June 12, 2013

அரையிறுதியில் இந்தியா, விடைபெற்ற பாகிஸ்தான் & அல்லாடும் ஆஸ்திரேலியா - ICC Champions Trophy - Game 6

​ஒரே கல்லில் இரு மாங்கனிகள்...
இந்தியா நேற்றுப் பெற்ற வெற்றியில் இரு அணிகளுக்கு ஒரே நேரத்தில் அடி...

மேற்கிந்தியத் தீவுகளுக்கு விழுந்த சாதாரண அடி, பாகிஸ்தானுக்கு மரண அடியானது.
தொடரின் ஆரம்பத்தில் கிண்ணம் வெல்லக்கூடிய வாய்ப்புள்ள அணிகளில் முதன்மையாகக் கருதப்பட்ட பாகிஸ்தான் தான் முதலாவதாக இந்த சம்பியன்ஸ் கிண்ணத்தொடரில் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை இழந்த அணியாகியுள்ளது.

மறுபக்கம், இந்தியா அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை முதலில் பெற்ற பெருமையுடைய அணியாகியுள்ளது.

இந்தத் தொடர் ஆரம்பிக்க முதலே, எதிர்பார்க்கப்பட்ட கிரிக்கெட் யுத்தம் - எட்ஜ்பஸ்டனில் நடைபெறவுள்ள இந்திய - பாகிஸ்தான் போட்டி இனி வெறும் கௌரவப் பிரச்சினை தான்.
பாகிஸ்தான் இதுவரை எந்த ஒரு உலகக் கிண்ணப் போட்டியிலும் இந்தியாவை வென்றதில்லை  என்பது அவர்களுக்கு மேலும் ஒரு வெல்லவேண்டிய காரணத்தை வழங்குகிறது.
*பிற்சேர்க்கைத் தெளிவாக்கல் - நண்பர்கள் பலர் சுட்டிக்காட்டியபடி - பாகிஸ்தான் சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளில் இந்தியாவை இரு தடவை வீழ்த்தியுள்ளது.

நேற்று மேற்கிந்தியத் தீவுகள் அணியை இந்தியா வதம் செய்து வீழ்த்தியது எனலாம்.
இரண்டு மீசைக்கார இளையவர்கள் இந்தியாவின் வெற்றிக்குப் பந்துவீச்சிலும், துடுப்பாட்டத்திலும் இந்தியாவின் வெற்றியை உறுதிப்படுத்தியிருந்தார்கள்.

அண்மைக்காலமாக இந்தியாவின் முன்னணி சகலதுறை வீரராக உருவெடுத்து வரும் ரவீந்திர ஜடேஜா நேற்று மேற்கிந்தியத் தீவுகளின் அச்சுறுத்தும் துடுப்பாட்ட வரிசையை சும்மா இலகுவாக உருட்டி எடுத்தார்.
நேற்று ஜடேஜா பெற்றது, இந்திய அணியின் வீரர் ஒருவரால் பெறப்பட்ட மிகச் சிறந்த சம்பியன்ஸ் கிண்ணத் தொடர்ப் பந்துவீச்சு.


கடைசி இரு ஓவர்களில் டரன் சமி  வெளுத்து வாங்கியிராவிட்டால் இன்னும் சிறந்த பந்துவீச்சுப் பெறுதியைத் தன்னுடையதாக்கி இருந்திருப்பார் ஜடேஜா.
ஒவ்வொரு பந்தும் விக்கெட்டை எடுப்பதாக ஓட்டங்களையும் கட்டுப்படுத்தி நேற்று ஜடேஜா ஒரு அசகாய சூரராக விளங்கினார்.

ஆரம்பத்திலே இந்தியாவின் வேகப்பந்துவீச்சாளர்களை மேற்கிந்தியத் தீவுகளின் வீரர்கள் - குறிப்பாக சார்ள்ஸ் பந்தாடிய பிறகு ஜடேஜா போட்டியின் போக்கையே மாற்றிப்போட்டார்.

200 ஓட்டங்களுக்குள் சுருளவேண்டிய மேற்கிந்தியத் தீவுகளுக்கு நேற்று போராடக் கூடிய ஓட்ட எண்ணிக்கையைப் பெற்றுக்கொடுத்தவர் அவர்களின் முன்னாள் தலைவர் சமி.

முதலாவது போட்டியில் அவர் தேவையில்லை என்று அணியை விட்டுத் தூக்கியவர்கள், ரம்டினின் தடைக்குப் பிறகு அணிக்குள் அவரை சேர்த்திருந்தார்கள்.
நேற்று சமி அடித்த வேகமான அரைச் சதம் மேற்கிந்தியத் தீவுகளைக் கொஞ்சமாவது போராட வைத்தது.
தென் ஆபிரிக்காவுக்கு ஒரு மக்லரென், ஆஸ்திரேலியாவுக்கு ஜேம்ஸ் போல்க்னர், நியூ சீலாந்துக்கு நேதன் மக்கலம் போல...

குறிப்பாக இறுதி விக்கெட் இணைப்பாட்டத்தில் பெறப்பட்ட 51 ஓட்டங்களையுமே சமியே எடுத்திருந்தார் என்பது எவ்வளவு பொறுப்பாக அவர் ஆடினார் என்பதைக் காட்டுகிறது.

அடுத்த போட்டியிலும் சமி இருப்பார்; ஆனால் அதற்குப் பின்னர் ரம்டின் தடை முடிந்து வந்த பிறகு?

234   மேற்கிந்தியத் தீவுகளின் சமபலமான பந்துவீச்சோடு இந்தியாவுக்கு சவாலாக இருக்கும் என்று பார்த்தால், இந்தியாவின் புதிய ஆரம்பத் துடுப்பாட்ட ஜோடியிடமிருந்து மீண்டும் ஒரு அபார ஆரம்பம்.
சத இணைப்பாட்டம்.. அதுவும் வேகமாக.

ரோஹித் ஷர்மா மீண்டும் ஒரு அரைச் சதம் பெற்று ஆட்டமிழக்க, பெரும் ஓட்டப் பசியோடு இருக்கின்ற ஷீக்கார் தவான் தனது இரண்டாவது தொடர்ச்சியான ஒரு நாள் சர்வதேச சதத்தைப் பெற்று தனது ஆரோக்கியமான, ஓட்டக் குவிப்பு Formஐ வெளிப்படுத்தியிருக்கிறார்.

தவான் ஆஸ்திரேலிய அணியுடன் தனது டெஸ்ட் அறிமுகத்தில் பெற்ற சதம், அதன் பின் இந்த சாம்பியன்ஸ் கிண்ண இரு சதங்கள் என்று மூன்று சர்வதேச சதங்களைத் தொடர்ச்சியாகப் பெற்றுள்ளார்.

விராட் கோஹ்லியுடன் ஒரு இணைப்பாட்டம், அதன் பின் அரைச் சதத்தை மிக அழகாக ஆடிப் பெற்ற தினேஷ் கார்த்திக்குடன் வீழ்த்தப்படாத சத இணைப்பாட்டம் என்று எந்தவொரு சந்தர்ப்பத்திலும் போட்டி கை நழுவிச் செல்லாமலிருப்பதை உறுதிப்படுத்தியிருந்தார் தவான்.

இந்திய அணிக்கு அண்மைக்காலமாகக் கிடைத்து வரும் துடிப்பான, திறமையான இளம் வீரர்கள் பலரும் தொடர்ச்சியாகப் பெறுபேறுகளை வெளிப்படுத்தி வருகிறார்கள் என்பதும், இவர்கள் மூத்த வீரர்கள் பலருக்கும் நிரந்தர ஓய்வைக் கொடுக்கும் அழுத்தத்தை வழங்கிவருகிறார்கள் என்பதும் எதிர்கால இந்தியக் கிரிக்கெட்டுக்கு ஆரோக்கியமானது.

அத்துடன், IPL முடிந்த பிறகு பல சந்தேகங்கள், அழுத்தங்கள், கறுப்புப் புள்ளிகளுடன் இங்கிலாந்து வந்த இந்திய அணிக்கு இந்த வெற்றிகள் நிறைய நம்பிக்கையைக் கொடுக்கும் என்பதோடு, இந்தியாவின் பார்வையில் விமர்சனங்களுக்கும் எதிர்க்கருத்துக்களுக்கும் பதிலடியாக அமைந்திருக்கிறது.

இந்த சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் இலக்குகளைத் துரத்திய எல்லா அணிகளுமே தடுமாறி, அழுத்தத்தை ஏற்றி, தங்கள் வெற்றிவாய்ப்புக்களைத் தாமே குழிதோண்டிப் புதைத்துக்கொண்டனர்.
தென் ஆபிரிக்கா, ஆஸ்திரேலியா & பாகிஸ்தான் நல்ல உதாரணங்கள். நியூ சீலாந்து மயிரிழையில் தப்பியது.
ஆனால் இந்தியாவின் நான்கு இளையவர்களும் அந்தத் தவறை விடவில்லை.


இதில் சுவாரஸ்யம், இவ்விரு அணிகளும் இறுதியாக விளையாடிய சம்பியன்ஸ் கீனப் போட்டியிலும் இந்தியாவே வென்றது.
தென் ஆபிரிக்காவிலே நடந்த தொடரில் 7 விக்கெட்டுக்களால், 107 பந்துகள் மீதம் இருக்க இந்தியா வென்றது.
நேற்று எட்டு விக்கெட்டுக்களால் 65 பந்துகள் மீதம் இருக்க வென்றுள்ளது.

------

இன்று நடப்பு சம்பியன்கள் ஆஸ்திரேலியாவுக்கு வாழ்வா சாவா யுத்தம்.
வெல்லவே வேண்டும்.... தோற்றால் அவ்வளவு தான்.

இவ்விரு அணிகளும் தான் கடந்த சம்பியன்ஸ் கிண்ணத்தின் இறுதிப்போட்டியில் விளையாடியிருந்தன.

இன்றைய போட்டிக்கு முன்னதாகவே ஆஸ்திரேலிய அணிக்குப் பட்ட காலிலேயே படும் என்பதைப் போல, அணித்தலைவர் கிளார்க் இன்னும் குணமடையவில்லை என்பது ஒரு பக்கம், மறுபக்கம் ஆஸ்திரேலியாவின் குழப்படிகாரப் பையன் வோர்னர் மீண்டும் ஒரு சிக்கலில் சிக்கியுள்ளார்.

Twitter மோதல் ஒன்றில் அகப்பட்டு எச்சரிக்கப்பட்டு, தண்டப் பணம் செலுத்திய அவர், இம்முறை மதுபானப் பாவனையுடன் இங்கிலாந்து வீரர் ஒருவருடன் (ஜோ ரூட் என சில ஊடகங்கள் மட்டும் குறிப்பிட்டுள்ளன) மோதலில் ஈடுபட்டதால் இன்றைய போட்டியில் விளையாடவில்லை.
வெற்றி எந்த வழியிலாவது வரும் என்று ஏங்கியிருக்கும் ஆஸ்திரேலியாவுக்கு, வோர்னர் formக்குத் திரும்பாமலே, குழப்படி வழியால் நாசமாகிப்போனது பெரும் அதிர்ச்சியாக அமைந்திருக்கும்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஆஸ்திரேலிய அணியில் விளையாடிய லூக் ரொங்கி இப்போது நியூ சீலாந்து வீரர்.
என்னவெல்லாம் நடக்கிறது கிரிக்கெட்டில்.

மாலுமி இல்லாத கப்பல் போல, தலைவன் இல்லாத ஆஸ்திரேலிய அணி கிண்ணத்தைப் பறிகொடுக்கும் தறுவாயில் இந்தப் போட்டியிலும் தடுமாறிக் கொண்டிருக்கிறது.

விடை கொடுத்தனுப்பத் தயாராவோம்...

இந்தத் தோல்விகள் இவர்களது ஆஷஸ் தொடருக்கான தயார்ப்படுத்தலுக்கும் பெரியளவு அடியைக் கொடுக்கப் போகிறது என்பது உண்மை.

1 comment:

K. Sethu | கா. சேது said...

//பாகிஸ்தான் இதுவரை எந்த ஒரு உலகக் கிண்ணப் போட்டியிலும் இந்தியாவை வென்றதில்லை அவர்களுக்கு மேலும் ஒரு வெல்லவேண்டிய காரணத்தை வழங்குகிறது.//

ஆனால் இந்த ICC Champions Trophy தொடரில் 2004 மற்றும் 2009 களில் இவ்விரு அணிகளும் சந்தித்த இரு தடவைகளிலும் பாகிஸ்தானே வென்றது. அத்துடன் இம்முறை இத் தொடரின் இறுதியாவதால் வெல்ல வேண்டும் என இந்தியாவும் மேலதிக முனைப்பு காட்டலாம்.

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner