June 20, 2013

மீண்டும் Chokers, மீண்டும் ஒரு இலங்கை - இந்திய மோதல் & எங்களைப் பற்றி - ICC Champions Trophy - Semi Final 1

Chokers !!!
அவர்களது பயிற்றுவிப்பாளர் கரி கேர்ஸ்டனே ஒத்துக்கொண்ட பிறகு வேறு பேச்சு ஏன் ?

எவ்வளவு தான் உலகத் தரம் வாய்ந்த வீரர்கள் அணியில் இருந்தாலும், என்ன தான் பழையவற்றை மறந்துவிட்டோம்; புதிய அணியாக மாறி இருக்கிறோம் என்று உரக்க அறிக்கை விட்டாலும், 90களில் ஆரம்பித்த தென் ஆபிரிக்காவின் இந்த choking வியாதி இன்னமும்  இல்லை.

அரையிறுதி/knock out கட்டங்கள் வரை அடித்துப் பிடித்து  சூரர்களாக வந்து அதன் பின் யாருமே நம்ப முடியாத அளவுக்கு அடிவாங்கி வெளியேறுவார்கள்.

இவற்றோடு நேற்றைய அரை இறுதியில் இங்கிலாந்திடம் கண்ட படுதோல்வியும் சேர்ந்துகொள்கிறது.

நாங்கள் தான் Favorites, இந்தக் கிண்ணத்தை வென்று விடைபெற இருக்கும் எங்கள் பயிற்றுவிப்பாளர் கேர்ஸ்டனுக்கு வழங்கப்போகிறோம் என்று சாம்பியன்ஸ் கிண்ணத் தொடர் ஆரம்பிக்கும் முன்னரே பகிரங்கமாக அறிவித்தவர் அணித்தலைவர் A.B.டீ வில்லியர்ஸ்.

முன்னரே தங்கள் அனுபவ வீரர்களை இழந்த தென் ஆபிரிக்காவுக்கு மோர்கல், ஸ்டெய்னின் உபாதைகளும் துரதிர்ஷ்டங்களாக அமைந்தன.

ஆனால் நேற்று இங்கிலாந்து அணியை, அவர்களது சொந்த மைதானத்தில் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவையும் தாண்டி வீழ்த்துவதற்கு ஸ்டெய்ன் மட்டுமல்லாமல், மனவுறுதியும் அதிகமாகத் தேவைப்பட்டது.

ஆனால் போட்டியின் முதலாவது ஓவரிலிருந்து இங்கிலாந்து தென் ஆபிரிக்காவை உருட்டி, ஒதுக்கி ஓரமாகத் தள்ளியிருந்தது.
ஐந்தாவது பந்தில் வீழ்த்தப்பட்ட முதல் விக்கெட் முதல் இங்கிலாந்தின் ஆதிக்கம் தான்.
9வது விக்கெட்டுக்காக மில்லரும், க்ளைன்வெல்ட்டும் 95 ஓட்டங்களைப் பகிர்ந்ததைத் தவிர போட்டி முழுக்க இங்கிலாந்து மயம்.

அன்டர்சன், ப்ரோட் ஆகியோரின் துல்லியமான வேகப் பந்துவீச்சு ஒரு பக்கம், ட்ரெட்வெல்லின் பழைய பாரம்பரியப் பாணியிலான off spin சுழல் மறுபக்கம் என்று தென் ஆபிரிக்காவை சுற்றிவிட, தாங்களாகவும் தேவையற்ற அசட்டுத்தனமான அடிப் பிரயோகங்களுக்குப் போய் ஆட்டமிழந்தார்கள்.

அன்டர்சன் சிறப்பாகப் பந்துவீசும்போது அவரை விட உலகின் சிறந்த பந்துவீச்சாளரைக் காணவே முடியாது. வேகப்பந்துவீச்சின் அத்தனை அம்சங்களையும் உள்ளடக்கியதாக ஒரு வலது கை வசீம் அக்ரம் ஆகத் தெரிவார்.

ட்ரெட்வெல், ஸ்வானுக்கு ஒரு சரியான சவாலாக வரப் போகிறார். பந்துகளை இறக்குகிற இடங்களும், பெரியதாக அலட்டிக்கொள்ளாமல் பந்தை சுழற்றிவிடுகிற விதமும் ரசிக்கக் கூடியவை.
நேற்று தென் ஆபிரிக்காவின் மத்தியவரிசையை சும்மா ஆட்டம் காண வைத்திருந்தார்.


துடுப்பாட்ட இலக்கு இலகுவானதாகத் தெரிந்த பிறகு இங்கிலாந்துத் துடுப்பாட்ட வீரர்களை இந்தத் தென் ஆபிரிக்கப் பந்துவீச்சு வரிசையால் எதுவித அழுத்தத்துக்கும் உள்ளாக்க முடியவில்லை.
 
நியூ சீலாந்து அணிக்கெதிராக விட்ட குறையைத் தொடர்ந்து முடித்து வைத்து, இலகுவான வெற்றியை எதுவித தடுமாற்றமும் இல்லாமல் அடைய வைத்தார்கள் ஜொனதன் ட்ரோட்டும், ஜோ ரூட்டும்.

இது இங்கிலாந்தின் இரண்டாவது சம்பியன்ஸ் இறுதிப்போட்டி.
2004ஆம் ஆண்டும் இங்கிலாந்திலே சாம்பியன்ஸ் கிண்ணம் இடம்பெற்றபோது, இங்கிலாந்து இறுதிப் போட்டிக்கு வந்தது. 
ஆனால மேற்கிந்தியத் தீவுகளின் கடைநிலை ஆட்டக்காரர்களின் அபார போராட்டத்தினால் கிண்ணத்தை இழந்தது.

இம்முறை குக்கின் தலைமையில் நம்பிக்கையான & திறமையான அணி யாரை சந்திக்கப் போகிறது?
எந்த அணியை சந்தித்தாலும் சவாலைக் கொடுக்கும் என்பது உறுதி.

-----------

அரையிறுதி 2 - இலங்கை எதிர் இந்தியா 

இந்த இரு அணிகளும் எத்தனை தடவை தங்களுக்குள் மோதி இருக்கின்றன.
எங்கேயாவது ஒரு இடைவெளி கிடைத்தால் உடனே ஒரு ஒருநாள் தொடர்...

இருமினால் தும்மினால் கூட இலங்கை - இந்திய ஒருநாள் போட்டி தான்.

2007ஆம் ஆண்டின் முதல் இவ்விரு அணிகளும் 49 தடவை ஒருநாள் போட்டிகளில் சந்தித்திருக்கின்றன.
(இலங்கை - 17 வெற்றி & இந்தியா - 28 வெற்றி)

இது ஆறு ஆண்டுகளில் 50வது போட்டி.

இவ்விரு அணிகளும் விளையாடிய அண்மைக்காலப் போட்டிகளில் முக்கியமான போட்டிகளில் ஒன்றாக மாற இருக்கிறது.
2011 உலகக் கிண்ண இறுதிக்குப் பின்னர் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 'பெரிய' மோதல் இது தான்.

இதற்கு முதல் இவ்விரு அணிகளும் இறுதியாக சந்தித்த அரையிறுதி யாராலும் குறிப்பாக இந்திய ,அணிக்கும்  ரசிகர்களுக்கும் மறக்க முடியாத ஒன்று.
இலங்கை அந்த நாட்களில் தொடர்ச்சியாக இந்தியாவைத் துவம்சம் செய்துகொண்டிருந்தது.(சனத் ஜெயசூரியாவின் உக்கிரத்தில்)

இவ்விரு அணிகளும் இதற்கு முன்னர் சம்பியன்ஸ் கிண்ணத்தின் இறுதிப் போட்டியில் விளையாடியபோது (2002) அது இரண்டு நாட்கள் நீடித்தும் (மேலதிக நாளுடன்) மழையினால் கழுவப்பட்டிருந்தது.

இம்முறையும் அதே மழையின் ஆபத்து வேல்ஸின் கார்டிப்பிலும் (Cardiff) இன்று இருக்கிறது.
மழை வந்து இன்று போட்டியை முழுக்கக் கழுவி விட்டால் இந்தியா இறுதிப் போட்டிக்குத் தெரிவாகும்.


இந்தியா பிரிவு B யில் முதலிடம்.
இலங்கை பிரிவு A யில் இரண்டாம் இடம் என்ற அடிப்படையில்.

மழை இன்றும் வேல்ஸில் கொட்டும் என்று தகவல்கள் சொல்கின்றன. இலங்கைக்கு அபசகுனம் தான்.

இதுவரை கார்டிப்பில் (Cardiff) இலங்கை அணி ஒரு தடவையும் வெல்லவில்லை என்பது இலங்கை வீரர்களின் மனதில் இருக்கும்.
இந்தியாவிடம் முக்கிய போட்டிகளில் அண்மைக்காலத்தில் தொடர்ந்து வாங்கிய அடியும் நீண்ட காலம் கிண்ணம் வெல்லாத ஏக்கமும் கூட சேர்ந்தே இன்று வெல்லவேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும்.

இரண்டு அணிகளுமே கடைசியாக விளையாடிய அதே பதினொருவரையெ இன்றும் ஈடுபடுத்தும் என்று நம்பலாம்.

இரு அணிகளிலும் இந்தத் தொடர் முழுதும் பிரகாசித்துத் தம்மை வெளிப்படுத்தியுள்ள வீரர்கள் தவிர, பெரிதாகப் பிரகாசிக்காத டில்ஷான், மத்தியூஸ், குசல் ஜனித் பெரேரா சுரேஷ் ரெய்னா, அஷ்வின், இஷாந்த் ஷர்மா ஆகியோர் மீது எல்லோர் பார்வைகளும் இருக்கின்றன.

formஇலுள்ள இந்திய ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் இலங்கையின் மாலிங்க குலசெகரவை எதிர்த்தாடுவதும், மீண்டும் புதுப்பிக்கப்படும் மாலிங்க - கோஹ்லி  மோதலும், அனுபவம் வாய்ந்த இலங்கையின் மத்திய வரிசை எதிர்கொள்ளப் போகிற பந்துவீச்சின் உச்ச formஇலுள்ள ஜடேஜா மற்றும் விக்கேட்டுக்காகத் தவமிருக்கும் அஷ்வினும் கூட கிரிக்கெட் விருந்துகள் தான்.

----

இந்த கிரிக்கெட் மோதலையும் தாண்டி அதிகம் யோசிக்க வைத்துள்ள விடயம் ஓவல் மைதானத்தில் இடம்பெற்ற கசப்பான சம்பவம்.
புலம்பெயர் தமிழரின் இலங்கை அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டமும், அதை சிங்கள ரசிகர்கள் வன்முறையால் முறியடித்ததும்.

இன்று இதற்கு பழிவாங்கலாக வேல்ஸில் பல்லாயிரக்கணக்காகக் கூட இருக்கும் தமிழர் தரப்பு இன்று ஏதாவது பதிலடி கொடுக்கலாம் என்று செய்திகள் வருகின்றன.
அங்கேயுள்ள தமிழர்கள் (ஐரோப்பா முழுவதுமாக) அனைவருக்கும் இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்று கூடுமாறு அனுப்பப்பட்ட sms ஒன்றைக் காணக் கிடைத்தது.

இது கொஞ்சம் பதற்றமான சூழலை ஏற்படுத்தலாம்.

இங்கிலாந்து ஜனநாயக நாடு என்றாலும் வன்முறை என்று வரும்போது ஆர்ப்பாட்டம் செய்யும் நம்மவர்கள் தடை செய்யப்பட இயக்கத்தை சார்ந்தவர்கள் என முத்திரை குத்தப்படும் வேலைகளை சரியான பிரசாரப்படுத்தலாக இலங்கை அரசாங்கம் செய்து வருகிறது.

தங்களவர்களைக் காப்பாற்ற அரசு இருக்கிறது.
புலிக்கொடிகளோடு படம் பிடிக்கப்படும் எம்மவர் தற்செயலாக இங்கே அனுப்பப்பட்டால்???

அதேபோல இலங்கையில் கிளம்பி இருக்கும் பொது பலசேன, ராவண பலய போன்ற இனவாத சக்திகளுக்கு இப்படியான சம்பவங்கள் மேலும் மேலும் உயிர்ச்சத்து கொடுப்பதாக அமையும்.

ஆர்ப்பாட்டம் செய்யாதீர்கள் என்று நான் சொல்லவில்லை. ஆனால் இடம், காலம் அறியுங்கள்... அதை எப்படியாகக் கொண்டு சேர்க்கவேண்டும் என்று தெரியுங்கள் என்று ஒரு உரிமையுள்ள உணர்வுள்ள சகோதரனாக சொல்கிறேன்.

இப்போதெல்லாம் யதார்த்தமாக சில உண்மைகளை சொல்லப் போனால் தாராளமாக பட்டங்களும் முத்திரைகளும் கிடைக்கின்றன.
அதற்காக சொல்லவரும் விடயங்களை மனதிலே வைத்துக்கொள்ள முடியாது.

''சமூகமொன்றில் ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்துக்கு சற்றும் மாறுதலான கருத்துக்களைச் சொல்லும் ஒருவன் சந்திக்கும் அவப்பெயர்களும், மிரட்டல்களும், கேலிகளும், கிண்டல்களும் சொல்லி மாளாதவை." தம்பி அனலிஸ்ட் கன்கோன் இன்று மெயில் கும்மி ஒன்றில் அருளியவை.

இதைச் சொன்னவுடனும் இலங்கை அணியின் ஆதரவாளனாக நான் சொன்னவை; சிங்கள அடிவருடி என்று கிளம்பும் கருத்துக்களும் வரும்.

ஆனால் இலங்கையில் வாழும் தமிழ் மக்கள், தற்போதைய நிலை (காணி சுவீகரிப்பு நெருக்குதல்கள், அண்மைய அரசாங்கக் கருத்துக்கள், ஏன் கொழும்பில் கோவில் இடிப்பு) போன்றவற்றையும், 13க்கு நடக்கும் நிலையையும் அவதானிப்போர் இதே மனநிலையில் தான் இருப்பார்கள் என நம்புகிறேன்.

கிரிக்கெட்டை ரசித்தாலும் எனக்கான உணர்வுகள் எப்போதும் என்னுடன். எங்கிருந்தாலும் எம்மவர் எங்கள் ரத்த உறவுகள். அவர்களும் பாதிக்கப்படக் கூடாது அவமானம் அடையக் கூடாது. அவர்கள் அடையும் பாதிப்புக்களால் இங்கேயுள்ள காப்பார் யாருமற்ற அப்பாவிகளும் பாதிக்கப்படக் கூடாது என்பதே எனது நிலைப்பாடு.



-------------
சற்று முன் கிடைத்த செய்தியின் படி பயிற்சிகளில் ஏற்பட்ட உபாதையினால் இன்று தினேஷ் சந்திமால் விளையாடுவது சந்தேகமாகியுள்ளதாம்.
கடந்த போட்டியில் தான மீண்டும் கொஞ்சமாவது formக்கு வந்திருந்தவர்.நிச்சயம் இலங்கைக்கு இது இழப்பு.

1 comment:

Anonymous said...

அமைதியாக தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க வந்தவர்களுடன் தங்கள் சிங்கள இன துவேசத்தை காடிய இலங்கை அணி சிங்கள ரசிகர் ஒருவரின் fb லிங்க் https://www.facebook.com/photo.php?fbid=4805045531964&set=a.1013103015771.2001758.1470903603&type=1&theater

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner