February 17, 2015

உலகக்கிண்ணம் 2015 - சவாலும், கடுமையான போட்டியும் நிறைந்ததாக மாறியுள்ள பிரிவு B - #cwc15

B பிரிவுகளின் அணிகளின் அலசலாக ஸ்ரீலங்கா விஸ்டனுக்கு எழுதிய கட்டுரையுடன்,
மேலதிகமாக சில விடயங்களை சேர்த்து இடும் பதிவு இது.


உலகக்கிண்ணத்தில் நான்கு நாட்கள் முடிந்திருக்கின்றன.
6 போட்டிகள் - நியூசீலாந்து மட்டுமே இரு போட்டிகளை விளையாடியிருக்கின்றது.

ஒரு டெஸ்ட் விளையாடும் அணி, டெஸ்ட் அந்தஸ்தில்லாத சிறிய அணியிடம் தோல்வியுற்ற அதிர்ச்சி முடிவு.
அதுவும் 300க்கு மேற்பட்ட ஓட்ட இலக்கைத் துரத்தி வென்றுள்ளது அயர்லாந்து.

ஆறு 300க்கு மேற்பட்ட ஓட்டங்கள்.

5 சதங்கள்.
3 ஐந்து விக்கெட் பெறுதிகள்.

ஆனால் நேற்றுவரை  வெற்றி பெற்ற அணிகள் ஐந்துமே மிக இலகுவாக வென்றிருந்தன.

இறுதி இரண்டு போட்டிகளைத் தவிர ஏனைய நான்கு போட்டிகளிலும் முதலில் துடுப்பெடுத்தாடிய அணிகளே வெற்றி பெற்றிருந்தன.

எனினும் இன்றைய போட்டியில் ஸ்கொட்லாந்து, அதிக வாய்ப்புக்களை உடைய நாடாகப் பலரும் கருதியுள்ள. சொந்த ஆடுகள அனுகூலங்களையும் கொண்ட நியூசீலாந்து அணியைக் கடுமையாக சோதித்திருந்தது.
7 விக்கெட்டுக்களை இழந்தே 143 என்ற இலக்கைக் கடக்கக் கூடியதாகவிருந்தது.

ஆடுகளத்தின் அனுகூலமும், முயற்சியும் இருந்தால் எந்த சிறிய அணியும் பெரிய அணிகளுக்கு சவால் கொடுக்கக்கூடிய தொடராக இந்த உலகக்கிண்ணம் மாறிவருகிறது.

B பிரிவு அணிகளில் முக்கிய அணிகளாகப் பலராலும் கருதப்படாத இரு அணிகளான சிம்பாப்வே மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகளைப் பற்றி முன்னைய கட்டுரையில் சிலாகித்து, கவனிக்கக்கூடிய அணிகள் என்று குறிப்பிட்டிருந்தேன்.

அவற்றில் 'Dark Horses' சிம்பாப்வே தென் ஆபிரிக்காவுக்கே சவால் கொடுத்தது.

அயர்லாந்து அணி மேற்கிந்தியத் தீவுகளை மண் கவ்வச் செய்து,
2007இல் பாகிஸ்தான் & பங்களாதேஷ்
2011இல் இங்கிலாந்து,
வரிசையில் உலகக்கிண்ணப் போட்டிகளில் டெஸ்ட் அணியொன்றை நான்காவது தடவையாக வீழ்த்தியுள்ளது.

தனது அணியின் முக்கிய வீரர்களை இங்கிலாந்தின் வாய்ப்புக்களுக்கு இழந்து வந்தாலும் கூட, தொடர்ந்தும் வெற்றிகளைப் பெற்று முன்னேறி வரும் திறமையான அயர்லாந்து சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு, தனக்கான டெஸ்ட் வாய்ப்பை மீண்டும் அழுத்தமாக கோரிய விண்ணப்பம் இது.

இதே போல முன்னைய கட்டுரையில் நான் சொன்னது போல,

//எனது கணிப்பில் இரண்டு போட்டிகளாவது நிச்சயமாக எதிர்பாராத அதிர்ச்சியான முடிவுகளைத் தரும் என நம்புகிறேன்.//
என்பதில் இன்னும் சில முடிவுகள் இதே போல ஆகும் போல தெரிகிறது.

ஓட்டக்குவிப்பு அதிகமுள்ள உலகக்கிண்ணத் தொடர் என்பது ஒவ்வொரு போட்டியிலுமே குவிக்கப்படும் 300+ ஓட்டங்கள் நிரூபித்துக்கொண்டிருக்க,

 சாதனைகளில் சிலவாவது உடைக்கப்படும் என்று கூறியிருந்தேன்.

தென் ஆபிரிக்காவின் மில்லர் - டுமினியினால் உலகக்கிண்ணப் போட்டிகளில் மட்டுமில்லாமல், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலேயே 5வது விக்கெட்டுக்கான இணைப்பாட்ட சாதனையை முறியடிக்கப்பட்டது.

இங்கிலாந்தின் மோர்கனும் போபராவும் அயர்லாந்து அணிக்கெதிராக 2013இல் பெற்றிருந்த 226 ஓட்டங்களை முறியடித்து, 256 ஓட்டங்கள் என்ற புதிய சாதனையைப் பதிந்தனர்.

இன்னும் பல சாதனைகள் வரிசையாக முறியும், உடையும் போல தெரிகிறது.

இந்த உலகக்கிண்ணப் போட்டிகளின் மிக முக்கியமான போட்டிகளில் ஒன்றாகக் கருதப்பட்ட இந்திய - பாகிஸ்தான் போட்டியும் பெரிய விறுவிறுப்பு இல்லாமல் முடிவுக்கு வந்தது.
6வது தடவையாகவும் பாகிஸ்தான் இந்தியாவிடம் தோற்றுப்போனது.

முதல் தடவையாக இந்திய வீரர் ஒருவர் பாகிஸ்தானிய  அணிக்கெதிராக  உலகக்கிண்ணப் போட்டிகளில் சதம் பெற்றுள்ளார்.

-----------------
இதுவரை நடந்துள்ள 6 போட்டிகளில் இரண்டு முக்கிய சர்ச்சைகள் தொடர்ந்தும் விவாதத்துக்கு உள்ளாகும் போல தெரிகிறது.

1.அவுஸ்திரேலிய - இங்கிலாந்து போட்டியில் இறுதியாக ஜேம்ஸ் அன்டர்சனின் ரன் அவுட் முறை மூலமான ஆட்டமிழப்பு.
நடுவரின் தவறு காரணமாக போட்டி முடிந்தவுடனேயே சர்வதேச கிரிக்கெட் பேரவை மன்னிப்பும் கோரியது.
விதிமுறைகள் தெரியாத குழப்பத்தினால் நடுவர்கள் குமார் தர்மசேன, ஸ்டீவ் டேவிஸ் ஆகியோர் விட்ட தவறு, ஜேம்ஸ் டெய்லர் என்ற இளம் துடுப்பாட்ட வீரரின் உலகக்கிண்ண சதம் பெறும் அரிய வாய்ப்பை இல்லாமல் செய்தது.

2. இந்திய - பாகிஸ்தான் போட்டியில் உமர் அக்மலின் ஆட்டமிழப்பு.
துடுப்பில் பட்டதா படவில்லையா என்று சந்தேகமான ஆட்டமிழப்பு, தொலைக்காட்சி நடுவர் மூலமாக ஆட்டமிழப்பு வழங்கப்பட்டது.

Out or Doubt? Controversial Snicko Dismissal of Umar Akmal - India vs Pakistan

ஆனால் snickometer கூட தெளிவான முறையில் பந்து துடுப்பில் பட்டதை உறுதிப்படுத்தவில்லை.
வாதப் பிரதிவாதங்களும், இனி வரும் போட்டிகளில் இப்படியான முடிவுகள் பற்றிய யோசனைகளும் தொடரும்.

----------------------

B பிரிவு அணிகளில் ஐக்கிய அரபு ராஜ்ஜிய அணி மட்டும் இன்னும் ஒரு போட்டியிலும் விளையாடவில்லை.​
A பிரிவில் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய அணிகளுக்கு இனித் தான் போட்டிகள்.நாளை.

மிக குழப்பமான, அதேவேளை கடுமையான போட்டி நிறைந்ததாக மாறியுள்ள பிரிவு B அணிகள் பற்றிய அலசல்.


தென் ஆபிரிக்கா 


92ஆம் ஆண்டிலிருந்து உலகக்கிண்ணப் போட்டிகளில் பங்குபற்றிவரும் தென் ஆபிரிக்கா,3 தடவைகள் அரையிறுதிக்கு வந்தும் இதுவரை இறுதிப்போட்டி ஒன்றிலேனும் விளையாடமுடியாத துரதிர்ஷ்டசாலி அணி.

உலகக்கிண்ணம் வெல்ல மிக வாய்ப்புள்ள அணியாக 1996 முதல் ஒவ்வொரு உலகக்கிண்ணப் போட்டிகளிலும் தென் ஆபிரிக்கா கூறப்பட்டு வந்தாலும் முக்கியமான தருணங்களில் எப்படியாவது தோற்று வேளியேறிவிடுவதனால் எதிர்பார்க்கும்போது தோற்றுவிடுபவர்கள் - chokers என்ற பட்டம் அவர்களோடு ஒட்டிக்கொண்டிருக்கிறது.

ஒரு சாபம் போல தென் ஆபிரிக்காவைத் துரத்தும் உலகக்கிண்ண இன்மை இம்முறையாவது தென் ஆபிரிக்காவின் பொற்காலப் பரம்பரை என்று சொல்லப்படும் ஏபி டீ வில்லியர்ஸ், ஹாஷிம் அம்லா, டேல் ஸ்டெய்ன், மோர்னி மோர்க்கல், டுமினி, டூ ப்ளேசிஸ், பிலாண்டர் போன்றோர் அடங்கியுள்ள அணி மூலமாகத் தீரும் என்று தென் ஆபிரிக்க ரசிகர் மட்டுமல்லாது, எல்லோருமே நம்புகின்றனர்.

அண்மைக்கால தொடர்ச்சியான வெற்றிகள், எந்த ஆடுகளங்கள், எந்த சூழ்நிலைகளிலும் வெற்றிபெறக்கூடிய அணியாக, முக்கியமாக அத்தனை வீரர்களும் மிகச் சிறப்பான formஇல் உள்ள அணியாகத் தென் ஆபிரிக்கா வளர்ந்து நிற்கிறது.

உலகின் முதல் நிலை அணியாக நிற்கும் அவுஸ்திரேலிய அணிக்கு அவுஸ்திரேலிய மண்ணில் வைத்து சவால் விடக்கூடிய ஒரே அணியாகவும் தென் ஆபிரிக்கா மட்டுமே தெரிகிறது.

உறுதியான மிக நீண்ட துடுப்பாட்டம், உலகின் மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சு, உயர் தரக் களத்தடுப்பு என்று எல்லா விதத்திலும் பலமாகத் தெரியும் ​தென் ஆபிரிக்காவின் மிகப் பெரும் ​பலம் மும்மூர்த்திகளான டீ வில்லியர்ஸ், அம்லா மற்றும் ஸ்டெயின்.

அதிலும் எந்த வேளையிலும் அடித்து நொறுக்கி ஓட்ட எண்ணிக்கையை அதிவேகமாக உயர்த்தக்கூடிய ஒரு துடுப்பாட்ட சூறாவளியான அணித்தலைவர் டீ வில்லியர்ஸ் அண்மையில் கூட ஒருநாள் சர்வதேசப் போட்டிகளின் வேகமான அரைச்சத, சத சாதனையைத் தன்வசப்படுத்தியுள்ளார்.

தென் ஆபிரிக்காவின் பலவீனமாகக் கருதப்பட்ட சுழல்பந்துவீச்சு இம்ரான் தாஹிரினால் ஓரளவு நிவர்த்திக்கப்பட்டாலும், இன்னும் சில நேரம் தடுமாறுகிறது.

முக்கியமான தருணங்களில் தடுமாறுவதை தென் ஆபிரிக்கா நிவர்த்தி செய்துகொண்டால் இறுதி வரை பயணிப்பது மட்டுமல்ல கிண்ணத்தையும் வெல்லலாம்.

முதல் போட்டியில் சிம்பாப்வேயினால் சோதிக்கப்பட்டது போக, மில்லர், டுமினி ஆகியோரின் சத்தங்கள் இன்னொரு விதமான நம்பிக்கையையும் கொடுத்துள்ளன.

​​கவனிக்கக்கூடிய முக்கிய வீரர்கள் - ​​டீ வில்லியர்ஸ், அம்லா


இந்தியா 


நடப்பு உலக சம்பியன்கள் என்பது ஒரு பக்கம் நம்பிக்கை இன்னொரு பக்கம் அழுத்தம்.
அவுஸ்திரேலிய மண்ணில் அண்மைக்கால தடுமாற்றங்கள் பாகிஸ்தான் அணியுடனான வெற்றியினால் துடைக்கப்பட்டு, சோர்ந்து போயிருந்த இந்திய அணிக்கு மட்டுமல்லாமல் ரசிகர்களுக்கும் நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது.

அடுத்தடுத்த உலகக்கிண்ணங்களை வென்ற கிளைவ் லொயிட், ரிக்கி பொன்டிங்கின் வரிசையில் சேர்வதற்கான வாய்ப்பு மகேந்திர சிங் தோனிக்கும் கிடைக்குமா என்பது மிக முக்கியமாக இந்தியாவின் பலமான துடுப்பாட்டத்திலேயே தங்கியுள்ளது.

ஓட்டங்களை மலையாகக் குவிக்கும் கோளி, ரோஹித் ஷர்மா, தவான், ரெய்னா, ரஹானே, தோனி என்று உலகின் அத்தனை பந்துவீச்சு வரிசைகளையும் அச்சுறுத்தும் துடுப்பாட்ட வரிசை.

வாய்ப்புக் கிடைத்தால் 400 ஓட்டங்களையும் நெருங்கக்கூடிய நம்பிக்கையான துடுப்பாட்டம்.

அதிலும் அண்மைக்காலத்தில் ஓட்டக் குவிப்பு இயந்திரமாக மாறிவரும் கோளியும், பெரிய ஓட்ட எண்ணிக்கைகளை அடிக்கடி பெற்றுவரும் ரோஹித் ஷர்மாவும் இந்தியாவின் மிகப் பெரும் பலங்கள்.

எனினும் எகிறும் வேகப்பந்துகளும், தடுமாற வைக்கும் ஸ்விங் பந்துகளும் இந்திய துடுப்பாட்ட வீரர்களை அடிக்கடி சோதித்தே வருகின்றன.

அடுத்து, இந்தியாவின் மிகப் பலவீனமான புள்ளி அவர்களது பந்துவீச்சு.
எனினும் இப்போது உமேஷ் யாதவும், ஷமியும் துல்லியத்தை தமது துருப்புச் சீட்டாக பயன்படுத்துகின்றனர்.
எனினும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஓட்டங்களைக் கட்டுப்படுத்தியத்போல  அஷ்வின் பந்துவீசினால் இந்தியாவுக்கு இன்னொரு குறை நீங்கும்.

தேவையான போது புவனேஷ் குமாரின் துல்லியமான பந்துவீச்சும், ஸ்டுவர்ட் பின்னியின் மிக சாதுரியமான மிதவேகப்பந்துவீச்சும், அவரது சகலதுறைத் திறமையும் கைகொடுக்கும்.

ரெய்னா, கோளி, ஜடேஜா, ரஹானே போன்ற இளைய தலைமுறை வீரர்கள் தரும் நம்பிக்கை தரக்கூடிய களத்தடுப்பு.


​​கவனிக்கக்கூடிய முக்கிய வீரர்கள் - விராட் கோளி, சுரேஷ் ரெய்னா

இதே போல விளையாடினால், அழுத்தத்துக்கு உட்படாவிட்டால் காலிறுதி தாண்டி அரையிறுதி வரை செல்வது உறுதி.


பாகிஸ்தான் 


அஜ்மல், ஜுனைத் கான், ஹபீஸ் ஆகியோர் இல்லாமல் ​பலவீனப்பட்டுப் போயிருக்கும் பந்துவீச்சும், உறுதியில்லாமல் இருக்கும் அணித் தெரிவுகளும் பாகிஸ்தான் அணி இந்தியாவுடன் விளையாடிய விதமும் எந்தவொரு நம்பிக்கையையும் தருவதாக இல்லை.

இந்தக் குறைகள் நீக்கப்படாவிடின், இந்தப் பிரிவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தக்கூடிய அணிகளான அயர்லாந்து, சிம்பாப்வே ஆகிய அணிகளிடமும் தோற்றுவிடக்கூடிய அபாயம் இருக்கிறது.

எதிரணிகளை அச்சுறுத்தக்கூடிய பநதுவீச்சாளரோ, நீண்ட நேரம் துடுப்பெடுத்தாட நம்பி இருக்கக்கூடிய துடுப்பாட்ட வீரர்களோ இல்லாத குறையோடு மோசமான களத்தடுப்பும் சேர்ந்து பாகிஸ்தானை பலிகொள்ளப் போகிறது.

போதாக்குறைக்கு நம்பகமான சப்ராஸ் அஹ்மத்தை நீக்கிவிட்டு, உமர் அக்மலை விக்கெட் காப்பாளராக போடுவது பாகிஸ்தானுக்கு அனுகூலங்கள் தருவதை விட, முக்கியமான பிடிகள் தவறவிடப்பட்டு பாதகங்கள் தான் தரப்போகிறது.

சப்ராஸ் உபயோகமான ஓட்டங்களும் பெற்றுத்தரக்கூடியவர்.

மிஸ்பா உல் ஹக், யூனிஸ் கான், அஃபிரிடி ஆகிய மூத்த வீரர்கள் தான் அணியை எப்போதும் காப்பாற்ற வேண்டும் என்பதை விட  இந்த அணி இளையவர்களான அஹ்மட் ஷெசாட், சொஹைல் ஹரிஸ்,உமர் அக்மால் மற்றும் சொஹைல் கான் மூலமாக அணி முன்னேறுவது ஆரோக்கியமானது.

அப்ரிடி அதிரடி துடுப்பாட்டம் மூலாமாக முக்கிய ஓட்டங்களையும், விக்கெட்டுக்களை உடைக்கும் பந்துவீச்சின் வீரியத்தையும் காட்டின் பாகிஸ்தான் உற்சாகம் பெறும்.

​கவனிக்கக்கூடிய முக்கிய வீரர்கள் - அஹ்மட் ஷெசாட், சொஹைல் கான்.

​இப்படியே போனால் காலிறுதி வந்தாலே பெரிய விஷயம்.


மேற்கிந்தியத் தீவுகள்.


​கிரிக்கெட் சபை - வீரர்கள் சண்டையினால் சின்னாபின்னம் ஆகியுள்ள முன்னாள் சம்பியன்கள்.
முக்கியமான மூன்று வீரர்கள் இன்மை, அணிக்குள்ளே சுமுக நிலை இல்லை, அணித் தலைவருக்கும் அனுபவம் இல்லை, நட்சத்திர வீரர்கள் கெயில், சாமுவேல்ஸ், சமி, ரோச், ட்வெய்ன் ஸ்மித் போன்ற வீரர்கள் இருந்தும் வெற்றி பெறுவது எப்படியென்று மறந்துபோயுள்ள ஒரு அணி.

தொடர்ச்சியான தோல்விகள் அணிக்குள்ளே நம்பிக்கையீனத்தை நீண்ட நாட்களாக விதைத்துள்ளன.

கெயில், சாமுவேல்ஸ் எல்லாம் தனித்து ஒருநாள் போட்டியை வென்று கொடுத்து நாட்களாகின்றன.
பணம் கொழிக்கும் T20 போட்டிகள் பலவற்றில், பல நாடுகளின் லீக்குகளில் அதிகமாக விளையாடியோ என்னவொ ஒருநாள் போட்டிகளில் ஒரு அணியாக ஒட்டி விளையாடுவது சிரமமாக இருக்கிறது.

அணிக்குள் வரும் இளையவர்களும் நம்பிக்கை தருவதாக இல்லை.

அயர்லாந்துடனான தோல்வி இந்த அணிமீது இன்னும் நம்பிக்கையீனத்தையும், அணிக்குள்ளேயே சலிப்பையும் ஏற்படுத்தியிருக்கும்.

சமி, லென்டில் சிமன்ஸ் ஆகியோரின் சிறப்பான அன்றைய ஆட்டமும், டரன் பிராவோ போன்ற திறமை கொண்ட இளம் வீரர்களும் அணியின் அனுபவம் குறைந்த தலைவர் ஹோல்டரை நம்பிக்கையுடன் வழிநடத்தும் உற்சாகத்தை வழங்கவேண்டும்.

ட்வெய்ன் ப்ராவோ, பொலார்ட், சுனில் நரெய்ன் ஆகியோர் இல்லாத ஓட்டைகள் அடைக்கமுடியாதளவு பெரிதாக இருக்கின்றன.
ஆனால், யாரும் நம்பமுடியாதளவு பெரிய அணிகளை திடீரென வீழ்த்தக்கூடிய ஆற்றலும் ஒளிந்துள்ள அணி என்பது உண்மை.

காலிறுதி வாய்ப்புக்கள் அயர்லாந்துடனான தோல்விக்குப் பின் ஊசலாடுகின்றன.
பெரிய அணியொன்றை வீழ்த்தி ஆச்சரியத்தை ஏற்படுத்தினால் மீண்டும் உற்சாகத்துடன் மேலே மேலே பயணிக்கும்.


கவனிக்கக்கூடிய முக்கிய வீரர்கள் - டரன் சமி, க்ரிஸ் கெயில்.


அயர்லாந்து


இந்த உலகக்கிண்ணத்தில் கவனிக்கக்கூடிய ஆற்றல் மிக்க ஆச்சரிய அணி.
இதுவரை டெஸ்ட் அந்தஸ்து இல்லாத அணியாக அதிக டெஸ்ட் விளையாடும் அணிகளை உலகக்கிண்ணத்தில் வீழ்த்திய அணி என்ற பெருமை அயர்லாந்துக்கே உள்ளது.

சில முக்கிய வீரர்களை காலாகாலம் இங்கிலாந்துக்கு இழந்துகொண்டு வந்தாலும் திறமை கொண்ட வீரர்களைக் கண்டெடுத்து,அனுபவம் வாய்ந்த அணியாகக் கட்டமைக்கப்பட்டுள்ள ஆற்றல்கொண்ட அணி.

அணியின் முக்கிய ஆறு வீரர்களும் ஏனைய டெஸ்ட் அணிகளுக்காக விளையாடி இருந்தால் இப்போது 100க்கு மேற்பட்ட ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடி இருப்பார்கள்.

இந்த ஆறு பேரும் அணியின் பெரும் தூண்கள்..

தலைவர் போர்ட்டர்பீல்ட், ஓ பிரையன் சகோதரர்கள், ஜோய்ஸ், மூனி, ஸ்டேர்லிங்.
இவர்களோடு கூடவே குசாக் மற்றும் இளைய சுழல்பந்து வீச்சாளர் டொக்ரெல்.

வெற்றிக்கான தாகத்தோடு, ஒற்றுமையாக விளையாடும் இந்த அணிக்கு, பயிற்றுவிப்பாளர் பில் சிமன்ஸ் மற்றும் இங்கிலாந்து பிராந்தியப் போட்டிகளில் விளையாடிய அனுபவம் ஆகியன மேலதிக பலங்களாக சேர்கின்றன.

அயர்லாந்து அணி அதிரடியாக, ஆக்ரோஷமாக விளையாடும்போது டெஸ்ட் அனுபவம், பல போட்டிகளில் விளையாடிய அனுபவம் ஆகியன் இன்மை என்பது மட்டுமே பலவீனமாக இருக்கும்.

காலிறுதி செல்லக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவே கருதுகிறேன்.

சிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டி இதை முடிவு செய்யும்.

இந்தப் போட்டி, இந்த உலகக்கிண்ணத்தின் முக்கியமான போட்டிகளில் ஒன்றாக இருக்கும் எனக் கருதுகிறேன்.


கவனிக்கக்கூடிய முக்கிய வீரர்கள் - கெவின் ஓ பிரையன், ஸ்டேர்லிங்



சிம்பாப்வே


ஒரு மாதத்துக்கு முன்பு வரை கணக்கிலேயே எடுத்துக்கொள்ளப்படாத ஒரு அணியாக இருந்த சிம்பாப்வே வெற்றி பெற வழிகள் அறியாமல் தவித்தது.
ஒழுங்கான பயிற்றுவிப்பாளர் இல்லாமல்,அணியில் இருந்த திறமையான வீரர்களுக்கு ஒரு நம்பிக்கை இல்லாமல் அணி ஏனோ தானோவென்று இருந்தது.
போதாக்குறைக்கு ஊதிய சிக்கல்கள், ஒப்பந்த இழுபறி என்று காலாகாலமாக சிம்பாப்வே கிரிக்கெட்டை நாசமாக்கும் பல விடயங்கள்.

அணியின் இளம் வீரர்கள் பலர் தாமாக விலகிச் செல்லவும் விழைந்தனர்.

அனுபவம் வாய்ந்த டேவ் வட்மோர் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்ட பின்னர், அணியில் எப்படியானதொரு எழுச்சி.

மீண்டும் தலைவராக சிக்கும்புரா நியமிக்கப்பட்டு அணி சரியான முறையில் கட்டமைக்கப்பட்டு, அவரவருக்கான பொறுப்புக்கள் வழங்கப்பட்டு இப்போது சில காலம் முன்பு இருந்த வெற்றி பெறும் வாய்ப்புக்கள் கொண்ட சிம்பாப்வே அணி உருவாகியுள்ளது.

பயிற்சிப் போட்டிகளில் காட்டிய திறமை சிம்பாப்வே மீது கவனமாக இருக்கவேண்டும் என சொல்கிறது.

பிரெண்டன் டெய்லர், மசகட்சா, உத்செயா, தலைவர் சிக்கும்புரா போன்ற அனுபவ வீரர்களுடன், மிகத் திறமையான எதிர்காலத்துக்கான வீரர்கள் ஷோன் வில்லியம்ஸ், க்ரெய்க் எர்வின் மற்றும் சிக்கந்தர் ராசா ஆகியோர் சிம்பாப்வே அணியின் தூண்கள்.

சிம்பாப்வேயின் களத்தடுப்பு எப்போதுமே ஏனைய அணிகளுக்கு நிகராக சொல்லக் கூடியது.
அத்துடன் சுழல்பந்து வீச்சும் தகுந்த ஆதரவுள்ள ஆடுகளங்களில் எதிரணிகளை உருட்டிவிடும்.
எனினும் நம்பியிருக்கக்கூடிய வேகப்பந்து வீச்சு இன்மை தான் பலவீனம்.

வட்மோரின் சாதுரியமும், தேடலும் முயற்சியும் மிக்க அணியும் சேர்ந்து சிம்பாப்வேயையும் அயர்லாந்து போலவே காலிறுதி வாய்ப்பைப் பெறக்கூடிய அணியாகவே காட்டுகிறது.

கவனிக்கக்கூடிய முக்கிய வீரர்கள் - ஷோன் வில்லியம்ஸ், பிரெண்டன் டெய்லர்


ஐக்கிய அரபு ராஜ்ஜியம்


இந்த உலகக்கிண்ணத் தொடரில் விளையாடும் அணிகளில் மிகப் பலவீனமான அணி.

தலைவர், உப தலைவர் இருவருமே இந்த உலகக்கிண்ணத்தில் விளையாடும் வயது கூடிய வீரர்கள்.
மொஹம்மட் டாக்கிர், குராம் கான் ஆகிய 40 வயதைத் தாண்டிய அனுபவங்கள் இளைய வீரர்களுக்கு வழி காட்டலாம்.

இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் கழக மட்டப் போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்ட சில வீரர்கள் கொஞ்சம் நம்பிக்கை தரலாம்.

முக்கியமாக இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணிக்காக விளையாடிய ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் அன்ட்ரே பெரெஞ்சர், இந்தியாவின் கேரளாவுக்காக விளையாடியுள்ள சகலதுறை வீரர் கிருஷ்ண சந்திரன் ஆகியோர் ஊக்கமாக விளையாடுகின்றனர்.

மஞ்சுள குருகே என்ற இன்னொரு இலங்கை வீரரும் விளையாடுகிறார்.

ஒரு வெற்றியையும் பெறக்கூடிய அறிகுறிகள் தென்படவில்லை.


----------------------

அணிகளின் அண்மைக்கால ஆட்டங்களும், முன்னைய தரவுகளும் சொல்கின்ற விடயங்கள் இவை.

எனினும் ஆட்டங்களில் வீரர்கள் காட்டும் திறமையும் அந்தந்த சந்தர்ப்பங்களுமே உலகக்கிண்ணத்தின் விதியைத் தீர்மானிக்கப்போகின்றன.
போட்டிகளை ரசிப்போம்.

அடுத்தடுத்த பகுதிகளில் போட்டிகளின் பெறுபேறுகள், நிலவரங்கள்,சாதனைகள் போன்றவற்றை அலசுவோம்.
பட்டியலிடுவோம்.


1 comment:

Yarlpavanan said...

சிறந்த பதிவு
தொடருங்கள்

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner