June 17, 2013

ஒரே போட்டி மூன்று அணிகளுக்கு வாய்ப்பு + மூன்று போட்டிகள் பற்றி ஒரே அலசல் ​- ICC Champions Trophy - Game 12


மூன்று நாட்களாக நடந்த போட்டிகள் பற்றி, இடுகைகள் போட முடியாதளவு பிசி.

​மூன்று  போட்டிகளுமே மழையின் குறுக்கீடுகள் காரணமாக கழுதை கட்டெறும்பாய்த்  தேய்ந்தது போல, ஓவர்கள் குறைக்கப்பட்டு எக்கச் சக்க குழப்பங்களோடும், அரை குறையாகவும் நடந்து முடிந்த போட்டிகளாயின.

பிரிவு B யில் இருந்து இந்தியாவும் தென் ஆபிரிக்காவும் அரையிறுதிகளுக்குத் ​தெரிவாகியிருக்கின்றன.

பிரிவு Aயில் இருந்து நேற்றைய நியூ சீலாந்துக்கு எதிரான பத்து ஓட்ட வெற்றியுடன் போட்டிகளை நடத்துகின்ற இங்கிலாந்து அரையிறுதிக்குத் தெரிவாகியுள்ள அதேவேளை,  இன்று இடம்பெறுகிற ஆஸ்திரேலிய - இலங்கை அணிகளுக்கிடையிலான ஆட்டத்தின் முடிவின் மூலம் மூன்று  அணிகளில் ஒரு அணிக்கு எஞ்சிய ஒரு இடம் இருக்கிறது.

இன்று இலங்கை அணிக்கு வெற்றி கிட்டினால் அரையிறுதியில் இலங்கை அணி.
ஆஸ்திரேலியா மிகப்பெரிய வெற்றி ஒன்றைப் பதிவு செய்தால் (இதற்கான வாய்ப்பு மிக அரிதே) ஆஸ்திரேலிய அணிக்கு அரையிறுதி வாய்ப்பு உறுதி.
சாதாரண வெற்றி ஒன்று ஆஸ்திரேலியாவுக்குக் கிடைத்தால் நியூ சீலாந்து அரையிறுதியினுள் நுழையும்.

கடந்த மூன்று போட்டிகளில் நடப்பது போலவே  மழை  திருவிளையாடல் நடத்தி, இன்றைய போட்டியையும் முன்னைய ஆஸ்திரேலியாவின் போட்டி போல கழுவி விட்டால், நியூ சீலாந்து உள்ளே நுழைந்திடும்.

பிரிவு ரீதியிலான அணிகளின் ஆட்டங்களில் இறுதியான ஆட்டமாக நடைபெறவுள்ள இந்தப் போட்டியானது இத்தனை விறுவிறுப்பாக இருக்கும் என்று யாரும் நினைத்திருக்க மாட்டோம்.

நடப்பு சம்பியன்களின் அடுத்த கட்டம் மயிரிழையில் தொங்குகிறது.

நன்றி - Daily Mirror

அத்துடன் கடந்த 13 வருடங்களாகவே தொடர்ச்சியாக ICC சம்பியன்ஸ் கிண்ணத் தொடர்களின் அரையிறுதிகள் வரை வந்த ஆஸ்திரேலிய அணி இப்போது தன்னுடைய பழைய அந்தஸ்துகள் ஒவ்வொன்றாக இழந்து வருவதைக் காட்டும் மற்றொரு அறிகுறி இது.

இலங்கை அணியும் ICC தொடர்கள் எல்லாவற்றிலும் அரையிறுதிகள், இறுதிகள் என்று என்று அடிக்கடி வருகை தந்து ஒரு நாள் போட்டிகளில் தனது ஆதிக்கத்தைக் காட்டுகின்ற அணி.

இன்றைய போட்டியில் இறங்கும் இலங்கை அணி, கடைசியாக இங்கிலாந்தைத் துரத்தியடித்த நம்பிக்கையின் உற்சாகத்தில் களமிறங்கும்.
இறுதியாக நடந்த 10 போட்டிகளில் ஆறில் ஆஸ்திரேலிய அணியை இலங்கை அணி வெற்றிகண்டுள்ளது என்பதும், ஆஸ்திரேலியாவில் வைத்தே ஆஸ்திரேலிய அணிக்கு ஒரு காட்டு காட்டிய அணி என்பதும் மேலதிக உற்சாகத்தை இலங்கைக்கும், அழுத்தத்தை ஆஸ்திரேலியாவுக்கும் வழங்கலாம்.

வழமையான தலைவர் மைக்கேல் கிளார்க் இல்லாததும் டேவிட் வோர்னரின் தடையும் ஆஸ்திரேலியாவை பலவீனமாக மாற்றி இருக்க நம்பிக்கை தரக் கூடியவர்களாக கடந்த போட்டிகளில் அரைச் சதங்களைப் பெற்றுக்கொண்ட தற்போதைய தலைவர் பெய்லியும், அடம் வோஜசும் காணப்படுகிறார்கள்.
அதேபோல, ஷேன் வொட்சன் எப்போது மீண்டும் formக்குத் திரும்புகிறாரோ அப்போது ஆஸ்திரேலியா விஸ்வரூபம் எடுத்து கிண்ணத்தையே வெல்லலாம் எனும் எதிர்பார்ப்பும் உள்ளது.

ஆனால் முன்னைய இடுகையொன்றில் ஆஸ்திரேலிய அணியைப் பற்றி நான் சொன்னது போல, இந்த அணியில் ஒரு வெல்வதற்கான வெறி இல்லாமல் இருக்கிறது.

இலங்கை அணியைப் பொறுத்தவரை முதல் இரு போட்டிகளிலுமே துடுப்பாட்டத்தில் சங்கக்காரவையே அதிகமாக நம்பியிருந்தது.
அவர் தவிர மஹேல ஜெயவர்த்தன, டில்ஷான் ஆகியோர் தங்கள் பங்களிப்பை ஓரளவுக்கு வழங்கினாலும், இளைய துடுப்பாட்ட வீரர்களின் தொடர் சறுக்கல் அணியின் ஒட்டுமொத்த பெறுபேறுகள் பற்றி சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

முன்னைய போட்டிகளில் சறுக்கிய சந்திமால், குசல் ஜனித் பெரேரா, திரிமன்னே போன்றவர்களும், 'சகலதுறை வீரர்' தலைவர் மத்தியூசும் இன்று ஓட்டங்களைப் பெற்றுக்கொள்வது இலங்கைக்கு முக்கியமானதாக அமைகிறது.

கடந்த போட்டிகளில் ஓட்டங்களை அதிகமாகக் கொடுத்திருக்கும் எரங்கவுக்கு மீண்டும் ஒரு வாய்ப்புக் கிடைக்குமா அல்லது மீண்டும் திசரவா அல்லது முதல் முறையாக சசித்ர சேனநாயக்கவுக்கு ஒரு வாய்ப்புக் கிடைக்குமா என்பது ஒரு சுவாரஸ்யமான கேள்வி.

இங்கிலாந்தின் ஆடுகளங்களில் சேனநாயக்கவின் பந்துவீச்சு சிறப்பாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.
இன்று சேனநாயகக்கவுக்கு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக வழங்கப்படும் வாய்ப்பு இலங்கை அணிக்கும் வாய்ப்பாக அமையும் என நம்புகிறேன்.

இதேவேளை இலங்கை இன்று போட்டியில் இலகுவாக வெல்லும் என்று நம்பிக்கையுள்ளவர்களுக்கு - இந்திய அணியின் அசுர formஇல் எந்த ஒரு அணியுமே அந்த அணியை சந்திக்க விரும்பாது என்பது திண்ணம். அப்படி இருக்கையில் இந்தியாவை அரையிறுதியில் சந்திக்காமல் இருக்கவேண்டுமாக இருந்தால், இலங்கை அணி ஆஸ்திரேலியாவை மிகப் பெரிய வித்தியாசத்தில் இன்று வெற்றிகொள்ள வேண்டும்.
அப்படியாக இருந்தால் A பிரிவில் முதலாம் இடத்துக்கு வருவதோடு, தென் ஆபிரிக்காவை அரையிறுதியில் சந்திக்கலாம்.

எல்லாத்துக்கும் முதலில் அந்தப் பாழாய்ப்போன இங்கிலாந்து மழை குறுக்கிட்டு கூத்துக் காட்டாமல் இருக்கவேண்டும்.

--------------

கடைசியாக நடந்த மூன்று போட்டிகளுமே, மழையால் தின்னப்பட்ட போட்டிகள்.

இந்திய அணியின் வெற்றி எதிர்பார்த்ததே... ஆனாலும் பாகிஸ்தான் இந்தப் போட்டியிலும் இப்படி இலகுவாகத் தோற்றுப் போனது என்பது ஆச்சரியமானது.
மூன்று போட்டிகளிலுமே பாகிஸ்தான் சுருண்டு போனது.

பாகிஸ்தானின் மோசமான சரணாகதித் துடுப்பாட்டமும், மழையின் தொடர்ச்சியான குறுக்கீடுகளும் சலிப்பை ஏற்படுத்திய போட்டியாக மாறியது - பெரிதும் எதிர்பார்ப்பை அரசியல் மற்றும் ஜாவெட்  மியன்டாட் - சேட்டன் ஷர்மா காலம் முதல் இருந்துவரும் மோதல்கள் காரணமாக ஏற்படுத்திய இந்திய - பாக் போட்டி.

------
வழமையாகத் தென் ஆபிரிக்காவின் கால்களை முக்கிய தருணங்களில் வாரிவிடும் அதிர்ஷ்டம், இம்முறை Duckworth - Lewis முறை என்ற மழை விதி மூலமாகத் தென் ஆபிரிக்காவுக்கு அதிர்ஷ்டம் அடிக்க,பாவம் மேற்கிந்தியத் தீவுகளுக்கு முதுகில் அது குப்புற அடித்து மயிரிழையில் வெளியே தள்ளிவிட்டது.

Duckworth - Lewis முறையில் மிக அரிதாக ஏற்படும் சமநிலை (Tie) முடிவு இந்தப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு முக்கியமான ஒரு புள்ளியைக் களவாடிக் கொண்டதோடு, நிகர ஓட்ட சராசரியின் அடிப்படையில் தென் ஆபிரிக்காவை உள்ளே அனுப்பியுள்ளது.

மழை வந்து குறுக்கிடும் நேரங்களில் Duckworth - Lewis முறையில் வெல்லவேண்டிய ஓட்ட எண்ணிக்கையை விட அதிகமாக எடுத்திருந்த மேற்கிந்தியத் தீவுகள் பெரிய மழைக்கு முன்னதாக மக்லரென் வீசிய பந்திலே பொல்லார்ட்டை இழந்த உடன் சமநிலை முடிவு உறுதியானது.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு அதுவே ஆப்பானது.

இதிலே துரதிர்ஷ்டம் என்பதைத் தாண்டியும், மேற்கிந்தியத் தீவுகள் பந்துவீச எடுத்துக்கொண்ட அதிக நேரம் அவர்களுக்கு இறுதியில் இப்படியொரு தண்டனையாக மாறியது.

எக்கச் சக்க குறுக்கீடுகளுடன் நடந்த இந்தப் போட்டியில் நடுவர்கள் முதலில் இருந்தே நேர விடயங்களில் இறுக்கமாக இருந்திருந்தால் போட்டி தீர்மானிக்கப்பட்ட 31 ஓவர்களாவது நடந்து முடிந்திருக்கும்.

-------------

நடுவர்களின் தலையீடு சம்பந்தமாக சர்ச்சை + சந்தேகத்துக்குரிய அணியாக மாறியிருக்கும் ஒரு அணி இங்கிலாந்து.

Reverse Swing ஐ உருவாக்க பந்தை சேதப்படுத்துகிறார்கள் என்று இவர்கள் மீது இலங்கை அணிக்கு எதிரான போட்டியின் பின்னர் சந்தேகம் எழுந்திருக்கிறது.
ஆஸ்திரேலிய அணியை உருட்டித் தள்ளிய இங்கிலாந்து இலங்கைக்கு எதிராகப் பந்துவீசிக்கொண்டிருந்தபோது நடுவர்கள் பந்தை மாற்றியிருந்தார்கள்.

இதை அடுத்தே இந்த சந்தேகம் எழுந்துள்ளது.
அதிலும் இந்த சந்தேகத்தை எழுப்பியுள்ளவர் முன்னாள் இங்கிலாந்தின் வேகப் பந்துவீச்சாளர் பொப் வில்லிஸ் என்பதும் கவனிக்கக் கூடியது.

இரு பக்கமும் ஒவ்வொரு பந்துகள் பயன்படுத்தப்படும் நிலையில் சில ஓவர்களிலேயே பந்து Reverse Swing ஐ இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் மட்டும் எடுப்பது பலருக்கும் உறுத்தி வந்தாலும், இந்த சம்பவம் பெரியளவு பரபரப்பைத் தோற்றுவித்துள்ளது.

ஆனாலும் ஒரு ஆசிய அணி இப்படியான சம்பவத்தில் சிக்கியிருந்தால் அந்த அணி குற்றவாளிக் கூண்டில் நின்றிருக்கும் என்பதில் ஐயமில்லை.
ஆனால் இங்கிலாந்து சந்தேகத்துக்குரிய அணியாக மட்டுமே இருக்கிறது.

நேற்று மழையினால் குறுக்கப்பட்டு கிட்டத்தட்ட ஒரு Twenty 20 போட்டியாக நடந்த நியூ சீலாந்துக்கு எதிரான போட்டியிலும் இங்கிலாந்துப் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செய்திருந்தார்கள். ஆனால் சந்தேகத்துக்குரிய Reverse Swing அங்கே தென்படவில்லை. அல்லது தேவைப்படவில்லை.

புதிதாக சந்தேகப் புகை எழுந்தால் பார்க்கலாம்.


நேற்றைய போட்டியில் இங்கிலாந்தின் அணித் தலைவர், ஒரு காலத்தில் டெஸ்ட் மட்டும் விளையாடக் கூடியவர் என்று கருதப்பட்ட அளிஸ்டேயர் குக்கின் அபார ஆட்டப் பிரயோகங்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தின.ரசிக்கவும் வைத்தன. போட்டியை வென்று கொடுத்து அரை இறுதிக்கும் அழைத்துப் போயுள்ளார்.

நியூ சீலாந்தின் கேன் வில்லியம்சனும் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடியிருந்தார்.

தொடர்ச்சியாக விக்கெட்டுக்களை சரித்துவரும் மிட்செல் மக்னெலகன் நேற்றும் 3 விக்கெட்டுக்கள். தொடரின் மூன்று போட்டிகளில் 11 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.

இத்தொடருக்கு முன்னதாக சதங்கள் குவித்த கப்டில்லின் சரிவு நியூ சீலாந்தை ஏமாற்றியுள்ளது.

இதேவேளை நேற்று அறிமுகமான கோரி அன்டர்சனை எதிர்காலத்தில் எதிர்பார்க்கலாம்.

----------

1 comment:

Cricket highlights said...

http://www.youtube.com/watch?v=ZXVvkXA0h2g

Sri Lanka VS Australia 15 June 2013 ICC Champion Trophy 2013 Highlight

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner