February 24, 2015

ஓட்டக் குவியல்கள், சாதனை மேல் சாதனைகள், அதிர்ச்சிகள், அதிரடிகள் - உலகக்கிண்ணம் 2015இன் முதல் பத்து நாட்கள் #cwc15

உலகக்கிண்ணப் போட்டிகளின் முதல் பத்து நாட்கள் நிறைவுக்கு வந்துள்ளன.
15 போட்டிகளின் முடிவில்,

கிறிஸ் கெயில் சிக்ஸர் மழை பொழிந்து ஓட்டங்களை மலையாகக் குவித்து சாதனைகளை உடைத்து பெற்ற 215 ஓட்டங்கள் இந்த உலகக்கிண்ணத்தின் அடையாளமாக மாறியிருக்கிறது.

ஒரே இரட்டைச் சதம், ஏராளமான சாதனைகளைப் படைத்துள்ளது.

உலகக்கிண்ணத்தின் அதிகூடிய தனி நபர் ஓட்ட எண்ணிக்கை.
முன்னைய கரி கேர்ஸ்டனின் 188 ஓட்டங்களை முறியடித்தார்.

உலகக்கிண்ணத்தின் முதலாவது இரட்டைச் சதம்.
(இதைப் பற்றி முன்பே எதிர்வுகூறியிருந்தேன் 
//அதேபோல இப்போதெல்லாம் ஒருநாள் போட்டிகளிலும் இரட்டைச் சதம் மிக இலகுவாகப் பெறப்படுவதால், இம்முறை உலகக்கிண்ணப் போட்டிகளில் சிலவேளை முதலாவது உலகக்கிண்ண இரட்டைச் சதத்தைத் தரலாம்.//

ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 3வது அதிகூடிய ஓட்ட எண்ணிக்கை

ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் வேகமான இரட்டைச் சதம்.
- 138 பந்துகள்
முன்னைய சாதனை 140 பந்துகள் சேவாக்.

அத்துடன் *இந்தியாவுக்கு வெளியே பெறப்பட்ட முதலாவது ஒருநாள் இரட்டைச் சதம் & இந்தியர் அல்லாத ஒருவர் பெற்றுள்ள முதலாவது ஒருநாள் இரட்டைச் சதம்.

ஒரு நாள் போட்டியொன்றில் பெறப்பட்ட அதி கூடிய இணைப்பாட்டம் :

கிறிஸ் கெய்ல்- செமுவெல்ஸ் 372

உலகக் கிண்ணப் போட்டியொன்றில் வீரரொருவர் பெற்ற அதிகூடிய 6 ஓட்டங்கள்:
கெய்ல் 16

ஒருநாள் போட்டியொன்றில் அதிகூடிய 6 ஓட்டங்களைப் பெற்ற வீரர்கள் வரிசையில் ஏ.பி. டீ விலியர்ஸ் , ரோஹித் சர்மா ஆகியோரோடு இன்று கிறிஸ் கெய்ல் இணைந்துகொண்டார்.

அத்துடன் இன்று ஒருநாள் சர்வதேசப் போட்டி வரலாற்றில் அதிகூடிய ஒருநாள் இணைப்பாட்ட சாதனையும் கெயில் - சாமுவேல்ஸ் ஆகியோரால் முறியடிக்கப்பட்டது.

15 ஆண்டுகளுக்கு முன்னர் சச்சின் டெண்டுல்கர் - ராகுல் டிராவிட் ஆகியோர் நியூ சீலாந்துக்கு எதிராக பெற்ற 331 ஓட்டங்களை இன்று இவர்கள் முறியடித்தனர்.

ஒருநாள் சர்வதேச இணைப்பாட்ட சாதனைப் பட்டியல்


கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் ஒரேயொரு அரைச்சதத்தை மட்டுமே எடுத்திருந்த கெயில் 2013 ஜூன் மாதத்தில் இலங்கை அனிக்கெதிராகப் பெற்ற சதத்துக்குப் பின்னர் இன்று அசுர formக்கு திரும்பியுள்ளார்.

சீசாக்குள்ளே இருந்த பூதத்தை சிம்பாப்வே வெளியே எடுத்துள்ளது.
இனி யார் யாரை விழுங்கித் தள்ளப் போகிறதோ?

பல்வேறு சாதனைகளுடன் இரட்டைச் சதம் பெற்ற கெயில் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 9000 ஓட்டங்களைப் பூர்த்தி செய்தார்.

மேற்கிந்தியத் தீவுகளின் அணித் தலைவர் ஹோல்டர் சில நாட்களுக்கு முன்னர் சொன்னது போல, கெயிலின் பெரிய பங்களிப்பு இல்லாமலேயே 300 ஓட்டங்களை இரு தடவை கடக்க முடிந்தால் கெயில் formக்கு திரும்பும்போது 400 ஓட்டங்களைப் பெறலாம் என்பது கிட்டத்தட்ட நடந்துள்ளது.

இன்று சாமுவேல்ஸ் மட்டும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால் 400 ஓட்டங்கள் நிச்சயம்.

இது 1996க்குப் பிறகு முதல் தடவையாக அரையிறுதிக்கு அழைத்துச் செல்லுமா எனப் பார்க்கவேண்டும்.

அதேபோல சிம்பாப்வே அணியும் சளைக்காமல் இன்று 289 ஓட்டங்கள் வரை துரத்தியிருந்தது.
மூன்று போட்டிகளிலும் 275 ஓட்டங்களுக்கு மேல் பெற்றுள்ளது.
இந்த உலகக்கிண்ணத் தொடரில் சிம்பாப்வே ஏதாவது சாதிக்காமல் செல்லாது என்பது உறுதி.

சிம்பாப்வேயின் பிரெண்டன் டெய்லர், ஷோன் வில்லியம்ஸ் இருவரும் தொடர்ந்து பிரகாசித்துவருகின்றனர்.


தென் ஆபிரிக்காவை மேற்கிந்தியத் தீவுகள் சந்திக்கவுள்ள போட்டி களைகட்டும் என்பது இனி உறுதி.
தென் ஆபிரிக்காவில் வாங்கியதற்கெல்லாம் இங்கே திருப்பிக் கொடுக்குமா என்று கவனிக்கவேண்டும்.
இந்திய - மேற்கிந்தியத் தீவுகள் ஆட்டமும் போட்டிக்குரியதாக இருக்கும்.

பிரிவு Aயில் நியூ சீலாந்து, அவுஸ்திரேலிய அணிகளின் ஆதிக்கம் அதிகமாகத் தெரியும் நிலையில், பிரிவு Bயில் எதிர்பார்த்திருந்த தென் ஆபிரிக்க அணியை நேற்று தோல்வியடையச் செய்த நடப்பு சம்பியன்கள் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.

இதுவரை அயர்லாந்து அணி மேற்கிந்தியத் தீவுகளை வென்றது மட்டுமே பெரிய அதிர்ச்சியான முடிவாக இருந்தாலும், ஸ்கொட்லாந்து நியூ சீலாந்தையும், சிம்பாப்வே தென் ஆபிரிக்காவையும், ஐக்கிய அரபு ராஜ்ஜியம் சிம்பாப்வேயையும் எல்லாவற்றையும் விட ஆச்சரியமானதாக ஆப்கானிஸ்தான் இலங்கையையும் இறுதிவரை நடுங்க வைத்து, திணற வைத்து Associates என்று அழைக்கப்படும் 'சிறிய' அணிகளை குறைத்து மதிப்பிட முடியாது என்பதை அழுத்தமாகப் பதிந்துள்ளன.


காலிறுதி வரக்கூடிய வாய்ப்புடையவையாக இவற்றுள் ஒன்றிரண்டு அணிகளுக்கு வாய்ப்பு இருப்பதையும் மறுக்கமுடியாது.

இதுவரை ஸ்கொட்லாந்து, ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு ராஜ்ஜியம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நான்கு அணிகள் மட்டுமே எந்தவொரு வெற்றியையும் பெறாத அணிகள்.

முன்பே இந்தப் பகுதியில் நாம் எதிர்வு கூறியிருந்ததைப் போல, கூடிய ஓட்டங்கள் குவிக்கப்பட்ட தொடராக இந்த உலகக்கிண்ணம் இதுவரை தெரிகிறது.

15 போட்டிகளில், 10 தடவை 300 ஓட்டங்களுக்கு மேல் பெறப்பட்டுள்ளன.
இவற்றில் ஒரே போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் பெற்ற 300+ ஓட்டப்பெறுதியை அயர்லாந்து கடந்திருந்தது.

இன்று மேற்கிந்தியத் தீவுகள் அணி பெற்ற 372 ஓட்டங்களே இப்போதைக்கு கூடிய ஓட்ட எண்ணிக்கை.
இதுவே மேற்கிந்தியத் தீவுகள் அணியின் அதிகூடிய ஒருநாள் சர்வதேசப் போட்டி ஓட்ட எண்ணிக்கையும் ஆகும்.

நியூசீலாந்துக்கு எதிராக இங்கிலாந்து பெற்ற 123 ஓட்டங்களே இதுவரை குறைவான ஓட்டங்கள்.

தனி நபர் ஓட்ட எண்ணிக்கையில் கிறிஸ் கெயிலின் இன்றைய பேயாட்டம் தவிர, தென் ஆபிரிக்காவின் டேவிட் மில்லர் ஆட்டமிழக்காமல் 138, ஷீக்கர் தவான் 137, ஏரொன் ஃபிஞ்ச் 135 என்ற வரிசையில் 10 சதங்கள் பெறப்பட்டிருக்கின்றன.

இதுவரைக்கும் கூடுதலான ஓட்டங்கள் பெற்றிருப்போர்


கூடுதலான விக்கெட்டுக்களை வீழ்த்தியிருப்போர்


இவர்களில் டிம் சௌதீ ஒரே போட்டியில் 7 விக்கெட்டுக்களை இங்கிலாந்துக்கு எதிராக வீழ்த்தியிருந்தார்.
இது உலகக்கிண்ணப் போட்டிகளில் மூன்றாவது மிகச்சிறந்த பெறுதி என்பதோடு, நியூ சீலாந்து பந்துவீச்சாளர் ஒருவர் பெற்றுள்ள மிகச்சிறந்த ஒருநாள் பந்துவீச்சாகும்.


இன்றைய சாதனை வேட்டையைத் தவிர,

​மில்லர் - டுமினியின் 257 ஓட்ட இணைப்பாட்டம் (சிம்பாப்வேக்கு எதிராக) 5வது விக்கெட்டுக்கான புதிய உலக சாதனையானது இந்த உலகக்கிண்ணத் தொடரின் இன்னொரு முக்கிய விடயம்.

அத்துடன் மொயின் அலி - இயன் பெல் ஆகியோர் ஸ்கொட்லாந்துக்கு எதிராக இன்று பெற்ற 172 ஓட்டங்கள் உலகக்கிண்ணத்தில் இங்கிலாந்தின் மிகச்சிறந்த ​ஆரம்ப இணைப்பாட்டமாகும்.

இந்தப் பத்து நாட்களில் அணிகளாக ஆதிக்கம் செலுத்தியவை ஒரு பக்கம் இருக்க, தனி நபர்களாகக் கலக்கியவர்களாக..

இரண்டு போட்டிகளிலும் கலக்கியுள்ள தவான்
தவான் போலவே சதமும் அரைச்சதமும் பெற்றுள்ள லென்டில் சிமன்ஸ்
இங்கிலாந்தை துவம்சம் செய்து, உலகக்கிண்ணப் போட்டிகளில் வேகமான அரைச்சத சாதனையைப் பெற்ற பிரெண்டன் மக்கலம்

பந்துவீச்சில் தொடர்ச்சியாகக் கலக்கும் சௌதீ
அதே நியூ சீலாந்து அணியில் ஓட்டங்களை மிக சிக்கனமாகக் கொடுத்து வரும் வெட்டோரி
சிறிய அணிகளின் பந்துவீச்சுக்கு உரம் கொடுத்துவரும் ஹமிட் ஹசன், டேவி
தங்களது அணிகளுக்காக சிறப்பான பெறுபேற்றை வெளிப்படுத்தியுள்ள கோளி, ரஹானே, மஹேல ஜயவர்தன , மொயின் அலி, டரன் சமி, ஷோன் வில்லியம்ஸ், பிரெண்டன் டெய்லர்
என்று சாதனையாளர் பட்டியல் நீள்கிறது.


தவான் - கோளி  மற்றும் மக்கலம் - கப்டில் ஆகியோர் இதுவரை  இரண்டு சத இணைப்பாட்டங்களைப்  பெற்றுள்ளனர் என்பது இன்னொரு கவனிக்கக்கூடிய விடயமாகும்.

இந்த ஓட்டக்குவிப்புக்கள் மூலமாக முன்னரே எதிர்பார்த்த நியூ சீலாந்தும், அதிகமாக எதிர்பார்க்காத, ஆனால் நடப்பு சாம்பியன்களான இந்தியாவும் தத்தம் பிரிவுகளில் முன்னிலை பெறக்கூடிய அணிகளாகத் தெரிகின்றன.

அவுஸ்திரேலியாவின் ஒரு போட்டி மழையினால் கழுவப்பட்டது பங்களாதேஷ் அணிக்கெதிரான இலகு வெற்றியொன்றைப் பறித்திருந்தாலும், இந்தப் பிரிவைத் தீர்மானிக்கும் போட்டி நியூ சீலாந்தை அவுஸ்திரேலியா எதிர்கொள்ளும் போட்டியே.

எதிர்வரும் சனிக்கிழமை ஒக்லாந்தில் இடம்பெறவுள்ள போட்டி இது.

இதுவரை நடைபெற்ற போட்டிகளில் பாகிஸ்தானும், இங்கிலாந்தும், தென் ஆபிரிக்காவும், இலங்கையும் தத்தமது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ள அணிகளாகக் காணப்படுகின்றன.

ஆனால் ஒவ்வொரு அணிக்கும் தலா 6 போட்டிகள் இருப்பதால் சுதாரித்துக்கொண்டு தத்தம் பலவீனங்களைக் களைந்து மீண்டும் வெற்றிபெறும் வழிவகைகளுடன் காலிறுதிக்குச் செல்லக்கூடிய வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ள முடியும்.

டெஸ்ட் அந்தஸ்து இல்லாத அணிகளுக்கும் தமது திறமையை அழுத்தமாக வெளிக்காட்டவேண்டிய உலகக்கிண்ணப் போட்டித் தொடராக இது அமைகிறது.

2019இல் 10 அணிகள் மட்டுமே விளையாடலாம் என்ற சர்வதேச கிரிக்கெட் பேரவையின் எண்ணக் கருத்தை பலரும் விமர்சித்துவரும் இந்த நேரத்தில் அதற்குப் பதிலடியாக சிறப்பாக விளையாடி தமது திறமைகளைக் காட்டவேண்டிய கட்டாயம் இருக்கிறது.
-------------------------------


 பாகிஸ்தானிய அணி நான் முன்னைய கட்டுரையில் சொல்லியிருந்தது போல, அஜ்மல், ஹபீஸ்,ஜுனைத் கான் ஆகியோரின் இன்மையை அதிகமாக உணர்கிறது.
இன்னும் சப்ராஸ் அஹமத்தை அணிக்குள் சேர்க்காமல் அணி சிதைந்துபோய், ஏதாவது ஒரு அதிசயத்துக்காக எதிர்பார்த்திருக்கிறது.

மேலதிகமாக தேவையற்ற ஏராளமான சர்ச்சைகளும் அணியை ஒருநிலையில் வைத்திருக்க உதவுவதாக இல்லை.
முதலில் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளருடன் மோதல், இப்போது தலைமைத் தேர்வாளர் மொயின் கானின் கசினோ விஜயம்.
இவர்கள் திருந்துவதாகவோ, வருந்துவதாகவோ இல்லை.
------------------------

இந்திய அணிக்கு துடுப்பாட்டம் எப்போதுமே அவர்களது பலம்.
ஆனால் பலவீனமான அம்சங்களாகக் கருதப்பட்ட பந்துவீச்சும், களத்தடுப்பும் புதிய உத்வேகத்துடன் எழுந்திருப்பது ஏனைய அணிகளுக்கு அச்சுறுத்தலாக அமைகிறது.

பலம் வாய்ந்த தென் ஆபிரிக்காவே திணறிப்போனது.
கட்டுப்பாடான வேகப்பந்து வீச்சும், ஓட்டங்களைக் கட்டுப்படுத்தும் துரித களத்தடுப்பும் இந்திய அணியின் வெற்றிகளைப் பிரம்மாண்டமாக்கியிருக்கின்றன.

எனினும் பந்துகள் எகிறும் வேகமான ஆடுகளங்களில் எப்படி இந்தியா ஆடும் என்ற கேள்வி ஆர்வமூட்டுவது.

உலகக்கிண்ணத் தொடர் ஆரம்பிக்க முன் இஷாந்த் ஷர்மாவின் உபாதை, மோஹித் ஷர்மாவை இந்தியாவுக்குப் பரிசளித்தது.

இதேபோல அவுஸ்திரேலியாவின் ஜேம்ஸ் போல்க்னரின் காயமும் மிட்செல் மார்ஷை அவுஸ்திரேலியாவுக்கு வழங்க 5 விக்கெட்டுக்கள் கிடைத்தன.

-------------------

இப்போது கிடைத்திருக்கும் செய்தியில் இலங்கை அணியின் ஜீவன் மென்டிஸ் காயமடைந்துள்ளாராம்.

அவருக்குப் பதிலாக (நான் முன்னரே பல தடவை குறிப்பிட்ட) இலங்கை அணியின் முன்னணி ஒருநாள் போட்டி வீரரான உபுல் தரங்கவை அனுப்ப ஏற்பாடுகள் நடக்கின்றன.
(இப்படி ஏதாவது நடந்து தரங்கவை அழைப்பார்கள் என்று நான் எதிர்பார்த்தே இருந்தேன்)

தரங்க உலகக்கிண்ண அணியில் முன்னரே இடம்பிடித்திருக்கவேண்டும். இப்போதாவது அவரை சேர்த்துக்கொள்ளக்கூடிய வாய்ப்பு கிட்டியிருப்பதும் இலங்கைக்கான வாய்ப்பாக அமையலாம்.

ஆனால் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகவா அல்லது மத்திய வரிசை துடுப்பாட்ட வீரராகவா தரங்க விளையாடவுள்ளார் என்ற கேள்வியும் எழுகிறது.
தரங்க இரண்டிலும் சிறப்பாக செய்யக்கூடியவர்.

தரங்கவை ஏனைய வீரர்களுடன் ஒப்பிட்டுப் பாருங்கள்..
ஒருநாள் போட்டிகளில் இலங்கை வீரர்களின் மொத்த ஓட்டங்கள்


ஆனால் ஸ்விங் அதிகமாக உள்ள ஆடுகளங்கள் இவரை(யும்) சோதிக்கலாம்.
ஆனால் உள்ளூர்ப் போட்டிகளில் நல்ல form இல் ஓட்டங்களைக் குவித்து வருகிறார்.


அடுத்து ஏற்கெனவே குழுவில் உள்ள, இதுவரை வாய்ப்பு வழங்கப்படாத தினேஷ் சந்திமால், திமுத் கருணாரத்னவுக்குப் பதிலாக அணிக்குள் சேர்க்கப்படுவாரா என்ற கேள்வியும் எழுகிறது.
சந்திமால் ஒருநாள் போட்டிகளில் மத்திய வரிசையில் ஓட்டங்கள் சேர்க்கக்கூடிய ஒருவர்.

தடுமாறி வரும் இலங்கையின் மத்தியவரிசைக்கு சந்திமாலும், தரங்கவை ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக அனுப்பிய பின், திரிமான்னவும் தேவை.

திசர பெரேராவும் ஆப்கானிஸ்தான் அணியுடன் காட்டிய நிதானத்துடன் கூடிய அதிரடியுடன் விளையாடினால் இலங்கை அண்மைக்காலமாக சொதப்புகிற slog overs சறுக்கலை நிவர்த்திக்கலாம்.

ஆனால், அதிரடியாக ஆடும் இன்னும் ஒரு வீரர் அவசியம்.
கடந்த வருடம் முழுதும் ஓட்டக்குவிப்பு இயந்திரமாக விளங்கிய அணித் தலைவர் மத்தியூஸ் மீண்டும் அதே formஇல் தேவைப்படுகிறார்.

பந்துவீச்சில் மாலிங்க, லக்மால், மத்தியூஸ் ஆகியோர் நம்பிக்கை தருகிறார்கள்.
குறிப்பாக லக்மாலின் கட்டுப்பாடு, ஸ்விங், எகிறும் வேகம் ஆகியன இலங்கைக்கு புத்துணர்ச்சி கொடுக்கின்றன.
ஆனால் ஹேரத்தும் விக்கெட்டுக்களை எடுக்கவேண்டும்.

அவுஸ்திரேலிய, இங்கிலாந்து அணிகளை எதிர்கொள்ள முதல் பங்களாதேஷ் அணியை வியாழன் அன்று இலங்கை சந்திக்கும்போது இந்தக் குறைகளை இலங்கை களைந்துகொள்ள வேண்டும்.

இல்லாவிடில் 1999ஐப் போன்ற இன்னொரு மோசமான உலகக்கிண்ணம் காத்திருக்கிறது இலங்கைக்கு.

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 233 என்ற இலக்கைக் கடப்பதற்குள்ளேயே உயிர் போய்வந்த உணர்வு. அது மிக மோசமான ஒரு வெற்றி.
மீண்டும் வேண்டாம் அப்படியொரு மாரடைப்பு !!!


படங்கள் & புள்ளி விபரங்கள் - நன்றி ESPN Cricinfo

1 comment:

Yarlpavanan said...

சிறந்த பதிவு
தொடருங்கள்

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner