June 14, 2013

சங்கா - குலா சம்ஹாரமும், அபார வெற்றியும் - ICC Champions Trophy - Game 8

சில போட்டிகளை தூக்கம் விழித்திருந்து பார்த்து முடிகிற நேரம், இதுக்குப் போய் ஏன்டா இவ்வளவு நேரம் விழித்திருந்தோம் என்று எண்ணத் தோன்றும்..
அடுத்தநாள் முழுக்க அலுவலகத்தில் தூங்கி வழிகிற நேரம் எல்லாம் எங்களிலேயே எரிச்சல் வரும்.

தூக்கம் கண்ணைச் சுழற்றும் நேரம், உடலும் களைத்திருந்து கட்டாயம் பார்த்தேயாகவேண்டும் என்றிருக்கும் போட்டிகளைப் பார்க்காமலே தூங்கிவிட்டு, அடுத்த நாள் முடிவைப் பார்த்து 'அடடா இந்தப் போட்டியை அல்லவா  கட்டாயம் பார்த்திருக்கவேண்டும்?"​ என்று அடுத்த நாள் முழுக்க ஏக்கமாக இருக்கும்.

அதிலும் காண்பவர் எல்லாம் "நேற்று போட்டி பார்த்தியா? என்ன அடி மச்சான்" என்று கேட்டுக் கடுப்பாக்குவதும், அதிலும் நாம் பார்க்கவில்லை என்று தெரிந்தால் மேலும் எக்கச்சக்க எக்ஸ்ட்ரா பிட்டுக்களை சேர்ப்பதும் கிரிக்கெட் வெறியனான எனக்கு சிலவேளை நடப்பது தான்.

நேற்றைய போட்டியில் இங்கிலாந்து இரண்டு விக்கெட் இழப்புக்கு 200 ஓட்டங்களை அண்மித்த வேளையில், இந்தப் பொறுமையான ஆட்டமும், கையில் இருந்த விக்கெட்டுக்களும் இதற்கு முந்தைய போட்டிகளில் இதே பாணியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அணிகள் குவித்த ஓட்டங்களும், சரி இலங்கையின் கதை அவ்வளவு தான் என்று எண்ண வைத்திருந்தன.

ஜோனதன் ட்ரோட், ஜோ ரூட் ஆகியோரையும் இன்னும் சில விக்கெட்டுக்களையும் இலங்கை அடுத்தடுத்துப் பிடுங்கிய பிறகும், கடைசி ஓவர்களில் 63 ஓட்டங்கள் குவிக்கப்பட்டன. அதிலும் ரவி போபரா எரங்கவின் கடைசி ஓவரில் தாறுமாறாக அடித்து நொறுக்கிய 28 ஓட்டங்கள் என்னை இப்படி tweet போடவைத்தன...

இங்கிலாந்தின் மிகச் சிறந்த ஒரு நாள் Finisher ஆக மாறி வருகிறார் போபரா.
இங்கிலாந்துக்கு இதுவரை ஒருநாள் போட்டிகளில் இல்லாமல் இருந்த சில முக்கிய ஆயுதங்கள் இப்போது வசப்பட்டிருக்கின்றன.


ட்ரோட் என்ற நம்பகமான வீரர் (தென் ஆபிரிக்காவின் கலிஸின் பல இயல்புகளை இவரிடம் காண்கிறேன்... நேற்றும் கூட அபாரமாக ஆடியிருந்தார்), மத்திய ஓவர்களில் வேகமாக ஓட்டங்கள் சேர்க்கக் கூடிய ரூட், கடைசியில் அதிரடியாக ஆடக் கூடிய போபரா மற்றும் பட்லர்.
(ஆனால் ஜோஸ் பட்லருக்கு - பட்லர் எதிர் மாலிங்க - இங்கிலாந்து ஊடகங்கள் கொடுத்த பில்ட் அப்புக்கு நேற்று பூஜ்ஜியத்தில் அவர் ஆட்டமிழந்தது பரிதாபம்)
இவர்களோடு குக் - பெல்- பீட்டர்சன்னும் இணைய உலகத்தின் மிகச் சிறந்த துடுப்பாட்ட வரிசைகளில் ஒன்றாக மாறும்.


நேற்று எனது இடுகையில் ஒரு விடயத்தைக் குறிப்பிடிட்டிருந்தேன்.

இன்று மனம் ஏனோ மஹேலசங்காவை எதிர்பார்க்கச் சொல்லிச் சொல்கிறது. அத்துடன் குசல் ஜனித் பெரேரா, சந்திமால், திரிமன்னே ஆகியோரும் இன்று சிறப்பாகத் துடுப்பெடுத்தாடுவது இலங்கை அணியின் எதிர்காலத்துக்கு நல்லது

மறுபக்கம் இலங்கையின் அனுபவத் துடுப்பாட்ட வீரர்கள் கை கொடுத்தால் இங்கிலாந்தின் துல்லிய வேகப்பந்துவீச்சைத் தூளாக்கலாம்.

ஓவல் மைதானத்தைப் பொறுத்தவரை இலங்கை பல மறக்க முடியாத தருணங்களை, குறிப்பாக வெற்றித் தருணங்களை இங்கே கண்டிருக்கிறது.
எனவே அனுபவம் வாய்ந்த வீரர்களின் பங்களிப்பு இருந்தால் மட்டுமே இங்கே வெற்றி சாத்தியம் என்று எண்ணியிருந்தேன்.

சங்கா சதம் & மஹேல அவரோடு சேர்ந்து வழங்கிய இணைப்பாட்டத்துடன் அருமையாக ஆடி 43 பந்துகளில் 42 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டார்.

அந்த இணைப்பாட்டத்தின் இடையில் தான் தூங்கிவிட்டேன்.
அந்த நேரம் நினைத்தேன் இவர்களிருவரும் 40 ஓவர் வரை நின்றால் இலங்கை வெல்லக் கூடியதாக இருக்கும் என்று.
விடிகாலை எழும்பும்போதே ஸ்கோரை பார்த்தால் நம்ப முடியவில்லை.

அதிலும் குலசேகர!!!


Power Play நேரம் அனுப்பப்பட்ட குலா சங்காவுடன் சேர்ந்து பெற்ற வேகமான அதிரடி இணைப்பாட்டம் இந்த வெற்றியை இலங்கைக்கு இலகுவாகப் பெற்றுத் தந்துள்ளது.
மத்தியூஸ் தலைவராக எடுத்த வெகு சில நல்ல முடிவுகளில் இதை சிறப்பானது என்பேன்.

சங்கக்கார ஒரு பக்கம் உறுதியாக நிற்க, மறுப்பக்கம் அதிரடியாக ஆடி அழுத்தத்தையும் குறைத்து, பந்துகள் பல மீத மிருக்க இந்த பெரிய ஓட்ட எண்ணிக்கையை அடைவதை இலகுபடுத்தினார். 38 பந்துகளில் 58. 3 ஆறு ஓட்டங்கள் & 5 நான்கு ஓட்டங்கள்.

இன்று கட்டாயம் Highlights பார்த்தேயாக வேண்டும்.

அதிலும் அடித்து ஆட அனுப்பப்பட்ட குலே ஒரு கட்டத்தில் சங்காவை விட அதிகப்படியான பந்துகளை எதிர்கொண்டு இணைப்பாட்டத்திலும் ஆதிக்கம் செலுத்தியிருந்தார்.

இணைப்பாட்டம் 72 பந்துகளில் 110 ஓட்டங்கள்.
குலசேகர 38 பந்துகளில் 58.

இதையெல்லாம் விட சங்காவுக்காக ஒரு சிக்கலான தருணத்தில் தனது விக்கெட்டைத் தியாகம் செய்ய குலசேகர எடுத்த முயற்சி பாராட்டுக்களையும் தாண்டியது.
இதோ அந்தக் காணொளி...


இப்படிப்பட்ட அர்ப்பணிப்பும், அணிக்காக சிந்திக்கின்ற மனதும் தான் ஒவ்வொரு அணிக்கும் அடிப்படையானவை.

சங்கக்கார நேற்று பெற்றது அவரது 15வது ஒரு நாள் சதம். இங்கிலாந்துக்கெதிராகப் பெற்ற முதலாவது சதம்.
ஓவல் மைதானத்தில் துரத்திப் பெறப்பட்ட இரண்டாவது பெரிய ஓட்ட எண்ணிக்கை இதுவாகும்.



நேற்றைய வெற்றியுடன் இவ்விரு அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் போட்டிகளில் இலங்கை 25வது வெற்றியைப் பதிவு செய்தது. இங்கிலாந்து 26 போட்டிகளில் வென்றுள்ளது.
ஆச்சரியமாக இவ்விரு அணிகளின் எந்தப் போட்டியும் மழையினால் குழம்பவில்லை.

இங்கிலாந்து பெரிதும்  போனது அவர்களது பந்துவீச்சின்போது பந்து பெரிதாக ஸ்விங் ஆகாததும், பந்து ரிவேர்ஸ் ஸ்விங் ஆக ஆரம்பிக்கும் நேரம் நடுவர்கள் பந்தை மாற்றியதும்.
ஆனால் இலங்கை வேன்றேயாகவேண்டும் என்று இருந்த போட்டி இது. வென்றார்கள்.
இதனால் இப்போது A பிரிவில் ஆஸ்திரேலியா உட்பட நான்கு அணிகளுக்குமே அரையிறுதி வாய்ப்புக்கள் இருக்கின்றன.
 ஒரு கட்டம் தான்.

இந்தப் பெரிய வெற்றியானது இலங்கை வீரர்களுக்கு என்றுமில்லாத உற்சாகத்தைத் தந்திருக்கும் என்பதில் ஐயம் இல்லை.
ஆனால் மீண்டும் இலங்கை தன்  அணிக்கட்டமைப்பை சரி பார்த்துக்கொள்ள வேண்டும். அடுத்த போட்டியும் இலங்கையைப் பொருத்தவரை இன்னொரு வாழ்வா சாவா போராட்டம் தான்.

---------

இன்று தென் ஆபிரிக்கா மேற்கிந்தியத் தீவுகள் மோதும் போட்டி...

இரண்டு அணிகளில்  அரையிறுதி செல்லக் கூடிய வாய்ப்பு இருக்கிறது என்பதால் இது கிட்டத்தட்ட ஒரு கால்  போட்டியாகத் தான் அமைகிறது.
நேரடியாக ஒரு Knockout.

வழமையாகவே முக்கியமான போட்டிகளில் சொதப்புகின்ற தென் ஆபிரிக்காவுக்கு ஒரு பலப் பரீட்சை.
அதே போல முதல் இரு போட்டிகளிலும் ரசிக்கும் அளவுக்குப் பிரகாசித்த மேற்கிந்தியத் தீவுகள் அணியும் கவனிக்கக் கூடிய அணியே.

டேல் ஸ்டெய்ன் மீண்டும் அணிக்குத் திரும்புவது தென் ஆபிரிக்காவுக்குப் பெரும் பலத்தைக் கூட்டும்.
IPLக்குப் பிறகு மீண்டும் ஒரு கெயில்-ஸ்டெய்ன் மோதல்...

இவ்விரு அணிகளின் வெற்றிகளைத் தீர்மானிக்கும் இருவராக இவ்விருவரும் இருப்பார்கள்.
இவர்களோடு டீ வில்லியர்ஸ், பிராவோ மற்றும் சுனில் நரேனும் கவனிக்கப்படவேண்டியவர்கள்.

ஆனால் மழை இப்போதே குழப்ப ஆரம்பித்து, போட்டியைத் தாமதப்படுத்திக் கொண்டிருக்கிறது.

No comments:

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner