கிறீஸ் மனிதன் கதை உண்மையா?

ARV Loshan
19

இலங்கையை கடந்த ஒரு ஒரு வாரமாகக் கலக்கி வரும் ஒரு விடயமா கிறீஸ் மனிதன்/மனிதர் என்று சொல்லப் படும் மர்ம மனிதர் விவகாரம்.
திடீர் திடீரென இலங்கையில் குறித்த சில பகுதிகளில் தோன்றும் மர்ம மனிதர்கள் பற்றிய பரபரப்பு ஒரே குழப்பமாக இருக்கிறது.

முதலில் இலங்கையின் தென் கிழக்குப் பிராந்தியத்தின் சில ஊர்களில் இந்த மர்ம மனிதர்கள் பரவலாகப் பல்வேறு இடங்களில் திடீர் திடீரென வந்து பரபரப்பை ஊட்டியதாகக் கதைகள் பரவின.
அம்பாறை மாவட்டத்தின் பல ஊர்களிலும் இவ்வாறு மர்ம மனிதர்கள் வந்துபோனதாகவும் காவல்துறை சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்றும் செய்திகள் வந்தவண்ணமே இருந்தன.

ஊர்கள் பீதியில் இருப்பதாகவும், பெண்கள் பயந்துபோய் இருப்பதாகவும் கதைகள் வந்துகொண்டே இருந்தன..

அம்பாறையில் உள்ள எமது என்யர்கள் சிலரிடம் கேட்டபோது சிலர் கண்டதாக சொன்னார்கள். ஆனால் அவர்களது கருத்துக்கள் தெளிவில்லாமல், முன்னுக்குப் பின் முரணானதாக இருந்தது. சிலர் கண்டதாக ஆரம்பத்தில் சொன்னாலும் பின்னர் சில கேள்விகளின் பின்னர் "கறுத்த உருவம்; தூரத்தில் தெரிந்தது; அது மர்ம மனிதனாக இருக்கும் என்று தான் நினைக்கிறேன்...." இப்படிக் குழப்பமான பதில்கள்..

இன்னும் நிரூபிப்பதற்கான எந்தவொரு தடயமும் இல்லை.. காலடிகள் பதிந்த மண்ணின் புகைப்படங்கள் தவிர.

ஆனால் வன்முறை சம்பவங்கள் என்று எவையும் இடம்பெற்றதாக இல்லை.

இப்போது சில நாட்களாக மலையகப் பக்கம் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுவதாக செய்திகள் வர ஆரம்பித்துள்ளன.

ஆனால் செய்திகள் கொஞ்சம் பீதியை வரப்பன்னுகின்றன..

நான்கைந்து கொலைகள், சில தாக்குதல் சம்பவங்கள் போன்றவை நடந்திருக்கின்றன.. அதுவும் தோட்டப் பகுதிகளில்.. பகல் நேரங்களிலும் கூட..
லிந்துல, நுவர எலியா, பத்தன, ஹட்டன், தலவாக்கலை, கொடைகளை, பதுளை என்று பல்வேறு இடங்களிலும் கிறீஸ் மனிதர்களின் நடமாட்டம் பற்றி செய்திகள் வந்துகொண்டே இருந்தன.
(சிங்களத்தில் கிறீஸ் யக்கா - பே என்று அழைக்கிறார்கள்)

உடல் முழுதும் கிறீஸ் (grease) பூசிக்கொண்டு நடமாடும் மனிதர்கள் கறுப்பு நிற ஆடை அணிந்து முகத்தையும் மறைத்துக் கொண்டு கையில் கத்தி போன்ற கூரிய ஆயுதங்களுடன் தாக்குவதாகத் தான் செய்திகள்.
இந்தத் தாக்குதல் அனைத்துமே பெண்களுக்கு எதிராகவே நடந்திருக்கின்றனவாம்.

ஆனால் தொடர்ந்து இவை வெறும் 'வதந்தி' என்றே போலீஸ் மறுத்துவருகிறது.
அண்மையில் நாவலப்பிட்டியில் வைத்து பெண் ஒருவரைத் தாக்கிய கிறீஸ் மனிதன் ஒருவனைப் பொதுமக்கள் பிடித்துக் காவல்துறையினரிடம் ஒப்படைத்தும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று விசனம் எங்களுக்கு வந்திருந்தது.

எங்கள் செய்திப் பிரிவினூடாக விசாரித்தோம்.. பயமும் குழப்பமுமே மக்கள் மத்தியில் அதிகம்.


இன்று காலை விடியலில் இது பற்றி அந்தந்தப் பகுதி நேயர்களிடம் கேட்டுப் பார்க்கலாமே என்று பார்த்தால், நேரில் கண்டவர்கள் யாருமே இல்லை.


கண்டேன் சொல்கிறேன் ; அழைப்பை எடுங்கள் என்று சொன்னவர்களும் தடுமாறுகிறார்கள்.
ஆனால் அப்படி கிறீஸ் (மர்ம) மனிதர்கள் உலவுவது உண்மையாக இருந்தால் இது ஒரே மனிதனாக இருக்க முடியாது. ஒரு மாபெரும் குழுவாக இருக்கவேண்டும்.
ஒரே நாளில் பல்வேறு இடங்களில் இப்படியான சம்பவங்கள் நடந்திருக்கிறதே.

அதுவும் இந்த மர்ம மனிதரைக் கண்டவர்கள் சொல்லும் குறிப்புக்களும் கோழப்பம்..

சிலர் சொல்கிறார்கள் பிடிபட்டால் தப்பும் எண்ணத்தில் உடல் முழுதும் கிறீஸ் தடவிக்கொண்டு வருகின்றார்கள் என்று. இன்னும் சிலர் இல்லை வெறும் கறுப்பு உடையை உடல் முழுதும் போர்த்திக்கொண்டு வருகிறார்கள் என்று சொன்னார்கள்; இன்னும் சிலரோ நீச்சல் உடை போன்ற வழுகக் கூடிய உடைகளை அணிந்து வருகிறார்கள் என்றார்கள்.

நேற்று பதுளையில் நடந்த ஒரு நடுத்தர வயதுப் பெண் மீதான தாக்குதல் பற்றி அவரிடம் கேட்டபோது யாரோ தன்னைத் தாக்கினார்கள் என்றும் தான் சரியாக அவர்களைக் கவனிக்கவில்லை என்றும் சொல்கிறார்.

வேறு ஒரு இடத்தில் நடந்த தாக்குதலில் காயப்பட்ட பெண் (இவரது கூந்தலை வெட்டிவிட்டார்கள்) இருவர் தன்னைத் தாக்கியதாகவும் ஆனால் அவர்கள் தாக்க மட்டுமே வந்தார்கள் போல் தெரிவதாகவும், பாலியல் சேஷ்டைகள் புரிய வந்தவர்கள் போல் தெரியவில்லை என்றும் சொல்கிறார்.

வேறு சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள் நடுத்தரவயதுப் பெண்களாகவே இருக்கிறார்கள்.

தனியாகப் பெண்கள் இருக்கும், நடமாடும் இடங்களிலேயே இப்படியான சம்பவங்கள் நடந்திருக்கின்றன. ஆனால் திருட்டுக்கள் எவையும் இதுவரை இடம்பெற்றதாகத் தகவல் இல்லை.


ஏன்?
என்ன நடக்கிறது என்ற குழப்பம், மர்மம் நீடிக்கிறது.
காவல்துறையின் அசமந்தமும், அக்கறையின்மையும் கூட கொஞ்சம் சந்தேகம் தருகிறது.

சிலவேளைகளில் இது வேறேதாவது பின்புல நோக்கத்துடன் முன்கொண்டு நடத்தப்படுகிறதா?
எங்காவது ஒரு இடத்திலே நடமாடிய ஒரு 'கிறீஸ் மனிதனைப்' பார்த்து வாய்ப்புக் கிடைத்தவர்கள் தமக்கு வாய்ப்பாக இதைப் பயன்படுத்தி விளையாடுகிறார்களோ?

செய்தியாளர்கள், அந்தப் பிரதேசத்தில் இருக்கும் ஆரவ்முள்ளவர்கள் யாரும் இன்னும் இது பற்றி விரிவாகப் பேச, எழுத ஆரம்பிக்கவில்லை.
இந்த மர்மம் துலங்கவேண்டும்..
அந்தப் பகுதி அப்பாவி மக்களின் பீதி அகலவேண்டும்.

இது பற்றி ஆராய, புலனாய்வு செய்தி சேகரிப்பில் ஈடுபட விரும்புவோருடன் இணைந்துகொள்ள விரும்புகிறேன்.

Post a Comment

19Comments

Please Select Embedded Mode To show the Comment System.*