November 20, 2014

லிங்கா பாடல்கள் - புயலும் புலிகளும்


இந்த வருடத்தில் மட்டும் இசைப்புயல் ரஹ்மான்  தனது 9வது படத்தின் பாடல்களை (ஹிந்தி, ஆங்கிலமும் சேர்த்து) வெளியிட்டுள்ளார் என்பது எல்லா இசை ரசிகர்களையுமே ஆச்சரியப்படுத்தக்கூடிய ஒன்று தான்.

நேரம் எடுத்து, ஆறுதலாக செதுக்கி செதுக்கி ஒவ்வொரு பாடல்களையும் ஒன்றிலிருந்து வேறுபடுத்தி, வித்தியாசம் காட்டும் ரஹ்மானின் பாடல்கள், அவரது இந்தப் புதுமை புகுத்தும் முயற்சிகளாலும், ஒவ்வொரு காலகட்டத்திலும் தன்னையும் இசையையும் புதுமைப்படுத்தும் மேம்படுத்தல் பரீட்சார்த்தங்களால்  தான் அனேக சராசரி ரசிகர்களிடம் போய்ச் சேர்வது கிடையாது.

அல்லது சில காலத்தின் பின்னரே எல்லாத் தரப்பாலும் ரசிக்கப்படுவதுண்டு.
ரஹ்மானின் பாடல்கள் கேட்கக் கேட்கத் தான் பிடிக்கும் என்று பரவலாகக் கருதப்படுவதற்கும் இதே தான் காரணம்.

ஆனால் கேட்ட உடனே சட்டென்று பிடித்துப் போகும் இசைப்புயலின் பாடல்களும் இருக்கின்றன.

நான் இந்த லேட்டாத் தான் பிடிக்கும், போகப் போகப் பிடிக்கும் கட்சி இல்லை.
சில ரஹ்மான் பாடல்கள் உடனடியாகவே மனசுக்குள் ஏறி உட்கார்வதும் உண்டு..
 பல ஆண்டுகளுக்குப் பிறகு பாட்டில் உள்ள மஜிக் புரிந்தும் இருக்கிறது.
என்னைப் பொறுத்தவரை ரஹ்மான் எந்த இயக்குனரினால் வேலை வாங்கப்படுகிறாரோ அங்கே தான் தீர்மானிக்கப்படுகிறது இந்த ரசனை சார்ந்த விடயம்.

ஷங்கர், மணிரத்னம் ஆகியோரின் படங்களில் வரும் ரஹ்மானின் இசைக்கும், சில ஹிந்திப் படங்களில் வரும் ரஹ்மானின் இசை & பாடல்களுக்கும், K.S.ரவிக்குமார் மற்றும் இதர இயக்குனர்களின் படங்களில் வரும் இசைக்கும் இடையிலான வித்தியாசம் இங்கே தான்.


நண்பர் JKயின் ஒரு Facebook நிலைத்தகவலின் கீழ் கருத்திட்டபோது நானும் அவரும் பகிர்ந்துகொண்ட விஷயங்கள் இங்கே தரப்படுவது 'லிங்கா' பாடல்கள் பற்றி பேசும்போது முக்கியமானவை எனக் கருதுகிறேன்..

JK ஜெயகுமாரன் சொன்னது -
லோஷன்.. ஒரு பாட்டு உடனடியா பிடிப்பதை புரிந்துகொள்ள முடிகிறது. எனக்கும் இந்தப்படத்தில் மனோ பாடிய பாடல் உடனடியாகவே பிடித்துக்கொண்டது. ஆனால் சிலர் லிங்கா ( ஐ கூட) மொக்கை என்கிறார்கள். ஒரு பாட்டு மொக்கை என்று சொல்வதற்கு அட்லீஸ்ட் இருபது வருஷமாவது வெயிட் பண்ணவேண்டுமென்பது என்னுடைய எண்ணம். அதுவும் ரகுமானுடைய பாடல்களில் இரண்டு வகையே உண்டு. "பிடித்த பாடல்கள்", "இன்னமுமே பிடிபடாத பாடல்கள்"

Loshan : அது தான் உடன் விமர்சனம் ப்ரோ...
உடன பிடிக்காட்டி அப்போதைக்கு மொக்கை.. பிறகு லேட்டா பிடிக்கிற நேரம் 'எண்ண மாற்றம்' - சிந்தனையில் பரிணாம உயர்வு
ஆனால் ரஹ்மானின் இசையில் 'எனக்கு' பிடிக்கவே பிடிக்காத பாடல்கள் ஒரு முப்பதாவது இருக்கும்.
அவற்றை என் ரசனைக்கு செட் ஆகாதவையாக நினைத்துவிட்டுப் போவதுண்டு.
-------------------------------
இதைத் தான் நான் எனது முன்னைய சில பதிவுகளில் ரஹ்மானின் பாடல்கள் பற்றி எழுதும்போது குறிப்பிட்டவை.
ஹிந்தி, சர்வதேசம் என்று ரஹ்மான் தனது சிறகுகளை அகல விரித்தபின்னர், அவரது தேடல்கள் விரிய ஆரம்பித்தபின்னர் எனக்கும் என்னைப்போன்ற ரசனையுடையவர்க்கும் ரஹ்மானின் சில பாடல்களுடன் முன்பு மாதிரி நெருங்கி உறவாட முடியவில்லை.
அதற்குக் காரணம் அவர் தனது ரசனையை உயர்த்தியது; நாங்கள் அந்த ரசனையளவுக்கு எங்கள் ரசிகத் தன்மையை உயர்த்திக்கொள்ளவில்லை.
--------------------------------
ஐ பாடல்களுக்கும் லிங்கா பாடல்களுக்கும் ஒப்பீடு, ஐ அளவுக்கு லிங்கா பாடல்களில் புதுமை இல்லை என்று பாடல்கள் வந்து ஐந்தாவது நாளான இன்று நீங்கள் பீல் பண்ணுபவராக இருந்தால்,

1. சில நாட்கள் கழித்து உங்களுக்கு அந்தப் பாடல்கள் பிடிக்கலாம் - இது ரஹ்மான் பாட்டு கேட்க கேட்க போபியா
2. இது ரவிக்குமார் - ரஜினி படம்..
கதைக்கும் கூட்டுக்கும் படம் ரஜினியின் பிறந்தநாளுக்கு வரவேண்டும் என்ற அவசரத்துக்கும் இது போதும் (அல்லது எது தேவை) என்று இசைப்புயலுக்கு எம்மை விடத் தெரிந்திருக்கும்.
----------------------------
ஐ பாடல்கள் கேட்ட சுகானுபவத்தொடு ரஹ்மானின் 'லிங்கா'வுக்குக் காத்திருந்த எனக்கு பாடல்கள் பற்றிய விபரங்கள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டவுடனேயே மிகப் பெரும் குதூகலம்.
உடனே Facebookஇல் கீழ்வரும் தகவலைப் பதிவு செய்தேன்.

வாவ் லிங்கா..
‪#‎Lingaa‬ ‪#‎ARRahman‬
சந்தோஷப்பட நிறைய விஷயங்களை இசைப்புயல் தந்திருக்கிறார்.

1.மீண்டும் வைரமுத்துவோடு முழுமைக் கூட்டணி..
ஓ நண்பா, உண்மை ஒருநாள் வெல்லும் இனி சூரிய ராகங்களின் முதல் மணிநேரத்துக்கு என்று வைத்துக்கொள்ளலாம்.
மன்னவனேயில் மனம் தொலைக்கலாம்.
(ஒரேயொரு பாடல் வைரமுத்து இல்லை.. ஆனால் குட்டிப்புலி நம்ம கார்க்கி Madhan Karky. அந்தப் பாடலின் ஆரம்ப வரியே எதிர்பார்க்க வைக்குது.
Mona Gasolina - இந்தப் பாடலுக்குள் என்ன புதுமை வைத்துள்ளீர்கள் கார்க்கி?)

2.மீண்டும் SPB - WELCOME Legend S. P. Balasubrahmanyam
(நம்ம நாட்டின் தினேஷும் சேர்ந்து பாடியிருப்பது ஸ்பெஷலான பெருமை. வாழ்த்துக்கள் Dinesh Aaryan Kanagaratnam )

3.நீண்ட காலத்துக்குப் பிறகு ஸ்ரீனிவாசுக்கு ஒரு பாடல்.

4.இன்னும் நீண்ட காலத்துக்குப் பிறகு மனோ..
(ஓஹோ கிக்கு ஏறுதே இன்னும் fresh ஆ மனசுல நிக்குது)

5.எந்திரன் - இரும்பிலே பாடி அதிரவைத்த இசைப்புயல் மீண்டும் ரஜினிக்காக 'இந்தியனே வா' என்று அழைக்கப் போகிறார்.
தேசப்பற்று மசாலா தூவி அரசியல் பஞ்ச் வைரமுத்து வைப்பார் எனலாம்.
ரஹ்மானின் குரலில் சிறு இடைவெளிக்குப் பிறகு வரும் பாடல் என்பதால் புதுமையை இதிலும் எதிர்பார்க்கலாம்.


எதிர்பார்த்தது வீண்போகவும் இல்லை.
நான் நினைத்த மாதிரியே ஐந்து பாடல்களில் நான்கு எனக்குப் பிடித்த மாதிரியே வந்துள்ளன.
(அந்த ஐந்தாவது பாடல் என்பதை ஊகித்து வைத்துக்கொண்டே வாசியுங்கள்..)
'ஐ'யோடு ஒப்பிட விரும்பாத காரணத்தால் முத்து, படையப்பா போலவே ரஜினிக்கான K.S. ரவிக்குமார் படத்துக்கான பாடல்களை ரஹ்மான் வழங்கியுள்ளார், அதில் திருப்தியே.



நண்பர் ஒருவருக்கு வழங்கிய கருத்தில் "ரஜினியை இன்னும் இளமையாகக் கொண்டு வர ரஹ்மான் இங்கே இசையை பயன்படுத்தியுள்ளார் "என்று சொன்னது பாடல்களில் நிரூபணம்.

சனிக்கிழமை இரவு பாடல்களை முதலில் ரசிக்கக் கிடைத்தவுடனேயே SPBயின் குரலில் இப்படியொரு பாடலையே வைரமுத்துவின் வரிகளில் எதிர்பார்த்திருந்த எனக்கு உடனே விரல்கள் பரபரக்க, அடுத்த நான்கு பாடல்களைக் கேட்க முதலே போட்ட status

'இளமை என்றும் போகாது, முதுமை எனக்கு வாராது' என்று வைரமுத்து எழுதியது ரஜினிக்கு இல்லை, SPBக்கு தான் என்பது நிச்சயம்.
ஓ நண்பா.... மீண்டும் SPBயை இன்னும் ஒரு 20 ஆண்டுகள் வயதைக் குறைத்து, எங்களுக்கு உற்சாகத்தைக் கொடுக்கிறது..
பாடும் நிலா என்றும் இனிக்கும் இளமை நிலா தான்.
வைரமுத்துவோடு சேரும்போது மட்டும் இசைப்புயலுக்கு இன்னும் அதிகமாக வலிமையையும் மென்மேலும் இனிமையும் சேர்ந்து விடுகிறது.
‪#‎லிங்கா‬

-----------------------------------

ஓ நண்பா 
வா கலக்கலாமா 
ஏ நண்பா வான் திறக்கலாமா
ஆசை இருந்தால் நண்பா சொர்க்கம் திறக்கும் நண்பா 
நாம் அத்தனைக்கும் ஆசைப்பட்டு முத்தெடுப்போம் நண்பா
வானம் வலது கையில் 
பூமி இடது கையில் 
வாழ்வே நமது பையில்..
‪வைரமுத்து‬ ‪எழுதியுள்ள இளமை துள்ளும் வரிகளை SPBயின் என்றும் மாறா இளமைக் குரலில் கேட்கும்போது ஒரு தனி உற்சாகம்.

காலம் மீண்டும் பின்னோக்கி ஓடி 'முத்து' காலத்துக்கு போன நினைவு.
ரஜினி என்றால் அங்கே ரஹ்மானோ தேவாவோ, ஏன் வித்யாசாகரோ - வைரமுத்து + SPB இருந்தால் தான் அங்கே கிக்.

இளமையை மேலும் தூக்கி நிறுத்த நம்மவர் தினேஷ் கனகரட்ணத்தின் rap.
பாடலின் நான்கரை நிமிடங்கள் ஓடி முடிவது தெரியாதளவுக்கு இசை கலக்கல்.
என்னுடைய ரிங் டோனாக உடனே மாற்றிக்கொண்டேன்.

வைரமுத்து வரிகளில் நின்று ஆடியிருக்கிறார்.

உன் எல்லை அறிந்துகொண்டால்
தொல்லை உனக்கு இல்லை
மீனே தண்ணீரைத் தாண்டித் துள்ளாதே

உன்னோடு செல்வம் எல்லாம் சேர்த்துக்கோ
கொண்டாட நண்பன் வேணும் பார்த்துக்கோ
முன்னோர்கள் சொன்னால் சொன்னால் ஏத்துக்கோ
வேலைக்கு ஆகாதென்றால் மாத்திக்கோ

இதுக்குத் தான் பெரியவர் வேண்டும் என்பது.

----------------------

என் மன்னவா

மீண்டும் ஸ்ரீநிவாசை ரஹ்மான் அதே மென்மையுடன் அழைத்து வந்து அழகு பார்த்திருக்கிறார் ரஹ்மான்.
குரலின் கனதியும் மென்மையில் வழியும் வைரமுத்துவின் காதலழகும் பாடலுக்கு சிறப்பு.

ரஹ்மான் ஒரு சஹானா பாடலை நிகர்க்க முனைந்திருக்கிறார்.
படமாக்கப்பட்டு வெளிவந்துள்ள promo teaserஇலும் அதே தோற்றப்பாடு.

"என்னைவிட அழகி உண்டு - ஆனால்
உன்னைவிட உன்னைவிடத்
தலைவன் இல்லை" என்று தனக்கேயுரிய பாணியில் காதல் பாடலிலும் கொஞ்சம் (அரசியல்) பஞ்ச் வைக்கும் வைரமுத்து,

"வெண்ணிலவை வெண்ணெய் பூசி
விழுங்கி விட்டாய்"
"தென்னாட்டுப் பூவே
தேனாழித் தீவே
பாலன்னம் நீ – நான்
பசிகாரன் வா வா" என்றெல்லாம் புதுச் சுவையும் தமிழ்ச் செழுமையும் சேர்த்து ரசிக்க வைக்கிறார்.

ஆனால்
"மோகக் குடமே
முத்து வடமே
உந்தன் கச்சை மாங்கனி
பந்திவை ராணி" என்று அட, இன்னும் இந்த அரதப்பழசுகளை விடவில்லையா என்று கொஞ்சம் சலிக்கவும் வைக்கிறார்.

கவிஞரே, இது கார்க்கி காலம். இன்னும் புதுசா வேண்டும் எமக்கு..

ஆனால் படத்தில் இந்தப் பாடல் 'பழைய' ரஜினிக்கு வருவதால் அந்தக் காலகட்டத்துக்கு ஏற்றது போல வரிகளையும் யாத்து இருப்பாரோ?

இந்தப் பாடலின் பெரிய திருஷ்டி பாடகி அதிதி போல்.

ஐ படப் பாடல்கள் மூலமாக ரஹ்மானால் அறிமுகப்படுத்தப்பட்டவர்.
குரலில் இனிமை வழிந்தாலும் சில சொற்களைக் குதறி வைக்கிறார்.
ரஹ்மானின் பாடல்களில் பொதுவாக இப்படியான குறைகள் காண்பது அரிது.
அவசரம்??

-----------------------------


3. இந்தியனே வா...

வைரமுத்துவின் எழுச்சி வரிகளில் ரஹ்மான் கொஞ்சம் கிளர்ச்சியும் கொஞ்சம் நெகிழ்ச்சியும் கொள்ளவைக்கிறார்.
லிங்கா அணை கட்டும் பாடல் என்று வைரமுத்து தனது Twitter இல் குறிப்பிட்டுள்ளார்.

இசையிலும் ரஹ்மான் 'ஒரே பாடலில் அணை கட்டப்படும்' இசை  உணர்வைக் கொடுக்கிறார்.
கொஞ்சம் கொஞ்சமாக பாடல் வேகமெடுத்து பிரவாகிக்கும் விதம் ரசனை.

"இந்தியனே வா – புது
இமயத்தை உண்டாக்க வா 
இளையவனே வா – மழைத்
தண்ணீரில் பொன்செய்வோம் வா"
இப்படியொரு ஆரம்பம் பாடலில் புதுமை பொங்கி வருவதைக் காட்டிவிடுகிறது.
இங்கே தான் வைரமுத்து நிற்கிறார் என்று அடித்து சொல்வேன்.

இளைஞனுக்கான அழைப்பு அன்றைய பாரதியின் "ஒளி படைத்த கண்ணினாய்" என்று புதிய பாரதத்தை அழைத்தது போல உணர்ச்சியோடு இருக்கிறது.

பாடலில் ஒரு துள்ளல் நடையும், ரஹ்மானின் அழைப்பில் மேவி நிற்கும் உணர்ச்சியும் அனுபவித்து ரசிக்கக் கூடியது.

வைரமுத்துவின் கவிதையோ பாடலோ எங்களை எங்கள் பதின்ம காலம் தொட்டு ஊடுருவி ஆட்கொள்ளக் காரணம், தமிழோடு அறிவியலும் கலந்து வந்த புதுமை தானே..
இந்தப் பாடலிலும் வைக்கிறார் விருந்து...

இரு மலைகளைப் பொருத்தி
நதிகளை நிறுத்தி
விஞ்ஞானக் கோயில் ஒன்று கட்டுவோம்
இன்னும்,
வெள்ளை இருள் நீங்கி
காந்தி தேசம்
பேர் பெறவேண்டும்
என்று இப்பாலம் கட்டப்படும் காட்சியை சொல்பவர்,
கங்கை காவேரி
தொட வேண்டும் – நம்
பாலை வனத்தில்
பாலை விடவேண்டும்
என்று நதிநீர் இணைப்பையும் தொட்டு நிற்கிறார்.
---------------------------

உண்மை ஒருநாள் வெல்லும்

இந்தப் பாடலின் வரிகளை வைரமுத்து அறிமுகம் செய்தபோது மிகப்பெரும் எதிர்பார்ப்பு..
ஆனால் கூடவே மீண்டும் ஹரிச்சரண்!!?? என்ற சலிப்பு..

வரிகள் தைத்தாலும், பாடலில் விசேடம் இல்லாதது போல இருக்கிறது.
இதே பாடலை ஹரிஹரன் அல்லது ஷங்கர் மகாதேவன் பாடியிருந்தால் இன்னும் நன்றாக வந்திருக்குமோ என்றும் கூடவே எண்ணம்.
போகப் போக பிடிக்கப்போகும் (பீடிக்கப்போகும்) பாடலாக இருக்கலாம்.

முத்து - விடுகதையா இந்த வாழ்க்கை
பணக்காரன் - மரத்தை வச்சவன்
பாடல்கள் போல ரஜினியின் உருக்கப் பாடல்களில் இடம்பெறுமா என்பது படத்தின் காட்சியமைப்பிலே தான் இனித் தங்கியுள்ளது.

பின்னால் ஓடிக்கொண்டிருக்கும் இசை ஜித்தன் படத்தின் 'காதலியே' பாடலையும் ஞாபகப்படுத்துகிறது.

"சிரித்துவரும் சிங்கமுண்டு
புன்னகைக்கும் புலிகளுண்டு
உரையாடி உயிர்குடிக்கும் ஓநாய்கள் உண்டு

பொன்னாடை போர்த்திவிட்டு
உன்னாடை அவிழ்ப்பதுண்டு
பூச்செண்டில் ஒளிந்திருக்கும் பூநாகம் உண்டு"

-----------------------

மோனா கசோலினா..

வைரமுத்து என்னும் அனுபவப் புலி எழுதிய நான்கு பாடலுக்கும் இணையாக குட்டிப் புலி மதன் கார்க்கி படைத்துவிட்ட ஒரே புயல்.

பெண் குரலோடு மயக்கும் மென்மையோடு ஆரம்பித்து, மனோவின் ஆண்மையும் முரட்டுத் தன்மையும் கலந்த அதிகாரத் தோரணையுடன் உச்சம் தொடும் பாடல் கட்டமைப்பு.

வரிகளில் புதுமைச் சாயத்துடன் ரசிக்கும் ஓசை நயத்தையும் தந்து கலக்கியிருக்கிறார் கார்க்கி.
தனித் தமிழில் ஐ பாடலை வடித்து ஆச்சரியப்படுத்திய அன்புக்குரிய iபாடலாசிரியர்

உன் கண்ணு compassஆ?
நான் உன் Columbusஆ?
நங்கூரம் நான் போட
நீ ஆட,
கடல் வெடிக்குது பட்டாசா 
என்று பரபரக்க வைக்கிறார்.

கப்பல் பின்னணியில் படமாக்கப்பட்டுள்ள பாடல் என பாடல் promo மூலம் தெரிவதால், பாடல் வரிகள் கப்பலைக் கொண்டே சுற்றுவதும் ரசனை.
ஒரு சுகமான கப்பல் பயணம் ஆரம்பிப்பது போல மென்மையாக ஆரம்பித்து, மனோவின் குரல் வந்து தெறித்துவிழும் இடம் அலைமோதும் நடுக்கடல் போல அமைவது கலக்கல்.

சாரங்கி நரம்பா நான் ஏங்கிக் கிடந்தேன்
என்று நாயகி இசையுடன் ஏங்க,
பீரங்கிக் குழலில் நான் தூங்கிக் கிடந்தேன்
நீ காதலைக் கொடுத்தே நான் வானில் பறந்தேன் 
என்று நாயகன் பதில் தரும் இடமும் சுவை.

இசைப்புயல் இந்தப் பாடலில் காட்டிய வித்தையளவுக்கு வேறேந்தப் பாடலிலும் இத்திரைப்படத்தில் மினக்கெடவில்லை என்னும் அளவுக்கு பாடல் செதுக்கப்பட்டிருக்கிறது.
சின்னச் சின்ன ஓசைகள், இசையின் கலப்பு, வாத்தியக் கருவிகளின் கோர்ப்பு என்று அமர்க்களம்.

ஆனால் கொஞ்சம் கூர்ந்து அவதானித்துக் கேட்டால்,
இதே ரஜினி நடித்து ரஹ்மான் இசையமைத்த 'பாபா' படத்தின் 'மாயா மாயா' பாடலின் புதிய மேம்படுத்தல் வடிவமே இந்தப் பாடல் என்று கண்டறியலாம்.
(நம்ம அலுவலக 'இசைப்புயல்' ஹனியின் கண்டுபிடிப்பு.. அச்சொட்டாக மிக்ஸ் பண்ணிக் காட்டியபோது அசந்துபோனேன்)

பாபா தான் சரியாகப் போகவில்லை, லிங்காவிலாவது மெட்டுக்கு மோட்சம் கிடைக்கட்டும் என்று பாடல்களின் பிரம்மா மீண்டும் படைத்திருப்பார்.

மனோ ரஹ்மானோடு சேர்ந்த பாடல்கள் எல்லாமே ஒரு தனி விதமாக, அந்தந்தப் படங்களின் மெகா ஹிட் பாடல்களாக அமைவதன் தொடர்ச்சி பெரிய இடைவெளிக்குப் பிறகு 'லிங்கா'விலும்..

முக்காலா - காதலன்
வீரபாண்டிக் கோட்டையிலே/ புத்தம்புது பூமி/ கண்ணும் கண்ணும் - திருடா திருடா
தில்லானா - முத்து
வானில் ஏணி - புதிய மன்னர்கள்
ஆத்தங்கரை மரமே - கிழக்குச் சீமையிலே
ஓஹோ கிக்கு - படையப்பா

------------------------------

கார்க்கியுடன் நேற்று முன்தினம் உரையாடியபோது இந்தப் படத்தின் எல்லாப் பாடல்களுமே A.R.ரஹ்மான் இசையமைத்த மெட்டுக்களுக்கு எழுதியவை என்ற தகவலையும் தந்திருந்தார்.

இந்தப் பாடல்களின் படமாக்கலில் நான் பெரிய எதிர்பார்ப்பு வைக்கவில்லை.
பார்த்த இரு பாடல்களின் promo வடிவங்கள் இது தான் கே.எஸ்.ஆர் ஸ்டைல் என்று காட்டியிருப்பதால் கேட்பதோடு சரி..

ஆனால் தொழினுட்பம் முன்னேறிய இந்தக் காலத்தில் பாலம் கட்டும் பாடலுக்காவது இயக்குனர் நியாயம் செய்வார் என்று நம்புவோமாக.


4 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
அண்ணா.

காத்திருந்து பார்க்கலாம்.
அருமையாக சொல்லியுள்ளீர்கள்.அதுவும் விரிவாக.பகிர்வுக்கு நன்றி

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Unknown said...

Rahman shoud not use haricharan's voice again.

Unknown said...

Good review

தனிமரம் said...

காத்திருந்து பார்க்கலாம்

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner