Showing posts with label இந்தியா. Show all posts
Showing posts with label இந்தியா. Show all posts

January 11, 2021

சிட்னி டெஸ்ட் - இந்தியாவின் போராட்டம் தவிர்த்த தோல்வி, அவுஸ்திரேலியாவுக்கு தோல்வி !

 தோல்வியைத் தவிர்ப்பதே சில நேரங்களில் வெற்றி தான் !

அதை இன்று இந்தியா போராடிச் செய்திருக்கிறது.



மூன்று வீரர்கள் காயம்.
அவுஸ்திரேலியாவின் படுபயங்கர பந்து வீச்சு வரிசை, இறுதிநாள் சிட்னி ஆடுகளம், பொல்லாத அவுஸ்திரேலிய வீரர்களின் வாய்கள்..

இதையெல்லாம் தாண்டி மூன்று விக்கெட்டுக்களை மட்டுமே இறுதி நாளில் இழந்து, இன்று சமநிலையில் முடித்தது சரித்திரத்தில் ஒரு பெரிய சாதனை தான் !

Rishabh Pant ஆடுகளத்தில் இருந்தபோது நான் நினைத்தேன், இந்தியா ஒரு சரித்திரபூர்வ வெற்றியைப் பெறப்போகிறது என்று.

Adversity brings out the best in man
இக்கட்டான சூழ்நிலைகள் தான் சரித்திர நாயகர்களை உருவாக்குகிறது.
Pant இன்று அவ்வாறு தான் தெரிந்தார்.

எதற்கும் அஞ்சாமல் ஆடிய விதம் அவுஸ்திரேலிய வீரர்களை நிச்சயம் பயமுறுத்தியிருக்கும்.

Pant விக்கெட் காப்பில் தான் விட்ட பிடிகளை, தனது ஓட்டைக் கைகளை எல்லாம் இன்றைய அதிரடித் துடுப்பாட்டம் மூலமாக முழுதுமாக அழித்துவிட்டார்.

புஜாராவின் வழமையான பொறுமையான ஒட்டல் பாணி இந்திய ரசிகர்களாலேயே நக்கல் செய்யப்படுவதுண்டு. ஆனால் இன்று பாண்டுக்கு ஏற்ற அற்புதமான இணையை வழங்கியிருந்தார்.

ஜடேஜாவும் முழுமையாக ஆரோக்கியமாக இருந்திருந்தால் பாண்டின் அதிரடியோடு இந்தியா வெற்றிக்கு கொஞ்சமாவது முயன்றிருக்கும் என நம்புகிறேன்.

இதே போல 406 என்ற இலக்கை இந்தியா 44 ஆண்டுகளுக்கு முன்னர் Port of Spainஇல் துரத்தி வென்றது இரண்டு தசாப்தகாலமாக டெஸ்ட் சாதனையாக இருந்ததும் நினைவுபடுத்தவேண்டியது.
(அந்தப் போட்டி கிரிக்கெட்டின் போக்கையே முற்றுமுழுதாக மாற்றியது வேறு கதை என்று அப்பா அடிக்கடி சொல்வார்.
அந்தத் தோல்வி தான், அந்தப் போட்டியில் மூன்று சுழற்பந்து வீச்சாளரைக் கொண்டு ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் Fast bowlingஐத் தமது ஆயுதமாக தெரிந்தெடுக்கக் காரணமாக அமைந்ததாம்

ஆனால் ஐந்து விக்கெட் இழக்கப்பட்ட பிறகு 250+ பந்துகள் விஹாரியும் அஷ்வினும் போராடியது இந்தியாவுக்குப் புதிய அனுபவம் தான். (அதுவும் அவுஸ்திரேலியாவின் படுபயங்கர sledgingஐயும் தாண்டி)
விஹாரி தனது தெரிவை நியாயப்படுத்தியிருக்கிறார்.
அஷ்வின், தான் ஏன் இந்தியாவின் முதலாவது Test தெரிவாக இருக்க வேண்டும் என்பதை மீண்டும் துடுப்பின் மூலமாகவும் காட்டியிருக்கிறார்.

நான் வழமையான அவுஸ்திரேலியாவின் ரசிகன் தான்.
ஆனால் இன்று மிக முக்கியமாக அணித்தலைவர் பெய்னின் மோசமான நடத்தைகள், அணுகுமுறைகளுக்காகவே இந்தியா (வெல்லாது என்று தெரியும்) தோல்வியைத் தவிர்க்கவேண்டும் என்று விரும்பினேன்.
அதிலும் பேயன் (ஊப்ஸ் பெயின்) விட்ட பிடிகளே இந்தப் போட்டியை அவுஸ்திரேலியா வெல்லாமல் போக பிரதானமான காரணங்கள் என்பேன்.
ஸ்மித் பாண்டின் Guard தடங்களை வேண்டுமென்றே அழித்ததாக இந்திய ரசிகர்கள் பகிர்ந்து வரும் படங்களை பார்த்தேன். Smith cheater என்று மீண்டும் ஆரம்பித்துள்ளார்கள்.

ஸ்மித் அதை வேன்றுமென்றே செய்திருந்தால், அதன் மூலம் போட்டியின் முடிவை மாற்ற எத்தனித்திருந்தால் அதையும் கண்டிக்கவே வேண்டும்.

சுவர் ராகுல் டிராவிட்டின் பிறந்தநாளை இன்னொரு டிராவிட்டினால் இப்போது வழிநடத்தப்படும் இந்தியா இதை விடச் சிறப்பாகக் கொண்டாடியிருக்க முடியாது.

அவுஸ்திரேலியாவுக்கு நிச்சயமாக இது ஒரு தோல்வியே தான் !

என்ன, சின்னக் கவலை ஸ்மித் மீண்டும் க்குத் திரும்பிக் காட்டிய இரண்டு இன்னிங்ஸ் சாகசங்கள், Labuschagne, Greenஇன் ஆட்டங்கள், கமின்ஸின் முதல் இன்னிங்ஸ் நெருப்புப் பந்துவீச்சு எல்லாம் வீணானதே என்பது தான்.

ஆனால் அது தான் டெஸ்ட் !
Tests your perseverance.

தொடரின் முடிவைத் தீர்மானிக்கும் இறுதி டெஸ்ட் போட்டி அவுஸ்திரேலியாவின் கோட்டை என்று அழைக்கப்படும் Gabba, பிரிஸ்பேனில்.

இந்தியாவின் காயம் + உபாதை லிஸ்ட் பெரிசு என்பதால் இதே போராட்டத்தைக் கொடுக்க முடியுமா என்ற சந்தேகம் இருந்தாலும், ரஹானேயினால் உந்தப்படும் இந்த அணி இறுதிவரை போராடும் என்றே தெரிகிறது.

ரஹானேயின் தலைமையில் இன்னமும் இந்தியா ஒரு டெஸ்ட் போட்டியிலும் தோற்கவில்லை.
Ajinkya Rahane, still undefeated as a captain in Test cricket
#AUSvIND

இதே நெருப்பில் பாதியையாவது நம்ம அணி எமது கோட்டை காலியில் காட்டுமாக இருந்தால்....
பொங்கல் சும்மா பொங்கி களைகட்டும் எமக்கு.
#SLvENG 1st Test - 14th

August 31, 2020

ஒரே நாளில் 78,761 பேர் !! அச்சுறுத்தும் இந்தியா !! #Covid19

 ஒரே நாளில் 78,761 பேர் !!

அச்சுறுத்தும் இந்தியா !! இலங்கையில் நிலைமை ? #Covid19

இன்றைய சூரிய ராகங்கள்

January 05, 2018

#SAvIND - அச்சமூட்டும் வேகம் எதிர் அசத்தல் துடுப்பாட்டம்!!! - தென் ஆபிரிக்கப் புயலை எதிர்கொள்ளுமா கோலியின் 'புதிய' இந்தியா


(Freedom Trophy - நெல்சன் மண்டேலா - மகாத்மா காந்தி ஆகிய இருவருக்கும் அர்ப்பணிக்கப்படும் இந்தக் கிண்ணத்தை மீட்கும் அணித் தலைவருக்கான சிறைவைக்கப்பட்டிருப்பதைப் போல சித்தரிக்கப்பட்டுள்ள வடிவம் என்னைக் கவர்ந்துள்ளது)

தென் ஆபிரிக்கா தனக்கு சாதகமாக புற்கள் மேவிக்கிடக்கும் ஆடுகளத்தைத் தயார் செய்து, நாணய சுழற்சியிலும் வென்று துடுப்பாட்டத்துக்கு சாதகமான முதல் இரு நாட்கள் துடுப்பெடுத்தாட முனைந்திருக்க, இந்தியப் பந்துவீச்சாளர்கள் இந்த எண்ணங்களையெல்லாம் தவிடுபொடியாக்கி முதல் நாளிலேயே 286 ஓட்டங்களுக்கு சுருட்டி எடுப்பார்கள் என்று யார் எதிர்பார்த்தார்?

நம்புவீர்களோ இல்லையோ, நான் கொஞ்சமாவது நினைத்தேன்... இந்தியாவிடமும் இப்போது உலகத்தரம் வாய்ந்த துடுப்பாட்ட வரிசைகளைத் தடுமாற வைக்கக்கூடிய வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். ஆரோக்கியமான அணித்தெரிவு சிக்கலை ஏற்படுத்தக்கூடியளவுக்கு சிறப்பான பெறுபேறுகளைக் காட்டும் ஐந்து பேர் இருக்கிறார்கள்.

பல தடவை இவ்வாறு சொந்த செலவில் சூனியம் வைத்த கதைகள் பலவான் அணிகளுக்கே நடந்திருக்கின்றன.
அண்மைய உதாரணம் புனேயில் இந்தியா சுழல் பந்துக்கு சாதகமான ஆடுகளம் செய்து வைக்க, பெரிதாக அறியப்படாத, ஓ கீப் யாருமே எதிர்பாராத வகையில் 12 விக்கெட்டுக்களை எடுத்து மூன்று நாட்களில் இந்தியாவுக்கு மிகப்பெரிய தோல்வியைப் பரிசளித்த கதை.

ஆனால் 286 என்பதையே ஒரு பெரிய, சவால்மிக்க ஓட்ட எண்ணிக்கையாக மாற்றிக்காட்ட தென் ஆபிரிக்க வேகப்பந்து வீச்சாளர்களால் முடியும். முடியுமா என்று நான் இட்ட ட்வீட்டுக்கு சில நிமிடங்களிலேயே மூன்று விக்கெட்டுக்களைப் பறித்து பதிலளித்துள்ளார்கள்.
தென் ஆபிரிக்காவுக்கு டீ வில்லியர்ஸ் - டூ ப்ளேசி இணைப்பைப் போல, பின் வந்த தென் ஆபிரிக்காவின் பந்துவீச்சாளரும் விக்கெட் காப்பாளரும் சேர்த்துக் கொடுத்த ஓட்டங்கள் போல சேர்க்காவிட்டால் தென் ஆபிரிக்கா நான்கு நாட்களுக்குள் போட்டியை முடிக்கும்.

நாளை காலை வேளை தென் ஆபிரிக்காவின் வேகப்பந்துவீச்சை இந்தியா சமாளிக்கும் வகையில் தான் இந்தப் போட்டி செல்லும் பாதை உள்ளது.
ரஹானே இல்லாத வெறுமையும், சகாவை இப்படியான ஆடுகளத்தில் ஆறாம் இலக்கத்தில் ஆடவைக்கும் தவறான முடிவும் நாளை தென் ஆபிரிக்காவின் நான்கு முனை வேகத்திலேயே தங்கியிருக்கிறது.

28/3 என்று இந்தியா இப்போதிருக்கும் நிலையைப் பொறுத்தவரை தென் ஆப்பிரிக்காவுக்கு சாதகம் இருந்தாலும் புஜாரா இந்தியாவின் தூணாக இருப்பார் என்பதும், ரோஹித்தின் அண்மைய பெறுபேறுகளும்  இந்தியாவுக்கு உற்சாகம் தரலாம்.

இந்தியாவின் துடுப்பாட்ட வரிசையின் பலம் பற்றி சிலாகித்தும்  - பொதுவாகவே இன்று கோலி, விஜய் ஆகியோர் ஆட்டமிழந்த விதமாகவே இந்தியத் துடுப்பாட்ட வீரர்கள் வெளிநாடுகளில் சொதப்பினாலும் கூட- அண்மைக்காலமாக முன்னேற்றம் கண்டு வரும் கோலியின் தலைமையிலான இந்தியாவின் மேலுள்ள நம்பிக்கையால் - தென் ஆபிரிக்காவின் அச்சுறுத்தும் வேகப்பந்து வீச்சு பற்றி வியந்தும் - இந்த இரண்டு காரணிகளும் மோதும் தொடராக இது அமையும் என்று குறிப்பிட்டு இன்று Sports Tamil க்கு எழுதிய கட்டுரையில் சில மேலதிக சேர்க்கைகளோடு இந்த இடுகை..

இந்தியா vs தென் ஆபிரிக்கா - அச்சமூட்டும் வேகம் எதிர் அசத்தல் துடுப்பாட்டம் 


இன்று தென் ஆபிரிக்காவில் ஆரம்பிக்கும் கிரிக்கெட் தொடரானது உலகின் அத்தனை கிரிக்கெட் ரசிகர்களினதும் கவனத்தை ஈர்க்கும் ஒரு தொடராக அமையப்போகிறது. கிரிக்கெட்டின் பழம்பெரும் தொடர்களில் ஒன்றான அவுஸ்திரேலியா - இங்கிலாந்து மோதும் ஆஷஸ் முடிவுறும் நேரத்தில் தென் ஆபிரிக்க - இந்தியத் தொடர் ஆரம்பிப்பது கிரிக்கெட்டின் குதூகலம் இல்லாமல் வேறென்ன?


கிட்டத்தட்ட ஒரு வருட காலமாக சொந்த நாட்டிலும், இந்தியாவை ஒத்த கால நிலை, களத்தன்மைகளைக் கொண்ட இலங்கையிலும் பெரியளவில் சவால்களை எதிர்கொள்ளாமல் இலகுவாக வெற்றிகளைக் குவித்து டெஸ்ட் தரப்படுத்தல்களில் முதலாம் இடத்திலுள்ள இந்திய அணி அண்மைக்காலத்தில் தனது முதலாவது பெரும் சவாலை சந்திக்கப்போகிறது.

டெஸ்ட் தரப்படுத்தலில் முதல் இரு இடங்களில் உள்ள அணிகளின் மோதல் இது.
எனினும் 3-0 என்று தென் ஆபிரிக்காவிடம் இம்முறை தோற்றாலும் முதலிடம் பறிபோகாது எனும் அளவுக்கு கடந்த சில மாதகாலத் தொடர்ச்சியான வெற்றிகள்.
அதிலும் 9 டெஸ்ட் தொடர்களைத் தொடர்ச்சியாக வென்று சாதனையை சமப்படுத்தியுள்ளது. ஆனால் சாதனையை முறியடிக்கும் 10வது தொடர் வெற்றி நிச்சயம் கிடைக்கப்போவதில்லை என்பது உறுதி.

தென் ஆபிரிக்காவுக்கோ கடைசியாக 2015ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் இந்தியாவில் வைத்துக் கண்ட 3-0 என்ற (4 டெஸ்ட்களில்) தோல்விக்கு வேகப்பந்து ஆடுகளங்களில் வைத்துப் பழி தீர்க்கும் எண்ணமுள்ளது. 

இதுவரைக்கும் தென் ஆபிரிக்காவிலே  எந்தவொரு டெஸ்ட் தொடரிலும் வெல்லாத இந்திய அணிக்கு இது ஒரு மிகப் பெரும் சோதனை தான்.
உலகின் மிகச் சிறந்த டெஸ்ட் துடுப்பாட்ட வரிசை என்று சொல்லக்கூடியளவுக்கு இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர்கள் கடந்த 2017இல் மாறி மாறி ஓட்டங்களை மலையாகக் குவித்திருந்தார்கள். அவுஸ்திரேலிய, இங்கிலாந்து, நியூ சீலாந்து பந்துவீச்சாளர்களையும் சந்தித்திருந்தார்கள். ஆனால் அவை அனைத்தும் இந்திய ஆடுகளங்களில்..
ஒன்றில் தட்டையான துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமான ஆடுகளங்கள். இல்லையேல் சுழல்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்கள்.

இன்று முதல் இந்தியாவின் துடுப்பாட்ட வரிசை சந்திக்கவிருப்பதோ உலகின் எந்தவொரு துடுப்பாட்ட வரிசையும் அச்சுறுத்தும் உலகின் மிகச்சிறந்த வேகப்பந்துவீச்சு வரிசை.
மற்ற அணிகள் எல்லாம் அதிகபட்சம் 2 அல்லது 3 வேகப்பந்து வீச்சாளர்களை வைத்துத் தடுமாறிக்கொண்டிருக்க தென் ஆபிரிக்கா மிக உறுதியான 5 உயர்தரமான வேகப்பந்து வீச்சாளர்களை வைத்துக்கொண்டு (ஸ்டெயின், மோர்னி மோர்க்கல், பிலாண்டர், றபாடா, க்றிஸ் மொரிஸ்), மேலதிகமாக மிதவேகப்பந்தை வீசும் பெலகாவாயோவும் இருக்கிறார்-  யாரைத் தெரிவு செய்வது, யாரை விடுவது என்று யோசித்துக்கொண்டிருக்கிறது.
உலகின் மிகச் சிறந்த வேகப்பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயினையே ஓய்வு அளித்து மற்றையவர்களைப் பயன்படுத்தலாமா என்று சிந்திக்கிறார்கள் என்றால் எத்தகைய பலம் அது?

அதுவும் இன்று கேப்டவுனில் ஆரம்பித்துள்ள டெஸ்ட் போட்டி முதல் அத்தனை ஆடுகளமுமே வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான எகிறும் ஆடுகளங்களை விரும்புகிறார்கள் என்று சொன்னால் அவர்களது நோக்கம் எத்தகையது என்று புரிந்துகொள்ளலாம்.

இதுவரை காலமும் இவ்விரு அணிகளின் டெஸ்ட் மோதல்களில் 
விளையாடியவை - 33
தென் ஆப்பிரிக்காவுக்கு வெற்றி - 13
இந்தியாவுக்கு வெற்றி - 10
சமநிலை - 10

ஆனால் தென் ஆபிரிக்காவில்,
17 டெஸ்ட் போட்டிகளில்,
தென் ஆப்பிரிக்காவுக்கு வெற்றி - 8
இந்தியாவுக்கு வெற்றி - 2
சமநிலை - 7

இந்த நிலையை இப்போதிருக்கும் வெற்றிக்காக ஆவேசத்துடன் விளையாடக்கூடிய தனது இளைய அணியின் மூலம் அடையும் விருப்போடு இருக்கிறார் விராட் கோலி.

அதற்கு ஏற்றதாக இந்தியாவின் பலம்வாய்ந்த அசத்தல் துடுப்பாட்ட வரிசை இருக்கிறது. தென் ஆபிரிக்காவின் ஆடுகளங்களிலும்  ஈடுகொடுத்து ஆடக்கூடிய நுட்பங்கள் கொண்ட துடுப்பாட்ட வீரர்கள் இருக்கிறார்கள்.
முக்கியமாக கடந்த வருடத்தில் 1000 ஓட்டங்களுக்கு மேலே குவித்த புஜாராவும் கோலியும்.
இதிலே மூன்றாம் இலக்கத்தில் ஆடும் புஜாரா உலகின் மிக நம்பகமான துடுப்பாட்ட வீரர்களில் ஒருவர். டெஸ்ட் போட்டிகளுக்கு என்றே வார்க்கப்பட்டவர் போல. கடந்த வருடத்தில் 4 சத்தங்களுடன் 1140 ஓட்டங்களைக் குவித்திருந்த புஜாராவின் ஓட்டக்குவிப்பும் நின்று நிலைப்பும் இந்தியாவுக்கு மிக அவசியமாகிறது.
அதேபோல உள்நாட்டில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் முன்னின்று ஓட்டக்குவிப்பிலும் வழிநடத்தி 5 சதங்களைப் பெற்ற (இவற்றில் இரண்டு இரட்டை சத்தங்கள்) கோலி இங்கிலாந்தில் தடுமாறியதைப் போல இல்லாமல் நேர்த்தியாக, துணிச்சலாக ஆடினால் அது இந்திய அணிக்கு மிகப்பெரும் பலமாக அமையும்.

முரளி விஜய் இன்னொரு முக்கியமான வீரர். வெளிநாட்டு மண்ணில் தடுமாறும் இந்திய வீரர்களுக்கு மத்தியில் விஜய் மிக நேர்த்தியாக ஆடக்கூடிய வீரர். ரஹாநேயும் அவ்வாறு இருந்தாலும் இலங்கை அணியோடு தொடர்ச்சியாகத் தடுமாறியிருப்பது அவரது formபற்றிய சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இதனால் தான் கிடைத்த டெஸ்ட் வாய்ப்புக்களில் தன்னை நிரூபித்தவரும் ஒருநாள் மற்றும் T20 போட்டிகளில் சிறப்பான ஓட்டக்குவிப்பில் இருக்கும் ரோஹித் ஷர்மாவுக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது.

தவான், ராகுல் ஆகிய இருவருமே தம்மை நிரூபித்தவர்கள். எனினும் தவானே இந்தியாவின் தெரிவாக அமைய அவரது அனுபவமும் அதிரடியும் காரணமாக அமையும்.
இந்தியா மேலதிகமாக ஒரு வேகத்தையும் சேர்த்துக்கொள்ள பாண்டியாவின் சகலதுறைத் திறமை பயன்படுள்ளது.

எதிர்பார்த்ததைப் போல ஒருநாள் போட்டிகளில் கலக்கிய பும்ராவுக்கு அறிமுகத்தை வழங்கி மூன்று வேகப்பந்து வீச்சாளரோடு களம் கண்டிருக்கிறது. 
பும்ரா எதிர்பார்த்தளவுக்கும் குறுகிய ஓவர்கள் கொண்ட போட்டிகளில் காட்டிய திறமையளவுக்கு சிறப்பாக செய்யாவிடினும் அவரது முதல் விக்கெட் ஏபி டீ வில்லியர்ஸ்.
எனும் அனுபவம் வாய்ந்த இஷாந்த் ஷர்மாவை இன்று தெரிவு செய்திருக்கலாமோ என்று கோலி இனி எண்ணலாம்.
ஜடேஜா உடல்நலக்குறைவு அஷ்வினை மட்டும் தெரிவு செய்யும் வாய்ப்பை வழங்கியுள்ளது.

தென் ஆபிரிக்கா மிக நீண்ட காலத்துக்குப் பிறகு உபாதை சிக்கல்கள் எதுவும் இல்லாமல் தன்னுடைய மிகச்சிறந்த அணியோடு இறங்கியுள்ளது.
துடுப்பாட்டத் தெரிவுகளில் பெரிய சிக்கல் இல்லாவிட்டாலும் சிறப்பாக ஆடிவந்த பவுமாவை இன்று விட்டுவிட்டு ஆடவேண்டிய நிர்ப்பந்தம்.
எனினும் அம்லா, டீன் எல்கர் (கடந்த ஆண்டில் ஆயிரம் ஓட்டங்களைக் கடந்தவர்) மீண்டும் டெஸ்ட் அணிக்குள் வந்துள்ள உபாதை கடந்த டீ வில்லியர்ஸ், அணித் தலைவர் டூ ப்ளேசிஸ் ஆகியோரோடும் உலகத் தரம் வாய்ந்தததாகத் தெரிகிறது.

எனினும் ஐந்து முழு நேரப் பந்துவீச்சாளரைத் தெரிவு செய்திருப்பதால் ஒரு துடுப்பாட்ட வீரர் குறைவாக விளையாடும் அபாயம்.
டீ கொக்கும் ஒரு சிறப்பான துடுப்பாட்ட வீரரே. எனினும் அவருக்குப் பிறகு பிலாண்டர் வருவது துடுப்பாட்டம் பலவீனமானதாகவே தெரிகிறது.
ஆனாலும் முக்கியமான மூன்று வீரர்களும் 12 ஓட்டங்களுக்கு ஆடுகளம் விட்டு அகன்றும் கூட சமாளித்த திறமை மெச்சக்கூடியது.

ஆயினும் தென் ஆபிரிக்கா தன்னுடைய வேகப்பந்துவீச்சாளரில் வைத்துள்ள நம்பிக்கை அது.

இதனால் தான் இந்தத் தொடர் தென் ஆபிரிக்க வேகப்பந்து வீச்சாளரின் அச்சுறுத்தும் வேகப்பந்துவீச்சுக்கும் இந்தியாவின் ஓட்டக்குவிப்பில் ஈடுபடும் அசத்தல் துடுப்பாட்ட வீரருக்கும் இடையிலான மோதல் தொடராகக் கருதப்படுகிறது.

இதுவரை கலக்கும் இந்திய வேகப்பந்துவீச்சாளரை உலகின் நம்பகமான துடுப்பாட்ட வீரர்களைக் கொண்ட தென் ஆபிரிக்கத் துடுப்பாட்ட வரிசை சமாளிக்குமா என்பதே தொடரின் முதலாவது கேள்வி. 
புவனேஷ்வர் குமாருக்கு 4 விக்கெட்டுக்களைப் பெற்றுக்கொடுக்க உதவிய ஆடுகளம் நாளை தென் ஆபிரிக்காவின் புயல்களுக்கு என்னென்ன சாதகத்தை வழங்குமோ?

இதுவரை ஸ்டெயின், பிலாண்டர், மோர்க்கல் ஆகியோர் தலா ஒன்று..
இன்னும் புதிய புயல் காகிஸோ றபாடாவுக்கு ஒரு விக்கெட்டும் கிடைக்கவில்லை. ஆனால் நாளை இவரது நாளாக அமையலாம். அப்படி அமைந்தால் இந்தப் போட்டி நான்கு நாட்களில் முடிந்து போகலாம்.
அண்மையில் தான் சிம்பாப்வேயுடன் இரண்டே நாளில் ஒரு டெஸ்ட் போட்டியைத் தென் ஆபிரிக்கா முடித்திருந்தது.




December 10, 2017

திசர vs ரோஹித் - ஆரம்பிக்கிறது ஆர்வத்தைத் தூண்டும் ஒருநாள் தொடர் - என்னென்ன எதிர்பார்க்கலாம் ?

Iron Man vs Hit Man



இலங்கை அணிக்கு இந்த வருடத்தின் 5வது ஒருநாள் சர்வதேச அணித்தலைவராக திசர பெரேரா. உபுல் தரங்கவின் தலைமையிலான அணி அமீரகத்தில் பாகிஸ்தானிடம் தோற்ற பிறகு பாகிஸ்தானுக்குச் சென்ற இலங்கையின்  T20 அணிக்குத் தலைமை தாங்க இணங்கியதற்குப் பரிசாகவோ என்னவோ 'இரும்பு மனிதர் திசரவுக்கு தலைமைப் பதவி பரிசு கிடைத்துள்ளது.

எனினும் நிரந்தர நியமனம் இல்லையாம். இந்தத் தொடரின் பெறுபேறு பார்த்துத் தான் அடுத்த தொடருக்கான நியமனம் உறுதியாகும் என்று ஸ்ரீ லங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.
புதிய தலைவரின் கீழ், உபாதையடைந்து சில காலமாக அணியை விட்டு வெளியேயிருந்த பல முக்கியமான வீரர்கள் மீண்டும் அணிக்குள் புதிய உற்சாகத்தோடு திரும்பிய இலங்கை அணிக்கு, வருகின்ற 20ஆம் திகதி முதல் பயிற்றுவிப்பாளர் பதவியை ஏற்கப்போகும் சந்திக்க ஹத்துருசிங்கவின் வருகைச் செய்தி கூட இன்னும் உத்வேகத்தை அளித்திருக்கும்.

இலங்கையின் 22வது ஒருநாள் சர்வதேசத் தலைவராக திஸர பெரேரா- மறுபக்கம் இந்தியாவின் 24வது ஒருநாள் சர்வதேச அணித்தலைவராக ரோஹித் ஷர்மா.
இருவருமே தமது சர்வதேச அணித் தலைமைத்துவ அறிமுகங்களை இயற்கை அழகு கொஞ்சும் இமாலயத்தின் தரம்சாலாவில் இன்று ஆரம்பிக்கவுள்ளார்கள்.

பக்கத்து வீட்டுக்காரர் அடிக்கடி சந்தித்து ஹாய் சொல்லிக்கொள்வது போல, எப்போதெல்லாம் பொழுதுபோகவில்லையோ "நீ வா தம்பி" என்று BCCI அழைக்க நம்மவர்கள் அங்கே போவதும், "அண்ணே அனுசரணையாளர் காசு கொஞ்சம் தேவைப்படுது.அணியைக் கொஞ்சம் அனுப்பிவையுங்க" என்று SLC கேட்க இந்தியா இங்கே வருவதும் சகஜமானது.

அய்யய்யோ மீண்டும் மீண்டும் இவங்க தான் விளையாடுறாங்களா என்று கொட்டாவி விடும் அளவுக்கு அண்மைக்காலத்தில் அடிக்கடி இந்திய - இலங்கை போட்டி பார்த்து அலுத்துவிட்டது.
சர்வதேச அரங்கில் ஒருநாள் போட்டிகளில் அடிக்கடி ஒன்றையொன்று எதிர்த்து விளையாடிய அணிகள் இந்த அண்ணன்  - தம்பியரே..
155 போட்டிகள் - 88 இந்தியாவுக்கு வெற்றி, 55 இல் இலங்கை வெற்றி.

(இதற்கு அடுத்தபடியாக இந்தியா இல்லாத நேரம் நம்ம சகபாடியாக 'எல்லாவிதங்களிலும் உதவும் பாகிஸ்தானோடு இலங்கை 153 போட்டிகளை விளையாடியிருக்கிறது.
அதற்குப் பிறகு தான் அவுஸ்திரேலியா - மேற்கிந்தியத் தீவுகள் 139,
அவுஸ்திரேலியா - இங்கிலாந்து 137, அவுஸ்திரேலியா -நியூசீலாந்து 136)

எனினும் இந்திய மண்ணில் வைத்து 48 போட்டிகளில் இந்தியா பெற்றுள்ள 34 வெற்றிகளுக்கு எதிராக இலங்கை 11 வெற்றிகளையே பெறமுடிந்துள்ளது.
அத்துடன் கடந்த எட்டு ஆண்டுகளில் இந்தியாவில் இலங்கை அணி இந்தியாவுக்கு எதிராக 8 தோல்விகளையும் ஒரேயொரு வெற்றியையுமே பெற முடிந்துள்ளது.

ஆனால் இன்று ஆரம்பிக்கவுள்ள தொடர் கொஞ்சம் வித்தியாசமானது.
இந்தியா அண்மைக்காலத்தில் தொடர்ச்சியாக வெற்றி பெறுவதற்கு காரணமாக இருந்த அணித் தலைவர் - ஓட்டக் குவிப்பு இயந்திரம் விராட் கோலிக்கு ஓய்வு. அண்மைக்காலமாக இந்தியா செய்து வருவதைப் போல டெஸ்ட் போட்டிகளுக்கான முதல் தெரிவு பந்துவீச்சாளர்களுக்கு ஒரு நாள் போட்டிகளில் ஓய்வு. எனினும் அவ்வாறு வாய்ப்புக் கிடைக்கும் அக்ஸர் பட்டேல், சஹால், பும்ரா போன்ற வீரர்களும் விக்கெட்டுக்களை எடுப்பதோடு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி டெஸ்ட் அணிக்கான வாய்ப்பையும் தேட முனைகிறார்கள். பும்ரா அவ்வாறு தான் முதற்தடவையாக தென் ஆபிரிக்கா செல்லும் டெஸ்ட் குழாமில் இடம்பிடித்துள்ளார். இந்த ஆரோக்கியமான போட்டி இந்திய அணியின் தெரிவுகளை உயர்மட்டத்தில் பேண உதவுகிறது.

இலங்கை அணியிலோ அண்மைக்காலமாக இதன் தலைகீழ். யாரை அணியில் சேர்ப்பது என்றே தேடித்தேடி சலித்து கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 50க்கும் மேற்பட்ட அறிமுகங்கள்..
சிலர் ஓரிரண்டு போட்டிகளோடு வெளியே. இன்னும் சிலர் ஏன் அணிக்குள்ளே கொண்டுவரப்பட்டார் என்றே தெரியாத மர்மம்.
எனினும் புதிய தெரிவுக்குழு வந்த பிறகு நிலைமை மாறும் என்றால், அதிலும் பெரிய மாற்றம் இல்லை. எனினும் காயம் , உபாதைகளுடன் வெளியேறியிருந்த மத்தியூஸ், அசேல குணரத்ன, குசல் ஜனித் பெரேரா, நுவான் பிரதீப் போன்றோர் அணிக்குத் திரும்பியபிறகு நிலைமை சீராகும் என்றொரு நம்பிக்கை.
ஹத்துருசிங்க பொறுப்பு எடுத்த பிறகு தேவையற்ற அரசியல் உள்ளே நுழையாது என்று நம்பியிருப்போம்.



உலகின் மிக இயற்கை அழகு பொருந்திய மைதானங்களில் நியூ சீலாந்து, தென் ஆபிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள், இலங்கையின் காலி & பள்ளேக்கலைக்கு சவால் விடக்கூடிய அழகு இந்த தரம்சாலாவுக்கு உள்ளது.
இங்கிலாந்தை விடக் குளிரும் சூழல் - சுற்றிவர இமயமலைச் சாரல் - விளையாடும் வீரர்களுக்கு மட்டுமல்ல தொலைக்காட்சியில் பார்க்கும் எமக்கே ரம்மியமான கண்ணுக்கு விருந்து தான்.

மைதானத்தின் அருகிலேயே அமைக்கப்பட்டுள்ள வலைப்பயிற்சிக்கான சிறிய மைதானப்பரப்பும் அழகு தான். உலகின் மிக அழகான ஒரு கிரிக்கெட் சூழல் என்று அடித்தே சொல்லலாம். கொடுத்து வைத்த ரசிகர்களும் வீரர்களும்.

படம் : Twitter - Mohandas Menon

இந்த அழகு கொஞ்சும் மைதானம் தான் இரு அணிகளிலும் உள்ள பல வீரர்களின் கிரிக்கெட் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் தொடரின் ஆரம்பப்புள்ளி.
(இதற்குள்ளே இங்கேயாவது சுத்தமான காற்றை சுவாசியுங்கள் என்று 'அகன்ற வாயும் அடாத்தும் கொண்ட இந்தியப் பயிற்றுவிப்பாளர் ரவி சாஸ்திரி ஒரு ட்வீட்டைப் போட்டு குளவிக்கூட்டைக் கலைத்து விட்டிருக்கிறார்.)

மிக முக்கியமாக இதுவரை 12 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளைத் தொடர்ச்சியாகத் தோற்றுள்ள இலங்கை அணிக்கு இந்தத் தொடர் தோல்வியலைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டிய அதிமுக்கியமான தேவையுள்ளது.
இந்த ஆண்டின் ஜூலை மாதம் ஹம்பாந்தோட்டை - மகிந்த ராஜபக்ச மைதானத்தில் (பெயர் - இட ராசி அப்படியோ தெரியவில்லை) ஆரம்பித்த தோல்விகள் துரத்துகின்றன.

இதுவரை இலங்கை இப்படியான மோசமான தொடர்ச்சியான தோல்விகளைக் கண்டது 1987 முதல் 1988 வரையிலான காலகட்டத்தில் 14 போட்டிகள்.

இந்தத் தொடரிலும் வெள்ளையடிப்பு செய்யப்பட்டால் (ஏற்கெனவே இந்த வருடத்தில் மூன்று அவமானகரமான வெள்ளையடிப்புக்களை சந்தித்து சாதனை படைத்துள்ளது) பதினைந்தாக மாறும்.

இந்தியாவுக்கும் 3-0 என்ற வெற்றி அவசியப்படுகிறது, தென் ஆபிரிக்காவிடமிருந்து மீண்டும் தனது ஒருநாள் தரப்படுத்தலின் முதலாம் இடத்தைப் பெற்றுக்கொள்வதற்கு.
அது கோலி இல்லாமல் சாத்தியப்படுமா? ஏற்கெனவே இலங்கை அணி என்றால் போட்டு வாங்கு வாங்கென வாங்கிக் குவிக்கும் ரோஹித் ஷர்மா இப்போது தலைவராக வேறு இருக்கிறார். அவரது ஒருநாள் உலக சாதனை 264 மறக்குமா?
தவான் வேறு நல்ல போர்மில் இருக்கிறார்.
பாண்டியா, தோனி ஆகியோர் ஓய்வுக்குப் பிறகு திரும்புகிறார்கள். ஓய்வுக்கு முதலே ஒருநாள் போட்டிகளில் நல்ல ஓட்டக் குவிப்பிலேயே இருந்திருந்தார்கள்.
பந்துவீச்சாளர்களும் அண்மைக்காலத்தில் ஒருநாள் போட்டிகளில் உலகின் மிகச்சிறந்த (சொந்த மண்ணிலே இன்னும் சிறப்பாக) அணிகளையும் தடுமாற வைத்துள்ளார்கள்.
எனினும் கடந்த உலகக்கிண்ணம் முதலே இந்தியாவுக்கு தடுமாற்றம் அளித்து வரும் நான்காம் இலக்கமும், தற்போது கோலியின் ஓய்வு, கேதார் ஜாதவின் உபாதை ஆகியவற்றால் வெற்றிடமாகியுள்ள இரு துடுப்பாட்ட இடங்களை இப்போது மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள தினேஷ் கார்த்திக், ரஹானே, மனிஷ் பாண்டே, ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய நால்வரில் யார் நல்ல படியாக நிரப்பப் போகிறார்கள் என்ற ஆரோக்கியமான போட்டியும் உள்ளது. தமிழகத்தின் இளம் சகலதுறை வீரர் வாஷிங்க்டன் கூட ஒரு சகலதுறை வீரராக வாய்ப்பைப் பெற்றுக்கொள்ளக் கூடியவர். T20 தொடரில் இவரது அறிமுகம் உறுதியாகத் தெரிந்தாலும் ஒருநாள் போட்டிகளில் இப்போதைக்கு உள்வாங்கப்படுவாரா என்பது சந்தேகமே.

இலங்கை அணியில் ஆரோக்கியமான ஒரு தெரிவுக்குழப்பம் இப்போது.
இன்று ஆடுகளத்தை மையப்படுத்தியே தெரிவு அமையும் என்றாலும் துடுப்பாட்டப் பலத்தை அதிகரித்து இன்றைய அணியின் பதினொருவரை நாம் தெரிவு செய்யவேண்டும் என்று எண்ணுகிறேன்.

டெல்லி போட்டியில் இலங்கையின் கதாநாயகனாக விளங்கிய தனஞ்சய டீ சில்வா இன்னும் முதுகுப் பிடிப்பிலிருந்து குணமடையாத காரணத்தால் இன்று விளையாடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எனது அணித்தெரிவாக  நேற்று நான் ட்வீட்டிய அணி இது.. :

பல ரசிகர்களின் அபிப்பிராயம் குசல் ஜனித்  பெரேரா அல்லது நிரோஷன் டிக்வெல்ல ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக தனுஷ்க குணதிலகவுடன் களமிறங்கவேண்டும் என்று. எனினும் இந்தியாவின் ஆரம்ப ஸ்விங் பந்துவீச்சாளர்களை சமாளிக்க தயங்கவே பொருத்தமானவர் என்று நான் கருதுகிறேன்.

அத்துடன் மத்தியூஸ், அசேல ஆகியோரின் வருகை இலங்கை அணிக்கு கடந்த சில மாதங்களாக இருந்து வந்த 15-35 ஓவர்கள் வரையிலான மந்த ஓட்ட வேகத்தையும் அதிகப்படுத்த உதவும்.
நான் ஊகித்துள்ள இந்த அணியில் இலங்கை அணி 20 ஓவர்களை பகுதி நேரப்பந்து வீச்சாளர்களைப் பயன்படுத்தியே பலவீனமான (!?) நிலையொன்று இருப்பதாக சிலர் கருத்துவதாலும் அணியின் தலைவர் திசர  பெரேரா 8ஆம் இலக்கத்தில் வராமல் இன்னும் மேலே ஆடலாம் என்ற எண்ணம் இருப்பதாலும் சிலவேளைகளில் இலங்கை ஒரு துடுப்பாட்ட வீரரைக் குறைத்து (எனது தெரிவு திரிமன்னே, ஆனால் பலர் அஞ்சுவது திரிமன்னே பாகிஸ்தானுக்கு எதிராக ஓரளவு ஓட்டங்களைப்  பெற்றவர் என்பதால் குசல் ஜனித்தைத் தான் வெளியே அனுப்புவார்கள் என்று) சச்சித் பத்திரன அல்லது சத்துரங்க டீ சில்வாவை உள்ளே சேர்ப்பார்கள் என்று.

அவர்களும் ஓட்டங்கள் பெறக்கூடியவர்களே.

இரு அணிகளிலும் வாய்ப்பைப் பெறப்போகிற இளைய வீரர்களுக்கு அவர்களது எதிர்காலத்தைத் தக்க வைக்கும் பொன்னான வாய்ப்பாக இன்று ஆரம்பிக்கும் தொடர் அமையவுள்ளது.
அதை விட முக்கியமாக இரு அணிகளிலும் உள்ள மூத்த வீரர்களுக்கு இது வாழ்வா சாவா போராட்டம்.

முக்கியமாக இலங்கை அணியில் திரிமன்னே. டெஸ்ட் போட்டிகளில் மோசமான பெறுபேறுகள் மூலமாக ரசிகர்களின் ஏகோபித்த வெறுப்பையும் இவர் எப்படி மீண்டும் மீண்டும் அணிக்குள் வருகிறார் என்ற மர்மத்தையும் ஏற்படுத்தியுள்ள திரிமன்னே தான் விளையாடிய கடைசி 6 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் மூன்று (இந்தியாவுக்கு எதிராக 1, பாகிஸ்தானுக்கு எதிராக 2) அரைச்சதங்களைப் பெற்றுள்ளார்.இதைத் தொடர்ந்தால் அணியில் இடம்நிச்சயம்.
இளைய வீரர்களின் அழுத்தம் மத்தியூஸ், தரங்க போன்ற வீரர்களுக்கே நெருக்கடியைத் தரக்கூடியது.

இலங்கையின் மிகச் சிறந்த ஒருநாள் வீரரான முன்னாள் தலைவர் உபுல் தரங்க பாகிஸ்தானுக்கு எதிராக சதம் மற்றும் அரைச்சதங்களைப்  பெற்றவர். இந்தத் தொடரில் அப்படியான ஓட்டக் குவிப்பை எதிர்பார்க்கிறோம்.


மீண்டும் பந்து வீசக்கூடியவராக உபாதையிலிருந்து குணமடைந்துள்ள அஞ்செலோ மத்தியூஸிடமிருந்தும், கையில் ஏற்பட்ட காயத்திலிருந்து மீண்டு வந்துள்ள மற்றொரு சகலதுறை வீரர் அசேல  குணரத்னவிடமிருந்தும் நிறையவே எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்விரண்டு பேரும் match winning finishers என்று தம்மை கடந்த காலங்களில் நிரூபித்திருப்பதால் பெரும் எதிர்பார்ப்பு.
அதேபோல சின்ன சனத் - குசல் ஜனித் பெரேரா. தன்னை ஒரு அதிரடி வீரராக அண்மையில் நிரூபித்துக்கொண்டிருந்த போதே உபாதையுடன் வெளியேறியவர் தனது அணி இருப்பிடத்தை நிரந்தரமாக்க ஒரு வாய்ப்புப் பெற்றுள்ளார்.

முக்கியமாக இலங்கையின் இரும்பு மனிதர் திசர பெரேரா. அணியில் பதினொருவரில் ஒருவராகவே இவரது இடம் உறுதியில்லாத போது யானை மாலை போட்டு ராஜாவாகியுள்ள திசரவுக்கு தனது பெறுபேறுகள், அணியின் வெற்றிகள் இரண்டையுமே நிரூபிக்கவேண்டிய சவால்.

எனினும் என்னடா இது World's Best finisherக்கே வந்த சோதனை என்பது போல, இந்தியாவின் தோனிக்கு கடுமையான அழுத்தங்களைக் கடந்த தொடர்களில் விமர்சகர்கள் ஏற்படுத்தியிருந்தார்கள். இலங்கையில் இடம்பெற்ற ஒருநாள் போட்டிகளை வென்றுகொடுக்க தோனியின் பங்களிப்பு அற்புதமானது. ஆனால் அதைத் தொடர்ந்து இந்தியாவிலே இடம்பெற்ற அவுஸ்திரேலிய, நியூ சீலாந்து அணிகளுக்கு எதிரான T20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் எந்தவொரு அரைச்சதமும் பெறாமல் போனதால் வந்த தோல்விகளுக்கு எல்லாம் தோனியின் தலையே உருள ஆரம்பித்தது.
இளம் வீரர்களுக்கு இடம் வழங்க தோனி விலகவேண்டும் என்ற கோஷம் மீண்டும் தூசி தட்டி எடுக்கப்பட்டுள்ளது.
அதற்குப் பதில் வழங்க இந்தத் தொடர் உதவும்.

ஒரு காலத்தில் இந்தியாவின் முதல் தெரிவு விக்கெட் காப்பாளராக இருந்த தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் 32 வயதில் இந்தியாவுக்கு மிக முக்கியமான 4ஆம் இலக்கத்தில்  'துடுப்பாட்ட' வீரராக வருகிறார்.
யுவராஜ் சிங் அதன் பின் இளம் வீரர்கள் ராகுல், மனிஷ் பாண்டே, ஷ்ரேயாஸ் ஐயர், ரஹானே, ஜாதவ் என்று அனைவருமே சறுக்கிய நிலையில் உள்ளூர்ப் போட்டிகளில் ஓட்டங்களை மலையாகக் குவித்து வந்த கார்த்திக்குக்கு தன்னை அணியில் நிரந்தரமாக்கக்கூடிய வாய்ப்புக் கிடைத்துள்ளது. இவரது வயதினால் இதுவே இறுதியான வாய்ப்பாக அமையலாம்.

அதே போல டெஸ்ட் தொடரில் தடுமாறிய ரஹானேக்கும் தன்னை கோலியின் இடத்தில் நிரூபிக்கும் ஒரு வாய்ப்பும், இளம் வீரர்கள் ராகுல், மனிஷ் பாண்டே, ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோருக்கு தம்மை 2019 உலகக்கிண்ணம் வரை அணியில் நிரந்தரமாக இணைக்கும் வாய்ப்பையும் வழங்க இருக்கிறது இத்தொடர்.

எனினும் நிரூபிக்கப்பட்ட இந்தியாவின் துல்லியப் பந்துவீச்சு வரிசையுடன் ஒப்பிடவே முடியாத இலங்கை அணியின் பந்துவீச்சு வரிசை தன்னை எப்படி வெளிப்படுத்தப் போகிறது என்பதிலேயே அதிகம் தங்கியுள்ளது. சும்மாவே வெளுத்து வாங்கும் இந்தியத் துடுப்பாட்ட வீரர்களுக்கு இலங்கைப் பந்துவீச்சாளர்கள் இலகுவான ஓட்டங்களைக் கொடுக்கக் கூடாது.

அத்தோடு மீண்டும் முன்னேறி வரும் களத்தடுப்பு இன்னும் உறுதியாக்கப்பட்டு பழைய உலகத்தரமான நிலைக்கு வரவேண்டும் என்பதும் எமது எதிர்பார்ப்பு.
இந்தியாவும் டெஸ்ட் தொடரில் ஏராளமான பிடிகளைத் தாராளமாக விட்டுப் பழகிய பின்னர் (குறிப்பாக ஸ்லிப் பிடியெடுப்பு) அதிலிருந்து மீள எதிர்பார்த்துள்ளது.

எனவே வழமையான 'கொட்டாவி'த் தொடராக அமையாமல் ஆர்வத்தைத் தூண்டும் ஒரு தொடராக இது அமையும் என்று நம்பியிருப்போம்.

இந்தியத் தீவிர ரசிகர்கள் இலங்கையில் நடந்த வெள்ளையடிப்பாக இதை எதிர்பார்த்திருக்க, ரசல் ஆர்னல்ட் போன்ற மிக வெறித்தனமான இலங்கை ரசிகர்கள் அப்படியெல்லாம் இலகுவாக முடியாது என்பதையும் தாண்டி இலங்கை இரும்பு மனிதனின் தலைமையில் கோலியில்லாத இந்திய அணியை வதம்  செய்வோம் என்று அசுர நம்பிக்கையோடு இருக்கிறார்கள்.

எல்லாம் டெஸ்ட் தொடரில் காட்டிய போராட்டம் தான்.
நம்பிக்கை தானே எல்லாம்...


* படங்கள், தரவுகள் : www.thepapare.com, www.espncricinfo.com, www.howstat.com/cricket





November 24, 2017

ஷங்கர் vs ஷர்மாஸ்- வாய்ப்புக்காகக் காத்திருக்கும் தமிழக வீரர் - யார் இந்த விஜய் ஷங்கர்?

இன்றைய நாக்பூர் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தெரிவு தமிழக சகலதுறை வீரர் விஜய் ஷங்கரா? இல்லை இரு ஷர்மாக்களில் ஒருவரா என்ற கேள்வி எல்லோர் மத்தியிலும் இருந்த நேரம் இந்தியா மூன்று மாற்றங்களை செய்தும் விஜய் ஷங்கருக்கு இடம் கிடைக்கவில்லை.

புவனேஷ் குமாரின் இடத்தில் இன்னொரு வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் ஷர்மா - ஆடுகளமும் வேகப்பந்து வீச்சாளருக்கு சாதகம் என்பதால் நேரடித் தெரிவாக இருந்தார்.

இந்தியா மேலதிகத் துடுப்பாட்ட வீரரை விரும்பி, ஒருநாள் அணியில் நிரந்தர இடத்தைப் பிடித்துள்ள, டெஸ்டில் தனக்கான நிரந்தர இடம் தேடும் ரோஹித் ஷர்மாவையும் உள்ளீர்த்துக்கொண்டது. 
லேசான தசைப்பிடிப்பினால் அவதியுற்ற மொஹமட் ஷமியின் இடத்தை ரோஹித் ஷர்மா தனதாக்கிக்கொண்டார்.

வேகப்பந்துவீச்சுக்கு சாதகம் என்று கருதப்பட்ட ஆடுகளத்தில் இந்தியா வெறுமனே இரண்டு வேகப்பந்துவீச்சாளரோடு களமிறங்குவதா என்று எல்லோரும் சிந்தித்துக்கொண்டிருக்க, அதிலும் இவ்விருவருமே இப்போதைய நிலையில் இந்தியாவின் முதற் தெரிவுகள் இல்லை, ஆனால் நாணய சுழற்சியில் வென்றும் இலங்கை அணி எந்தவொரு ஆதிக்கத்தையும் செலுத்தாமல் 205 ஓட்டங்களுக்குள் சுருட்டப்பட்டுள்ளது.


மீள்வருகை தந்துள்ள இஷாந்துக்கு 3 விக்கெட்டுக்கள். மிகச் சிறப்பாகப் பந்துவீசி தேர்வாளர்கள் தமது தெரிவில் பெருமிதம் கொள்ளச் செய்துள்ளார்.

சுழல் இரட்டையர்கள் அஷ்வினும் ஜடேஜாவும் சேர்த்து 7 விக்கெட்டுக்கள்.
அஷ்வின் இப்போது 296 விக்கெட்டுக்கள். இன்னும் 4 விக்கெட்டுக்களை அவர் எப்போது எடுப்பார் என்பதை அனைவரும் எதிர்பார்த்துள்ளார்கள், உலகில் மிகக் குறைவான போட்டிகளில் 300 டெஸ்ட் விக்கெட்டுக்களைப் பெற்ற சாதனையை நிகழ்த்துவதற்கு.

எனினும் நீண்ட கால நோக்கில் இன்னொரு மிதவேக சகலதுறை வீரரை அடையாளப்படுத்த இப்படியொரு வாய்ப்புக் கிடைக்காது என்பதால் உள்ளூர்ப் போட்டிகள், இந்திய A அணியில் சகலதுறையாளராக சிறப்பாக மிளிர்ந்து நல்ல form யிலுள்ள ஷங்கரை இன்று இந்தியா அறிமுகப்படுத்தவேண்டும் என்று அனைவரும் எண்ணியிருந்தது இன்று நிறைவேறவில்லை.

நேற்றைய எனது பதிவில் இவரைப் பற்றி கொஞ்சம் ஆராய்ந்திருந்தேன்..




இவ்வாறு விஜய் ஷங்கர் இன்று அறிமுகமாகியிருந்தால் 61 ஆண்டுகளில் முதல் தடவையாக இந்திய அணியில் 3 தமிழக வீரர்கள் ஒரே நேரத்தில் விளையாடும் அபூர்வ சந்தர்ப்பம் அமைந்திருக்கும்.
(அஷ்வின், முரளி விஜய் & விஜய் ஷங்கர்)

இறுதியாக 1956இல் - தமிழக வீரர்கள் மூவர் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடியிருந்தனர்.
Brabourne Stadium v England Nov 1961 
AG Kripal Singh, AG Milka Singh and VV Kumar.

சிங் சகோதரர்களில் ஒருவரான மில்கா சிங் இரண்டு வாரங்களுக்கு முன்னர் சென்னையில் காலமானார்.

யார் இந்த விஜய் ஷங்கர்?
இவரது பெறுபேறுகளும் சகலதுறைத் திறமைகளும் என்ன?


 
தமிழ்நாட்டை சேர்ந்த​ 26 வயது நிரம்பிய​ விஜய் ஷங்கர் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்காக இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் விளையாடி உள்ளார். 

கடந்த IPL இல் டேவிட் வோர்னரோடு  போட்டியில் சத இணைப்பாட்டம் புரிந்ததை யாரும் மறந்திருக்க மாட்டீர்கள்.


ஆனால், உள்ளூர் போட்டிகள், ஜூனியர் இந்திய அணி ​, இந்திய A அணி​
என படிப்படியாக தான் இந்திய அணியில் இடம் பிடித்தார்.



2016-2017 பருவகாலத்தில் தமிழ்நாட்டு அணிக்கு விஜய் ஹசாரே கிண்ணப் போட்டிகளில் தலைமை தாங்கி கிண்ணம் வென்று கொடுத்திருந்தார்.


இதன் மூலம் தன்னுடைய தலைமைத்துவ ஆளுமையையும் காட்டி நிற்கும் ஷங்கர், அண்மையில் நியூ சீலாந்து A அணிக்கு எதிராக சிறப்பாக ஆடியிருந்தார்.





இறுதி ஒருநாள் போட்டியில் 5 சிக்ஸர்களுடன் 33 பந்துகளில் 61.


தென் ஆபிரிக்காவில் நடந்த முக்கோணத் தொடரின் இறுதிப் போட்டியிலும் இந்தியாவின் வெற்றிக்கு மிகப்பெரிய பங்களிப்பு இவரது 72 ஓட்டங்கள் மூலமாகக் கிடைத்தது.


காணொளிகள் சிலவற்றில் பார்த்தவரை மிக ஆற்றல் கொண்ட ஒரு சிறப்பான வீரராகத் தெரிகிறார்.



இணையத்தில் தேடியெடுத்த இவரது பெறுபேறுகள்..​




1671 runs (ave 49.14, 5 centuries) and 27 wickets (medium pace) from 32 first class matches





Since 2012-13, Vijay is one of six cricketers who has scored over 1500 runs and taken more than 25 wickets. His first-class batting average is an impressive 49.14 after 32 matches, while his bowling average is 42.81.

​இம்முறை ரஞ்சி கிண்ணத் தொடரிலும் இதுவரை 3 போட்டிகளில் ஒரு சதம் ​பெற்றுள்ளதோடு ஆறு விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.

​வாழ்த்துக்களோடு இந்த தமிழ் வீரரை வரவேற்போம்..
'ஆளப்போறான் தமிழன் கிரிக்கெட் ​உலகை'


​விரைவில் இவருக்கான சரியான வாய்ப்புக் கிடைக்கும் என்று நம்பியிருப்போம்.
நம் அணிக்கு இப்படியானதொரு முறையான வீரர் கிடைக்கவில்லையே என்று ஏங்கவேண்டியும் உள்ளது. இப்படிப்பட்ட ஒரு சகலதுறை வீரராக உருவாகி வந்த அஞ்செலோ மத்தியூஸ் இப்போது உபாதையினால் பந்து வீசுவதில்லை.
தசுன் ஷானக கொல்கத்தாவில் சிறப்பாக பந்துவீசினாலும் இன்னும் துடுப்பாட்டத்தில் சறுக்கி வருகிறார்.
திஸர பெரேரா டெஸ்ட் பக்கத்தை மறந்து வருடங்களாகின்றன.
ஹ்ம்ம்ம்...

இன்னிங்ஸ் தோல்வியை தவிர்ப்பது பற்றி இப்போதே யோசிக்க ஆரம்பித்துவிட்டோமென்றிருக்கிறது நாக்பூர் நிலைமை.


இன்றைய நாளில் இரண்டு ஆறுதல்கள்..

டிமுத் கருணாரத்ன இந்த வருடத்தில் 1000 டெஸ்ட் ஓட்டங்களைப் பூர்த்தி செய்த இரண்டாவது வீரரானார்.
முதலாமவர் தென் ஆபிரிக்க ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் டீன் எல்கர்.


இலங்கையின் அணித்தலைவர் தினேஷ் சந்திமால் தனது 3000 டெஸ்ட் ஓட்டங்களைப் பூர்த்தி செய்திருந்தார். 
தன்னுடைய அரைச்சதத்துடன் 3000 ஓட்டங்களைப் பூர்த்தி செய்த 13வது இலங்கைத் துடுப்பாட்ட வீரர் ஆகியுள்ளார்.




November 23, 2017

நாக்பூர் டெஸ்ட் போட்டி - இந்தியாவின் ஆதிக்கத்துக்கு இடையில் இலங்கைக்கு வாய்ப்புக்கள் ??

ஐந்து வரிகளில் ஒரு செய்தியைத் தரும் புது முயற்சியில் இறங்கியுள்ள 'ஐவரி' தளத்துக்காக வழங்கிய தொலைபேசி மூலமான பேட்டியின் கட்டுரை வடிவமான

ஏ.ஆர்.வி.லோஷன்/ இந்திய எதிர் டெஸ்ட்: இலங்கைக்கு இருக்கும் சாதகங்கள்

இன் மேலதிக தகவல்கள் சேர்க்கப்பட்ட  விரிவான அலசல் இது.

(இயல்பிலேயே கொஞ்சம் சோம்பலுள்ள, நேரமும் இறுகிப்போகிற என் போன்றவர்களுக்கு இப்படியான வசதிகளை ஏனையோரும் தருவது பற்றி ஏன் சிந்திக்கக் கூடாது? ;) நான் பேசிக்கொண்டே இருக்க தட்டச்சி ஏற்றித் தருபவர்களுக்கு சன்மானங்கள் பற்றி பேசித் தீர்மானிக்கலாம் )


இந்தியா - இலங்கை அணிகளுக்கிடையிலான 2009 பருவகால டெஸ்ட் தொடர் மற்றும் அதற்கு முந்திய சில தொடர்களை பொறுத்த வரையில் இலங்கையின் ஆதிக்கம் போட்டியின் முதல் இன்னிங்ஸில்; எப்போதும் மேலோங்கியதாக இருக்கும். 

2009 இல் முதலாம் இன்னிங்சில் 32/4 என்றிருந்தது இறுதி இரண்டு நாட்கள் வரையிருந்த இலங்கையின் ஆதிக்கம் வீணாய்ப்போன கதை பற்றி கடந்த பதிவில் சொல்லியிருந்தேன்.
அதேபோல் 2005 தொடரின் முதல் போட்டியிலும் இலங்கை அணி இந்தியாவை 167 ஓட்டங்களுக்கு உருட்டியிருந்தது, எனினும் இடைவிடாத மழை..
இலங்கை 168/4 என்றிருந்த பலமான நிலையில் போட்டி முடிவுக்கு வந்தது.

இலங்கை அணியின் பந்து வீச்சும் முதலாம் இன்னிங்ஸ்களில் மிகச் சிறந்ததாக இருந்து வந்தது.

முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர்களுக்கு இலங்கையின் பந்துவீச்சாளர்கள் நெருக்கடியை கொடுப்பதும், பின்னர் அந்த நிலைமையில் மாற்றம் ஏற்படுவதுமாக இருக்கும்.

ஆனால் இந்த நிலைமை தற்போது வேறுவிதமாக மாற்றம் அடைந்துள்ளது.

இலங்கை அணியைப் பொறுத்தவரையில் இந்தியாவுடன் ஒரு தொடர் ஆரம்பிக்கும் போது பாரிய உத்வேகத்துடன் விளையாட ஆரம்பிக்கும்.

அது படிப்படியாக குறைவடைந்து செல்லும் நிலைமையை அவதானிக்காலம்.

இதற்கு பிரதான காரணம் இலங்கை அணி வீரர்களினால் டெஸ்ட் போட்டி ஒன்றின் முதல் 3 நாட்கள் வெளிப்படுத்தும் திறமையின் அளவிற்கு இறுதி இருநாட்களில் வெளிப்படுத்த முடியாத நிலை ஏற்படுவதாகும். 

கொல்கத்தா டெஸ்ட் போட்டியின் இறுதிநாள் பின்னர் இந்தியாவின் மனநிலையில் ஒரு தனி உற்சாகம் கிட்டியிருப்பது என்னவோ உண்மை. 
நாளைய நாக்பூர் போட்டியிலும் அதே உத்வேகத்தோடு இறங்கப் போகிறார்கள். குறிப்பாக கடைசி நேர இலங்கை துடுப்பாட்ட வீரர்களின் தடுமாற்றமும், இலங்கை அணியால் எடுக்க முடியாமல் போன கோலி + இந்திய வீரர்களின் விக்கெட்டுக்கள் கோலி போன்ற form இலுள்ள ஆக்ரோஷமான வீரர்களுக்கு மிகப்பெரிய ஆதிக்க மனப்பாங்கைக் கொடுத்திருக்கும்.

எனினும் சுரங்க லக்மால் எடுத்துள்ள விஸ்வரூபம் இந்திய வீரர்களுக்கு தொடர்ந்தும் ஐயத்தையும் தடுமாற்றத்தையும் தரும் என்பது உறுதி.

இரண்டாம் இன்னிங்ஸின் நம்பிக்கை வீரர்கள்

குறிப்பாக தற்போதைய வீரர்களில் திமுத் கருணாரத்ன, அஞ்சலோ மத்தியூஸ் மற்றும் ரங்கன ஹேரத் ஆகிய முன்று வீரர்கள் மாத்திரமே இரண்டாவது இன்னிங்ஸில் நம்பிக்கை அளிக்கக்கூடியவர்களாக உள்ளனர்.

மற்றைய வீரர்களிடம் ஆற்றல் குறைவு அல்லது அனுபவக்குறைவு போன்ற காரணங்களால், அவர்களின் போராட்டத்திறன் குறைவாக உள்ளது.

இந்த காரணத்தினால் இலங்கை அணியினால் இறுதிவரையில் போரடமுடியாதுள்ளது.

முன்னர் அர்ஜூன ரணதுங்க, மஹேலஜெயவர்தன மற்றும் குமார் சங்கக்கார போன்ற வீரர்கள் அணியி ல் இருந்த போதும் இவர்கள் தலைவர்களாக இருந்தபோதும் இதுபோன்ற நிலை இருந்ததில்லை.

அந்த காலத்தில் அணியில் ஒருவர் 'நின்றுபிடித்து' தமது அணியின் ஓட்ட எண்ணிக்கையினை உயர்த்தும் வகையில் செயற்படுவார்.அல்லது காப்பாற்றவாவது போராடுவார்கள்.

ஆனால் தற்போது அவ்வாறான ஒரு வீரர் இலங்கை அணியில் இல்லை என்பது மிகப்பெரிய குறையாக உள்ளது.


வேகப்பந்தும் - சுழற்பந்தும்

இந்திய அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியை பொறுத்தவரையில் நம்பிக்கை அளிக்க கூடிய விடயமாக, இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் சளைக்காது பந்து வீசியமையைக்  கூறலாம்.

இந்திய அணியினருக்கு எதிரான அச்சுறுத்தலான பந்து வீச்சாளர்களையும் இதன் போது அடையாளம் கண்டு கொள்ளக்கூடிய  சந்தர்ப்பம் ஏற்பட்டது.

இருப்பினும் சுழல் பந்து வீச்சாளர்களுக்கு போதுமான நம்பிக்கை நிறைவடைந்த போட்டியில் கிடைக்காமை, அடுத்த போட்டியில் இலங்கை அணிக்கு அது பாதகமான நிலைமையை ஏற்படுத்தும் என்று எண்ணத் தோன்றுகிறது. குறிப்பாக மற்றைய அணிகளுக்கு எதிராக தனது ஆதிக்க வல்லமையைக் காட்டும் ரங்கன ஹேரத் இந்திய அணியுடன் அண்மைக்காலமாக சறுக்கி வருவது இலங்கையைப் பொறுத்தவரை ஆரோக்கியமான விடயமில்லை.
கொல்கத்தாவிலும் ஹேரத்துக்கு முதலாம் இன்னிங்சில் போதிய ஓவர்கள் கிடைக்காமை மற்றும் இரண்டாம் இன்னிங்சில் விக்கெட்டுக்கள் கிடைக்காமை அவரது மனதில் நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தியுள்ளதோ இல்லையோ, இந்தியத் துடுப்பாட்ட வீரர்களுக்கு மனத்திடத்தை வழங்கியிருக்கும்.

எனினும் இந்தியா, தென்னாபிரிக்காவின் தொடரை கருத்திற்கொண்டு, வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான ஆடுகளத்தை உருவாக்குகிறது.

இது இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்களுக்கு ஒப்பீட்டளவில் சற்று சாதகமாக அமையும்.

காரணம், கடந்த இந்தியா, பாகிஸ்தான், சிம்பாப்வே ஆகிய அணிகளுக்கு எதிரான போட்டிகளின் போது இலங்கை அணி சுழல் பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வதில் சற்று தடுமாற்றத்தை சந்தித்திருந்ததை அவதானிக்க முடிந்தது.

சுழற்பந்து வீச்சுக்கு பெயர் போன இலங்கை அணிக்கு, இவ்வாறான நிலைமை ஏற்பட்டுள்ள வருத்தப்பட வேண்டிய விடயமாகும்.

அத்துடன் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களில் பவுன்ஸர் பந்துகள் வீசப்படுவது சற்று குறைவு.

இது இலங்கைக்கு சற்று சாதகமாக அமைந்திருந்தாலும், கடந்த போட்டியில் இந்திய அணி பந்து வீச்சாளர்களின் வேகம் இலங்கை அணியினரை விட சற்று அதிகமாகவே இருந்தது. அத்தோடு இரண்டாம் இன்னிங்சில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் காட்டிய துல்லியம் அற்புதம்.இலங்கை அணி இந்த வேளையில் ஓய்வு வழங்கப்பட்டுள்ள நுவான் பிரதீப்பை நிச்சயம் எண்ணிக் கவலைப்படும். லஹிரு கமகே சிலவேளைகளில் சிறப்பாகப் பந்துவீசியிருந்தாலும் இன்னும் துல்லியம் எதிர்பார்க்கப்படுகிறது. இடது காய் வேகப்பந்து வீச்சாளர் விஷ்வ பெர்னாண்டோ பற்றியும் தேர்வாளர்கள் யோசிக்க இடமுள்ளது.

நாளைய போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ் குமார் இல்லாமையும் இலங்கை அணிக்கு கிடைக்கும் மற்றுமொரு சாதக வாய்ப்பாகும்.
இந்தியா தென் ஆபிரிக்கத் தொடருக்கு தயாராவது பற்றி பகிரங்கமாகவே அறிவித்துள்ள நிலையில் புவனேஷ்குமாரின் இடத்தில் இன்னொரு வேகப்பந்துவீச்சாளராக இஷாந்த் ஷர்மாவை இணைத்துக்கொள்ளப் போகிறதா? இல்லை புதிதாக குழாமில் இணைக்கப்பட்டுள்ள தமிழக சகலதுறை வீரரான விஜய் ஷங்கரை அறிமுகப்படுத்துமா என்ற சுவாரஸ்யமான கேள்வி எழுகிறது.

ஹர்டிக் பாண்டியாவின் வெற்றிகரப் பிரவேசம் இந்தியாவுக்கு மீண்டும் மிதவேக, வேகப்பந்து வீசும் சகலதுறை வீரர்களின் மீது பார்வையை செலுத்த வைத்துள்ளது. ஷங்கரும் தமிழக ரஞ்சி அணிக்கும், இந்திய A அணிக்கும் தான் விளையாடிய போதெல்லாம் சகலதுறை வீரராக அற்புதமாக ஆட்டத் திறனை வெளிப்படுத்தியுள்ளார்.
பாண்டியாவுக்கும் போட்டிக்கு ஒருவர் தேவைப்படுவதை இந்தியா உணர்ந்துள்ளது.
விராட் கோலியும் விஜய் ஷங்கரை சிலாகித்திருப்பதோடு பாண்டியா போன்ற இன்னொருவரை கூடவே வைத்துக்கொள்வதும் அவசியப்படுகிறது.

இப்போதிருக்கும் நிலையில் இஷாந்த் ஷர்மாவுக்கு வாய்ப்பை வழங்குவதை விட புதியவர் ஷங்கரை முயற்சிப்பது இந்தியாவுக்கு எதிர்காலத்தில் நன்மை பயக்கும்.
அத்துடன் விக்கெட்டின்றிப் போன அஷ்வின் பற்றியும் தேர்வாளர்கள் சந்திக்கக்கூடும்.

மத்தியூஸ் மற்றும் திரிமான்னே ஆகியோரின் துடுப்பாட்டம் மட்டுமே இலங்கைக்கு தற்போது வாய்ப்பாக உள்ளது. முதலாவது டெஸ்ட் போட்டியின் பின்னர், ஏனையோரின் துடுப்பாட்டம் குறித்து திருப்தி அடைய முடியவில்லை. எதிர்பார்க்க்கப்பட்ட திமுத், சதீர, சந்திமால் ஆகியோரின் சொதப்பல்கள் நாக்பூரில் தீர்க்கப்படுமா என்பதே கேள்வி.

ஆனால் நம்பி இருக்கக்கூடிய ஒருவராக மாறிவரும் நிரோஷன் டிக்வெல்ல பற்றித் தான் இப்போது பேச்சு.

அடுத்த அணித் தலைவர் உருவாகிறாரா?

நிரோஷன் திக்வெல்லவின் வடிவில் குமார் சங்கக்காரவை ஒத்த ஆக்ரோசமான விக்கட் காப்பாளர் ஒருவரை பார்க்க முடிகிறது. சங்காவின் அதே கண்டி திரித்துவக் கல்லூரியின் பழைய மாணவர் என்பதும் ஆச்சரிய ஒற்றுமை தான்.

அதேநேரம் அவர் மிகவும் அவதானிப்பு மிக்கவராகவும், போட்டி விதிமுறைகள், ஆட்டமிழப்புகள் குறித்த மேலதிக அறிவினை உடையவராகவும் இருக்கிறார். 


கோலி, மொஹமட் ஷமி  ஆகியோருடனான அவரது மோதல்கள் எவ்வளவு தூரம் ஆரோக்கியமானவை என்ற பேச்சுக்கள் ஒரு புறம் இருக்க, சாதுரியமாகப் போட்டி நேரத்தை எதிரணியின் வீண் பேச்சுக்கள் மூலமாகவே வீணாக்கியது பற்றி வெளிப்படையாகப் பேசியுள்ளார் டிக்கா.

அணிக்காக மோதல் குணங்களும், துணிச்சலும் கூடவே மனத்திடமும் கொண்ட  இவரிடம் எதிர்கால அணித் தலைவருக்கான தகுதிகளைக் காணக்கூடியதாக உள்ளது. 

அவர் குறித்து அணித் தேர்வாளர்கள் உரிய அவதானத்தை செலுத்தினால், இலங்கை அணிக்கு எதிர்காலத் தலைவர் ஒருவரை இப்போதிருந்தே செதுக்க முடியும் என்பது என் தனிப்பட்ட கருத்து. 
ஒருநாள் அல்லது T20 போட்டிகளில் இருந்து இதனை ஆரம்பித்துப் பார்க்கலாம்.



இலங்கை அணியின் அணித்தேர்வு குழு சற்று அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

அடுத்த போட்டிக்கான அணித்தெரிவில் என்னென்ன வலுசேர்க்க முடியும் என்பதில் தெரிவுக் குழு அவதானம் செலுத்த வேண்டும்.

தனஞ்யச டி சில்வாவிற்கு அணியில் இடமளிக்கப்படுமா? லஹிரு கமகேவிற்கான வாய்ப்பு தொடருமா? அல்லது தசுன் சானக்கவை முழுநேர பந்துவீச்சாளராக அல்லது துடுப்பாட்ட வீரராக பயன்படுத்துவதா? அல்லது சகலதுறை வீரராக பயன்படுத்துவதா? போன்ற விடயங்களை தீர்மானிக்க வேண்டும்.



மத்தியூஸின் பந்து வீச்சும் இலங்கை அணிக்கு அவசியப்படுகிறது. 

அவர் பந்துவீசுவாராக இருந்தால், அணியின் பந்து வீச்சு பிரிவுக்கு வலு சேர்ப்பதாக அமையும்.
அவர் பந்து வீசாமை இலங்கை அணியின் சமவலுவுக்கு மிகப்பெரிய இழப்பாக அமைகிறது.
இருந்தாலும், அவர் துடுப்பாட்டத்தில் அதிக கவனம் செலுத்துவதும், இலங்கை அணிக்கு தற்போதைக்கு வாய்ப்பாக இருக்கிறது. இலங்கையின் சிரேஷ்ட துடுப்பாட்ட வீரராக அவரிடமிருந்து அதிகளவான ஓட்டங்கள் தேவைப்படுகின்றன.

ஆனால் அவர் கடந்த 2 வருடங்களாக சதம் அடிக்காமை இலங்கை அணிக்கு உள்ள மிகப்பெரிய பிரச்சினையாகும். நாக்பூரில் இந்தக் குறையும் தீருமா இருந்தால் இலங்கை ரசிகர்களுக்குக் கொண்டாட்டம் தான்.

இன்னும் சில மைல் கற்களும் எதிர்பார்க்கப்படும் சாதனைகளும் பற்றி கடந்த பதிவை மீண்டும் வாசித்து அறிந்திடுங்கள்..

17/3 - கொல்கத்தா - மழை - லக்மால் - அதிர்ச்சியோடு ஆரம்பித்த இலங்கை ! தொடரும் தோல்வி வரலாற்றை மாற்றுமா?


ஆசியாவின் சகோதர மோதல் இது ஒருபுறமிருக்க, உலகமே ஆவலுடன் பார்த்திருக்கும் கிரிக்கெட்டின் மிகப் புராதனமான பரம வைரிகளின் முதலான ஆஷஸ் - Ashes பற்றி தமிழ் நியூஸில் நான் எழுதியுள்ள கட்டுரையையும் வாசித்துப் பாருங்கள்.

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner