June 25, 2013

சம்பியனாக இந்தியா - மீண்டும் சாதித்துக் காட்டிய தோனி - ICC Champions Trophy - Final Review

கிரிக்கெட் உலகின் மிகச் சிறந்த ஒருநாள் அணியாக இந்தியாவும், மிகச் சிறந்த ஒருநாள் போட்டித் தலைவராக மகேந்திர சிங் தோனியும் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கொண்டாடப்படுகிறார்கள்.


2011ஆம் ஆண்டு உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டித் தொடரில் முடி சூடிய பிறகு தோனியின் புகழ் உச்சத்தைத் தொட்ட பிறகு, இடை நடுவே வந்த தோல்விகள் (முக்கியமாக டெஸ்ட் தொடர் தோல்விகள்) தோனியின் தலைமைப் பதவியைப் பறிக்கும் அளவுக்கு பூதாகாரமாகின.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் வெள்ளையடிப்பும் அதிலே தோனியின் துடுப்பாட்டமும் அவரது தலைமைக்கு மறுவாழ்வு கொடுத்திருந்தன.

இப்போது இங்கிலாந்தில் நடைபெற்று முடிந்திருக்கும் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் எந்த ஒரு போட்டியிலும் தோற்காமலேயேக் முடி சூடியிருப்பதன் மூலம் தன் தகுதி, திறமை + ஆளுமையை அடிக்கோடிட்டுக் காட்டியிருக்கிறார் இந்த Captain Cool 2 (Original Captain Cool எப்போதுமே முன்னாள் இலங்கை அணியின் தலைவர் அர்ஜுன ரணதுங்க தான்).

என்ன ஆச்சரியம் பாருங்கள்... இந்த இடுகை பதிவேற்றும் இந்த நாள் 30 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியா கிரிக்கெட்டின் அப்போதைய முடிசூடா மன்னர்களான மேற்கிந்தியத் தீவுகளினைத் தோற்கடித்து இதே இங்கிலாந்து மண்ணில் தமது முதலாவது உலகக் கிண்ணத்தை சுவீகரித்த நாள்.



30 ஆண்டுகளின் பின்னர் மீண்டும் காலங்களின் சுழற்சியில் இந்தியா உலக சம்பியன்... 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் போட்டிகளுக்கான உலகக் கிண்ணத்திலும், மினி உலகக் கிண்ணமாகக் கருதப்படும் சம்பியன்ஸ் கிண்ணத்திலும்.

முன்னரே சர்வதேசக் கிரிக்கெட் சபை அறிவித்தது போல இந்தத் தடவையுடன் சம்பியன்ஸ் கிண்ணம் நிறுத்தப்பட்டால், ICCயினால் நடத்தப்படுகின்ற மூன்று கிண்ணங்களையும் வென்ற ஒரே அணித்தலைவராக தோனி மட்டுமே வரலாற்றில் இடம் பிடிக்கப் போகிறார்.
----------

எட்ஜ்பஸ்டனில் இடம்பெற்ற இறுதிப் போட்டி மழையின் அச்சுறுத்தலில் நடக்குமா இல்லையா என்ற சந்தேகத்தில், சுவாரஸ்யம் முழுக்கக் கெட்டு, இறுதியில் ஒரு Twenty 20 போட்டி போல அணிக்கு தலா 20 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடந்தது கிரிக்கெட் ரசிகர்களுக்கு (இந்திய ரசிகர்களாக இருந்தால் கூட)திருப்தி தரவில்லை.

முழுமையான 50 ஓவர்கள் போட்டியாக நடந்து இந்தியா வென்றிருக்கவேண்டும் என்பது ஒவ்வொரு இந்திய அணியின் வெறியனுக்கும் கூட இருக்கும் நிறைவேறா ஆசையாக இருக்கும்.
Twenty 20 போட்டிகள் இந்திய வீரர்களுக்கு அதிக சாதகமான போட்டி வகையாக இருந்தாலும் கூட, இங்கிலாந்தின் ஆடுகளத்தில் அடித்து வெல்வது என்பது பெரிய விஷயமே.

அதேபோல ஒரு போட்டியிலும் தோற்காமல் எல்லா அணிகளுக்கும் சவால் கொடுத்து விளையாடிய ஒரே அணி இந்தியா என்பதால் அந்த அணிக்கே கிண்ணம் சென்றது மிகப் பொருத்தமானதே என்பதை இந்தியாவை சற்றும் பிடிக்காதவர்கள் கூட ஏற்றுக்கொள்வார்கள்.

நாணய சுழற்சியில் இங்கிலாந்தின் வெற்றியும், விட்டு விட்டுப் பெய்த மழையும் அந்த ஈரலிப்பு இங்கிலாந்தின் மித வேக, வேகப் பந்துவீச்சாளருக்கு வழங்கிய சாதகத் தன்மையும் formஇல் இருந்த இந்தியத் துடுப்பாட்ட வீரர்களின் வழமையான துடுப்பாட்டத் தாண்டவத்துக்கு இடம் கொடுக்கவில்லை.

தொடர்ச்சியாகப் பிரகாசித்து ஓட்டங்களைக் குவிக்கிறார் என்று கடந்த இடுகையில் நான் மெச்சிய தவானும் (விக்கிரமாதித்தனின் Jinxஐயே மிஞ்சியவர் என்பதால் நிச்சயம் இவர் இன்னும் நல்லா வருவார்), முக்கிய போட்டிகளில் இந்தியாவுக்குக் கை கொடுக்கும் இந்தியாவின் எதிர்காலம் விராட் கோஹ்லியும் ஓட்டங்களைப் பத்திரமாக சேகரித்துத் தர, மற்றைய துடுப்பாட்ட வீரர்கள் பொறியில் மாட்டிக் கொண்டார்கள்.

ரவி போபராவின் மித வேகப் பந்துவீச்சின் மந்திர ஜாலம் (எந்த வித ball tamperingஉம் இல்லாமல் என்று நம்புவோமாக) அற்புதமாக வேலை செய்து ஒரே ஓவரில் ரெய்னா, தோனி ஆகியோரை ஓட்டமற்ற ஓவரில் வெளியே அனுப்பியிருந்தார்.
அப்போது இந்தியா பரிதாபகரமாகத் தோற்கப்போவது உறுதி என்றே தொன்றியதுய்.
66 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்கள்.

ஆனால் இந்த நேரம் தான் ஆடுகளம் நுழைந்தவர் இந்தியாவின் அண்மைக்கால அதிர்ஷ்டத்தின் சின்னம், தோனியின் துரும்புச் சீட்டு, தொட்டதெல்லாம் துலங்கும் ரவீந்திர ஜடேஜா.

Sir, Million Dollar Baby, Dhoni Boy என்று எம்மைப் போல இம்சைகளால் எத்தனையோ விதமாகக் கலாய்க்கப்பட்டாலும் ஒரு வருடத்துக்கும் மேலாக சகலவிதமான போட்டிகளிலும் கலக்கி வரும் ஜடேஜா வந்து விளாசிய ஓட்டங்கள் இந்திய அணியின் ஓட்ட எண்ணிக்கையைப் போராடும் அளவுக்கு உயர்த்தியது.
(குறைந்தபட்சம் ஜடேஜா பந்துவீச வரும் வரையாவது என்று அப்போது நான் எண்ணியிருந்தேன்)

தவான் 31 (24 பந்துகள்)
கோஹ்லி 43 (34 பந்துகள்)
ஜடேஜா ஆட்டமிழக்காமல் 33 (25 பந்துகள்)

130 என்ற இலக்கு formஇலுள்ள ட்ரோட், ரூட் ஆகியோரோடும் தேவையான போது மரண அடி அடிக்கக் கூடிய பெல், மோர்கன் ஆகியோரோடும், நல்ல finisherஆக மாறிவரும் ரவி போபராவுடனும் சொந்த மைதானம், உள்ளூர் ரசிகர்களுடனும் பலமாக உள்ள இங்கிலாந்துக்கு வெகு சுலபம் என்று தான் தோன்றியது.

ஆனால் நடந்தது வேறு.

இந்தியாவின் பந்துவீச்சு, கள வியூகம், தோனியின் சாதுரியம் என்பவற்றையெல்லாம் தாண்டி இங்கிலாந்து தென் ஆபிரிக்காவை விட மோசமாகத் தமது வெற்றிபெறும் நிலையிலிருந்து தாங்களாக வெற்றியை விட்டுக் கொடுத்தது தான் (choking) இங்கிலாந்தின் அதிர்ச்சித் தோல்விக்கான காரணம் என எண்ணுகிறேன்.

ஓட்டங்களை விட்டுக் கொடுக்காத மிதவேகப் பந்துவீச்சாளர்களைத் தொடர்ந்து ஜடேஜா, அஷ்வின் ஆகியோரின் வருகை இங்கிலாந்தின் விக்கெட்டுக்களைப் பறித்துத் தடுமாற வைத்தது.

இங்கிலாந்து பந்துவீசுகையில் இங்கிலாந்தின் seaming, swinging ஆடுகளமாகத் தெரிந்த எட்ஜ்பஸ்டன், அஷ்வின், ஜடேஜா வீசும்போது இந்திய, இலங்கை ஆடுகளமாகத் தோன்றியது.
(இங்கிலாந்தின் முன்னாள் வீரர் கொலிங்வுட் இப்படியொரு இந்தியாவுக்கு சாதகமான ஆடுகளத்தை ஏன் தயார்படுத்தினார்கள் என்று ட்விட்டரில் புலம்பியது இன்னொரு கதை)


எனினும் இயன் பெல்லின் ஆட்டமிழப்பு(தொலைக்காட்சி நடுவர் தவறாக வழங்கிய ஆட்டமிழப்பு அவரை முட்டாளாகவும் எங்கள் எல்லோரையும் ஆச்சரியப்படவும் வைத்தது)மோர்கனையும் போபராவையும் சேர்த்தது.
64 ஓட்டங்கள் கொண்ட அபார இணைப்பாட்டம் இதோ இங்கிலாந்தைக் கரை சேர்த்துக் கிண்ணத்தை குக்கின் கையில் கொடுக்கிறது என்று இருக்கும் நிலையில் தான் அவ்வளவு நேரம் ஓட்டங்களை அள்ளிக் கொடுத்துக் கொண்டிருந்த இஷாந்த் ஷர்மா அடுத்தடுத்த பந்துகளில் இருவரையும் பார்சல் செய்தார்.

15 பந்துகளில் 20 ஓட்டங்கள், கையில்  6 விக்கெட்டுக்கள் என்று மிகப் பலமான, வாய்ப்புள்ள நிலையிலிருந்த இங்கிலாந்து தடுமாறி, தனக்குத் தானே குழிபறித்து 5 ஓட்டங்களால் தோற்றுப்போனது.

கையில் போட்டியை வைத்திருந்து கோட்டை விட்ட இரண்டாவது சம்பியன்ஸ் கிண்ணம் இது.
இதற்கு முதல் 2004ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளின் முக்கிய விக்கெட்டுக்களைப் பறித்தும் நமப்முடியாமல் தோற்றது. அதுவும் இங்கிலாந்திலேயே.

மேற்கிந்தியத் தீவுகளில் நடந்த 2010 ஆம் ஆண்டு உலக Twenty 20 கிண்ண வெற்றி தவிர 1979, 1987, 1992 ஆகிய உலகக் கிண்ண இறுதிப் போட்டிகளிலும், இரண்டு சம்பியன்ஸ் கிண்ண இறுதிப் போட்டிகளிலும் தோற்ற துரதிர்ஷ்டசாலி அணி இங்கிலாந்து.

இறுதிப் போட்டிகள் போன்ற முக்கியமான போட்டிகளில் பதறாமல் ஆடத் தெரியவில்லை போலும்.

இந்த இறுதிப் போட்டியைப் பொறுத்தவரை இந்திய அணி இறுதிவரை முயற்சியைக் கைவிடவில்லை. இங்கிலாந்து வெற்றிக்குக் கிட்ட வந்த நேரம் தடுமாற ஆரம்பித்துவிட்டது.
வெற்றி பெற்றுப் பழக்கமில்லை போலும்...

அதுசரி, IPL போன்ற தொடர்களில் பல வெற்றிகளை சுவைத்துள்ள இந்தியாவின் இளம் வீரர்களின் அனுபவம் கூட இங்கிலாந்தின் மூத்த வீரர்களுக்கு இல்லைத் தானே?

தோனியின் சில சாதுரியமான மாற்றங்கள், அணுகுமுறைகளும், இந்தியாவின் அடுத்த தலைமுறைக்கான வீரர்களின் ஈடுபாடும், விடா முயற்சிகளும் இந்தியாவுக்கு ஒரு மகத்தான வெற்றியைக் கொடுத்திருக்கின்றன.

இந்த சம்பியன்ஸ் கிண்ண வெற்றி தோனிக்கு 2015 உலகக் கிண்ணம் வரை தலைமைப் பதவியைத் துண்டு போட்டுக் கொடுத்திருப்பதோடு, அணியில் தற்போது இல்லாத மூத்த வீரர்களுக்கு ஓய்வு பெறும் அறிகுறிகளை வழங்கியும் உள்ளது.
இந்த சாம்பியன் அணி இனி வரும் காலத்தில் இந்தியாவை மேலும் உறுதிபெறச் செய்யும்.

தொடரின் நாயகனும், ஓட்டங்களை அதிகமாகக் குவித்தவருமான தவானும், உமேஷ் யாதவும், மத்தியவரிசையைத் திடம்பெற வைத்திருக்கும் தினேஷ் கார்த்திக்கும் இந்தத் தொடர் மூலம் இந்தியாவுக்குக் கிடைத்திருக்கும் புதிய வரங்கள்.

ரோஹித் ஷர்மா புதிய ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக புது அவதாரம் பூண்டிருக்கிறார்.
ஜடேஜா சகலதுறை வீரராகத் தன் இடத்தை அணியில் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

மீசைக்காரர்கள் இருவரும் / இருவரது மீசையும் இந்தியாவுக்கு ராசியாகியுள்ளது போலும்.

இந்தியாவின் பதினொருவருமே இனி மீசையுடன் விளையாட ஆரம்பித்தாலும் ஆச்சரியமில்லை.

தோனி மீண்டும் தடுமாறாத, நிலை தளம்பாத தலைவர் என்ற பெயரை எடுத்திருப்பதோடு, அணியின் பயிற்றுவிப்பாளர் டங்கன் பிளெட்சரின் இடத்தையும் தக்க வைத்துள்ளார்.

-------------
இந்திய அணியின் வெற்றியோடு, நியூ சீலாந்தின் மிட்செல் மக்னேலகன், இங்கிலாந்தின் ஜோ ரூட் ஆகிய புதியவர்களை அடையாளம் காட்டி இருப்பதோடு, குலசேகர, சங்கக்கார, மிஸ்பா உல் ஹக், போபரா, ட்ரோட், மாலிங்க போன்றவர்களின் மறக்க முடியாத தனி நபர் சாதனைகளையும் தந்து விடைபெற்றுள்ளது சம்பியன்ஸ் கிண்ணம்.


No comments:

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner