனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்..
எத்தனைபேர் சித்திரவதை,மனித உரிமை மீறல்களுக்கு உட்பட்டுள்ளார்கள்..
எத்தனை அப்பாவி ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளார்கள்..

சர்வதேசரீதியாக என்னதான் மனித உரிமை,மனிதாபிமானம் என்னும் குரல்கள் ஓங்கி ஒலித்தாலும் பேனாக்கள்,கமெராக்கள்,ஒலிவாங்கிகளின் கழுத்துகள் நெரிக்கப்பட்டு,திருகப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.

தகவல்களை வெளியிடும் அறியும் உரிமைகள் பல்வேறு காரணங்கள் சொல்லி ஒடுக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.

இலங்கையில் மட்டும் அண்மைக்காலத்தில் கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் எத்தனை பேர்? மனதில் பல நல்லவர்கள்,தூய மனம் படைத்த தியாகிகள் வந்து போகின்றனர்..

பல பேர் அங்கவீனர்களாயுள்ளனர்..
எழுதும் கைகள் முறித்துப் போடப்பட்டுள்ளன..
பல பேர் மிரட்டலிலேயே அடங்கி தம் எழுத்துக்கள்,கருத்துக்களை முடமாக்கியுள்ளனர்.
இன்னும் பலர் புலம்பெயர்ந்து விட்டார்கள்..

இப்படியான ஊடகங்களின் மீது,ஊடகவியலாளரின் மீது மேற்கொள்ளப்படும் அடக்குமுறைகள்,உரிமை மீறல்கள் தொடர்பாக தொடர்ந்து குரல் எழுப்பிவரும் ஒரு அமைப்பு தான் எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு.Reporters Without Borders (Reporters Sans Frontiers)

இந்த RSF எனப்படும் அமைப்பு எனக்கும் மறக்கமுடியாத அமைப்பு ஒன்று.கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நான் கைது செய்யப்பட்ட வேளையில் எனக்காகக் குரல் எழுப்பியதோடு, பல்வேறு அறிக்கைகளையும் வெளியிட்டிருந்தது.
நான் விடுவிக்கப்பட்ட பின்னரும் பல உதவிகளை செய்ய முன்வந்திருந்தது.பிரான்ஸ் வருமாறும் அழைத்திருந்தது. எனினும் அவற்றை நன்றிகளோடு நான் மறுத்திருந்தேன்.

பிரான்சில் இருந்து இயங்கி வரும் இந்த அமைப்பு ஒவ்வொரு வருடமும் உலகில் நிகழ்ந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உலகம் முழுவதிலும் உள்ள ஊடகவியலாளர்களிடமும் ஊடகத்துறைப் பிரதிநிதிகளிடமும் எடுக்கும் தரவுகளின் அடிப்படையில் ஊடக சுதந்திரம் பற்றிய அறிக்கை ஒன்றை வெளியிட்டு வருகிறது.

இதில் புள்ளிகள்,புள்ளி விபரங்களின் அடிப்படையில் ஊடக சுதந்திரம் மதிக்கப்படும் நாடுகளும், ஊடக சுதந்திரம் நசுக்கப்படும் நாடுகளும் பட்டியலிடப்படுகின்றன.

இந்த ஆண்டில் வெளியிடப்பட்ட பட்டியலில் ஊடக சுதந்திரம் மதிக்கப்படும் நாடுகளின் பட்டியலில் ஒரே புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ள ஐந்து நாடுகளுமே ஐரோப்பிய நாடுகள்.. இவற்றுள் நான்கு பால்கன் நாடுகள்.

டென்மார்க்,பின்லாந்து,அயர்லாந்து, நோர்வே, ஸ்வீடன்.
கடந்த ஆண்டில் முதலாவது இடத்தில் இருந்த ஐஸ்லாந்து இம்முறை ஒன்பதாம் இடத்தில்.

இம்முறை எடுக்கப்பட்ட கணிப்புக்கள் அனைத்தும் 2008ஆம் ஆண்டு செப்டம்பர் முதலாம் திகதியிலிருந்து இவ்வாண்டு ஓகஸ்ட் மாதம் 31ஆம் திகதிவரை பெறப்பட்ட தரவுகளை அடிப்படையாகக் கொண்டவை.

மிக மோசமாக ஊடகங்கள்,ஊடகவியலாளர்கள் மிதிக்கப்படும்,நசுக்கப்படும் நாடாக ஆபிரிக்க நாடான எரித்ரியா(175ஆம் இடம் ) காணப்படுகிறது.
இதற்கு அடுத்தபடியாக வட கொரியா, துருக்மெனிஸ்தான் ஆகிய நாடுகள் உள்ளன.

அண்மையில் பதவிக்கு மீண்டும் வந்த ஈரான் ஜனாதிபதியான மகுமூது அகமதிநிஜாடின் பிடியில் ஈரான் ஊடகவியாலளர்கள் அனுபவிக்கும் கொடுமைகள் ஈரானுக்கு அடுத்த இடத்தை (172)வழங்கியிருக்கின்றன.

தொடர்ந்து மியான்மார், கியூபா, லாவோஸ்,சீனா, யேமென் என்று செல்லும் இந்த வரிசையில் இலங்கைக்கு 162ஆம் இடம் கிடைத்துள்ளது.

கடந்த ஆண்டுகளை விட இலங்கை முன்னேற்றம் கண்டுள்ளமை குறிப்பிடத் தக்கது. கடந்தமுறை 165ஆம் இடத்திலிருந்தது.

எனினும் தற்போதைய கணிப்பு எடுக்கப்பட்ட காலப் பகுதியில் தான் லசந்த விக்ரமதுங்க கொலை, திஸ்ஸநாயகத்துக்கான தண்டனை, போத்தல ஜயந்த மீதான தாக்குதல், மற்றும் பல ஊடகவியலாளரின் கைதுகள் பல்வேறு செய்தி இணையத் தளங்கள் மூடப்பட்டதும், இடம்பெற்றுள்ளன.பல முக்கிய ஊடகவியலாளர்கள் நாட்டை விட்டு பிறதேசம் போயிருக்கிறார்கள்.

அப்படியிருந்தும் மூன்று ஸ்தானங்கள் உயர்ந்துள்ளது என்றால் மற்றைய நாடுகளில் இடம்பெறும் ஊடகங்களின் மீதான அடக்குமுறைகள் பற்றி நினைக்கவே பயமாக இருக்கிறது.

இன்னும் சில அவதானிப்புக்கள்..

ஒபாமா(அதான் நோபெல் பரிசை இம்முறை பெற்றாரே அவரே தான்) ஜனாதிபதியான பின்னர் நீண்ட காலத்தின் பின் அமேரிக்கா முன்னேற்றம் கண்டு இருபதாம் இடத்துக்குள் வந்துள்ளது. ஐக்கிய ராஜ்ஜியமும் அதே இடத்தில்..
அதுசரி இரண்டு நாடுகளும் கொள்கை பொதுவாகவே ஒன்று தானே..

இந்தியா 105ஆம் இடத்திலும், பாகிஸ்தான் 159ஆம் இடத்திலும், ஈராக் 145ஆம் இடத்திலும் இருக்கின்றன.

என்ன தான் பேனாக்கள் வாள்முனையை விடக் கூர்மையானவை என்று கூறப்பட்டாலும், துப்பாக்கிகள் சூடாகவே பேனாக்களையும்,ஒலிவாங்கிகளையும், கமெராக்களையும் மட்டுமல்ல இணையங்களையும் குறிவைத்தவண்ணமே உள்ளன.

RSF போன்றவற்றின் குரல்கள் கொஞ்சமாவது உலகுக்கு இவற்றை வெளிப்படுத்தி வருகின்றன என்பது ஒரே ஆறுதல்..

இந்தப்பட்டியலை முழுமையாகப் பார்ப்பதற்கு



May 27, 2009

வெள்ளிக்கிழமை விமானநிலையத்தில் நான் - ஒரு உண்மை சம்பவம்/அனுபவம்

சனிக்கிழமை பான் கி மூன் ஐயாவை வரவேற்ற பிறகு இன்று தான் மீண்டும் என் வலைத் தளத்துக்கு வரக்கூடிய வாய்ப்புக் கிடைத்துள்ளது..

அவரை வரவேற்ற ராசியோ என்னவோ வரவே முடியாத அளவு பிசி.

நண்பன் ஒருவனின் திருமணத்துக்காக கண்டி போயிருந்தேன்.. கண்டியில் கண்டவை பற்றி தனியாக ஒரு பதிவு போடலாம்.. அது பிறகு..

அதுக்கு முதல் இதை சொல்லாவிட்டால் மண்டை வெடித்துவிடும்.

சனிக்கிழமை இரவு என்னுடைய அப்பா அம்மா இருவரும் இந்தியாவிலிருந்து வந்ததனால் விமான நிலையம் சென்று அவர்களை அழைத்து வரவேண்டி இருந்தது.

நிகழ்ச்சியிலிருந்து பாதியில் எஸ்கேப் ஆகி, வீடு சென்று மனைவி,மகன்,தம்பியையும் கூட்டிக்கொண்டு விமான நிலையம் நோக்கி விரைந்தேன்.. இரவு நேரம் பெரிதாக போக்குவரத்து நெரிசல் இல்லையென்றால் என் வழமையான வேகத்தில் செல்வதற்கு 45 நிமிடங்கள் எடுக்கும்.

கிட்டத்தட்ட அதேயளவு நேரத்தில் விமான நிலையத்தின் நுழைவாயில் பாதுகாப்பு சோதனை சாவடியில் (முன்பெல்லாம் சோதனையிட்டே சாவடிக்கிற இடம் இது..) நுழைகிற நேரம் பார்த்தால் மிக நீண்ட வாகன வரிசைகள்..

நான்கைந்து வரிசைகள்.. நூற்றுக்கணக்கான வாகனங்கள்.. ஆமை வேகத்திலேயே ஒவ்வொன்றும் ஊர்கின்றன..

இதென்னடா இது.. இப்போ தானே யுத்தம் நிறைவடைந்தது என்று அறிவித்தார்கள்.. பிறகேன்? கேள்வியை அப்படியே சிங்கள மொழியில் என் வாகனத்தின் அருகே வந்த போலீஸார் ஒருவரிடம் கேட்டேன்..

அவர் மெலிதாக சிரித்துக் கொண்டே " இது ஒரு விசேட ஏற்பாடு.. பயம் கொள்ளத் தேவேயில்லை" என்று விட்டு விரைந்து போய் விட்டார்.

நாற்பது நிமிட மெதுவான ஊர்தலுக்குப் பிறகு பிரதான நுழைவாயில் அருகேயுள்ள சோதனை சாவடிக்கு போனோம்.

அங்கிருந்த காவலர் அடையாள அட்டை கேட்டார்..

எம்மைக் காக்கும் மிக முக்கிய ஆவணமான ஊடகவியலாளர் அடையாள அட்டையை (அரசினால் வழங்கப்படுவது) எடுத்து நீட்டினேன்.

பொதுவாக எந்தவொரு சோதனை சாவடியில் இதைக் காட்டியவுடன் வேறெந்தக் கேள்வியும் இல்லாமல் போக அனுமதிப்பது வழக்கம்.

ஆனால் அன்றோ கொஞ்சம் முகம் மாறிய அந்தக் காவலர் என்னுடைய வானொலி நிறுவனம் எது என்று கேட்டறிந்த பிறகு சொன்னார் "நீங்கள் உள்ளே செல்ல அனுமதியில்லை" என்று பணிவாக சிங்களத்தில் சொன்னார்.

ஏன் என்று கேட்டதற்கு, "ஊடகவியலாளர்களை இன்று உள்ளே அனுமதிக்க வேண்டாம் என்று உத்தரவு" என்று பதில் வந்தது.

சிரித்துக் கொண்டே "வழமையாக எம் போன்ற ஊடகவியலாளர்களைத் தானே இலகுவாக உள்ளே அனுமதிப்பீர்கள்.. இன்று என்ன" என்று கேட்டேன்.

எதுவும் பதில் சொல்லாத அவர் நான் உள்ளே செல்லும் காரணம் கேட்டார்.. என்னுடைய பெற்றோர் வரும் விஷயம் சொன்னேன். நான் ஒரு வாகன ஒட்ட்டியாகவேவந்திருக்கும் விஷயத்தை தெளிவாக சிங்களத்தில் புரியச் செய்த பிறகு,

"நீங்கள் வேறு அலுவலாக வரவில்லையே" என்று கேட்டார்..
"அப்படி வருவதாக இருந்தால் மனைவி,பிள்ளையுடன் வந்திருக்க மாட்டேனே.. அதுவும் கட்டைக் காற்சட்டையுடன் (jumpers) வந்திருப்பேனா?" என்று சிரித்துக் கொண்டே நான் கேட்க,

பலமாக சிரித்தபடி ஏன் தேசிய அடையாள அட்டை எண், வாகன இலக்கம் போன்றவற்றைக் குறித்த பின் செல்ல அனுமதித்தார்..

கொஞ்சம் யோசித்துப் பார்த்தபின் எனக்கு சனிக்கிழமை விமான நிலைய பாதுகாப்புக் கேடுபிடிக்கான காரணம் விளங்கியது..

நம்ம பான் கி மூன் ஐயா புறப்படும் விஷயம் தான் எனத் தெரிந்தாலும், இவ்வளவு கெடுபிடி குறிப்பாக ஊடகவியலாளர் மீது என்று சொல்லி அடுத்தடுத்த நாட்களில் தான் தெரிந்தது.

ஐநாவின் செயலாளர் நாயகத்தை சந்திப்பதற்கு பாதுகாப்பு அமைச்சு தடை – குற்றச்சாட்டு அவரைச் சந்திப்பதற்கான ஏற்பாடு தொடர்கிறது – சுரேஸ் பிறேமச்சந்திரன்
- இணையத்திலும், பத்திரிகையிலும் வந்த செய்தி


அப்போ இது தானா? வேறு பல விஷயங்கள் சொல்லாமலே தெரிந்திருக்கும் தானே..


October 07, 2008

ஊடகத்துவம் - கவியரங்கக் கவிதை


27-11-2004 அன்று இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் விருது வழங்கும் விழாவில் கவியரங்கம் ஒன்று நடைபெற்றது. அதில் நான் வாசித்த கவிதை இது.  
2004ஆம் ஆண்டின் அந்தக் கால கட்டத்தின் முக்கிய நிகழ்வுகள் பலவற்றை மறைமுகமாகவும்,நேரடியாகவும் குறிப்பிட்டுள்ளேன்.  
அந்தக் காலப் பகுதி,இலங்கையில் இடம் பெற்ற நிகழ்வுகள்,மாற்றங்கள் பற்றி அறிந்தோருக்கு நன்றாகவே இவை புரியும்...

ஊடகத்துவம்
 
உயிர்களை முதலீட்டு உணர்வுகளால் உரமிட்டு 
ஊதியத்தை ஊதி உதறி 
உங்களுக்காக உழைக்குஊடகவியலாளருக்கான நாள் இன்று! 
பல உண்மைகளை உணர்வுபட சொன்ன
நேற்றைக்குப் பின் இன்று!  

குருதி வாசம்,சதை நாற்றம்,நரம்புகளின் உறைவு தாண்டி 
வெளிவரும் நாற்புற செய்திகளும் உருவெடுக்கும் 
உழைப்பாளரின் உணர்வுகளுக்கு 
அங்கீகாரம் அளிக்கும் நாள் இன்று! 
ஊடகத் தத்துவத்தை ஊடகமாக்கி 
உண்மைகளை வெளிச்சம் போடும் அரங்கமிதில் 
பாவுக்கு நாயகமாக எங்கள் நாவுக்கு நடுவராக
நாலுமறிந்த கவிவேந்தராக
நல்லறிஞர் சோ.பாவை வணங்கி மகிழ்கிறேன்!  

செல்லப்பர் சொன்னவற்றை 
சொல்லப் போகிறோம் நாமிங்கு! 
அவர் சித்தர்- கொஞ்சம் பித்தர் 
நாங்கள் கொஞ்சம் சித்தர் ஆனாலும் பித்தர்
பலர் பலவிதத்தில் எத்தர்!  

எல்லாம் மறந்து மெய் சொல்லும் இளைய அப்துல்லா 
பொல்லாப்பொன்றில்லை என்றே 
பொருள் சொல்லும் அண்ணன் பிரசாந்தன் 
நாமறியோம் என்றே நாலுவித மெய் சொல்லும் 
அண்ணன் சிவா 
எப்பவோ முடிந்த காரியம் என்றே 
யாரும் எண்ண முடியாத எழுந்தே ஏற்ற 
தனித்தன்மை வாய்ந்த தயா அண்ணா
என் சக கவிஞர்கள் - 
உங்களையும் கவிபாடும் இவன் துதிகள்!  

வானலை அரசின் மைந்தனின் 
வணக்கங்கள் அனைவருக்கும்! 

பாடல் போட்டு பலகதை பேசி 
செய்திகள் கூறும் நான் இன்று 
பாப்பாட வந்தேன் இங்கே!  

ஊடகத் தத்துவம் சொல்ல வந்தேன் 
நான் 
ஊடகத் தத்துவத்தை மட்டுமன்றி 
ஊடகத்து அத்துவத்தையும் சொல்வேன் 
ஊடகத்து அத்துவம் 
ஊடகத்தில் ஒன்றுபட்ட இரண்டறாத் தன்மை 
ஏனெனில் என் தலைப் பொருள் முழுதும் உண்மை.  

இன்று நான் இவ்விரங்கிலே சொல்பவை 
நான் சொல்பவையே! 
நாம் சார்ந்த நான் சொல்பவையே!  
நாலாக மடித்து- எட்டாக வளைந்து 
நாணிக்கோணி சொன்னதற்கெல்லாம் யெஸ் போட்டு
சோற்றுக்குப் படிபெற்று
சொன்னபடி ஆடி பின்
சோக்கிற்கு வந்து பொருளிற்கு
சும்மா கவி சொல்ல,கதை சொல்ல 
எனக்கு உடன்பாடில்லை!  
காரணம் என் தலைப்பொருள் முழுவதும் உண்மை!  

பல விஷயம் சொல்வேன் இன்று 
நீவிர் அறிந்தது கொஞ்சம்; 
அறியாமல் மறந்தது கொஞ்சம் 
எனவே நீங்கள் 'அப்பிடியே சங்கதி' 
எனக் கேட்டுக்கொள்ளலாம். 
ஏனெனில் - என் தலைப்பு முழுவதும் உண்மை! 
அப்படியென்றாலும் நானல்ல பொறுப்பாளி! 
காரணம் என் தலைப் பொருள் முழுவதும் உண்மை!  

இலத்திரன் ஊடகம் என்றால் 
அங்கே இலக்கியம் இல்லை 
எம் தமிழும் நாளை இல்லாதொழியும் என்போரே- 
அஃதெனின் 
களப்பிரர் காலத்தில் 
தமிழ் காணமலன்றோ போயிருக்கும்!  
களப்பிரரும் கரண்டி முள் கொண்டு உணவுண்ணும் 
கடல் கடந்து நாடு பிடிக்க வந்தோரும் 
விட்டு வைத்ததையா 
இன்று Electronic mediaவும் - internetம் அழித்துவிடும்? 

அதுபோல் வளர்ப்போம்,தமிழ் வளர்ப்போம் என்பவரே
கம்பனும் பாரதியும் வளர்க்காததையா
நீங்கள் வளர்க்க முடியும்? 
அன்றொருவன் சொன்னது போல் 
நீவிர் வளர்ப்பதற்கும் மழிப்பதற்கும் 
தமிழொன்றும் தாடி மீசை யன்று! 
இருக்கும்- அது அப்படியே இருக்கும்! 
நாம் இருக்கும் வரை! 
நம்பர் வன்(நம்மவன் ) - அவன் இருக்கும் வரை! 
நம்மை ஆள்பவன் இருக்கும் வரை!  

முதலில் ஒரு தன்னிலை விளக்கம்! 
எம் தனியார் ஒலியலைகளின் தனிப்பிரகடனம்! 

சொல்வதெல்லாம் சொல்! 
தருவதெல்லாம் செய்தி!
ஒரு வழி வந்து மறுபக்கம் பதிலின்றி 
எதிர்விளைவு எதுவுமின்றி
எங்கோ பெய்த மழைபோல 
இருந்த நிலை மாறி
நிலை மாற்றி
எல்லோர் குரலும் ஒலித்திட (voice cuts)  
எல்லா உண்மையும் வெளித்திட 
நீரும் நாமும் இணைந்திட 
நேயரின் கருத்தும் நேரடியாக வர 
ஆதி சங்கரர் சொன்ன அத் வைதத்தை 
ஊடகத்தில் அத்துவப்படுத்தி 
புது ஊடகத்து தத்துவம் -  
புது ஊடகத்து அத்துவம் - ஊடகத்தில் இணைவு 
இரண்டறக் கலத்தலை 
நிகழ்த்தியோர் நாமே! 
அத்துவத்தை தத்துவமாக்கி 
புது ஊடகத்து அத்துவம் 
நிகழ்த்தியோர் நாமே!  

ஒரு தெளிவாக்கல்
செவிக்குப் பிந்திய கொம்பு - செவியை முந்தும்! 
வளர்ச்சியிலும் கூர்மையிலும் 
முடிக்கும் பின்வரும் மீசையும் தாடியும் 
வழுக்கையாய் உதிர்வதில்லை!
பிந்தி வரும் fashion தான் மவுசு கூட!  

காத்திருந்து வரும் பேச்சுதான்- நேற்று(Nov 26
கனவிஷயம் - கனமான விஷயம் தரும்! 
பிந்திய செய்திகள் தான் 
சுடச்சுட வருகிறது! 
பிந்தி வருவன 
வளர்ச்சியில் முந்தியே இருக்கும்! 
பிந்தி வருவன – முந்தையதை விட 
அறிவில் முதிர்ந்தே இருக்கும்! 
பழையதை விட வலியதாயே இருக்கும்! 
வளர்ச்சியிலும் இருந்ததை முந்தும்! 
வலியுறுத்தித் தொடர்கிறேன்!  

எல்லாத் தொழிலும் 
எட்டே மணிநேரம் 
ஒருமணி கூடினும் ஓவர்டைம்! 
ஒருமணி கூட்டினும் ஒலங்கள்! 
ஒயாத போராட்டங்கள்! 
ஆனால் நாங்களும்- நலம் காக்கும் வைத்தியரும் 
போலீஸூம்- நம்மவரும் தான் 
நாள் முழுவதும் நாழிகை முழுவதும் 
நாட்காட்டி காட்டும் வருடம் முழுவதும் 
ஒயாமல் தொழில் செய்வோர்!  
கடிகாரம், காற்றுப் போல் 
ஒயாமல் தொழில் செய்வோர் 
ஆமாம்.. officeஇல் off ஆனாலும் 
எங்கள் தொழிலில் off ஆகாமலேயே இருக்கிறோம்! 
ஒயாமலேயே இருக்கிறோம்! 
உண்மைகளை ஒழிக்காமலேயே – 
ஒளிக்காமலேயே உரைக்கிறோம்! 
அதனால் தான் ஒழிக்கவும்படுகிறோம். 
அடிக்கடி off செய்யவும் படுகிறோம்!  

கால் மேல் கால் போட்டு – A/C போட்டு 
9மணிக்கு ஒரு signஉம் 
டாணென்று மணி 5 அடிக்க 
மற்றொரு signஇட்டு 
பஸ்பிடித்து,காரெடுத்து சென்று 
உடைமையையும் தொழிலையும் 
கழற்றிப்போட்டு ஒய்வெடுக்க 
ஊடகவியலாளர் ஒன்றும் 
பத்தோடு பதினொன்றாகத் தொழில் புரிவோரன்று! 
படுத்தாலும் விழித்தாலும் 
பசித்தாலும் நசித்தாலும் 
கழுத்தின் மேல் நாள் முழுதும் 
கத்தி தொங்குதென்றே தெரிந்து கொண்டே 
பேனா பிடித்தோ - மைக் பிடித்தோ 
உண்மை விதைப்பவர்! 
பின் அறுவடை செய்யப்படுபவர்! 
உண்மை விதைப்பதால் 
உயிர்கள் அறுவடை செய்யப்படுபவர்!  

புதிய தத்துவம் கேட்பீர்- 
இருப்பதை தான் இல்லாதாக்க முடியும்!
உண்மையான இருப்பைத்தான் 
அழிக்கமுடியும்!
இல்லாதொன்று இருக்காது!
இல்லை என்பது அழியாது! 
அதனால் தான் 
உண்மைகள் சொல்பவர் 
இல்லாதாக்கப்படுகிறார்! 
இல்லையேல் 
உள்ளதை உள்ளபடி சொல்லாமல்
ஊமையாக்கப்படுகிறார்! 

நிற்க 
உள்ளே உடைவா? உட்கட்சி அரசியலா... 
உட்கார்ந்து பேசினால் தீர்வா.. 
உடனே பேசினால் தீர்வா 
கணித்துச் சொல்பவர் சிலர் 
உண்மையைச் சொன்னால் உள்ளே எரியும்
சில பேருக்கு
சிங்கப்பூர் மருந்தும் சில காலத்தொடர்பும் 
சேர்த்து வச்ச பணமும் பற்றிச் சொன்னாலும் 
சினம் வரும்!  

இங்கு வான்கோழிகளும் 
வீர உரை நிகழ்த்தும் வேடிக்கை உண்டு! 
ஒரிஜினலுக்கும் போலி தயாரித்து 
மூக்கு உடைபட்ட கதையும் உண்டு! 
இதைச் சொன்னாலும் 
கையும் கத்தியும் நீளும்!  

கடிக்கும் நாயை அடித்தால் அது பக்கச் சார்பு! 
கட்டியணைத்தால் பக்கச்சார்பு! 
தட்டிக் கொடுத்தால் பக்கச் சார்பு! 
தட்டிக் கேட்டாலும் பக்கச் சார்பு! 
அப்போது எது கேட்டாலும் 
நாய் கடித்ததாக நாலுபேர் தெரிவித்ததாக 
நமது செய்தியாளர் தெரிவித்தார்! 
காவற்துறை விசாரணை -  
நாய் இது பற்றி 
"கடிக்கவில்லை பல் பட்டும் படாமலும் பட்டது" என்றும்
கடிபட்டவர் வேண்டுமென்றே தான் நாய் பாய்ந்தது என்றும் 
பந்தி பந்தியாக நாலு கோணத்தால் சொன்னால் 
அதுவே நடுநிலைமையாம் ! 

சார்ந்து சார்ந்தே சொன்னதால் 
சந்தி நிலைக் கொள்கைளே 
இங்கு நடுநிலைச் சமத்துவமாகி 
நடுநிலைகள் சாய்ந்தே இருக்கின்றன.  

எல்லாம் சமமாக இருந்து 
பனங்காயும் கித்துளும் 
பகிர்ந்தே பழகப்பட்டு 
வடக்கும் தெற்கும் 
கிழக்கும் மேற்கும்
சமமானால் மட்டுமே 
நடுநிலைமை இங்கு தராசு முள்ளாகும் 
இது சத்தியம் தான்!  
சாஸ்வதம் தான்! 

அப்போது வெள்ளை என்பது 
வெள்ளைதான் 
கருமை என்றால் கறுப்புத்தான் 
ஆனால் 
அடக்குமுறைகள் அடங்கும் வரை 
இனவாதம் விதைப்பதை விடும்வரை 
காகம் சாம்பலானாலும் 
சிலநேரம் வெள்ளையானாலும் கூட 
அதுவும் நடுநிலைதான்!  

எளிதிற்கு வலிமை தர 
சூதுகவ்விய தம் வாழ்வை 
மீண்டும் வெல்லவைக்க
மீண்டும் வென்றிட 
இங்கு எம் சார்புநிலை 
தலை சார்ந்த (சாய்ந்த அல்ல)நிலை
நடுநிலை தான்! 

சர்வதேச ஊடகங்கள் நடுநிலைகாட்டும்! 
ஊடகத் தத்துவத்தை உறுதிப்படுத்தும்!  

ஆமாம்! 
இங்கிலாந்து இளவரசியின் அந்தரங்கம் 
அவை அப்படியே தரும்! 
photos ஓடு! 
Clinton லீலை அவர்களுக்கு 
மற்றொரு கிருஷ்ணலீலா! 
Monicaவே தலைப்புச் செய்தி! 
அதுதான் அங்கு தர்மம்!
நினைத்த இடத்தில் 
குண்டு போட்டு 
சமாதானம் காக்கும் Bush Hero
Iraqஇல் ஆட்சியையும் 
ஐக்கிய நாடுகள் சபை கூட்டி 
அவருடைய Afghanஇல் ஆள்பவரையும் 
toss போட்டு தெரிவு செய்வர் - அவர் ஹீரோ! 
சதாம் சர்வதேச வில்லன்!  

சுய நிர்ணயமாய் நிற்க 
தன்நாடு தன்மக்களுக்கு கேட்டு நின்றவன் 
பயங்கரவாதி! 
நான் அரபாத்தை சொல்கிறேன்! 

நவீன ஊடகத் தத்துவம் 
சர்வதேச மீடியாவுக்கு 
நாசமாய்ப் போக அந்த நடுநிலை! 

சொல்கிறேன் கேளும் 
நாம் சார்ந்த இனத்துக்கு 
நல்லது நடக்குமாயின் 
நாலு பேருக்கு நன்மை கிட்டுமாயின் 
சிலரைத் தட்டித் தருவோம் 
சிலரை வெட்டி- ஒட்டித் தருவோம் 
அதுவும் 
இங்கு ஊடகத் தத்துவம்! 

காம்புகள் கோடாரிகளாக 
புதிய இரும்பு பூண்டு 
எம் விருட்சங்களை 
விழுதுகள் பூண்ட வேர்களை 
அறுக்க முனைந்த போதுகளில் 
சார்பு தர்மங்களே சத்தியங் கூறின! 
சத்தமாக எழுந்த 
சகலவிதமான பொய்களையும்
சுக்கு நாறாக்கின! 
கீழ்த்திசை இருள்வதில்லை 
எனக் கூறின! 

காற்றிடுதல் 
எல்லைகள் கீறிடுதல் 
எம்மவர் இடம்,நிறம் மாறிய 
அனைத்தையும் 
அறிந்து,உணர்ந்து 
அறிவித்தவர் நாமே! 
மெய் கூறி மாண்டவர் 
உண்மை சொல் வழி நின்று 
நடுநிலை தாண்டவரே 
ஊடகத்து தத்துவத்தில் 
ஒன்றாக இணைந்தனர் 
இறப்போடு இணைந்தவரே! 
இல்லையேல்
பக்ஸ்இல் வரும் அறிக்கை பார்த்தெழுதி
கோலில் அன்னவர் ஆ சொல்ல ஆ.. 
இ சொல்ல ஈ -  
இன்னும் என்னென்ன சொன்னாலும்
அவையெல்லாம் எழுதி 
அப்படித்தான் சொன்னார் அவர் 
அதையே தான் எழுதினேன் 
அவ்வாறே வாசித்தோம் 
உள்ளதை நல்லபடியாக 
நாலுபேர் சந்தோசப்படச் சொன்னோம் 
என்றே சொல்வீரானால் 
அங்கு நட்ட கற்களும் 
நடேசன்,நிமலராஜன் நினைவுகளும் 
நியாயங்களும் 
நாளை நின்று பேசும் கவனம்!
!

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner