June 23, 2013

இறுதிக்கு முன்னதாக - சம்பியன்ஸ் கிண்ணம் - ICC Champions Trophy

பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட சம்பியன்ஸ் கிண்ணத்தின் இறுதிப் போட்டி வருணபகவானின்ஒப்புதல் இல்லாமல், அவரது குறுக்கீடுகளுடன் இந்த இடுகையை நான் இடும் வரை இடம்பெறாமலேயே இருக்கிறது.


2002ஆம் ஆண்டுக்குப் பின் மீண்டும் ஒரு தடவை கிண்ணம் வெற்றியாளர்களினால் பகிர்ந்துகொள்ளப்பட இருக்கிறது போல் தெரிகிறது.
சந்தேகமில்லாமல் இந்தத் தொடரின் மிகச் சிறந்த இரு அணிகளும் மோதிக்கொள்கின்றபோட்டிக்கு மழை தான் மத்தியஸ்தம் வகித்துத் தீர்ப்பெழுத வேண்டுமா?

சம்பியன்ஸ் கிண்ணத்தொடரின் இறுதி அங்கம் இப்படி சரியான முடிவில்லாமல் முடிவது வருத்தமே....

---------
இலங்கை அணியின் இறுதித் தோல்வியும், இந்தியாவுக்கு எதிரான தோல்வியும் புதிய விடயங்கள் அல்ல.

அதே போலத் தான் சம்பியன்ஸ் கிண்ணத்தின் அரையிறுதித் தோல்வியும்.
2011ஆம் ஆண்டு உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு முன்னதாக இலங்கையின் முக்கிய வீரர்கள் காயமடைந்ததைப் போலவே, இந்த அரையிறுதிக்குமுன்னதாக போட்டி ஆரம்பிக்க ஒரு மணிநேரத்துக்கு முன்னர் இலங்கை அணியின் உப தலைவர் தினேஷ் சந்திமல் உபாதையுற்றிருப்பதாகவும், விளையாடாமாட்டார் என்றும் அறிவிக்கப்பட்டது.

மழையால் போட்டி நடக்குமா, ஓவர்கள் குறைக்கப்படுமா என்றெல்லாம் எண்ணிக் கொண்டிருக்க, அதுவே ஒரு பக்கம் போட்டி பற்றிய எதிர்பார்ப்பைக் குறைத்திருக்க, ஆரம்பித்த போட்டியின் முதல் சில நிமிடங்களிலேயே முதலாவது விக்கெட்டை இழந்து சில நிமிடங்களில் இலங்கையின் வேகமான ஓட்டங்கள், நம்பமுடியாத பிடிகள், நம்பி இருக்கக் கூடிய சில விக்கெட் பறிப்புக்களுக்கு காரண கர்த்தாவாக இருக்கும் சகலதுறை வீரர் டில்ஷான் நொண்டியடித்துக்கொண்டு வெளியேறுகிறார்.

போதாக்குறைக்கு ஆடுகள, வானிலை அம்சங்களை சாதகப்படுத்திக்கொண்ட இந்திய மிதவேகப் பந்துவீச்சாளர்கள் இலங்கையின் விக்கெட்டுக்களை ஒவ்வொன்றாக சரித்ததுடன், ஓட்டவேகத்தையும் மிகக் குறைவாகவே மட்டுப்படுத்திக் கொண்டார்கள்.

சங்கா - மஹேல இணைப்பாட்டம் இலங்கையைக் கரைசேர்க்கும் என்று நம்பியிருந்தவேளையில் சங்காவின்ஆட்டமிழப்பு;  தொடர்ந்து பறிக்கப்பட்ட விக்கெட்டுக்கள், அபாரமான களத்தடுப்புக்கள் என்று இந்தியா தொடக்கம் முதல் போட்டியில் ஆதிக்கம் செலுத்தியது.

முக்கியமாக முதல் மூன்று விக்கெட்டுக்களுமே இரண்டாம் ஸ்லிப்பில் களத்தடுப்பில் ஈடுபட்ட சுரேஷ் ரெய்னாவினால் பிடி எடுக்கப்பட்டன. மூன்றுமே அபார பிடிகள் என்பதையும் குறிப்பிட வேண்டும்.
மிதவேகப்பந்து வீச்சின் அற்புத வித்தைகளை அவதானித்த தலைவர் தோனி தானும் நான்கு ஓவர்கள் பந்துவீசி அசத்தியிருந்தார்.
ஆசை யாரை விட்டது ரகம் என்றும் இதைச் சொல்லலாம்; காரணம் இவரை விடத் தொடர்ச்சியாக பந்துவீசும் கோஹ்லி இவரை விட இன்னும் சிறப்பாகச் செய்திருக்கக் கூடும்.

இந்தத் தொடரில் இதுவரைக்கும் பெரிதாகப் பிரகாசித்திராத பந்துவீச்சாளர்களான இஷாந்த் ஷர்மாவும் அஷ்வினும் தலா இரண்டு விக்கெட்டுக்களை எடுத்துக்கொண்டார்கள்.

இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் மஹேல ஜெயவர்த்தன, ஜீவன் மென்டிஸ் ஆகியோரின் சராசரிப் பங்களிப்பை விட, தொடரில் சகலதுறை வீரராக முத்திரை பதிக்க முடியாமல் போயிருந்த தலைவர் மத்தியூஸ் அரைச் சதம் ஒன்றைப் பெற்றுக்கொண்டார்.

ஆனால் ஆட்டத்தின் எந்தவொரு கட்டத்திலுமே இலங்கையின் ஓட்ட வேகம் இந்திய அணிக்கு எதிராக அச்சுறுத்தலாக இருக்கவில்லை. 200 ஓட்டங்களை நெருங்குவதே இமாலய இலக்கு எனும் நிலையில் கடைசி நேர அடிகளுடன் இலங்கை அணி 181 என்ற வெகு சாதாரண இலக்கை வைத்தது.

நான் முன்னைய இடுகைகளில் சொன்னது போல பெறும் துடுப்பாட்டப் பசியிலும் சிறப்பான formஇலும் இருக்கும் இந்தியத் துடுப்பாட்ட வரிசைக்கு இது பெரிய விடயமே அல்ல.

இரு விக்கெட்டுக்களை இழந்து தொடர்ச்சியான மூன்றாவது தடவையாக எட்டு விக்கெட் வெற்றியைப் பதிவு செய்தது இந்தியா.
தவான் மீண்டும் ஒரு அபார அரைச் சதம். 114, ஆட்டம் இழக்காமல் 102, 48 & 68 இலங்கையுடன்...

சம்பியன்ஸ் கிண்ணம் கண்ட புதிய சம்பியன் ஷீக்கார் தவான் தான்.
தவானின் ஜோடி, மீளத் தன்னைப் புதிதாக்கியிருக்கும் ரோஹித் ஷர்மாவும் தன் பங்குக்கு இணைப்பாட்டம் ஒன்றை உருவாக்கிவிட்டு 33 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.
இலங்கை என்றவுடன் உத்வேகம் எடுக்கும் விராட் கோஹ்லி ஆட்டமிழக்காமல் அரைச் சதம்.

இலங்கை அணி எல்லா விதத்திலும் பந்தாடப்பட்டது.
இங்கிலாந்து அணியை வென்றபோதும், ஆஸ்திரேலிய அணியை வெளியேற்றியபோதும் சிங்கங்களாகத் தெரிந்த இலங்கை அணி இந்தியாவுடன் விளையாடியபோது பயந்த செம்மறிக் கூட்டமாகத் தெரிந்தது.

அப்படியே அடிவாங்கி சுருண்டுபோனது.
-------------------
இதற்கு இன்னொரு காரணமும் இருக்கலாம்.
இடைவிடாத புலம்பெயர் தமிழரின் போராட்டங்கள்.

மைதானத்துக்கு வெளியே மட்டுமில்லாமல், மைதானத்துக்கு உள்ளே பதாகைகள் மற்றும் புலிக்கொடியுடன் இறங்கி ஓடிய சம்பவங்கள்.

இலங்கை அணி துடுப்பாடியபோதும், பின்னர் களத்தடுப்பில் ஈடுபட்டபோதும் மைதானத்துக்குள் இறங்கி ஓடிக் கவனயீர்ப்பை ஏற்படுத்திய தமிழ் இளைஞர்கள் இலங்கை அணியின் மீது ஏதோ ஒருவிதத்தில் அழுத்தத்தையோ அல்லது கவனக் குறைவையோ ஏற்படுத்தி இருக்கலாம்.
இப்படியான தொடர் நடவடிக்கைகள் அரசியல் ரீதியான அழுத்தத்தை இலங்கை மீது ஏற்படுத்துகிறதோ என்னவோ போட்டிகளை நடத்தும் இங்கிலாந்து மீது பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பார்வையாளர்கள் மீதான கெடுபிடிகளை இறுக்கலாம்.

இலங்கை அரசாங்கம் பிரித்தானியாவிடம் தனது அதிருப்தியைக் குறிப்பிட்டு, விளக்கம் கோரியிருக்கிறது.

மைதானத்துக்குள் ஓடி அகப்பட்டவர்கள் துணிச்சலானவர்கள் தான்; ஆனாலும் இவை ஏற்படுத்தப்போகும் கவனயீர்ப்பு இந்தக் காலகட்டத்தில், அதுவும் யாருக்குமே அஞ்சாத, எவரையும் பொருட்டாக எடுக்காத இலங்கை அரசுக்கு எதிராக வலிமையாக இருக்குமா என்றால் ம்ஹூம் தான்.
--------------

இந்தத் தொடரின் ஆடுகள நிலைகள், கள நிலைகள், எதிரணிகளை விட மேவி நிற்பவை என்று சகல காரணிகளிலும் மிகச் சிறந்த இரு அணிகள் தான் இன்று இறுதிப் போட்டியில் மோதுகின்றன.

துடுப்பாட்டம், பந்துவீச்சு, களத்தடுப்பு மற்றும் அணித் தலைமை என்று இந்தியா - இங்கிலாந்து இரண்டுமே கிண்ணத்தை வெல்லத் தகுதியான அணிகள் தாம்.

ஆனால் நாணய சுழற்சியுடன் நிற்கும் போட்டி ரசிகர்களுக்கும் கூட விரக்தியைத் தான் தருகிறது.

ஒரேயொரு மகிழ்ச்சியான விடயம், இம்முறை இடம்பெற்ற சம்பியன்ஸ் தொடர் ரசிகர் மத்தியிலும் வீரர்கள் மத்தியிலும் பெற்றுள்ள வரவேற்பும் ஆரோக்கிய நிலையும் சம்பியன்ஸ் கிண்ணத்தை இறக்க விடாமல் தொடர்ந்து உயிர் பிழைக்க வைத்திருக்கும் போல் தெரிகிறது.

IPL என்று இழுவையாக போரடித்த ஒரு அரைகுறை கிரிக்கெட் தொடருக்குப் பின்னால் இது நடந்ததாலேயே இம்முறை சம்பியன்ஸ் கிண்ணம் என் போன்ற கிரிக்கெட் ரசிகர்களால் ரசிக்கப்பட்டது என்ற உண்மை ICCக்கும் விளங்குமோ?


1 comment:

Unknown said...

Losan anna england team ku cup i pakirnthu kuduppathattku enta thakuthiyum illai thodar muluvathum sirappaaka viliyadiya india thaan nichayam champion paddam villanum. athuvum inithe nadanthathu.. vilaiyaadiya 8 team best but india most best.

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner