June 13, 2013

ஏழாவது போட்டியும், ஆஸ்திரேலியாவுக்கு வந்த ஏழரைச் சனியும் - ICC Champions Trophy - Game 7

ஆறு போட்டிகளாக வருவதும் போவதுமாக விளையாட்டுக் காட்டிக்கொண்டிருந்த இங்கிலாந்து மழை, நேற்றைய ஏழாவது​ போட்டியில் வந்தே விட்டது.

அதுவும், ஏற்கெனவே ஏழரைச் சனியனின் உச்ச பட்ச பார்வையில் இருந்துகொண்டிருக்கும் ஆஸ்திரேலிய அணியின் போட்டியிலே, அந்த அணி கொஞ்சம் ஆதிக்கம் செலுத்த ஆரம்பிக்கும் நேரம் பார்த்து.

உபாதை காரணமாகத் தொடர்ச்சியான இரண்டாவது போட்டியிலும் தங்கள் தலைவர் கிளார்க் இல்லாமல், எதிரணி வீரரின் முகத்தில் விட்ட குத்தினால் போட்டித்தடையைப் பரிசாகப் பெற்ற டேவிட் வோர்னர் இல்லாமல் அரை குறை அணியாக நேற்று களமிறங்கிய அணி, துடுப்பாட்டத்தில் ஒரு கட்டத்தில் தத்தளித்தது.

இதற்கு முதல் சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகள் நான்கிலும் நியூ சீலாந்தைத் தோற்கடித்திருந்த ஆஸ்திரேலியா, நேற்று தோற்றுவிடுமோ என்ற நிலையிருந்தது.

அணித்தலைவர் ஜோர்ஜ் பெய்லியின் பொறுமையான அரைச் சதமும், (நான் எதிர்பார்த்திருந்த) அடம் வோஜசின் அபாரமான 71 ஓட்டங்களும், அதன் பின் கடைசி ஓவர்களில் அடித்தாடிய IPL இன் அதிர்ஷ்டக்கார மில்லியன் டொலர் மனிதன் மக்ஸ்வெல்லின் வேகமான ஓட்டங்களும் அணியைக் கொஞ்சம் திடப்படுத்தி, 243 என்ற ஓட்ட எண்ணிக்கையை அடையக் கூடியதாக இருந்தது.
ஆச்சரியப்படுத்தும் விதமாக இந்த மைதானத்தில் முதலில் துடுப்பெடுத்தாடும் அணிகளின் சராசரி ஓட்ட எண்ணிக்கையும் அச்சொட்டாக இதுவே.

தொடர்ச்சியாக சதங்கள்  பெற்று formஇல் இருக்கும் கப்டில்  மற்றும் ஓட்டங்களைப்  பெற்று வரும் இதர நியூ சீலாந்து அணி வீரர்களின் முன்னால் இந்த இலக்கு பெரிதல்ல என்றே தோன்றியது.
ஆனால் கப்டில்லையும் ரொங்கியையும் விரைவாகவே மக்காய் அனுப்பி வைக்க, ஆஸ்திரேலியா வென்றுவிடுமோ என்ற நிலையில் தான் மழை வந்தது.

வந்த மழை முக்கியமான ஒரு புள்ளியையும் அள்ளிச் சென்றுவிட்டது.
சிலவேளை அது நியூ சீலாந்தின் ஒரு புள்ளியாகவும் இருக்கலாம். நேற்று வென்றிருந்தால் நியூ சீலாந்து அரையிறுதிக்குள் நுழைந்திருக்கும்.

ஆஸ்திரேலியாவுக்கு நேற்று ஒரு புள்ளி கிடைத்தாலும், அடுத்த போட்டியில் இலங்கை அணியை அது வெல்லவேண்டி இருப்பதோடு, மற்ற அணிகளிலும் தங்கியிருக்கவேண்டி இருக்கும்.

​இங்கிலாந்தும் நியூ சீலாந்தும் தங்கள் அடுத்த போட்டிகளை வென்றால் ஆஸ்திரேலியா அவுட்.
இப்போதிருக்கும் நிலையில் இலங்கையை வெல்வதும் பெரும்பாடு தான்.


நியூ சீலாந்தின் மிட்செல் மக்னலெகன் நேற்றும் நான்கு விக்கெட்டுக்களைப் பெற்றுக்கொண்டார்.
இத்தொடரில் இதுவரை கூடுதல் விக்கெட்டுக்களை (8) வீழ்த்தியவரும் இவரே.


இவரது இடது கை வேகப்பந்துவீச்சு மிக அபாரமாக இருக்கிறது. சாதுரியமாகவும் இதே வேளை தேவையானவேளையில் விக்கெட்டுக்களை  பந்துவீசுகிறார்.
உபாதைகளின் மத்தியிலும் விட்டுக்கொடுக்காமல் ஓட்டங்களைக் கட்டுப்படுத்திப் பந்துவீசும் வெட்டோரியும் பாராட்டுக்குரியவரே.

ஆஸ்திரேலிய அணியிடம் முன்னைய சம்பியன்களான ஆஸ்திரேலிய அணியிடம் இருந்த குணாம்சங்களில் இல்லாமல் இருப்பது, வெற்றி பெறவேண்டும் என்ற வெறியும், கட்டுப்பாடான ஆக்ரோஷமும்.
இதனால் தான் மைதானத்துக்குள் காட்ட வேண்டிய வெறியை வோர்னர் போல வெளியே காட்டுகிறார்கள் போலும்.

மொத்தத்தில் ஆஸ்திரேலிய அணியின் Hat trick வாய்ப்புக் கிட்டத்தட்ட பறிபோயிருக்கிறது.
இதுவரை சாம்பியன்ஸ் கிண்ணம் வெல்லாத அணிகளில் ஒன்றான பாகிஸ்தானுக்கும் இனிமேலும் இந்த வாய்ப்பில்லை.

----

இலங்கை அணிக்கு இன்று இதே போன்ற ஒரு வாழ்வா சாவா சிக்கல் நிலை.
இங்கிலாந்துக்கு எதிராக இன்று இடம்பெறும் பகலிரவுப் போட்டியில் வென்றாலேயே இத்தொடரில் தொடர்ந்தும் முன்னேற வாய்ப்பிருக்கும்.

முதலாவது போட்டியில் நியூ சீலாந்து அணியோடு கடுமையாகப் போராடி மிக நெருக்கமாக ஒரேயொரு விக்கெட்டால் தோற்றுப் போனாலும், தோல்வி தோல்வி தானே? இதனால் இன்றும் தோற்றால் வெளியே தான்.

இங்கிலாந்து இப்போது இருக்கும் formஇலும் இலங்கை அணி இருக்கின்ற தடுமாற்றத்திலும் இங்கிலாந்தின் அரையிறுதி வாய்ப்பு உறுதி போலத் தென்பட்டாலும், நியூ சீலாந்துக்கு எதிராக இலங்கை காட்டிய இறுதிக்கட்டப் போராட்டம் சில தன்னம்பிக்கை விட்டமின்களை இலங்கை அணி வீரர்களுக்கு வழங்கி இருக்கும் என நம்பலாம்.

இன்று மனம் ஏனோ மஹேல, சங்காவை எதிர்பார்க்கச் சொல்லிச் சொல்கிறது. அத்துடன் குசல் ஜனித் பெரேரா, சந்திமால், திரிமன்னே ஆகியோரும் இன்று சிறப்பாகத் துடுப்பெடுத்தாடுவது இலங்கை அணியின் எதிர்காலத்துக்கு நல்லது.

அதுபோல இலங்கையின் சுழல் பந்துவீச்சாளர்களும், மாலிங்கவும் இங்கிலாந்துக்கு சவாலாக இருப்பார்கள் என்பது என் நம்பிக்கை.
மறுபக்கம் இலங்கையின் அனுபவத் துடுப்பாட்ட வீரர்கள் கை கொடுத்தால் இங்கிலாந்தின் துல்லிய வேகப்பந்துவீச்சைத் தூளாக்கலாம்.

இல்லையேல், இதற்கு முதல் சம்பியன்ஸ் கிண்ண மோதல்கள் இரண்டிலுமே இலங்கை இங்கிலாந்திடம் தோற்றது இன்றுடன் மூன்றாக மாறும்.
மத்தியூசின் தலைமைப் பதவியும் வேறு ஒருவருக்கு மாறும்.


1 comment:

சிந்தனை களம் said...

nice அருமை
www.usetamil.com

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner