Showing posts with label சாதனை. Show all posts
Showing posts with label சாதனை. Show all posts

March 06, 2022

Shane Warne - எனக்கு ராஜாவா நான் வாழுறேன் - இறந்த பின்பும் !

 Shane Warne !

1990களில் அவுஸ்திரேலியா அங்கொன்றும் இங்கொன்றுமாக அரைகுறை சுழல்பந்துவீச்சாளரை அறிமுகப்படுத்தி வந்திருந்த காலத்தில், ‘யார்ரா இது ?’ என்று ஆச்சரியப்படுத்திய ஒருவர்.
கொழும்பு SSC மைதானத்தில் 1992 டெஸ்ட் போட்டி - 16 ஓட்டங்களால் அவுஸ்திரேலியா வெற்றி பெறுவதற்கு இறுதி இன்னிங்ஸில் வோர்னின் மூன்று விக்கெட்டுகள் மிக முக்கியமானவையாக அமைந்தன.
மைதானம் சென்று பார்த்த அந்தப் போட்டியில் வோர்ன் என்ற இந்தப் புதியவரின் சுழல், எனக்கு மிகப்பிடித்த அலன் போர்டர் இவரைக் கையாண்டு, தட்டிக்கொடுத்த விதம் ஆகியவற்றோடு ஈர்ப்பொன்று ஏற்பட்டது.


அத்தனை காலமும் அதிகமாக off spin வீசிய நான் leg spin ஐ டென்னிஸ் பந்து கிரிக்கெட்டிலும் - எத்தனை அடி விழுந்தாலும் - போட ஆரம்பித்தது வோர்னின் தாக்கத்தில்.
அப்துல் காதிருக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டிலும் சில காலமாக அருகி வந்திருந்த லெக் ஸ்பின் பந்துவீச்சை மீண்டும் உயிர்ப்பித்த மூவர் வோர்ன், கும்ப்ளே, முஷ்டாக் அஹ்மட்.
இதில் வோர்னுக்கு வாய்த்தது ‘சுழல் பந்து’ என்று துண்டுக் காகிதத்திலேயே எழுதிப்போட்டாலும் சுருண்டுவிடக்கூடிய இங்கிலாந்து அதிகமான போட்டிகளில் வோர்னிடம் மாட்டியது.
ஆனாலும் வோர்ன் Gatting க்கு போட்ட ball of the century, Straussஐ மிரட்டிய sharp turner, 1994 Ashes Boxing Day hat trick இதெல்லாம் King special கள்.
நாக்கைக் கடித்து பந்தை அசாதாரண திருப்புகோணத்தில் மணிக்கட்டினால் சுழற்றுவது, வோர்ன் special wrong un, பல வேகப்பந்துவீச்சாளரின் stockballs ஐ விட வேகமான flipper என்று வோர்ன் எந்த formatஇல் பந்துவீச வந்தாலும் ஒரு பரபர தான். (Warne க்காகவே YouTube இல்லாத காலத்தில் எத்தனை போட்டிகளின் highlights உட்கார்ந்து இருந்து ஒவ்வொரு பந்தாகப் பார்த்திருப்பேன்)
கும்ப்ளேயும் முஷ்டாக்கும் ஒருநாள் போட்டிகளில் கலக்கியிருந்தாலும், டெஸ்ட் போட்டிகளை வெல்வதற்கு பிரம்மாஸ்திரமாக லெக் ஸ்பின்னை பயன்படுத்த நிரூபணம் ஆனவர் ஷேன் வோர்ன் தான்.
அவர் உருவாக்கிய ஒரு legacy, பல அணிகளுக்கும் ஒரு blue print ஆனது.
708 டெஸ்ட் விக்கெட்டுகள், 300ஐ அண்மித்த ஒருநாள் விக்கெட்டுகள் - தேவையான போது அதிரடி துடுப்பாட்டம், slip மற்றும் close in சிறப்பு களத்தடுப்பு, தலைமைத்துவத்துக்கு தேவையான கூர்மதி & ஆராயும் ஆழமான விளையாட்டு ஞானம்.
சாதனைகளோடு சேர்த்து சர்ச்சைகளையும் சம்பாதித்துக்கொண்டதனால் வோர்னுக்கு அவுஸி டெஸ்ட் தலைமை கிடைக்காமலே போனது.
அவுஸ்திரேலிய அணிக்கு கிடைக்காமல் போன மிகச்சிறந்த ஒரு தலைவர்.
பின்னாளில் franchise அணிகளுக்குத் தலைமை தாங்கியபோது இளையோரை ஊக்குவித்தும் புதுமைகளையும் வெற்றிக்கான உத்வேகத்தையும் புகுத்தி தன்னை நிரூபித்திருந்தார்.
Healy - Warne “bowling Warnie” இணைப்பு, வோர்னின் பந்துவீச்சில் டெய்லரின் பிடிகள், மக்ராவுடனான deadly combination,
Lara, Sachin ஆகியோரோடு வோர்னின் மோதல்கள், முரளியோடு இருந்த போட்டி, அர்ஜுன, இலங்கை ரசிகரோடு இருந்த விரோதமும் வசவுகளும் மறக்கமுடியாதவை.
52 வயதில் கிரிக்கெட்டில் தொடவேண்டிய சிகரங்களையும் தொட்டு, எவன் என்ன சொன்னாலும் வாழ்க்கையை தன் இஷ்டப்படி வாழ்ந்து தீர்க்கவேண்டும் என்று ‘வாழ்ந்து’ போயிருக்கிறார் King Warne.
இன்னும் கொஞ்சம் தன்னை சீர்ப்படுத்தி, தனக்கும் கிரிக்கெட்டுக்கும் இன்னும் அதிகம் வழங்கியிருக்கலாம்.
ஆனால் அவரது ஆரம்பம் முதல் இறுதிவரை - எனக்கு ராஜாவா நான் வாழுறேன் - பாணி வாழ்க்கையில் யார் என்ன சொல்ல ?
இனியும் கிரிக்கெட்டில் பலர் வரலாம், சாதனையாளராகவும் மாறலாம். ஷேனின் 708ஐயும் முந்தலாம்.
ஆனால் மெல்பேர்ன் மைதானத்தில் ஓங்கி நிற்கப்போகும் King S.K.Warne stand போல Warne legacy என்றும் நிலையானது.
போய் வா சுழல் மன்னனே.
#ShaneWarne YouTube இல் நேரலையாக ஷேன் வோர்ன் பற்றி பகிர்ந்தது : https://www.youtube.com/watch?v=8e-g9siqV4I

January 10, 2013

மஹேல: இலங்கையின் மறக்கமுடியாத தலைவர்

இலங்கை அணியின் தலைவராக இரு வேறு காலகட்டங்களில் தலைமை தாங்கிய மஹேல ஜெயவர்த்தன இரண்டாவதும் இறுதியுமான தடவையாகத் தனது தலைமைப் பதவியிலிருந்து விலகிக் கொள்கிறார்.

இலங்கை - அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான சிட்னி டெஸ்ட் போட்டியின் பின்னதாக மஹேல தனது டெஸ்ட் தலைமைப் பதவியிலிருந்தும், அதன் பின்னர் இடம்பெறவுள்ள அவுஸ்திரேலிய அணிக்கெதிரான ஒருநாள் தொடருக்குப் பிறகு ஒருநாள் தலைமையிலிருந்தும் விலகுவதாக இந்த இரண்டாம் முறை தலைமைப் பதவியை ஏற்கும்போதே மஹேல அறிவித்திருந்தார்.

தலைவராகக் கடுமையான சவால்களை எதிரணியிடமிருந்து மட்டுமல்லாமல் கிரிக்கெட் சபையின் அரசியலிலிருந்தும் மஹேல எதிர்கொண்டிருந்தார். அப்படியிருந்தும் இலங்கை கிரிகெட் அணியின் மிகச் சிறந்த தலைவராக எப்போதும் கருதப்படக்கூடிய அர்ஜுன ரணதுங்கவுக்கு அடுத்தபடியாக இலங்கைக்குக் கிடைத்த மிகச் சிறந்த தலைவராக மஹேல ஜெயவர்த்தன இருக்கிறார்.

தரவுகளையும் பெறுபேறுகளையும் வைத்து இலங்கையின் தலைவர்களை நாம் பார்த்தால்... (இப்போது நடைபெற்று வரும் சிட்னி டெஸ்ட் போட்டியைக் கருத்தில் எடுக்கவில்லை)



 


இலங்கையின் மிகக் கடினமான காலகட்டத்தில் தலைமை தாங்கிய மிகச் சிறந்த தலைவராக மஹேலவை நாம் கருதலாம். மஹேல இலங்கை அணியில் இளவயது வீரராக அணிக்குள் வரும்போதே எதிர்கால அணித்தலைவர் என்ற எதிர்பார்ப்பு இவர் மீது வைக்கப்பட்டிருந்தது. இளம் வயதிலேயே அணியின் உப தலைவராக நியமிக்கப்பட்டார். ஆனால் அதன் பின்னர் துடுப்பாட்டம் சற்றுத் தளம்ப ஆரம்பிக்க, உப தலைமைப் பதவி பாரத்தை நீக்கிக் கொண்டார்.

மீண்டும் 2006இல் தலைவராக ஆரம்பித்த மஹேல, முதலாவது டெஸ்ட் போட்டியிலேயே பங்களாதேஷுக்கு எதிராக வெற்றியைப் பெற்றுத் தந்து மங்கலகரமாக ஆரம்பித்து வைத்தார். (முரளிதரனின் 1000ஆவது சர்வதேச விக்கெட்டும் அதே போட்டியிலேயே வீழ்த்தப்பட்டது)

அடுத்து இலங்கையில் வைத்து பாகிஸ்தானிடம் தோல்வி. எழுந்த விமர்சனங்களுக்கு மஹேல பதிலளிக்க எடுத்துக்கொண்ட களம், இங்கிலாந்து. முதலாவது போட்டியில் இனிங்சினால் தோல்வியடைய இருந்த இலங்கை அணியைத் தனியொருவராக, தலைவராக நின்று காப்பாற்றி வெற்றி தோல்வியற்ற நிலையைப் பெற்றுக் கொடுக்கிறார் மஹேல. முதலாவது இனிங்சில் 61. இரண்டாவது இனிங்சில் 119.

இரண்டாவது டெஸ்ட்டில் இலங்கை அணி தோற்றாலும், மூன்றாவது டெஸ்ட்டில் வென்று இலங்கை தொடரை சமப்படுத்திப் பெருமையோடு நாடு திரும்ப - இலங்கை அணியின் புதிய பொற்காலத்தை உருவாக்கும் ஒருவராக மஹேல கணிக்கப்படுகிறார். அதை நிரூபிப்பது போலவே மஹேலவின் தலைமையில் வெற்றிகள் கிடைத்தன.


ஆசியக் கிண்ண வெற்றியும், டெஸ்ட் போட்டிகள், ஒருநாள் போட்டிகளின் வெற்றிகளும் (இங்கிலாந்தை இங்கிலாந்து மண்ணில் வைத்தே 5-0 என்று வெற்றிகொண்டது உட்பட) இவற்றுக்கு எல்லாம் சிகரம் வைப்பது போல 2007ஆம் ஆண்டின் உலகக் கிண்ணத்தில் இலங்கையின் அதிரடியும் குறிப்பாக மஹேல ஜெயவர்த்தன அபாரமாக ஆடி வென்று கொடுத்த அரையிறுதி ஆட்டம் இன்னும் யார் மனதிலும் நீங்காது.

இலங்கை அணி இறுதிப் போட்டிவரை வந்தது பலருக்கும் இலங்கை அணி மீது பெரிய எதிர்பார்ப்பையும் நம்பிக்கையையும் கொடுத்திருந்தது. துடுப்பாட்டத்தைத் தலைமைத்துவ அழுத்தம் பாதிக்கவில்லை எனும் அளவுக்கு அணிக்கான தனது துடுப்பாட்டப் பங்களிப்பையும் வழங்கியிருந்தார். அணியின் பெறுபேறுகளும் மற்றைய அணிகளுடன் ஒப்பிடுமளவுக்கு மிகச் சிறப்பாகவும் ஒற்றுமையாகவுமே இருந்து வந்தன.

எனினும் அர்ஜுனவுக்குப் பிறகு இலங்கை அணியில் தலைவர்களுக்கு இருந்துவந்த பெரிய சிக்கலான கிரிக்கெட் சபையுடனான பிரச்சினைகளும், அரசியல் நேரடி, மறைமுகத் தலையீடுகளும் மஹேலவையும் தொல்லைப்படுத்தியே இருந்தன.

பொதுவாகவே மென்மையான அணுகுமுறை உடையவராக மஹேல இருந்தாலும், அவர் தனது தலைமைத்துவத்திலும் பேச்சு அணுகுமுறைகளிலும் நேர்மையாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் இருந்துவந்த ஒருவர்.

2009இல் இலங்கைக்கு வந்திருந்த இந்திய அணி, முதல் நான்கு ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும் இலங்கை அணியை வெற்றி கொண்ட நேரத்தில் மஹேல முதல் தடவையாகக் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டிருந்தார். ஆனாலும் தலைமைப் பதவியைக் காவுகொள்ளும் அளவுக்கு அவை எவையுமே இருக்கவில்லை.

ஆனாலும் ஐந்தாவது போட்டியில் இலங்கை அணி ஓர் ஆறுதல் வெற்றியைப் பெற்ற பின்னர் அனைவரும் ஆச்சரியப்படும் விதத்தில் மஹேல ஜெயவர்த்தன தாம் தலைமைப் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

புதிய தலைவராக குமார் சங்கக்கார பொறுப்பெடுத்த பின்னர் ஒரு சிரேஷ்ட வீரராக ஆலோசனைகளில் மஹேலவின் பங்களிப்பு புதிய தலைவருக்கு மிகப் பயனுடையதாக அமைந்ததோடு துடுப்பாட்ட வீரராக மேலும் பரிணமித்தது.

அணிக்காக எதையும் செய்யக் கூடியவர் என்பதை மஹேல நிரூபித்த மற்றொரு சந்தர்ப்பம் 2011 உலகக்கிண்ணம். சங்கக்காரவைப் பலப்படுத்த மஹேல அனுபவம் குறைவான இலங்கை அணியின் உபதலைவராகவும் பணியாற்ற சம்மதித்தார்.



இலங்கை கிரிக்கெட்டின் விதி... உலகக்கிண்ணத்தின் இன்னொரு இறுதிப்போட்டித் தோல்வி... அதைத் தொடர்ந்து எழுந்த சர்ச்சைகள் அடங்க முன்னரே சங்கக்கார தலைமைப் பதவியிலிருந்து விலகிக்கொண்டார்.

அதற்குப் பின் இலங்கை கிரிக்கெட்டின் குழப்பமான காலம்... டில்ஷானின் தலைமை, உறுதியற்ற அணி, வெற்றிகள் வறண்டு போயின... தென் ஆபிரிக்காவிலே கன்னி டெஸ்ட் வெற்றியொன்றைப் பெற்றாலும், அதன் பின்னர் டில்ஷான் பதவி விலகிக் கொண்டார்.

தலைமைத்துவத்துக்கான நீண்ட காலத் தேடலுக்கு முன்னதாக இலங்கை அணியை ஸ்திரப்படுத்தவும், புதிய ஒரு தலைவரை இனம் காணவும் மீண்டும் இலங்கைக்குக் கிடைத்த விடை/தீர்வு மஹேல மட்டும் தான்...

அணிக்காக முள் முடியை மீண்டும் தரித்துக்கொண்ட மஹேலவுக்கு முதலாவது பணியிலேயே பெரும் பாராட்டுக்கள். அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற முக்கோணத் தொடரில் பெற்ற வெற்றிகளும், இறுதிவரை இலங்கை அணி வந்ததும் மஹேலவின் தலைமையில் மீண்டும் இலங்கை அணி எழுச்சி பெறும் என்ற நம்பிக்கையை அளித்திருந்தன.

தான் மீண்டும் தலைமை தாங்கிய முதலாவது போட்டியிலேயே இங்கிலாந்துக்கெதிராக 180 ஓட்டங்களையும் அபாரமாகப் பெற்ற மஹேல இலங்கைக்கு வெற்றியையும் பெற்றுக்கொடுக்கிறார். மீண்டும் வெற்றியுலா...

ஆனால், 2013ஆம் ஆண்டின் ஆரம்ப அவுஸ்திரேலியத் தொடருடன் தான் மீண்டும் தலைமைப் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தே பதவியேற்ற மஹேல அணியை ஒற்றுமைபடுத்தியும் இருந்தார்; வெற்றிகளையும் இலங்கைக்குப் பெற்றுக் கொடுத்திருந்தார்; எதிர்காலத்துக்கான இலங்கை அணியொன்றையும் உருவாக்கியுள்ளார். ஆனால் இதற்கெல்லாம் விலையாக இவரது துடுப்பாட்டம் அண்மைக்காலத்தில் தடுமாறுகிறது... குறிப்பாக வெளிநாடுகளில்.

அத்துடன் கிரிக்கெட் சபையுடனும் தெரிவாளர்களுடனும் இவரது நேரடி, மறைமுக மோதல்கள் நிச்சயமாக நிம்மதியான தலைமைத்துவ காலத்தை வழங்கியிருக்காது.

அண்மையிலும் கூட கிரிக்கெட் சபை மீது தான் நம்பிக்கை இழந்ததாகப் பகிரங்கமாகவே அறிவித்திருந்தார். 

அத்துடன் பல இளம் வீரர்களை நம்பிக்கையாக அணியில் சேர்த்து அவர்களுக்கு ஒரு தந்தை போல, மூத்த சகோதரன் போல வழிகாட்டியாக நம்பிக்கை கொடுத்து உருவாக்கி விட்டவர். முரளி, வாஸ் ஆகியோருக்குப் பிறகு இலங்கை என்ற கேள்விக்குறிக்கு விடையாக மஹேல கொடுத்த நம்பிக்கை மூலமாக ஹேரத், மாலிங்க, குலசேகர இன்னும் மஹேல கண்டுபிடித்த அகில தனஞ்செய என்று பலர் உருவாகியுள்ளார்கள்.

ஆனால், மஹேலவின் இரண்டாவது கட்டத் தலைமையின் மிக உச்சபட்ச தருணம் இலங்கையில் இடம்பெற்ற உலக Twenty 20 போட்டித் தொடர். இலங்கைக்கான மிகப் பெரிய வாய்ப்பாக இந்த உலகக் கிண்ண வெற்றி அமைந்திருக்கும்.

மஹேல ஒரு தலைவராக மிகச் சிறப்பாக அணியை வழிநடத்தி, துடுப்பாட்ட வீரராகவும் பிரகாசித்திருந்தார். இவரது தலைமைத்துவம் பல கட்டங்களில் வியந்து பாராட்டப்பட்டது.

ஆனால் இறுதிப் போட்டியின் தோல்வி எல்லோரையுமே நிலைகுலைய வைத்தது.

அதைவிட, மஹேல உடனடியாகவே Twenty 20 தலைமைப் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். முதலிலே தீர்மானித்திருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இப்போது டெஸ்ட் தலைமையிலிருந்தும் அதன்பின்னர் இடம்பெறவுள்ள ஒருநாள் தொடரின் பின்னர் முழுமையாகவும் தலைமையிலிருந்து விடைபெறுகிறார் மஹேல.

அவர் விட்டுச் செல்லும் நிலையிலிருந்து மத்தியூஸ் அணியைத் தொடர்ந்து அழைத்துச் செல்வாரா என்பது ஒருபக்கம், மஹேல தனியொரு துடுப்பாட்ட வீரராக எவ்வளவு காலம் தொடரப் போகிறார் என்பது மறுபக்கம் என்று கேள்வி தொக்கி நிற்கிறது.

ஆனால், ஒரு சிரேஷ்ட வீரராக இனி தலைவராகப் பயணிக்க இருக்கும் மத்தியூசுக்கு இவரது அனுபவ ஆலோசனைகள் எவ்வளவு தேவைப்படுமோ, அதேபோல இளம் துடுப்பாட்ட வீரர்களுக்கும் மஹேல நல்ல வழிகாட்டியாக இருக்கப் போகிறார்.

*தமிழ் மிரருக்காக நான் எழுதிய கட்டுரை. இங்கே மீள் பிரசுரம் செய்துள்ளேன் 

மஹேல: இலங்கையின் மறக்கமுடியாத தலைவர்


December 24, 2012

சச்சின் டெண்டுல்கர் ஓய்வு - சில சந்தேகங்கள் - ஒரு அலசல்


சச்சின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு...

இது பற்றியே இந்த இரண்டு நாட்களாகப் பேச்சு...



இந்த ஓய்வு எதிர்பார்த்ததே என்றாலும், பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் போட்டிகளில் விளையாடிவிட்டு ஓய்வுபெறக் காத்திருக்கிறார் என்றதால் தான் சச்சின் டெண்டுல்கர் இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரின் பின்னர் சச்சின் ஓய்வை அறிவிக்கவில்லை என்று நான் நினைத்திருந்தேன்.

உண்மையில் நாற்பது வயதை நெருங்கும் சச்சின் முன்பை விட ஆடுகளத்தில் பந்துகளைத் தேர்வு செய்து துடுப்பாடுவதிலும், பந்துகளை அடிக்காமல் விடுவதிலும் கூடத் தடுமாறுகிறார் என்பது அவரது அங்க அசைவுகள், பார்வைகள், ஏன் ஆட்டமிழப்புக்கள் மூலமாகக் கூடத் தெரிகிறது.

இங்கிலாந்துத் தொடரில் அவரது தொடர்ச்சியான தடுமாற்றம் பற்றி கடந்த வாரம் நான் தமிழ் மிரரில் எழுதிய கட்டுரையில் சொல்லி இருந்தேன்.

இந்தத் தொடரில் சச்சின் டெண்டுல்கர் ஒரு இன்னிங்சில் பெற்ற 76 ஓட்டங்களைத் தவிர ஏனைய 5 இன்னிங்சில் 36 ஓட்டங்களையே எடுத்திருக்கிறார். சராசரி 18.66. நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட டெஸ்ட்கள் அடங்கிய தொடர் ஒன்றில் சச்சின் பெற்ற மிக மோசமான சராசரி இதுவே.
நாற்பது வயதாகும் உலகின் அதிகூடிய ஓட்டங்கள் பெற்ற சாதனையாளர் தொடர்ந்து தடுமாறியும், தளர்ந்தும் வருகிறார் என்பது அவரது கடந்த இரு வருடப் பெறுபேறுகளிலேயே தெரிகிறது. 18 டெஸ்ட் போட்டிகளில் 1113 ஓட்டங்கள். சராசரி 35.90. ஒரேயொரு சதம்.
ரஹானே, திவாரி, இன்னும் பல இளம் வீரர்கள் வெளியே வாய்ப்புக்காகக் காத்திருக்க, சச்சின் தானும் தடுமாறி அணியையும் தடுமாற வைத்துக்கொண்டிருக்கிறார் என்ற விமர்சனங்கள் கிளம்பியுள்ளன வழமை போலவே...
இந்தியா அடுத்த டெஸ்ட் தொடர் விளையாட சில மாதகாலம் இருப்பதால் சச்சின் என்ன முடிவை எப்போது எடுப்பார் என்று அனைவருமே காத்துள்ளார்கள்.

ண்மைக்காலத்தில் அனேக பிரபல. சிரேஷ்ட வீரர்களுக்கு அவரவர் அணிகள் இறுதியாக ஒரு போட்டியை தங்கள் ஓய்வை அறிவித்துவிட்டு விலகும் வாய்ப்பாக வழங்கி வந்துள்ளார்கள்.

இந்தியாவின் டிராவிட், லக்ஸ்மன் ஆகியோர் மட்டுமே இரு டெஸ்ட் தொடர்களுக்கிடையில் போட்டிகள் நடக்காத நிலையில் தங்கள் ஓய்வுகளை அறிவித்தவர்கள்.
(லக்ச்மனின் ஓய்வு ஏற்படுத்திய சர்ச்சையின் மூலம் அவர் ஓய்வு பெற வைக்கப்பட்டார் என்பது தெளிவானது)

எனவே சச்சின் இங்கிலாந்துக்கு எதிரான நாக்பூர் டெஸ்ட் போட்டியின் முன்னர் அல்லது தொடர் முடிந்த உடன் அறிவிப்பார் என்று பார்த்தால், பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடவுள்ள இந்திய ஒருநாள் சர்வதேச அணி அறிவிக்கப்பட ஒரு சில நிமிட நேரங்களுக்கு முன்னர் தனது ஓய்வை - ஒருநாள் சரவதேசப் போட்டிகளில் இருந்து மட்டும் - அறிவிக்கிறார்.

இது உண்மையில் பலரும் எதிர்பாராததே..

டெஸ்ட் போட்டிகளிலிருந்தும், ஒருநாள் போட்டிகளிலிருந்தும் ஒரே நேரத்தில் சச்சின் விலகுவார் என்றே நான் உட்பட அனைவரும் எதிர்பார்த்திருந்தோம். (என்னதான் கிரிக்கெட் கடவுளாக இருந்தாலும் 2015 உலகக் கிண்ணத்தில் சச்சின் விளையாட மாட்டார் என்பது இப்போது சச்சின் ஓய்வு பெற்றதற்காக உண்ணாவிரதம், தீக்குளிப்பில் ஈடுபடும் ரேஞ்சுக்குப் போயுள்ள ரசிக / பக்த சிகாமணிகளுக்கும் நன்றாகவே தெரியும்)

பாகிஸ்தான் தொடரில் விளையாடுவது எல்லா இந்திய வீரர்களுக்கும் ஒரு பெரிய விஷயம்.. மிக நீண்ட காலத்தின் பின்னர் இந்தியா வருகின்ற பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடும் ஒரு அரிய சந்தர்ப்பத்தை சச்சின் கூட தவறவிடுவாரா?

இந்தியத் தெரிவாளர்கள் (தோனியுடன் சேர்ந்து தான்) அண்மைக்காலத்தில் எடுத்துவரும் கடுமையான முடிவுகள் & சச்சினின் தொடர்ச்சியான தளம்பல்கள் இரண்டும் சேர்ந்து இந்த அவசர ஓய்வு, சச்சின் தானாக எடுத்ததா அல்லது தேர்வாளர்களுடன் பேசி அவர்களாகக் கொடுத்த ஐடியாவா என்ற கோணத்திலும் யோசிக்க வைக்கக் கூடியவை.

அறிவிக்கப்பட்ட இந்திய ஒருநாள் அணியிலும் சாகிர் கான் இல்லை.. சேவாக் சேர்க்கப்பட்டதும் ஆச்சரியத்தை அளித்திருந்தது.

சச்சின் ஓய்வை அறிவிக்காமல் இருந்திருந்தால், தேர்வாளர்கள் சேவாக்கா சச்சினா என்ற குழப்பத்திற்கு ஆளாகி இருக்கலாம்...

எனவே தான் கலந்தாலோசித்து இந்த ஓய்வை சச்சின் அணி அறிவிக்க சில நிமிட  நேரங்களுக்கு முன்னர் அறிவித்தாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.

எப்படா இந்த ஆள் ஓய்வு பெறுவார் என்று அங்கலாய்த்துக் கொண்டிருந்த பலருக்கும், ஏன்டா இப்ப ஓய்வு பெற்றார் என்ற எண்ணத்தைக் கொடுத்திருக்கும் சச்சின் டெண்டுல்கர் - இப்போது இந்த ஒருநாள் ஓய்வை, அதை மட்டும் அறிவித்திருப்பதற்கு ஆறு காரணங்கள் இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். (ஆறில் ஒன்று இல்லாவிட்டால் ஆறுமே)

1.அண்மைக்காலத் தொடர்ச்சியான தளம்பல்கள் & தடுமாற்றங்கள்.

உலகக்கிண்ணத்தின் பின்னர் இருந்தே சச்சின்  தடுமாறி வருகிறார்.  ஒருநாள் சராசரியாக 44.83 ஐக் கொண்டுள்ள சச்சின் உலகக் கிண்ணத்தின் பின்னர் விளையாடியுள்ள பத்து ஒருநாள் போட்டிகளில் கொண்டுள்ள சராசரி  31 மட்டுமே. தனது நூறாவது சர்வதேச சதமாக எடுத்த ஒருநாள் சதம் தான்  21 மாதங்களில் சச்சின் பெற்றுள்ள ஒரே சதம்.

2.2015ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்துக்காக இளைஞர்களுக்கான இடத்தை வழங்க

இந்திய அணியில் நுழைவதற்கு மிகச் சிறந்த பெறுபேறுகளுடன் & ஆற்றல்களுடன் காத்துள்ள இளைய வீரர்கள் பலரை வைத்து அடுத்த உலகக் கிண்ணத்துக்கான அணியைக் கட்டியெழுப்பும் முயற்சியின் குறுக்கே தான் இருக்க கூடாது என்று சச்சின் நினைத்திருக்கலாம்.

3.ஆஸ்திரேலியாவில் தோனி கடைக்கொண்ட சுழற்சித் தெரிவு

சச்சின், சேவாக், கம்பீர் ஆகிய மூன்று 'மூத்த' வீரர்களையும் ஒரு சேர அணியில் விளையாட வைக்க முடியாது; இதனால் களத்தில் இருபது ஓட்டங்களாவது அநியாயமாகப் போகிறது என்று  தோனி பகிரங்கமாகத் தெரிவித்த கருத்தும் அதைத் தொடர்ந்து மாறி மாறி வழங்கப்பட்ட ஓய்வும் சச்சினை யோசிக்க வைத்திருக்கலாம்.
(ஆனால் இந்த சுழற்சியை சச்சினும் ஏற்றுக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது)

4.வயது, களத்தடுப்பு & டெஸ்ட்

நாற்பது வயதாகுவதால் இயல்பாகவே களத்தடுப்பில் சச்சின் கொஞ்சம் மந்தமாகியிருக்கிறார். இதனால் டெஸ்ட் போட்டிகளில் சமாளித்தாலும் ஒருநாள் போட்டிகளில் இளையவர்களுக்குத் தான் ஈடுகொடுக்க முடியாது என நினைத்திருக்கலாம்.
டெஸ்ட் போட்டிகளில் இன்னும் கொஞ்சம் நின்று பிடிக்கலாம் என சச்சின் நினைத்தாலும், அண்மைக்காலத்தில் அவர் தடுமாறியதைப் பார்க்கையில், ஐந்து நாள் போட்டிகளை விட, ஐம்பது ஓவர்களில் சச்சின் கொஞ்சமாவது அதிகம் செய்திருப்பார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

5.ஆரம்பத் துடுப்பாட்ட ஜோடிக் குழப்பம் & கோளியின் எதிர்காலம்

சச்சின் தொடர்ந்து இருப்பதால் யாரை ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக அனுப்புவது என்ற குழப்பம் நீடிக்கிறது. அத்துடன் சேவாக், கம்பீரோடு சச்சினும் விளையாடினால் முதல் மூன்று இடங்களும் நிரப்பப்படுவதால் இந்த வருடத்தில் சர்வதேச ஓட்டங்களை அதிகமாகக் குவித்த, அருமையான Form இலுள்ள விராட் கோளி நான்காம் இலக்கத்துக்கு தள்ளப்படுகிறார். இதனால் கோளிக்கு மட்டுமில்லாமல் இந்தியாவுக்குமே நஷ்டம்.
இதை 23 வருடங்களாக இந்திய அணியை உணர்ந்து, மிக அனுபவஸ்தராக விளங்கும் சச்சின் உணர்ந்திருக்கலாம்.

6. தேர்வாளர்கள் சச்சினைத் தெரிவு செய்யவில்லை என்பதைப் போட்டுடைத்திருக்கலாம்

கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீக்காந்த் தலைமையிலான குழுவினருக்கு  இல்லாத தைரியம் சந்தீப் பாட்டில் குழுவினருக்கு இருந்தாலும் சச்சினை நீக்கும் அளவுக்கு இருக்குமா என்ற கேள்வி எழுந்தாலும், அவரது மோசமான form உம் வயதும், இளம் வீரர்களின் தொடர்ச்சியான சிறப்பான ஆட்டங்களும், பாகிஸ்தான் தொடரை(யாவது) வென்றாகவேண்டும் என்ற காரணங்கள் முக்கியமானதாக இருந்திருத்தல் வேண்டும்.

இதனால் அணியை விட்டு சச்சினைத் தூக்கியாச்சு என்ற அவப்பெயர் இந்தியாவின் மிகச் சிறந்த சாதனை நாயகனுக்கு வந்துவிடக் கூடாது என்ற ஒரு மரியாதை நிமித்தம் (ஆஸ்திரேலிய பாணியில்) சச்சினை முதலில் அறிவிக்கச் செய்திருக்கலாம்.
(அப்படி இருந்தாலும் நம்ம ஊரு சனத் ஜெயசூரிய எம்.பி மாதிரி விடைபெற என ஒரே ஒரு போட்டியைக் கேட்டுப் பெற்று விடைபெற்றிருக்கலாமே என்ற கேள்வியும் எழாமல் இல்லை)
அவர் அறிவித்த சில நிமிடங்களில் இந்திய ஒருநாள் அணி அறிவிக்கப்பட்டது.

இந்தியாவில் ஒய்வு பெறமாட்டார்களா என்று அழுத்தம் வழங்கப்பட்டு தங்கள் ஓய்வை அறிவித்த கபில்தேவ், கங்குலி போன்ற சிலர் ஞாபகம் வருகிறார்கள்.
இன்னும் கொஞ்சம் விளையாட மாட்டார்களா என்று எதிர்பார்த்து ஏங்கவைத்து விலகிச் சென்ற கவாஸ்கர், கும்ப்ளே, டிராவிட் போன்றோரும் நினைவுக்கு வருவார்கள்.
சச்சின் தனது டெஸ்ட் ஓய்வை அறிவிக்கையில் இதில் எந்த ரகத்தில் வரப்போகிறார் என்ற கேள்வியும் எழுகிறது.


எம்மில் சச்சினை ரசிகராக, பக்தராக ரசிக்கும் பலருக்கு சச்சின் ஒய்வு கிரிக்கெட்டிலே ஒரு வெறுமைத் தோற்றத்தைத் தரலாம்.. (எனக்கு முரளியின் ஒய்வு தந்த உணர்வு போல)
ஆனால் அவரது ரசிகராக இல்லாத பலருக்கும் கூட, சச்சின் ஒரு கிரிக்கெட்டின் கால அடையாளம்.

1989க்கு முன்னரே கிரிக்கெட்டைப் பார்க்க, ரசிக்க ஆரம்பித்தாலும் எனக்கு வசிம் அக்ரம், முரளிதரன், ஸ்டீவ் வோ, பிரையன் லாரா, ஷேன் வோர்ன், சச்சின், சனத் ஜெயசூரிய, அரவிந்த டி சில்வா  முதலானோர் தான் அந்தந்தக் காலகட்டத்தில் கிரிக்கெட்டை ஆண்டு எனக்கு கிரிக்கெட்டை ஊட்டியவர்கள்.

இப்போது இறுதியாக சச்சினும் விடைபெறுகிறார்.
ஒருநாள் போட்டிகள் சிவப்புப் பந்து, வெள்ளை உடைகளில் இருந்து இப்போதைய Twenty 20 போட்டிகளால் மாறிவரும் ஒருநாள் போட்டிகள் வரை மாறாமல் இருந்த ஒரே விடயம் சச்சின் தான்....
இனி சச்சின் டெஸ்டில் மட்டும் எனும்போது எங்களுக்கு வயதேறிவிட்டது என்பது மனதில் உறைக்கவில்லையா?

சச்சினின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்கள் எங்கும் அவரது சாதனைகள் பற்றிப் போற்றுவதிலும், அவரது சாதனைகள் பற்றி மீண்டும் நினைவூட்டுவதிலும் இருக்க, முன்னாள் வீரர்கள் ஓய்வை நியாயப்படுத்துவதிலும், சிலர் இப்போது ஏன் என்று அதிர்ச்சிப்பட,
சச்சினின் IPL அணியான மும்பை இந்தியன்சின் ட்விட்டர் கணக்கு @Mipaltan சச்சின் அணிந்த பத்தாம் இலக்க ஜெர்சியை இனி யாருக்கும் வழங்கக்கூடாது என்று ஒரு கோரிக்கையை ட்விட்டரில் ஆரவாரமாக நடத்திக்கொண்டிருகிறது.
#RetireTheJerseyNo10

சச்சின் என்ற சாதனையாளன் 2011 உலகக் கிண்ண வெற்றியுடன் விடை பெற்றிருக்க வேண்டும்.

அது அவருக்கான மிக உச்ச கௌரவமாக இருந்திருக்கும். சொந்த மண்ணில்.. சொந்த மைதானத்தில், அணி முழுதும் அவருக்காகப் பெற்ற கிண்ணம் என்று பரிசளித்த வெற்றி அது.

இல்லாவிட்டால் தான் எந்த அணிக்கு எதிராக தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை ஆரம்பித்தாரோ அதே பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடி விடை பெற்றிருக்கவேண்டும்.

இரண்டும் இல்லாமல், இடை நடுவே தடுமாற்றம் & சந்தேகங்களோடு விடை பெறுவது சாதாரண ஒரு கிரிக்கெட் ரசிகனாக எனக்கும் சற்றுக் கவலையே.

சச்சினை ஒய்வு பெறச் சொல்வது பற்றி அண்மைக்காலமாகவே இருந்துவரும் வாதப் பிரதிவாதங்கள் பற்றிய ஒரு கருத்துச் சித்திரம். ட்விட்டரில் இருந்து உருவியது....


கிரிக்கெட்டை எப்படி அங்குலம் அங்குலமாக வாசிக்கத் தெரியுமோ அதைவிடவும் தன்னையும் அதிகமாக வாசிக்கத் தெரிந்த சச்சின் அடுத்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருடன் ஓய்வை அறிவிப்பார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
அதுதான் அவருக்கும் உரிய விடைபெறலாக இருக்கும்.
(ஆனால் இப்போதிருக்கும் இந்திய அணியின் நிலையில் இந்தியாவுக்குத் தொடர் வெற்றியைப் பரிசளித்து சச்சினால் செல்ல முடியாது என்பதுவும் உறுதி)


         *** நத்தார் கொண்டாடும் நண்பர்களுக்கு இனிய நத்தார் வாழ்த்துக்கள் ***

December 11, 2011

செவாக் 219 (Sehwag 219) - சில குறிப்புக்கள்



இந்தூர் மைதானத்தில் விரேந்தர் செவாக் படைத்த 219 ஓட்ட ஒருநாள் சர்வதேச சாதனை பற்றிய சில சுவாரஸ்யத் தகவல்கள்..

3223 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் விளையாடப்பட்டுள்ள நிலையில் இதுவே இரண்டாவது இரட்டை சதம். (ஆண்களுக்கான போட்டிகளில்.. ஆஸ்திரேலியா வீராங்கனை பெலிண்டா கிளார்க் 1997ஆம் ஆண்டு டென்மார்க் மகளிர் அணிக்கு எதிராகப் பெற்ற ஆட்டம் இழக்காத 229 ஓட்டங்களே சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிகூடிய ஓட்டங்களாக இன்னும் இருக்கிறது.)


List A என்று சொல்லப்படும் சர்வதேச அங்கீகாரம் பெறாத (முதல் தர ஒருநாள் போட்டிகள் - கழக மட்ட, முதல் தர அணிகளின் போட்டிகள்) போட்டிகளில் சேவாக்குக்கு முதல் பத்துப் பேர் இரட்டை சதங்களை எடுத்துள்ளார்கள்.
செவாக் பெற்ற 219 ஓட்டங்கள் மூன்றாவது அதிகூடிய ஓட்டங்கள் ஆகியுள்ளன.

முழு விபரங்கள்...
http://stats.espncricinfo.com/ci/content/records/117935.html 

சச்சின் டெண்டுல்கர் தனது சர்வதேச ஒருநாள் இரட்டை சதம் பெறுவதற்கு முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முதலே தென் ஆபிரிக்காவின் மிகச் சிறந்த துடுப்பாட்ட வீரராகக் கருதப்படும் கிரேம் பொல்லொக் (ஷோன் பொல்லொக்கின் பெரியப்பனார்) ஒருநாள் போட்டிகளின் முதலாவது இரட்டை சதத்தைப் பெற்றிருந்தார்.


சச்சின் டெண்டுல்கர் படைத்திருந்த சாதனை நிலைத்து நின்றது 21 மாதங்கள்.
பொதுவாகவே கிரிக்கெட்டில் ஒரு சாதனை ஏற்படுத்தப்படும் போதே அதை முறியடிப்பது யார் என்ற ஆய்வுகளும் ஆரம்பித்துவிடுவது வழமை.
இந்த சாதனையை முறியடிக்கக் கூடியவராக செவாக்கே இருப்பார் என்பது அநேகரின் கருத்தாக இருந்தது.

ஷேன் வொட்சன் பங்களாதேஷ் அணிக்கெதிராக முறியடிக்கக் கூடியளவுக்கு நெருங்கி வந்தார். ஆனால் இலக்கு சிறிது; தப்பி விட்டது.
டாக்காவில் 96 பந்துகளில் வொட்சன் மரண அடி அடித்துப் பெற்றது ஆட்டமிழக்காத 185 ஓட்டங்கள்.

செவாக் செய்து காட்டிவிட்டார்.

சச்சின், செவாக் இருவரதும் இரட்டை சதங்கள் ஒரே மாநிலத்திலேயே பெறப்பட்டுள்ளன. - மத்தியப் பிரதேசம்.
இரண்டு ஆடுகளங்களையும் ஒரே ஆடுகளப் பரமரிப்பாளரே தயார்படுத்தியிருந்தார்.
சமந்தர் சிங் சௌஹான்.


இரண்டு போட்டிகளிலுமே இந்திய அணி ஒரேயளவான ஓட்ட எண்ணிக்கையினாலேயே வெற்றியீட்டி இருக்கிறது. 153.

சச்சின் தனது 200 ஓட்டங்களைப் பெற சந்தித்தது 147 பந்துகளை; செவாக்  சச்சினை விட இரு பந்துகள் அதிகமாக சந்தித்திருந்தார். ஆனால் 19 ஓட்டங்களை மேலதிகமாகப் பெற்றுக்கொண்டார்.

இருவருமே ஒரே எண்ணிக்கையான நான்கு ஓட்டங்களையே (fours) பெற்றிருந்தார்கள். 25
ஒரு நாள் சர்வதேசப் போட்டியொன்றில் பெறப்பட்ட கூடுதலான நான்கு ஓட்ட எண்ணிக்கை இதுவே.

ஆனால் செவாக் ஏழு ஆறு ஓட்டப் பெறுதிகளையும் (sixer) பெற்று மொத்தமாக 32 பவுண்டரிகளைப் பெற்றது புதிய சாதனை.
(சேவாக் ஒரு இன்னிங்சில் அதிகமாக ஆறு ஓட்டங்கள் பெற்றதும் இந்தப் போட்டியில் தான்)
இதற்கு முன்னர் ஷேன் வொட்சன் முப்பது பவுண்டரிகளைப் பெற்றிருந்தார். (15 4s + 15 6s)

ஆனாலும் பவுண்டரிகளில் அதிக மொத்த ஓட்டங்களைப் பெற்றவர் என்ற சாதனை இன்னமும் ஷேன் வொட்சன் வசமே.
வொட்சன் - 150 ஓட்டங்கள்
செவாக் - 142 ஓட்டங்கள்


செவாக்கின் கொலைவெறி இன்னிங்க்ஸ் - பந்துகள் மைதானத்தின் அத்தனை முனைகளையும் தொட்டுள்ளதைப் பாருங்கள்.
நன்றி - cricinfo

செவாக் தனது இரட்டை சதத்தைப் பெற எடுத்துக்கொண்ட பந்துகள்.. 140.
இது சச்சின் டெண்டுல்கர் எடுத்துக்கொண்டதை விட ஏழு பந்துகள் குறைவாகும்.

இந்தியர் ஒருவர் மேற்கிந்தியத் தீவுகளுக்கேதிராகப் பெற்ற வேகமான சதமும் இதுவே..  69 பந்துகளில்.
இதற்கு முதலும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராகத் தான் குறைந்தளவு பந்துகளில் செவாக் சதமடித்திருந்தார்.  2002ஆம் ஆண்டு 75 பந்துகளில்.
பாவம் மேற்கிந்தியத் தீவுகள். சேவாகிடம் ஒவ்வொருமுறையும் மாட்டித் தவிக்கிறது.

சச்சினிடம் இருந்த சாதனைகள் மட்டுமன்றி நம்ம மாண்புமிகு சனத் ஜெயசூரியவிடமிருந்த ஒரு அரிய சாதனையும் செவாக்கிடம் போய்ச் சேர்ந்துள்ளது.
அணித் தலைவராக ஒருவர் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் பெற்ற அதிகூடிய ஓட்ட எண்ணிக்கை -
சனத் ஜெயசூரிய ஷார்ஜாவில் 2000ஆம் ஆண்டு இந்திய அணிக்கெதிராகப் பெற்ற 189 ஓட்டங்களே இதுவரை சாதனையாக இருந்தன.
இப்போது செவாக்கின் 219.

செவாக் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் ஒருநாள் இன்னிங்சில் அதிக பந்துகளை சந்தித்ததும் இந்தூரில் தான்.
149 பந்துகள். இதற்கு முதல் இந்த ஆண்டு உலகக் கிண்ணத்தின் முதல் போட்டியில் பங்களாதேஷைத் துவம்சம் செய்தபோது செவாக் 140 பந்துகளை சந்தித்து 175 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

அந்த ஆட்டத்தில் இடை நடுவே செவாக் சற்று சோர்ந்து காணப்பட்டார்; அத்துடன் அவருடன் இணைப்பாட்டங்களைப் புரிந்திருந்த ஏனைய வீரர்கள் செவாக்கின் அழுத்தத்தைக் குறைக்கும் விதமாக வேகமாக அடித்தாடவும் இல்லை.
இந்தூரிலோ நிலை வேறு. முதலில் கம்பீர், பின்னர் ரெய்னா என்று சேவாக்கை அழுத்தத்துக்கு உட்படுத்தாமல் தங்கள் பங்கிற்கு மேற்கிந்தியப் பந்துவீச்சாளர்களைப் பந்தாடிக் கொண்டிருந்தார்கள்.
(ஆனால் செவாக் அவ்விருவரையும் ரன் அவுட்டாக்கியது வேறு கதை ;))

இந்த சாதனை நிகழ்த்திய இன்னிங்சின் இடையே செவாக் எட்டாயிரம் ஒருநாள் சர்வதேச ஓட்டங்கள் என்ற மைல் கல்லையும் கடந்திருந்தார்.
8000 ஓட்டங்கள் பெற்ற ஆறாவது இந்திய வீரர் ஆகியுள்ளார் செவாக்.

முன்னர் ஒரு காலகட்டத்தில் அணியாக இருநூறு அடிப்பதே கஷ்டமாக இருந்த காலம் போய், சச்சின், செவாக் ஆகியோர் தனி நபர் இருநூறுகளை ஆரம்பித்துள்ளார்கள்.

யார் அடுத்து இதை எட்டப் போவது? யாரால் செவாக்கின் இந்த சாதனையை முறியடிக்க முடியும்?

என்னைப் பொறுத்தவரை இப்போதிருக்கும் சர்வதேச வீரர்களில் வெகு சிலருக்கே நீண்ட நேரம் நின்று ஆடி இந்த சாதனையை உடைக்கும் வலிமையையும் பொறுமையும் இருக்கிறது..

ஷேன் வொட்சன், டேவிட் வோர்னர் உடனடியாக ஞாபகம் வருகிறார்கள்.
வேகமாக அடித்து ஆடினாலும் பிரெண்டன் மக்கலம், திலகரட்ன டில்ஷான், தமிம் இக்பால் போன்றோர் நீண்ட நேரம் நின்றாடும் பொறுமை இல்லாதவர்கள்.

விராட் கோஹ்லி, டீ வில்லியர்ஸ், சிம்பாப்வேயின் பிரெண்டன் டெய்லர், கெவின் பீட்டர்சன் போன்றோருக்கு நின்று ஆடி ஓட்டங்களைக் குவிக்கும் வல்லமை இருந்தாலும் ஆரம்ப விக்கெட் விரைவாக வீழ்ந்தாலே இவர்களுக்கு இந்த சாதனையைப் பற்றி நினைத்துப் பார்க்க முடியும்.

எனவே செவாக்கின் சாதனை அவ்வளவு இலகுவில் முறியடிக்கப்பட முடியாது. மீண்டும் செவாக் முயன்றால் அல்லது வோர்னர், வொட்சன், சச்சின் போன்றோருக்கு குவாலியர், இந்தூர் போன்ற ஆடுகளங்கள் மாதிரியான இலகு ஆடுகளங்களோ, சௌஹான் போன்ற ஆடுகள அமைப்பாளரோ வைத்தால் ஒழிய எனும் முடிவுக்கு வரலாம்.

ஆனாலும் செவாக் தட்டை ஆடுகளத்தில் அடித்தார்; இலகுவான மைதானம்.. பந்துவீச்சு பலமில்லை என்றெல்லாம் சொல்வோருக்கு...
என்ன தான் எல்லாம் இலகுவாகக் கிடைத்தாலும் நின்று அடிக்க ஒரு தில்லும், பொறுமையும் வேண்டுமே.. செவாக்கால் மட்டும் தானே முடிந்துள்ளது?
எனவே அந்த சாதனையைப் பாராட்டுவோம்.

Sehwag 219 உடன் இன்னும் சில இந்திய சாதனைகளும் நிகழ்ந்துள்ளன.
இந்திய அணியால் பெறப்பட்ட அதிகூடிய மொத்த ஓட்ட எண்ணிக்கையும் இதுவே (418/5). முன்னதாக இலங்கை அணிக்கெதிராக 2009ஆம் ஆண்டு இதே டிசெம்பர் மாதம் ராஜ்கோட்டில் இந்தியா 7 விக்கெட்டுக்களுக்கு 414 ஓட்டங்களை எடுத்திருந்தது.

ஒருநாள் சர்வதேச வரலாற்றில் இதுவரை பத்து தடவைகள் 400 + ஓட்டங்கள் அணிகளால் பெறப்பட்டுள்ளன.

இந்தியாவே அதிக தடவைகள் (4) நானூறு ஓட்டங்களைக் கடந்திருக்கிறது.

இனி ஒருவர் தனிநபராக 200 ஓட்டங்களைக் கடந்தால் நெதர்லாந்து அணிக்கெதிராக இலங்கை அணி படைத்த சாதனை ஓட்ட எண்ணிக்கையான 443/9 ஐ முறியடிக்கலாம்.

இப்போ சுவாரஸ்யமான மற்றொரு விடயம் என்னவென்றால் உறங்கிக் கொண்டிருந்த சிங்கத்தை மேற்கிந்தியத் தீவுகள் தட்டி எழுப்பி விட்டது. அந்த சிங்கம் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைந்து என்னென்ன சாதனைகளை உடைக்கப் போகுதோ?

நியூ சீலாந்திடமே முக்கித் திணறிக் கொண்டிருக்கும் ஆஸ்திரேலியா செவாக்கின் கொலைவெறியைத் தாங்குமா?


December 08, 2011

விடியலும் விழிப்பும் + இலங்கையில் 3D ஜாலி + கொலை'விரு' - சேவாக் சாதனை


நேற்று விடியல் நிகழ்ச்சியில் நேயர்கள் கருத்து சொல்வதற்காக நான் கொடுத்திருந்த தலைப்பு -
நீங்கள் வாழும் சமூகத்தில் ஒழிக்கப்படவேண்டிய/ தடுக்கப்படவேண்டிய சில பழக்க வழக்கங்கள்..



இதன் மூலம் இந்தக் காலகட்டத்தில் எம் சமூகத்தில் என்னென்ன விஷயங்களை மக்கள் தவிர்க்க வேண்டும் என்று விரும்புகிறார்கள் என்று அறிந்துகொள்ள விரும்பினேன்.

எல்லோரும் தொலை பேசி, sms , மின்னஞ்சல், facebook மூலமாக சொன்ன கருத்துக்களின் தொகுப்பு

மூட நம்பிக்கைகள் ஒழிக்கப்படவேண்டும்
மனிதர்களைக் கடவுளாக்குதல் தவிர்க்கப்பட/தடுக்கப்பட வேண்டும்
புகைப்பிடித்தலை இளைஞரிடம் இருந்து ஒழித்தல் வேண்டும்
மதுபானப் பழக்க வழக்கம், போதை வஸ்துப் பாவனை இல்லாதொழிக்கப்படவேண்டும்
இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துள்ள இணைய, செல்பேசி பாவனைகளைக் குறைக்க வேண்டும்
மாணவர் மத்தியில் அதிகரித்துள்ள இணைய மோகம்.. குறிப்பாக பேஸ்புக் பாவனை குறைக்கப்பட வேண்டும்
புதிய பாஷன் என்ற பெயரில் அரை,குறை ஆடைகள் அலங்கோலமாகத் திரிவது
இன்னும் பல இடங்களில் காணப்படும் சாதி வெறி
எல்லா இனத்தவரிடமும் காணப்படும் இன, மதவெறி
காதல் என்ற பெயரில் பொது இடங்களில் அரங்கேற்றும் காமக் கூத்துக்கள்
ஐந்து வருடத்துக்கொரு முறை தேர்தலில் சுயநல அரசியல்வாதிகளிடம் முட்டாள்தனமாக ஏமாறுவது
சினிமா மீதான அதிகூடிய மோகம் (சில நடிக, நடிகையரிடம் ரசிகர்கள் என்ற பெயரில் வெறியர்களாக இருப்பதும் கண்டிக்கப்பட்டது)
கிரிக்கெட்டின் மீதான அளவுக்கதிகமான மோகம் (எனக்கும் ஒருவர் நேரடியாகவே கண்டனம் தெரிவித்தார்)

இவற்றிலே பார்த்தோமானால் சில அளவுடன் இருந்தால் ரசனை; இன்னும் சிலவற்றை முற்றாகவே இல்லாதொழித்தால் நன்மை.
=========================


இலங்கையின் முதலாவது 3D - முப்பரிமாணத் திரையரங்கு கொழும்பு மஜெஸ்டிக் சினிப்லேக்சில் (Majestic  Cineplex) கடந்த வாரம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

அவதார் படம் வந்த போதெல்லாம் வெளிநாடுகளில் 3D இல் பார்த்தோம் என்று ஒவ்வொருவரும் குறிப்பிடும்போது ஏக்கமாகவும் எரிச்சலாகவும் இருந்த காலம் போய் இலங்கையிலும் எமக்கும் 3Dஇல் பார்க்கமுடியும் என்ற மகிழ்ச்சி இப்போது.

நேற்று சக பதிவர் நண்பர் நிரூசா(மாலவன்) அவர்களின் அனுசரணையில் (பிறந்தநாள் + இன்னொரு ஸ்பெஷல் ட்ரீட்) 3 Musketeers படத்தை 3D யில் பார்க்கக் கிடைத்தது.


ஏற்கெனவே சிங்கப்பூரில் ஒரு தடவை 3D படம் பார்த்திருந்தாலும், (செந்தோசாவில் 4D பட அனுபவமும் பெற்றிருந்தேன் )இலங்கையில் இது ஒரு அருமையான அனுபவம்..

விசேட கண்ணாடியுடன் தான்.
படம் முடிந்து வெளியே வரும்போது கண்ணாடியைத் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும்.. நினைவுச் சின்னமாகக் கண்ணாடியைக் கொண்டுவர முயன்றால் மாட்டிவிடுவீர்கள். Detecting Device உள்ளது.

டிக்கெட் விலை அறுநூறு ரூபாய்.
எல்லாப் படங்களையும் அடிக்கடி பார்க்கக் கட்டுப்படியாகாது தான்.

அடுத்து Puss in Boots 3Dயில் வருகிறது.
ஆனால் அய்யா இப்போதே இங்கே Tin Tin வரும் என்று வெயிட்டிங்.

மூன்று திரையரங்குகள் கொண்ட புதிதான திரையரங்கத் தொகுதியில் மற்றத் திரையரங்குகளையும் அந்த மஜெஸ்டிக் திரையரங்க முகாமையாளர் என் நண்பர் என்பதால் பார்க்கக் கிடைத்தது.
MC Ultra, MC Gold & MC 3D Superior

நவீன முறையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தத் திரையரங்கங்களில் ஒன்று வழமையானதைப் போன்றது (டிக்கெட் விலை - 400 ரூபா); மூன்றாவது சிறுவர், சிறுமியர் விரும்பக் கூடிய Super Deluxe திரையரங்கம்.. டிக்கெட் விலை 750 ரூபா. விசேடம் என்னவென்றால் டிக்கெட்டோடு KFC/McDonalds சிற்றுண்டியும் தருகிறார்கள்.

இனியென்ன 3D ஜாலி தான்..

========================
கொலை'விரு'


இன்று பிற்பகல் முழுக்க எல்லா கிரிக்கெட் பிரியர்களாலும் உச்சரிக்கப்பட்ட ஒரே பெயர் சேவாக்.
கிரிக்கெட்டின் கடவுள் சச்சின் டெண்டுல்கர் படைத்த முறியடிக்கப்பட முடியாத (அல்லது மிக சிரமமான) சாதனை என்று கருதப்பட்ட ஒரு நாள் சர்வதேச இரட்டை சதத்தை இன்று மேற்கிந்தியத் தீவுகளுக்கேதிராக விரேந்தர் சேவாக் பெற்ற அபார ஆட்டம்...

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்று போட்டிகளில் தடுமாறி இருந்த சேவாக் (மற்றும் கம்பீர்+ ரெய்னா) இந்தப் போட்டியிலாவது formக்குத் திரும்புவாரா என்று இன்று காலை எனது விளையாட்டு நிகழ்ச்சியில் குறிப்பிட்டிருந்தேன்..
அதுக்காக இப்படியா?
என்னா கொலைவெறி... 219 off 147 balls - 25 4s + 7 6s

இப்போது இந்தியா சார்பாக Test & ODI  சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் அதிகபட்ச தனிநபர் ஓட்ட எண்ணிக்கைக்கு சொந்தக்காரர் சேவாக் தான்.


சச்சின் டெண்டுல்கர் படைத்த கிரிக்கெட் துடுப்பாட்ட சாதனைகள் பொதுவாக முறியடிக்கப்பட்டதில்லை.
செவாக்கினால் தான் அது முடிந்திருக்கிறது. அதுவும் சச்சின் டெண்டுல்கர் விளையாடிக் கொண்டிருக்கும்போதே..
அபாரம்..
ஒரு வருடம் மட்டுமே சச்சின் படைத்த இந்த சாதனை நின்றிருக்கிறது.
ஆனால் ஒரு நாள் சர்வதேசப் போட்டியின் முதலாவது இரட்டை சதம் பெற நாற்பது ஆண்டுகள் ஆகியிருந்தன.

கொலைவெறி ட்ரெண்டை இன்று கொலை'விரு'வாக மாற்றியிருந்தார் சேவாக்.

விரேந்தர் சேவாக்கின் இந்த அபார ஒரு நாள் சாதனை பற்றியே சுவாரஸ்யக் குறிப்புக்களை நாளை இன்னொரு தனிப்பதிவாகத் தருகிறேன்.

*எதிர்பார்க்கப்பட்ட புதிய சுழல் பந்துவீச்சாளர் ராகுல் ஷர்மா தனது அறிமுகப் போட்டியிலேயே மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தியதும் இந்தியாவுக்கு நிச்சயம் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையை அதிகப்படுத்தியிருக்கும்.






August 03, 2011

ஹர்பஜன் - உலக சாதனை??? யோவ் காமெடி பண்ணாதீங்கய்யா

ஜூலை 27  குமுதத்தில் வந்திருக்கும் பேட்டி ஒன்றில் -

டெஸ்ட் கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்கள் பலரின் தூக்கத்தைக் கெடுத்தவர் முத்தையா முரளிதரன். ஆனால் இன்று அவர் தூக்கத்தையே ஒருவர் கெடுத்துக் கொண்டிருக்கிறார். அவர் ஹர்பஜன் சிங்.


ஹர்பஜன் சிங்கைப் பார்த்து முரளிதரன் பயப்படுவதற்குக் காரணம் சாதனை. டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்திய வீரர் என்ற முரளிதரனின் சாதனையை ஒருவர் வீழ்த்த முடியும் என்றால் அது ஹர்பஜன் சிங்காகத் தான் இருக்க முடியும்.


தனது 96 வது டெஸ்ட் போட்டியிலேயே 404  விக்கெட்டுக்களை வீழ்த்தியிருக்கிறார் . இது இப்படியே தொடர்ந்தால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்திய வீரர் என்ற பெருமையை நிச்சயம் முரளிதரனிடம் இருந்து இவர் தட்டிப் பறிப்பார்.


கூக்லி, தூஸ்ரா என்று சுழற்பந்து வீச்சில் உள்ள வகைகளில் புதிதாக 'தீஸ்ரா' என்ற வகையைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இருக்கிறாராம் ஹர்பஜன் சிங்.


ஸ்பின் பவுலிங்கில் பவுன்சர் வீசும் முறைதான் தீஸ்ரா.


இந்த 'தீஸ்ரா' முரளிதரனின் சாதனையை பாஜி முறியடிக்க ஆயுதமாக இருக்கும் என்று நம்புவோம்.


டால்மேன்

---------------------------------------------------------------
 கடந்த ஞாயிற்றுக் கிழமை வீட்டில் கூடுதலாக வெட்டியாகப் பொழுதைக் கழித்தவேளையில் கையில் கிடைத்த நாளேடுகள், சஞ்சிகைகள் எல்லாவற்றையும் வாசித்துத் தீர்த்தேன்..
அதில் குமுதம் கொஞ்சம் விசேடம்...

அதிலே இருந்த ஹர்பஜன் சிங்கின் பேட்டி ஒன்று தான் மேலே தந்திருப்பது..

அடப் பாவிப் பயலே.. இப்படியும் ஒரு கணிப்பா?

எப்போது அணியிலிருந்து தூக்கப்படுவார் என்று இருக்கும் ஒரு சப்பை பந்துவீச்சாளருக்கு இப்படியொரு சப்பறமா? (இலங்கைக் கோயில்களில் சாமிகள் பயணிக்கும் அலங்கார வாகனம்)


இங்கிலாந்து தொடரை ஒரு தடவை தானும் பார்க்காதவராக இருந்திருப்பாரோ இதை எழுதிய டால்மேன்?

ஹர்பஜன் - சுழல் பந்துவீச்சாளர் என்று சேர்த்து எழுதினால் தான் இவர் சுழல் பந்து தான் வீசுகிறார் என்று இப்போது சொல்ல முடிகிறது.

இந்திய அணிக்குள் நுழைந்தால் இவரை ஓரம் கட்டிவிடக் கூடியதாக மூன்று திறமையான சுழல்பந்து வீச்சாளர்கள் எப்போது வாய்ப்பு எனக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்..

அஷ்வின், மிஸ்ரா, ஓஜா..

அடுத்த தொடர்களே நிச்சயமில்லாத முப்பது பராயம் தாண்டிய ஒரு பந்துவீச்சாளர் இன்னும் நானூறு விக்கெட்டுக்களை எடுப்பதா?
கடைசி மூன்று வருடங்களில் 24 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இந்த பாஜி, கைப்பற்றியுள்ள விக்கெட்டுக்கள் 92. அதிலும் சராசரி 36.80.

இப்போதைய தரவுகளை வைத்துப் பார்த்தால் முரளியின் சாதனையை உடைக்க ஹர்பஜன் இன்னும் இதேயளவு டெஸ்ட் போட்டிகளை விளையாட வேண்டும்..
அதற்கு எட்டு வருடங்களாவது வேண்டும்.. முடிகிற காரியமா?

ஹர்பஜனின் தரவுகள்.....


MatInnsBallsRunsWktsBBIBBMAveEconSR4w5w10
Tests9818027651130844068/8415/21732.222.8368.116255



year 2009610306.047875296/637/10230.172.8563.310
year 20101221612.01031750435/598/12340.692.8585.310
year 2011612259.443761207/1207/19538.052.9377.910

விரிவாக அலசி ஆராய்வதற்கு.. இந்தப் பதிவை வாசித்த பின் கீழ்க்காணும் சுட்டியை சொடுக்குங்கள்..


என்னைப் பொறுத்தவரை ஹர்பஜன் ஐந்நூறு என்ற இலக்கை அடையவே தவழவேண்டியிருக்கும்.. அதன் பின் சக இந்திய சுழல் பந்துவீச்சாளர் அணில் கும்ப்ளேயின் சாதனை.. அதற்கே வாய்ப்புக்கள் குறைவு.. இதற்குள் முரளியின் 800..

எதோ பழமொழி சொல்வார்களே.. கூரையேறி கோழி பிடிக்க முடியாதவன்.... அப்படி இருக்கு இந்த குமுதம் விஷயம்..

சுழல் பந்துவீச்சாளர்கள் பொதுவாக முப்பது வயதைத் தாண்டிய பின்னரேயே முதிர்ச்சியும் பக்குவமும் அடைவது வழமை.. அண்மைக்கால சுழல்பந்து மன்னர்களான முரளிதரன், வோர்ன், கும்ப்ளே என்று அனைவருமே தம் முப்பது வயதுக்கு பிறகு விக்கெட்டுக்களை மளமளவென எடுத்தோர் தான்.
ஆனால் அவர்கள் ஹர்பஜனின் இப்போதைய நிலைபோல எந்தவொரு கட்டத்திலும் அணியில் இடம் பறிபோகும் அபாயத்தில் இருக்கவில்லை.

அடுத்து இப்போது ஹர்பஜன் சிங் எடுத்த விக்கெட்டுக்களில் பாதியளவைக் கூட எடுத்திராத இங்கிலாந்தின் கிரேம் ஸ்வானைத் தற்போது விளையாடும் சிறந்த சுழல் பந்து வீச்சாளராக விமர்சகர்கள் கொண்டாட ஆரம்பித்துள்ளார்கள்.

ஹர்பஜன் சிங்கின் பெறுபேறுகளைப் பார்த்தால் அதுவும் நியாயம் என்றே தோன்றும்..

சிம்பாப்வே, மேற்கிந்தியத் தீவுகள், தென் ஆபிரிக்கா ஆகிய அணிகள் தவிர வேறு எந்த அணிகளுக்கு எதிராகவும் இவரது டெஸ்ட் பந்துவீச்சு சோபிக்கவில்லை..
முன்பு ஆஸ்திரேலியாவின் சிம்ம சொப்பனமாக விளங்கியவர் அண்மைக்காலத்தில் அவர்களுடனும் திணறுகிறார்.

இந்தியா மற்றும் மிகப் பலவீன அணிகளான நியூ சீலாந்து, சிம்பாப்வே, மேற்கிந்தியத் தீவுகள் தவிர பாஜ்ஜியின் பாச்சா வேறு எந்த நாட்டு ஆடுகளங்களிலும் பலிக்கவில்லை.

பாகிஸ்தானில் வீசிய 486 பந்துகளில் விக்கெட்டுக்கள் இல்லை.
இலங்கை, ஆஸ்திரேலியா, பங்களாதேஷ் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் ஹர்பஜனின் பந்துவீச்சு சராசரி 45க்கும் மேல்..

அதற்குள் அன்றூ சைமண்ட்ஸ் 'குரங்கு' சர்ச்சை, ஸ்ரீசாந்த கன்னத்தில் அறை சர்ச்சை, அண்மைய விஜய் மல்லையா + தோனி விளம்பர சர்ச்சை என்று இனியும் மாட்டிக் கொண்டால் இன்னும் விளையாடும் ஆயுள் குறையலாம்..

இப்போதைக்கு விளையாடும் எவராலும் எட்ட முடியாத விக்கெட் உலக சாதனையை ஹர்பஜன் தான் எட்டக் கூடியவர் என்று ஒரு மாயையை சில இந்திய ஊடகங்கள் ஏற்படுத்தக் காரணமும் முரளிதரன்..

முரளிதரன் எவ்வளவுக்கெவ்வளவு மிகச் சிறந்த கிரிக்கெட் வீரரோ, எவ்வளவுக்கெவ்வளவு இரக்க குணம் படைத்த மனிதரோ, அவற்றை விட அதிகமான ஓட்டை வாயுடையவர்.
இவர் வாயை சும்மா கிளறினாலே ஸ்கூப் செய்திகள் பலருக்கும் கிடைத்துவிடும்..

கழக மட்டத்தில் விளையாடும் நேரம் முதல் இலங்கைத் தேசிய அணியில் இடம் கிடைத்து நீண்ட காலம் ஒரு ஊமை போலவே மிக அமைதியாக இருந்ததாலோ என்னவோ, டரேல் ஹெயார் சர்ச்சைக்குப் பிறகு பேட்டிகள் கிடைக்கும் போதெல்லாம் வெளுத்துவாங்கிப் பக்கங்களையும் வம்பு கேட்கும் காதுகளையும் நிரப்ப ஆரம்பித்தார்.

அவற்றுள் பல அந்தந்தக் காலகட்ட தலைப்புச் செய்திகளாகவும் மாறிப் போயின..

முரளியின் சில பிரபல உளறல்கள்.. அல்லது உணர்ச்சிவசப்பட்ட கூற்றுக்கள்..

I am not a captaincy material - ஆஸ்திரேலியாவில் வைத்து வழங்கிய பேட்டி ஒன்றில்..
அடுத்து தலைமைப் பதவி வழங்கப்படலாம் என்றிருந்த நிலையில் இவரது பேட்டியும் அதற்கு மேலதிகாம தனக்குப் பொறுப்பு சுமக்க விருப்பமில்லை என்ற முரளியின் 'மனம் திறந்த' அறிக்கையும் வந்தது.

இதே போல மிகுந்த தன்னடக்கத்துடன் ஷேன் வோர்ன் தன்னை விடவும் சிறந்த ஸ்பின்னர் என்று முரளி சொன்னதும் உண்டு.

இதே போலத் தான் தான் ஓய்வு பெற்ற பின் கொடுத்த பேட்டியிலும் சும்மா இருக்க முடியாமல் "எனது சாதனையை உடைக்கக் கூடியவர் ஹர்பஜன் சிங் தான்" என்று கூறிவிட்டார்.
வேறு யாரும் கண்ணுக்கெட்டிய தொலைவில் தெரியாததால் கிட்ட இருந்த (நாடுகளின் தூரத்தை நான் சொல்லவில்லை) சிங்கை சொல்லிவிட்டாரோ?
இது தான் இந்திய ஊடகங்கள் அடுத்த என்று ஹர்பஜனை உசுப்பேற்ற காரணம்..

ஆனால் முரளிதரனின் அண்மைய இரு ஊடகப் பேட்டிகள் கிளப்பிய பரபரப்பும் அனைவரும் அறிந்ததே..

இலங்கை கிரிக்கெட் வீரர்களை IPL 2011 இல் விளையாட விடச் சொல்லி..

ஆஸ்திரேலிய அணி வீரர்கள் இலங்கைக்கான சுற்றுலாவுக்கு செல்லக் கூடாது என்று எதிர்ப்பு அங்கு வாழும் தமிழரால் எழுப்பப்பட்ட போது பேசாமல் இருந்திருக்கலாம்.. தேவையற்று கருத்து சொல்லப் போய் கடும் எதிர்ப்பை வாங்கிக் கட்டிக் கொண்டார்.

முரளிக்கும் பேட்டிகளுக்குமான சர்ச்சை தொடர்கிறது..

இதனால் இவர் சத்தமில்லாமல் செய்கின்ற பல நல்ல காரியங்களும் தெரியாமலேயே போய்விடுகின்றன..

ஆனால் ஒரேயொரு காரியத்தை இவர் செய்யாமல் விட்டதற்குப் பாராட்ட விரும்புகிறேன்..
கிளிநொச்சியில் அண்மையில் தேர்தல் பிரசாரத்தின் கடைசி நாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஒரு மைதானத்தைத் திறந்து தமிழ் மக்களுக்கு அன்பளிப்பு செய்தாரே.. (இந்தியப் பின்னணிப் பாடகர்கள் இசை நிகழ்ச்சிக்காக வந்து விமான நிலையத்துடன் திரும்பிப் போனதும் இதே மைதானத் திறப்பு விழாவுடன் நடக்க இருந்த பிரசாரக் கூட்டத்துக்குத் தான்)
அந்த மைதானத்துக்கான அதிக செலவைப் பொறுப்பேற்றவர் முரளி. ஆனாலும் அரசியல்மயப்படுத்தப்பட்ட விழாவை முரளி தவிர்த்ததற்கே இந்தப் பாராட்டுக்கள்....

இன்னோர் விஷயம்.. தீஸ்ரா...

இது ஏதோ ஹர்பஜன் கண்டுபிடித்த புதுவித அணுகுண்டு, ஐதரசன் குண்டு என்று குமுதம் கட்டிவிட்ட கதையும் ஆகாசப் புழுகு....

ஏற்கெனவே தீஸ்ரா வந்தாச்சு...
முரளிதரன், ஸ்வான், இலங்கையின் சுராஜ் ரண்டிவ், ஏன் இந்தியாவின் இளைய நட்சத்திரம் அஷ்வினும் கூட இந்த தீஸ்ராவைப் பயன்படுத்துகிறார்கள்..
ஹர்பஜன் பயன்படுத்தியதாக நான் பார்த்ததும் இல்லை;அறிந்ததுமில்லை.

ஆனால் இந்து சுழல் பந்துவீசும் பவுன்சர் என்று குறிப்பிட்டது தவறு..
நேராக சென்று திடீரென அதிக கோணத்தில் திரும்பும் பந்து இது.
அதிகமாகப் பாவனையில் இல்லாததால் பலரும் இதுபற்றி அறிந்திலர்.

ஆனாலும் ஹர்பஜன் சிங் முரளியின் உலக சாதனையை முறியடிப்பார் என்பது.... ஹா ஹா ஹா..
அண்ணே குமுதம் டால்மேன் அண்ணே.. சும்மா ஜோக் அடிக்காதீங்க...

(ஒரு தடவைக்கு நான்கு தடவை இது நகைச்சுவை/கற்பனைப் பேட்டியா என்றும் பார்த்துவிட்டேன்)

யாராவது நடந்து முடிந்த டெஸ்ட் போட்டியில் ஹர்பஜன் பந்துவீசி பார்த்தீங்க?
பேசாமல் அடுத்த போட்டியில் சேவாக்(விளையாடினால்), ரெய்னா, யுவராஜ் ஆகியோரின் சுழலை நம்பி இறங்கலாம்..
ஒன்றிரண்டு விக்கேட்டுக்களாவது விழும்....


ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner