வாழ்க்கையில் சில வட்டங்கள் மீண்டும் மீண்டும் வாழ்க்கையின் இன்னொரு கட்டத்தில் வருவதைத் தடுக்க முடிவதில்லை.
யுத்தகால இடம்பெயர்வுகள், முன்னைய இயற்கை அழிவுகள், சுனாமி அனர்த்தம் என்று பலவற்றைப் பார்த்திருக்கிறேன்.. இவ்வாறான பல சம்பவங்களில் மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் சேகரித்துக் கொடுத்தும் இருக்கிறேன்;நேரடியாக அந்த இடங்களுக்கு சென்று அவர்கள் அவலங்களில் பங்கெடுத்தும் இருக்கிறேன்.
ஊடகவியலாளனாகஎன் வாழ்க்கை மாறிய பின்னர் இப்படியான நிகழ்வுகளில் அதிக ஈடுபாட்டோடு இணையும் வாய்ப்பும், இப்படியான நிவாரணப் பணிகளில் ஈடுபட நேரும்போதேல்லாம் என் துறை மூலமாகக் கிடைத்த அரசியல்,வர்த்தக,நட்பு,நேய தொடர்புகளை இந்த மனிதாபிமானப் பணிகளில் பயன்படுத்தி ஏதோ என்னால் முடிந்ததை அந்த அப்பாவி மக்களுக்கு வழங்கி மனதளவில் திருப்திப்பட்டு வந்திருக்கிறேன்.
இம்முறை கிழக்கு மாகான வெள்ள அனர்த்தத்திற்கும் எம் வானொலி மூலமாக நிவாரணப் பணிகளை ' எம்மால் முடியும்' என்ற பெயரிட்டு ஆரம்பித்திருந்தோம்.
உடனடியாகவே நண்பர்கள்,நேயர்கள், பெரிய மனம் படைத்த வர்த்தக சமூகத்தினர் என்று பலரும் உதவிகளைப் பொருளாகவும் பணமாகவும் வழங்கி இருந்தார்கள்.
பணமாகத் தந்த உதவிகளை நாம் பொருளாகவே தருமாறு கோரியிருந்தோம்.
வானொலி,தொலைக்காட்சி என்று இருந்தாலும் எம்முடன் வர்த்தக நிறுவனங்கள் இரண்டு இணைந்திருந்தாலும் விளம்பர நோக்கம் அறவே இல்லாமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் போய்ச சேரவேண்டும்;அதிலும் விரைவில் போய்ச் சேரவேண்டும் என்பதில் உண்மையான அக்கறைகொண்டிருந்தோம்.
இதனால் தான் உண்மையான நோக்கத்தோடு எந்த அமைப்பு வந்தாலும் எம்முடன் இணைத்துக்கொள்ளத் தயாராக இருந்தோம்.
கெய்சர் வீதி வர்த்தக இந்து அமைப்பு, இந்து இளைஞர் அமைப்பு, கொழும்பு பலகலைக்கழக தமிழ் சங்கத்தினர் இன்னும் பல அமைப்புக்கள் இவ்வாறு இந்த நல்ல காரியத்தில் இணைந்துகொண்டன.
இலங்கைத் தமிழ்ப்பதிவர்கள் சார்பாகவும் பொருட்கள் சேகரிக்கும் எண்ணக்கருத்தொன்று சகோதரன் நிரூஜாவினால் குழுமத்தில் முன்வைக்கப்பட்டு சேகரிப்பு நிலையமொன்றும் தேடப்பட்டு அனைவருக்கும் அறிவித்தும் இருந்தோம்.
ஆனால் எண்ணி மூன்றே மூன்று பதிவர்கள் தவிர வேறு யாரும் எந்தவொரு உதவியுமே செய்திருக்கவில்லை.
பதிவுகளுக்கு வெளியே என்ன செய்யலாம் என்று கேள்வி எழுப்பியதற்கு இதைவிட வேறு நல்ல பொருத்தமான முதல் முயற்சி இருந்திராது என்றே நான் நினைக்கிறேன்.
மற்ற வெளிமாவட்டப் பதிவர்களின் பங்களிப்புப் பற்றித் தெரியாது.ஆனால் கிழக்கிலங்கையில் பல பதிவர்கள் முன்னின்று களத்தில் இறங்கி தம்மால் முடிந்த சேவைகளை வழங்கியது பாராட்டுதற்குரியது.
முக்கியமாக சிதறல்கள் ரமேஷ், சந்த்ரு,சீலன் சிவகுரு,சர்ஹூன் ஆகியோர்.
அடிக்கடி தகவல்களை வழங்கியும் மக்களுக்கு நிவாரணம் வழங்க செல்வோர்/சென்றோருக்கு உதவிகள்+வழிகாட்டல்களைத் தந்தும், மக்களுக்கு உண்மையில் தேவையான பொருள்கள் பற்றி அறியத் தந்தும் தொடர்கிறார்கள் தம் சேவையை.
இறுதிநாள் பொருட்களைப் பகிர்ந்து பொதிசெய்யும் கடமையிலும் பல்கலை மாணவர்களும், பதிவர்கள் நிரூஜா,அனுத்தினன் ஆகியோரும் இன்னும் சில நண்பர்களும் நீண்ட நேரம் நின்று மிகப்பெரிய ஒத்துழைப்பை வழங்கி இருந்தனர்.
முதல் தொகுதியை அனுப்பிவிட்டு நாம் கொஞ்சம் நிம்மதிப் பெருமூச்சு விட்டாலும் கொழும்பு பல்கலை மாணவர்கள் தமது அரியமுயற்சிகளை இன்றும் கூடத் தொடர்ந்துவருவது பெருமையாக இருக்கிறது.
பணம் படைத்தோர் பலரும் கூட உதவிகள் செய்யும் மனம் இல்லாமல் இருக்கும் இந்தக் காலகட்டத்தில் இந்த இளைஞர்களும் யுவதிகளும் வெயிலிலும் மழையிலும் ஒவ்வொரு கடையாக,வீடுகளாக ஏறி இறங்கி பொருட்கள் சேகரிக்கும் இவர்கள் நிச்சயம் நாளையைப் பற்றிய எம் சமூகத்தின் நம்பிக்கைக்கான விடிவெள்ளிகளே.
இன்றைய இளைய சமுதாயம் இணையத்திலும், பேஸ்புக்கிலும்,செல்பெசியிலும், கிரிக்கெட்டிலும், கேளிக்கைகளிலும் தம்மைத் தொலைத்துக்கொண்டிருக்கிறது என்று புலம்பித் திரியும் மூத்த சமுதாய நல விரும்பிகளே இவர்களையும் கவனியுங்கள்.
தன் பெயரை வெளியே சொல்லவேண்டாம் என்று வேண்டிக்கொண்ட எனக்கு நண்பரான வைத்தியர் ஒருவர் தனது சொந்த செலவில் பெருந்தொகை மருந்துகளோடும், வைத்தியக் குழுவினரோடும் உடனடியாக அங்கே பயணித்தது மறக்க முடியாதது.
அவர் எனக்கு அனுப்பியிருந்த sms வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த மிகப் பெரும் பாராட்டுக்களில் ஒன்று..
Hi Loshan, I am taking a team with medicines,doctors, nurses, lorry full of dry foods exclusivley from ----- Hospitals staff to Eastern ppl.Dont publicize this. But i took this initiative from ur announcement.Tnx to you and ur staff.
இப்படிப் பெருமைப்படக்கூடிய பக்கம் ஒரு பக்கம்..
உதவி செய்யும் மனம் இல்லாத ஒரு சிலர்;
உதவி செய்கிறோம் என்று விளம்பரம் செய்துகொள்ளும் நபர்கள் சிலர்;
தங்கள் வீட்டுக் கழிவுகள்,குப்பைகளை அகற்றப் பழைய துணிமணிகளை அளித்த தந்த 'வள்ளல்கள்' சிலர்;
கடைகளில் இருந்த காலாவதித் திகதி கடந்த பொருட்களை அள்ளி வழங்கிய 'கொடையாளிகள்'
இவர்களையெல்லாம் என்ன செய்வது??
அடுத்து நிவாரணப் பொருட்களை வழங்க சென்ற வேளையில் உண்மையில் பாதிக்கப்பட்டோரைவிட தங்களுக்கும் தம் உறவினருக்கும் மட்டும் பொருட்களை அமுக்கிக் கொள்ள எண்ணியோரையும் அறிந்துகொண்டோம்.
ஆனால் அந்தப் பிரதேச மக்கள் பலருக்கு இன்னும் தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை. முகாமலில் இருந்து பலர் தம் சொந்த இடங்களுக்குத் திரும்பி சென்றிருந்தாலும் வழமையான வாழ்க்கைக்கு முழுமையாகத் திரும்ப முடியவில்லை.
தொற்று நோய்கள் பரவும் அபாயமும், நுளம்புகள் பெருகும் அபாயமும் இருக்கிறது.
குழந்தைகளுக்கான உணவுப் பொருட்கள் இன்னும் தேவைப்படுகின்றன.
தேவைப்படும் பொருட்களை அறிந்து நாளையும் நாம் அனுப்புகிறோம்.
விரும்பியோர் இன்னமுமே உதவிகளை அனுப்பலாம்; எம் மூலமாகவும்.. கொழும்பு பலகலைக் கழக மாணவரிடமும் கொடுக்கலாம்.
ம்ம்.. மனிதர்களை அறிந்துகொள்ள ஒவ்வொரு நேரம் வரவேண்டுமே..
அரசின் உதவிகள் கொஞ்சமும் மனிதரின் உதவிகள் அதிகமும் கிழக்கு நோக்கி சென்று கொண்டே இருக்கின்றன.. மனிதாபிமானம் வாழ்கிறது.. ஆனால் இன்னும் அதிகமாக வாழவேண்டும்.
தேவையான நேரங்களில் மனதில்,பேச்சில்,எழுத்தில் அல்லாமல் செயலில் வரவேண்டும்.
இப்போது மீண்டும் கிழக்கு வழமைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறது..
எல்லாம் கடந்து போகும் வாழ்க்கை எம் தமிழருக்குப் பழக்கமானது தானே....
படங்கள் - சிதறல்கள் ரமேஷின் பதிவில் இருந்து
& நிவாரணப் பொருட்களை நாம் பொதி செய்த இடத்தில் இருந்து
http://www.facebook.com/album.php?fbid=1680511425500&id=1618998317&aid=86009
15 comments:
முன்னின்று உழைத்த அனைவருக்கும் பாராட்டுகளும் நன்றிகளும்
//ஆனால் எண்ணி மூன்றே மூன்று பதிவர்கள் தவிர வேறு யாரும் எந்தவொரு உதவியுமே செய்திருக்கவில்லை.//
தலை குனிகிறேன் :(
வாய்ச்சொல்லில் வீரரடி...
பின்னூட்டமிடத்தான் வேண்டுமா என்று யோசிக்கிறேன். :-(
பெரிய ஏமாற்றம். :-(
மற்றும்படி சாதாரண மக்களிடமிருந்து ஓரளவு ஆதரவு கிடைத்ததாக அறிந்தேன், ஆகவே அது பரவாயில்லை.
கொழும்பு பல்கலை மாணவர்களுக்கும், அந்த வைத்தியருக்கும் ஒரு salute!
வணங்குகிறேன்.
// தங்கள் வீட்டுக் கழிவுகள்,குப்பைகளை அகற்றப் பழைய துணிமணிகளை அளித்த தந்த 'வள்ளல்கள்' சிலர்; //
இந்தப் பழக்கம் எங்களிடம் நிறையவே உண்டு, உடனடியாக மாற்றிக் கொள்ள வேண்டும்.
சுகாதாரப் பிரச்சினைகள் மிகமுக்கியமாக இருக்க, இன்னொருவர் அணிந்த ஆடைகளை அணிவதென்பது அசெளகரியமானது, புரிந்துகொள்ள வேண்டும். :-(
வெற்றியின் பணி தொடரட்டும்.
அண்ணா என் அனுபவம் நாளைய பதிவில்...
ம்ம்ம் இதுவும் கடந்துபோகும்
சுனாமியின் போது இதே சம்பவங்களை நானும் பார்த்தேன், மிகப் பெரிய பிரபலம் ஒருவர் நாம் சேகரித்த பொருட்களை தன்னுடைய நிறுவனம் சார்பாக கொடுத்து பெயர் எடுத்த கதையும் இருக்கு. அந்தவகையில் இதெல்லாம் ஒவ்வொரு அனர்த்தங்களின் போதும் நிகழும் நிகழ்ச்சிகள். நம்மிடம் இப்படியான குறைகள் இருக்கும் வரை எத்தனை வெள்ளங்கள் அழிவுகள் சுனாமிகள் வந்தாலும் நாம் திருந்தமாட்டோம்.
பதிவர்களுக்கு சக பதிவன் என்றவகையில் கண்டிக்கும் உரிமை எனக்கும் உண்டு. நீருஜா, வதீஸ், அனுதினன், சிதறல்கள் ரமேஸ், சந்ருவின் பதிவுகளும் படங்களும் உதவிகளும் நானும் அறிந்தவை.
அந்த மருத்துவருக்கு பாராட்டுக்கள், இவர்களைப் போன்ற சிலர் இருப்பதால் தான் இன்னமும் மனிதாபிமானம் சாகாமல் இருக்கின்றது.
பாவித்த உடைகளைவிட பாவித்த உள்ளாடைகளைத் தந்த வள்ளல்களையும் பார்த்திருக்கின்றோம்.
மக்களுக்கு கிடைக்கின்ற உதவிகளை பதுக்குகின்ற நிலை காணப்படுகின்றது... அத்தோடு நிவாரணம் வழங்குகின்றோம் வழங்குகின்றோம் என்று உழைத்தவர்களும் இருக்கின்றனர்.
நிவாரணம் வழங்கப்பட்டதாகக் சொல்லப்பட்டாலும் பல மக்களுக்கு இன்னும் நிவாரணம் வழங்கப்படவில்லை. இன்று எனது கிராமத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலாவதாக நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.
அந்த நிவாரணப் பொருட்கள் ஒரு வேலை உணவிற்கே போதாது. இதுதான் மட்டக்களப்பு மக்களின் நிலை. நிவாரணப் பொருட்கள் வளன்குகின்றதாக சொல்கின்றனர். வழங்கினோம் என்பதற்காக வழங்குகின்றார்கள்.
வலைப்பதிவர்களைப் பொறுத்தவரை இந்த விடயத்தில் முன்வராதது பெறும் கவலைக்குரிய விடயம்தான். சொல்லில் வல்லவர்கள் செயலில் இல்லாதவர்கள்.... என்ன செய்வது.
உங்களுக்கு மட்டக்களப்பு மாவட்ட மக்கள் சார்பாக நன்றிகள்.
உண்மையிலேயே இலங்கை மக்கள் உதவும் உள்ளம் கொண்டவர்கள் என்பதை மீண்டும் ஒருதடவை நிரூபித்திருக்கின்றனர்.
பதிவர்களிற்கு கிடைத்த நல்ல ஒரு சந்தர்ப்பத்தை தவறவிட்டுவிட்டோம் அண்ணா...
கிழக்கு மக்கள் அனர்த்தத்திற்கு பின்னர் தங்களுடைய வாழ்வாதரத்தை, கல்வியை மீளக்கட்டியெழுப்ப பாரிய சவால்களை சந்திக்கவேண்டியிருக்கும்
http://goo.gl/tBVkU
பதிவில் எம்மையும் நினைவு கூர்ந்தமைக்கு நன்றிகள் அண்ணா!!!! இது எம்மவர்களுக்கு நாம் செய்யும் கடமைகளில் ஒன்று மட்டுமே!!
//தங்கள் வீட்டுக் கழிவுகள்,குப்பைகளை அகற்றப் பழைய துணிமணிகளை அளித்த தந்த 'வள்ளல்கள்' //
இவர்களை என்ன சொல்லுவது என்று தெரியவில்லை. வீடு வீடாக சென்று சேகரிக்கும் போது கூட இப்படி பலம் துணிகளை தந்தவர்கள் பலர்......!
இவர்கள் மாற்றப்பட வேண்டியது அவசியம்.
//முக்கியமாக சிதறல்கள் ரமேஷ், சந்த்ரு,சீலன் சிவகுரு,சர்ஹூன் ஆகியோர்.
தன் பெயரை வெளியே சொல்லவேண்டாம் என்று வேண்டிக்கொண்ட எனக்கு நண்பரான வைத்தியர் ஒருவர்//
இவர்களுக்கு எப்படி நன்றி சொல்லுவது என்று தெரியவில்லை.!!!
//ம்ம்.. மனிதர்களை அறிந்துகொள்ள ஒவ்வொரு நேரம் வரவேண்டுமே..//
நிஜமான உண்மை அண்ணா!!!
தொடர்ந்தும் பொருட்களை சேரித்துகொண்டிருக்கும் கொழும்பு பல்கலைழக மாணவர்களுக்கும் பாராட்டுக்கள். இந்தமுறை கிழக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கான அப்பியாச புத்தகங்கள் போன்றவற்றை அனுப்பினால் அப்பிள்ளைகள் இன்னும் சந்தோஷப்படுவார்கள். அத்தோடு பதிவர்கள் சந்துரு மற்றும் ரமேஷ் ஆகியோரையும் பாராட்டவேண்டும். நானும் அவர்களை நேரடியாக சந்தித்து பாதிக்கப்பட்ட மக்களுடைய இடங்களுக்கு நேரடியாக அவர்களுடனேயே சென்று நிலமைகளை பார்க்ககூடியதாக இருந்தது.
உழைத்த அனைவருக்கும் எனது நன்றிகள்...
:|
நல்லா இருக்குங்க....
இதுக்கு பின்னூட்டம் ரொம்ப குறைவா இருக்கே? வாய் சொல்லில் வீரரடி
anna uthaviyamaikku mikka nandry..............
ingu yaarl palkalai kalaka ondriya maanavarkal uthava vantha pothu oruvar nadaththiya kooththaiyum kelvi pattirupeerkal..
avamaanamaka ullathu.
ungal mattu vaasakan.
என்ன சொல்வதென்று தெரியவில்லை அண்ணா...!
பெருமை,மகிழ்ச்சி,வேதனை,ஏமாற்றம் அனைத்தையும் உணர்கின்றேன்..!
ஃஃஃகிழக்கு மாகான வெள்ள அனர்த்தத்திற்கும் எம் வானொலி மூலமாக நிவாரணப் பணிகளை ' எம்மால் முடியும்' என்ற பெயரிட்டு ஆரம்பித்திருந்தோம்.ஃஃஃஃ
பெருமை..
ஃஃ இவர்கள் நிச்சயம் நாளையைப் பற்றிய எம் சமூகத்தின் நம்பிக்கைக்கான விடிவெள்ளிகளே.ஃஃஃ
மகிழ்ச்சி
ஃஃஃமூன்று பதிவர்கள் தவிர வேறு யாரும் எந்தவொரு உதவியுமே செய்திருக்கவில்லைஃஃஃ
வேதனை.
ஃஃஃஃஎனக்கு நண்பரான வைத்தியர் ஒருவர் தனது சொந்த செலவில் பெருந்தொகை மருந்துகளோடும், வைத்தியக் குழுவினரோடும் உடனடியாக அங்கே பயணித்தது ஃஃஃஃ
வைத்திய துறைக்கு இவர்தான் வைத்தியர்...நன்றி ஐயா.
ஃஃதேவையான நேரங்களில் மனதில்,பேச்சில்,எழுத்தில் அல்லாமல் செயலில் வரவேண்டும்.ஃஃஃ
மனிதாபிமானம் என்பது மேடை பேச்சோ,விஞ்ஞாபனபோ இல்லை..அது ஒரு உணர்வு..உணர வேண்டிய இடங்களில் வெளிப்பட வேண்டும்..
மனிதம் என்பது நாம் மட்டும் வாழ அல்ல..நாம் பிறருக்காகவும் வாழ்வதற்காகும்..
வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்கள் அனுபவிக்கின்ற கஷ்டங்கள் இன்னும் தீரவில்லை. தமது வாழ்வாதாரங்களினை தொலைத்துவிட்டு நிற்கின்ற மக்கள், உதவிகளினை எதிர்பார்ப்பதில் தவறில்லையே???....
சில கசப்பான சம்பவங்கள் மனதுக்கு வேதனை அளிக்கின்றன.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளினை வழங்கிய/வழங்குகின்ற அனைவருக்கும் நன்றிகள்....
Post a Comment