Showing posts with label கமல். Show all posts
Showing posts with label கமல். Show all posts

February 13, 2013

விஸ்வரூபம்



இதோ இதோ என்று காத்திருந்து, திருட்டு DVD வந்தும் அதில் பார்க்க விரும்பாமல் நேற்று வந்தவுடன் திரையரங்கில் சென்று விஸ்வரூபம் பார்த்துவிட்டேன்.

இதில் கமல் ரசிகன் என்பதோ, இல்லாவிட்டால் First day First Show பைத்தியம் என்பதோ இல்லாமல் அடக்கி வைக்கப்பட்ட ஒரு படைப்பில் அப்படியென்ன ரகசியம் இருக்கப் போகிறது என்பதே எனது மிகப்பெரும் கேள்வியாக மனதுள் இருந்தது.

படம் பார்த்த கொட்டாஞ்சேனை சினி வேர்ல்டில் படம் காண்பிக்கப்படுகிறது என்று தெரியாததாலோ, அல்லது வழமையான 'புலி வருது' என்ற வதந்தி என்று நினைத்தோ படம் ஆரம்பித்த 6.30 வரை பெரிதாகக் கூட்டமில்லை.
ஏதாவது அசம்பாவிதங்கள் நேர்ந்தாலும் என்ற முன்ஜாக்கிரதைக்கு ஒரு போலீஸ் ஜீப்பில் சில போலீசார் வெளியே (படம் முடிந்ததும் அவர்களிடம் பேச்சுக் கொடுத்துப் பார்த்தேன்); முக்கால்வாசி நிறைந்த இரண்டாம் காட்சி; சில முஸ்லிம் குடும்பத்தாரும் எங்கள் கூட (சொல்வதற்கான காரணம் பிரித்துப்பார்க்க இல்லை என்பதை நண்பர்கள் புரிக).

தணிக்கை சான்றிதழுக்கும் கூட ரசிகர்கள் கை தட்டி வரவேற்கும் அளவுக்கு விஸ்வரூபம் காத்திருக்க வைத்துள்ளது.
முதலில் சில விஷயங்கள்....

இந்தப் படத்திற்குத் தடை கோரும் அளவுக்கு கமல் முஸ்லிம்களை அவ்வளவு கேவலமாகக் காட்டிவிட்டார் என்றோ, அமெரிக்கர்களை 'மனிதாபிமானிகளாக' காட்டிவிட்டார் என்றோ, ஒஸ்கார் கனவுகளுக்காக அப்பாவிகளின் உணர்வுகளைப் புண்படுத்திவிட்டார் என்றோ, வேண்டுமென்றே கமல் விஷ விதைகளைத் தூவி இருக்கிறார் என்றோ இதுவரை படம் பார்க்காதவர்களும், அரைகுறையாய் பார்த்தவர்களும், மற்றவர்கள் பார்த்து சொன்னதையும், எழுதியதையும் வைத்து ஊகித்துப் புரளி கிளப்பியவர்களும், அவசரமாகப் பார்த்து அவதியாக விமர்சனம் என்று ஏதாவது சொல்லவேண்டுமே என்றோ, வித்தியாசமாகத் தெரியவேண்டும் என்றோ விஸ்வரூபம் DVD என நினைத்து வேறு படம் பார்த்தவர்களும் இதுவரை சொன்னதை நம்பிய நீங்கள்/ உங்களில் பலர் தயவு செய்து திரையரங்கில் இதைப் பாருங்கள்.

இலங்கைத் தணிக்கைக் குழு இரண்டு காட்சிகளையே நீக்கியதாக அறிந்தேன்; இனி நானும் துண்டாடப்படாத 'முழுமையான' விஸ்வரூபத்தை எங்காவது தரவிறக்கிப் பார்க்கவேண்டும்.

தலிபான்களின் போராட்டம் - ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அமெரிக்கப் படைகளை எதிர்த்துப் போராடும் அவர்களது வாழ்க்கையில் அப்பாவி மக்கள் மற்றும் சிறுவரின் அன்றாட வாழ்க்கைப் போராட்டங்கள், தலிபான்களின் அமேரிக்கா மீதான வன்மைக்கான பின்னணி மற்றும் ஜிஹாதிகள் என்று சொல்லப்படும் தற்கொலைப்போராளிகள் தங்களை மாய்த்துக்கொண்டு அமெரிக்கர்களை எதிர்க்க என்ன காரணம் என்பது சொல்லப்படுகிறது.

இந்தியப் பக்கமோ, இந்திய முஸ்லிம்கள் பக்கமோ கதை எட்டிக் கூடப் பார்க்கவில்லை என்பது நிஜம்.

தலிபான்கள் நிச்சயமாக இஸ்லாம் மார்க்க வயப்பட்டவர்கள் என்ற அடிப்படையில் அவர்களின் தண்டனைகள், அவர்களின் யுத்தம், செயல்கள், யுத்தம் எல்லாவற்றுக்கு முன்னதான இறை வழிபாடு காட்டப்படுகிறது. இது வழக்கமானது தான் என்று நண்பர்கள் ஏற்றும் கொண்டார்கள்.
தணிக்கை செய்யப்பட்ட காட்சிகளில் இதைவிட புண்படுத்துகிற விடயங்கள் அப்படி என்ன இருந்திருக்கக் கூடும் என்று பின்னர் ஆராயலாம்.

அமெரிக்கப் பக்கம் இருந்து தன்னிச்சையாக கமல் தலிபான்களை மோசமாகக் காட்டிவிட்டார் என்று சொன்னவர்கள் படம் பார்த்த பிறகு என்ன சொல்லப் போகிறார்கள்?
நுனிப்புல் மேய்ந்தவர்கள் பாடு இனி அந்தரம் தான்.

உதாரணமாக,
'அமெரிக்காவின் இராணுவம் பெண்களையும், குழந்தைகளையும் கொல்லாது' என்று கமல் வசனம் எழுதிவிட்டதாக சொல்லப்பட்டு அது கமல் அமெரிக்காவுக்கே வாளி வைத்துவிட்டதாக படு வேகமாகப் பரப்பப்பட்டது.
ஆனால் அந்த வசனத்தைக் கவனித்தவர்கள் அந்தக் காட்சியையும் பின்னணியையும் உள்ளார்ந்த அர்த்தத்தையும் சரியாக உணர்ந்து கவனிக்கவில்லை என்பதில் எனக்கு மிகப்பெரிய சிரிப்பு.

முல்லா ஓமர் சொல்வதாகத் தான் அந்த வசனம் வரும். அடுத்த நொடியே அவரின் குடும்பம் நின்றிருந்த வீட்டின் மீது அமெரிக்க ஹெலி குண்டு வீசி நிர்மூலமாக்கும். முல்லா 'Ba-----' என்ற தூசணத்தை உதிர்ப்பார்.
இந்தக் குறியீடு (இது குறியீடே இல்லையா?) புரியவில்லை போலும் அவர்களுக்கு.

இதை வைத்துத் தான் 'மனிதாபிமானியான' கமல் அமெரிக்கர்களை மனிதாபிமானிகளாகக் காட்ட முயன்றுள்ளார் என்று பலர் சொல்கிறார்களா?

அதே போல அமெரிக்க - இந்திய ராஜதந்திர உறவுகளுக்கான (தீவிரவாத எதிர்ப்பு + அழிப்பு) பாதை , இடையிலுள்ள  சிக்கல்கள் பற்றி FBI விசாரணைக் காட்சிகளில் காட்டுகிறார்.

இயக்குனராக கமல் தன்னை அளந்து பயன்படுத்தியிருக்கும் மற்றொரு விடயம் - ஹேராம் படத்தில் கதை சொல்லலில் இருந்த குழப்பம், விருமாண்டியில் கதை முன், பின் என்று பயணிப்பதில் வந்த மயக்கம் ஆகியவற்றை இங்கே விடவில்லை. அத்துடன் தீவிரவாதப் பாதையை எடுத்தவருக்கும் அழுத்தமான பின்னணியை ஆப்கானிஸ்தான் காட்சிகளில் கொடுத்திருப்பது.

இந்தப் படத்தைத் தடை செய்யவேண்டும் என்று (பார்க்காமலே & பார்த்தும்) எதிர்த்தவர்கள் ஆப்கானிஸ்தான் காட்சிகளில் ஒவ்வொரு காட்சியிலும் குறியீடாகவும், அழுத்தமான தெளிவாகவும் அவர் அந்த மக்கள் சார்பாக, தலிபான் போராளிகள் சார்பாகவும் முன் வைக்கின்ற நியாயங்களும், பின்னணிகளும் புரிந்துகொள்ள முடியாத அளவுக்கா இருக்கின்றன?
எனக்கு அந்தப் 'புத்திஜீவிகளை' புரிந்துகொள்ள முடியவில்லை.

ஆனால் ஒரேயடியாக கமல் ஒரு தூய கலைப்படைப்பாளி; எந்த ஒரு அரசியலையும் விஸ்வரூபத்தில் அவர் வைக்கவில்லை என்று ஒரு கமல் வக்காலத்தாக நான் நிற்கமாட்டேன்.

மேலேயுள்ள விஷயங்கள், பூதாகாரப்படுத்தப்பட்ட விஷயங்களில் தான் அரசியல், விஷ விஷமங்கள் இல்லை என்கிறேன்.

கமல் வைத்துள்ள குறியீட்டு, உள்ளார்ந்த, தத்துவார்த்த அரசியலைப் புரிந்துகொள்ள நாங்கள் ஒன்றும் உலகத் தரத் திரைப்படங்களைப் பார்த்திருக்கவேண்டிய தேவையோ, உலக இலக்கியங்களை வாசித்திருக்கவேண்டிய தேவையோ அடையவேண்டியதில்லை.

கமலின் திரைப்படங்களைத் தொடர்ந்து பார்த்தவராகவும், சமகால நடப்புக்களை அறிந்து வைத்திருப்பராகவும், இந்தப் படத்தின் வசங்களைக் கூர்ந்து அவதானிப்பராகவும், காட்சிகளின் சிறுசிறு நகர்வையும் அறிந்துகொள்பவராகவும் இருந்தாலே போதும்.

படத்தின் பெயர் முதலில் காட்சியில் எழுதப்படும் விதத்தையும், முடிவில் எழுதப்படும் விதத்தில் ஆரம்பிக்கிறது இந்த மறைமுக விளையாட்டு.
அதே போல ஆங்கிலத்தில் விஸ்வரூபம் என்பதில் 'War' என்ற எழுத்துக்களுக்கு இருக்கும் அழுத்தத்தையும் அவதானியுங்கள்.
இன்னும் சில என் அறிவுக்கு எட்டிய அவதானிப்புக்களைக் கீழே தருகிறேன்.
இதை விட அதிகம் கூர்ந்து, பகுத்து அறிபவர்களுக்கு என் தலை தாழ்ந்த வணக்கங்கள். (எனக்கும் அறியத் தாருங்கள்)

ஒரு சினிமா ரசிகனாக, அதற்குப் பின் கமல் ரசிகனாக எனக்கு மிகப் பிடித்த படம் என்ற வரிசையில் முதல் பத்தில் இந்தப் படம் வராது.
ஆனால் என்னை வியக்க வைத்த, ரசிக்க வைத்த, வசனம் மற்றும் குறியீட்டுக் காட்சிகளால் அசரவைத்த வெகு சில திரைப்படங்களில் ஒன்று என்பேன்.

நடிகன் கமலை விட வசனகர்த்தா + இயக்குனர் கமல் தான் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறார்.

நடிகர் தேர்வு முதல், களத் தேர்வு, காட்சிகளின் கோர்வை ஆகியவற்றை எந்த ஒரு பிசகும் இல்லாமல் செதுக்கியிருப்பது உலகத் தரம் தான்.
ஆனால் திரைக்கதைத் தொய்வு சில இடங்களில் இருப்பதை ஏற்கத் தான் வேண்டும்.
அதை இல்லாமல் செய்கிறது ஒளிப்பதிவின் அசைத்தலும், இசையின் பிரம்மாண்டமும், கலை இயக்குனரின் நேர்த்தியும்.
இயக்குனர் கமல்ஹாசன்  இருத்தி, எழுப்பி வேலை வாங்கியிருக்கிறார். (இதற்காகத் தானோ அவர் தேடித் தேடி தன் சொல்லுக்கு ஆடும் இளைய பொம்மைகளைத் தேடி எடுக்கிறார்?)

இயக்குனரின் டச் தெரியும் இடங்களில் முதலாவது நடனப் பாடலே அசத்தி விடுகிறது.
அத்தனை பாடல்களையும் கதை சொல்லியாகவே பயன்படுத்தியுள்ள கமல், தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ள அதிரடியான பாடலைக் கொண்டு வராமல், பெண் தன்மையின் நளினத்துடனான பாடலைத் தந்து, அதிலே தனது உலகத் தர நடிப்பையும், உடலசைவையும், வேறெவரும் ஈடாக முடியாத பாவங்களையும் தந்து கலக்கி விடுகிறார்.
வார்த்தைகளுக்குப் பஞ்சம் மேலதிகமாக சொல்ல.
Hats Off Legend.

ஆனால் பில்ட் அப் பாடலை தனக்கான கதாநாயகத் தன்மைப் பாடல் (நிஜத்தில் சந்தித்த சவால்களுக்குப் பதிலடியாகக் கூட) என்று பட்டும் படாமலும் 'யாரென்று தெரிகிறதா' பாடலைக் கொண்டு வந்து பொருத்தும் இடம் எவரையும் மெச்ச வைக்கும்.

கமல் இயக்கிய அல்லது நடித்த படங்களில் நான் ரசித்த அந்த குறுகிய வசனங்களிநூடு பாத்திரங்களின் தன்மையை வெளிப்படுத்தும் நுட்பமும் சமயோசிதமும், முதலாவது காட்சியிலிருந்தே மனதை அள்ளுகிறது.
எனது அதிர்ஷ்டம் என்னுடன் கூட இருந்து பார்த்த அத்தனை ரசிகரும் அதிகளவு ஆர்ப்பாட்டம் பண்ணாமல் வசனங்களை ரசித்தனர்.

வெண்புறா ஒன்றோடு கதை சொல்ல ஆரம்பித்து, பூஜா குமாரை இணைத்து அறிமுகப்படுத்தும் இடமே போதும் இந்தப்படத்தின் கதை சொல்லல் குறியீட்டுக்கு பிரதானமும், சம்பவக் கோர்வைகளுக்கும் பாத்திரங்களுக்கும் சரியான இடமும் வரப்போகிறது என்பதைக் காட்ட.

(சாதாரண ரசிகனுக்கு இது ஒரு Action, Thriller, தீவிரவாத ஒழிப்பு மசாலா படம் ஆனால் கொஞ்சம் புத்திசாலித்தனமாக எடுக்கப்பட்டுள்ளது)

மனோவியல் வைத்தியருடன் பேசும் பெண், "படுத்துண்டே படிக்கிறது பிடிக்காதுன்னு அவா கிட்ட சொல்லிட்டேன்" என்னும் வசனம் பின்னர் தன் கணவர் யார் என்ற பின்னணி தெரியாமலே வாழ்ந்தவள் என்ற மர்மத்தை உடைக்க எங்களுக்கு உதவுகிறது.
ஆரம்ப பிராமண பாஷையில் அந்த 'பாப்பாத்தி' என்ற சொல்லுக்கும், மாமிசம் உண்ணச் செய்வதற்கும், தன் பிராமண மனைவி இன்னொருவனுடன் தொடர்பு என்று கதை வைத்ததற்கும் இந்தியாவின் பிராமண குலம் அல்லவா தடை கோரி பொங்கியிருக்கவேண்டும்?

கட்டிவைத்து வில்லன்கள் கொடுமைப்படுத்தும் காட்சியிலும் வசனங்கள், தன்னை வெளிப்படுத்தும் இடங்கள், "பாத்திரத்தோடு ஒன்றிட்டேனோ இல்லையோ" என்று கமல் சொல்லும் இடங்களில் கமெராக் கோணங்களும் ஒவ்வொரு நடிகரதும் அசைவுகளும் கலக்கல்.

விஸ்வநாதன் யார் என்று மாறும் காட்சி தான் எங்களை ஆசன நுனிக்குக் கொண்டுவந்து 'விஸ்வரூபத்தின்' அர்த்தத்தை வெளிப்படுத்துகிறது.
விஸ்வநாதன், விஸ், விசாம் என்று மிக நுணுக்கமாக விளையாடியிருக்கும் கமல், கஷ்மீரி என்று பெயரின் பின்பாதியில் சொல்ல வந்த விடயம் இனி எத்தனை பேரால் விவாதிக்கப்படும் எனப் பார்க்கலாம்.

Name meaning of Wisam - Badge of honour, Badge, Logo, like coat of Arms



'அல் கைதாவுக்கே பயிற்சியளித்தவன்' என்ற வசனத்தோடு கதை ஆப்கானிஸ்தானுக்குப் பறக்க, அங்கே கலை இயக்குனர் லால்குடி இளையராஜா கலக்குகிறார்.

மலையடிவாரம், குகைகளாக வீடுகள், பதுங்கு குழிகள், தொங்கிக் கொண்டிருக்கும் பிணங்கள், கட்டட சிதிலங்கள் என்று பார்த்து பார்த்து செய்திருக்கிறார்.
அல் ஜசீராவிலும், CNN, BBCஇலும் பார்ப்பதை நேரில் கொண்டுவந்திருப்பது நேர்த்தியான ஒரு பணி.
 பாராட்டுக்கள்.

அதேபோல Green Screen technology யும் இந்தக் காட்சிகளில் மிக நுணுக்கமாகவும், தெரியாத வகையிலும் பயன்படுத்தப்பட்டிருப்பது கலக்கல்.

விசாம் காஷ்மீரியாக அறிமுகமாகும் காட்சியிலிருந்து ஒவ்வொரு வசனமும், வந்து சேரும் ஒவ்வொரு பாத்திரமும், ஆப்கன் - தலிபான் - அமெரிக்க யுத்த கள சூழலையும், அந்த மக்களின் வாழ்க்கையின் வேதனையையும் நேரடியாகவும், குறியீடுகளாகவும் சொல்கின்றன.

துப்பாக்கி எங்கள் தோள்களில், அணு விதைத்த பூமியில் பாடல்கள் அழுத்தமாகக் காட்சிகளோடு பயணிக்கின்றன.

இளம் ஜிஹாதி என்று அறிமுகப்படுத்தப்படும் சிறுவன் தன்னை ஊஞ்சல் ஆட்டுமாறு கேட்டு பரவசமடையும் காட்சி எங்களுக்கும் அப்படியொன்று புதுசல்ல.
குண்டுகள் எந்த நேரமும் விழலாம்; எங்கள் வாழ்வு இதுக்கு இடையில் தான் என்ற அந்த சூழலும் எங்களுக்குப் பழகியதே.
இதைக் கமல் காட்சிப்படுத்துகையில் களமும் அந்த மண்ணின் நிறமும் வித்தியாசம் என்றாலும் மனித மனங்களை வாசிக்க முடிகிறது.
இது தானே அந்த சூழல்? சிறுவர் போராளிகள் இருகிறார்களே? இதில் என்ன எதிர்ப்பு வேண்டி இருக்கிறது?

ஓமரின் மனைவி மகன் சம்பந்தப்பட்ட காட்சிகளும், பெண் வைத்தியரை ஓமர் துரத்தும் காட்சியும் அங்கே நடக்கின்ற விடயங்கள் தான்.

சவூதி ஷேக்கின் வீட்டுக் காட்சி இன்னொரு அரசியல் சாணக்கியத்துவம். ஆப்கானிஸ்தானுக்குள் யார் யார் எப்படி, என்ன என்ன என்று மிக நுணுக்கமாக இயக்குனர் கமல் காட்டுகிறார்.
"இவர் ஜிஹாதி அல்ல ஆனாலும் இவர் எங்களுக்குத் தேவை" என்று சவூதி அரேபியரைக் காட்டும் இடம் ஒரு சான்று.
அரேபியர் அபின் கொடுத்துவிட்டார் என்று பொங்கி எழுந்த சிலருக்கு நாசர் சொல்லும் வசனம் ஜிஹாதிகளின் புனிதம் பற்றி சொல்கிறது.
"என் போராளிகளுக்கு அபினை பழக்காதே"

ஒசாமா பின் லேடன் காட்டப்படும் காட்சியிலும் கூட மிக நாசூக்காக கமல் சில விஷயங்கள் சொல்கிறார்.
விசாம் - இவர் ISIக்கு வேலை செய்கிறாரா?
போராளி - இல்லை காசுக்கு. யார் குடுத்தாலும் அவருக்கு.

அமெரிக்க விமானங்கள் குண்டு போடும் காட்சிகளின் பிரம்மாண்டமும், தத்ரூபமும், அந்த அக்ஷன் காட்சிகளில் காட்டியுள்ள சிரத்தையும் தமிழ் சினிமாவுக்கு புதுசு. அப்படியொரு விஸ்வரூபம்.

தலிபான்கள் தண்டனை கொடுக்கும் காட்சியில் ஒவ்வொரு தரப்பாக கமெரா காட்டிவருவது இன்னொரு புது யுக்தி.

ஆனால் இயக்குநராகக் கமல் கோட்டை விடும் இடங்கள் என்று நான் நினைப்பது சில காட்சிகளையே தான்...
வழமையான படங்களில் (தமிழில் மட்டுமல்ல) வருவது போலவே விசாம் ஜிஹாதிகளுக்குள் நுழைந்த ஒரு உளவாளி/ கையாள் என்பதை இலகுவாக ஊகித்துக்கொள்ளக் கூடியதாக இருக்கையில் ஓமர் மற்றும்  குழுவினர் நம்பிவிடுவது.

அடுத்து படுமோசமாகக் காயப்படும் ஓமர் அமெரிக்காவுக்குள் அவ்வளவு இலகுவாக நுழைகிறார் என்பதும் இன்னொரு கேள்விக்குரிய விடயமாகி விடுகிறது.


ஆனால் இரண்டாம்பாதியின் வேகம் சற்றுக் குறைய, அதை ஈடுகட்ட வசனங்களின் நறுக்கிலும், வழமையான கமல் பாணி நக்கல்களிலும் கதை நகர்கிறது.
FBI விசாரணைக் களம், பூஜா குமாருக்கு தம்மைப் பற்றி கமல், அன்ட்றியா கூறும் இடங்களில் வசனங்களை ரசிக்கலாம்.
நறுக்குத் தெறித்த வசனங்கள் கதையோட்டத்தை இலகுபடுத்தவும், ஒரு வசனத்தையும் தவறவிடக் கூடாது என்பதயும் உறுதி செய்கின்றன.

சானு வர்கீசின் ஒளிப்பதிவும், மகேஷ் நாராயணனின் படத் தொகுப்பும் ஆற்றியிருக்கும் பங்களிப்பு கலக்கல்.
ஆப்கன் சண்டை முதல் அமெரிக்க கார் துரத்தல் வரை பின்னி எடுத்துள்ளார்கள்.
ஷங்கர்-எஹ்சான்-லொஆய் கூட்டணி கமலுக்குத் தேவையானதைக் கொடுத்துள்ளார்கள்.
இலங்கையில் துல்லிய ஒலித்தேளிவுடன் விஸ்வரூபத்தை இன்னும் விஸ்வரூபமாகப் பார்க்க விரும்பினால் என் சிபாரிசு சினி வேர்ல்ட் தான். அற்புத ஒலியமைப்பு.

சீசியம், கதிரியக்கம், புறா என்று கதை பரவினாலும், Butterfly theory என்பதையும் முன்னைய காட்சிகளின் விளக்கத்தையும் தொடர்ச்சியையும் காட்டி அசத்துகிறார் இயக்குனர்.

இது தான் கமலுக்கும் மற்ற இயக்குனர்களுக்கும் இடையில் இருக்கும் வித்தியாசமாக நான் உணர்வது.
ஹேராமில் எங்களைக் குழப்பியபோது நாம் குழம்பி இப்போது தெளிவு பெற்று கமலை மெச்சுகிறோம் என்றால் ஒன்றில் கமல் எங்களைத் தெளிவுபடுத்தியுள்ளார்; அல்லது நாம் கமல் படங்களைப் பார்க்கப் பழகிவிட்டோம்.

கமலே மைக்ரோவேவ் அடுப்பு முதல் ஏவுகணை, அணு குண்டு வரை வியாபித்து இருப்பதால் மற்ற நடிகர்கள் அந்த விஸ்வரூபத்துக்குள் அகப்பட்டுப் போனாலும், அவர்களும் தனித்துத் தெரிய இயக்குனர் கமல் காட்சிகள் கொடுக்கிறார்.

ராகுல் போஸ் - ஒரு தேர்ந்த நடிகராக ஹிந்தியில் பார்த்துள்ளேன். இதிலே முதலில் அதிகம் பேசியும் பின்னர் பேசாமலேயும் கலக்குகிறார். உடல் அசைவுகள் பிரமாதம்.
சேகர் கபூர் - இந்த இயக்குனரின் நடிப்பு பற்றி சொல்லவும் வேண்டுமா? அலட்டல் இல்லாத நடிப்பு.

பூஜா குமார், அண்ட்ரியா இருவரும் இருந்தாலும் ஊறுகாயாகத் தொட்டுக் கொள்ளாமல், நடிக்கவும் கலக்கவும், காட்சிகளினை நகர்த்தவும் சமயோசிதமாகக் கையாண்டுள்ளார்.

பூஜாவை கதாநாயகி ஆக்கியது எதற்காக என்பது சில காட்சிகளிலேயே புரிகிறது. தேவையான அசைவுகள், தேவையான ஆடைகள் என்று கமலின் எண்ணத்தைப் பொய்யாக்கவில்லை. இவரது அமெரிக்கத் தாக்கம் உடைய பிராமணத் தமிழ் (தமிழும்) அழகு.
ஆங்கில நடிகர்களையும், பெயர் அறியாத ஆப்கானிய (எந்த நாடோ அறியேன்) நடிகர்களையும் நடிக்க வைத்திருப்பது ஒரு இலகுவான விடயம் அல்ல.

கமல் இயக்குனராக மீண்டும் - ஆனால் இம்முறை மிக பிரம்மாண்டமாக ஜெயித்துள்ளார்.

சில விஷயங்களுக்காகக் காத்திருப்பதில் பூரண திருப்தியும் அர்த்தமும் இருக்குமே... அதை விஸ்வரூபத்தில் உணர்ந்தேன்.

தன முன்னைய படங்களில் கமல் கடவுளையும் சமயத்தையும் நக்கல் பண்ணும் இடங்கள் இதில் ஏனோ மிக அரிது. போதாக்குறைக்கு இறுதி யுத்தத்தின் முன் மிக உருக்கமாகத் தொழவேறு செய்கிறார்.
ஆனால் சிற்சில இடங்களில் நக்கல் தொனிக்கிறது. - மிக நாசூக்காக.
வசனங்கள் செம சூடு.

கமல் – ஒருத்தவர் சாவ இப்பிடியா கொண்டாடுறது, தீபாவளி மாதிரி?
அன்ட்ரியா – அசுரர்களா இருந்தா அப்டித்தான் கொண்டாடுவாங்க
சேகர் கபூர் – இதப் போய் அந்த அசுரனின் உற்றார், உறவினர்கிட்ட சொல்லுவீங்களா?

அதேபோல முதலில் ரஷ்யன், அப்புறம் அமெரிக்கன், அப்புறம் ஆப்கன், அப்புறம் தலிபான் என்று ஒரு கிழவி தாங்கொணாத வேதனையுடன் "ஆண்கள் எல்லாரும் முன்னுக்கு வால் முளைத்த குரங்குகள்" என்று இயலாமையில் சபிப்பது ஆப்கனின் பெண்கள் + அப்பாவி மக்களின் நிலையைக் காட்டும் ஒரு தத்ரூப இடம்.

வன்முறைகளும், உடல்கள் சிதறும் கோரமும் கொஞ்சம் டூ மச் என்று நினைத்தாலும், இந்தப் படத்துக்கு இது தேவை என்பதை நாம் உணரவேண்டும்.

தமிழ் ஜிஹாதி, ஓமர் கோவையில் தங்கியவர் என்று சர்சைப்படுத்தப்பட்ட இடங்கள், உண்மையில் இந்தப் படம் தமிழில் வந்ததால் மேற்கொள்ளப்பட்டவை என்பதை உணராதார் உணராதாரே.

குறியீடுகளால் பலவும், நேரடியாக சிலவும் சொல்லி, நேர்த்தியாகத் தான் நினைத்ததைக் கொடுத்ததில் பரிபூரணமாகக் கலைஞானி விஸ்வரூபித்திருக்கிறார்.

அமெரிக்காவுக்கு வால் பிடித்துள்ளார் என்று சொன்னவர்களுக்கு, FBI கைது செய்யும் இடமும் விசாரணை செய்யும் இடமும் போதும்.

ஏன் இவ்வளவு எதிர்த்தார்கள் (குர் ஆன்  வசன ஒலிகளை கமல் நிசப்தமாக்கியது போக) என்பது ஒரு பக்க இருக்க, பிரம்மாண்ட வெற்றி பெற்றிருக்க வேண்டிய ஒரு படத்தை இன்னும் அதிகம் விளம்பரம் செய்து மிகப் பிரம்மாண்டம் ஆக்கி இப்போதே அமோக இலாபத்தை தயாரிப்பாளர் கமலுக்குக் கொடுத்துவிட்டார்கள் என்பதைக் கமல் நன்றியோடு பார்க்கட்டும்.

நான் இன்னொரு தடவையாவது திரையரங்கிலும் (இன்னும் சில நுண்ணரசியலை நுகர) துண்டாடப்படாத விஸ்வரூபத்தை DVD யிலும் பார்க்கப் போகிறேன்.

விஸ்வரூபம் - கமலின் வியாபித்த விஸ்வரூபம் 

January 30, 2013

விஸ்வரூபம்... விளக்கங்கள், வினாக்கள் & விளங்காதவை


விஸ்வரூபம்...

என்னதான் இந்தப் பெயரில் இருக்கோ தெரியவில்லை ஆரம்பம் முதலே சிக்கல்.. இழுபறி...

நேற்று நீதிமன்றத்தில் கிடைத்த வெற்றி மீண்டும் தடையாக இழுபறி.
கமல் என்ற கலைஞன் முடக்கப்படுகிறான்.. ஒடுக்கப்படுகிறான்..
அரசியல் விளையாட்டுக்களால் பந்தாடப்படுகிறான் என்பது தெரிகிறது.
அவர் வழங்கியுள்ள ஊடகவியலாளர் சந்திப்புப் பேச்சு எவ்வளவு தூரம் காயப்பட்டுள்ளார் என்பதைக் காட்டுகிறது.

தமிழ்நாட்டில் அவருக்கு ஒரு நல்ல படைப்பாளியாக, ஒரு மிகச் சிறந்த கலைஞனாக முக்கியமான அடையாளம் எப்போதும் வழங்கப்பட்டது கிடையாது.
தரத்தால் உயர்ந்திருந்தாலும் மசாலாத் தனங்கள் அங்கீகரிக்கப்பட்ட அளவுக்கு இந்த மகோன்னத கலைஞன்  அங்கீகரிகப்பட்டதில்லை.
இப்போது இந்த விஸ்வரூபம் தடை விவகாரமும் இதையே உறுதிப்படுத்தியுள்ளது.
தமிழகத்தை விட்டே செல்லத் தயார் எனும் அளவுக்கு கமலின் கூற்று மிக ஆழமான வருத்தத்துடன் பதிவு செய்யப்பட்டுள்ளது.


Kamal Haasan Speaks his heart out.



விஸ்வரூபம் தடை, இலங்கையிலும் இந்தியாவிலும், இது பற்றிய எதிர்ப்பு வாதங்கள் ஆகியன வரத் தொடங்கியதிலிருந்து நான் அவதானித்த விடயங்கள், சில விளக்கங்கள் மற்றும் நான் சிலரிடம் கேட்க இருக்கும் வினாக்களுக்கான இடுகையே இது.

நான் மனதில் தோன்றும் எண்ணங்களை என் மனது சொல்கின்றபடி (ஆனால் பொதுவாக மற்றவர் மனதுகள் நோகாதவண்ணம்) எனது Twitter, Facebook பக்கங்கள் வாயிலாக பதிவு செய்தே வருகிறேன்.

கமல்ஹாசன் எனக்குப் பிடித்த நடிகர், படைப்பாளி என்பதையும் தாண்டி விஸ்வரூபம் படம் வெளியாக முன்னமே எழுந்த எதிர்ப்புக்களின் பின்னணி தான் எனையும் யோசிக்க வைத்தது.
ஒரு படைப்பு வெளியான பிறகு வருகின்ற எதிர்ப்புக்கள் சாதாரணமானவை; விமர்சன ரீதியாக ஏற்கக் கூடியவை.
பொதுவெளியில் ஒரு படைப்பு வந்துவிட்டால் விமர்சனங்கள் வரும்.
ஆனால் வெளிவராத ஒரு படைப்புக்கு எதிர்ப்பும் தடையும் எனும்போதும், அது நாடு கடந்து இங்கேயும் பார்க்காதோர் எல்லாம் எதிர்க்கின்றபோது, அதிலும் பிரிவு ரீதியாக அந்த எதிர்ப்புக்கள் இருக்கையில் எல்லாப் பின்னணிகள் மற்றும் நோக்கங்கள் பற்றியும் யோசிக்க வேண்டி இருந்தது.

இணையப் பொதுவெளியில் கமலின் திரைப்படத்துக்கு எதிராக முதலில் வந்து விழுந்த கருத்துக்களை வாசித்த பின்னர் + விஸ்வரூபத்துக்கு எதிராக வந்த கருத்துக்களுக்குக் காட்டப்பட்ட எதிர்ப்புக்களை வாசித்த பின்னர் - எனது வார்த்தைகளை மிகத் தெளிவாகவே முன்வைத்திருந்தேன்.
அத்துடன் நான் எப்போதும் சமய சந்தர்ப்பவாதங்களையும், மதவாதிகளையும், மூட நம்பிக்கைகளையும் கடுமையாக வெளிப்படையாக எதிர்த்துவந்தமையையும் என்னை அவதானித்தவர்களும் என் நண்பர்களும் அறிவர்.
எந்த சமய அடையாளமும் இல்லாமல் இருப்பதால் நான் இந்த விடயத்தில் போலி மதச் சாயத்துடன் வெறுப்பை உமிழ்ந்தவர்களை நான் பக்குவமாகச் சாடியிருந்தேன்.
ஆனால் இணைய வாதப் பிரதிவாதங்கள் இரு இனங்களுக்கிடையிலான முறுகலாக, நிரந்தரப் பிரிவாக மாறக் கூடிய ஆபத்து இருந்ததை (இன்னும் இருப்பதை) மறுப்பதற்கில்லை.

இதில் திருந்தவேண்டியவர்களாக இரு தரப்பினருமே இருக்கிறோம்.

நான் சொல்வது தமிழர் - முஸ்லிம்களாக அல்ல.

விஸ்வரூபம் படம் வெளிவருவதை ஆதரிப்போர் மற்றும் எதிர்ப்போராக.

கருத்து சுதந்திரம் எப்போது சுதந்திரமாகவே இருக்கவேண்டும் என்று நினைப்பவன் நான்.
(எங்கள் உயிர்களை பறிக்கும் அளவுக்கு இல்லாதவிடத்தில் என்ற விடயத்தையும் இங்கே பதியவேண்டும்..)
வெளிவரவே கூடாது என்று வாதங்களை வைப்பவர்கள் சொல்கின்ற விடயங்கள், இஸ்லாம் சமயம் பற்றியும் முஸ்லிம் மக்கள் பற்றியும் படத்தில் மிகத் தவறாக சொல்லப்பட்டுள்ளது என்கிறார்கள்.
இலங்கையில் இது பற்றி வாதிட்டவர்கள் பலர் இதுவரை இதைப் பார்க்கவில்லை.
கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர் என்பது போல.
ஆனால் பார்த்தவர்கள் சொல்வது ஆப்கன் தலிபான்கள் பற்றித் தான் இதில் சொல்லப்பட்டுள்ளது; இஸ்லாமிய மக்கள் பற்றித் தப்பாக சித்தரிக்கப்படவில்லை.
சமயம் என்ற ஒரே அடிப்படையில் இதைக் கண்மூடித்தனமாக எதிர்ப்பது சரியாகுமா?

அடுத்து இதில் அப்படியே தவறாக முஸ்லிம்கள் பற்றி சித்தரிக்கப்பட்டிருந்தாலும் இதை பார்த்து எங்களுடன் பழகும் நம் முஸ்லிம் நண்பர்களை நாம் வெறுத்திடுவோம் என்ற வாதம் எத்துனை தூரம் சரியாகும்?

இவ்வளவு காலமும் இத்தனை விவகாரங்கள், சலசலப்புக்கள், பிரித்தாளும் சதிகளால் வராத பிளவா இதனால் வந்துவிடப் போகிறது?
பாருங்கள், இந்த விவகாரத்தில் நான் விஸ்வரூபத்தை, கமலின் படைப்புரிமை ஆற்றலை வெளிப்படையாக ஆதரித்தும் என்னைப் பற்றி அறிந்த என் முஸ்லிம் நண்பர்கள் என்னுடன் இன்னும் பழகுவதில் எந்தவொரு மாற்றமும் இல்லை.
அவர்களின் கருத்துக்கள் வேறுபட்டதாக இருக்கலாம்.
எதற்காக ஆதரவு என்பது சரியாகப் புத்தியில் ஏறினால் போதும்.

அடுத்தது தவ்ஹீத் ஜமாஅத் என்ற இந்த அமைப்பு.
இந்த அமைப்பும் அந்த ஜெய்னுலாப்தீன் என்ற கண்ணியமற்ற ஒரு பேச்சாளனும் கடுமையாக விமர்சிக்கப்பட்டபோது, பல முஸ்லிம் நண்பர்கள் சொன்ன விடயம் இவர்கள் இஸ்லாமிய வட்டாரத்தில் அங்கீகரிக்கப்பட்டவர்களோ அல்லது மார்க்க ரீதியாகத் தலைமை தாங்குமளவுக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டவர்களோ அல்ல என்பது தான்.

அப்படி இருக்கையில் இந்தப் பிரிவு எப்படி எல்லா இடங்களிலும் (இலங்கையிலும் கூட) ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகம் சார்பாகத் தன் கருத்தைப் பதிவு செய்ய அனுமதிக்கப்படலாம்?
இது இந்து மத மக்கள் மத்தியில் எப்போதுமே முற்றுமுழுதாக அங்கீகரிக்கப்படாத விஸ்வ ஹிந்து பரிஷத், சங்க பரிவார், RSS போன்ற அமைப்புக்களை இந்து மக்களின் பிரதிநிதிகள் என்று சொல்லும் அபத்தம் போன்றதல்லவா?
(மீண்டும் நான் எந்த மதமும் சாராதவன் என்பதை அழுத்தமாக இங்கே பதிகிறேன்)

இந்து சமய சூழலில் வளர்க்கப்பட்டவனாக இருந்ததால் நன்கு அறிந்த சமயமான அதில் காணப்படும் மூட நம்பிக்கைகளை முதலில் எதிர்த்தாலும், நான் தெரிவு செய்து சமய நம்பிக்கைகளை எதிர்த்துவந்திருக்கவில்லை.
எங்கே பிழை இருந்தாலும் அதைப் பகிரங்கமாக எதிர்க்கும் துணிச்சல் இங்கேயும் என்னை நேரடியாகப் பேச வைத்தது.
ஆனால், இதனால் எனது நண்பர்களை இழந்துவிடக் கூடாது என்பதால் தான் சில இடங்களில் அமைதி காத்தேன்.

இதில் தமிழர் எதிர் முஸ்லிம், கமல் எதிர் முஸ்லிம் என்ற வாதங்கள் எல்லாம் அபத்தம்.

கருத்து சுதந்திரம் எதிர் அரசியல் + போலி மதவாத சூழ்ச்சி என்பதே எனதும் நிலைப்பாடு.

தலிபான் தீவிரவாதிகளை தீவிரவாதிகள் என்று காட்டுவதில் என்ன தப்பு?
இதுவரை காலமும் அர்ஜுன், விஜயகாந்த் படங்களில் காட்டவில்லையா என்ற கேள்விக்கு சியர் தந்த எதிர்ப்பதில், இதில் அமெரிக்கர்களை நல்லவர்களாகக் காட்டியுள்ளார்கள் என்பதே.

சரி அந்தக் கோணத்தில் வரட்டுமே?
வந்து, பார்த்து எதிர்க்கலாமே? விமர்சன ரீதியாகத் தோற்கடிக்கலாம் தானே?
எத்தனை வேற்று மொழிப்படங்களில், தமிழர்களையே அல்லது இஸ்லாமியர்களையே தீயவர்களாக, தீவிரவாதிகளாகக் காட்டவில்லை?

இதற்குள் ஒருவர் நந்திக்கடல் - தமிழர் ஒப்பீடு வேறு...
இதுவரை அப்படி வராத மாதிரி.. சிரிப்பாக இல்லை?
அரச இயந்திரம் இதுகாறும் அப்படித்தானே செய்திகளைத் தருகிறது? பொறுத்துக்கொள்ள வில்லையா நாம்?
இந்த ஒப்பீட்டின் அடிப்படையே அபத்தம் என்று இதை ஆதரிப்பவர்களின் அறிவீனம் உணரவில்லையா?
இதை மேற்கோள் காட்டி ஒருவர் அனுப்பிய மடலை மறுதலித்தேன்.



ஒரு படைப்பு என்று வருகையில் எதிர்ப்பைக் காட்டலாம்; விமர்சன ரீதியாக சவால் விடலாம்.
ஆனால் வெளிவரவே கூடாது என்ற விதண்டாவாதமும் வெறுப்பும் ஏனோ?

முஸ்லிம் - தமிழர் என்ற பிரிவினையும் சண்டையும் எழுவதில் வேதனை தான்.. ஆனால் இதன் பின்னணி அரசியலில் உள்ள உண்மைப் பூதங்களை இனம் கானல் முக்கியம்.

நேற்றைய புதிய தலைமுறை தொலைகாட்சி நிகழ்ச்சியில் பத்திரிகையாளர் ஞானி கேட்ட ஒரு கேள்வி கொஞ்சம் நியாயமாகப் பட்டது - தலிபான் மற்றும் ஏனைய தீவிரவாதிகள் உங்கள் சமயத்தை தமது அடையாளமாக, காவலாகப் பயன்படுத்துகிறார்களே? இதை முதலில் தடுக்கவேண்டியது நீங்கள் தானே?
இதனால் தானே அந்தத் தீவிரவாதிகளைப் படங்களிலோ செய்திகளில் காட்டும் போது இஸ்லாமிய சமயமும் அப்பாவி ம்சுலிம் சமூகமும் பாதிக்கப்படுகிறது?
இதைத் தடுக்க உலகளாவிய இஸ்லாமிய சமூகம் எடுக்கவுள்ள நடவடிக்கை என்ன?
இது எனக்கும் நியாயமான கேள்வியாகவே படுவதால் வினாவாகவே விடுகிறேன்.

அடுத்து, இலங்கை இஸ்லாமிய சமூகம் இன்றைய காலகட்டத்தில்  பெரும்பான்மையின் சில தீயசக்திகளால் எதிர்கொள்ளும் இன்னல்கள் மத்தியில் ஒன்றாய் வாழும் தமிழ் சமூகத்துடனும் ஒரு திரைப்பட விவகாரத்துக்காக மோதவேண்டுமா?
இதை விட மிக முக்கியமான விடயங்கள் பல இருக்கையில் அதற்கான போராட்டங்கள் எல்லாம இல்லாமல் இதற்காக மட்டும் அனைவரும் வரிந்துகட்டி இறங்கி இருப்பது, பெரும்பான்மையை விட சிறுபான்மையுடன் மோதுதல் இலகு என்பதாலா?

தமிழ் என்ற மொழியால் நாம் ஓரினம் தானே? சமயம் தானே அடையாளங்களை வேறுபடுத்துகிறது?
இதிலேயும் பிரிந்து நின்று தனித்துவம் என்று தனிமைப்படவேண்டுமா?

விஷ வித்துக்களைக் கக்குகின்ற தமிழ் சகோதரர்களும் உணரவேண்டிய ஒரு விடயம், சிறுபான்மைகள் மேலும் சிதறிவிடக் கூடாது என்பதையே.

மதங்கள் மனிதருக்காகவே தவிர, மனிதரைப் பிரித்து விடுவதற்காக அல்ல என்பதை நாம் இன்னும் உணரவில்லையோ என்று நினைப்பு மேலும் மனிதனாக என்னை தலைகுனிய வைக்கிறது.

இன்னமும் உரத்து சொல்கிறேன்...
கமல் என்ற கலைஞனின் கலைப்படைப்பான விஸ்வரூபத்தை ஆதரிக்கிறேன்.
அதன் வெளியீட்டை விரும்புகிறேன்.
அதேவேளை அதில் இஸ்லாமிய நண்பர்கள் சொல்வது போல, ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகம் கீழ்த்தரமாக சித்தரிக்கப்பட்டிருந்தால், அவர்களது அடையாளங்கள், சமயம் அவமரியாதை செய்யப்பட்டிருந்தால் (குறியீடாகக் கூட) அவர்களது எதிர்ப்பு நியாயமானதே என்பதயும் ஏற்றுக்கொள்வேன்.

-எண்ணத்தில் வந்துவிழுந்த வேகத்தில் வினாக்களையும் விளக்கங்களையும் பதிந்துளேன்.

கமல் ரசிகனாக அல்லாமல் ஒரு கலைஞன் தனது படைப்புக்களை எம்மொழியில் தருவதற்கு இனித் தயங்குவானே என்ற நினைப்பில் ஒரு கலை ரசிகனாக மிக கவலையுடனும் கோபத்துடனும் எதிர்பார்த்திருக்கிறேன்.

விஸ்வரூபம்... ம்ம்ம்


தமிழ்நாட்டில் தடை நீங்கியது..

எத்தனை  திருப்பங்கள், குழப்பங்கள், திடுக் திடுக் கணங்களைத் தாண்டி இந்தத் தீர்ப்பு?

ஒரு மாநில அரசின் முட்டாள் தனமான வாதங்களை எதிர்த்து கமலின் வழக்கறிஞர்கள் நீதிபதியிடம் வைத்த நியாயமான வாதங்கள் வென்றிருக்கின்றன.

மதவாதிகளைத் (அடிப்படை இல்லாமல் படம் பார்க்காமலே, இதிலே ஆபத்துள்ளது என்று முதலில் இருந்து கடைசிவரை குரல் எழுப்பிய சிலரை மட்டும்)  தூண்டி விட்டு அப்பாவிகளை மனம் நோகச் செய்து அரசியல் நாடகம் ஒன்றைத் திரைப்பட உரிமைகளுக்காக தமிழ்நாட்டு அரசாங்கம் நடத்தியிருக்கிறது என்று பெரும்பாலானவர்கள் நம்ப நியாயம் இருக்கிறது.
ஆனால் கமல் என்ற ஒரு பெரிய நடிகனால். படைப்பாளியால் தனக்குக் குவிந்த அனுதாபம், ஆதரவு, தன்னிடம் பக்கபலமாக இருந்த பணபலம், புத்திஜீவிகளின் ஆதரவு , நுணுக்கமான ஆளுமையும் அணுகுமுறையும் என்று பல காரணிகளை வைத்துப் போராடி இந்தத் தடையை நீக்கி விஸ்வரூப வெற்றியை அடைய முடிந்தது.

இது அவருக்கும் அவரது விஸ்வரூபம் திரைப்படத்துக்கும் பெரிய இலவச விளம்பரமாகவே இனி அமைந்துவிடப் போகிறது.
படம் என்ன தான் மரண மொக்கையாகவே இருந்தாலும் கூட, இனி கமலின் ஆதரவாளர்கள் மட்டுமல்ல, கருத்து வெளிப்பாட்டின் ஆதரவாளரும் கூட தங்களுக்கு ஏற்பட்ட ஒரு அவமானமாக, ஒரு சவாலாகக் கருதி விஸ்வரூபத்தை வெற்றியடைய வைப்பார்கள் என்பது நிச்சயம்.

ஆனால் இதே மாதிரியான தடை, போராட்டம், எதிர்ப்பு விளையாட்டுக்கள் இனியும் இளைய, புதிய படைப்பாளிகளையும் பதம் பார்க்கையில் அவர்களால் இவ்வாறு உத்வேகத்துடன் போராட முடியுமா?
அவர்களின் முடக்கங்கள் நல்ல படைப்புக்களை முடக்கி விடும் அபாயமும் இருக்கிறது.

இதற்கெல்லாம் ஒரே வழி துப்பாக்கி படம் பற்றிய சர்ச்சைகளுக்கு தமிழக நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு - திரைப்படத்தின் கருத்துக்கள் சொல்லப்படும் விடயங்கள் சம்பந்தப்பட்ட சர்ச்சைகளுக்கு தணிக்கை சபையில் மேன்முறையீடு செய்வதே சிறந்த வழி என்பதே இனித் தொடரப்படவேண்டும்.

விஸ்வரூபம் பற்றிய வழக்கு தமிழகத்தில் கமல் தரப்புக்கு, திரைப்பட வெளியீட்டுக்கு சாதகமாக வந்தவுடன் நான் பதிந்த Facebook status -

கலை+கருத்து வெளிப்பாடு வென்றது; அரசியலும் அவதூறும் தோற்றது.
மதமும் மார்க்கமும் இங்கே அரசியலுக்காகவே பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது தெளிவு.

இதை முன்பிருந்தே நான் நண்பர்களிடம் மறக்காமல் சொல்லிவந்தேன்.
இனியும் தேவையற்ற சீண்டல்கள் வேண்டாம்.

இலங்கையிலும் சிக்கல்கள் இருக்காது என்று நம்பியிருப்போம்.
காரணம் தணிக்கை சபைத் தலைவர் தன்னைப் பொறுத்தவரை விஸ்வரூபத்தில் எந்தவொரு சர்ச்சையும் இல்லை என்றிருக்கிறார்.

நல்ல முயற்சிகளும் நம்பிக்கையும் உண்மையும் என்றும் தோற்பதில்லை.

லங்கைத் திரைப்படத் தணிக்கை சபை ஏற்கெனவே பச்சைக் கொடி காட்டி இருந்தாலும் இங்கேயும் எழுந்த முஸ்லிம் தரப்பு எதிர்ப்புக்களால் சற்று ஒத்தி வைத்துள்ளார்கள்.
தமிழகத் தீர்ப்புக்காக இவர்களும் காத்திருந்ததாகப் பட்சிகள் கூறியிருக்கின்றன.
எனவே நாளை படம் இலங்கையில் திரையிட ஓகே சொல்லப்படலாம் என நம்பப்படுகிறது.

காரணம் வீரகேசரிக்கு இலங்கை தணிக்கை சபையின் தலைவர் காமினி சுமனசேகர வழங்கிய பேட்டியில் சில விடயங்களைத் தெளிவாக சொல்லியுள்ளார்.

கேள்வி: இலங்கை தணிக்கை சபை என்ற வகையில் விஸ்வரூபம் தொடர்பில் உங்களுடைய கருத்தினை கூற முடியுமா?

பதில்: என்னைப் பொறுத்தவரையில், திரைத்துறையைச் சார்ந்தவன் என்ற ரீதியில் விஸ்வரூபம் திரைப்படத்தில் பிழை என்று சொல்வதற்கு எதுவும் இல்லை. மதங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக கருத்துக்கள் இல்லை.

இலங்கையில் விஸ்வரூபம் திரையிடப்படுமா? தணிக்கை சபை விளக்கம்

காத்திருப்போம்....

ஆனால் எதிர்ப்புத் தெரிவிக்கும் தரப்பானது மேலிடம் வரை அழுத்தம் கொடுக்குமோ என்ற நிலை தான் யோசிக்க வைக்கிறது.

இப்போது இருக்கும் நிலையில் இலங்கையின் முஸ்லிம் சமூகமானது எல்லாப் பக்கமிருந்தும் அழுத்தங்களை பெரும்பான்மையிடமிருந்து அடைந்துகொண்டிருக்கும் நிலையில் (ஹலால், பள்ளிகள் உடைப்பு, பொது பலசென விவகாரங்கள் என்று பலப்பல) அவர்கள் இந்த விடயத்திலாவது வென்று காட்ட, அல்லது தங்கள் உணர்வுகளைக் கொட்ட நினைப்பார்கள்.

ஆனால் இந்த விஸ்வரூப விவகாரமானது சாதாரண மக்கள் மத்தியில் பெரிதாக ஆழமாகப் பேசப்படாவிட்டாலும் இணைய வெளியில், சமூக வலைத்தளங்களில் பெரும் மோதலையும், அமைதியற்ற சூழ்நிலையையும் கசப்புணர்வுகளையும் ஏற்படுத்துவிட்டிருக்கிறது.
இது மாறா வடுக்களையும் ஏற்படுத்தியுள்ளது.

இது பற்றிய சில கேள்விகள், தெளிவாக்கங்கள், மற்றும் புரிதல்களைப் பதியவேண்டிய அவசியம் ஒரு ஊடகவியலாளனாகவும், கருத்து சுதந்திரத்தை மதிப்பவனாகவும், நண்பர்களாகப் பலருடனும் பல மட்டத்தில் பழகுபவனாகவும், ஒரு மனிதனாகவும் பதியவேண்டி இருக்கிறது.

அதை நாளை (இலங்கையில் விஸ்வரூபம் திரையிடப்பட்டால் எப்படியும் மாலையாகும் தானே?) விரிவாகப் பதிகிறேன்.

அதுவரை... ஒரேயொரு விடயம்...

விஸ்வரூபம் திரைப்படம் மற்றும் கமலுக்கான எனது ஆதரவு  வெளிப்படையாகவே இருந்தது. காரணத்தையும் நான் மிகத் தெளிவாக சொல்லி இருந்தேன்.

ஒரு கருத்து, கலை வெளிப்பாட்டுக்கான சுதந்திரமாக இதை நான் பார்த்தேன்.
ஒரு படைப்பு வெளியான பின்னரே அதைப் பற்றிய விமர்சனங்கள், எதிர்வினைகளால் அதை எதிர்க்கலாம் அல்லது ஆதரிக்கலாம்.
மற்றும்படி எந்த நல்ல உள்ளம் கொண்டவரையும் எதிர்க்கக் கூடாது என்பதிலும் மிகக் கவனமாக இருந்தேன்.

ஆனால் குதர்க்கம் பேசுவோர் மற்றும் வேண்டுமென்றே பிரிவினைவாதம் பேசியும் பேதம் பார்த்தும் தடி  என்று கோஷம் இட்டோரையும் நான் பகிரங்கமாகவே எதிர்த்திருந்தேன்.

என் நண்பர்கள் யாராயினும் புரிந்துகொண்டார்கள்; புரிந்துகொள்ளாதவர் என்னையும் சரியாக அறிந்து கொள்ளாதோரே.

இனியும் மோதல்கள், குத்தல்கள், விஷமப் பிரிவினைகள் மற்றும் விதண்டாவாதப் பிளவுகள் வேண்டாம்.
நாளை 'விஸ்வரூபம்; தமிழகத்தில் பார்த்து விமர்சனங்கள் வரட்டும்... இங்கே ஆறுதலாகத் தெரிந்து, தெளிந்து கொள்வோம்.

November 15, 2011

கமல்ஹாசன் - இன்னும் சொல்கிறேன்


நடிகர் கலைஞானி கமல்ஹாசனின் பிறந்தநாளுக்காக இட்ட பதிவின் தொடர்ச்சி இது...



கமல் - இந்தப் பெயரைக் கேட்டவுடன் எனக்கு (உங்களில் பலருக்கும் கூட இருக்கலாம்) மனதில் ஞாபகம் வரும் சில விஷயங்கள் - கலை, காதல், புதுமை, தேடல், அறிவுஜீவித்தனம், துணிச்சல், நாத்திகம், வெளிப்படை...
இன்னும் பல பல...

இவற்றுள் எல்லாமே வரம்புகள் மீறியவையாகவும், மரபுகள் தாண்டியவையாகவும், இதனால் சர்ச்சைக்குரியவையாகவும் அமைந்திருப்பது உண்மை தான்.
அப்படி இருந்தும் பின் வாங்காமல் ஒளிந்துகொள்ளாமல் சமுதாயத்துக்காகத் தன்னை மாற்றிக் கொள்ளாமல், விமர்சனங்கள் பற்றி அலட்டிக் கொள்ளாமல் தான் தானாகவே வாழ்கிறார் பாருங்கள், அந்த விடயம் பதின்ம வயதுகளில் எனக்கு ஒரு கிளர்ச்சியையும் கமல் மீதான அபிமானத்தையும் அதிகரித்தது.

ஊடகத் துறைக்கு வந்து தான் என்னால் பல துறைசார் பிரபலங்களை சந்திக்கக் கூடிய வாய்ப்புக் கிட்டியது.
ஆனால் என் மனதுக்கு மிக நெருக்கமான நால்வரை நான் ஊடகத் துறைக்கு வராத பாடசாலைக் காலத்திலேயே சந்திக்கும் வாய்ப்புக் கிட்டியது.
ஒருவர் ஆஸ்திரேலியக் கிரிக்கெட் முன்னாள் தலைவர் அலன் போர்டர்.
இலங்கையின் சாதனை மைந்தன் முத்தையா முரளிதரன்
எனக்கு மிகப் பிடித்த கவிப் பேரரசு வைரமுத்து 

அடுத்தவர் ஹீரோ கமல்..

ஆனால் வேதனையான விடயம்...
முதல் மூவரையும் சந்தித்துக் கை குலுக்கி ஒரு சில வார்த்தைகள் பேசும் வாய்ப்புக் கிட்டியது;புகைப்படங்கள் எடுத்துக் கொண்டேன்; கவிஞர் வைரமுத்துவிடம் என் கவிதையைக் கொடுத்து ஆசியும் எழுதிப் பெற்றுக் கொண்டேன்.

ஆனால் கமலை நான் நேரில் கண்டது கொழும்பில் நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசனுக்கு விழா எடுத்த வேளையில் வந்திருந்த நம் ஹீரோவை மிகத் தொலைவிலிருந்து பார்த்துக் கை காட்டியபோது தான்.

அதற்குப் பின்னர் இன்று வரை அப்படியொரு வாய்ப்புக் கூடக் கிட்டவில்லை.
ஆனால் முன்பு சூரியன் FM வானொலியில் வேலை செய்தபோது தொலைபேசி மூலமாகக் கமல்ஹாசன் அவர்களைப் பேட்டி எடுக்கக் கூடிய வாய்ப்புக் கிட்டியது. (2005)

எந்தவொரு தயாரிப்பும் இல்லாமல் அவசர அவசரமாக உடனடியாக எடுத்த பேட்டி அது.
கமலையே நிறைய வாசித்தவன் என்பதால் சுருக்கமாக, ஆனால் சுவாரஸ்யமாக அவரைக் கிளறி ஒரு பதினைத்து நிமிடத்தில் பல விஷயங்களை அவரிடம் இருந்து எடுத்தேன்.

மும்பாய் எக்ஸ்பிரஸ் படம் வர முதல் அவர் அளித்த அந்தப் பேட்டியில் தமிழ்ப் படத் தலைப்பு, அவர் படங்களில் சொல்லும் 'அவரது' கருத்துக்கள், நகைச்சுவை, வாசிப்பு, சகலதுறைத் தன்மை என்று சில விடயங்களை மனம் திறந்து பேசி இருந்தார்.

அந்தப் பேட்டியை ஒலிபரப்பிய நேரம் என் கால்கள் நிலத்தில் நிலை கொண்டிருந்ததா என்று எனக்கு ஞாபகம் இல்லை.

அதிலும் கடைசியாக "உங்கள் தமிழ் அருமை; சென்னை வரும்போது வாருங்கள், சந்திக்கலாம். சில நூல்களும் தருகிறேன்" என்று கமலின் குரலில் கேட்ட வார்த்தைகள் மெய்ம்மறக்க வைத்திருந்தன.

ஆனால் அதன் பின் சென்னை பல தடவை போனபோதும் ஏனோ ஆழ்வார்ப்பேட்டை (அங்கே தானே இன்னும் இருக்கிறார்) பக்கம் போக எண்ணவில்லை.
ஆனால் இன்று அந்த ஒலிப்பதிவும் என்னிடம் இல்லை..

பார்க்கலாம் என்றாவது ஒருநாள் ஒரு முழுப் பேட்டி எடுக்காமல் போய்விடுவேனா?



இன்னொரு விடயம், எனது பதினாறாவது வயதில் முதல் தரம் அம்மாவுடன் இந்தியா போன வேளையில் (அந்த நேரம் தான் கவிஞர் வைரமுத்து அவர்களையும் முதல் தடவையாக அவர்களின் வீட்டிலேயே சந்தித்தது)
தெருவுக்குத் தெரு ஒவ்வொரு நடிகருக்கு ரசிகர் மன்றத் தட்டிகளும்,கதாநாயகர்களின் கட் அவுட்டுகளும் எழுந்து நின்றதைப் பார்த்துக் கொண்டே போன எனக்கு "கமல்ஹாசன் நற்பணி மன்றம்", "கமல் நற்பணி மன்றம் முன்னெடுக்கும் இரத்த தான முகாம்" போன்ற தட்டிகள் மனத்தைக் கவர்ந்தன.

அன்று முதல் இன்று வரை எனது பிறந்த நாளின் போதும், வருடத்தில் குறைந்தது இரு தடவையும் மறக்காமல் இரத்த தானம் செய்து வருகிறேன்.
(அதுவும் உரியவருக்கு மட்டும் என்று உறுதிப்படுத்தியே வழங்குகிறேன். தேவையானவரை எனது இரத்தம் போய்ச் சேரவேண்டும் என்பதில் மிகக் கவனமாக இருக்கிறேன்)

கமல் என்றவுடன் அவரது புதிய முயற்சிகளும் அதனோடு சேர்ந்த riskகளும் ஞாபகம் வருவது இயல்பே..
(சிலரின் பொதுப் பார்வையில் தோற்றுப் போகும் அவரது படங்கள்)
கமலின் தோற்றுப் போன சில அருமையான படங்கள் அந்தந்தக் கால கட்டத்தில் அவர் மீது பெரும் மதிப்பையும், இக்காலத்தில் அந்தத் திரைப்படங்களைப் பார்க்கும் போதும், அதே மாதிரியான தழுவலில் வரும் இந்தக் காலப் படங்களைப் பார்க்கும்போதும் வியப்பையும் தருகின்றன.

அந்தக் காலத்தில் காலத்தால் முந்தியனவாகக் கருதப்பட்டு, தோல்வியைத் தழுவிய கமல் படங்கள், இந்தக் காலத்தில் புதிய இயக்குனர்களால் கொண்டுவரப்பட்டு வெற்றி காணும்போது கொஞ்சம் கடுப்பாகவும் இருக்கும்.

ஆனால் இப்போதைய நடப்புக்களை அப்போதே நினைத்தவர் இந்தக் கலைஞானி என்ற பெருமையும் எட்டிப் பார்க்கும்....

ஒரு நடிகனைத் தாண்டி, படைப்பாளியாக கமலை ரசித்த, வியந்த படங்கள் பல..
 முன்பு ரஜினி 12 தந்தது போல கமலின் ரசித்த படங்களைப் பட்டியல் இட்டுத் தொடர் பதிவாகத் தரும் எண்ணம் இருப்பதால் அவற்றைப் பின்னர் பார்க்கலாம்..

எனினும் கமல்ஹாசன் என்ற கலைஞனின் சில 'தோல்வியுற்ற' (வர்த்தக ரீதியாக) மகாநதி, குணா, குருதிப்புனல், அன்பே சிவம்,ஹே ராம் போன்ற திரைப்படங்கள் எனக்கு மனதில் இன்றும் எதோ சிறு பாதிப்பையாவது ஏற்படுத்தியவை.
அவை தழுவல்கள், உருவல்கள் என்று உணர்ந்த காலம் அண்மையில் வந்தபோதும், தமிழில் அந்தத் துணிச்சலான முயற்சிகள் எடுத்தவர் என்பதால் பெருமையே.

கமலின் சீர்திருத்தக் கருத்துக்கள், சீரியஸ் கருத்துக்கள் சிந்திக்க, சிலிர்க்க வைத்த அளவுக்கு அவரது சமயோசித நகைச்சுவைகளையும், கோர்வையாக வந்துவிழும் சாதுரிய கலகல சிரிப்பு வெடிகளையும் ரசிக்கிறேன்.
அந்த நகைச்சுவைகளிலும் ஒருவித அறிவுஜீவித்தனம் சிந்திக்க வைக்கும் ஆற்றல் விரவிக் கிடக்கும்.
தொடர்ச்சியாக உரையாடலை அவதானிக்காது போனால் தவறிவிடும்..
இதனால் சாதாரண அடி, உதை விழும் / இரட்டை அர்த்த நகைச்சுவைகளை ரசிக்கும் பலருக்கு கமல் பாணி நகைச்சுவைகள் பிடிக்காமல் போவதில் ஆச்சரியமில்லை.

 மைக்கேல் மதன காமராஜன், சதி லீலாவதி, சிங்காரவேலன், தெனாலி, பஞ்சதந்திரம், பம்மல் K சம்பந்தம் என்று கமல் சிரிக்கவைத்த திரைப்படங்களின் வரிசையும் நீண்டது.

அதிலும் கமல் - கிரேசி மோகன் இணைப்பு நான் ரசிக்கும் ஒன்று..
இதே போல கமலின் சில முக்கிய இணைப்புக்களை ஒரு ரசிகனாக இன்றும் ரசிக்கிறேன்..
கமல் - பாலசந்தர்
கமல்- சுஜாதா
கமல் - இளையராஜா
கமல் - வைரமுத்து
கமல் - SPB
கமல் - ரஜினி
கமல் - ஸ்ரீதேவி
கமல் - அம்பிகா
கமல் - K.S.ரவிக்குமார்
கமல் - சிங்கீதம் சீனிவாசராவ்

கமலை வைத்து யார் இயக்கினாலும் நிச்சயமாக மறைமுகமாகக் கமல் தான் அங்கே இயக்குனராகிறார் என்பது அனைவரும் அறிந்ததே என்றாலும் கமல் தனித்து இயக்குனராக வெளிப்பட்ட இரு சிறந்த படங்கள் என நான் நினைப்பது - விருமாண்டி, ஹே ராம்..

இரண்டிலும் கமல் சினிமா விட்டுக்கொடுப்புக்களுக்கு உட்படவில்லை என்பதே நான் உணரும் யதார்த்தம்.
அப்படியான படைப்புக்களை ஒரு கமல் ரசிகனாக அல்லாமல் சினிமா ரசிகனாக எதிர்பார்க்கிறேன்.

மர்மயோகி, மருதநாயகம் இரண்டையும் அதற்காகவேனும் யாராவது தயாரித்தால் என்ன?

கமலை ஒரு பாடகனாக நாம் பலர் ரசித்திருப்போம்..
பேசும்போதே கமலிடம் இருக்கும் அந்தத் தீர்க்கமான ஆழமான கம்பீரமான குரல் பாடலில் வரும்போது உணர்ச்சிகளின் குவியலாக வரும்....

அந்தக் கால பன்னீர்ப் புஷ்பங்களே, மூன்றாம் பிறையில் நரிக்கதை, நினைவோ ஒரு பறவை என்று ரசித்த பாடல்களில் உச்சம் என்று சொல்லக் கூடிய மேலும் சில கமலின் குரலில் பாடல்கள்..
தென் பாண்டி சீமையிலே - நாயகன்
யார் யார் சிவம் - அன்பே சிவம்
கண்மணி அன்போடு - குணா
பேய்களை நம்பாதே - மகா நதி
கடவுள் பாதி - ஆளவந்தான்
தசாவதாரம் பாடல்

உங்களில் யாராவது கமல், அமரர் சுஜாதா ஆகியோரின் பங்களிப்பில் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் வெளிவந்த The Blast இசைத் தொகுப்பு பாடல்கள் கேட்டுள்ளீர்களா?
அத்தனை அருமையாக இருக்கும்.

கமலை ஒரு எழுத்தாளராக, கவிஞராக ரசிக்க நிறையவே பொறுமையும், ரசனையும் தேவை..
கமலின் எழுத்துக்கள் அவரையே மாதிரி விரிவானவை, பரந்து சிந்திப்பவை + மேலோட்டமாகப் பார்த்தால் சர்ச்சைகளுக்குரியவை.

உதாரணத்துக்கு இந்தக் கவிதை.....

ஈழத் தமிழர்களின் வலியைப் பதிவு செய்ய ‘போருக்கெதிரான பத்திரிகையாளர்கள்’ உருவாக்கியுள்ள ‘மௌனத்தின் வலி’ புத்தகத்தில்…

‘விட்ட இடத்தில் கதையைத் தொடங்க இன்னொரு குழந்தை பிறக்கும்!’
காக்க ஒரு கனக (AK) 47
நோக்கவும் தாக்கவும் ஒரு நொடி நேரம்
தோற்கவும் அதே கண நேரம்தான்
ஈயம் துளைத்துக் கசிந்து சிவந்த
காயம் தொட்டுக் கையை நனைத்து
விண்ணே தெரிய மண்ணில் சாய்ந்தேன்
முன் காக்க மறந்த அமைதியைக் காத்து.
மாட்டுத் தோலில் தாய்மண் அறைபட
பூட்ஸுக் கால்களால் கடந்தனர் பகைவர்.
விட்ட இடத்தில் கதையைத் துவங்கச்
சட்டென இன்னொரு குழந்தை பிறக்கும்
அதுவரை பொறுத்திரு தாயே, தமிழே
உதிரம் வடியும் கவிதை படித்து…
-கமல்ஹாஸன்

இன்னொன்று மன்மதன் அம்புக்காக கமல் எழுதியது..

சும்மா யோசித்துப் பார்த்தேன்.. இதுவரை கமல் எடுக்காத அவதாரம் எது?
மகளை இசையமைப்பாளராகவும் ஆக்கிவிட்டார்.
எனினும் கமலை ஒரு முழு எழுத்தாளராக ஒரு நூல் வழியாக வாசித்து இன்னும் உணர,அறிய ஆசைப்படுகிறேன்.

கமல் பற்றிப் பதிவிட இன்னும் இருக்கு.. ஏராளம் இருக்கு.
எடுத்துக் கோர்க்கவும் கொட்டவும் நேரம் தான் இல்லை.
கிடைக்கும் நேரத்தில் வருகின்ற விஷயங்களை இனியொரு தடவை தருகிறேன்.


குறிப்பு - படங்கள் அனைத்தும் இணையத்தில் சுட்டு நான் செதுக்கி (சொதப்பி) மெருகேற்றியவை.



November 07, 2011

கமல்ஹாசன் - உள்ள நாயகன்

கமல்ஹாசன்....
எனது ஆதர்ச நாயகன்.. .  எனது அபிமானத் திரை நாயகன்..

ஒவ்வொருவருக்கும் வாழ்வில் ஒவ்வொரு role modelகள், முன்மாதிரிகள் இருப்பார்களே.. எனக்கு அது போல இருக்கும் பல role modelகளில் சிறுவயது முதல் மாறாமல் ஆழப் பதிந்து தாக்கத்தை உருவாக்கிய ஒருவர் கமல்.(ஒவ்வொரு துறைகளில் ஒரு பிடித்தவர் இருப்பாரே அதைச் சொன்னேன்.. அவர்கள் என் மானசீக வழிகாட்டிகள்/குருக்கள்)



எனக்கு(ம்) பிடித்த கமலுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

கலைத் துறை, ஊடகத் துறையில் சிறுவயது முதல் கொண்ட ஆர்வம், தேடலும் கூட அதற்கான காரணமாக இருக்கலாம்.
ஆனால் சினிமா என்பதைப் பார்த்து ரசிப்பதோடு, சில விஷயங்களை அதனூடாகத் தேடி அறிந்து கொள்ளும் உசாத்துணையாகக் கொள்வதோடு நின்றுவிட வேண்டும்; வாழ்க்கையை அதற்குள் தொலைத்துவிடக் கூடாது என மனதார நம்பும், மற்றவருக்கு முடிந்தளவு எடுத்துக் கூறி வரும் எனக்கு கமலைப் பிடித்த அளவு வேறு எந்தக் கதாநாயக நடிகரையும் இவ்வளவு காலம் தொடர்ச்சியாக இந்தளவு ஆழமாகப் பிடிக்கவில்லை.

இது ஆச்சரியமான விடயமே இல்லை.

கமல் ஒரு சகலதுறையாளன். தனியே ஒரு சாகசக் காரனாக, எப்போதும் ஒரு திரைப்படத்தின் இறுதியில் வில்லன்களை அடித்து வீழ்த்தி வெற்றிகளையே சுவைக்கும் ஒரு அசாதாரண, ஆச்சரியமான, கற்பனை நாயகனாக இல்லாமல் எம்மைப் போல உணர்ச்சிகள் நிறைந்த, வாழ்க்கையில் தோல்விகளையும் சோகங்களையும் காணுகின்ற சாதாரண மனிதராகவும் சிறுவயது முதல் கமலைத் திரையில் பார்த்தது இதற்கான முக்கியமான காரணமாக இருக்கலாம்.



ஆனால் இன்று வரை கமலின் புகைப்படங்களை வைத்துப் பூசை செய்து பக்தனாகவோ , கமல் செய்வதை எல்லாம் அப்படியே பின்பற்றி ஒரு அடிமையாகவோ, கமல் பற்றித் தப்பாகக் கதைத்த யாரோ ஒருவருடன் சண்டை பிடித்து வெறியனாகவோ நான் நடந்து கொண்டது கிடையாது.
அதில் இன்று வரை மிகத் தெளிவாகவே இருந்து வருகிறேன்.

கமலின் சில படங்கள், அவரது சில கருத்துக்கள், அவரது வாழ்க்கை நடைமுறைகள் பற்றி எழுகின்ற விமர்சனங்களை விமர்சனங்களாகவே பார்ப்பதுண்டு.
கமல் எனக்குப் பிடிக்கும் என்பதால் விமர்சனங்கள் எனக்கு எதிரானவை என்றும், விமர்சிப்போர் என் எதிரிகள் என்றும் நான் எண்ணியது/எண்ணுவது கிடையாது.
ஆனாலும் கமலைப் பிடிக்கும்..

எனக்கு நினைவு தெரிந்த வயதில் முதலில் பார்த்த கமல் படம் எதுவென்று நினைவுகளைப் பின்னோக்கி இழுத்துப் பார்க்கிறேன்..
மூன்றாம் பிறை?? சலங்கை ஒலி?? வாழ்வே மாயம்?? அவர்கள்? இளமை ஊஞ்சலாடுகிறது? நீயா??
சரியாக ஞாபகம் இல்லை.

ஆனாலும் அந்தக் காலக்கட்டத்தில் பார்த்திருந்த மற்ற எல்லாக் கதாநாயகர்களை விடவும் எதோ ஒரு வித்தியாசம் கமலிடம் இருப்பதை உணர்ந்திருந்தேன்.
அப்போது கமல் தான் என் ஒரே favoriteஆ என்று இப்போது யோசித்தால் தெரியவில்லை..

காரணம் ரஜினியின் பொல்லாதவன், தில்லு முல்லு போன்ற படங்கள் அந்தக் காலத்தின் எனது விருப்புக்குரிய படங்களாக இருந்திருக்கின்றன.
அதன் பின் வந்த ஆண்டுகளில் ஆனந்தபாபு, விஜய்காந்த், அரவிந்தசாமி, மாதவன், அஜித், மம்மூட்டி, ஷாருக் கான், அமீர் கான், விக்ரம், சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி என்று விருப்பங்கள் நீண்டாலும் நிரந்தரமாக நேசிக்கும் ஒரு திரை நாயகன் என்றால் கமல் மட்டும் தான்.

இத்தனை காலம் ரசனை மாறாமல் கமல் மீதான விருப்பம் இருப்பதற்கான காரணங்களை யோசித்துப் பார்த்தேன்...
இது ஒரு வெறித்தனமான ரசிக விருப்பாக இல்லாமல், வியப்போடும் நயப்போடும் கூடிய ஒரு நேச மதிப்பு என்று தான் கருதவேண்டியுள்ளது.



அண்மையில் நான் மகாநதி திரைப்படப் பாடல் வரிகளை பேஸ் புக்கில் பகிர்ந்திருந்தேன்..
எதை யார் சொன்ன போதும் எதிர்க்கேள்வி ஒன்று கேளு
பெரியோர்கள் சொன்ன பாடம் அறிவாலே எடை போடு..
# மகாநதி
அதில் வரும் இந்த வரிகள் போல சிறுவயதில் இருந்து எதையும் கேள்வி எழுப்பி மறு வாசிப்புக்கு உட்படுத்தியே நம்பி வந்த மனப்பாங்கு எந்த ஒரு விடயத்தையும் அறிவுரீதியாகவும் அணுகி வந்த இருவர் மேல் மனதார நேசிக்கக் காரணமாக அமைந்தது.

அதில் ஒருவரை நேசிக்க இன்னொருவர் காரணமாக அமைந்திருக்கலாம் என்று இப்போது எண்ணுகிறேன்.
ஒருவர் எழுத்தாளர் அமரர் சுஜாதா.
இன்னொருவர் சாட்சாத் கமல்ஹாசன்.

கமலின் வித்தியாசமான சில சிந்தனைக் கருக்கள் அவரது சில பேட்டிகளில் தொனித்த ஒரு ஆழ்ந்த புலமை (அதை சிலர் ஞானச் செருக்கு என்று சொன்னாலும் அதுவும் எனக்குப் பிடித்ததே), 90களுக்குப் பின்னைய படங்களில் கமலின் நவீனத்துவ, பின் நவீனத்துவ சிந்தனைக் கூறுகளும், சில பல தத்துவார்த்தங்களும் இவர் ஒரு genius, something different from others என்று எண்ண வைத்திருந்தன.

சலங்கை ஒலி படம் பார்த்த என் தம்பி செந்தூரன் (அப்போது வயது நான்கு) பாரத நாட்டியம் பழகவேண்டும் என்று அடம்பிடித்துப் பழகியது தனிக் கதை.

அந்த சிறுவயதிலேயே மூன்றாம் பிறை, பதினாறு வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள், மீண்டும் கோகிலா, கல்யாண ராமன், அபூர்வ ராகங்கள், சொல்லத் தான் நினைக்கிறேன் என்று வித விதமான கமலின் படங்கள் பார்த்து "அட இந்தாளால் மட்டும் எப்பிடி இது முடியுது?" என்று ஆச்சரியப்பட்டுப் போயிருக்கிறேன்.

அப்போது வெளிவந்த 'இதயம் பேசுகிறது' இதழில் கமல் பேட்டியொன்றில் சொல்லியிருப்பார் "எனக்குப் படிப்பில் பட்டம் இல்லை; ஆனாலும் நானாக சுயமாக கற்க வேண்டியவை என்று நான் நினைக்கும் எல்லாவற்றையும் கற்கிறேன். நிறைய வாசிக்கிறேன். அப்போது தான் இந்த உலகையும் மனிதரையும் வாசிக்கக் கூடியதாக இருக்கும்".

வாசிப்பில் ஈடுபாடு உடைய எனக்கு இது ஒரு புதிய உத்வேகம் தந்தது.
பின்னாளில் வானொலியில் நுழைந்தபோதும் மற்றவர் மாதிரியில்லாமல் வித்தியாசமாக இருக்கவேண்டும்; நிகழ்ச்சிகளை வித்தியாசமாகத் தரவேண்டும் என்ற ஒரு வெறியை வழங்கியதும் கமலின் இதுமாதிரியான விஷயங்கள் தான்.

போட்டி நிறைந்த உலகில் விஷய ஞானத்தோடும், வித்தியாசமாகவும் முன்னேறினாலே மற்றவரிடமிருந்து தனித்துத் தெரியக் கூடியதாக இருக்கும் என்று கமலை விட வேறு யாரைப் பார்த்து அதிகமாக உணர முடியும்?

எம் துறையில் தொடர்ந்து நீடிக்க எம்மை நாமே update செய்துகொள்வது அவசியம் என்பதை தம் தேடல், வாசிப்பு மூலமாக அடிக்கடி சொல்லிவந்த என் வானொலிக் குரு எழில்வேந்தன் அண்ணாவும், மானசீக Role modelஆன திரு.அப்துல் ஹமீத் அவர்களும் போலவே கமல்ஹாசனும் அமைந்துபோனது என்னுடைய ரசனைக்கான வெற்றி.

மனிதனையும் மனசாட்சியையும் நம்புவோருக்கு மதமும் கடவுளும் தேவையில்லை என்று கமல் நினைத்ததை நான் விரும்பவில்லை. நான் மிகுந்த பக்தி நிறைந்த ஒரு குடும்பத்தில் அதுவும் இரு சமய நம்பிக்கைகள் ஒன்றாக இணைந்த ஒரு குடும்பத்தில் வளர்ந்தவன்.

ஆனால் காலப்போக்கில் கேள்விகேட்டு எதையும் ஏற்றுக் கொள்ளும் மனப்பாங்கில் சமயம், கடவுள் பற்றிய என் கேள்விகளுக்கு எங்கணும் பதில் இல்லாமல் பாடசாலை வாழ்க்கை முடியும் தறுவாயில் நான் சமயம் இல்லாதவனாக மாற அங்கேயும் கமலுடன் ஒத்திசைகிறேன்.

தேடல் என்பது எப்போதுமே எனக்குப் பிடித்த விஷயம்.. கமலிடமும் எனக்கு அது மிகப் பிடித்தது.

கமல் ஆங்கிலப் படங்களில் இருந்து சுட்டுத் தந்த படங்களும், வெளிநாடுகளில் இருந்து எமக்குப் பெற்றுத் தந்த தொழினுட்பங்களும் அதற்கான சான்றுகள்..
மற்றவர்கள் ஆங்கிலப்படங்களை scene by scene ஆக சுடும்போதும்,பாத்திரப் படைப்புக்களை அப்படியே எடுக்கும்போதும் உறுத்துவதால் தானே பாய்கிறோம்.

ஆனால் கமல் சுட்டவை, உருவியவை அப்படியே கமலோடும் கதையோடும் பொருந்திப் போவதும், எத்தனை காலத்துக்குப் பின் எமக்குத் தெரியவருவதும் கமலின் தேடலுக்கும் அந்த தேடலின் பின்னதான தமிழோடு இணைத்து மறுவாசிப்புக்கு உட்படுத்தித் தருவதற்குமான வெற்றி என்றே நான் நினைக்கிறன்.

கமலின் அந்த அதீத ஆற்றல் அதிகமாக வெளிப்படும் சகலதுறைத் தன்மை, அறிவு ஜீவித்தனம் - இது தான் கமலை அடிமட்ட ரசிகர்கள், ஒரே கோணத்தில் மட்டும் சிந்திக்கும் பலரிடமிருந்து வேறுபடுத்தி தனிமைப்படுத்துகிறது.
சிலர் கமலை ஒரு வேற்றுக் கிரகவாசியாக நோக்கவும் இது தான் காரணம் என்றும் நான் ஊகிக்கிறேன்.
ஆனால் இந்த விடயம் எனக்கு மிகப் பிடித்த ஒன்று.

ஒரு கலைஞன் பூரணமானவனாக இருக்கவேண்டும் என்று பூரணமாக நம்பும் நான் கமலை ஒரு நடிகனாக மட்டும் அன்றி கவிஞனாக, பாடகனாக, எழுத்தாளனாக, நடனக் கலைஞனாக, இயக்குனராக என்று பல வடிவில் காணும்போது, அத்தனையிலும் வெற்றி பெற்றும் நிறைவு பெற்றும் சாதித்தும் நிற்கும்போது நான் ரசித்த ஒருவர் சரியான தெரிவு தான் என்று ஒரு கர்வம் வருகிறதே அது அது தான் எனக்கும் நிறைவு.

குணாவில் கமல் சொன்னதைக் கொஞ்சம் உல்டா செய்தால் -
 கமலை நினைக்கும்போது எவ்வளவோ அருவியாக வருது.. ஆனால் அதை எழுத்தாக, பதிவாக வடிக்க நினைக்கும்போது தான் வேறு வேலை வந்து வாழ்க்கையை வெறுக்கப் பண்ணிடுது..

அதனால் இப்போதைக்கு கமலின் பிறந்த நாளுக்கு இதுபோதும்.
அடுத்த பாகம் (இன்னும் மனதில் இருக்கும் கொஞ்சம்) நாளை/நாளை மறுதினம்..

மீண்டும்

கமல்ஹாசனுக்கு - என் கனவு நாயகனுக்கு - என் மனதில் ரசனையில் வெள்ளிவிழாக் கொண்டாடிய உள்ள நாயகனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

குறிப்பு - படங்கள் இணையத்தில் எடுத்து நான் மெருகேற்றியவை

December 23, 2010

மன் மதன் அம்பு

மூன்று பேருக்கிடையிலான காதல்,பத்துக்குட்பட்ட பாத்திரங்களின் பங்குபற்றுதலில் நிறையக் கலகல கொஞ்சம் ஆழமான காதல்,கொஞ்சம் அழுத்தமான செண்டிமெண்டோடு தொய்யாமல் துரிதமாகப் பயணிக்கும் அருமையாகக் கோர்க்கப்பட்ட அழகான படம்.

மன் மதன் அம்பு என்று மூவரையும் தனித்தனியாகப் பிரித்து ஏற்கெனவே விளம்பரங்கள் காட்டிவிட்டாலும் கதை என்ன என சுவாரஸ்யமாகத் திரைப்படம் மூலமாகவே விவரிப்பது கமலின் திரைக்கதையும் கே.எஸ்.ரவிக்குமாரின் இயக்கமும் தான்.

த்ரிஷா நடிகை, மாதவன் அவரின் காதலன்,பணக்காரர், கமல் இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற மேஜர், சங்கீதா விவாகரத்தானவர், இரு குழந்தைகளின் தாயார்.
 இந்த நான்கு முக்கிய பாத்திரங்கள்+சங்கீதாவின் குறும்புக்கார மகன், மலையாள இயக்குனர் குஞ்சு குருப்(என்ன பெயரைய்யா இது), ரமேஷ் அரவிந்த், ஊர்வசி, உஷா உதூப் என்று ஒரு சில பாத்திரங்களோடு சுவாரசியமாகப் பயணிக்கிறது கதை.

மற்றவர்கள் தொடத் தயங்கும் சில விஷயங்களை துணிச்சலாக எடுத்து லாவகமாகக் கதை சொல்வதில் கமலுக்கு நிகர் அவரே.. மீண்டும் மன்மதன் அம்புவில் நிரூபித்துள்ளார்.
நடிகையின் காதலும்,காதலின் இடையே புதிய காதலும்..

ஆள் மாறாட்ட வித்தைகள் தமிழ் சினிமாவில் வழக்கமே என்றாலும்,இதில் லாஜிக் பார்க்கக்கூடாது என்பது நியதிஎனினும் சொல்லும் விதத்தில் சொதப்பாமல்,சுவையாக சொல்வதில் ஜெயிக்க வேண்டுமே.. அதில் கமலும்,இயக்குனர் ரவிக்குமாரும் வெற்றிக்கொடி நாட்டியுள்ளார்கள்.

இப்போதே சொல்லிவைக்கிறேன்..

கமலுக்கு அடுத்தவொரு பிரம்மாண்ட வெற்றிப்படம்.
உதயநிதி ஸ்டாலின் போட்டதற்குப் பல மடங்கு எடுத்துவிடுவார்.
அவரது செழுமையின் உறுதி கண்களுக்கு ஐரோப்பிய சுற்றுலா இலவசமாகப் போய்வந்த குளிர்ச்சியைக் கொடுக்கிறது.

சூர்யா கௌரவ நடிகராக வந்து ஒரு அசத்தல் ஆட்டம்+அலட்டல் இல்லாத அறிமுகம் காட்டிவிட்டு செல்கிறார். அதே காட்சிகளில் கே.எஸ்.ஆரும் தனது சென்டிமென்டான தலைகாட்டலைக் காட்டிவிட்டு திருப்தியாகிறார்.

படத்தின் 90 சதவீதமும் நடப்பது ஐரோப்பிய நாடுகளிலும்,நகர்கின்ற கப்பலிலும் தான்.
ஆனாலும் அந்நியத்தனம் இல்லாமல் அழகு தமிழை ரசிக்கக் கூடியதாக இருப்பதற்குக் காரணம் கமல்.

கமலின் வயது படத்துக்குப் பெரிய ப்ளஸ்.பாத்திரத்தில் கச்சிதமாகக் கமல் ஒட்டவில்லை என்றால் தானே அதிசயம். முதல் காட்சியில் அதிரடி அறிமுகம் முதலே ரசிக்கவைக்கிறார்.

கதை,திரைக்கதை,வசனம் - கமல்..
கமல் படமே தான் என்றாலும் த்ரிஷாவை சுற்றித் தான் கதை.
ஆனாலும் த்ரிஷாவை கனமான பாத்திரமாகப் பார்க்கும் முதல் படம் எனும் வகையில் கமல் அவரிலும் தெரிகிறார்.
எந்தவொரு காட்சியும் அனாவசியம் என்று சொல்ல முடியாமல் தொய்வில்லாமல் கதை செல்கிறது.

இடையிடையே சினிமா நடிகர்களை, குறிப்பாக நடிகைகளை சமூகம் பார்க்கும் விஷமா,விமர்சனப் பார்வையை மாதவன் பேசும் வசனங்கள் மூலமாகக் கொட்ட வைக்கிறார்.

அறிவுஜீவித்தனமான தமிழ்+ஆங்கில வசனங்களும்,புத்திசாலித்தனமான தர்க்கங்களும், கிரேசி மோகன் பாணியிலான நகைச்சுவை சரவெடிகளும் கலந்துகட்டி ஒரு அருமையான வசன விருந்தே படைத்திருக்கிறார்.(உலக நாயகனின் வழமையான நண்பர் குழாம் கதை விவாதத்தில் இடம்பெற்றிருந்தாக அறிந்தேன்)

நேர்மையானவங்களுக்கு திமிர் என்பது ஒரு கேடயம்.
இது ஒரு சாம்பிள் வசனம்.. வசனக் கூர்மைகளை ரசிக்கவென மீண்டும் இரு தடவையாவது பார்க்கும் திட்டம்.

மிக முக்கியமான விடயம் அண்மைக்காலத்தில் சர்ச்சை கிளப்பிய கமல்-த்ரிஷா கவிதை இன்று நான் பார்த்த இலங்கையில் முதல் காட்சியில் இடம் பெற்றிருந்தது.
(இலங்கையின் தணிக்கைக் குழுவிலும் நேற்று இது பற்றி விவாதங்கள் இடம்பெற்றதாக அறிந்தேன். இனித் தூக்கப்படுமா தெரியவில்லை)



பாடல்கள் படத்தின் ஓட்டத்தோடேயே கதை சொல்லிகளாகப் பயணிப்பதும் நல்ல யுக்தி..
அதிலும் 'நீலவானம்' நான் முன்பு ரசனைப் பதிவில் சொன்னது போல, முன்னைய காதலைக் கமல் Flashbackஆக சொல்வதாக அமைத்துள்ளார்கள்.
ஆனால் காட்சிகள் பின்னோக்கி செல்வதாக அமைத்திருப்பது புதுமை.. காட்சிகள் Rewindஇல் செல்கையில் வாயசைப்பு மட்டும் சரியாக அமைவதும் புதிய பாராட்டக்கூடிய முயற்சி. வாயசைப்பில் சிரமம் உண்டு என்பதால் இடை நடுவே சொற்கள் தடுமாறி,இடம் மாறுவதைப் பொறுக்கலாம்.

பாடல் முடிகையில் அரங்கம் நெகிழ்ந்து சில வினாடிகள் அமைதியாகி,பின்னர் கரகோஷித்தது இங்கே ஒரு புதுமை.

தகிடுதத்தம் காட்சியோடு பொருந்தி ஒவ்வொரு வரிகளுக்கும் அர்த்தம் கொடுத்தது. நடன அசைவுகள்,பாடல் காட்சியில் வரும் வெள்ளைக்காரரும் ஆடுவது ரசனை.

கமல்+த்ரிஷா கவிதை முடியும்வரை ரசித்துக் கரகோஷம் கொடுத்த ஒரு ரசனை மிக ரசிகர்களோடு இருந்து பார்த்த பெருமை.. (நம் பதிவர்கள் சுபாங்கன்,பவன் ஆகியோரும்,சில நம் பதிவுலக ரசிகர்களும் வந்திருந்தது இடைவேளையின் பின்னரே தெரிந்தது)

கமலின் முகபாவ மாறுதல்கள் பார்த்தால் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல அத்தனை அற்புதம்.எத்தனை Close up காட்சிகள்.. கண்கள் பேசுகின்ற விதங்கள் லட்சக்கணக்கான வார்த்தைகள் சொல்லாத விடயங்கள்.
அத்தனை காட்சிகளிலும் கண்கள்,உதடுகளின் அசைவுகளைக் கவனித்தாலே சிலைகளும் நடிக்கக் கற்றுக்கொண்டு விடும்.

அதிலும் த்ரிஷாவுக்குத் தன் கடந்தகாலம் பற்றி சொல்லி, த்ரிஷா மன்னிப்புக் கேட்கும் இடத்தில் சோகம்+விரக்தியுடன் உதடு காய்வது போல ஒரு அசைவு கொடுப்பார்.. Class !!!

கமலுடன் சேர்ந்த ராசி த்ரிஷாவின் நடிப்பில் அப்படியொரு பக்குவம். முதல் தடவை கலக்கி இருக்கிறார் என நினைக்கிறேன். நடிகை என்பதனால் கொஞ்சம் கவர்ச்சியாகவே வலம் வருகிறார்.அவரது தொடை, மார்பு Tattoo தெரியவேண்டும் என்றே திட்டமிட்டு தேர்வு செய்துள்ள ஆடை வடிவமைப்பாளர் கௌதமிக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.. வாலிப சமூகம் சார்பாக.

தமிழ் நடிகைகளின் தமிழ் பற்றிக் கமல் கிண்டல் பேசும் இடங்களில், முகத்துக்குப் பூச்சையும் பேச்சில் ஆங்கிலத்தையும் பூசிவிடவேண்டும் என்று சொல்லும் இடத்தில் அப்படியொரு முகபாவம்.
மாதவனுடன் ஆரம்பக் காட்சிகளிலும் கமலுடன் இடையில் வரும் காட்சிகளிலும் ஜொலிக்கிறார்.

மாதவன் - நிறைய வித்தியாசம் காட்டி நடிக்க வசதியான பாத்திரம்.சந்தேகம்,உருகுதல்,காதல்,கோபம்,அப்பாவித்தனம் என்று கலக்குகிறார். கொஞ்சம் அன்பே சிவம் மாதவன் எட்டிப் பார்த்தாலும்,மாதவன் த்ரிஷாவுடன் கோபப்படும் இடங்களில் காரம்.

கமல்- மாதவன் தொலைபேசி உரையாடல்கள், தண்ணி அடித்து உளறும் காட்சிகள்,கடைசி நிமிடங்கள் - சிரிப்பு சரவெடிகள்.ஒவ்வொரு சொல்லையும் அவதானித்து ரசிக்கவேண்டிய இடங்கள்.

சங்கீதா குண்டாக,காமெடியாகக் கலக்குகிறார். பாத்திரத்துக்குக் கனகச்சிதம்.சில காட்சிகளில் த்ரிஷாவையும் விஞ்சி வெளுத்துவாங்குகிறார்.
இவரின் மகனாக வரும் அந்தக் குட்டிப் பையன் படு சுட்டி.. பிரமாதப்படுத்துகிறான்.கண்ணாடியும் அவனும்,அவனின் கூர்மையான அவதானிப்பும் பல திருப்பங்களைத் தருகின்றன.

வெற்றிப் படத் தயாரிப்பாளராக வரும் குஞ்சன் (இவரது உண்மைப் பெயரே இதானாம்) வரும் நேரமெல்லாம் சிரிப்பு வெடி தான்.
ரமேஷ் அரவிந்த் கமலின் நண்பராக,ஊர்வசி அவர் மனைவியாக.. கொஞ்சம் நெகிழ்ச்சிக்காக.
புற்றுநோய் நோயாளியாக இருந்தும் கமலுடன் ரமேஷ் அரவிந்த் பேசும் கட்சிகள் நெகிழ்ச்சியான நகைச்சுவைகள்.. கொஞ்சம் யதார்த்தமான கவிதைகள் எனவும் சொல்லலாம்.
 கமலின் வழமையான நடிகர் பட்டாளத்தில் இந்தப் படத்தில் நடித்துள்ளவர்கள் இவர்கள் இருவருமே..


 கமலின் முதல் மனைவியாக கொஞ்ச நேரமே வந்தாலும் கண்களையும், மனதையும் அள்ளி செல்கிறார் அழகான ஜூலியட். தொடர்ந்தும் தமிழ்ப்படங்கள் நடிக்கலாமே அம்மணி?

யாழ்ப்பாணத் தமிழ் பேசிக்கொண்டு வரும் பாத்திரம் சுவாரஸ்யம். அவரது பாத்திரம் இயல்பாகவே இருக்கிறது.புலம்பெயர் இலங்கைத் தமிழரைக் கொஞ்சம் ஈர்ப்பதற்கான ஒரு கொக்கி? அவரது மனைவி வரும் ஒரே காட்சியும் ரசனை.

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தும் ஒரு (ஒரேயொரு) frameஇல் வந்துபோகிறார். எது என்று கண்டுபிடிப்போருக்கு அவரே பரிசளிக்கட்டும்.


கதையோட்டத்தில் கண்ணுக்கு விருந்தான அழகான இடங்களையெல்லாம்,உல்லாசக் கப்பலின் அழகான பகுதிகளை இன்னும் அழகாகக் காட்டும் ஒளிப்பதிவாளர் புதியவராம்.. வாழ்த்துக்கள். முதல் படத்திலேயே கவர்ந்திருக்கிறார் மனுஷ நந்தன். இவர் பிரபல எழுத்தாளர் ஞானியின் மகன் என்பது கூடுதல் தகவல்.

பிரான்ஸ்,ஸ்பெயின், இத்தாலி ஆகிய இடங்களின் அழகு அப்படியே படத்துக்குப் பொலிவு கொடுக்கிறது.

எடிட்டரும் புதியவராம் ஷான் முஹம்மத்.மேருகூட்டியே இருக்கிறார்.

பாடல்களில் கலக்கிய DSP படத்தின் பின்னணி இசையிலும் பின்னி எடுத்துப் பிரகாசித்துள்ளார். சென்டிமென்ட் காட்சிகளில் வயலினும் சேர்ந்து உருக்குகிறது.ஆனால் சில இடங்களில் வசனங்களை இசை விழுங்குவதாக நான் உணர்ந்தேன்.

ஆரம்பக் காட்சிகளில் வரும் பாடல் வரிகளும் இசையும் மனதைத் தொட்டது.. ஆனால் அது இறுவட்டில் வரவில்லை.தேடிப் பார்க்கவேண்டும்.

எனக்குப் படம் பார்க்கையில் சலிப்பையும் எரிச்சலையும் தந்த ஒரே விடயம் கீழே ஆங்கிலத்தில் இடப்பட்ட உப தலைப்புக்கள். பல இடங்களில் கவனத்தை சிதறடித்துவிட்டது.இதற்காகவும் படத்தை மீண்டும் பார்க்கவேண்டும்.

இடைவேளை வரும் இடம் நெஞ்சைத் தொட்டது. அதிலும் த்ரிஷா - கமலின் புதிய வாழ்க்கை ஆரம்பிக்கக் காரணமான சம்பவம் என்பவற்றை ஒரே புள்ளியில் இணைப்பது திரைக்கதையில் உள்ள நெகிழ்ச்சியான ஒரு சாமர்த்தியம்.

 இடைவேளைக்குப் பிறகு என்னவொரு வேகம்+விறுவிறுப்பு.. ஒரு நிமிடம் அங்கே இங்கே திரும்பமுடியாமல் செய்திருக்கிறார்கள் கமல்+ KSR கூட்டணி..

வசனங்களின் இடையே திரையுலகம்,சமூகம்,திருமணத்தின் சில முட்டாள் தனமான பிணைப்புக்கள், காதல் பற்றிய தன எண்ணம்,மேல் தட்டு வாழ்க்கை, தமிழின் பிரயோகம் என்று பல விஷயங்களையும் கமல் தன பார்வையில் அலசினாலும் பாத்திரங்களை ஓவராக புத்திஜீவித்தனமாக அலைய விடாததும்,அலட்ட விடாததும் பாராட்டுக்குரியது.

*** கதை என்ன,எப்படி என்று நான் எதுவுமே சொல்லவில்லை;அது என் வழக்கமும் இல்லை. பார்த்து ரசியுங்கள்;சிரியுங்கள்.

ரசிக்கவும்,சிரிக்கவும்,மெச்சவும் அருமையான ஒரு விருந்து....

மன்மதன் அம்பு - ஜோராப் பாயுது..


பிற குறிப்பு - 9வது கமல் படம் தொடர்ந்து முதற்காட்சி பார்த்து சாதனை வைத்துவிட்டேன்.அதுவும் அலுவலக நேரத்தில்... அலுவலகம் வந்தால் நம்ம தலைவர் "கமல் படம் ரிலீசா? அதான் இவ்வளவு நேரமும் பண்ணவில்லை" என்று சொன்னது ஹைலைட். இவ்வளவுக்கும் நம் பெரியவர் சிங்களவர்.
இப்படிப்பட்டவங்க இருக்கிற காரணத்தால் தானே மழையே பெய்யுது ;)


* கமலின் இரண்டாவது மகளின் காதலர் என்று பரபரப்பாகப் பேசப்பட்ட அந்த இளைஞரும் எம்முடனேயே கடைசி வரிசையில் இருந்து படம் பார்த்திருந்தார் என்பது கூடுதல் விசேஷம்.
(தம்பி திருமணம் நடந்தாக் கூப்பிடுங்க)

December 10, 2010

கமலின் காதலும் கார்க்கியின் காதலும்

இதற்கு முந்தைய பதிவில் புதிதாக மனதில் இடம்பிடித்திருக்கும் இரு பாடல்கள் பற்றி ஊகிக்குமாறு கேட்டிருந்தேன்..
திருட்டு சாவி போட்டு பவன் இரு பாடல்களையும் சரியாக ஊகித்திருந்தார்.
மற்ற நண்பர்கள் ஒவ்வொரு பாடல்களை சரியாக ஊகித்திருந்தனர்.

நெஞ்சில் நெஞ்சில் - எங்கேயும் காதல் 


எந்திரன் பாடலுக்குப் பிறகு உடனே என்னை ஈர்த்த மதன் கார்க்கியின் வரிகள் இப்பாடலில்.
அந்தப்பாடலில் காதலின் வேகமும் மோகமும் சொன்னவர், இந்தப்பாடலில் தாகமும் தாபமும் அமைதியான காதலின் அழ்ந்த அர்த்தமும் சொல்கிறார்.
ஆனால் பாடலின் வரிகள் மிகையேறிய இலக்கியத் தரமாக மெருகேறி மின்னுகின்றன.

என் நிலாவில் என் நிலாவில் - ஒரு
மின்சாரல் தான் தூவுதோ?
என் கனாவில் என் கனாவில் - உன்
பிம்பத் துகள் இன்பங்கள் பொழிகையில்

இந்த வரிகள் போதும் அழகான கவிநடையில் பாடலின் இனிமையையும் மீறாமல் இசையின் இயல்பையும் மீறாமல் இலக்கியத்தின் சாரலையும் தெளிக்க முடியும் என்பதைத் தந்தையின் வழியில் தனயனும் காட்டுகிறார்.

உன்
பிம்பத் துகள் இன்பங்கள் பொழிகையில்

அழாகாக மனதில் ஓட்டும் வரிகள்.

ஹரிஷ் ராகவேந்திராவுக்கு மிக நீண்ட நாட்களின் பின்னர் அருமையான பாடல் ஒன்று கிடைத்துள்ளது.ஹரிஸ் ஜெயராஜின் முன்னாள் ஆஸ்தான பாடகர் மீண்டும் இணைந்தவுடன் கலக்கி இருக்கிறார்.மென்மையான குரலும் ,குரலில் தெரியும் காதலும்,அழகான தமிழும் உயிர்வரை பாடலைக் கொண்டு செல்கின்றன.

சின்மயியின் குரலும் சேர்கையில் பாடலின் உணர்வும் சில இடங்களும் ஏனோ, தளபதி திரைப்பட சுந்தரி கண்ணால் ஒரு சேதி பாடலை ஞாபகப்படுத்துகின்றன.
ஒரு மௌனம் பரவும்
சிறு காதல் பொழுதில்
விழியில் விளையும்
மொழியில் எதுவும் கவிதையடி!
அசையும் இமையின்
இசையில் எதுவும் இனிமையடி!

என்று விழிகள் பேசும் காதலின் இசை+இனிமையை உரைக்கிறார் கவிஞர்.
இசையின் மெட்டு ஓசைக்குள் சந்தத்துடன் வருகையில் மேலும் இனிமை.

வெண் மார்பில் படரும்
உன் பார்வை திரவம்
இதயப் புதரில்
சிதறிச் சிதறி வழிவது ஏன்?
உதிரும் துளியில்
உதிரம் முழுதும் அதிர்வது ஏன்?

பாடலின் உள்ளே ஒரு உவமை சிற்பம் உருவாக்கப்பட்டு அழகாகக் குரல் வழியாக வருவது இந்த வரிகளில்.
மீண்டும் மீண்டும் கேட்டு வரிகளை சிலாகித்தேன்..

உன் காதல் வேரைக்
காண வேண்டி
வானம் தாண்டி
உனக்குள் நுழைந்த .. நெஞ்சில்...
என்று வரும் இடங்களும் கவிதையும் அழகான பாடலாகும் எண்டு மீண்டும் மதன் கார்க்கி நிரூபிக்கும் இடம்.

அடுத்த சரண வரிகளில் உள்ளக் காதலில் இருந்து உடல் காதலுக்கு பாடல் வரிகள் நகர்கின்றன..
காமத்துப் பாலையும் கவிதைப் பாலூட்டி கார்க்கி ரசிக்க வைக்கிறார்.
வைரமுத்து வழியில் அவரது வாரிசும்..
கனதியான காமம் அளவுகடந்து வெளியே வழியாமல் ஆடை கட்டி அழகாக அனுப்புவது இவர்களின் குடும்பக் கலை போல் தெரிகிறது.

பசையூறும் இதழும்
பசியேறும் விரலும்
விரதம் முடித்து
இரையை விரையும் நேரமிது!
உயிரின் முனையில்
மயிரின் இழையும் தூரம் அது!

விடியும் வரையில்
விரலும் இதழும் தூரிகையே


நிறைவாக அழகாக பெண்ணின் வேண்டுகோளை வெட்கத்துடனும் விரகத்துடனும் வினயமாக நயமாக முடித்து வைக்கிறார் கவிஞர்..
விடியாதே இரவே!
முடியாதே கனவே!
நீ இன்னும் கொஞ்சம்
நீளக் கோரி
காதல் காரி
துடிக்க துடிக்க

காதல் காரி என்ற இந்த சொல் பாவனையும் பெண்ணின் குரலில் அழகு.

ஒரு தடவை கேட்டாலே இதயத்தில் நிறைந்து இனிக்கும் பாடல் என்பது மட்டும் உறுதி.
வரிகளை முழுக்க சுவைத்துப் பின் பாடலையும் முழுமையாகக் கேட்டு ரசியுங்களேன்..(படம் இன்னும் வரவில்லை..பிரபுதேவா இந்தப் பாடல் காட்சியைப் படமாக்கும் விதம் குறித்து ஆவலாயிருக்கிறேன்)


படம்: எங்கேயும் காதல்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: ஹரிஷ் ராகவேந்திரா, சின்மயி
வரிகள்: மதன் கார்க்கி

நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ
காதல் காதல் பிறந்ததோ
கொஞ்சும் காற்றில் மயங்கியே
கொஞ்சம் மேலே பறந்ததோ


மாலை வேளை வேலை காட்டுதோ - என்
மூலை வானம் ஜுவாலை மூட்டுதோ


என் நிலாவில் என் நிலாவில் - ஒரு
மின்சாரல் தான் தூவுதோ?
என் கனாவில் என் கனாவில் - உன்
பிம்பத் துகள் இன்பங்கள் பொழிகையில்
___________


ஒரு மௌனம் பரவும்
சிறு காதல் பொழுதில்
விழியில் விளையும்
மொழியில் எதுவும் கவிதையடி!
அசையும் இமையின்
இசையில் எதுவும் இனிமையடி!


வெண் மார்பில் படரும்
உன் பார்வை திரவம்
இதயப் புதரில்
சிதறிச் சிதறி வழிவது ஏன்?
உதிரும் துளியில்
உதிரம் முழுதும் அதிர்வது ஏன்?


உருகாதே உயிரே
விலகாதே மலரே!
உன் காதல் வேரைக்
காண வேண்டி
வானம் தாண்டி
உனக்குள் நுழைந்த… (நெஞ்சில்…)
___________________


பசையூறும் இதழும்
பசியேறும் விரலும்
விரதம் முடித்து
இரையை விரையும் நேரமிது!
உயிரின் முனையில்
மயிரின் இழையும் தூரம் அது!


ஒரு வெள்ளைத் திரையாய் - உன்
உள்ளம் திறந்தாய்
சிறுகச் சிறுக
இரவைத் திருடும் காரிகையே!
விடியும் வரையில்
விரலும் இதழும் தூரிகையே


விடியாதே இரவே!
முடியாதே கனவே!
நீ இன்னும் கொஞ்சம்
நீளக் கோரி
காதல் காரி
துடிக்க துடிக்க (நெஞ்சில்…)








நீலவானம் - மன்மதன் அம்பு 


கலைஞானிக்குள் இருந்த கவிஞன் காதலாக மாறி வெளிவந்துள்ள மன்மதன் அம்பு பாடல் நீல வானம் கேட்ட முதல் தரத்திலேயே மனதை அள்ளிவிட்டது.
பாடகரும் அவரே..

கவிதையைப் பாடலாக மாற்றி பாடகராக உயிரும் கொடுத்திருக்கிறார்.
வரிகளின் ஆழமும் அழுத்தமும் கூடவே பயணிக்கும் வயலினின் உருக்கமும் மனதை அள்ளுகின்றன.

கமலின் அறிவுஜீவித்தனமான காதல் வரிகள் அழகாய் ஆரம்பிக்கின்றன..
கண்களே பாஷையாய் கைகளே ஆசையாய்
வையமே கோயிலாய் வானமே வாயிலாய்
பால்வெளி பாயிலே சாய்ந்து நாம் கூடுவோம்

பால்வெளிப் பாயில் என்பது அண்டவெளி தாண்டி காதல்(அதையும் தாண்டிப் புனிதமானது) பரவுவதைக் கவிஞர் கமல் உணர்த்துகிறார்.

கமலில் நான் ரசிக்கும் இன்னொரு விஷயம் தன வாழ்க்கையில் அவர் காட்டும் திறந்த தன்மை. இந்தப் பாடலின் சரணமும் அவ்வாறே..

ஏதேதோ தேசங்களை சேர்க்கின்ற நேசம் தன்னை
நீ பாதி நான் பாதியாய் கோர்க்கின்ற பாசம் தன்னை
காதல் என்று பெயர் சூட்டியே காலம் தந்த சொந்தம் இது

காதல் எனும் பெயர் சூட்டியே என்று சொல்லும் அழுத்தம் அழகு.. (புரிகிறதா?)

                          காதல் மன்னன் என்று சும்மாவா சொல்கிறார்கள்? 

மன்மதன் அம்பு படப்பிடிப்பு படங்களில் கமலோடு காணப்படும் வெள்ளைக்காரப் பெண்ணுடனான காதல் பற்றியாக இந்தப் பாடல் இருக்கவேண்டும்.எதோ ஒரு காரணத்தால் (ஒன்றில் அந்தப் பெண் இறக்க அல்லது )பிரிய, பின் த்ரிஷாவோடு கமல் சேர்வதாக இருக்கலாம் என்ற நிலையில் அடுத்த வரிகள் எளிமையாக ஆனால் இயல்பாக அழகாக இருக்கின்றன.

என்னை போலே பெண் குழந்தை உன்னை போல் ஒரு ஆண் குழந்தை
நாம் வாழ்ந்த வாழ்விற்கு சான்றாவது இன்னொரு உயிர்தானடி

காதல் பற்றி சொல்லும் வரிகளில் இது மனதில் நிற்கக் கூடியது..

உன்னை என்னை ஒற்றி ஒற்றி உயிர் செய்யும் மாயமும் அது தானடி

வரிகளின் வளமும் கமலின் குரல் வளமும் தேவி ஸ்ரீ பிரசாத்தின் வழமையைத் தாண்டிய புதுமையான இசையும் இந்தப் பாடலை ஈர்க்க செய்கின்றன.
பாடகராகக் கமலை ரசித்த பாடல்களில் இதுவும் இப்போது சேர்ந்துள்ளது.

திரைப்படக் காட்சிக்காக நானும் வெயிட்டிங்..


படம்: மன்மதன் அம்பு
இசை: தேவிஸ்ரீ பிரசாத்
பாடியவர்கள்: கமல்ஹாசன், பிரியா ஹிமேஷ்
வரிகள்: கமல்ஹாசன்


நீல வானம் நீயும் நானும்
கண்களே பாஷையாய் கைகளே ஆசையாய்
வையமே கோயிலாய் வானமே வாயிலாய்
பால்வெளி பாயிலே சாய்ந்து நாம் கூடுவோம்
இனி நீ என்று நான் என்று இரு வேறு ஆள் இல்லையே..


நீல வானம் 
Blue Sky
நீயும் நானும் 
You and I


ஏதேதோ தேசங்களை சேர்க்கின்ற நேசம் தன்னை
நீ பாதி நான் பாதியாய் கோர்க்கின்ற பாசம் தன்னை
காதல் என்று பெயர் சூட்டியே காலம் தந்த சொந்தம் இது
என்னை போலே பெண் குழந்தை உன்னை போல் ஒரு ஆண் குழந்தை
நாம் வாழ்ந்த வாழ்விற்கு சான்றாவது இன்னொரு உயிர்தானடி
நீல வானம் நீயும் நானும்


பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்து ஆண்டு
பல கோடி நூறாயிரம்
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்து ஆண்டு
பல கோடி நூறாயிரம்
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்து ஆண்டு
பல கோடி நூறாயிரம்


ஆறாத காயங்களை ஆற்றும் நாம் நேசம் தன்னை
மாளாத சோகங்களை மாய்த்திடும் மாயம் தன்னை
செய்யும் விந்தை காதலுக்கு கை வந்ததொரு கலைதானடி
உன்னை என்னை ஒற்றி ஒற்றி உயிர் செய்யும் மாயமும் அது தானடி
நாம் வாழ்ந்த வாழ்விற்கு சான்றவது இன்னொரு உயிர்தானடி
நீல வானம் நீயும் நானும்







கமல் மன்மதன் அம்பு இசை வெளியீட்டில் நேரடியாகப் பாடிய காட்சி...







இனி வரும் பதிவுகளின் மும்முரத்தில் பாடல்கள் பற்றித் தனியாகப் பதிவுகள் போட முடியும் என நான் நினைக்கவில்லை..

அதனால்...

* ஆடுகளம் - யாத்தே பாடல் மிகவும் பிடித்துள்ளது. சிநேகனின் வரிகளில் G.V.பிரகாஷ்குமார் இசையமைத்துப் பாடிக் கலக்கி இருக்கிறார்.

அதே படத்தில் SPBயும் மகன் S.P.சரணும் சேர்ந்து பாடியுள்ள ஹையையோவும் ரசனை.

* மன்மதன் அம்பு கமலின் கவிதையும், கமலின் நச் வரிகளுடன் வந்துள்ள தகிடுதத்தமும் ரசனைகளின் இரு பக்கங்கள்.

*காவலன் பாடல்கள் பரவாயில்லை ரகம்.
வித்யாசாகர் பெரிதாக மினக்கேடவில்லை எனத் தோன்றுகிறது.
ஐந்தில் மூன்றில் எங்கேயோ கேட்ட வாடை.

யுகபாரதியின் வரிகளில் யாரதுவும், சட சடவும் தான் எனக்கு மிகப் பிடித்தவை.
சட சடவில் கார்த்திக் அருமையாகப் பாடி இருக்கிறார். ஆனால் பாடலின் இசை அப்படியே 3 Idiots பாடலான Zoobi Zoobiயின் இசை.
வித்யாசாகர் மந்திரப் புன்னகையின் மந்திரம் எங்கே?

காவலன் படம் வழமையான விஜய் படமாக இருக்காது என்று வந்த பேச்சுக்கள் சரி போலவே தெரியுது.

* எங்கேயும் காதல் லோலிட்டாவும் பிடித்திருக்கிறது.

*மந்திரப் புன்னகையில் வித்யாசாகரின் இசையில் அறிவுமதியின் பாடல்களும் ரசித்தேன்.
சுதா ரகுநாதன் பாடிய - குறையொன்றும் பாடலின் வரிகளின் அழுத்தம் அருமை (அண்ணன் - கண்ணன் ஒப்பீடு தான் காரணமோ?)
சட்டு சடவென என்று தொடரும் பாடலின் வரிகள் மிகவே வித்தியாசம் ..
உ+ம் - இந்தக் காதலை நான் அடைய எத்தனை காமம் கடந்திருப்பேன்

 * மேதையில் (ராமராஜனின் படம்) நிலவுக்குப் பிறந்தவள் இவளோ அழகான ஒரு பாடல்.
ஆனால் படத்தில் இந்தப் பாடல் கொடுமைப்படுத்தப்படும் எனும் போது கவலையாக உள்ளது.

* மைனா பாடல்கள் கையைப் புடியும்,நானும் நீயுமும் மனசில் ரீங்காரமிடக் கூடிய பாடல்கள்.

November 07, 2010

கமல் 56 - வாழ்த்துக்கள் !!!!!

இன்று திரையுலகில் நான் அதிகம் நேசிக்கும் நடிகர்/கலைஞர் கலைஞானி கமலஹாசனின் பிறந்தநாள்.

பதிவுலகம் வந்து மூன்றாவது ஆண்டுக்குள் நான் கால் பதித்துள்ள நிலையில்,இம்மூன்றாண்டிலுமே கமலின் பிறந்த நாளுக்கு விசேடமாகப் பதிவொன்று போடவேண்டும் என பெரிதாக ஐடியா பண்ணியுமே கடைசியில் ஏதாவது ஒரு அவசர வேலை காரணமாக வெளியூர் பயணமாக நேர்ந்து விடும்..
இம்முறையும் அப்படியே..

நண்பர்களுடன்.குடும்பத்துடன் திருகோணமலையில் நான் இருக்கும் நாளில் தான் கலைஞானியின் பிறந்தநாள்..

இருக்கும் இடத்தில் இருந்து நாள் முழுக்க ஊர் சுற்றும் களைப்பில் நான் 'ப்ளான்' பண்ணி வைத்துள்ள விசேட பதிவை அவசர அவசரமாக அரை குறையாகப் பதிவிட மனம் இடம் தரவில்லை.

என் முன்னைய பதிவுகளில் இதுவரை ஏழு பதிவுகளில் கொஞ்சமாவது கமலைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளேன்.
அவற்றுள் இருந்து காலப் பொருத்தமாக ஒன்றை இந்நாளில் கமலுக்குப் பிறந்தநாள் பரிசாக :)

கமலின் 'ம' வரிசைப் படங்கள் பற்றி என் பார்வையில் கொஞ்சம் சீரியசாக மொக்கையோடு அலசிய பதிவை உங்களில் பலர் வாசித்திருக்கலாம்..
என்ன அதிசயம் பாருங்கள்..
அடுத்து வரப்போகும் கமலின் புதிய படமும் 'ம' தான்..
மன்மதன் அம்பு..

 கமலின் அண்மைக்கால ஆஸ்தான இயக்குனர் K.S.ரவிக்குமார், அன்பே சிவத்துக்குப் பின் மாதவன்,முதல் தடவையாக ஜோடியாக த்ரிஷா..
ஒரு கலவை மசாலா ரெடி..

கமல்ஹாசனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
ஒரு ரசிகனாக.. ஒரு தொடர்வோனாக.. ஒரு வாசகனாக (கமலின் பல திரைப்படங்களை ஏன் பேட்டிகளைக் கூட நான் ஆழமாக வாசிப்பதால்) மனமார வாழ்த்துகிறேன்.

நீங்கள் ஒவ்வொரு ஆண்டு அதிகமாக வாழ வாழ திரையில் நாம் வித்தியாசங்களை,ரசனைகளின் உயரங்களை அதிகமாகத் தரிசிக்கும் வாய்ப்புக் கிட்டும்.. எனவே கொஞ்சம் சுயநலத்தோடும் வாழ்த்துகிறேன்.

----------------------------------

என் முன்னைய பதிவிலே 'ம' வரிசை பற்றி ஒரு மினி ஆராய்ச்சி செய்திருக்கிறேன்..
மன்மதன் அம்பு ஜெயிக்குமா நீங்களும் சொல்லுங்கள் ;)

மீண்டும் இரண்டு ஆண்டுகள் பின்னோக்கி உங்களை அழைத்து செல்கிறேன்.. இது 2008 ஆம் ஆண்டு டிசெம்பரில் பதிவிட்டது..
முன்பு சொன்னவற்றில் எத்தனை சரிவந்துள்ளது.. எத்தனை வெறும் ஊகங்களாகப் போயுள்ளது என்று பார்த்தால் ஆச்சரியமாகவும் இருக்கிறது.

-----------------------------------------------




உலக நாயகன் கமல்ஹாசனின் மர்மயோகி திரைப்படம் முடக்கப் பட்டுவிட்டது என்ற அறிவித்தல் வந்து சில வாரங்கள் ஆகின்றன.. அடுத்த திரைப்படம் ஹிந்தியில் வெளிவந்தது பாராட்டுக்கள் வென்ற புதன்கிழமை அதாங்க The Wednesday என்ற திரைப்படத்தின் தமிழாக்கம் என்று நம்ம கேபிள் சங்கர் எழுதியிருந்தார்.. அதற்கு முதல் பிரபல தெலுங்கு,மலையாள நடிகர்களோடு 'தலைவன் இருக்கிறான்' என்ற படம் வெளிவர இருப்பதாக பேச்சுக்கள் அடிபடுகின்றன..


எனினும் இந்த அறிவிப்புக்கள் எல்லாம் வந்த நேரத்தில் நான் வேண்டிக் கொண்டதெல்லாம், (யாரை,எந்தக் கடவுளை என்றெல்லாம் கேக்காதீங்க.. எனக்கே யாரிடம் வேண்டினேன் என்று தெரியாது.. அதுவும் நாத்திகரான கமல் படத்துக்கேயா? ) அடுத்த கமல் படத்துக்காவது மானா('ம') எழுத்தில் பெயர் வைக்கக் கூடாதென்று தான்.. 


காரணம் அண்மையில் 'ம' எழுத்தில் ஆரம்பிக்கப் பட்ட இரண்டு கமல் படங்களுமே முடங்கிவிட்டன.. முதலில் மருதநாயகம், பின்னர் இப்போது மர்மயோகி..


இரண்டுமே பிரம்மாண்டத் தயாரிப்புக்கள் என்று பரபரப்புக் கிளப்பியவை.. இரண்டுமே கமலின் கனவுப் படைப்புக்களாகக் கருதப்பட்டவை.


பொன்னியின் செல்வன் போன்றதொரு தமிழ்க்காவியத்தை, அல்லது கிளாடியேட்டர் போன்றதொரு பிரம்மாண்டப் படத்தை தமிழில் எதிர்பார்த்த எம் போன்றோருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.. மொக்கைத் திரைப்படங்களுக்கும், மசாலாக் குப்பைகளுக்கும் கோடிக் கணக்கில் கொட்டிக் கொடுப்பவர்களால் இது போன்ற நல்ல,சவாலான முயற்சிகளுக்குக் கை கொடுக்க முடியாமல் இருப்பது தமிழரினதும்,நல்ல தமிழ்த் திரைப்பட ரசிகர்களினதும் தலைவிதியே அன்றி வேறொன்றும் இல்லை என்றே நினைக்கத் தோன்றுகிறது..


கமலின் 'ம' வரிசைத் திரைப்படங்களை எடுத்துக் கொண்டால், நல்ல திரைப்படமாக பாராட்டுக்களை வென்றாலும், வசூலில் படு மோசமாகத் தோற்றுப்போன 'மகாநதி' தான் ஞாபகத்துக்கு வரும்..அவ்வளவு அற்புதமான திரைப்படத்தை வெற்றி பெற வைக்க முடியாததற்கு ரசிகர்களான நாமே தான் வெட்கப்பட வேண்டும்..அதே திரைப்படம் இந்தக் காலகட்டத்தில் வெளிவந்தால் வெற்றி பெற்றிருக்கக் கூடும்.. 


அதே போல 'ம' வரிசையில் , 'மு' எழுத்தில் வெளியான மும்பை எக்ஸ்ப்றேசும் தோல்வியுற்றது.. அந்தத் திரைப்படத்தின் நகைச்சுவைகளும், சொல்லப்பட்ட சில சமூக நியாயங்களும் நம்மவருக்கு ஏற்புடையதாக இல்லை.. பல பேருக்கு திரைப்படம் புரியவே இல்லை.. 


கமலுக்கு அப்போ 'ம' சறுக்கல் தருகிற ராசியில்லாத எழுத்தா என்று அவசர அவசரமாக தேடியதில் சில விஷயங்கள் அகப்பட்டன..


ஆரம்ப காலத்தில் கமலின் சகல 'ம' எழுத்தில் ஆரம்பித்த திரைப்படங்களும் பெரு வெற்றியும் ,பாராட்டுக்களும் பெற்றன..


பாலச்சந்தரின் இயக்கத்தில் 'மரோசரித்திரா' (தெலுங்கு), மன்மதலீலை', 'மூன்று முடிச்சு', 'மூன்றாம் பிறை' என்று வரிசையாக எல்லாமே வெற்றி பெற்றவை..


அதன் பின் கமல் எடுத்த மிகப் பெரிய நகைச்சுவை திரைப்படம் மைக்கல் மதன காம ராஜன் கூட ம வரிசையில் இடம் பெற்ற  திரைப்படம் தான்..


கமல் ஒரு வித்தியாசமான வேடம் ஏற்று நகைச்சுவையில் பின்னியெடுத்த மகாராசன் கூட 'ம' வில் ஆரம்பித்த படம் தான்.. அதுவும் வர்த்தக ரீதியில் எதிர்பார்த்த வெற்றி தரவில்லை என அறிந்தேன்.. 


எனினும் அண்மைக்கால பெரிய சறுக்கல்கள் 'ம' எழுத்து கமலுக்கு ராசியில்லை என்ற கருத்தையே தருகின்றன..


இதைக் கமல் ஏற்றுக் கொள்வாரா தெரியவில்லை.. அவர் தான் மூட நம்பிக்கை மீது பெரிதாக நாட்டமில்லாதவர் ஆயிற்றே.. (ஆகா.. அது கூட 'ம' வரிசை தான்)


ஆனால் 


அன்புள்ள கமல், என்ன தான் இருந்தாலும் தயவுசெய்து அடுத்த படத்துக்கு 'ம' எழுத்திலே பெயர் வைக்காதீங்க.. கோடி புண்ணியமாகும்.. 


இதற்கிடையில் மர்மயோகியை சண் பிக்சர்ஸ் நிறுவனம் வாங்கி மீண்டும் எடுப்பதாக அறிந்தேன்... தமிழக நண்பர்கள் யாராவது உறுதிப் படுத்தினால் நல்லது..

-------------------------------------------------
முன்னைய பதிவின் மீள் பதிப்பு எனினும் எந்தவொரு விஷயத்தையும் மாற்றவில்லை.


'ப்ளான்' பண்ணி (மனசுக்குள் தான்) வைத்துள்ள கமலுக்கான விசேட விரிவான பதிவு விரைவில்..


அதற்குள், கமல் பற்றிய என் முன்னைய இம்மூன்று பதிவுகளையும் கூட நீங்கள் கொஞ்சம் மீள அசை போடலாம்..


பதிவுலகில் என் ஆரம்பக் கட்டத்தில் இரு ஆண்டுகளுக்கு முன் பதிந்தது..

நான்,சினிமா இன்னும் பல...




இவை இரண்டும் கடந்த ஆண்டில் பதிவேற்றியது..

கமல்,சுஜாதா,அசின்,SPB ஒரே கட்சியில்..





கமலும் மாதவியும் பிபாஷாவும் சரத்பாபுவும்




என் இனிய கமலுக்கு மீண்டும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் !!!!!


எந்திரன் வெற்றியால் உற்சாகம் அடைந்துள்ள சன் குழுமத்தைக் கொஞ்சம் வளைத்து எப்படியாவது மருதநாயகத்தை வெளியே கொண்டுவாருங்கள்..
காத்திருக்கிறோம்..




ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner