அந்த இருவர்..

ARV Loshan
24
தமிழ்த் திரையுலகை அண்மைய முப்பதாண்டுகளுக்கு மேலாக ஆண்டு கொண்டிருக்கும், ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் இரு பெரும் சிகரங்களுக்கு மூன்று நாட்களுக்குள் ஒரு நாள் இடைவெளி விட்டுப் பிறந்த நாட்கள்,,
(நடுவில் வருபவரோ திரையுலகை மட்டுமல்ல தமிழுலகையே ஆட்டுவிக்கக் கூடிய பெரீயவர்)

எஸ்.பீ.பாலசுப்ரமணியம் - இன்று இவருக்குப் பிறந்த நாள்.
இளையராஜா - ஜூன் 2 .



இருவரும் ஒருவரை ஒருவர் சார்ந்து திரைத் துறையில் படைத்த சாதனைகள் எத்தனை எத்தனை.. எண்ணிக்கை இல்லை..
இந்த இருவரின் தாக்கம் கொஞ்சம் தானும் இல்லாமல் திரையுலகில் இன்று யாராவது இருக்கிறார்களா எனக் கேட்டால் அதற்கும் விடை இல்லை.

70களில், 80களில் பிறந்தோர் யாருமே இவர்களின் ரசிகர்களாக ஒரு குறிப்பிட்ட காலப் பகுதியிலே இருந்திருக்கவே வேண்டும்.. இல்லாவிடில் அவர்கள் தமிழ்த் திரைப்பாடல்கள் கேட்டிராதவராக இருத்தல் வேண்டும்.. ;)

இளையராஜாவின் இசையில் SPB பாடிய எந்தப் பாடல் பிடிக்கும் என்று கேட்டால் யாராலும் பதில் சொல்ல முடியும்?
எத்தனை ஆயிரம் பாடல்களை வரிசைப் படுத்தலாம்..

இளையராஜா + SPB கூட்டணி என்றவுடன் எனக்குள்ளே பனி விழும் மலர்வனம், இது ஒரு பொன்மாலைப் பொழுது, பூவில் வண்டு கூடும், என்ன சத்தம் இந்த நேரம், காதலின் தீபம் ஒன்று, மண்ணில் இந்தக் காதலின்றி, இதயம் ஒரு கோவில்,நிலாவே வா, இப்படி எத்தனை எத்தனை பாடல்கள் காதுக்குள்ளே இசைத்து மனத்திரையில் ஓடுகின்றன..

அந்தப் பாடல்களைப் பற்றியெல்லாம் பதிவிடத் தொடங்கினால் தனி வலைத் தளம் ஒன்றே ஆரம்பிக்கவேண்டும்..
(இப்ப இதெல்லாம் தேவையா என்று கேட்காதீங்க.. விஷயத்துக்கு வருகிறேன்)

ராஜா,பாலு என்று தமக்குள்ளே உரிமையோடு அழைத்துக் கொண்டு(சில சமயம் உரசியதும் உண்டாம்) அறுபது வயதைக் கடந்தும் இன்றும் மனதுகளில் இளைஞர்களாக (குரல்களிலும் கூட) சாதனைப் பாதைகளில் செல்லும் இந்த இருவரும் இணைந்த சில பாடல்கள் எனக்குப் பிடித்தமானவை.

உங்களோடும் இங்கே இன்று எனது ரசனையின் மகிழ்ச்சியை பாடும் நிலாவின் பிறந்தநாளில் பகிர்ந்து கொள்வதில் ஒரு தனி சந்தோசம்..


------------------


அண்மையில் கோவா திரைப்படப் பாடல் 'வாலிபா வா வா' பாடல் மூலம் இவ்விருவரும் இளைஞர்களுக்கும் சவால் விட்டுள்ளார்கள்.(இது பாடலைப் பாடியது பற்றி மட்டுமே சொல்லப் பட்டது எனக் கவனிக்க)

இந்தப் பாடலுக்கு முன் இசைஞானியும் பாடும் நிலாவும் சேர்ந்து ஐந்து பாடல்கள் பாடியுள்ளதாக அறிகிறேன்.

புதுப் புது அர்த்தங்கள் - எடுத்து நான் விடவா
பாட்டுப் பாட வா - வழி விடு வழி விடு
உடன் பிறப்பு - சோழர் குலக் குந்தவை போல்
பகலில் பௌர்ணமி - கரையோரக் காற்று
உன்னை சரணடைந்தேன் - நட்பு

ஐந்தும் அருமையான பாடல்கள்..


இரண்டாவது,மூன்றாவது பாடல்களின் ஒலி வடிவங்களைத் தேடியெடுத்துத் தந்த கறுப்பு சிங்கம் கங்கோனுக்கும், நான்காவது பாடல் இடம்பெற்ற படம், தகவல்கள் மற்றும் நீண்ட காலம் கேட்காமலிருந்த அந்தப் பாடலைக் கேட்க வழி தந்த ரேடியோஸ்பதி கானா பிரபா அண்ணாவுக்கும் நன்றிகள்.


புதுப் புது அர்த்தங்கள் - எடுத்து நான் விடவா

 வேடிக்கை ஜாலிப் பாடலாக இருந்தாலும்.. என்ன ஒரு மெட்டு.. அதற்குள் இசைஞானி தரும் வாத்திய ஜாலங்கள், மெட்டின் அசைவுகள் என்று எக்காலத்திலும் இந்தப்பாடல் Evergreen Hit.
SPBக்கு தானாகவே வரும் நக்கல் சிரிப்பு,தானே மெய்ம்மறந்து ரசிக்கும் லாவகம்,குறும்புகள் என்று சகலமும் அடங்கிய கலக்கல் பாடல்..

படத்தில் ஒரு பாடகனுக்கு மிகப் பொருத்தமாகவே அமைந்த பாடல்..



பாட்டுப் பாட வா - வழி விடு வழி விடு

முதல் பாடல் நடிகர் ரகுமானுக்கு இன்றைய பிறந்தநாள் நாயகன் SPB குரல் கொடுத்தது.. இந்தப் பாடலிலோ ரகுமானுடன் SPB நடிகராக.. இளையராஜாவின் குரல் ரகுமானுக்கு ஒத்துவரவில்லை.
எனினும் பாடல் இனிமை..

ஒருத்தியை இருவர் வரித்துப் பாடும் பாடல் வரிக்கு வரி இனிமை..

வரிகளையோ உணர்வையோ காயப்படுத்தாத இசை.. எப்போது கேட்டாலும் அந்தரத்தில் அழைத்து ஒரு அழகிய தேவதையை நாம் ஸ்பரிசிக்கும் உணர்வைத் தரும் பாடல்..

ஆனால் படத்தில் வேறு யாரையாவது கதாநாயகியாகப் போட்டிருக்கலாம்..
பாட்டின் அழகியல் அவருக்கு ரொம்பவே ஓவர்..

வழி விடு வழி விடு



உடன் பிறப்பு - சோழர் குலக் குந்தவை போல்


மீண்டும் நண்பர்களுக்கான பாடல்.. தத்தம் எதிர்காலத் துணைவியாரை நண்பர்கள் மூலம் அமைத்துக் கொள்ளும் நெருக்கம் நட்பில்.
என்ன அதிசயம் பாருங்கள்.. இதிலும் ரகுமான்.. ஆனால் சத்யராஜும் ரகுமானும்.
மீண்டும் ரகுமானுக்கு இளையராஜா குரல்.. சத்யராஜுக்கு SPB.

வரிகளின் தரம் அருமை.. இலக்கிய ரசத்தோடு வர்ணனைகள்.
பொன்னியின் செல்வனின் குந்தவை முதல்,பாரியின் அங்கவை,சங்கவை முதல் அத்தனை அழகிகளும் கண் முன்னே வந்து ஆடிப் போவார்கள்..

நண்பர்கள் இருவரின் குரல்களும் கற்பனைக் காதலிலும் தங்களுக்கிடையிலான நெருக்கமான நட்பிலும் குழைந்து நெகிழ்வது பாடலின் மற்றுமொரு அழகு.

எல்லோருக்கும் பிடிக்குமோ,எனக்கு மிகப் பிடித்த நூறு பாடல்களில் நிச்சயமாக இதுவும் ஒன்று.

நானே நீட்டி முழக்காமல் நீங்களே ரசியுங்கள்..

சோழர் குலக் குந்தவை போல்




பகலில் பௌர்ணமி - கரையோரக் காற்று


பதின்ம வயதுகளில் அப்போதைய இலங்கை வானொலியில் கேட்ட பின் எப்போதும் கேட்காத பாடல்.. எங்கெங்கு தேடியும் எனக்குக் கேட்கவோ,பார்க்கவோ,ஒலிபரப்பவோ கிடைக்கவில்லை.
ஆனால் இன்னமும் சின்ன வயதில் கேட்ட மெட்டும் வரிகளும் அப்படியே ஞாபகம்.

பாடலில் இளையராஜா ஆரம்பிக்க SPB யும் சித்ராவும் தொடர்வார்கள்..

இந்தப் பாடல் பற்றி பல்வேறு இடங்களில் தேடி இறுதியில் திரைப்பாடல் களஞ்சியமான கானா பிரபா அண்ணா தந்தார் தகவல்.

அவர் தளத்துக்கு சென்று முழுமையான விபரங்களையும் அறிந்து பாடலையும் கேட்டு ரசியுங்கள்..
பிடிக்கும்

http://radiospathy.blogspot.com/2009/08/blog-post_20.html


உன்னை சரணடைந்தேன் - நட்பு


கங்கை அமரனின் இசையில் இசைஞானியும் பாடும் நிலாவும் மெல்லிசை மன்னருடன் இணைந்து பாடும் ஒரு நட்பின் பெருமை சொல்லும் பாடல்..
என்ன ஒரு கூட்டணி..

மெட்டும் வரிகளும் class.



இரு சிகரங்களுக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்..


குறிப்பாக எனக்கு சிறு வயது முதல் இறக்கும் காலம் வரை மிகப் பிடித்தவராக இருந்து இருக்கவே போகிற SPB க்கு குரலில் இப்போது இருக்கும் இளமையும் மனதிலே இருக்கும் எளிமையும் வார்த்தைகளில் இருக்கும் கனிவும் எப்போதும் மாறாமல் இருக்கட்டும் என்று வேண்டவே தோன்றுகிறது.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் அவரின் வீட்டிலேயே சரணின் அருகில் அமர்ந்து SPB என் அபிமானப் பாடலான 'என்ன சத்தம் இந்த நேரம்' பாடலைப் பாடக் கேட்டது இறக்கும் வரை மனதிலே மறக்காது..

நான் கொடுத்து வைத்தவனே.. :)

விரைவில் இவர் பாட நான் ஒரு மேடை நிகழ்ச்சியைத் தொகுக்கும் வாய்ப்பும் கிடைக்கக் காத்திருக்கிறேன்.கிடைக்கும்.. :)

Post a Comment

24Comments

Please Select Embedded Mode To show the Comment System.*