June 08, 2013

இறுக்கமான போட்டியில் வெல்ல இன்னும் சில ஓட்டங்கள் இருந்திருக்கலாம் + மிஸ்டர்.அன்லக்கி மிஸ்பா - ICC Champions Trophy Game 2

சம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் முதலாவது போட்டி அதிக ஓட்டங்கள் குவிக்கப்பட்ட போட்டியாக இருக்க, நேற்று நடந்த போட்டி குறைவான ஓட்டங்களை இரு அணிகளும் பெற்று வெற்றிக்காக இழுபறிப்பட்ட போட்டியாக அமைந்தது.

ஒரு நாள் போட்டிகளுக்கான தோதான, தரமான, சமயோசிதமான பந்துவீச்சாளர்கள் நிறைந்த இரு அணிகளும் விளையாடிய போட்டி என்பதால் துடுப்பாட்ட வீரர்களுக்கு இத்தகைய சவால் இருக்கும் என்பது அனைவருக்குமே தெரிந்திருந்தது.

பாகிஸ்தான் அணியின் வயது முதிர்ந்த தலைவர் மிஸ்பா உல் ஹக்கின் தனித்த போராட்டத்துக்கு நசீர் ஜாம்ஷெட் தவிர இன்னொரு துணையும் இருந்து, இன்னொரு 10,15 ஓட்டங்கள் பெற்றிருந்தால், இந்தியா போலவே பாகிஸ்தானும் வென்றிருக்கும்.

ஆனால் 171 என்ற இலக்கு இந்த நாட்களில் ஒரு நாள் போட்டிகளில் துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமான power play போன்றவற்றோடு சவாலாக இருப்பதில்லை.

பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் தங்கள் துடுப்பாட்ட வீரர்கள் விட்ட தவறுகளை எல்லாம் துல்லியமான பந்துவீச்சின் மூலமாக ஈடுகட்ட முனைந்தாலும் கூட, எட்டு விக்கெட்டுக்கள் போன பிறகும் மேற்கிந்தியத் தீவுகளால் வெற்றி இலக்கு அடையப்பட்டது.

நாணய சுழற்சியின் வெற்றியின் பின்னர் ஆடுகளத்தின் ஆரம்ப சாதகத் தன்மையினை மிகச் சிறப்பாகப் பயன்படுத்தியிருந்த கமர் ரோச்  உடைத்துப்போட்ட ஆரம்ப விக்கெட்டுக்கள் பாகிஸ்தானை தடுமாற வைத்திருந்தது.

மிஸ்பா - ஜாம்ஷெட் இணைப்பாட்டம் கொஞ்சம் அணியின் துடுப்பாட்டத்தைத் திடப்படுத்தினாலும் மீண்டும் சுனில் நரேன் மூலம் மேலும் சில விக்கெட்டுக்கள் மளமளவென சரிந்தன.

தனியாக நின்று போராடிய மிஸ்பா உல் ஹக் ஆட்டமிழக்காமல் 96 ஓட்டங்களோடு தனியாக இறுதியில் நின்றார்.

கடைசித் துடுப்பாட்ட வீரர் மொஹம்மத் இர்பானுடன் மிஸ்பா ஆடியவேளை அவரது பொறுப்பும், அதிரடியும் , கடைசியாக இர்பான் ஆட்டமிழந்தபோது மிஸ்பாவின் முகம் காட்டிய "எல்லாரும் கை விட்டிட்டீங்களேடா" என்ற ஆதங்கப் பாவனையும் ஒவ்வொரு கவிதைகள்.

மிஸ்டர்.அன்லக்கி.

மிஸ்பா ஓட்டமெதுவும் பெறாமல் இருந்தவேளை தினேஷ் ரம்டின் தவறவிட்ட அவரது பிடி 96 ஓட்டங்களையும் மேலதிக இணைப்பாட்ட ஓட்டங்களையும் வழங்கியிருந்தது.

ஆனால் தவறவிட்டுத் தரையில் தேய்த்துப் பிடித்த பந்தை ஆட்டமிழப்பாக ரம்டின் நடுவரிடம் கூறியதையும், மீள் பரிசீலனையின் பின்னர் மிஸ்பாவுக்கு மீண்டும் ஒரு வாய்ப்புக் கிடைத்ததும் முக்கியமானவை.

வழமையாக டிராவிட் பாணியில் அமைதி காக்கும் மிஸ்பா ரம்டினின் இந்த நடத்தை பற்றி கண்டித்ததும் முக்கியமானது.

நரேனின் மூன்று விக்கெட்டுக்களை விட, ரோச்சின் மூன்று விக்கெட்டுக்களின் பெறுமதியும் அவரது பந்துவீச்சுப் பெறுதியும் (10-4-28-3) வியந்து பாராட்டக் கூடியவை.

மிகப் பொருத்தமாக ரோச்சின் துடுப்பு மூலம் கிடைத்த நான்கு ஓட்டங்களுடனேயே மேற்கிந்தியத் தீவுகளுக்கு வெற்றி கிடைத்தும் குறிப்பிடக் கூடியது.


மேற்கிந்தியத் தீவுகளின் துடுப்பாட்டத்தின் போது IPL புகழ் கெயில், பொல்லார்ட் ஆகியோரோடு Big Bash League புகழ் சாமுவேல்ஸ் ஆகிய மூவரும் பெற்ற முப்பதுகள் சராசரியாக வெற்றி இலக்கை அடைய உதவியிருந்தன.
ஆனால் உயர்ந்த மனிதன் இர்பானின் மூன்று விக்கெட்டுக்கள் இடையிடையே ப்ரேக் அடித்தன.

அதைவிட பயமுறுத்துகின்ற பவுன்சர்கள் வீசிய வஹாப் ரியாஸின் பந்துவீச்சு கெயிலைக் கூடக் கொஞ்சம் தடுமாற வைத்தது.
ஒற்றை இலக்க ஓட்டங்கள் பெற்ற பாகிஸ்தானியத் துடுப்பாட்ட வீரர்களை (?) நொந்துகொள்ள வேண்டியது தான்.

புதிய ஒரு நாள் அணித் தலைவர் ட்வேய்ன் ப்ராவோவின் தலைமையில் முதல் வெற்றி கிடைத்த மகிழ்ச்சி மேற்கிந்தியத் தீவுகளுக்கு இருந்தாலும், அவர்கள் மீண்டும் தங்கள் அணியின் நிலையை சரிபார்க்க வேண்டி இருக்கும்.
சிதறிக் கிடந்த மேற்கிந்தியத் தீவுகளை சேர்த்து, பணத்துக்காகவும் ஈகோவுக்காவும் வெளியேறியிருந்த குழப்படிகாரர்களை அணி வீரர்களாக்கி வெற்றிகளை வாடிக்கையாக்கி, இரு தசாப்தங்களின் பின் உலகக் கிண்ணம் (உலக T20 கிண்ணம்) ஒன்றை வென்று கொடுத்த டரன் சமி என்ற நல்ல மனிதரை தலைமைப் பதவியிலிருந்து நீக்கியிருந்தார்கள்.

இனி அடுத்த கட்டம் நோக்கி நகரவேண்டும் என்று காரணம் சொல்லப்பட்டது.
பார்த்தால் நேற்று விளையாடிய அணியிலும் அவர் இல்லை.
பாவம் சமி.

(இலங்கையில் இப்போது சாமிகள் பாவம். அது வேறு கதை)
-----------------

இன்றைய போட்டி பாரம்பரிய பரம வைரிகளுக்கிடையிலான பலப்பரீட்சை.
ஆஸ்திரேலியா எதிர் இங்கிலாந்து.

நடப்பு சாம்பியன்கள் ஆஸ்திரேலியா தங்கள் அணியின் உள்ளே இருக்கின்ற பலவீனங்களை வொட்சன், ஸ்டார்க், வோர்னர் போன்றவர்களால் மூடி மறைத்தாலும் அணித்தலைவர் கிளார்க் இன்று உபாதை காரணமாக விளையாட முடியாமல் இருப்பதும் இந்தியாவுடன் 65 ஓட்டங்களுக்கு சுருண்டதும் இம்முறை அவர்களால் மூன்றாவது தொடர்ச்சியான தடவையாகக் கிண்ணம் வெல்ல முடியாது என்பதைக் காட்டுவதாக உள்ளது.

பதில் தலைவராக இறங்கும் ஜோர்ஜ் பெய்லி மீது அவரது துடுப்பாட்டமும் சேர்ந்ததாக அழுத்தம் இருக்கும்.

பயிற்சி ஆட்டங்கள் இரண்டிலும் பூஜ்ஜியம் அடித்த வோர்னர் மீதும்.

உள்ளூர்ப் போட்டிகளில் பிரகாசித்து அணிக்குள் நுழைந்திருக்கும் அடம் வோஜஸ், ஜேம்ஸ் போல்க்னர் மீது என் எதிர்பார்ப்புக்கள் இருக்கின்றன.
வொட்சன் அடித்தால் வெல்லும்.

இங்கிலாந்து குக்கின் தலைமையில் அண்மைக்காலத்தில் எழுந்து வந்தாலும், நியூ சீலாந்துடன் கண்ட ஒருநாள் தொடர் தோல்வி பல கேள்விகளை எழுப்பி விட்டிருக்கிறது.

எனினும் நம்பகமான மத்திய வரிசையும் பந்துவீச்சும் பிரகாசமான புதியவர்கள் சிலரும் கெவின் பீட்டர்சன் இல்லாத இந்த 'புதிய' இங்கிலாந்தை - சாதகமான + பழகிய உள்நாட்டு ஆடுகளங்களில் ஆஸ்திரேலியாவை விடப் பலமானதாகக் காட்டுகிறது.

நியூ சீலாந்துக்கு எதிராக அதிரடி சாகசம் நிகழ்த்திய புதிய விக்கெட் காப்பாளர் ஜோஸ் பட்லரைக் கவனிக்கவேண்டும்.

மூன்று மணிக்கு ஆரம்பிக்கும் பிரிவு Aயின் முதலாவது போட்டி எமக்கான விடைகளைத் தரும்.

1 comment:

SURESH BABU said...

எனக்கு உங்களிடம் பிடித்த விடயம் என்னவென்றால் எவ்வளவோ வேலைப்பளுவுக்கு மத்தியிலும் எழுதுவதுடன் அதை விலாவாரியாக விளக்குவதும் தான்

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner