August 15, 2011

இந்தியா ...


முதலில் இந்திய சுதந்திர தின வாழ்த்துக்கள் என் அன்புக்குரிய அத்தனை இந்திய நண்பர்களுக்கும்..

சுதந்திரம் என்ற சொல் எனக்கு எப்போதும் இரு நாடுகளை ஞாபகப்படுத்தும்..

ஒன்று இந்தியா.... பாரதியின் கவிதைகள், காந்தியின் அகிம்சை, பகத் சிங்கின் வீரம், தியாகிகளின் போராட்டங்கள்....

அடுத்தது அமெரிக்கா .. அந்த வலிமையான போராட்டமும், சிதறிக்கிடந்த குடியரசு மாநிலங்களை ஒன்றாக இணைத்ததும், அமெரிக்காவின் சுந்தந்திரப் போராட்டப் பிரகடனமும்..அதன் பின் தம்மை ஆண்ட பிரித்தானியரையே தம் பின்னால் வரச் செய்த வளர்ச்சியும்..

எமக்குத் தான் 'சுதந்திரம்' என்ற சொல்லின் மகத்துவம், அது தரும் உணர்ச்சி இன்னும் முழுமையாகக் கிட்டவில்லையே...

-----------------

இந்தியா இலங்கைக்குத் தந்த தாக்கங்கள்; தந்துகொண்டே இருக்கும் தாக்கங்கள் பற்றி அடுக்கப் போனால் மொழி, அரசியல், கலை, உணவிலிருந்து இன்றைய எம் வலைப்பதிவு வரை வந்து வாழ்க்கை முழுக்க நிறைக்கும்..

இன்றைய விடியலில், இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு "இந்தியா என்றவுடன் உங்கள் மனதிலே உடனே ஞாபகம் வருவது என்ன?" என்று நேயர்களிடம் கருத்துக் கேட்டிருந்தேன்....

அப்பப்பா எத்தனை விதமான கருத்துக்கள்..
இந்தியா - ஒரு வித்தியாசமான கலவை

அதிகமாக சொல்லப் பட்டவையும் வித்தியாசமானவையாகக் குறிப்பிடப்பட்டவையும்..

அதிகமாக சொல்லப் பட்டவை முதலில்..

மகாத்மா காந்தி (அதிகப்படியானோரின் தெரிவு)
கலைகள்
சினிமா
கோவில்கள், தலங்கள்
அப்துல் கலாம் (அட பாருங்களேன் சச்சினைக் கூட வென்றிட்டார்)
சச்சின் டெண்டுல்கர்
சேலை, வேட்டி
ரஹ்மான்
தாஜ்மஹால்
இளையராஜா
கமல்ஹாசன்
MGR
பெண்களின் ஆடைகள்
விஜய்
அரசியல் நாடகங்கள் (முள்ளிவாய்க்கால் துரோகம் முக்கியமாக சொல்லப்பட்டது)
கலைஞர் கருணாநிதி (அவரது சூழ்ச்சி, கபடங்கள் எல்லாமே கிழிக்கப்பட்டன)
ஜெயலலிதா
கிரிக்கெட்
உலகக்கிண்ணம்
இந்தியத் தேசிய கீதம்
தேசிய ஒற்றுமை
IPKF  (இந்திய அமைதி காக்கும் படையின் இலங்கை வருகை)
பாரதி
வைரமுத்து
திலீபனின் உண்ணாவிரதம்
IPL
அரசியல்வாதிகள்
2G Spectrum ஊழல்

ஒரு நேயரின் வாசகம் - நம்மினத்தை நிர்க்கதிக்குள் தள்ளிய மூல சூத்திரதாரி...

எனக்கும் தலைப்புப் பற்றி நேயர்கள் சொல்லிக் கொண்டிருந்தபோது மனதில் எனக்கும் இந்தியா பற்றி எவ்வளவோ விஷயங்கள் வந்து போனது..

சிறுவயதில் இந்தியா என்பது எனக்கு அறிமுகமானது தமிழக அரசியல் மூலமாக.. அப்பா தீவிர MGR ரசிகர்.. MGR இறக்கும் வரை தீவிர அதிமுக அனுதாபி. அதன் பின் கலைஞரின் தமிழுக்காக தி.மு.க தவறு செய்தாலும் மெளனமாக ரசித்தவர்.
அப்போது ஐந்து வயது கூட ஆகியிருக்கவில்லை ஆனால் அப்பா வீட்டில் அரசியல் பேசும்போது மனதில் திமுக - அதிமுக, MGR - கலைஞர் என்பன தான் இந்தியாவின் அமசங்கலாக மனதில் பதிந்து போனவை.

சினிமா ஏனோ இந்தியாவாக மனதுக்குள் நிற்கவில்லை. (அப்போதே அப்படி ஊறிவிட்டது போலும்)
அதன் பின்னர் கிரிக்கெட்.. அப்போது ஸ்ரீக்காந்த், கவாஸ்கர், கபில்தேவ் என்பவர்கள் இந்தியாவின் பிம்பமாக மாறிப்போனார்கள்.
இந்திய அணியின் ரசிகனான எனக்கு ஸ்ரீக்காந்த், அசாருதீன், வெங்க்சர்க்கார் ஆகியோர் என் ஹீரோக்கள்.
87ஆம் ஆண்டு வரை நீடித்த இந்த உறவு அந்த ஆண்டில் இலங்கையில் இந்திய அமைதிகாக்கும் படை (!?) நுழைந்தபின் முழுக்க மாறிப்போனது.

இடையில் எனது வாசிப்புப் பழக்கம் தொற்றிக்கொண்ட காலத்தில் முதலில் அம்புலிமாமா, ரத்னபாலா, கோகுலம் பின்னர் ஆனந்தவிகடன், குமுதம், கல்கி என்று இந்தியப் பேச்சுவழக்கு இந்தியா என்றவுடன் என் மனதில் நிறையும் பல எண்ணங்களாகிப் போயின.

அதன் வழியாக மனதில் பதிந்து போன இந்தியர்கள் மனதுக்கும் நெருக்கமாகிப் போனார்கள்..
மகாத்மா காந்தி, அறிஞர் அண்ணா, இந்திரா காந்தி, ஏன் எழுத்தாளர்கள்.. இப்படிப் பலர்..
நான் வாசித்த மகாபாரதமும், ராமாயணமும் இந்தியாவைப் பற்றிய பெருமையான எண்ணங்களை மனதில் விதைத்தது.
இன்றுவரை இந்தியாவுக்கு எப்போது பயணித்தாலும் சிறுவயதில் மகாபாரதத்தில் வந்த இடங்கள் எங்கேயாவது இருக்கா என்று தேடும் சுவாரஷ்யம் நீடிக்கிறது.
சிறுவயதில் மனதில் நிறைந்த வாசிப்பு மூலமாக இன்றும் கூட இந்திய அரசியலின் சுவாரஷ்யங்கள் மனதில் இலங்கை அரசியலை விடப் பிடித்துள்ளது.
இந்தியாவின் ஒவ்வொரு மாநில அரசியலும் கூட (விரல் நுனியில் இல்லாவிட்டாலும்) கொஞ்சம் அதிகமாகவே தெரிந்துவைத்திருக்கிறேன்.

இந்திய அரசியலை விரும்பும் அளவுக்கு இந்திய அரசியல்வாதிகளை வெறுக்க அநேகமான இலங்கையர் போலவே எனக்கும் காரணமாக அமைந்த பின்னணி அவர்கள் மற்றும் இந்திரா காந்தி அம்மையாரின் மரணத்துடன் ஆரம்பமானது.
 இந்தியப் படைகளின் வருகையும் அவர்களது அட்டூழியங்களும் மனதில் வெறுப்பை மண்டவைத்த விடயங்களாகின.

இந்திய விமானங்கள் யாழ் வானில் பறந்து உணவுப் பொட்டலங்கள் போட்டபோது பூரிப்புடன் இந்தியாவைப் போற்றிய அப்போதைய என் சிறுவயது மனதில்,
சுதுமலையில் தலைவர் பிரபாகரனின் உரை முடிய அவர் அப்படியே விமானத்தில் (Helicopter) ஏற்றப்பட்டது, பின் ஆயுதக் களைவு, திலீபனின் உண்ணாவிரதம் என்று இந்தியா என்றாலே வெறுப்பாக மாறியது இன்றும் அப்படியே திரைப்படம் போல ஓடுகிறது.

87  வரை எங்கள் இணுவில் வீட்டை விட்டு எப்போதுமே இடம்பெயராத நாம், இந்தியப் படைகளின் செல்லடியில் வீட்டையும் ஆசையாக வளர்த்த ப்ரவ்ணி (Browney) என்ற நாயையும் விட்டுவிட்டு தோட்டக் காணிகளால் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடித்தப்பி, இணுவில் கந்தசுவாமி கோவிலில் தஞ்சம் புகுந்ததும் தொண்ணூறு நாட்கள் இருந்த காலமும் மனதில் மறக்காதது.
அந்தத் தொண்ணூறு நாள் வாழ்க்கையே அப்படியென்றால் வருடக்கணக்காக அகதி வாழ்வு வாசிக்கும் பலர் பற்றி எண்ணுகையில்... சபிக்கப்பட்ட சமூகம் நாம்..

இந்திய ராணுவம் எங்கள் ஊரைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த பின்னர், வெள்ளைக் கொடியுடன் அப்பாவும் ஊரவரும் வீடு பார்க்க சென்றிருந்தார்கள்..
அப்பா வந்து சொன்ன கோரக் காட்சிகள்..
அம்மாவுக்கு தான் சொன்னாலும் காதில் விழுந்த அந்தக் கோரக் காட்சிகள்.. கொடுமை.. இன்னும் மறக்காதவை..
இதற்குள் ஒரு தமிழ் சிப்பாய் சொன்னானாம் "யோவ் மானேஜர் (எங்கள் அப்பா அப்போது வங்கி உத்தியோகத்தர்) ஏன்யா பயப்படுறே.. உன் குழந்தை, குட்டியோடு வந்து குந்துய்யா"
அவன் கேட்ட இன்னொரு கேள்வியை அப்பா இப்போதும் அடிக்கடி சொல்வார் "உங்களுக்குத் தான் கிணறு இருக்கு, சொந்த வீடுகள் பெரிய காணிகளோட இருக்கு.. கோவில் குளம், வீடு வரப்பு, வசதியான வாழ்க்கை என்று நல்லாத் தானே இருக்கீங்க? அப்பிடி இருக்கும்போது ஏன்யா தனிநாடு? தமிழ்நாடு மாதிரியே சேர்ந்து இருங்களேன்"

எம் சிக்கலின் அடிநாதம் தெரியாமலேயே அனுப்பப்பட்ட அடிமைகளில் ஒருவன் அவன்..
தமிழனே அப்படி இருக்கையில் தனித்து வெறியோடு வந்த மற்ற மாநிலத்தவர்களிடம் மனிதத்தை எதிர்பார்த்திருக்க முடியுமா?
அவர்கள் தங்கள் கேளிக்கைப் பொருட்களை வெறியோடு எடுக்க வந்தோர் தானே?

இந்தியப் படைகளின் வெறிச் செயல்களில் என் உறவுகள் யாரும் அகப்படாவிட்டாலும் கூட, தெரிந்த நண்பர்களின் சகோதரியர், அறிந்த சிலர் பாதிக்கப்பட்டபோது மனம் முழுவதும் வெறுப்போடு இந்தியா என்றாலே (தமிழ் தவிர்த்து) ஒரு வெறுப்புக்குரிய விடயமாக மாறிப்போனது.

ராஜீவ் காந்தி கொல்லப்பட்டபோது ஒரு வெறித்தனமான திருப்தி இருந்தது உண்மை. இப்போது மனம் கொஞ்சம் பக்குவப்பட்ட நிலையில் அதற்காக வெட்கப்பட்டாலும் போர்க்களத்தில் நிகழ்ந்த தர்மப் பழிவாங்கலாக நினைத்து ஆறுதல்படுத்திக்கொள்கிறேன்.
எனினும் இந்தியாவுக்கு அடிக்கடி சென்று வருவதும், இந்தியாவில் இருக்கும் நண்பர்களும் எப்போதும் இந்தியாவின் பசுமையான நினைவுகளைத் தருபவை..
கடல் கடந்து உயிரிக் காப்பாற்றிக்கொல்லச் செல்லும் எங்கள் உறவுகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் அன்னை பூமியாக இந்தியாவை எப்போதும் நன்றியுடன் நினைத்துக்கொள்பவன் நான்.

எனது பதிவுகளில் அடிக்கடி சொல்வது போல இந்திய அரசியல்வாதிகளின் மீது இருக்கும் வெறுப்பு ஒரு பக்கம் கிடக்க, அப்பாவிகளான, எம் மீது இரக்கமும் மாறா அன்பும் வைத்திருக்கும் அந்த அன்பு தமிழக உறவுகளை நம் எப்போதும் நன்றியோடு நேசிக்கவேண்டும்..
இங்கே என்ன நடக்கிறது என்டர தெளிவே இல்லாமல், வெயிலிலும் மழையிலும் காய்ந்தும் நனைந்தும் போராட்டம் நடத்தி, குரல் எழுப்பி, ஏன் தீயிலும் குளித்த அவர்கள் எப்போதும் எங்கள் நினைவுகளில் வைக்கக் கூடியவர்களே..

முள்ளிவாய்க்கால் இறுதிக் கட்டத்திலும், யுத்தத்தின் இறுதி நாட்களிலும் இந்தியா எமக்கு உதவவில்லை என்றும், இலங்கை இராணுவத்துக்கு உதவியது என்றும் 'இந்தியா - துரோகி' என்றும் குரல் எழுப்பி இந்தியாவை சபிக்கும் எம்மிற் பலர்  ஒன்றை மறந்துவிடுகிறோம்....
தொப்புள் கொடி உறவாக இருந்தாலும் எம் பிரச்சினையை நாம் அல்லவா தீர்க்க வேண்டும்?
மற்றவர் யாராயினும் தேவையில்லாத தலைவலியை எடுத்துக் கொள்வார்கள் என நினைப்பது தப்பல்லவோ?

தங்கள் அரசியல் நலனுக்காக இலங்கைக்காக இந்திய அரசு உதவியதையும் உணர்ச்சியை ஓரமாக வைத்துவிட்டுப் பார்த்தோமானால் நியாயம் என்றே தோன்றும்....

ஆனால் மனதோரம் வரும் சிறு வழியும், அதனால் பொங்கும் வெறுப்பும் ஏதோ சில தருணங்களில் எப்படியாவது வெளிப்பட்டு விடுகிறது.
அது நண்பர்களின் உறவுகளில் விரிசல் வராமல் பார்த்துக்கொள்கிறேன்..
இன்று எனது தொழிலும் கூட இந்தியாவை மையமாகத் தான் கொண்டு  ஏதோ ஒருவிதத்தில் ஓடுகிறது..
பாடல்கள், சினிமா... ஏன் கிரிக்கெட்டும் கூட..
தமிழர் எம் கலைகள், கலாசாரம்,பொழுதுபோக்குகளின் ரசனைகளின் மையமே இந்தியா தானே?

ஆனாலும் எங்கள் தனித்துவத்தையும் காத்து நிற்பது காலத்தின் கடமையாக எமக்கு அமையும் என்பதை நாம் நினைவில் கொள்வது எங்கள் எதிர்கால இருப்புக்கும், என்றோ ஒருநாள் எம் சந்ததி,பரம்பரை தனியாக இலங்கைத் தமிழர் என்றொரு இனம் 'வாழ்ந்தது' என்று அறிவதற்கும் முக்கியமானது.

இந்தியாவுடனான எம் உறவுகள் எப்படியும் பல்வேறு வடிவில் எம் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சங்களிலும் தொடரும்.. வசப்படுத்தும்.. மகிழ்விக்கும்.. ஆட்கொள்ளும்.. ஆக்கிரமிக்கும்..

காரணம் 'தமிழ்' என்ற ஒரே இரத்தம் பாக்குநீரிணை கடந்தும் எமக்குள் ஓடுகிறது....


இந்தியா - ஒரு வித்தியாசமான கலவை தான்..


16 comments:

Nishan Thirumalaisami said...

///தமிழர் எம் கலைகள், கலாசாரம்,பொழுதுபோக்குகளின் ரசனைகளின் மையமே இந்தியா தானே?\\\

இது ஒன்று தான் அன்ன இந்தியாவை மனதில் நிறுத்துகின்றது.. சிறப்பான பதிவு....

Sanjay said...

87ஆம் ஆண்டு நாங்களும் இதே போல யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னார் சென்ற போது ஒரு சீக்கிய சிப்பாய் கேட்டது இன்னும் ஞாபகம் இருக்கிறது,
"கை கொடுத்தது, மாலை போட்டது (அவர்களுக்கு) இப்போ எப்பிடி அடி???!!"

நிகழ்வுகள் said...

இதில் சில பல விடயங்கள் என் உணர்வுகளாகவும்...................

அசால்ட் ஆறுமுகம் said...

// நான் வாசித்த மகாபாரதமும், ராமாயணமும் இந்தியாவைப் பற்றிய பெருமையான எண்ணங்களை மனதில் விதைத்தது //

இதிகாசங்களைத் தவிர என்னை இந்தியாவின் பக்கம் கவர வைத்ததில் பொன்னியின் செல்வனும் ஒண்று!

//அரசியலின் சுவாரஷ்யங்கள் மனதில் இலங்கை அரசியலை விடப் பிடித்துள்ளது.
இந்தியாவின் ஒவ்வொரு மாநில அரசியலும் கூட (விரல் நுனியில் இல்லாவிட்டாலும்) கொஞ்சம் அதிகமாகவே தெரிந்துவைத்திருக்கிறேன்.//

உண்மைதான் அண்ணா... இலங்கையின் அமைச்சர்களின் பெயரைவிட இந்திய அமைச்சர்களின் பெயர் கூடத் தெரியும்..

நம் பிரச்சனைகளை நாங்கள் தீர்ப்பதுதான் உகங்தது... வேறு யாரும் உதவினால் வாழ்நாள் எல்லாம் கடன் பட்டது போல் இருக்கும்...
(கடன் அன்பை முறிக்கும்)..

நல்ல பதிவு!

நிகழ்வுகள் said...

பிடித்த வரிகள் ;-


எமக்குத் தான் 'சுதந்திரம்' என்ற சொல்லின் மகத்துவம், அது தரும் உணர்ச்சி இன்னும் முழுமையாகக் கிட்டவில்லையே...///

"உங்களுக்குத் தான் கிணறு இருக்கு, சொந்த வீடுகள் பெரிய காணிகளோட இருக்கு.. கோவில் குளம், வீடு வரப்பு, வசதியான வாழ்க்கை என்று நல்லாத் தானே இருக்கீங்க? அப்பிடி இருக்கும்போது ஏன்யா தனிநாடு? தமிழ்நாடு மாதிரியே சேர்ந்து இருங்களேன்"
எம் சிக்கலின் அடிநாதம் தெரியாமலேயே அனுப்பப்பட்ட அடிமைகளில் ஒருவன் அவன்..///


ராஜீவ் காந்தி கொல்லப்பட்டபோது ஒரு வெறித்தனமான திருப்தி இருந்தது உண்மை. இப்போது மனம் கொஞ்சம் பக்குவப்பட்ட நிலையில் அதற்காக வெட்கப்பட்டாலும் போர்க்களத்தில் நிகழ்ந்த தர்மப் பழிவாங்கலாக நினைத்து ஆறுதல்படுத்திக்கொள்கிறேன்.///


கடல் கடந்து உயிரிக் காப்பாற்றிக்கொல்லச் செல்லும் எங்கள் உறவுகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் அன்னை பூமியாக இந்தியாவை எப்போதும் நன்றியுடன் நினைத்துக்கொள்பவன் நான்.///

தொப்புள் கொடி உறவாக இருந்தாலும் எம் பிரச்சினையை நாம் அல்லவா தீர்க்க வேண்டும்?
மற்றவர் யாராயினும் தேவையில்லாத தலைவலியை எடுத்துக் கொள்வார்கள் என நினைப்பது தப்பல்லவோ?///


இந்தியாவுடனான எம் உறவுகள் எப்படியும் பல்வேறு வடிவில் எம் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சங்களிலும் தொடரும்.. வசப்படுத்தும்.. மகிழ்விக்கும்.. ஆட்கொள்ளும்.. ஆக்கிரமிக்கும்..///

காரணம் 'தமிழ்' என்ற ஒரே இரத்தம் பாக்குநீரிணை கடந்தும் எமக்குள் ஓடுகிறது....///

.....

Bala Murugan said...

u will get freedom soon.

ஆகுலன் said...

எனக்கு இந்தியா எண்டால் மனதில் நிப்பது..எமக்காக உயிரை துறந்த அந்த உறவுகளை தான்......

பதிவு அருமை அண்ணா..

வந்தியத்தேவன் said...

இந்தியா என்றால் இப்போ ஆ.ராசாவும் கனிமொழியும் திகாரும் தான் ஞாபகம் வருகின்றது.

vagishan selva said...

என் மாமா 5 வயசு சிறுவனான என் முன்னால் 1988 இல் இந்திய இராணுவத்தால் கொல்லப்பட்டதை பார்த்த எனக்கு , பின்பு அதற்கு மூல காரணமான ரஜீவ் காந்தி கொல்லப்பட்டது சரியாகவே பட்டது......

பி.அமல்ராஜ் said...

//முள்ளிவாய்க்கால் இறுதிக் கட்டத்திலும், யுத்தத்தின் இறுதி நாட்களிலும் இந்தியா எமக்கு உதவவில்லை என்றும், இலங்கை இராணுவத்துக்கு உதவியது என்றும் 'இந்தியா - துரோகி' என்றும் குரல் எழுப்பி இந்தியாவை சபிக்கும் எம்மிற் பலர் ஒன்றை மறந்துவிடுகிறோம்....
தொப்புள் கொடி உறவாக இருந்தாலும் எம் பிரச்சினையை நாம் அல்லவா தீர்க்க வேண்டும்?//

உண்மை நிறைந்த வரிகள் அண்ணா. வழமைபோலவே ஒரு விடயம் நிறைந்த பதிவு. வாழ்த்துக்கள்,

யோ வொய்ஸ் (யோகா) said...

எனக்கும் இந்திய அரசியல்வாதிகள் பிடிக்காது, ஆனாலும் எமக்காக கண்ணீர்விடும் அந்த சகோதரர்களை ரொம்பவே பிடிக்கும்.

Yalini Thivaharan said...

தமிழ் படங்கள் பார்ப்பதும், இந்திய கலாச்சாரத்தை பின்பற்றுவதும் இருந்தாலும், ஏனோ இந்தியா என்றாலே ஒரு காரணம்புரியாத வெறுப்பு சிறுவயதிலுருந்து........

நீங்கள் உங்கள் பதிவை நிறைவு செய்துள்ள விதம் பிடித்திருக்கிறது... "இந்தியாவுடனான எம் உறவுகள் எப்படியும் பல்வேறு வடிவில் எம் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சங்களிலும் தொடரும்.. வசப்படுத்தும்.. மகிழ்விக்கும்.. ஆட்கொள்ளும்.. ஆக்கிரமிக்கும்..

காரணம் 'தமிழ்' என்ற ஒரே இரத்தம் பாக்குநீரிணை கடந்தும் எமக்குள் ஓடுகிறது...."

வழமைபோலவே ஒரு சுவாரஸ்யமான பதிவு.... வாழ்த்துக்கள் அண்ணா.....

K.s.s.Rajh said...

எனக்கு மிகவும் பிடித்த நாடு இந்தியா.
ஆனால் ஈழத்தமிழர்களை வைத்து தங்கள் சுயலாபம் தேடும் தமிழக அரசியல்வாதிகளைப்பிடிப்பது இல்லை.

அப்பறம் இந்தியா என்றதும் ஞாபகத்துக்கு வருபவை.
தாஜ்மஹால்
அப்துல்கலாம்
மாகாத்மா காந்தி
கங்குலி என்ற தலை சிறந்த கேப்டன்

தர்ஷன் said...

நமக்கு இந்தியான்னா முதலில் க்ரிக்கெட் அப்புறம் சினிமா அதற்கடுத்து அரசியல்வாதிகள்தான் ஞாபகம் வரும்.
எனக்கு ஒரு 4 வயது இருக்கும் போது ராஜீவ் காந்தி ஒரு ஹீரோ. அவரை ரட்சகனாக என் பெற்றோர் அறிமுகம் செய்ததால் செய்திகளில் அவரைக் காட்டும் போது ஓடி வந்து பார்ப்பேன்.
அவர் கொல்லப்பட்ட போது எங்கள் சித்தி யாழ் பல்கலைகழகத்தில் படித்துக் கொண்டிருந்தார். மரணச்செய்தி ஊர்ஜிதமானபோது அவரது தோழிகளில் பலர் எழுந்து கைத்தட்டி கொண்டாடியதாக அறிந்தேன்.
இப்போதும் அவரது மறைவு தமிழர்களுக்கு ஏற்படுத்திய இழப்புகளால் வருத்தம் இருக்கின்றதே ஒழிய அவர் செத்துப் போனதில் கொஞ்சம் கூட வருத்தமில்லை.

Anonymous said...

இலங்கை தமிழர்களிடம் நான் ஒரு தமிழன் என்ற உணர்வு மேலோங்கி உள்ளது. ஆனால் தமிழக தமிழர்களிடம் அது அவ்வளவாக இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அவர்கள் இந்தியா என்ற ஒரு பெரிய துணை கண்டத்தில் தங்களை அறியாமலேயே இன உணர்வை இழந்து அறுவது வருடங்களுக்கு முன்பு ஐக்கியமாகி விட்டார்கள். அப்பொழுது வலிமையான ஒரு தமிழ் விடுதலை இயக்கம் இல்லை. அனைத்தும் ஆங்கிலேயரிடம் விடுதலை பெற்றால் போதும் என்ற இய்யகங்களாகவே இருந்தன. எனவே இந்தியாவையும் தமிழகத்தையும் ஒன்றாக பார்க்க கூடாது.

தமிழகம் இந்தியாவின் ஒரு அங்கமாக இருப்பதினால் பெற்றவை பல , இழந்தவையும் பல. மெட்ராஸ் பிரெசிடென்சி என்று அழைக்க பட்ட மாநிலம் தமிழ் நாடு என்று அழைக்க பட்டு தமிழர்களின் பூர்விக இடம் என்று கருதப்பட்டு உள்ளது. அது சாதனை. ஆனால் ஈழம் என்பதும் தமிழர்களின் பூமி என்று அறியபடாதது ஒரு வேதனை, உதவி செய்ய முடியாதது மற்றொரு வேதனை. இப்படிக்கு ஒரு தமிழக தமிழன்.

Anonymous said...

///அப்துல் கலாம் (அட பாருங்களேன் சச்சினைக் கூட வென்றிட்டார்)\\\

சச்சின் கிரிக்கெட் விளையாடி எதை கிழித்தார் ? பார்பவர்களின் கரண்டு பில்லை கூட்டினார், காலத்தை வீணடித்தார். மக்கள் பசி போக்கும் ஒரு விவசாயிக்கு இவர் ஈடாவாரா? கலாம் ராக்கெட் மூலம் இந்தியாவை சொந்த காலில் நிற்க வைத்துள்ளார் . விளையாட்டு உடலுக்கு நல்லதுதான் ஆனால் அவர்கள் பணம் சம்பாதிக்க மக்களை பகடைகளாக பாவிப்பது கேவலமானது. பொருளாதார அபிவிருத்தி என்பது உற்பத்தியால் வருவது விளையாட்டால் அல்ல.

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner