ஸ்ரீலங்காவுக்கு அவமானம்!

ARV Loshan
38
எல்லாப் பக்கத்தினாலும் ஸ்ரீலங்காவுக்கு அவமானம்! நான் அரசியல் எதுவும் பேசவில்லை!

வெறுமனே கிரிக்கெட்; கிரிக்கெட்; கிரிக்கெட் மட்டும்தான்!

விளையாட்டில் வெற்றி,தோல்வி மிக சகஜமே! அதுவும் கிரிக்கெட்டில் குறிப்பாக ஒருநாள் கிரிக்கெட்டிலும் வெற்றி & தோல்வி மாறி மாறி வரும்! எனினும் தோல்வியடைவதிலும் ஒருமுறை இருக்கிறதில்லையா?

சொந்த மண்ணில் சிங்கங்கள் என்று கருதப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணி இந்திய அணியிடம் தொடர்ச்சியாகப் பெற்ற நான்கு தோல்விகளுமே படுமோசமானவை! 2வது ஒருநாள் சர்வதேச போட்டியைத் தவிர மற்றைய மூன்றிலுமே பெயரெடுத்தாலும் இலங்கை அணி போராடவே இல்லை. ஒரு சில வீரர்களின் ஒரு சில வேளை ஆட்டத்திறமைகளின் இலங்கை அணிக்கு வெற்றியைத் தேடித் தருவதாக இல்லை!

பேசாமல் காமினி சில்வாவையே எல்லாப் போட்டிகளிலும் நடுவராகப் போட்டிருக்கலாம்!

முத்தையா முரளீதரன் நேற்றைய தினம் பெற்றுக்கொண்ட உலக சாதனையை விட இலங்கை அணி மகிழ்ச்சியடையவோ,பெருமையடையவோ எதுவுமே இந்த தொடரிலே இல்லை!

முரளியின் கடும் உழைப்புக்கும் அர்ப்பணிப்புக்கும் கிடைத்த பரிசு இந்த உலகசாதனை.. துடுப்பாட்டத்தில் சச்சின் எவ்வாறோ,அதே போல பந்துவீச்சில் முரளியின் சாதனைகளை முறியடிக்க இனியொருவர் பிறந்தவுடன் பந்தைக் கையில் எடுத்தாலே உண்டு..

மற்றுமொரு உலக சாதனை - முரளி

மென்டிஸ் என்ற மந்திரவாதியை அடித்து அணியை விட்டே துரத்திவிட்டனர் இந்தியவீரர்கள்! முரளீதரன் என்ற மாயாஜாலவித்தைக்காரரும் இந்திய மகுடிக்காரரின் முன்னால் பல்லுப் பிடுங்கிய பாம்பாக!

குறுகிய காலத்தில் பெரும் புகழ் பெற்று,ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் விரைவான ஐம்பது விக்கெட்டுக்கள் என்ற சாதனையையும் பெற்ற மென்டிசை அணியில் இருந்து நீக்கியதன் மூலம் இலங்கைத் தெரிவாளர்கள் அவரது மன நம்பிக்கையையும் குறைத்து,அவர் பற்றி கிரிக்கெட் உலகில் இருந்த மதிப்பையும் குறைத்து விட்டார்கள்.

தொடர் ஆரம்பிக்க முன்னர் இலங்கையின் சுழல்பந்து மன்னர்கள் பற்றி இருந்த பிரமிப்பு முழுவதுமே மறைந்து இப்போது இந்தியாவின் சாதாரண சுழல்பந்து வீச்சாளர்களும் விசுவரூபம் எடுத்து வெற்றிகளைப் பெற்றுள்ளார்கள்.

முன்பொரு காலத்தில் ஜெயசூரிய,டீ சில்வாவினால் துவைத்து எடுக்கப்பட்டு, பின்னர் முரளி,வாசினாலும்,அண்மையில் மென்டிசினாலும் உருட்டி எடுக்கப்பட்ட இந்தியா தனது தோல்விகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு இப்போது உலகின் தலை சிறந்த ஒரு நாள் அணியாக மாறும் காலம் வெகு தொலைவில் இல்லை.ஞாயிறு இடம்பெறும் இறுதிப் போட்டியிலும் இலங்கை அணியைத் துவம்சம் செய்தால் இந்திய முதலாம் இடத்தை நெருங்கிவிடும். இன்று இடம் பெரும் போட்டியில் ஆஸ்திரேலியா நியூ சீலாந்து அணியிடம் தோற்றால் இந்தியாவின் இரண்டாம் இடம் உறுதி.இலங்கை அணி இப்போதிருக்கும் மன நிலையில் 5-0 என்ற தோல்வி உறுதி போலத் தான் தெரிகிறது.

புதிய உத்வேகத்துடன் இந்தியா

இலங்கை(ஸ்ரீ லங்கா) கிரிக்கெட்டில் பெற்ற தோல்விகளில் இருந்து மட்டுமல்ல.. வேறெந்த விடயங்களில் இருந்தும் பாடங்கள் கற்பதாக இல்லை..எல்லா விடயங்களிலும் மற்ற நாடுகளை விடப் பின் தங்கி இருப்பது எங்களுக்குப் பெருமையான ஒரு விஷயமாக மாறிவிட்டது. எப்போ தான் திருந்துவோமோ?

இதனிடையே தோனியின் தலைமையிலே இந்தியா நேற்று மற்றுமொரு புதிய சாதனை நிகழ்த்தியது.. தொடர்ச்சியான ஒன்பதாவது ஒருநாள் வெற்றியை பதிவு செய்தது.இதுவரை எட்டு போட்டிகளை வென்றதே இந்தியாவின் சாதனை..


தோனி - தலைவன் இருக்கிறான்

அதுபோல் இலங்கை மண்ணில் பெறப்பட்ட கூடுதலான ஓட்ட எண்ணிக்கையை நேற்று கம்பீர் நிகழ்த்தினார்.சச்சினின் ஓய்வினால் கிடைத்த வாய்ப்பை கம்பீர் சரியாகப் பயன்படுத்தினார்.. (விளையாடுற நேரம் எல்லாம் LBW குடுக்கிறாங்கன்னு சச்சினை Dressing roomலையே இருத்தீட்டாங்களோ??)

கம்பீர் - கம்பீர ஆட்டம்
சரி விளையாட்டுக்களில் நாங்கள் பின் தங்கி விட்டோம்.. மீண்டும் பயிற்சிகளின் பின்னர் முன்னேறலாம் என்று வைத்துக் கொள்வோமே.. இலங்கையரின் பழக்கவழக்கம் எங்கே போனது? இதுவரை நடக்காத மாதிரி காட்டுமிராண்டிகளாக இலங்கை ரசிகர்கள் நடந்துள்ளார்கள்..


மீண்டும் இந்திய அணி மீது தாக்குதல்

கொழும்பில் நடைபெற்ற மூன்று ஒருநாள் போட்டிகளிலுமே இந்திய வீரர்கள் மூவர் போத்தல்,மற்றும் இதர பொருட்களால் தாக்கப்பட்டுள்ளார்கள்.காயம் ஏற்படாவிட்டாலும்,ஓரிருவரே இவ்வாறு நடந்து கொண்டாலும் இதுவரை இலங்கையில் இவ்வாறு நடைபெறாத ஒரு கேவலமான நிகழ்வு இடம்பெற்றிருப்பது சில கேள்விகளை எழுப்பி இருக்கிறது..
தொடர் தோல்விகளால் இலங்கை ரசிகர்கள் விரக்தி அடைந்து விட்டனரா?
முன்பிருந்த இந்திய விரோதம் மீண்டும் தொடங்கி இருக்கிறதா?
இல்லை இது வெறும் வேடிக்கைக்கா?

எனினும் கெட்ட பெயர் எடுத்துவிட்ட (இதிலுமா?) இலங்கை ரசிகர்கள் ஒரு விடயத்தை மறந்து விட்டார்கள்..

இலங்கைக்கு எல்லா விதத்திலும் இந்தியாவே துணை..எல்லா விடயத்திலும்.(கவனித்துக் கொள்ளுங்கள் இலங்கைக்கு) குண்டு வெடிப்பு அச்சம் என்று எல்லா நாடுகளும் வராமல் இருந்த போதும் வந்த ஒரே அணி இந்தியா.. அந்த வீரர்களையும் வெறுப்படையச் செய்வதன் மூலம் தனிமைப்படப் போகிறார்களா?

தோல்வியடைந்த அவமானத்தை விட ரசிகர்களின் மோசமான நடத்தையே இலங்கைக்கு மிகப்பெரும் கேவலத்தை தந்துள்ளது.. எல்லாரையும் அடித்து விரட்டிவிட்டு கிரிக்கட்டிலும் வெல்லலாம் என்று நினைத்தார்களோ?

ஞாயிறு இவ்வாறு ஒரு கவலைக்குரிய சம்பவம் இடம்பெறாது என்று கிரிக்கெட் நிர்வாகிகள் உறுதியளித்துள்ளார்கள்.. பார்க்கலாம் இந்த உறுதியை ஸ்ரீ லங்காவின் ரசிகப் பெருந்தகைகள் காப்பாற்றுவார்களா? இலங்கை அணி இந்தப்போட்டியிலாவது வெல்லுமா என்பதை விட மிக முக்கிய கேள்வி இதுதான்..

Post a Comment

38Comments

Please Select Embedded Mode To show the Comment System.*