June 19, 2013

இலங்கை அரையிறுதியில்.. அடுத்து? - ICC Champions Trophy - League Phase

நடப்பு சம்பியனும் வெளியே.. கடந்த சம்பியன்ஸ் கிண்ணத்தொடரில் ​இறுதிப் போட்டியில்  விளையாடிய மற்ற அணியான நியூ சீலாந்தும் வெளியே.
நேற்றைய போட்டியில் இலங்கை அணியின் வெற்றி இலங்கையை அரையிறுதிக்கு அழைத்துச் செல்ல, இவ்விரு டஸ்மன் நீரிணை சகோதரர்களையும் ஒரேயடியாக இங்கிலாந்திலிருந்து வெளியே அனுப்பியுள்ளது.

இலங்கை அணி சம்பியன்ஸ் கிண்ணத் தொடரொன்றில் பங்குபற்றும் இரண்டாவது அரையிறுதிப் போட்டி இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக இலங்கையில் 2002/2003 பருவகாலத்தில் நடந்த சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் அரையிறுதியில் விளையாடிய இலங்கை அணி பின்னர் மழை குழப்பிய இறுதிப் போட்டியில் கிண்ணத்தை இந்தியாவுடன் பகிர்ந்துகொண்டிருந்தது.

இம்முறை அதே இந்திய அணியையே அரையிறுதிப் போட்டியில் சந்திக்கவுள்ளது இலங்கை.

இந்தியாவை சந்திக்காமல் தென் ஆபிரிக்காவை அரையிறுதியில் இலங்கை சந்தித்திருந்தால் நல்லா இருந்திருக்குமே (தென் ஆபிரிக்காவின் choking ராசி பொதுவாக இப்படியான அரையிறுதிகள் போன்ற Knock out சுற்றுக்களில் தான் நல்லா வேலை செய்யும்) என்று நினைத்திருந்த இலங்கை ரசிகர்களுக்கு, ஆஸ்திரேலிய அணியை இலங்கை அடக்க வேண்டிய 163 ஓட்டங்களையும் தாண்டி, இறுதியாக கடைசி விக்கெட் புரிந்த பொறுமையான இணைப்பாட்டம் கொடுத்த தலைவலி மூலம், பிச்சை வேண்டாம் நாயைப் பிடி என்று ஆகி விட்டது.

ரொம்ப நல்லவங்களான ஆஸ்திரேலிய அணி, அடைந்தால் அரையிறுதி, இல்லையேல் ஆஸ்திரேலியா எனும் நிலையில் அவர்கள் அரையிறுதி செல்வதற்குத் தேவைப்பட்ட இலக்கான 29.1 ஓவர்களில் 234 என்பதை அடைய முயற்சித்தார்கள். அது முடியாமல் போக கடைசி விக்கெட்டுக்காக ஆடிய மக்காய் & டோஹெர்ட்டி தவிர மற்றையவர்கள் Flight எடுப்பதிலேயே குறியாக இருந்தார்கள் போலும்.

தற்செயலாக கடைசி விக்கெட் இணைப்பாட்டம் மூலம் ஆஸ்திரேலியா அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருந்தால் இலங்கை வெளியே.
டில்ஷானின் அபாரப் பிடியெடுப்பு மூலமாக இலங்கை 20 ஓட்டங்களால் வென்றது.

ஆனால் நேற்றைய நாளின் நாயகன் உண்மையில் மஹேல ஜெயவர்த்தன தான்.



அவர் பெற்ற அந்த 84 ஓட்டங்களின் பெறுமதி மிகப் பெரியது.
ஆறு ஆண்டுகளுக்கு முதல் 2007ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்ற உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் அரையிறுதிப் போட்டியில் மஹேல தலைவராகத் தனித்து நின்று சதம் அடித்து, இளையவீரர் தரங்கவையும் ஊக்குவித்து, இலங்கை அணியின் ஓட்ட எண்ணிகையை 200 மட்டத்திலிருந்து 289 வரை உயர்த்துவாரே அந்த அபார ஆட்டமும்,அணியை தாங்கிச் சென்று தூக்கிவிட்ட பொறுப்பான நிதானமும் ஞாபகம் வந்தது.

மஹேல நேற்று 11000 ஒருநாள் சர்வதேச ஓட்டங்களைப் பூர்த்தி செய்த எட்டாவது வீரரானார். இலங்கை வீரர்களில் மூன்றாமவர்.

இதேவேளை நுவான் குலசேகர 150 ஒரு நாள் சர்வதேச விக்கெட்டுக்களை நேற்று எட்டியிருந்தார்.

நான் நேற்றைய இடுகையில் எதிர்பார்த்திருந்ததைப் போல, இளைய வீரர்கள் சந்திமாலும், திரிமன்னவும் முக்கியமான இணைப்பாட்டங்களில் பங்கெடுத்ததும், ஓட்டங்களைப் பெற்றதும் இலங்கைக்கு பெரிய உதவியாக அமைந்தன.

ஆனால் முன்னைய இரு போட்டிகளில் இலங்கைக்குப் பெரியளவு ஓட்டப் பங்களிப்பை வழங்கிய சங்கக்கார சறுக்கியிருந்தார்.

இலங்கை அணி போராடக் கூடிய ஓட்ட எண்ணிக்கையான 253ஐத் தான் எடுத்திருந்தது.

ஆஸ்திரேலிய அணிக்கு நிகர ஓட்ட சராசரிப் பெறுமானம் (NRR)
கொடுத்த அழுத்தமே வேகமாக ஆடப் போய், விக்கெட்டுக்களை இழந்து தோற்றுப் போகக் காரணமாக அமைந்தது.

நடப்புச் சம்பியன்களை வீழ்த்தினாலும், இனி சந்திக்கப் போகின்ற அசுர பல இந்தியாவை வீழ்த்துவதாக இருந்தால், இந்திய அணியை வெல்வதற்கு இலங்கை அணியில் உள்ள சின்னச் சின்ன ஓட்டைகளையும் சீர் செய்துகொள்ள வேண்டியிருக்கும்.

மிக முக்கியமாக அணியின் தலைவர் அஞ்சேலோ மத்தியூஸ். சகலதுறை வீரரான இவர் பந்துவீச்சு, துடுப்பாட்டம் இரண்டிலுமே பெரிதாக சோபிக்கவில்லை.
நேற்றைய போட்டியில் பெற்ற வேகமான ஓட்டங்கள் மற்றும் கைப்பற்றிய மார்ஷின் விக்கெட் ஓரளவு தன்னம்பிக்கையைக் கொடுத்திருக்கும்.

இன்னொருவர் குசல் ஜனித் பெரேரா... தனது முதலாவது தொடரிலே மிக நம்பிக்கையை ஏற்படுத்தியவர். எனினும் இத்தொடரின் முதல் மூன்று போட்டிகளிலுமே பிரகாசிக்கவில்லை.
எல்லாவற்றுக்கும் சேர்த்து மிக முக்கியமான அரையிறுதிப் போட்டியில் வெளுத்து வாங்குகிறாரா பார்க்கலாம்.

இன்று சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய பேட்டியில் இலங்கையின் தலைமைத் தேர்வாளர் சனத் ஜெயசூரிய சில விஷயங்களைத் தெளிவுபடுத்தியுள்ளார்.

இலங்கை அணியில் அரையிறுதிப் போட்டிக்காக எந்தவொரு மாற்றமும் இருக்கப் போவதில்லை.
இலங்கை அணியின் தற்போதைய தலைவர் மத்தியூஸ் மீது பூரண நம்பிக்கை இருக்கிறது.
மூத்த வீரர்களோடு மீண்டும் (!!!) சுமுக உறவு ஏற்பட்டுள்ளது.

இவை மூன்றுமே இலங்கை அணியைப் பொறுத்தவரையில் ஆரோக்கியமான விடயங்களே.

மஹேல, சங்கக்கார, டில்ஷான் ஆகிய மூவருமே இங்கிலாந்து ஆடுகளங்களில் தங்களுக்கு உள்ள அனுபவங்களை மிகச் சிறப்பாக இந்தத் தொடரில் இதுவரை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

மஹேலவின் நேற்றைய அபார ஆட்டம், சில அற்புத பிடிஎடுப்புக்கள்

சங்காவின் இரண்டு அற்புத ஆட்டங்களும், விக்கெட் காப்பும்

டில்ஷானின் சராசரியான துடுப்பாட்டம், ஆனால் அதை அபாரமாக ஈடுகட்டும் களத்தடுப்பும், தேவையான போதில் விக்கெட்டுக்களை எடுத்து இலங்கையின் வெற்றிக்கான சகலதுறை வீரராக (குலசேகரவுக்கு அடுத்தபடியாக) பிரகாசிக்கிறார்.

அதிலும் நேற்றைய கிளின்ட் மக்காயின் அபார பிடி வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதது.
முப்பதைத் தாண்டிய பராயத்திலும் வில்லாய் வளையும் உடல் ஒரு வரம் தான்.

ஆனால் இனி வரும் போட்டியில் தான் இவர்களது பங்களிப்பும் வழிகாட்டலும் மிக முக்கியமாகத் தேவைப்படுகிறது.

காரணம் இந்தியாவை அண்மைக்காலத்தில் இலங்கை ஒருநாள் போட்டிகளில் சந்திக்கும்போதெல்லாம் பதறி, சிதறிப்போகிறது.
இந்தியாவிடம் 2011 உலகக் கிண்ணத்தின்இறுதிப்போட்டியில் தோற்ற தோல்வியும், அதன் பின் சில முக்கிய போட்டிகளில் விரட்டியடிக்கப்பட்டதற்கும் பதிலடியாக இந்த அரையிறுதி அமையுமா என்ற கேள்வி எழுகிறது.

இந்த அரையிறுதிக்கான முன்னோட்டம் பின்னர் வரும்.

நேற்று இலங்கை அணி வைத்த இலக்கை விட ஆஸ்திரேலியாவுக்கு அரையிறுதிக்கு செல்வதற்கான இலக்கு நோக்கி துடுப்பெடுத்தாடும்போது இரண்டு கட்டங்களில் போட்டி ஆஸ்திரேலியாவின் பக்கம் சாயலாம் என்று சற்று நினைத்தேன்.
ஒன்று மக்ஸ்வெல்லின் அதிரடியின் போது
இரண்டு மத்தியூ வேட் வந்து சில பவுண்டரிகளை விளாசிய போது..

ஆனால் இந்த விக்கெட்டுக்களை உடைத்த பின்னர், இலங்கை வெல்கிறது என்று நினைத்த போது தான் இறுதி விக்கெட் இணைப்பாட்டம் 40க்கு மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்றது.
அதை உடைக்க டில்ஷான் வந்தார்.

இங்கிலாந்தைத் துடுப்பாட்ட வீரராகத் துவம்சம் செய்த குலா, நேற்று பந்துவீச்சாளராக ஆஸ்திரேலியாவின் மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார்.

ஆஸ்திரேலியாவுக்கு இந்தத் தோல்வி நிச்சயம் ஒரு விழிப்புணர்ச்சிக்கான எச்சரிக்கை மணி.
ஆஷஸ் நெருங்கி வரும் நிலையில் தங்கள் அணியை மீண்டும் ஒரு தடவை மீள் பரிசோதனை செய்யவேண்டும்.


ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் ஆகிய இரு எதிர்பார்ப்புகளை உருவாக்கிய அணிகளுமே எந்தவொரு வெற்றியும் இல்லாமல் வெளியேறி இருக்கின்றன.

----------------

நாளை முதலாவது அரையிறுதி.
இங்கிலாந்தும் தென் ஆபிரிக்காவும் மோதும் போட்டி சுவாரஸ்யமாக இருக்கப் போகிறது.
இரண்டு இளைய, எதிர்கால அணிகளுக்கிடையிலான போட்டி.

பந்துவீச்சுக்கள் தான் இங்கே கவனிக்கப்படவேண்டியவை.

ஸ்டெய்ன் எதிர் ரிவேர்ஸ் ஸ்விங்.

ஆனால் தென் ஆபிரிக்காவை விட இங்கிலாந்துக்கு அரையிறுதிக்கு செல்லக் கூடிய சாத்தியங்கள் அதிகமாக உள்ளதாக நான் நினைக்கிறேன்.

இங்கிலாந்து அணி இதுவரை சம்பியன்ஸ் கிண்ணத்தை வெல்லாத அணி.
கடந்த தடவை அரையிறுதியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்று வெளியேறியிருந்தது.

இதேவேளையில் அரையிறுதிக்கு வந்துள்ள நான்கு அணிகளுக்குமே பயிற்றுவிப்பாளர்கள் ஆபிரிக்கக் கண்டத்தவர்கள் என்பது மற்றொரு சுவாரஸ்யமே.

இலங்கை - போர்ட்
இந்தியா - பிளெட்சர்
தென் ஆபிரிக்கா - கரி கேர்ஸ்டன்
இங்கிலாந்து - அன்டி பிளவர்

----------------

கிரிக்கெட் விளையாட்டு என்பதைக் கடந்து அரசியலில் கலப்பதும், அரசியலைக் கண்டிப்பதும் அண்மைய காலத்திலும் தொடர்ந்துவரும் ஒரு விடயம்.

நேற்றைய லண்டன் ஓவல் போட்டிக்கு முன்னதாகவும் பின்னதாகவும் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழருக்கு எதிராக நடந்த தாக்குதல்களும் தேவையற்ற கசப்புணர்வுகளை ஏற்படுத்தியுள்ளன.

இத்தோடு நின்றுவிடாமல் வன்மமும், துவேஷமும் பெருமளவில் பெருகுவதை அந்தத் தாக்குதலின் காணொளிகளும், Youtube இல் அதற்குக் கீழே சிங்கள இனத்தவரால் எழுதப்பட்டு வரும் துவேஷக் கருத்துக்களும் பெருக்கி வருகின்றன.

இந்திய அணிக்கெதிரான அரையிறுதிப் போட்டியில் இந்நிலை மேலும் பெரிய மோதலை ஏற்படுத்தலாம் என்று அஞ்சுகிறேன்.

இது புலம்பெயர்ந்து வாழும் எம்மவருக்கு மேலும் அவப்பெயரையும் அசௌகரியத்தையும் ஏற்படுத்தலாம்.


3 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//தென் ஆபிரிக்காவின் choking ராசி பொதுவாக இப்படியான அரையிறுதிகள் போன்ற Knock out சுற்றுக்களில் தான் நல்லா வேலை செய்யும்)//

மழை, டக்வொர்த் விதி மூலமே மே. இ. அணீயை துரத்தி தெ. ஆ. உள்ளே நுழைந்துள்ளது கவனிக்க வேண்டியது.

K. Sethu | கா. சேது said...

இதுவரை வந்துகொண்டிருக்கும் வானிலை எதிர்வுகூறல்கள் தவறாகிவிடும் என நம்புவோம் ;) :
http://www.metoffice.gov.uk/public/weather/forecast/cardiff#?tab=fiveDay&fcTime=1371668400
http://www.weather.com/weather/tomorrow/UKXX0030
http://www.bbc.co.uk/weather/2653822
http://www.metcheck.com/UK/today.asp?zipcode=Cardiff#.UcEI0_EhGb4

Anonymous said...

இனவாதம் பேசுவது சிங்களத்தின் வாடிக்கை.. நம்மிடம் அடிவாங்கும் போது எல்லா நாடுகளுக்கும் போய் பிச்சை எடுக்கும்.. இந்தியாவின் காலில் விழுந்து மண்டியிடும்.. இப்போ ஆணவத்தின் உச்சத்தில் ஆடுது சிங்களம்.. வெகுவிரைவில் அடிவாங்கும் போது தெரியும்.. அப்போது இப்போ சிங்களத்துக்கு ஆதரவாக செயற்படும் சில தமிழ் அடிவருடிகளும் அடிவாங்குவது நிச்சயம்...

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner