Showing posts with label India. Show all posts
Showing posts with label India. Show all posts

January 11, 2021

சிட்னி டெஸ்ட் - இந்தியாவின் போராட்டம் தவிர்த்த தோல்வி, அவுஸ்திரேலியாவுக்கு தோல்வி !

 தோல்வியைத் தவிர்ப்பதே சில நேரங்களில் வெற்றி தான் !

அதை இன்று இந்தியா போராடிச் செய்திருக்கிறது.



மூன்று வீரர்கள் காயம்.
அவுஸ்திரேலியாவின் படுபயங்கர பந்து வீச்சு வரிசை, இறுதிநாள் சிட்னி ஆடுகளம், பொல்லாத அவுஸ்திரேலிய வீரர்களின் வாய்கள்..

இதையெல்லாம் தாண்டி மூன்று விக்கெட்டுக்களை மட்டுமே இறுதி நாளில் இழந்து, இன்று சமநிலையில் முடித்தது சரித்திரத்தில் ஒரு பெரிய சாதனை தான் !

Rishabh Pant ஆடுகளத்தில் இருந்தபோது நான் நினைத்தேன், இந்தியா ஒரு சரித்திரபூர்வ வெற்றியைப் பெறப்போகிறது என்று.

Adversity brings out the best in man
இக்கட்டான சூழ்நிலைகள் தான் சரித்திர நாயகர்களை உருவாக்குகிறது.
Pant இன்று அவ்வாறு தான் தெரிந்தார்.

எதற்கும் அஞ்சாமல் ஆடிய விதம் அவுஸ்திரேலிய வீரர்களை நிச்சயம் பயமுறுத்தியிருக்கும்.

Pant விக்கெட் காப்பில் தான் விட்ட பிடிகளை, தனது ஓட்டைக் கைகளை எல்லாம் இன்றைய அதிரடித் துடுப்பாட்டம் மூலமாக முழுதுமாக அழித்துவிட்டார்.

புஜாராவின் வழமையான பொறுமையான ஒட்டல் பாணி இந்திய ரசிகர்களாலேயே நக்கல் செய்யப்படுவதுண்டு. ஆனால் இன்று பாண்டுக்கு ஏற்ற அற்புதமான இணையை வழங்கியிருந்தார்.

ஜடேஜாவும் முழுமையாக ஆரோக்கியமாக இருந்திருந்தால் பாண்டின் அதிரடியோடு இந்தியா வெற்றிக்கு கொஞ்சமாவது முயன்றிருக்கும் என நம்புகிறேன்.

இதே போல 406 என்ற இலக்கை இந்தியா 44 ஆண்டுகளுக்கு முன்னர் Port of Spainஇல் துரத்தி வென்றது இரண்டு தசாப்தகாலமாக டெஸ்ட் சாதனையாக இருந்ததும் நினைவுபடுத்தவேண்டியது.
(அந்தப் போட்டி கிரிக்கெட்டின் போக்கையே முற்றுமுழுதாக மாற்றியது வேறு கதை என்று அப்பா அடிக்கடி சொல்வார்.
அந்தத் தோல்வி தான், அந்தப் போட்டியில் மூன்று சுழற்பந்து வீச்சாளரைக் கொண்டு ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் Fast bowlingஐத் தமது ஆயுதமாக தெரிந்தெடுக்கக் காரணமாக அமைந்ததாம்

ஆனால் ஐந்து விக்கெட் இழக்கப்பட்ட பிறகு 250+ பந்துகள் விஹாரியும் அஷ்வினும் போராடியது இந்தியாவுக்குப் புதிய அனுபவம் தான். (அதுவும் அவுஸ்திரேலியாவின் படுபயங்கர sledgingஐயும் தாண்டி)
விஹாரி தனது தெரிவை நியாயப்படுத்தியிருக்கிறார்.
அஷ்வின், தான் ஏன் இந்தியாவின் முதலாவது Test தெரிவாக இருக்க வேண்டும் என்பதை மீண்டும் துடுப்பின் மூலமாகவும் காட்டியிருக்கிறார்.

நான் வழமையான அவுஸ்திரேலியாவின் ரசிகன் தான்.
ஆனால் இன்று மிக முக்கியமாக அணித்தலைவர் பெய்னின் மோசமான நடத்தைகள், அணுகுமுறைகளுக்காகவே இந்தியா (வெல்லாது என்று தெரியும்) தோல்வியைத் தவிர்க்கவேண்டும் என்று விரும்பினேன்.
அதிலும் பேயன் (ஊப்ஸ் பெயின்) விட்ட பிடிகளே இந்தப் போட்டியை அவுஸ்திரேலியா வெல்லாமல் போக பிரதானமான காரணங்கள் என்பேன்.
ஸ்மித் பாண்டின் Guard தடங்களை வேண்டுமென்றே அழித்ததாக இந்திய ரசிகர்கள் பகிர்ந்து வரும் படங்களை பார்த்தேன். Smith cheater என்று மீண்டும் ஆரம்பித்துள்ளார்கள்.

ஸ்மித் அதை வேன்றுமென்றே செய்திருந்தால், அதன் மூலம் போட்டியின் முடிவை மாற்ற எத்தனித்திருந்தால் அதையும் கண்டிக்கவே வேண்டும்.

சுவர் ராகுல் டிராவிட்டின் பிறந்தநாளை இன்னொரு டிராவிட்டினால் இப்போது வழிநடத்தப்படும் இந்தியா இதை விடச் சிறப்பாகக் கொண்டாடியிருக்க முடியாது.

அவுஸ்திரேலியாவுக்கு நிச்சயமாக இது ஒரு தோல்வியே தான் !

என்ன, சின்னக் கவலை ஸ்மித் மீண்டும் க்குத் திரும்பிக் காட்டிய இரண்டு இன்னிங்ஸ் சாகசங்கள், Labuschagne, Greenஇன் ஆட்டங்கள், கமின்ஸின் முதல் இன்னிங்ஸ் நெருப்புப் பந்துவீச்சு எல்லாம் வீணானதே என்பது தான்.

ஆனால் அது தான் டெஸ்ட் !
Tests your perseverance.

தொடரின் முடிவைத் தீர்மானிக்கும் இறுதி டெஸ்ட் போட்டி அவுஸ்திரேலியாவின் கோட்டை என்று அழைக்கப்படும் Gabba, பிரிஸ்பேனில்.

இந்தியாவின் காயம் + உபாதை லிஸ்ட் பெரிசு என்பதால் இதே போராட்டத்தைக் கொடுக்க முடியுமா என்ற சந்தேகம் இருந்தாலும், ரஹானேயினால் உந்தப்படும் இந்த அணி இறுதிவரை போராடும் என்றே தெரிகிறது.

ரஹானேயின் தலைமையில் இன்னமும் இந்தியா ஒரு டெஸ்ட் போட்டியிலும் தோற்கவில்லை.
Ajinkya Rahane, still undefeated as a captain in Test cricket
#AUSvIND

இதே நெருப்பில் பாதியையாவது நம்ம அணி எமது கோட்டை காலியில் காட்டுமாக இருந்தால்....
பொங்கல் சும்மா பொங்கி களைகட்டும் எமக்கு.
#SLvENG 1st Test - 14th

January 05, 2018

#SAvIND - அச்சமூட்டும் வேகம் எதிர் அசத்தல் துடுப்பாட்டம்!!! - தென் ஆபிரிக்கப் புயலை எதிர்கொள்ளுமா கோலியின் 'புதிய' இந்தியா


(Freedom Trophy - நெல்சன் மண்டேலா - மகாத்மா காந்தி ஆகிய இருவருக்கும் அர்ப்பணிக்கப்படும் இந்தக் கிண்ணத்தை மீட்கும் அணித் தலைவருக்கான சிறைவைக்கப்பட்டிருப்பதைப் போல சித்தரிக்கப்பட்டுள்ள வடிவம் என்னைக் கவர்ந்துள்ளது)

தென் ஆபிரிக்கா தனக்கு சாதகமாக புற்கள் மேவிக்கிடக்கும் ஆடுகளத்தைத் தயார் செய்து, நாணய சுழற்சியிலும் வென்று துடுப்பாட்டத்துக்கு சாதகமான முதல் இரு நாட்கள் துடுப்பெடுத்தாட முனைந்திருக்க, இந்தியப் பந்துவீச்சாளர்கள் இந்த எண்ணங்களையெல்லாம் தவிடுபொடியாக்கி முதல் நாளிலேயே 286 ஓட்டங்களுக்கு சுருட்டி எடுப்பார்கள் என்று யார் எதிர்பார்த்தார்?

நம்புவீர்களோ இல்லையோ, நான் கொஞ்சமாவது நினைத்தேன்... இந்தியாவிடமும் இப்போது உலகத்தரம் வாய்ந்த துடுப்பாட்ட வரிசைகளைத் தடுமாற வைக்கக்கூடிய வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். ஆரோக்கியமான அணித்தெரிவு சிக்கலை ஏற்படுத்தக்கூடியளவுக்கு சிறப்பான பெறுபேறுகளைக் காட்டும் ஐந்து பேர் இருக்கிறார்கள்.

பல தடவை இவ்வாறு சொந்த செலவில் சூனியம் வைத்த கதைகள் பலவான் அணிகளுக்கே நடந்திருக்கின்றன.
அண்மைய உதாரணம் புனேயில் இந்தியா சுழல் பந்துக்கு சாதகமான ஆடுகளம் செய்து வைக்க, பெரிதாக அறியப்படாத, ஓ கீப் யாருமே எதிர்பாராத வகையில் 12 விக்கெட்டுக்களை எடுத்து மூன்று நாட்களில் இந்தியாவுக்கு மிகப்பெரிய தோல்வியைப் பரிசளித்த கதை.

ஆனால் 286 என்பதையே ஒரு பெரிய, சவால்மிக்க ஓட்ட எண்ணிக்கையாக மாற்றிக்காட்ட தென் ஆபிரிக்க வேகப்பந்து வீச்சாளர்களால் முடியும். முடியுமா என்று நான் இட்ட ட்வீட்டுக்கு சில நிமிடங்களிலேயே மூன்று விக்கெட்டுக்களைப் பறித்து பதிலளித்துள்ளார்கள்.
தென் ஆபிரிக்காவுக்கு டீ வில்லியர்ஸ் - டூ ப்ளேசி இணைப்பைப் போல, பின் வந்த தென் ஆபிரிக்காவின் பந்துவீச்சாளரும் விக்கெட் காப்பாளரும் சேர்த்துக் கொடுத்த ஓட்டங்கள் போல சேர்க்காவிட்டால் தென் ஆபிரிக்கா நான்கு நாட்களுக்குள் போட்டியை முடிக்கும்.

நாளை காலை வேளை தென் ஆபிரிக்காவின் வேகப்பந்துவீச்சை இந்தியா சமாளிக்கும் வகையில் தான் இந்தப் போட்டி செல்லும் பாதை உள்ளது.
ரஹானே இல்லாத வெறுமையும், சகாவை இப்படியான ஆடுகளத்தில் ஆறாம் இலக்கத்தில் ஆடவைக்கும் தவறான முடிவும் நாளை தென் ஆபிரிக்காவின் நான்கு முனை வேகத்திலேயே தங்கியிருக்கிறது.

28/3 என்று இந்தியா இப்போதிருக்கும் நிலையைப் பொறுத்தவரை தென் ஆப்பிரிக்காவுக்கு சாதகம் இருந்தாலும் புஜாரா இந்தியாவின் தூணாக இருப்பார் என்பதும், ரோஹித்தின் அண்மைய பெறுபேறுகளும்  இந்தியாவுக்கு உற்சாகம் தரலாம்.

இந்தியாவின் துடுப்பாட்ட வரிசையின் பலம் பற்றி சிலாகித்தும்  - பொதுவாகவே இன்று கோலி, விஜய் ஆகியோர் ஆட்டமிழந்த விதமாகவே இந்தியத் துடுப்பாட்ட வீரர்கள் வெளிநாடுகளில் சொதப்பினாலும் கூட- அண்மைக்காலமாக முன்னேற்றம் கண்டு வரும் கோலியின் தலைமையிலான இந்தியாவின் மேலுள்ள நம்பிக்கையால் - தென் ஆபிரிக்காவின் அச்சுறுத்தும் வேகப்பந்து வீச்சு பற்றி வியந்தும் - இந்த இரண்டு காரணிகளும் மோதும் தொடராக இது அமையும் என்று குறிப்பிட்டு இன்று Sports Tamil க்கு எழுதிய கட்டுரையில் சில மேலதிக சேர்க்கைகளோடு இந்த இடுகை..

இந்தியா vs தென் ஆபிரிக்கா - அச்சமூட்டும் வேகம் எதிர் அசத்தல் துடுப்பாட்டம் 


இன்று தென் ஆபிரிக்காவில் ஆரம்பிக்கும் கிரிக்கெட் தொடரானது உலகின் அத்தனை கிரிக்கெட் ரசிகர்களினதும் கவனத்தை ஈர்க்கும் ஒரு தொடராக அமையப்போகிறது. கிரிக்கெட்டின் பழம்பெரும் தொடர்களில் ஒன்றான அவுஸ்திரேலியா - இங்கிலாந்து மோதும் ஆஷஸ் முடிவுறும் நேரத்தில் தென் ஆபிரிக்க - இந்தியத் தொடர் ஆரம்பிப்பது கிரிக்கெட்டின் குதூகலம் இல்லாமல் வேறென்ன?


கிட்டத்தட்ட ஒரு வருட காலமாக சொந்த நாட்டிலும், இந்தியாவை ஒத்த கால நிலை, களத்தன்மைகளைக் கொண்ட இலங்கையிலும் பெரியளவில் சவால்களை எதிர்கொள்ளாமல் இலகுவாக வெற்றிகளைக் குவித்து டெஸ்ட் தரப்படுத்தல்களில் முதலாம் இடத்திலுள்ள இந்திய அணி அண்மைக்காலத்தில் தனது முதலாவது பெரும் சவாலை சந்திக்கப்போகிறது.

டெஸ்ட் தரப்படுத்தலில் முதல் இரு இடங்களில் உள்ள அணிகளின் மோதல் இது.
எனினும் 3-0 என்று தென் ஆபிரிக்காவிடம் இம்முறை தோற்றாலும் முதலிடம் பறிபோகாது எனும் அளவுக்கு கடந்த சில மாதகாலத் தொடர்ச்சியான வெற்றிகள்.
அதிலும் 9 டெஸ்ட் தொடர்களைத் தொடர்ச்சியாக வென்று சாதனையை சமப்படுத்தியுள்ளது. ஆனால் சாதனையை முறியடிக்கும் 10வது தொடர் வெற்றி நிச்சயம் கிடைக்கப்போவதில்லை என்பது உறுதி.

தென் ஆபிரிக்காவுக்கோ கடைசியாக 2015ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் இந்தியாவில் வைத்துக் கண்ட 3-0 என்ற (4 டெஸ்ட்களில்) தோல்விக்கு வேகப்பந்து ஆடுகளங்களில் வைத்துப் பழி தீர்க்கும் எண்ணமுள்ளது. 

இதுவரைக்கும் தென் ஆபிரிக்காவிலே  எந்தவொரு டெஸ்ட் தொடரிலும் வெல்லாத இந்திய அணிக்கு இது ஒரு மிகப் பெரும் சோதனை தான்.
உலகின் மிகச் சிறந்த டெஸ்ட் துடுப்பாட்ட வரிசை என்று சொல்லக்கூடியளவுக்கு இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர்கள் கடந்த 2017இல் மாறி மாறி ஓட்டங்களை மலையாகக் குவித்திருந்தார்கள். அவுஸ்திரேலிய, இங்கிலாந்து, நியூ சீலாந்து பந்துவீச்சாளர்களையும் சந்தித்திருந்தார்கள். ஆனால் அவை அனைத்தும் இந்திய ஆடுகளங்களில்..
ஒன்றில் தட்டையான துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமான ஆடுகளங்கள். இல்லையேல் சுழல்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்கள்.

இன்று முதல் இந்தியாவின் துடுப்பாட்ட வரிசை சந்திக்கவிருப்பதோ உலகின் எந்தவொரு துடுப்பாட்ட வரிசையும் அச்சுறுத்தும் உலகின் மிகச்சிறந்த வேகப்பந்துவீச்சு வரிசை.
மற்ற அணிகள் எல்லாம் அதிகபட்சம் 2 அல்லது 3 வேகப்பந்து வீச்சாளர்களை வைத்துத் தடுமாறிக்கொண்டிருக்க தென் ஆபிரிக்கா மிக உறுதியான 5 உயர்தரமான வேகப்பந்து வீச்சாளர்களை வைத்துக்கொண்டு (ஸ்டெயின், மோர்னி மோர்க்கல், பிலாண்டர், றபாடா, க்றிஸ் மொரிஸ்), மேலதிகமாக மிதவேகப்பந்தை வீசும் பெலகாவாயோவும் இருக்கிறார்-  யாரைத் தெரிவு செய்வது, யாரை விடுவது என்று யோசித்துக்கொண்டிருக்கிறது.
உலகின் மிகச் சிறந்த வேகப்பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயினையே ஓய்வு அளித்து மற்றையவர்களைப் பயன்படுத்தலாமா என்று சிந்திக்கிறார்கள் என்றால் எத்தகைய பலம் அது?

அதுவும் இன்று கேப்டவுனில் ஆரம்பித்துள்ள டெஸ்ட் போட்டி முதல் அத்தனை ஆடுகளமுமே வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான எகிறும் ஆடுகளங்களை விரும்புகிறார்கள் என்று சொன்னால் அவர்களது நோக்கம் எத்தகையது என்று புரிந்துகொள்ளலாம்.

இதுவரை காலமும் இவ்விரு அணிகளின் டெஸ்ட் மோதல்களில் 
விளையாடியவை - 33
தென் ஆப்பிரிக்காவுக்கு வெற்றி - 13
இந்தியாவுக்கு வெற்றி - 10
சமநிலை - 10

ஆனால் தென் ஆபிரிக்காவில்,
17 டெஸ்ட் போட்டிகளில்,
தென் ஆப்பிரிக்காவுக்கு வெற்றி - 8
இந்தியாவுக்கு வெற்றி - 2
சமநிலை - 7

இந்த நிலையை இப்போதிருக்கும் வெற்றிக்காக ஆவேசத்துடன் விளையாடக்கூடிய தனது இளைய அணியின் மூலம் அடையும் விருப்போடு இருக்கிறார் விராட் கோலி.

அதற்கு ஏற்றதாக இந்தியாவின் பலம்வாய்ந்த அசத்தல் துடுப்பாட்ட வரிசை இருக்கிறது. தென் ஆபிரிக்காவின் ஆடுகளங்களிலும்  ஈடுகொடுத்து ஆடக்கூடிய நுட்பங்கள் கொண்ட துடுப்பாட்ட வீரர்கள் இருக்கிறார்கள்.
முக்கியமாக கடந்த வருடத்தில் 1000 ஓட்டங்களுக்கு மேலே குவித்த புஜாராவும் கோலியும்.
இதிலே மூன்றாம் இலக்கத்தில் ஆடும் புஜாரா உலகின் மிக நம்பகமான துடுப்பாட்ட வீரர்களில் ஒருவர். டெஸ்ட் போட்டிகளுக்கு என்றே வார்க்கப்பட்டவர் போல. கடந்த வருடத்தில் 4 சத்தங்களுடன் 1140 ஓட்டங்களைக் குவித்திருந்த புஜாராவின் ஓட்டக்குவிப்பும் நின்று நிலைப்பும் இந்தியாவுக்கு மிக அவசியமாகிறது.
அதேபோல உள்நாட்டில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் முன்னின்று ஓட்டக்குவிப்பிலும் வழிநடத்தி 5 சதங்களைப் பெற்ற (இவற்றில் இரண்டு இரட்டை சத்தங்கள்) கோலி இங்கிலாந்தில் தடுமாறியதைப் போல இல்லாமல் நேர்த்தியாக, துணிச்சலாக ஆடினால் அது இந்திய அணிக்கு மிகப்பெரும் பலமாக அமையும்.

முரளி விஜய் இன்னொரு முக்கியமான வீரர். வெளிநாட்டு மண்ணில் தடுமாறும் இந்திய வீரர்களுக்கு மத்தியில் விஜய் மிக நேர்த்தியாக ஆடக்கூடிய வீரர். ரஹாநேயும் அவ்வாறு இருந்தாலும் இலங்கை அணியோடு தொடர்ச்சியாகத் தடுமாறியிருப்பது அவரது formபற்றிய சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இதனால் தான் கிடைத்த டெஸ்ட் வாய்ப்புக்களில் தன்னை நிரூபித்தவரும் ஒருநாள் மற்றும் T20 போட்டிகளில் சிறப்பான ஓட்டக்குவிப்பில் இருக்கும் ரோஹித் ஷர்மாவுக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது.

தவான், ராகுல் ஆகிய இருவருமே தம்மை நிரூபித்தவர்கள். எனினும் தவானே இந்தியாவின் தெரிவாக அமைய அவரது அனுபவமும் அதிரடியும் காரணமாக அமையும்.
இந்தியா மேலதிகமாக ஒரு வேகத்தையும் சேர்த்துக்கொள்ள பாண்டியாவின் சகலதுறைத் திறமை பயன்படுள்ளது.

எதிர்பார்த்ததைப் போல ஒருநாள் போட்டிகளில் கலக்கிய பும்ராவுக்கு அறிமுகத்தை வழங்கி மூன்று வேகப்பந்து வீச்சாளரோடு களம் கண்டிருக்கிறது. 
பும்ரா எதிர்பார்த்தளவுக்கும் குறுகிய ஓவர்கள் கொண்ட போட்டிகளில் காட்டிய திறமையளவுக்கு சிறப்பாக செய்யாவிடினும் அவரது முதல் விக்கெட் ஏபி டீ வில்லியர்ஸ்.
எனும் அனுபவம் வாய்ந்த இஷாந்த் ஷர்மாவை இன்று தெரிவு செய்திருக்கலாமோ என்று கோலி இனி எண்ணலாம்.
ஜடேஜா உடல்நலக்குறைவு அஷ்வினை மட்டும் தெரிவு செய்யும் வாய்ப்பை வழங்கியுள்ளது.

தென் ஆபிரிக்கா மிக நீண்ட காலத்துக்குப் பிறகு உபாதை சிக்கல்கள் எதுவும் இல்லாமல் தன்னுடைய மிகச்சிறந்த அணியோடு இறங்கியுள்ளது.
துடுப்பாட்டத் தெரிவுகளில் பெரிய சிக்கல் இல்லாவிட்டாலும் சிறப்பாக ஆடிவந்த பவுமாவை இன்று விட்டுவிட்டு ஆடவேண்டிய நிர்ப்பந்தம்.
எனினும் அம்லா, டீன் எல்கர் (கடந்த ஆண்டில் ஆயிரம் ஓட்டங்களைக் கடந்தவர்) மீண்டும் டெஸ்ட் அணிக்குள் வந்துள்ள உபாதை கடந்த டீ வில்லியர்ஸ், அணித் தலைவர் டூ ப்ளேசிஸ் ஆகியோரோடும் உலகத் தரம் வாய்ந்தததாகத் தெரிகிறது.

எனினும் ஐந்து முழு நேரப் பந்துவீச்சாளரைத் தெரிவு செய்திருப்பதால் ஒரு துடுப்பாட்ட வீரர் குறைவாக விளையாடும் அபாயம்.
டீ கொக்கும் ஒரு சிறப்பான துடுப்பாட்ட வீரரே. எனினும் அவருக்குப் பிறகு பிலாண்டர் வருவது துடுப்பாட்டம் பலவீனமானதாகவே தெரிகிறது.
ஆனாலும் முக்கியமான மூன்று வீரர்களும் 12 ஓட்டங்களுக்கு ஆடுகளம் விட்டு அகன்றும் கூட சமாளித்த திறமை மெச்சக்கூடியது.

ஆயினும் தென் ஆபிரிக்கா தன்னுடைய வேகப்பந்துவீச்சாளரில் வைத்துள்ள நம்பிக்கை அது.

இதனால் தான் இந்தத் தொடர் தென் ஆபிரிக்க வேகப்பந்து வீச்சாளரின் அச்சுறுத்தும் வேகப்பந்துவீச்சுக்கும் இந்தியாவின் ஓட்டக்குவிப்பில் ஈடுபடும் அசத்தல் துடுப்பாட்ட வீரருக்கும் இடையிலான மோதல் தொடராகக் கருதப்படுகிறது.

இதுவரை கலக்கும் இந்திய வேகப்பந்துவீச்சாளரை உலகின் நம்பகமான துடுப்பாட்ட வீரர்களைக் கொண்ட தென் ஆபிரிக்கத் துடுப்பாட்ட வரிசை சமாளிக்குமா என்பதே தொடரின் முதலாவது கேள்வி. 
புவனேஷ்வர் குமாருக்கு 4 விக்கெட்டுக்களைப் பெற்றுக்கொடுக்க உதவிய ஆடுகளம் நாளை தென் ஆபிரிக்காவின் புயல்களுக்கு என்னென்ன சாதகத்தை வழங்குமோ?

இதுவரை ஸ்டெயின், பிலாண்டர், மோர்க்கல் ஆகியோர் தலா ஒன்று..
இன்னும் புதிய புயல் காகிஸோ றபாடாவுக்கு ஒரு விக்கெட்டும் கிடைக்கவில்லை. ஆனால் நாளை இவரது நாளாக அமையலாம். அப்படி அமைந்தால் இந்தப் போட்டி நான்கு நாட்களில் முடிந்து போகலாம்.
அண்மையில் தான் சிம்பாப்வேயுடன் இரண்டே நாளில் ஒரு டெஸ்ட் போட்டியைத் தென் ஆபிரிக்கா முடித்திருந்தது.




November 23, 2017

நாக்பூர் டெஸ்ட் போட்டி - இந்தியாவின் ஆதிக்கத்துக்கு இடையில் இலங்கைக்கு வாய்ப்புக்கள் ??

ஐந்து வரிகளில் ஒரு செய்தியைத் தரும் புது முயற்சியில் இறங்கியுள்ள 'ஐவரி' தளத்துக்காக வழங்கிய தொலைபேசி மூலமான பேட்டியின் கட்டுரை வடிவமான

ஏ.ஆர்.வி.லோஷன்/ இந்திய எதிர் டெஸ்ட்: இலங்கைக்கு இருக்கும் சாதகங்கள்

இன் மேலதிக தகவல்கள் சேர்க்கப்பட்ட  விரிவான அலசல் இது.

(இயல்பிலேயே கொஞ்சம் சோம்பலுள்ள, நேரமும் இறுகிப்போகிற என் போன்றவர்களுக்கு இப்படியான வசதிகளை ஏனையோரும் தருவது பற்றி ஏன் சிந்திக்கக் கூடாது? ;) நான் பேசிக்கொண்டே இருக்க தட்டச்சி ஏற்றித் தருபவர்களுக்கு சன்மானங்கள் பற்றி பேசித் தீர்மானிக்கலாம் )


இந்தியா - இலங்கை அணிகளுக்கிடையிலான 2009 பருவகால டெஸ்ட் தொடர் மற்றும் அதற்கு முந்திய சில தொடர்களை பொறுத்த வரையில் இலங்கையின் ஆதிக்கம் போட்டியின் முதல் இன்னிங்ஸில்; எப்போதும் மேலோங்கியதாக இருக்கும். 

2009 இல் முதலாம் இன்னிங்சில் 32/4 என்றிருந்தது இறுதி இரண்டு நாட்கள் வரையிருந்த இலங்கையின் ஆதிக்கம் வீணாய்ப்போன கதை பற்றி கடந்த பதிவில் சொல்லியிருந்தேன்.
அதேபோல் 2005 தொடரின் முதல் போட்டியிலும் இலங்கை அணி இந்தியாவை 167 ஓட்டங்களுக்கு உருட்டியிருந்தது, எனினும் இடைவிடாத மழை..
இலங்கை 168/4 என்றிருந்த பலமான நிலையில் போட்டி முடிவுக்கு வந்தது.

இலங்கை அணியின் பந்து வீச்சும் முதலாம் இன்னிங்ஸ்களில் மிகச் சிறந்ததாக இருந்து வந்தது.

முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர்களுக்கு இலங்கையின் பந்துவீச்சாளர்கள் நெருக்கடியை கொடுப்பதும், பின்னர் அந்த நிலைமையில் மாற்றம் ஏற்படுவதுமாக இருக்கும்.

ஆனால் இந்த நிலைமை தற்போது வேறுவிதமாக மாற்றம் அடைந்துள்ளது.

இலங்கை அணியைப் பொறுத்தவரையில் இந்தியாவுடன் ஒரு தொடர் ஆரம்பிக்கும் போது பாரிய உத்வேகத்துடன் விளையாட ஆரம்பிக்கும்.

அது படிப்படியாக குறைவடைந்து செல்லும் நிலைமையை அவதானிக்காலம்.

இதற்கு பிரதான காரணம் இலங்கை அணி வீரர்களினால் டெஸ்ட் போட்டி ஒன்றின் முதல் 3 நாட்கள் வெளிப்படுத்தும் திறமையின் அளவிற்கு இறுதி இருநாட்களில் வெளிப்படுத்த முடியாத நிலை ஏற்படுவதாகும். 

கொல்கத்தா டெஸ்ட் போட்டியின் இறுதிநாள் பின்னர் இந்தியாவின் மனநிலையில் ஒரு தனி உற்சாகம் கிட்டியிருப்பது என்னவோ உண்மை. 
நாளைய நாக்பூர் போட்டியிலும் அதே உத்வேகத்தோடு இறங்கப் போகிறார்கள். குறிப்பாக கடைசி நேர இலங்கை துடுப்பாட்ட வீரர்களின் தடுமாற்றமும், இலங்கை அணியால் எடுக்க முடியாமல் போன கோலி + இந்திய வீரர்களின் விக்கெட்டுக்கள் கோலி போன்ற form இலுள்ள ஆக்ரோஷமான வீரர்களுக்கு மிகப்பெரிய ஆதிக்க மனப்பாங்கைக் கொடுத்திருக்கும்.

எனினும் சுரங்க லக்மால் எடுத்துள்ள விஸ்வரூபம் இந்திய வீரர்களுக்கு தொடர்ந்தும் ஐயத்தையும் தடுமாற்றத்தையும் தரும் என்பது உறுதி.

இரண்டாம் இன்னிங்ஸின் நம்பிக்கை வீரர்கள்

குறிப்பாக தற்போதைய வீரர்களில் திமுத் கருணாரத்ன, அஞ்சலோ மத்தியூஸ் மற்றும் ரங்கன ஹேரத் ஆகிய முன்று வீரர்கள் மாத்திரமே இரண்டாவது இன்னிங்ஸில் நம்பிக்கை அளிக்கக்கூடியவர்களாக உள்ளனர்.

மற்றைய வீரர்களிடம் ஆற்றல் குறைவு அல்லது அனுபவக்குறைவு போன்ற காரணங்களால், அவர்களின் போராட்டத்திறன் குறைவாக உள்ளது.

இந்த காரணத்தினால் இலங்கை அணியினால் இறுதிவரையில் போரடமுடியாதுள்ளது.

முன்னர் அர்ஜூன ரணதுங்க, மஹேலஜெயவர்தன மற்றும் குமார் சங்கக்கார போன்ற வீரர்கள் அணியி ல் இருந்த போதும் இவர்கள் தலைவர்களாக இருந்தபோதும் இதுபோன்ற நிலை இருந்ததில்லை.

அந்த காலத்தில் அணியில் ஒருவர் 'நின்றுபிடித்து' தமது அணியின் ஓட்ட எண்ணிக்கையினை உயர்த்தும் வகையில் செயற்படுவார்.அல்லது காப்பாற்றவாவது போராடுவார்கள்.

ஆனால் தற்போது அவ்வாறான ஒரு வீரர் இலங்கை அணியில் இல்லை என்பது மிகப்பெரிய குறையாக உள்ளது.


வேகப்பந்தும் - சுழற்பந்தும்

இந்திய அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியை பொறுத்தவரையில் நம்பிக்கை அளிக்க கூடிய விடயமாக, இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் சளைக்காது பந்து வீசியமையைக்  கூறலாம்.

இந்திய அணியினருக்கு எதிரான அச்சுறுத்தலான பந்து வீச்சாளர்களையும் இதன் போது அடையாளம் கண்டு கொள்ளக்கூடிய  சந்தர்ப்பம் ஏற்பட்டது.

இருப்பினும் சுழல் பந்து வீச்சாளர்களுக்கு போதுமான நம்பிக்கை நிறைவடைந்த போட்டியில் கிடைக்காமை, அடுத்த போட்டியில் இலங்கை அணிக்கு அது பாதகமான நிலைமையை ஏற்படுத்தும் என்று எண்ணத் தோன்றுகிறது. குறிப்பாக மற்றைய அணிகளுக்கு எதிராக தனது ஆதிக்க வல்லமையைக் காட்டும் ரங்கன ஹேரத் இந்திய அணியுடன் அண்மைக்காலமாக சறுக்கி வருவது இலங்கையைப் பொறுத்தவரை ஆரோக்கியமான விடயமில்லை.
கொல்கத்தாவிலும் ஹேரத்துக்கு முதலாம் இன்னிங்சில் போதிய ஓவர்கள் கிடைக்காமை மற்றும் இரண்டாம் இன்னிங்சில் விக்கெட்டுக்கள் கிடைக்காமை அவரது மனதில் நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தியுள்ளதோ இல்லையோ, இந்தியத் துடுப்பாட்ட வீரர்களுக்கு மனத்திடத்தை வழங்கியிருக்கும்.

எனினும் இந்தியா, தென்னாபிரிக்காவின் தொடரை கருத்திற்கொண்டு, வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான ஆடுகளத்தை உருவாக்குகிறது.

இது இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்களுக்கு ஒப்பீட்டளவில் சற்று சாதகமாக அமையும்.

காரணம், கடந்த இந்தியா, பாகிஸ்தான், சிம்பாப்வே ஆகிய அணிகளுக்கு எதிரான போட்டிகளின் போது இலங்கை அணி சுழல் பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வதில் சற்று தடுமாற்றத்தை சந்தித்திருந்ததை அவதானிக்க முடிந்தது.

சுழற்பந்து வீச்சுக்கு பெயர் போன இலங்கை அணிக்கு, இவ்வாறான நிலைமை ஏற்பட்டுள்ள வருத்தப்பட வேண்டிய விடயமாகும்.

அத்துடன் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களில் பவுன்ஸர் பந்துகள் வீசப்படுவது சற்று குறைவு.

இது இலங்கைக்கு சற்று சாதகமாக அமைந்திருந்தாலும், கடந்த போட்டியில் இந்திய அணி பந்து வீச்சாளர்களின் வேகம் இலங்கை அணியினரை விட சற்று அதிகமாகவே இருந்தது. அத்தோடு இரண்டாம் இன்னிங்சில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் காட்டிய துல்லியம் அற்புதம்.இலங்கை அணி இந்த வேளையில் ஓய்வு வழங்கப்பட்டுள்ள நுவான் பிரதீப்பை நிச்சயம் எண்ணிக் கவலைப்படும். லஹிரு கமகே சிலவேளைகளில் சிறப்பாகப் பந்துவீசியிருந்தாலும் இன்னும் துல்லியம் எதிர்பார்க்கப்படுகிறது. இடது காய் வேகப்பந்து வீச்சாளர் விஷ்வ பெர்னாண்டோ பற்றியும் தேர்வாளர்கள் யோசிக்க இடமுள்ளது.

நாளைய போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ் குமார் இல்லாமையும் இலங்கை அணிக்கு கிடைக்கும் மற்றுமொரு சாதக வாய்ப்பாகும்.
இந்தியா தென் ஆபிரிக்கத் தொடருக்கு தயாராவது பற்றி பகிரங்கமாகவே அறிவித்துள்ள நிலையில் புவனேஷ்குமாரின் இடத்தில் இன்னொரு வேகப்பந்துவீச்சாளராக இஷாந்த் ஷர்மாவை இணைத்துக்கொள்ளப் போகிறதா? இல்லை புதிதாக குழாமில் இணைக்கப்பட்டுள்ள தமிழக சகலதுறை வீரரான விஜய் ஷங்கரை அறிமுகப்படுத்துமா என்ற சுவாரஸ்யமான கேள்வி எழுகிறது.

ஹர்டிக் பாண்டியாவின் வெற்றிகரப் பிரவேசம் இந்தியாவுக்கு மீண்டும் மிதவேக, வேகப்பந்து வீசும் சகலதுறை வீரர்களின் மீது பார்வையை செலுத்த வைத்துள்ளது. ஷங்கரும் தமிழக ரஞ்சி அணிக்கும், இந்திய A அணிக்கும் தான் விளையாடிய போதெல்லாம் சகலதுறை வீரராக அற்புதமாக ஆட்டத் திறனை வெளிப்படுத்தியுள்ளார்.
பாண்டியாவுக்கும் போட்டிக்கு ஒருவர் தேவைப்படுவதை இந்தியா உணர்ந்துள்ளது.
விராட் கோலியும் விஜய் ஷங்கரை சிலாகித்திருப்பதோடு பாண்டியா போன்ற இன்னொருவரை கூடவே வைத்துக்கொள்வதும் அவசியப்படுகிறது.

இப்போதிருக்கும் நிலையில் இஷாந்த் ஷர்மாவுக்கு வாய்ப்பை வழங்குவதை விட புதியவர் ஷங்கரை முயற்சிப்பது இந்தியாவுக்கு எதிர்காலத்தில் நன்மை பயக்கும்.
அத்துடன் விக்கெட்டின்றிப் போன அஷ்வின் பற்றியும் தேர்வாளர்கள் சந்திக்கக்கூடும்.

மத்தியூஸ் மற்றும் திரிமான்னே ஆகியோரின் துடுப்பாட்டம் மட்டுமே இலங்கைக்கு தற்போது வாய்ப்பாக உள்ளது. முதலாவது டெஸ்ட் போட்டியின் பின்னர், ஏனையோரின் துடுப்பாட்டம் குறித்து திருப்தி அடைய முடியவில்லை. எதிர்பார்க்க்கப்பட்ட திமுத், சதீர, சந்திமால் ஆகியோரின் சொதப்பல்கள் நாக்பூரில் தீர்க்கப்படுமா என்பதே கேள்வி.

ஆனால் நம்பி இருக்கக்கூடிய ஒருவராக மாறிவரும் நிரோஷன் டிக்வெல்ல பற்றித் தான் இப்போது பேச்சு.

அடுத்த அணித் தலைவர் உருவாகிறாரா?

நிரோஷன் திக்வெல்லவின் வடிவில் குமார் சங்கக்காரவை ஒத்த ஆக்ரோசமான விக்கட் காப்பாளர் ஒருவரை பார்க்க முடிகிறது. சங்காவின் அதே கண்டி திரித்துவக் கல்லூரியின் பழைய மாணவர் என்பதும் ஆச்சரிய ஒற்றுமை தான்.

அதேநேரம் அவர் மிகவும் அவதானிப்பு மிக்கவராகவும், போட்டி விதிமுறைகள், ஆட்டமிழப்புகள் குறித்த மேலதிக அறிவினை உடையவராகவும் இருக்கிறார். 


கோலி, மொஹமட் ஷமி  ஆகியோருடனான அவரது மோதல்கள் எவ்வளவு தூரம் ஆரோக்கியமானவை என்ற பேச்சுக்கள் ஒரு புறம் இருக்க, சாதுரியமாகப் போட்டி நேரத்தை எதிரணியின் வீண் பேச்சுக்கள் மூலமாகவே வீணாக்கியது பற்றி வெளிப்படையாகப் பேசியுள்ளார் டிக்கா.

அணிக்காக மோதல் குணங்களும், துணிச்சலும் கூடவே மனத்திடமும் கொண்ட  இவரிடம் எதிர்கால அணித் தலைவருக்கான தகுதிகளைக் காணக்கூடியதாக உள்ளது. 

அவர் குறித்து அணித் தேர்வாளர்கள் உரிய அவதானத்தை செலுத்தினால், இலங்கை அணிக்கு எதிர்காலத் தலைவர் ஒருவரை இப்போதிருந்தே செதுக்க முடியும் என்பது என் தனிப்பட்ட கருத்து. 
ஒருநாள் அல்லது T20 போட்டிகளில் இருந்து இதனை ஆரம்பித்துப் பார்க்கலாம்.



இலங்கை அணியின் அணித்தேர்வு குழு சற்று அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

அடுத்த போட்டிக்கான அணித்தெரிவில் என்னென்ன வலுசேர்க்க முடியும் என்பதில் தெரிவுக் குழு அவதானம் செலுத்த வேண்டும்.

தனஞ்யச டி சில்வாவிற்கு அணியில் இடமளிக்கப்படுமா? லஹிரு கமகேவிற்கான வாய்ப்பு தொடருமா? அல்லது தசுன் சானக்கவை முழுநேர பந்துவீச்சாளராக அல்லது துடுப்பாட்ட வீரராக பயன்படுத்துவதா? அல்லது சகலதுறை வீரராக பயன்படுத்துவதா? போன்ற விடயங்களை தீர்மானிக்க வேண்டும்.



மத்தியூஸின் பந்து வீச்சும் இலங்கை அணிக்கு அவசியப்படுகிறது. 

அவர் பந்துவீசுவாராக இருந்தால், அணியின் பந்து வீச்சு பிரிவுக்கு வலு சேர்ப்பதாக அமையும்.
அவர் பந்து வீசாமை இலங்கை அணியின் சமவலுவுக்கு மிகப்பெரிய இழப்பாக அமைகிறது.
இருந்தாலும், அவர் துடுப்பாட்டத்தில் அதிக கவனம் செலுத்துவதும், இலங்கை அணிக்கு தற்போதைக்கு வாய்ப்பாக இருக்கிறது. இலங்கையின் சிரேஷ்ட துடுப்பாட்ட வீரராக அவரிடமிருந்து அதிகளவான ஓட்டங்கள் தேவைப்படுகின்றன.

ஆனால் அவர் கடந்த 2 வருடங்களாக சதம் அடிக்காமை இலங்கை அணிக்கு உள்ள மிகப்பெரிய பிரச்சினையாகும். நாக்பூரில் இந்தக் குறையும் தீருமா இருந்தால் இலங்கை ரசிகர்களுக்குக் கொண்டாட்டம் தான்.

இன்னும் சில மைல் கற்களும் எதிர்பார்க்கப்படும் சாதனைகளும் பற்றி கடந்த பதிவை மீண்டும் வாசித்து அறிந்திடுங்கள்..

17/3 - கொல்கத்தா - மழை - லக்மால் - அதிர்ச்சியோடு ஆரம்பித்த இலங்கை ! தொடரும் தோல்வி வரலாற்றை மாற்றுமா?


ஆசியாவின் சகோதர மோதல் இது ஒருபுறமிருக்க, உலகமே ஆவலுடன் பார்த்திருக்கும் கிரிக்கெட்டின் மிகப் புராதனமான பரம வைரிகளின் முதலான ஆஷஸ் - Ashes பற்றி தமிழ் நியூஸில் நான் எழுதியுள்ள கட்டுரையையும் வாசித்துப் பாருங்கள்.

November 16, 2017

17/3 - கொல்கத்தா - மழை - லக்மால் - அதிர்ச்சியோடு ஆரம்பித்த இலங்கை ! தொடரும் தோல்வி வரலாற்றை மாற்றுமா?

இலங்கைக்கு சவால் ! இந்தியாவில் முதல் வெற்றி கிடைக்குமா?
என்ற தலைப்பில் தமிழ் நியூஸ் இணையத்தில் பிரசுரித்த என்னுடைய கட்டுரையில் இன்றைய கொல்கத்தா மழை நாளின் அவகாசத்தில் மேலும் சில விடயங்கள் சேர்க்கப்பட்டு இந்தப் பதிவு...



எல்லா கிரிக்கெட் ரசிகர்களும் எதிர்பார்த்துள்ள இந்திய - இலங்கை கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகியது.

நாணய சுழற்சியில் வென்றுள்ள இலங்கை அணி முதலில் பந்துவீச முடிவெடுத்துள்ளது.
1969இன் பின்னர் நாணய சுழற்சியில் வென்ற அணியொன்று கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் பந்துவீச முடிவெடுத்த இரண்டாவது சந்தர்ப்பம் இது தான்.
எனினும் மழை, மைதான + ஆடுகள ஈரலிப்பு, மேக மூட்டம் இவற்றைக் கருத்திற்கொண்டு தலைவர் சந்திமால் எடுத்துள்ள தீர்மானம் இதுவரை இலங்கை அணிக்கு சாதகமாகவும், இந்திய அணியின் துடுப்பாட்ட வரிசையைத் துவம்சம் செய்துகொண்டும் இருக்கிறது.
17/3 - கோலியும் ஆட்டமிழந்துள்ளார்.

மிக அபூர்வமாக இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர்கள் காட்டும் ஆதிக்கத் திறனை இன்று காட்டிய சுரங்க லக்மால், 6 ஓவர்கள் பந்துவீசி எதுவித ஓட்டங்களையும் கொடுக்காமல் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.

ஒரு நாளில் எதுவித ஓட்டங்களை கொடுக்காமல் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.
ராகுலும், கோலியும் ஓட்டம் எதுவும் பெறாமல். அதிலும் ராகுல் ஒரு டெஸ்ட் போட்டியின், அதுவும் டெஸ்ட் தொடரின் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தது இன்னொரு சாதனை.
 இவ்வாறு டெஸ்ட்டின் முதல் பந்தில் ஆட்டமிழந்த 31வது வீரர் இவர்.
(7 தொடர்ச்சியான 50+ ஓட்டங்களுக்குப் பிறகு பூஜ்ஜியம்)
முன்பு லக்மால் கிறிஸ் கெய்லையும் இவ்வாறு ஒரு டெஸ்ட் போட்டியின் முதல் பந்தில் ஆட்டமிழக்கச் செய்திருந்தார்.

எல்லோரும் எதிர்பார்த்த வழமையான ஆரம்பத் துடுப்பாட்ட வீரர், தமிழகத்தின் முரளி விஜயை விட்டுவிட்டு விளையாடிய இந்தியாவின் இரு ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களுமே குறைவான ஓட்டங்களோடு ஆட்டமிழந்தனர். இப்படியான வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் அற்புதமாக ஆடக்கூடியவர் விஜய்.
ஆயினும் இப்போது ஆடுகளத்தில் உள்ள புஜாராவும் ரஹானேயும் இப்படியான சூழ்நிலைகளில் நங்கூரத்தை இறக்கி பொறுமையாக ஆடி அணியைக் கரைசேர்க்கக்கூடிய வல்லமை மிக்கவர்கள். டெஸ்ட் போட்டியில் மிகச் சிறப்பான பெறுபேறுகளை அண்மைக்காலத்தில் காட்டிவரும் மிகச்சிறந்த வீரர்கள். இவர்கள் இருவரையுமே இலங்கை அணி விரைவில் ஆட்டமிழக்கச் செய்யவேண்டியிருக்கும்.

எனினும் விட்டு விட்டு விளையாட்டுக் காட்டும் மழையும் மழை இருட்டும் சேர்ந்து ஆட்டத்தை இடையூறு செய்துகொண்டேயுள்ளன. சனிக்கிழமை வரை மழையினால் போட்டி அடிக்கடி தடைப்படுவதற்கு வாய்ப்பிருப்பதாக வானிலை எதிர்வுகூறல்கள் எச்சரிக்கின்றன.

நாளை காலையும் இன்றைப் போலவே தன்மைகள் இருந்தால் இந்தியத் துடுப்பாட்ட வீரர்களுக்கு இன்னும் ஆபத்து இருக்கிறது.

இலங்கை அணியும் தனது பங்குக்கு ஒரு அதிருப்தி தரக்கூடிய அணித் தெரிவை செய்திருந்தது.
பலரும் எதிர்பார்த்த திறமையான வீரர் தனஞ்சய டீ சில்வா மற்றும் சிறப்பான form இல் இருக்கும் ரோஷென் சில்வா இருவரையும் வெளியே இருத்திவிட்டு, அண்மைக்காலமாக சொதப்பிவருகின்ற லஹிரு திரிமன்னேவை அணியில் முக்கியமான 3ஆம் இலக்கத்தில் ஆடுவதற்கு தெரிவு செய்துள்ளது.

திரிமன்னே அணியின் தலைவர் சந்திமாலின் நண்பர் என்பதைத் தாண்டி அவரது தெரிவுகளுக்கு உள்ளக ஆதரவுகள் வேறு பலவும் இருப்பதாகத் தெரிகிறது. நீண்ட கால 3ஆம் இலக்கத் தெரிவாக எண்ணப்பட்டு வந்த குசல் மென்டிசை அணியை விட்டு நீக்கவும் திரிமன்னேவுக்கு இந்த இடத்தை வழங்கும் நோக்கம் இருக்குமோ என்ற ஐயமும் வருகிறது.
(ஒருவேளை யாரும் எதிர்பாராமல் டசுன் ஷானகவை  3ஆம் இலக்கத்தில் இறக்கி அதிர்ச்சி அளிப்பார்களோ?)

இந்தியா ஆடுகளத் தன்மையறிந்து மூன்று வேகப்பந்து வீச்சாளர்களோடு களமிறங்கியிருப்பதைப் போல, இலங்கை அணி இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் மிதவேகப்பந்து வீசும் சகலதுறை வீரர் டசுன் ஷானகவை இணைத்துள்ளது. அசேல குணரத்ன இல்லாததும், அஞ்செலோ மத்தியூஸால் பந்துவீச முடியாததும் இந்த ஆடுகளத்தில் இலங்கைக்கு இழப்பாக இருந்தாலும், இங்கிலாந்துக்கு எதிராக தனது அறிமுகப் போட்டியில் 3 விக்கெட்டுக்களை எடுத்த ஷானகவுக்கு தனது திறமையை சாதகமான ஆடுகளத்தில் காட்ட வாய்ப்புக் கிடைத்துள்ளது.

இலங்கை அணி இந்திய மண்ணில் நீண்ட காலமாக எதிர்பார்த்துள்ள வெற்றியை சுவைக்கக்  கூடிய தருணம் இம்முறையாவது வருமா என்பதே இப்போதைய கேள்வி.


உலகின் முதற்தர டெஸ்ட் அணியாக வலம் வரும் கோலியின் இந்தியா சொந்த மண்ணில் விளையாடும்போது இன்னும் பன்மடங்கு பலத்தோடு தாங்கள் ஏற்கெனவே 9-0 என்று அனைத்துவிதப் போட்டிகளிலும் துடைத்தெறிந்த சந்திமாலின் தலைமையிலான இலங்கை அணியைச் சந்திக்கப்போகிறது.

தரப்படுத்தலில் 6ஆம் இடத்தில் உள்ள இலங்கை அணி அண்மைக்காலமாக வெற்றிகளைப் பெறுவது எப்படி என்றே மறந்து போயுள்ளது.
எனினும் அதிர்ச்சிதரும் விதத்தில் அமீரகத்தில் பாகிஸ்தானை இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இலங்கை வீழ்த்தி இலங்கை ரசிகர்களையே ஆச்சரியப்பட வைத்துள்ளது.
அதுவும் முக்கியமான வீரர்கள் அஞ்சேலோ மத்தியூஸ், அசேல குணரத்ன, குஷால் ஜனித் பெரேரா போன்றோர் இல்லாமலேயே.

இந்தியா சென்றுள்ள அணியில் மத்தியூஸ் இப்போது இருக்கிறார். இது சற்று மேலதிக பலம் தான். எனினும் பாகிஸ்தானை வெல்வது போல இந்தியாவை வெல்வது இலகுவான விடயமல்ல.

இந்திய ஆடுகளங்களின் தன்மைகளும் தட்ப வெப்ப சூழலும் அமீரகத்தை விட இலங்கைக்கு பரிச்சயமானதும் சாதகமானதுமானதும் போல தெரிந்தாலும் வரலாறு சொல்வது போல இந்திய மண்ணில் இலங்கைக்கு டெஸ்ட் வெற்றிகள் இதுவரை சாத்தியப்படவே இல்லை.

டெஸ்ட் அந்தஸ்து பெற்ற காலம் முதல் 35 ஆண்டுகளாக இந்தியாவிலே விளையாடிய டெஸ்ட் போட்டிகள் 17இல் இதுவரை கண்டது 10 தோல்விகளும் 7 வெற்றி தோல்வியற்ற சமநிலை முடிவுகளும் தான்.
இந்த பத்து தோல்விகளில் 8 படுமோசமான இன்னிங்ஸ் தோல்விகள் என்பது இலங்கை அணிகள் எவ்வளவு மோசமாக இந்தியாவில் விளையாடியிருக்கின்றன என்பதற்கு உதாரணம்.
அதிலும் தோல்விகள் அனைத்துமே படுமோசமான தோல்விகள்...


Sri Lanka's 10 Test defeats in India, by margin:
Inns & 106 runs Inns & 67 runs Inns & 8 runs Inns & 119 runs Inns & 95 runs Inns & 17 runs 188 runs 259 runs Inns & 144 runs Inns & 24 runs

இதே காலகட்டத்தில் இலங்கை மண்ணிலே இலங்கை 7 தடவை இந்தியாவை வீழ்த்தியுள்ளது. இலங்கையின் கன்னி டெஸ்ட் வெற்றியும் இந்தியாவுக்கு எதிராகவே பெறப்பட்ட்து என்பதையும் ஞாபகப்படுத்தவேண்டும்.

இந்தியாவின் அநேக பூகோளத் தன்மைகள் இலங்கையை ஒத்திருந்தும், 1990களின் பிற்பகுதி முதல் அண்மைக்காலம் வரை உலகின் தலைசிறந்த வீரர்கள் பலர் இலங்கை அணியில் விளையாடியும் , இந்த ஆண்டுகளில் இலங்கை இந்தியாவை பல்வேறு போட்டிகளில் பல்வேறு நாடுகளில் வைத்து இந்தியாவை வெற்றிகொண்டு ஆதிக்கம் செலுத்தியும் கூட டெஸ்ட் வெற்றி என்பது இந்திய மண்ணில் கைகூடவில்லை.

அரவிந்த டீ சில்வா அடித்து விளாசிய காலம்,
அர்ஜுனன் ரணதுங்க உலகின் மிகச்சிறந்த கிரிக்கெட் அணித்தலைவராக இருந்த காலம்,
சனத் ஜயசூரிய இந்தியப் பந்துவீச்சாளர்களைக் கண்டா இடங்களிலெல்லாம் துவம்சம் செய்த காலம், 
சமிந்த வாஸ் உலகின் மிகச்சசிறந்த இடது கை வேகப்பந்துவீச்சாளராக வலம் வந்த காலம்,
முரளிதரன் உலகின் மிகச்சிறந்த சுழற்பந்து வீச்சாளராகவும் உலக சாதனையாளராகவும் கொடி நாட்டியிருந்த காலம்,
மஹேல ஜயவர்தனவும் குமார் சங்கக்காராவும் உலகின் மிகச்சிறந்த துடுப்பாட்ட வீரர்களாக உலகம் முழுவதும் போற்றிப் புகழப்பட்ட பொற்காலம்...

இந்தக் காலங்களில் கூட இலங்கை அணியால் இந்திய மண்ணில் எதனையும் செய்ய முடியவில்லை.

அதற்கான பகுதியளவான ஒரு காரணம் - இலங்கை பலமாக இருந்த இந்தக் காலகட்டத்தில் இலங்கை அணிக்கு அதிகளவான டெஸ்ட் போட்டிகளை இந்திய மண்ணில் விளையாடும் வாய்ப்பு இந்திய கிரிக்கெட் சபையினால் வழங்கப்பட்டிருக்கவில்லை.
இறுதி 23 ஆண்டுகளில் மூன்றே மூன்று டெஸ்ட் தொடர்களை மட்டுமே இலங்கை இந்தியாவிலே ஆடியிருந்தது. இதே காலகட்டத்தில் பாகிஸ்தான் இலங்கையை ஏழு தடவை தங்கள் நாட்டுக்கு அழைத்திருந்தது.

இலங்கை அணியுடன் இந்தக் காலகட்டத்தில் இந்தியா விளையாடிய ஒருநாள் போட்டிகளின் எண்ணிக்கை ஏனைய எல்லா அணிகளையும் விட அதிகம். இதற்கு விளம்பரதாரர்கள் + அனுசரணையாளர்களின் ஆதிக்கத்துக்கு உட்பட்ட BCCI தான் காரணம்.
எனினும் இத்தகைய நிலையொன்றுக்கு இந்திய கிரிக்கெட் சபையை மட்டும் நாம் குறை சொல்ல முடியாது. காரணம் கடன் சிக்கல்கள், வருமானக் குறைவினால் இலங்கை கிரிக்கெட் சபை எப்போது சிக்கித் திணறினாலும் உடனடியாக உதவ முன்வருவது இந்தியாவே.

அங்கே அழைக்காததற்கும் சேர்த்து இதே காலகட்டத்தில் 7 தடவை டெஸ்ட் தொடர்களுக்காக இலங்கைக்கு வந்திருக்கிறது இந்திய அணி.

அந்த நேரங்களில் அண்மைக்காலம் வரை இலங்கையின் கரமே ஓங்கியிருந்திருக்கிறது.
உலக சாதனை 952 ஓட்டங்களும், சனத், சங்கா, அரவிந்த ஆகியோரின் ஓட்டக் குவிப்புக்களும் முரளிதரன், அஜந்த மெண்டிஸ்ஆகியோரின் பந்துவீச்சும், சச்சின் டெண்டுல்கர், கங்குலி, டிராவிட், லக்ஸ்மன், சேவாக், கும்ப்ளே, தோனி, ஹர்பஜன் என்று இருந்த இந்தியப் பிரபல நட்சத்திரங்களையே இலங்கை மண்ணில் மேவி வென்றிருந்தார்கள். 

எனினும் சரியான வாய்ப்புக்கள் இந்தியாவில் விளையாட இலங்கை நட்சத்திரங்களுக்குக் கிடைத்திருந்தால் இலங்கையின் பெறுபேறுகளும் சாதனைகளும் மேலும் மெருகு பெற்றிருக்கும்.

உதாரணத்திற்கு இலங்கை அணியில் இப்போதுள்ள சிரேஷ்ட வீரர்களான ரங்கன ஹேரத் மற்றும் அஞ்செலோ மத்தியூஸ் ஆகிய இருவரும் மட்டுமே இந்தியாவில் டெஸ்ட் விளையாடிய அனுபவமுள்ளவர்கள்.அதுவும் 2009 ஆம் ஆண்டு.

எனவே எல்லா நாட்டு அணிகளுக்குமே சிம்ம சொப்பனமாக, பொறிக்கிடங்காக இருக்கும் இந்தியா இந்த அனுபவக் குறைவான அணிக்கு பல புதிர்களையும் அழுத்தத்தையும் கொடுக்கும் என்பது உறுதி.

உலகின் மிகச்சிறந்த துடுப்பாட்ட வரிசையையும் மிகச்சிறந்த சுழல்பந்துவீச்சு வரிசையையும் கொண்ட இந்திய அணியை  வீழ்த்துவது உலகின் மிக சிரமமான காரியம். அப்படி ஒரு டெஸ்ட் போட்டியிலாவது  இலங்கை அதை நிகழ்த்துமாயின் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் upset ஆக அது பதிவாகும்.

இதுவரை காலமும் இலங்கை இந்தியாவை இந்தியாவில் வைத்து வெற்றி பெறுவதற்கு நெருங்கி வந்த ஒரு சந்தர்ப்பமும் இங்கே குறிப்பிடப்படவேண்டியது. 
இதுவரையான இறுதி இந்திய சுற்றுலாவாக அமைந்துள்ள 2009இல் அஹமதாபாத் டெஸ்ட் போட்டியில் முதலாம் இன்னிங்சில் இலங்கை இந்தியாவின் முதல் 4 விக்கெட்டுக்களை 32 ஓட்டங்களுக்குள் வீழ்த்தி தடுமாற வைத்திருந்தது. எனினும் டிராவிட், தோனி  ஆகியோரின் சதங்கள்  மூலமாக இந்தியா 400 ஓட்டங்களைக் கடந்தது.

இலங்கை இந்தியாவை விட 334 ஓட்டங்களைப்  பெற்றது. இலங்கை பெற்ற 760 ஓட்டங்களே இந்தியாவில் வைத்து இவ்விரு அணிகளுக்கிடையிலான தொடரில் இந்திய மண்ணில் பெறப்பட்டுள்ள அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாகும்.
(மஹேல 275 ஓட்டங்கள், பிரசன்ன ஜயவர்தன ஆட்டமிழக்காமல் 154, டில்ஷான் 112) மஹேல - பிரசன்னாவின் இணைப்பாட்டமும் ஒரு உலக சாதனையாகும்.

இரண்டாம் இன்னிங்சில் இந்தியாவின் 10 விக்கெட்டுக்களை எடுக்க இலங்கைக்கு 130 ஓவர்கள் இருந்தபோதிலும் கம்பீர், டெண்டுல்கரின் சதங்களோடு போட்டியை இந்தியா சமநிலைப்படுத்தியது.


முரளிதரன், ஹேரத் இருவரும் சேர்ந்து விளையாடிய வெகுசில போட்டிகளில் ஒன்று இது. எனினும் அரிய  வாய்ப்பு தவறிப்போனது.

அந்தப் போட்டியில் விளையாடிய மத்தியூசும், ஹேரத்தும் மறக்கமாட்டார்கள் அந்த அனுபவத்தை.

இன்றைய நாளில் இதுவரை ஆரம்பமும் இதேபோன்று இலங்கை ஆரம்ப விக்கெட்டுக்களை உடைத்து எறிந்துள்ளது.

எனினும் அப்போதைய நட்சத்திரங்கள் விளையாடிய அணியை விட விராட்கோலி தலைமை தாங்கும் இந்த அணி மிகப் பலம் வாய்ந்தது.
சகலதுறை வீரர் ஹர்டிக் பாண்டியாவுக்கு ஓய்வை வழங்கி, மாற்றுப் பந்துவீச்சு வரிசையை பரிசீலிக்கும் அளவுக்கு பலத்துடன் இருக்கிறது.
காயத்திலிருந்து மீண்டு வரும் முரளி விஜயை அணியில் சேர்ப்பதா ராகுலைத் தொடர்ந்து விளையாடவிடுவதா என்பது பற்றிய ஆரோக்கியமான வாதங்கள் இடம்பெறுகின்றன.
அத்தனை துடுப்பாட்ட வீரர்களும் மிகச் சிறப்பான ஓட்ட சேகரிப்பு Form இல் இருக்கிறார்கள்.
ஒருநாள் போட்டிகளில் வெளுத்து வாங்கும் ரோஹித் ஷர்மா அணியில் இணைவதற்கு இன்னமுமே போராடவேண்டி இருக்கிறது.

பந்துவீச்சாளர்களுக்கு இடையிலும் கடுமையான போட்டி.
டெஸ்ட் தரப்படுத்தலில் முதல் இடங்களில் உள்ள அஷ்வினும் ஜடேஜாவும் மட்டுமன்றி அடுத்தகட்ட சுழல்பந்து வீச்ச்சாளர்கள் மற்றும் வேகப்பந்துவீச்சாளர்கள் தயாராக இருக்கிறார்கள். வேகப்பந்து வீச்சாளர்களிலும் கடுமையான போட்டி. ஒருநாள், T20 போட்டிகளில் பிரகாசித்து வரும் பும்ராவுக்கு டெஸ்ட் அணியில் நுழைய முடியாமல் இருக்கிறது.

பலவீனம் என்பதை அடையாளப்படுத்த முடியாத அணியாக இருப்பதே இந்திய அணியின் சிறப்பு. 
இலங்கை அணியோ யாரை சேர்த்து அணியைத் திடப்படுத்துவது என்பதில் குழப்பத்தை எதிர்கொண்டுள்ள அணி.

எனினும் இந்த வருடத்தில் ஒரு சிறப்பான, நம்பிக்கை மிகுந்த ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக பிரகாசிக்கும் டிமுத் கருணாரத்ன இலங்கையின் இப்போதைய நம்பிக்கை.
இந்த வருடத்தில் 1000 ஓட்டங்களைப் பூர்த்தி செய்ய இன்னும் 60 ஓட்டங்கள் தேவைப்படுகின்றன.
அணியின் தலைவர் சந்திமால் டெஸ்ட் போட்டிகள் என்று வரும்போது சிறப்பாகவே ஆடிவருகிறார்.
முன்னாள் தலைவர் மத்தியூஸுக்கு 5000 டெஸ்ட் ஓட்டங்களைப் பூர்த்தி செய்வதற்கு 282 ஓட்டங்கள் தேவைப்படுகின்றன. தன்னை மீண்டும் நிரூபிக்கவேண்டிய தேவையும், நீண்ட காலத்துக்குப் பின்(இரண்டு வருடங்கள்) டெஸ்ட் சதம் ஒன்றைப் பெறவேண்டிய கட்டாயமும் அவருக்கு இருக்கிறது. சிரேஷ்ட துடுப்பாட்ட வீரராக மற்ற இளைய வீரர்களுக்கு நம்பிக்கையளிக்கவேண்டியவரும் இவரே.
விக்கெட் காப்பாளர் நிரோஷன் டிக்வெல்ல மற்றொரு நிச்சயமான வீரர்.
பயிற்சிப் போட்டியில் காட்டிய திறமையினால் இளம் துடுப்பாட்ட வீரர் சதீர சமரவிக்ரம மற்றொரு ஆரம்பத்துடுப்பாட்ட வீரராக விளையாடுவார் என்பது உறுதியாகிறது.

அடுத்த 3ஆம் இடம் தான் இப்போதைக்கு ஆடிக்கொண்டிருக்கிறது. இளம் துடுப்பாட்ட வீரராக நம்பிக்கை தந்த குசல் மெண்டிசை அழைத்துச் செல்லாமல் விட்டதே தவறு என்று எல்லா விதமான விமர்சனங்களும் வந்துகொண்டிருக்க திரிமன்னவா, தனஞ்சய டீ சில்வாவா என்ற கேள்வி இப்போது முன்னிற்கிறது.

இன்று திரிமன்னேவை அணியில் கொண்டுவந்து ரசிகர்களின் சாபத்தை வாங்கிக்கட்டியுள்ளனர் தேர்வாளர்கள். எனினும் திரிமன்னே ஒரு லாவகமான துடுப்பாட்டவீரர் என்பதில் எதுவித சந்தேகமும் இல்லை.தனது பொறுப்பை உணர்ந்து ஆடினால் ஒரு புதிய சங்கக்காரவாக மாறுவார். அப்படி ஆடி இலங்கை அணி ரசிகர்களின் எதிர்ப்பை தனக்கு ஆதரவாக மாற்றிக்கொள்வார் என்றால் அது பெரிய வரமே..

பந்துவீச்சாளர்களில் ஹேரத், டில்ருவான் பெரேராவுடன் இன்னும் இரண்டு வேகப்பந்துவீச்சாளர்கள் + ஷானக என்பது சந்திமால் எதிர்பார்ப்பது போல 'பெரிய' அணிகளை வெற்றிபெற இலங்கை எதிர்பார்க்கும் ஐந்து பந்துவீச்சாளர் வியூகமே.



மறுபக்கம் இதுவரை தான் தலைமை தாங்கிய 29 போட்டிகளில் 19 வெற்றிகளைப் பெற்றுள்ள கோலி, இந்திய டெஸ்ட் தலைமைத்துவ சாதனையாக இரண்டாமிடத்தில் உள்ள கங்குலியின் 21 வெற்றிகளை முறியடிக்க இந்தத் தொடரை வெள்ளையடிக்க வேண்டியுள்ளது.
முதலாமிடம் மகேந்திர சிங் தோனி - 60 டெஸ்ட் போட்டிகளில் 27 இல் வெற்றிகள்.
எனினும் கோலி இரண்டு போட்டிகளின் பின் தற்காலிக ஓய்வு எடுத்துக்கொள்ளவிருக்கிறார் என்பது கவனிக்கக்கூடியது.
கங்குலி இந்த 21 வெற்றிகளைப்பெற 49 டெஸ்ட் போட்டிகளுக்குத் தலைமை தாங்கவேண்டிஇருந்தது.

சில மைல் கற்கள் & சாதனைக்குக் காத்திருக்கும் வீரர்கள்..




அஷ்வினுக்கு 300 விக்கெட்டுக்களைப் பூர்த்தி செய்வதற்கு இந்தத் தொடரில் இன்னும் 8 விக்கெட்டுக்களே தேவைப்படுகின்றன. இந்தத் தொடரின் மூன்று போட்டிகளுக்குள் இந்த இலக்கை அடைந்தால் குறைந்த டெஸ்ட் போட்டிகளில் 300 விக்கெட்டுக்களை அடைந்தவர் என்ற உலக சாதனை அவர் வசமாகும்.


இப்போது 52 போட்டிகளில் 292 விக்கெட்டுக்களை அஷ்வின் வீழ்த்தியுள்ளார்.



அவுஸ்திரேலியாவின் டென்னிஸ் லில்லீ 56 போட்டிகளிலும், நம்மவர் முரளிதரன் 58 போட்டிகளிலும் இந்த 300 விக்கெட்டுக்களை எட்டியிருந்தனர்.

இந்திய சாதனை - அனில் கும்ப்ளே - 66 டெஸ்ட் போட்டிகள்.



இலங்கை அணியின் தலைவர் தினேஷ் சந்திமாலுக்கு 3000 டெஸ்ட் ஓட்டங்களைப் பூர்த்தி செய்ய  இன்னும் 70 ஓட்டங்கள் தேவைப்படுகின்றன.



நூறு டெஸ்ட் விக்கெட்டுக்கள் என்ற இலக்கை அடைவதற்கு டில்ருவான் பெரேராவிற்கு இன்னும் 7 விக்கெட்டுக்களும், லக்மலுக்கு 9 விக்கெட்டுக்களும்தே, உமேஷ் யாதவிற்கு 6 விக்கெட்டுக்களும் வைப்படுகின்றன.


இலங்கை அணிக்கு இழக்க எதுவுமில்லை. போராட்ட குணத்தை உலகின் மிகச்சிறந்த அணிக்கு எதிராக வெளிப்படுத்த, சந்திமால் தனது அணி மீது ரசிகர்களுக்கு நம்பிக்கை அளிப்பதற்கான மிகச்சிறந்த தருணம் இது.
இதுவரை 99 டெஸ்ட் தோல்விகளை (265 போட்டிகளில்) பெற்றுள்ள இலங்கை அணிக்கு 100வைத்து தோல்வியைத் தள்ளிப்போட முடியுமா ?

இன்றைய முதல் நாளில் செலுத்திய ஆதிக்கத்தைக் கொண்டு சென்று அதிர்ச்சியை வழங்கமுடியுமா?
காத்திருப்போம் தெரிந்துகொள்ள...


ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner