June 11, 2013

பாகிஸ்தான் !!! மீண்டும்??? பாவம் மிஸ்பா - ICC Champions Trophy - Game 5

மீண்டும் ஒரு தடவை நான் சொன்னது நடந்தது.

பாகிஸ்தான் அணி தனக்குத் தானே சூனியம் வைத்துக்கொண்டு தோற்கும் ஒரு அணி என்பது மீண்டும் புலனாகியுள்ளது.

கஷ்டப்பட்டு பந்துவீச்சாளர்கள் எடுத்துத் தந்த ஒரு அருமையான வாய்ப்பைப் பொறுப்பற்ற துடுப்பாட்டம் மூலம் வீணாக்கி, இப்போது அரையிறுதி வாய்ப்பை அநேகமாக இழந்து நிற்கிறது.

தென் ஆபிரிக்க அணி தனது முக்கிய, அனுபவம் வாய்ந்த வீரர்களை இழந்து தடுமாறிக்கொண்டிருக்கும் இத்தொடரில் அந்த அணியை வீழ்த்த முடியாவிட்டால் வேறு எப்போது அந்த அணியை வீழ்த்துவது?

அணித்தலைவர் மிஸ்பா உல் ஹக் மீண்டும் ஒரு தடவை தனித்து நின்று போராடி அரைச் சதம் ஒன்றை எடுத்திருந்தார். அவருக்கு முன்னைய போட்டி போலவே துடுப்பாட்டத்தில் துணை வந்தவர் நாசிர் ஜம்ஷெட்.
ஏனைய எல்லாத் துடுப்பாட்ட வீரர்களும் வருவதும் போவதுமாகவே இருந்திருந்தார்கள்.

ஆடுகளத்தில் நின்று ஆடவேண்டும் என்பதோ, இந்தப் போட்டியில் வெல்வதன் மூலம் அரையிறுதியை நோக்கி செல்லவேண்டும் என்பதோ அவர்களின் நோக்கமாக இருந்ததாகத் தெரியவில்லை.

அறிமுக வேகப் பந்துவீச்சாளர் க்றிஸ் மொறிஸின் பந்துவீச்சிலும், அனுபவம் குறைவான வேகப்பந்துவீச்சாளர்கள் சொத்சொபே, மக்லரென் ஆகியோரது பந்துவீச்சிலும் சுருண்ட பாகிஸ்தான், favorites என்ற நிலையிலிருந்து failures என்ற அவமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

மிஸ்பா மீண்டும் ஒரு தடவை மிஸ்டர்.தனிமை ஆகியிருக்கிறார்.

நேற்றைய போட்டியின் கதாநாயகன் உண்மையில் மிஸ்பா உல் ஹக் தான்.
அபாரமான களத்தடுப்பின் மூலமாக இரு ரன் அவுட்களை நிகழ்த்தியதோடு, தென் ஆபிரிக்காவின் ஜொண்டி ரோட்ஸை நிகர்க்கும்  விதமாக மில்லரைப்  பிடியெடுத்து  ஆடமிழக்கவும் செய்திருந்தார்.
அதன் பின்னர் துடுப்பாட்டம்.

ஆனால் இப்படிப்பட்ட ஒரு தலைவரை வெற்றி பெறும் அணியின் தலைவராகப் பார்க்கும் அளவுக்கு பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்ட வீரர்கள் செயற்படவில்லை.

பாகிஸ்தான் துடுப்பாட்டத்தில் மட்டும் தவறுவிடவில்லை ; அவர்கள் களத்தடுப்பில் ஈடுபட்ட நேரம் ஹஷிம் அம்லாவின் இலகுவான பிடியொன்று தவறவிடப்பட்டது. 7 ஓட்டங்களை அவர் பெற்றிருந்த நேரம் விடப்பட்ட அந்தப் பிடி போட்டியையும் சேர்த்து தாரை வார்த்தது.

அம்லாவின் 81 ஓட்டங்கள் இட்ட அடித்தளம் தென் ஆபிரிக்கா பெற்ற ஓட்ட எண்ணிக்கையை உறுதிப்படுத்தியது.

ஆடுகளத்தின் தன்மைக்கு இந்த ஓட்ட எண்ணிக்கை போதும் என பாகிஸ்தானின் துடுப்பாட்டத்தின் போதே தெரிய வந்தது

இப்போது பாகிஸ்தான் அணியின் வாய்ப்புக்கள் பெரியளவில் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அடுத்து பாவம் மிஸ்பாவின் பதவி பறிபோகும் போலவே தெரிகிறது.
மூழ்கும் கப்பலைக் கரைசேர்க்கப் போராடும் அணித் தலைவராகத் தெரியும் மிஸ்பாவுக்கு வயதும் ஏறுவது அணிக்கும் அவருக்கும் சேர்த்தே பாதிப்பைத் தரப்போகிறது.


தென் ஆபிரிக்காவைப் பொறுத்தவரை மொறிஸின் அறிமுகம் அவர்களுக்குப் பெரிய வரம்.
ஆனால் ரன் அவுட் மூலமான ஆட்டமிழப்புக்களை தென் ஆபிரிக்கா குறைத்துக்கொள்ளும் வழிமுறைகளைப் பார்க்கவேண்டும்.

இந்த வெற்றி இழந்து கிடந்த நம்பிக்கையை மீண்டும் தென் ஆபிரிக்காவுக்கு வழங்கி இருக்கிறது.

இறுதியாக மேற்கிந்தியத் தீவுகளை சந்திக்கும் நேரம் ஸ்டெய்னின் வருகையும் மேலும் பலத்தைக் கொடுக்கும்.

-----------------

IPL அணிகள் மோதும் போட்டி இன்று...

முதன் முதலில் அரையிறுதிக்குச் செல்லப் போகும் அணி எது என்பதைத் தீர்மானிக்கும் முக்கியமான ஆட்டம் இன்று.
இந்திய அணிக்கு வாய்ப்புக்கள் அதிகமாக இருந்தாலும் மேற்கிந்தியத் தீவுகளின் IPL வீரர்கள் (குறிப்பாக கெய்ல் & பொல்லார்ட்) இந்தியப் பந்துவீச்சாளர்களை நன்கு அறிந்தவர்கள் என்பதால் அது மேற்கிந்தியத் தீவுகளுக்கு சாதகமாக அமையக்கூடும்.

இரு பக்கத் தலைவர்களும் சென்னை சுப்பர் கிங்க்ஸ் அணியின் வீரர்கள். (ஸ்ரீநிவாசனுக்கு இந்த விடயம் மட்டுமாவது ஆறுதல் அளிக்கட்டும்)

இந்தியப் பந்துவீச்சாளர்கள் நம்பிக்கையளிப்பதாகத் தெரியவில்லை.

மேற்கிந்தியத் தீவுகளின் வேகப்பந்துவீச்சும் இந்திய வீரர்களைத் தொல்லைப் படுத்தலாம்.

ஆனால் தவான், கொஹ்லி & தோனி ஆகிய மூவரையும் இந்தியா நம்பியிருக்கலாம்.

மிஸ்பாவின் பிடியில் கோல்மால் செய்யப் பார்த்த மேற்கிந்தியத் தீவுகளின் விக்கெட் காப்பாளர் ரம்டின்  அதற்கான தண்டனையாக ஊதியத் தொகையை இழந்திருப்பதோடு, இன்றைய போட்டியிலும் இன்னொரு போட்டியிலும் பங்குபற்றுவதிலிருந்து தடை செய்யப்படுள்ளார்.

அவருக்குப் பதிலாக உள்ளூர்ப் போட்டிகளில் விக்கெட் காப்பில் ஈடுபடும் ஜோனதன் சார்ள்ஸ் விக்கெட் காப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

இன்னொரு சுவாரஸ்யம் என்னவென்றால் இவ்விரு அணிகளும் இறுதியாக இங்கிலாந்தில் ஒரு ஒருநாள் போட்டியில் சந்தித்தது 30 ஆண்டுகளுக்கு முதல் ஆமாம், 1983 உலகக் கிண்ண இறுதிப்போட்டியில்...

அப்போது மேற்கிந்தியத் தீவுகள் நடப்பு உலக சம்பியன். இந்தியா மன்னர்களை வீழ்த்திப் புது மகுடம் சூடியது.

இப்போது இந்தியா ஒரு நாள் போட்டிகளின் உலக சம்பியன். மேற்கிந்தியத் தீவுகள் Twenty 20 போட்டிகளின் உலக சம்பியன்.

சுவாரஸ்யமான போட்டியை ரசிக்கலாம்.

1 comment:

olikkeetru said...

அண்ணா நான் போட்டிகளை ரசிப்பதை விட உங்கள் இடுகைகளையே ரசிக்கின்றேன் ................. எப்படி உங்களால் மட்டும் முடிகிறது .............. சுவாரஸ்யம் .....மிக்க நன்றி ..

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner